எவ்வளவு உணர்ச்சிமயமாகப் பேசினாலும் எழுதினாலும் அன்னை, தாய் என்ற சொற்களெல்லாம் பின்னால் வந்தவைதான். முதலில் உருவான சொல் அம்மா. அதற்கும் முன்பாக முளைத்தது ம்மா, மா, மம்மா என்ற சொற்கள் அல்லது ஒலிக்குறிப்புகள்தான். அந்தச் சொற்கள் பொதுவாகத் தாயைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளப்பட்டு, தாய், தாய்மை தொடர்பான உணர்ச்சிமயக் கருத்துகளும் கதைகளும் கவிதைகளும் நிறையவே கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் ம்மா, மா, மம், மம்மா போன்ற ஒலிகளை முதன் முதலில் வெளிப்படுத்தத் தொடங்குகிற குழந்தை அறிவிப்பது தனது உயிர்வாழ்வுக்கான உணவுத் தேவையைத்தான். உணவு கிடைத்தபின் அந்த மகிழ்ச்சியையும் அதே ஒலிகளால் தெரிவிக்கிறது. தாயிடமிருந்தே முதல் உணவு கிடைப்பதால் நாளாக நாளாக ம்மா என்றால் அம்மாவைக் குறிப்பதாகிறது.
உலகின் மூத்த மொழிகள், மிக இளைய மொழிகள் அனைத்திலும் ஆகப் பெரும்பாலும் தாயைக் குறிப்பிடுவதற்கு மா, அம்மா, மம், மம்மா, மம்மி என்ற சொற்கள் அமைந்திருப்பது தற்செயலானது அல்ல. மனித இனப் பரிணாமத்திலிருந்து மானுடப் பண்பாட்டு வளர்ச்சி வரையிலான வரலாற்றோடு இணைந்தது அது.
புதிதாகப் பிறந்த குழந்தையின் முதல் மொழி அழுகையொலிதான். பசி, வலி, தாய் முகம் காணும் ஆசை, ஈரத்தில் கிடக்கும் இடைஞ்சல் என தனது உணர்வுகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமான அழுகையில் வெளிப்படுத்தத் தெரிந்துகொள்கிறது. தவழும் பிள்ளையின் வாயிலிருந்து வருகிற மா, தா, ப்ர்ர், ஆஆஆ, ஊஊஊ போன்ற ஒலிகளைப் பெற்றோரும் மற்றோரும் திரும்பிச் சொல்கிறபோது தனது மொழியில் பேசுகிறார்கள் என்று ஒரு சொந்தத்தை உணர்கிறது. தான் பார்க்கிற, உணர்கிற எல்லாப் பொருள்களுக்கும் அதே ஒலிகள்தான். படிப்படியாக எதை எந்தெந்தச் சொற்களால் சொல்ல வேண்டும் என்று குடும்பத்தாலும் சுற்றத்தாலும் மொழி கற்றுத்தரப்படுகிறது.
ம்மா என்று தொடங்கி அம்மா எனத் தொடர்ந்து கற்றுக்கொள்வது தாய்மொழியாகிறது. குழந்தைக்குப் பூமியில் எல்லாமே சமம்தான். பூமியின் குழந்தைகளாகிய மனிதர்களுக்கு உலகின் எல்லா மொழிகளும் சமம்தான். தேசத்தின் குழந்தைகளாகிய குடிமக்களுக்கு நாட்டின் எல்லா மொழிகளும் சமம்தான்.
அரசியல், அதிகாரம், ஆதிக்கம், வணிகம், சந்தை என்று எந்த வழியிலும் எந்த மொழியும் எவர் மீதும் திணிக்கப்படக்கூடாது. அது உரிமைக்கு எதிரானது மட்டுமல்ல இயற்கைக்கு முரணானதும் கூட.
இந்தச் சிந்தனைப் பகிர்வோடு –
இன்று பிப்ரவரி 21 -
உலக தாய்மொழி தின வாழ்த்துகள்.
வரலாற்றுக் குறிப்பு: 1948ல் அன்றைய பாகிஸ்தான் அரசு நாடு முழுமைக்கும் ஒரே தேசிய மொழி உருது என அறிவித்தது. அதை எதிர்த்து, தங்களுடைய தாய்மொழியான வங்காளத்தை இணை ஆட்சிமொழியாக அறிவிக்க வலியுறுத்தி கிழக்கு பாகிஸ்தான் மக்கள் மதப் பாகுபாடின்றிப் போராடினார்கள். அதே ஆண்டின் பிப்ரவரி 21ல் டாக்கா நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் 4 பேர் பலியானார்கள். போராட்டம் பலியாகிவிடாத நிலையில் 1956ல் வங்காளம் ஆட்சிமொழியாக அங்கீகரிக்கப்பட்டது. அடிப்படையான வேறு பிரச்சினைகளுக்காகவும் ஒடுக்குமுறைகளை எதிர்த்தும் கிளர்ந்த பேரெழுச்சியின் விளைச்சலாக கிழக்கு பாகிஸ்தான் 1971ல் பங்களாதேஷ் நாடாக உருவெடுத்தது. பிப்ரவரி 21ம் நாளை, உலக மக்கள் பேசுகிற அனைத்து மொழிகளையும் பாதுகாத்து வளர்க்கிற இலக்கோடு, உலக தாய்மொழி தினமாக ஐக்கிய நாடுகள் சபை தீர்மானித்து 2008ம் ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.
-அ. குமரேசன்