மதுரையில் மாயோனின் திருவோணத் திருநாள்
— தேமொழி பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சி நூலில், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மீது மாங்குடி மருதனார் பாடும் பாடலில் மதுரையில் நடந்த ஓணம் விழாவினை அவர் விவரிக்கிறார்.
கணம்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓண நன்னாள்
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்
மாறாது உற்ற வடுப்படு நெற்றிச்
சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலின் …
(மதுரைக்காஞ்சி 590 – 599)

அவுணர் கூட்டத்தைக் கொன்றவராகிய, பொன்னால் செய்த மாலையினையுடைய திருமால் உலகில் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளில் மதுரையில் விழா நடை பெறுகிறது. வளைந்த வாள் வெட்டின வடுவுடைய முகத்தையும், போர்க்கருவிகளைப் பயின்று சாணைக்கல்லால் தழும்பு பட்ட போரைத் தாங்கும் பெரிய கையையும், வீரத்தைத் தம்மிடத்தே கொண்ட மறவர்கள் வாழும் சேரிகள் தம்முள் மாறுபட்டுச் செய்வித்த போரில் குறி தவறாது விழுந்த தாக்குதலால் தழும்பினையுடைய நெற்றியினை உடையவர்களாகிய போரை விரும்பும் பாண்டிய மறவர்கள், வண்டுகள் நிறைந்த மலர்ச் சரத்தை அணிந்து வலிமையான களிற்று யானைகளைச் செலுத்தியவாறு தெருக்களில் ஊர்வலமாக வருகிறார்கள்.
ஆகஸ்ட் 26, 2026