நச்சினார்க்கினியர்
— மு. அண்ணாமலை
தமிழ் விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
நச்சினார்க்கினியர், மு. அண்ணாமலை, பழனி பிரசுரம், 1956
https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0033572/ACL-TNAL_01281_நச்சினார்க்கினியர்_1956.pdf
பக்கம்: 5-9
நச்சினார்க்கினியர் யார்?
1. உரையாசிரியர்.
நச்சினார்க்கினியர் பழைய உரையாசிரியர்களில் ஒருவர்.பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவக சிந்தாமணி முதலியவற்றிற்கு உரை வகுத்துள்ளார். குறுந்தொகை இருபது பாடல்களுக்குப் பேராசிரியர் உரை வகுக்காமற் போகவே எஞ்சிநின்ற அவைகட்கு நச்சினார்க்கினியர் உரை எழுதினார் என்று கூறப்படுகிறது. தொல்காப்பியம் முழுமைக்கும் உரை கண்டவர். தொல்காப்பியத்தில் எழுத்து. சொல், பொருள் முன் ஐந்தியல், செய்யுளியல் முதலியனவற்றிற்குரிய உரை இப்பொழுது அச்சிலே கிடைக்கின்றன. இலக்கணம் இலக்கியம் ஆகிய இரு துறையினும் வல்லவராயினும் அவரை ஓர் இலக்கிய உரைகாரராக வைத்துக் காண்பதே பொருந்தும்.
கலித்தொகை, பத்துப்பாட்டு முதலிய நூற்களுக்குச் சொல்லுக்குச் சொல் பொருள் கூறியும் ஆங்காங்கே விளக்கம் காட்டியும் செல்கிறார். சீவக சிந்தாமணியிலே சில பாடல்களுக்கு உரையே எழுதாமலும், சில பாடல்களுக்கு வினைமுடிபு மட்டும் காட்டியும், சீல பாடல்களில் சில சொற்களுக்கு மட்டும் விளக்கம் செய்தும், சில பாடல்களில் ஒரு சொல்லையும் வீடாமல் விரிவுரை செய்தும் செல்கிறார். ஒரு விரிவான காவியத்திற்குச் சுருக்கமாகவும், அழகாகவும், திட்பமாகவும், உரை செய்வதெப்படி என்பதற்குச் சீவக சிந்தாமணி உரை முன் மாதிரியாக அமைந்திருக்கிறது.
2. ஊர், சாதி, சமயம்.
நச்சினார்க்கினியர் மதுரையில் பிறந்து வாழ்ந்தவர். பாரத்துவாச கோத்திரத்தைச் சேர்ந்த ஸ்மார்த்த பிராமணராவர். தொல்காப்பியத்தின் ஒவ்வோர் இயல் முடிவிலும் "மதுரை ஆசிரியர் பாரத்துவாஜி நச்சினார்க்கினியர் செய்த காண்டிகை உரை முற்றிற்று" எனக் காணப்படுகிறது. பத்துப்பாட்டு உரை முடிவிலும், உரைச்சிறப்புப்பாயிரங்களிலும் அவ்வாறே கூறப்படுகிறது. எனவே மேற்கண்ட முடிவை நாம் ஏற்றுக் கொள்ளலாம். வைணவர், ஸ்மார்த்தர், மாத்துவர் ஆகிய மூவரிடத்தும் பாரத்துவாச கோத்திரம் காணப்படுகிறது.
"வேண்டிய கல்வி யாண்டு மூன்றிறவாது"
[தொல் -கற்பு-47 ]
என்ற நூற்பாவிற்குக் கல்வி குறித்துப் பிரியும் பிரிவின் கால அளவு மூன்று யாண்டுக்கு மேல் மிகாது என்பது பொருளாகும். இக்கருத்தினையே இளம்பூரணரும் உரைத்தனர். நம்பி அகப்பொருள்காரரும் "ஓதற் பிரிவு ஒரு மூன்றியாண்டே" என்று கூறினர். நச்சினார்க்கினியர் கல்விக்காகப் பிரியும் பிரிவிற்குக் கால எல்லை கூற உடன்படாராய் வேறு பொருள் உரைத்தனர். இறவாது என்ற சொல்லை இரண்டிடத்தும் கூட்டி கல்வி வேண்டிய யாண்டு இறவாது என்றும், மூன்று இறவாது என்றும் கொண்டார்.
"இஃது 'ஓதலும் தூதும்' என்னும் சூத்திரத்திற்
கூறிய ஓதற்பிரிவிற்குக் காலவரையறை இன்றென்பதும்
அவ்வோத்து இதுவென்பதும் உணர்த்துகின்றது" என்று
நுதலிய பொருள் கூறி,
"துறவறத்தினைக் கூறும் வேதாந்தம் முதலிய கல்வி வேண்டிய யாண்டைக் கடவாது; அக் கல்வியெல்லாம் மூன்று பதத்தைக் கடவாது"
மூன்று பதமாவன அதுவென்றும் நீ என்றும் ஆனா என்றும் கூறும் பதங்களாம். அவை பரமுஞ் சீவனும் அவ்விரண்டும் ஒன்றாதலும். ஆதலின் இம்மூன்று பதத்தின் கண்ணே தத்துவங்களைக் கடந்த பொருளை உணர்த்தும் ஆகமங்களெல்லாம் விரியுமாறு உணர்ந்து கொள்க" [தொல்-கற்பு-47-உரை.]
என்று அவர் எழுதிச் சென்றார்.
அவருடைய உரை 'தத்துவமஸி' சொற்றொடரைக் குறிக்கிறது. தத்துவமஸி மகாவாக்கியம் சாந்தோக்ய உபநிஷத்தில் தந்தை மகனுக்குச் சொல்வதாக அமைந்திருக்கிறது. இது எல்லோர்க்கும் பொதுவானாலும் அத்வைதிகளோடு மிகுந்த தொடர்பு கொண்டது. விசிட்டாத்துவைதிகளான வைணவர்களும் துவைதிகளான மாத்துவர்களும் ஸ்ரீமந் நாராயணனையே முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுபவர்கள். அத்வைதிகளான ஸ்மார்த்தர்கள் மகேசுவர பூசை செய்பவர்கள். வட மொழியில் ஈசுவர நாமம் சிவனுக்கே உரியதாகும்.
நச்சினார்க்கினியர் சைவர், அவரது பெயர் சிவனாரின் திருநாமங்களுள் ஒன்றாகக் காணப்படுகின்றது. 'நச்சினார்க்கினியாய் போற்றி' என்றும் 'நச்சுவார்க்கினியர் போலும் நாகவீச்சுவரனார் தாமே'என்றும் திருநாவுக்கரசர் தேவாரங்களில் பயின்று வருகின்றமையான் அறியலாம்.
"தூய ஞானம் நிறைந்த சிவச்சுடர்
தானே ஆகிய தன்மை யாளன்"
என்று வரும் 'உரைச் சிறப்புப்பாயிரத் தொடர்களால் அவர் சிவனை வழிபட்டவர் என்பதனையும், 'சிவச்சுடர் தானே யாகிய என்பதனுள் நிற்கும் அத்வைதக் குறிப்பினையும் உணரலாம். மற்றும் டாக்டர் உ. வே.சா. அவர்கள் நச்சினார்க்கினியர் சைவர் என்பதற்குரிய சான்றுகள் பல காட்டியுள்ளார்கள். தொல் எழுத்ததிகார மொழிமரபில் ஒரெழுத்தொருமொழி (12) என் னும் நூற்பாவின் விளக்க உரையில் திருச்சிற்றம்பலம், பெரும்பற்றப் புலியூர் எனத் தில்லையம்பதியின் வேறு பெயர்களை ஆறெழுத்தொரு மொழிக்கும் ஏழெழுத்தொரு மொழிக்கும் எடுத்துக் காட்டுக்களாக நல்கியிருக்கிறார். தத்துவக் கருத்துக்களை விளக்கத் திருவாசகம், திருக்கோவையார், திருக்கைலாய ஞான உலா முதலிய நூல்களிருந்து அடிக்கடி மேற்கொள்கள் காட்டுவர்.
அவர் வைதிக பிராமணராயினும், சிவனை வழிபடுபவராயினும் சமயக் காழ்ப்பில்லாதவர். சமண காவியமான சீவக சிந்தாமணிக்கு உரை எழுதியுள்ளமை இதனை நன்கு விளக்கும். 'அருளொடு புணர்ந்த அகற்சி' என்ற தொல்காப்பியத் தொடருக்கு துறவு என்று பொருள் எழுதி அவ்வருட் துறவுக்குப் புத்தன் துறவையே எடுத்துக் காட்டாக நல்கினார்.
கருவீன்று கிடந்த பெண்புலியொன்று எல்லைமீறிய பசியால் தான் ஈன்ற குழவியையே தின்னத் தொடங்கியது. புத்தனின் அருள் உள்ளம் அதனைக் கண்டு துடித்தது. பசியோடு கிடக்கும் பெண்புலிக்கு இரங்குவதா? தன் தாய்வாயிலேயே உயிரை இழக்க இருக்கும் மகவிற்காக வருந்துவதா? அதன் கூரிய பற்களுக்கிடையே புகுந்து தன்னையே இரையாகக் கொடுத்த புத்தனின் அருள் உள்ளத்தை என்னென்று வியப்பது! புத்தர் எத்துணை எத்துணையோ பிறவிகள் எடுத்தார். எப்படி எப்படி யெல்லாமோ உயிர்கட்கு உதவினார். இந்த விவரங்களைத்தான் புத்தர் ஜாதகக் கதைகள் கூறுகின்றன. அந்த ஜாதகக் கதைகளில் ஒன்றுதான் மேற் குறிப்பிட்ட கதையுமாகும். இக்கதை யாரோ ஒரு தமிழ்க்கவிஞனின் உள்ளத்தைக் கவர்ந்திருக்கிறது. அதனால் பாடலாக மலர்ந்திருக்கிறது'. அப்பாடலால் ஈர்ப்புண்ட இனியர் அதனை மேற்கோளாகக் காட்டியுள்ளார்.
'புனிற்றுப் பசிஉழந்த புலிப் பிணவு தனாஅது
முலை மறாஅக் குழவி வாங்கி வாய்ப்படுத்து
இரையெனக் கவர்ந்தது நோக்கி ஆங்கவ்
ஏரிளம் குழவி முன்சென்று தான் அக்
கூருகிர் வயமான் புலவுவேட்டுத் தொடங்கிய
வாள் எயிற்றுக் கொள்ளையில் தங்கினன் கதுவப்
பாசிலைப் போதி மேவிய பெருந்தகை
ஆருயிர் காவல் பூண்ட
பேரருட் புணர்ச்சிப் பெருமை தானே!
வீரசோழிய உரைகாரரும் இதனையே மேற்கோளாகக் காட்டி
யுள்ளனர்.
3. காலம்.
நச்சினார்க்கினியர் பதினான்காம் நூற்றாண்டின் இறுதியிலாவது பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியிலாவது வாழ்ந்திருக்கலாம். இறையனார் களவியல் உரைகாரர், உரையாசிரியராகிய இளம்பூரணர், பேராசிரியர் சேனாவரையர் முதலிய உரையாசிரியர்களை இவர் தம் உரையில் ஆங்காங்கு குறித்தும் மறுத்தும் செல்கிறார். எனவே அவர்களுக் கெல்லாம் இவர் பிந்தியவராவார். சேனாவரையர் 'எம்மண்டலமும் கொண்டருளிய மாறவர்மன் குலசேகர பாண்டியன்' (கி.பி. 1268-1311) காலத்தைச் சேர்ந்தவர்என்பதை மு. இராகவையங்கார் அவர்கள் தம் 'சாசனத் தமிழ்க்கவி சரிதம்' [1] என்ற நூலிலும் திரு. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் தம் இலக்கிய வரலாற்றிலும் [2] குறித்துள்ளனர். சேனாவரையர் கி.பி. 13ம் நூற்றாண்டின் இறுதியிலும் 14ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவராதலின் நச்சினார்க்கினியர் பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர் என்று ஒருவாறு முடிவு செய்யலாம்.
1. பக்கம் 113
2. பக்கம் 36.
__________________________________________________
*இந்நூலின் இறுதியில் உரைச் சிறப்புப்பாயிரம் சேர்க்கப்
பட்டுள்ளது. அப்பழம்பாடலிலிருந்தே இக்கட்டுரையின் திரண்ட
பிண்டம் தொகுக்கப்பட்டுள்ளது.
_____________________________________________________________________