மரத்தடியில் முக்கனிகளும் அமர்ந்திருந்தனர்.
மா, பலா, வாழை.
வாழையிடம் ஒரு வாட்டம். மேலும் மாங்கனியைப் பார்த்த பார்வயில்
நேசமில்லை. பலா அதனைக் கவனித்துவிட்டது.
“என்ன வாழையம்மா, வாடிப்போயிருக்கீங்க ?மனதிலே ஏதோ ஒண்ணு
உங்களை உருத்திக்கிட்டு இருக்கு. வெளி வந்துடட்டும். பாரம் போய்டும்”
என்று சாமர்த்தியமாக விசாரித்தது பலாக்கனி..
“நன்றி கெட்ட ஜனங்கள். காலம் பூராவும் அவங்களுக்குக் கிடைக்கற
மாதிரி இருக்கேன். குறைச்ச காசுக்குக் கிடைக்கும். பழங்கள் வரிசை
போடறப்போ என் பேரையில்லே முதல்லே போட்டிருக்கணும்.
நீங்க ரெண்டு பேரும் சீசன் பழங்க. மாம்பழத்துப் பேரை முதல்லே
போடலாமா ?” கேள்வியை ஆத்திரத்துடன் கேட்டது வாழை.
மாங்கனி சிவந்து விட்டது.
“முதல்லே பேரைப் போட்டுட்டு மொத்து மொத்துனு அடிக்கறாங்களே
அது கண்ணுக்குத் தெரியல்லியா?” என்று வருத்ததுடன் கேட்டது மாங்கனி.
பலாக்கனிக்கு சுவாரஸ்யம் வந்துவிட்டது.
“ஆஹா, இன்னிக்குப் பொழுது போகும். கதை கிடைச்சிருச்சு. “என்று
மனத்திற்குள் நினைத்தது. . அதன் தோற்றத்திற்கேற்ற புத்தி. உள்ளும்
புறமும் வித்தியாசம்..
“அதென்ன மாங்கணி, உன்னை யாரு மொத்தறாங்க” என்று கனிவான
குரலில் கேட்டது பலா.
வாழைக்கனி மவுனமாக நாடகத்தைப் பார்க்க ஆரம்பித்தது.
மாம்பழத்தின் கதை
நாரதர் ஒரு மாம்பழத்தைக் கைலாயத்திற்கு எடுத்துச் சென்றது அவர்
தவறு.மகேசனே ஆனாலும் மனைவி மக்களை விட்டுச் சாப்பிடுவாரா ?
குழப்பத்தை உண்டு பண்ணவே ஒற்றைக் கனியைச் சிவனிடம் கொடுத்தார்..வந்து
தொலைந்தது பரிசோதனை.
உலகைச் சுற்றி முதலில் வரும் பிள்ளைக்கு மாங்கனி.
இது குசும்புதானே. உடனே சுட்டிப் பிள்ளை முருகன் மயிலில்
பறந்துவிட்டான். பாவம் விநாயகர். பார்த்தார். அப்பா, அம்மாவைச்
சுற்றினால் யோசனை சொல்லுவார்கள் என்று நினைத்து ஒரு வலம் வந்தார்.
அவ்வளவுதான். அவரை உற்சாகப் படுத்த எல்லோரும் கை
தட்டினார்கள். பிள்ளையார் மேல் இரக்கங் கொண்டு, அப்பா அம்மாவைச்
சுற்றினால் உலகம் சுற்றியதற்குச் சமம் என்று சொல்லி விட்டார் ஒருவர்.
பிள்ளையார்குட்டியும் உடனே அதையே சொல்லிவிட்டது. குழந்தைகள்
சில நேரம் கிளிப் பிள்ளைகள் மாதிரி சொன்னதைத் திருப்பிச்
சொல்லுவார்கள்..மாம்பழம் அவர் கைக்கு வரவும் அப்பாவியாய்த்
திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தார்.
பொடிப்பைய்யன் வந்துவிட்டான். பார்த்தான். எல்லோரும்
ஏமாற்றிவிட்டதை உணர்ந்தான்/ காரமான பொடியன்.
அவ்வளவுதான்.ஆடைகளைத் தூர எறிந்தான். ஆபரணங்களையும்
வீசி எறிந்தான். கட்டிய கோவணத்துடன் பழனி மலைக்குப்
பறந்து விட்டான்.(அக்காலத்தில் ஜட்டி கிடையாது. அதுதான்
கோவணத்துடன் பறந்தான். கோவணத்தாண்டி என்ற பட்டம்.
ஜட்டி போட்டிருந்தால் ஜட்டி ஆண்டி என்று பெயர் வந்திருக்கும்)
இத்தனைக்கும் நாரதர்தான் மூலகாரணம். மாம்பழம் வாங்கினா
ஆண்டியாய் விடுவான்னு கேலி பேசினா வருத்தம் வராதா
மாம்பழத்துக்குச் சிவன் மேலும் கோபம் அவர் இன்னொரு இடத்திலும்
விளையாடியதால்தான் கேலி நிலைத்து விட்டது.
நம்ம சாலமன் பாப்பைய்யா பட்டி, மன்றத்தில் ராஜா கேலி
பண்ண ஆரம்பிச்சுடுவார்னு கவலை வேறு.
பலாக்கனி கேட்டுக் கொண்டதால் இன்னொரு கதையயும்
மாங்கனி சொல்லிற்று.
காரைக்காலில் புனிதவதின்னு என்று ஒரு அம்மா. நல்லவங்க. பசின்னு யார்
வந்தாலும் சோறு கொடுப்பாங்க. அவங்க புருஷன் ஒரு வியாபாரி.
அடிக்கடி வெளியூர் போய்டுவான். ஒருதபா ரெண்டு மாம்பழம் வாங்கிக்
கிட்டு வந்து பொண்ஜாதியிடம் கொடுத்தான்.
கைலாயத்தில் ஒரு மாம்பழம். காரைக்காலில் ரெண்டு மாம்பழம்.
இந்த சிவனுக்கு எப்படி குசும்பு.எல்லாம் அவரோட விளையாட்டு.
(நம்ம சிவனை நம்ம நாட்டுக்குப் பிரதம மந்திரியாக்கிடலாமான்னு
பலா மெதுவாக் கேட்டது. மாவோ கதை சொல்லுவதிலே கவனம். கதை தொடர்ந்தது)
புனிதம்மா புருஷன் வெளியிலே போயிருந்தப்போ ஒரு சாமியார்
“பசி” ன்னு வந்தார். சோறு இல்லை. ஒரு மாம்பழத்தை அவருக்குக்
கொடுத்தாங்க.பசிக்கு அதாவது கிடச்சதேன்னு சாப்பிட்டுட்டு சாமியார்
போய்ட்டார்.
போன புருஷன் வீட்டுக்கு வந்தான். நல்ல வேளை சாமியார் போனவுடன் அந்த அம்மா
சமையல் முடிச்சிட்டாங்க. (இந்தக் காலம்னா ரெஸ்டாரண்ட்டுக்குப் போகலாம்னு
சொல்லிடுவாங்க, புருஷனும் பயந்து
போய் கூட்டிட்டு போவான். இந்த ஆம்புள்ளங்களுக்கு வேணும். என்னமா
ஆட்டிவச்சாங்க. காலம் மாறிடுச்சுடோய்ய்ய்ய் .பயந்து நடங்க
மாம்பழ மனத்தில் இடையில் இப்படி ஒரு நாதம்)
சாப்பிட உட்கார்ந்தார் அய்யா. சாப்பாட்டு இலையில் ஒரு மாம்பழம் கொண்டு
வச்சாங்க. பழத்தை ருசி பார்த்தவன் இன்னொரு மாம்பழத்தையும் கேட்டுட்டான்..
பொண்டாட்டி சாப்பிட இருக்கட்டும்னு
புருஷன் நினைக்கல்லே. விவஸ்தைகெட்ட மனுஷன்.
அவள் சாமியார் விஷயத்தைச் சொல்லியிருக்கலாம்.
ஒண்ணும் பேசாம உள்ளேபோய்ட்டு சிவன் அய்யாவை
நினச்சு அழுதா. (ஆமாம் , இந்தப் பொம்பளைங்களுக்கு
எப்படி பொசுக்குன்னு அழுகை வருது. அமெரிக்காவிலே
பிரிசிடெண்டுங்க பொண்டாட்டிங்க மேடையிலே புருஷன் ஜெயிச்சா
அழுதுடுவாங்களாம் ஆனால் கிளிண்டன் பொண்ஜாதி அழமாட்டாங்களாம்ஆனால் அவரு
அழுதுடுவாராம். அவருக்கு நல்ல மனசுய்யா)
சிவன் அய்யாவுக்கும் இரக்கம் வந்து ஒரு பழம் கொடுத்தாரு.
(அது இரக்கமா, இல்லே புருஷன் பொண்டாட்டி சண்டை போட்டுக்
கட்டும்ங்கற நினைப்புதான். கைலாயத்திலே அண்ணன் தம்பிச் சண்டை
இங்கே புருஷன் பொண்டாட்டி சண்டை.கடவுளுக்குக் கூட fighting
பார்க்க ஆசைதான்.
தெய்வப் பழம் தனி ருசியைக் காட்டிட்டுது. பொண்டாட்டியப் பாத்து
விபரம் கேட்டான். பாவம் அந்த அம்மா. இந்தக் காலமா இருந்தா
அடுக்கடுக்கா பொய் வந்திருக்கும். சினிமா, டி. வி பாக்கறாங்களே.
அந்த அம்மா உண்மையைச் சொல்லிடுத்து. விடுவானா புருஷன்
“அதென்ன சாமி கொடுத்ததுன்னு கதை சொல்றே. என் முன்னால்
இன்னொண்ணு வரவழச்சு காட்டு”னு சொல்லிட்டான். “சரிதான் போய்யா”
என்று சமஉரிமைக்குரலில் பேச இந்தக் காலம் இல்லியே
கடவுளைக் கூப்பிட்டாங்க அந்த அம்மா. அதான் சிவன் அய்யா காத்துக்
கிட்டே இருந்தாரே. உடனே அந்த அம்மா கைய்யில் இன்னொரு
மாம்பழம் வந்துடுச்சு. புருஷன் அரண்டுட்டான். ஆம்புளங்க அவ்வளவுதான்.
ஜம்பமா பேசத்தான் தெரியும். பொண்டாட்டி
நிமிந்துட்டா அடங்கிப் போய்டுவான். அப்போ அவன் ஒண்ணும்
பேசல்லே.வியாபாரத்துக்குப் போனவன் போனவந்தான் வரல்லே.
புனிதம்மா வருஷக் கணக்கா காத்திருந்தாங்க. மதுரைலே இருக்கான்னு
தகவல் கிடைச்சது. புருஷனைப் பாக்கப் புறப்பட்டுட்டாங்க.
தைரியசாலிதான். கண்ணகி காலமா இருந்தா சாகுற வரை வூட்டுக்குள்
இருந்திருப்பாங்க. வூட்லேயே இருந்திருக்கலாம். அந்த அம்மாவை
எலும்புப் பேயாக்கிடம்னு சிவக்கடவுள் முடிவு செய்துட்டாரே.
புனிதம்மா போனா, அவங்க புருஷன் இன்னொரு பொண்ஜாதி
பிள்ளைகளோட வந்து அம்மா கால்லே விழுந்துட்டான். இதுதான்
சரணகதிபோல. ஆம்புள்ளங்க கெட்டிக்காரங்க. ஊருக்கு ஒருத்தியை
மத்தவங்களுக்குத் தெரியாம வச்சுக்க முடியுது. அந்தக் காலத்துலிருந்து
ஒரெ கதைதான். இது மனுஷங்க விவகாரம். அம்மா விஷயத்துக்குப்
போகலாம். புருஷன் கால்லே விழவும் துடிச்சாங்க .வூட்டுக்கு வந்து
காலத்தைக் கடத்தியிருக்கலாம். நல்ல வசதி இருந்தது. ஆனால்
அந்த அம்மாவுக்கு உலகமே வெறுத்துப் போச்சு. கடவுள் கிட்டே
புலம்பி அழுதாங்க. அவர்தான் காத்துகிட்டே இருந்தாரே. அந்த
அம்மாவை எலும்புப் பேயாக்கிட்டாரு. இதுவும் அவர் இருக்குற
மலைக்குப் போயி , தலைகீழா படி ஏறி சிவன் சாமியைக் கும்பிட்டாங்க.
இந்த அம்மா இப்படி ஆனதுக்கும் மாம்பழம் காரணம்னு சொல்ல வச்சுட்டாரு.
விளையாடறது இந்த சாமிகள். குற்றம் சொல்றது
மத்தவங்களை.
மாங்கனி கதை முடிக்கவும் வாழையின் மனமும் கனிந்தது.
“மாங்கனி, உன் மனசு கஷ்டம் புரியாம பேசிட்டேன். மனசுலே
வச்சுக்காதே. நாம சாதாரணப் பழங்க. கடவுளோட போட்டி
போட முடியுமா? கவலையை விடு” என்று வாழைக்கனி ஆறுதல்
கூறியது. “எல்லாம் அந்த நாரதர் ஆரம்பிச்சு வச்சது. நமக்கும்
ஒரு காலம் வரும் “ என்று பலாக்கனி கூறிக் கொண்டிருக்கும்
பொழுதே அங்கே நாரதர் வந்து சேர்ந்தார்.
நாரதர் முகத்தில் உற்சாகம் இல்லை
இப்பொழுது பலாக்கனிக்கு நேரம்
“என்ன நாரதர் சாமி, கலகத்துக்கு ஆள் கிடைக்கல்லியா ?”
என்று அக்கறை கொண்டது போல் நாசுக்கா கேட்டது பலா.
நாரதருக்குக் கோபம் வந்தது. இந்த சாதாரணப் பழங்கள் கேலி செய்வதா?
சமயம் வரட்டும் என்று உள்ளுக்குள் பொருமிக் கொண்டார்.
“அதெல்லாம் ஒன்றுமில்லை “ என்றார் நாரதர்.
“சாமி , நமக்குள்ளே என்ன சாமி, நாங்க மனுஷப் பிறவியா?
சீக்கிரம் உசுரை விடற பிறவிங்க. “ என்று மெதுவாகக் கூறிவிட்டு,
மேலும் தொடர்ந்து பேசியது பலா,
“சாமி, நீங்க பூலோகத்துக்கு வந்துட்டீங்க. அதுவும் எங்க நாட்டுக்கு.
ஊருக்குள் போய்ப் பாருங்க. நிறைய கதை கிடைக்கும். உங்களுக்கும்
பொழுது போகும் “
நாரதர் யோசித்தார் முகத்தில் புன்னகை பிறந்தது.
“நான் போய்ட்டு வரேன் “ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு
விட்டார் நாரதர்.
“எங்கே போறாரு “ என்று ஆவலுடன் கேட்டது வாழை.
பலாவோ , “வேடிக்கை பாருங்க “ என்று மட்டும் கூறியது.
போன நாரதர் கொஞ்ச நேரத்தில் வந்தார்.
“ஊரு இப்படி கெட்டுப் போயிருக்கே, இனிமே கடவுள் கூட
எட்டிப் பார்க்க முடியாது “ என்று ஆத்திரத்துடன் கூறிவிட்டு வேகமாகப்
போய்விட்டார்.
“என்ன நடந்தது” என்று அப்பாவியாகக் கேட்டது மாங்கணி.
“ வேறென்ன, ஊருக்குள்ளே இப்போ எல்லாரும் நாரதர்தான்.
கலகம் செய்ய மேலேருந்து வரணுமா? உனக்குக் கெட்ட பேரு
வரவச்சாரில்லே . இனிமே பூலோகம்னா அலறுவாரு. சரியான பாடம்”
பலா முரட்டுத்தனமாக பதில் கூறியது.
மற்ற இருகனிகளும் பலாவை வியப்புடன் பார்த்தன.
“பலா, படைப்புலே, உனக்கு வெளிப்புறம் முரட்டுத்தோல். உள்ளேதான்
இனிப்புப் பழம். சுலபமா எடுத்துட முடியாது. உன் புத்தியும் சுலமாப்
புரிங்சுக்க முடியல்லே. இருந்தாலும் இப்போ சந்தோஷமா இருக்கு.
நாம ஒத்துமையா இருந்தா போதும் “என்று மாங்கனி கூறியது.
மாங்கனியின் பேச்சு இனித்தது.
பழங்கள் பற்றி சுவையாகவே எழுதியிருக்கீங்க!..ருசித்துப்படித்தேன்..படித் தேன்! யோகியார் --- On Tue, 9/22/09, Tthamizth Tthenee <rkc...@gmail.com> wrote: |
ஓஹோஹோ....எங்கோ உயர்த்திவைக்கிறீர்கள் சீதாம்மா!..யான் தகுதியா? மிக்க நன்றி, யோகியார் --- On Tue, 9/22/09, seethaalakshmi subramanian <seethaa...@gmail.com> wrote:
|
“பலா, படைப்புலே, உனக்கு வெளிப்புறம் முரட்டுத்தோல். உள்ளேதான்
இனிப்புப் பழம். சுலபமா எடுத்துட முடியாது. உன் புத்தியும் சுலமாப்
புரிங்சுக்க முடியல்லே. இருந்தாலும் இப்போ சந்தோஷமா இருக்கு.
நாம ஒத்துமையா இருந்தா போதும் “என்று மாங்கனி கூறியது.
மாங்கனியின் பேச்சு இனித்தது.