"தமிழ்ப்புத்தாண்டு சர்ச்சைகளும் தீர்வுகளும்" நூல் திறனாய்வு . . .
நூலாசிரியர்: முனைவர் தேமொழி
நூல் திறனாய்வாளர் : திரு.கரந்தை ஜெயக்குமார்
தமிழ் மரபு அறக்கட்டளை செயலாளர் முனைவர் தேமொழி அவர்கள் எழுதிய தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சைகளும் தீர்வுகளும் நூலை கரந்தை திரு ஜெயகுமார் அவர்கள் அருமையாகத் திறனாய்வு செய்தார்🙏🏻
தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாள் தான். . . இல்லை இல்லை தை முதல் நாள்தான் . . . என்ற வாதங்களுக்குப் பதிலாக முன்னாள் தமிழக முதல்வர்கள் டாக்டர் கலைஞர் மற்றும் டாக்டர் ஜெயலலிதா, மகாகவி பாரதி, தமிழக அரசு பதிப்பு ஆணை இவற்றை மேற்கோள் காட்டி அறுதியிட்டு இறுதியாகக் கூறும்படி தரவுகள் இல்லை என அரசின் கருத்தை உரைத்துக் கடந்துவிட்டார்👍
சங்க நூல்கள் உள்ளிட்ட 115 நூல்களை ஒவ்வொன்றாக ஆராய்ந்து தமிழர் புத்தாண்டு துவக்கம் பற்றி எந்த ஒரு தகவலும் கிடையாது என்பதை தெளிவுபடுத்துகிறார்.
மேற்கொண்டு ஆய்வு செய்ததில் சில அருமையான தரவுகள் தமது கூற்றுக்கு வலு சேர்கின்றன என்று கூறுபவர்; மலையாள கொல்லம் ஆண்டு சிம்மத்தில்(ஆவணி) தொடங்கி கற்கடவில்(ஆடி) முடிகிறது, தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் ஆண்டு என்பது சிங்கத்தில் தொடங்கி நண்டில் முடியும் கோள் சுழற்சியைக் குறிப்பது என்கிறார்.
சிலப்பதிகாரம் பாடிய இளங்கோ ஆண்டிற்கு ஆறு பருவங்கள் உண்டு அவை கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகும் என்று உரைக்கிறார். இதில் கார்காலம் துவக்கம் ஆவணியில் என்பது நாம் அறிந்தது.
இதே கருத்தை ஒன்பதாம் நூற்றாண்டு திவாகரம், பத்தாம் நூற்றாண்டு பிங்கள நிகண்டு, பதினாறாம் நூற்றாண்டு சூடாமணி நிகண்டு போன்ற நிகண்டு நூல்களும் வழிமொழிகின்றன.
15ஆம் நூற்றாண்டு விஜயநகர ஆட்சிக்குப் பிறகு பிரபவ, விபவ என்ற வடமொழிப் பெயர்கள் தமிழ் ஆண்டுகளைக் குறிக்கும் சொல்லாடல்களாகக் கடந்த 500 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ளன.
உண்மையை உரைப்பவன் உண்மைக்கு மட்டுமே கட்டுப்பட்டவன் ஏனெனில் உண்மை மட்டுமே வரலாற்றின் தாய் என்று டாக்டர் அம்பேத்கர் காட்டிய வழியின்படி எளிதில் மறுக்க முடியாத சான்றுகளுடன் முனைவர் தேமொழி அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறார்.
இந்தக் கருத்தைக் கல்விப் பாடப் புத்தகங்களில் உள்ளடக்க முடிந்தால் பண்டைய தமிழர்கள் கடைப்பிடித்தபடி ஆவணி முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு துவங்கும் என முடிக்கிறார்.
முனைவர் சிவ.இளங்கோ அவர்கள் கூறியபடி நல்லதொரு கருத்து. பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முன்பாக அனைவரும் இந்த நூலை வாங்கி படித்து கருத்தில் ஒருமைப்பாடு கொண்டு வருவோம் என்பதில் யாவரும் உடன்படுவோம்👍🙏🏻
தமிழ் மரபு அறக்கட்டளையை நிறுவி இத்தகைய தரமான ஆய்வு நூல்கள் அனைவருக்கும் சென்று சேரும் வழிவகை செய்துள்ள டாக்டர் கண்ணன் மற்றும் டாக்டர் சுபாஷினி அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி🙏🏻👍💐
~ SPS சுந்தர் பரத்வாஜ்
தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சைகளும் தீர்வுகளும்
ஆசிரியர் : தேமொழி
வெளியீடு : தமிழ் மரபு அறக்கட்டளை, 2024
கிடைக்குமிடம் :
https://www.commonfolks.in/books/d/tamil-putthandu-sarchaigalum-theeervugalum