
"ஐரோப்பியத் தமிழ் ஆவணங்களை உலக மயமாக்கலின் தேவை" என்ற தலைப்பில், ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் நேற்று முனைவர் க. சுபாஷினி ஆற்றிய உரையே ஓர் ஆவணத் தெளிவாக அமைந்து போனது. இதுநாள்வரை பரவலாகப் பேசப்படாத தமிழ் ஆவணங்களைப் பற்றி அவர் நிறையப் பேசினார். நூறாண்டு கால ஆவணங்களைக் கூட பாதுகாத்து வைக்கும் பழக்கமும், அறிவுத் தெளிவுமில்லாத தமிழ் மக்களிடம் இருந்து கேட்டுப் பெற்றும், பணம் கொடுத்து வாங்கியும் எடுத்துச் சென்ற ஆவணங்களை 500 ஆண்டுகளாக, ஐரோப்பியர்கள், அறிவியல் முறைப்படிப் பாதுகாத்து வரும் தன்மையை அவர் மிகவும் சிலாகித்துக் கூறினார். அதற்காகப் பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று ஆய்வு நூலகங்கள், அருங்காட்சியகங்கள், ஆவணக் காப்பகங்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டு, அங்கே எடுக்கப்பட்ட படங்களுடன் அவர் விளக்கிக் கூறினார்.
தமிழ் ஆவணங்களைப் பாதுகாப்பதில் ஜெர்மனி, பெல்ஜியம், இங்கிலாந்து, டென்மார்க், பிரான்சு ஆகிய நாடுகள் அதிக அக்கறை காட்டி வருவதையும், ஓலைச்சுவடிகள், ஓவியங்கள், நாட்குறிப்புகள், அறிக்கைகள், இதழ்கள், செப்பேடுகள், உரையாடல்கள், கல்வெட்டுகள் ஆகிய தமிழ் ஆவணங்கள் மிகுந்த பாதுகாப்போடு, அறிவியல் சூழலில் பாதுகாக்கப்பட்டு வருவதையும் அவர் பட விளக்கங்களுடன் எடுத்துக் கூறினார். மக்களின் இயல்பு வாழ்க்கையைக் காட்சிப்படுத்தும் அன்றைய கல்வி நிலை, உணவு, உடை, பழக்க வழக்கங்கள், உழைப்பு, வேலை, பண்பாட்டைப் பறைசாற்றும் ஓவியங்கள், பிற காகித ஆவணங்கள், இலங்கை, சிங்கை, பினாங்கு, மலேசியா போன்ற நாடுகளில் வெளிவந்த தமிழ்ப் பத்திரிகைகள், லைடன், வேள்விக்குடி செப்பேடுகள், டென்மார்க்கில் அதிகமாகச் சேமித்து வைக்கப்பட்டுள்ள நாட்குறிப்புகள், அரிய பழமையான நூல்கள், அகராதிகளாகத் தொகுக்கப்பட்டவைகள் என்று பிரமிக்கத்தக்க வகையில் அவரது ஆவணச் சேமிப்புச் செய்திகள் இருந்ததைக் காண முடிந்தது. அவை குறித்து அவர் தந்த செறிவான விளக்கங்கள் அவற்றின் மீது உள்ள அவரது ஈடுபாட்டை எடுத்துக்காட்டி நம்மைப் பெருமூச்சடைய வைத்தன.
குறிப்பாக அன்றையக் காலத்து வரைபடங்கள் இதுவரை சொல்லாத செய்திகளைச் சொல்லின. முதன்முதலாக ஐரோப்பியர்கள் கப்பலில் வந்த போது அந்நாட்களில் அவர்களின் பட்டறிவுப்படி சதுரமாக, செவ்வகமாக வரைந்த வரை படங்கள், பின்னர் அறிவியல் அளவு முறைகளின் படி வரைந்த வரைபடங்கள் இவையெல்லாம் வரலாற்றில் ஒவ்வொரு படிநிலைகளையும் எடுத்துக்காட்டி, வரலாறின் வளர்ச்சியை அறியத் தந்தன. இதுவரையில் இப்படிப்பட்ட ஆவணங்களின் மீது ஏன் கவனம் செலுத்தவில்லை என்ற எண்ணமும், அதைத் தொடர்ந்து உள்ளம் கூம்பிய நாணமும் ஏற்பட்டது என்பதையும் சொல்லியே ஆகவேண்டும். இவ்வுணர்வு அங்கிருந்த அனைவருக்கும் ஏற்பட்டது என்பதைப் பார்வையாளர்களின் கருத்துகளும், ஆதங்கங்களும் வெளிப்படுத்தின.
இவையெல்லாம் பொதுமக்கள் எண்ணமாக இருந்தாலும், இங்கு இருக்கின்ற பல்கலைக்கழகங்கள். கல்விக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள், ஆய்வு நூலகங்கள், ஆவணக்காட்சியகங்கள், அருங்காட்சியகங்கள், அரசாங்கங்கள் இதுநாள் வரை என்ன செய்து கொண்டிருந்தன; செய்து கொண்டிருக்கின்றன என்பதும் பார்வையாளர்களின் ஆதங்கமாக அமைந்தது. மொத்தத்தில் ஓர் அரிய ஆவண உரையாக சுபாஷினியின் ஆய்வுரை அமைந்து விழிப்புணர்வைப் பெற வைத்தது. இது பற்றி அனைவரும் நிறைய எழுத வேண்டும்; பேச வேண்டும். அத்தோடு நில்லாமல் வாய்ப்புள்ளவர்கள் அயல் நாடு சென்று, ஆவணங்களைக் கண்டு, அது பற்றிய ஆய்வுகளில் ஈடுபட வேண்டும் என்ற அவரது அன்பான அறிவுரைக்கு நாம் தலை சாயத்தே தீர வேண்டும்.
முனைவர் சிவ. இளங்கோ, புதுச்சேரி.