
"சமூகத்தின் சமநிலையின்மை குறித்து சிந்திப்பதும், செயல் படுவதும் கூட மருத்துவமே..."
அறிவியலையும், சமூக நீதியையும் உயர்த்தி பிடிப்போம். நம்மை தாழ்த்தும் அடக்குமுறைகளை வேரோடு சாய்ப்போம்.....
நரிக்குறவர் மக்களோடும், துப்புரவு பணியாளர்களோடும் போட்டோ சூட் நடத்தும் அரசியல்வாதிகள் குறித்து அலசுகிறது இந்த நூல். போலியாக சமூகநீதி காக்கப்பட வேண்டும் என்று கூறும் இந்த போட்ட சூப் அரசியல்வாதிகளையும், 365 நாட்களும் போலி சமூக நீதி செய்திகளை ஒளிபரப்பும் ஊடகங்களையும் கடுமையாக பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வர்ணாசிரமம் தான் இவர்களை இப்படி எல்லாம் அடக்கி வைக்கிறது, ஒடுக்கி வைக்கிறது என கூக்குரலிடூம் நாம், நம் கையில் அரசியல் அதிகாரம் கிடைத்த பின்னரும் இந்த மக்களுக்காக என்ன செய்தோம்? இதற்காக சிந்திப்பதும், அதற்கான தீர்வை காண்பதுமே உண்மையான சமூக நீதி.
இத்தகைய சமூக நீதி நிறைவேற வேண்டுமெனில் கழிவறை அகற்றும் தொழிலுக்கு முழுமையாக அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஆனால் இன்றைக்கும் மலக்குழி மரணங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
பாதாள சாக்கடை அடைப்பு, கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்தல், கழிவு நீர் தொட்டியில் அடிப்பகுதி வரை சுத்தம் செய்ய நிர்பந்தித்தல், அடுக்குமாடி குடியிருப்பில் செப்டிக் டேங்க் அடைப்பு, பல்வேறு தொழிற்சாலைகளில் உள்ள செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்தல், பாதாள சாக்கடை திட்டப் பணிகளில் மலக்குழி தொட்டியை இணைக்கும் பணிகள், உறை கிணறு சுத்தம் செய்தல், இது போன்ற பெரும்பாலான பணிகளில் ஈடுபடுத்தப்படுபவர்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்களாக உள்ளார்கள்.
உலர் கழிப்பிடங்களில் மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றுதல் எனும் சூழல் நீண்ட காலத்திற்கு முன்பு இருந்தது.
2013 ஆம் ஆண்டு அனைத்து விதமான கழிப்பிடங்களிலும், மனிதர்கள் கழிவு அகற்றும் பணி செய்வது தண்டனைக்குரியது என்று சட்டம் இயற்றப்பட்டது.
சட்டங்கள் புத்தகங்களில் மட்டுமே அமலாக்கப்பட்டுள்ளது. தனியார் தொழிற்சாலைகள், தனியார் குடியிருப்புகள், இன்னும் பல பகுதிகளில் குறிப்பாக மாநகராட்சி பகுதிகளில் கூட கழிவுநீர் தொட்டி அடைப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்களை நேரடியாக (மலக்குழியில் இறக்கி ) ஈடுபடுத்தப் படுகிறார்கள் என்பதை உண்மை.
இது போன்ற மலக்குழி மரணங்கள் விஷ வாயு தாக்கி மரணம் அடைபவர்கள் குறித்த விபரங்களை சேகரிக்க கள ஆய்வில் நேரடியாக ஈடுபட்டு பல்வேறு ஆவணங்களை தொகுத்துள்ளார் மருத்துவர் அனுரத்னா.
பல்வேறு ஆவணங்களின் தொகுப்பு தான் இந்த நூல்.
மலக்குழி மரணங்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்னும் பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் களப் போராட்டங்களில் ஈடுபட்டதையும் பதிவு செய்துள்ளார்.
மலக்குழி மரணங்களை தடுப்பதற்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இக்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. குறிப்பாக இதை தடுக்க புதிய தொழில் நுட்பங்களையும், இயந்திரங்களையும், கருவிகளையும் பயன்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து இக்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன என்பதையும் பதிவு செய்ய தவறவில்லை மருத்துவர் அனுரத்னா.
கல்லூரி மாணவர்களிடையே மலக்குழி மரணங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளார் மருத்துவர்.
உடன் இருந்த IIT பேராசிரியர் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தத் தொடங்கி நீண்ட நாள் ஆகிவிட்டது என்பதை கூறியுள்ளார்.
மருத்துவரும் என்ன செய்தீர்கள்? என கேட்டபோது, மலக்குழியில் மரணம் அடைந்தவரின் மனைவியிடம் தொழில்நுட்பக் கருவிகளை இலவசமாக வழங்கி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார் அந்த பேராசிரியர்.
மரணம் அடைந்தவரின் குடும்பம் தான் அந்த தொழிலை செய்ய வேண்டும் என்று இந்த கல்வியாளர்கள் மனநிலையை எண்ணி பெரிதும் வருந்தி உள்ளதையும் பதிவு செய்துள்ளார் நூல் ஆசிரியர்.
எனவே மனிதக் கழிவை மனிதர் அகற்றும் வழக்கம் ஒழிக்க நாம் முழுமையாக அறிவியலை பரப்ப வேண்டும்.
மனித கழிவுகளை அகற்றுதல் நம் அனைவரின் பொறுப்பு என அனைவருக்கும் உணர்த்துவோம்.
மருந்து மாத்திரைகள் கொடுப்பதோ அறுவை சிகிச்சை செய்வது மட்டும் மருத்துவம் ஆகாது சமூகத்தின் சம நிலையின்மை குறித்து சிந்திப்பதும் செயல்படுத்துவதும் கூட மருத்துவம் தான் என அழுத்தமாக மருத்துவர் பதிவு செய்வது பாராட்டத்தக்கது.
இந்த நூலினை வாசிப்பதோடு மட்டுமின்றி அனைவருக்கும் சென்றடையும் வகையில் கொண்டு செல்ல வேண்டும் குறிப்பாக மத்திய மாநில அரசுகள், அரசியல்வாதிகள்,
அரசு அதிகாரிகள், இளைஞர்கள் மாணவர்கள் மற்றும் மனித உரிமை பணியில் ஈடுபடும் அத்தனை தொண்டு நிறுவனங்களும் பணியாளர்களும் இந்த நூலினை வாங்கி மலக்குழி மரணங்களை தடுப்பதற்கு பாடுபட வேண்டும் என்பதே நூல் ஆசிரியரின் வேண்டுகோள்.
மருத்துவ பணியோடு, சமூக அக்கறையோடு இதுபோன்று சமூகத்திற்காக தனது பணிகளை செய்யும் மருத்துவருக்கு மிகுந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.
"மஞ்சள் மரணங்கள் - 2024"
நூலாசிரியர் :
மருத்துவர் சு .அனுரத்னா
விலை : ரூபாய் 50/-
வெளியீடு :
பாரதி புத்தகாலயம்
சென்னை-600018
தொடர்பு எண்;
044 24332924.
MJ. பிரபாகர்