வினையால் வினையாக்கி கோடல்!
.........................................
ஒரு செயலைச் செய்கிறபோது அந்தச் செயலை நிறைவேற்றும்போதே அத்துடன் மற்றொரு செயலையும் நிறைவேற்றிக்கொள்ளவேண்டும் என்று "வினைசெயல் வகையாக" வள்ளுவம் வழிகாட்டுகிறது. இதற்கு ஒப்பாக மதநீர் வழிகிற ஒரு யானையைக்கொண்டு பிறிதொரு வலிய யானையப் பிணைப்பதை எடுத்துக்காட்டுக் காட்டுகிறார்.
"வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று" (678)
அருமைப்பாடு உள்ள செயல் என்பதற்காகக் கட்டுக்கடங்காத மதம் பிடித்த யானை என்று கூறுகிறார். கட்டுக்கடங்காது பாய்ந்து வருகிற நதியின் குறுக்கே பெரிய வலிய அணையைக் கட்டி நதியைத் தேக்கித் தக்க சமயத்தில் பயன்படுத்துவது மட்டுல்லாமல் மின்சாரம் தயாரித்தலுக்கும் பயன்படுத்திக் கொள்வதை எடுத்துக்காட்டாக எண்ணிப் பார்க்கலாம். மேட்டூர் அணை, பக்ரா நங்கல் அணைத் திட்டம் போன்ற பல்நோக்குத் திட்டங்கள் வினையால் வினையாக்கலே!
இன்சூரன்சு மாணவன் என்ற வகையில் நான் ஆயுள்க் காப்பீட்டின் அடிப்படைக் கொள்கையைக் குறளின் செய்தியோடு பொருத்திப் பார்ப்பதுண்டு! ஒருவனுடைய இறப்பின்போது அவன் ஈட்டுகிற வருவாய் நின்றுவிடுகிறது. தன் வருவாயை நம்பி வாழும் குடும்பத்தின் தொடரும் வாழ்வுக்கு ஒரு தொகையை விட்டுச் செல்ல வேண்டும் என்பது தார்மீகக் கடமை! ஆனால் அவனிடம் அப்பொழுது இருக்கும் தொகையோ சிறிது.
எனவே இறப்புக்கு ஆளாகக் கூடிய மிகப்பலரும் இணைக்கபட்டு அவர்களிடமிருந்து சிறு தொகை (பிரிமியம்) வயதிற்கு ஏற்பப் பெறப்பட்டு அத்தொகை பெருந் தொகையாகிறது. அந்தத் தொகையிலிருந்து (Life fund) அவர்களில் யாருக்கு இறப்பு ஏற்படுகிறதோ அவருக்கு இறப்பு உரிமம் வழங்கப்படுகிறது. அனைவரும் ஒரே நேரத்தில் இறப்பதில்லை என்பதே இறப்பின் Mortality நிதர்சனம்!
இது காப்பீடு (Risk coverage) என்கிற ஒரு வினையின் செயல் கூறு. இதனுடன் மற்றொரு மனிதனின் தேவையான சேமிப்பு (Savings Element) சேர்க்கப்பட்டு அதற்கான பிரிமியத் தொகை (வங்கியின் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் போன்று) சேர்க்கப்பட்டு காப்பீடும் சேமிப்பும் (Risk + Savings) சேர்ந்த பல பத்து ஆயுள்காப்பீட்டுத் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. மனிதனின் ஆயுள் சார்ந்த இரண்டு தேவைகளான இளமையில் இறப்புக்கும் நீண்ட நாள் வாழ்ந்து வருமானம் ஈட்டும் திறனிழப்புக்கும் காப்பீட்டுத் திட்டம் மாற்றாக உதவுகிறது! இது ஒருசெயல் புரிகிறபோது மற்றொரு தேவையைப் பூர்த்திசெய்துகொள்கிற
'வினையால் வினையாக்கிக் கோடல்' அன்றோ!
நல்வாழ்த்து
சொ.வினைதீர்த்தான்