தமக்கை ஆன புன்னை!

381 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Jan 10, 2009, 6:07:32 PM1/10/09
to Min Thamizh
இவ்வுலகத்தில் வாழும் அனைத்து உயிர்களிலும் இறைவன் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்று அருளாளர்கள் கூறுவர்.
 
ஓரறிவு உடைய தாவரங்கள் முதல் ஆறறிவுடைய மனிதன் வரை உள்ள அனைத்து உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்பர்.
 
இதுவே ஆன்ம நேயம் எனவும் சொல்லப்படுகிறது.

சங்க இலக்கியங்கள் இத்தகைய ஆன்ம நேயத்திற்கு முதன்மை அளித்துப் பேசுகின்றன. இதற்குப் பல இலக்கியச் சுவை நிறைந்த சங்கப் பாடல்களைச் சான்றாகக் காட்ட முடியும். ஆன்ம நேயத்தை சங்ககால மக்கள் எவ்வாறு போற்றினர் என்பதை ஒரு நற்றிணைப் பாடல் வழி காணலாம்.

ஒரு சிறுமி. அவளுக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும். கடற்கரை மணலில் "கீச்சுக் கீச்சுத் தாம்பலம்" என்ற விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தாள். அதாவது, ஒரு சிறுமி ஒரு புன்னைக் காயை எடுத்து மணலில் புதைத்துவிடுவாள். பிறகு அதன் மீது ஒரு அடி நீளத்திற்கு மணலால் அணைபோல மூடிவிடுவாள். இப்போது, மற்றொரு சிறுமி தன் இரு கை விரல்களையும் கோர்த்துக் கொண்டு, எந்த இடத்தில் காய் புதைக்கப்பட்டுள்ளதோ அந்த இடத்தில் கைகளைப் பதித்துக் காய்களைக் கண்டு பிடிக்க வேண்டும். இதுதான் அந்த விளையாட்டு.

 
இந்த விளையாட்டை சிறுமிகள் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். திடீரென மழை வந்து விடுகிறது. மண்ணில் புதைத்த புன்னைக் காயை மறந்து அப்படியே விட்டுவிட்டு வீட்டிற்கு ஓடிவிடுகின்றனர். மண்ணில் புதைக்கப்பட்ட புன்னைக்காய் ஒரு செடியாக முளைத்திருப்பதைக் காண்கிறாள் சிறுமி. தான் புதைத்த புன்னைக் காய் செடியாக வளர்ந்திருப்பதைக் காண்பதில் அவளுக்கு அளவுகடந்த மகிழ்ச்சி.
 

அப்புன்னனைச் செடியை அகழ்ந்து எடுத்துக் கொண்டுபோய்த் தன் தோட்டத்தில் வைத்து வளர்த்துக் கொண்டுவருகிறாள். புன்னைச் செடி வளர்ந்து மரமாகி விடுகிறது. அவளும் வளர்ந்துவிடுகிறாள். அவளுக்குத் திருமணம் நடைபெறுகிறது. அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அவளிடம், தான் விளையாட்டாக வைத்து வளர்த்த புன்னை மரத்தை அறிமுகம் செய்து வைக்கிறாள். என்னுடைய முதல் குழந்தை இப்புன்னை மரமே ஆகும். எனவே, இது உனக்கு அக்காவைப் போன்றது.

அன்னையின் சொல்லைக் கேட்ட அப்பெண் அப்புன்னை மரத்தை அக்காவாகவே நினைத்து அதன் மீது நேசம் கொள்கிறாள்.

ஒருநாள், அந்தப்பெண் அவளுடைய அன்பிற்குரிய காதலனை அந்த மரத்தின் கீழ் சந்திக்கிறாள். அவன் அவளுடன் அன்பு மொழி பேச முற்படுகிறான். அவள் பேச மறுக்கிறாள். அதற்குக் காரணம் சொல்கிறாள்.

 
இந்தப் புன்னை மரம் எனக்குத் தமக்கையாகும் என என் அன்னை சொல்லியுள்ளாள். எனவே, என் தமக்கையின் முன்னிலையில் உங்களுடன் பேச எனக்கு நாணமாக உள்ளது எனக் கூறுகிறாள்.
 
அப்பாடல் இதுதான்,
 
விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பெய் தீம்பால் பெய்து இனிது வளர்த்தது
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
 
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்
துறை கெழு கொண்க நீ நல்கின்
இறைபடு நீழல் பிறவும் ஆர் உளவே. (நற்றிணை - 172)
 
சங்க காலத்தில் ஒரு பெண்ணிற்கு ஒரு புன்னை மரம் தமக்கையாக இருந்திருக்கிறது என்னும் செய்தியும், செய்தியைக் கவிஞன் சொல்லும் நயமும் பாடலைப் படிப்போர் மனதில் மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும்.
 
இரா.அன்பழகன்
 
நன்றி: தமிழ்மணி (தினமணி)

வேந்தன் அரசு

unread,
Jan 11, 2009, 10:25:57 AM1/11/09
to minT...@googlegroups.com
>நும்மினும் சிறந்தது நுவ்வை

அப்போ அவ்வை என்றால் அக்காதானே. முதியோளாக காட்டுகிறார்களே

வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
I have enough love for you to forgive your follies.
Reply all
Reply to author
Forward
0 new messages