செங்கோல் செலுத்திய செம்மொழிச் சிகரம்

3,299 views
Skip to first unread message

தேமொழி

unread,
May 14, 2021, 12:09:08 AM5/14/21
to மின்தமிழ்

kalaignar.JPG

ஒளவையின் நினைவலைகளில்  

மனங்கவர் வேந்தராய்த் திகழ்ந்த
முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவுகள்

செங்கோல் செலுத்திய செம்மொழிச் சிகரம் !

17.5.2021 வெற்றித்தொடர்  தினசெய்தியில்               திங்கட்கிழமைதோறும் தொடரும்

தேமொழி

unread,
May 17, 2021, 1:01:00 AM5/17/21
to மின்தமிழ்
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் !
முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவுகள் - 1

முனைவர் ஔவை நடராசன்,
மேனாள் துணைவேந்தர்,
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம்
••••••••••••••••••••••••••••••••••••••

மன்னாதி மன்னன் தொடர் தொடங்கி 85 வாரங்கள் நிறைவடைந்தது. இந்தக் காலநிலையில் மருத்துவ மனையிலேயே சில மாதங்கள் இருந்தேன்.  மருத்துவமனையிலிருந்து திரும்பும் போது இருவராகச் சென்று - நான் மட்டும் திரும்பினேன்.  எனக்கு நேர்ந்த மனக்கலக்கத்தை மாற்ற பெரிய முயற்சியை என் மகன் அருளும் - செயலாளர் பொன்னேரி பிரதாப்பும் மேற்கொண்டனர்.  அரைகுறையாக நான் குறித்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான பக்கங்களிலிருந்து அரிய குறிப்புக்களை எல்லாம் நெறிமுறையாகத் தொகுத்து என் சோர்வைச் சிறிது நிமிர்த்தனர் .

அவ்வப்போது தினச்செய்தி நாளிதழின் ஆசிரியரும் வணிகச் செம்மலுமாகத் திகழும் நண்பர் திரு.ஜெபராஜ் அவர்கள் நாள் தவறாமல் நினைவூட்டி ஊக்கம் தந்தார்கள். " நயவுரை நம்பி " நாடாளுமன்றத் திலகம் ஜெகத்ரட்சகன் அவர்கள் தான் இதற்கெல்லாம் வேர்.  தமிழ் தான் ஒரே ஆறுதல் , அரசுப்பணிக்கு எனக்கு வாய்ப்புத்தந்து என்னை வளர்த்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் தான் என்பதை பலமுறை எழுதிக்காட்டியிருக்கிறேன்.  அலைகள் ஓய்வதில்லை அந்த வகையில் நான் குறித்து வைத்திருந்த செய்திகளுக்கு வடிவூட்ட மூவரும் எனக்கு உறுதுணையாக உள்ளனர்.


எப்போதும் நான் எழுதிப் பழகியதில்லை, என் எழுத்தையே என்னால் சில நேரம் படிக்க முடிவதில்லை, அங்கும் இங்குமாகச் சிதறிக் கிடைக்கும் துண்டுத் தாள்களிலும் ஒவ்வொரு நூலிலும் வேண்டிய பகுதியை நான் குறியிட்டிருந்ததை மீளப்படிக்கவும் வாய்ப்பு வந்திருக்கிறது.  முடிந்த வரை என் மூச்சு இடம் கொடுக்கும் வரையில் எழுதுவேன்.  நான் வாயால் சொல்லிப் பிறர் எழுதியதுண்டு, ஆனால் என் விரல்கள் பல்லாயிரக் கணக்கான பக்கங்களை ஓய்வில்லாமல் எழுதும் உரம் வாய்ந்தவை என்று எழுதிய பொற்கரம் தமிழகத்தைக் காத்த கரம் - தமிழ் இனத்துக்குப் புகழ் சேர்த்த கரம் - முத்தமிழறிஞரின் கரம் அதை எண்ணி நெகிழ்கிறேன். நினைந்த வரை இந்தக் கட்டுரை அவர் நெடும்புகழுக்குக் கால் சிறு விரல் அணியாக அமையவேண்டும் .

அந்த நாள் என் வாழ்வில் நிலை நின்றுவிட்டது.  
நாற்பதாண்டுகளுக்கு முன்னர் நடந்தது. இராணி சீதை மன்றத்தில் நடந்த விழா.  புறநானூறுற்றுப் புதுமை என்ற தலைப்பில் பேசத் தொடங்கினேன். சிகரத்தை அண்ணாந்து பார்த்தேன் ! செம்மேனி எம்மான் ! ஏன் பதறுகிறீர்கள்! அந்தத் தொடர் நினைவில் இல்லையா என்றார் தலைவர்.  நான் பாடலைச் சொல்கிறேன். நான் எழுதிய பாடலை என்றும் மறப்பதில்லை எனத் தன்னேரில்லாத தலைவர் கலைஞர் எழுந்தார்.  அவையினர் ஆர்ப்பரித்தனர்.

" துளித்த நறுஞ் தேனென்று சொல்லும் சொல்லைத் தொடங்கிய குரல் முழங்கும் கடல் " என்ற புரட்சிக்கவிஞரின் பொன்வரிகளின் உருவகம் அவையினர் முன் நிமிர்ந்து நின்றது .

குடிசைதான் ! ஒரு புறத்தில் கூரிய வேல்வாள் வரிசையாய் அமைந்திருக்கும் -
வையத்தைப் பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும்
வடித்துவைத்த படைக்கலம்போல் மின்னும்;
மிளிரும் புலியின் குகையினிலே அழகில்லை -
கிலியும் மெய் சிலிர்ப்பும் கீழிறங்கும் தன்மையும்
தலைகாட்டா மானத்தின் உறைவிடம் -
மறவன் மாளிகை !
இல்லத்து வாயிலிலே கிண்ணத்துச் சோற்றோடு
வெல்லத்தைச் சிறிது கலந்து வயிற்றுக்குள்
வழியனுப்பப் பொக்கை வாய்தனைத்
திறந்து பிடியன்னம் எடுத்துப் போட்டாள்
பெருநரைக் கிழவி யொருத்தி.

ஓடி வந்தான் ஒரு வீரன் " ஒரு சேதி பாட்டி ! " என்றான்.
ஆடிவந்த சிறுமிபோல் பெருமூச்சு வாங்குகின்றாய்
ஆண் மகனா நீ தம்பி ! மூச்சுக்கு மூச்சு
இடைவேளை ஏற்படட்டும்.
பின், பேச்சுக்குத் தொடக்கம் செய் என்றாள்
அந்தக் கிண்டலுக்குப் பேர்போன
கிழட்டுத் தமிழச்சி ! வேடிக்கை நேரம்
இதுவல்ல பாட்டி - உன் வாடிக்கைக்
கேலியை விட்டுவிடு. ‘மடிந்தான்
உன் மகன் களத்தில்' என்றான் - மனம்
ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க்கிழவி ஒருமுறை !

"தாயம் ஆடுகையில் காய்களை வெட்டுவதுண்டு-
களமும் அதுதான். காயம் மார்பிலா ? முதுகிலா ?
கழறுவாய் " என்றாள் - முதுகிலென்றான்.
கிழவி துடித்தனள்; இதயம் வெடித்தனள் ;
வாளை எடுத்தனள். முழவு ஒலித்த திக்கை
நோக்கி முடுக்கினாள் வேகம் ! " கோழைக்குப்
பால் கொடுத்தேன் குப்புற வீழ்ந்து கிடக்கும்
மோழைக்குப் பெயர் போர் வீரனாம் !
முன்பொருநாள் பாய்ந்துவந்த ஈட்டிக்குப்
பதில் சொல்ல மார்பைக் காட்டிச் சாய்ந்து
கிடந்தார் என் சாகாத கண்ணாளர். அவருக்குப் பிறந்தானா ?
அடடா மானமெங்கே - குட்டிச் சுவருக்கும்
கீழாக வீழ்ந்து பட்டான்.

இமய வரம்பினிலே வீரம் சிரிக்கும் -
இங்கு வீணை நரம்பினிலே இசை துடிக்கும்.
அதுவும் மானம் மானமென்றே ஒலிக்கும் !
மதுவும் சுராவும் உண்டு வாழும்
மானமற்ற இனத்தவனா நீ -
ஏடா மறத் தமிழ்க் குடியிலே மாசு
தூவி விட்டாய் மார்பு கொடுத்தேன்
மகனாய் வளர்த்தேன் - தின்று கொழுத்துத்
திமிர் பாய்ந்த தோள்களெங்கே ?
தினவெடுக்கவில்லையா ? அந்தோ !
வேலுக்கு வழி சொல்ல வகையற்ற கோழையே -
என் வீரப் பாலுக்கு வழி சொல்வாய் !! என்று கதறினாள்
எண்பதை நெருங்கிய ஏழைக் கிழவி. சென்றங்குச்
செரு முனையில் சிதறிக் கிடந்த
செந்தமிழ்க் காளைகளைப் புரட்டிப் பார்த்தாள் -
அங்கு நந்தமிழ் நாட்டை காக்க ஓடிற்று இரத்த வெள்ளம் !

பிணக்குவியலிலே பெருமூச்சு வாங்க நடந்தாள் !
மணப் பந்தலிலும் அந்த மகிழ்ச்சியில்லை -
மகன் பிறந்த போதும் மகிழ்ச்சிக்கு எல்லையுண்டு -
அவன் இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி !
இதைக் கண்டாள் - இதயங் குளிர்ந்தாள் !
"" எதைக் கண்டாலும் இனிக் கவலை இல்லை
என் மகன் வீரனாய் இறந்தான் " என்றாள்.
அறுத்தெறிய இருந்தேன் அவன் குடித்த மார்பை -
அடடா !
கருத்தறியப் பொய் சொன்ன கயவனெங்கே ?
வாளிங்கே ! அவன் நாக்கெங்கே ? "

இந்தப் புறநானூற்றுப் போர் வரிகளைத்தான் முத்தமிழறிஞர் கலைஞர் தமக்கே வாய்த்த தறுகண்மையோடு எழுத்து விடாமல் கூறி அமர்ந்தார். அவையின் கையொலி அடங்கப் பலமணித் துளிகள் ஆனது. கலைஞர் எழுதிய இந்தக் கவிதை வரிகளில் புறநானூற்றில் இல்லாத புதுமைகள் பொதிந்திருப்பதைக் காணலாம் .

புலமைப் பெருமாட்டியார் காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடிய இப்பாடல் மங்காத தமிழ் வரலாற்றில் மரகதமணியாகும் .

நச்செள்ளையார் கண்டீரக்கோப் பெருநள்ளியின் கானத்தையும் தொண்டி நகரத்தையும் பாடியவர், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பதிற்றுப்பத்துள் ஆறாம் பத்தைப் பாடிக் கலன்களுக்கென ஒன்பது காப்பொன்னும் நூறாயிரம் காணமும் பெற்று, அதிகமான் நெடுமான் அஞ்சிபால் ஔவையார் இருந்தது போல நள்ளியின் அவைப் புலவராகும் சிறப்பும் பெற்றாரென்பர் .

ஒரு தமிழ் மறவன், போரில் பகைவர் வாளால் வெட்டுண்டிறந்தான்; அவன் போரில் பாய்ந்த திறத்தால் அவன் உடல் துணிபட்டுச் சிதைந்து * வேறாய்க் கிடப்பதாயிற்று. அதனையறியாத பலர், போர் முடிவில் இல்லம் போந்து அவன் தாயைக் கண்டு “ நின் மகன் பகைவர்க்கு முதுகு புண்பட்டு மாண்டான் ” என்று பொய்யாகக் கூறினர்.

அவன் தாய் அப்போது மிக்க முதுமை யெய்தியிருந்தாளாயினும் அச்சொல் தனது மறக்குடி மாண்புக்கு இழுக்காதலை யெண்ணினாள்; கண்களைத் தீயெழத் திறந்து நோக்கி, “ என் மகன் இவ்வாறு மாண்டானாயின், அவன் வாய் வைத்துண்ட என் மார்பை அறுத்தெறிவேன் ” என வஞ்சினம் கூறிக் கைவாளொன்றை எடுத்துக் கொண்டு போர்க்களத்துக்குச் சென்றாள்.

அங்கே மறவர் பிணங்கள் மலிந்து கிடந்தன. அவளுக்குத் தன் மகனுடலைக் காண்பது அரிதாயிருந்தது. கள முழுதும் பிணங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள். முடிவில் ஓரிடத்தில் வெட்டுண்டு சிதறிக்கிடக்கும் அவன் உடலைக் கண்டாள்; வேறு வேறாகக் கிடந்த துண்டங்களைத் தொகுத்து ஒழுங்குற அமைத்து நோக்கினாள்; அவன் முகத்திலும் மார்பினும் விழுப்புண் பட்டு வீழ்ந்தானேயன்றிப் புறப்புண்ணுற்று உயிர் போயிற்றிலன் ” எனத் தெரிந்தாள்.

அக்காலை அவள் உள்ளத்தில் நிலவிய வெம்மை நீங்கிற்று; குடிப்பெருமையை நிறுவினான் என்ற உவகை மிகுந்தது.

அதுதானும் அவனை அவள் பெற்றகாலையிற் பிறந்த உவகையினும் பெரிதாயிருந்தது. இந்தக்காட்சி காக்கைபாடினியார்க்குப் பெருவியப்பை விளைத்தது. அதுவே காரணமாக இப்பாட்டினைப் பாடுவாராயினர்.

நரம்பெழுந்து உலறிய நிரம்பா மென்றோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படையழிந்து மாறினன் என்று பலர் கூற
மண்டமர்க்கு உடைந்தன னாயின் உண்டவென்

முலையறுத் திடுவென் யானெனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களந் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே. ----புறம் 278

இப்பாடலுக்கு விளக்கம் வரைந்த உரைவேந்தர் திறமும் நினைக்கத்தக்கது .

முதுமையால் மேனி பசுமை குன்றி நரம்பு மேலெழுந்து இனிது காணத்தோன்றுதலால் “ நரம்பெழுந்து உலறிய தோள்” என்றார். பசுமையின்றி விளர்த்து நரம்பு தோன்றத் திரங்கி நிற்பதுபற்றி வயிற்றுக்கு முளரி யுவமமாயிற்று. நன்றெடுத்து மொழிவாரினும் தீதெடுத்து மொழிவா உலகத்துப் பலராதலால், “பலர் கூற” என்றார். கூறுவோரது பொய்யுரை கேட்டவருக்குத் தன் மகனது மறத்தின்கண் ஐயந்தோன்றவே, ஒரு தலையத் துணியமாட்டாளாய், “மண்டமர்க் குடைந்தனனாயின் உண்ட வென்முலை யறுத்திடுவன் யான்” எனச் சினந்துரைத்தாள். மகனது மாண்பை ஓரளவு அறிந்திருந்தமையின், “உடைந்தனனாயின்” எனக் கூறின் "அறுத்திடுவென்" என்ற சொல் வாயினின்று வெளிவரும் போதே அக்கை தன் மறக்குடிக்குடைமையாகிய வாளைத் தேர்ந்து கொண்டமை “கொண்ட வாள்” எனப்பட்டது.

பட்ட வீரர்களின் குருதியால் போர்க்களம் சிவந்தமையின் செங்களம் என்றும், இனிது கண்டறிய வகையில் அவள் மகன் கிடவாமையின், “துழவுவோள்” என்றும், சில வேறாகிய மகனது உடம்பைக் கண்டதும் காதன் மிகுதியால். கழுதலின்றிப் பட்ட புண்ணைத் தேர்ந்து பழியின்மைகண்டு அவன் உள்ளம் விம்மி வீங்குதலுலால், “சிதைந்து வேறாகிய படுமகன்" என்றும் வுரைத்தார். சிதைந்து வேறாகிய மகனது கிடக்கை அவளது மறமாட்சி என்பது இதனால் வற்புறுத்தப்பட்டது. விழுப்ண் வீங்குபுகழ் பெற்றதோடு குடிப்பழியும் போக்கினமையின் பெரிதாயிற்றென வறிக.

இந்தப் புறப்பாடலின் அரிய சொற்களை எழுத்துக்கு எழுத்து ஆராய்ந்து எண்ணித்தோய்ந்த முத்தமிழறிஞர் கல்லைப் பிசைந்து கனியாக்குவது போல உருவிய உறைவாளின் ஒளிமின்னல் போலத் தேர்ந்த சொற்களால் அந்த எழுத்தோவியத்தை வரைந்தார் .

1. மானத்தின் உறைவிடம் -
மறவன் மாளிகை !

2. ஓடி வந்தான் ஒரு வீரன் " ஒரு சேதி பாட்டி ! " என்றான்.
ஆடிவந்த சிறுமிபோல் பெருமூச்சு வாங்குகின்றாய்
ஆண் மகனா நீ தம்பி ! மூச்சுக்கு மூச்சு
இடைவேளை ஏற்படட்டும்.
பின், பேச்சுக்குத் தொடக்கம் செய் என்றாள்
அந்தக் கிண்டலுக்குப் பேர்போன
கிழட்டுத் தமிழச்சி !

3. கிழவி துடித்தனள்; இதயம் வெடித்தனள் ;
வாளை எடுத்தனள். முழவு ஒலித்த திக்கை
நோக்கி முடுக்கினாள் வேகம் !

4. இமய வரம்பினிலே வீரம் சிரிக்கும் -
இங்கு வீணை நரம்பினிலே இசை துடிக்கும்.
அதுவும் மானம் மானமென்றே ஒலிக்கும் !
மதுவும் சுராவும் உண்டு வாழும்
மானமற்ற இனத்தவனா நீ -

5. கருத்தறியப் பொய் சொன்ன கயவனெங்கே ?
வாளிங்கே ! அவன் நாக்கெங்கே ? "

இந்தத் தொடர்களின் ஆழம் புறநானூற்றில் இல்லாத புதுமை , காக்கைப் பாடினியாருக்குக் கலைஞர் சூட்டிய கலை மாலை. இந்த வீர வரிகளை மேடைகளிலும் திரைப்படத்திலும் நடிப்புத்திலகம் மனோரமாவும் - நடிப்பியற் செம்மல் சிவகுமாரும் ஏற்ற இறக்கத்தோடு எடுத்துரைப்பதைக் கேட்டுத் தமிழினம் தலை நிமிர்ந்து நின்றது .

செம்மொழிச் சிகரத்தின் சாரலில் தொடர்ந்து நனைவோம் .... 

- ஒளவை நடராசன்
thamizhavvai[at]hotmail.com
---

தேமொழி

unread,
May 28, 2021, 12:33:10 AM5/28/21
to மின்தமிழ்
2. அமெரிக்க ஆய்வறிஞரின் புகழாரம் !

ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் 

உலகப் பல்கலைக்கழகங்களில் பல்வேறு நாடுகளில் தெற்காசிய மொழிகளை ஆராயும் துறைகளை உருவாக்கியிருந்தனர். அமெரிக்க நாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இந்தத் துறை இன்றும் விளங்குகிறது.  இத்துறைகளில் வடமொழியே முதன்மை பெற்றாலும் தமிழ் மொழியும் துளிர்த்துண்டு.

பெர்க்லி மாநகரில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தெற்காசிய மொழிகள் ஆய்வுத்துறை நிறுவிய பத்தாம்  ஆண்டு நினைவைப் பாராட்டும் வகையில் கலைஞர் களஞ்சியம் என்னும் பெயரில் ஏறத்தாழ 1300 பக்கங்களைக் கொண்ட அருங்கலைப் பேழையாகக் கலைஞர் கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது.

தொகுப்புப்பணியை முன்னின்று வடிவமைத்த பெருமை முன்னாள் அமைச்சர் செ.மாதவன் அவர்களையும் அவர் திருமகளார் வெற்றிச்செல்வி இராசமாணிக்கம் கலிபோர்னியாவில் ஆற்றிவரும் சீரிய தமிழ்ப் பணியின்   சிகரமாகக் களஞ்சியம் அமைந்தது.

இந்தப் பணியில் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன், நான், மறைந்த பேராசிரியர் மோகன் ஆகிய மூவரும் பங்கு கொண்டோம்.  பல்லாயிரக்கணக்கில் விரிந்து பரந்த இலக்கிய எழுத்தோவியங்களில் எதனைத் தொடுவது எதை விடுவது என்பது பனித்துளியைக் கொண்டு பனையை அளப்பது போன்ற பணியாகும்.

மலைத்துப் போய் நின்றோம்.  எண்ணுவது கலைஞரைப் பற்றி என்னும் நிலையில் முதல்வர் கலைஞரும் ஒருவாறு இசைந்த பிறகு கலைஞர் களஞ்சியம் அமைந்தது . "தொகுப்பின் எஞ்சும் விரிப்பிற் பெருகும் "  என்ற தொடரின் பொருள்  அன்று தான் புரிந்தது.  அமெரிக்க ஆய்வுப் பேரொளியாகத் திகழும் அறிஞர் ஆர்ட்டு வடமொழிப் பேராசிரியராக இருந்தும் செந்தமிழ்க் கடலில் திளைத்துச் செம்மொழி மாடத்திற்கு ஒரு தூணாகவும் வாழ்வைத் துலங்கினார் என்றால் மிகையாகாது.

கலைஞரின் எழுத்துப் பரப்பை எண்ணிப் பார்க்க முயல்வோமென்று ஒரு கணக்கிட்டோம். ஒரு நாளைக்குப் பத்துப்பக்கம் என்று எழுபது ஆண்டுகளுக்குக் கணக்கிட்டோம். மொத்தம் ஏறக்குறைய 2,55,500 பக்கங்கள் என்று அளவிட்டோம். ஆனால் இந்தக் கணக்கு எங்களுக்கு அவ்வளவு சரியாகத் தெரியவில்லை.

கலைஞரின் செயலாளர் செம்மல் சண்முகநாதன் அவர்கள் ஒரு நாளைக்கு இருபது பக்கங்கள் என்றல்லவா கணக்கிட்டிருக்க வேண்டும் என்றார். சில நிலைகளில் ஐம்பது பக்கங்கள் எழுதுவார் என்று ஒருமுறை விளக்கினார். இந்தக் கணக்கை இன்றைய இளைஞர்கள் மேலும் ஆராய்ந்து அரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
  
கலைஞர் ஆற்றிய தமிழ்த் தொண்டு பற்றி கலைஞர், கலைஞர் களஞ்சியப் பதிப்பில் எழுதிய முன்னுரை அறிஞர் ஹார்ட்டு எழுதிய முன்னுரை செம்மொழி வரலாற்றின் செம்பொன் வரிகளாகும்...
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் இலக்கியங்களைப் பற்றி அறிமுகவுரை எளிதன்று. எந்த அளவில் எழுதினாலும் பெருமைக்கும், திறமைக்கும், மேன்மைக்கும் ஈடாகாது.  எவரேனும் ஒருவர் அவர் போல் இலக்கியக் கலைவடிவங்களில் எழுத முயன்றால் அதற்கு ஒரு பிறவி போதாது.  இலக்கியத்தில் மட்டுமன்று, அரசியலிலும் கலந்து மிகுந்த உயர்நிலையை அடைந்துள்ளார். நான் இச்சிறு அறிமுகத்தில் தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ்ப் பண்பாட்டிற்கும் கலைஞர் பெருந்தகை செய்துள்ள பணிகளை விவரிக்க முயல்கிறேன்.

கலைஞர் இக்காலத் தமிழ் இலக்கியப் படைப்புகளைத் தந்த மகத்தான பணிகளை எழுத்துச் செம்மல் என்றாலும், அவர் படைப்புகளை அறிந்துகொள்ள வேண்டுமென்றால் அவருக்கு இந்த ஊக்கத்தை எழுச்சியை அளித்த சங்க இலக்கியங்களையும், அவை காட்டும் பண்பாட்டையும் அறிந்து கொள்வது இன்றியமையாததாகும். கலைஞருடைய படைப்புகளைப் பல கண்ணாடிகள் வழியாகக் காண  இயலுமென்றாலும், இது ஒரு முக்கியமான கண்ணோட்டம் ஆகும். நான் பல ஆண்டுகள் என் வாழ்வில் தமிழ்ச் சங்க இலக்கியத்தைப் படித்தறிந்திருக்கிறேன். புறநானூற்றையும், சங்க இலக்கியத்தில் பல பாடல்களையும் மொழி பெயர்த்திருக்கிறேன். நான் வடமொழியையும் கற்றிருப்பதால் இந்திய இலக்கியத்தில் சங்க இலக்கியத்தின் பங்கினை விளக்க இயலும் என்று நினைக்கிறேன்.

வடமொழியில் பழைமையானது ‘இருக்கு' வேதம், உபநிடதம், புத்த மத இலக்கியங்கள் ஆகும். இவை தத்துவக்கருத்துகளையும், மதம் பற்றிய கருத்துகளையும் விளக்குகின்றன. அதற்குப் பின் வந்த மகாபாரதமும், மதத்தைப் பற்றிய எண்ணங்களையே விளக்குகிறது. மிகவும் ஆழ்ந்த கருத்துகளைக் கொண்ட வடமொழி இலக்கியம் மதம், பதவி, குலம் என்பவை பற்றிய கருத்துகளை அறிவித்தாலும் எந்தக் குலத்தார் எதைச் செய்யத் தகுதி உள்ளவர்கள் என்பதைக் கூறாமல் செல்லவில்லை.  வடமொழி வளர வளரச் சமூக, குல பதவிப் பெருமைகளை, பிரிவுகளைப் பெரிதாக அறிவுறுத்திற்று. பெருங்கவிஞர் காளிதாசருடைய இலக்கியத்தில் கீழ்க்குலத்தார் பிராகிருதத்தில் உரையாடுகிறார்கள்.  சமசுகிருதத்தில் அன்று. இவ்வாறு நான் கூறுவதற்குக் காரணம் வட இந்திய இலக்கியம் குல வேறுபாடு பற்றிய கருத்துகளைக் கூறி வந்திருக்கிறது என்பதை விளக்கத்தான்.  புத்த மத வடமொழி இலக்கியங்களே முதலில் குல வேறுபாடுகளைப் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன. ஆனால் வடமொழி குல வேறுபாடுகளை அதிகப்படுத்திக் காட்டுகிறது என்று கூறினால், அது மிகையன்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் சமத்துவ சமூகத்தில் வாழ்ந்தவர்கள் அல்லர்.  ஆனால் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர்களாயினும், அவர்களது மொழி தமிழ்தான்.  வடமொழி போல் கற்றறிந்த அறிஞர்கள் மட்டும் தமிழைப் பயன்படுத்தவில்லை.

சங்க இலக்கியம் தோன்றும் முன்னால் இப்பாடல்களை வாய் மொழிப் பாடல்களாக நாடோடி இலக்கியத்தில் மக்கள் பாடியிருக்க வேண்டும். சங்க இலக்கியம் இந்த வாய் மொழிப் பாடல்களிலிருந்துதான் உருவாகியிருக்க வேண்டும். 
சங்க காலத்திற்கு முன்னால் இதை முதலில் பாடியவர்கள் சாதாரணக் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்க வேண்டும். 

சங்க காலம் தோன்றியபோது தமிழ்க்கவிஞர்கள் தமிழில் சங்கப்பாடல்களை எழுதினாலும், அவர்கள் பாடல்களுக்கு அடிப்படை நாடோடிப் பாடல்களாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். சங்க காலக் கவிஞர்கள் உயர்ந்த குல மக்களின் வாழ்க்கையைப் பற்றி மட்டும் எழுதவில்லை.  ஏனெனில் இப்பாடல்கள் பொதுமக்களின் வாழ்க்கையை விவரிப்பதாக அமைந்துள்ளன.

அவர்களது உலகம் பொதுமக்களின் உலகம்தான். அவர்கள் கூறும் பண்பாட்டில் பல குலங்களும், பலருக்கு உயர்ந்த பதவிகளும், பலருக்குத் தாழ்ந்த பதவிகளும், அவரவர்க்கு ஏற்ற தொழில்களும், மரபும் இருந்தன என்பதை இப்பாடல்களால் அறிகிறோம்.  சங்கப் பாடல்கள் ஒரு குலத்தின் வாழ்வைப் பற்றியோ அல்லது பண்பாட்டைப் பற்றியோ மட்டும் விளக்கவில்லை.

இதுதான் சங்கத் தமிழ்ப்பாடல்களின் தனித்தன்மை. எல்லாக் குலங்களின் வாழ்வும் அவர்களது இலக்கியத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளன. சங்ககால இலக்கியம்,வேற்றுமையின்றி அரசனாக இருந்தாலும், கற்றறியாத பாணனாக இருந்தாலும், அவர்களது வாழ்வையும், பண்பாட்டையும் பற்றி உயர்வாகவே கூறியுள்ளது.

எக்குலத்தாராயினும் அவர் மேன்மையுடையார் என்பதை இப்பாடல்கள் உணர்த்துகின்றன. 'யாதும் ஊரே, யாவரும் கேளிர் ' என்பதுதான் இப்பாடல்களின் குறிக்கோள். பேராசிரியர் ஏ.கே இராமானுஜன் அவர்களும் சங்க காலம் பற்றி இவ்வாறுதான் விவரித்துள்ளார். வடமொழிக் காவிய இலக்கியங்களில் நகரப் பண்பாட்டிற்கும், கிராமியப் பண்பாட்டிற்கும் மிகவும் வேறுபாடு உள்ளது. மகாபாரதம் போன்ற காவியங்களிலும், பல நாடகங்களிலும் கற்றவர்கள் கிராம மக்களின் வாழ்வைப் பற்றி நகையாடுவதைக் காணலாம்.

பழந்தமிழில் இவ்வாறு வேறுபாட்டைக் காண இயலாது. புறநானூறு பல குறு நாடுகளை ஆளும் சிற்றரசர்களின் ஈகையை, வீரத்தைப் பல பாடல்களில் போற்றிப் புகழ்கிறது என்பது யாவரும் அறிந்த ஒன்றே. அகநானூற்றின் பாடல்களைப் படிக்கும்போது இதுதான் நகர மக்களின் வாழ்வு, இதுதான் கிராமிய மக்களின் வாழ்வு, இது இவர் மேன்மை, இது அவர் மேன்மை என்று பகுத்துக் கூற இயலாது. எல்லாவித வாழ்க்கைக்கும் மேன்மையும், பெருமையும் இருக்கின்றன என்று சங்கப் பாடல்கள் கூறுகின்றன.

மருத நிலத்தில் பெரும் மனைகளில் வாழும் மக்கள் அரிசிச் சோறு உண்பார்கள். மலைகளில் வாழும் வேடர் குல மக்கள் தினை உணவு உண்பார்கள். ஆனால் அவர்களைப் பற்றிப் பாடும் புலவர் அவர்களது வாழ்வில் வேறுபாட்டைக் காண்பதில்லை. இருவர் வாழ்க்கையையும் ஒரே நிலையில் வைத்துத்தான் புலவர்கள் புகழ்கிறார்கள். அகநானூற்றில் பல நிலங்களில் வாழும் தலைவன், தலைவி காதலைப் பற்றிய பாடல்களைக் காண்கிறோம். இத்தலைவன், தலைவியர் பலவிதமான குலத்திலும், செல்வ நிலையிலும் இருந்ததாகப் பாடல்கள் நமக்கு அறிவிக்கின்றன.

எடுத்துக்காட்டாக அகநானூற்றில் ஒரு பாடலில் ( 280 ) செல்வம் நிறைந்த ஒரு தலைவன் மீனவர் இல்லத்தில் வாழும் ஒரு மங்கை மீது காதல் கொள்வதால் தானும் மீனவனாகி அவளை மணக்க விரும்புகிறான். அறிஞர் சிலர் சங்ககால இலக்கியத்தில் சமத்துவம் காண்பதன் காரணம் புத்த, சைன மதங்களின் தொடர்பாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள். நான் இச்சமத்துவம் இப்பாடல்களில் காண்பதன் காரணம் இவை தமிழ்ப் பாணர்கள், மற்ற விறலியர் போன்றோரின் நாடோடிப் பாடல்களிலிருந்து தோன்றியதாக இருக்க வேண்டும் என்று கருதுகின்றேன்.

இதுபற்றிய கருத்துகள் எதுவாக இருந்தாலும், சங்க காலத்திற்குப் பின்னர்த் தமிழில் நீதி நூல்கள் தோன்றின. இவற்றை உலகத்தில் எந்த மொழியோடு இணைத்துப்பார்த்தாலும், அதற்கு ஈடான முறையில் எழுதப்பட்டுள்ளன என்பது தெளிவாகும். சிறந்த கருத்துகளை இவை விளக்குவதால் உலகில் இவை உயர்ந்த இடத்தைப் பெறுகின்றன. தமிழர்கள் அனைவராலும் போற்றப்படும் பெரும் நூல் திருக்குறள் ஆகும். திருக்குறளில் இறைவனைப் பற்றிய மதக்கருத்துகள் பல இல்லை .
 திருக்குறள் துறவி, அரசன், இல்வாழ்வோன் என்று பலர் வாழ்க்கையைப் பற்றிய கருத்துகளை வேறுபாடின்றி விளக்குகிறது.

திருக்குறள் தரும் பல கருத்துகளை வடமொழியில் காண்பது அரிது. காமத்துப்பாலில் தலைவன், தலைவி அன்பு பற்றித் திருக்குறள் விளக்கும் அருமையான கருத்துகள் வேறு மொழிகளில் காண்பதும் அரிது. தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் கவிஞர்கள் திருக்குறளைப் போற்றியுள்ளனர். தமிழர்கள் அனைவரும் கீதை படித்ததில்லை. ஆனால் பள்ளியில் கால் வைத்த நாள் முதல் கல்லூரியிலிருந்து வெளிவரும் நாள்வரை திருக்குறளைப் படிக்காத மாணவர்கள் தமிழகத்தில் இல்லை. அது மட்டுமன்று, பேச்சாளர்கள், அரசியல்வாதிகள், பேருந்தில் செல்வோர், திரைப்பட நடிகர்கள் அனைவரும் திருக்குறளைப் பயன்படுத்துகிறார்கள்.எதற்கும் திருக்குறளை எடுத்துக்காட்டியே தமிழர்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

சங்க இலக்கியத்தில் தமிழர்களின் மேன்மையும் உயர்வும் எவ்வாறு கூறப்படுகின்றனவோ அவற்றை அவ்வாறே பக்தி இலக்கியமும் விளக்குகிறது. நாயன்மார்களும்,ஆழ்வார்களும் பல குலத்தைச் சேர்ந்தவர்கள், பல தொழில் செய்தவர்கள், சமூகத்தில் உயர்ந்த - தாழ்ந்த நிலையில் இருந்தவர்கள். இவ்வடியார்களைப் பற்றிப் பாடிய கவிஞர்களின் பாடல்களும் நாடோடிப் பாடல்களிலிருந்து தோன்றியவையாக இருக்கலாம் என்பது என் கருத்து .

தமிழில் தலை சிறந்த கவிஞர் கம்பரும், வேறுபாடின்றிச் சமூகத்தில் உயர்ந்த தாழ்ந்த பல மக்களின் வாழ்வைத் தம் பாடல்களில் விளக்கியுள்ளார். இவ்வாறு உயர்ந்த, தாழ்ந்த மக்களின் வாழ்க்கையை வேறுபாடின்றிக் காட்டும் கருத்துகளை நான் வடமொழியில் காண இயலவில்லை .
முதலமைச்சர் கலைஞர், தமிழ்ச் சங்க இலக்கியம் தமிழில் சிறந்த இலக்கியம் மட்டுமன்று, அது தமிழ்ச் சமுதாயம் ஓங்கிய நிலையில் வளர உதவும் ஒன்று என்பதை உணர்த்தியும் உள்ளார் . 
தமிழ்ச் சமூகம் பல நூற்றாண்டுகளில் சங்ககாலம் போல் அல்லாமல் பல விதங்களில் மாறுபட்டுள்ளது. கலைஞரின் படைப்புகளில் புரட்சிக்கருத்துகளை மிகவும் காண்கிறோம். சமூகத்தில் புரட்சி வேண்டும், மனிதர்கள் அனைவரும் சமத்துவமாக நடத்தப்படவேண்டும். அனைவருக்கும் சம உரிமை வேண்டும் என்ற பல கருத்துகளைக் கலைஞர் அவரது இலக்கியப் படைப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். 

பெரியாருடைய பகுத்தறிவு, இன உயர்வு, தாழ்வை ஒழித்து நிகர்நிலையாக்கும் கருத்துகளில் ஈடுபாடு கொண்டு வளர்ந்தவர் கலைஞர். மக்களுக்குள் மக்கள் வேறுபாடு காட்டும் முறையில் நடத்தும் போக்கு, மற்றச் சமூக வேறுபாடுகள் மறைய வேண்டுமானால், சங்க கால வாழ்வு போன்ற சமத்துவ வாழ்வு அனைவருக்கும் மலர வேண்டும் என்ற கருத்தைக் கலைஞர் தம் இலக்கியப் படைப்புகளில் எங்கும் அறிவிக்கின்றார். ஏனெனில் சங்கப் பாடல்களில் புலவர்கள் மக்கள் அனைவரையும் ஒரே நிலையில் வைத்துப் போற்றிப் பாடியிருக்கிறார்கள். சங்கப் பாடல்களின் பெருமையும், மேன்மையும் அது. இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்தும் நாம் இன்று சங்கப் பாடல்களைப் படிக்கும்போது, அவை நமக்குத் தரும் உணர்ச்சிகளை எளிதில் விளக்க இயலாது.  அத்தனை ஆற்றல் அவற்றுக்கு.  காதல், வீரம், ஈகை, மனிதர்கள் மேல் நேயம், அன்பு, அறிவுரை இவை அனைத்தையும் பற்றிப் பாடப்பட்ட அக்காலப் பாடல்கள் இன்றும் சமூகத்தில் எந்த நிலைமைக்கும் ஏற்க வேண்டிய கருத்துகளுடன் அமைந்துள்ளன.  இவற்றைப் படித்து, உணர்ந்து தோய்ந்தவர் நம் கலைஞர்.

சங்க காலச் சமூகத்தை அவர் தம் பாடல்களில், படைப்புகளில் காட்ட விரும்புகிறார். ஏனெனில், சங்க காலச் சமூகம் சமத்துவ சமூகம். சங்கப் பாடல்களில் வடமொழிச் சொற்கள் மிகக்குறைவாகவே உள்ளன.  இதை உணர்ந்த கலைஞர் வடமொழிச் சொற்கள் அதிகம் இல்லாத பாடல்களை, கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் பயன்படுத்தும் சொற்கள் சங்க காலச் சொற்களாகவே இருந்தாலும், அவர் தரும் கருத்துகள் தற்கால நிலையையே பளிங்கு போல விளக்குவனவாகும். கடல் போன்ற சங்க இலக்கியத்தில், நீதிநூல்களில், அவை தரும் வரலாற்றில், பண்பாட்டில் இருந்த ஆழ்ந்த அறிவுத் தெளிவு தான் கலைஞரின் அருமையான படைப்புகளுக்குக் காரணம்.

கலைஞர் படைப்புகளைப் படிக்கும்போது தமிழ் இலக்கியத்தின் கருத்துகளை இவரைப் போல் விளக்கியவர்கள் யாரும் இருக்க முடியாது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. அத்தனைச் சிறப்பு கலைஞர் படைப்புகளுக்கு அமைந்துள்ளன.

கலைஞர் புதினம், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், திரைக்கதைகள், சிறுகதைகள், வரலாற்று நெடுங்கதைகள், அறிஞர்கள் கூறும் கருத்துகள் எனப் பலவிதங்களில் இலக்கியப் படைப்புகளை அளித்துள்ளார். தமிழர்களிடம் அவர்களின் பழம்பெருமையைச் சிறந்த முறையில் உணர்த்தியிருப்பவர் கலைஞர். தொல்காப்பிய இலக்கணத்தைப் படிப்பது மிகக்கடுமையான ஒரு முயற்சி. அதில் ஒன்று அல்லது இரண்டு கருத்துகளை அறிவதற்கு இரண்டு அல்லது மூன்று திங்கள் கூடத் தேவைப்படலாம்.  ஆனால் கலைஞர் தொல்காப்பியத்தை மிக எளிதான முறையில் இனிமையான விளக்கங்களுடன் எழுதியுள்ளார் . இது ஒரு படைப்பு மட்டுமே மிகவும் உயர்ந்த பெருமையை அவருக்கு அளிக்கும். இது மட்டுமன்று, இது போன்ற பெரும் படைப்புகளையும் அவர் வழங்கியுள்ளார்.

நாம் எவ்வாறு கலைஞரது உயர்ந்த மேன்மையை, பெருமையை ஒரு சில வரிகளில் முழுமையாகக் கூற இயலும் ? 
கலைஞர் இலக்கியத்திலும், அரசியலிலும் ஆழ்ந்த அறிவுடையவர்.  வாழ்நாள் முழுவதும் தமிழ்மொழி, தமிழர் வாழ்வின் உயர்விற்காகப் பாடுபட்டுள்ளார். தமிழர் எவ்வாறு வாழ வேண்டும். தமிழ் மொழியை எவ்வாறு போற்ற வேண்டும். தமிழில் எவ்வாறு இலக்கியங்களைப் படைக்க வேண்டும் என்பதற்கெல்லாம் அவர் ஒரு பெரும் சிகரம் என்றால், அது அவரைச் சிறிதே புகழ்வதாகும்.

அவரது பெருமையை, இலக்கிய அறிவை, அரசியல் திறமையை இச்சிறு கட்டுரையால் விளக்க இயலாது. 
அவருக்குச் சங்க இலக்கியத்தில் இருக்கின்ற ஆழ்ந்த அறிவை, ஈடுபாட்டை அவரது சிறந்த படைப்புகள் நமக்குக் காட்டுகின்றன. அது மட்டுமன்று, சங்ககாலம் போன்ற வேறுபாடற்ற ஒரு சமத்துவ சமூகத்தை உருவாக்கும் கருத்தை அவர் இலக்கியங்களில் காண்கிறோம்.  அனைவரும் ஒரே நிலையில், மேன்மையுடன் வாழ வேண்டும் என்பதுதான் அவரது செயல், சிந்தனை, கருத்து. அவர் போன்று எழுதும் அறிஞர்கள் அனைவரும் தமிழ் இலக்கியப் பெருமையைப் பற்றி எழுதுவது மட்டுமன்று, அவ்விலக்கியங்கள் படைத்த சமத்துவ சமூகத்தைப் படைக்க வேண்டும் என்ற உணர்வைக் கலைஞர் படைப்புக்களிலிருந்து பெற்று உயர வேண்டும்.

செம்மொழிச் சிகரத்தின் சாரலில் தொடர்ந்து நனைவோம் ....
----

தேமொழி

unread,
May 31, 2021, 3:31:56 AM5/31/21
to மின்தமிழ்
3. யாதும் ஊரே; யாவரும் கேளிர் !

ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் 

கலைஞரின் பிறந்த பொன்னாள்  நமக்கெல்லாம் நலிவு தீர்த்த நன்னாள்.   சிகரத்தை இழந்து சிந்தை நிலைகுலைந்து வாடினாலும் பிறந்தநாள் வலம் வருகிறது. வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்தோடி வந்து நான் காப்பேன் என்ற புதிய விடியலோடு நம் முதலமைச்சர் நமக்கு ஆறுதல் வழங்க அரியணையில் அமர்ந்துள்ளார்.

கொடுந்தொற்றின் அடாத கொடுமையை நீக்க நாளும் அரசு கண் துஞ்சாது பணியாற்றுகின்றது. கலைஞரின் நினைவு நாள் என்றும் நமக்கு  உரம். நம் வாழ்வுக்கு வரம்.

புறநானூறு கலைஞரின் போர்வாள்! பொழுதெல்லாம் புறநானூற்றுப் புதையலில் ஒளிர்மணிகளை எப்படியாவது எந்நிலையிலாவது எடுத்துச் சொல்வதில் இன்பம் கண்டவர். பழம்பாடலைப் சொல்லும்போதே புதிய விளக்கம் பொலபொலவென உதிரும்.

உலக  நாடுகளில் எல்லாம் உலகத்தமிழ் ஆய்வு மாநாடுகள் நடந்தன. உலகத்தமிழ் ஆய்வு முதல் மாநாடு மலேசியத் திருநாட்டில் தொடங்கியது. அப்போது கலைஞர் ஆட்சிக்கு வரவில்லை. 1965 ஆம் ஆண்டில் உலகத்தமிழ் என்பதைப் பொறிப்பதற்கு  "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பொன்மொழிக்கு நிகரான நன்மொழி எதுவும் இல்லை அதுதான் பொருத்தம் என்று கூறினார். எண்ணியது அப்படியே நடந்தது. அன்றுமுதல் எந்த மாநாட்டிலும் இந்தச் செம்மொழிதான் பொறிப்பு மொழியாக நிலைபெற்று விட்டது .

உள்ளத்தில் ஊர்ப்பற்று ஊறியிருந்தாலும் தமிழ்மனம் எப்போதும் உலகம் தழுவியது. எந்த நூலைத் தொடங்கினாலும் வையகத்தை அரவணைக்கும் போக்கிலேயே பாடியுள்ளனர். பாருங்கள் யாதும் ஊரே என்று தொடங்கினாலும் தன் ஊர்ப்பற்று ஒளிரப் பூங்குன்றன் என்றே கணியன் அழைக்கப்பட்டார் என்று ஒருமுறை குறிப்பிட்டதை எண்ணிப்பார்த்தேன். இப்படி உரையாசிரியர்கள் சிந்திக்கவில்லை என்றேன். கணியனைத் துறவி என்பர். கணிப்பது ஆருடக் கணிப்பு என்ற ஊழ்வினையை வலியுறுத்தும் பாடல் என்று டாக்டர் ஜி யு போப்பும்  கருதினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் ஒருமுறை "ஆற்று நீர் வழிப்படுஉம் புணை போல்" என்றார்களே,  நீரில் தன் போக்கின் புணை போல மிதப்பது வாழ்வா! இறந்த மீன்தான் மிதக்கும். உயிருள்ள மீன் ஓடி ஓடி நீரைக் கிழிக்கும், எதிர்க்கும். தன் போக்கில் தடைகளை உடைத்தெறிந்து எதிர்நீச்சல் போடுவது தான் வாழ்க்கை. அதுதான் பகுத்தறிவாகும் .

நான் புன்முறுவலோடு எனக்கு அப்படிச் சொல்லிக் கொடுக்கவில்லையே என்று திகைத்து நின்றேன். சொல்லியறிவது வேறு, சுயமாக நினைப்பது தான் பிழிந்த சாறு என்றார்.

புறநானூற்றை மறைக்க வந்த புழுதிக்காற்றே ஓடு!  கலிங்கத்துப்பரணியை மறைக்கவந்த காரிருளே ஓடு,ஓடு, பின்னங்கால் பிடரியில் இடிபட ஓடு  என்ற மனோகராவில் முழக்க வரிகள் தாம் என் நினைவில் நின்றன. யாதும் நாடு யாதும் ஊர் கற்பதற்கு எல்லையில்லை.  கடல் கடந்தும் செல்லலாம் என்ற திருக்குறளைச் சொல்லிக் காட்டலாம்.

"திரைகடல் ஓடி திரவியம் தேடி" என்பதைக் காட்டி பிழைப்புக்காக அயல்நாடுகளுக்குக் குடியேறி அல்லற்பட்டார்கள்.  அங்கென்ன திரவியம் கொட்டியா கிடக்கிறது.  இக்கரைக்கு அக்கரை பச்சையென்று ஏக்கத்தில் வாழ்கிறார்கள்  என்று தொடர்ந்து பேசினார். கிடைத்த ஆறு மணித்துளிகளில் இப்படிக் கருத்து முத்துக்களை உதிர்த்தார், எங்கே எப்போதும் எந்நிலையில் இருந்தாலும் தாதிமனம் நீர்க்குடத்தே தான் என்ற தொடரின்படி தொட்ட இடம் எல்லாம் - கண்ணில் பட்ட இடமெல்லாம் தமிழ் தான் அவருக்குத் தட்டுப்பட்டது. 

கலைஞரின் கைவண்ணத்தில் புறநானூற்றுப் பொலிவடைவதைக் காணலாம். 
மூன்று கூறாக ஆவதற்கு முன்பிருந்த 
முகவைப் பெரு மாவட்டத்தில் மூதறிஞர் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் 
பிறந்தார் எனக் கேள்வியுற்றுக் களிப்புடனே மகிபாலன்பட்டிக்குச் 
சென்றிருந்தபோது பூங்குன்றமெனப் பழைய நாள் இலக்கியமாம்
புறநானூற்றுக் குறிப்பில் இருந்த ஊரின் பெயர்தான் 
மகிபாலன் பட்டியாக மாறிற்றென்று, பெரும்புலவர் 
மாணிக்கனார் உரைக்கக் கேட்டு 
மகிழ்ச்சியிலே திளைத்துப் போனேன்.
கணியன் பூங்குன்றனார் எனும் அவ்வூர்க்  கவிஞன்
கற்குகை யொன்றில் செதுக்கியுள்ள கவிதையினைக்
காண வாரீர் என அழைத்திடவே; சென்று கண்டேன் ! - அந்தப்
பழம்புலவன் கரங்கொண்டு செதுக்கியதோ - அன்றி
பார்புகழும் அப்பாட்டைப் பின்வந்தோர் செதுக்கியதோ?
யார் செயலாய் இருந்திடினும் அப்பாட்டில்
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும்
அறைகூவல்தனை அற்றைநாளில் ஒரு தமிழன்
நிறைகுடமாய்த் திகழும் தன் நெஞ்சத்தைத் திறந்துகாட்டி
விரிகடல்சூழ் உலக முழுதும் நம் ஊரே என்றும்
விழியும் ஒளியும் போல் மக்கள் எலாம் நம் உறவே என்றும் - புதிய
வெளிச்சத்தால் பொல்லாத இருள் கிழித்து
வேற்றுமையின் வேரறுத்துப் புரட்சி செய்தான்!
பூந்தமிழில் வண்டாகப் புணர்ந்து கலந்து - இந்தப்
பூமிக்கே பொதுக்கவிதைக் கனியொன்றைத் தந்த கவிஞன்
பூங்குன்றந்தனில் பிறந்த புலவன் கணியன்தான் என்கின்றபோது
புல்லரித்துப் பூரித்துப் போகுதம்மா; நம் எண்சாண் உடம்பு!
அந்நாளில் புலவரெல்லாம் அகிலத்தை ஆளுகின்ற
அரசர்களின் அவைக்களத்தில் அரிய தமிழ்க் கவிகள்பாடி
ஆனையென்றும் சேனையென்றும் ஆயிரம் பொற்கிழிகள் என்றும்
மானியங்கள் மற்றும் பல பரிசில் என்றும் மலைமலையாய்ப் பெற்றிடுவர்!
இந்நாளில் சில புலவர்போல் வாழ்வார்க்கு வாழ்த்துரைத்து
இன்னலுற்று அவர் தாழ்வாராயின் அக்கணமே சிறகடித்து
அற்றகுளத்துப் பறவைபோல அடுத்தகுளம் பார்க்கின்ற
இயல்புடையார் அப்போதும் சிலர் இருந்திடத்தான் செய்தார்கள்!
கணியூர்ப் பூங்குன்றனோ; அவர்கண்டு கவலைமிகக் கொண்டதனால்
அணிமணிகள் தமிழில் செய்து அரசர்க்கும் வள்ளல்கட்கும்
பூட்டி மகிழ்வதிலே ஆர்வமொரு கடுகளவும் காட்டாமல் இருந்திடவே,
நீட்டி முழக்கிச் சிலபேர்; “அரசை அணுகிப் பரிசு பெறப்
பாடல்களை இயற்றிடுக!” எனக் கேட்டபோது - கணியன்;
பக்குவமாய் விடையளித்து அவர் விருப்பத்தைத் தட்டிக் கழித்தான்!
“நாடு பற்றிப் பாடுகின்றீர் - நன்று! நன்று!
நாடாளும் மன்னர் பற்றிப் பாடுகின்றீர் - அதுவும் நன்று!
நாடுதனை மீட்பதற்கும் புதிதாகப் பறிப்பதற்கும்
கேடுகளைச் சுமந்து விழுப்புண்கள் ஏந்துகின்ற
பீடுநடை வீரர் பற்றிப் பாடுகின்றீர் - மிகவும் நன்று!
ஏடுகொள்ளா இலக்கியங்கள் காதலையும் களம்புகுவோர் காதையையும்
எடுத்தியம்பும் காரணத்தால் என்வழியைத் தனிவழியாய் ஆக்கிக்கொண்டு
எல்லா ஊரும் எமது ஊரே
எல்லா மனிதரும் எமது உறவே - எனஎழுதத் தொடங்குகின்றேன்” என்றான்!
நற்றிணையில் வருகின்ற காதல் பாட்டொன்றைக் கூடக்
கற்றறிவாளன் கணியன் பூங்குன்றன் எழுதுங்கால்
“மருந்துக்கு உதவுகின்ற மரத்தின் பட்டைகளை மட்டுமன்றி - அந்த
மரத்தையே வேரோடு பிடுங்குவதோ?” எனக்கேட்டு,
பயன்படுவன எதனையும் பாதுகாக்க வேண்டுமெனப்
பாங்காக அறிவுரையைப் பகருகின்றான் உலகிற்கு!
‘ஒரே உலகம்' எனும் கொள்கைதனை - மனிதரெல்லாம்
‘ஒரே குலம்' எனும் தத்துவத்தைப் புவியில்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு
முன் தோன்றிய மூத்த குடிப் பிறந்த தமிழ்க்
கணியன் பூங்குன்றன், கவிதை நடைச்
சொல்லூன்றி நிலைநாட்டுகின்றான்!
விதிப்பயனே எல்லாம் என்றுரைத்துச் சோர்ந்து
கதியற்றுக் கன்னத்தில் கைவைப்போர்தனைப் பார்த்து,
“நன்மைக்கும் தீமைக்கும் காரணங்கள்
நமது செயல்களேயன்றிப் பிறரல்லர்" என்று
நயம்பட உரைக்கின்றான் அந்த நற்றமிழ்ப் புலவன்!
அம்மட்டோ?
வேதனைகள் விரைந்து தொடர்வதும் - அவை
விலகித் தொலைந்து போவதும் கூட
நாம் ஏற்றிடும் செயல்களால் என்றே
நன்கு கணித்து நவில்கின்றான் கணியன்!
‘பிறந்த உயிர்கள் இந்த மண்ணில்
இறந்து மறைதல் புதிதுமல்ல;
இன்பமொன்றுக்காகவே வாழ்க்கை என்பதும்
துன்பம் வந்திடின் வாழ்வை வெறுப்பதும்
உறுதி கொண்ட மாந்தர்தம்
உளத்திற்கேற்ற உயரிய செயலுமல்ல!
ஆற்றொடு போகும் தெப்பம் போல்
ஆடியும் அசைந்தும் அமைதி கண்டும்
ஆருயிர்ப் பயணம் அவனியில் நடக்கும்! எனவே
ஆன்றோர் காட்டிய அரிய வினைகளைத் தொடர்க!
செழிப்பில் திளைத்தோர்க்குச் சிரம் தாழ்த்தலு மில்லை;
சிறியோர் எனப்படுவோரை இகழ்ந்துரைத்தலு மில்லை!!
இவ்வாறு;
உலக ஒற்றுமை, ஒரு குலக் கொள்கை,
உயிரின் தன்மை, உயரிய வினைகள் - வாழ்வில்
உற்ற துன்பமும் உவகையின்பமும் ஒன்றெனக் கருதுதல்,
உயர்ந்துள்ள செல்வர்க்குப் பணியாமை - வீணில்
உழன்றிடும் சிறியோரை இகழாமை, எனப் பல
வண்ணமிகு மலர்கள் கொண்டு - உயர்
எண்ணங்களைத் தொடுத்தளிக்கும் பெரும்
உள்ளம் காணுகின்றோம் இந்தக் கவிதையினில்; புது
வெள்ளம் போல் இக்கருத்துப் பரவட்டும் காசினியில்!
ஆனால் ஒன்று;
ஊரெல்லாம் இணைந்து ஓருலகாய் ஆவதென்பதும்
உறவுகொண்டே மனித குலம் ஒன்றே எனத் திகழ்வதும்
உயரிய குறிக்கோளாம் என்றுரைத்த புலவன் கூடத்
தனது ஊரை மறவாமல் பூங்குன்றமென இணைத்தே
கணியன் பூங்குன்றன் எனும்
கவிஞனாய் உலவியதைக் கவனத்துடன்
எண்ணிப் பார்த்தால் - அந்த மாமனிதனையும்
மண்ணின் பற்று விடவில்லை என்பதுதான் உண்மையன்றோ?
“யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னாது என்றலும் இலமே;
'மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆறாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்' என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.”
(புறநானூறு - பாடல் : 192 பாடியவர் : கணியன் பூங்குன்றன்)
பொருள் விளக்கம்:
கேளிர் = உறவினர். புதுவதன்று = புதியதல்ல.
முனிவின் = வெறுப்பின் காரணமாக
புணை = தெப்பம். திறவோர் = ஆன்றோர்
இலம் = இல்லாமை. ( இல்லையென்ற பொருளில் இங்கு வரும் )

கணியன் பூங்குன்றனார் இராமநாதபுர மாவட்டத்தில் மகிபாலன்பட்டியென இப்போது வழங்கும் ஊரினர்.  இது  பூங்குன்றமெனப் பண்டைநாளிலும் இடைக்காலத்தும் வழங்கிற்றென்பதை, அவ்வூர்க் கோயில் கல்வெட்டால் அறியலாம். இப்போது குடகு மலையென வழங்குகிறது. முது பெரும் புலவர் மகா மகோபாத்தியாய பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியாரார் இவ்வூரினராவர். இவ்வூர் பண்டே போல் இன்றும் தமிழ்ப்புலமைச் சான்றோரைப் பெற்றிருப்பது இதன் சிறப்பை வற்புறுத்துகிறது.

பூங்குன்றனார் இடரினும் தளரினும் இன்பத்தினும் துன்பத்தினும் எவ்விடத்தும் அயராத உள்ளமும் கலங்காத அமைதியும் உடையவராக ஒளிர்ந்தார்.  நலஞ் செய்தாரென ஒருவரைப் பாராட்டலும், தீது செய்தாரென ஒருவரை இகழ்தலும் இல்லாதவர் இவ்வாறே பெரியோரைப்  புகழ்தலும் சிறியோரெனப் புறக்கணித்தலும் அறியாதவர். 

உயிர்கள் அனைத்தும் தாந்தம் செய்த வினைக்கேற்ப இன்பமும் துன்பமும் உயர்வும் தாழ்வும் செல்வமும் வறுமையும் எய்தும் என்பதை நூல்களாலும் நடைமுறையானும் நன்கறிந்தவர். இப்பண்பினால் நல்லிசைப்புலமை மிக்க இவர் எத்தகைய வேந்தரையும் - வள்ளல்களையும் பாடிற்றிலர்.

தலை வணங்காத இவரைக் கண்ட அக்காலச் சான்றோர்க்கு வியப்புண்டாயிற்று .
சிலர் முன் வந்து “சான்றோராகிய நீவிர் எவரையும் பாடாமை என்னையோ?” என்றாராக, மேலே கூறிய தம் கருத்துகளையமைத்து இப்பாட்டைப் பாடியுள்ளார் என்று பழைய உரைக்கு இடஞ்சுட்டிப் பொருளுரைத்தார் உரைவேந்தர்.

தேமொழி

unread,
Jun 8, 2021, 4:58:51 PM6/8/21
to மின்தமிழ்
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம்! - 4

"மானம் காத்த மன்னன்"

ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் 

ஒரு நாட்டின் மரபு, பண்பாடு, மொழித்திறம், பழக்க வழக்கம், நம்பிக்கை,  எப்படியோ வந்து சேர்ந்த வழிபாட்டுச் சடங்கு முதலிய நிலைகளோடு  தொல்லாய்வில் கிட்டும் கலன்கள் - கற்கள் போலத் தொல்லிலக்கியங்களில் இடம் பெறும் குறிப்புக்களை இலக்கிய ஆய்வோடு மானிடவியல் , மாந்தர் மரபியல் சேர்த்து அறிவியற் கருவி, ஆடிகளுடன் சேர்த்து உலகியல் அனைத்து நிலைகளிலும் ஆய்வுகள் நடந்துள்ளன.

வீரமும் காதலுமே வாழ்வின் அகம் புறமாகத் தமிழர்கள் வாழ்வின் உறுதிப் பொருளாகக் கருதினர்.   போர்வீரர்களின் புகழும் - வீரர்களின் வெற்றியும் சிறப்பாக எப்போதும் போற்றப்பெற்றன.

            விழித்த கண் வேல்கொண்டு எறிய அழித்து இமைப்பின்
            ஓட்டு அன்றோ வன்க ணவர்க்கு        
என்ற திருக்குறள் பகைவரைச் சினந்து நோக்கிய கண், அவர் வேலைக் கொண்டு எறிந்தபோது விழிகள் மூடி இமைக்குமானாலும், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ?  என்பது பொருள்.

            விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
            வைக்கும்தன் நாளை எடுத்து          
வீரன் தன் வாழ்வில் கழிந்த தன் நாள்களைக் கணக்கிட்டு விழுப்புண் படாத நாள்களை எல்லாம் பயன்படாமல் தவறிய வீணான நாள்கள் என விலக்குவான்.

முத்தமிழறிஞர் கலைஞர் ஒருமுறை தன் உரையாடலில் பெண்களின் கண்களைப் பார்த்தால் வேல் போன்ற விழிகள், வாள் போன்ற பார்வை, அம்பு போன்ற நோக்கு என்று கூறுவதால் வேலும் வாளும் அம்பும் வில்லும் வீட்டில் அவ்வளவு பழகிய பொருள்கள் எனத் தெரிகின்றன. அந்த நாளில் சிறுவர்கள் விளையாடும் போது ஏர்   ஆட்டம் விளையாடுவது உண்டு. எதிரே ஒரு பையன் நின்று கொண்டு தன் விரலை நீட்டி நீ பயப்படுவாயா  என்று கண்ணெதிரில் நின்று காட்டுவான்.   பயத்தில் கண்ணை மூடிக்கொண்டால் தோற்று விட்டான் என்று பொருள்.  வேல் தேய்ந்து விரலான கதை என்று நான் எங்கோ எழுதினேன். இந்தக் கருத்தைத் திருக்குறளில் வேல் வந்தால் விழி இமைக்காத வீரன் என்று குறிப்பிட்டுள்ளார். இது கற்பனையாகக் கூட இருக்கலாம்.

மேலும் கூறினார்;  
நேற்றொருவர் ஈமச்சடங்குகள் பற்றிய ஒரு நூலைக் கொடுத்துச் சென்றார். குழந்தைகள், சிறுவர் சிறுமியர் திடுமென இறந்தால் காது குத்திப் புதைப்பார்கள். சிலர் ஒரு கையில் காயம் வந்த புண் வேண்டுமென்று ஒரு கத்தியால் கீறுவார்கள், தழும்பில்லாமல் சாகக் கூடாதாம். எனக்குப் புறநானூற்றுப் பாடல் தான் நினைவுக்கு வந்தது. முத்தமிழறிஞர் கலைஞரின் விளக்கத்தைக் காணலாம்.    

            மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
            உயிர்நீப்பர் மானம் வரின் 
எனும் திருக்குறளுக்குத், தயிர் கடைந்தால் தலைகாட்டும் வெண்ணெய் போன்று தமிழ்ச்சங்கக் காலத்து வீரன் வாழ்வே உண்மைச் சான்று!

            தவழ்ந்து வரும் தன் மகவை முத்தமிடுவதற்கும் குனிந்திடாமல் தலைக்கு மேலே தூக்கச் சொல்லிக் கொஞ்சுகின்ற தன்மானத் தமிழ்ச்சிங்கம் அவன்! 
            தாமரை மொட்டிரண்டை ஏந்தி வரும் தன் பட்டத்து அரசியையும் நெளியாமல் நிமிர்ந்து நின்றே நெஞ்சகத்தில் அணைத்துக் கொள்வான். 
            நிலம் நோக்கும் வழக்கமின்றி நேர்பார்வை செலுத்தித்தான் நிலவு முகத்தரசி நெற்றியிலே இதழ் பதிப்பான்.
            படுத்திருக்கும்போது பஞ்சணையில் வினாக்குறிபோல் வளைய மாட்டான் - வில்லில் தொடுத்திருக்கும் கணையைப்போல் கால்நீட்டித் துயில் கொள்வான்!
            ‘வளையாத முதுகெலும்பு பெற்றவனோ? வணக்கம் எனும் பொருள் விளையாத வயற்காடோ அவன் இதயம்?' என வியந்து, வாய் பிளந்து மூக்கின்மேல் விரல் வைத்து - அவனை வாழ்த்தியவர் பலருண்டு!

         ‘இரும்பொறை ' மரபில் வந்த இணையிலா வீரனவன்.
             இரும்பொத்த கணையமரம் போலக் கால் படைத்த சேரனவன்; -
             அதனாலே சேரமான் கணைக்கால் இரும்பொறை யென்னும் செந்தமிழ்ப் பெயருடன் செங்கோல் ஏந்தினான்.

            தொண்டித் துறைமுகம் அவன் ஆட்சித் தலைநகர் - அதனைத் ‘திண்டிஸ்' என்று யவனர்கள் அழைத்தனர்!
            மூவன் என்னும் முடியுடை வேந்தனை வீழ்த்தி - அவன் முகவாய் நொறுக்கிப் பற்களைப் பெயர்த்துத் - தனது
கோட்டை வாயிற் கதவின் பெரிய பூட்டின் மீது பொருத்தி வைத்தான் என்று
        ‘களவழி நாற்பது' பாடிய பொய்கையார் எனும்புலவர் - அவனது களப்புகழ் பலபடக் கூறிக் களித்திடுவாரே!
            தமிழரிடையே ஒற்றுமை என்பது அத்திப்பூ - ஆடிப்பிறை - அதனாலே தமக்கிடையே போர் தொடுத்துத்
தமிழினம் பிளவுபட்ட சேதி கூறும் வரலாற்று ஏடுகளின் வரிகளாக ஆகிவிட்டார் - தமிழர் வாளாற்றல் காட்டுதற்கு வரிந்து கட்டி இனத்துக்குள் இரண்டுபட்டார்!

            செங்கணான் எனும் சோழன், செருமுனையில் சிறுத்தை போன்றான்! எங்கணும் வெற்றி கண்டு புகழ்வானில் பறக்க விட்டான் புலிக் கொடியை!  அது கேட்டுச் சேரமன்னன் ஆர்த்தெழுந்தான்!  அணி தேர்ப்புரவி ஆட்பெரும்படை அவன் ஆணை கேட்டுப் பின்தொடர,

         “மங்குமோ என்றன் வீரம்? என் மாவலித் தோளின் முன்னே தங்குமோ சோழன் பெற்ற வெற்றி” யென்று கணைக்கால் இரும்பொறை கர்ச்சித்துக் கங்குல் கிழித்தெழும் ஒளியாக எதிர்ப்பட்டான்! முரசுகள் போலே மத்தகம் படைத்த முரட்டு யானைகள் மோதிடவே அரசுத் தேர்களின் அச்சாணி கழன்று ஆயிரம் சுக்கல்கள் ஆயினவே!

            குளத்து நீரில் செத்து மிதக்கும் குறுங்கெண்டைமீன் போலே குதிரைகள் குளம்படி குருதிச் சேற்றில் அழுந்திப் பதிந்தனவே! கட்கம் ஏந்திய காலாட் படையினில் காயம் ஒருசிலர் முதுகில் பட்டிடவே வெட்கம் துரத்த - அவர்கள் வீழ்ந்து மடிந்தனரே!

            உறுதி முழக்கமும் குருதிப் புனலும் இறுதிப் பயணமும் எங்கும் நிறைந்த களம்!  
            பொருதிடும் இருவரில் வெல்வது யாரென அறுதியிட முடியாமல் அமைந்த களம்!
            ஆளுக்கொரு மின்னலை எடுத்து வாளுக்குப் பதிலாக வீசினரோ - எனச்
            சோழன் சுழற்றும் வாள்பட்டுச் சூரர் தலைகள் ஆயிரம் உருளும்!
            சேரன் வீசும் வாளின் பயனாய்ச் செக்கர் வான்போல் சிவந்தது நிலமும்!
            ஈட்டியின் பாய்ச்சல் கண்டு இமை கொட்டியவன் கோழை எனும்
            இலக்கணத்தை இருவருமே இதயத்தில் பதித்தவர்தாம் என்றாலும்
            சேற்றில் சிக்கிய களிறெனவே - இறுதியில் சேரமான் இரும்பொறை சிக்கிவிட்டான்!
            ஆற்றல் முழுதும் காட்டி நின்றான்; ஆயினும் சோழன் முன்னே அவன் தோற்று நின்றான்!
            திருப்போர்ப் புரமெனும் சமர்க் களத்தில் திண்தோள் சேரன் தோற்றவுடன் -
            அடடா; அவனைச் சோழ மன்னன் குடவாயிற் கோட்டச் சிறைதனில் அடைத்தான்.
            உறைவிட்டெழுந்த உடைவாள் பட்டே உயிர்விட்டுப் போரில் புகழ் சேர்க்க முடியாமல்
            சிறைப்பட்டு வாழும் நிலை வந்ததே என்று சிந்தை அணு ஒவ்வொன்றும் நோக வாடினான் சேரன்.

            தாகம் ஒருநாள் அவன் நாவை உலர்த்த - 
            சிறைக் காவல் வீரனை அருகே அழைத்து - 
            தண்ணீர் விரைவில் கொணர்க என்றான் - 
            சற்றுத் தாமதமாகக் குவளையில் தண்ணீர்
            கொண்டு வந்து கொடுத்ததனாலே - 
            நெருப்பை மொண்டு தகித்தது சேரனின் நெஞ்சம்!
            பண்டு வாழ்ந்த குலப் பெருமை யெலாம் 
            துண்டுபட்டுப் போனதெனத் துவண்டுவிட்டான்!
            ஏடொன்று எழுதிவைத்தான் எதிர்காலத் தமிழகமே - 
            அதனைப் பாடென்று விட்டுச் சென்றான்!

        ‘பிள்ளையொன்று இறந்து பிறப்பினும் - 
            சதைப் பிண்டமொன்று பிறந்து தொலைக்கினும்
            மூப்பு கொண்டு மடிந்திடினும் 
            முடிவிலொரு நோய் கண்டு முடிந்திடினும்
            போரில் கலந்து விழுப்புண்பெற்று - 
            மானமிகு வீரர் என மாண்டிடாத பழி துடைப்பதற்காக
            வாள் கொண்டு உடலில் கீறி - 
            வான்புகழ் வாழ்வில் சேர்த்தபின்பே
            உடலடக்கம் செய்திடும் மான மரபே! 
            அடலேறுகள் மலிந்திடும் தமிழர் மரபு!
            அந்தப் பண்பாட்டு மரபு வழி வந்துதித்த நானோ - 
            மனப் புண்பட்டுப் பகையரசின் சிறைப்பட்டு நாய்போலத்
            தண்ணீர்க்கும் காத்திருக்கலானேன் - 
            இனி உண்ணீர் என்று பன்னீர் தந்து உபசரித்தபோதும்
            தகுதியன்று இனி உயிர்வாழ்தல் - 
            அதனாலே தமிழ்த்தாயே! என் மானங்காக்க
            உன் மடிதனிலே விழுகின்றேன்; தாங்கிக் கொள்க!

            இப்படிஏழடிப் புறப்பாடல் ஒன்றை எழுதிவிட்டுச் - 
            சிங்க ஏறுபோல் சேரமன்னன் பெயரைப் புகழில் நட்டான்!
            எப்படிப்பட்டோர் இருந்தார் மறைந்தார் என்பது - 
            அவரவர் எச்சத்தாற் காணப்படும் என்பதற்கொப்ப
            சேரமான் கணைக்கால் இரும்பொறை 
            வீரவாளினை ஓலையாய்க் கொண்டு
            தீட்டிய புறப்பாடலை நீட்டுகின்றேன் உம்மிடையே -
            படித்துப் பாரீர்! - உணர்ச்சியால் துடித்துப் போவீர்!

        “குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
            ஆள் அன்று என்று வாளின் தப்பார்;
            தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
            கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
            மதுகை இன்றி, வயிற்றுத் தீத்தணியத்
            தாம் இரந்து உண்ணும் அளவை
            ஈன்மரோ, இவ் உலகத் தானே.”
                        (புறநானூறு : பாடல் : 74 பாடியவர் : சேரமான்கணைக்கால் இரும்பொறை)

பொருள் விளக்கம்:
ஊன்தடி = சதைப்பிண்டம்.
ஆள் அன்று என்று வாளின் தப்பார் = ஆளல்ல என்று கருதாமல் வாளால் வெட்டிடத் தவறமாட்டார்.
ஞமலி = நாய். 
கேளல் கேளிர் - பகைவர்.
மதுகை - மனவலிமை.

பழங்கால மரபு அங்கங்கே மின்னுவதை நம்பிக்கையோடும் உறுதியாகவும் சொல்லலாம். சிந்து வெளிப் பண்பாட்டைப் பற்றிய எனது பதினேழு ஆண்டுக்கால ஆய்வின்போது பல நண்பர்கள் என்னை, “ சிந்துவெளி நாகரிகம் அழிந்துபோனதன் காரணங்கள் யாவை?'' என்று கேட்டிருக்கின்றனர். அந்த அழிவென்பது இதுவரை மெய்ப்பிக்கப்படாத ஓர் ஊகமே.

அழிவிற்குப் பின்னும் அவற்றில் சிறப்புற்றிருந்த பண்பாட்டுக் குறியீடுகள் வாழ்கின்றன. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்திய நாடு மிகுந்த மாறுதலுக்குட்படாமலேயே இருந்து வருகிறது.  முற்றுகைகள் நிகழ்ந்தன;
 இந்தியப் பெருநிலத்தில் போர்கள் செய்யப்பட்டன; புதிய நாடுகளும் இனங்களும் அதனை வென்று ஆட்சி செய்தன; வேற்று நாகரிகங்கள் புதுப்புது கருத்துகளையும் குறிகோள்களையும் கொண்டு சேர்ந்திருக்கின்றன;  ஆனால் இந்திய நாடு, அதன் தொல்பழம் நாகரிகம் ஆகியவற்றின் விளைவால் ஒவ்வொரு மனிதனடிமும்  உருமாற்றம் பெற்றிருக்கக் காணலாம்.

எகிப்து, பாபிலோனியா, அசீரியா ஆகிய நாடுகளின் தொன்மையான நாகரிகங்கள் உலகப்படத்திலிருந்து தடம் தெரியாமல் நீக்கப்பட்டு விட்டன.  எனினும் இக்காலத்தில் இந்து நதிக்கரையோரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் ஒளிச் சின்னங்களைக் கொண்ட இந்திய நாகரிகமானது இன்னும் உயிருடன் இருக்கிறது. இந்திய நாட்டிலேயே வாழ்ந்து கொண்டு இறந்த காலத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் பணியைச் செய்யும் வரலாற்று ஆய்வாளனுக்கு இது உண்மையிலேயே ஒரு பெரிய பேறு ஆகும்.

நாம் இன்னும் அந்தப்படை வீரர்களை வளர்த்த சூழலைத்தான் எண்ணி வாழ்கிறோம். மீனவர்களும்,
பரதவர்களும், வேளாளர்களும், குடகர்களும் இன்னும் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் வெவ்வேறு மொழிகளில் பயன்படுத்தப் பெறுகின்ற எழுத்துக்கள் சிந்துவெளியில் காணப் பெற்ற குறியீடுகளின் இயல்பான நிறை வளர்ச்சியே என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சிந்துவெளி மக்கள் பேசிய தொன்மையான மொழியின் எதிரொலிகளே நம்முடைய காதுகளில் தொடர்ந்து உரக்க ஒலிக்கின்றன.  இவ்வாறு எழுதிய அருட்தந்தை ஈராசு அடிகள் ஓரளவேனும் புறநானூற்றுப் பாடலுக்குப் பொருந்தி அமைகிறது.

செம்மொழிச் சிகரத்தின் சாரலில் தொடர்ந்து நனைவோம்.

-------------------------------------------------

தேமொழி

unread,
Jun 18, 2021, 12:43:38 AM6/18/21
to மின்தமிழ்
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம்! -  5

"உணர்ந்தோர் அறிவர் ! அறிந்தோர் உணர்வர் !"

ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் 


மிச்சிகன் பல்கலைக்கழகத்து மொழியியல் பேராசிரியர்களாயிருந்த ஏ.எல்.பெக்கர் கீத் டெய்லர் சிகாகோ பல்கலைக்கழகத்துப் பேரறிஞர் ஏ.கே. இராமனுஜனுடன் நிகழ்த்திய கலந்துரையாடலில் வரும் தொல்காப்பியரைப் பற்றிய முடிவுகள் நாம் வியந்து போற்ற வேண்டியவை.  அறிஞர் பெக்கர், அமெரிக்கப் பல்கலைக்கழக நூலகங்களில் எல்லாம் தொல்காப்பியரின் சிலையை நிறுவவேண்டும்; ஏனெனில் ....
மேலை உலகின் பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றாரோடு அவர் ஒப்பிடற்குரிய தகுதி பெற்றவர்; 
தொல்காப்பியரின்  சிந்தனையாற்றல், கற்பனைத்திறன், மொழியின்பால் காட்டிய ஆர்வம் வழியாகத் தொல்காப்பியர் தமிழின் அறிவுலகைத் திறந்துள்ளார்;
மொழி பற்றிய நுணுக்கங்களையெல்லாம் நுட்பமான ஆய்வுக்கு உட்படுத்தினார்; 
கோட்பாடுகளின் வரையறைகளையெல்லாம் தெளிவுபடுத்தினார்; 
மொழியைப் புரிந்துகொள்ளத் துணை செய்யும் மரபுகளையும் நாம் ஆராயாது ஏற்றுக்கொண்ட எல்லாவற்றையும் தெளிவாக விளக்கிய திறனால் தொல்காப்பியர் இன்றியமையாத அறிஞர் என்று எடுத்துரைத்தார்.
 
அறிஞர் ஏ.கே. இராமானுஜன் சொன்னது....
தொல்காப்பியர் கவிதை இயல் தந்த சிந்தனையாளர்;  
மொழி இலக்கணம் உரைத்தவரும் அவரே ஆவார்; 
தமிழ் மொழிக்குச் செய்யவேண்டிய எல்லாவற்றையும் அவர் செய்திருக்கிறார்; 
சொல்லாட்சிக்கலை, யாப்பிலக்கணம், கவிதை இயல் ஆகிய மூன்றிலும் அவர் வித்தகர்;
மொழி இயல் ஆசான்களுக்கெல்லாம் தலையாய சான்றெனத் தக்கவர் ஆவார்;
 மொழிக்கு அவர் செய்யாதது ஏதுமில்லை; 
அவர் தம்மொழியியல் ஆய்விற்குப் பேச்சு மொழியிலிருந்து கவிதை மொழிவரை உள்ள எல்லாக் கூறுகளையும் சூட்டியுள்ளார்;
 உலகமொழி இலக்கண நூல்களிலெல்லாம் தொல்காப்பியத் ஒத்தது வேறில்லை என்பதைத் தெளிவாக்கி எழுதினார்.

இந்த அரிய குறிப்பை அறிஞரும் பாராட்டுக்குரிய பெரும் பேராசிரியருமாகத் திகழும் நல்லறிஞர் ப மருதநாயகம் எழுதியுள்ளார்.
தொல்காப்பியர் தமிழுக்கு வரம்பு வகுத்தவர்;
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்த "போக்கறு பனுவல்" என்று பாயிரம் பாராட்டும் மரபைப் போற்றுவது தொல்காப்பியரின் மாட்சியாகும்;
நூன் மரபு,சொன் மரபு, மரபியல் என்று பலவிடங்களில் வலியுறுத்துவார்;
எனினும் மரபென்பது புலவர்க்குக் காலிற் பூட்டிய தளை என்று கருத முடியாது;
கைக்கு அமைந்த வளை  மரபில் ஊறவும் - மரபை மீறவும் - மரபை மாற்றவும் தொல்காப்பியத்தில் இடமுண்டு;
பேரரசர்கள் நிறுவிய வரலாற்றுக் கற்றூண்களும் கற்கோட்டைகளும் சின்னமும் பின்னமும்பட்டு அழிந்தொழியும் இவ்வுலகில், ஒரு தமிழ்ப்புலவன் மூவாயிரம் ஆண்டுகட்கு முன் பனையேட்டில் எழுதிய தொல்காப்பியப் பெருநூல் சிதைவின்றி வழிவழிக் காக்கப்பட்டு, இன்றும் நம் உடைமையாக
வாழ்கின்றது என்பது நமக்கு எல்லையில்லாத பெருமிதம் அளிப்பது. 

காலக்கோட்படாதும், கடும்பகைக் கோட்படாதும் இத் தனிப்பெரும் பனுவலைக் குடும்பச்சொத்துப் போற் காத்தளித்த நம் முன்னோர்கள் தமிழுக்குச் செய்த தொண்டு தவப்பெரிது. நம் மூதாதையர் அடித்தொண்டினைப் பின்பற்றித் தமிழினத்தின் பொதுவுடைமையான தொல்காப்பியத்தினை நம் பிந்தியோர்க்கு நாமும் காத்து வழங்கவேண்டாமா? என்று நாம் உறுதியேற்க முற்படுவோம் என்று செம்மல் வ.சுப.மாணிக்கம் நமக்கு வழிகாட்டினார்.

இன்றைய நிலையில் எழுத்தாளர்கள் சிலர் கொச்சைப் பேச்சினை வரையறையின்றிக் கையாளக் காண்கின்றோம். மக்களோ உரிய பாத்திரங்களோ பேசுவதுபடியே எழுத வேண்டும் என்ற கருத்தைக்  கொண்டவர்களாய் மூளிச்சொற்களை எழுத்தாக வடிக்கின்றனர். 
நீங்க அலைஞ்சு களைப்பா வந்திருப்பீங்க,  
ஊரிலேர்ந்து வறீங்களா,  
எங்கேர்ந்து வாரீங்க, 
அவங்க எண்ண பண்ணுவாங்கன்னா, 
மறந்து வைச்சிட்டு வந்திட்டியா, 
ஆம்பிளையா பொம்பிளையா பொறந்தது, 
சொல்றார், கொல்றார், நம்மாள், மவராசனா இருக்கணு, புடிக்கலீங்க, 
இத்தகைய மூளிச் சொற்கள் இன்றைய உரை நடையில் பல்கி வருவதைப் படிக்கின்றோம்.

வாய் வழக்கிற்கும் எழுத்து வழக்கிற்கும் அடிப்படையமைப்பில் சில நுண்ணிய தனி வேறுபாடுகள் உண்டு. ஒலியை உயிராகவுடைய வாய்வழக்கை எழுத்து வழக்கில் பெரும்பாலும் கொண்டுவர முடியாது. பேசுகின்ற  போது தேவையானால் எழுத்து வழக்கை வாய்வழக்காக மாற்றிக் கொள்ளலாமேயன்றி, எழுத்தாளர்கள் எழுத்திலே வாய்வழக்கைப் புகுத்தலாகாது.  இது மொழிக்கு இன்னாது.

வாய் வழக்கில் ஆளுக்கு ஒரு தனித் தன்மை அமைந்திருக்கும்.  எழுத்து வழக்கில் பலர் படிக்கத் தக்க பொதுத் தன்மை அமைய வேண்டும். பேச்சுப் பகுதிகளை எளிய இயல்பு நடையில் அமைக்கலாம். 
ஆண் பிள்ளையா பெண் பிள்ளையா பிறந்தது, 
ஊரிலிருந்து வருகிறீர்களா ? 
நீங்கள் அலைஞ்சு களைப்பாக வந்திருப்பீர்கள் 
என்பது இயல்பு நடை.

எப்பாத்திரமாயினும் இயல்புநடையே எல்லார்க்கும் விளங்கும்; காலங்கடந்தும் விளங்கும்.  கடின நடை எவ்வாறு பலர்க்கு விளங்காதோ அவ்வாறே கொச்சை நடையும் பலர்க்கு விளங்கமாட்டாது. அவ்வட்டாரத்து மக்கட்குக்கூடப் படிக்க விளங்காது.  விளங்கினாலும் பார்வைக்கு இனிக்காது.  தம் நூல்கள் பலர்க்கு விளங்க வேண்டும், காலச் செலவில் நிலைபெற வேண்டும் என்ற முன்னோக்குடையவர்கள் ஒரு சில சொற்களை மரூஉவாக ஆளலாமேயன்றி, தொடர் தொடராக மூளிச் சொற்களை உரை நடையில் புகுத்தலாகாது. 
தன் வளர்ச்சிக்கும் மொழியின் வளர்ச்சிக்கும் மூளி நடை உதவாது என்று மேடைகளில் முழங்கி முறையிட்டவர் மூதறிஞர் வ சுப மா.

நூற்றுக்கு மேலான இடங்களில் என்ப, மொழிப, என்மனார், என்றிசினோரே எனத் தொல்காப்பியத்தில்  வருவதைக் காணலாம். இந்த நிலையில் அரிய தொல்காப்பியத்தில் சில நூற்பாக்களைத் தெரிவு செய்து எளிய தொடர்களால் விளக்கிக் காட்ட முன்னோடியாக அமைந்தது  கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா. கலைஞரின் எழுத்துநடை எப்போதும் இயல்பு நடையாகும். வழக்கு மொழியைத்  தவிர்க்க முடியாத போதுதான்  அயற்சொற்களைப் பயன்படுத்துவார். கொச்சை சொற்கள் இடம் பெறுவதில்லை. 

அறுபதாண்டுகளுக்கு முன்னர் நான் பராசக்திப் படத்தில் எழுதிய தாலாட்டுப் பாடலில் எழுதியிருக்கிறேன் .
அதில் கூடத் தொடக்கத்தில் வரும் தொடரில் "பூமாலை நீயே புழுதி மண்மேலே வீணே வந்தேன் தவழ்ந்தாய்"  என்பதை விழுந்தாய் என்று சொல்லக் கூடாதா? என்றார்கள். " தவழ் இனிமையானது தவழ்ந்தாய் என்பது தான் மரபு" என்றேன். கேட்ட என் மெய் சிலிர்த்தது. அந்தத் தாலாட்டு வரியை அவர் நினைவோடு கூறினார் .
          வெள்ளியினால் செய்த ஏட்டில் - நல்ல
          வைர எழுத்தாணி கொண்டு
          தெள்ளு தமிழ்ப் பாடம் எழுத - உன்னைப்
          பள்ளியில் சேர்த்திட வருவார் - மாமன்
          அள்ளி அணைத்திட வருவார்
இந்தத் தாலாட்டில் மாமன் அடிக்க வருவதில்லை, பள்ளியில் படிக்க அழைத்துச் செல்கிறான். அதுவும் தமிழ்ப்பாடம் என்று நகைத்தார். இனி கலைஞரின் கைவண்ணத்தைக் காணலாம்.

“மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை மரபு வழிப் பட்ட சொல்லி னான”
(பொருளதிகாரம் - மரபியல் - நூற்பா : 92)
மரபு நிலை திரியாச் சொற்களால் செய்யுள்கள் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதற்கான இலக்கணப் பயிற்சியினை முழுமையாகக் கற்றவனில்லை யென்ற காரணத்தினால்தான் இன்றைக்கு அறுபது ஆண்டுகட்கு முன்பு நான் எழுதியவை கவிதை வரிகளாக இருந்து கவிதையாக அமைந்திடவில்லை யென்பதை நானே வெளிப்படையாக அறிவித்து, “கவிதையல்ல” என்ற சொல்லோவிய நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறேன்.

பெருங்கவிஞர்களாம் தமிழறிஞர்கள் பங்கேற்ற பல கவியரங்குகளில் தலைமையேற்று ,குறிப்பாகத் திருச்சி வானொலி முதல் கவியரங்கில் “விடுதலை வீரர்கள்” என்ற தலைப்பில் 1967ஆம் ஆண்டு நான் பாடியபோதே,
“சிறை வாழ்ந்தார் செக்கிழுத்தார் - இந்தத் 
தரையாண்ட வெள்ளையரை விரட்டுவதற்குக் 
குறை ஆயுள் பெற்றுப் பலர் கொலையும் உண்டார்!
உறை மீறி வெளிவந்த கத்தி போல உயிர்மீது ஆசையின்றிப் போர் புரிந்தார்! 
அவர் பெருமை கூறுதற்கு அணி வகுத்த இந்த நாளில் விடுதலைக்கு உயிரீந்த 
எவர் பெருமை கூறுதற்கும் இவர் போலக் கவி வளத்தைப் பெற்றேனில்லை;
கவிதை பாடக் கற்றேனில்லை!
தளையறுத்த வீரர் கதை பாடுவதால் 
தளையகற்றிப் பாடுகின்றேன் நானும் - அவர் 
தொடை தட்டித் துரோகிகளை வீழ்த்தியதால் 
தொடை தட்டும் என் பாட்டும் ! 
என் கவிதை யாப்பின்றிப் போனாலும் போகட்டும் - 
நம் நாடு, மொழி, மானம், உணர்வெல்லாம் 
காப்பிற்றிப் போதல் கூடாதெனும் கொள்கை யொன்றால் 
வாய்ப்பின்றிப் போனாலும் செய்யுள் கற்கக் 
காய்ப்பின்றி நிற்கின்ற மரமாக ஆகாமல் நெஞ்சில் 
ஊறுகின்ற உணர்ச்சிகளை வரிகளாக்கிக் கொள்கை 
மாறுகின்ற கோடரிகள் உணர்வதற்கு ஒன்று சொல்வேன்;
எத்தனை உயிர்கள் எத்துணை ரத்தம் நித்தமும் தந்து பெற்றது விடுதலை ! 
இத்தரை குடைந்து மெத்தவும் உழன்று பத்தரை மாற்றைப் பெற்றபின் 
அதனைக் கைத்திறம் காட்டி அணிநகை பூட்டிச் 
சித்திரப் பெண்டிர்க் களித்திடலன்றிக் குப்பைக் குழியில் போடுதல் நன்றோ? 
புட்கள் கூவிடும் சோலையின் நடுவே 
முட்கள் கீறிடப் பறித்த நல் ரோஜா கட்கம் ஏந்திய வீரர் முடியில் 
வெட்கம் ஏந்திய மாதர் குழலில் இருந்திடல் மணமா? அதனைத் 
துட்டக் குரங்கின் குறுகிய கையில் கொடுத்திடல் நலமா?
பெற்ற சுதந்திரம் பேணிக் காப்போம்; 
பெற்ற மறவர்க்குப் பெருமைகள் சேர்ப்போம் !” 
என எழுதியிருந்தேன்.

கவிதை இலக்கணம் நிறைவாகக் கற்றுள்ள கவிஞன் நான் என நெஞ்சை நிமிர்த்துக் கொள்ளாவிடினும், நான் இதுவரை எழுதியுள்ள “கவிதை வரி ஓவியம்” எதுவும் காதறுந்த ஊசிகளாக ஆனதில்லை. காதறுந்த ஊசிகளையும் கவர்ந்திழுக்கும் காந்தக் கற்களாகவே விளங்குகின்றன என்பதைப் பெருமிதத்துடன் அறிவிக்கும் பீடு எனக்கு உண்டு.

அதற்குரிய ஆதாரங்களாக இதோ சில :
ஊரெல்லாம் இணைந்து ஓருலகாய் ஆவதென்பதும் உறவுகொண்டே மனித குலம் ஒன்றே எனத் திகழ்வதும் உயரிய குறிக்கோளாம் என்றுரைத்த புலவன் கூடத் தனது ஊரை மறவாமல் பூங்குன்றமென இணைத்தே கணியன் பூங்குன்றன் எனும் கவிஞனாய் உலவியதைக் கவனமுடன் எண்ணிப் பார்த்தால் - அந்த மாமனிதனையும் மண்ணின் பற்று விடவில்லை என்பதுதான் உண்மையன்றோ?

இதோ ஒன்று :
பனிமுட்டை அடை காக்கும் பசும்புல்லின் தரைமீது 
மணித் தேர் அசைவது போல் மாதொருத்தி நடந்து வந்தாள் 
கனித் தமிழ்ச் சொல் உதிர்க்கும் புலமை மிக்காள் 
காக்கைபாடினி பொன்முடியார்க்குத் தமிழில் 
தகடூர் அதியமான் நெடுமானஞ்சி - வேள்பாரி 
வள்ளல் நாடன் சேரமான் மாவண் கோவன்
கானப்பேர் தந்த வழுதி - மற்றும் 
சோழனாம் பெருநற்கிள்ளி ஆகியோர் புகழைப் பாடித் 
தமிழுக்கு அணி பல பூட்டி நின்ற அறிவொளி ஔவை நல்லாள்!

மேலும் மற்றொன்று :
மானம் என் மகன் கேட்ட தாலாட்டு மரணம் அவன் ஆடிய விளையாட்டு! 
பால் குடிக்கும் குழந்தையாய் இருந்தபோதே 
வேல் பிடிக்கும் வித்தையினைக் கற்றுத் தந்தேன் 
ஆல் விட்ட விழுது போல் தந்தைக்கு மகனாகி - ஆட்டு 
வால் போலக் குட்டை மனம் கொண்ட பகை; நம் 
கோல் பறிக்கக் கூடாதென்று கொந்தளித்து; அவர் 
தோல் உரித்துத் துரத்திவிட்டுப் 
போரில் மாளுகிறான்; 
பெரும் புகழை ஆளுகிறான்! 
என் இருவிழி மழைதனைக் காணாதீர்; 
என் இதயம் மகிழ்வதைக் காண்பீரே!

வேறொன்று :
மணப் பந்தலிலும் அந்த மகிழ்ச்சியில்லை 
மகன் பிறந்த போதும் மகிழ்ச்சிக்கு எல்லையுண்டு !
அவன் இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி 
அறுத்தெறிய இருந்தேன் அவன் குடித்த மார்பை
அடடா ! 
கருத்தறியப் பொய் சொன்ன கயவன் எங்கே? 
வாள் இங்கே ! 
அவன் நாக்கெங்கே ?
வாள் வீச்சின் ஓசையையும், 
யாழின் ஓசையையும் ஒத்ததாய்த் தமிழர்களை வீறு கொள்ளவும் வியப்புக் கொள்ளவும் செய்திட்டதும் செய்து கொண்டிருப்பதுமான இந்தக் கவிதை வரி ஓவியங்கள் போன்ற பலவற்றைத் தமிழன்னையின் காலடியில் காணிக்கையாக்கி வருகிறேன்.

மரபு நிலை கூடத் திரியலாம், என் மனநிலை திரியவில்லை; திரியாது என்பதை இதுவரை நான் இந்தப் பூங்காவில் பறித்தளித்துள்ள ஒவ்வொரு மலர் நிலையும் உணர்ந்தோர் அறிவர்! 
அறிந்தோர், உணர்வர்!
செம்மொழிச் சிகரத்தின் சாரலில்
தொடர்ந்து நனைவோம் ....
---

தேமொழி

unread,
Jul 5, 2021, 1:55:19 AM7/5/21
to மின்தமிழ்
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம்! -  6

"தகடூரான் தந்த தமிழ்க்கனி !"

ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் 


சோவியத்தின் இலக்கியச் சிகரமான டால்ஸ்டாயின் எழுத்தின் தொகுதி 90 மடலங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.  எழுதிய மடல்கள், அவருக்கு வந்த கடிதங்கள் 32 தொகுதிகளில் இடம்பெற்றுள்ளன.   இந்தியத் தலைநகரான கொல்கத்தாவில் - முதன்மைத் தலைமை ஆளுநராகப் பொறுப்பேற்றிருந்த பெருந்தகை கர்சான் தன் கையால் நூறு பக்க அளவில் தன் துணைவியாருக்குக் கடிதம் எழுதினார்.

இன்னும் சரியாகச் சொல்வதென்றால் நாள் தவறாமல் தன் மனைவியாருக்கு இங்கிலாந்துக்குக் கடிதம் எழுதி வந்தாராம்.  அண்ணல் காந்தியடிகளும், நேருவும் ஆயிரக்கணக்கில் கடிதங்கள் எழுதினர். மடல்கள் என்ற நிலையில் மட்டும் 4000 க்கு மேல் கலைஞர் எழுதியதாக ஒரு குறிப்பை ஐ நா அலுவலர் அறிஞர் கண்ணன் தம் ஆங்கிலக் கட்டுரையில் எழுதியுள்ளார்.  ஓய்வில்லாமல் இலக்கிய வடிவங்கள் அனைத்தையும் வென்று நின்று கலைஞர் எழுதியவற்றை ஆய்வாளர்கள் வகைப்படுத்தி வரையறையிட்டு ஆராயத் தொடங்கியுள்ளனர்.  நூற்றாண்டில் நூறு தொகுதிகளாக மலரும் என்று தமிழுலகம் ஆர்வத்தோடு எதிர்நோக்கியுள்ளது.  

தமிழ் மொழியைச் செம்மொழியாக்கிய வரலாறு நம் முத்தமிழ் அறிஞர் கலைஞராலேயே முடிந்தது.  திருவள்ளுவரையும், இளங்கோவையும், சங்கப் பாடல்களையும் இன்றைய வாழ்வுக்கேற்ப, மீட்டுருவாக்கி, மீள் மெருகூட்டி நாட்டு மக்களிடையே எளிமையாக நடமாடச் செய்த பெருமை கலைஞரையே சேரும்.

முன்னைப் பழமைக்குப் பழமையான சங்கப் பாடல்களை, பின்னைப் புதுமைக்கும் பறைசாற்றி புதுமைக்குப் புதுமையாய் புத்தாக்கம் செய்து, பழமையில் ஒளிந்திருந்த இளமையை, புதுமையை, முழுமையை ,பெருமையை வெளிகொணர்ந்து இன்றைய தமிழ்ச் சமுதாயத்துக்கு ஏற்ற முறையில் சங்கத்தமிழின் சாறு பிழிந்து தாயன்போடு ஊட்டிய தமிழ்ப்புலமையை எடுத்துப் படிப்பவர் இதயம் மகிழ்வர்.

தமிழகம் - தமிழினம் - தமிழ்மொழி வரலாற்றில் நிகழ்ந்த சங்கம் நிறுவிய அருஞ்செயலை நாம் இங்கே குறிப்பிடவேண்டும்.  பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே மொழிக்கென்று ஒரு சங்கம் கண்டது. அது ஒரு மொழிப்பேரவையாக நின்றது, அதனால் இனமும் நாடும் எழுச்சி பெரும் என்று ஆண்ட்ரே கருதினர்.  ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு முன்னே மொழிச்சங்கம் கண்டனர்.  இது மொழியின் தோற்றத்தையும் தொன்மையையும் அளந்தறிவார் யார்? அளந்தறிய இயலுங்கொல்?  என்று அறிஞர் வியந்தனர். தமிழ்ச் சங்கங்கள், அவற்றின் நிலைபேற்றுக் காலங்கள், காவிய மூதூர்கள், புலவர்தம் தொகை, புரவலர்தம் தொகை, பாடல்கள் தொகை என்பன பற்றிய குறிப்புக்களை இறையனார் அகப்பொருளுரை காத்து நல்குகின்றது.

அவ்வுரைக் காப்பினால் தமிழ்  வரலாறு ஒளியுடையதாக இலங்குகின்றது.  தலைசான்ற சங்க வாலாற்றினைத் தாங்கி நிற்கும் அந்தவுரை நமக்கு  வழிகாட்டியாகும்.  முச்சங்கங்கள் நிலவி நின்ற கூட்டாண்டுகள் 9990, புலவர்களின் கூட்டுத்தொகை 8598, என்றினைய பேரெண்ணிக்கைகளைப் பார்த்து, சங்கம் இருந்திருக்குமோ என ஐயப்படும் ஆய்வாளர்கள் உள்ளனர். இவ்வெண்ணிக்கையில் மிகை குறையிருக்கலாம் என்று ஏற்றுக் கொண்டு, சங்கம் இருந்தமைக்குச் சான்று பல காட்டுவார் பலர்.  இந்த நிலையில் சங்கத்தமிழின் பாடல்களை நாளும் படித்து மகிழ்கின்ற நல்வாய்ப்பாக சங்கத்தமிழ் உருவாயிற்று .

மீட்டுருவாக்கம் தமிழிலக்கிய உலகுக்குச் சற்றுப் புதுமையானது தான்.  ஆங்கிலத்தில் "ஹாம்லெட்" என்ற ஷேக்ஸ்பியரின் நாடகத்தைப் பல்வேறு புதிய கோணங்களிலும் வடிவங்களிலும் பலர் படைத்துள்ளார்கள்.  இதை மொழிக்குள்ளே செய்யும் மொழியாக்கம் என்றும் மொழியலாம். தொன்மையான உயிர்ப்புள்ள இலக்கியத்தை, இன்றைய மொழியில் அடுக்கிக் காட்டும் அழகிய நடையில் நிகழ்கால ஒளியின் புத்துருவாக்கம் செய்வதுதான் இன்றைய இலக்கியத்தின் நெறி முறையாகும்.  ஷேக்ஸ்பியரின் நாடகங்களை ஒவ்வொரு காலமும், அந்தந்த வளர்ச்சிக்கேற்பக் கண்ணாடி வழியாகப் பார்த்து அளக்களாகா பொருள் வளங்களை அகழ்ந்தெடுக்கிறது.

கலைஞர் விளக்கும் சங்கப்பாடல்கள் சிலவற்றை இன்றைய மொழியில் மக்கள் இலக்கியமாக மறுபடைப்புச் செய்துள்ளார்.  இவற்றைக் கவிதை விளக்கங்கள் என்று கலைஞரே பெயரிட்டுக் கூறுவார். இந்தப் பாடல்களுக்குத் தொடக்கத்தில் அவர் ஒரு சூழல் இடவாய்ப்பு முன்னோட்டம் இரு - மூன்று பாடல்களின் தொடர்பாக்கம் அமைத்துத் தருகிறார். பிறகு அந்தப் பாடலின் சிறப்புக்குரிய காரணத்தையும் காட்டி, அந்தப் பாடலை விரிவாகத் தன் விளக்கத்தோடு இணைத்துத் தருகிறார்.

எடுத்துக்காட்டாக, நாம் முன்னர் கண்ட கணியன் பூங்குன்றனின் " யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற பாடலின் தொடக்கம் கலைஞர் பூங்குன்றத்துக்குப் போவதைக் குறிப்பிட்டுத் தனது நாட்டையும், காதலையும் பற்றிப் பாடும் கவிஞர் களுக்கிடையே தனக்கெனத் தனிவழிவகுத்துக் கொண்டு "எல்லா ஊரும் பொது ஊரே எல்லா மனிதரும் எமது உறவே" எனத் தொடங்கியதாகக் கூறி முழுப்பாடலையும் தனது நடையில் தந்துள்ளார் கலைஞர்.  இந்தப் பாடல் ஊழின் இயல்பைக் கூறுவதாகக் கருதப்பட்டாலும் மனித செயல்களுக்கும் மன உறுதிக்கும் முதன்மை தருகிறார் மேலும் வினைக்கு ஆன்றோர் காட்டிய அரிய வினைகள் என விளக்கம் தருகிறார்.

கலைஞரின் சங்கத்தமிழில் வாய்ப்புக்கிட்டும் போதெல்லாம் தமிழ், தமிழிலக்கிய மனம், தமிழர் உள்ளத்தில் ஊறித் ததும்பும் தமிழெழுச்சி உணர்வு மூலத்தை வென்று தனியாகப் பேசப்படுகிறது.  எடுத்துக்காட்டாக அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி தந்தது பற்றி "அடியேனின் உயிர் அதிக நாள் இருந்தென்ன பயன்? அவ்வவையின் ஆயுள் வளர்ந்தால் தமிழ் வளரும் தகடூரின் பெயர் உள்ளவும் நான் வாழ்வேன் தமிழ் உள்ளளவும் வாழக அவ்வையே" எனக் கூறியதாக கலைஞர் விளக்கிய பாங்கு, அவரது ஆழ்ந்த தமிழ்ப் பற்றின் அரிய திறப்பாடு.  ஆங்கிலம் அருந்தமிழ்ப் பெரும்புகழ் பெற்ற பேராசிரியர் கா செல்லப்பன் நுணுக்கமாகக் கலைஞரின் மீட்ருவாக்கம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

திருக்குறளில் இனியவை கூறல் என்ற அதிகாரத்தின் பத்தாம் குறள் நாடறிந்த குறட்பாவாகும்.
            இனிய உளவாக இன்னாத கூறல்
            கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
என்ற திருக்குறள் பாடலுக்கு உரையெழுதிய பரிமேலழகருக்குக் கனியிருப்பக் காய் கவர்தல் என்ற தொடரைக் கண்டவுடன் இனிய கனிகள் என்றது ஒளவையுண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தாவனவற்றை என்றெழுதினார்.  கனியென்றதுமே மா, பலா, வாழை எனக் கருதாமல் நெல்லிக்கனியை நினைவு கூர்ந்து சங்கக் காட்சியில் தோய்ந்த உரையாசிரியரின் உள்ளத்தையும் இது காட்டியது.  இனிக் கலைஞரின் கவிதையைக் கண்டு மகிழலாம் .

அணிலின் வால் போல மீசை கொண்ட மன்னவன்
அதியமான் நெடுமான் அஞ்சி எனும் தென்னவன்
ஆதிநாளில் தமிழ் மண்ணில் முதன் முதலாய்
அருங் கரும்பைக் கொண்டுவந்து விளைச்சல் செய்தான்
அதன் இனிப்பைத் தமிழில் கண்ட அவனின் முன்னோர்
அதியர் குடிப்பிறந்ததாலே அதியமான் ஆனான்.

தகடூரைத் தலைநகராய்க் கொண்டு - அந்தத்
தமிழூரில் தலைநிமிர்ந்து ஆண்டான்.
திண்தோளில் வலிமைதனைத் தேக்கிக்
கண் அசைவில் பகைப்புலத்தைப் போக்கி
மண்மீது புகழ் நிலைக்க மார்பில்
புண் ஏந்தி வீழ்வதையே விரும்பி
அஞ்சியெனப் பெயர் பூண்ட போதும்
அஞ்சாத வரிப்புலியாய் மானத்துடன் வாழ்ந்தான் !

அவ்வையாம் கவியரசி அவனுக்காக
அணிமணிகள் தமிழால் செய்து
அகமாரப் பூட்டி மகிழ்ந்தாள் - அவன்
அறம் வியந்து திறம் புகழ்ந்தாள்.
‘களம் புக எண்ணுகின்ற பகைவர் அறிக - எம்
உளம் நிறை வீரன் ஒருவன் இருக்கின்றானய்யா !
ஒரு நாளில் எட்டுத்தேர் செய்கின்ற தச்சன்
ஒரு திங்கள் உழைத்தமைத்த ஒரு தேர்க்காலுக்கொப்ப
உடல்வலிவும் உரமும் பெற்றோன்
அடலேறு அதியமான்; தெளிக !' என்றே,
அவ்வை பாடிய செய்யுள் இஃதே :

“களம்புக ஓம்புமின் தெவ்விர் போர் எதிர்ந்து
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே”

அவ்வீரன் அதியமான் ஒரு நாட் காலை
அடவியிற் சென்று அலைந்து திரிந்து
விலங்குகள் மீது வேல்களைப் பொழிந்து
வேட்டையை நிகழ்த்தி விரைந்து திரும்பினான்;
வழியில் மலையிடைப் பிளவொன்று கண்டு
விழியினைச் செலுத்தி வியப்பாய் நோக்கினான்;
தனிமையிலே நெல்லி மரமொன்றுயர்ந்து
தன் கிளையினில் சிறு இலைகளுக்கிடையே
கனியொன்றே ஒன்றைத் தாங்கி நின்றது.

"இனிப்பாக இருக்குமென்றும் அதனையுண்டால்
இறப்பேதும் அணுகாதென்றும் இஃதுண்மையென்றும்
தலைப்பாகைத் துறவியொருவர் புதுமையாகப் புகன்றவுடன்
இமைப் போதும் தயங்காமல் அக்கனியைப் பறித்துக் கொண்டான்
தனைக் காக்க மன்னவனும் அக்கனியை உண்பான் என்று,
தகடூர் வீரரெல்லாம் எண்ணிக் கொண்டு
தடந்தோள் உயர்ந்திடவே தலைவன் பின் நடைபோட்டார்.

மாளிகைக்கு வந்தவுடன் நெடுமானஞ்சி
மாணிக்கத் தமிழ்பாடும் அவ்வையை அழைக்கலுற்றான்.
“மன்னவனே ஏன் அழைத்தாய் எனத் தெரியும்;
மாற்றானாம் தொண்டைமானிடம் எனைத் தூதாக அனுப்பத்தானே?”
என்று கேட்ட அவ்வை அம்மை
“சென்று வரத் தயார்தான்” என்றாள் - தூதில்
வென்று வருவதற்கு முன்னே - இதைத்
தின்று சுவைத்திடுக என வேண்டி,
நெல்லிக்கனியை நீட்டினான் வேந்தன் - நிலவில்
அல்லி மலர்வது போல முகமலர்ந்தாள் அவ்வை !
“சுவையான கனிதான்” என்று சுவைத்துப் பார்த்து; அரசு
அவைக் கவியான அவ்வை சொன்னாள்.

“அருமையாய்க் கிடைத்திட்ட இக்கனியுண்டால்
ஆயுள் நீளுமென்று அடவியில் துறவி சொன்னார்.
அடியேனின் உயிர் அதிக நாள் இருந்தென்ன பயன்?
அவ்வையின் ஆயுள் வளர்ந்தால் தமிழ் வளரும்
தகடூரின் பெயர் உள்ளளவும் நான் வாழ்வேன்
தமிழ் உள்ளளவும் வாழ்க அவ்வையே” என்றான்.

உண்மையை முன்கூட்டி உரைத்திட்டால்
உண்ணாமல் மறுத்திடுவாள் அவ்வையென்று
தான் வாழக் கருதாமல் தமிழ்த்தாய் வாழத்
தகடூரான் தந்தகனி நெல்லிக்கனி;
அதியமான் தமிழ் ஆர்வம் போற்றி
அவ்வை தந்த நன்றிக்கனி; இந்தச் செய்யுட்கனி !

“வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல் தொடி தடக்கை
ஆர்கலி நறவின், அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி!

பால் புரை பிறை நுதல் பொலிந்தசென்னி
நீலமணி மிடற்று ஒருவன்போல
மன்னுக பெரும நீயே! தொன்னிலைப்

பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே”
(புறநானூறு : பாடல் : 87, 91 பாடியவர் : அவ்வையார்)

பொருள் விளக்கம்:
தெவ்விர் = பகைவர். பொருநன் = வீரன். வைகல் = ஒருநாள்.
வலித்த = செய்யப்பட்ட. வலம்படுவாய் வாள் = வெற்றிதரத் தவறாத வாள்.
ஒன்னார் = பகைவர். ஆர்கலிநறவு = ஆரவாரம் செய்கின்ற மது.

செம்மொழிச் சிகரத்தின் சாரலில் தொடர்ந்து நனைவோம்...... 

தேமொழி

unread,
Jul 11, 2021, 12:01:00 AM7/11/21
to மின்தமிழ்
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம்! -  7

"பேராசிரியர் காட்டிய பேரொளி !"

ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் 


நான் பச்சையப்பர் கல்லூரியில் மூன்றாண்டுகள் முதுகலை படித்தேன்.  முதலிரண்டு ஆண்டுகளில் பேராசிரியர் எங்களுக்கு இலக்கியப் பாடம் நடத்தினார்.  அப்போதே நாடு புகழும் பெருமகனாராக பேரறிஞர் அண்ணாவின் தோழராக கழகத்தின் தலைவராக மிளிர்ந்தார்.  பேராசிரியர் கனிவுடையவரே தவிர வகுப்பில் கண்டிப்பும் - அதட்டலும் கொண்டவர். அவர் வகுப்பென்றால் எல்லோருக்கும் ஒரு நடுக்கம்.  பதினொரு மணியளவில் பச்சையப்பர் வளாகத்தைச் சுற்றி வரும் கல்லூரி முதல்வர் பேராசிரியர் கிருஷ்ணமுர்த்தி எங்கள் வகுப்பறைப் பக்கம் செல்லும் போது பேராசிரியரைப் பார்த்துப் பணிவாக வணக்கம் சொல்வார். பேராசிரியரைச் சுற்றி அப்படியொரு புகழ் வட்டம் நிலையாக இருந்தது.  

கலித்தொகைப் பாடல்களை நடத்தியதாக நினைவு.  பாடலை விளக்குவதற்கு எங்களில் ஒருவரை எழுந்து பாடலைப்படி என்பார்.  படிக்கும் போது சீர் பிரிக்கத் தெரியாமல் விழித்தபடி நின்றால் நீ எதற்குத் தமிழ் படிக்க வந்தாய் என்ற வசை பிறக்கும். மேலும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கட்சிச் சொற்பொழிவாற்றி விட்டு விடியலில் தான் வீடு திரும்பியிருப்பார்.  அப்போதே அவருக்குக் களைப்பிருந்தது.  எங்களுக்கு அப்போதே இயக்க உணர்வு ஊட்டப்பட்டிருந்ததால் அவரைப் பார்த்தால் போதும் என்ற நிறைவில் மகிழ்ந்திருந்தோம். அருவி போலத் தடையில்லாமல் பேசுவார்.  நான் இப்படிச் சிந்தித்துப் பழக்கப்பட்டவன்.  என் கருத்து இது. நீங்கள் ஏற்கவில்லை என்றால் எனக்குக் கவலையில்லை என்று தமக்கே உரிய கருத்துக்களை ஆராய்ந்து பேசுவார்.  கழகக் கூட்டமானாலும், கல்லூரி அரங்கானாலும் அவரிடம் ஒரே போக்கு தான்.

நாடாளுமன்ற உறுப்பினராக,  சட்டப்பேரவை உறுப்பினராகப்  புகழ் பொலிந்த பல்துறைகளில் தமிழக  அமைச்சராகப் பெருமதிப்போடு விளங்கினார்.  ஒருமுறை நான் இராமலிங்கர் பணிமன்றத்தில் வள்ளலாரைப்பற்றி உரையாற்ற அவரை அழைத்தேன்.  நான் மீன்வளத்துறைக்கு இப்போது அமைச்சர்.  நான் வள்ளலாரைப் பற்றிப் பேசுவது பொருத்தமாயிருக்காது. நான் வரமாட்டேன் என்றார்.  கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது வந்து பேசும் போது முந்தைய நிகழ்ச்சியைக்  குறிப்பிட்டார்.  நான் இறைச்சி உண்பதில்லை, எப்படியோ சில ஆண்டுகள் பழகிவிட்டேன். இப்போது அப்படியில்லை நிறுத்தி விடுவேன், "சொல்வது போலச் செய்ய வேண்டும். செய்வதைத் தான் சொல்ல வேண்டும்"  என்ற அண்ணாவின் தொடரில் தொடங்கி வள்ளலாரின் பொதுநெறி பற்றிப் பால் போலத் தேன்போல நல்லுரையாற்றினார்.

பேராசிரியர் பேருரைகள் சில நூல்களாக வந்தன. மேலை நாட்டறிஞர்கள் தமிழ் வளர்த்த திறத்தைச் சிறப்பாகக் குறிப்பிடுவார்.  பேராசிரியரின் தந்தையார் பகுத்தறிவுப் பழம். தன் தளர்ந்த முதுமையில் திருக்குறளுக்கு உரை வரைந்தார். எனக்குப் பேராசிரியரின் இளவல் அறிவழகன் இனிய நண்பரானார்.  பேராசிரியர் கு. திருமாறன் என்னைப் பரிவுடன் வினவுவார்.  பேராசிரியர் குடும்பத்தினரோடு என் தந்தையார் பெரிதும் பழகியவர்.  அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் என் தந்தையார் இருந்ததால் அப்போது நான் உயர்நிலைப்பள்ளியில் மாணவன்,  நாவலர் பேராசிரியருக்கு அடுத்த அணியைச்சார்ந்த இளந்தலைவர் கடலூர் இளம்வழுதி. கார்மேனியநாயகனாக கவரும் முடியழகும் நடையழகும் கொண்ட கொள்கை வீரர் இளம்வழுதி அவர்களை அண்ணா கருப்பு இளவரசன் என்று கனிவோடு அழைப்பாராம்.  தலைமுறை தலைமுறையாகத் தழைத்துச் செழித்துவரும் தன்மான இயக்கத்தின் தி மு க வின் அடலேறாகத்   திகழ்ந்தார்.  இளம்வழுதி என்னும் தண்டபாணி அவர்களை பார்த்ததும் - பழகியதும் என் நினைவில் மங்கலாக உள்ளன.

என் விழிக்கு விருந்தாகத் தந்தையின் தனிப்புகழையும் சுமந்து இப்போது கழகத்தின் தானை மறவராக தனிப்புகழோடு விளங்குகிறார் வழக்கறிஞர் திரு புகழேந்தி.   வழக்கறிஞர் புகழேந்தி மழலையாகத் தவழ்ந்த போதே கலைஞர் இல்லத்தில் ஆடி ஓடி விளையாடியவர்.  1989, 1996, 2001 ஆண்டுகளில் சட்டப் பேரவை உறுப்பினராக ஒளி வீசியவர். பல்வேறு நிலைகளில் உயர்வு பெற்று மாணவரணிச் செயலாளராக அருந்தொண்டுகள் ஆற்றினார். அயராத முயற்சியோடு, ஆர்வம் ததும்பக் "கல்வி நிலையங்களில் கலைஞர்" என்ற தலைப்பில் இரு தொகுதிகளை இணையற்ற கருவூலமாகத் தொகுத்து வழங்கியுள்ளார். இரண்டு தொகுதிகளிலும் கலைஞர் ஆற்றிய 161 உரைகள் இடம் பெற்றுள்ளன. இந்த இமயப்பணியை தோளில் சுமந்த வழக்கறிஞரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  நன்றிப்பெருக்கோடு தன் அன்னையாரையும்,  துணைவியாரையும் குறிப்பிட்டு, அறிஞர் பலர் தொகுக்கும் பணிக்குத் துணை  நின்றதை நெகிழ்வோடு உருகி எழுதியுள்ளார். இத்தொகுப்பால் புகழோங்கிய பெருமையைப் புகழேந்தி பெற்றுள்ளார்.  இந்தத் தொகுதியின் வாழ்த்துரையை மாண்புமிகு முதலமைச்சர் அன்றே நுணுக்கமாக வழங்கிப் பாராட்டியுள்ளார். இந்த அரிய தொகுதிகளை வனப்பாக வெளியிட்ட பெருமை என் இனிய நண்பரான சீதை பதிப்பகத்தின் நிறுவனர் பதிப்புச் செம்மல் ராஜசேகர் அவர்களையே சாரும்.  இந்த வரலாற்றுப் பேழைக்கு முகப்பினை உருவாக்கிய தனிப்பெருமை இதழ்ப்போராளியாக எந்நாளும் தலை நிமிர்ந்து நிற்கும் அருமைச் சோதரர் நக்கீரன் கோபாலின் கலைவண்ணமாகும். நக்கீரனின் பன்முக ஆற்றலில் இப்படி வடிவமைக்கும் ஆற்றலும் உண்டு என்பதை அறிந்து வியந்தேன்.  இத்தொகுதியில் பேராசிரியர் எழுதிய அணிந்துரை ஒப்பற்றது. கலைஞரின் வாழ்வியலை போற்றிப்புகழும் பொன்னுரையாக வரலாற்றின் வைரவரிகளாக ஒளிர்கின்றன. அணிந்துரையின் அருமையும் -  பெருமையும்  அழியாப் புகழ் கொண்டதாக இக்கட்டுரை நிலை நிறுத்தும். அனைவரும் படித்து மகிழ அணிந்துரையை இனிக் காணலாம்.  

தன்மான இயக்கத் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையில் ஆர்வம் கொண்ட மாணவராய்த் தொடங்கி, பேரறிஞர் அண்ணாவின் இனமொழி மறுமலர்ச்சி இலட்சியப் பணியில் ஈடுபட்ட இளைஞராய் வளர்ந்து, தமது எழுதுகோலின் திறன்காட்டிக் கலையுலகில் பகுத்தறிவுச் சிந்தனையைப் படரவிட்டு வெற்றி நடை போட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராய் உயர்ந்து, அதன் வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றி, அறிஞர் அண்ணாவுடன் தமிழகச் சட்டமன்றத்திலும் அமர்ந்து, மாற்றாரும் மதித்திடும் வகையில் தமது கொள்கைகளை எடுத்துக் கூறி, கழகம் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆளுங்கட்சியாக உயர்ந்தபோது, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற அறிஞர் அண்ணாவுடன் ஓர் அமைச்சராகச் செயற்பட்டு, நாடே துக்கத்தில் ஆழ்ந்திடுமாறு அண்ணா இயற்கை எய்திய அந்தச் சூழலில், அண்ணா விட்டுச் சென்ற கடமையை ஏற்று, கழகத்தை வழிநடத்தும் பொறுப்புச் சுமையைத் தாங்கி, அண்ணா வழியில் அயராது உழைப்பவராய்ப் பற்பல தேர்தல்களையும் சந்தித்து, ஆளுங்கட்சி முதல்வராகவோ, எதிர்க்கட்சித் தலைவராகவோ அமர்ந்து ஜனநாயகக் கடமையாற்றி, இன்று ஐந்தாவது முறையாகத் தமிழக முதல்வராக அமர்ந்திடும் அளவுக்குச் சிறப்புமிகு வரலாறு படைத்துள்ள ஓர் அருந்திறல் ஆற்றலாளர், நடுவண் அரசின் வழிகாட்டியாக விளங்கும் விற்பன்னர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்பதனை இன்றைய இந்தியத் திருநாடே நன்கறியும்.

கலைஞர், பல துறையிலும் பரிமளிக்கும் அறிவாற்றல் மிக்கவராதலின் ‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் இணையற்ற தலைவராக; தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வகையினால் அந்த அவையில் ஆற்றிய பணிக்குப் பொன்விழா கண்டவராக; கலைத் துறையில் கால்பதித்த சிறப்பினால் அத்துறையில் மணிவிழாக் கண்ட கலை உலகத் தந்தையாக; எழுத்துலகில், கொள்கை பரப்பும் நாளேடு நடத்துவதில் ஈடுபட்டுப் பவளவிழாக் கண்ட தனிப் பெரும் தகுதி வாய்ந்த வராக; இந்திய அரசியலை, ஜனநாயகத்தைக் காத்திடுமாறு உருவாக்கும் தலைவர்களுள் ஒரு மூதறிஞராக விளங்குபவர் முத்துவேலர் கருணாநிதி.

தமிழ் எழுத்துக்கும், சொல்லுக்கும், தமிழ்மொழி மரபுவழிப்பட்ட பொருளுக்கும் தொன்னாளிலேயே இலக்கணம் கண்டவர்  ஒல்காப்புகழ் தொல்காப்பியர் எனில், அந்த எழுத்தும், சொல்லும், மரபுவழிப் பொருளும் கலைஞரின் எழுதுகோலில் குடிபுகுந்து அவர் தீட்டும் செம்மொழிச் சித்திரங்களின் வண்ணமாகி, அவற்றை எழில்மிக்கவை ஆக்குகின்றன. அய்யன் திருவள்ளுவரின் சிந்தனைச் சுடர்மணிகளாக ஒளிரும் குறள் வெண்பாக்களில், ஓரெழுத்தையோ, சொல்லையோ மாற்றுவதற்குச் சிறிதும் இடமளிக்காது, தோடுகளில் பதிந்த மரகத மணிகளைப் போன்று பொருள் பொதிந்த அசையும், சீரும் தளையுமாகப் பிணைக்கப்பட்டுள்ளது போன்றே, கலைஞர் இயற்றும் தமிழ்ப்படைப்பு எதுவாயினும் அவற்றில் கையாளும் சொல்லும், பொருளும் ஓர்ந்து பொருள் பொதிந்த நடையிலேதான் அவர் தம் எண்ணங்களை வடித் தெடுப்பார்.

அவர் எழுதும் புதினங்களிலேயே எந்த ஒரு சொல்லும் தேவையற்றதாக இடம்பெறாது எனில், அவரது கவிதையும், கட்டுரையும், உரையாடலுமே செறிவான நடையினால் திட்டவட்டமான வடிவமைப்புக் கொண்டிருப்பது வியப்பன்று.
எழுத்தைப் போன்றே, பேச்சிலும் வல்லவர் கலைஞர்.  மேடைப் பேச்சில் மட்டுமின்றி, உரையாடலிலும் நகைச்சுவை ததும்ப நகையாட வல்லவர்.  இடம் பொருள் ஏவல் அறியாமலோ, அவையின் தகுதி அறியாமலோ, பொருள் தெளியாமலோ, சொல்லினைத் தேறாமலோ, அவரும் மேடை ஏறமாட்டார், அவரது செம்மொழிச் செந்நாவும் சுழலாது.  பொதுக்கூட்ட மேடையோ, பல்கலைக் கழகப் பட்டமளிப்பு மண்டபமோ, அனைத்துக் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டமோ, ஓர் அமைப்பின் நிருவாக ஆலோசனைக் கருத்தரங்கமோ எதுவெனினும், தமது பேச்சினை அவர் எண்ணிப் பார்த்து வகைப்படுத்திக் கொள்ளாமல் ஒருபோதும் பேசியதில்லை.
"அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர் ”
என்னும் குறளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வது அவரது பேச்சு.

அவர் மேடை ஏறத் தலைப்பட்டு 70 ஆண்டுகள் ஆகிவிட்டன.  அவர் இடம்பெறாத அவையுமில்லை; மேடை ஏறி நின்று பேசாத மன்றமுமில்லை.  அவர் சிந்தனையில் தவழாத பொருளுமில்லை; தம் பேச்சினால் வெல்லாத கூட்டமும் இல்லை. வெல்லும் சொல் தேர்ந்து, பேசும் இலக்கியப் புலமையில் வல்ல கலைஞரின் எந்தச் சொல்லும் வீண் போனதில்லை.  மாற்றார் பயன்படுத்தும் ஒரு சொல்லினைக் கொண்டே மாற்றாரை மடக்குவதில் அவருக்கு எவரும் ஈடில்லை. செவிமடுப்பவர்க் கெல்லாம் வற்றாத கேள்விச் செல்வமாவது அவரது பேச்சு.   அது பின்னரும் எழுத்து வடிவில் ஏடாகிக் காலமெல்லாம் படிப்போரின் எண்ணத்தைப் பக்குவப்படுத்தும் சிறப்புடையதாய் இலங்கும் பெற்றியதாம்.

இளமை முதல் அவர் படிக்கும் ஏடு எதுவெனினும், அதில் இடம்பெறும் சொல்லாட்சியையும், சொல் பயன்பாட்டு முறையால் எழும் பொருள் வேறுபாட்டையும் நுனித்தறிந்து நினைவில் நிறுத்துபவராதலின், வாய்ப்பு அமையும் வழி சொற்சிலம்பம் நிகழ்த்தி, தம்முடன் அரங்கேறிப் பங்கேற்கும் புலமையுடையார் பலரையுமே வியப்புறச் செய்யும் வித்தகர் அவர்.  அவரது தேர்ந்த புலமையும், உரையாடல் வல்லமையும், நகைச் சுவை வித்தகமும் கொள்கை மாறுபட்ட புலவர்களையுங்கூட அவர்பால் ஈர்த்துள்ளன. 
“கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்” 
என்னும் திருக்குறள் குறித்திடும் சொல்லின் சிறப்பும் இதுவே !

ஒருமுறை, ஆன்மிக ஈடுபாடுடைய பெரியவர் ஒருவர், 'கடவுள் நம்பிக்கை எல்லோருக்குமே இருக்க வேண்டும்' என்று பேசியபோது, அதற்கு விடையாகும் வகையில் கலைஞர் சொன்னார், 'என்னைப் பொறுத்தவரையில், நமக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்பது முக்கியமல்ல. கடவுள் நம்மை நம்புமாறு நாம் நடந்துகொள்கிறோமா என்பதுதான் முக்கியம்' என்றார்.  ஒரு நாத்திகரின் இந்த வாதத்தை எந்த ஆத்திகரால்தான் மறுத்துப் பேசமுடியும் ?

சட்டமன்ற விவாதங்களில் பங்கேற்றபோது மதிநுட்பத்துடன் கலைஞர் கூறிய விடைகள் பல, அவையோரையே நகைச் சுவையில் மூழ்கச் செய்துள்ளன. அத்தகு சிந்தனைத் திறனும், புலமை வளமும், நினைவாற்றலும், கற்பனை ஊறும் கவி நெஞ்சமும் கொண்ட கலைஞர், அறுபது ஆண்டுகட்கும் மேலாக ஆற்றிவந்த இலக்கிய வளமும், உவமை அழகும், கருத்தாழமும் செறிந்த சொற்பொழிவுகளே “கல்வி நிலையங்களில் கலைஞர்” என்னும் இந்த நூலாக, அதன் இரு பகுதிகளாகத் தொகுக்கப் பட்டுள்ளது. பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை பல்வேறு தலைப்புகளில் அவர் ஆற்றியுள்ள இந்த உரைகளே, அவற்றின் பொருளாலும், விளக்கத்தாலும், நடை நலத்தாலும், ஓசை நயத்தாலும் 
"தமிழுக்கு அமுதென்று பேர், இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” 
என்று புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாடுவதற்குத் தமிழ்மொழி ஏதுவானதற்குரிய நியாயத்தை உணர்த்தும்.

கலைஞரின் பேச்சு இளமைக்கு விருந்து, முதுமைக்கு மருந்து. உயிர் வாழ்வதற்கு உணவு, உடல் வளர்ச்சிக்கு ஊட்டச் சத்து. தமது உரைகள் மூலம் கலைஞர் உணர்த்தும் உண்மைகள் பல நமது உள்ளத்தில் உறைந்திட வேண்டியவையாம் என்று அவர் கூறுகிறார்.   தந்தை பெரியார் என்னும் அரும்பெருந் தலைவர் உண்மையிலேயே புரட்சியை உருவாக்கிய தலைவர்.  அந்தத் தலைவருடைய காலடி பட்ட மண்; அந்தத் தலைவருடைய குரல் ஒலித்த மண்; அந்தத் தலைவர் பிறந்த மண்; அந்த மண்ணிலே நின்றுகொண்டு நான் உங்களுக்குச் சொல்லுகின்ற செய்தி, சமுதாயத்திலே நாம் எந்த அளவுக்குத் தாழ்ந்து கிடக்கின்றோம் என்பதை எண்ணிப் பாருங்கள் என்பதுதான்.

பொருளாதாரம் என்ற மாளிகைக்கு அதன்மீது அழகு ஒளியைச் சிந்திக் கொண்டிருக்கின்ற வைரக் கலசங்களுக்குப் பாதுகாப்பும் வலிவும் அளிக்க வேண்டுமேயானால், சமுதாயச் சீர்திருத்தம் என்கின்ற அடித்தளம் இருந்தால்தான் பொருளாதாரம் - அரசியல் என்கின்ற இரண்டும் அதன் மீது நிலைக்க முடியும்.  இதைத்தான் பெரியார் அவர்கள் அழுத்தந் திருத்தமாக எடுத்துச் சொன்னார்கள்.  இன்றைக்குத் தந்தை பெரியாருடைய புகழை அல்ல; அறிவை - ஆற்றலை - அவர் கொண்டிருந்த துணிவை - அவர் சண்ட மாருதமாகச் சீறிச் சாதி மத வேறுபாட்டையெல்லாம், களையத் துடித்த அந்தத் தூய செயலை இன்றைக்கு உலகமே போற்றிக்கொண்டிருக்கிறது.

“நீ புழுவல்ல; பூச்சியல்ல; நீயும் மனிதன்தான்; பிறருக்கு மண்டியிடத் தேவையில்லை, நிமிர்ந்து நட !” என்று தந்தை பெரியார் கூறியது மாத்திரமல்ல; அவ்வழி நடந்தும் காட்டியவர் அவர்.

"தமிழ் இனத்தை வாழவைப்பது; திராவிடச் சமுதாயத்தை வாழவைப்பது! இந்தச் சமுதாயத்திலே உள்ள மூடநம்பிக்கை களை முழுமையாக ஒழிப்பது” என்பதே அவரது குறிக்கோள். அவ்வழியில் வந்தவர்களே அறிஞர் அண்ணாவும், அதே வழிவந்த நானும்.

“பகுத்தறிவு வாதம் என்பது, அடிப்படை உண்மைகளை நெறிகளை மறப்பதாகாது; எதையும் காரணங் கண்டு, ஆராய்ந்த உண்மை காண்பதாகும். போலித்தனமான எண்ணங்களை, செயல்களை அழித்தொழிப்பதுதான் பகுத்தறிவு ஆகும்”.

“தமிழைப் படிப்பது தேவை; அதைவிடத் தமிழில் படிப்பது மிக மிகத் தேவை. அது தமிழ்நாட்டின் எல்லாவகையான எதிர்கால வளர்ச்சிக்கும் தேவை”.

எதையும் ஆராய்ந்து, தெளிந்து உண்மை கண்ட பின்னரே உலகோர்க்கு உரைக்கும் ஒரு நெறியைப் பின்பற்றியவர் கலைஞர்.  தெளிவில்லாத பேச்சோ, தேவையற்ற சொல்லாடலோ, குழம்பிய முடிவோ இன்றித் திட்டவட்டமாகத் தமது கருத்தை எடுத்துவைப்பது அவரது சிறப்பு.  பொதுநலத்தின் பேரால் தன்னலம் வளர்க்கும் வஞ்சகத்தை, கயமையைக் கண்டனம் செய்கிறார் கலைஞர்.

‘தன்னால் கட்சிக்கு என்ன இலாபம் என்று நினைப்பது இதயத் துடிப்புக்குச் சமம், கட்சியால் தனக்கு என்ன இலாபம் என்று கருதுவது, உடலிலே ஓடும் இரத்த நாளங்களில் சீழ்பிடித்ததற்குச் சமம்' என்று. அப்படிப்பட்ட உணர்வே பொதுநலன் காக்கும் பொதுத் தொண்டிற்கு இன்றியமையாத அடிப்படையாகும்.

“இனியும் இருக்கின்ற காலம் எவ்வளவு என்பதல்ல கேள்வி. அந்தக் காலத்தில் என்ன செய்தோம் என்பதே கேள்வி. இருக்கின்ற காலம் இன்னும் சில மணித்துளிதான் என்றாலும் சில மணித்துளிகளில் ஒருதுளிதான் மிச்சமிருக்கிறது என்றாலும், அந்தத் துளிநேரமும் இந்த உயிர் தமிழுக்காகத்தான் பாடுபடும்; பாடுபட வேண்டும்'.

அப்படிப்பட்ட திட்டவட்டமான உறுதியோடு இயங்கும் ஒரு தலைவரே கலைஞர்.

இனிவரும் கட்டுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆற்றிய உரைகள் சிலவற்றை சுட்டிக்காட்ட விழைகிறேன்.

செம்மொழிச் சிகரத்தின் சாரலில்
 தொடர்ந்து நனைவோம் ....
----

தேமொழி

unread,
Jul 25, 2021, 1:10:26 AM7/25/21
to மின்தமிழ்
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம்! - பகுதி 8

"பூந்தோட்டத்தைப் பொலிவாக்குவோம் !"

- ஒளவை நடராசன், மேனாள் துணைவேந்தர்
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் 

இந்திய நாட்டின் விடுதலைக்குப் பின்னர் மாநில மக்களுக்கு இயல்பாக மடங்கியிருந்த மொழி, இனம், இலக்கியம், பண்பாடு, வரலாறு முதலிய துறைகளில் பெருமிதமும் - பேரன்பும் எழலாயின. வங்கத்தில் பொங்கிப் பெருகியிருந்த இலக்கிய வேட்கையைப்போல இன, மான, எளியோர் நலம் நாடிய தன்மான இயக்கச் சிந்தனைத் தழல் போலத் தமிழ்நாட்டு இளைஞர் மனத்தில் எழுந்தது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ்க்கலைஞரின் சீர்திருத்தச் சிந்தனைகள் புதிய விழிப்பையும் - ஆர்வத்தையும் பெருக்கின.

கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கருப்புச் சட்டை வீரர்களாயினர். பெயர் மாற்றம், மனமாற்றம், பழமையில் இடம்பெற்றிருந்த பாழான தடைக்கற்களைத் தகர்த்தெறியும் தறுகண்மை எங்கும் ஊக்கம் பெற்றன. திரையுலகத்தில் வேலைக்காரி, ஓர் இரவு, பராசக்தி, நல்லதம்பி,  கலைஞரின் அனைத்து எழுத்தோவியங்களும் இளையோர் மனத்தைக் கவர்ந்தன.

இனமுழக்கம் இடிமுழக்கமாயிற்று
கருத்து மழை எங்கும் பொழிந்தது
கழனிகளில் புதிய விளைச்சல்
கல்லூரியில் தமிழ் மன்றங்கள் உருவாயின 
இலக்கியக் கருத்தரங்குகள் பெருகின 

பழமையாளர்களில் பலர் மெல்ல உணர்ந்து இந்தப் பகுத்தறிவுப் பாங்கைப் பாராட்டினர். தனித்தமிழ் இயக்கம், வடமொழி எதிர்ப்பு, திராவிடத் தொன்மை முதலிய நெறிகளில் மனோன்மணீயம் சுந்தரனார், மறைமலையடிகளார் தலைமை தாங்க, மாணிக்க நாயகர் த. வே.  உமாமகேசுவரனார் முதலியோர் தமிழ் உணர்வுக்குத் துணை நின்றனர்.

அரசியல் கழகம் போலவே சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முதலிய நிறுவனங்களாலும் தமிழ் எழுச்சித் தீ பரவியதோடு, தமிழ் ஒரு முற்போக்கு இயக்கமாகவே வடிவெடுத்தது.  இந்த நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து கல்லூரிகளில் கிண்டி பொறியியற் கல்லூரி, பூ சா கோ கலைக்கல்லூரி மாணவர்கள் கலைச் சொல்லாக்கத்திலும் அறிவியற் கருத்துச் செறிவூட்டுவதிலும் முன்னணியில் நின்றனர்.

“படிக்காத - படிக்காமல் ஆக்கப்பட்ட - பாமர நிலையை விட்டுக் கரையேறாத மக்களையெல்லாம் பகுத்தறிவுப் பண் பாடிடச்செய்திருக்க வேண்டிய பொறுப்பை - உயர் வகுப்பினர் தம் கடமையென - எடுத்துக் கொண்டிருந்தால் கண்டனம் கிளம்பியிருக்காது, ஒரு பெரிய சமுதாயத்தால் களிப்பொடு கூடிய நன்றியும் தெரிவிக்கப்பட்டிருக்கும்" என்று முழங்கினார் கலைஞர்.

கிண்டி பொறியியற் கல்லூரியில் முத்தமிழறிஞர் கலைஞரின் பேச்சினைக் காணலாம்:

1. தலைவர் முன்னுரையில் - 
உங்களையெல்லாம் நான் பூந்தோட்டத்திற்கு அழைத்துச் செல்லப்போகிறேன். அது எத்தகைய பூந்தோட்டமாக இருக்குமோ என்றும் ஆர்வத்தின் காரணமாக ஐயமுற்றார். நான் உங்களையெல்லாம் பூந்தோட்டத்திற்கு அழைத்துச் செல்ல வரவில்லை. நாமெல்லாம் அமர்ந்திருக்கும் பூந்தோட்டத்தைப் பற்றித்தான் பேசப்போகிறேன்.

பூந்தோட்டம் அமைப்பதென்பது சாதாரணமானது அல்ல.
தோட்டம் அமைக்கக் காடுகளை அழிக்க வேண்டும்.
மேடுகளை இடித்து மட்டமாக்க வேண்டும்.
பள்ளங்களைச் சரிப்படுத்திப் பண்படுத்த வேண்டும்.
இப்படியெல்லாம் அமைந்த சிங்காரப் பூந்தோட்டம் திடீரெனவோ, அல்லது சிறிது சிறிதாகவோ சீரழிந்து விடுவதுமுண்டு. மலர்ந்து மணம் வீசும் மலர்கள் பொழுதுதோறும் புனலுக்கும், அனலுக்கும், கக்கும் விடப்பாம்பினுக்கும் இடையறா நோய்களுக்கும் ஈடுகொடுத்து உண்டாக்கிய பூந்தோட்டத்திலே மலர்ந்து மணம் வீசும் மலர்களை, உழைக்காதவன், வியர்வை சிந்தாதவன் பறித்துச் சென்று மகிழ்கிறான் ஒரு புறத்திலே !
இரும்புக்கரம் உண்டாக்கிய இன்பச் சோலை !
அதிலே சுவை சிந்தும் தேன் மலர் ! 
அதைக் கொய்து செல்லும் சிலர் ! 
இப்படி ஒரு வேதனையான சூழ்நிலை பூந்தோட்டத்திலே !

அடுத்தது, அந்தப் பூந்தோட்டத்திலே பயிராக்கப்பட வேண்டிய மலர்கள் எவை என்பது !
சிரிக்கும் ரோஜா இருப்பதா ? அல்லது எருக்க மலர் இருப்பதா ? கவின் பொழியும் மல்லிகைக் கொடியா ? கள்ளிக்காடா ? இவை போன்ற கேள்விக்குறிகள் உலவுகின்ற பூந்தோட்டத்திலே ! 

அடுத்தது, பூந்தோட்டத்தை மிதித்து நாசமாக்கிய மாடுகளையும் ஆடுகளையும் விரட்டவேண்டும் என்ற அவசரம் ஏற்பட்டு, மாடும் ஆடும் ஓடிவிட்டன என்ற உற்சாகத்திலிருப்பவரிடம், ஆடும் மாடும் போனது உண்மை; ஆனால் சேர்ந்திருந்து செழிப்பைக் கொல்லும் சிறு பூச்சிகளும் புல்லுருவிகளும் போக்கப்படவேண்டும் என்ற முழக்கம் ஒரு புறம் !

இத்தகைய மூன்று விதமான பிரச்சினைகள் முற்றுகையிட்டிருக்கும் பூந்தோட்டம் நம் கவனத்துக்குரியதுதான். கவனத்துக்குரியது மட்டுமல்ல; கவலைகொண்டு காரியமாற்ற வேண்டிய கடமையுணர்ச்சியும் காற்றொடு கலந்து நம் உணர்வைத் தொடுகிற உயர் பணியைக்கூடச் செய்யக் கூடியதுதான்.

நாம் ஆராயப்போகிற ‘பூந்தோட்டம்!' தமிழகமாகிய நம் பூந்தோட்டம்.

நாம் வதியும் தமிழகத்தை ஒரு பூந்தோட்டமாக நினைத்துப் பார்த்தால், சிலப்பதிகார ரோஜாவும், சீவக சிந்தாமணி எனும் சண்பகமும், குண்டலகேசிப் பூங்கொத்தும், மணிமேகலை மல்லிகையும், அகம்புறமென்ற அன்றலர்ந்த முல்லைகளும் மணம் பரப்பிடக் காணுகிறோம். அந்த மலர்களின் மணத்தை மொண்டு மொண்டு தரும் தென்றலாகப் பாரதியார் - பாரதிதாசன் கவிதைகளும் மிதந்திடுவதைக் காணுகிறோம்.  இத்தகைய சீர் குலுங்கும் நந்தவனத்தின் ஒரு மூலையிலே கள்ளிக் காடும் இல்லாமலில்லை. வாசமற்ற கனகாம்பரமும் வைக்கப்படாமலில்லை. மாலை வேளையிலே உல்லாச உலாவல் நடத்த முடியாதபடி நம்மைப் பயமுறுத்து கின்ற பாம்புகள் வாழும் பெரும் புற்றுகளும் தோன்றாமலில்லை.

கள்ளி என்கிறேன். சிலருக்குக் கடுமையாகக்கூடத் தெரியலாம்; கள்ளி மலரிலே அழகுண்டு, புராணக் கதையில் நயம் இருப்பது போல; கள்ளி மலரிலே நறுமணம் கிடையாது; இதிகாசத்தில் இன உணர்வு இல்லாதது போல !  முள் நிறைந்தது கள்ளி ! 

சிலப்பதிகாரத்தை ரோஜா வென்று குறிப்பிட்டேன், ரோஜாவுக்கு முள் இருப்பதால்! சிலப்பதிகாரத்திலே கற்பனைக் கெட்டாத சம்பவங்கள் இருக்கலாம். ஆனால், சிலம்பு ஒலிக்கும் போது செந்தமிழ்ப் பண்பு ஒலிக்கிறது. சேரனின் வீரமும் சோழனின் மனவளமும், பாண்டியனின் நேர்மையும் மொத்தத்திலே மூவேந்தர் ஆண்ட மூன்று பெரும் நாடுகளைப் பற்றிய குறிப்புகளும் நிறைந்து கிடக்கின்றன.  இளங்கோ தந்த இந்த இன்பப் புதையலிலே ! சேரனின் தம்பி தயாரித்த தங்க ரோஜா சிலப்பதிகாரம்!  கற்பனைக் கெட்டாத நிகழ்ச்சிகள் இதிலே உள்ள முட்கள்!  ரோஜா தேவையா இல்லையா என்பது விவாதிக்கத் தேவையில்லாத பிரச்சினை !  பூந்தோட்டத்தில் நல்லவை புதுமைகளாக மலரட்டும் .

இத்தகைய காடுகள் பூந்தோட்டத்திலே பரவிடக் கூடாது என்கிறது ஒரு பலமான குரல் ! பகுத்தறிவுக் குரல் ! இல்லை - அவைகளும் இருக்கத்தான் வேண்டுமென்கிறது ஒரு மெலிந்த தொனி! பண்டிதர்கள் பக்கமிருந்து கிளம்பும் தொனி !  இப்படி ஒரு போராட்டம் பூந்தோட்டத்திலே, அறிவியக்கத்திற்கும் அதன் எதிர்க் குழுவுக்கும் நடைபெறுகிறது !

அந்தக் காலத்தை அடியொடு புறக்கணிக்க வேண்டுமென்கிற அவசர ஆவேசங் கொண்டவர்களுமல்லர் அறிவுப் படையில் அணிவகுத்து நிற்பவர்கள்.  அந்தக் காலம் சில பலவற்றிற்குச் சிறந்ததாக இருக்கலாம்.  ஆனால், அதன் ஆதிக்கத்திலே மிதிபட்டு இந்தக் காலம் நெளிந்து கிடக்க வேண்டுமென்பதை யார்தாம் ஒப்புக்கொள்ள முடியும் ?  அந்தக் காலத்து நல்லவைகளைக் கொண்டு வந்து இந்தக் காலப் புதுமைகளோடு இணைப்பதிலே எதிர்ப்புக் கிடையாது.  இரண்டு காலங்களையும் மோத விட்டுவிட்டு வேடிக்கை பார்க்கிறார்களே, அதுதான் வேதனையைத் தருகிறது !

இந்தக் காலத்திலே கண் மருத்துவம் இருக்கிறது; பார்வையைக் கூர்மையாக்கிக் கொள்ள மூக்குக் கண்ணாடி கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது;  ஆனால், அந்தக் காலத்திலே இந்த வசதி கிடையாதே !என்று இளைஞன் கேட்கிறான்.  கண்ணொளி கெட்ட திருதராஷ்டிரன் கடைசி வரையில் குருடனாகத்தானே இருந்தான் என்றும் இப்போது இளைஞர்கள் கேட்க மாட்டார்களா !   

இந்தக் காலத்து வசதிகள் எவ்வளவு சுலபத்திலே மிகப்பெரிய சாதனைகட்கு, ஏற்றவையாக உள்ளன.  இந்தக் காலம்பற்றி உணர்ந்தோர் - இந்தக் கால மாண்புகளைப் பற்றி உரைப்போர் சிலர்கூட அந்தக் காலக் கருத்துகளோடு மோதிடுவதைக் காணும்போது, கவலைதான் ஏற்படுகிறது  பூந்தோட்டத்திலே உலவிடுகிற நமக்கு. எருக்கம் பூவைத்தான் தருவேன் என்று கூறலாமா ! 

புதுமையான கடிகாரம்  கட்டிக்கொண்டு இராகு காலம் பார்க்கிறார்கள்.
மூக்குக் கண்ணாடியணிந்து பாரதம் படிக்கிறார்கள்.
வெளிநாட்டில் தயாரான கேமராவுக்குத் தேங்காயுடைத்துக் குங்குமமிட்டுச் சூடம் கொளுத்தி, வணக்கம் செய்து திரைப்பட மெடுக்கிறார்கள்.
இந்த விசித்திரங்கள் வேடிக்கையாகவா தோன்றுகின்றன. 
வேதனைப் புயலையல்லவா திடீர் திடீரென்று பூந்தோட்டத்தில் வீசிடச் செய்கின்றன.

இங்கே அரசியலில் பழுத்தவர்கள் அரசு வேலைகளை விட்டு ஓய்வு பெறுகிறவர்கள் , உயரிய கொள்கைகளை மக்கள் உள்ளத்தைத் தொடும் உணர்ச்சி எழுத்துகளை எழுதிக் குவிப்பார் என்று எண்ணிடுபவருக்கு, இன்பத் தாமரை தரமாட்டேன் - எருக்கம் பூவைத்தான் தருவேன் என்றால் இந்த நிலையை எப்படித்தான் வருணிப்பது! பூந்தோட்டத்தில் இதுதான் போராட்டம். 

கள்ளிக் காடுகளே, தோட்டத்திலிருந்து அழிய வேண்டுமென்று எண்ணிடும் வேளையில் எருக்கஞ் செடிகளையும் எடுத்து வந்து பயிராக்குகிறேன் என்று முற்றுமுணர்ந்தவர்களே கூறினால் எப்படி வாய் மூடி மௌனியாக இருப்பது !  இந்தச் சங்கடமான சம்பவங்கள் தாம், தமிழகச் சோலையிலே, எந்த மலர்கள் இருக்கவேண்டும்,  இன்னும் எத்தகைய மலர்கள் பயிராக்கப்படவேண்டும் என்ற போராட்டத்தைப் பகுத்தறிவு புரியினருக்கும், பழைமைத் தீவில் சிக்கியிருக்க ஏற்படுத்தியிருக்கிறது !

எம்மலர் வைப்பது என்பது ஒரு பிரச்சினை! அடுத்தது, வைத்த மலர்கள் யாருக்குச் சொந்தமென்பது !  வியர்வை சிந்தியவன் தான் வைத்த மலர்ச்செடி தனக்குச் சொந்தமென்கிறான்.  வியர்வையை விருந்தாக எண்ணிடும் வீணன் மலர்கள் தன் மாளிகை மஞ்சத்திலே தூவப்பட வேண்டுமென்கிறான்.  இந்தப் போராட்டம், பூந்தோட்டத்திலே ஒரு முக்கிய அங்கம் பெறுகிறது !

'மலர் உழைத்தவனுக்கா? அல்லது உல்லாசிக்கா?' என்பதுதான் பொது உடைமைக்கும் தனியுடைமைக் கொள்கைக்கும் நடைபெறுகிற போராட்டம்.  இதிலே வெற்றிக் கொடி நாட்டிய நாடுகள் இரஷ்யாவும், சீனாவும் - நம்மைப் பார்த்துப் புன்சிரிப்புக் காட்டுகின்றன.

மூன்றாவதாகத் தோட்டத்திலே மேய்ந்த வெள்ளை மாடுகளை விரட்டிவிட்டோம் - இனி வேலிகூடத் தேவையில்லை என்ற வீராப்புப் பேசிடுபவருக்கும், வெள்ளை மாடுகள் ஓடிவிட்டன; ஆனால், பூச்சிகளும் புல்லுருவிகளும் மலர்ச் செடிகளைப் பாழாக்குகின்றன அவைகளை ஒழிப்பதற்கு உரிமை என்ற மருந்து தெளிக்க வேண்டுமென்பவர்களுக்கும் நடைபெறுகிற போராட்டம் !

பூந்தோட்டம் சொந்தமாக வேண்டும். 
எந்த மலர் தேவையென்பது - சமுதாய சீர்திருத்தம். 
மலர் யாருக்குச் சொந்தமென்பது சமத்துவ, கோரிக்கை விளக்கம்.

பூந்தோட்டமே யாருடையது ? இப்போது யாருடைய ஆதிக்கத்திலிருக்கிறது ? அந்த ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட சுந்தரச்சோலை சொந்தக்காரரின் வசமாக வேண்டாமா என்பது தனியுரிமைக் கோரிக்கை பற்றிய பிரச்சினை.

இந்த மூன்றில் எது முன்னர் நடைபெற வேண்டுமென்பது சிந்திக்க வேண்டிய ஒன்று !
(1) எந்த மலர்?
(2) மலரை யார் பறிப்பது?
(3) தோட்டம் யாருடையது?

இந்த மூன்று கேள்விகளையும் முறையே வைத்து ஆராயும்போது, நாம் விரும்பும் மலர் பற்றிய சிறப்புகளைத்தாம் சொல்லிவர முடியும்.  மலரை நாமே பறித்து அனுபவிப்பதற்கும் தோட்டம் நமக்குச் சொந்தமாக வேண்டும்.  அதுவரையில் மலர் நமக்குக் கிடைத்தால், எப்படி மாலை தொடுக்க முடியும் என்பதைத்தான் கூற முடியும்!   ஆகவே, முதலில் அவசரமாக - அவசியமாக - நடைபெறவேண்டியது, தோட்டம் நமக்குச் சொந்தமாக வேண்டியது !

தோட்டம் நமக்குச் சொந்தமாகிவிட்டால் தொல்லை தரும் பூச்சிகள் அழியும். தூய மலர்கள் சிரிக்கும் - மலருக்குரியவர் நாமே ஆவோம் -  இந்த நல்ல காரியத்தில் ஈடுபட வேண்டுமென்றுதான் உங்களையெல்லாம் அழைக்கிறேன்.  

ஈடுபட வருகிறவர்கள், மலர் உழைத்தவனுக்குச் சொந்தமென்பதை உரத்த குரலில் கூறுபவர்களாக இருக்க வேண்டும்.  மாசற்ற மலர்கள் மணம் பரப்பிட வேண்டும் என்ற மனப் பக்குவம்  படைத்தவர்களாயிருக்க வேண்டும்.

செங்குட்டுவன் உலாவிய பூந்தோட்டம்,  நாம் அமர்ந்திருக்கிற பூந்தோட்டத்திலே வீரன் செங்குட்டுவன், உலாவியிருக்கிறான்.  கடாரங் கொண்ட சோழன் களிப்புக் கீதம் பாடியிருக்கிறான்.  பாண்டியன், செந்தமிழ்ச் சங்கம் முழக்கியிருக்கிறான். நான் குறிப்பிடும் பூந்தோட்டம் மூன்று பக்கம் முத்துக் குலுங்கிடும் கடல்களைக் கொண்டது !  ஒரு புறத்தே உயர்ந்த மலைத்தொடர் கொண்டது! வளமான வயல்கள் - வற்றாத ஆறுகள் கொண்டது! தளிரும், மலருமட்டுமல்ல; தங்கம் தருவது !  

இத்தகைய பூந்தோட்டத்தைச் சொந்தமாக்கிடும் பணியில் ஈடுபட வாரீர் ! வாரீர் !  அறிவு மன்றத்திற்கு என்று தான் உங்களையெல்லாம் அழைக்கிறேன்.  இப்படி அழைப்பதிலே வகுப்புவாதம் கிடையாது. தன்னலம் தலை நீட்ட இடமில்லை. குறுகிய மனப்பான்மை நிச்சயமாக இல்லை. எல்லோரையுந்தான் அழைக்கிறேன். 

உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற பேதம் பாராட்டி அழைக்கவில்லை.  அந்தப் பேதம் நீக்கப்படவேண்டும் என்ற பெருமுயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களைச் சேர்ந்தவன் தான் நான்.  உயர்ந்தவனைக் கோபுரத்தின் உச்சியிலேயிருந்து இறக்கித் தாழ்ந்தவனைக் குப்பைமேட்டிலிருந்து எழுப்பி இருவரையும் சமநிலையான ஒரு மண்டபத்தில் அமரச் செய்ய வேண்டுமென்பதுதான் எம் போன்றோர் கொள்கை.  இதைத் தவிர உயர் வகுப்பாரிடத்திலே எந்த விதமான காழ்ப்பும் கொண்டவர்களல்லர் நாம்.

நாம் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களாயிற்றே குழியினில் வீழ்ந்து கிடப்பவர்களாயிற்றே - நம்மையெல்லாம் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் அல்லவா கைகொடுத்துக் காப்பாற்றியிருக்க வேண்டும்.  அவர்கள் அந்தப் பணி புரிந்திருந்தால் இரு சாதிகள் மோதிக் கொள்வது என்ற நிலையிருந்திருக்காதே.

அவர்கள் படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள், நூற்றுக்குத் தொண்ணூறு பேர் கல்லூரி, கலாசாலை, பள்ளிகளில் நுழைந்தவர்கள்.  சரித்திர வீதிகளில் நடந்தவர்கள். பூகோளச் சோலையில் உலவியவர்கள்.   விஞ்ஞானக் கடற்கரையில் அமர்ந்திருந்தவர்கள்.

படிக்காத - படிக்காமல் ஆக்கப்பட்ட - பாமர நிலையை விட்டுக் கரையேறாத மக்களையெல்லாம் பகுத்தறிவுப் பண் பாடிடச் செய்திருக்க வேண்டிய பொறுப்பை - உயர் வகுப்பினர் - எடுத்துக் கொண்டிருந்தால் கண்டனம் கிளம்பியிருக்காது, களிப்போடு கூடிய நன்றி தெரிவிக்கப் பட்டிருக்கும் ஒரு பெரிய சமுதாயத்தால் !

அந்த நாள் தொட்டு இந்த நாள் வரையில் பலமான அடிப் பீடம் அமைத்துக் கொண்டல்லவா சாதிமுறையென்னும் கோட்டை கட்டப்பட்டிருக்கிறது.  அந்தக் கோட்டை தவிடு பொடியாகப் போகும் செயலிலே ஈடுபடக் கோட்டையில் உள்ளவர்களையே அழைக்கிறேன்.

நண்பர்களே !
நதி, கடலிலே கலந்தால் கடல் நதியாவதில்லை.  நதியும் கடலாகிவிடும்.  ஒரு குடம் பாலிலே ஒரு துளி விஷம் கலந்தால் விஷம் பாலாகாது. பால் விஷமாகும். சாதி எனும் எருக்கம் பூக்கள் பூந்தோட்டத்தில் மலர்ந்தால்,  அதே நிலைதான் நமது பூந்தோட்டத்தில் வளர்ந்து வருகிறது.  சாதி உணர்ச்சி அதுபோலத்தான். சாதியென்னும் ஒரு சொல்லேயில்லாத சமுதாயத்தின் மீது சாதிப்பிரிவு படையெடுத்துப் பணிய வைத்துவிட்டது.

காரைக்காலம்மையாரின் அழகு மேனியை அலங்கோலமாக்கி, எலும்பு உருவிலே தலை கீழாக நடந்த பிறகுதான் 'அம்மையே', என்று சிவன் அழைத்தார்.  சீராளனைக் கறி சமைத்துச் சிவனுக்கு விருந்து வைத்த பிறகு தான் சிறுத்தொண்டனுக்குப் பக்தன் என்ற பதக்கம் அணிவிக்கப்பட்டது.  காரணம் இவர்களெல்லாம் தாழ்ந்த சாதிக்காரர்கள். இவர்களுக்கு இது எப்படி நீதியாகும் என்று கேட்பவர்களாகப் பகுத்தறிவாளர்கள் எழுந்துள்ளனர்.

சாதிவெறிக் கதைகள் யாருக்கு ஆபத்தை அளிக்கின்றன ?  இந்தக் கதைகளையெல்லாம் செல்லுபடியாகாதவை எனக் கூறிக் கடலிலே எறிந்திட வேண்டியது உயர்வகுப்பார் கடமையல்லவா ?   இந்தக் கதைகளும், இக்கதைகள் காட்டும் வழியில் நடப்பவர்களும் தாழ்ந்த சாதியினர் எதிர்ப்புக்கு உள்ளாவதற்கு முன்பு தங்களை மாற்றிக் கொண்டிருந்தால் பூந்தோட்டத்தில் புயல் வீசிட வேண்டியதில்லையே; தென்றலல்லவா தெம்மாங்கு பாடியிருக்கும் !

முரட்டு எதிர்ப்பு தானே மறைந்துவிடும் என்று உறுதி கூறுகிறேன்.  கத்தி கீழே எறியப்பட்டால் கையை உயர்த்தி வருபவன் கை தாழ்த்திடுவான் - கசப்பு நீங்கும் - கைகுலுக்கப்படும் காட்சியைக் காண முடியும் என்பது தான் உலகியல்.  வன்முறை கைவிடப்படுமா ? போர் ஒழிப்புப் புறா பறந்திடுமா ? அல்லது பூந்தோட்டத்திலே புழுதி பறந்திடத்தான் வேண்டுமா ? சிலர் சிரித்துக் கேலி பேச - பலர் பணிந்து நிற்க வளமாக்கும் வேண்டாத ஒரு வெறுப்பு வளரத்தான் நேரிடும்.  அந்த வெறுப்பு, தோட்டத்தை வளமாக்கும் வேலையைச் சிறிது தாமதப்படுத்தும் என்பதையும் வெற்றிக்கு எந்நாளும் அணைபோட்டு விடமுடியாது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

வண்ண மலர் வனத்தை நாம் வளமாக்க வழி காண்போம் .

வனத்தில் எழுந்துள்ள நம் பிரச்சினைகளை எப்படி எப்படித் தீர்ப்பது என்பது பற்றிக் கருத்துகளைப் பரப்பிடுவோம்.  நல்ல தீர்ப்புக் கிடைக்கும் வரையில் - தோட்டத்திலே எம்மலர் வைப்பது, வைத்த மலரை யார் பறிப்பது, என்கின்ற பிரச்சாரத்திலே ஈடுபடுவோம்.  அப்படி நடைபோடும் நல்ல தம்பிகளைத்தான் - நான் குறிப்பிடும் பூந்தோட்டம் விரும்புகிறது. 

அந்த விருப்பத்தை நிறைவேற்றும் வீரர்களாகுங்கள்.  விருதுகள் காத்திருக்கின்றன. வெற்றிச் சிந்து பாட , நீங்கள் வீணை மீட்ட வேண்டியதுதான் பாக்கி !

தென்றல் தவழும் - புதுமணம் நீந்தும் - மானினம் தேன்சிட்டு, மயில், குயில், மாடப்புறா எல்லாமே புதுமைக் கலைவிருந்து படைக்கும்.

அந்த இன்பப் பூந்தோட்டம் காண இளைஞர் உலகுக்கு மீண்டும் ஒரு முறை அழைப்பு விடுக்கிறேன் !

நம்நாடு, 6/ 12/ 1951.

செம்மொழிச் சிகரத்தின் சாரலில் தொடர்ந்து நனைவோம்... 
---

தேமொழி

unread,
Jul 26, 2021, 12:43:19 AM7/26/21
to மின்தமிழ்
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம்! - பகுதி 9

"நெஞ்சை வெல்லும் நேர்மை"

- ஒளவை நடராசன், மேனாள் துணைவேந்தர்
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் 

சீர்திருத்த மனமும் - சிந்தனை வளமும் கொண்ட அறிஞர் தம் எண்ணங்களையும் புதுமை அவாவும் போக்கினையும் தம் பேச்சிலும் எழுத்திலும் இடைவிடாது வலியுறுத்துவார்கள்.  திரு வி க தம் வாழ்நாளில் நலிந்த நிறைநாளிலும் தம் கருத்துக்களைப் பிறருக்குச் சொல்லச் சொல்லி எழுத வைத்தாராம்.  நம் கலைஞர் பெருந்தகையும் எதைப் படித்தாலும் - எந்தக் கலையைக் கண்டாலும் தன் மனப்போக்கில் புதுமையையும் - செழுமையையும் சேர்த்துப் புது வடிவமாக்குவார்.

இதிகாசங்களைப் படித்தபோதும் பரதாயணம்,
புலவர் குழந்தை எழுதிய இராவண காவியம்,
புரட்சிக்கவிஞர் புனைந்த இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்ற நாடகம்,
கல் சுமந்த கசடர், வில்லவன் கோதை வீரம் என்றெல்லாம் பேரறிஞர் அண்ணாவும் - முத்தமிழ்க் கலைஞரும் புதுமையாகப் படைத்தனர்.

முத்தமிழறிஞருக்குச் சிலப்பதிகாரப் பற்று எல்லையில்லாதது.  சித்திரச்சிலம்பின் முத்திரை வரிகளை  வாய்திறந்தால் கடல் மடை போல் சொல்வார்.  பூம்புகார் என்ற  சொல் அவருக்குத் தேனாய் இனித்தது. பூம்புகாரை மீளப் படைத்ததும் பொற்பு மிகுந்த அற்புதம் வழியும் சிற்பங்களை அங்கே அமைத்ததும் நாடறிந்தவை.

கலைஞரின் பூம்புகார் நாடகம் ஒப்பற்றது. தமிழ் மரபு, மானம், இனம், எழுச்சி, பழமைப்பாடு, பண்பாடு  முதலிய கூறுகள் காவியத்தில் -கதைகளில் - கவிதைகளில் - கட்டுரைகளில் - மடல்களில் - தலையங்கங்களில் - மேடையுரைகளில் -  நாடகத்தில் - திரைப்படத்தில் தங்கு தடையின்றிப் பொங்கி வழிந்தன.

இராமாயணம், 64 வகையாகக் கட்டமைக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.   ஒவ்வொரு சமுதாயத்தின் கற்பனைக்கேற்ப, அந்தந்த இனக் குழுவின் பண்பாட்டுச் சூழலுக்கேற்ப, மனத்திற்குள் ஊறிக் கிடந்து, காலம் கடந்து, நினைவில் எஞ்சிய அலைவுகளிலிருந்து, புதிது புதிதாய் அவை கதைகளாக்கப்பட்டிருக்கின்றன.

கதையாசிரியரின் மாற்றங்களைக்கொண்ட கதை; கற்பனையில் முகிழ்த்தது உண்மையே எனக் கொண்டாலும், அந்தக் கற்பனை எதைச் சொல்லப் பயன்படுகிறது ?  யார் பக்கம் நின்று சொல்கிறது அதை இப்பொழுது மாற்றிச் சொல்வதற்கான தேவை என்ன ? எந்தப் புறச்சூழல், அறிஞர்களை இந்த வழியில் சிந்திக்க வைத்திருக்கிறது என்பது பயில்வோருக்கு அறிவூட்டம் அளிப்பதாகும் என்று காட்சி ஊடகக் கலைமாமணியாக விளங்கும் பேராசிரியர் முனைவர் இராமசாமி இன்றைய கணையாழியில் எழுதியதை இங்கே சுட்டிக் காட்டுகிறேன் .

முத்தமிழ்க்கலைஞரின் பூம்புகார் நாடகப் படைப்பை மூதறிஞர் வ சுப மாணிக்கம் எழுத்தெண்ணிப்படித்து மூழ்கினார்.  அந்தப் பேரறிவின் விளக்கமாக தெளிவுப் பளிங்காக எழுதிய திறனுரையை கலைஞர் அவர்களே கட்டுரையைப் படித்துப் பாராட்டியதை நான் செவிகுளிரக் கேட்டிருக்கிறேன்.  மூதறிஞருக்குப் பொய் சொல்லா மாணிக்கம் என்றே ஒரு புகழுரை உண்டு.  இந்தத் திறனுரையில் ஒரு தொடரிலும் மிகு சொல்லோ - குறை சொல்லோ இல்லை.  ஆழ்ந்த புலமையின் அருங்கலைப் பேழையில் உதிர்ந்த முத்துக்கள்.

இருவகைச் சிலப்பதிகாரம்  ‘நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்று ஓர் ஆரம் படைத்த தமிழ்நாடு' என்றார் பாரதியார்.  இச்சிலப்பதிகாரம் இளங்கோ அடிகளால் 1800 ஆண்டுகட்கு முன் இயற்றப்பட்டது என நாம் அறிவோம்.  நாம் வாழும் இந்நாளில் 1968 இல் இன்னொரு புதிய சிலப்பதிகாரம் தோன்றியிருக்கின்றது.  இதனை நெஞ்சை வெல்லும் சிலப்பதிகாரம் என்று ஓர் நேர்மை படைத்த தமிழ்நாடு' என்று பாராட்டுவோம்.  இப்புதிய சிலம்பைப் படைத்தவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி.

கலைஞர் 1953 இல் திருச்சிராப்பள்ளிச் சிறையகத்துக் கடுங்காவலோடு வதிந்த காலை, அஃதாவது தம் 29 ஆவது வயதில் இளங்கோவின் சிலப்பதிகாரத்தைக் கலையார்வத்தோடு திறனாய்ந்தார். உரைகளோடும் வரலாற்றோடும் வைத்து நிகழ்ச்சிகளை அலசிப் பார்த்தார்.  15 ஆண்டுப் பார்வையின் விளைவே கலைஞரின் உரை நடைச் சிலப்பதிகாரம். பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த ஞான்று இப்படைப்பு வெளியாயிற்று.

முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாதுரையின் முன்னுரைப் பதிகத்தைப் பெற்ற சிறப்புடையது இச்சிலப்பதிகாரம்,  ‘சேரமான் தம்பி தந்த சிலப்பதிகாரத்தை என் தம்பி கருணாநிதி தனது வளமிகு செழுந்தமிழ்ச் சொல் திறத்தால் நாடகமாகத் தருவது பொருத்தமானதே' எனவும் ‘இந் நாடக நூலை வெளிக்கொணர்வதன் மூலம் தம்பி கருணாதிதி தமிழ் இலக்கியத்திற்கு நற்பணி ஆற்றியுள்ளார்' எனவும் அறிஞர் அண்ணா முன்னுரையில் தம்பியுறவு சொல்லிப் பாராட்டுவர்.

இவ்வுறவுணர்ச்சி இந்நாடகத்தை எழுதும் போது கலைஞர்க்கும் உண்டு.  இளங்கோ செங்குட்டுவனை ‘அண்ணா, அண்ணா' என்று சொல்லும்போதெல்லாம், கலைஞர் தம் அண்ணாவையே காண்கின்றார். செங்குட்டுவனின் தேவியை அண்ணி என்று சுட்டும்போதெல்லாம் இராணி அண்ணியைக் காண்கின்றார் என்ற பாசம் நமக்குப் புலனாகின்றது.

கலைஞரின் பற்று:
கலைஞரின் சிலப்பதிகாரப்பற்றும் பூம்புகார்ப் பற்றும் நற்றமிழ் நாடு அறிந்தவை.  அத்தோன்றலிடம் காணப்படும் தமிழூற்றம், தமிழாழம், தமிழ்மறம் எல்லாம் சிலப்பதிகாரச் செய்யில் விளைந்தவை.

பதியெழு 'வறியாப் பழங்குடி கெழீஇய பொதுவறு சிறப்பிற் புகாரே யாயினும் நடுக்கின்றி நிலை இய என்ப தல்லதை ஒடுக்கங் கூறார் உயர்ந்தோர் உண்மையின்' 'என இளங்கோவடிகள் புகார் என்னும் காவிரிப்பூம் பட்டினம் என்றும் நிலையான தலை நகர் எனவும், அதற்குக் காரணம் என்றும் உயர்ந்தோர் இருப்பது எனவும் பாடிச் சென்றுள்ளார். 
அங்ஙனம் பாடியது உண்மையே என்பார் போல் உயர்ந்த தமிழ் நெஞ்சம் வாய்ந்த நம் முதலமைச்சர் கருணாநிதி இன்று நம் கண்ணெதிரே பூம்புகார் நகரத்தைச் சிலப்பதிகாரக் குறிப்புக்களின்படி உருவாக்கி வருவதால் அறிந்து கொள்கின்றோம். அகக் கண்ணாற் கண்ட பூம்புகாரை முகக் கண்ணாலும் உலகத்தார் காண வேண்டும் என்று பெருந்திட்டம் கோலும் கலைஞரை நன்றியொடு வாழ்த்துகின்றோம்.

 பூம்புகார் நகரத்துப் புகழும் பெயரும் யாராலும் மூழ்க அடிக்கப்பட முடியாதவை.  சேர இளவல் செந்தமிழ் வித்தகர் இளங்கோவடிகள் இயற்றிய  சிலப்பதிகாரம் உள்ள வரையில் பூம்புகாரின் புகழும் மதுரையின் மாண்பும் வஞ்சியின் வீரமும் பொதுவாகத் தமிழகத்தின் சிறப்பும் தாழாது தாழாது' என்பது கலைஞரின் உள்ளத்துணிவு.  அள்ள அள்ளக். குறையாது கூடும் இத்துணிபுணர்ச்சியைக் கலைஞரின் எண்ணம் சொல் செயலெங்கும் முரணின்றிக் காண்கின்றோம்.

பாராட்டு:
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கலைஞர்க்கு அளித்த டாக்டர் பட்டத்தினைப் பாராட்டும் பொருட்டுச் சென்னைக் கலைவாணர் அரங்கில் 17--10-1971 இல் நிகழ்ந்த பெருங்கூட்டத்தில் யானும் கலந்து கொண்டேன்.  அஞ்ஞான்று கலைஞரின் சொற்றிறம், புலமை நுணுக்கம், கவிதைப் படைப்பு முதலான பெற்றிகளை எடுத்துச் சொல்லி வருகையில், அவர் எழுதிய சிலப்பதிகார நாடகம் தனித்து ஆராய்வதற்குரிய இலக்கியத் தகுதியுடையது என்று குறிப் பிட்டேன். நான்கு ஆண்டுக்கு முன் சுட்டிய குறிப்பினை இன்று ஒருவாறு விரித்துரைக்கும் வாய்ப்புப் பெற்றமைக்கு, மகிழ்கின்றேன். ஒருவாறு என்று ஒரு சொல் பெய்த தற்குக் காரணம் இந்நாடகத்தைப் பலவாறு ஆராயலாம் எனினும் இக்கட்டுரைக்கண் ஒரு கூறே இன்று என்னால் ஆராயப் படுவது என்று காட்டுதற்கு.

கலைஞர் இன்று வாழும் ஆசிரியர், பலகலைகளையும் திறனாயவல்லவர், செல்வாக்கு மிக்க எதிரான ஒரு கிழமையிதழ் பாராட்டியது போலத் தமிழ்ப் புலமை சான்றவர், ' ஆற்றலொடு விளங்கும் முதலமைச்சர்.   அவர் எழுதிய ஒரு நாடக நூலைத் திறன் செய்வது அருமை கலந்த பெருமை யாகும்.  உண்மைத் திறனெறிகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பும் ஆகும்.
இலக்கியப் பெருநோக்கில் இக்கட்டுரை வரையப்படுதலின், இதனைப் படிப்பவரும் இந்நோக்கோடு படிப்பாராக என்று கேட்டுக் கொள்கின்றேன். 'பாம்பு அறியும் பாம்பின கால்' என்றபடி இந்தக் கட்டுரை மாணவ உலகிற்கு ஒரு விருந்தாகும் என்று நம்புகின்றேன்.

இலக்கிய ஆராய்வு என்பது படைத்த புலவன் உள்ளத்தை உள்ளபடி எடுத்துக்காட்டுவது. அதுமட்டுமன்று. புலவன் உள்ளம் பொருந்திய உள்ளந்தானா ?
 என்று உள்ளத்தளத்தையும் அசைத்துப் பார்ப்பது.  உள்ளபடி எடுத்துக் காட்டுவதால் எழுத்தாளனை மதிக்கின்றோம். உள்ளத்தை அசைத்துப் பார்ப்பதால் புலமையுரம் பெறுகின்றோம்.
கலைஞரின் சிலப்பதிகாரம் உரைநடையில் யாத்த ஒரு நாடக நூல் :
 இந்நூலில்
1. கலைஞரின் தமிழ் நடையை ஆராயலாம்;
2. நாடகவுத்திகளை விரிவாக ஆராயலாம்; 
3. பாத்திரப் பண்புகளை ஆராயலாம்; 
4. இளங்கோ சிலப்பதிகாரத்துக்கும், கலைஞர் சிலப்பதிகாரத்துக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளைப் பல முனைகளில் அலசலாம். 
எனது இக்கட்டுரை, இறுதியில் கூறிய ஒற்றுமை வேற்றுமைகளை வெளிக் காட்ட முற்படுகின்றது... 

கலைஞரின் முன்னுரையில் ஒரு பகுதி 'மூலக்கதையின் ஆசிரியர் கொண்ட கருத்துக்கு மேலும் வலுவூட்டுவது போன்ற மாற்றங்களும் -- அவரால் படைக்கப்பட்ட பாத்திரங்களின் பண்புகெடாமல் தரப் படுகின்ற உருவகமும்--மறுக்கத்தக்கன அல்ல. காலத் திருகேற்ற சில மாற்றங்களைக் கதையின் நோக்கம் கெடாதவாறு அமைப்பதும் தவறல்ல. மூலக்கதை ஆசிரியர் விட்ட கருத்துக்களையோ, காட்டத் தவறிய பாகங்களையோ அடிப்படைக்குக் குந்தகமின்றிப் புகுத்த நடுவதும் குற்றமல்ல.

இந்த நோக்கத்துடன் நான் சில மாறுதல்களைச் சிலப்பதிகாரத்தை நாடகக் காப்பியமாக்கும் இந்த முயற்சியில் கையாண்டிருக்கின்றேன்.'  சில மாறுதல்களையே செய்திருப்பதாகக் கூறும் கலைஞர் தம் முன்னுரை அடக்கமான முன்னுரை என்பது என் கருத்து.

தொடக்கம், நடு, இறுதி என்ற நூலமைப்பிலும் பாத்திர வடிப்பிலும் கதை நிகழ்ச்சியிலும் உணர்ச்சியிலும் கட்டு மானப் பொருளிலும் கதை நோக்கிலும் தொட்ட தொட்ட இடமெல்லாங் கலைஞர் சிலப்பதிகாரம் இளங்கோ சிலப்பதிகாரத்திலும் வேற்று வீற்றுப் பாங்கு உடையதாகவும் தனித்தன்மையாகவுமே நான் காண்கின்றேன்.

இளங்கோ காப்பியம் மூல நூலாகவும் கலைஞர் நாடகம் அதன் வழித்தட நூலாகவும் எனக்குத் தோன்ற வில்லை,  இந் நாடக நூல் ஒரு மூல நன்னூலாகவே இலங்குகின்றது.  இப் புதுக்கோட்பாட்டை நிறுவுவதற்குச் சான்றுகள் நிரம்பவுள.

நாடக நூலமைப்பு:
இந்நூல் 38 காட்சிகள் கொண்டது. மேடையும் நடிப்பும் நோக்கிக் காட்சிகள் விறுவிறுப்பாக அமைக்கப் பட்டுள்ளன. காட்சி சேரநாட்டுத் தலைநகரான வஞ்சி மூதூரில் தொடங்குகின்றது. அம்மூதூரிலே இறுதியில் முடிகின்றது.
 செங்குட்டுவனில் தொடங்கிச் சேரன் செங்குட்டுவன் வாழ்க என்றும் முடிகின்றது. சிலப்பதிகாரக் காப்பியத்தில் இளங்கோ துறவ இறுதிக் காதை இறுதியில் இடம் பெற்றிருப்ப, இந்நாடகத்தில் அது தொடக்க இடம் பெறுவதையும், செங்குட்டுவன் பிறந்த நாள் விழாவில் துறவுச் செயல் தோன்றுவதையும் காண்கின்றோம்.

கண்ணகியின் உரைசால் புகழுக்குச் செங்குட்டுவன் வடகற்சிலை எடுத்ததைக் காட்டிலும் - இளங்கோ தென்றமிழ்க் காப்பியம் படைத்தது பெருங் காரணம் ஆதலின் ஆசிரியன் சிறப்பினை ‘விழாவும் விளைவும் இளங்கோ துறவு' என இரு காட்சிகளில் கலைஞர் வீறும் பெறப் பேசுகின்றார். 
இளங்கோ, இளங்கோ அடிகளாக மாறி நிற்கிறான்' என்ற தொடராற்றல் கலைஞரின் தமிழாற்றலுக்கு ஒரு சான்று.

காப்பியக் கடைசியில் ஒளிந்திருந்த இளங்கோவை ஒரு பாத்திரம் ஆக்கி நாடக நாயகனாக உயர்த்துவர் கலைஞர். சிலப்பதிகாரம் கண்ணகியின் மண மங்கலத்தில் தொடங்கி இளங்கோ துறவில் முடிந்திருப்ப, கலைஞரின் நாடகச் சிலம்போ இளங்கோ துறவில் தொடங்கிக் கண்ணகியின் கடவுள் மங்கலத்து முடிவதைப் பார்க்கின்றோம். இளங்கோவின் காதைப் பெயர்கள் வேறு.  கலைஞரின் காட்சிப் பெயர்கள் வேறு.  அவர் தலைப்புக்களை இவர் யாதும் பின்பற்றாமையினாலே, கலைஞரின் சிலப்பதிகாரம் மூலத்தன்மையுடையது என்பது வெளிப்படை.

குன்றக் குறவர்கள் கண்ணகி கோவலனொடு வான் வழிச் சென்ற இறும்பூதான செய்தியைச் செங்குட்டுவனிடம் கூறும்போது உடனிருந்தவர்கள் யார் யார் என்று காண்பது சிலப்பதிகாரச் சிக்கல்களுள் ஒன்று.  தண்டமிழ் ஆசான் சாத்தனார், இளங்கோவடிகள் இருவருமே அப்போது இருந்தனர் என்று கொள்வாரும் உண்டு.  இளங்கோ அப்போது இருந்திலர் எனக்கொள்வாரும் உண்டு. இதனைச் சிலப்பதிகார மூலத்தோடும் உரைகளோடும் ஒட்டி ஆராய்ந்த கலைஞர் அதனைச் சிறிது வேறுபட நாடகப் பாங்கில் அமைத்துக் காட்டுவர்.

இளங்கோ மலைக்குறவர்களை எதிர்பாராது வழியிடைக் கண்டார் எனவும், அவர்களையும் அழைத்துக் கொண்டு மலைவளம் காண முன்னரே வந்திருந்த அண்ணன் செங்குட்டுவனையும், அண்ணி வேண்மாளையும், ஆசான் சாத்தனாரையும் சென்று பார்த்தார் எனவும் இந்நால்வர் முன்னிலையில் மலைக்குறவர்கள் தாம் கண்ட கண்ணகி நிகழ்ச்சியைச் சொல்லினர் எனவும் கலைஞர் நூல் தெளிவு செய்யும்.  இதனால் இளங்கோ வேண்மாள் உடனிருந்தருளி' என்ற சிலம்பின் அடிக்குக் கலைஞர் துணிந்த உரைத்தெளிவு புலனாகும்.  சிலம்பின் தோற்றம் எனப்  'பெயரிய ஐந்தாங்காட்சி சிலப்பதிகாரக் காப்பியம் எழுதத் தொடங்கியதைக் குறிக்கின்றது.
இதனால் கலைஞரின்  சிலப்பதிகாரம் இளங்கோவையும் அவரின் சிலப்பதிகாரத்தையும் உள்ளடக்கியது என்பது போதரும்.

* முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
   அடிகள் நீரே அருளுக '
என்ற பதிகத் தொடருக்கு இருபொருள் உரைப்பதை நாம் அறிவோம். எனினும் நாடகக் கலைஞர் நமக்கு ஒரு வழியே காட்டுகின்றார்.
 'முடியுடை மூவேந்தர்க்கும் இக்கதை உரிய தாகையால் இளங்கோவடிகள் இதனை எழுதுவதே பொருத்தமாகும்' என்று சாத்தனார் தெளிவாகச் சொன்னார் எனவும் 'இளங்கோ அதற்கு இலக்கியம் படைப்பான்', 'என்ன தம்பி சரிதானே' என்று செங்குட்டுவன் இளங்கோ பக்கம் திரும்பிக் கேட்டான் எனவும் அண்ணன் சொல்லுக்கு உடன்படுவாராகி 'சரி அண்ணா' என்று இளங்கோ இசைந்தார் எனவும் இந்நாடகப் போக்கு அமைகின்றது.

காப்பியக் கதையும் நாடகக் கதையும்:
இளங்கோவடிகட்கும் கலைஞர்க்கும் தமிழுணர்வில் தமிழ் நாகரிகத்தில் தமிழ் கலைகளில் தமிழகப் பற்றில் தமிழின மேன்மையில் வேறுபாடில்லை எனினும் சமுதாயக் கொள்கை பகுத்தறிவுக் கொள்கை சமயக் கொள்கை என்றின்னவற்றில் அடிப்படையான வேறுபாடு மிக்குள. அடிகள் சிலவற்றில் நம்பிக்கை கொண்டாரோ இல்லையோ, நிமித்தங்களையும், அப்பால் நிகழ்ச்சிகளையும், சமுதாயத்தில் பலர் கொண்ட கொள்கைகளையும், பழக்க வழக்கங்களையும் தம் காப்பியத்துக்குக் கட்டுமானப் பொருள்களாகத் தழுவிக் கொண்டுள்ளார் என்பது மறுக்க இயலா உண்மை.

பெரியார் அண்ணா வழிவந்த கலைஞர் இவ்வகையில் இளங்கோ வழிப் புகார் என்பதும் வெளிப்படையான உண்மை. வேறுபட்ட இவ்வுண்மைகளின் விளைவு என்னாம்?  இளங்கோ மேற்கொண்ட கட்டுமானப் பொருள்கள் கலைஞர் நாடகத்து வெட்டுமானப் பொருள்கள் ஆகிவிடும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டியதே.  மேலும் இவர் ஆளும் கட்டுப் பொருள்கள் புதியனவாக இருக்கும் என்பதனையும் நாம்  எதிர்பார்க்க வேண்டும். இதனால் கதைச் செலவிலும் பாத்திரப் பண்பிலும் பெருமாற்றங்கள் ஆசிரியர்தம் கொள்கைகட்கு ஏற்பப் புகுகின்றன. 

கொள்கை வேறாகும்போது செல்கையும் வேறாகத்தானே இருக்கும்? கலைஞர் தம் நாடக நூலில் மதிக்கு இடமுண்டேயன்றி விதிக்கும் நிமித்தத்துக்கும் இடமில்லை. ' ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்' என்பது சிலப்பதிகாரக் காப்பியத்து ஓர் உயிரான பரவலான கொள்கை. கோவலன் மாதவியைப் பிரியுமிடத்தும், அவன் கண்ணகியொடு மதுரைக்குப் புறப் படுமிடத்தும், கல்லாக் களிமகன் அவனை வெட்டுமிடத்தும் இன்னும் பல இடங்களிலும் ஊழ்வினைப் பேச்சைப் பார்க்கின்றோம்.

ஊழ்வினையைச் சுட்டாத பாத்திரம் இல்லை என்னும் அளவிற்குச் சிலப்பதிகாரம் ஊழதிகாரமாக மாறி நிற்கின்றது. கலைஞர் நாடகத்தில் ஊழ் ஒளிந்த இடம் தெரியவில்லை. இளங்கோவே நிமித்தத்தையும் ஊழையும் தந்தை சேரலாதன் முன் இகழ்வதாகக் கலைஞர் படைத்துக் காட்டுகின்றார், பொய்க்காது படைத்தவர்களுக்கு நிமித்திகர் வாக்குப் பொய்க்காது. இது உண்மைக்காது, அவர் ஆரூடம் கேட்டுக் கலங்காது' எனவும் ‘விதிவிட்ட வழியில் நடப்போமென்று இருந்தால் வேதனைக் களமாகி விடும் தமிழ்நாடு' எனவும் வரும் இளங்கோ பேச்சு உண்மையில் கலைஞரின் பேச்சு.

கீரியைக் கொன்ற மனைவியை விட்டுச் சென்றான் அந்தணக் கணவன்.
 கருமக் கழி பலமாகிய வடமொழி ஏட்டினைப் பெரும் பொருள் கொடுத்து வாங்கிக் கானஞ் சென்ற கணவனைக் கூட்டி வைத்தான் கோவலன் என்று சிலப்பதிகாரம் கூறும். கலைஞரின் கோவலனோ வினைவழிச் செல்லவும் இல்லை, பொருள் கொடுக்கவும் இல்லை, விளக்கஞ் சொல்லி அந்தணனைத் திருத்துகின்றான்.

‘அந்தணரே ! பாம்பு குழந்தையைக் கடிக்குமா கடிக்காதா என்று தெரியாமலே கீரி அதைக் கொன்று விட்டது. அதுபோலவே கீரி குழந்தையைக் கடித்ததா, கடிக்கவில்லையா என்று தெரியாமலே உமது மனைவி அதைக் கொன்றுவிட்டாள். அதனால் சரிக்குச் சரி' ஆகிவிட்டது. உமது மனைவியொடு வீட்டுக்குப் போவதே முறை' என்பது மதி வழிப்பட்ட விளக்கம். கீரிக்கதையை சிலப்பதிகார மதுரைக் காண்டத்தில் மாடலன் கோவலனுக்கு முன் கண்ணகி கேட்கச் சொல்லுகின்றான்;
கோவலன் இப்பிறப்பில் செய்தன வெல்லாம் நல்வினைகளே என்று காட்டுவதற்குச் சொல்லுகின்றான்.

கலைஞரின் நாடகத்தோ எனின் 'கீரி' நிகழ்ச்சி புகார் நகரத்துக் கடற்கரையில் மாதவி கோவலன் அருகிருக்க நடப்பதாகக் காண்கின்றோம், பிரிந்த பார்ப்பனியை அவள் கணவனோடு சேர்த்துவைத்த கோவலனுக்குத் தான் விட்டுப் பிரிந்த கண்ணகியை நினைவூட்ட இக் கீரிக் கதை பயன்படுவதாகவும் காண்கின்றோம்.
அந்தணன் கானம் போனான் என்று இளங்கோ கூற, அவன் கடல் வழிப் போனான் என்று கலைஞர் கூறுவர்.

இந்த ஒரு சிறு கதை யளவில் இரண்டு அதிகாரத்துக்கும் இத்துணைவேறுபாடு இருக்குமெனின், அம்மம்ம, கண்ணகிப் பெருங்கதை யோட்டத்தில் எவ்வளவு எவ்வளவோ மாற்றம் இருக்கத் தானே செய்யும்? ஆதலின் விதிவழிச் சிலம்பும் மதிவழிச் சிலம்பும் தனிமூலங்கள் என்று கொள்வதே தெளிந்த, ஆராய்ச்சி நெறியாகும்.

இளங்கோவின் சிலப்பதிகாரக்கதை மிகச் சுருக்கமானது; பாத்திரங்களின் பேச்சும் சுருக்கமானது.  
முதற் காதையில் கண்ணகி கோவலன் மணவினை, 
இரண்டாம் காதையில் அவ்விருவர்தம் இன்ப இல்லறவுறவு, 
மூன்றாம் காதையில் 16 அடிகளில் மாதவி கோவலன் உறவு. 
புகார்க் காண்டம் 1500 அடிகள் கொண்டிருந்தாலும் கதையும் பேச்சும் எல்லாம் 200 அடியளவில் சுருக்கமாக முடிந்து விடுகின்றன.
காப்பியச் சிலம்பு படைத்த இளங்கோவிற்கு வருணனை நாட்டமேயன்றிக் கதை நாட்டம் குறைவு. 

நாடகச் சிலம்பு எழுதிய கலைஞர்க்குக் கதை நாட்டமும், பாத்திரங்களின் உரைநாட்டமும் மிகுதி. 
அது காப்பிய இயல்பு;  இது நாடக இயல்பு.
கலைஞர் சிலம்பில் கண்ணகி கோவலன் திருமணம் இடம் பெறவில்லை. வணிகத்தின் பொருட்டுக் கிரேக்க உரோமநாடு சென்று திரும்பிய கோவலனைக் கண்ணகி கடற்கரையில் வரவேற்கின்றாள்.
 அலைகள் தழுவ இருவரும் தழுவி மகிழ்ப. கோவலனொடு ஒரு பெருஞ் செல்வன் 68 வயதுக் கிரேக்கக் கிழவனும் வருகிறான். அவன் கோவலனிடம் முத்தமிழில் இயலும் இசையும் கற்றவன். 
கூத்து மட்டும் தெரியாதவன்.  மாதவி நடனம் காணக் கோவலன், கண்ணகி, கிழவன் மூவரும் செல்கின்றனர்.  சோழவரசன் மாதவிக்குப் பரிசாக வழங்கிய 1008 கழஞ்சுப் பொன் மாலையை வாங்குகிறவன் மாதவிக்குக் காதலன் ஆகலாம் என்று கூனி அரசவையில் அறிவிக்கின்றாள்.

செம்மொழிச் சிகரத்தின் சாரலில் தொடர்ந்து நனைவோம் ....

---

தேமொழி

unread,
Aug 7, 2021, 3:51:16 AM8/7/21
to மின்தமிழ்
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம்! - பகுதி 10

"பகுத்தறிவு பரப்பும் பாங்கு!"

- ஒளவை நடராசன், மேனாள் துணைவேந்தர்
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் 


காலத்திற்கேற்பக் கருத்துகள் மாறும். மக்கள் சிந்தனையும் மாற்றங்களை வரவேற்கும். எடுத்துச் சொல்வோரின் எழுச்சியும் - புதுமையும் பெருவெற்றி பெறும். தடையாக நின்ற நெடுங்குன்றங்கள் கால ஓட்டத்தில் தவிடு பொடியாகும். உலகில் எங்கும் வரலாறு இப்படித்தான் வடிவம் பெறுகிறது.  பழையன கழித்தலும் - புதியன புகுத்தலும் என்று தொடரைச் சிறிது மாற்றலாம். மாற்றம் என்பது தான் என்றும் மாறாது என்ற மார்க்சீயத் தொடர் நாடறிந்தது. தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா ! என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

முத்தமிழறிஞர் கலைஞரின் எழுத்தோவியங்கள் அனைத்தும் கால மாற்றத்தையும் - கருத்துப் புதுமையும் எடுத்து மொழிந்தன. அந்த வகையில் பூம்புகார் நாடகப் புதுமைகள் மாபெரும் தமிழுணர்வை எழுப்பின. மூதறிஞர் வ சுப மாணிக்கம் இந்தப் புதுமைகளைக் கண்டு வியந்து நயந்து போற்றிய திறனாய்வைத்தான் நேற்றும் இன்றும் நாம் கட்டுரையாகக் கண்டுணர்கிறோம்.

கலைப்புதுமை ,அரசியற்புதுமை,மக்களின் பொதுமை, பொங்கும் உணர்ச்சி வெள்ளம், இனவெழுச்சியாய்த்  துள்ளும் உள்ளம் பூம்புகார் நாடகத்தில் அருவிப்பெருக்காக அமைகின்றன. சிலப்பதிகாரக் கதைக் கோப்பு நீண்டது. அரசர், ஆயர், வேட்டுவர், வணிகர்,  புலவர், துறவர், பார்ப்பார், உழவர், அலுவலர், சமயர், கொல்லர், படைஞர், அயலவர், தூதுவர் எனப்பல்வேறு நிலையினர் இடம் பெற்றுள்ளனர். கிரேக்கக் கிழவனை இடம்பெறச் செய்து யவன வணிகப் பெருமையையும் காட்டிய திறமை கலைஞருக்கே வாய்த்த கருத்து வளமாகும்.    

கிழவக் கிரேக்கன் அத்தொகையைக் கொடுக்க முன் வரவே, மாதவி திடுக்கிடுகின்றாள்.  வசந்தமாலை கிழவனுக்குக் கொடுக்க இசையவில்லை. சித்திராபதி கிழவன் பக்கம்.  சொன்னபடி மாலைக்குப் பணங்கொடுக்கிறேன்;  சொன்ன சொல்லைக் காப்பாற்றுங்கள் என்று கிழவன் துடிதுடிக்கின்றான். இப்போராட்டத்தில் அங்கிருந்த கண்ணகி 'ஐயோ பாவம் மாதவி... அத்தான், நீங்கள் தான் போய் அவளைக் காப்பாற்றுங்களேன்' என்று கோவலனை ஏவுகின்றாள்.

கிழவனை இளங்கிளி மணப்பது தமிழ்நாட்டுப் பண்பு அன்று என்ற தமிழ் நாகரிகத்தை நிலைநாட்டு வதற்காகவே கோவலன் உரியபொன் கொடுத்து மாதவியின் மாலையை வாங்கிக் கொண்டு கண்ணகியொடு தன் வீடு செல்கின்றான்.  மாதவி தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்று வசந்தமாலையைக் கோவலனிடம் தூதாக அனுப்ப, அவன் வரமுடியாது என்று மறுக்க, அந்நிலையில், கண்ணகி கோவலனிடம் 'நீங்களே மாதவியிடம் நேரிற் சென்று நிலையை விளக்கிச் சொல்லுங்கள்,  அவள் மனத்துக்கு ஓர் அமைதி ஏற்படும்' என்று போகச் செய்கின்றாள்.  மாதவி இல்லம் சென்ற கோவலன் அங்கேயே இருந்த கோவலன் ஆனான்.   'என் அக்காளாகிய கண்ணகி வாடிக் கொண்டிருப்பாள். எத்தனை முறை சொல்லுகிறேன், போய்ப் பார்த்து வாருங்கள்' என்று மாதவி கட்டாயப்படுத்தக் கோவலன் ஒவ்வொருகால் வேண்டா வெறுப்பாகக் கண்ணகியைப் பார்க்க வருவான்.

இளங்கோ இவ்வாறு கதை கூறவில்லை - என்பது வெளிப்படை. கிழவன் என்ற ஒரு பாத்திரமோ, கண்ணகியும் மாதவி நடனம் பார்த்தலோ, மாதவி வீட்டுக்குக் கண்ணகியே கோவலனைப் போகச் சொல்லுதலோ இல்லவே இல்லை. எனினும் கலைஞர் இவ்வாறு அறவே கதை மாற்றம் செய்வதன் நோக்கம் யாது?  நாட்டில் நிகழும் கிழவன் மணத்தைத் தடுக்க வேண்டும் என்ற சீர்திருத்தக் கொள்கையுடையவர் கலைஞர்.  அதற்குக் கிரேக்கப் பாத்திரம் வாய்ப்பாயிற்று. 

கோவலனை நல்ல வணிகனாக, நல்ல அறிஞனாக, நல்ல முயற்சியாளனாக இளங்கோ படைக்கவில்லை. கண்ட இளம் பெண்கள் ஆசைப்படும் அழகனாகவும், அவனும் அப்பெண்களைக் காமுற்றுத் திரியும் ஊர்க் காமுகனாகவும், சிலம்பைக்கூட விற்க அறியா வணிகப் பேதையாகவும், எந்நிகழ்ச்சியிலும் தக்க மறு மொழி கூறமாட்டா வாய்மூடியாகவும் இளங்கோ சிலம்பில் கோவலன் இருக்கின்றான்.

இப்படைப்பு கலைஞருக்குப் பொருத்தமாகப் பட்டிலது. கண்ணகியின் கணவன் என்ற பார்வையில் கோவலனை ஆற்றல் படைத்த வனாகக் காட்டுகின்றார்.  மாதவியைக் கோவலன் விழைய வில்லை.  ஒவ்வா மணத்தைத் தடுக்கவே, அதுவும் கண்ணகி சொல்ல மாதவியின் மாலையை வாங்கினான்.  மீண்டும் அவள் சொல்ல மாதவி வீடு சென்றான். முடிவில் மாதவி இறந்தால் நாட்டியக்கலை தமிழகத்தில் இறந்து ஒழியும் என்ற உணர்ச்சியால் அவளை அணைத்தான். கலைஞர் நாடகத்தில் கோவலன் தொடக்க முதலே குற்றமற்றவன் என்று காண்கின்றோம்.

அதுபோல் இளங்கோ வடித்த கண்ணகியும் கலைஞர் படைக்கும் கண்ணகியும் வேறு.  மண் மகள் அறியா வண்ணச் சீறடியளாக, கலையறியாப் பேதையாக, யாதும், அறியா ஏழையாகக் காப்பியக் கண்ணகி இருக்கின்றாள்.  நாடகக் கண்ணகியோ, கோவலனை எதிர்பார்த்துக் கடலலையில் குதித்து விளையாடுவதையும், மாதவி நடனம் பார்க்கச் செல்வதையும், கோவலனுக்கு அறிவுரை கூறுவதையும், ஊடலாடி உரையாடல் நிகழ்த்துவதையும் அமைதிப் பெண்ணாக இன்றி இருபதாம் நூற்றாண்டுப் பாரதியின் புதுமைப் பெண்ணாக இலங்கு வதையும் காண்கின்றோம்.

கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும் காவலன் உள்ளம் கவர்ந்தன என்றுதன் ஊடல் உள்ளம் உள்கரந் தொளித்துத் தலைநோய் வருத்தம் தன்மே லிட்டுக் குலமுதல் தேவி கூடாது ஏக ' என்ற சிலப்பதிகாரத்தில் பாண்டியன் தேவி அரசவையில் ஊ டிக்கொண்டு போனாள் என்று அறிகின்றோம்.  இது நாகரிகமாகப் படவில்லை. பொற்கொல்லன் தேவியின் சிலம்பை எவ்வாறு எவ்விடத்துத் திருடினான் என்று இக்காப்பியத்துக் குறிப்பில்லை.

மேலும் ஒரு பொற்கொல்லன் திருடினான் என்பதற்காக அவ்வினத்தில் ஆயிரம் பொற்கொல்லரைக் கொன்று களவேள்வி செய்ததும் அரசுமுறையாகச் செங்கோலாகத் தோன்ற வில்லை.  தமிழ்ச் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையை ஆளும் பாண்டியன் தமிழ்ப்புலமையுடைய வனாகக் காட்டப்படவில்லை.

இவற்றையெல்லாம் உள்ளிப் பார்த்தார் கலைஞர்.  பாண்டிமாதேவியின் ஒரு சிலம்பு பழுதுபட்டது எனவும், அதனைப் பொற்கொல்லனிடம் செம்மை செய்யக் கொண்டுசென்ற அதிகாரியே திருடினான் எனவும், சிலம்பு செப்பனிட்டு உடனே வாராமையால் தேவி ஊடல் கொண்டு அரசவை வர மறுத்தாள் எனவும் பாண்டியன் நெடுஞ்செழியன் சிலம் பையும் மனைவியின் ஊடலையும் பொருட்படுத்தாது கல்வியின் பெருமை காட்ட 'உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும்' என்ற தமிழ்க் கவிதையை ஓலையில் எழுதிக் கொண்டிருந்தான் எனவும் கலைஞர் கதையோட்டத்தை முற்றும் மாற்றியமைப்பர்,  மாற்றியமைத்துப் பொற்கொல்லினத்தை வழிவழி வந்த பழியினின்று காத்துப் போற்றினார்.

மனைவியின் ஊடலாயினும் அது வீட்டளவில் இருக்க வேண்டுமேயன்றி நாட்டவையில் தோன்றக் கூடாது என்று அடக்கம் காட்டினார்.  புற நானூற்றில் நெடுஞ்செழியன் பாடியிருந்த ஒரே ஒரு செய்யுளை நினைவுகொண்டு வாய்ப்பாகப் பயன்படுத்தித் தன் மனைவி ஊடலிலும் தமிழ்ப்பாடல் இனிது என மொழிப் பற்று ஊட்டினார்.
 செவிக்குத் தேனென இராகவன் புகழைத் திருத்திய கவிக்கு நாயகன்' என்ற கம்பர் பாராட்டு நம் முதலமைச்சர் கலைஞர்க்கும் பொருந்துவதாகும்.

பகுத்தறிவுக் கதை இரு நூலிலும் மதுரை எரிபடுகின்றது. சிலம்புக் காப்பியத்தில் நெருப்புவானவன் தோன்றி மதுரையைக் கொளுத்துகின்றான். சிலம்பு நாடகத்தில் கணவன் கொலைப்பட்டான் என்பது கேட்டுக் கண்ணகி மயங்கி ஓடும்போது குத்து விளக்குச் சாய்கிறது.  குடிசை எரிகிறது.  பெருங் குழப்பத்தில் அணைப்பவரின்றித் தீ பரவுகின்றது. சிலம்புக் காப்பியத்தில் தேவர்கள் கோவலனொடு சேரநாடு வந்து கண்ணகியை வானவூர்தியில் வானுலகு அழைத்துச் செல்கின்றனர்.

சிலம்பு நாடகமோ கணவன் வருவான் வருவான் என்று கண்கலங்கி வேங்கை மர நிழலில் கண்ணகி பலநாள் நின்று கொண்டிருந்தாள்; திடீரென ஒருநாள் அவளைக் காணவில்லை என்று நிறுத்துகின்றது. சிலம்புக் காப்பியம் கண்ணகி கோயிலுள் வழிபடு தெய்வமாகவும் பார்ப்பனத் தேவந்தி பெண் பூசாரி யாகவும் முடிக்கின்றது.  சிலம்பு நாடகம் கற்புக் கண்ணகிக்குச் சிலைக்கல் இமயத்திலிருந்து கனகவிசயர் தலை மேல் தூக்கிவைத்துக் கொணர்ந்த மன்னனை வீரர்கள் "சேரன் செங்குட்டுவன் வாழ்க' என்று வாழ்த்துவதோடு முடிகின்றது.

கண்ணகியின் எதிர்காலம் குறிக்கும் சாலினியும், பாண்டியன் பழம் பெருமை புகலும் மதுரைத் தெய்வமும், கோவலன் முன்னோனைக் கடலினின்று காப்பாற்றிய மணிமேகலைத் தெய்வக் கதையும், செங்குட்டுவன் வானத்துச் சிலம்புக் காட்சியும், கோவலன் பழவினைக் கதையும் இன்னபிற அப்பால் நிகழ்ச்சிகளும் கலைஞர் தம் நாடகச் சிலம்பில் கடுகளவும் புக இடங் கொடுக்கவில்லை. அவர் தம் பகுத்தறிவுக் கோட்பாடே இதற்கெல்லாம் காரணமாம்.

அப்பால் நிகழ்ச்சிகளை ஒழித்து, தமிழ், தமிழ்ச்சால்பு, தமிழிலக்கியம், தமிழ்க்கலை. தமிழர் மானம், தமிழின் ஒற்றுமை, தமிழகப் பெருமை என்ற தமிழ்மைக்கு எல்லா இடத்தும் முதன்மை கொடுத்துப் பற்றினைத் தூண்டியுள்ளார் என்பதனை நான் அழுத்தமாகச் சொல்ல விரும்புகின்றேன். தமிழ் மயம். 'துறவு பூண்டாலும், இன்பத் தமிழகத்தை விட்டு எங்கும் போய்விடமாட்டேன் என்று இளங்கோ நாட்டுப் பற்றுக் காட்டுகின்றார். 'வாழ்க செந்தமிழர் தாயகம்' என்று முரசு முழங்குகின்றது. 

தமிழ் கற்றுத் தமிழிலே எல்லாரோடும் பேசுகின்றான் கிரேக்கக் கிழவன், 'பழத்துக்குள் இருக்கின்ற சுளை போலச் சுவையேறும் செந்தமிழே' என்று அமுதுற மொழிகின்றான் கோவலன். 'எல்லாம் தமிழ்மறை தந்த பழக்கம்' என அந்தணன் அறிந்து கொள்கின்றான்.  'தமிழரல்லவா தேவந்தி' என்று கண்ணகி தமிழின மறத்தைப் பாராட்டுகின்றாள், 
'குழலையும் யாழையும் வெல்லுகின்ற குறளையும் வெல்லும் உன் குறுஞ் சிரிப்பு' என்று குழந்தை மணிமேகலை சீராட்டப்  பெறுகின்றாள். 'மானம் காக்கும் தமிழச்சி நீ மனம் தளரலாமா' என்று தேவந்தி ஆறுதல் கூறுகின்றாள். 

'தாய்மேல் ஆணையாக - தமிழ்மேல் ஆணையாக-தாயகத்து மக்கள் மேல் ஆணையாகத் தீர்ப்புக் கூறுவீர்' என்று துடிக்கின்றாள் கண்ணகி.  'என் தமிழையல்லவா இகழ்ந்தார்கள்; முரசு தட்டுங்கள்; இமயத்தை முட்டுங்கள்; தமிழன்தோற்ற தில்லை' என்று முழங்குகின்றான் செங்குட்டுவன். கலைஞர் கன்னித்தமிழ்க் கொள்கையர் ஆதலின், தமிழ்ப்பரப்பு இன்று கொள்ள வேண்டிய கோட்பாடு ஆதலின், இளங்கோ சிலம்பில் இல்லாத தமிழாட்சி கலைஞர் நாடக நூலில் வீற்றிருக்கக் காண்கின்றோம்.

புதிய சிலப்பதிகாரம்:
இளங்கோவின் சிலப்பதிகாரத்து வழி வந்தது தன் சிலப்பதிகாரம் என்று கலைஞர் ஒப்பியிருந்தாலும், கதை மாற்றத்தாலும், பாத்திரப் பண்பாலும், ஊழுக்கு இடங் கொடாமையாலும், தெய்வக்கூறு இன்மையாலும், பகுத்தறிவு நோக்காலும், சீர்திருத்தப் பாங்காலும் தமிழ்க்குறிக்கோளாலும் கலைஞர் சிலப்பதிகாரம் இருபதாம் நூற்றாண்டில் நல்லுரை நடையில் எழுந்த தனிமூலத் தன்மை வாய்ந்த புதுச்சிலப்பதிகாரமே என்பது என் துணிபு.

இளங்கோ சிலப்பதிகாரம், கலைஞர் சிலப்பதிகாரம், பாவேந்தர் பாரதிதாசன் கண்ணகி புரட்சிக் காப்பியம் என்ற மூன்றையும் ஒப்பீட்டுப் பொருளாக மேற்கொண்டு ஓர் ஆய்வாளன் திறன் தெரிந்தால் படைப்பிலக்கியங்கள் காலக்கண்ணோட்டத்தில் எத்தகைய மாற்றுருப்பெறுகின்றன என்று படைப்புக் கோட்பாடுகளை நெறிப்படுத்த முடியும். ஆசிரியனுடைய சமய, இன, அரசியற் கொள்கை வேறுபாடுகளால் பழங்கதைகள் எவ்வாறெல்லாம் புத்தம் புது வடிவெடுக்கின்றன என்ற அடிப்படைகளை வெளிப்படுத்த முடியும். இளங்கோவிற்கும் கலைஞர்க்கும் கொள்கை வேற்றுமைகள் பலப்பல. அதனால் இருவர்தம் சிலப்பதிகாரம் மேலே காட்டியபடி வேறு படுதல் இயல்பே. கலைஞர்க்கும் பாவேந்தர்க்குமோ கொள்கை ஒற்றுமைகளே பல.

அப்படியிருந்தும் இருவர் படைப்புக்களிலும் நுனித்தகு வேற்றுமைகள் உள. இவையெல்லாம் எதிர்கால ஆய்ஞருக்குத் தக்க புலமை விருந்துகள், நுழைபுலத்தார்க்குத் தக்க ஆய்வுக்களங்கள். கலைஞரின் சிலப்பதிகாரம் இன்னும் ஓரிரு புதிய சிலப்பதிகாரங்களுக்கு அடிகோலினாலும் அது வியப்புக்கு உரியதில்லை. கண்ணகி கற்பும் சிலம்பொலியும் தமிழாற்றலும் எத்துணை இலக்கியப் படைப்புக்கும் விரிந்து இடங்கொடுக்க வல்லது அல்லவா?

'பழைய இதிகாசங்களைக் காட்டி விதியை நிலை நிறுத்த எண்ணாதீர்! இதோ நான் படைக்கின்றேன் புதிய இதிகாசம்' என்பது கலைஞர் படைத்த சிலப்பதிகாரத்தில் இளங்கோ கூறும் வாய்மொழி, பாத்திரம் புலவனின் படைப்பு அவன் எண்ணப்படி பாத்திரம் நினைக்கும், சொல்லும், செய்யும்.   கலைஞரின் நாடகத்தில் இளங்கோவும் ஒரு பாத்திரம் ஆகிவிட்டார்.  பாத்திர இளங்கோ கலைஞரின் சிந்தனைகளை வெளியிடுகின்றார் தன் கருத்துச் சொல்லியாக யாரையும் பாத்திரப்படுத்துவது தானே அன்று முதல் இன்று வரை புலவனுக்கு உள்ள தனியுரிமை. இவ்வுரிமை கலைஞர்க்கு மட்டும் விலக்காகுமா ?
Reply all
Reply to author
Forward
0 new messages