Some reminiscences of my association with Anna— அண்ணாவுடன் என் அணுக்கத்தில் சில நினைவுக் குறிப்புகள்-இந்த நூலுக்குப் பொருத்தமான தலைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும். ஆனால் நமது தமிழ் மொழிக்கு உள்ள இயற்கையான வளமையினால் "அண்ணா-சில நினைவுகள்" என்று சுருக்கமாகச் சொன்னாலே, இந்நூலின் உள்ளடக்கம் என்ன என்பது புரிந்துவிடும்.
இரண்டு மாதங்கட்கு முன்புவரை இப்படி ஒரு நூல் எழுதுவேன் என நான் எண்ணியதில்லை. 1974-ல் வெளியான "என் அண்ணா காவியம்", இத்தனை ஆண்டுகளாக இரண்டாம் பதிப்பினைக் காணவில்லை. அதனைப் பதிப்பித்தால் போதும் என்று விரும்பினேன். நட்பின் செல்வர் மூவேந்தர் முத்து அப்பணியினைத் தாமே விழைந்து ஏற்றுக்கொண்டார். சிற்சில திருத்தங்களுடன் அஃது இப்போது அச்சாகி வருகின்றது.
சென்ற 15.10.1986 அன்று என்னுடைய 62-ஆவது பிறந்தநாள். அண்ணா வழியில் அதே நோய்க்கு ஆளாகி எதிர்காலத்தைக் கணிக்க இயலாச் சூழ்நிலையில், நாட்களை நகர்த்தி வருகிறேன் நான். வழக்கமாக என்னைக் கண்டு மகிழ அன்று வருகை தந்த நண்பர்கள், ஒரே குரலில் கோரிக்கையொன்றினை என் முன் வைத்து வலியுறுத்தினர்; அண்ணா அவர்களைப்பற்றி நான் உடனே ஒரு நூல் எழுதிடவேண்டும் என்பதே அது.
அருமைத் தோழர்களான மூவேந்தர் முத்து, நல்லரசு, நம்மாழ்வார், தமிழ்ப்பித்தன், தி. வ. மெய்கண்டார், மாமூலன், பூங்கொடி சுப்பய்யா, பி. எல். இராசேந்திரன் ஆகியோர் என்னை வற்புறுத்தவே, வேறு வழியின்றி, எழுதுவதாக வாக்குறுதி வழங்கினேன். என் வலது கட்டை விரலில் பொறுக்கவொண்ணா வலி இருப்பதெல்லாம் அவர்களுக்குத்தெரியாது. என் புறத்தோற்றம் இப்போதும் நன்றாகவே உள்ளது. ஆனால் நான்கு பெரிய நோய்களின் நிலைக்களனாக என் உடல் போராடிக் கொண்டிருக் கின்றது. எனினும் நோய்களின் மருட்டுதலை மறக்க எழுத்து உதவட்டுமே!
அண்ணா அவர்களிடம் 27 ஆண்டுகள் நெடிய தொடர்பு எனக்கு உண்டு. அச்சமோ கூச்சமோ இன்றி அவரிடம் துவக்க நாட்களிலேயே மிக இயல்பாக நான் பழகிடக் காரணமாயிருந்தவர் என் இனிய நண்பர் ஈ.வெ.கி. சம்பத் அவர்களே! இருப்பினும் அண்ணா அவர்களைப்பற்றி இம்மாதிரியான ஒரு நூல் எழுதிட நான் தயங்கினேன். தந்தை பெரியார் அவர்களிடம் சில ஆண்டுகள் குருகுலவாசம்’ செய்ததுபோலவோ, கலைஞர் அவர்களிடம் அதைவிடப் பல ஆண்டுகள் ஒன்றாக உறைந்ததுபோலவோ, நான் அண்ணா அவர்களிடம் தொடர்ந்து தங்கியிருந்ததில்லை என்பதால்தான்! -
எழுத்தாளர்களான தம்பி அரங்கண்ணலும், நண்பர் தில்லைவில்லாளனும் அண்ணாவிடம் குருகுலவாசம்’ செய்தவர்கள். வீட்டுப் பிள்ளையான தம்பி டாக்டர் பரிமளமும் எழுதத் தெரிந்தவர். அண்ணாவின் அருமைத் தம்பிமார்களில் எழுதுந் திறனும் தகுதியும் உடையார் பலர் இன்னும் இருக்கின்றார்கள். இவர்களெல்லாரும் எழுத முனையாதபோது, நாம் "அண்ணா-சில நினைவுகள்" எழுதலாமா? சரி. நாம் எழுதிய பின்னரேனும் இவர்கட்கு ஒர் உந்துதல் ஏற்பட்டு, அதனால் மேலும் அண்ணாவைப்பற்றிய உண்மையான சில நூல்கள் வெளி வரட்டுமே, எனத் துணிந்தேன்.
நவம்பர் திங்கள் முழுவதும் என் நினைவாற்றலை நன்கு தூண்டிவிட்டு, நாள்தோறும் முற்பகல் ஒன்றும், பிற்பகல் ஒன்றுமாக எழுதினேன். எழுதி முடித்த பின் என் துணைவியாருக்கு மட்டும் படிக்கத் தருவேன். அவர்கள் முகத்தில் நிறைவைக் கண்டதும், தலைப்புச் சூட்டுவேன். பின்னர் இருமுறை படித்துப் பார்த்து: நானே முழுநிறைவு பெறும்வரை திருத்தங்கள் செய்வேன். இப்படியாக அனைத்தையும் ஒரே மாதத்தில் நிறைவேற்றி, அச்சுக்குத் தந்தேன்.--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/86a1ea76-d0ec-439d-901f-a5dcf6517c3dn%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/ef04f9e6-2373-432c-aeac-bc0a077994e8n%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/fb5403cb-a6ed-4db8-aea9-d244d2960816n%40googlegroups.com.