தினமணி கதிர் - ஈ.வெ.கி. சம்பத்தும், திராவிட இயக்கமும்

1,149 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Aug 14, 2011, 3:57:22 AM8/14/11
to Min Thamizh

தரையில் அமர்ந்திருப்பவர்கள் (இடமிருந்து வலம்): ஈ.வெ.கி.சம்பத், பொன்னுத்தாய் அம்மாள், செல்லம், ஈ.வெ.கி.செல்வராஜ் 
ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்ரோடு வேங்கடப்ப கிருஷ்ணசாமி சம்பத் என்னும் ஈ வே கி சம்பத்துக்கு இன்னும் நீளமான பெயர் உண்டு. அது ஈரோடு வேங்கடப்ப கிருஷ்ணசாமி சம்பத்குமார எதிவரதராமானுஜ தாசன் என்பது. தென்கலை வைணவக் குடும்பப் பின்னணியில் அவருக்கு தீட்சைகள் செய்வித்து அப்படி ஒரு நாமகரணம் நடைபெற்றது..

ஆக அத்தகைய வைதீகப் பின்னணியில் வந்த சம்பத் அவருடைய சிறிய தந்தையார் பெரியார்
ராமசாமியின் தாக்கத்தால் முழு நாத்திகராக, பகுத்தறிவாளராகப் பரிணாம முற்றார். அண்ணாவின் அணுக்கத்தால் அரசியல் வல்லுநராக - தலைவராக உயர்ந்தார். பின்னர் அண்ணா - மு கருணாநிதி - எம் ஜி ராமச்சந்திரன் ஆகியோரது அணுகுமுறையை எதிர்த்து உள்கட்சிப் போராட்டம் நடத்தித் தம்மையொத்த கருத்தாளர்களுடன் வெளியேறித் தனிக்கட்சி கண்டார். தனிக்கட்சியாக தாக்குப்பிடிக்க இயலாமல் காங்கிரசில் கலந்தார். கரைந்தும் போனார். சம்பத் எக்காரணம் சொல்லி எந்தெந்த மாற்றங்களை முன்மொழிந்து திராவிட முன்னேற்றக்கழகத்தை விட்டு வெளியேறினாரோ அவை பிற்காலத்தில் அவ்வாறே அவர் சொன்ன அல்லது விரும்பிய மாதிரியே கட்சித்தலைமையால் ஏற்கப்பட்டது. கட்சி, பிரிவினை இயக்கமாகவும் விடுதலை இயக்கமாகவும் இருந்த காட்சியும் தோற்றமும் போய், வேண்டியோ வேண்டாமலோ மனமொப்பியோ ஒப்பாமலோ இந்தியத்தேசியத்தின் அங்கமாக - மாநில உரிமைகளுக்காக அதுவும் நாடாளுமன்ற நெறிமுறைகளுக்கு முற்றிலும் அடங்கிய வழிகளில் போராடும் இன்னொரு கட்சியாக - இன்னும் சொன்னால் சம்பத் முன்மொழிந்த அதே மாதிரியான தமிழ்த் தேசியக்கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் பரிணாமம் பெற்றுப் பொதுநீரோட்டத்துடன் கலந்து நின்றது. அப்படிக் கலந்த பிறகுதான் அதனால் தமிழகத்தின் அரசியல் கடிவாளத்தைக் கைப்பற்றமுடிந்தது. இது சரித்திரம். ஆனால் சம்பத் என்னும் அரசியல் தலைவர் தோற்றுப்போனார். அதே சமயம், சம்பத் என்னும் தீர்க்கதரிசி வெற்றி கண்டார். அவரது கருத்துநிலைகள் வெற்றிகண்டன. இதுவும் சரித்திரம் என இந்நூலின் முன்னுரையில் கல்பனாதாசன் குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் சரித்திரத்திலிருந்து சில பகுதிகள்...

நாயக்கர் மக்கள்:-

தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சார்ந்த கொங்குச் சீமையின் அன்றைய கோவை மாவட்டத்தின் வணிகப் பெருநகர் ஈரோடு பெரியதொரு புகைவண்டித் தொடர் சந்திப்புமாகும். அவ்வட்டாரத்திலேயே புகழ் பெற்ற வணிக வேந்தராய்த் திகழ்ந்தவர் வேங்கட்ட நாயக்கர். அவரது வாழ்க்கை இணையர் சின்னத்தாய் அம்மாள். இவர்கள் பூஜ்ஜியத்திலிருந்து கோடீஸ்வரரானவர்கள். இதற்கு இவ்விணையரின் கடும் உழைப்பும், நாணயமுமே காரணம். வணிகத் துறையில் மிகச் சாதாரண நிலையிலிருந்த ஈரோடு வட்டாரத்திலேயே நாயக்கர் மண்டிதான் மிகப் பெரியது. புகழ் பெற்ற இவ்விணையரின் மூத்த மகனாய்ப் பிறந்தார் கிருஷ்ணசாமி. இரண்டாம் புதல்வர்
ராமசாமி. ஈ.வே.கிருஷ்ணசாமி 28.09.1877லும் ஈ.வே. ராமசாமி 17.09.1879லும் பிறந்தனர். இவர்களுக்கு உடன்பிறந்த சகோதரியர் பொன்னுத்தாய் அம்மாளும், கண்ணம்மாளும். இவர்கள் நாயக்கர் மக்களாய் நாடு போற்றும் நன்மக்களாய்த் திகழ்ந்து, ஆளுக்கொரு துறையில் புகழ்பெற்று விளங்கினர்.

ஈ.வே. கிருஷ்ணசாமி தமது தந்தையாருக்கு உதவியாக வணிகத் துறையிலும் தமக்குள்ள தனியார்வத்தால் சித்த மருத்துவத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். மின்சாரம் இல்லாத காலம். ஆங்கில மருத்துவம் அறிமுகமாகாத காலம். "வைத்திய வள்ளல்" என்றும் சிறப்புப் பட்டம் பெற்ற ஈ.வே. கிருஷ்ணசாமி இலவசச் சித்த மருத்துவமனை ஒன்றினை ஈரோட்டில் நெடுங்காலம் நடத்தி வந்தார். அது ஏழை, நடுத்தர மக்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. வைதிகக் குடும்பத்தின் முத்திரையாக அவரது நெற்றியில் திருமண் தீட்டியதால் ஏற்பட்ட தழும்பு இறுதிவரை இருந்தது. பெரிய நாயக்கர் என அன்போடு அழைக்கப்பட்ட அவருக்கு முதல் இணையர் நாகம்மாள் வாயிலாகப் பிறந்த மகன் ரெங்கராம்.ஈரோட்டில் கல்வி முடித்து ரெங்கராம் 1912ல் மேற்படிப்புக்காக
லண்டனுக்கு அனுப்பப்பட்டார். அவரோடு ஈரோட்டில் அரசுத் துறையில் கண்காணிப்புப் பொறியாளராக இருந்த பா.வே. மாணிக்க நாயக்கர் உடன் சென்றார். இந்த மாணிக்க நாயக்கர்தாம் மேட்டூர் அணையைத் திட்டமிட்டுக் கட்டினார் என்பது மறைக்கப்பட்ட வரலாறு. மாணிக்க நாயக்கர் சிறந்த பகுத்தறிவாளர். இவரது துணையுடன் ரெங்கராம் பம்பாய் சென்று அங்கிருந்து லண்டனுக்குக் கப்பலேறினார். தேசியத் தலைவர் பாலகங்காதர திலகரும் அதே கப்பலில் பயணம் செய்தார். ரெங்கராம் மூன்றாண்டுகள் லண்டனில் பொறியியற்கல்வி பயின்றார். அப்போது உலகப் போர் மிரட்டிக் கொண்டிருந்ததால் அவர் தாயகம் திரும்பிவிட்டார்.1918ல் யுத்தம் முடிந்த பிறகு மீண்டும் கல்வியைத் தொடர லண்டனுக்குப் பயணமானார். பம்பாய் இமிக்ரேஷனில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. அவருக்குக் காசநோய் பிடித்திருப்பதாகவும் அதனால் பயணம் செய்ய முடியாது என்றும் அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். அது காசநோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்படாத காலம். சோர்வுற்ற ரெங்கராம் தமது தந்தையார் ஈ.வே. கிருஷ்ணசாமிக்குச் செய்தி அனுப்பி, அவரது ஆலோசனையின் பேரில் மதனபள்ளியில் ஒரு மருத்துவ நண்பரிடம் சிகிச்சை பெற்று அது பலனளிக்காமல் நோய் முற்றி தமது 20ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

ஈ.வே. கிருஷ்ணசாமிக்கு அடுத்து ஒரு மகள் பிறந்து, (மங்கைத் தாயார்) அந்தப் பெண்ணும் சிசுப்பருவத்திலேயே மரணமுற்றாள். இதனால் கிருஷ்ணசாமிக்கு வாரிசுகள் தோன்றி நிலைக்கவேண்டும் என்பதற்காக அவருக்கு இரண்டாம் திருமணம் செய்ய ஆலோசித்தனர். பெற்றோரின் வற்புறுத்தலின்பேரில் கிருஷ்ணசாமியும் சம்மதம் அளித்தார். இரண்டாம் இணையராக ரெங்கநாயகி அம்மாளை மணந்தார். இவர் கன்னட பலிஜா வகுப்பைச் சேர்ந்தவர். இவ்விணையருக்கு மிராண்டா, சம்பத், செல்வராஜ், செல்லா, கஜராஜ் ஆகிய மூன்று ஆண், இரண்டு பெண் மக்கள் பிறந்தனர்.

முரட்டுக்காளைக்கு மூக்கணாங்கயிறு போடுவதுபோல துடுக்குமிகுந்த இரண்டாம் பிள்ளை ஈ.வே.
ராமசாமிக்குத் திருமணம் செய்தால்தான் பொறுப்பு ஏற்படும் என்று கருதி, பெற்றோர் வேங்கடப்ப நாயக்கரும், சின்னத்தாய் அம்மாளும் பெண் பார்க்கத் தொடங்கினர். அப்போது ராமசாமிக்கு வயது 19.பெற்றோர் பார்த்த பெண்களை ஏற்காது, வேறொரு பெண் மீது விருப்பம் என்றும் மணந்தால் அந்தப் பெண்ணை மணப்பேன், இல்லை திருமணமே வேண்டாம் என்றும் ராமசாமி பிடிவாதமாகச் சொல்லிவிட்டார். அவரது போக்கில் விட்டுப்பிடித்தால்தான் வேலை நடக்கும் என்பது பெற்றோருக்குத் தெரியும். நீ விரும்பும் பெண் யார் என்று விசாரித்தனர். பின்னர்தான் தெரிந்தது தாய்வழிச் சொந்தத்திலேயே ஒரு பெண்ணை ராமசாமி காதலித்திருக்கிறார் என்று.

சின்னத்தாய் அம்மையாரின் பூர்வீகம் சேலம் தாதம்பட்டி. அவருடைய தம்பி தலைமைக்காவலர் ரெங்கசாமி நாயக்கர். அவரது இணையர் பொன்னுத்தாய் அம்மாள். இவ்விணையருக்கு தேவராஜன் என்னும் மகனும், முத்தம்மாள், நாகம்மை ஆகிய இருபெண் மக்களும் இருந்தனர். நாகம்மைக்கு அப்போது வயது 13. அப்பெண்ணோடுதான் தமக்குக் காதல் என்பதை
ராமசாமி பெற்றோரிடம் கூறினார். ஆனால் நாகம்மையின் பெற்றோர் பெரிய இடத்துச் சம்பந்தம் சரிப்படாது என்று சொல்லி வேறு ஓர் இடத்தில் வயதில் சற்று முதியவருக்கு மூன்றாம் தாரமாக மணம் பேசினர். இதனை விரும்பாத நாகம்மை, தாம் காதலித்தவரை மணக்க முடியவில்லை என்றால் விஷம் குடித்துச் சாகிறேன் என்று தற்கொலைக்குத் தயாரானார்.

வேங்கட்ட நாயக்கருக்கு விஷயம் தெரிந்ததும் தமது மனைவியாருடன் தாதம்பட்டி சென்று இளைய மகன்
ராமசாமிக்கு நாகம்மையை மணம் பேசினார். காதலிலே திளைத்து, எதிர்ப்பிலே வென்று ராமசாமி நாகம்மை திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மூத்தவர் கிருஷ்ணசாமியோடு இளையவர் ராமசாமியும் இணைந்து வாணிபத்தில் ஈடுபட்டபோது நாயக்கர் மண்டியில் வணிகம் கொடிக்கட்டிப் பறந்தது.

ராமசாமி, ஆரம்பத்தில் முரடராகவும் பின்னர் சாமியாராகவும் உலக அனுபவங்களை ஈட்டியவாறு பொறுப்புணர்ந்து வணிகத்தை ஏற்று நடத்தி இல்லறத்திலும் நல்லறங்காண விழைந்த நற்செயல்களைக் கண்டு தந்தையார் வேங்கட்ட நாயக்கர் மனநிறைவும் மகிழ்ச்சியும் கொள்ளலானார். கெட்ட நடத்தையுள்ள இரண்டொரு நண்பர்களும் ராமசாமியைவிட்டு அகன்றனர். மதுப்பழக்கம் அவரைப் பற்றியதில்லை. எப்போதாவது வெற்றிலை பாக்கு புகைபிடிக்கும் பழக்கம் உண்டு. 40ஆம் வயதில் அதையும் நிறுத்தி விட்டார்.

நல்லறிவாளர்களின் சேர்க்கையும் பண்பாளர் தொடர்பும் வளரலாயின. மாபெரும் தர்க்க வல்லுநரான தஞ்சை கைவல்ய சாமியாரின் நட்பு ஏற்பட்டதும், அவருக்கு ஏற்கெனவே முகிழ்த்திருந்த பகுத்தறிவுச் சிந்தனைகள் வளரத் தொடங்கின. திருந்திவிட்டான் மகன்
ராமசாமி என்னும் நிறைவு தந்தை வேங்கட்டப்பருக்கு ஏற்பட்டாலும் இவன் நாத்திகனாகி விடுவானோ என்ற அச்சமும் சேர்ந்துவாட்டியது. மகன்களிடம் தம் காலம் போலவே தமது தேவஸ்தான நிர்வாகத்தில் விழா, வேடிக்கை, உற்சவங்கள் தொடர வேண்டும் என்றும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்.

கால மாறுதல்களில் இவையெல்லாம் சரிப்படாது என்று இரு மகன்களும் தெரிவித்தனர். ஆனால் பக்தியிலும், பழமையிலும் மூழ்கிப் போயிருந்த வேங்கட்ட நாயக்கர் தமக்குச் சொந்தமான தேவஸ்தான நிர்வாகப் பணிகள் தொடர்ந்தால்தான் தமது அத்தனை சொத்துகளும் வழிவழியாக வாரிசுகளுக்குச் சொந்தமாகும். விற்கவோ அடமானம் வைக்கவோ முடியாது. இறைப் பணியையும் நிறைவேற்றி, வணிகம், வேளாண்மையையும் தொடர்ந்து சொத்து சுகங்களைப் பரிபூரணமாக அனுபவிக்க வேண்டுமென்று உயிலே எழுதிவிட்டார்.

கோவிலுக்கு விளக்கெரிக்காமல் விடுவதற்காக இத்தனை சொத்துகளையும் இழக்க முடியுமா?

இந்தச் சொத்துகளை வைத்துத்தான் அறிவுப்பணி நடத்தி நாட்டின் இருளையே அகற்ற வேண்டும் என்று கருதிய இரு சகோதரர்களும் தந்தையாரின் விருப்பத்திற்குக் குறுக்கே நிற்க விரும்பவில்லை. ஆனால் அறக்கட்டளை சம்பந்தப்பட்ட ஆலய நிர்வாகங்களை ஊழல், கொள்ளை போன்றவற்றிலிருந்து மீட்டுச் செம்மைப்படுத்தினர்.

கடவுள் பற்றுதல் பெறாவிடினும் கடமையுணர்ச்சியோடு இரு மகன்களும் விளங்குவது கண்டு தந்தை வேங்கட்ட நாயக்கர் மனநிறைவும் ஆறுதலும் கொண்டார்.

பெரு வணிகராக, வள்ளலாக, பக்த சிரோன்மணியாகப் பலருக்கும் உதவிடும் பண்பாளராகப் பெரு வாழ்வு வாழ்ந்த பெரியவர் வேங்கட்ட நாயக்கர் துறவிகளுக்குச் சமாதி வைப்பதுபோல் தம்மை அடக்கம் செய்துவிட வேண்டும் என்னும் விருப்பத்தையும் தம் பிள்ளைகளிடம் தெரிவித்தார். அதை அவர்கள் நிறைவேற்றினர். ஈரோடு பழைய
ரயில் நிலையத்திற்கருகே, கண்ணுக்கெட்டிய தூரம் தெரிந்திடும், நாயக்கரின் கட்டட வரிசைகளின் கடைசிப் பகுதியில் உள்ள பரந்த இடத்தில் வேங்கட்ட நாயக்கருக்கு நினைவிடம் அமைத்தனர். அவரது உருவச் சிலையையும் ஆங்கே அமைத்தனர்.பெரியவர் ஈ.வே. கிருஷ்ணசாமியார் தமது இறுதிக்காலம் வரை தமது தந்தையாரின் நினைவகத்திற்குச் சென்று தந்தையார் சிலையை வணங்கிவருவது வழக்கம். இளையவர் ராமசாமியார் தமக்கு எப்போதாவது தோன்றியபோது அங்கே சென்று, சமாதிக் கட்டடம் சரிவரப் பராமரிக்கப்படுகிறதா என்பதை மட்டும் மேற்பார்வையிடுவார்.

ராமசாமி - நாகம்மை இணையருக்கு ஒரு பெண் மகவு பிறந்து அது ஐந்து மாதத்தில் மரித்துவிட்டது. அதற்குப் பின் அவர்களுக்குப் பிள்ளைப்பேறு வாய்க்கவில்லை. இதனால் தமது அண்ணன் ஈ.வே. கிருஷ்ணசாமியின் குழந்தைகளையே தம் செல்வங்களாகப் பாவித்துப் போற்றி வளர்த்தார். அன்னை நாகம்மையாரும் குழந்தை சம்பத் மீது உயிரையே வைத்திருந்தார்.

ஈ.வே. கிருஷ்ணசாமி, ஈ.வே.
ராமசாமி சகோதரர்களுக்கு உடன் பிறந்த இரு தங்கையர் கண்ணம்மாள், பொன்னுத்தாய். இந்த இருவர் மீதும் அண்ணன்மார்களுக்கு அளவு கடந்த பாசம். கண்ணம்மாளுக்கு எஸ்.ஆர். சந்தானம், எஸ்.ஆர்.சாமி என்னும் மகன்களும், ராஜாத்தி, காந்தி, சரோஜினி ஆகிய மூன்று மகள்களும் பிறந்தனர்.

தங்கை பொன்னுத்தாய் கல்யாணசுந்தரம் என்பவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். அவருக்கு ஒரு மகன் சுப்பைய்யன், ஒரு மகள் அம்மாயி அம்மாள். இந்த அம்மாயி அம்மாளுக்கு 10 வயதில் திருமணம் (குழந்தைத் திருமணம்) எதிர்பாராத விதமாக இரண்டு ஆண்டுகளிலேயே கணவர் இறந்துவிட்டார். அதனை அடுத்த இரண்டு ஆண்டுகளில் அந்தப் பெண்ணுக்கு ஈ.வெ.
ராமசாமி மறுமணம் செய்துவைத்தார்.

தொடரும்......

என்.விவேகானந்தன்

நன்றி:- தினமணி

Kannan Natarajan

unread,
Aug 21, 2011, 4:23:55 AM8/21/11
to Min Thamizh

குடும்பச் செல்வாக்கு:-

பெரியார் இன்றைக்குச் சரியாக ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டார்.

1907ம் ஆண்டிலேயே அவர் ஈரோட்டில்

- கெ
ரவ நீதிபதியாக
- ஈரோடு வட்ட தேவஸ்தானக் குழுவின் தலைவராக
- ஈரோடு தாலுக்கா போர்டு துணைத் தலைவராக
- ஜில்லா போர்டு உறுப்பினராக

படிப்படியாக உயர்ந்து ஈரோடு நகரமன்றத் தலைவராகவும் இருந்து அரும் சாதனை புரிந்தார்.

அக்காலத்திலேயே திரளான செல்வமும், தெருவிற்கு ஒரு மாளிகையும், வளம் குவித்திடும் வணிக நிறுவனங்களும், தோட்டம், நன்செய், புன்செய், வேளாண் பண்ணைகளும், இட்ட பணி செய்திட ஏவலர்,நண்பர் குழாமும் இருந்தன.

இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் குடும்பச் செல்வாக்கு, எட்டுத் திசையிலிருந்து வாணிபத்தில் ஆதாயம் என இத்தனையும் இருந்தும், இவையெல்லாம் எனக்குத் தேவையில்லை. அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் நாட்டு மக்களை விழிப்படையச் செய்யத் தொண்டாற்றவே விருப்பம் என்று பெரியார் சுகபோகங்களைத் துறந்து, காடு மேடு சுற்றிக் கடும் பயணம் மேற்கொண்டார்.

பெரியார் பொது வாழ்க்கையில் ஈடுபடத் தொடங்கிய இருபது ஆண்டுகளில் 1926ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 5ஆம் நாளில் ஈ.வே. கிருஷ்ணசாமி - ரெங்கநாயகி தம்பதிக்கு ஈ.வே.கி. சம்பத் மூத்த புதல்வராய்ப் பிறந்தார்.

அக்காலகட்டத்தில் அவர்தம் குடும்பம் தீவிர வைணவ பக்தியில் மூழ்கியிருந்ததால் சம்பத்திற்கு அவரது பெற்றோர் சம்பத் குமார எதிவரதராமானுஜ தாசானுதாசன் என்று பெயரிட்டனர்.

அன்பைச் சுருக்காது பெயரை மட்டும் வசதியாகச் சுருக்கியதால் சம்பத் என்பதே நிலைத்து விட்டது. அப்போது குடும்பத்தில் முன்னிலும் அதிக செல்வாக்கும் செல்வச் செழிப்பும் சமூக அரசியல் ஈடுபாடும் மிகுந்திருந்த நேரம்.

காந்தியடிகளே ஈரோடு மாளிகைக்கு வந்து பெரியாரிடம் விவாதித்துச் செல்கிற தகுதியோடு இரண்டாண்டுக் காலம் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக பெரியார் இருந்தார்.

அக்காலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஈரோட்டில் பெரியார் வீட்டுத் தாழ்வாரத்தில் நடைபயின்று கொண்டிருந்தது. தேசிய இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த பெரியாருக்கு வ.உ. சிதம்பரம் பிள்ளை, தமிழ்த்தென்றல் திரு.வி.க.,
ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) டாக்டர் வரதராஜூலு நாயுடு போன்றவர்கள் அணுக்கத் தோழர்களாக விளங்கினர்.

காந்தியடிகள் தலைமையில் வீறுநடை போட்ட காங்கிரஸ் மகாசபையின் ஒத்துழையாமை இயக்கத்தில் பெரியார் மிகுந்த ஆர்வம் காட்டிய நேரம். அவருக்கு மிகப்பிடித்தமான கொள்கைகளாகிய தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு, சாதி ஒழிப்பு போன்ற தீவிரத் திட்டங்களில் தம்மை முழுக்க ஈடுபடுத்திக் கொண்டார்.

1920ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் காங்கிரஸ் இயக்கத்தின் வளர்ச்சி என்பது பெரியாரின் இணையற்ற பணிகளிலேதான் மிளிர்ந்தது.

முரட்டுக் கதராடை அணிந்து கொண்டு பெரியார் கதர் மூட்டை சுமந்து வீதி, வீதியாகக் கதர் பிரசாரம் செய்து விற்பனை இயக்கம் நடத்தினார். தம்முடைய தாயாரும், தங்கையரும், சுற்றத்தாரும் கட்டாயமாகக் கதர் அணிய வேண்டுமென்பதை நடைமுறைப்படுத்தினார்.

வேங்கடப்ப நாயக்கரின் இணையர் சின்னத்தாய் அம்மையாரும் முரட்டுக் கதராடைகளையே உடுத்தத் தொடங்கினார்.

எந்நேரமும் பஜனைப் பாடல்களும், பக்தி உபன்யாசங்களுமாக இருந்த அந்த இல்லத்தில் இப்போது கதர்ப் பிரசாரமும் தக்களி
ராட்டை சத்தமும் ஓங்கலாயின. கதர் அணிவதையே காங்கிரஸ் கட்சியின் திட்டமாய் கொள்கையாய் மாற்றியவர் பெரியார். பிற்காலத்தில் புகழ்பெற்ற கல்கி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ஈ.வே.ரா.விடம் அவரது திருச்செங்கோடு கதர் அங்காடியில் பணியாற்றியவர் என்பது தகவல்.

மதுவிலக்குக் கொள்கையையும் பெரியார் தீவிரமாகப் பிரசாரம் செய்தார். பிரசாரத்தோடு மட்டும் நிற்கவில்லை எதிலும் தீரமும், வீரமும் காட்டியவர். சேலம் மாவட்டம் தாதம்பட்டியில் தமது தோட்டங்களிலிருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அடியோடு வெட்டி வீழ்த்தினார் என்பது வரலாறு.

தொடக்கப் பள்ளியில் சம்பத்
:-

மழலைச் செல்வம் சம்பத் மீது அவரது பெற்றோருக்கு இருந்த பிரியத்தை விட தந்தை பெரியாருக்கும், அன்னை நாகம்மைக்கும் பாசம் அதிகம் இருந்தது. சுற்றுப் பயணம் முடிந்து வந்தால் இல்லத்தில் குழந்தை சம்பத்தைக் கொஞ்சி மகிழ்வதில் பெரியார் தனிமகிழ்ச்சி காண்பார். சம்பத்திற்கு மூன்று வயது. மலேயா மற்றும் மேற்கு நாடுகள், இலங்கை ஆகிய வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்ய, பெரியாருக்கு அந்நாடுகளிலிருந்து அழைப்பு வந்தது. 1929 டிசம்பர் 15ஆம் நாள் பெரியார் நாகம்மையார், நண்பர்கள் எஸ். இராமநாதன், சுவாமி சிதம்பரனார், அ. பொன்னம்பலனார், மாயூரம் நடராசன், நாகை காளியப்பன் ஆகியோருடன் நாகைத் துறைமுகத்தில் கப்பல் ஏறி, 20ஆம் நாள் பினாங்கு சென்றடைந்தார். அங்கே ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்து வேறு எந்தத் தலைவருக்கும் தராத மகத்தான வரவேற்பை நல்கினர். மலேயா, சிங்கப்பூர் நாடுகளில் பல பகுதிகளில் அவர் சுற்றுப் பயணம் செய்து எழுச்சி மிக்க உரைகளை நிகழ்த்தினார். தாயகம் திரும்பியபோது அவரது தோற்றத்தில் முக்கியமானதொரு மாற்றம் தென்பட்டது. அதுவரையில் முகத்தில் வெண்ணிற மீசை மட்டும் வைத்துக்கொண்டிருந்த பெரியார் மலேயாவிலிருந்து திரும்பியபோது வெண்தாடி வேந்தராக விளங்கினார்.

வெளிநாட்டில் குறுகிய நாட்களில் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் சவரம் செய்துகொள்ள இயலாத நிலையில் தாடி வளர்ந்துவிட்டது என்று காரணம் கூறினார். பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் தலை வாருதல், சவரம் செய்துகொள்ளுதல், உடை உடுத்துதல் போன்ற அலங்கார வேலைகளுக்கு நேரத்தை அதிகம் செலவழிக்கக் கூடாது என்பதும் பெரியாரின் கருத்து.

அவர் வெளிநாடு சென்றிருந்த காலத்தில் ஈரோட்டிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டிருந்த இதழ்களில், ரிவோல்ட் நிறுத்தப்பட்டு, குடியரசு இதழை வளர்ச்சி பெறச் செய்வதில் தீவிர ஆர்வம் காட்டினார் பெரியார்.

அந்த ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியை அகற்றிட காந்தியடிகள் உப்புச் சத்தியாகிரகப் போரைத் தொடங்கியிருந்தார். அதனை எதிர்த்த பெரியார் அந்தக் கொள்கையிலும் அதனை நடத்துகின்ற தலைவர்களின் நாணயத்திலும் தமக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியதோடு, இந்தியாவின் சாதி, மத, மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டால்தான் பூரண சுயராஜ்யம் கிடைக்கும். அதுவன்றி சுதந்திரம் பெற்றாலும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்தியா உருப்படப் போவதில்லை என்று கடுமையாகவே கருத்து தெரிவித்தார்.

1931ல் இரண்டாம் சுயமரியாதை மாநாடு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தலைமையில் ஈரோட்டில் எழுச்சியோடு நடைபெற்றது. அப்போது சம்பத்திற்கு வயது ஐந்து. தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

குற்றாலத்தில் பெரியார்
:-

சோவியத் சுற்றுப் பயணத்திற்குப்பின் பெரியார் குடும்பத்தாருடன் குற்றாலம் வந்திருந்தார். 10 வயதுச் சிறுவன் சம்பத்தும் உடன் வந்திருந்தார். அய்யாவுக்கு உதவியாக அ. பொன்னம்பலனார், பட்டிவீரன்பட்டி சவுந்தரபாண்டியன், இராம சுப்பையா ஆகியோர் வந்திருந்தனர்.

பொதுவாக வீட்டிலேயே அய்யா அவ்வளவு எளிதாகக் குளிக்க மாட்டார். சின்னக் குழந்தைபோல் அடம்பிடிப்பார். குளியலறையில் கொண்டுபோய் உட்காரவைத்து ஒருகுடம் தண்ணீரைத் தலையில் ஊற்றியதுமே துண்டை எடுத்துத் துடைத்துக் கொள்ளுவார். இந்த நிலையில் அருவியிலே குளிக்க அவ்வளவு சுலபமாகச் சம்மதிப்பாரா என்ன?

நண்பர்கள் வற்புறுத்தி அருவியில் கொண்டுபோய்க் கட்டாயப்படுத்தி நிறுத்தி ஒருவழியாகக் குளித்துவிட்டார் பெரியார். 10 வயதுச் சிறுவன் சம்பத் அருவியின் ஆலோலத்தில் ஆட்டம் போட்டுக் குளிப்பதை வெகுவாக
ரசித்தார்.

பெரியார் குற்றாலம் வந்திருந்ததை அறிந்த மாவட்டப் பிரமுகர்கள் அவரைச் சந்திக்க வந்தனர். வந்த அனைவரும் அய்யா குளிச்சிட்டு வந்துட்டீங்களா என்றுதான் முதலில் கேட்டார்கள். இது, அய்யாவுக்குப் பெரும் தொல்லையாக இருந்தது. இராம சுப்பையாவைக் கூப்பிட்டு, ஒரு போர்டு எழுதணும்ப்பா என்றார். அவர் கட்சி சம்பந்தப்பட்ட போர்டு என்று நினைத்துக்கொண்டு, சொல்லுங்கய்யா உடனே எழுதிரலாம் என்றார்.

அப்போது சிறுவன் சம்பத் குறுக்கிட்டு, "அப்பா என்ன சொல்றார்னு உங்களுக்குப் புரியுதா'' என்று கேட்டார்.

"புரியலையே சம்பத் என்றார் இராம சுப்பையா''.

குளிச்சுட்டேன்னு போர்டு எழுதி வைக்கச் சொல்றாரு என்று சம்பத் சொன்னதும் அனைவரும் குலுங்கக் குலுங்கச் சிரித்தனர்.

சிவகங்கைப் பொதுக்கூட்டம்
:-

குற்றாலத்திலிருந்து புறப்பட்டு சிவகங்கைப் பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்தார் பெரியார். அங்கே கடும் எதிர்ப்புகளுக்கிடையே ஊர்வலம், பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. ஊர்வலம் வருவதாகயிருந்த வழியெல்லாம் எதிரிகள் செருப்புத் தோரணம் கட்டியிருந்தனர்.

சிவகங்கை
ராமசந்திரன் சேர்வை, வக்கீல் ராஜசேகரன் ஆகிய இருவரும் வட்டாரச் செல்வாக்கு மிக்கவர்கள். எதிர்ப்புகளைப் பற்றி கவலைப்படாது எழுச்சியோடு ஊர்வலத்தையும் பொதுக்கூட்டத்தையும் நடத்திக் காட்டினார்கள். எதிர்ப்பு அதிகமாக இருக்கிற இடத்திலேதான் அய்யா மிகவும் துணிச்சலாகவும், அழுத்தமாகவும் பேசுவார். சிவகங்கைப் பேச்சு சற்று சூடாகவே அமைந்திருந்தது.

திருக்கோட்டியூர் நூலகம் திறப்பு - சிவகங்கையிலிருந்து திருச்சி வரும் வழியில் பெரியாருக்குத் திருக்கோட்டியூர் எனும் வைதீகஸ்தலத்தில் சுயமரியாதை இயக்க வீரர்கள் வரவேற்பு தந்தனர்.

மு.கா. நல்லையா, டாக்டர் நமசிவாயம், காளிமுத்து மேசனார் மற்றும் பலர் வரவேற்பளித்தனர்.

மு.கா. நல்லையா கட்டடத்தில் அமைந்திருந்த சாரதா வாசக சாலையைப் பெரியார் திறந்து வைத்தார். நல்லையாவின் மூத்த மகன் விவேகானந்தன் (நூலாசிரியர்) என்னும் ஆறுவயதுச் சிறுவனைப் பெரியார் மடியில் தூக்கிவைத்துக்கொண்டு வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் 10 வயதுச் சிறுவன் சம்பத் உட்பட அன்னை நாகம்மையார் முதலானோரும் பங்கேற்றனர்.

ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்புலத்தில் ஒரு பெண் இருக்கிறார் என்னும் முதுமொழிக்கேற்ப பெரியாரின் இன்னல்களும், எதிர்ப்புகளும் நிறைந்த
லட்சிய வாழ்க்கையில் ஏற்புடைய இணையராக தாய்க்குலத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்கியவர் அன்னை நாகம்மையார்.

நாகம்மையார் பழமையில் ஊறிய பெண் என்றாலும் மனமொப்பி பெரியாரின் காதல் துணையான பின்னர் தம் கணவரின்
லட்சியப் பணிகளுக்குத் துணையாகத் தம்மை ஒப்படைத்துக் கொண்டு அக்காலத்திலேயே சிறைத் தியாகங்களை ஏற்றவர்.

பெரியார் குருகுலத்தில் ஈரோட்டு மாளிகையில் எந்நேரமும் விருந்து நடந்து கொண்டேயிருக்கும். வெளியூர்களிலிருந்து ஏராளமான தோழர்கள் பெரியாரைச் சந்திக்க வந்த வண்ணம் இருப்பர். பெரியார் மாளிகையிலேயே சுயமரியாதை இயக்கத்தின் முழு நேரப் பணியாளர்களாகவும் பிரசாரகர்களாகவும் முப்பது நாற்பது பேர் குடும்ப உறுப்பினர்களாகவே ஒன்றி விட்டவர்கள். மிகப்பெரிய சாப்பாட்டுக் கூடம். அங்கே எப்போதும் விருந்து நடந்தபடியே இருக்கும். விருந்தோம்பலில் அன்னை நாகம்மையாருக்கு ஈடு இணை இல்லை. கூடம் நிறைய இலை போட்டுவிட்டு வந்த விருந்தினர்களின் தலைகளை எண்ணுவார்.

பெரியார், தாம் சிக்கனமாய் இருப்பதோடு மற்றவரும் அப்படித்தான் இருக்கவேண்டுமென்று எண்ணுபவர். வேளா வேளைக்கு இவ்வளவு வகை வகையான உணவு தேவையா என்று அம்மையாரிடம் பெரியார் கடிந்து கொள்வதுண்டு. இதற்காகவே அவருக்கு மட்டும் சோறு,
ரசம், மோர் என்று சிக்கனமாய்ப் பரிமாறிவிட்டு கட்சி ஊழியர்கட்கு விருந்துணவு படைப்பார் அம்மையார்.

அழகிரி போன்றவர்கள் ஊருக்குத் திரும்பிப் போக வழிச் செலவுக்குப் பெரியாரிடம் கேட்டுப் பார்த்து, கிடைக்காது சோர்ந்து அய்யாவுக்குத் தெரியாமல் அம்மையாரிடம் காசு பெற்றுச் செல்வதுண்டு. அதிலும் அழகிரி அம்மையாரிடம் பத்து ரூபாயைப் பெற்று அந்த ரூபாய் நோட்டினைப் பெரியாரிடமே காட்டிக் கலக மூட்டிச் சென்றதும் உண்டு. ஆக அது பகுத்தறிவுப் பாசறையைத் தேடிவரும் தொண்டர்களுக்கு நம்பிக்கை மாளிகையாகக் காட்சியளிக்கும்.தமக்கென்று வாழாமல்
லட்சியத் துணைவருக்காகவே வாழ்ந்து ஈகைக் குணமிக்கவராக விளங்கிய அன்னை நாகம்மையாரின் திடீர் மறைவு பெரியாருக்குப் பேரிழப்பை ஏற்படுத்தியது.

1933ம் ஆண்டு ஏப்ரல் திங்களில் உடல் நலிவுற்று நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தவர், மருத்துவம் பலனளிக்காமலேயே மே 11ம்நாள் தமது 48 ஆம் அகவையில் அனைவரையும் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு மறைவுற்றார். எல்லாம் போயிற்று என்று பெரியார் தமது பெருந்துயரை ஒரே வார்த்தையில் வடித்தார்.

தமது அன்னையார் சின்னத்தாய் அம்மையார் மறைந்தபோது, பெரியார் உருக்கமாகக் கட்டுரை தீட்டியிருந்தார். துணைவியார் மறைவுற்ற போதும் கையறு நிலை இலக்கியத்திற்கு ஒப்பானதொரு கட்டுரையினை குடியரசு இதழில் தீட்டினார்.

தொடரும்
.......

தொகுத்து எழுதியவர்கள்:-
என்.விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனாதாசன்

Thevan

unread,
Aug 21, 2011, 5:11:41 AM8/21/11
to mint...@googlegroups.com
தொகுப்பு அருமை.

2011/8/21 Kannan Natarajan <thar...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
வீரத்தை மறந்தவன் கோழையாகிறான்.
உரிமையை மறந்தவன் அடிமையாகிறான்.
அரசியலை கைப்பற்றுவோம்
அதிகாரத்தை கையில் எடுப்போம்.

Regards,
P. A. Thevan, Mumbai.

 


Kannan Natarajan

unread,
Sep 2, 2011, 5:43:14 PM9/2/11
to Min Thamizh

பெரியாருடன் இராஜாஜி
பெற்றோர்களைவிட மிகப் பிரியமாக சம்பத்தை தம் சொந்த மகனாகவே அன்பு காட்டி வளர்த்தவர் அன்னை நாகம்மையார். அவர் மறைவுற்றபோது சம்பத்துக்கு ஏழு வயது. நாகம்மையார் மீது சம்பத்துக்கும் தனி வாஞ்சை. பின்னாளில் தமது பெண் மகவுக்கு நாகம்மை என்று நாமகரணம் செய்தார் சம்பத்.

1933 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் ஈரோட்டில் நடைபெற்ற சுயமரியாதைச் சமதர்ம மாநாட்டிற்கு டாக்டர் வரதராஜுலு நாயுடு தலைமை தாங்கினார். பெரியாரும் மற்ற தலைவர்களும் பங்கேற்றனர். லெனின், நாகம்மையார் படங்களைத் திறந்து வைத்து திரு.வி.க. உரையாற்றினார்.

1926 ஆம் ஆண்டு கோவையில் சந்தித்ததற்குப் பிறகு அந்த மாநாட்டில்தான் முப்பெருந் தலைவர்கள் இணைந்து முழக்கமிட்டனர்."திராவிடன்" பத்திரிகை சம்பந்தமாக பெரியார் கைது செய்யப்பட்டு ஆறு மாதச் சிறைத் தண்டனை பெற்றார்.

1934 ஜனவரி 12இல் "குடியரசு" இதழின் தலையங்கம் காரணமாக அதனை எழுதிய பெரியாரையும் குடியரசு இதழின் வெளியீட்டாளரும் பெரியாரின் தங்கையுமான எஸ்.ஆர். கண்ணம்மாவையும் காவல்துறையினர் கைது செய்து அரசு அவதூறு வழக்குத் தொடுத்தனர்.

நீதிமன்றத்தில் தமது தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறி பெரியார் தாமே வாதாடினார். இந்த வழக்கையொட்டித் தண்டனை வழங்கப்பட்டு பெரியார் கோவைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே சிறையில் வேறு ஒரு காங்கிரஸ் கிளர்ச்சியை ஒட்டி இராஜாஜியும் சிறைப்பட்டிருந்தார். அவர் இருந்தது "பி" வகுப்புச் சிறையில். அது பற்றிப் பின்னர் பெரியார் குறிப்பிட்டபோது அரசியல் காரணங்களுக்காக சிறைக்குப் போகிற பலர் தங்கள் தரத்திற்கு மேல் வாழ்வும், சுகமும் அனுபவித்தவர்களாகவே இருப்பார்கள். நான் சிறைக்குப் போன 19 தடவைகளிலும் "சி" வகுப்புக் கைதியாகவே கஞ்சிக் கலயத்தை ஏந்தித் தண்டனை அனுபவித்தேன். இன்று காங்கிரசில் அப்படிப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை எனக் குறிப்பிடடார்.

இந்தச் சிறை வாசத்தில் இராஜாஜி பெரியாரைச் சந்தித்தார். இருவரும் இளமைக் காலந்தொட்டு நெருங்கிய நண்பர்கள். எந்த முக்கிய விஷயத்தையும் ஒருவருக்கொருவர் கலந்து பேசியே முடிவெடுப்பர். இப்போதைய சந்திப்பில் எப்படியாவது பெரியாரை மீண்டும் காங்கிரசுக்குள் வளைத்துப் போட்டு விடவேண்டுமென சாமர்த்தியமாகப் பேசினார் இராஜாஜி. பெரியார் சம்மதிக்கவில்லை.

குடியரசு பத்திரிகை மீதும், பிரசுரங்களை வெளியிடுகிற சுயமரியாதை பிரசார நிறுவனங்கள் மீதும் அரசின் கெடுபிடிகள் அதிகமாகி பல நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 1933இல் வழக்கும் தொடரப்பட்டு பெரியாருக்கு 9 மாத சிறைத் தண்டனை ரூ. 300 அபராதம் விதிக்கப்பட்டது. அதுபோன்று அவரது தங்கை கண்ணம்மாளுக்கு 6 மாதச் சிறைத் தண்டனை, ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டது.

பகத்சிங் எழுதிய "நான் ஏன் நாத்திகனானேன்?" என்னும் ஆங்கில நூலை ப. ஜீவானந்தம் தமிழில் மொழி பெயர்த்தார். இதை எழுதியதற்காக ஜீவாவும் உண்மை விளக்கம் அச்சகத்தில் வெளியிட்டதற்காக ஈ.வே. கிருஷ்ணசாமியும் கைது செய்யப்பட்டனர். இந்தியக் குற்றவியல் சட்டம் 124 பிரிவின்படி இருவர் மீதும் 204 பிரிவின் கீழ் அவதூறு குற்றம் சாட்டி வழக்கும் தொடர்ந்தார்கள். இதில் அரசு அவதூறு ஏதும் இல்லை என எடுத்துக் கூறி வாதாடிய பிறகு இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அடிக்கடி அரசின் அடக்குமுறை பாய்ந்ததால் பெரியார் அவ்வப்போது பல பத்திரிகைகளை மாற்றி மாற்றி நடத்திவந்தார். 1933இல் "புரட்சி" வார இதழ் 1934 இல் "பகுத்தறிவு" வார இதழ் என்று இப்படிப் பலவற்றை நடத்தினார்.

1935 இல் "பகுத்தறிவு" திங்கள் இதழாகவும், பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும், கவிதைகளும் தாங்கி வெளிவந்தது.

- முத்துசாமி
- பாரதிதாசன்
- ஜலகண்டபுரம் கண்ணன்

ஆகியோரது எழுத்தோவியங்கள் தொடர்ந்து இடம் பெற்றன.

அந்த ஆண்டிலேயே தமிழ் எழுத்துச் சீர்திருத்த முறை பற்றி எஸ். குருசாமியுடன் இணைந்து சிந்தித்து தமிழ் எழுத்துகளில் 13 எழுத்து வடிவங்களைப் பெரியார் மாற்றி அமைத்தார்.

1935 ஜனவரி 13 முதல் அவரது இதழ்களிலும் நூல்களிலும் இந்த எழுத்துச் சீர்திருத்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. சுயமரியாதை இயக்கப் பிரசாரமும் சூடு பிடித்தது.

இந்தக் காலக்கட்டத்தில் தான் வடஇந்தியாவில் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்து சமுதாயச் சீர்திருத்தவாதியாகவும் ஒப்பற்ற சட்ட வல்லுநராகவும் விளங்கிய அம்பேத்கர், தமது தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் சாதி ஆதிக்கவாதிகளால் தொடர்ந்து நசுக்கப்படுவது கண்டு மனம் குமுறித் தாம் இஸ்லாமியத்தில் சேர்ந்து விடப்போவதாக அறிவித்தார். இதனைக் கண்ணுற்ற பெரியார், அம்பேத்கருக்கு எழுதிய 1935 அக்டோபர் 20 ஆம் நாளிட்ட கடிதத்தில் "தயவுசெய்து அவசரமாக முஸ்லிம் மதத்திற்கு மாறி விடாதீர்கள். உங்களவர்களில் குறைந்தது பத்தாயிரம் பேரையாவது முஸ்லிம் ஆக்கிவிட்ட பிறகே நீங்களும் இஸ்லாமியராகுங்கள்'' என்று தந்திரமான வார்த்தைகளில் செய்தி அனுப்பியிருந்தார்.

1937 ஆம் ஆண்டுத் தேர்தல் பிரசாரப் பணிகள் சூடு பிடித்தன. 17 ஆண்டுக் கால நீதிக்கட்சி ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட அருஞ்சாதனைகளையெல்லாம் பட்டியல் போட்டுக் காட்டியும் காங்கிரசாரின் கொள்கை நாணயமற்ற பிற்போக்குத்தனங்களை விளக்கியும், சூடான சுயமரியாதை கருத்துகளை எடுத்தோதியும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் பெரியார்.

நீதிக் கட்சி மேடையில் அதன் தலைவர்களோடு தன்மான இயக்கத் தலைவர்களும் பிரசாரத்தில் இணைந்து நின்றனர். மறு பக்கம் வெள்ளையர் ஆட்சியை எதிர்த்துக் காங்கிரசார் நிகழ்த்தும் போராட்டங்கள். காந்தியடிகளின் புகழ் ஒளியில் அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் ஒருவித மகத்துவம் தென்பட்டது.

இரட்டையாட்சி முறை ஏற்பட்ட 17 ஆண்டுகளில் நீதிக்கட்சியே தொடர்ந்து ஆட்சி செய்ததால் மனம் புழுங்கிக் கிடந்த காங்கிரஸ் தலைவர்களும் அவர்களாலே பதவி பெறத் துடித்த சீமான்களும் மலிவான வாக்குறுதிகளை வாரி வழங்கினர். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் விரைவில் பாலும், தேனும் ஆறாய் ஓடும் என்று மக்களை நம்ப வைத்தார்கள்.

1937 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் எதிர்பாராத அளவில் பெருவெற்றி பெற்றது. நீதிக் கட்சி படுதோல்வி அடைந்தது.

நீதிக் கட்சியை ஆயிரம் அடி குழிதோண்டிப் புதைத்துவிட்டதாக காங்கிரஸ் பேச்சாளர்கள் கொக்கரித்தனர். பெரியார் இனி காங்கிரசுக்குத்தான் திரும்ப வேண்டும் என்றெல்லாம் ஆர்ப்பரித்தனர். தோல்வியில் வெற்றி காணும் பெரியார் இது தமக்கு அனுகூலம்தான் என்றார். காங்கிரசாரின் பத்தாம்பசலி ஆட்சி தொடங்குவதால் பார்ப்பனரல்லாதார் தெளிவுபெற்று தம் பக்கம் வருவார்களென்றும் நம்பிக்கையோடு சொன்னார். துவண்டு போன தோழர்களுக்கு ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தினார்.

வெற்றி பெற்ற காங்கிரசை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தபோது அமைச்சர்களின் அன்றாட அலுவல்களில் ஆளுநர்கள் தலையிடக்கூடாது என்று உறுதிமொழி தரும்படி கேட்டனர். அரசு ஏற்கவில்லை. ஆளுநரே இடைக்கால மந்திரி சபை அமைத்தார். அதில் நீதிக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடம் தருவதாக ஆளுநர் கூறினார். அதை ஏற்கக் கூடாது என்று பெரியார் கண்டிப்பாகச் சொல்லி விட்டார். அதற்குப் பின் இராஜாஜி தலைமையில் (1938 ஜூலை 14ஆம் நாள்) சென்னை மாகாணத்தில் முதன் முதலாக காங்கிரஸ் மந்திரி சபை அமைத்தது.

சுயமரியாதை இயக்கத்திலிருந்த எஸ். இராமநாதன் இந்த அமைச்சரவையில் ஓர் அமைச்சராக ஒட்டிக் கொண்டார். இராஜாஜியை ஒரு மாட்டு வண்டியில் ஏற்றி இராமநாதனே ஓட்டுவது போல் அப்போது ஒரு பத்திரிகை கேலிச்சித்திரம் வெளியிட்டது. அது முதல் அவருக்குக் "கட்டை மாட்டு வண்டி" இராமநாதன் என்னும் கேலிப் பெயர் ஏற்பட்டது.

இராஜாஜி தம்முடைய அமைச்சரவையில் சத்தியமூர்த்திக்கு இடந்தராமல் டி.என்.எஸ். இராஜன் ஐயங்காருக்குப் பதவி தந்ததால் சத்தியமூர்த்தியும், இராஜாஜியும் பகைவர்களானார்கள்.

1935 இல் நீதிக் கட்சியினரால் "விடுதலை" வாரம் இருமுறை ஏடாக சென்னையில் தொடங்கப்பட்டது. பின்னர் அது நாளேடாகியது. 1937 இல் நீதிக்கட்சியினர் "விடுதலை" நாளேட்டை பெரியாரிடம் ஒப்படைத்தனர். நிராயுதபாணியாக போர்க்களத்தில் நிற்கும் வீரனுக்குப் போர் வாள் கிடைத்தது போல் பெரியாருக்கு "விடுதலை" என்னும் கருத்துப் படைக்கலன் கிடைத்ததும் அதன் அலுவலகத்தை ஈரோட்டிற்கு மாற்றிக் கொண்டார் பெரியார்.

காங்கிரஸ் ஆட்சி பதவி ஏற்க முதலில் மறுத்து பிறகு சரணாகதி அடைந்த பின்னர், பதவி வாங்கியதை "விடுதலை" நாளேட்டில் சரணாகதி மந்திரிசபை இன்று 7ஆம் நாள், 8ஆம் நாள் என்று நாள்தோறும் வெளியிடப்பட்டு வந்தது. பெரியாரின் தொலைநோக்குக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 1939ஆம் ஆண்டு அக்டோபரில் காங்கிரஸ் ஆட்சி வெளியேறியது. ஆளுநர் ஆட்சி பிரகடனமாகியது. நீதிக் கட்சியின் சார்பில் இயங்கிய விடுதலை ஏட்டின் துணையாசிரியராக அண்ணா 1939இல் பொறுப்பேற்றார். அண்ணாவின் எழுத்தாற்றல் போலவே அவரது கணிப்பாற்றலும் குறிப்பிடத்தக்கதாய் இருந்தது.

வார்டு ரெங்கின் என்பவர் சென்னை மாநில ஆளுநராகப் பதவி ஏற்றார். அவர் ஏற்கனவே இலண்டனில் சில பதவிகள் வகித்து கெட்ட பெயர் வாங்கியவர் என்பதை அண்ணா அறிந்து வைத்திருந்தார். ஆகவே வார்டு ரெங்கின் ஆளுநர் பதவிக்குத் தகுதியற்றவர் என்று விடுதலை ஏட்டில் அண்ணா தலையங்கம் தீட்டியிருந்தார். இது வெள்ளையர்களுக்கு நெருக்கமான நீதிக் கட்சித் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆளுநர் மாளிகையிலிருந்து விடுதலையேட்டில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என முறையீடு வந்தது. ஈரோட்டுக்கு விரைந்து வந்த ஏ.டி. பன்னீர்செல்வம் வருத்தம் தெரிவித்து எழுதுமாறு அண்ணாவிடம் வற்புறுத்தினார். அண்ணா மறுத்துவிட்டார். "என்னால் அதற்கு வருத்தம் தெரிவித்து எழுத முடியாது நான் எழுதியது எழுதியதுதான்'' என்று சொல்லிவிட்டார்.

திகைப்புற்ற பன்னீர்செல்வம் பெரியாரிடம் முறையிட்டார். பெரியாரோ, "அண்ணாத்துரையின் கருத்து சரியானது. ஆளுநர் எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும்'' என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டார். பன்னீர்செல்வத்தின் முயற்சி பலனளிக்கவில்லை. பின்னர் நெடுநாட்கள் சென்று அதே ஆளுநர் திறமையற்றவர் என இலண்டனுக்குத் திருப்பி அழைக்கப்பட்டபோது பன்னீர்செல்வம் அண்ணாவிடம் "நீங்கள் உண்மையிலேயே தீர்க்கதரிசிதான்", என்று மனமாரப் பாராட்டினார்.

நீதிக்கட்சியின் சார்பில் விடுதலை ஏடு நடத்தப்பட்டதால் அதன் மூலம் போர்ப் பிரசாரம் புரிவதற்காக விடுதலை நிர்வாகத்தை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது என்று நீதிக் கட்சி முடிவு எடுத்தது. இதனை எதிர்த்து விடுதலை துணையாசிரியர் பொறுப்பிலிருந்து அண்ணா தம்மை விடுவித்துக் கொண்டார்.

அண்ணாவின் பேச்சாற்றலை நன்கு அறிந்திருந்த வெள்ளையரசு அவரைப் போர்ப் பிரசாரத்திற்குப் பயன்படுத்த விரும்பியது. கணிசமான ஊதியம் அளிப்பதாகவும் சொன்னார்கள். ஆனால் அண்ணா மறுத்துவிட்டார். நீதிக்கட்சி சீமான்களிடம் வெறுப்பு ஏற்பட்டது போலவே வெள்ளையர் அரசின் மீதும் அண்ணாவுக்கு வெறுப்புத் தோன்றலாயிற்று. இவற்றையெல்லாம் மாணவராக இருந்த சம்பத்திற்கு அண்ணா நுணுக்கமாக எடுத்துரைத்தார்.

Kannan Natarajan

unread,
Sep 10, 2011, 4:19:56 PM9/10/11
to Min Thamizh

கல்வி கற்கப் பாடசாலையில் சம்பத்தைச் சேர்த்தபோது காக்கிச் சட்டை காக்கி அரைக்கால் சட்டை அணிந்து செல்லவேண்டுமென்று பெரியார் கட்டளையிட்டார்.

கல்விச் சாலைகளில் சீருடைகள் அறிமுகமாகாத காலம். கோடுபோட்ட பூப்போட்ட சட்டைகள் ஆடம்பரத்தைக் குறிக்கும். ஆகவே தமது மகனுக்குக் காக்கிச் சட்டை போட்டுத்தான் கல்விச் சாலைக்கு அனுப்பவேண்டும் என்று பெரியார் பணித்திருந்தார்.

உயர்நிலைப் பள்ளிக் கல்வி முடியும் வரை மாணவர் சம்பத் காக்கிச் சட்டையிலேயே காட்சி தந்தார்.  பள்ளியில் கெட்டிக்கார மாணவனாக விளங்கினார். வகுப்பறையில் ஆசிரியர் போதிக்கும்போது  மட்டும் மிக உன்னிப்பாகக் கவனிப்பார். முக்கியமானவற்றைக் குறித்து வைத்துக் கொள்வார். வீட்டில் படிக்க மாட்டார். மற்ற நாட்களில் தனிப்பயிற்சி ஆசிரியருக்கு விடுமுறை கொடுத்துவிடுவார். இப்படி இருந்தும் மூன்றாம் வகுப்பில் அவருக்கு இரட்டை வகுப்புயர்வு தந்தார்கள். நான்காம் வகுப்பு போகாமலேயே ஐந்தாம் வகுப்பிற்குத் தாவிவிட்டார்.  அக்காலத்தில் பெரியாரைச் சந்திக்க வரும்
ராஜாஜி, பொப்பிலி ராஜா, அவினாசிலிங்கம் செட்டியார், செட்டி நாட்டரசர் முத்தையா செட்டியார், ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் போன்றவர்கள் பெரியார் மடியிலிருக்கும் செல்லப்பிள்ளை சம்பத்தின் மழலை கேட்டு மகிழ்வதோடு கெட்டிக்காரப் பையன் என்று தட்டிக் கொடுத்துப் பாராட்டியதுண்டு.   

பெரியார் குடும்பத்திற்கு ஈரோட்டில் திரும்பிய பக்கமெல்லாம் கடைகள், கட்டடங்கள், சொத்துகள் உண்டு. பெரியார் வாழ்ந்த வீட்டிற்குப் பின்பக்கத்து வீட்டில் வீராச்சாமி என்னும் பிரபலமான தவில் வித்வான் குடியிருந்தார். அங்கே போய் சம்பத் மிருதங்கம் கற்றுக் கொள்ள ஆசையாயிருக்கிறது என்று கேட்டிருக்கிறார். "நீ பெரிய இடத்துப் பிள்ளை. உன் அப்பா கூட மன்னித்து விடுவார். உன் சித்தப்பா என் முதுகைக் கிழித்து விடுவார். வேண்டாம்பா வம்பு", என்று நழுவினார் தவில் வித்வான்.  தவில் மீது சம்பத்திற்கு ஒரு கண் இருந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் மாலை வீராச்சாமி வீட்டில் யாரும் இல்லாதபோது நுழைந்து தவிலைத் தூக்கி வந்து தமது வீட்டு முற்றத்தில் வைத்து ஆசை தீர, ஆத்திரம் தீர அடித்துக் கிழித்துவிட்டார்.  இதுபற்றி தவில் வித்துவான் பெரியாரிடம் புகார் செய்தபோது, "உன் வாத்தியத்தை ஒழுங்காக வைத்துக் கொள்ள முடியாமல் நீ என்ன வித்துவான் வேலை பார்க்கிறாய். சின்னப் பையன் ஆர்வத்தில் செய்துவிட்டான் போ போ'', என்று சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டார். வித்துவான் எங்கே காசு கேட்டு விடுவாரோ என்று அவரையே கடிந்துபேசி அனுப்பிவிட்டார்.   

பெரியார் மாளிகையில் தலைவர்களும், தோழர்களும் உணவு உண்ணும்போது அவர்களோடு சேர்ந்துதான் சிறுவன் சம்பத்தும் உணவருந்த வேண்டுமென்பது பெரியாரின் உத்தரவாகும். பந்தியில் சாப்பிட்ட சம்பத்தை அன்னை நாகம்மையார் பக்கத்து அறைக்குக் கூட்டிச் சென்று வயிறு காலியாக இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்து வற்புறுத்தி உணவு ஊட்டுவார்.  அன்னையாரைப் போலவே அவருடைய அத்தை கண்ணம்மாளும் வயிற்றில் குழி விழுந்தால் இன்னும் சாப்பிடவேண்டும் என்று வற்புறுத்தி அவர் பங்கிற்கு அவரும் சம்பத்திற்கு ஊட்டம் கொடுப்பார். பெரியாரைப் போலவே சம்பத்துக்கும் அசைவ உணவு என்றால் மிகவும் விருப்பம். 

பெரியார் மாளிகையில் தங்கியிருந்து பணியாற்றிய பழம்பெரும் பணியாளர்கள் கைவல்யம், பொன்னம்பலனார், அழகிரி, ஜீவானந்தம், எஸ்.வி. லிங்கம், குருசாமி, மாயூரம் நடராசன் போன்றவர்களுக்கும் சம்பத் செல்லப்பிள்ளையாக விளங்கினார்.  அவர்கள் ஒரு நாள் இயக்கப் பணிகள் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தபோது அவர்களோடு சென்று அமர்ந்தார். எல்லோரும் பேச்சை நிறுத்திவிட்டு சம்பத்தை செல்லமாகக் கொஞ்ச ஆரம்பித்தார்கள். அப்போது அழகிரி சம்பத்திடம், "தம்பி நீ மேடையில் பேசுவாயா?'' என்று கேட்டார். உடனே சிறுவன் சம்பத் நெஞ்சை நிமிர்த்தி, "நான் பேசுவேன். சித்தப்பாவை விடச் சிறப்பாகப் பேசுவேன்'' என்று சொன்னதும் எல்லோரும் சிரித்தனர்.

"அப்படியானால் பேசு கேட்கலாம்'' என்றனர். உடனே சம்பத், "மேடையில்லாமல் இங்கே எப்படிப் பேசமுடியும்?'' என்றார். உடனே ஜீவானந்தம் ஓடிப்போய் ஒரு பெரிய மேசையை தூக்கி வந்தார். "இப்போது மேடை தயார். பேசு'' என்றார். உடனே சிறுவன் சம்பத், "என்னை மேசையின் மீது தூக்கி நிறுத்துங்கள். பிறகு பேசுவேன்'' என்றார். சிறுவன் சம்பத்தை பொன்னம்பலனார் தூக்கி மேசை மீது நிற்க வைத்து, "இப்போது பேசு தம்பி'' என்றார். அதற்கு சம்பத், "நீங்கள் எல்லாம் இப்படி நின்று கொண்டிருந்தால் எப்படிப் பேச்சு வரும்? உட்காருங்கள்'' என்று ஆணையிட்டார். அனைவரும் அமைதியோடும், வியப்போடும் மேசைக்கு எதிரில் அமர்ந்தனர். ஏழு வயதுச் சிறுவன் சம்பத் கன்னிப் பேச்சை அங்கே நிகழ்த்தத் தொடங்கினார்.

இதோ கேளுங்கள்:-  "பெரியோர்களே உங்களுக்கு எல்லாம் தெரியும். இருந்தாலும் சொல்கிறேன். (இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தபோது பேச்சை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்த ஜீவானந்தம் இருமினார்). கூட்டத்தில் இப்படி எல்லாம் இருமிக் கொண்டு இருந்தால் எப்படிப் பேச முடியும் என்று சிறுவன் சம்பத் கேட்க உடனே எல்லோரும் சேர்ந்து கைதட்டிச் சிரித்தனர். ஜீவானந்தம் எழுந்து பயபக்தியுடன் கையைக் கட்டிக் கொண்டு, "இனிமேல் இரும மாட்டேன் தம்பி. இனி புரட்சியான பேச்சைத் தொடரலாம்'' என்றார். சிறுவன் சம்பத் கையை வீசிக்கொண்டு தம் ஆவேசப் பேச்சைத் தொடர்ந்தார்.  (ஜீவாவை சுட்டிக் காட்டி) "இவர் எழுந்து கையைக் கட்டிக் கொண்டு ஏதோ சொன்னார். இப்படிக் கைகட்டுவதெல்லாம் எனக்கு பிடிக்காது. என் வகுப்பிலேயே கை கட்டும் மாணவர்களைக் கண்டித்திருக்கிறேன். இவர் திருத்திக் கொள்வாரா?'' (கரவொலி சிரிப்பு) ஜீவா எழுந்து, "இனிமேல் அந்தத் தப்பைச் செய்ய மாட்டேன். மன்னித்து விடுங்கள் தம்பி'' என்றார். 

"தாழ்த்தப்பட்டவர்களிடம் அன்பாக இருக்க வேண்டும். நான் பள்ளிக்குப் போகும்போதே என் சித்தப்பா இதைச் சொல்லியிருக்கிறார். இத்துடன் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்'' என்று சொல்லிவிட்டு மேசையிலிருந்து குதித்தார் சம்பத். எல்லோரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அழகிரி சம்பத்தைக் கட்டிப்பிடித்து தூக்கி வைத்துக் கொண்டு, "என் கண்ணே எதிர்காலத்தில் நீ பெரிய பேச்சாளர் ஆவாய். நாடெல்லாம் உன் புகழ் பரவப் போகிறது'' என்று உளமகிழ்ந்து வாழ்த்தினார். சம்பத் தமது ஏழாம் வயதிலேயே கன்னிப் பேச்சை நிகழ்த்தி, சொல்லாளர்களான சுயமரியாதை இயக்க வீரர்களின் மனமுவந்த பாராட்டைப் பெற்றார்.  பள்ளியில் சிறந்த மாணவர்  சம்பத்தின் உயர்நிலைக் கல்வி ஈரோடு மகாஜன உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்து கொண்டிருந்தது. படிப்பில் மிக கெட்டிக்காரராக விளங்கினார். ஆசிரியர்களும் இவர் மீது மிகவும் அன்பு காட்டினர். பொது விஷயங்களை அறிந்து கொள்வதில் அந்த வயதிலேயே அவருக்கு மிகுந்த நாட்டம் இருந்தது.

பாபர், அக்பர், அசோகர், சந்திர குப்தர் போன்ற சரித்திர நாயகர்கள் பற்றியும் அன்னியப் படையெடுப்புகள் பற்றியும் தமிழ் இலக்கிய நயங்கள் பற்றியும் வகுப்பறையில் ஆசிரியர் போதிப்பது ஓரளவுக்குத்தான் இருக்கும். ஆனால் ஒவ்வொன்றையும் பற்றி அவ்வப்போது தம்முடைய இல்லத்துப் பாசறையில் பெரும் ஆராய்ச்சியாளர்களாக விளங்கிய கைவைல்யம், சிங்காரவேலர், ஜீவா போன்றவர்களிடம் விவரமாகக் கேட்டுத் தெரிந்து கொள்வார். பள்ளித் தேர்வுகளில் இது போன்ற வினாக்களுக்கு சம்பத் தரும் பதில்கள் பள்ளியில் பயிலாத பல விவரங்களை அடக்கியதாக இருக்கும். இலக்கியம், சரித்திரம் பற்றிய கட்டுரைகளும் சுவையான நடையில் தெளிவான தமிழில் அமைந்திருக்கும். ஆதலால் ஆசிரியர்கள் அவர் மீது தனி அன்பும் மதிப்பும் வைத்திருந்தனர். அவருக்குக் கல்வியில் இருந்த ஆர்வத்தைப் போலவே ஃபுட்பால், டென்னிஸ் முதலிய விளையாட்டுகளிலும் உடற்பயிற்சியிலும் ஆர்வம் இருந்தது. 

உயர்நிலைப் பள்ளியில் மாணவர் மன்ற அமைப்புகளை உருவாக்கினார் சம்பத். தமிழார்வம் மிக்க மாணவர்களை இணைத்துக் கொண்டு வாரம் இருமுறை மாலை 4 மணி முதல் 6 மணி வரை பல்வேறு தலைப்புகளில் சொற்போர் வாதங்கள் நடைபெறும். அதிலெல்லாம் சம்பத் முதல் பரிசைத் தட்டிச் செல்வார். காங்கிரஸ் மாணவர்களையும், பிராமண மாணவர்களையும் அவர் ஒதுக்கி விடுவதில்லை. அவர்களின் எதிர்வாதங்களையும் கேட்டு அறிவார். அதில் வாதத் திறமை மிக்க மாணவர்களை அவரே பாராட்டுவார்; நண்பர்களாக்கிக் கொள்வார். சில நேரங்களில் மாணவர்கள் இடையே கருத்து மோதல், கைகலப்பும் நடப்பது உண்டு. அதிலும் சம்பத் பின் வாங்கியதில்லை. 

பள்ளி மாணவர் மன்றப் பேச்சுப் போட்டியில் முதன்முதலில் அவர் ஆற்றிய உரையின் தலைப்பு "உண்மை" என்பதாகும். உண்மை எது? பொய் எது? அசல் எது? நகல் எது? என்றெல்லாம் விளக்க ஆரம்பித்து கடவுள் உண்மை அல்ல உண்மைதான் கடவுள் என்றெல்லாம் அவர் தமது 12 ஆம் வயதிலேயே தெளிந்த சிந்தனையோடு கருத்துகளை வெளியிட்டார். 

அதற்குக் காரணம், அவர் பகுத்தறிவுப் பாசறையில் அறிவுப் பாலருந்தி, அறிஞர் பெருமக்களிடையே தவழ்ந்ததுதான். வயதுக்கு மீறிய நுட்பமான சிந்தனையும் செயல் திறனும் இளமையிலேயே அவரிடம் காணப்பட்டது. பிற்காலத்தில் அவர் தமிழகத்து மேடைகளில் சொல்லின் செல்வராக உயர்ந்தாரே, அதன் பின்னணியில் ஈரோட்டுப் பாசறையும் அவர் பயின்ற பள்ளி மாணவர் மன்ற நிகழ்ச்சிகளும் பெருமளவு காரணங்களாக நின்றன. 

பெரியார், சம்பத்திற்குக் குழந்தைப் பருவத்திலேயே எளிமை, சிக்கனம், உழைப்பு ஆகியன பற்றி உள்ளத்தில் பதியுமாறு போதிப்பார். அது அவர் மாணவராகச் சொற்போர் நடத்துகிற போது எதிரொலிக்கும். பிற்காலத்தில் அவர் போலித்தனங்களையும், மலிவான விளம்பரங்களையும் வெறுத்ததற்கும் பெரியார் போதனையே காரணமாக இருந்தது. ஈரோட்டுப் பகுத்தறிவுப் பாசறையில் மாணவப் பருவத்திலேயே புடம் போட்டு எடுத்த தங்கமாக சம்பத் உருவாகலானார்.  பள்ளி மாணவர் மன்ற விழாக்களில் சுயமரியாதை இயக்கத் தலைவர்களை அழைத்துச் சென்று பேச வைக்க விரும்புவார். ஆனால் தலைமையாசிரியரின் ஒப்புதல் கிடைக்காது. "அவர்களெல்லாம் நாத்திகர்கள், பள்ளி வளாகத்திற்குள் நுழையக் கூடாது", என்பார்கள்.    

குறிப்பு:-
ஈரோடு வேங்கடப்ப நாயக்கர் என்பதே சரியானது. ஆனால் பெரியாரும், சம்பத்தும் அனைவராலும் அழைக்கப்பட்டவாறு, "ஈ.வெ" என்றே தங்களது பெயருக்கு முன்பாகக் குறிப்பிட்டு வந்துள்ளனர். எனவே "ஈ.வெ.கி.சம்பத்" என்று பயன்படுத்தப்படுகிறது.


தொடரும்.........

Geetha Sambasivam

unread,
Sep 10, 2011, 9:04:32 PM9/10/11
to mint...@googlegroups.com
தகவல்களுக்கு நன்றி.

2011/9/11 Kannan Natarajan <thar...@gmail.com>



தொகுத்து எழுதியவர்கள்:- என்.விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனாதாசன்

நன்றி:- தினமணி

--

Subashini Tremmel

unread,
Sep 11, 2011, 3:29:54 AM9/11/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
வாசித்துக் கொண்டிருக்கின்றேன். விரிவான கட்டுரை.  பகிர்தலுக்கு நன்றி.

சுபா

2011/9/10 Kannan Natarajan <thar...@gmail.com>

Kannan Natarajan

unread,
Sep 15, 2011, 6:28:39 AM9/15/11
to Min Thamizh

தலைமையாசிரியரிடம் சம்பத் தந்திரமாகப் பேசி, கைவல்யசாமி, சகஜானந்த சுவாமிகள், ஈழத்துச் சிவானந்த அடிகள் என்று பெயரைச் சொல்லி இவர்களெல்லாம் துறவிகள், சாமியார்கள் அரசியல் பேச மாட்டார்கள், ஒழுக்கம் பற்றி உரைப்பார்கள் என்றெல்லாம் சொல்லி தமக்கு வேண்டிய ஆசிரியர்களையும் சொல்ல வைத்து அனுமதி வாங்கி விடுவார். மாணவர் மன்றக் கூட்டங்களில் இந்தச் சீர்திருத்தச் சாமியார்களைப் பேச வைத்துவிடுவார். தலைமை தாங்குகிற தலைமை ஆசிரியர் பேசுகிறவர்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பார். அதிலேயும் இந்தச் சாமியார்கள் ஒழுக்கம் பற்றியெல்லாம் மாணவர்களுக்கு நல்ல கருத்துகளை எடுத்துக் கூறி "புராணத்தில் இப்படியெல்லாம் அபத்தமாக இருக்கிறது. ஆகவே திருக்குறள் படியுங்கள்'' என்று பேசி முடித்து விடுவார்கள். மாணவர்களிடையே வரவேற்பும் இருக்கும். எதிர்ப்பும் இருக்கும். அடுத்த வாரமே அரசாங்கத்திடமிருந்து தலைமையாசிரியருக்கு ஓலை வரும். அதைச் சமாளிப்பது பெரும் பாடாக இருக்கும். இதனால் தமிழ் மன்றக் கூட்டங்களுக்கு அடிக்கடி சோதனை ஏற்படுவதுண்டு. ஆசிரியர்களுக்குக் குடியரசுப் பத்திரிகையைச் சம்பத் கொடுப்பார். பல ஆசிரியர்கள் அதன் மூலம் பகுத்தறிவு இயக்க அனுதாபிகளாகி விடுவார்கள்.

மாணவப் பருவத்திலேயே சம்பத்திற்குத் திரைப்படம் பார்க்கின்ற பழக்கம் அதிகம் உண்டு. (அதை அவர் மயக்கமாக வைத்துக்கொள்ளவில்லை. பொழுதுபோக்காகக் கொண்டார்) நல்ல கதை, சிறந்த நடிப்புத் திறன் இவற்றுக்கெல்லாம் அவர்
ரசிகர். பள்ளி ஆண்டு விழாவில் நாடகம் போட்டுத் தாமே நடிக்க வேண்டுமென்று ஆர்வம் கொள்வார். சிலப்பதிகாரக் காட்சிகள், நக்கீரன் போன்ற ஓரங்க நாடகங்களை நடத்த முயன்று தலைமையாசிரியரின் அனுமதி இல்லாததால் ஏமாற்றமடைந்ததும் உண்டு.

அவர் மாணவராக இருந்தபோது (வயது 16) தமது பள்ளிக்கருகிலுள்ள ஒரு பூங்காவில் "மனோன்மணி" என்ற திரைப்படத்திற்கான வெளிப்புறப் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது சில மாணவர்களை அழைத்துக்கொண்டு படப்பிடிப்பைக் காணச் சென்றுவிட்டார். வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து ஆசிரியர்கள் தலைமையாசிரியரிடம் சம்பத் தான் கூட்டிக்கொண்டு போனார் என்று புகார் செய்ய கோபமுற்ற தலைமையாசிரியர் மீனாட்சி சுந்தர முதலியார் தலையிலே டர்பன், கையிலே பிரம்பு ஆகியவற்றோடு படப்பிடிப்பு நடைபெறுகின்ற இடத்திற்கே வந்துவிட்டார். அவரைக் கண்டதும், "டேய், ஹெட் மாஸ்டர்டா'' என்று கூச்சலிட்டவாறு சம்பத்தும், மாணவர்களும் பள்ளியை நோக்கி ஓடினர். அந்தக் கூச்சல் சலசலப்பில் சில நிமிடங்கள் படப்பிடிப்பு தடைப்பட்டது.

உயர்நிலைப்பள்ளியிலேயே தமிழிலும், ஆங்கிலத்திலும் முதல் மாணவராகச் சிறந்து விளங்கினார் சம்பத். கணக்குப் பாடத்தில் மட்டும் கொஞ்சம் வீக். அழகான உச்சரிப்புடன் ஆங்கிலப் பாடங்களைச் சரளமாகப் படிப்பார். அவருடைய ஆங்கில ஆசிரியர் நாராயணராவ், சம்பத்திற்கு மிகவும் பிடித்தவர். பொங்கல் திருநாளில் தமது நண்பர்களுடன் தமக்குப் பிடித்த ஆசிரியர்கள் இல்லங்களுக்குச் சென்று கைத்தறி ஆடைகள், பொங்கல், கரும்பு முதலானவற்றைப் பணிவோடு வழங்குவார்.

பள்ளிப் படிப்பில் கெட்டிக்காரராக இருந்தாலும் பெரியார் சிறுபிள்ளையில் இருந்தது போலவே முன்கோபமும், முரட்டுத்தனமும் சம்பத்திடம் மேலோங்கியிருந்தன. அய்யாவைப் போலவே குறும்புத்தனங்களுக்கும் குறைவில்லை.

கண்டிப்பிற்குப் பெயர் போன பெரியார் வெறும் மிரட்டல் சத்தத்திலேயே சம்பத்தை அடக்கிவிடுவார். "வீட்டில் எல்லோரும் செல்லம் கொடுத்து இவனைக் கெடுத்துவிட்டீர்கள்" என்று கடிந்து கொள்வார். அப்போதே சம்பத் சுற்றுவட்டாரங்களில் நடைபெறும் சுயமரியாதை இயக்கக் கூட்டங்கள், நீதிக் கட்சியின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் தம் தோழர்களுடன் முன் வரிசையில் அமர்ந்து ஆர்வமாகக் கேட்பார்.

பெரியார் ஓய்வாக மகிழ்ச்சியாக இருக்கிறபோது உடனிருப்போர், சம்பத்தைச் சீண்டிவிட்டு அழகிரி, பொன்னம்பலம், ஜீவா போல் பேசிக் காட்டச் சொல்வார்கள். இவர் அவர்களைப் போலவே குரலை உயர்த்தி, தாழ்த்தி, கைகளை மேலும் கீழும் வீசி ஆவேசமாக பேசிக் காட்டுவார். சித்தப்பா ஈ.வெ.ரா.விற்கு அந்த நேரத்தில் வரும் சிரிப்புத் தாங்க முடியாததாக இருக்கும்.

பள்ளி விடுமுறை நாட்களில் சம்பத்தையும் தம்மோடு சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் செல்வார். விடுமுறை முடிவதற்கு முதல்நாளே ஈரோட்டிற்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்து பஸ்ஸிலோ,
ரயிலிலோ ஏற்றிவிடுவார். 15 வயதிலிருந்தே சம்பத்திற்கு இத்தகைய சுற்றுப் பயணத்திற்கான பயிற்சி தரப்பட்டது.1929ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை இயக்க மாநாடு நடைபெற்றபோது அம்மாநாட்டில் கூட்டத்தில் ஒருவராக இருந்து பங்கேற்றவர் காஞ்சிபுரம் சி.என். அண்ணா. ஏற்கெனவே பெரியார் பற்றியும் தன்மான இயக்கம் பற்றியும் அறிந்து வைத்திருந்த அண்ணாவிற்குச் செங்கல்பட்டு மாநாடு சிந்தனைகளைக் கிளறிவிட்டது.

சென்னையில் சுயமரியாதை இயக்கச் செயல்வீரர்களாக இருந்த சி. கணேசன், சிவஞானம், புலவர் செல்வராஜ் ஆகியோருடன் அண்ணாவிற்கு நட்பு ஏற்பட்டது. இவர்களது முயற்சியால் சென்னையில் சுயமரியாதை இளைஞர் மன்றம் தொடங்கப்பட்டது. மன்ற நிகழ்ச்சிகளில் அடிக்கடி அண்ணா ஆர்வத்துடன் பங்கேற்பார். அப்போது அவர் பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. படித்துக் கொண்டிருந்தார்.

1934ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் அண்ணா தமது கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரது முன்னோர் யாரும் படித்துப் பட்டம் பெற்றதில்லை. பெரிய பதவிகள் வகித்ததுமில்லை. சமுதாயத்தின் கீழ்த்தட்டில் சாதாரண நெசவாளர் குடும்பத்தில் தோன்றியவர் அவர். தந்தை நடராசனார் மறைவிற்குப் பிறகு அன்னையார் பங்காரு அம்மாள் சிறிய தாயார் (தொத்தா)
ராஜாமணி அம்மையார் ஆகியோர் மெத்தச் சிரமப்பட்டு அண்ணாவை இன்டர்மீடியட் வரை படிக்க வைத்தனர். அண்ணாவின் அறிவுக் கூர்மையை உணர்ந்து கல்லூரி முதல்வர் சின்னத்தம்பி நீதிக்கட்சித் தலைவர்களிடம் உதவிபெற்று அண்ணா எம்.ஏ. படிக்க ஆவன செய்தார்.

கல்வி முடிந்ததும் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஏற்பட்டு அண்ணா நீதிக்கட்சிப் பிரமுகர் ஒருவரின் பரிந்துரையோடு அப்போது கல்வி அமைச்சராக இருந்த செட்டி நாட்டரசரிடம் எழுத்தராக ஆறுமாதம் பணியாற்றினார். பொது வாழ்க்கை ஆர்வம் காரணமாக விரைவாகவே அப்பணியிலிருந்து விலகிவிட்டார்.

அண்ணா நூல்நிலையங்களுக்குச் சென்று பெரும்பகுதி நேரம் படித்துக் கொண்டிருப்பார். பெரியாரின் குடியரசுப் பத்திரிகையைத் தவறாது படிப்பார். 1934ல் அவரது கல்வி முடிவதற்கு முன்பே, 1930ஆம் ஆண்டிலேயே அண்ணாவின் 21 வயதில் பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டனர். காஞ்சிபுரம் வரகுவாசல் தெரு 51ஆம் எண் இல்லத்தில் அவரது குடியிருப்பு. படிப்பு சென்னையில். மனைவி
ராணி அம்மையார் அவரது பெற்றோரோடு தஞ்சையில். இப்படி அவரது தொடக்க கால இல்லறம்.

திருப்பூரில் 1934ஆம் ஆண்டு செங்குந்தர் (நெசவாளர்) மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டின் சிறப்புச் சொற்பொழிவாளர் பெரியார் ஈ.வெ.ரா. இந்த மாநாட்டிற்கு அண்ணாவும் அழைக்கப்பட்டிருந்தார். (இதுதான் அண்ணாதுரை எனும் பெயரில் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி)

அந்த மாநாட்டில் அண்ணா பேசுவார் என்று அறிவிக்கப்பட்டதும் ஒரு குள்ளமான உருவம் அழகான தமிழில் அடுக்குமொழியில் இனிய குரலில் அற்புதமாகப் பேசியதில் அடிக்கடி பலத்த கரவொலியும், மகிழ்ச்சி ஆரவாரமும் ஏற்பட்டன. அண்ணாவுக்கு அது கன்னிப் பேச்சு. பெரியாருக்கோ வியப்பு. பேசி முடித்ததும் அண்ணாவை அருகில் அழைத்து உட்காரவைத்து, "நல்லாப் பேசுனீங்க. ஊரு காஞ்சிபுரமா? என்ன உத்தியோகம் பார்க்கிறீங்க?'' என்று கேட்டார்.

அதற்கு, "உத்தியோகத்தைத் தேடிக்கிட்டிருக்கேன் அய்யா'' என்று சொன்னார்.

"சரி என்னோட வந்திடுங்க ஈரோட்டுக்கு'' என்றார் பெரியார்.

"ஊருக்குப் போய் வீட்டில் கலந்து பேசி பிறகு வருகிறேன்'' என்றார் அண்ணா. இதுவே பெரியார் அண்ணா முதல் சந்திப்பு. பெரியாரின் கனிவான கவனிப்புக்கு உள்ளானார் அண்ணா.

பெரியாரைப் பகைத்துக்கொண்ட நீதிக்கட்சி பெரும் சரிவுகளைச் சந்தித்தது. அவற்றைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பல தலைவர்கள் விலகி நின்றனர். அந்த நேரத்தில் மிச்சம் மீதியிருந்த நீதிக்கட்சித் தலைவர்கள் பெரியாரை விட்டால் வேறு கதியில்லை என்று சரணாகதி அடைந்தார்கள். நீதிக்கட்சியின் தலைவராகப் பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசிற்கு எதிராக இனி ஒரு மாற்றுக் கட்சி உருவாகவே முடியாது என்றிருந்த நிலையில் பெரியார் நீதிக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அக்கட்சி புத்துயிர் பெற்றது.

இரண்டே ஆண்டுகளில் நீதிக்கட்சி என்னும் அரசியல் இயந்திரத்தைச் சுயமரியாதை இயக்கம் என்ற இஞ்சினோடு பூட்டி வெகுவேகமாக இயக்க ஆரம்பித்தார் பெரியார். நாள்தோறும் பொதுக்கூட்டங்கள், திங்கள்தோறும் மாநாடுகள், பரபரப்பான பத்திரிகைகள் என்று எழுச்சி முரசு அதிர்ந்தது.

நீதிக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த கி.ஆ.பெ. விசுவநாதம், பெரியார் சர்வாதிகாரமாக நடப்பதாக குற்றம்சாட்டிப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். அதனையடுத்து அண்ணாவை நீதிக்கட்சியின் பொதுச் செயலாளராக கட்சிச் செயற்குழு ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது.

பொறுப்பேற்றுக் கொண்ட அண்ணா நீதிக்கட்சியின் வடிவத்தை மாற்ற எண்ணினார். பணக்காரர்கள் என்றாலே அண்ணாவுக்கு ஆகாது. அதிலும் பெரிய, பெரிய சீமான்கள், மிட்டா மிராசுகளின் ஆதிக்கம் நீதிக்கட்சியில் இருந்தது. மேலும் இந்திய விடுதலைக்கு விரோதமாக வெள்ளையர்களின் ஏஜென்சி அமைப்பாக நீதிக்கட்சி கருதப்பட்டதையும் அண்ணா மாற்ற எண்ணினார். இதனால் நீதிக்கட்சியின் வடிவம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. சாதாரண மக்களின் எழுச்சி கண்டு சீமான்கள் விடைபெறத் தொடங்கினர். சிலர் உள்ளிருந்தே பெரியாருக்கும், அண்ணாவுக்கும் தொல்லை விளைவிக்க முயன்றனர்.

N. Ganesan

unread,
Sep 16, 2011, 10:34:11 AM9/16/11
to மின்தமிழ்
>அடிக்கடி அரசின் அடக்குமுறை பாய்ந்ததால் பெரியார்
> அவ்வப்போது பல பத்திரிகைகளை மாற்றி மாற்றி நடத்திவந்தார்.
> 1933இல் "புரட்சி" வார இதழ் 1934 இல் "பகுத்தறிவு" வார இதழ்
> என்று இப்படிப் பலவற்றை நடத்தினார்.

>1935 இல் "பகுத்தறிவு" திங்கள் இதழாகவும், பல ஆராய்ச்சிக்
> கட்டுரைகளும், கவிதைகளும் தாங்கி வெளிவந்தது.

> - முத்துசாமி
> - பாரதிதாசன்
> - ஜலகண்டபுரம் கண்ணன்

பாவலர் மா. முத்துசாமி. அண்ணதுரை கேபினட்டில் இருந்தவர்.

ஜலகண்டபுரம் ப. (பச்சியண்ணன்) கண்ணன் (1913 - 1971).
பெரியார் இயக்கம். திராவிட இயக்கத்தில் பல பகுத்தறிவு
பத்திரிகைகள் நடத்தினவர். பெரியார் சீடர். திக, திமுக
மேடை நாடகங்களின் ஆசிரியர். அந்தக்காலத்தில்
அண்ணன்மார் கதையை திமுக நாடகங்களில் ஒன்றாக்கியவர்,
தீரன் சின்னமலை வரலாற்றையும் புலவர் குழந்தை போன்றோரிடம்
அறிந்து நாடகமாக்கியவர். கவிஞர் கண்ணதாசன் என்ற
புனைபெயரில் கண்ணன் என்பது சலகை ப. கண்ணனைக்
குறித்து வைத்தது. ஜலகண்டபுரம் கண்ணன் கண்ணதாசனுக்கு
திருச்செங்கோடு சுந்தரத்திடம் சேலம் மாடர்ன் த்யேட்டர்ஸில்
வேலை வாங்கிக் கொடுத்தார். கண்ணதாசன் அப்போது
திராவிட இயக்கத்தில் இருந்தார். பல பாடல்களும் பாரதிதாசன்
போட்டுக்கொடுத்த பாட்டையில் எழுதினார். பிற்காலத்தில்
கண்ணபிரானின் தாசரானார்.

------------

பல ஆண்டுகளாக இணையத்தில் நாட்டுரிமை ஆன
அறிஞர்கள் நூல்கள் ஸ்கான் ஆகியோ, தட்டச்சியோ (யுனிகோட்)
வைக்கவேண்டும் தமிழ்நாட்டுப் பல்கலைகள் என்று
அதிகாரிகளுக்கும் என்று எழுதிக்கொண்டுள்ளேன்.
பலரும் எழுத வேண்டும். இப்பொழுது விர்ச்சுயல் அகாதமி
தளத்தில் பல அறிஞர்கள் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன
என்று மடல் சென்னையிலிருந்து அனுப்பினர்.
சலகை கண்ணன் போன்றோர் நூல்கள் கிடைக்கின்றன.
ஆபுத்திரன் கதையை 1926-ல் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர்
எழுதிய நூல், ... ஏராளமான கருவூலங்கள் உள்ளன.
பயன் கொள்க.

இன்னும் ஆயிரக்கணக்கான தமிழ் நூல்கள், ஆய்வேடுகள் படிப்பாரின்றி
தமிழ்நாட்டு நூலகங்களில் குவிந்து கிடக்கின்றன,
பல அழிந்தும் வருகின்றன. அரசாங்கம் மென்மேலும்
இணையத்தில் அவற்றை இட்டுப் புனர்வாழ்வு அளிக்கணும்.

பழைய அச்சுநூல்கள் பேணுவோம், வாசிப்போம்,
நா. கணேசன்

Kannan Natarajan

unread,
Sep 18, 2011, 6:31:35 PM9/18/11
to Min Thamizh

 
அன்பு அண்ணன் - அருமைத் தம்பி  பெரியாரின் அன்பு வேண்டுகோளை ஏற்று அண்ணா (1940ஆம் ஆண்டில்) ஈரோடு சென்று விடுதலை ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அண்ணாவின் எழுத்தோவியங்கள் "விடுதலை" நாளேட்டிலும் "குடியரசு" வார ஏட்டிலும் இடம் பெற்றன.

- என்.வி. நடராசன்
- எஸ்.எஸ். மாரிசாமி
-
ரா.பி. சேதுப்பிள்ளை

ஆகியோரின் கருத்தாழமிக்க கட்டுரைகளும் அணி செய்தன. 

இன எழுச்சிக் குரலாக, மொழிப்போர் முரசாக வெளிவந்த அண்ணாவின் அழகுத் தமிழ்க் கட்டுரைகள் மாபெரும் வரவேற்பைப் பெற்றன.

பெரியாரின் பேச்சும், அண்ணாவின் எழுத்தும் "தாழ்ந்த தமிழக"த்தைத் தட்டி எழுப்பும் போர் முழக்கமாக விளங்கின. வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் எழுச்சியேற்படலாயிற்று. விசையிழந்து கிடந்த பாட்டாளி மக்களும், பாமர மக்களும் வலிமை பெறலாயினர்.  அண்ணாவின் ஈரோட்டு வாழ்க்கை எழுச்சியோடும் புதுமையோடும் தொடங்கியது. பெரியாரின் பேரன்பிற்குப் பாத்திரமானார். "குடியரசு" அலுவலகத்தை ஒட்டி அண்ணா தங்குவதற்கு ஓர் அறை, மூன்று வேளை பெரியாரோடு சாப்பாடு, காலை 9 மணிக்கு அலுவலகப் பணி ஆரம்பம். குடியரசு அலுவலகத்தின் முகப்பைத் தாண்டியதும் ஒரு பெரிய கூடம். அங்கேதான் பெரியாரின் பணி, அவரைச்சுற்றிலும் பிரமுகர்கள். அதை ஒட்டிய சிறு அறையில் ஆசிரியர் அண்ணாவின் பணி.

தலையங்கம், கட்டுரைகள் ஆகியன எழுதுவதோடு பெரியாரும் மற்றவர்களும் தரும் கட்டுரைகளை இடம் பெறச் செய்வது, முக்கிய நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கொடுப்பது ஆகிய பணிகளில் ஆழ்ந்துவிடுவார் அண்ணா. 

அவரது அறையை அடுத்து அச்சகப்பணி, அச்சுக் கோக்கும் பகுதி, இதழ்களை மடித்து அனுப்புகிற இடம், நிர்வாகப் பகுதி ஆகியன.

"குடியரசு" அலுவலகம் ஒரு கொள்கைக் கோட்டமாக பகுத்தறிவுப் பாசறையாக விளங்கியது. அங்கே கட்சியின் முதியவர்கள், சாமியார்கள், இளைஞர்கள், மாணவர்கள் என்று இப்படியொரு கொள்கைக் குழாம் பெரியாரோடு வசித்து வந்தது. ஒரு குடும்ப உணர்வோடு அனைவரையும் ஒருங்கிணைத்து, அன்பு காட்டி, அரவணைத்துச் சென்ற பெரியாரின் பெருந்தன்மை கருணைக் காவியமாகும். எத்தனையோ சாதிகளைச் சார்ந்தவர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஒரு தாய் மக்களாக அவர் வீட்டுத் தாழ்வாரத்தில் கூடிப் பேசி மகிழ்வர்.   

அவர் குடும்பத்தில் மூத்த பிள்ளையாக சம்பத் தோன்றி திறமைமிகு மாணவராகத் திகழ்ந்து கொண்டிருந்த அந்தக்கால கட்டத்தில் அண்ணா அந்த இல்லத்து மூத்த பிள்ளைக்கும் மூத்தவராகத் தம்பி சம்பத் மீது பாசத்தைக் கொட்டிப் பழகும் அண்ணனாக விளங்கினார்.   

பாசமிருக்கிற இடத்தில் கண்டிப்பும் இருக்கும். பெரியார் அளவுக்கதிகமாக அன்பு காட்டுவார்; மரியாதை செலுத்துவார். தம்மைப் போலவே தம்மோடு இருப்பவர்களும் எளிமையாக, சிக்கனமாக, ஒழுங்காக, நேரம் தவறாதவர்களாக, கடுமையாக உழைப்பவர்களாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்.  ஈரோட்டுப் பாசறையில் பல சாமியார்கள் இருந்தனர். மற்றவர்களும், இல்லறத் துறவிகளாக,
லட்சியம் ஒன்றையே பற்றி நின்றனர். அண்ணா எம்.ஏ. படித்துவிட்டு, மூன்றாம் வகுப்பு படித்த பெரியாரையே இறுதிவரை, "கண்டதும் கொண்டதும் உம்மைத்தான்" என்று பற்றி நின்றார் என்றால், அந்த அளவு பெரியார் ஒரு சமுதாயத்தையே மாற்றிக் காட்டுகிற வல்லமை பொருந்தியவராக இருந்தார். 

அண்ணாவுக்கு இயல்பாகவே எளிமையும், அடக்கமும், சகிப்புத் தன்மையும் உண்டு. அதிலும் பெரியாருக்கு அவர் கீழ்ப்படிதலுள்ள மாணவராகவே காணப்பட்டார். பெரியாரும் அண்ணாவின்மீது தனி அன்பும் பாசமும் கொண்டிருந்தார்.  "குடியரசு" அலுவலகத்துக் கூடத்தில் பெரியார் அமர்ந்து தமது பணிகளை மேற்கொள்வார். அவருக்கு வரும் ஒவ்வொரு கடிதத்துக்கும் அவரே பதில் எழுதுவார். பல நேரங்களில் அவர் சொல்லச் சொல்ல சம்பத் எழுதுவார். அவருக்கு வரும் அஞ்சல் உறைகளைப் பக்குவமாகப் பிரித்து அதை மறுபக்கம் ஒட்டி அந்த உறையிலேயே பதில் கடிதம் அனுப்பி விடுவார். காசு கொடுத்து உறை வாங்குவதில்லை. 

பெரியாருக்கு மதிய உணவு 12.00 மணிக்கெல்லாம் முடிந்துவிட வேண்டும். தமது கைத்தடியால் அருகில் உள்ள அறையில் தொங்கும் திரைச் சீலையை விலக்கிக் கொண்டு, அங்கே அமர்ந்திருக்கும் அண்ணாவிடம், "என்னங்க அண்ணாத்துரை சாப்பிடப் போகலாமா?'' என்று கேட்பார்.

அதுவரை மூடு வராமல் பொம்மைகளை வரைந்து கொண்டிருந்த அண்ணா, பணிவாக எழுந்து, "இல்லை அய்யா, இனிமேல்தான் தலையங்கம் எழுதவேண்டும்'' என்பார்.

அதற்குப் பெரியார் அவர்கள் சற்றுக் கோபமாகவே, "இவ்வளவு நேரம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?'' என்று கேட்பார்.

அதற்கு அவர், "இந்து பத்திரிகையில் நம்மைப் பற்றி வந்திருக்கிறது அதற்குப் பதில் எழுத வேண்டும். அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்'' என்பார். 

உடனே பெரியார், "இதிலென்ன யோசனை வாழுது? அந்தப் பத்திரிகையில் இருக்கிறதை அப்படியே எடுத்துப்போட்டு, இதையெல்லாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று ஒருவரியில் எழுதிட்டுப் போக வேண்டியதுதானே?'' என்று சொல்வார். 

அதற்கு அண்ணா புன்முறுவல் காட்டுவார்.

அண்ணா எழுதினால் தலையங்கத்திலேயே காதலர்கள் வருவார்கள் கதை சொல்வார்கள் உவமானங்களும் தெளிக்கப்பட்டிருக்கும். அடுக்குமொழியில் அழகான தலையங்கமாக மிளிரும். ஆனால் பெரியாரோ, ஒரு வரியில் எழுதிப் போட்டுவிட வேண்டியதுதானே என்பார். 

அடுத்து ஒரு சந்தர்ப்பத்தில்,
ராஜாஜிக்குப் பதில் எழுத வேண்டியிருந்தது. அது பற்றித் தாம் அறிந்திருந்தாலும் பெரியாரிடம் கலந்து கொள்வது நல்லது என்று நினைத்த அண்ணா, "இதில் நம்முடைய கருத்து என்னய்யா?'' என்று கேட்டார்.

அதற்குப் பெரியார், "என்ன பெரிய கருத்து வாழுது? அந்த துரை (
ராஜாஜி) எஸ்ஸன்னா நம்ம நோ (No) அவரு நோன்னா நம்ம எஸ் (Yes) அவ்வளவுதானுங்க அவரையே பார்த்துக்கிட்டு இருக்கவேண்டியதுதான்'' என்று அய்யாவுக்கு உரிய பாணியில் கூறினார்.

இப்படி எவ்வளவோ உண்டு.

இதையெல்லாம் அருகிலிருந்து கவனிக்க கூடிய வாய்ப்பு மாணவர் சம்பத்திற்கு இருந்தது. 

அண்ணாவின் சகிப்புத்தன்மையும், பெரியாரிடம் அவர் படும்பாடும் இளைஞர் சம்பத்திற்கு அண்ணாவிடம் மேலும் பாசத்தையும், பிணைப்பையும் ஏற்படுத்தலாயிற்று. பள்ளி நேரம் தவிர மற்ற பெரும்பகுதி நேரம் சம்பத், அண்ணாவிடம் அவரது மாணவராக தம்பியாக பாசத்தில் திளைத்தார். பள்ளியில் கற்காத பல விஷயங்களைக் கருத்துகளை அண்ணா  மூலம் அறிந்து கொண்டார். 
உணவருந்துகிற போதுகூட பக்கம் பக்கம்  இலையில் அமர்ந்து சம்பத்துக்குப் பிடித்ததையெல்லாம் உண்ணச் செய்து, பிடிக்காததைத் தான் உண்பார் அண்ணா. பெரும்பாலும் அண்ணா மாலைச் சிற்றுண்டி அருந்தியதில்லை. ஈரோட்டு மாளிகையில் அது கிடைக்காது. சம்பத் அண்ணாவை அழைத்துச் சென்று தெருவோரத்தில் சிறிய வீட்டில் மூதாட்டி ஒருவர் சுடும் வடை, முறுக்குகளை அண்ணாவுக்கு வாங்கித் தருவார். வெங்காய பக்கோடா அண்ணாவுக்கு மிகவும் பிடிக்கும். சம்பத் தமது அத்தை கண்ணம்மாவின் இல்லத்தில் அண்ணாவை அழைத்துச் சென்று அங்குத் தடபுடல் விருந்து நடத்தச் செய்வார்.  பெரியார் ஊரில் இல்லாத நாட்களில் அண்ணாவும், சம்பத்தும் சினிமாவுக்கு அடிக்கடி செல்வதுண்டு. சம்பத்தின் அத்தை மகன் எஸ்.ஆர். சந்தானத்தின் ஸ்டார் டாக்கீசில் இலவச சினிமா எப்போதும் உண்டு. மற்ற கொட்டகையையும் விட்டு வைப்பதில்லை. 

சிறு புத்தகக் கடை வைத்திருந்த லூர்துசாமி கடையிலிருந்து ஏராளமான பழைய புத்தகங்களை அண்ணா படிப்பதற்கு வாங்கிக் கொடுப்பார் சம்பத். ஈரோடு எஸ். அப்பாவு
ரயிலடியில் நடத்திக் கொண்டிருந்த சிகை அலங்காரக் கடையில் வாரம் ஒரு முறை அண்ணாவுக்கு இலவச முகச்சவரம் உண்டு.  அண்ணா அடிக்கடி வெற்றிலை பாக்கு போடுவார். மூக்குப் பொடியும் தாராளமாகவே வேண்டும். இதற்கெல்லாம் காசு ஏது? அண்ணாவுக்கு பெரியார் கொடுக்கும் மாத ஊதியம் 35 ரூபாய். அதையும் கணக்குப்பிள்ளையிடம் சொல்லி காஞ்சிபுரத்திற்கு காசோலை மூலம் அனுப்பிவிட உத்தரவு. பின்னர் ராணி அம்மையாரை அழைத்து வந்து அய்யாவுக்குச் சொந்தமான பக்கத்து வீட்டில் அண்ணா குடும்பத்தோடு இருந்தார். அண்ணியார் ராணிக்கு சம்பத் செல்லப்பிள்ளை. 

கைச்செலவுக்குப் பணம் இருந்தால் தப்பு வழியில் போகச் செய்யும் என்பது பெரியாரின் கருத்து. ஆனால் அண்ணாவுக்கு வெற்றிலை பாக்கு, பொடி, சலவைத்துணி இதற்கெல்லாம் வழி அண்ணாவிடம் அபிமானமுள்ள நண்பர்கள் பலர். சிட்டிகைப்பொடி சிவஞானம் ஒருவர். அவர் என்.வி. சண்முகம் பட்டணம் பொடி டப்பா ஒன்றை அண்ணாவிடம் கொடுத்துவிடுவார். அந்த லேபிளில் உலகப்படம் ஒன்று இருக்கும். பொடி டப்பா கிடைத்ததும் உலகமே கிடைத்தது போல் இருக்கும். அவருடைய ஒவ்வொரு தேவையையும் நண்பர்கள் கவனித்துக் கொள்வார்கள். பெரும்பகுதி சம்பத் செலவிலேயே நடக்கும். 

1942இல் பொருளிழப்பு காரணமாக "குடியரசு" இதழ் நிறுத்தப்பட்டது. அண்ணா காஞ்சி திரும்பி "திராவிட நாடு" வார இதழைத் தொடங்க எண்ணியிருந்தார். அது பற்றி பெரியாரிடம் சொன்னதும் அதனை வரவேற்ற பெரியார் "குடியரசு" இதழுக்குப் பயன்படுத்தப்பட்ட சில அச்சு எழுத்துகள், பெட்டிகள், அலமாரிகள் முதலிய பொருட்களை அண்ணாவுக்கு கொடுத்துதவியதோடு, "குடியரசு" இல்லாத குறையைப் போக்க "திராவிட நாடு" இதழ் வளர்ச்சிக்கு ஆங்காங்கே தோழர்கள் நிதியுதவி அளிக்க வேண்டுமென்று அறிக்கை வெளியிட்டதோடு தாம் நூறு ரூபாய் நன்கொடையும் அளித்தார். 

ஈரோட்டுப் பாசறையிலிருந்து விடுபட்டு, அண்ணா காஞ்சி புறப்படுகிறார் என்னும் முடிவினைச் சம்பத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தம்மால் ஒருபோதும் அண்ணாவைப் பிரிந்து இருக்க முடியாது என்று வருந்தினார். அவரை அண்ணாவும் தோழர்களும் தேற்றினர்.

"வருத்தப்படாதே சம்பத். நான் அடிக்கடி ஈரோடு வருவேன், நீயும் விடுமுறை நாட்களில் காஞ்சிபுரம் வந்துவிடு. எப்போதும் உன் நினைவாகத்தான் இருப்பேன்'' என்று பாசம் பீறிட்டெழ உருக்கத்துடன் கூறினார் அண்ணா. 

பெரியார் மற்றும் தோழர்களிடம் பிரியாவிடைபெற்றுத் தமது குடும்பத்துடன் அண்ணா காஞ்சிபுரம் திரும்பினார்.

Kannan Natarajan

unread,
Sep 25, 2011, 7:50:46 PM9/25/11
to Min Thamizh

"சிவாஜி கண்ட இந்து இராஜ்யம்" நாடகத்தில் காகப்பட்டராக அண்ணா, வீர சிவாஜியாக சம்பத் உடன் கே.ஆர்.இராமசாமி.
காஞ்சிபுரத்தில் அண்ணா வசித்த வரகு வாசல் தெருவை அடுத்த நிமந்தக்காரத் தெருவில் டி.பி.எஸ். பொன்னப்பாவுக்குச் சொந்தமான ஒரு சிறு கட்டடத்தில் 1942 மார்ச் 8ஆம் நாள் "திராவிட நாடு" வார இதழ் தொடங்கப்பட்டது.

முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற ஈழத்துச் சிவானந்த அடிகள் இப்பத்திரிகையின் நிர்வாகி. ஓரணா விலையில் 8 பக்கங்களோடு இதழ் வெளிவந்தது. எல்லாப் பக்கங்களிலும் அண்ணாவின் எழுத்துகளே இடம் பெற்றிருந்தன.

செ
மியன், பரதன், ஒற்றன் போன்ற பல புனைப்பெயர்களிலும் அண்ணா எழுதுவார். மிக முக்கியமான கட்டுரைகளுக்குத் தவிர்க்க முடியாத நிலையில் ஓவியங்கள் இடம் பெறும். தலைவர்களது புகைப்படங்கள் இடம் பெற்றதில்லை. இருபதாண்டு கால "திராவிட நாடு" இதழ் வரலாற்றில் அதன் ஆசிரியரான அண்ணாவின் புகைப்படம் ஓர் இதழில்கூட வெளிவந்ததாக நினைவில்லை. மேலும் அண்ணாவின் பெயர் சி.என். அண்ணாதுரை என்றே குறிப்பிடப்படும். கழகத்தின் கொலையுண்ட தியாகிகளின் படங்கள் வெளிவந்துள்ளன. கட்டுரை தலைப்புகளுக்குத் தனியே பிளாக் செய்ய மாட்டார். பார்டர்களைச் சுற்றிலும் அடுக்கி இடையில் தலைப்புக்கான அச்சுக் கோர்த்துப் போடச் சொல்வார். இவை யாவும் பெரியாரிடம் கற்ற சிக்கன வழிமுறைகள்.அண்ணாவின் நண்பரான ஏ.கே. தங்கவேல் முதலியாரின் சகோதரர் பொன்னுச்சாமி முதலியார் என்பவரிடம் ரூ.500 கடன் வாங்கி "திராவிட நாடு' இதழை அண்ணா தொடங்கினார். பின்னர் "வேலைக்காரி" திரைப்படத்தின் மூலம் அண்ணாவுக்குக் கிடைத்த வருவாயில் திருக்கச்சி நம்பி தெருவில் இருந்த "திராவிட நாடு" கட்டடம் வாங்கப்பட்டது. இந்தக் கட்டடத்தின் திண்ணையில்தான் அண்ணா அமர்ந்து தமது தம்பிமார்களுடன் இரவு நெடுநேரம்வரை கலந்துரையாடுவார்.

காஞ்சி கல்யாண சுந்தரம் "திராவிட நாடு" ஏட்டின் பொறுப்பாசிரியராக இருந்தார். அவர் பெருமளவு பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வார். அண்ணாவின் பள்ளித் தோழரான அவர் அண்ணாவை "வா, போ" என்றுதான் பேசுவார். அவர் பேசுவதே வேடிக்கையாக இருக்கும். அவரை ஓர் இடத்தில் உட்கார வைப்பதே கடினம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்று இளந்தாடி வீரராகப் பொதுக் கூட்டங்களில் முழங்கிய இரா. நெடுஞ்செழியன் கோவை அதிசய மனிதர் ஜி.டி. நாயுடு மாணவர் விடுதியில் காப்பாளராகப் பணியாற்றி அதிலிருந்து விடுபட்டு, பெரியாருடன் சுற்றுப் பயணம் நடத்தி, பின்னர் "திராவிட நாடு" இதழின் பொறுப்பாசிரியர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

அண்ணாவின் தாயார் பங்காரு அம்மாள். அண்ணாவை அவரது சிறிய தாயார் (தொத்தா) வளர்த்தார். அண்ணாவின் ஒரே ஒரு அக்கா (சிற்றன்னையின் மகள்) நாகம்மா. அவருக்கு செ
ந்தரவள்ளி என்று ஒரு பெண். பொன்னப்பா செந்தரவள்ளியை மணந்து கொண்டார். அத்தம்பதிகளுக்கு நான்கு மகன்கள். அண்ணாவுக்குப் பிள்ளை இல்லாத காரணத்தால் நான்கு பிள்ளைகளையும், தம் பிள்ளைகளாகவே வளர்த்தார். அண்ணாவின் துணைவியார் ராணி அம்மையார் தாய்மை உள்ளத்துடன் அனைவரையும் உபசரிக்கக் கூடியவர்.

பள்ளி இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருந்த சம்பத், (அப்போது அவருக்கு வயது 16) தந்தை பெரியாருக்கு உதவியாக இருந்து பொது அறிவு பெற்றார். அண்ணாவைப் பார்க்காமல் சம்பத்தால் ஒரு மாதம்கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. பள்ளிக்கு விடுமுறை போட்டுவிட்டு அண்ணாவைக் காண காஞ்சிபுரம் வந்தார். அண்ணாவும்,
ராணி அம்மையாரும் சம்பத்தை மிகவும் உபசரிக்கக் கூடியவர்கள். அவருக்கு விருப்பமானவற்றை ராணி அம்மையார் சமைத்து விருந்தளிப்பார். சம்பத் உரிமையோடு சமையல் அறைவரை சென்று, "அக்கா அந்த மீனுக்கு மிளகுத்தூள் போட்டு வறுத்துவிடுங்கள்'' என்று கூறுவார்.

அண்ணாவோடு மட்டுமன்றி, அவரது குடும்பத்தாரும் சம்பத்திடம் கலகலப்பாக பழகுவார்கள். சம்பத் வருகையில் அண்ணாவுக்குத் தனி மகிழ்ச்சிதான் என்றாலும், "படிப்பைக் கெடுத்துக் கொண்டு வந்துவிட்டான்" என்று பெரியார், தன்னைக் கடிந்து கொள்வார் என்னும் அச்சமும் உண்டு. ஆகவே இரண்டொரு தினங்களிலேயே சம்பத்தை ஈரோட்டுக்கு அனுப்பி வைப்பார்.

அண்ணாவின் காஞ்சிபுரம் இல்லம் அடக்கமான ஒரு சிறிய வீடு. நுழைந்ததும் ஒரு பெரிய திண்ணை. அடுத்து ஒரு தாழ்வாரம். பக்கத்தில் ஒரு சிறிய படுக்கை அறை, அதிலே ஒரு பெஞ்ச். அதன்மேல் துணி விரிக்கப்பட்டு ஒரு தலையணை, ஒரு சாய்வு நாற்காலி, ஒரு சிறிய மின் விசிறி, இதுதான் அண்ணாவின் படுக்கை அறை. பக்கத்தில் சமையல்கூடம். அண்ணாவின் இல்லம் அவ்வளவுதான்.

அண்ணாவின் நண்பர் புட்டாசாமி சம்பத்திற்கும் தோழர். ஆடிசன் பேட்டையில் அவருக்குச் சொந்தமான சுவாமிஸ் கபே. அங்கே கழக நண்பர்களுக்கு இலவசச் சிற்றுண்டி கிடைக்கும். சம்பத், நெடுஞ்செழியன், கருணாநிதி, சிவாஜி கணேசன் போன்றவர்களுக்கு அங்கேதான் காலைச் சிற்றுண்டி.

அண்ணாவின் மற்றொரு நண்பர் டபிள்யூ. கே. தேவராஜன். அவருக்குச் சொந்தமான
ராஜா பஸ் சர்வீஸ் பேருந்துகளில் அண்ணாவின் நெருங்கிய நண்பர்களுக்கும், "திராவிடநாடு" ஊழியர்களுக்கும் பயணச் சீட்டு தேவையில்லை; இலவசப்பயணம்.

காஞ்சியில் சி.வி.எம். அண்ணாமலை, கல்யாணசுந்தரம், கே.எஸ். மணி, சி.வி.
ராஜகோபால் போன்றவர்களெல்லாம் சம்பத்திற்கும் நெருக்கமானவர்கள். பள்ளி விடுமுறை நாட்களில் சம்பத் காஞ்சி வந்து அண்ணாவோடு தங்கிச் செல்வதில் தனி மகிழ்ச்சி காண்பார்.

கே.ஆர்.
ராமசாமி தஞ்சையில் கிருஷ்ணன் நாடக சபா என்னும் நாடகக் குழுவை நடத்தி வந்தார். அவருக்குத் துணையாக நாடக விவசாயி யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை, கம்பெனி நடிகர்கள் வி.சி. கணேசன் (சிவாஜி கணேசன்), எஸ்.எஸ். ராஜேந்திரன், டி.வி. நாராயணசாமி, எம்.என். கிருஷ்ணன், தட்சிணாமூர்த்தி, பி.கே. சரஸ்வதி போன்றவர்கள். அண்ணாவின் "ஓர் இரவு" நாடகத்தை அவர்கள்தான் நடத்திக் கொண்டிருந்தார்கள். அண்ணா அடிக்கடி தம்பி சம்பத்துடன் தஞ்சை சென்று கே.ஆர்.ஆர். நாடகக் குழுவினர்க்கு உற்சாகம் ஊட்டிவந்தார்.

"திராவிட நாடு" தொடங்கிய பிறகு (1942) அதன் ஊழியர்களையும், தமது நண்பர்களையும் நடிக்க வைத்து "வழக்கு வாபஸ்", "சந்திரோதயம்", "சிவாஜி கண்ட இந்து
ராஜ்யம்" ஆகிய நாடகங்களை காஞ்சி மறுமலர்ச்சி நாடக மன்றம் என்னும் பெயரில் அண்ணா நாடெங்கிலும் நடத்தி வந்தார்.

இந்த நாடகங்களில் ஜமீன்தார், சாமியார், இப்படிப் பல வேடங்களில் அண்ணாவே நடிப்பார். "சிவாஜி கண்ட இந்து
ராஜ்யம்" நாடகம் "சந்திரமோகன்" என்னும் பெயரிலும் நடைபெறும். இதில் காகப்பட்டராக அண்ணா நடிப்பார். சிவாஜியாக சம்பத் தத்ரூபமாக நடிப்பார்.

அப்போது சம்பத் கல்லூரியில் இன்ட்டர்மீடியட் படித்துக் கொண்டிருந்தார். "படிப்பைக் கெடுத்துக் கொண்டு அண்ணாவுடன் கூத்தாடிக் கொண்டிருக்கிறான் சம்பத்" என்று பெரியார் ஒரு பக்கம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த நேரம் அது.

அப்போது திருச்சியில் பெரியார் தலைமையில் "சந்திரமோகன்" நாடகம் நடைபெறுவதாக இருந்தது. அன்றைய தினம் நாடகத்தில் சம்பத்தை நடிக்க வேண்டாமென்று அண்ணா கேட்டுக் கொண்டார். அவருக்குப் பதிலாக யார் நடிப்பது? ஒரே நாளில் முழுப் பாடத்தையும் மனப்பாடம் செய்ய முடியுமா என்றெல்லாம் பிரச்னை ஏற்பட்டபோது அந்த நாடகத்தில் வேறு பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த வி.சி. கணேசன் தமக்கு வசனம் மனப்பாடமாக இருக்கிறதென்றும், சிவாஜியாக நடிக்க முடியும் என்றும் கூறினார். அதன்படி அன்று இரவு சிவாஜி வேடத்தில் கணேசன் நடித்தார். நாடகத்திற்கு தலைமை ஏற்ற பெரியார் முன்வரிசையில் அமர்ந்து சிவாஜி வேடத்தை உற்று உற்றுப் பார்த்து, "சம்பத் குரல் மாதிரி இல்லையே'' என்று கேட்க, பக்கத்திலிருந்த குருசாமி, "இது வேற யாரோங்க?'' என்று சொன்னார்.

நாடக இடைவேளையில் அண்ணாவையும் மற்ற நடிகர்களையும் பாராட்டிப் பேசிய பெரியார், "இந்த சிவாஜி வேஷத்திலே சம்பத் நடிக்கிறான்னு சொன்னாங்க, அவனுக்கு எங்க நடிக்கத் தெரியும், இப்படி நடிச்ச பையன்... (நடித்தவர் பெயரைக் கேட்கிறார்,"கணேசன்" என்று அண்ணா சொன்னார்) அதுதான் கேட்டேங்க, இந்த சிவாஜி வேஷத்துக்கு இவர்தான் பொருத்தம். ரொம்ப நல்லா நடிச்சாரு. இனிமேலும் ஆள மாத்த வேண்டாம், இவரே அதுல நல்லா நடிக்கிறதனால, "சிவாஜி" என்று பட்டம் கொடுக்கிறேன்'' இவ்வாறு பலத்த சிரிப்பொலி, கரவொலிக்கு இடையே பெரியார் குறிப்பிட்டார்.

"அண்ணா விஷம் சாப்பிடாதே"! - "சந்திரோதயம்" நாடகத்தில் ஒரு வேடிக்கை நடைபெற்றது. "திராவிட நாடு" இதழ் வளர்ச்சிக்காகச் சிதம்பரத்தில் "சந்திரோதயம்" நாடகம் நீதிக்கட்சி பிரமுகர் திருவொற்றியூர் டி. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. ஜமீன்தாராக நடித்த அண்ணா பல நல்ல கருத்துகளையும், கொள்கைகளையும் வழங்குவதற்காக ஜமீன்தார் வேடத்தில் தாம் செய்த கொலை முதலான குற்றங்களுக்காகத் தண்டனை பெறுவதிலே இருந்து தப்ப விஷமருந்தி உயிர்விடுவது போல் ஒரு காட்சி. அதில் அண்ணா உருக்கமாக நடிப்பார். விஷத்தைக் குடிக்க நச்சுக் கோப்பையை வாயருகே கொண்டு போகும்போது நாடகத்திற்குத் தலைமை தாங்கிய சண்முகம் பிள்ளை எழுந்து, "அண்ணா சாகக் கூடாது அவர் எதற்காக விஷம் அருந்த வேண்டும்?'' என்று பதறிப் போய் மேடையில் ஏறித் தடுத்துவிட்டார். இது கண்டு பார்வையாளர்கள் பலமாகச் சிரித்துவிட்டனர். அந்த அளவு நடிப்புக் கலையிலும் அண்ணாவின் திறமை மேலோங்கி இருந்தது.

மாயவரத்தில் தி.ப. நாதன் என்பவர் "பசி" என்றொரு நாடகத்தை எழுதி மாணவத் தோழர்களைக் கொண்டே நடிக்க வைத்தார். இந்த நாடகத்தின் அரங்கேற்றம் ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் (அப்போது அவர் மாணவர்) நடைபெற்றது. இரண்டாம் நாள் நாடகம் மு. கருணாநிதியின் தலைமையில் நடைபெற்றது.

அக்காலத்தில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களைக் கவர்ந்திழுக்க அண்ணா அரசியல் கலவாத தமது சொற்பொழிவுகளைக் கல்லூரிகளில் நிகழ்த்தினார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அப்போது நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோர் கல்வி பயின்றனர். மெத்தச் சிரமப்பட்டு துணைவேந்தரிடம் அனுமதி வாங்கினர். அண்ணா பேசுவதற்கு முன் துணைவேந்தர் ஒரு நிபந்தனை விதித்தார். அரசியல் துளியும் கலவாது பேச வேண்டுமென்பதற்காக "ஆற்றோரம்" என்னும் தலைப்பில் பேசுமாறு பணித்தார்.

"ஆற்றோரம்" என்ற தலைப்பிலேயே தமது கருத்துகளை அழகுபட எடுத்துரைத்தார். இந்தக் கூட்ட நிகழ்ச்சிக்கு சம்பத்தும் உடன் வந்திருந்தார் (அப்போதும் அவர் ஒரு மாணவரே).

அது போலவே மாநிலக் கல்லூரியில் மோகன் (பின்னாளில் நீதிபதி) கல்லூரி மாணவராய் இருந்து நடத்திய கூட்டத்தில், "அச்சம்" என்னும் தலைப்பில் அண்ணா பேசினார். சம்பத், மதியழகன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

இப்படிப் பல கல்லூரிகளிலும், பலத்த எதிர்ப்புக்கிடையே தலைப்பு வட்டங்களுக்குள் உரையாற்றிய அண்ணா தாம் படித்த பச்சையப்பன் கல்லூரியில் பேச அழைக்கப்பட்டபோது, ஒலிபெருக்கியின் முன்வந்து நின்று, "தலைப்பு என்ன?" என்று கல்லூரி முதல்வரிடம் கேட்டபோது அவர், "தலைப்பு இல்லை!'' என்று சொன்னார். அண்ணா,"தலைப்பு இல்லை" என்னும் தலைப்பிலேயே கருத்துரை ஆற்றினார். "தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என்று தலைப்பில்லை, தமிழ்ச் சமுதாயத்திற்கும் உரிய தலைப்பில்லை", என்றெல்லாம் அவர் அடுக்கியபோது பலத்த கரவொலி ஏற்பட்டது.

Kannan Natarajan

unread,
Oct 8, 2011, 6:41:34 PM10/8/11
to Min Thamizh

ம்பத் உயர்நிலைக் கல்வியை முடித்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் (இன்டர்மீடியட்) வகுப்பில் சேர்ந்தார். அது 1944ஆம் ஆண்டு. அப்போது அவருக்கு வயது 18.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த சம்பத் இன்டர்மீடியட் கல்வி கற்கவேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னதோடு, சென்னையில் விடுதியிலேயே தங்கிப் படிக்க வேண்டும், அண்ணா உட்பட கட்சிக்காரர்கள் யாரையும் விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் சந்திக்கக் கூடாது என்றும் கண்டிப்பாக அறிவித்திருந்தார். சம்பத், தமது தந்தையார் ஈ.வெ. கிருஷ்ணசாமியிடமும், சிறிய தந்தையார் பெரியாரிடமும் விடைபெற்றுக்கொண்டு சென்னை பயணமானார்.

ரயிலேறும் முன் தமது உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.மீனாட்சி சுந்தரனார் மற்றும் அவருக்கு நெருக்கமான ஆசிரியர்கள், மாணவத் தோழர்களிடம் பிரியாவிடை பெற்றார். அவரை உச்சிமோந்து பாராட்டி விடை கொடுத்த தலைமையாசிரியர் மீனாட்சி சுந்தரம், "பெரியாரின் வாரிசு நீ, எதிர்கால அரசியலில் ஒரு ஜாம்பவானாக புகழோடு விளங்குவாய்'' என்று ஆசி வழங்கினார். பச்சையப்பன் கல்லூரி, அண்ணா படித்த காலத்திலிருந்தே திராவிட இயக்க உணர்வுள்ள ஆசிரியர்களையும், மாணவர்களையும் அதிகம் கொண்டதாக விளங்கியது. பெரியாரின் பிள்ளை பச்சையப்பன் கல்லூரியில் பயில வருவது அவரைப் பார்த்திராத மாணவத் தோழர்களுக்கு ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அக்கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியர் வரதராஜன். இவரைக் கருப்புச் சட்டை வரதராஜன் என்று மாணவர்கள் சொல்வார்கள். சில மண்டபக் கூட்டங்களில் பேசுகிறபோது திராவிடச் சுடர் பேராசிரியர் வரதராஜன் என்று விளம்பரம் செய்வார்கள். அவருக்குச் சிறந்த ஆங்கிலப் புலமை உண்டு. பெரியாருக்கு வேண்டியவர். ஆகவே அவர் கட்டுப்பாட்டில்தான் சம்பத் கல்லூரியில் பயில வேண்டுமென்பது பெரியாரின் உறுதியான ஏற்பாடாகும். கல்லூரிக் கல்வியில் சம்பத்துக்கு நாட்டம் மிகுந்திருந்தது. வகுப்புகளில் பாடங்களை மிக உன்னிப்பாகக் கவனித்துக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வார். இரவில் பாடப் புத்தகங்களைவிட பத்திரிகைகள் வார, மாத இதழ்கள் மற்றும் பொதுவான நூல்களை நிறையப் படிப்பார். "குடியரசு", "விடுதலை" அவரைத் தேடி வந்துவிடும். அவற்றையும் விடாமல் படித்துவிடுவார். மனப்பாடம் செய்து தேர்வு எழுதுகின்ற பழக்கம் சம்பத்திற்கு இருந்ததில்லை. வகுப்பில் அறிந்து கொண்டதை நுணுக்கமாக மனத்தில் பதியவைத்து, தேர்வுகளின்போது நல்ல மதிப்பெண் வாங்கிவிடுவார். (ஆனால் கணக்கில் மட்டும் திறமை குறைவு) கல்லூரிக் கல்வி முடித்து மேல்நாட்டுக் கல்வியும் பெறவேண்டும் என்று அவரது குடும்பத்தார் விரும்பினர். கற்க வேண்டும் என்னும் ஆர்வம் மிகுந்திருந்தாலும் பெரியார் போதித்த லட்சியங்களிலேயே சம்பத் லயித்து நின்றார். ஒவ்வொரு முறையும் இயக்கத்தில் பரபரப்பான நிகழ்ச்சிகளும் சம்பவங்களும் நடக்கின்ற போது அவரால் கல்லூரி வளாகத்திற்குள்ளே கட்டுண்டு கிடக்க முடியவில்லை. அதிலும் பெரியார், அண்ணா ஆகியோர் பங்கேற்கின்ற பொதுக்கூட்டம் அல்லது போராட்ட நிகழ்ச்சிகளைக் காண வேண்டும் என்னும் ஆர்வத் துடிப்பு சம்பத்திற்கு எப்போதும் அதிகம்.

காஞ்சிபுரத்திலே இருந்து அண்ணா சென்னை வருகிறார். அவர் கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலோ தேவராஜ முதலியார் கார் ஷெட்டிலோ தங்கி இருப்பதாகத் தெரிந்தால் இரண்டு நாளோ, மூன்று நாளோ கல்லூரிக்கு விடுப்புக் கொடுத்துவிடுவார். சென்னையில் கிருபானந்த வாரியார் போன்றவர்களின் கதாகாலட்சேபம் நடந்தால் சம்பத் தமது மாணவ நண்பர்களை அழைத்துக் கொண்டு பக்திமான் போல் உட்கார்ந்து உபன்யாசம் நடந்துகொண்டிருக்கின்ற போதே இடையில் கேள்வி கேட்டுத் திணறடிப்பார். "அன்பே சிவம்" என்பார் வாரியார்.

"ஆறாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றி சித்ரவதை செய்தது சிவமதம் தானே?'' என்னும் கேள்வியை மாணவர் சம்பத் கேட்பார்.

தம்முடைய சந்தேகங்களை எல்லாம் கேள்வித் தாள் போன்று எழுதி அதற்கெல்லாம் பதில் சொல்லுங்கள் என்று கேட்பார்.

"நீங்கள்தான் முற்றும் துறந்தவர் ஆயிற்றே கழுத்திலே ஏன் தங்கக் கொட்டை?'' என்பார்.

அப்படிப்பட்ட நேரத்தில் பக்தகோடிகளிடம் பதற்றம் ஏற்படும். காவல்துறையினர் வந்து மாணவர்களை வெளியேற்றிவிடுவர். பின்னர் உபன்யாசம் அவர்கள் விருப்பம்போல் நடைபெறும். நீதிக் கட்சியைச் சீமான்களும், பூமான்களும் ஆட்டிப் படைத்ததைப் பெரியாரோ, அண்ணாவோ விரும்பவில்லை. அதிலும் பெரியார் தலைமைக்கு வேட்டு வைத்துவிட வேண்டும் என்று நீதிக்கட்சித் தலைவர்கள் திட்டமிட்டனர். பெரியாரைப் பொறுத்தவரை சில அரசியல் காரணங்களுக்காக நீதிக் கட்சிக்குத் தலைவராக இருந்தாரே தவிர, அவருடைய போர் ஆவேசமெல்லாம் சுயமரியாதை இயக்கத்தின் மீதுதான் அழுத்தமாகப் படிந்திருந்தது. நீதிக் கட்சியின் 16ஆம் மாநில மாநாடு சேலத்தில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலையில் கூடியது. சீமான்களின் சூழ்ச்சியை முறியடித்துச் சாமான்யர்களின் அமைப்பைத் தொடருவோம், பெரியாரின் தலைமையைக் காப்போம் என்னும் வீர முழக்கத்தோடு மாணவர்களும் இளைஞர்களும், ஏன் தமிழ்ச் சமுதாயமே ஆவேசத்தோடு திரண்டது. சேலத்தில் அண்ணா தலைமையில் கூடிய அந்த மாநாட்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் பெயரைத் "திராவிடர் கழகம்" என மாற்ற வேண்டிப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

சேலம் மாநாட்டின் முக்கியத்துவமே அண்ணாவின் தீர்மானம்தான். பெரியாரின் சம்மதத்தோடு இத்தீர்மானத்தை அண்ணா முன் மொழிந்தார். இதன்படி பிரிட்டிஷ் அரசால் அளிக்கப்பட்ட
ராவ் பகதூர், திவான் பகதூர் போன்ற கவுரவப் பட்டங்களைக் கைவிடவேண்டும். கவுரவ நீதிபதி, ஜில்லா போர்டு தாலுக்கா போர்டு நியமனங்கள் ஆகிய அரசு நியமனப் பதவிகளை உதற வேண்டும் என்று தீர்மானம் வற்புறுத்தியது. இத்தீர்மானத்தின்படி நீதிக் கட்சி திராவிடர் கழகமாக மலர்ச்சி பெற்றது.

திராவிடர் கழகத்தின் தலைவர் பெரியார். பொதுச் செயலாளர் அண்ணா. பெரியாரின் பேச்சும் அண்ணாவின் எழுத்தும் தாழ்ந்த தமிழகத்தைத் தட்டி எழுப்பின. முதல் மாநில மாநாடு 1945இல் திருச்சியில் நடைபெற்றது. திருவொற்றியூர் சண்முகம் தலைமையில் குடந்தை கே.கே. நீலமேகம் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இரண்டாம் நாள் அரசியல் மாநாட்டிற்குப் பெரியார் தலைமை. திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கை பற்றி அண்ணா நீண்டதோர் உரையாற்றினார்.

எம்.ஆர்.
ராதாவின் "போர்வாள்" நாடகம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சம்பத் பார்வையாளராகப் பங்கேற்றார். வேலூரிலிருந்து கே. அரசியல் மணி (மணியம்மை), ஏ.பி. ஜனார்த்தனம், எஸ். கஜேந்திரன், எஸ். தவமணிராஜன், ஆ. திராவிடமணி ஆகியோர் பெரியார் குருகுலத்திற்கு அழைக்கப்பட்டு ஈரோடு வந்தனர்.

1938இல் நாகம்மையார் மறைவுக்குப் பிறகு பெரியாருக்குப் பணிவிடைகள் செய்து பராமரிக்க ஒருவரும் இல்லாதிருந்த நிலையில் ஒரு செவிலிப் பெண் தொண்டராக வேலூர் கனகசபை முதலியாரின் மகள் கே. அரசியல் மணி, 1943இல் தந்தை பெரியாரிடம் வந்து சேர்ந்தார். பக்குவமாக, பத்திரமாக உணவு சமைத்துப் பெரியாரை உண்ண வைத்தல், வற்புறுத்திக் குளிப்பாட்டல், உடை மாற்றுதல், வீட்டுக் கணக்குப் பார்த்தல், "குடியரசு"ப் பதிப்பக வெளியீட்டு நூல்களைச் சுமந்து பெரியார் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில் விற்கச் செய்து கணக்கு வாங்குதல்... இப்படிப் பல பணிகளை நன்றியுணர்வுடன் நிறைவேற்றி வந்தார்.

வடஆற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் சாமி நாயுடு, நீதிக் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்தார். அவருடைய மூத்த மகன் எஸ். கஜேந்திரன். மகள் சுலோச்சனா. கஜேந்திரன் பி.ஏ. பட்டம் பெற்ற பின் 1934இல் ஈரோடு குருகுலத்திற்கு வந்தார். பின்னர் அவர் தந்தை பெரியாரிடம் செயலாளர் ஆனார். "குடியரசு" இதழில் எழுதினார். ஜஸ்டிஸ் இதழைப் பார்த்துக் கொண்டார். அறிவுக் கூர்மையும் விவாதிக்கும் திறனும், எழுத்தாற்றலும் மிக்க அவர் மாணவர் இயக்கத்திலும் தீவிரப் பங்கு கொண்டிருந்தார்.

1945 மே 24ஆம் நாள் ஈ.வெ. கிருஷ்ணசாமியின் மூத்த மகள் செல்வி மிராண்டாவுக்கும் (ஈ.வெ.கி. சம்பத்தின் தமக்கையார்) எஸ். கஜேந்திரனுக்கும் பெரியார் தலைமையில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. தலைவர்கள் வாழ்த்தினர். கஜேந்திரன் அரசுத் தலைமைச் செயலகத்தில் அலுவலர். இருவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள், காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். மிராண்டா சென்னை மாநகராட்சிக் கல்வித் துறை அதிகாரியாகப் பலகாலம் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவ்விணையருக்கு இரு பெண் மக்கள். 1944ஆம் ஆண்டின் தொடக்கத்தை மாணவர் எழுச்சிகளின் தொடக்கமென்று பெரியார் வர்ணித்துள்ளார். பெரியாரின் முயற்சியாலும், அண்ணாவின் கல்லூரிப் பேச்சுகளாலும் மாணவமணிகள் அன்று எழுச்சி பெற்றுத் திரண்டனர். அவர்களுக்கெல்லாம் அறிவிக்கப்படாத தலைவராக சம்பத் புறப்பட்டார். ஆங்காங்கே தமது தலைமையில் மாநாடுகளை எழுச்சியோடு நடத்துகிற பணிகளிலும் இறங்கினார். 1942 ஆகஸ்ட் கலவரங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் சார்புடைய மாணவர்கள் தீவிரப் பங்கு கொண்டனர். சுதந்திர உணர்வில் அணி சேர்ந்த அம்மாணவர்களைக் காங்கிரஸ் இயக்கம் பழமைக் குழியில் தள்ளி வகுப்பு வெறியில் பிரித்துப் போடும் இழிவு கண்டு, முற்போக்கு மாணவர்கள் பெரியார் கொளுத்தும் அறிவுச் சுடரின் பேரொளியில் பகுத்தறிவுப் பாசறை நோக்கி விரைந்து வரலாயினர்.

"குடியரசு"ம், "திராவிட நாடு"ம் மாணவர்களின் கருத்துக் கலன்களாகத் திகழ்ந்தன. 1944 பிப்ரவரி 19, 20 தேதிகளில் குடந்தையில் திராவிட மாணவர் முதல் மாநாடு ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் எழுச்சிமயமாக நடைபெற்றது. அண்ணா சிறப்புரையாற்றினார். புலவர் குழந்தை, மா.நன்னன், அ.மு. மாணிக்கம், கோ.சி. பெரியசாமி, ஏ.பி. சனார்த்தனம், க. அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன், இளம்வழுதி, எஸ்.கஜேந்திரன், க. கணேசன், இரா. செழியன், எஸ். கருணானந்தம், தவமணிராஜன், இரா. சொக்கப்பா என ஏராளமான மாணவமணிகள் பங்கேற்றனர். அதே ஆண்டில் தஞ்சையில் பாரதிதாசன் தலைமையில் திராவிட மாணவர் மாநாடு நடைபெற்றது. மாநாட்டைப் பெரியார் திறந்து வைத்தார். கரூரில் சம்பத் தலைமையில் மாணவர்களின் மாநாடு. அக்டோபரில் கோவையில் முதல் நாள் மாணவர் மாநாடு, மறுநாள் மாவட்டக் கழக மாநாடு சிறப்பாக நடைபெற்றன. இந்த மாநாட்டில் சென்னையிலிருந்து என்.வி. நடராசன், சத்தியவாணிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.

1944ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் நாள் ஈரோடு நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. கோவை மாவட்ட முதலாம் திராவிட இளைஞர் மாநாடு சரஸ்வதி மண்டபத்தில் விமரிசையாக நடைபெற்றது. அம்மாநாட்டிற்குத் தலைமை தாங்குமாறு அண்ணாவை வழிமொழிந்து ஈ.வெ.கி. சம்பத் பேசினார்.

Kannan Natarajan

unread,
Oct 14, 2011, 10:09:14 PM10/14/11
to Min Thamizh

"தென் நாட்டு இளைஞர் சமுதாயத்தின் எழுச்சி முரசு நமது அண்ணா. பகுத்தறிவுப் பகலவன் பெரியார். புதுமையினைப் பாடிவரும் முழு நிலவு நம் அண்ணா. வீரர் கோட்டமாம் பகுத்தறிவுப் பாசறையில் கொள்கைச் சிங்கங்கள் சிலிர்த்து நிற்கின்றன. வேங்கையென வீர இளைஞர்களும், மாணவர்களும் திரண்டுவிட்டனர்.

பழைமை படபடக்கிறது.  திராவிடத்தில் பகுத்தறிவு ஒளி பரவுகிறது. போர்ப் படைத் தலைவராம் தந்தை பெரியாரின் வீரத் தளபதியாக வெற்றிப் பதாகை ஏந்தி நிற்கும் என் அன்பு அண்ணனே இம்மாநாட்டிற்குத் தலைமையேற்று வழி நடத்துமாறு உன்னை வேண்டுகிறேன்", என்று ஈ.வெ.கி. சம்பத் முன்மொழிந்து பேச,இரா. நெடுஞ்செழியன், க. அன்பழகன், கே.ஏ. மதியழகன், ஏ.பி. சனார்த்தனம், கருணாநந்தம் ஆகியோர் வழிமொழிந்து பேசினர். ஈரோட்டில் இருந்தும் உடல் நலக்குறைவு காரணமாக பெரியார் இம்மாநாட்டில் கலந்து கொள்ள இயலவில்லை. இம்மாநாட்டு நிகழ்ச்சிகள் குடந்தை நேஷனல் ரேடியோ நிலையத்தாரால் ஒலிபரப்பப்பட்டன.

12.5.1944 அன்று பொள்ளாச்சிப் பகுத்தறிவு வாசக சாலையின் சார்பாக தேரடி மைதானத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஜி. வேங்கடாசலம் தலைமை வகித்தார். பச்சையப்பன் கல்லூரி மாணவர் ஈ.வெ.கி. சம்பத் "தமிழ்நாடும் நமது கடமையும்", என்ற தலைப்பில் பேசினார்.

தமிழ், தமிழர், தமிழ்நாடு என்கிற உணர்ச்சியை நாடு முழுவதும் ஏற்படுத்தி நமது தொன்மையான மொழிகாத்து, கலை கலாச்சாரங்களை வளர்த்திடத் தாயமைப்பான திராவிடர் இயக்கத்திற்குத் துணையாக மாணவர்கள் இளைஞர்கள் வீறு கொண்டு எழ வேண்டுமென்று சம்பத் கருத்துரையாற்றினார். மாவட்டங்கள் முழுவதுமிருந்து மாணவர்கள் இம்மாநாட்டுக்குத் திரண்டனர்.

கோபி வேங்கடாசலம் பேட்டையில் மே. 27 ஆம் நாள் திராவிடர் இளைஞர் மாநாடு நடைபெற்றது. பிற்பகல் நிகழ்ச்சியில் ஈ.வெ.கி. சம்பத் கலந்து கொண்டு பேசினார்.

24.10.44 அன்று சேலம் செவ்வாய்ப்பேட்டை விக்டோரியா மார்க்கெட்  மைதானத்தில் எழுச்சியோடு நடைபெற்ற மாவட்ட மாணவர் மாநாட்டில் ஈ.வெ.கி. சம்பத் "வருங்கால திராவிடர் கடமை என்ன?" என்னும் தலைப்பில் பேசினார்.

திராவிட மாணவர் மாநாடு:-

இந்தக் கால கட்டத்தில் கருணாநிதி தம்முடைய நண்பர்களையெல்லாம் அழைத்துத் திராவிட மாணவர் மாநாட்டை நடத்த முயற்சி செய்தார். அப்போது 1945 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி. அவரது நண்பர்கள் தென்னன், இராம. அரங்கண்ணல், டி. வேங்கடாசலம், வி.எஸ்.பி. முதலியோர் உடனிருந்தனர்.

"எம்.கே. மாநாட்டுக்கு என்ன பெயர்?'' என்று கேட்டார் அரங்கண்ணல் (
ரங்கசாமியாக காங்கிரசில் இருந்தவர் திராவிடர் இயக்கம் வந்தபின் அரங்கண்ணல் ஆனவர்) மு. கருணாநிதி பதில் சொன்னார்.

"இப்போது இயக்கத்தில் மாணவர் அமைப்பு இல்லை. ஆனாலும் ஆங்காங்கே மாணவர்களைத் தயார்ப்படுத்திக் கொண்டுதான் அமைப்பை உருவாக்க வேண்டுமென்பது அய்யாவின் விருப்பம். தஞ்சையில் நாம் சற்று விரிவாக இதைச் செய்யலாம். ஆகவே, தென்மண்டல திராவிட மாணவர் மாநாடு என்று நடத்துவோம்''.

"பெரியார், அண்ணா எல்லோரும் வருவாங்களா?'' இது அரங்கண்ணலின் கேள்வி.

"எல்லோருக்கும் யாகூப் கடிதம் எழுதியிருக்கார். நிச்சயம் வருவாங்க''. இது கருணாநிதியின் பதில்.

ஒட்டு மொத்தமான தோழர்களின் ஒரு கேள்வி. மாநாட்டுக்கு யார் தலைவர்?

"பெரியாரோட அண்ணன் மகன் ஈ.வெ.கி. சம்பத்தை முதல்ல நம்ப மாநாட்டிற்குத் தலைவராய்ப் போடுவோம்''. கருணாநிதி சொல்கிறார். நண்பர்கள் கேட்கின்றனர்.

"அவர் நல்லாப் பேசுவாரா?''

"மாணவர் கூட்டங்கள் மாநாடுகளில் சுமாராகப் பேசறார்னு சொன்னாங்க... அய்யா குடும்பத்துப் பிள்ளைக்கு நாம ஒரு இம்பார்ட்டன்ஸ் கொடுக்கணும்...'' கருணாநிதி சொல்கிறார்.

மாணவத் தோழர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு ஆமோதிக்கின்றனர். யாரிடமும் சல்லிக் காசு இல்லை. ஆனால், ஆர்வம் மிகுதி. ஓடியாடி உழைக்கின்றனர்.

முதல் நாளே மாநாட்டுத் திறப்பாளர் இரா. இளம்வழுதி வந்துவிட்டார். அன்று மாலையே மதியழகன் வந்துவிட்டார். எஸ்.கே. சாமி, கே.கே. நீலமேகம் வி. சின்னத்தம்பி ஆகியோர் முயற்சியில் பணம் வசூலித்து மாநாட்டுப் பணிகள் மாணவர்களைக் கொண்டு தீவிரமாக நடைபெறுகின்றன. இம்மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவர் மு. கருணாநிதி, செயலாளர் அரங்கண்ணல், பொருளாளர் டி. வேங்கடாசலம்.இந்த மாநாட்டில் கல்லூரி மாணவர் ஈ.வெ.கி. சம்பத் தலைமை தாங்கி அரியதோர் சொற்பொழிவை நிகழ்த்தினார். திரளான மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டனர்.

சம்பத் பேசியதன் சுருக்கம்:-

"இன்றைய மாணவர்கள்தான் நாளைய தலைவர்கள். அதற்கேற்ப பொறுப்போடு நாம் வளரவேண்டும். இந்தச் சமுதாயம் எதிர்காலச் சந்ததிகளையே நம்பியிருக்கிறது. நமக்கு வழிகாட்டத் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தளபதி பட்டுக்கோட்டை அழகிரிசாமி, ஜீவானந்தம், பொன்னம்பலனார் போன்ற நெஞ்சுரமிக்க தலைவர்கள் இருக்கிறார்கள். மாணவர்களாகிய நாம் ஜாதி, மத, மூட நம்பிக்கைகளை வெறுக்கவேண்டும்,  நமக்குப் பள்ளியிலே மறைக்கப்படுகிற திராவிடக் கலை, கலாசாரம், பண்பாடு ஆகிய சிறப்புகளை நாம் நமது தலைவர்கள் வாயிலாகத் தெரிந்து கொண்டு அவற்றைப் பள்ளிகள் தோறும் பரப்ப வேண்டும்.  சேர சோழ பாண்டியர்கள் யார்? அவர்களது ஆட்சியின் மகிமை, வீரம், இவற்றைப் பறைசாற்ற வேண்டும். ரேடியோ கண்டுபிடித்தவர் யார்?
ரயிலைக் கண்டுபிடித்தவர் யார்? ஆகாய விமானத்தை கண்டு பிடித்தவர் யார்? இதையெல்லாம் புகட்ட வேண்டும். பெரியார் என்பவர் தனி மனிதரல்ல. இந்தச் சமுதாயத்தைச் சீர்திருத்த வந்த சிற்பி. நம்போன்ற மாணவர்களுக்கு அண்ணாவின் எழுத்தும், பேச்சுமே ஆயுதம்.

''இப்படி எல்லாம் மாணவர் சம்பத் தமக்குக் கிடைத்த தலைமைப் பதவிக்கு ஏற்ப கருத்துகளை அள்ளி வீசினார். "புலிக்குப் பிறந்தது பூனையாகுமா",என்று தஞ்சை திராவிடர் கழகத்துச் செயல் வீரர்கள் பாராட்டிச் சென்றனர். ஈரோட்டுப் பழக்கத்தோடு, இந்த மாநாட்டின் மூலம் சம்பத்திடம் கருணாநிதி ஆழ்ந்த பற்றும் பாசமும் கொண்டார்.

கருணாநிதி மீண்டும் ஈரோட்டுக்கு வந்து இதழ்ப் பணியைத் தொடரவேண்டும் என்று சம்பத் கூறினார். அதில் தாம் மிகுந்த ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால் குடும்பச் சூழ்நிலைகள் சரியில்லை என்றும், தமது நாடக வசனங்களைப் பார்த்து விட்டுத் திரைப்பட இயக்குநர் ஏ.எஸ்.ஏ. சாமி பயன்படுத்த அழைப்பதாகவும் மு.க. கூறினார். அதற்கு சம்பத் வரும் சந்தர்ப்பங்களைத் தக்க விதத்தில் பயன்படுத்திக் கொள்ளுமாறும்,  தடைகள் ஏற்படுகிறபோது சும்மா இருக்காமல் ஈரோடு வந்து பணிகளை மேற்கொள்ளுமாறும் யோசனை தெரிவித்தார்.

அப்போது அருகிலிருந்த அரங்கண்ணலிடம் "விடுதலை" விரைவில் சென்னைக்கு வரக்கூடும் என்றும், ஈரோடு வந்து அய்யாவிடம் தொடர்பு கொள்ளுமாறும் அதற்குத் திராவிட மணியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் சம்பத் நட்பு முறையில் தெரிவித்தார்.

மாணவப் பருவத்திலேயே சம்பத்தின் அணுகுமுறையில்
லட்சியத் துடிப்போடு மனித நேயமும் பின்னிப்பிணைந்திருந்தது.

அண்ணாமலையில் கலவரம்:-

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நெடுஞ்செழியன், அன்பழகன், கஜேந்திரன் ஆகியோர் படித்து முடித்து வெளியேறிய பின்னர் அவர்கள் தயாரித்து வைத்திருந்த மாணவர் படை பல்கலைக்கழகத்தில் மிகச் சிறப்பாக இயங்கியது.

கே.ஏ. மதியழகன், இரெ. இளம்வழுதி, அ. பொன்னம்பலனார், தம்பி இளங்கோவன் (புலவர்) மற்றும் தில்லை வில்லாளன், வி.ஜி. சாமிநாதன், தில்லை மறை முதல்வன், இராம. அரங்கண்ணல், எஸ்.டி. சோமசுந்தரம், பழ. நெடுமாறன், பண்ருட்டி
ராமச்சந்திரன், குப்புசாமி என்றொரு மாணவர் பட்டாளம் துணிச்சலாகக் கருப்புச் சட்டை அணிந்து கொண்டு கழகக் கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருந்தது.

காலமெல்லாம் மாணவர் தலைவர் என்னும் பட்டத்தோடு
லட்சியத்தின் உருவாய் நடமாடிய கே.ஏ. மதியழகன் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அன்புள்ளம் கொண்டவராக விளங்கினார். கழக மாணவர்கள் அறைகளில் கழக ஏடுகளும், நூல்களும் குவிந்து கிடக்கும். வகுப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் கொள்கை விளக்கமும், இலக்கியச் சர்ச்சைகளும் நடைபெறும்.

பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவிற்கு கல்வி அமைச்சர் அவிநாசிலிங்க செட்டியார் வருவதாக இருந்தது. இந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தி மாணவர்கள் ஏதாவது செய்ய வேண்டுமென்று ஆலோசித்தனர். கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை மதியழகன் விரும்பவில்லை. அவர் ஒரு கருத்து சொன்னார். 

"பல்கலைக்கழக கட்டடத்தின் ஒவ்வொரு திசையின் உச்சியிலும் கும்பங்கள் இருக்கின்றன அல்லவா? பத்துக்குக் குறையாத கும்பங்கள், இந்தப் பத்திலும் பெரிய அளவில் கழகத்தின் கொடியைப் பறக்க விட்டு விடுவோம்'' என்றார்.மாணவ, மணிகள் அதை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

"மையத்தில் உள்ள கடிகாரக் கூண்டு முழுதும் ஏறி ஒரு கொடியைக் கட்டி விடுவோம்'' என்றார் இளம்வழுதி.

"சுவர் விழுந்தா என்னாவது?'' என்று கேட்டார் மதி.

"உயிர்தானே போகும். நான் கட்டிக் காட்டுகிறேன்''  என்றார் இளம்வழுதி.

"பெரியார் கோபித்துக் கொள்ளப் போகிறார். எதற்கும் சம்பத்திடம் கேட்டு விடலாம்'' என்று ஈரோட்டிற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். சம்பத் அதை உற்சாகத்துடன் வரவேற்றார்.

"சிதம்பரம் வளாகத்தில் மற்றவர்களிடம் கலந்து கொள்ளுங்கள்'' என்றும் சொன்னார்.

பெரியவர் கிருஷ்ணசாமி, அன்பழகன் தந்தையார் கல்யாணசுந்தரம், பாலகுருசாமி, புலவர் நா.மு. மாணிக்கம் போன்றவர்கள் தில்லையம்பதியின் தி.க. போர் மறவர்கள்.

அண்ணாமலைக் கழக மாணவர்களுக்கு அவர்கள் தாம் பாதுகாப்புக் கேடயங்கள்.

திட்டமிட்டபடி கும்பங்களில் எல்லாம் கொடிகள் பறந்தன. பல்கலைக்கழகமா? திராவிடர் கழகப் பாசறையா? என்று எண்ணும் அளவுக்குக் கழகக் கொடிகள் பட்டொளி வீசின. அந்த அருங்காட்சியைப் பார்த்துவிட்டு, கழக மாணவர்கள் மிரண்டு போய்த் தலைமறைவாக இருந்தனர்.

தங்கும் விடுதிகளுக்கு நடுவில் ஒரு பெரிய மரம். அந்த மரத்தின் அடியில் யாராவது ஒரு மாணவர் விடாமல் கை தட்டினால் அது அபாயச்சங்கு என்று பொருள். எல்லா மாணவர்களும் கட்சி பேதமின்றிக் கூடிவிடுவர். அன்று மாலை 6 மணி, திடீரென்று ஒரு கைதட்டல் "காம்ரேட்ஸ்'' என்றோர் ஓங்காரக் குரல் கேட்டது. கழக மாணவர்களுக்குத் தெரியும் ஏதோ விபரீதம் நடக்கப் போகிறதென்று. பத்து பதினைந்து கழக மாணவர்கள் மீது காங்கிரஸ் மாணவர்கள் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான கழக மாணவர்கள் விறகுக் கட்டையுடன் பாய்ந்து விரோதிகளை நகரத்தை நோக்கி விரட்டினர். சிதம்பரத்தில் ஒரு டூரிங் டாக்கீஸ். அதனுள் எதிரிகள் ஓடி ஒளிய முயன்றனர். கழக மாணவர்கள் துரத்திக் கொண்டே கொட்டகைக்குள் நுழைய, அங்குக் கடும் மோதல் ஏற்பட்டுப் படம் நிறுத்தப்பட்டது.

மாற்றான் ஒருவன் எறிந்த கல் மதியழகன் தலையில் பட்டு
ரத்தம் கொட்டியது. அவ்வளவுதான் "காம்ரேட்ஸ்" என்று கழகத் தோழர்கள் ஆவேசத்தோடு முழங்கிக் கொண்டு எதிர்ப்படையினரை அடித்து நொறுக்கினர். அதற்குள் கொட்டகையினர் அடியாட்களை அழைத்து வர சிக்கிக் கொண்டால் ஆபத்து என்று அடிபட்ட மதியழகனைத் தூக்கிக் குதிரை வண்டியிலேற்றி மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லி விட்டுக் கழக மாணவர்கள் அனைவரும் விட்டால் போதுமென்று பறந்து விட்டனர். மறுநாளும் பல்கலை வட்டாரத்தில் பதற்றம். காவல்துறையினர் நடமாட்டமும் காணப்பட்டது.

மதியழகன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் எனும் தகவலுடன் விவரங்களையெல்லாம் சம்பத் பெரியாரிடம் எடுத்துச் சொன்னார்.

"படிக்கிற இடத்தில் கோமாளித்தனமாக காலித்தனம் செய்வதா?'' என்று கோபித்துக் கொண்டார் பெரியார்.

கோபம் தணிந்ததும் சம்பத்தை அழைத்து சிதம்பரம் போய் எல்லாவற்றையும் நேரில் தெரிந்து கொண்டு வருமாறும், கலவரத்திற்கு இடம் தரவேண்டாமென்றும் பணித்தார். அவர்தாம் பெரியார்.

வேண்டுமென்றே கலகங்களை உண்டு பண்ணுவதில், அதிலும் படிக்க வேண்டிய பருவத்தில் மாணவர்கள் அவற்றில் ஈடுபடுவதில் அவருக்கு உடன்பாடில்லை. அதேசமயம் அவர்களது சிறுபிள்ளைத்தனத்தை மன்னித்து உரிய வழியில் நெறிப்படுத்தவும் அவர் தவறமாட்டார்.

Kannan Natarajan

unread,
Oct 16, 2011, 1:36:55 AM10/16/11
to Min Thamizh


சம்பத் - கருணாநிதி நட்பு:-

நாடு முழுவதும் உள்ள பகுத்தறிவு இயக்கத்தில் ஆர்வம் கொண்ட மாணவர்களை மாவட்ட வாரியாகத் திரட்டி மாணவர் கழக அமைப்பைக் கழகத்தின் ஒரு துணைஅமைப்பாக உருவாக்க வேண்டும் என்னும் எண்ணம் பெரியார் மனத்தில் கருக் கொண்டிருந்தது. இது அவசியம் என்றும், கல்லூரி மாணவராக இருக்கும் தம்பி சம்பத்துக்கு இதில் பயிற்சி அளித்து, மாணவப் பருவத்திலேயே தலைமைப் பக்குவத்தைச் சம்பத்திடம் ஏற்படுத்த வேண்டுமென்றும் பெரியாரிடம் தமது விருப்பத்தை அண்ணா தெரிவித்திருந்தார். இதனால் சம்பத்தின் படிப்பு கெட்டு விடக் கூடாதே என்னும் அச்சமும் பெரியாருக்கு இருந்தது.

கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை நேரடி அரசியல் கூடாது. அதுவரை அரசியல் கலவாது சமூக நோக்கில் மாணவர் அமைப்புப் பணிகளிலும் பொதுவான நிகழ்ச்சிகளிலும் பழக்கப்படுத்தலாம் என்னும் அண்ணாவின் யோசனையை அரை மனத்தோடு ஒப்புக் கொண்டார் பெரியார்.

சம்பத்தின் தந்தையார் ஈ.வெ. கிருஷ்ணசாமி தமது புதல்வன் சம்பத்தை ஒரு மருத்துவராகவோ, பொறியாளராகவோ உருவாக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் சிற்றப்பா பெரியார், சம்பத் ஒரு பட்டதாரியாகிப் பொது வாழ்விற்கு வந்து தமது சுமைகளை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்பினார்.

பச்சையப்பன் கல்லூரியில் அவரது ஆங்கிலப் பேராசிரியர் வரதராஜன், "நீ இயல்பாகவே நன்றாகப் படிக்கிறாய். நீ ஒரு தலைவரின் பிள்ளை. உனக்குப் பெரிய எதிர்காலம் இருக்கிறது, படிப்பு முடிகிறவரை அரசியலையும் அறிந்து வைத்துக் கொள்'' என்று நிதானத்தை ஊட்டுவார்.

அண்ணாவும் உடன் பிறந்த தம்பி போல் சம்பத்திடம் உருக்கம் காட்டுவார். "படிப்பில் கவனம் சம்பத். படிப்பை முடித்த பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடலாம். அதுவரை மற்ற விஷயங்களில் கவனத்தைத் திருப்பக் கூடாது'' என்பார்.

அப்போது அண்ணா குடந்தை அரசினர் கல்லூரியில் லிட்டரரி அசோஷியேசன்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசுவதாக இருந்தது. அதில் பங்கேற்று விட்டு மறுநாள் வந்து விடலாம் என்று சொல்லிச் சம்பத்தையும் குடந்தைக்கு அழைத்துச் சென்றார். குடந்தை சென்றடைந்ததும் கருணாநிதி ஏராளமான மாணவர்களைத் திரட்டிக் கொண்டு வந்து அண்ணாவையும் சம்பத்தையும் வரவேற்றார். பின்னர் அவர்கள் பழம் பெரும் சுயமரியாதை இயக்க வீரர் வி. சின்னதம்பியின் இல்லத்தில் தங்கினர். அண்ணாவும், சம்பத்தும் மாணவர்களிடம் சிறிது நேரம் உரையாடிவிட்டு மதியம் இரண்டு மணிக்கு வருமாறு சொல்லி அனுப்பிவிட்டு ஓய்வு எடுத்தனர்.

மதியம் மூன்று மணிக்கு அரசினர் கல்லூரி இலக்கியச் சங்கத்தின் சார்பில் கல்லூரி முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் "புது வாழ்வு" என்னும் தலைப்பில் அண்ணா ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். கூட்டத்திலிருந்து விடைபெற்றபோது ஆசிரியர்களும் மாணவர்களும் சூழ்ந்து நின்று பாராட்டினர்.

அந்த நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன் இன்டர்மீடியட் மாணவரான கருணாநந்தம் கல்லூரி மாணவர் தலைவர்களைச் சம்பத்திற்கு அறிமுகம் செய்துவைத்தார்.

அன்றிரவு குடந்தையில் எம்.ஆர்.
ராதாவைப் பாராட்டி அண்ணா வெள்ளிக் கேடயம் வழங்கும் விழாவினை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கும் அண்ணா, சம்பத்தையும் அழைத்துச் சென்றிருந்தார்.சம்பத்தைக் கண்டதும் எம்.ஆர். ராதா, "பார்ட்னர்'' (கூட்டாளி) என்று அன்போடு அழைத்து கட்டித் தழுவிக் கொண்டார். சம்பத்தை எம்.ஆர். ராதா எப்போதும் "பார்ட்னர்" என்று செல்லமாக அழைப்பது வழக்கம்.

இந்த நிகழ்ச்சிக்கான அனுமதிச்சீட்டு விற்பனையில் தவமணி
ராஜன் முனைப்போடு ஈடுபட்டிருந்தார். வசூல் நிலவரம் பற்றி அண்ணா அவரிடம் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் மீதமாகும் தொகையைப் பெரியாரிடம் அவர் கொண்டு போய்க் கொடுத்து திராவிடர் மாணவர் கழக அமைப்பைத் தொடங்கச் செய்ய வேண்டும் என்றும் அண்ணா சொன்னார். சம்பத்தை நோக்கி எம்.ஆர். ராதா, "கவலைப்படாதே தம்பி. உன்னைத் தலைவராக்க எத்தனை நாடகம் வேண்டுமானாலும் நானே நடத்தித் தர்றேன்'' என்று அவருக்கே உரிய பாணியில் உவகையோடு கூறினார்.

நிகழ்ச்சி முடிந்தது, "அண்ணா பேச்சு எப்படி இருந்தது?'' என்று சம்பத்,
ராதாவிடம் கேட்டார். அதற்கு அவர், "எம்.எஸ். சுப்புலட்சுமி கச்சேரி கேட்டது போலிருந்தது'' என்று சொன்னார். மேலும், "தலைவன் மகன் தலைவனாக வேண்டும். இதுதான் ஒவ்வொரு திராவிடக் கழகத்துக்காரனின் விருப்பமாகும்'' என்று நடிகவேள் ராதா உருக்கமாகச் சொல்லி விடை கொடுத்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பல மாவட்டங்களிலும் திராவிட மாணவர்கள் பேரெழுச்சி ஏற்பட்டது. சென்னைக் கல்லூரிப் படிப்போடு ஈரோட்டிலும் ஆங்காங்கே மாணவர் கழக நிகழ்ச்சிகளுமாக சம்பத் ஓய்வின்றிச் செயல்பட்டார். மாணவர் கழகத்தை உருவாக்குவதில் பெரியார் யோசனை செய்தவண்ணம் இருந்தாலும் அமைப்பு முறையில்லாமலேயே ஆங்காங்கு கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் மாணவர்கள் அண்ணாவையும் சம்பத்தையும் அழைத்து மாணவர் மன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதில் பேரார்வம் காட்டினர்.

எப்போதுமே, தஞ்சையில் பகுத்தறிவு இயக்க ஆர்வம் சற்று அதிகமாகவே கொப்பளிக்கும். அதிலும் தஞ்சை மாவட்டத்தில் திராவிடர் இயக்கம் வேரூன்றிய நாளிலிருந்து மாணவர் இயக்கமும் அங்கே வேர்விட்டுச் செழிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருந்தன.

தஞ்சை மாவட்டத்தில் திராவிடர் இயக்கத்திற்கு எத்தனையோ செயல்வீரர்கள் கிடைத்திருந்தனர். குடந்தை கே.கே. நீலமேகம், பி. சின்னதம்பி, நீடாமங்கலம் ஆறுமுகம், நாகை மணி, மாயவரம் நடராசன், தென்னன், மு. கருணாநிதி ஆகியோர் சோழ மண்டலத்தில் பெரியாருக்குக் கிடைத்த மாமணிகள் ஆவர்.

1944இல் "சாந்தா அல்லது பழனியப்பன்" என்னும் நாடகத்தினை எழுதி நடித்துக் காட்டியவர், எம்.ஆர்.
ராதா நாடக மன்றத்திற்குத் "தூக்குமேடை" என்னும் நாடகம் தந்து அதில் எம்.ஆர். ராதாவுடன் பாண்டியனாக (ஒரு மாணவராக) நடித்தவர், புதுவையில் "நச்சுக் கோப்பை" நாடகம் நடித்து அதனால் ஏற்பட்ட கலவரம் காரணமாக மாற்றாரால் தாக்கப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டு பெரியார் முன் கொண்டு வந்து நிறுத்தியபோது, அவர் அனுதாபப்பட்டு 1945ம் ஆண்டு இறுதியில் ஈரோட்டில் "குடியரசு"ப் பத்திரிகையின் பிழை திருத்துபவராக அமர்த்திப் பின்னர் துணை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றவர், நாடக நடிகராக இருந்து "குடியரசு" பத்திரிகையில் பணிகளை ஏற்கிறபோதும் பெரியாரிடம் பணியாற்றும் போதும் சில சங்கடங்களைச் சந்தித்தவர். அவர்தாம் மு.கருணாநிதி. தஞ்சை மாவட்டம் தந்த திராவிட மாமணிகளுள் மிக முக்கியமானவர்.

பெரியார் எளிமை, சிக்கனம், அடக்கம், முதலியவற்றில் தம்மைப் போலவே தம்மோடுள்ளவர்களும் இருக்க வேண்டுமென்று விரும்புவார். "குடியரசு" அலுவலகத்தில் ஊழியர்களின் வருகைப் பட்டியல் நேரம் முதலியன குறிப்பிட்டு பெரியாரின் மேஜையின் மேல் இருக்கும். பெரியார் வருகிறார் என்றால் அந்த மாளிகையே "கிடு கிடு" என்று ஆடிக் கொண்டிருக்கும்.

பெரியார் வந்து தம் மேஜையில் அமர்ந்ததும் கையிலுள்ள கடிகாரத்தைக் கழற்றி மேசை மீது வைத்து விடுவார். அப்போதே அவர், தன் இதயத்தையே கழற்றி வைத்து விட்டார் என்பது ஊழியர்களுக்குத் தெரியும்.

ஒரு துண்டு கடிதாசி வீணாகியிருந்தால் கூட பெரியார் சும்மா விடமாட்டார். எதிலும் கறார், கண்டிப்பு:-

ஒரு நாள் "குடியரசு" இதழில் நிறைய எழுத்துப் பிழை ஏற்பட்டுவிட்டது. சுற்றுப்பயணம் முடித்து வந்த பெரியார் "குடியரசு" ஏட்டில் எழுத்துப் பிழைகளைப் பார்த்துவிட்டு, "இன்றோடு உங்களுக்கு வேலையில்லை. வெளியே போங்கோ'' என்று ஆசிரியர் பகுதியினருக்கு உத்தரவிட்டார். சம்பத் சினிமாவுக்குப் போயிருந்ததால் அவர் வரும் வரை இரவில் தியேட்டருக்கு அருகே வெகு நேரம் காத்திருந்தார் கருணாநிதி. சினிமா விட்டதும் சம்பத் வந்தார். வழியில் கருணாநிதி நிற்பதைப் பார்த்து, "என்னய்யா கருணாநிதி சினிமாவிற்குப் போகிறாயா?'' என்று கேட்டார். காரணம், அந்த தியேட்டர் அவரது அத்தை மகன் எஸ்.ஆர். சந்தானத்திற்குச் சொந்தமான ஸ்டார் டாக்கீஸ். அங்கு இவர்களுக்கெல்லாம் இலவச அனுமதி என்று முன்பே சொல்லப்பட்டுள்ளது.

கருணாநிதி சொன்னார், "இல்லையா. அய்யா வேலையிலிருந்து நீக்கிட்டாரு'' என்றார். சம்பத் அலட்சியமாக "சரி, அது கிடக்கிட்டும் நீ சாப்பிட்டாயா?'' என்றார். அதற்கு அவர், "இல்லைய்யா நான் வீட்டிற்கு சாப்பிட வந்தா அய்யாவுக்குத் தெரிந்திடும். கோபிச்சாலும் கோபிச்சுக்குவார். நா வரலே'' என்றார்.அவருடைய தர்ம சங்கட நிலையைப் புரிந்து கொண்டு, அந்த அகால நேரத்தில் ஓட்டல்கள் எதுவுமில்லாத நிலையில், தமக்குப் பற்று வரவுள்ள ஒரு பெட்டிக் கடைக்கு அழைத்துச் சென்று அவருடைய கணக்கில், முறுக்கு, கடலை மிட்டாய், வாழைப்பழம் எல்லாம் வாங்கிக் கொடுத்துச் சாப்பிடச் செய்து, தம் வீட்டின் பின் பக்கமுள்ள ஓர் அறையில் படுக்க வைத்து, "இரவு இங்கே படுத்திருங்கள். காலையில், நான் அய்யாவிடம் பேசி எல்லாம் சரிபடுத்தி விடுகிறேன்'' என்று சொன்னார்.

அது போலவே, மறுநாள் காலையில் "குடியரசு" அலுவலகத்திற்குச் சென்று, பெரியாரிடம் சற்றுக் கோபமாகவே, "அவனவன் குடும்பத்தை விட்டு விட்டு உங்களுக்கு உழைக்க வந்திருக்கிறான். நீங்கள் மனித நேயமில்லாமல் நடந்து கொள்ளுகிறீர்கள்?'' என்று சம்பத் பேச ஆரம்பித்ததுமே, இது, அவன் கூட்டாளி கருணாநிதிக்காக பரிந்து பேசுகிறான் என்பதைப் புரிந்து கொண்டு அய்யா, "என்னமோங்க எப்படியோ போங்க உருப்படுவதற்காகச் சொல்கிறேன். அந்தப் பையனை வரச் சொல்லுங்க'' என்று சொல்லிவிட்டு பெரியார் அடுத்த நாள் சுற்றுப் பயணத்திற்குப் புறப்பட்டு விட்டார். கருணாநிதியை அழைத்து வந்து சம்பத், அவரைக் "குடியரசி"ல் பணியைத் தொடருமாறு செய்தார்.

Kannan Natarajan

unread,
Oct 29, 2011, 11:32:01 PM10/29/11
to Min Thamizh

தேர்வில் தோல்வி - பெரியார் சீற்றம்:-

யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன் கல்லூரிப் பேராசிரியர்களுக்கும் கூட வேதனையாகத்தானிருந்தது. பச்சையப்பன் கல்லூரியில் இன்டர் படித்துக் கொண்டிருந்த ஈ.வெ.கி. சம்பத் தேறவில்லை. தவறி விட்டதைக் கேட்டு அய்யா சுடுநீரைக் காலில் கொட்டிக் கொண்டது போல் துடித்தார்.  "எனக்குத் தெரியும். அண்ணாத்துரையோடு சேர்ந்து கொண்டு நாடகம், சினிமா, மாநாடு என்று இவன் சுற்றிக் கொண்டிருந்த போதே, படிப்பு பாழாய்கிட்டிருக்குன்னு நினைத்தேன். அப்படியே ஆகிவிட்டது'' என்றும் தம் பிள்ளை தேறவில்லை என்றும் பெரியார் தவித்தார்.  ஈரோடு வந்த சம்பத், பெரியாரின் கோபம் அடங்கட்டுமென்று அவர் கண்ணில் படவில்லை. அத்தை வீட்டில் படுத்திருந்த சம்பத்தை, பெரியார் அழைத்துவரச் சொன்னார். சம்பத்திற்கு ஒன்றும் பயமில்லை. எதுவந்தாலும் ஆகட்டும் என்று நெஞ்சுயர்த்தி நின்றார். 

"அப்போதே சொன்னேன். படிப்பை முடித்து விட்டு அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். நீ அண்ணாத்துரையை நம்பினாய். படிக்கிற உனக்கு நாடகக் கம்பெனி முக்கியமா? உருப்படுவதற்கு வழியைப் பார். இன்னைக்கே திருச்சிக்குப் போய் சங்கரன் பங்களாவிலே தங்கிகிட்டு, டியூட்டோரியல்லே சேர். எப்படியும் பாசாகணும்'' என்று கோபத்தோடு வார்த்தைகள் வந்து விழுந்தன. 

அருகிலிருந்த தந்தையார் ஈ.வெ.கிருஷ்ணசாமியும், "படிப்பை முடிச்சுட்டு என்னைத்தையாவது பண்ணு. ஒரு பட்டதாரி கூட ஆகவில்லைன்னா.. யார் மதிப்பா? உனக்கென்ன குறை, திருச்சி புறப்படு'' என்று சீறினார்.  அப்போதுதான் தம்மை அணைத்து, உச்சி மோந்து கொஞ்சிடும் அன்னையார் நாகம்மையில்லையே என்று மனம் வெதும்பினார் சம்பத். அப்பாவோ, சிற்றப்பாவோ, எவரும் கடிந்த வார்த்தை சொல்லிவிடாமல் அன்புக் கேடயமாக ஆசை மகனைப் பாசத்தோடு கட்டியணைத்துக் கொள்ளும் தாய் இல்லையே என்று வேதனைப்பட்டார். சிறிய தந்தையாரை நோக்கி, "இப்போதே நான் திருச்சி புறப்படுகிறேன்'' என்றார்.  "எப்படியும் பாசாகணும்'' என்றார் பெரியார். திருச்சி புறப்பட்டார் சம்பத். அவருடைய மனக்குகையில் பெரும் போராட்டம். குடும்பத்தாரைத் திருப்திப்படுத்த படிப்பைத் தொடர்வதா? தன்னை எதிர் நோக்கி உள்ள மாணவர் படையை வழி நடத்துவதா? என்னால் என் அண்ணனுக்குப் பழி ஏற்படுவதா? என்றெல்லாம் மனம் குமுறியபடி குழப்பமான நிலையில் திருச்சி சங்கரன் பங்களா போய்ச் சேர்ந்தார்.  இவர் போய்ச் சேருவதற்கு முன்பே பெரியார் தொலைபேசியில் சங்கரனிடம் எல்லாவற்றையும் பேசிவிட்டார். ஆகவே சம்பத் வரும்போதே வருத்தமாகத்தான் வருவார் என்பதைப் புரிந்து கொண்டு அவருடைய வருத்தத்தைப் போக்கும் வகையில் பெரும் நண்பர் குழாம் காத்திருந்து அவரை உற்சாகப்படுத்தி வரவேற்றனர். எல்லாவற்றையும் காஞ்சிபுரத்திலேயே அறிந்துகொண்டு, தம்பியின் வருத்தம் போக்க, அத்தனை வேலைகளையும் உதறிவிட்டு, சம்பத்தைச் சந்திக்க சங்கரன் பங்களா வந்துவிட்டார் அண்ணா.  அண்ணாவைக் கண்டதும், தாம் பாஸாகிவிட்டது போன்றே சம்பத் குதூகலம் அடைந்தார். அங்கே அனைத்தையும் விட அண்ணன் தம்பி பாசம் மேலோங்கி நின்றது. இருவரும் இரவு ஆங்கிலத் திரைப்படம் பார்த்தார்கள். அது அவர்கள் வாடிக்கை.  அண்ணாவிற்குக் கூட மனத்துக்குள் வருத்தம்தான். சம்பத் பாசாகியிருந்தால், அவர் தலை உருண்டிருக்காது. 

அன்றிரவு அவர்கள் தூங்கவே இல்லை. பேசினார்கள். பராங்குசம், அன்பில், மன்னை போன்றவர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். எல்லோரும் சம்பத்தை மகிழ்ச்சியாக வைக்க வேண்டுமென்பதில் போட்டி போட்டார்கள். அண்ணாவோடிருக்கிறபோது சம்பத்திற்கு மகிழ்ச்சிக்கா பஞ்சம்? விடிய விடியப் பேசினார்கள். யார் எப்போது தூங்கினார்கள் என்பது அவர்களில் எவருக்கும் தெரியாது. 

கல்வியா? கலையா? அரசியலா?  திருச்சி வந்த சம்பத்துக்கு தனிப்பயிற்சிக் கல்லூரி வாழ்க்கை ஆர்வத்தைத் தரவில்லை. படிக்க வேண்டும், பட்டம் பெறவேண்டும் என்னும் மனத்துடிப்பு மிகுதி என்றாலும் அவரது சுற்றுச்சூழ்நிலை, இயக்கச் சம்பவங்களாலும் நிகழ்ச்சிகளாலும் சூழப்பட்டிருந்தது. எப்போதும் அவரைத் தேடி கழக மாணவர்கள் வந்தபடியிருந்தனர். அவரோ மாதமிருமுறையாவது ஈரோடு செல்லாவிடினும், காஞ்சிபுரத்திற்குச் செல்வதைத் தவிர்க்க முடியவில்லை. நாடக ஆர்வம் வேறு அவரை ஆட்டிப் படைத்தது. 

சரியாகப் படிக்கவில்லையென்று பெரியார் திருச்சி வந்து மிகவும் கண்டித்துவிட்டுப் போனார். மனத்துயரை மாற்றிக் கொள்ளச் சம்பத் யாரிடமும் சொல்லாமல் நேராக குடந்தை போய்விட்டார். அங்கேதான் கே.ஆர்.ஆர். நாடக சபா வெற்றிமுரசு கொட்டிக் கொண்டிருக்கிறது.  கே.ஆர். இராமசாமிக்கு, அண்ணாவிற்கடுத்து சம்பத் மீது அதிகப் பிரியம். வரவேற்று, ஆறுதல் கூறி, "கஷ்டப்பட்டு படிப்பை முடித்துவிடு, பிறகு பெரியார் உனக்கே முடிசூட்டிவிடுவார். நீ பொறுமையுடன் படிக்கத்தான் வேண்டும்'' என்றெல்லாம் அவர் நயமாகவே கூறினார்.  ஆனாலும், "சம்பத் ஒரு சில நாட்கள் தங்கியிருந்து விட்டு பிறகுதான் திருச்சி போய் படிப்பைத் தொடர முடியும்" என்றார். 

அப்போதே, கே.ஆர்.ஆர். தம்முடைய நாடக சபாவின் பெட்டிச் சாவியை சம்பத்திடம் கொடுத்துவிட்டார். ஊர்ஊராகச் சென்று நாடகங்களில் நடிப்பதும், நாடகக் கம்பெனியை நிர்வகிப்பதுமான பணிகளில் சம்பத் தம்மைத் தாற்காலிகமாக ஈடுபடுத்திக் கொண்டார். அண்ணா அடிக்கடி இந்த நாடக சபாவிற்கு வந்து அனைவரையும் உற்சாகப்படுத்துவார். புது நாடகம் எழுதித் தருமாறு நடிகர்களும் அண்ணாவைக் கெஞ்சுவார்கள்.  நாடக சபாவில் சம்பத்தைக் கண்டதும் அண்ணா திடுக்கிட்டார். "ஓராண்டுக் கல்வியை முடித்துவிட்டு இப்படியெல்லாம் சுற்றலாமா? இப்போது நீ செய்திருப்பது எனக்குத்தான் பெரும் பழியைத் தேடித்தரும். இந்த முறை அய்யாவிடம் நான் என்ன பேச்சு வாங்க வேண்டியிருக்குமோ? என்று அஞ்சுகிறேன் சம்பத். நீ திருச்சி திரும்புவதுதான் சரியாக இருக்கும்'' என்று அண்ணா கூறினார். "நீங்களும் வந்துவிட்டீர்கள். இனி எப்படி அண்ணா உடனே போக முடியும். இரண்டு நாட்கள் இருந்துவிட்டு நாமிருவருமே திருச்சி செல்வோம் ''என்று அண்ணாவிடம் கூறினார் சம்பத்.  சம்பத்தின் நாடக ஆர்வத்தை அண்ணா விரும்பவில்லை. காரணம் பெரியாருக்கு இது கட்டோடு பிடிக்காது. ஆகவே, சம்பத் படித்துக்கொண்டே இயக்க வேலைகளைக் கவனிக்க மாணவர் கழக அமைப்பை உருவாக்கிவிட்டால், சம்பத் கல்வியோடு மாணவர் கழகப் பணியையும் கவனித்துக் கொள்வார். பிறகு நாடக சபாக்களில் கவனம் திரும்பாது என்று அண்ணா திட்டமிட்டார்.  அடுத்த நாளே, சம்பத்தைத் திருச்சிக்கு அழைத்து வந்தார். அங்கு தங்கியிருந்த பெரியாரைச் சந்தித்து தம் உள்ளக்கிடக்கையைத் தெரிவித்தார். அப்போது பெரியார் உடல் நலக் குறைவாக இருந்ததால் மருத்துவத்திற்காகச் சென்னைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். தம்முடன் அண்ணா, சம்பத் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்னை வந்து அரசு பொது மருத்துவமனையில் சேர்ந்தார். எக்காரணம் கொண்டும் பெரியார் தனியார் மருத்துவமனைக்குச் செல்லமாட்டார். காரணம், அங்கே கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதிருந்தாலும், "பொது மக்கள் நாடுகிற அரசு மருத்துவமனைகளை நாமே மதிக்காவிடில்.. நாமே நம்பாவிடில், மக்கள் எப்படி மதிப்பார்கள் நம்புவார்கள்'' என்பார். 

பெரியாருக்கு அவரது செயற்கைப்பல், நாவில் உரசி உரசிப் புண்ணாக்கிவிட்டது. 16.3.45 முதல் பத்து நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார். அவரது நாக்கில் புற்றுநோய் இருப்பதாகக் கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சை நடைபெற்றது. பெரியாருக்கு எல்லாமே குணமாகிவிட்டது. அதுமுதல் பல் செட்டைப் பொறுத்தாமலே ஈறுகளால் நன்கு மென்று தின்னப் பழகிக் கொண்டார். முறுக்கு, சீடை மட்டும்தானா இறைச்சி, எலும்புகளும் அவரது ஈற்றுக்கு நொறுங்கின.  ஓரிரு நாட்கள் பெரியார் ஓய்விலிருந்தார். அதனை அண்ணாவும் சம்பத்தும் பயன்படுத்திக் கொண்டார்கள். சம்பத் படிப்பைத் தொடர்வதோடு கழக மாணவர் சம்பந்தப்பட்ட பயிற்சி முகாம்களை விடுமுறை நாட்களில், மாவட்ட வாரியாக நடத்துவது என்ற திட்டத்தை அய்யா தெரிவித்தார்கள். இந்தப் பயிற்சி முகாம்களில் பேசுவதற்கு மட்டுமன்றி பொதுமக்களோடு இணைந்து சென்று ஒரு சாரணர் குழுவைப் போன்று முதல் உதவி சிகிச்சை செய்தல், பகுத்தறிவைப் பரப்புதல் போன்ற சமூகப் பணிகளுக்கும் மாணவர்களைத் தயார்ப்படுத்த விரும்பினார் பெரியார்.  1945 ஏப்ரல் 16, 17 தேதிகளில் ஈரோட்டில் திராவிட மாணவர் (முதல்) பயிற்சி முகாம் ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வெளிமாவட்டங்களிலிருந்து பெரும்பான்மையான மாணவர்கள் வந்து கலந்துகொள்ள வேண்டுமென்பது பெரியாரின் விருப்பம். அப்போது அய்யாவிடம் தனிச்செயலாளராயிருந்த எஸ். கஜேந்திரன் கும்பகோணம், திருச்சி, அண்ணாமலை நகர் எனப் பல இடங்களுக்குச் சென்று கழக மாணவர்களைத் திரட்டினார். விடுமுறை நாட்களில் மாணவர்கள் சிறு சிறு குழுவினராக மாவட்டம்தோறும் பிரச்சாரம் செய்யும்படி விளக்கிக் கூறப்பட்டது.  ஈரோட்டில் மாணவர் பயிற்சி முகாம்:  ஈரோட்டில் பெரியார் மாளிகையில் 4.5.45 காலை திராவிட மாணவர் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. பெரியார் ஈ.வெ.ரா. தலைமையில் தோழர் தி.பொ. வேதாசலம் தொடங்கி வைத்தார். மாலையில் பல அறிஞர்கள் விரிவுரையாற்றினர். இப்பயிற்சியில் கலந்துகொண்ட முக்கியத் தோழர்கள் ஈ.வெ.கி. சம்பத், ஏ.பி. சனார்த்தனம், புலவர்கள் வி.ஏ.ஏ.சாமி, நா.மு. மாணிக்கம், ஏ. வீரபாகு, பி. குழந்தையா, ஆர். எழில் நிலவன், ம. நன்னன், எஸ். தவமணிஇராசன், க.அ. மதியழகன், இரெ. இளம்வழுதி, ப. திருஞானசம்பந்தம், எம். விட்டல், ஆர். சுப்பையன், எஸ். இராவணன், எஸ். சுந்தரமூர்த்தி, க. சண்முகம், வி.பி. அண்ணல் தங்கோ, கே.என். இளஞ்செழியன், ச. இராமசாமி, ஆர். வில்லாளன், எம்.ஜி. இராசன், ஆர். இராமையன், வி. செங்குட்டுவன், எஸ். கருணானந்தம் ஆகியோர்.  திராவிட இளைஞர் மாநாடு  சம்பத் பயின்ற ஈரோடு மகாஜன உயர்நிலைப் பள்ளியின் அரங்கில் திராவிட இளைஞர் மாநாடு உணர்ச்சியும், எழுச்சியும் ததும்ப நடைபெற்றது. மண்டபம் சிறியதுதான். ஆனாலும் அதற்கு வெளியிலும் ஏராளமான மாணவர்கள் குவிந்தனர்.  பழைய கோட்டை என். அர்ச்சுனன் வரவேற்புக் குழுவின் தலைவர். வசதிமிக்க பட்டக்காரர் குடும்பம். எப்போதும் பெரிய பிளிமத் காரில் பவனி வரக்கூடியவர். அந்த கார் நிறைய அரிசி காய்கறியெல்லாம் அவரே ஏற்றிக் கொண்டு மாநாட்டு மண்டபத்திற்கு வந்துவிட்டார். பக்கத்தில் பந்தல்போட்டு சமையல் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.  மாநாட்டில் உற்சாக வெள்ளம். காரணம் மாநாட்டுக்குத் தலைவர் அண்ணா. இந்நிலையில் ஈ.வெ.கி. சம்பத் ஒவ்வொரு மாணவர் தலைவரையும், கட்சிப் பிரமுகரையும் பேச அழைக்கும்போதும் அண்ணா சுவையாக அறிமுகப்படுத்துவார்.  முன்னதாக க. அன்பழகன் கொடியேற்றிப் பேசினார். இரா. நெடுஞ்செழியன் மாநாட்டில் சிறப்புரையாற்றினார். தலைமையேற்க அண்ணாவை முன்மொழிந்து சம்பத், வழிமொழிந்து நெடுஞ்செழியன் பேச அண்ணாவின் தலைமையுரை மாநாட்டில் களை கட்டியது. 

ஒவ்வொரு தீர்மானத்தின் மீதும் மாணவமணிகள் பேசினர். மாலை தொடங்கி இரவு உணவுக்குப்பிறகும் சொற்பொழிவுகள் தொடர்ந்துகொண்டிருந்தன. இரண்டு நாள் பயிற்சி முகாம், மூன்றாம் நாள் இம்மாநாடு அதிலும் இரவு நெடுநேரமாகியும் நீடித்துக் கொண்டிருந்ததால் பலருக்கும் கிட்டத்தட்ட உறக்கம்வந்து உலுக்கிய நிலைமை.  மேடையில் வீராவேசமாக பேசிக்கொண்டிருந்த டி.வி.என். பேச்சுக்கு இடையூறு ஏற்பட்டது. உடனே அவர் கோபத்தின் எல்லைக்கே போய் மிக உரத்த குரலில், "ஏன் சிரிக்கிறீர்கள்?, அண்ணா கூட சிரிக்கிறார் என் பேச்சில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது உயிரைக் கொடுத்து உயர்வான கருத்துகளை எடுத்து வைக்கிறேன் (மீண்டும் அவையில் சிரிப்பு) இப்படிச் சிரிப்பதுதான் நாகரிகமா?' என்றெல்லாம் அண்ணாவையும், சம்பத்தையும் பார்த்துக் கேட்டார். இருவரிடமும் டி.வி.என். மிகுந்த மரியாதையும் பாசமும் உள்ளவர்.  பின்னர் அண்ணா மேடைக்கு வந்து நாராயணசாமியை மேலும் பேசுமாறு உற்சாகப்படுத்தி அனைவரையும் கேட்க வைத்தார். அதற்குப் பின்னர் ஒருமணி நேரம் அண்ணா கருத்துமழை பொழிந்தார். எழுந்த கரவொலியில் தூங்கியவர்களும் விழித்தமர்ந்து விறுவிறுப்போடு அண்ணாவின் உரையையும், அடுத்து நன்றி தெரிவித்துப் பேசிய சம்பத்தின் உரையையும் கேட்டு மகிழ்ந்தனர்.

Kannan Natarajan

unread,
Nov 12, 2011, 11:35:11 PM11/12/11
to Min Thamizh

சேலம் மாநாட்டில் கட்சி பெயர் மாற்றம் பெற்ற பிறகு கூடிய முதல் திராவிடக் கழக மாநில மாநாடு 1945இல் செப்டம்பர் 29, 30 தேதிகளில் திருச்சி புத்தூரில் மாபெரும் பந்தல் போட்டு ஏற்பாடாயிற்று. தலைவர்கள் முதல் நாளே வந்து சேர்ந்தனர். டி.பி. வேதாசலம் மாளிகையில் பெரியார், அண்ணா, சம்பத் ஆகியோர் தங்கி இருந்தனர். அன்று திருச்சியில் கடும் மழை பெய்தது. மாநாட்டுப் பந்தல் ஒழுக ஆரம்பித்தது. தங்கி இருந்த கழகக் குடும்பத்தவர்கள் குழந்தை குட்டிகளுடன் அங்குமிங்குமாக ஓட ஆரம்பித்து, மழையால் திடலே சேறும் சகதியுமானது. தண்ணீர் தெப்பமாக நின்றது.

எப்படியும் மாநாட்டை நடத்தியாக வேண்டுமென்று பெரியார் கட்டளையிட்டுவிட்டார். டி.பி. வேதாசலம், அன்பில் தர்மலிங்கம், துறையூர் அழகுமுத்து, பிரான்சிஸ் தவமணிராஜன், கருணாநந்தம், அரங்கண்ணல், பராங்குசம், திருச்சி
ராஜி போன்ற தோழர்கள் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் மண்வெட்டி, கடப்பாறை முதலிய கருவிகளுடன் திடலில் இருந்த தண்ணீரை வடிக்கத் தீவிரமாக இறங்கினர். எம்.ஆர்.ராதா இடுப்பு வேட்டியைக் கழற்றி தலைப்பாகை கட்டிக் கொண்டு அரைக்கால் சட்டையில் மண்வெட்டியுடன் இறங்கினார்.

இவற்றையெல்லாம் கேள்விப்பட்டு பெரியார், மணியம்மை, அண்ணா, சம்பத் ஆகியோரும் அங்கு வந்து விட்டனர். மேடு பள்ளம் நிறைந்த சமுதாயத்தைச் செப்பனிடும் பெரும்பணியில் ஈடுபட்டிருந்த பெரியார், அதே ஆர்வத்தோடு மாநாட்டு மைதானத்தையும் சமப்படுத்துவதில் மண்வெட்டியுடன் இறங்கினார். அண்ணா, சம்பத், மணியம்மை எல்லோருமே மழையில் நனைந்தபடி மைதானத்தைத் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மாநாடு மிக எழுச்சியோடு நடைபெற்றது. தலைவர்கள் பேச்சுகளைவிட கருப்புச் சட்டைத் தலைவர் சம்பத்தின் பேச்சு சற்றுக் காரசாரமாக அமைந்தது. இக்கூட்டத்தில் கருப்புச் சட்டை அணிவது பற்றிப் பெரியார் வலியுறுத்திப் பேசினார்.

"நமது இழிநிலையை விளக்கிட எப்போதுமே கருப்புச் சட்டை அணியலாம். பெண்டிரும் கருப்புத் துணியில் புடவை
ரவிக்கை அணியலாம். கூட்டங்களில் இனி மாலைக்குப் பதில் கருப்புத் துணிகளே போடலாம். இந்தியாவில் பிற இடங்களில் ராமதண்டு, அனுமான் சைன்யம், செஞ்சட்டை, நீலச்சட்டை, இந்துஸ்தான் சேவாதள் இருப்பது போல் இங்கும் கருப்புச் சட்டைப்படை தமிழ்நாடு முழுதும் இருக்கும்''.

அக்காலத்தில் தஞ்சை, சேலம், மதுரை போன்ற மாவட்டங்களில் மாதத்திற்கு இரண்டு மூன்று முறையேனும் கழகக் கூட்டங்கள் நடந்தபடியாக இருக்கும்.1946 ஜனவரி முதல் வாரத்தில் திருத்துறைப்பூண்டியில் திராவிட மாணவர் மாநாடு காலையிலும், கருப்புச் சட்டைப் படை மாநாடு பிற்பகலிலும் நடைபெற்றது. வரவேற்புக் குழுத் தலைவர் எஸ் கருணாநந்தம். (அப்போதுதான் அவருக்கு தஞ்சை ஆர்.எம்.எஸ். சார்ட்டர் பணிக்கான நியமனக் கடிதம் வந்திருந்தது.) மாநாட்டுப் பணிகளில் எஸ்.கே. சாமி, அரங்கண்ணல், யாகூப், காஜாபீர் மற்றும் தோழர்கள் பம்பரமாகச் சுழன்று பணியாற்றினர். திருத்துறைப் பூண்டி காங்கிரஸ் கோட்டை என்பார்கள். அந்தக் கோட்டையே அதிரும் வண்ணம் கழக மாநாடு.

உடல் நலக் குறைவு காரணமாக பெரியார் வருவதற்கில்லை என்றும் அண்ணா அவசியம் கலந்து கொள்வாரென்றும் மாநாட்டு நிர்வாகிகளுக்குத் தகவல் வந்தது. தலைவர்களை வரவேற்க
ரயிலடியில் கூட்டம் திரண்டிருந்தது. ரயிலில் இருந்து ஈ.வெ.கி சம்பத், நெடுஞ்செழியன், வீரமணி, தவமணிராஜன், அ. திராவிடமணி ஆகியோர் இறங்கினர். வாழ்த்துகள் முழங்கின. கறுப்புப் போர்வையில் குளிரில் நடுங்கியபடி ஓர் உருவம் இறுதியில் வண்டியை விட்டு இறங்கியது. அவர் மு. கருணாநிதி, "குடியரசு" துணை ஆசிரியர். கடுமையான அம்மை நோய் கண்டு உடல் கொதித்தது.

"மாநாட்டுக்கு வந்தே தீருவேன்'' என்று மு.க. வந்து சேர்ந்தார்.

அண்ணாவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்தனர். "எங்கே வரப்போகிறார்? இப்போதும் காலை வாரி விடத்தான் போகிறார்" என்று தோழர்கள் சலிப்போடு பேசிக் கொண்டிருந்தனர். அடுத்து வந்த
ரயிலில் அண்ணா வந்து இறங்குகிறார். ஒரு குதிரை வண்டியில் மாநாட்டுப் பந்தலை அடைகிறார். அண்ணாவைக் கண்டதும் யாருக்கும் தலைகால் புரியவில்லை. ஒரே உற்சாகம். வாழ்த்து முழக்கம்.

மாநாட்டு நிர்வாகிகளிடம், "ஏன் இப்போது தான் சுவரொட்டிகளை ஒட்டுகிறீர்கள்?'' என்று அண்ணா கேட்டார். பலரும் மெ
னமாக இருந்தனர். அரங்கண்ணல் மட்டும் சற்று துணிவாகவே சொன்னார். "இதற்கு முன் இரண்டு மூன்று கூட்டங்கள் விளம்பரம் செய்தும் நீங்கள் வராததால் காங்கிரஸ்காரர்கள் கேலி செய்தார்கள். அதனால்...'' என்று மழுப்பினார்.

சம்பத் தலைமையில் ஊர்வலம். மாநாட்டுப் பந்தலை நோக்கி ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திரண்டு வந்தனர். அண்ணாவும் நடந்தே வந்தது, தோழர்களுக்கு உற்சாகத்தைத் தந்தது. காங்கிரசாரின் கடும் எதிர்ப்புக்கிடையே மாநாடு வெற்றியுடன் நடைபெற்றது. கடும் காய்ச்சலிலும் கருணாநிதி தனது பாணியில் அழகாகவும் ஆவேசத்தோடும் பேசினார்.

இசையில் சிறந்தது எது?

இசைக் கலையைப் பொறுத்தவரை அண்ணாவுக்கும், சம்பத்துக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இருவரும் தங்களது இளமைப் பருவத்தில் மிருதங்கத்தில் மனதைப் பறிகொடுத்தவர்கள்.

கலை, இலக்கியம், அரசியல், விஞ்ஞானம் போன்ற பல துறைகளையும் அண்ணாவின் எண்ணத் தராசில் போட்டு எடை காண்பார் சம்பத்.

ஒரு நாள், இசையில் உங்களுக்கு மிகவும் பிடித்தமானது எது? என்ற சம்பத் கேட்டபோது, "நாயன இசையே உலகில் சிறந்தது தம்பி'' என்று அண்ணா குறிப்பிட்டார்.

திருவாரூர் கீழ்வடம்போக்கித் தெருவில் குப்புசாமி நாயனக்காரரின் மூத்த மகன் தட்சணாமூர்த்திக்கு அண்ணா தலைமையில் திருமணம். அது ஒரு புகழ் பெற்ற இசைக் குடும்பம். திருவாரூர் சங்கீத மும்மணிகள் தியாகையர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் தோன்றிய இடம். அதனால்தானோ என்னவோ, அன்றைய திருமண விழாவில் அண்ணா மணமக்களுக்குச் சொன்ன அறிவுரையைவிட இசை பற்றிய விரிவுரை ஓங்கி இருந்தது.

தம்பி சம்பத்தைத் தம் பக்கத்தில் வைத்துக்கொண்டு பேசலானார். தொடக்கத்திலேயே சொன்னார்:-

"இந்த மணவிழாவிற்கு நான் வந்து கொண்டிருந்தபோது உடனிருந்த என் தம்பி சம்பத் கேட்டான், "உங்களுக்கு இசையிலே மிகவும் பிடித்தது எது?" என்று. நான், "நாயன இசை"யென்றேன். இது புகழ் பெற்ற திருவாரூர் குப்புசாமி நாயனக்காரரின் இல்லத் திருமணம். அதற்காகக்கூட நான் சொல்லவில்லை. எனக்குப் பிடித்தது நாயன இசை தான்'' இவ்வாறு முகவுரை சொல்லிவிட்டு இசை பற்றிய விளக்கத்திற்கு வந்தார் அண்ணா.

"இசை என்றால் இசையவைப்பது. அதனால் தான் தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை பாடிய நால்வர், ஆழ்வார்கள் காலத்திலிருந்து,
ராமலிங்க அடிகள் காலம் வரை தமிழ்ப் பண்களின் அடிப்படையில் இசைப் பாடல்களாகவே இயற்றி தமது சைவ அல்லது வைணவ சித்தாந்தங்களுக்கு மக்களை இசைய வைத்தனர்'' என்பதாக ராக ஆலாபனை செய்யத் தொடங்கிய அண்ணா, பிர்காக்கள் சங்கதிகள் உதிர, மேலே மேலே உச்ச ஸ்தாயியில் சஞ்சாரம் செய்தார்.

இசையிலே உயர்ந்தது தமிழிசையே என்னும் பல்லவி, இசைக் கருவிகளில் உயர்ந்தது நாயனமே என்னும் அனுபல்லவி, தவில் வாத்தியத்துக்கு இணை உலகிலேயே இல்லையெனச் சரணம் சொல்லி, நிரவல் சுரப் பிரஸ்தாரத்துடன் ஆரோகண அவரோகணம் செய்து, கடைசியில் முத்தாய்ப்பு வைத்தார் அண்ணா. அன்றைக்கு அண்ணாவின் பேச்சுக் கச்சேரி, பாட்டுக் கச்சேரியாய் அமைந்தது.

நாயனக் கருவிக்கு நிகர் இல்லை. அதைக் கையாள்வதற்குத் தனித்திறமை வேண்டும். நமது திருவாவடுதுறை
ராஜரத்தினம் பிள்ளை போன்றவர்களின் சுயமரியாதை உணர்வினால்தான் நாயனக்காரர்களின் நிலை இன்று மேம்பாடடைந்து வருகிறது என்று குறிப்பிட்டார்.

குற்றாலத்தில் அண்ணா, சம்பத்சீசனில் குற்றாலம் செல்ல வேண்டுமென்று அண்ணாவுக்குக் கொள்ளை ஆசை. கோவில்பட்டி வள்ளிமுத்து கூட அடிக்கடி அழைப்பார். நெல்லை செல்லும்பொழுது கே.வி.கே. சாமி நினைவுபடுத்துவார். தொல்லை மிகுந்த
லட்சிய வாழ்க்கையில் இந்த உல்லாசங்களுக்கு இடமேது?

கே.ஆர்.
ராமசாமிக்கு ஒரு யோசனை தோன்றியது. அண்ணாவையும், சம்பத்தையும் குற்றாலத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்ற தம் எண்ணத்தை அண்ணாவிடம் வெளியிட்டபோது, "தம்பி சம்பத் மாணவர் இயக்கத்தில் தீவிரம் காட்டுகிறான். அவன் குடந்தை வருகிறபோது சொல். நாம் போய் வரலாம்'' என்றார் அண்ணா. அண்ணா, கே.ஆர்.ஆர்., சம்பத் மூவரும் இணைந்துவிட்டால் மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விடுவார்கள். சுற்றுலா என்றால் கேட்கவா வேண்டும்?

சிந்தையைக் குளிப்பாட்டும் "சில்"லென்ற மென் தென்றல் தவழ்ந்துவரும் குளிர் குற்றாலம் சென்றனர் மூவரும். அவர்களோடு நகைச்சுவை நண்பர் சி.வி.
ராஜகோபாலும் சேர்ந்து கொண்டார். பணிவிடைக்குப் பழம்பெரும் சுயமரியாதை இயக்கத் தலைவர் பொன்னம்பலனார் உடனிருக்கக் குறைவேது?

தென்பாண்டி மண்ணின் சிறப்புகளுக்கு ஆலோலம் பாடும் குற்றாலத் தேனருவி. ஆல விழுதிறங்கும் பான்மையில், ஆடிச் சலசலக்கும் ஐந்தருவிக் காட்சியை அவர்கள் கண்டுகளித்தனர். வெள்ளியினால் செய்த வெகு நீளச் சங்கிலி போல் வெள்ளருவி துள்ளிவரும் காட்சியைக் கண்டு
ரசித்தனர். உடல்வலி போக்க எண்ணெய் தேய்த்து அருவியில் குளித்தெழுந்தால் உடலுக்குக் குளிர்ச்சி; உள்ளத்திற்கும் மகிழ்ச்சி.

தம்பி சம்பத்தை உட்கார வைத்து அண்ணா எண்ணெய் தேய்த்து விடுகிறார். உடன்பிறந்த அண்ணனுக்குக் கூட அந்த அளவு அக்கறை இருக்காது. தம்பி சம்பத் தளிர்க் கரங்களால் அண்ணனுக்கு எண்ணெய் தேய்த்து விடுகிறார். மகிழ்ச்சியும் குதூகுலமும் போட்டியிடுகின்றன. அண்ணாவின் நகைக்சுவை தென்றலினும் இனிமை காட்டுகிறது. அனைவரும் ஐந்தருவியில் நீராடுகின்றனர். அண்ணாவுக்குத் தண்ணீரில் இறங்கவே பயம். அவரை
ராமசாமியும், ராஜகோபாலும் தூக்கி வந்து அருவியில் நிறுத்துகின்றனர். அண்ணாவோ பதறுகிறார். பாய்ந்து விளையாடும் தம்பி சம்பத்துக்குத் தீங்கேதும் ஏற்பட்டுவிடக்கூடாதென்று கவனம் முழுவதையும் தம்பியின் பக்கம் திருப்புகிறார்.

"எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்று தைரியம் கூறுகிறார் கே.ஆர்.ஆர்.

"அண்ணா இந்த இன்பமான சூழ்நிலையில் கே.ஆர்.ஆரின் இசை கேட்டால் எப்படி இருக்கும்?'' என்கிறார் சம்பத். உடனே எட்டுக்கட்டை சுருதியில் கே.ஆர்.ஆர்.
ராக ஆலாபனை செய்கிறார். சுற்றுலா வந்தவர்கள் சுகமாக இசையில் நீந்துகின்றனர். அண்ணாவுக்கு இத்தகைய அனுபவங்கள் தனிச் சுகம் தரும்.அப்போது அங்கே மனிதனை மனிதன் இழுத்து செல்லும் கைரிக்ஷாக்கள் உண்டு. ஆனந்தத்திலும், ஆர்வம் மிகுதியிலும் அண்ணா சம்பத்தைத் தூக்கி ரிக்ஷாவில் வைத்துத் தாமே இழுக்கிறார். சம்பத் குதித்திறங்கி அண்ணாவை ரிக்ஷாவில் ஏற வைத்து அவர் இழுக்கிறார். இப்படி ரிக்ஷா ஓட்டிக்குச் சந்தர்ப்பம் தராமலே இருவரும் மாற்றி மாற்றி ரிக்ஷா இழுப்பதை அனைவரும் வேடிக்கை பார்க்கின்றனர். ஒரு நாளல்ல, இரண்டு நாட்கள் குற்றால இன்பச் சுற்றுலா குதூகலம் தந்தது. காஞ்சி திரும்பிய அண்ணா, "குற்றாலம் கண்டோம்" என அந்தக் குதூகலத்தைக் கட்டுரையாகவும் தீட்டி மகிழ்ந்தார்.

Kannan Natarajan

unread,
Nov 12, 2011, 11:45:18 PM11/12/11
to Min Thamizh

ஏ.பி. ஜனார்த்தனம், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பம்மல் சம்பந்த முதலியார், என்.எஸ். கிருஷ்ணன், எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.ஆர். ராதா

நேரடி அரசியல்

லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் எம்.கே. தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. நாடே சோகத்தில் ஆழ்ந்தது. பெரியார் மனம் வெதும்பினார். அண்ணா அதிர்ச்சியுற்றார். குடியரசு, திராவிட நாடு ஏடுகளில் இரு கலைஞர்களையும் விடுதலை செய்யுமாறு அறிக்கைகள், கட்டுரைகள் வெளிவந்தன. கழகக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கே.ஆர்.ஆர். நாடக சபையின் நாடகங்களில் கிருஷ்ணன், பாகவதர் விடுவிக்கப்பட வேண்டுமெனும் கோரிக்கையை காட்சியாக்கி நடித்தனர். கழகத்தின் பிரச்சார வலிமை கருதி பெரியார் மீண்டும் விடுதலை நாளேட்டினைத் தொடங்கினார். இதன் மேலாளர் பொறுப்பை சம்பத்திடம் ஒப்படைத்தார். திராவிடர் மாணவர் கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு நீடாமங்கலத்தில் 1946 பிப்ரவரி 23, 24 நாட்களில் நடைபெற்றது. இந்தி எதிர்ப்புப் போரில் உயிர்த் தியாகம் செய்த தாளமுத்து நடராசன் பெயர்களில் மாநாட்டுப் பந்தல் அமைந்திருந்தது. இந்த மாநாட்டிற்கு சிவகங்கை மாணவர் தோழர் சத்தியேந்திரனைத் தலைமை தாங்கி நடத்துமாறு ஈ.வெ.கி. சம்பத் முன்மொழிந்து பேசினார். (சிவகங்கை சத்தியேந்திரன் குடும்பம் சுயமரியாதைக் குடும்பம், பிற்காலத்தில் அவர் மாவட்ட நீதிபதியானார். அவருடைய அண்ணன் ராஜசேகரன் காமராஜர் ஆட்சிக் காலத்தில் சட்டத்துறைச் செயலாளராக இருந்தார்.) மாநாட்டில் தோழர்கள் நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், ஜனார்த்தனன், இளம்வழுதி, தவமணிராஜன், சொக்கப்பா, கி.வீரமணி, என்.எஸ். இளங்கோ ஆகியோரும் கழகத்தின் மூத்த தலைவர்களான கே.கே. நீலமேகம், பி. சின்னத்தம்பி, பாலசுந்தரம் (பாவலர்) ஆகியோரும் உரை நிகழ்த்தினர். இந்த மாநாட்டின் சிறப்பே, திராவிட மாணவர் கழகப் பிரிவு காலையில் கூடி, மாணவர் கழகத்தின் தலைவராக ஈ.வெ.கி. சம்பத்தை ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்ததுதான். செயலாளர் இளம்வழுதி (அண்ணாமலை நகர்) இணைச் செயலாளர் மா. குமாரசாமி (சென்னை) பொருளாளர் சொக்கப்பா (குடந்தை) ஆகியோரும் உடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில் கே.கே. நீலமேகம் பேசுகையில், "பெரியாரின் வாரிசு தம்பி சம்பத் இன்று நேரடி அரசியலுக்கு வந்துவிட்டார். வாழ்க இளம்தலைவர்'' என்று குறிப்பிடுகையில் மாநாட்டுப் பந்தல் அதிரும் வண்ணம் மகிழ்ச்சி ஆரவாரமும் கரவொலியும் ஏற்பட்டன. மாநாட்டின் இறுதியில் ஏ. ராமசாமி கவுண்டர், அண்ணா, பெரியார் ஆகியோர் சிறப்புரைகளை நிகழ்த்தினர். முதலமைச்சராக இருந்த பிரகாசம் கொடுங்கோலாட்சி புரிந்து ஆந்திராவைத் தனியே பிரிக்க முயன்றார். அப்போது தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக இருந்த காமராசருக்கும் பிரகாசத்திற்கும் சிறு மோதல் ஏற்பட்டது. பிரகாசத்தை அகற்ற காமராசரின் ஆற்றல் பயன்பட வேண்டுமென்று பெரியார் கருத்துக் கூறினார். தெலுங்கு பேசும் தமிழரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரை முதல்வராக்கினார் காமராசர். பிரகாசம் எதிர்வரிசையில் அமர்ந்து ஆட்சிக்குத் தொல்லை கொடுத்தார். பெரியார், அண்ணாவின் பெருமுயற்சியால் 25.4.47இல் என்.எஸ். கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர் விடுதலையாகினர். கழகத்தவர் களிப்புற்று விழாக் கொண்டாடினர். ஈரோட்டில் சம்பத் தலைமையில் மகிழ்ச்சி விழா நடைபெற்றது. இவ்வாண்டு மே முதல் நாள் தஞ்சையில் கே.ஆர். ராமசாமி நாடகக்குழுவினரின் "வேலைக்காரி" 150ஆம் நாடக விழா நடைபெற்றபோது எதிர்பாராத வகையில் திடீரென பாகவதரும், என்.எஸ்.கேயும் மேடையில் தோன்றியதும் மக்கள் பெரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். யாருக்கும் அறிவிக்காமலே அண்ணாவும், சம்பத்தும் இரு கலைமணிகளையும் நாடகத்திற்கு அழைத்து வந்தனர். இருவரும் நாடகத்தைப் பாராட்டிப் பேசினர். இந்த நிகழ்ச்சிக்கு அண்ணாவால் "அக்ரகாரத்து அதிசய மனிதர்" என்று பாராட்டப்பட்ட வ.ரா. தலைமை தாங்கினார்.

கலைவாணர் பட்டம்:-


சென்னைச் சட்டசபைத் தலைவரின் தலைமையில் நடைபெற்ற
ராஜா கல்விக் கழகக் கூட்டத்தில் என்.எஸ். கிருஷ்ணனுக்குக் "கலைவாணர்" என்னும் பட்டத்தை நாடக மேதை பம்பல் சம்பந்த முதலியார் வழங்கினார். நிகழ்ச்சியில் அண்ணா, சம்பத், என்.வி.நடராசன் ஆகியோர் கலந்து கொண்டனர். "போர் வாள்" வார ஏட்டை காஞ்சி மணிமொழியார் தொடங்கினார். சம்பத்திற்கு மிகவும் பிடித்தமானது பொதுக் கூட்டம். மாநாடுகளைவிடக் கிராமங்களுக்குச் சென்று ஆதி திராவிடக் குடியிருப்புகளில் பெட்ரோமாஸ் லைட்டுடன் கூட்டம் பேசுவது, அங்கே, திருமணங்களை நடத்தி வைப்பது ஆகியவற்றில் தனி உற்சாகம் உண்டு. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் குடிசைகளில் தொண்டர்களோடு தொண்டராக அமர்ந்து பழைய தட்டுகளில் தமக்குப் பிடித்தமான மீன் குழம்பு, நண்டு முதலியவற்றை விரும்பிச் சாப்பிடுவார். 30, 40 பேர் கூடும் கூட்டத்தில் கூட பெட்ரோமாஸ் லைட்டை வைத்து பிரச்சாரம் ஆரம்பமாகிவிடும். ஏ.பி. சனார்த்தனம், கருணானந்தம், சங்கரையா போன்றவர்கள் சம்பத்துக்குப் பாதுகாப்பாக வருவார்கள்.

கறுப்புச் சட்டைப் படை மாநாடு:-


மதுரையில் பிரமாண்டமாக நடைபெறவிருக்கிற கறுப்புச் சட்டை மாநாட்டிற்குத் தமிழகம் முழுவதுமிருந்தும் தொண்டர்களை ஏராளமாகத் திரட்ட வேண்டுமென்று பெரியார் விடுத்த அறிக்கையினை ஏற்று, மாவட்ட வாரியாக கருஞ்சட்டைப் படையின் ஆலோசனைக் கூட்டங்கள் வரிசையாக நடைபெற்றன. அமைப்பாளர்களான சம்பத்தும், கருணானந்தமும் நாள்தோறும் சுற்றுப்பயணம் செய்து, அனைத்து மாவட்டங்களிலும் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றனர். மாவட்டங்களில் கறுப்புச் சட்டைப் படைக்கு எழுந்த பேராதரவு கண்டு சம்பத் புது உற்சாகம் பெற்றார். எப்படியும்
லட்சக் கணக்கான கறுப்புச் சட்டை வீரர்கள் மதுரையில் திரளுவார்கள் என்னும் நம்பிக்கையை பெரியாரிடம் தெரிவித்தார். மாநாட்டுப் பணிகள் தீவிரமடைந்தன. மதுரை மாவட்டச் செயல் வீரர் மதுரை முத்து மாநாட்டிற்கான பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டிருந்தார். அய்யாசாமி போன்ற தோழர்கள் அவருக்குத் துணையாக நின்றனர். மதுரை ஷெனாய்நகர் அப்போதுதான் சிறு சிறு மாளிகைகளோடு உருவாகிக் கொண்டிருந்தது. மதுரை தியாகராயநகரில் வைகையாற்றின் பாலத்திற்குக் கீழ்ப்புறம், இதுவரை எந்த மாநாட்டிலும் காணாத அளவிற்குக் கண்ணுக்கெட்டிய தூரம் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. 1946ஆம் ஆண்டு மே 11, 12 (சனி,ஞாயிறு) நாட்களில் முதலாம் மாநிலக் கறுப்புச் சட்டைப்படை மாநாடு பிரமாண்டமாகக் கூடியது. கூடல் மாநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கு நோக்கினும் கழகக் கொடிகள். கறுப்புச் சட்டைகள். மாநாட்டிற்கு முன்னதாக மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. கறுப்புச் சட்டை அணிந்து 80 ஆயிரம் தோழர்கள், தோழியர்கள் வீர அணிவகுப்பு நடத்தி வந்தனர். இந்த மாபெரும் ஊர்வலத்தை தோழர்கள் ஈ.வெ.கி. சம்பத், க. அன்பழகன், இரெ. இளம்வழுதி ஆகியோர் திறந்த ஜீப்பில் வழிநடத்தி வந்தனர். அந்தந்த மாவட்டப் படைத்தளபதியின் தலைமையில் மாவட்ட வாரியாக கறுப்புச் சட்டைப்படை, ராணுவ அணி வகுப்புப் போல வீர நடைபோட்டு வந்தது. ஊர்வலம் மாநாட்டுப் பந்தலை அடைந்ததும் கறுப்புச் சட்டைப் படையின் தலைமை அமைப்பாளர் ஈ.வெ.கி. சம்பத் இப்படை அமைக்கப்பட்ட நோக்கத்தை விரிவாகத் தமது உரையில் எடுத்துரைத்தார். ஊர்வலத்திற்குப்பின் என். அர்ச்சுனன் கழகக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இம்மாநாட்டின் தலைவர் பெரியார். திறப்பாளர் அண்ணா. திராவிட நாடு படத்திறப்பாளர் ஈரோடு எஸ்.ஆர். காந்தி அம்மையார் (பெரியார் தங்கை மகள், மாப்பிள்ளை நாயக்கர் மகள்). மாநிலம் முழுவதுமிருந்தும் வருகை தந்திருந்த கழகப் பேச்சாளர்களும், சுயமரியாதை இயக்க வீரர்களும் சொற்பொழிவாற்றவிருந்தனர். அன்றிரவு அண்ணாவின், "அவன் பித்தனா?" நாடகமும் எம்.ஆர். ராதாவின் "போர்வாள்" நாடகமும் நடைபெறுவதாய் இருந்தன. பகலில் மாநாடு பரபரப்போடு தொடங்கியபோது, எதிரிகள் மாநாட்டுப் பெரும்பந்தலை நெருப்பிட்டுக் கொளுத்தினர். பெரும் பீதியோடு தாய்மார்களும், குழந்தைகளும் திசை தடுமாறி ஓடும்போது குண்டர்கள் தாக்கினர். கருஞ்சட்டைப்படை வீரர்கள் குண்டர்களை எதிர்த்துத் தாக்கி தாய்மார்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். வைகைக் காற்றின் வேகத்திற்கேற்ப சிறிது நேரத்திற்குள்ளாகவே மாநாட்டுப் பந்தலின் பெரும்பகுதி எரிந்துவிட்டது. பெரியாரும் பிற தலைவர்களும் அவரவர் தங்கியிருந்த இடத்திற்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். நகரம் முழுவதும் கடும் பரபரப்பு, பதற்ற நிலை. மதுரை நகரமே அமளிக் காடாயிற்று. மாநாட்டுத் தலைவர்களும், முக்கிய தொண்டர்களும், ஷெனாய்நகர் பகுதியில் தங்கியிருந்தனர். அந்தப் பகுதியில் சற்று அதிகமாகவே அமளிகள் நடந்தன. பெரியாரை மாடியில் தங்க வைத்துவிட்டு கீழே எல்லா முக்கிய பிரமுகர்களும் ஆளுக்கொரு கம்பும், தடியுமாகச் சுற்றியிருந்து காவல் காத்தனர். தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு முண்டா பனியனுடன் கையில் ஒரு பெரிய தடியை தூக்கிக் கொண்டு காலிக் கும்பலை நோக்கி ஆவேசமாக ஒடினார் ஈ.வெ.கி. சம்பத். வழியில் எவனோ ஒருவன் எதிர்ப்புக் கூச்சலிட்டபடி சைக்கிளில் பறந்து வந்தான். அவனைத் தோழர்கள் மரத்திலே கட்டி வைத்தனர். ஆத்திரம் கொண்ட சம்பத் அவன் சைக்கிளைத் தூக்கி அருகில் இருந்த பாழும் கிணற்றுக்குள் போட்டார். மற்றொரு வெறிக் கும்பல் நெருங்கிக் கொண்டிருந்தது. நெடுஞ்செழியனும் வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு சம்பத்தோடு ஓடினார். ஏராளமானவர்கள் எதிரில் வருவதைப் பார்த்து காலிக் கும்பல் திசைக்கொருவராய் சிதறி ஓடியது. "நிறையப் பேரை கூட்டி வருகிறோம், ஒரு கை பார்த்து விடுகிறோம்'' என்று சொல்லிக் கொண்டே அந்தக் குண்டர்கள் ஓடினர். வழக்கம்போல் அவர்கள் காலிகளை வேடிக்கை பார்த்தனர். மாநாட்டுப் பந்தலைக் கொளுத்திய கொடுங் கும்பல் ஆயுதங்கள், தீப்பந்தங்களுடன் பெரியார் தங்கியிருந்த மாளிகை நோக்கி வரலாயினர். கருஞ்சட்டைப் படை ஆவேசத்தோடு அணிவகுத்து நிற்க சம்பத், நெடுஞ்செழியன், இளம்வழுதி, மதியழகன், கருணாநந்தம், அரங்கண்ணல், அன்பில், மன்னை, கே.கே.என். ஆகியோரும் ஆவேசத்தோடு அங்கே குழுமினர்.

பெரும் முயற்சி வீணாயிற்றே என்ற கவலையோடு, பெரியார் அடுத்து நடக்கவேண்டிய பணிகளை ஆலோசித்துக் கொண்டிருந்தார். வெளியில் கலவர வெறிக் கூச்சல் கேட்டபடியிருந்தது. நிலைமையறிந்து காவல்துறையினர் மாளிகைமுன் குவிந்தனர். அவர்களையும் மீறிக்கொண்டு வெறித்தாண்டவத்துடன் காவல்துறையினரை அந்தக் கும்பல் நெருங்கி வரவே துப்பாக்கிப் பிரயோகத்திற்கு உத்தரவிடப்பட்டது. வேட்டுச் சத்தம் கேட்டது. இரண்டு பேர் சுருண்டு விழுந்தனர். காவல்துறையினர் துரத்தவே குண்டர்கள் ஓடி ஒளிந்தனர். அப்போது அங்கு
ராதாவும், காஞ்சி கல்யாணசுந்தரமும் சிறு படையுடன் வந்தனர். ராதா கையிலிருந்த துப்பாக்கியைக் காட்டியபடி, "எவரும் நெருங்க முடியாது. சுட்டுப் பொசுக்கிடுவேன்'' என்று பலத்த குரல் கொடுத்தபடி வந்து சேர்ந்தார். நள்ளிரவில் ஒரு வழியாக அமைதி திரும்பியது. காலையில் இருந்து உணவில்லாததால் பெரியார் உட்பட அனைவருக்கும் களைப்பு. எல்லோரும் அமைதியாக ஊர் திரும்புமாறு பெரியார் கேட்டுக் கொண்டார். தமிழக முதலமைச்சராக இருந்தார் ஆந்திர கேசரி பிரகாசம். அவர் மதுரைச் சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், பெரியாருக்கு அனைத்துப் பாதுகாப்பும் கொடுக்கும்படி உத்தரவிட்டதாக மறுநாள் பத்திரிகையில் கல்வியமைச்சர் அவிநாசிலிங்கம் செட்டியாரின் பேட்டி இடம் பெற்றிருந்தது.

பெரியார் தமது குடும்பத்தார், தோழர்களுடன் ஈரோடு பயணமானார். எப்போதும் பெரியார்
ரயிலில் மூன்றாம் வகுப்பில்தான் பயணம் செய்வார். ரயில்கள் முழுவதும் கறுப்புச் சட்டை வீரர்களே காணப்பட்டனர். வீரகாவியம் படைத்த இந்த மதுரை மாநாட்டிற்கு எதிர்பாராத வகையில் அண்ணா வரவில்லை. திருச்சிவரை வந்து திரும்பி தஞ்சைக்குச் சென்று கே.ஆர்.ஆர். நாடக மன்றத்தில் தங்கிவிட்டார். இதனால் பெரியார் கோபமடைந்திருந்தார். அண்ணா வராதது சம்பத் உள்பட தோழர்களுக்கும் கடும் ஏமாற்றத்தைத் தந்தது. மதுரையிலிருந்தபடி, சம்பத் அண்ணாவைச் சந்திக்க கருணாநந்தத்துடன் தஞ்சை புறப்பட்டார்.

Kannan Natarajan

unread,
Nov 21, 2011, 6:29:02 AM11/21/11
to Min Thamizh

பெரும் முயற்சி வீணாயிற்றே என்ற கவலையோடு, பெரியார் அடுத்து நடக்கவேண்டிய பணிகளை ஆலோசித்துக் கொண்டிருந்தார். நிலைமையறிந்து காவல்துறையினர் மாளிகைமுன் குவிந்தனர். அவர்களையும் மீறிக்கொண்டு வெறித்தாண்டவத்துடன் காவல்துறையினரை அந்தக் கும்பல் நெருங்கி வரவே துப்பாக்கிப் பிரயோகத்திற்கு உத்தரவிடப்பட்டது. வேட்டுச் சத்தம் கேட்டது. இரண்டு பேர் சுருண்டு விழுந்தனர். காவல்துறையினர் துரத்தவே குண்டர்கள் ஓடி ஒளிந்தனர்.  அப்போது அங்கு ராதாவும், காஞ்சி கல்யாணசுந்தரமும் சிறு குழுவினருடன் வந்தனர். ராதா கையிலிருந்த துப்பாக்கியைக் காட்டியபடி, "எவரும் நெருங்க முடியாது. சுட்டுப் பொசுக்கிடுவேன்'' என்று பலத்த குரல் கொடுத்தபடி வந்து சேர்ந்தார்.  நள்ளிரவில் ஒரு வழியாக அமைதி திரும்பியது. காலையில் இருந்து உணவில்லாததால் பெரியார் உட்பட அனைவருக்கும் களைப்பு. எல்லோரும் அமைதியாக ஊர் திரும்புமாறு பெரியார் கேட்டுக் கொண்டார்.  தமிழக முதலமைச்சராக இருந்தார் ஆந்திர கேசரி பிரகாசம். அவர் மதுரைச் சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், பெரியாருக்கு அனைத்துப் பாதுகாப்பும் கொடுக்கும்படி உத்தரவிட்டதாக மறுநாள் பத்திரிகையில் கல்வியமைச்சர் அவிநாசிலிங்கம் செட்டியாரின் பேட்டி இடம் பெற்றிருந்தது.  பெரியார் தமது குடும்பத்தார், தோழர்களுடன் ஈரோடு பயணமானார். எப்போதும் பெரியார் ரயிலில் மூன்றாம் வகுப்பில்தான் பயணம் செய்வார். ரயில்கள் முழுவதும் கறுப்புச் சட்டை வீரர்களே காணப்பட்டனர்.  வீரகாவியம் படைத்த இந்த மதுரை மாநாட்டிற்கு எதிர்பாராத வகையில் அண்ணா வரவில்லை. திருச்சிவரை வந்து திரும்பி தஞ்சைக்குச் சென்று கே.ஆர்.ஆர். நாடக மன்றத்தில் தங்கிவிட்டார். இதனால் பெரியார் கோபமடைந்திருந்தார். அண்ணா வராதது சம்பத் உள்பட தோழர்களுக்கு கடும் ஏமாற்றத்தைத் தந்தது. மதுரையிலிருந்தபடி, சம்பத் அண்ணாவைச் சந்திக்க கருணானந்தத்துடன் தஞ்சை புறப்பட்டார். 

சம்பத் விடுத்த முதல் அறிக்கை
:-

கறுப்புச்சட்டைப் படை அமைப்புப் பற்றி அதன் அமைப்பாளர்கள் ஈ.வெ.கி. சம்பத், எஸ். கருணானந்தம் ஆகியோர் கையெழுத்திட்டு 29.09.45 குடியரசு இதழில் ஓர் அறிவிப்பு வெளியாயிற்று. இதுவே, ஈ.வெ.கி. சம்பத் விடுத்த முதல் அறிக்கை. அதன் விவரம் வருமாறு:-  கறுப்புச்சட்டைப் படை அமைப்பு  திருச்சியில் 17வது மாகாண திராவிடர் கழக (ஜஸ்டிஸ் கட்சி) மாநாடு தீர்மானித்தபடி இயக்கத் தொண்டுக்கு கறுப்புசட்டைப் படை திரட்டும் வேலை துவக்கப்பட்டிருக்கிறது.  ஏறக்குறைய முழு நேரத் தொண்டர்களே பெரிதும் சேர்க்கப்படுவார்கள். ஆதலால் அதில் சேர சம்மதமுள்ள படை வீரர்கள் தங்கள் ஊர், பெயர், தகப்பன் பெயர், படிப்பு அளவு, வயது, தமது தகுதி திறமை ஆகியவைகளை அடியில் கண்ட விலாசத்துக்கு முதலில் தெரிவிக்க வேண்டுமாய் வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள்.  ஈ.வெ.கி. சம்பத், எஸ். கருணானந்தம், க.ச. படை தற்காலிக அமைப்பாளர்கள்.
   
கன்வென்ஷனும், கம்பல்ஷனும்:-
 

மதுரை கறுப்புச்சட்டை மாநாட்டுக்குப் பிறகு, தஞ்சை வந்து அண்ணாவைச் சந்தித்தார் சம்பத். அதற்குப் பிறகுதான் அவர் மதுரைக்கு வராததன் மர்மம் புரிந்தது. அண்ணாவுக்கு காலில் ஒரு கட்டி ஏற்பட்டு, அதை மற்றவர்களுக்குத் தெரியாமல் அறுவைச் சிகிச்சையும் செய்துகொண்டு நடக்க முடியாமல் வலியால் வேதனைப்பட்டார். அண்ணாவைத் தஞ்சையில் சம்பத் கண்டபோது உண்மையிலேயே அவரது வேதனை கண்டு துடித்தார். "நீங்கள் காஞ்சியிலேயே ஓய்வெடுத்திருக்கலாமே, ஏன் வந்தீர்கள்?'' என்று செல்லமாகக் கடிந்துகொண்டார். "இல்லை சம்பத், மதுரை மாநாட்டிற்கு எப்படியும் வந்துவிடுவது என்று புறப்பட்டேன். வேதனை தாளமுடியாது, திருச்சியில் ஊசி போட்டுக் கொண்டு தஞ்சை வந்துவிட்டேன். ஐயாவுக்கும், தோழர்களுக்கும் வருத்தமாகத்தான் இருக்கும். எனக்கும் என் உடல் வேதனையை விட மதுரை மாநாடு நடக்காது போயிற்றே என்னும் கவலைதான் அதிகமாக இருக்கிறது'' என்றார் அண்ணா.  மதுரையில் நடந்ததையெல்லாம் சம்பத் விவரமாகச் சொன்னார். மதுரைச் சம்பவங்களைக் கேள்விப்பட்டு துடிதுடித்துப்போன அண்ணா, "திராவிட நாடு மரண சாசனம்" என்று உணர்ச்சி மயமான கட்டுரையை எழுதினார். "இந்தக் கட்டுரையை மாநாட்டிற்கு முன் நீங்கள் எழுதி, நம் தோழர்கள் படித்திருப்பார்களானால் ஒன்று வெற்றி அல்லது வீர மரணம் என்னும் முடிவுக்கு வந்திருப்பார்கள். அத்தகைய வீரகாவியம் இது'' என்று மனம் நெகிழ்ந்தார் சம்பத். உடனடியாகக் கட்டுரை காஞ்சிபுரத்திற்கு அனுப்பப்பட்டது.  தஞ்சை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் சந்திரமோகன் நாடகத்திற்குத் தேதி கொடுத்துவிட்டதாகவும் குடந்தையில் சுயமரியாதை மாநாட்டில் பங்கேற்பதாகவும் சொன்ன அண்ணா, "இன்று ஓய்வெடுத்துக்கொண்டால் நாளை முதல் சுற்றுப்பயணம் செய்யலாம் சம்பத். நீ என்னோடு இரு'' என்று சொல்லிவிட்டார்.  சந்திரமோகன் நாடகத்தில் அண்ணாவால் நிற்கவோ, நடிக்கவோ முடியவில்லை. கால் வேதனை அதிகமிருந்ததால், அவரைத் தூக்கிக்கொண்டு போய் மேடையில் மடாதிபதியின் பீடத்தில் உட்கார வைப்பார்கள். பின்னர் திரை விலகும். பீடத்தில் அமர்ந்தபடியே அண்ணா காகபட்டராக நடித்து மக்களை மகிழ்வித்தார். சம்பத்தும் சிவாஜியாக நடித்து மக்களது பாராட்டைப் பெற்றார். 

15.12.1945இல் குடந்தை நகரில் திராவிடர் மாநாடும், சுயமரியாதை மாநாடும் நடைபெற்றது. சுயமரியாதை மாநாட்டிற்கு ஏ.வி.பி. ஆசைத்தம்பி தலைமை. பள்ளிப் படிப்பை முடித்த இரண்டே ஆண்டுகளில் ஆசைத்தம்பி
லட்சிய வீரரானார். விருதுநகர் பொதுக்கூட்டத்தில் அவர் பேச்சைக் கேட்ட பெரியார், குடந்தை மாநாட்டிற்கு அவரைத் தலைவர் ஆக்கிவிட்டார். குடந்தையில் ஆசைத்தம்பி பகுத்தறிவு வெடிகுண்டுகளை வீசி வெகு அழகாகப் பேசினார்.  பின்னர் பேசிய சம்பத்தும், அண்ணாவும் ஆசைத்தம்பியைப் பாராட்டினர். இம்மாநாட்டில், பெரியார், சம்பத், ஆசைத்தம்பி உள்பட அனைவரும் கறுப்புச்சட்டை அணிந்திருந்திருந்தனர். அந்த மேடையில் அண்ணா மட்டும் வெள்ளைச்சட்டையுடன் காட்சியளித்தார். இது பெரியாருக்கு உள்ளூர வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர் கோபமாய் இருந்ததை உடன் இருந்த தோழர்கள் உணர முடிந்தது.  அண்ணாவின் காதோரத்தில் கருணானந்தம் ஏதோ கிசுகிசுத்தார். "என்னண்ணா நீங்கள் கறுப்புச்சட்டை அணியவில்லையே?'' என்று அவர் கேட்டார். அதற்கு அண்ணா, "அதனால் என்னய்யா ஒன்றும் தப்பில்லை'' என்று கள்ளங்கபடமற்ற மனத்துடன் சொன்னார். அது ஒன்றும் தவறில்லை என்பது போல் அண்ணாவின் பதில் அமைந்திருந்தது. மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இரவு அண்ணாவின் நாடகமும் இனிமை சேர்த்தது. அவருக்கிருந்த உடல்நிலைக் குறைவிலும் சிரமப்பட்டு நடித்தார். மக்கள் மனம் கவர்ந்தார்.  நிகழ்ச்சிகள் முடிந்து பெரியார் விடைபெற்ற பொழுது மறைமுகமாக அண்ணாவைத் திட்டிப் பேசிவிட்டுப் புறப்பட்டார். அவரை ரயிலேற்றிவிட்டு வந்த நண்பர்கள், பெரியார் சொன்னதை அப்படியே ஒப்புவித்தார்கள்.  "நல்லாத் திட்டிப் போட்டேனுங்க குள்ளநரிங்கன்னு அழுத்தமாகவே பேசிப் போட்டேனுங்க. அப்புறம் என்னங்க, எவன் மேடையிலே பேசினாலும் கட்டாயம் கறுப்புச் சட்டை போட்டுக்கணும்னு நான் சொன்னா, கேட்காமே வெள்ளை வெளேர்னு சட்டை போட்டுக்கிட்டு வந்து நின்னா அவனுக்குத்தான் டிராமா, சினிமான்னு ஆப்புட்டுக்கிட்டது, இந்தச் சின்னத்தம்பிக்கு என்னங்க கேடு... நல்லாத் திட்டிப் போட்டேனுங்க...'' என்று பெரியார் ரயில் நிலையம் போகிறவரை, குதிரை வண்டியில் என்னென்னவெல்லாம் திட்டித் தீர்த்தாரோ அனைத்தையும் தோழர்கள், அண்ணாவிடம் ஒப்புவித்தார்கள்.  அண்ணாவுக்குத்தான் பெரியார் திட்டத்திட்ட தேனாயிற்றே? புன்முறுவலோடு சம்பத்தை நோக்கி சொன்னார், "சம்பத், ஐயா திட்டியதில் ஒரு வார்த்தையைக் கவனித்தாயா? இந்தச் சின்னத்தம்பிக்கு என்ன கேடு? என்று ஐயா உன்னைப்பற்றிச் சொல்லி இருக்கிறார், அப்போதுகூட என்னைப் பெரிய தம்பி என்றுதான் மனத்தில் நினைத்திருக்கிறார்'' என்று குறிப்பிட்டார்.  சம்பத்துக்கு இந்த கறுப்புச்சட்டை விவகாரம் ஏதோ ஒரு வில்லங்கத்தை உருவாக்கி வருகிறது என்பது புரிந்தது. ஆனாலும் அவர் கறுப்புச்சட்டைப்படைத் தலைவர் அல்லவா? "இதிலென்ன தகராறு அண்ணா?'' என்று கேள்வி எழுப்பினார். இருவருக்கும் இதனால் பிரிவு ஏற்பட்டு விடுமோ என்னும் கவலையும் உள்ளூர அரிக்க ஆரம்பித்தது. அண்ணா விளக்கம் தந்தார்.  "தம்பி திருச்சி மாநாட்டில் என்ன தீர்மானம் போட்டோம்? கறுப்புச் சட்டைப்படைன்னு ஒரு தொண்டர் படை அமைக்கிறதாத்தானே? உன்னைத் தானே அதற்குத் தலைவராப் போட்டார் அய்யா? ஒரு தனிப்படை கறுப்புச்சட்டையோடு இயங்கவேண்டும் என்பதுதானே தீர்மானம்? மேடைப் பேச்சாளரும் கறுப்புச்சட்டை போடணும்னு தீர்மானம் போட்டோமா?'' என்று அண்ணா வினவியதில் ஏதோ ஒரு வெறுப்புணர்வும் தொற்றியிருந்ததை சம்பத் உணர்ந்தார். 

"அது சரிண்ணா, ஐயாவைப் பற்றி நமக்குத் தெரியும். அவர் வழக்கப்படி தீர்மானத்தைவிட கன்வென்ஷனுக்குத் (மரபுக்கு) தானே மதிப்புத் தருவார்'' என்று சம்பத் கனிவாகச் சொன்னார். 

"இல்லை சம்பத்... இது கன்வென்ஷன் இல்லே, கம்பல்ஷன். விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்துகிறார் ஐயா. இதில் எனக்கு ஒன்றும் மாறுபாடில்லை. என்னைப் பற்றி உனக்குத் தெரியும். இப்ப என்கிட்ட கறுப்புச்சட்டை இல்லையே. திட்டமிட்டு ஒரு பழக்கத்தை அனுசரிக்க முடிவதில்லை. அதனால்தான் அதன் மீது வெறுப்பு என்று அர்த்தமில்லை. இங்கு வந்ததும் மேடையில் எல்லோரும் கறுப்புச்சட்டை போட்டிருப்பதைப் பார்த்துவிட்டு, நான் போடவில்லையே என்று மேடைக்கு வராம இருந்துடறேனா?'' என்றார் அண்ணா. 

"அதற்காகவெல்லாம் கவலைப்படாதீர்கள், உங்களுக்கு எத்தனை கறுப்புச்சட்டை வேண்டும் என் செலவில் தைத்துத் தருகிறேன். இது ஒரு பெரிய பிரச்னையா?'' என்றார் சம்பத். அதற்கு விடையளித்த அண்ணா, மேலும் ஒரு விளக்கத்தைச் சொன்னார். 

"சம்பத் இதைப்பற்றிய அறிவிப்பை ஐயா வெளியிட்ட போது, மாணவர் கூட்டத்தில் சொன்னது என்ன? ஊருக்கு ஊர் முழு நேரமும் சேவை செய்யும் தொண்டர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தொண்டர்கள் என்றால் அவர்கள் வசிக்கும் தெருவில் ஒரு நல்லது கெட்டது என்றால் ஓடிப்போய் உதவவேண்டும். மருத்துவமனையில் சேர்ப்பது, அடுத்த ஊருக்குச் சேதிகொண்டு போவது, நியாய விலைக்கடையில் சாமான்கள் வாங்கிக் கொடுப்பது, இப்படி அவர்களைப் பார்த்தாலேயே நமக்கு உதவ இருப்பவர்கள் என்று இருக்க வேண்டும். "ரெட் கிராஸ்" போல மக்கள் அடையாளம் கண்டு கொள்ளத்தான் கறுப்புச்சட்டை. அதற்காகத்தான் இயக்கத்தின் சார்பில் ஒரு கறுப்புச்சட்டைப் படை. இது முழுக்க முழுக்க இயங்க வேண்டும் என்று சொன்ன ஐயா, இப்பொழுது எல்லோரும் கறுப்புச்சட்டை போட்டுக்கணும்னு சொன்னா என்ன அர்த்தம்?'' இப்படிச் சொன்ன அண்ணா மேலும் ஒன்றைக் குறிப்பிட்டார்.

Kannan Natarajan

unread,
Nov 26, 2011, 9:09:36 PM11/26/11
to Min Thamizh

சம்பத் நாம போட்டுக்கறதாலே ஒண்ணும் பிரச்சினை இல்லை. நாம ஐயாவோட ஒபிடியண்ட் ஸ்டூடன்ட்ஸ் ஆனா, கிராமத்திலே நம்ம ஆதரவாளர், மிட்டா மிராசுகள், சனாதனிகள் எதிர்ப்புக்கிடையே மறைமுகமாக ஆதரவாளராகச் செயல்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கறுப்புச்சட்டை போட்டால்தான் கழகத்தவர் என்றால், அவர்களை எதிரிகளுக்கு நாமே அடையாளம் காட்டுவதாக ஆகாதா? அவர்கள் நிலையையும் எண்ணிப் பார்க்க வேண்டுமல்லவா?

''இப்படி அண்ணா அவர்கள் கறுப்புச்சட்டையைக் கட்டாயம் ஆக்கக்கூடாது என்பதற்கான விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்."

"இதனால்தான் மதுரை மாநாட்டிற்கு வரவில்லையா?'' என்று சம்பத் கேட்டார். அதற்கு அண்ணா, "மதுரையில் இவ்வளவு பயங்கரம் ஏற்படுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. மேலும், அங்கே ஒரு காண்ட்ராவெர்சியை ஏற்படுத்த விரும்பவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக என் உடல்நிலை இடந்தரவில்லை. இல்லையென்றால் இங்கே வாங்கிய திட்டை அங்கேயே வாங்கிக் கொண்டிருப்பேன்'' என்று அண்ணா மனம் திறந்து சொன்னார்.

இந்தப் பிரச்னையை மனத் தராசில் சீர்தூக்கிப் பார்த்தார் சம்பத். அண்ணா சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே தோன்றியது.

சம்பத் சுலோச்சனா திருமணம்:-

வடஆற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் பிரபல வழக்கறிஞர் நீதிக்கட்சிப் பிரமுகர் சாமி நாயுடு. பெரியார், அண்ணா, சம்பத் முதலானோர் வடஆற்காடு மாவட்டத்தில் எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும், திருப்பத்தூர் சாமி நாயுடு இல்லத்தில் தங்கி, உணவருந்தி, ஓய்வெடுத்துச் செல்வது வழக்கம்.

சாமி நாயுடுவின் புதல்வி சுலோச்சனா சிறு வயதிலிருந்தே அவரது இல்லத்திற்கு வந்துபோகும் பெரியாரை நன்கறிவார். பெரியார் சிறுவர், சிறுமியரிடமும் வெகுவாக மரியாதைக் காட்டுவார். "வாங்க... ஆமாங்கோ" என்றெல்லாம் அளவுக்கு அதிகமாக அன்பு செலுத்துவார். தவறு கண்டால் கோபமும் அதிகமாகவே வரும்.

அவரது உரையாடல்களையெல்லாம் சிறுமியாக இருந்தபோதே அருகிலிருந்து கேட்டு,
ரசிக்கின்ற வாய்ப்பு மாணவி சுலோச்சனாவுக்குக் கிடைத்தது. பெரியாரது உணவுப் பழக்கங்கள், எதை விரும்புவார், விரும்பமாட்டார் என்பதெல்லாம் அவருக்கு அப்போதே அத்துப்படி.

பெரியார் பெண் பார்த்து சுலோச்சனா அவருக்கு மருமகளாகவில்லை. அவரோடு வந்த அவருடைய மகன் சம்பத், சுலோச்சனாவுக்கு அறிமுகமானார். அவர்களிருவரும் ஒருவரையொருவர் நேசித்தனர். திருமணம் செய்துகொள்ளவும் விரும்பினர்.

இந்த விருப்பத்தை பெரியாரிடம் எப்படித் தெரிவிப்பது என்று இருவருக்குமே அச்சமாக இருந்தது. இதனால் இருவரும் தங்கள் திருமண விருப்பத்தை முதலில் அண்ணாவிடம் தெரிவித்தனர். மகிழ்ச்சியோடு வரவேற்ற அண்ணா, "நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். சமயம் பார்த்துப் பெரியாரிடம் பேசி ஒப்புதல் பெற்றுவிடுகிறேன்'' என்று ஆறுதல் சொன்னார்.

பெரியார் செல்லம் கொடுக்கக்கூடிய அளவிற்குக் கண்டிப்பும் உடையவர். எந்தச் சந்தர்ப்பத்திலும், யாரிடத்தும் தயவு தாட்சண்யமின்றித் தாம் நினைக்கிற விஷயத்தை முனை மழுங்காது அப்பட்டமாகப் பேசிவிடக்கூடியவர். "மன்னிக்கணுங்க நீங்க செய்தது ரொம்ப பெரிய தப்பு, அயோக்கியத்தனமுங்க..'' என்று மரியாதை கலந்து கண்டிப்பில் கடுமை காட்டுவார்.

பெரியார் வேறு ஒரு திட்டத்தை வைத்திருந்தார் அதில் அவர் உறுதியாகவும் இருந்தார். பெரியாரின் தங்கையின் மகள் (மாப்பிள்ளை நாயக்கரின் திருமகளார்) எஸ்.ஆர். காந்தி. அவரைத்தான் சம்பத்துக்கு மணம் முடிப்பது என்று பெரியார் திட்டமிட்டிருந்தார். இத்துடன் தமக்கும், கட்சிக்கும் சம்பத்தை வாரிசாக்கிவிடுவது என்றும் பெரியார் எண்ணி இருந்தார். இதற்காக அவர் சட்டப்படி பதிவு செய்துவிட, ஈ.வெ.கி. சம்பத் பெயரில் பத்திரங்கள்கூட வாங்கி வைத்துவிட்டார்.

- சம்பத்தை தம் வாரிசாகத் தத்து எடுத்துக் கொள்வது.
- தமக்குப் பின் கட்சித் தலைமையை நிரந்தரமாக அவரிடம் அளித்துவிடுவது,
- தம் தங்கை மகள் எஸ்.ஆர். காந்தியை சம்பத்துக்கு மணம் முடித்து வைப்பது.

இந்த மூன்று திட்டங்களிலும் பெரியார் அழுத்தமாக இருந்தார்.

முதலில் ஏற்பட்டது சம்பத்தின் திருமணப் பிரச்னை. தாம் காதலிக்கும் சுலோச்சனாவையே கரம் பிடிக்க சம்பத் உறுதியாக இருந்தார். இது கேட்டு பெரியார் சீறினார். கோபம் கொப்பளித்தது. "நான் சொல்லுகிறபடி காந்தியைத் (அத்தை மகளை) திருமணம் செய்து கொள்ளாவிட்டால் உனக்கு என் சொத்தில் கால் காசுகூட இல்லை. என்னை மறந்துவிடு'' என்று ஆவேசமாகப் பேசினார்.

சம்பத்தைப் பொறுத்தவரை பெரியாரின் சொத்துகளுக்கு ஆசைப்பட்டவராகவோ, கட்சிக்கு வாரிசுரிமை கொண்டாட வேண்டும் என்ற எண்ணமோ இல்லாதவர். ஆகவே பெரியாரின் மிரட்டல் பற்றி அவர் அதிகமாக அலட்டிக்கொள்ளவில்லை. "சுலோச்சனாவைத்தான் திருமணம் செய்து கொள்வேன்'' என்று முடிவாகச் சொல்லிவிட்டார்.

பெரியார் ஆத்திரவயப்பட்டவராக உறுமிக்கொண்டும் தடியால் தட்டிக்கொண்டும் இங்குமங்கும் நடந்தார். பெரியார் மாளிகையே பதற்றத்தில் இருந்தது. சம்பத்தின் தந்தையார் ஈ.வெ. கிருஷ்ணசாமி இயல்பாகவே பொறுமைசாலி. அவரும் சம்பத்திடம் கோபமாகப் பேசினார். குடும்பத்தார் சமாதானப்படுத்தினர். இந்தப் பிரச்னை முடிவற்று நீடித்துக் கொண்டிருந்தது.

ஈ.வெ. கிருஷ்ணசாமியின் கடிதத்தைப் பார்த்துவிட்டு காஞ்சியில் இருந்து அண்ணா ஈரோடு வந்தார். என்ன நடந்திருக்குமென்பது அண்ணாவுக்குத் தெரியும். அவரால் மட்டுமே பெரியாரைச் சமாதானப்படுத்தவும் முடியும். இதில் அவருக்கு தர்மசங்கடம். சம்பத்தைக் கெடுத்ததே அண்ணாத்துரைதான் என்பது பெரியாரின் பொருமல்.

இதில் ஒரு நல்ல முடிவு காண்பது கடினம்தான். ஆனாலும் அண்ணாவுக்கு நம்பிக்கையிருக்கிறது. அவர் ஏற்கனவே குறிப்பிட்டவாறு பெரியாரிடம் இதைப்பற்றி பேசுவதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே கறுப்புச்சட்டை போடாததால் அண்ணாவின் மீது பெரியாருக்கு கோபம். "குடந்தையில் குள்ளநரி" என்று பெரியார் கடுமையாகப் பேசியும் இருந்தார். இத்தனைக்கும் பிறகு அண்ணா தமது தம்பிக்காகப் பெரியாரைச் சமாதானப்படுத்த வேண்டிய சங்கடமான நிலை.

அண்ணா மெத்த சிரமப்பட்டு பேசி சம்பத் - சுலோச்சனா திருமணத்திற்குப் பெரியாரின் சம்மதத்தையும், சம்பத்தின் தந்தையார் ஈ.வெ. கிருஷ்ணசாமியின் ஒப்புதலையும் பெற்றுவிட்டார். சம்பத்தும் அவரது தோழர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

திருமண நிச்சய நிகழ்ச்சி:சம்பத் சுலோச்சனா திருமண நிச்சய நிகழ்ச்சி மணமகள் சுலோச்சனாவின் இல்லத்தில் நடந்தது; விருந்து பரிமாறப்பட்டது. அண்ணா, சம்பத், பொன்னம்பலனார், எஸ்.வி. லிங்கம், ஆனைமலை நரசிம்மன், பட்டுக்கோட்டை அழகிரிசாமி மற்றும் பலர் வரிசையாகப் பந்தியில் அமர்ந்தனர். அண்ணா மணமகளையே பரிமாறச் சொன்னார். மணமகள் பரிமாற முற்பட்டபோது அவரது தலையில் இருந்த ரோஜா மலர் சம்பத் இலையில் விழுந்தது. உடனே, அண்ணா மகிழ்ச்சி பொங்க, "இது நல்ல அறிகுறி இதைப்போலவே என்றும் மணத்தோடு வாழ்க்கை அமைய வேண்டும்'' என்று சொல்லி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

திருமண விழா:ஈ.வெ.கி. சம்பத் சுலோச்சனா வாழ்க்கை ஒப்பந்த விழா வடஆற்காடு திருப்பத்தூரில் ஏற்பாடாகியது. அண்ணா தம் மகன் திருமணம் போல், எல்லா ஏற்பாடுகளையும் கவனித்தார். திருமணப் பத்திரிகை அச்சிடப்பட்டு அனைவருக்கும் அனுப்பப்பட்டது. குடியரசு, விடுதலை, என்.வி. நடராசனின் திராவிடன், ஜலகண்டபுரம் கண்ணனின் பகுத்தறிவு ஆகிய ஏடுகளில் எல்லாம் சம்பத் சுலோச்சனா திருமண விளம்பரம் இடம் பெற்றிருந்தது.

பதிவுத் திருமணம்அன்புடையீர்,15.9.46 (ஆவணி 30ஆம் நாள்) ஞாயிறு காலை 8.00 மணிக்குஎனது மகன் ஈ.வெ.கி. சம்பத், அவர்களுக்கும் திருப்பத்தூர் வழக்கறிஞர் திரு. ஜி.சாமி நாயுடு, பி.ஏ.பி.எல். அவர்கள் மகள் தோழியர் எஸ். சுலோச்சனா அவர்களுக்கும்,முன்னாள் அமைச்சர், வழக்கறிஞர் திரு. எஸ். முத்தையா முதலியார் அவர்கள் தலைமையில் திருப்பத்தூர் (வடஆற்காடு) மணமகள் இல்லத்தில் பதிவுத் திருமணம் நடைபெறும். அதிகாலை தாங்கள் வந்திருந்து விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.

தங்களன்புள்ள, ஈ.வெ. கிருஷ்ணசாமிதங்கள் வரவை எதிர்பார்க்கும்:- எஸ்.
ராமசாமி, ஈ.வெ. ராமசாமி,சி.என். அண்ணாதுரை, எஸ்.ஆர். சந்தானம்

மணவிழா:- பெரியார் இல்லத் திருமணத்தில் பங்கேற்க அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கழகப் பிரமுகர்களும், நண்பர்களும் திருப்பத்தூரில் திரண்டிருந்தனர். திருமண விழா நடைபெறுகிற மீனாட்சி தியேட்டர் களைகட்டியது. மேடையில் பெரியாரும், முக்கிய பிரமுகர்களும் அமர்ந்திருந்தனர். அலங்கரிக்கப்பட்ட இருக்கையில் மணமக்கள் அமர்ந்தனர். அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கரவொலி யெழுப்பினர். அனைவருக்கும் மணமக்கள் கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர்.

மணவிழாவுக்கு, முன்னாள் அமைச்சர் வழக்கறிஞர் முத்தையா முதலியார் தலைமை வகித்தார். சேலம் கல்லூரிப் பேராசிரியர் ஏ.
ராமசாமி முன்மொழிய, திருப்பத்தூர் வழக்கறிஞர் புலவர் பெரியசாமி வழிமொழிந்தார். தலைவர் முன்னுரையில், சம்பத்தின் குணநலன்களையும், அறிவாற்றலையும் புகழ்ந்து பேசியதோடு மணமகளின் தந்தையார் நீதிக்கட்சிப் பிரமுகர் சாமிநாயுடுவைப் பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தார். பின்னர், மாவட்டப்பதிவாளர் திருமணத்தைப் பதிவு செய்தார். மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர். வாழ்த்தொலி முழங்கியது. அஞ்சல் வழி வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பியிருந்தோரின் பெயர்களை மாணவத் தோழர் இரெ. இளம்வழுதி படித்தார். அடுத்து, ஜில்லா போர்டு தலைவர் டி. சண்முகம், க. அன்பழகன், ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசியபின் பெரியார் நீண்டதொரு வாழ்த்துரை வழங்கினார்.

அவர் ஆற்றிய உரையில் ஒரு பகுதி:-

"அரசியல் பற்றி இங்கு நான் பேசப் போவதில்லை. இது சமுதாய சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய கூட்டம். இம்மாதிரிக் கூட்டங்களில் பெரும்பாலான மக்கள் பாட்டுக் கச்சேரி, புராணக் கதை, காலட்சேபம், நாட்டியம், நகைச்சுவை முதலியவற்றை வைத்து நேரத்தையும், பணத்தையும் வீணாக்குவார்கள் அல்லது கேளிக்கை ஆக்குவார்கள். அவற்றின் பயனாய் நேரம், பணம் வீணாவதல்லாமல் மக்களுக்கு யாதொரு பயனும் விளையாது. ஆனாலும், அப்படிப்பட்ட வீண் ஆடம்பரங்கள் மண வீட்டார் பெருமையில் சேர்ந்துவிட்டதால் அப்பயனற்ற காரியங்கள் பெரும்பாலான இடங்களில் செல்வாக்குப் பெற்றுவிட்டன. இங்கு நான் ஏதாவது பயனுள்ள பேச்சுப் பேச வேண்டும். பயனில்லா விடினும் சிந்தனைக்குரிய பேச்சாவது பேச வேண்டும் என்று இருக்கிறேன்.

இத்திருமண முறை புதியதாயிருப்பதால் அதைப்பற்றி பேசுவது பொருத்தமானதாக இருக்கலாம் என்றாலும் நம்மவர் இடையில் அது இப்போது பழைய பேச்சாகிவிட்டது. இத்தகு திருமணமுறை தொடங்கி 20 ஆண்டுகள் ஆகிறதென்றாலும் இதுபற்றி பேச வேறு அநேகர் இருக்கிறபடியாலும், இனியும் அதுவும் அப்பேர்ப்பட்ட அறிஞர் குழுவுக்கு நான் இதையே பேச வேண்டியது அவ்வளவு தேவை என்று கருதவில்லை''.

Kannan Natarajan

unread,
Dec 3, 2011, 3:25:11 PM12/3/11
to Min Thamizh

சமுதாய மாற்றம்:-

"நம் சமுதாயத் துறையில் மாற்றம் காணவேண்டிய எவ்வளவோ காரியங்கள் இருப்பதால் அவற்றில் ஏதாவது ஒன்றுபற்றிப் பேசலாம் என்று கருதுகிறேன். மாற்றம் என்பது இயற்கையாய் எல்லாத் துறையிலும் நடந்து வந்தாலும் நமக்கு அவசியம் வேண்டியதுதான். மாற்றங்கள் பற்றிச் சிந்திக்க வேண்டியதும் அப்படிப்பட்ட மாற்றத்தில் ஈடுபட வேண்டியதும் அறிவுடைமையாகும். 

இத்திருமணத்தைப் பிரின்சிபால் இராமசாமிக் கவுண்டர் அவர்கள் திராவிடத் திருமணம் என்றார். ஆம், நாம் திராவிடர்தான். நமது திருமணம் திராவிடர் திருமணம்தான். ஆனால் இந்த முறையில்தான் திராவிடரின் பழங்காலத் திருமணம் நடந்ததென்றோ அல்லது இப்படியேதான் திராவிடரின் எதிர்காலத்திலும் திருமணங்கள் நடக்க வேண்டுமென்றோ நான் முடிவு கட்டவில்லை. இது திராவிடர் திருமணம் என்றாலும், நான் இதை 1946ஆம் வருடத்திய (தற்கால நிலைக்கேற்ற) திருமணம் என்றும், இதுவே இன்று உலக மக்கள் திருமண முறையாக இருக்கவேண்டும் என்றும் சொல்லுகிறேன். ஆனால், இது மாறாமல் இப்படியே இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. கால மாற்றத்திற்கேற்ப நல்ல மாறுதல்கள் நிகழலாம். 

கால மாற்றம்:-

1946ஆம் வருடத்தியது என்று நான் சொன்னதால் 1956க்கும் இப்படியே இருக்க வேண்டுமென்பது கருத்தல்ல. இந்த மாற்றம் நம் செ
கரியத்தையும், அறிவையும், மனிதத் தன்மையையும், பொதுநலத்தையும் குறிக்கொண்ட மாற்றமாகும். இதனினும் மேலான நலனுக்கும் தெளிவுபட்ட அறிவுக்கும் ஏற்றபடி நாளைக்கோ 1956ம் வருஷத்திலோ மாற்றம் ஏற்படலாம்.  அதைக் கூடாது என்று இந்த 46ஆம் ஆண்டு திருமண முறை சொல்லாது. 1921ஆம் ஆண்டில் ஏற்பட்ட போர்ட் மோட்டார் கார் முறை 1946ல் இல்லை. இதுவும் 1947ல் இருக்காது. மாற்றமடைந்தே தீரும். இம்மாற்றம் எல்லாம் அறிவின் சவுகரியம் பற்றியது. ஆனால், நமது திருமண முறையினுடைய மாற்றம் அறிவு சவுகரிய மாத்திரமில்லாமல் சமுதாய அமைப்பு, அரசியல் சட்டம், பொருளாதார உரிமை, சுத்த சுதந்திரம் ஆகியவற்றையும் அடிப்படையாகக் கொண்டதாதலால் அவற்றிற்கு ஏற்றவண்ணம் அது மாறுதலடைந்துதான் தீரும். 

திருமணம் தேவையா? ஒப்பந்தம் தேவையா?


என்பதுகூடச் சிந்தனைக்கு உள்ளாகலாம்.

இனி வரப்போகிற காலம், ஆராய்ச்சி, என்று ஈடுபடுகிற பகுத்தறிவு, சகல துறையிலும் சம சுதந்திர வேட்கைக்காலமாக இருக்குமாதலால், அதை இந்த மூடநம்பிக்கை பெரிதுமாயும், பகுத்தறிவு சிறிதுமாயும் இருக்கிற காலத்தில் கட்டுப்படுத்துவது பயன்படாதென்றே கருதி அதை இத்துடன் விட்டுவிட்டு வேறு விஷயம் பற்றிப் பேசலாம் என்று கருதுகிறேன். 

பெண்ணுரிமை:


அதாவது நம் பெண்கள் பற்றி பெண்மக்களுக்கும், பெற்றோர்களுக்கும் அவர்களது கணவர் என்பவர்களுக்குமாகச் சிறிது பேச அவாக் கொள்ளுகிறேன். எல்லாத் துறையிலும் எல்லோருக்குள்ளும் மாற்று உணர்ச்சி ஏற்பட்டால் ஒழிய நம் நாட்டைப் போன்றே, நம் சமுதாயத்தைப் போன்றே தாழ்த்தப்பட்ட அடிமையாக்கப்பட்ட நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் விமோசனம் இல்லை. ஆகையால் பெண்கள் பற்றிப் பேசுகிறேன்.  பெண்களால் வீட்டிற்கு, சமுதாயத்திற்குப் பலன் என்ன என்று பாருங்கள்.

எங்கு கெட்டபேர் வந்து விடுகிறதோ என்பதுதானே?

இன்று பெண்கள் வேலை என்ன?

ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணாய் அமைப்பது. அது எதற்கு?

ஆணின் நலத்திற்குப் பயன்படுத்துவதற்கும் ஆணின் திருப்திக்கும் ஆணின் பெருமைக்கும் ஓர் உபகருவி என்பதல்லாமல் வேறு என்ன? என்று சிந்தித்துப் பாருங்கள். 

ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி, ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வேலைக்காரி, ஓர் ஆணின் குடும்பப் பெருக்கத்திற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை, ஓர் ஆணின் கண் அழகிற்கும், மனப்புழக்கத்திற்கும் ஓர் அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.  இது என்ன நியாயம்?

மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்சி, பூச்சி, ஜந்து முதலியவற்றில் வேறு எந்த ஜீவனாவது ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம் என்ற கருத்துடன் நடத்தையுடன் இருக்கிறதா? என்று பாருங்கள். 

இந்த இழிநிலை பெண்களுக்கு அவமானமாய்த் தோன்றவில்லை என்பதற்காகவே ஆண்கள் பெண்களை இவ்வளவு அட்டூழியமாய் நடத்தலாமா? என்று கேட்கிறேன்.

ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தனது சொத்து என்று எண்ணுகிறானே, எதனால்?

கம்பியில்லாத் தந்தியும், ரேடியோவும், அணுகுண்டும் கண்டுபிடிக்கப்பட்ட இக்காலத்திலும் துணியாலும் நகையாலும் பெண்கள் அலங்காரப் பொம்மைகளாவே இருப்பதா? என்று கேட்கிறேன். 

நான் சொல்வது இங்குள்ள பல ஆண்களுக்கும் ஏன், பெண்களுக்கும்கூட வெறுப்பாய், குறைவாய், சகிக்க முடியாதபடியுமாய்த் தோன்றலாம் என்பது எனக்குத் தெரியும். இவ்வியாதி கடினமானது. 

நகை மாட்டும் ஸ்டாண்டு:


இங்கு படித்த பெண், படிக்காத பெண் எல்லோரும் பொம்மைகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் பெற்றோர்களும் கணவர்மார்களும் அவர்களது அழகிய பொம்மைத் தன்மையைக் கொண்டே திருப்தி அடைகிறார்கள். பெருமை அடைகிறார்கள். பெண்களைத் திருப்தி செய்ய அவர்களை நல்ல பெண்களாக ஆக்க விலையுயர்ந்த நகையையும் துணியும் கொடுத்து அழகிய சிங்காரப் பதுமையாக்கிவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். பெண்கள் நகை மாட்டும் ஸ்டாண்டுகளாக இருக்கிறார்கள்(என்று சொல்லிக்கொண்டே தந்தை பெரியார் அவர்கள் மணமகளாரைப் பார்த்தார். அப்போது மணமகள் சுலோச்சனா, பெரியார் தமது விரலில் அணிந்துள்ள மோதிரத்தைச் சைகையின் மூலம் காட்டவே, குழுமியிருந்தோர் மத்தியில் "குபீர்"ச் சிரிப்பு ஏற்பட்டது. பெரியாரும் தமது மோதிரத்தைத் தடவிப் பார்த்துக்கொண்டார். பின்னர் பேச்சைத் தொடர்ந்தார்.)  பெண்கள் பெருமை, வருணணை ஆகியவற்றில் பெண்கள் அங்கம், அவயம், சாயல் ஆகியவற்றைப்பற்றி ஐம்பது வரிகள் இருந்தால், அவர்களது அறிவு, அவர்களால் ஏற்படும் பயன், திறமை பற்றி ஓர் ஐந்து வரிகள்கூட இருக்காது. பெண்கள் உருவை அலங்கரிப்பது, அழகை மெச்சுவது, சாயலைப் புகழுவது ஆகியவை பெண்கள் சமுதாயத்துக்கு அவமானம், இழிவு, அடிமைத்தனம் என்பதை ஆயிரத்தில் ஒரு பெண்ணாவது உணர்ந்திருக்கிறார்களா? என்று கேட்கிறேன். 

பெண்களுக்குத் தகப்பன் சொத்தில் உரிமை கிடையாது. ஏன்? என்று எந்தப் பெண்ணாவது காரணம் கேட்டாளா? பெண்களை அனுபவிக்கிறவன், அவர்களிடம் வேலை வாங்கிப் பயன் அடைகிறவன் காப்பாற்ற மாட்டானா? என்பதுதான். அதற்கேற்ப நகை, அணி ஆகியவையே போதும். அலங்காரம் ஏன்? மக்கள் கவனத்தை ஈர்க்கும்படியான நகை, துணிமணி, ஆபரணம் ஏன்? வேறு எந்தப் பெண்ணாவது, பெற்றோராவது, கட்டினவனாவது சிந்திக்கிறார்களா? சிந்திப்பதில்லை. 

பெண்கள் அஃறிணைப் பொருள் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? தன்னை அலங்கரித்துக் கொண்டு மற்ற மக்கள் கவனத்தைத் தன் மீது திருப்புவது இழிவு என்றும் அநாகரிகம் என்றும் யாருக்கும் தோன்றாததற்குக் காரணம் பெண்கள் எனப்படுவோர் போகப் பொருள்கள் என்ற கருத்தேயாகும். இது பரிதாபமாகவே இருக்கிறது.  நாம் நம் பெண்களை மற்றவர்கள் எப்படிப்பட்டவர்களானாலும் பல தடவை திரும்பித் திரும்பிப் பார்க்கும்படி, அவர்கள் கவனத்தை நம்மீது திருப்பும்படி அலங்கரிக்கிறோம். அலங்கரிக்க அனுமதிக்கிறோம். அதில் நம் பணம், உழைப்பு, நம் வாழ்க்கைப்பயன் முதலியவற்றைச் செலவழிக்கிறோம். இது ஏன்? எதற்காக? என்று சிந்திக்காததால் அதைத் தவிர வேறு காரியத்திற்கு நம் பெண்கள் பயன்படாமல் போய் விட்டார்கள். 

ஒரு பீகம் அமிருதீன் அம்மையார் முஸ்லீம் கோஷா இனம். அவர்கள் எவ்வளவு தொண்டாற்றுகிறார்கள்? நம் பெண்கள் மாத்திரம் நகைகள் மாட்டும் ஸ்டாண்டா? என்று கேட்கிறேன். 

சம உரிமை:-
 

ஆண்கள் பார்க்கும் எல்லா வேலைகளையும், ஆண்கள் செய்யும் எல்லாத் தொண்டுகளையும் பெண்கள் பார்க்கச் செய்ய முடியும். உறுதியாய் முடியுமென்பேன். ஆனால் நகைப் பைத்தியம், துணி அலங்காரப் பைத்தியம் அணிந்துகொண்டு சாயல் நடை நடக்கும் அடிமை, இழிவு, சுயமரியாதை அற்ற தன்மை, பைத்தியம் ஒழிய வேண்டும்.  சினிமா நட்சத்திரங்களைப் பார்த்தே தினம் ஒரு பேஷன், நகை, துணி, கட்டு, வெட்டு, சாயல் ஏற்பட்டதென்பேன். அந்தப் பெண்கள் தன்மை என்ன? ஒழுக்கம் என்ன? வாழ்க்கை என்ன?
லட்சியம் என்ன? என்பதெல்லாவற்றையும் நம் குலப் பெண்கள் என்பவர்கள் கருதாமல், புகழ், வீரம், பொதுநலத் தொண்டு முதலியவற்றில் கீர்த்தி பெற்ற ஆண்களைப் போல் தாங்களும் ஆக வேண்டுமே என்றில்லாமல் இப்படி அலங்கரித்துக்கொண்டு திரிவது, பெண்கள் சமுதாயத்தின் கீழ்ப் போக்குக்குத்தான் பயன்படும் என்று வருந்துகிறேன்''.

பெரியார் சுமார் ஒன்றரை மணிநேரம் வாழ்த்துரை வழங்கி நீண்ட உரையாற்றினார்.  பெரியார் பேசியபின், காஞ்சிபுரம் ஏ.கே. தங்கவேல் (முதலியார்) வாழ்த்தினார். பின்னர் அண்ணா தமது தம்பிக்கு வாழ்த்துரைத்து முப்பது நிமிடங்கள் பேசினார். ஈ.வெ.கி. சம்பத் நன்றி கூறினார். மணவிழா இனிதே நிறைவேறியது. திருமணத்தில் அன்பளிப்புகள் தவிர்க்கப்பட்டன.

குடியரசு (21.9.46) இதழில், ஈ.வெ. கிருஷ்ணசாமியின் நன்றியறிவிப்புச் செய்தி வெளிவந்தது.  சம்பத் திருமணம் பற்றி அண்ணா ஈ.வெ.கி.சம்பத் - சுலோச்சனா திருமணம் பற்றி அண்ணா திராவிட நாடு 6.10.46 இதழில், தமது பெயரிடாமல் கீழ்க்கண்டவாறு எழுத்தோவியம் தீட்டி இருந்தார். 

"மணமகள் சுலோச்சனா, திருமணப் பதிவு பத்திரத்திலே கையொப்பமிடக் குனிந்து நின்று கொண்டிருக்க, பக்கத்திலே நின்றுகொண்டு, குனியாமல் கண்களை மட்டும் பத்திரத்தில் கையொப்பமிடும் துணைவியின் கைவண்ணத்தைக் கவனிக்கும் விதத்தில், தம்பி சம்பத் நின்ற போஸ் இருக்கிறதே, "அண்ணா அது அழகாக அமைந்திருந்தது. படம்தான் யாரும் பிடிக்கவில்லை", என்றார் நண்பர் செழியன். அவர் முகஸ்துதியிலோ மிகைப்படுத்திப் பேசுவதிலோ, பழக்கப்பட்டவரல்ல. அவர் கூறினதை வேறு மொழியில் வேறு பலரும் கூறினர். பெண்ணும் பிள்ளையும் வெகு பொருத்தம் என்றனர். ஏன் இராது?

பொருத்தம் பார்த்தது புரோகிதரல்ல. பெற்றோரும் அல்ல. "கண்ணொடு கண்ணிணை நோக்கின்" கதை அது. காதல் கலியாணம்''. 

பெரியார் மாளிகையில் தம்பதிகள்:- 

ஈரோடு பெரியார் மாளிகையில் ஈ.வெ.கி. சம்பத் சுலோச்சனா இணையரின் இல்லற வாழ்வு இனிதே தொடங்கியது.  அதுப்பற்றி சுலோச்சனா கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:-

"நான் மருமகளாகப் பெரியார் அவர்கள் இல்லத்திற்குச் சென்றதும் முதலில் ஒன்றை முக்கியமாகப் புரிந்து கொண்டேன். அது பெரியார் அவர்களது இல்லம் தனிப்பட்ட குடும்பமாக மட்டும் இல்லை. தமிழகத்தில் எண்ணற்ற தோழர்களது வாழ்வையும், தாழ்வையும் அடக்கிய ஒரு பெரும் குடும்பமாகத் திகழ்ந்தது. கட்சிக்காரர்கள் நாள்தோறும் வந்த வண்ணமிருப்பார்கள். அவர்களை வரவேற்று உபசரிப்பது இல்லத்தாரின் மிக முக்கியப் பணியாக இருந்தது. 

இலைகள் போடுவதும், விருந்தோம்பலும் பெரியார் அவர்கள் இல்லத்திற்கே உரிய தனிச்சிறப்பாகும். இதில், எனது மாமியார், மறைந்த அன்னை நாகம்மையார் அவர்கள் அனைவராலும் மகிழ்ந்து போற்றப்பட்டவர். முகம் கோணாது அனைவரையும் வரவேற்று உபசரித்து மகிழ்வதில் அவருக்கு ஈடு இணை யாருமில்லை என்று இயக்கத்தவர் மேடைகளிலிலேயே புகழ்வர்.  அந்த உபசரிப்புப் பண்பை நான் வளர்த்துக் கொண்டு, அதில் எடுத்த எடுப்பிலேயே வெற்றி பெற்றேன். (இதிலேயே மாமனார் மெச்சும் மருமகள் என்ற பெயரும் எனக்குக் கிடைத்துவிட்டது.) 

குடும்ப விவகாரங்களில் மற்றபடி முழுச்சுதந்திரம் உண்டு. பெண்ணுரிமைக்காகப் போராடிய பெரியார், தமது இல்லத்தில் பெண்களுக்கு அளவுக்கு அதிகமாகவே உரிமைகளும், சலுகைகளும் வழங்கினார். அந்த அளவுக்குக் கண்டிப்பும், ஒழுங்குமுறையும் இருக்கும்.  கொள்கைப் பிடிவாதமிக்கவர் தந்தை பெரியார். அவரை தாஜா செய்தோ, காக்கா பிடித்தோ கருத்துகளை மாற்றிவிட முடியாது. அவர் உள்ளத்திற்குச் சரி என்று பட்டதில் உறுதியாக நிற்பார். அதே நேரத்தில் சுதந்திரமாக விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்களுக்கு இடம் தருவார். தம் நிலையில் தவறு என்றால் உடனே திருத்திக்கொள்ளத் தவற மாட்டார். தந்தைக்கு உதவியாக இருந்தார் தனயன். பெரியார் இல்லத்து மருமகளாகிய பின் திராவிட இயக்கத்தைப் பற்றி மேலும் விளக்கமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. அதன் எண்ணற்ற தலைவர்களை அறிந்து கொள்கிற வாய்ப்பும் ஏற்பட்டது. "நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்" என்றார் புரட்சிக் கவிஞர். அப்படி அவர் புகழ்ந்த குடும்பத்தின் மருமகளாக எனது நற்பணிகள் தொடங்கின''.

Kannan Natarajan

unread,
Dec 10, 2011, 4:42:56 PM12/10/11
to Min Thamizh

பாசமுள்ள அண்ணன்:-

ஈரோட்டுப் பெரியார் மாளிகையில் மூத்த மகனாக விளங்கியவர் அண்ணா. இறுதிக் காலத்திலும் அண்ணா, "அந்தப் பெருமை ஒன்றுதான் எனக்கு நிலையானது, நிறைவானது'' என்று சொன்னார். குடியரசுப் பணியிலிருந்து விடுபட்டாலும் அண்ணா ஈரோடு வரத் தவறுவதில்லை, அதிலும் தம் தம்பி சம்பத்தை அவரால் ஒரு முழு வாரம் பிரிந்திருக்க முடியாது. சம்பத் குடும்பத்தாரிடமும் தனிப்பாசம் காட்டுவார் அண்ணா. ஈரோட்டு மாளிகையில் அண்ணாவும், சம்பத்தும் ஒன்றாகவே உண்பார்கள். இருவரும் ஒரே இலையில் உண்ட காட்சிகளும் உண்டு.

சம்பத் - சுலோச்சனா திருமணம் முடிந்ததும் முதல் விருந்து, காஞ்சியில் அண்ணா இல்லத்தில். எது எது சம்பத்துக்குப் பிடிக்கும் என்பதை
ராணி அம்மையார் ஆலோசித்து மணம் செய்து கொடுத்த தன் மகளுக்கும், மாப்பிள்ளைக்கும் விருந்து வைப்பது போல் பட்டாடை அளித்து விருந்திட்டு உபசரித்தார்.

சம்பத் தம்பதிகளுக்கு முதல் குழந்தை பிறந்தபோது குழந்தையோடு 10 நாட்கள் வந்து காஞ்சியில் தம்முடைய இல்லத்தில் தங்கியிருந்துவிட்டுச் செல்லலாம் என்று சம்பத் தம்பதிகளை அழைத்தார் அண்ணா. 10 நாட்களும் அண்ணாவும், சம்பத்தும் காஞ்சியிலேயே அகமகிழ்ந்திருந்தனர். சுலோச்சனாவை அழைத்து, தம் மகளிடம் கேட்பதுபோல், "உனக்கு என்னென்ன வேண்டும், கேள் வாங்கித் தருகிறேன், எங்காவது சுற்றுலா செல்வதானாலும் சொல். எல்லோரும் போய்வருவோம்'' என்று கேட்டார். அதற்கு சுலோச்சனா, "நான் சினிமா ஷுட்டிங் பார்க்க வேண்டும். இவரிடம் பலமுறை கேட்டும் மறுத்துவிட்டார்'' என்றார்.

இதனைக் கேட்டதும் அண்ணா, "அது என்ன பெரிய விஷயம், இன்றே மெட்ராஸ் போகலாம்'' என்று சம்பத் தம்பதிகளை அழைத்துக்கொண்டு நெப்டியூன் ஸ்டுடியோவிற்கு வந்துவிட்டார். அன்று எம்.வி.
ராஜம்மா, பந்துலு முதலான கலைஞர்களின் படப்பிடிப்பு. அரை மணி நேரத்திற்கெல்லாம் திருமதி சம்பத், போரடிக்கிறது போகலாம் என்றார். அதற்கு அண்ணா, "இவ்வளவு கஷ்டப்படுகிறாயே, நடிக நடிகயைர் எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள்'' என்றார். நட்சத்திரங்களை அறிமுகம் செய்துவைத்தார்....

இப்படி எத்தனையோ சொல்லலாம். அண்ணாவின் பாசமிகு நிகழ்ச்சிகள் ஏராளம், ஏராளம்.

கறுப்புச் சட்டை பற்றிய சர்ச்சை:-

"கழகத்தின் ஒரு பிரிவாகத் தீவிரப் பணிக்கென்று அமைக்கப்பட்டுள்ள தொண்டர் படையினர் மட்டுமே கறுப்புச் சட்டையை அணிய வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்'' என்று வாதிட்டார் அண்ணா. பிடிவாதத்திற்குப் பெயர்பெற்ற பெரியார், தாம் சொன்னது சொன்னதுதான் என்று அழுத்தமாகவே கூறிவிட்டார்.

கறுப்புச் சட்டையைத் தொண்டர் படையோடு வைத்துக் கொள்ளலாம் மற்றவர்களைக் கட்டாயப்படுத்த வேண்டியதில்லை என்று, கறுப்புச்சட்டைப் படையின் அமைப்பாளர் சம்பத் பெரியாரிடம் எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை.

பெரியாரோடு மாறுபட்ட கருத்து கொண்டிருந்தாலும் அண்ணாவோ, சம்பத்தோ தலைமையை மீறி நடக்கவில்லை. தம்முடைய கருத்துகளைத் தெரிவித்தோம் என்னும் அளவில் நிறுத்திக்கொண்டார்கள். ஆனால் சிலர் பகைமையை ஊதிப் பெரிதாக்க முயன்றனர்.

ஆனாலும், சம்பத்தைப் பெரியார் தம் வாரிசாக ஏற்கத் தயக்கம் காட்டுகிறார் என்பது கட்சிக்குள் சில பேர்வழிகளுக்கு ஆனந்தத்தை அளித்தது. அவர்களது நோக்கமெல்லாம் பெரியாருக்கு அடுத்த தலைவராக வளருகின்ற அண்ணாவை அவரிடமிருந்து பிரித்துவிட வேண்டும். சம்பத்தை ஆத்திரப்படுத்தி பெரியார் குடும்பத்திலிருந்து வெளியேறச் செய்துவிட வேண்டும் என்னும் சதித் திட்டத்தோடு பெரியார் மாளிகையிலேயே ஒரு சுயநலக் கும்பல் மறைமுக வேலைகளில் ஈடுபட்டிருந்தது.

அந்தச் சூழ்ச்சிக்காரர்கள் அடுத்து அண்ணாவைச் சந்திக்கிறபோது, "அண்ணா, உங்கள் படிப்பென்ன, அறிவாற்றலென்ன, ஓடாய் உழைத்தும் உங்களை அய்யா எவ்வளவு அலட்சியப்படுத்துகிறார் பாருங்கள்....'' என்று அவரிடமும் தூபம் போடுவார்கள். சம்பத்திடம் சென்று, "நீதானே எல்லாம் உனக்கு உரிய மதிப்பிருக்கிறதா? அவரே சர்வாதிகாரம் செய்கிறார், இளைஞர்களை அமுக்குகிறார்....'' என்று அவரையும் திறமையாக உசுப்பி விடுவார்கள்.

மாணவர் இயக்கம் பற்றியும் பெரியாரிடம் வெறுப்பு ஏற்படுத்திவிட்டார்கள். வால்டேர் ரூசோ பற்றியெல்லாம் மணிக்கணக்கில் பேசுகிறார்கள். பெரியாரை மறைக்கிறார்கள். சினிமா, டிராமா என்று இயக்கத்தை எங்கேயோ கடத்திப் போகிறார்கள் என்றெல்லாம் அந்தச் சுயநலமிகள் வாதம் செய்தனர்.

இப்படிச் சில சுயநலமிகளின் குழப்ப வேலை ஆரம்பமாயிற்று. அவர்கள் போட்ட தூபம் புகைப்படலங்களை எழுப்பியது. அது கொழுந்துவிட்டு எரியவிட வேண்டுமென்று பகைவர்களும் தீயவர்களும் துடித்தனர்.விளைவு....

பெரியார், அண்ணாவிடம் வைத்திருந்த பாசப் பிணைப்பு கொஞ்சங்கொஞ்சமாக தளரலாயிற்று. அண்ணாவும் அவருடைய இயல்புக்கேற்ப முட்டிமோதி நியாயம் பெற முயலவில்லை.

"கறுப்புச்சட்டை போடாமல் மேடைக்கு வந்தால் தடுப்போம்", என்று கூடச் சில தீவிரவாதிகள் பேசிக் கொண்டனர். அண்ணா ஒரு முடிவுக்கு வந்தார். பெரியார் உணர்கிறவரை நாம் சற்று ஒதுங்கி இயக்கத்திலேயே வேறு சில பணிகளை.... இலக்கியப் பணி.... கல்லூரிகளில் சொற்பொழிவு, கலைப்பணி என்று இயக்கத்திற்கு ஆற்றவேண்டிய பணிகளை ஏதாவதொரு வடிவத்தில் முனைப்போடு நடத்திக் கொண்டிருப்பது என்று முடிவு செய்து கொண்டார்.

திராவிட நாடு இதழில் வழக்கம் போல் அண்ணாவின் கட்டுரைகள் பெரியாரைச் சிறப்பித்து, மேலும் மிடுக்கோடு வெளிவந்து கொண்டிருந்தன. விடுதலை நிர்வாகப் பணியோடு, மாணவர் இயக்கப் பணிகளையும் கறுப்புச்சட்டை படை இயக்கத்தையும் சம்பத் எப்போதும் போல் விறுவிறுப்போடு நடத்திக் கொண்டிருந்தார்.

கறுப்புச்சட்டை விவகாரத்தால் அண்ணா பொதுக்கூட்டங்களைத் தவிர்த்தார். இதனால் திராவிடர் கழகப் பொதுக்கூட்ட மேடைகள் அவ்வளவாக சோபிக்கவில்லை. இந்தக் குறை சிறிது சிறிதாக உணரப்பட்டுவந்தது.

தமது அடுத்த பணியாக பாரதிதாசனுக்குப் பொற்கிழி வழங்கும் பணியில் அண்ணா தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். இதற்காக அமைத்த தமிழறிஞர்கள் குழுவில் சம்பத்தும் இடம் பெற்றார். தம்மைக் கலந்து இந்த ஏற்பாட்டினைச் செய்யவில்லை என்னும் ஆதங்கம் பெரியாருக்கு இருந்தது. வருவோர், போவோரிடம் அது எதிரொலித்தது.

சிங்கப்பூரில் தமிழ்முரசு இதழ் நடத்திய கழக ஆதரவாளர் செல்வாக்கு மிக்க சாரங்கபாணி. அவர் தமிழகம் வந்து, பெரியாரைச் சந்தித்தபோது பாரதிதாசனுக்கு நிதியளிக்க மலேயா, சிங்கப்பூர் தமிழர்களும் ஆர்வம் காட்டுவதாகச் சொன்னார். அவ்வளவுதான், பெரியாருக்குக் கோபம் கொப்பளித்தது. "கட்சி என்பதையே நினைக்காமல் அவனவன் இஷ்டத்திற்கு விளையாடுறானுங்க'' என்று நொந்த உள்ளத்தோடு கூறினார். "பாரதிதாசனுக்கு என்ன வந்தது இரண்டுப் பாட்டுப் பாடிவிட்டால் புலவர். அவருக்கெல்லாம் பணமுடிப்பு. யாரை கேட்டுக்கிட்டு அண்ணாதுரை இப்படியெல்லாம் செய்யுறாரு?'' என்றும் தம் வேதனையை வெளிப்படுத்தினார் பெரியார்.

குடந்தையிலே தொடங்கிய குள்ளநரிப் பசங்க ஏச்சுக்குப் பிறகு இருந்த பாரதிதாசன் நிதி விவகாரத்திலேயும் பெரியாரின் மனத்தில் எரிச்சல் வெளிப்பட்டது.

பாரதிதாசனுக்குப் பொற்கிழிசென்னை பச்சையப்பன் கல்லூரித் திடல் மக்கள் கூட்டத்தால் நிறைந்து வழிந்தது. இந்த விழாவிற்கு வந்தவர்களுக்கு ஒரு வியப்பு காத்திருந்தது. அண்ணா அன்று பட்டுச் சட்டை அணிந்து மேடையில் தோன்றினார். எப்போதும் சாதாரண கசங்கிய சட்டை அணிந்து மேடையில் தோன்றுவார். அந்த அண்ணா பட்டுச் சட்டை அணிந்து உற்சாகமாகக் காணப்பட்டார். அவருடைய உரையின் தொடக்கத்தில் அவரே இது பற்றிக் குறிப்பிட்டார்.....

"இந்தத் தோற்றத்திலே என்னைக் காண்பவர்களுக்கு அண்ணாத்துரை என்ன மாறிவிட்டான் போலிருக்கிறதே என்று எண்ணத்தோன்றும். நான் என்னுடைய வாழ்க்கையில் ஒரே ஒரு தடவைதான் பளபளக்கும் பட்டுச்சட்டை போட்டுக் கொண்டிருந்தேன். அது என் திருமணத்தின்போது... அதற்குப் பிறகு இன்றுதான். என் வாழ்க்கையில் இரண்டாவது முறையாகப் பட்டுச் சொக்காய் அணிந்திருக்கிறேன். ஏனெனில், எப்படி என் திருமண நாள் என் வாழ்க்கையில் முக்கியமானதோ எந்த அளவுக்கு மகிழ்ச்சியையும், பூரிப்பையும் அளித்ததோ அதே போன்ற உணர்வையும், பெருமையையும் இன்று நான் பெறுகிறேன்.

'ச.சோமசுந்தரபாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த இனிய விழாவில் அண்ணா, பாரதிதாசனுக்குப் பொன்னாடை போர்த்தி ரூ.25,000 கொண்ட பொற்கிழியை வழங்கினார். பலத்த கரவொலியும், வாழ்த்து முழக்கமும் விண்ணைப் பிளந்தன. கட்சி வேறுபாடின்றித் தமிழகத் தலைவர்களும் இலக்கிய மேதைகளும் பாரதிதாசன் மீது வாழ்த்து மலர் சொரிந்தனர்.

இவ்விழாவில் நிதிக் குழுவின் சார்பில் நன்றி தெரிவித்துப் பேசிய ஈ.வெ.கி. சம்பத் தமது உரையில் குறிப்பிட்டதாவது:-

"சுயமரியாதை இயக்கத்தின் சூறாவளி" நமது புரட்சிக் கவிஞர் பாரதிதாசனே. தம்முடைய கவிதைகள் காகிதத்தால் மூட்டும் நெருப்பு என்றும் சுப்புரத்தினம் வரிகள் சுள்ளியில் மூட்டும் நெருப்பு என்றும் குறிப்பிட்டிருக்கிறார். "புதியதோர் உலகு செய்வோம்" என்று பாடிய புதுமைக் கவிஞர் "கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே" என்று கனல் தெறிக்கப் பாடியவர். அத்தகைய புரட்சிக் கவிஞரின் தமிழுக்குத் தமிழர்கள் அங்கீகாரம் வழங்கிடும் விழா இது. இந்த விழா பல பேருக்கு எரிச்சலைத் தரலாம். இதனைப் பலர் இருட்டடிப்புச் செய்யலாம். ஆனால், "முகிலைக் கிழித்து வரும் முழுமதி போல்" புரட்சிக் கவிஞரின் புகழ் விளங்கிக் கொண்டிருக்கிறது. எங்களாலும் நிதி திரட்டி அளிக்க முடியும் என்னும் ஆற்றலை அண்ணா மெய்ப்படுத்தி இருக்கிறார். இயக்கப் பெரியவர்களை, இயக்கத்திற்காகத் தங்களைத் தத்தம் செய்து கொண்டிருப்போரைத் தமிழ்ச் சமுதாயம் உதாசீனம் செய்து விடாது என உணர்த்துகிற முதல் விழா இது...''

என்று சம்பத் உணர்ச்சி பொங்க குறிப்பிட்ட போது பலத்த கரவொலி எழுந்தது.

பாரதிதாசன் கவிதை வரிகளை மேடைகளில் தமது உரை நெடுகிலும் உணர்ச்சி பொங்கக் குறிப்பிடும் இளந்தாடி வீரர் நெடுஞ்செழியனும் இவ்விழாவில் உரையாற்றினார். அண்ணாவின் நன் முயற்சியை அனைவரும் பாராட்டினர். பாரதிதாசன் மன நெகிழ்ச்சியோடு நன்றியுரையாற்றினார்.

ஆகஸ்ட் 15 கருத்து வேறுபாடு 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. பாகிஸ்தான் தனியாகப் பிரித்துத் தரப்பட்டது. நாடு முழுவதும் விடுதலைத் திருநாள் கொண்டாட்டங்கள் எழுச்சியோடு நடத்தப்பட்டன. ஆனால் பெரியார் ஆகஸ்ட் 15ஆம் நாள் "திராவிடருக்குத் துக்க நாள்" என்று அறிவித்தார்.

"வெள்ளையன் வெளியேறினாலும் வட நாட்டுக் கொள்ளையன் நம்மீது ஏறிச் சவாரி செய்கிறானே'' என்றார்.

பெரியாரின் கூற்றை மறுத்த அண்ணா, ஆகஸ்டு 15ஆம் நாள் இன்ப நாள் என்று அறிக்கை விட்டார்.

"இரண்டு பேர் நம்மீது சவாரி செய்தார்கள். ஒருவன் ஒழிந்ததில் பாதிச் சுமை குறைந்தது அல்லவா? அதனால் ஆகஸ்டு 15 மகிழ்ச்சிக்குரிய நாள்''

என்று அண்ணா குறிப்பிட்டார்.

கழகம் இரு அணிகளாகிக் கருத்து மோதல்கள் நடந்தன.

- கறுப்புச் சட்டைக் கருத்து வேறுபாடு
- பாரதிதாசன் நிதி விவகாரம்

ஆகியவற்றோடு
- ஆகஸ்டு 15 கருத்து மோதலும் சேர்ந்து

இயக்கத்தில் புதிய விரிசலை ஏற்படுத்திவிட்டது. பெரியாரும், அண்ணாவும் அறிக்கைப் போர் புரிந்தனர்.

"தலைவரும், கட்சியும் என் போக்கு தவறு என்று கருதி என்னைக் கட்சியை விட்டு நீக்கினாலும், நான் சமூகச் சீர்திருத்தம், பொருளாதாரச் சமத்துவம், திராவிடத் தனி அரசு எனும் அடிப்படைக் கொள்கைகளைக் கட்சிக்கு வெளியே இருந்தாகிலும் செய்து வருவேன்....'' என்று அண்ணா அறிக்கையில் குறிப்பிட்டார்.

சம்பத், அண்ணாவின் கருத்தை ஆதரித்தார்.

இவ்வறிக்கைப் போரினைத் தொடர்ந்து பெரியாருக்கும், அண்ணாவுக்கும் ஏற்பட்ட விரிசல்களைப் பெரிதுபடுத்திக் கட்சியில் இருந்த சூதுமதியினர் சமயமறிந்து சாமர்த்தியமாகச் செயல்பட்டனர். அண்ணாவின் மீது பல அவதூறுகளைக் கிளப்பிவிட்டு அவர் மனம் புண்படச் செய்தனர். அதன் காரணமாக அண்ணா அடுத்து நடந்த தூத்துக்குடி மாநாட்டில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

தூத்துக்குடி மாநாடு கே.வி.கே. சாமியின் தீவிர முயற்சியால் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அந்த மாநாட்டில்தான் ஊர்வலத்தில் குதிரைகள் மீது கருஞ்சட்டைத் தொண்டர்கள் கொடியேந்தி அணிவகுத்து வர அடுத்து கறுப்புப் புடவையணிந்த மகளிர் அணிவகுப்பும் அதனைத் தொடர்ந்து திரளான கருஞ்சட்டை படை வீரர்களும் பவனி வந்ததைப் பார்த்து பெரியார் பூரித்துப் போனார். மாநாட்டில் பாராட்டுரை வழங்கிய பெரியார், "நாம் வாங்கப் போகிற திராவிட நாட்டில் கே.வி.கே. சாமிதான் கவர்னர் ஜெனரல்'' என்று சொன்னதுமே பலத்த கரவொலி எழுந்தது.

மாநாட்டு ஏற்பாடுகள் தடபுடலாக இருந்தும் அண்ணாவும் அவர் தோழர்களும் வராதது மக்களுக்குப் பெரும் குறையாகக் காணப்பட்டது.

இரண்டு முக்கிய மாநாடுகளிலும் அண்ணா கலந்து கொள்ளவில்லை. அண்ணாவை ஆதரித்துச் சம்பத்தும் பங்கேற்கவில்லை. அண்ணாவும் அவரது அணியினரும் பங்கேற்காததை மாநாடு கண்டோர் பெருங்குறையாகவே கருதினர்.

ஆகஸ்டு அறிக்கைக்குப் பிறகு அண்ணா கழகப் பணியில் ஈடுபடுவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டார். எழுத்தாளர் மாநாடு, இலக்கிய கூட்டங்கள், கொள்கைப் பரப்பு நாடகங்கள், திரைப்படத்துறை என்று அண்ணா பணிகளை அமைத்துக் கொண்டார். தம்பி சம்பத்தை விடுதலை நிர்வாகம், மற்றும் தொண்டர்படை தொடர்பான பணிகளை விடாது நிறைவேற்றி வருமாறு அண்ணா கேட்டுக் கொண்டார்.

Kannan Natarajan

unread,
Dec 17, 2011, 5:53:05 PM12/17/11
to Min Thamizh

நகர மன்ற உறுப்பினர் சம்பத்:-

தோழர் ஈ.வெ.கி. சம்பத் தமது 23ஆம் வயதில் (1947) இருமுறை ஈரோடு தொகுதிக்கு பதவி வகித்தார். தமது பொறுப்புக் காலத்தில் பொதுவாகத் தமது தொகுதிக்கு மட்டுமின்றி நகரத்தின் பெரும் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டார். நகர மக்களின் நன் மதிப்பைப் பெற்றார். இரண்டாம் முறையும் சம்பத் ஈரோடு நகர மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  பெரியார் 1914ஆம் ஆண்டிலேயே ஈரோடு நகரமன்ற தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பல ஆண்டுகள் பதவி வகித்து நகரின் அடிப்படைத் தேவைகளை குடிநீர், சுகாதார வசதிகளை அமைத்தார் என்பதும் அதே காலகட்டத்தில் 1918இல் சேலத்தில் பெரியாரின் நண்பர் சி.
ராஜகோபாலாச்சாரியார் நகரமன்றத் தலைவராக இருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க செய்திகள். 

1.5.1947 முதல் 7 நாட்கள் ஈரோட்டில் திராவிடர் மாணவர் பயிற்சி முகாம் ஈ.வெ.கி. சம்பத் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மாணவர் கழகப் பிரச்சாரம் நாடு முழுவதும் நடைபெறலாயிற்று.   

கரூர் வழக்கு:-
 

கைத்தறி நெசவாளர் போராட்டத்தில் ஈடுபட்ட கரூர் தோழர்கள் சுமார் 100 பேர் மீது காங்கிரஸ் அரசு கடுமையான விதிகளின் கீழ் வழக்குத் தொடர்ந்து அலைக்கழித்தது. அவர்களுக்குப் பெரியார் உதவவில்லை. சம்பத் அண்ணாவோடு தொடர்பு கொண்டு கரூர் வழக்குக்கு நிதி திரட்டவேண்டுமென்று கூறினார். திருச்சியில் அண்ணாவின் "நீதி தேவன் மயக்கம்", "சிவாஜி கண்ட இந்து
ராஜ்ஜியம்" நாடகங்கள் நடைபெற்றன. சிவாஜியாக சம்பத் நடித்தார். இந்த நாடகங்கள் வாயிலாக ரூ.5,161 நிதி திரட்டி கரூர்த் தோழர்களுக்கு வழக்கு நிதியாக அளிக்கப்பட்டது.  இந்நாடக விழாவிற்கு குத்தூசி குருசாமியைத் தலைமை தாங்குமாறு ஈ.வெ.கி. சம்பத் முன்மொழிந்து பேசினார். குருசாமி தலைமையேற்றார். இரா. நெடுஞ்செழியன் வாழ்த்திப் பேசினார். பணமுடிப்பைச் சண்முகவேலாயுதம் அவர்களிடம் அளித்த அண்ணா கரூர் வழக்கு பற்றி விவரமாக எடுத்துரைத்தார்.   

எண்ணற்ற கழக ஏடுகள்:-
 

கழகத்திற்காக ஏற்கனவே வெளிவந்து கொண்டிருந்த குடியரசு ஜஸ்டிசைட், விடுதலை நாளிதழ், திராவிட நாடு வார ஏடு ஆகியவற்றோடு இந்த இரண்டு ஆண்டுகளில் கழகத் தோழர்களால் ஏராளமான இதழ்கள் தொடங்கி நடத்தப் பெற்றன.  தீப்பொறி (வேலூர்), திராவிட அரசு, திராவிட முரசு, போர்வாள், திராவிடன், பூந்தோட்டம், தோழன், அழகு, கதிரவன், டார்பிடோ, இன ஒலி, தீப்பொறி, (சென்னை) மறுமலர்ச்சி, பொன்னி, குயில் (மாதம்), குயில் (வாரம்), குயில் (கவிதை), தமிழ்நாடு (சென்னை), நிலவு, மயில், திராவிட மணி, சூறாவளி, புதுவாழ்வு, ஸ்பார்க் (ஆங்கிலம்) நியூ ஜஸ்டிஸ் (ஆங்கிலம்) தமிழகம், திராவிடம், நகர தூதன், சண்டே அப்சர்வர் (ஆங்கிலம்) விபரேடர் (ஆங்கிலம்) கோவை முரசு, சேலம் டைம்ஸ், வழிகாட்டி, சமத்துவம், சமரசம், தமிழ்ஏடு, குரல்.  ஈ.வே.கி. சம்பத்தும், க. அன்பழகனும் இணைந்து "புதுவாழ்வு" என்ற வார ஏட்டினைத் தொடங்கினர்.   

பெரியார் - காமராசர் முதல் சந்திப்பு
:- 

8.12.1947 அன்று சேலத்தில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு பெரியார் சென்னை செல்ல கொச்சின் எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்தது. நடைபாதையில் நின்றபடி உடன் வந்த தோழர்களிடம் பெரியார் பேசிக் கொண்டிருந்தார். அதே வண்டியில் சென்னைக்கு வந்து கொண்டிருந்த அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் காமராஜ் பெரியாரைக் கண்டு வணக்கம் செய்ய, பெரியாரும் பதில் வணக்கம் செய்தார். காமராஜ் அவ்விடத்தை விட்டு சென்றவுடன் பெரியார் அருகில் இருந்த நண்பரிடம், "இவர் விஜயராகவலு முதலியார் மகன் அல்லவா?'' என்று கேட்டார்.  "இல்லை ஐயா, இவர்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் காமராஜ்'' என்று கூறினார்.  "நான் பார்ப்பது இதுதான் முதல் தடவை. நான் சரியாகக் கூட பேசவில்லையே'' என்று கூறிக் கொண்டிருக்கும்போதே
ரயில் புறப்பட்டு விட்டது.  சென்னை சென்ட்ரலில் ஐயாவை எதிர்பார்த்து சம்பத் முதலானோர் காத்திருந்தனர். சிறிது நேரத்தில் ரயில் வந்தது. பெரியார் இறங்கினார். சம்பத்திடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வேகமாக வந்த காமராஜர், பெரியாரிடம் சில நிமிடங்கள் பேசினார். பிறகு சந்திப்பதாகச் சொல்லிக் காமராஜர் விடைபெற்றார். பெரியார் மீரான்சாகிப் தெரு இல்லத்திற்கு வந்து சேர்ந்தார்.  இதற்குப் பிறகு பெரியார் கரூர் வழக்கு நிதிக்குழு என்று அறிவித்தார். இந்த நீதிக் குழுவின் மூலம் மேலும் நிதி வசூலித்துக் கரூர் வழக்கு நிதிக்காக அளிக்கப்பட்டது.  1947 நவம்பரில் ஒரு திடுக்கிடும் சம்பவம் நடைபெற்றது. உடையார் பாளையம் வேலாயுதம் என்னும் பள்ளி ஆசிரியர் கழகப் பிரசாரம் செய்தார் என்று, அவரை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனர். இந்த அக்கிரமத்தைக் கண்டித்து சென்னை மயிலையில் ஈ.வெ.கி. சம்பத் தலைமையில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. அண்ணா கலந்து கொண்டார்.   

திருவண்ணாமலை மாநாடு:-
 

17.12.47 அன்று திருவண்ணாமலையில் மாவட்டக்கழக மாநாடு நடைபெற்றது. அப்போது திருவண்ணாமலை நகரசபைத் தலைவராக ப.உ. சண்முகம், கோவில்பட்டி நகரசபைத் தலைவராக ஈ.வே.ஆ. வள்ளிமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டபோது அதனைக் "கவர்னர் பதவி போல் நமக்கு'' என்று பெரியார் பாராட்டினார். விழுப்புரம் நகரசபைத் தலைவராக சண்முகம், உடுமலைப்பேட்டையில் கனகராசன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த வெற்றிகளை வரலாற்று வெற்றியாகக் கழகத்தினர் கொண்டாடினர்.  நீதிக் கட்சியைச் சேர்ந்த சேலம் (
ராவ்பகதூர்) ரத்தினசாமி, தலைமை வகித்தார். (இந்த மாநாட்டிலும் அண்ணா பங்கேற்கவில்லை) மாநாட்டுத் தலைவரை முன்மொழிய தோழர் போளூர் சுப்பிரமணியம் அழைக்கப்பட்டார். அவர் பேசும்போது, "அண்மையில் தமக்குக் கொடுத்திருந்த பட்டத்தைத் தாமாக முன் வந்து துறந்த திரு. முத்தையா அவர்களைப் போல் ரத்தினசாமி அவர்களும் தமது பட்டத்தைத் தாமாகத் துறக்க முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். துறப்பார் என்றும் எதிர்பார்க்கிறேன்'' என்றார். அய்யாவுக்கு வந்ததே கோபம். உடனே தமது கைத்தடியை எடுத்து மேடையைத் தட்டி "போதும் நிறுத்து, உன்னை முன்மொழியச் சொன்னால் அவரை பட்டம் துறக்கவேண்டுமென்று கூறுகிறாயே? இது என்ன அதிகப் பிரசங்கித்தனம். திரு. ரத்தினசாமி பெரிய மனிதர். நானே அவர் வீட்டிற்குச் சென்று இந்த மாநாட்டிற்குத் தலைமை வகிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க இங்கு வந்திருக்கின்றார். அவரை பட்டம் துறக்கச் சொல்ல நீ யார்? இது குறும்புத்தனம். இதையெல்லாம் காஞ்சிபுரத்தில் வைத்துக் கொள்'' என்று கோபமாக ஒலி பெருக்கி முன்னால் பேசி ரத்தினசாமியை பார்த்து, "அய்யா மன்னிக்கணும். தவறு நடந்து போச்சு'' என்று வருத்தப்பட்டார். இந்தச் செய்கையில் கோபமடைந்திருந்த அய்யாவை, நகரமன்றத் தலைவர் ப.உ. சண்முகம் சமாதானம் செய்து வைத்தார். மாநாடு தொடர்ந்து நடைபெற்றது.   

கருப்புச் சட்டைப் படைக்குத் தடை
:- 

1948ஆம் ஆண்டு தொடர்கின்ற போதே தாங்கொணாத் துயரச் செய்தியை சுமந்து வந்தது. காந்தியடிகள் மதவெறியன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்னும் செய்தி உலகைக் குலுக்கியது. சித்தம் கலங்கினார் பெரியார். விடுதலை ஏட்டில் மனம் பதறி அறிக்கை விட்டார்.  பதற்ற நிலை போக்க அரசு பெரியாரையும் அண்ணாவையும் வானொலியில் உரைகள் நிகழ்த்தச் செய்தன.   

அரசின் அடக்குமுறை:-
 

அடுத்த திங்களில் அரசின் அடக்குமுறை கழகத்தின் மீது பாய்ந்தது. குற்றவியல் சட்டத் திருத்தம் 15ஆம் பிரிவில் கீழ் கருப்புச் சட்டைப் படைக்குத் தடை விதிக்கப்பட்டது. ஈரோடு மாளிகை சோதனையிடப்பட்டது. தடை பற்றிய அரசாணை நகல், கருப்புச் சட்டை அமைப்பாளர் ஈ.வெ.கி. சம்பத்திடம் காவல் துறை அதிகாரிகளால் தரப்பட்டது.  குடியரசு அலுவலகத்தின் பூட்டை உடைத்துச் சோதனையிட்டு காவல்துறையினர் சில பதிவேடுகளையும் கைப்பற்றினர். பெரியார் இல்லத்தில் அவரில்லாதபோது அவரது அறையின் பூட்டை உடைத்துச் சோதனை செய்து கருஞ்சட்டைகள், கருப்புக் கொடிகள், கடிதத் தொகுப்புகள், கணக்கு மற்றும்
ரசீது புத்தகங்கள், தீர்மானப் பதிவேடு ஆகியவற்றையும் காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றனர்.  பெரியார் வெகுண்டெழுந்தார்.   

சென்னையில் கருப்புச் சட்டை மாநாடு:-
 

கருப்புச் சட்டைப் படை தடை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை மெமோரியல் மண்டபத்தில் மாபெரும் கண்டனக் கூட்டம் ஏற்பாடாயிற்று. இக்கூட்டத்திற்கு வரும் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து வரவேண்டுமென பெரியார் வேண்டுகோள் விடுத்தார். ஆண்களும், பெண்களும் கருப்பு ஆடைகளுடன் திரண்டிருந்தனர்.  கருப்புச் சட்டை குறித்து மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்த அண்ணா எவரும் எதிர்பாராத வகையில் கருப்புச் சட்டை அணிந்து மேடையில் தோன்றினார். அவருடன் சம்பத், நெடுஞ்செழியன், என்.வி.என், மதியழகன் ஆகியோரும் கருப்புச் சட்டையுடன் காணப்பட்டனர். அண்ணா நெடுஞ்செழியனின் கருப்புச் சட்டையை அணிய, அது கவுன் போல் முழங்கால் வரை தொங்கியது. கருப்புச் சட்டையுடன் அண்ணா தோன்றியதும் குழுமியிருந்த அனைவரும் மனநெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பெரியார் முன்னிலையில் அண்ணா பேசியபோது, கருத்து வேறுபாடு இருந்தாலும் நான் தலைமைக்குக் கட்டுப்பட்டவன்'', என்று தன்னிலை விளக்கம் அளித்தார். அரசின் அடக்கு முறையைக் கண்டித்து அண்ணா ஆவேசமாகப் பேசினார்.  கருப்புச் சட்டைப் படை தடை செய்யப்பட்டிருந்தாலும் இம் மாநாட்டினையொட்டி எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் கருப்புச் சட்டை திராவிடர் கழகத்தின் சின்னமாக மாறியது.   

இந்தி எதிர்ப்பு மாநாடு:-
 

17.4.1948இல் சென்னையில் மறைமலையடிகள் தலைமையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பெரியாரும் தேசியத் தலைவர்களான திரு.வி.க., ம.பொ. சிவஞானம், டி. செங்கல்வராயன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டிற்கு அண்ணாவும், சம்பத்தும் மேடைக்கு வந்தபோது பெரும் மகிழ்ச்சி ஆரவாரம் ஏற்பட்டது.  மாநாடு முடிந்து பெரியாரிடம் கழகத்தில் கருத்து வேறுபாடு தீர்ந்ததா? என்று கேட்டபோது பெரியார், "ஒரு கட்சிக்கு இரண்டு தலைவர்கள், இரண்டு அணிகள் இருக்க முடியாது'' என்றார். "கருத்து மோதல் என்பது சுயவிளம்பரத்திற்காக நடைபெறுகிறது'' என்றும் கூறினார்.  இந்த நிலையில் அண்ணா திராவிடநாடு இதழில், "லேபிள் வேண்டாம்", "உள்ளம் உடையுமுன்", "
ராஜபார்ட் ரங்கதுரை", "மரத்துண்டு", "இரும்பாரம்" போன்ற உருவகக் கதைகளின் மூலம் உள் கட்சி நிலவரங்களை மறைமுகமாக வெளிப்படுத்தினார். இது அடுத்து வீசப்போகிற புயலுக்கு முன்னெச்சரிக்கை போல் தோன்றியது.  தூத்துக்குடியில் நடந்த கழக மாநாட்டில் அண்ணா, சம்பத் பங்கேற்கவில்லை. சென்னையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் இருவரும் பேசினர். மனக்கசப்புகள் தொடர்ந்தபோதும் அண்ணாவோ அவரது அணியினரோ கழகத்தை விட்டு விலகிவிடவில்லை. அண்ணா திராவிடநாடு மூலமும் சம்பத் விடுதலை நிர்வாகம் மற்றும் பணிகள் மூலமும் இயங்கியவாறே இருந்தனர். அப்போது திராவிடநாடு இதழில் கேள்வி - பதில் பகுதியில் அண்ணா மிக நயமாக எழுதினார். 

கேள்வி:- நீங்கள் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி விட்டீர்களா?
 

பதில்:-
விலகவில்லை, ஒதுங்கி நிற்கிறேன்  இந்த ஆண்டில் மீண்டும் இந்தித் திணிப்புக்கான ஆயத்தங்கள் தமிழ்நாட்டில் இந்தி விருப்பப் பாடமாகவோ, கேரள, ஆந்திர, கர்நாடகப் பகுதியில் இந்தி கட்டாய பாடமாகவோ இருக்குமென்று ஓர் அரசாணை வெளியாயிற்று. 

விடுதலை ஏட்டின் மீது அடக்குமுறை பாய்ந்தது. இரண்டாயிரம் ரூபாய் ஜாமீன் கட்ட வேண்டுமென்று அதன் வெளியீட்டாளர் மணியம்மையாருக்கு அரசாணை வந்தது.  முதலமைச்சர் ஓமந்தூரார் பெரியாரை அழைத்துப் பேசினார். "அரசுக்குத் தொல்லை தராதீர்கள்'' என்று கேட்டுக்கொண்டார். "இந்தியை எதிர்ப்பது எங்கள் கடமை, அதை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கமாட்டோம்'' என்று கண்டிப்பாகவே தெரிவித்தார் பெரியார். 

சென்னை வரும்
ராஜாஜிக்கு கருப்புக் கொடி காட்டுவதெனக் கழகம் மேற்கொண்ட முடிவையொட்டி பெரியாரும் அண்ணாவும் கைது செய்யப்பட்டு ஐந்தாம் நாள் விடுதலை செய்யப்பட்டனர். பாரதிதாசனின் "இரணியன்" நாடகம் தடையை மீறி நடைபெற்று அதில் நடித்தவர்கள் அந்த வேடங்களிலேயே கைதாயினர்.

Kannan Natarajan

unread,
Dec 30, 2011, 4:34:03 AM12/30/11
to Min Thamizh


ஈரோடு தனி மாநாடு

கழகப் பணியிலிருந்து அண்ணா ஒதுங்கியிருந்த காலத்தில், கட்சியில் ஒருவிதத் தேக்கநிலை காணப்பட்டது. மாநாட்டுக் கூட்டங்கள் சுவையற்று விளங்கின. அண்ணாவின் தொண்டும் ஆலோசனையும் கட்சியின் வளர்ச்சிக்கு அவசியமெனப் பலரும் கருதினாலும் பெரியாரிடத்தில் எடுத்துச் சொல்லிச் சமரசம் செய்துவைக்க வழி காணாது திண்டாடினர்.

சம்பத்துக்கு  ஒரு யோசனை தோன்றியது. கழகத்தில் உள்ள  வயதில் மூத்த பிரமுகர்களைத் திரட்டி நிலைமையை விளக்கி அய்யாவுக்குக் கடிதம் எழுத வைக்கலாம் என்று கருதினார். பெரியாரின் அணுக்கத் தோழர்களான சேலம் ஜி.பி. சோமசுந்தரம், குடந்தை கே.கே. நீலமேகம், கோவில்பட்டி வள்ளிமுத்து, பி. சண்முகவேலாயுதம், எஸ்.வி. லிங்கம் போன்ற பெரியவர்களிடம் சம்பத்  தனித்தனியே ஆலோசித்து, அவர்கள் கையெழுத்திட்டு ஓர் அறிக்கையை அய்யாவுக்கு அனுப்புமாறு தூண்டினார்.

"அண்ணாவை அழையுங்கள்'' என்று தலைப்பிட்ட அந்த வேண்டுகோள் கடிதத்தில் கருத்து வேறுபாடுகளைக் கலந்து பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். அண்ணாவை மீண்டும் கழகப்பணிகளில் ஈடுபடுத்த முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து, பழம் பெரும் பணியாளர்கள் பெரியாருக்கு நீண்ட கடிதத்தை அனுப்பினார்கள்.  நேரிலும் வற்புறுத்தினர்.

சம்பத்தின் யோசனைக்குப் பயன் ஏற்பட்டது. பெரியார் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டு அண்ணாவின் மீதான காழ்ப்புணர்ச்சிகளைத் தளர்த்திக் கொண்டார். பிரச்னைகளின் அடிப்படையில் அண்ணா சொன்ன கருத்துகளில் சிலவற்றில் நியாயம் இருப்பதாகவும் உணர்ந்தார். கருத்து வேறுபாடுகளிலும் கண்ணியம் காட்டும் தலைமையல்லவா  அவர் தலைமை?

அண்ணா மீண்டும் கட்சிப் பணிகளைத் தொடர்வதைக் குறிக்கும் வகையில் அவர் தலைமையிலேயே ஒரு தனிமாநாட்டினை நடத்தி இயக்கத்திற்கு வழியேற்படுத்த வேண்டும் என்று பெரியார் கருதினார். அண்ணா தலைமையில் ஈரோட்டில் 19ஆம் திராவிடர் கழகத்தின் சிறப்பு மாநாடு 1948 அக்டோபர் 23, 24 தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியது. 

குறுகிய காலத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கான மும்முரமான பணிகளை ஈ.வெ.கி. சம்பத், எஸ்.ஆர். சந்தானம், சண்முகவேலாயுதம், அப்பாவு, பெருமாள், பாலகுரு, பழனிசாமி ஆகியோர் செய்தனர். மாநாட்டிற்கு முன் மகத்தான ஊர்வலம், இரட்டை மாட்டுச் சாரட் வண்டியில் மாநாட்டுத் தலைவர் அண்ணாவை உட்கார வைத்து ஊர்வலம். "என்னால் முடியாதையா'' என்று பிடிவாதம் செய்கிறார் அண்ணா. அய்யாவோ அண்ணாவைத்தூக்கி வண்டியில் உட்கார வைத்து, "நீங்க மாநாட்டுத் தலைவருங்க. உட்கார்ந்து வரணுங்க'' என்று பிடிவாதமாக அவரை உட்காரவைத்து பெரியார் தம் மேல்துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு சாரட்டு வண்டி முன் நடந்து வந்தாரே, கண் கொள்ளாக் காட்சி என்பார்களே, அப்படி ஒன்று உண்டானால் இதுதான் அது.

கறுப்புச் சட்டை அணிந்து வெள்ளை மேல் துண்டை இடுப்பில் கட்டி வியர்க்க, வியர்க்க ஊர்வலத்தில் சிங்க நடை போட்டு வந்த பெரியாரைக் கண்டு தோழர்கள் அதிசயித்தனர்.மாநாட்டு வரவேற்புரையில் சம்பத்மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் ஈ.வெ.கி. சம்பத்  வரவேற்புரையின் சுருக்கம் வருமாறு:-

தற்கால நெருக்கடியை உத்தேசித்து, மாநாடு மிக அவசரமாகவும் போதிய முன்னேற்பாடில்லாமலும் கூட்டப்பட்டதால் தவிர்க்க முடியாத சில இன்னல்கள் ஏற்பட்டுவிட்டன. இட நெருக்கடி, உணவுத் தட்டுப்பாடு போன்ற இவ்விடையூறுகளை வர இருக்கும் சிறைச்சாலை அனுபவத்தின் ஒத்திகையாக கருதிக் கொள்ளவேண்டும்.

இந்த மாநாடு எந்தக் காரணத்தினால் எவ்வித அவசரத்தினால் கூட்டப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் பத்திரிகை வாயிலாக அறிந்திருப்பீர்கள். என்றாலும் அதுபற்றிச் சுருக்கமாக எடுத்துக் கூறவேண்டியது அவசியம் என்றே கருதுகிறேன்.

சென்ற 2, 3 மாத காலத்திற்கு முன் இந்நாட்டை ஆண்டு வரும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் இந்நாட்டின் மீது இந்தி மொழியைக் கொண்டு வந்து புகுத்தியதும் அதன் காரணமாக அதை எதிர்த்து நாம் மறியல் செய்யத் தீர்மானித்ததும் மறியல் தொடங்குவதற்கு முன், முதன் மந்திரியார் பெரியார் அவர்களை அழைத்துப் பேசியதும் உங்களுக்கு ஞாபகம் இருக்கும்.

அந்த சமயம் பெரியார் முதல் அமைச்சரிடம், மிக்க பணிவாக ஆனால் மிக உறுதியாக, "இந்தி இந்நாட்டுக்கு தேவையற்றது. உதவாது. ஒருமுறை புகுத்தப்பட்டு மக்களின் அதிருப்திக்கும் கண்டனத்திற்கும் ஆட்பட்டு ஒழிக்கப்பட்டது. எனவே அதை மறுபடியும் கொண்டு வந்து புகுத்தி, அன்பு நெறிப்பட்டு, அறிவுப்பிரசாரம் செய்து வரும் எங்களை வீணாக வலுச்சண்டைக்கு இழுக்கவேண்டாம்'' என்று கேட்டுக் கொண்டார்.

முதல் அமைச்சர், "முடியாது உங்களால் ஆனதைப் பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டார். நாமும் சவாலை ஏற்றுக் கொண்டோம். மறியல் தொடங்கினோம் நல்ல முறையில் நடத்தி வந்தோம். சர்க்கார், மறியல் தொண்டர்களைச் சிறைப்படுத்தினார்கள். பல கொடுமைகளுக்கு உள்ளாக்கினார்கள் என்றாலும் நாம் அஞ்சினோமில்லை. மேலும் எப்படி எதிர்ப்பைப் பெருக்குவது என்று யோசித்துத் திட்டம் வகுக்க கமிட்டியைக் கூட்டினோம்.

திட்டம் தீட்டிக் கொண்டிருந்த சமயத்தில் ஏதோ ஒரு பெரிய கொள்ளைக் கூட்டத்தை, சூதாட்டக்காரர்களின் கூட்டத்தைப் பிடிப்பதுபோல் மிக காட்டுமிராண்டித்தனமான முறையில் நாம் குடியிருந்த வீட்டைச் சுற்றி வளைத்துக் கொண்டு நம்மைச் சிறைப்படுத்தினர். கவர்னர் ஜெனரலுக்கு கறுப்புக் கொடி காட்டத் திட்டம் வகுக்கக் கூடியிருந்தோம் என்று குற்றம் சாட்டினர்.

தோழர்களே கறுப்புக் கொடி பிடித்து அதிருப்தி காட்டுவது என்பது எந்த ஜனநாயக நாட்டிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு மரபுரிமை. அது, காங்கிரஸ்காரர்களே வெள்ளையன் காலத்தில் பின்பற்றி வந்த முறையும்கூட, என்றாலும் அதைக் குற்றமென்று கருதிக் கொண்டனர்.

ஆங்காங்கு மந்திரிகளுக்குக் கறுப்புக் கொடி பிடித்த தோழர்களைக் கைது செய்து, கொடுமைப்படுத்தியிருக்கின்றனர். பிரிட்டிஷ்காரர்கள் என்னென்ன அடக்கு முறை ஆயுதங்களைக் கையாண்டனரோ, அதைவிடக் கேவலமான அடக்கு முறைகளை இவ்வாட்சியாளர்கள் கையாளுகின்றனர். என்றாலும் நாம் அஞ்சினோமில்லை. எங்கள்
லட்சியம் ஈடேறும் வரை எதையும் எதிர்த்தே தீருவோம் என்ற உணர்ச்சியோடு தொடர்ந்து மறியலை நடத்தி வந்தோம். இடையில் ஹைதராபாத் பிரச்சினை குறுக்கிட்டது. ஆட்சியாளருக்கு ஒத்துழைப்பு காட்டும் வகையில் மறியலை ஒத்தி வைத்தோம்.

நாம் எதிர்பார்த்தபடியே ஹைதராபாத்தில் தலைகாட்டிக் கொண்டிருந்த அசம்பாவித ஆட்சியும் விரைவில் அழிந்து விட்டது. மீண்டும் இந்தி எதிர்ப்பைத் தொடர்ந்து ஒரு தனி மனித மாநாட்டைக் கூட்டவேண்டுமென்று திருச்சியில் கூடிய நிர்வாகக் கமிட்டிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. குறுகிய நாட்களில் இவ்வளவு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டும், எதிர்பார்த்ததற்கு மேலும் மக்கள் வெள்ளம் திரண்டுவிட்டதால் போதுமான வசதிகள் செய்து கொடுக்க இயலாது போய்விட்டது.

நாம் எல்லோரும் சிறைச்சாலை நோக்கியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இப்படி ஓர் அனுபவம், ஓர் ஒத்திகைபோல் அமைய நேர்ந்தது, மகிழத்தக்கதேயாகும்''. மாநாட்டில் யார் படமும் இல்லை. படம் இருப்பதாக நினைத்துக்கொண்டு ஒவ்வொருவரும் பேசவேண்டும். என்னே, பெரியாரின் சிக்கனம்!

முதல் நாள் இரவு எம்.ஆர்.
ராதாவின் "மகாத்மா தொண்டன்" நாடகம், இரண்டாம் நாள் இரவு "தூக்கு மேடை" நாடகம். தந்தை பெரியார் உரை. இந்த மாநாட்டில்தான் பெரியார் தமது பெட்டிச் சாவியை அண்ணாவிடம் கொடுத்துவிடுகிறேன் என்று குறிப்பிட்டார். அவரது உரையின் ஒரு பகுதி:-

"நான் பொதுத் தொண்டில் ஈடுபட்டு நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எனக்கோ வயது எழுபதுக்கு மேலே ஆகின்றது. எத்தனை நாட்களுக்குதான் இனியும் என்னால் உழைக்க முடியும்? என் உடல் நிலையும் சரியாக இல்லை. நம்முடைய கழகமோ நாம் எதிர்பார்த்ததைவிட நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து பொதுஜன இயக்கமாகக் காட்சியளிக்கிறது. இதுவரை நான் ஒருவனே எல்லாப் பொறுப்புகளையும் ஏற்று எதையும் நானே செய்யவேண்டும் என்ற நிலை இருந்து வந்தது. இந்த நிலை நீடிப்பதை நான் விரும்பவில்லை. நமது இயக்கத்தில் பலர் இருக்கிறார்கள். கட்சியின் நலன் நாடி உழைக்க, ஏன் இன்றைய மாநாட்டின் தலைவர் அண்ணாதுரை ஒருவர் போதும், நமது கழகத்தை நடத்திச் செல்ல. அவர் படித்தவர் பகுத்தறிவுவாதி.  நல்ல எழுத்தாளர். பேச்சாளர்.அத்துடன் உங்கள் அபிமானத்தைப் பூரணமாகப் பெற்றவர்.வாலிபர்.அவர் ஒருவரே போதும் நம்மை நடத்திச் செல்ல. என்னைப் பொறுத்தவரையில் நான் கூறுகிறேன், எனக்கு வயதாகிவிட்டது. வயதாகிய தந்தை தன் பொறுப்பைத் தன் மகனிடம் ஒப்படைத்து விடவேண்டியதுதான் நியாயம். உலக நடைமுறையும்கூட. ஆகவே நான் இன்று எனது பெட்டிச் சாவியை அண்ணாத்துரையிடம் உங்கள் முன்னிலையில் கொடுத்து விடுகிறேன். எனவே தந்தை தன் கடமையைச் செய்து விட்டான். இனி தனயன் தன் கடமை, பொறுப்புணர்ச்சி ஆகியவற்றை உணர்ந்து நடக்க வேண்டும்'' என்று பெரியார் மகிழ்ச்சி ஆரவாரத்திற்கிடையே குறிப்பிட்டார்.

அண்ணா தலைமையுரைமாநாட்டுத் தலைவர் அண்ணா பேசுகையில் குறிப்பிட்டதாவது:-

"போராட்டக் காலத்தில் அபிப்பிராய பேதங்களுக்கு இடமே இல்லை. மற்றபடி பெரியார் அவர்கள் பெட்டிச் சாவியை என்னிடம் ஒப்படைத்ததாக தெரிவித்தார். அவருக்குத் தெரியும். சாவி கிடைத்துவிட்டதே என்பதற்காக தவறாகவோ, அவசியம் இல்லாமலோ, அதை உபயோகித்துக் கொள்ள அண்ணாதுரை விரும்பமாட்டான். திறக்கும்போதுகூட தந்தையைக் கேட்டுக் கொண்டுதான் திறப்பான். தனக்கு வயது வந்த பிறகும் சாவி தந்தையிடமே இருந்தால் எவ்வளவு சாதுவான மகனுக்கும் சற்று அருவருப்பு ஏற்படுவது சகஜம்தான். இருந்தாலும் அப்படியொன்றும் கிளர்ச்சி செய்தவனல்ல நான். சாவி என்னிடம் இருந்தாலும் பெட்டி பெரியாரிடம்தான் இருக்கும் (குபீர் சிரிப்பு)

மேலும் இயக்கப் பணப்பெட்டியின் சாவியை அவர் என்னிடம் அளித்ததாக நான் கருதிக் கொள்ளவில்லை. மக்களுடைய உள்ளத்தின் சாவியை, சிறைச்சாலைப் பூட்டுச் சாவியை அதைத்தான் என்னிடம் ஒப்படைப்பதாக நான் கொள்கிறேன். அதை மிக மகிழ்ச்சியோடும் பொறுமையோடும் உபயோகித்து வருவேன்''.

இம்மாநாட்டிற்குப் பிறகு, தமிழர் சமுதாயம் மிகவும் மனநிறைவோடு இந்தியை எதிர்க்க ஆயத்தமாகியது. மேலும் கழகத்தில் இருந்து வந்த குழு மனப்பான்மையும் மறைந்தது. வடவர் ஆதிக்கத்தையும் இந்தித் திணிப்பையும் தகர்க்கக் கூடிய வல்லமை பெற்ற பாசறையாகக் கழகம் உருப்பெற்றது.அழகிரி உருக்கம்:-

ஈரோடு தனி மாநாட்டில் ஓர் உருக்கமான சம்பவம் நிகழ்ந்தது. காசநோயால் மிகவும் உடல் நலிவுற்று மாநாட்டு மேடையில் பேசவந்த பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமி மிகவும் உருக்கத்தோடு இரண்டொரு வார்த்தைகள் பேசினார்.

"எல்லாரும் இந்தியை எதிர்த்து சிறைக்குச் செல்லவேண்டிய தருணம். என் உடல் நிலையைப் பார்த்தால் அதுவரைகூட இருப்பேனோ? என்பது சந்தேகமாக இருக்கிறது. நான் இந்த நிலையிலும் மாநாட்டிற்கு வந்தது, என் தலைவருக்கு எனது கடைசி வணக்கத்தைத் தெரிவிக்கத்தான்'' என்று கூறியபோது மாநாட்டுப் பந்தலில் திரண்டிருந்த அனைவரும் கண் கலங்கினர்.

அண்ணா அழகிரியை சென்னைக்கு அழைத்து வந்து மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். மருத்துவர்கள் கைவிட்டநிலையில் அழகிரி பட்டுக்கோட்டைக்கே  அனுப்பி வைக்கப்பட்டார். அவரிடம் அண்ணா ரூ.1,000 உதவித் தொகையாக அளித்தார். தம்மைக் கூட்ட நிகழ்ச்சிகளுக்கு அழைப்போர் அழகிரியின் முகவரிக்கு ரூ.100 மணியார்டர் செய்து பெற்றுக் கொண்ட
ரசீதை அனுப்பினால் கூட்டத்திற்குத் தேதி தருவதாக அறிவித்தார் அண்ணா.

சிலநாள் படுக்கையில் இருந்து அழகிரி மரணமடைந்தார். அழகிரி குடும்பத்துக்கு ஈ.வெ.கி. சம்பத் ரூ.1,000 நிதியுதவி அளித்தார். என்.எஸ். கிருஷ்ணன் நாடகம் நடத்தி ரூ.6,000 அளித்தார்.

Kannan Natarajan

unread,
Jan 1, 2012, 4:35:36 AM1/1/12
to Min Thamizh

சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, காகஸ்சேரிப் பகுதியில் ஒரு பழைய கட்டடத்தில் சிறு அச்சக வசதியுடன் விடுதலை நாளிதழ் இயங்கிக் கொண்டிருந்தது. அதன் மேலாளர் ஈ.வெ.கி. சம்பத். காசாளர் கே. கோவிந்தசாமி. நிர்வாகப் பகுதியில் அ. திராவிட மணி, ஏ.கே. சாமி, மு. சண்முகம், பெரம்பூர் தங்கரூபன், எம்.எஸ். முத்து (சத்திய வாணி முத்துவின் கணவர்) போன்ற நண்பர்கள் பணியாற்றினர்.

ஆசிரியர் குத்தூசி குருசாமி. துணை ஆசிரியர்கள் இராம. அரங்கண்ணல், பு.கணேசன். பிழை திருத்துபவர் எம்.எஸ்.மணி. போர்மன் தில்லை கோவிந்தன் பொறுப்பில் அச்சகப் பகுதி. நகர விற்பனையாளர் கோபால். இப்படி சிக்கனமாக ஒரு நாளிதழ் வந்து கொண்டிருந்தது.

அதே பகுதியில் மீரான் சாகிப் தெருவில் பெரியாருக்குச் சொந்தமான ஒரு கட்டடம். சென்னை வந்தால் அங்கே தங்குவார். சம்பத்தும் அங்கேதான் தங்குவார்.

பெரியார் ஒரு நாள் ரிக்ஷாவில் விடுதலை அலுவலகத்துக்கு வந்து பரபரப்போடு இறங்கினார். "நல்ல காபி வாங்கி வையுங்கள். ஒரு நல்ல நாற்காலி கொண்டு வந்து போடுங்கள். எப்போது வருவாரோ தெரியவில்லை. வந்ததும் சொல்லுங்கள்'' என்று ஒரே பரபரப்பு.

யாரையும் வரவேற்பது என்றால் அய்யாவுக்குத் தனி மகிழ்ச்சி. மரியாதை காட்டுவதிலும் அவருக்கு இணை அவரே.

"யார் அய்யா வர்றாங்க?'' என்று அரங்கண்ணல் கேட்க, "ஒரு எம்.எல்.ஏ. என்னைப் பார்க்கிறதுக்கு வர்ராருங்க'' என்றார்.

அப்போதெல்லாம் எம்.எல்.ஏ., மேயர் என்றாலே பெரிய பதவிகள். அப்படிப்பட்ட பதவிகளை நினைத்துக் கூட பார்க்க முடியாத காலம்.

ஒரு டாக்சி வந்து நின்றது. எம்.எல்.ஏ. வந்து இறங்கினார். பழுத்த பழமான பெரியார் தம் உடம்பைத் தூக்கிக் கெண்டு எழுந்ததோடு எதிர்கொண்டு வரவேற்றார். அலுவலகத்தில் அனைவருக்கும் ஒரே வியப்பு.

எம்.எல்.ஏ.வை கனிவோடு அழைத்து வந்து, அவர் உட்கார்ந்த பிறகுதான் அய்யா உட்காருகிறார். தடபுடல் உபசரிப்பு... இத்தனைக்கும் அவர் வேறு யாருமல்ல. கழகத்தோடு தொடர்புள்ள அரவக்குறிச்சி ரத்தினம்தான்.

என்ன இருந்தாலும் எம்.எல்.ஏ. அல்லவா? விடுதலை அலுவலகத்தில் பெரியார் கவனம் செலுத்துமிடம் முதலில் நிர்வாகப் பகுதி. சம்பத்தோடு பல விஷயங்களை விவாதிப்பார். கோவிந்தசாமியிடம் கணக்கு வழக்குகளை கேட்டுக் கொள்வார். கே.கோவிந்தசாமி ஓரளவு வசதியுள்ளவர். தமக்காக எதையும் எதிர்பார்க்க மாட்டார். கணக்கு வழக்குகளில் கறாராக இருப்பார், நல்ல உள்ளமும் கொள்கைப்பிடிப்பும் உள்ள பெரிய மனிதர்.

ஒரு முறை அழகிரிசாமி விடுதலை அலுவலகத்திற்கு வந்து அய்யாவிடம், சென்னைக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் ஊருக்கு போகப் பணம் வேண்டுமென்றும் கேட்டார். "விஷயம் தெரிந்தது தானே? பணம் இல்லாம ஏன் வந்தீங்க? கூட்டம் நடத்தறவங்க கொடுத்த காசை என்ன பண்ணினீங்க?'' என்றெல்லாம் கேட்டு முகத்தை திருப்பிக் கொண்டார்.

விபரம் அறிந்த காசாளர் கோவிந்தசாமி அழகிரியைத் தனியே அழைத்து, ரூ. 40 தம் கணக்கில் கொடுத்து அனுப்பி வைத்தார். அப்படிப்பட்ட நல்ல மனிதர் கே. கோவிந்தசாமி. சிறிது நேரத்தில் அங்கு வந்த சி.பி. சிற்றரசு அய்யாவிடம் மாட்டிக் கொண்டார்.

ஓர் ஊருக்கு கூட்டத்திற்கு வருவதாக மணியார்டர் வாங்கிக் கொண்டு போகவில்லை. அது பற்றிய புகார்க் கடிதம் பெரியாரின் மேசைமேல் இருந்தது. வாக்கு நாணயத்தில் அய்யா கெடுபிடியாக இருப்பார். மறுபடியும் அந்த ஊரில் கூட்டம் பேசிவிட்டுதான் என்னைப் பார்க்க வேண்டுமென்று சிற்றரசுவிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

பெரியார் விடுதலைக்குத் தலையங்கம் தீட்டுவார். அவருடைய கையெழுத்தை எல்லோராலும் படித்துவிட முடியாது. நெட்டெழுத்தில் அமைந்திருக்கும். அச்சுக் கோப்பவர்கள் எளிதில் அறிவார்கள். முதலில் எழுதிய விஷயத்தைவிட அதிகமான விஷயங்களை மெய்ப்பு படிக்கிறபோது அய்யா சேர்த்துவிடுவார்.

டெலிபிரிண்டர் குளோப் போன்ற செய்தி நிறுவன எந்திரங்கள் வாங்கி வைத்து கட்சிச் செய்திகளோடு மற்ற முக்கியச் செய்திகளையும் வெளியிட வேண்டும் என்பது சம்பத் விருப்பம். அது தண்டச் செலவு என்பது பெரியாரின் கருத்து. கழகச் செய்திகள், பேச்சுகள் வெளிவந்தால் போதுமென்பார். இதற்குக் கூட யாருடைய படத்தையும் ப்ளாக் செய்து போட அனுமதியில்லை.

சிக்கனத்திற்காக மட்டுமல்ல. ஆடம்பரம் கூடாதென்பார் பெரியார். கொலையுண்ட கழகத் தோழரின் செய்தியோடு படம் வந்தால் நன்றாக இருக்குமென்று அரங்கண்ணல் சொல்வார். "ஒரு பழைய ப்ளாக்கைத் தேய்த்து விட்டு வெளியிட்டால் அதில் யார் என்பதே தெரியப் போவதில்லை. ப்ளாக் போட்டதில் திருப்திதானே?'' என்பார் பெரியார்.

அதற்கு முதல் நாள் அண்ணாவின் பேச்சு, என்.வி.என்னால் எழுதப்பட்டு முழுப்பேச்சு விடுதலையில் வந்தது. இதில் அரங்கண்ணல் ஆர்வம் மிகுதியாகி காஞ்சி மணி மொழியாரின் போர்வாள் அலுவலகத்தில் அண்ணாவின் ப்ளாக்கை இரவல் வாங்கி விடுதலையில் வந்த பேச்சுப் பகுதியில் படத்தைப் போட்டுவிட்டார்.

அன்று அய்யாவிடம் அரங்கண்ணல் ஏதோ கேட்க, பெரியாருக்கு நேற்று விடுதலையில் வெளிவந்த படம் நினைவுக்கு வந்து ஒரே சீற்றம். அய்யாவுக்கு ரொம்ப கோபம் வந்து விட்டால் தாமே "உம், உம்" என்று முனகுவார். "காசு கொடுத்து வாங்கலே ஐயா. ஓசியில் வாங்கிப் போட்டேன்'' என்று அரங்கண்ணல் சொன்ன பிறகு சமாதானம் அடைந்தார்.

சிங்களக் குயில் என அழைக்கப்பட்ட தவமணி தேவி என்னும் ஒரு பிரபல கவர்ச்சிக் கலைஞர் அக்காலத்தில் பிரபலமாயிருந்தார். ஒரு நாள் அந்தப் பெண்மணி பெரியாரைப் பார்க்க விடுதலை அலுவலகத்திற்கு வந்துவிட்டார். நடிகை என்பதால் அவரைப் பார்க்க வெளியில் ஒரே கூட்டம். எல்லோரையும் வரவேற்பது போல் ஐயா அவரையும் மிகுந்த மரியாதையோடு வரவேற்றார்.

அந்தக் கலைஞர் எதற்காகத் தம்மைத் தேடி வந்தார் என்பது ஐயாவுக்குப் புரியவில்லை. அனைவரும் வியப்போடு பார்த்தனர். தாம் சிலோனில் இருந்து வந்த சினிமா படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாகவும், அய்யாவின் பேச்சு, கட்சிக் கொள்கைகள் ரொம்பவும் பிடித்தமாக இருப்பதாகவும் அந்த நடிகை பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார்.

அய்யாவும் மிகுந்த ஆர்வத்தோடு,"சொல்லுங்கம்மா"என்று கேட்டுக் கொண்டிருந்தார்."அடுத்த வாரம் பிராட்வேயில் திருவள்ளுவர் மாநாடு நடக்குதுங்க. நீங்க வந்து கலந்துக்குங்க'' என்று கூறியதோடு வாயில் வரையும் வந்து வழி அனுப்பி வைத்தார். சம்பத் உள்பட அனைவருக்கும் ஒரு சினிமாக் கலைஞர், அதுவும் பெண் கலைஞர் நமது அலுவலகத்தைத் தேடி வந்ததில் ஒரே வியப்பு.

அய்யா இருக்கையில் வந்து அமர்ந்ததும், "அப்பாடி எவ்வளவு பெரிய காரு... படகு மாதிரி வச்சிருக்காங்க அந்தம்மா'' என்று தம்முடைய வியப்பைத் தெரிவித்தார்.

அலுவகத்திலேயே அரங்கண்ணல் சினிமா விஷயத்தில் ஆர்வம் மிகுந்தவர். ஆகவே வந்த பெண்மணியைப் பற்றித்தான் அறிந்து வைத்ததையெல்லாம் விளக்கமாகவே எடுத்து விட்டார்.

"நீங்க என்ன வேணா சொல்லுங்க. நடிகைங்கண்ணா அப்படித்தான் இருப்பாங்க. எப்படி இருந்தாலும் அவங்களுக்கு என் கொள்கையிலே ஒரு ஆசை வந்த மாதிரி வேற எந்த நடிகைக்கு வந்திருக்கு?'' என்றார் அய்யா.

மறுவாரம் நடந்த திருக்குறள் மாநாட்டு மேடையில் தவமணி தேவியும் தவறாது இடம் பெற்றிருந்தார். அன்றிரவு நடந்த அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் சிவாஜி வேடத்தில் சம்பத் நடிக்கவில்லை. பெரியார் இருந்ததால் சட்டக் கல்லூரி மாணவர் இரெ. இளம்வழுதி சிவாஜியாக நடித்தார்.

இந்தி எதிர்ப்பு அறப்போர் மறியல் தொண்டர்களுக்காக வாங்கிப் போட்டிருந்த காய்கறிகளில் மீதியானவற்றை சமையலுக்காக அய்யா மீரான் சாகிப் தெரு இல்லத்திற்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.

அதை மணியம்மை சமையல் செய்ய அண்ணா உட்பட பிரமுகர்கள் உணவருந்தினர். அன்று மாலை சினிமாவுக்குப் போகலாம் என்று அண்ணாவும் சம்பத்தும் வெளியே புறப்பட்டனர். எதிர் வந்த அரங்கண்ணலையும் சேர்த்துக் கொண்டனர். மூவரும் வெளியே கிளம்புவதை தமது அறையிலிருந்தபடி அய்யா பார்த்துவிட்டார்.

"எங்கே போறீங்க...?'' என்று கேட்டுக் கொண்டே நெருங்கி வந்தார்.

"வெளியே போய் காபி சாப்பிட்டு வரலாம்னுய்யா'' சம்பத் சொன்னார்.

"எங்கே காப்பி நல்லா இருக்கும்...?'' பெரியார் கேட்டார்.

"பக்கத்துல இந்தியா காப்பி ஹவு
சுன்னு இருக்கு. அங்கேதான்''  சம்பத் கூறினார்.

"அப்ப உங்களோட நானும் வர்ரேன்'' என்று சொல்லிக் கொண்டே அய்யாவும் புறப்பட்டு விட்டார். மூவருக்கும் திகைப்பு, வியப்பு. சினிமாவுக்குப் போகிற விஷயம் கெட்டுவிடுமே என்னும் சஞ்சலம், அய்யாவும் விடுவதாய் இல்லை.
"வாங்க... நடங்க... போவோம்....'' என்று அவர்களோடு மீரான் சாகிப் தெருவில் இருந்து தடியை ஊன்றிக் கொண்டு அய்யாவும் நடந்து போவதைத் தெருவில் அனைவரும் வேடிக்கை பார்த்தனர். இந்தியா காப்பி ஹவுசிலிருந்தவர்களுக்கும் பெரியாரைப் பார்த்ததும் அதிர்ச்சி, வியப்பு.

வழக்கமாக முந்திரிப் பருப்பு, சமூசா, ஆம்லேட் என்று அண்ணாவோடு விரும்பிச் சாப்பிடும் சம்பத்துக்கு அய்யாவின் சிக்கனம் இடையூறு. "காப்பி போதுமய்யா'' என்றார் அண்ணா.

"வெறும் காப்பிக்கா இவ்வளவு நடந்தோம். என்னா வேணும்னாலும் சாப்பிடுங்க'' என்றார் அய்யா.

பதினெட்டு ரூபாய்க்கு பில் வந்தது. என்னவோ தெரிய வில்லை. அன்று அய்யா முகம் சுளிக்கவில்லை. "கொள்ளை அடிக்கறானுங்க... மோசங்க... முந்திரிப் பருப்பு மூணு ரூபாயா?'' என்று முணுமுணுத்துக் கொண்டே பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

அந்தப் பாசம் மிகுந்த நிகழ்ச்சியை, அய்யா ஒரு குழந்தையைப் போல் குதித்துக் கொண்டு நடந்தே வந்து உபசரித்ததை அண்ணா அடிக்கடி உருக்கமாக நினைவு கூர்வதுண்டு.

முதல் சிறைவாசம்

கருப்புச்சட்டைப் படைக்குத் தடை விதித்ததைக் கண்டித்து 7.3.48 இல் சென்னை பெரியமேட்டுத் திராவிடர் கழக முதல் மாநாடு வி.கே. சுப்பராயலு தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பெரியார், அண்ணா, ஈ.வெ.கி. சம்பத், ஆரிய சங்கரன், டி.பி. வேதாசலம் ஆகியோர் உரையாற்றினர்.

இம்மாநாட்டில் பேசிய சம்பத், கழகம் மிக நெருக்கடி யானதோர் கட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தோழர்கள் அனைவரும் பொறுமையினைக் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும் இந்தித் திணிப்பைக் கண்டித்தும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை நெருங்கிக் கொண்டிருப்பதாக பெரியார் ஓர் அறிக்கையினை வெளியிட்டிருந்தார். இதனையொட்டி 22.8.48 இல் சென்னை மீரான் சாகிப் தெரு பெரியார் இல்லத்தில் திராவிடர் கழக நிர்வாகக் குழுக் கூட்டம் பெரியார் தலைமையில் நடைபெற்றது. உறுப்பினர்கள், பார்வையாளர்கள் என 93 தோழர்கள் பங்கேற்றனர்.

கமிட்டிக் கூட்டம் முடிவுற்றதும் காவல் துறையினர் பெரியார், அண்ணா, சம்பத், என்.வி.என். மணியம்மையார், மதியழகன் அனைவரையும் கைது செய்தனர். ஈ.வெ.கி. சம்பத் கைதாவது இதுவே முதல் தடவை. அனைவரும் 6 நாள் சிறை வாசத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.

Kannan Natarajan

unread,
Jan 12, 2012, 1:27:52 AM1/12/12
to Min Thamizh

இந்தி எதிர்ப்பு நாள்:

10.11.48 புதனன்று திராவிடர் கழகத்தின் சார்பாக இந்தி எதிர்ப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. சென்னை முத்தியாலுபேட்டை கழகக் கிளை சார்பாக பிராட்வே தியேட்டர் அருகில் உள்ள திடலில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்திற்குக் காஞ்சி மணிமொழியார் தலைமை. ஈ.வெ.கி.சம்பத், இரா.நெடுஞ்செழியன், என்.வி.என். ஆகியோர் பேசினர்.

 

 சம்பத் பேச்சு

"நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள் ஆதரவைக் கண்டு அச்சப்படும் ஆட்சியாளர்கள் நம்மைத் தகுதியற்ற முறையில் தாக்கிப் பேசி வருகிறார்கள். சில தினங்களுக்கு முன் சட்டசபையில் பேசிய கல்வி அமைச்சர் அவினாசிலிங்கனார் நம்மை வகுப்புத் துவேஷிகள் என்று குற்றம் சாட்டி, தமிழில் உண்மைப் பற்றுதல் கொண்டவர்களாயின் இவர்கள் தம் ஆட்சிக் காலத்தில் தமிழுக்குச் செய்ததென்ன? என்று கேட்டிருக்கிறார்.

சேர,சோழ, பாண்டியர் காலத்திற்குப் பிறகு இதுவரை யாரும் செய்திராத அளவுக்கு திராவிடர் கழகம் தமிழ்த் தொண்டு புரிந்திருக்கிறது என்பதை எந்த அறிவாளியும் ஒப்புக் கொள்வான். இலக்கியத்தில் புரட்சி செய்தோம். தமிழைப் புதுப்பாதையில் திருப்பிவிட்டோம். புத்தகத் துறையில், பேச்சுத் துறையில், நாடகத் துறையில் யாவற்றிலும் மறுமலர்ச்சியை உண்டாக்கினோம். அவினாசியார் புகழ்ந்து போற்றும் அளவுக்கு சொற்பொழிவாற்றும் திறன் படைத்த அறிஞர் அண்ணாவை நம் கழகத்தின் தளபதியாகப் பெற்றிருக்கிறோம்.

"இந்தியா வாழ்க" என்று கூறுவதற்கு வக்கில்லாமல் "ஜெய்ஹிந்த்" என்று சொல்லித் திரியும் இவர்கள், நல்ல தமிழில் "வணக்கம்' என்று சொல்லத் தெரியாமல், "நமஸ்காரம்" என்று சொல்லித் திரியும் இவர்களா தமிழை வளர்ப்பவர்கள்? சட்டமன்றத்தில் தகுந்த பாதுகாப்புடன் இருக்கிறோம் என்கிற ஆணவத்தால் அங்கே மன்றத்தில் மக்கள் இல்லை என்ற தைரியத்தில் அமைச்சர் இம்மாதிரி கூறிவிட்டாரே ஒழிய, மக்கள் மன்றத்தில் வந்து இம்மாதிரி பேசத் துணிவாரா இவர்?

மற்றொரு காங்கிரஸ்காரர் கூறுகிறார், இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஓர் அரசியல் போராட்டம் என்று. நாங்கள் மறுக்கவில்லையே அதை .

அரசியல் போராட்டம் நடத்துவதென்பது பஞ்சமா பாதகங்களுள் ஒன்றல்லவே. நீங்கள் விடுதலை பெற்றது அரசியல் போராட்டம் நடத்தித்தானே? பஜனை பாடியா சுதந்திரம் பெற்றீர்கள்? இந்தித் திணிப்பு என்று ஒன்று உள்ளவரை எங்கள் போராட்டம் நீடித்தபடிதான் இருக்கும். நம்மை அசட்டை செய்து வருகிறார்கள். எப்போதுமே மக்கள் உணர்ச்சியை, மக்கள் அபிப்ராயத்தை மதித்து நடப்பவர்கள் அல்ல இவ்வாட்சியாளர்கள். டெல்லியிலிருந்து வரும் உத்தரவைத்தான் மதிப்பார்கள். அதனால் தான் மக்கள் எதிரில் மதிப்பற்றுப் போகிறார்கள்.

பதவியில் பற்றுதல் உள்ளவர்களுக்குத்தான் இன்றைய காங்கிரஸ் ஏற்றதேயொழிய உண்மைத் தொண்டு செய்ய ஆசைப்படும் இளைஞர்களுக்கு எவ்விதத்திலும் ஏற்றதாகாது.

தோழர்களே, நாட்டுக்கு நற்பணியாற்ற நல்லதோர் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்று மகிழ்ச்சியடையுங்கள். கிடைத்த வாய்ப்பை சரிவரப் பயன்படுத்திக் கொண்டு உண்மைத் தொண்டு செய்ய முன் வாருங்கள்.''

 

 கோவை மாநாட்டில் கேள்வி

1949 பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் திருக்குறள் மாநாட்டைப் பெரியார் நடத்தினார். இதற்கு முன்பெல்லாம் அவர், "மொத்தத்தில் புலவர்களே மோசம், தமிழ் இலக்கியமே குப்பை, தமிழே காட்டுமிராண்டி மொழி", என்றெல்லாம் கருத்துக் கூறியதால் தமிழ்ப்புலவர்கள் மத்தியில் கடும் கோபமும் எதிர்ப்பும் ஏற்பட்டன.

அண்ணா, சம்பத், நெடுஞ்செழியன் போன்றவர்கள் பெரியாரிடம் புராணங்களை எதிர்க்கிற வேகத்தில் திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவற்றையும் சேர்த்துத் தாக்குவது முறையல்ல. தமிழுக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் நாமே பாதுகாப்பு. குறள் உலகப் பொதுமறை என்பதை நாம் உணர்த்த வேண்டும் என்றெல்லாம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே ஓதிய பிறகு தாமதித்தேனும் பலன் ஏற்பட்டது. இப்போது பெரியார் தமிழ் இலக்கியங்களையும் புலவர்களையும் தாக்குவதை நிறுத்திக் கொண்டார்.

இப்போது அவரே மனமுவந்து இவ்வாண்டு பொங்கல் திருநாளைத் திருக்குறள் மாநாடாக நடத்த ஏற்பாடு செய்தார்.

 

இராஜாஜி - பெரியார் சந்திப்பு

1949 ஆம் ஆண்டு மே திங்கள் 14ஆம் நாள் கவர்னர் ஜெனரல் 
இராஜகோபாலாச்சாரியார் திருவண்ணாமலை வந்திருந்தார். திடீரென்று அவரைச் சந்திப்பதற்காகப் பெரியார் மணியம்மையுடன் திருவண்ணாமலை சென்றார். அங்கு ஆச்சாரியாருடன் ஒருமணி நேரம் இரகசியப் பேச்சு நடந்தது. பத்திரிகையிலும் செய்தி வெளிவந்தது. இது கழக முன்னணி வீரர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது. பலர் பலவிதமாகப் பேசலாயினர். இராஜாஜியுடன் பேசியதைப்பற்றி பெரியார் எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் மே 28ஆம் நாள் கோவையில் மாவட்டக் கழக மாநாடு நடைபெற்றது. தி.பொ. வேதாசலம் தலைமை, அண்ணா சிறப்புரை. மூவலூர் 
இராமாமிருதத்தம்மையார் கொடியேற்றினார். இந்த மாநாட்டில் யாரும் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசவில்லை. ஆனால் ஜி.டி. நாயுடு பேசுகையில், "ஈரோடு சிறப்பு மாநாட்டில் அண்ணாவிடம் பெட்டிச் சாவியை கொடுப்பதாகச் சொன்னீர்களே. இப்போது ஏன் திருவண்ணாமலை போய் ஆச்சாரியாரைச் சந்தித்தீர்கள்? தர்மம் என்ன? அங்கு பேசிய இரகசியம் என்ன?'' என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பெரியார் எவ்விதச் சலனமுமின்றி பதில் சொல்ல மறுத்துவிட்டார். "அது என் சொந்த விஷயம்'' என்று மட்டும் கூறினார்.

இதுவரை பெரியாருக்குச் சொந்த விஷயம், பொது விஷயம் என்று இரு வேறுபட்ட நிலை இருந்ததில்லை. நீண்ட நெடிய அவரது பொது வாழ்க்கை திறந்த புத்தகமாகவே காட்சியளித்துள்ளது. இப்போது அதில் சொந்த விஷயம் ஊடுருவியிருப்பது கண்டு கழகப் பிரமுகர்கள் வருந்தினர்; குழப்பமுற்றனர். ஆயினும், மாநாட்டில் எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை.

பெரியார் மணியம்மையுடன் சென்னை திரும்பினார். அண்ணா, சம்பத்துடன் காஞ்சி புறப்பட்டார். "விபரீதமாக அய்யா எதையும் செய்துவிட மாட்டார். இப்படித்தான் எதையாவது செய்து மாட்டிக் குழப்பிக் கொண்டிருப்பார். எல்லாம் சரியாகி விடும்'' என்று அண்ணா சம்பத்திற்கு ஆறுதல் சொன்னார்.

காஞ்சியில் ஒருநாள் தங்கிவிட்டு மறுநாள் சென்னை விடுதலை அலுவலகத்திற்கு வந்தார் சம்பத்.

 

பெரியார் தந்த விளக்கம்

விடுதலை அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. சம்பத் உள்பட அனைவரும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஈரோட்டில் இருந்து கணக்குப் புத்தக மூட்டைகளை சுமந்துகொண்டு வந்த அ. சங்கரையா பெரும் சத்தத்தோடு, "இந்தக் கிழவனுக்குப் புத்தி போன போக்கைப் பாத்தீங்களா? யார்கிட்டையும் ஏதும் சொல்லாம என்ன செஞ்சிட்டாரு பாருங்க. இந்த வயசிலே கல்யாணம் செஞ்சிக்கப் போறாராமே, கல்யாணம்'' என்று கூச்சல் போட்டுக் கொண்டே சம்பத்தை நோக்கி பாய்ந்து ஓடிவந்து "ஓ"வென்று அழ ஆரம்பித்துவிட்டார். கோவை மாநாட்டில் பெரியார், சொந்த விஷயம் என்று சொன்னது இது தானோ? என்று எல்லோரும் வியந்தனர். சங்கரையாவை சுற்றி நின்று விவரம் கேட்டனர் ஆவலோடு.

சாதாரணமாகவே சங்கரையாவுக்கு சுருங்கச் சொல்லி விளங்க வைக்கத் தெரியாது. முழுக்கதையையும் பேச ஆரம்பித்துவிடுவார். குருசாமி குறுக்கிட்டு,"பொண்ணு யாருப்பா?'' என்று கேட்க அழுதுகொண்டே பேசிய சங்கரையா, "அட உங்களுக்குத் தெரியாதா? மணியம்மாவை கல்யாணம் பண்ணிக்கிறதா?"மெட்ராஸ் ரிஜிஸ்டிரார் ஆபீஸ்லே எழுதி வச்சாச்சுங்க'' என்றதும் சம்பத் உட்பட அனைவரும் திகைத்துப் போய் அதிர்ச்சியோடு நின்றனர்.

சம்பத்தைப் பார்த்து அரங்கண்ணல் கேட்டார், "என்ன இது உண்மையாய் இருக்குமா?"எல்லாம் எதிர்பார்த்ததுதான், வருகிறேன்" என்று சொல்லிக்கொண்டே அறைக் கதவை "படார்" என்று சாத்திவிட்டு சம்பத் வெளியேறினார். உதவியாளர்கள் பின்னே ஓடினர். "காஞ்சிபுரம் போய் வரேன்'' என்றபடி வேகமாகப் போனார்.

விடுதலை அலுவலகமே தேம்பித் திகைத்து நின்றது. "அரங்கண்ணல் நீ பார்த்துக்க, சாய்ந்திரம் வரேன்'' என்று குருசாமி வீட்டுக்குப் புறப்பட்டார்.

என்ன நடக்கிறது என்று வேவு பார்த்துவிட்டு வந்த தோழர் விடுதலை ஆபீசில் வந்து தலையில் கைவைத்தபடி வருத்தத்தோடு சொன்னார்: "ஜார்ஜ்டவுன் 1வது லைன் பீச்சு ரோட்ல இருக்கிற ரிஜிஸ்ட்ரார் ஆபீசில் ஐயாவுக்கு கல்யாணம்னு போர்டே எழுதி வைச்சுருக்கானுங்க'' என்று சோகத்தோடு சொன்னார்.

அந்த நேரத்தில் பெரியாரிடம் இருந்து வந்த தவமணிராஜன், "இந்த அறிக்கையை ஐயா இன்றே போடச் சொன்னாங்க‘' என்று கொடுத்தார். அதை ஆவலோடு வாங்கிப் பிரித்துப் பார்த்தார் அரங்கண்ணல். விளக்க அறிக்கை என்று தலைப்பிட்ட ஐயாவின் அறிக்கை அன்றைய விடுதலை இதழிலேயே இடம் பெற்றது.

19.6.49 அன்று விடுதலை ஏட்டுக்கு, விளக்கம் என்ற தலைப்பில் பெரியார் தன்னிலை விளக்கமாக நீண்டதொரு அறிக்கையை அனுப்பியிருந்தார். அதை ஆசிரியர் குருசாமி அன்றைய இதழிலேயே இடம்பெற வைத்தார்.

 

அவ்வறிக்கையின் முக்கிய கருத்துகள்:

சி.ஆர். அவர்களிடம் நான் பேசியது (
இரகசியம்) பற்றி கோவை மாநாட்டிலேயே பிரஸ்தாபிக்கப்பட்டது யாவருக்கும் தெரியும். அது மிகுதியும் என் சொந்த விஷயம் என்று நான் முதலிலேயே தெரிவித்து விட்டேன். கோவையிலும் அதை நான் தெரிவித்ததோடு ஒரு விஷயம் அதிகமாகவும் சொல்லிவிட்டேன். அதாவது இயக்க விஷயத்தில் இதுவரை அலைந்ததுபோல் அலைய உடல்நலம் இடம் கொடுக்கவில்லை என்றும், என்னைப் போல் பொறுப்பு எடுத்துக் கொள்ளத்தக்க ஆள் யார் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளவர்கள் கிடைக்கவில்லை என்றும், ஆதலால் எனக்கு வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி அவர் மூலம் ஏற்பாடு செய்துவிட்டுப் போக வேண்டுமென்று அதிகக் கவலை கொண்டு இருக்கிறேன் என்றும், இது பற்றி சி.ஆர். அவர்களிடம் பேசினேன் என்பதாகவும் சொல்லி இருக்கிறேன். இது தவிர உண்மையில் சி.ஆருடன் பேசியதில் வேறு இரகசியம் இல்லை.

இந்தப்படி நான் சொன்னதாவது குறை கூறித் திரிகிறவர்களுக்கு மேலும் குறைசாற்ற அதிக வசதி ஏற்பட்டுவிட்டதாகவும் தெரிகிறது. ஏனென்றால் இயக்கத் தோழர்களில் ஒருவரிடம் கூட ஈ.வெ.ராவுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லுவது, இயக்கத் தோழர்களை அவமானப்படுத்தியதாக ஆகிறதென்றும் அப்படிச் சொன்ன பிறகு ஈ.வெ.ராவிடம் மற்றவர்கள் எப்படி நம்பிக்கை வைக்க முடியும்? என்றும் இப்படியாக பலவிதமாகச் சொல்லப்படுவதாகத் தெரிகிறது. இதைப்பற்றி நான் அதிகம் விவரிக்க ஆசைப்படவில்லை.

இன்றைய அரசியல் நிலையில் அரசியலாருக்கு நாம் அழிக்கப்பட வேண்டுமென்ற அவசியம் இருக்கிறது. இதற்கு நம்மில் ஓர் ஆளாவது தன்னுடைய அழிவை லட்சியம் செய்யாமல் பலி ஆக வேண்டியது அவசியமான காரியமாகும். ஏனெனில் அந்தப் பலிதான் இயக்கத்தை என்றும் அழிக்காமல் காப்பதாகும். அந்தப் பலிக்கு முதலாவது தகுதி நான் என்றுதான் உண்மையாகக் கருதி இருக்கிறேன். இது அகம்பாவமான கருத்தாக சிலருக்குத் தோன்றலாம். தோன்றினால் குற்றமில்லை, உண்மை அதுதான். உண்மையை வெளிப்படுத்த அதற்கு விலை கொடுப்பது போல் இந்த அகம்பாவக் குற்றத்துக்கு நான் ஆளாக்கப்படும் விலையைக் கொடுத்து அதைச் சகித்துக் கொள்ளுகிறேன். நான் பலி ஆவது என்பதை இன்று நேற்றல்ல, சில ஆண்டுகளாகவே முடிவு செய்து கொண்டிருக்கிறேன். என்றாலும் இந்தி எதிர்ப்பு துவக்கப்படும் பொழுதே உறுதியாக முடிவு செய்து கொண்டுதான் துவக்கினேன். இதை இந்த ஆண்டில் 3, 4 தடவை குறிப்பிட்டுமிருந்தேன். அதாவது, என்னைப் பற்றி ஓர் ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறேன். அது முடிந்தவுடன் தீவிரமாக இறங்கி நடத்தப் போகிறேன் என்று பேசியும் எழுதியும் இருக்கிறேன். சிறையில் இருந்து வந்தவுடன் பிராட்வே மைதானக் கூட்டத்தில் சொன்னேன்.

அந்த ஏற்பாட்டை இனி நான் நடத்தப்போவதில்லை. உடன் செய்துவிட்டுப் பலி பீடத்திற்கு வரப்போகிறேன்.

நம்பிக்கையான ஒருவர் எனக்கு கிடைக்கவில்லை என்றால் அதற்கு யாரும் கோபித்து கொள்ளக்கூடாது. கோபிக்கிறவர்களோ குறை கூறுகிறவர்களோ அப்படிப்பட்ட ஒருவரைச் சொன்னால் நான் ஏற்கத் தயாராய் இருக்கிறேன். நம் இயக்கத்துக்குத் தொண்டாற்ற, பொறுப்பேற்க முழு நேரத் தோழர்கள், தங்களை முழுதும் ஒப்படைப்பவர்கள் யார் இருக்கிறார்கள்? ஆதரவாளர்கள் அநேகர் இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் திராவிட மக்கள் பெரிதும் மதித்து, நம்பிப் பின்பற்றக்கூடிய அளவுக்கு நிலைமை கொண்டவர்களும் இயக்கத் தொண்டே தன் முழு நேர மூச்சாகக் கொண்டவர்களுமாய் இருந்தால் அல்லவா அது பயன்படும்? அதனால் அப்படிப்பட்டவர்கள்தான் என் கருத்துக்கு எட்டவில்லை என்றேன். அதனால் நான் பலியாக வேண்டியிருக்கிறது. இதைப் பொதுமக்கள் சீக்கிரம் காணத்தான் போகிறார்கள்.

என்னைப் பற்றி, என் பெயரைப்பற்றி, என் நடத்தையைப் பற்றி உங்களுக்குக் கவலை வேண்டாம். நீங்கள் எனக்கோ இயக்கத்துக்கோ உண்மையாய் நடந்து கொண்டீர்களா? என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றதை எனக்கே விட்டுவிடுங்கள்.

என் வாழ்நாளில், அதாவது என் பொதுவாழ்வில் எனக்குக் கிடைத்த வெற்றிகள் எல்லாம் என் எதிரிகளாலும் எனக்குக் கேடு நினைத்தவர்களாலும் என்னை ஏமாற்றியதாக ஏமாற்றுவதாகக் கருதிக்கொண்டு நடந்தவர்களாலுமேதான் பெரிதும் கிடைத்திருக்கிறது என்பது எனது தெளிவு. ஆதலால் எதிர்ப்புக்கு, சதிக்கு நான் கவலைப்படுவதில்லை.

பெரியாரின் இந்த விளக்கம் மக்களுக்கு, குறிப்பாக இயக்க ஆதரவாளர்களுக்கு அதிலும் முக்கியமாக இயக்க முன்னனி வீரர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. யாரிடத்திலும் நம்பிக்கையில்லை என்ற வார்த்தை வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போல் இருந்தது, கழகத்தவர் பலரும் கலங்கினர்.

Kannan Natarajan

unread,
Jan 17, 2012, 1:30:20 AM1/17/12
to Min Thamizh

விடுதலையில் இருந்து விலகல்

பெரியார் மணியம்மையுடன் சென்னைக்கு விரைந்து வந்தார். விடுதலையில் மேலும் சில விளக்கங்களை எழுதினார்.

மீண்டும் 28.6.1949 விடுதலை இதழில், "எனக்கு வயது எழுபத்து ஒன்றுக்கு மேலாகிறது. நான் பொது வாழ்வில் நாற்பது, ஐம்பது ஆண்டுக்கால அனுபவம் உடையவன். பொது மக்களின் மனப்பான்மை தெரிந்தவன். நான் நான்கு ஐந்து ஆண்டுக் காலமாகப் பழகி நம்பிக்கைகொண்டதும் என் நலத்தில் உண்மையான பற்றும், கவலையும் கொண்டு நடந்து கொண்டிருப்பதுமான மணியம்மையை எப்படியாவது வாரிசு உரிமையாக ஆக்கிக் கொண்டும் அந்த வாரிசு உரிமைகளையும், தனிப்பட்ட தன்மையையும் மற்றும் நான்கு, ஐந்து பேர்களையும் சேர்த்து இயக்க நடப்புக்கும் பொருள் பாதுகாப்பிற்குமாக ஒரு டிரஸ்ட் பத்திரம் எழுத ஏற்பாடு செய்திருக்கிறேன்'', பெரியாரின் அறிக்கை நாட்டில் பெரியதொரு குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஈரோட்டில் சிறப்பு மாநாட்டில் அண்ணாவைப் பெருமைப்படுத்தி பேசிய பெரியார் எனக்குப் பின் அண்ணாத்துரை ஒருவர் போதும், நமது கழகத்தை வழி நடத்திச் செல்ல என்று முழக்கமிட்ட செய்தி ஏடுகளில் வெளிவந்து, அந்த மை காயும் முன்னே, யாரை நம்புவது, ஒருவரும் இல்லை எனக்கு வாரிசு தேவை என்று புலம்புவரானால், இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது?

பரம்பரையாகப் பார்த்தாலும் பெரியாருக்கு சம்பத்தானே வாரிசு?

தம் அண்ணன் மகன் சம்பத்தை வாரிசாக்க கண்ணுங்கருத்துமாக வளர்த்தார். மாணவர் கழகத்தின் தலைவராக்கினார். கருஞ்சட்டைப் படையில் அமைப்பாளராக்கினார். படிப்படியாக உயர்த்தினார் சம்பத்தை. ஆனால் சம்பத் என்ன சோடையா போனார்?

நாடு காணாத மாணவர் இயக்க வளர்ச்சியை உருவாக்கினார். கருஞ்சட்டைப் படையின் மூலம் ஆயிரமாயிரம் தொண்டர்களைத் திரட்டிக் காட்டினார். மேடைகளில் அவரது பேச்சு வன்மை எல்லோரையும் புரட்டிப் போட்டது. நடிப்புத் திறனும் வாதிடும் திறனும் அவரிடம் இருந்தன. அவர் எதில் சோடை போனார்?

இந்த இளம் வயதில், இத்தனை துடிப்பா? ஆற்றலா? அறிவின் சிதறலா? என்றெல்லாம் அழகிரியும், பாரதிதாசனும் பாராட்டியும் கூட, அந்தச் சம்பத் பெரியாருக்கு வாரிசாக முடியாதா?

எங்கேயிருந்து எப்படியோ இடம் பிடித்த மணியம்மைதாம் வாரிசா? என்றெல்லாம் கொந்தளித்துக் குமுறினர் தோழர்கள்.

பெரியாருக்குக் கண்ணீர்க் கடிதங்கள்.


71 வயதான பெரியார் 26 வயதே ஆன மணியம்மையை மணம் புரிவது பகுத்தறிவுக்கு ஒவ்வுமா, சொல்வேறு செயல் வேறு அறியாப் பெரியாரே ஏன் இப்படி முரண்பட்டு விட்டார்? என்று கேட்டனர் தோழர்கள்.

விடைதான் இல்லை.

ஐயாவின் அந்தரங்கச் செயலாளர் என்.வி. நடராசனுக்குக் கூடத் தெரியாது.

அவ்வளவு
ரகசியம் குத்தூசி ஆசிரியர் குருசாமி நீண்டதொரு காலம் பெரியாரின் அறிந்த தொண்டர், தலைவர் ஆவார். அவரிடம் கேட்டாரா பெரியார்?

இல்லை.

நீதிக் கட்சியில் அவர் விரும்புகின்ற மரியாதைக்குரிய தலைவர்கள் முத்தையா முதலியார், முத்தையா செட்டியார் ஆகியோரைக் கேட்டாரா? இல்லை.

பெரியார் காலால் இட்ட பணியைத் தலையால் செய்யவும் தயங்காத எத்தனையோ தொண்டர்கள், அவர்களில் அவருக்கு மிகவும் பிடித்தமானவர்களாக விளங்கிய, கே. கோவிந்தசாமி, சி.டி.டி. அரசு, ஏ.பி. ஜனார்த்தனம், திராவிட மணி, தவமணிராஜன் இப்படி எவரையும் கேட்டாரா? இல்லையே.

மாற்றார்களுக்கு மார்தட்டிச் சொல்லுவாரே, நான் செத்தாலும் இந்த இயக்கத்தை காக்க அண்ணாத்துரை இருக்கிறார் என்று அந்த அண்ணாவைத்தான் அழைத்துக் கேட்டாரா...?

தோளிலும், மடியிலுமாகப் போட்டு வளர்த்து, தாம் வாரிச்சென்று கொஞ்சி மகிழ்ந்தாரே அண்ணன் மகன் சம்பத் அவரிடம் இது பற்றிச் சொன்னதுண்டா?

தமக்கும், தன் குடும்பத்திற்கும் மரியாதைக்குரிய தலைவர் தம் அண்ணன் மூத்தவர், ஈ.வெ. கிருஷ்ணசாமியிடம், மரியாதைக்கு ஒரு வார்த்தை கேட்டாரா? எல்லோரும் திகைத்தனர். தேம்பினர். திக்குத் தெரியாத காட்டில் சிக்கித் தவித்தனர்.

திருமணத்தைத் தடுத்து நிறுத்தக் கட்சிப் பெரியவர்கள் எஸ். குருசாமி, கே.கே. நீலமேகம், என்.வி. நடராசன், வேலூர் திருநாவுக்கரசு போன்றோர் முயன்று பார்த்தனர். பெரியார் மசியவில்லை.

இதனைக் கேள்வியுற்ற அண்ணா காஞ்சியில் போய்ப் படுத்துவிட்டார்.

தீவிரவாதிகள் சிலர் சம்பத்தைச் சூழ்ந்துகொண்டு இயக்கச் சொத்துகளை கைப்பற்றுவோம் என்று ஆவேசமடைந்தனர். அதற்குச் சம்பத் கேவலம் வீடு, மனை, வாசல் ஆகிய சொத்துகள் முக்கியமல்ல. இயக்கத்தின் கொள்கையே சோதனைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது என்று வருந்தினார்.

அரங்கண்ணலும் பூ. கணேசனும் பழைய குடியரசு கோப்புகளை எடுத்து வந்து ஏதோ தேடிக் கொண்டிருந்தார்கள். பொருந்தாத் திருமணம் பற்றிய பெரியாரின் பேச்சு கண்ணில் பட்டது. ஓர் இளம் பெண்ணை வயோதிகன் கட்டிக்கொள்வது அயோக்கியத்தனம் என்பது பற்றிய பெரியாரின் பழைய பேச்சு. அதை அப்படியே வெட்டியெடுத்து, தக்க வயதும், பொருத்தமுமே திருமணத்தின் லட்சியங்கள்....

பெரியாரின் பேருரையென்று கொட்டையெழுத்துக்களில் தலைப்பு போட்டுக் கொடுத்து விட்டனர். பதறிப் போனார் போர்மேன் தில்லை. எழுந்து வந்து சம்பத்திடம் காட்டி அனுமதி கோரினார்.

படித்துப் பார்த்த சம்பத், "போடுங்க முதல் பக்கத்திலேயே போடுங்க'' என்று அனுமதி கொடுத்துவிட்டார். கம்போஸ் செய்து அச்சேறிய பத்திரிகை வெளிவந்தது. எல்லோரும் சம்பத்திடம் போய் நின்றனர். "இன்னிக்கு பத்திரிகையை ஐயா பாத்திட்டு கோபமா வருவாரு, நமக்குத் தாங்காதுங்க. எங்க இராஜினாமா கடிதத்தை வாங்கிக்குங்க'' என்று ஊழியர்கள் ஒரே குரலில் மேனேஜர் சம்பத்திடம் கூறினர்.

"என்ன, பைத்தியக்காரத்தனம்? அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். போய் வேலையைப் பாருங்க'' என்று சம்பத் அவர்களுக்குச் சமாதானம் தந்தார். பத்திரிகை கொண்டு வந்த அரங்கண்ணல் அண்ணாவிடம் காட்டியபோது, அவர் வருத்தப்பட்டார்.

"நீ ஏன் அய்யா மனசைப் புண்படுத்துகிற வேலையைச் செய்தாய். இது உன்னுடைய பத்திரிகையல்ல, அவருடைய பத்திரிகை. அவருக்கு விரோதமாக வெளியிட நமக்கு உரிமையேது?'' என்று குறிப்பிட்டார். ஏதோ நாம் பாராட்டு வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டு வந்த அரங்கண்ணலுக்கு, அண்ணாவின் அறிவுரை வியப்பைத் தந்தது. மறுநாள் விடுதலை ஆபீசில் அரங்கண்ணல் வந்த போது ஆசிரியர் குருசாமி வருத்தத்தோடு கேட்டார், "என்னங்க இப்படி செஞ்சுட்டீங்க?'' என்று. அப்போது பெரியார் வந்துவிட்டார். எல்லோரும் ஆளுக்கொரு திசையில் நின்றனர். அனைவரையும் அவர் ஒரு முறைப்பு முறைத்துவிட்டு அரங்கண்ணலைப் பார்த்து, "பெருமாள் சோத்தைத் தின்னுபுட்டு பெருமாளுக்கே துரோகம் செய்றாங்க'' என்று கோபத்தோடு கூறினார்.

அனைவரும் திகைப்போடும் அச்சத்தோடும் மவுனமாய் இருந்தனர். "சம்பத் எங்கே?'' என்று பெரியார் கேட்டார். "அவர் வரலீங்க'' என்று குருசாமி சொன்னார். அப்போது அரங்கண்ணல் சற்று துணிச்சலை வரவழைத்துக்கொண்டு பெரியாரை நோக்கி, "எந்தப் பெருமாள் சோத்தை யார்ய்யா திங்கறாங்க?'' என்று கேட்டார்.

அதற்குப் பெரியார், "உங்களைத்தான் சொல்றேன்'' என்றார்.

"சோத்துக்காக யாரும் உங்ககிட்ட வரலேய்யா'' என்று வெளியேறுவதற்கும் தயாராகிவிட்ட மனப்பான்மையோடு சொன்னார் அரங்கண்ணல்.

"அந்தப் பேச்ச இப்ப ஏன் போட்டீங்க? யாரைக் கேட்டுகிட்டு போட்டீங்க?''

அதற்கு அரங்கண்ணல், "ஐயா, அது நீங்க பேசுனது தானுங்களே'' என்றார்.

ஆத்திரமடைந்த பெரியார், "என்னங்க, போக்கிரித்தனம்'' என்று கைத்தடியை தரையில் பலமாக இடித்தார். ஒரே தாவலில் அரங்கண்ணல், அந்த இடத்தில் இருந்து தூரத்திற்கு ஓடிவிட்டார். பெரியார் எடுத்த நிலை சரியேயென்று கைவல்ய சாமியார், தி.பொ. வேதாசலம், சண்முக வேலாயுதம் ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர்.

பெரியாரின் செயல் தவறென்று எண்ணற்ற பிரமுகர்கள் அவருக்கே கடிதங்களை எழுதிக் குவித்த வண்ணமிருந்தனர்.

அண்ணா, சம்பத், நெடுஞ்செழியன், அன்பழகன், என்.வி. நடராசன், மதியழகன் ஆகியோரது நடவடிக்கைகளில் பெரியார் மிகவும் அதிருப்தி கொண்டார்.

விடுதலை ஏட்டிலும், சம்பத், அரங்கண்ணல், பூ. கணேசன், கே. கோவிந்தசாமி ஆகியோர் விஷமத்தனம் புரிவதாக பெரியாருக்குச் சந்தேகம் படர்ந்தது.

விடுதலை நிர்வாகப் பொறுப்பிலிருந்து சம்பத் விலகினார். அவரைத் தொடர்ந்து அரங்கண்ணல், கே. கோவிந்தசாமி, ஆகியோரும் விலகினர்.

குத்தூசி குருசாமி மதில்மேல் பூனையாக இருந்தார்.

திராவிட நாடு இதழில் அண்ணா தலையங்கம்.


நானே தலைவனாய், எழுத்தாளனாய், பேச்சாளனாய் என்று தான் ஒருவனால் மட்டுமே இயக்கம் வளர்வதாகப் பெரியார் இதுவரை கூறி வந்தார். அவரது மதிப்பைக் காலிழந்தும், கண்ணிழந்தும், பொருளிழந்தும் தியாகத் தழும்புகளைப் பெற்ற தொண்டர்கள் பெற்றதில்லை. கட்சியின் வளர்ச்சி தன்னால்தான் என்று சொல்லி வந்தாரே தவிர உண்மையாகவே, யாரால், என்பதை அவருடைய உள்ளம் உரைத்தது கிடையாது. தலைவர் பெருமையாகத் துதிபாடுவதில், கண்ணோக்கு இருந்த காரணத்தால் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தொண்டின் தரத்தைச் சிந்தித்துப் பார்த்தது கூட இல்லை. ஆனால் இன்று அந்த உண்மை வெள்ளிடைமலையாகிவிட்டது. கழகத்தை சேர்ந்த உழைப்புச் சக்தி எங்கே இருக்கிறது என்பது விளங்கி விட்டது. இரண்டு மாதங்களாக கழகப் பணிகள் நடைபெறவில்லை. இந்த அசையா நிலை தொண்டர்களின் சேவையின் பெருமையை விளக்கி உள்ளது. தொண்டர்கள்தான் கட்சியின் முன்னோடி. அவர்கள் அசைந்தால்தான் இயக்கம் இயங்கும் என்பது தெரிந்துவிட்டது. இந்த அசையா நிலை நமது தலைவரைத் திடுக்கிடச் செய்திருக்க வேண்டும். அவர் சுயநலம் இல்லாதவராய் இருந்திருந்தால் புயல் என வீசிக் கொண்டிருந்த கழகப்பணிகள், இப்படியாக அசைவற்றுக் கிடப்பது ஏன் என்று பதறியிருக்க வேண்டும். மாபெரும் சக்தி தன்னை விரும்பவில்லை என்று தெரிந்து தலைமைப் பதவியை உதறியிருக்கவேண்டும். கட்சியே தன்னை விரும்பவில்லை என்று தெரிந்தும் விளக்கம் உரைப்பதில் இருக்கிறாரே ஒழிய, கட்சி வளரவேண்டும், அதன் செயல்கள் நடைபெறவேண்டும் என்று எண்ணவில்லை. ஆகவே மேற்கொண்டு கழக ஆக்கத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுத்தான் ஆகவேண்டும். இதில் இன்னும் நாள் ஓட்டக்கூடாது. நல்லதொரு முடிவைக்கண்டு, மீண்டும் நம் நாட்டுப் பணி முன்போல் முகிழ்க்கவேண்டும். இதற்கான முடிவுகள் இன்னும் ஓரிரு வாரத்தில் செய்யப்பட வேண்டும் அதற்கான வேலைகள் ஆரம்பமாகிவிடும் என்று நம்புகிறோம். கழக நிலை இதுபோல் நீடிக்க இடம் ஏற்படாது. விரைவில் வெள்ளி முளைக்கும். வேதனையும் விம்மலும் நீங்கி வெற்றிப் பாதையில் நடப்போம். இவ்வாறு திராவிட நாடு இதழில் அண்ணா தலையங்கம் தீட்டினார்.

உளம் கொதித்த தோழர் என்.வி. நடராசன் பெரியாருக்குக் கடிதம் தீட்டினார், கண்ணீர் மல்கிய நிலையில். கடிதம் அலட்சியப்படுத்தப்பட்டது. சென்னையை விட்டு ஈரோடு போவதாகக் கூறிவிட்டு ஏற்காடு சென்று தங்கினார், பெரியார், மணியம்மை சகிதம். இங்கு சேதி தெரிந்தவர்கள் துடித்தனர், அழுதனர், தூது செல்வதென்று முடிவு செய்தனர் முதல்தூது கோஷ்டி கிளம்பிற்று. விடுதலை ஆசிரியர் குருசாமி, கடலூர் தோழர் குருசாமி, வேலூர் திருநாவுக்கரசு, தோழர் என்.வி. நடராசன், குடந்தை தோழர் கே.கே. நீலமேகம் ஆகியோர் சென்றனர். திராவிடர் கழகத்தாரின் திகைப்பை, பொதுமக்களின் கேலியுரையைக் கூறினர். கெஞ்சினர், பெரியார் அவர்களிடம் விளக்கம் சமாதானம் கூறினார். தடுமாற்றத்துடன் அல்ல, உறுதியுடன்.

பெரியார் மணியம்மை திருமணம்


பெரியாரின் பொருந்தாத் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கழகத்திலிருந்து விலகி நிற்பதாகவும் எண்ணற்றோர் அண்ணாவுக்கும், சம்பத்திற்கும் மடல்கள் மூலம் மனக்குமுறலை வெளியிடலாயினர். இந்தப் பதற்றமான சூழ்நிலையில், திராவிடர் கழக நிர்வாகக் குழுவை உடனே கூட்டுமாறு நிர்வாக உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திருச்சியில் தி.பொ. வேதாசலம் இல்லத்தில் மத்திய நிர்வாகக் குழுக் கூட்டம் 10.7.49 ஞாயிறு காலை நடைபெற்றது.

46 நிர்வாக உறுப்பினர்களில் 32 பேர் வந்திருந்தனர். பெரியார் பங்கேற்கவில்லை. கூட்ட நடவடிக்கையைக் கவனிப்பதற்காக வெளிமாவட்டங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் வெளியே திரண்டிருந்தனர். பெரியார் மீது கண்டனத் தீர்மானம் வரப்போவதாகப் பரவிய வதந்தியை முன்னிட்டுப் பலர் பரபரப்புடன் பலவகையான துண்டுப் பிரசுரங்களையும் வெளியீடுகளையும் விநியோகித்துக் கொண்டிருந்தனர். ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக கமிட்டிக் கூட்டம் மிக, மிக அமைதியாகவே நடந்தது. திருமண ஏற்பாட்டைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும் என்பதைத் தவிர, கண்டிப்பது என்ற சொல்லை ஒருவர்கூட பயன்படுத்தாதது குறிப்பிடத்தக்கது. திருமண ஏற்பாட்டிற்குப் பிறகு எதிர்பார்க்கப்படும் பிற ஏற்பாடுகளையும் கவனிப்பது அவசியம் என்னும் கருத்து கிட்டத்தட்ட எல்லா உறுப்பினர்களிடையிலும் இருந்ததாகத் தெரிந்தது.

இந்நிலையில் பெரியார் மணியம்மை திருமணம் பதிவாளர் முன்னிலையில் பதிவாகிவிட்ட செய்தி தந்தி மூலம் கிடைத்தது. திருமணம் நடந்தாகிவிட்டது என்பது தெரியாத நிலையில் நிர்வாகக் கமிட்டியினர் கூட்டத்திலே, இந்த திருமணம் கூடாதென்று அவரைக் கேட்டுக்கொள்வதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது வீணாகியது. இந்நிலையில் குழப்பமும், ஆத்திரமும் அடைந்துள்ள தோழர்களுக்கு ஆறுதல் கூறவேண்டிய நிலைக்கு அண்ணாவும், சம்பத்தும் ஆளானார்கள். பெரியார் ஈ.வெ. ரா. கே.ஏ. மணியம்மையார் பதிவுத் திருமணம் முறைப்படி 9.7.49 பிற்பகல் 3.30 மணிக்கு திருமணப் பதிவாளர் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது என்று பத்திரிகைகள் பரபரப்போடு செய்தி வெளியிட்டன. அன்றைய 63ஆம் எண் மகாலட்சுமி தெரு, தியாகராயநகர் சி.டி. நாயகம் வீட்டில்தான் பெரியார் மணியம்மை திருமணம் பதிவு செய்யப்பட்டது என்பது தகவல்.


தொடரும்.......

Kannan Natarajan

unread,
Jan 21, 2012, 11:34:30 PM1/21/12
to Min Thamizh

Dhivakar

unread,
Jan 22, 2012, 11:49:49 AM1/22/12
to mint...@googlegroups.com
முதலில் அவ்வை கண்ணனுக்கு நன்றி! இக்கட்டுரை முழுவதும் இங்கே வராது என்றுதான் 'லிங்க்' மட்டும் கொடுத்துள்ளீர்கள் எனத் தெரிகிறது.

இளைய தலைமுறையினர் அனைவரும், அதுவும் 1949 இல் என்ன நடந்தது என்ற முழுமையான விவரங்களை நிச்சயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அன்று அண்ணா பிரிந்ததனால்தானே திராவிட கட்சிகளின் ஆட்சியில் இன்னமும் தமிழகம் இருந்து வருகிறது..

நல்ல கட்டுரைதான். அதே சமயத்தில் இங்கே இன்னொன்றையும் கூறிவிடுகிறேன். இது ஒரு தரப்பு கட்டுரையாகத்தான் இருக்கிறது. சம்பத் குடும்பத்தினர் எழுதியிருப்பதால் அவர் தரப்பு நியாயங்களை மட்டும் பெரிதுபடுத்தி எழுதியிருப்பதும் பெரியாரின் நியாயங்கள் கூடிய வரையில் புறக்கணிக்கப்பட்டிருப்பதும் தெளிவாகவே தெரிகிறது. 


2012/1/22 Kannan Natarajan <thar...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Kannan Natarajan

unread,
Jan 28, 2012, 9:16:14 PM1/28/12
to Min Thamizh

Kannan Natarajan

unread,
Mar 3, 2012, 6:21:26 PM3/3/12
to Min Thamizh

Kannan Natarajan

unread,
Mar 3, 2012, 6:22:17 PM3/3/12
to Min Thamizh

Kannan Natarajan

unread,
Mar 3, 2012, 6:23:03 PM3/3/12
to Min Thamizh

Kannan Natarajan

unread,
Mar 3, 2012, 6:23:53 PM3/3/12
to Min Thamizh
Reply all
Reply to author
Forward
0 new messages