இந்தியப் பகுதியில் உயர்நிலை படிப்பும், தென்கிழக்காசியாவில் இந்திய நாகரிகம் பரவிய வரலாறுகளையும், இந்தியக் கலை கலாச்சாரங்கள் பற்றிய விருத்தாக்கங்களையும் சொல்லிக் கொடுப்பது தகும் என்று கருதப்பட்டதால் இதற்கான பாட திட்டத்தைத் தயாரித்துக் கொடுக்கும் நோக்கத்தில் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியை வரவழைக்க முடிவு செய்யப்பட்டது.
சர்வமும் இந்திய மயமாய் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளால் இத்தகைய பாடத்திட்டத்திற்கு முதலில் ‘இண்டோலஜி’ (Indology) என்று பெயர் வழங்கப்பட்டது. இப்பெயரிடுவதன் மூலம் மாகாணப் பிரிவு, இனப் பிரிவு போன்றான சிக்கல்களும் குழப்பங்களும் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. இவ்வளவு விடயங்கள் அடங்கியுள்ள இப்பாடத்திட்டத்தைத் தயாரிப்பது எளிமையற்ற காரியம் என்பதால் இப்பொறுப்பை மேற்கொள்ள பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி அழைக்கப்பட்டார். இவர் இந்தப் பொறுப்பை மேற்கொள்ள பணம் கேட்கக்கூடும் என்றும் அதனைக் கொடுக்க மலாயாப் பல்கலைக்கழகம் தயாராக இருக்குமா என்பது ஐயம் என தமிழ் முரசு நாளிதழ் செய்தி பதிவு செய்தது. இந்தியப் பகுதி உருவாக்கப்படுவதற்கு மலாயா இந்தியர்களிடமிருந்து குறைவான எண்ணிக்கையில் நிதி கிடைத்திருந்தாலும்கூட அது எதிர்காலத்தில் இந்தியப் பகுதி உருவாவதற்கு எந்த வகையிலும் தடையாக இருக்காது என்று தெரிவித்ததோடு, மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி அமைப்பதில் இந்தியர்கள் ஆர்வங்கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்கொடைகளின் வழியே நிரூபிக்க வேண்டும் என்றும் அந்நாளிதழ்வழி கேட்டுக் கொள்ளப்பட்டது (தமிழ் முரசு, பிப்ரவரி, 07, 1953, பக். 04).
23 மார்ச் 1953ஆம் ஆண்டு, விமானம் மூலம் நீலகண்ட சாஸ்திரி சிங்கப்பூர் வந்து சேர்ந்துள்ளார். அவர் ஒரு மாத காலம் தங்கி மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதியை உருவாக்குவது பற்றி ஆராய்வார் என்றும் இந்தியப் பகுதி ஆரம்பிக்க வேண்டும் என்று முதன் முதலில் சிபாரிசு செய்த கார்-சாண்டர்ஸ் கமிஷன் உடன் சாஸ்திரி பேசுவார் என்றும் கூறப்பட்டது. திரு. சாஸ்திரியாருடன் ‘ஆனந்த விகடன்’ உதவி ஆசிரியரும், புகழ் பெற்ற ‘துப்பறியும் சாம்பு’வின் சிருஷ்டி கர்த்தாவுமான திரு. ஆர். மகா தேவன் என்பவரும் வந்திருந்தார் (தமிழ் முரசு, மார்ச், 24, 1953, பக். 01). சாஸ்திரி கோலாலம்பூர், மலாக்கா, பினாங்கு ஆகிய இடங்களில் சொற்பொழிவாற்றினார்.
இந்தியப் பகுதி ஆரம்பிப்பதற்கான சூழ்நிலைகளையும், மக்கள் எண்ணத்தையும் சாஸ்திரி தமது சுற்றுப்பிரயாணத்தின் மூலம் அறிந்துக் கொண்டார். 1953ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடைப்பெறும் கூட்டத்தில் சாஸ்திரி தனது கருத்துகளை எடுத்துக்கூறுவார் என்றும் கல்வி போர்டுடன் கலந்து ஆலோசித்த பிறகே சாஸ்திரி தனது இறுதி அறிக்கையைத் தயாரிக்க தொடங்குவார் என சொல்லப்பட்டது (தமிழ் முரசு, ஏப்ரல், 15, 1953, பக். 11). மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி அமைப்பது பற்றி ஆராய்ச்சி நடத்திய சாஸ்திரி நகல் அறிக்கையைப் பல்கலைக்கழக அதிகாரிகளிடம் சமர்ப்பித்திருந்தார். அவருடைய அறிக்கை 24 ஏப்ரல் 1953 அன்று பிரசுரமாகும் என்று சொல்லப்பட்டது. 24 ஏப்ரல் 1953 தேதியன்று பல்கலைகழக கல்வி போர்டுடன் கூட்டம் நடைப்பெற்று அதில் சாஸ்திரியின் அறிக்கை பரிசீலனை செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது (தமிழ் முரசு, ஏப்ரல், 17, 1953, பக். 02).
11.4.1953 அன்று இந்திய எஜண்ட் திரு. ராமகிருஷ்ணராவுடன் மலாக்கா நாட்டுக் கோட்டைச் செட்டியார்களைச் சேர்ந்த சன்னியாசி மலைக் கோவிலுக்குப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் சென்று பேசியபோது மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்குத் தனி இடம் ஒதுக்க இயலாதென்றும் தமிழுக்கென்று கேட்டால் ஹிந்தி வேண்டும் என்று கிளர்ச்சி அதிகப்படுமென்றும், சமஸ்கிருதம், தமிழ் வகுப்புகள் ஏற்படுத்தி அதில் ஒருவர் பேராசிரியராகவும் மற்றவர் விரிவுரையாளராகவும் நியமிக்கப்படலாமென்று கூறியுள்ளார். மேலும், அதன் மூலம்தான் தமிழுக்கு ஆதரவு இருக்குமென்றும் மேற்கண்ட திட்டத்திற்கு எதிர்ப்பு ஏற்படுமானால் பல்கலைக்கழகத்தில் இந்திய மொழிக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும் என்றும் கூறியுள்ளார்.
இதனை அறிந்த தமிழ் முரசு பத்திரிகை மலாயாவில் வாழும் இந்தியர்களில் பெரும் பகுதியினர் தமிழர்கள் என்றும் மலாயா என்ற பெயரே தமிழர்களின் தொடர்பால் உருவானது, அதுமட்டுமின்றி, தமிழர்களின் பண்பாடும் இந்நாட்டு மக்களின் பண்பாட்டோடு இரண்டறக் கலந்து சிறப்புற விளங்குகின்றது என்று கூறி பல்கலைகழகத்தில் தொடங்க இருக்கும் இந்தியப் பகுதி இங்கு வாழும் இந்தியர்களில் பெரும் பகுதியினரான தமிழர்களின் எதிர்கால நலனுக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணை புரியும் வகையில் அமைவதே சிறந்தது எனும் நிலையில் இலக்கியமும் பண்பாடும்மிக்க தமிழ்ப் பகுதியும் இந்நாட்டுப் பல்கலைக்கழகத்தில் இடம் பெறுமாறு நீலகண்ட சாஸ்திரி அறிவுரை அமைத்தல் வேண்டும் என சாஸ்திரியாரிடம் வேண்டுக்கோள் விடுத்தது தமிழ் முரசு பத்திரிக்கை (தமிழ் முரசு, ஏப்ரல், 22, 1953, பக். 08).
சொற்பொழிவுக்காகச் சென்ற சாஸ்திரி ஆங்காங்கே ஆற்றிய உரைகளில் வெளிப்பட்ட கருத்துகள் இந்தியர்களிடம் சந்தேகத்தை எழுப்பி வந்ததால் 23 ஏப்ரல் 1953 அன்று தமிழ் முரசு பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளிப்ட்டது. அதில், 1947ல் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதி அமைக்க வேண்டும் என்று சிபாரிசு செய்த கார் சாண்டர்ஸ் ஆணையம் தமிழ்ப் படிப்பிற்காகத் தனி இலாகா அமைக்க வேண்டும் என்று சிபாரிசு செய்து தெரிவித்த கருத்துகளை மீள்பிரசுரம் செய்தது. அதைச் சாஸ்திரிக்கும் மற்ற இந்தியர்களுக்கும் சமர்ப்பணம் என்பதாகத் தெரிவித்துத் தமிழ் படிப்பிற்கான இலாகா குறித்து கார் சாண்டர்ஸ் தெரிவித்த கருத்துகள் விரிவாக விளக்கப்படுத்தியது (தமிழ் முரசு, ஏப்ரல், 23, 1953, பக். 02).
அதன் பிறகு, சிங்கப்பூர் தமிழர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க 26.04.1953ல் தமிழர் பொதுக் கூட்டமொன்றில் பேச ஒப்புக் கொண்ட பேராசிரியர் சாஸ்திரி கடைசி நேரத்தில் நிகழ்கவுக்கு வர மறுத்தது தமிழர்களைக் கோபம் அடையச் செய்தது. அந்நிகழ்வு பொது கூட்டமாக மாற்றப்பட்டு சில விடயங்கள் பேசப்பட்டது. இக்கூட்டத்திற்குத் தமிழ் மக்களின் சார்பில் திரு. சாரங்கபாணி தலைமை ஏற்று உரையாற்றினார். மலாயாப் பல்கலைகழக கல்வி போர்டு அங்கத்தினர் என்ற முறையில் இந்தியப் பகுதி அமைக்கப்படும் என்றும் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்கப்படும் என்றும் மக்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். முதலிடம் மறுக்கப்படுமானால் தமிழ் மக்கள் சார்பில் என்ன முயற்சி எடுக்க முடியுமோ அதைச் செய்வதாக உறுதியளித்தார். காரணம், தமிழ் ஒன்று மட்டுமே இந்த நாட்டுக்குப் பயன்படக்கூடியது இந்திய மொழி ஆகும். அரசாங்கமும் அதனை ஒப்புக் கொண்டது மட்டுமில்லாமல் ஆங்கிலத்தைத் தவிர மக்கள் மொழியாக அரசாங்கம் அங்கிகரித்து ஆதரவு காட்டும் மொழிகள் தமிழ், மலாய், சீனம் என்பதை யாரும் மறுக்கவியலாது என்றார். மலாயாப் பல்கலைக்கழகத்திற்குப் பொதுமக்களிடம் நிதி கேட்கப்பட்ட பொழுது முதன்முதலாகப் பணம் கொடுத்தது ஒரு தமிழ் இளைஞரே ஆவார். அதற்கு மதிப்பளிக்கும் வகையிலாவது பல்கலைக்கழக நிறுவாகம் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. சாஸ்திரி சொன்னதை ஏற்காமல் கூச்சல் போட்டால் மட்டும் போதாது. அனைவரும் பொறுப்புணர்ச்சியுடனும் நடந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் முக்கியமாக இளைஞர்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் (தமிழ் முரசு, ஏப்ரல், 27, 1953, பக். 02).
தன்மீது மலாயா மக்கள் அதிருப்தியில் உள்ளனர் என்று அறிந்த சாஸ்திரி தமது அறிக்கை வரும்வரை மலாயா இந்தியர்களைப் பொறுமை காக்க வேண்டும் என இந்திய அரசாங்க பிரதிநிதி காரியாலயம் மூலம் தான் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டார். தன் சிபாரிசின் மூலம் இந்திய சமூகத்திற்குப் படிப்பு மொழியாக தமிழுக்குள்ள முக்கியத்துவத்தை என்னுடைய சிபாரிசுகள் எந்த வகையிலும் குறைக்கவில்லை என்பதை மலாயா இந்தியர்களுக்குப் பத்திரிக்கை மூலம் உறுதி கூற விரும்பியதாகச் சொல்லப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட சிபாரிசு அறிக்கை வெளிவரும் வரை காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டார் (தமிழ் முரசு, ஏப்ரல், 29, 1953, பக். 02). சாஸ்திரி இந்திய அரசாங்க பிரதிநிதி காரியாலயம் மூலம் வெளியிட்ட இந்தச் செய்தியில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி படிப்பு மொழியாக இருக்கும் என்பதை மறைமுகமாகத் தெரிவித்திருந்தது மலாயா இந்தியர்களையும் குறிப்பாக மலாயாத் தமிழர்களையும் திருப்திப் படுத்தும் என்று நம்புவதாக தமிழ் முரசு பத்திரிக்கையில் செய்தி வெளியானது (தமிழ் முரசு, ஏப்ரல், 30, 1953, பக். 04).
மலாயாவிலிருந்து நாடு திரும்பிய நீலகண்ட சாஸ்திரி பத்திரிகைகளுக்குத் தன்னுடைய மலாயா பயணம் குறித்த அனுபவத்தைப் பகிரும்போது நேர்மாறான தகவல்களைக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. தினமணி நிருபரிடம் மலாயாவில் தென் இந்தியாவில் உள்ள திராவிட கழகத்தைப் போன்று ‘தமிழ் பண்ணை’ என்ற இயக்கம் ஆரம்பித்திருக்கிறார்கள் என்றும் அவர்களுடைய அபத்தமான கோரிக்கையின் விளைவாக மலாயாப் பல்கலைக்கழகத்தில் 1953ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படவிருந்த இந்திய பாஷைகள் இலாகா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் மட்டும்தான் போதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றும் எவ்வளவு சொல்லியும் பலன் ஏற்படவில்லை அதனால் தனது மலாயா விஜயம் தோல்வியுற்றதாக சாஸ்திரி தினமணி இதழுக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், மலாயாவில் இந்தியர்களின் பொருளாதார நிலை மோசமாக உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். பின், சென்னை ஆங்கில தினசரி “மெயில்” பத்திரிக்கையில் (17-05-1953) ஞாயிறு இதழில் மலாயா இந்தியர்கள் பெருந்தொகையினராக இருப்பினும் சீனர்களைப் போல் எண்ணிக்கையிலும் செல்வாக்கிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை என கூறியுள்ளார். மலாயாவில் வாழ்பவர்கள் தங்களுடைய குறுகிய தேசிய வாதங்களை விட்டு மலாயர்களுடன் ஒன்றுபட்டு மலாயன் தேசிய இனத்தை ஏற்பது நல்லது என்றும் பேட்டிக் கொடுத்துள்ளார் என்று தமிழ் முரசு பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டது (தமிழ் முரசு, மே, 22, 1953, பக். 05).
மலாயாப் பல்கலைகழகத்தில் இந்தியப் பகுதி துவங்குவது பற்றி பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் செய்திருந்த சிபாரிசுகளில் சிலவற்றையே பல்கலைக்கழகம் செனேட் ஏற்றுக்கொண்டிருப்பதாகத் துணை வேந்தர் சர் சிட்னி 25.05.1953 அன்று தெரிவித்தார்.
பின் செனேட் செய்த முடிவானது 17ஆம் தேதி பல்கலைக்கழக கவுன்சிலால் விவாதிக்கப்படும் என்றும் அதன் முடிவே இறுதியானது என்றும் கூறினார். சாஸ்திரி சென்னை பத்திரிகையில் இந்தியப் பகுதி ஆரம்பிக்க தாமதமானதற்கு இந்தியர்களின் அபத்தமான கோரிக்கைகளே காரணம் என்பதைத் துணை வேந்தர் முற்றிலுமாக மறுத்துத் தாமதத்திற்குப் பணப்பற்றாக் குறையும் எல்லா ஏற்பாடுகளையும் செய்ய போதிய கால அவகாசம் இல்லாமையுமே காரணம் எனத் தெளிவுப்படுத்தினார். பாடத் திட்டம் முடிவு செய்தல், மாணவர்களைத் தயார் செய்தல், மற்றும் ஒரு இலாகா தொடங்குவதற்கான செயல்களைச் செய்து முடிப்பது 1953ஆம் ஆண்டு இறுதியில் முடியாத காரியம் என்றும் போதிய நிதி இருந்தால் 1954ஆம் ஆண்டு அக்டோபரில் இந்தியப் பகுதி இயங்கக் தொடங்கி விடும் என்று நம்பிக்கை அளித்துள்ளார். இந்தியப் பகுதிக்கு ஒரு வருடத்திற்கு குறைந்தது 75,000 வெள்ளி தேவைப்படுகிறது என்பதால் அரசாங்கமும் பொதுமக்களும் வேண்டிய நிதியைத் தர முன்வர வேண்டும் என்றார் (தமிழ் முரசு, மே, 26, 1953, பக். 02).
கார்- சாண்டர்ஸ் அறிக்கை
கார்-சாண்டர்ஸ் அறிக்கையில் மலாய், சீன மற்றும் தமிழ் ஆய்வு துறைகளை நிறுவுவதற்கான பரிந்துரைகள் முன்மொழியப்பட்டன. பிப்ரவரி, 1950இல், பல்கலைக்கழகத்தின் செனட் மூன்று தனித்தனி வாரியங்களை அமைத்து, அந்தப் பரிந்துரைகளைப் பரிசீலிக்கவும், அவற்றைச் செயல்படுத்துவதற்கான திட்டங்களை முன்வைக்கவும் இவ்வாரியங்கள் இயற்றப்பட்டன (Annual Report of University of Malaya, 1949-1950, பக். 13).
தமிழ் ஆய்வு வாரியம்
இந்த வாரியத்தில் செயலாற்றியவர்கள் தங்களுடைய கருத்துகளுக்கு மட்டுமின்றி வெளியே தகுதிவாய்ந்த இது சார்ந்து நன்கு அறிவு உள்ளவர்களின் கருத்துகளளையும் வரவேற்றனர் (Annual Report of University of Malaya, 1949-1950, பக். 14).
23 ஏப்ரல் 1953 அன்று தமிழ் முரசு பத்திரிக்கையில் கார்-சாண்டர்ஸ்
அறிக்கை விரிவாக விளக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
‘மலாயாவின் பல்கலைக்கழகத்தில் அந்நாட்டின் பிரதான சமூகங்களின் மொழியும் கலாசாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட படிப்பு இருக்க வேண்டும் என்ற முறையில் மலாய் மொழிக்கும், சீன மொழிக்கும் இலாக்காக்கள் வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. அதே போல் மூன்றாவது பெரிய ஜனத்தொகையினரான இந்தியர்களுக்கு ஒரு இலாகா ஏற்படுத்துவதை ஆராய வேண்டும். மலாயாவில் சுமார் 6 லட்சம் இந்தியர்களில் பெரும் பகுதியினர் தென்னிந்திய அல்லது இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் ஆவர். மலாயாவில் உள்ள இந்தியர்களில் 70 சதவிதத்தினர் மலாயாவில் பிறந்தவர்கள். பின், அவர்கள் பலரின் வீட்டு மொழி தமிழ். எஸ்டேட் பாட சாலையில் போதனை மொழி தமிழாகவே உள்ளது. ஆனால், நிறைய பேர் முன்றாம் வகுப்புக்கு மேல் செல்வதில்லை. நகரங்களில் உள்ளவர்கள் ஆங்கில பாடசாலையையே நாடுகிறார்கள். தமிழ் மாணவர்களில் வெகு சிலரே தாய் மொழிக் கல்வியைத் தொடர்கிறார்கள். இருந்த போதிலும் மற்ற பாடங்களின் போதனை ஆங்கிலம் மூலமும் தமிழ்க் கல்வி தமிழின் வழியும் கொடுப்பதே கல்வி அதிகாரிகள் கருத்தாகும்.
1.தமிழ் கற்க ஆர்வம்: தமிழர்கள் பெரும்பாலோர் தங்கள் பிள்ளைகளுக்குத் தாய் மொழிக் கல்வி வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்து தமிழ்க் கல்வி படிக்க விரும்புவதாகத் தெரிவித்தனர்.
2. தமிழ்ப் பகுதியால் கிட்டும் பயன்: மலாயாப் பல்கலைகழகத்தில் தமிழ் இலாகா அமைப்பது மாணவர்கள் வெளிநாட்டிற்குச் சென்று தமிழ் படிக்கும் செலவை இல்லாமலாக்கும். புதிய கல்வி திட்டத்தின்படி தமிழ் மொழியும் இலக்கியமும் செகண்டரி பாடசாலைகளில் சொல்லிக் கொடுக்கப்படுமாதலால் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் வர ஏதுவாகிறது. உத்தியோகத் துறையில் அந்தப் பள்ளிக்கூடங்களில் தமிழ் சொல்லிக் கொடுக்க, பட்டதாரி ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள். இந்திய மொழிகளில் ஒன்றாவது சேர்க்கப்படவில்லையெனில் அது பூர்த்தியானதாயிருக்காது.
3.உடனடியாகப் பெருமளவில் தேவையிருக்கக் கூடிய ஒரேயொரு மொழி தமிழ்தான் : வளமையும் வலிமையும் நிறைந்த மொழி, பழமை வாய்ந்த, இன்னும் வாழும் ஒரு கலாச்சாரத்தினை அணுக வழிசெய்யும் ஏராள அற்புதமான இலக்கியங்களை உடையது அம்மொழி. ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் நூல்நிலையம் ஒன்றை அமைப்பது கடினமானதாயிராது. மேலும், தமிழ் இலாகா இந்தியாவிலும் இலங்கையிலுமுள்ள தமிழ் இலாகாக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்க முடியும். ஆகவே, தமிழ் படிப்புக்கு ஒரு இடமளிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் முடிவாகக் கூறுகிறோம். தமிழ்ப் படிப்புத் தமிழ் மொழியின் படிப்போடு நின்றுவிடாமல் திராவிட கலாச்சாரம் முழுதையும் தென்னிந்திய சரித்திரத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். என்றாலும் பேராசிரியர் ஒருவர் அவசியமென நாங்கள் கருதவில்லை. தற்பொழுது கிடைக்கக்கூடிய அபேட்சகர்களின் தகுதிகளுக்கு ஏற்ப சீனியர் விரிவுரையாளரோ, சாதாரண விரிவுரையாளரோ நியமிக்கப்படுவது போதுமானது.
4.கீழைநாட்டு மொழிகள் கற்பித்தல் : இந்த மூன்று கீழ்நாட்டு மொழிகளைக் கற்பிப்பதில் ஒரேவித பிரச்சனைகள் எழுவதால் அவற்றை ஒன்றாக ஆராய்வது நலம். அநேகமாகப் பல்கலைக்கழகத்திலுள்ள எல்லா மாணவர்களுக்கும் இந்த மொழிகளில் ஏதாவதொன்று தாய் மொழியாக இருக்கும். அதிக மாணவர்களுக்கு அவர்களுடைய வீட்டு மொழியில் அதிக ஞானமும் அம்மொழியின் இலக்கியத்தில் பரிச்சயமும் ஊட்ட பல்கலைக்கழகத்தின் புதிய சக்தி உருவாவது நலம் என்று நாங்கள் கருதுகிறோம். மாணவர்களுக்குத் தெரியாத ஒரு மொழியை முதன் முதலாகக் கற்கச் செய்வது இந்த இலாகாக்களின் நோக்கமாக இருக்காது. இந்தப் படிப்புகளுக்காக மாணவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுமுன் அவர்களுக்குக் கொஞ்சமாவது அம்மொழியில் பரிச்சயம் இருக்க வேண்டும்.’
(தமிழ் முரசு, ஏப்ரல், 23, 1953, பக். 02).
மலாயாத் தமிழ் மக்களின் வேண்டுகோள்
மலாயாப் பல்கலைக்கழகத் துணை வேந்தரைத் தலைவராய் கொண்ட இந்தியப்
பகுதி அமைப்பதற்கான சபையானது தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் இந்தியப் பகுதியைத் துரிதமாய் நிறுவ வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்துள்ளது. இந்தியப் பகுதி அமைப்பதைச் சுணக்குகிற பிரச்சனைகளில் ஒன்றான இந்தியப் பகுதிக்கு ஒரு தலைவரை நியமிப்பது பற்றி பல்கலைக்கழக அதிகாரிகள் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதையும் திரு. கா. இராமநாதன் தெரிவித்தார். எனினும் பாடத்திட்டம் குறித்த சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும் நன்யாங் பல்கலைக்கழகம் உருவாகிக் கொண்டிருப்பதால் இந்தியப் பகுதியை அமைக்க வேண்டியது அவசியமாகிவிட்டது என்பதையும் கூறியுள்ளார் (தமிழ் முரசு, ஜூன், 04, 1954, பக். 02). காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசப்பட்ட பல சர்ச்சைக்குரிய விடயங்களில் நெடுநாளைக்கு முன்னரே அமைக்கப் பட்டிருக்க வேண்டிய இந்தியப் பகுதி அமைப்பதை இனியும் தாமதிக்காமல் சீக்கிரம் அமைக்கும்படி சர்க்காரை (அரசாங்கத்தை) வற்புறுத்துவதென இக்கமிட்டி தீர்மானித்திருந்தது (தமிழ் முரசு, ஜூன், 05, 1954, பக். 02).
இந்தியப் பகுதி நிறுவ பண நெருக்கடி
மலாயாப் பல்கலைகழகத்தில் சீன, மலாய் பகுதிகள் 1953ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும், ஆனால், இந்தியப் பகுதி 1954ஆம் ஆண்டு அக்டோபரில்தான் தொடங்க இயலும் என்று துணை வேந்தர் சர் சிட்னி கெயின் 24 ஏப்ரல் 1953 அன்று பத்திரிகையாளரிடையே அறிவித்தார். தேவையான பணம் மற்றும் மற்ற ஏற்பாடுகள் ஆகியவைப் பூர்த்தியடைந்துவிட்டால் 1954 அக்டோபரில் இந்தியப் பகுதி இயங்கத் தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். கார்-ஸாண்டர்ஸ் கமிஷன் சிபாரிசின் அடிப்படையிலேயே சீனப் பகுதி ஆரம்பிக்கப்படுகிறது என்றும் அதே அடிப்படையில் இந்தியப் பகுதியும் ஏற்படுத்தலாம் என்றார். இதனால் கார்-சாண்டர்ஸ் சிபாரிசு முழுதுமோ அல்லது பேராசிரியர் சாஸ்திரியாரின் சிபாரிசுகள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படும் என்று பொருள் அல்ல. பேராசிரியர் சாஸ்திரியின் சிபாரிசு பற்றி பொதுமக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை ஆராய்ந்த பிறகே பல்கலைக்கழகம் இந்தியப் பகுதி பற்றி முடிவு செய்யும் என்று சர் சிட்னி கெய்ன் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். சாஸ்திரி சொன்ன சிபாரிசு இருக்குமானால் பல்கலைக்கழகமும் கல்வி போர்டும் அதனை ஏற்குமா என்று தமிழ் முரசு ஆசிரியர் கேட்டதற்கு அத்தகைய மாறுபாடு இருக்காது என்றும் அப்படி எழுந்தால் கல்வி போர்டு அது பற்றி முடிவு செய்யும் என்றும் பதிலளித்தார். தற்போது பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருக்கும் நிதி மிகவும் சொற்பம் என்பதால் பணம் பற்றாக்குறையால் இந்தியப் பகுதி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்படலாம் என்றும் கூறியுள்ளார் (தமிழ் முரசு, ஏப்ரல், 25, 1953, பக். 08).
[. . . ]
சமஸ்கிருத புத்தகங்கள் நன்கொடை
தமிழ் பகுதிக்கு 70 சமஸ்கிருத புத்தகங்களும் 6,000 ரூபாயும் இந்திய அரசு பரிசாக அளிக்க முன்வந்திருப்பதாக இந்தியக் கமிஷனர் திரு.ஆர்.கே.தாண்டன் 6.02.1955ல் தெரிவித்தார். மேலும், தமிழ்ப் பகுதிக்கு இந்தியக்கலை, பண்பாடு, தத்துவம் இவற்றின் மீது எழுதப்பட்ட இன்னும் பல புத்தகங்களையும் இந்திய அரசு அளிக்க இருப்பதை அறிவித்தார். 70 சமஸ்கிருத புத்தகங்களையும் மற்றும் 86 இந்திய வரைப் படங்களையும் அன்று பிற்பகல் 2 மணி முதல் 2.15 வரை பூகோளப்பகுதி அறையில் நிகழ்ந்த நிகழ்வில் திரு. தாண்டன் அவர்களிடமிருந்து பல்கலைக்கழக துணை வேந்தர் சார் சிட்னி பெற்றுக் கொண்டார். துணை வேந்தருடன் சேர்ந்து இந்தியக் கமிஷனர் அலுவலக அதிகாரிகள், பேராசிரியர்கள், கே. எம். ஆர். மேனன் ஆகியோரும் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர். திரு. தாண்டன் அந்நிகழ்வில் ஆற்றிய உரையில் இந்தப் புத்தகம் இந்தியாவையும் மலாயாவையும் இணைக்கும் என்று கூறி, வழங்கவிருக்கும் அடையாள உதவியைப் பற்றி குறிப்பிட்டதோடு தமிழ்ப் பகுதி துவங்கிய பின் இன்னும் பல இந்தியப் புத்தகங்களைத் தர இருக்கிறது பற்றியும் பேசினார். கொடுக்கப்பட்ட 70 புத்தகங்களும் திருவனந்தபுரம் சமஸ்கிருத ஒரியண்டல் லைப்ரரி பதிப்பகத்தினரது என்றும் மைசூர், திருவனந்தபுரம் சமஸ்கிருத வரிசையில் பிரசுரிக்கப்பட்ட இந்தியத் தத்துவம், இலக்கியம் பற்றி இயம்புவன என்றும் குறிப்பிடப்பட்டது.
பார்ப்பனிய நம்பிக்கை, சைவம், ஆதிவேதாந்தம், மலபாரில் சடங்கு முறைகள், சைவத் தத்துவம், ஆயுர்வேதம், ராமாயணம் ஆகியவைப் பற்றி கொடுக்கப்பட்ட 70 புத்தகங்களும் சமஸ்கிருத்தில் எழுதப்பட்டவை. 70 புத்தகங்களில் ஒரு சிலவற்றுக்கு மட்டும் ஆங்கிலத்தில் பெயர் போட்டிருந்தது. மற்றவையெல்லாம் புத்தக அட்டையில் இருந்து அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்ததால் புத்தகங்களைப் பார்வையிட வந்த மாணவர்கள் தங்களால் ஒரு வார்த்தையைக் கூட படிக்க முடியவில்லை என்று கூறியுள்ளனர். இந்திய அரசு புத்தகங்கள் கொடுக்க முன் வந்தது நல்ல எண்ணம் ஆனால், தமிழ்ப் பகுதிக்கும் சமஸ்கிருதம் படிக்க இயலாத மாணவர்களுக்கும் சமஸ்கிருத புத்தகங்களை வழங்கியிருப்பது குறித்து அங்கு இருந்த ‘தமிழ் முரசு’, ‘இந்தியர் டெய்லி மேயில்’ நிருபர்களிடம் மாணவர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர். மாணவர்கள் தெரிவித்த கருத்துகள் வழி பல்கலைக்கழகத்தில் மொத்தமாக ஐந்து தமிழ் புத்தகங்களே உள்ளதாகவும் அவற்றில் இரண்டு அகராதிகள் என்றும் தெரிய வந்துள்ளது. அவர்கள் மேலும் கூறுகையில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பதால் தமிழ்ப் புத்தகங்களுக்கே தேவைகள் அதிகமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். அந்நிகழ்வில் கூடியிருந்த இந்தியர்களின் கூட்டத்தில் ஒரே ஒரு பல்கலைக்கழக இந்திய பேராசிரியரால் கொடுக்கப்பட்ட 70 புத்தகங்களில் ஒன்றின் பெயரை மட்டுமே படித்துக் காட்ட முடிந்தது என்பதையும் செய்தியில் குறிப்பிட்டிருந்தனர் (தமிழ் முரசு, பிப்ரவரி, 17, 1955, பக். 07).
சமஸ்கிருத புத்தகங்களைப் பல்கலைக்கழக தமிழ்ப் பகுதிக்குக் கொடுத்தது தொடர்பாகப் பல மாறுபட்ட கருத்துகள் நிலவி வந்ததைக் குறித்து மலாயாவில் உள்ள இந்தியக் கமிஷனர் திரு. ஆர். கே. தாண்டன் சில கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். அதில் முதன்மையாகத் தமிழ்ப் பகுதிக்கு சமஸ்கிருத புத்தகங்கள் வழங்கியது சரிதான் என்றும் அதனை மக்கள் குறுகிய ‘மாகாண மனப்பான்மை’ கொண்டு குறைகூறுவதற்கு வருந்துவதாக திரு. ஆர். கே. தாண்டன் கூறினார். மேலும் பேசிய, திரு. தாண்டன் இந்திய அரசு சமஸ்கிருத புத்தகங்களை மலாயாப் பல்கலைக்கழகத்திற்குக் கொடுத்தது பல்கலைக்கழகத்திற்குக் காட்டும் நல்லெண்ணம், கூட்டுறவு ஆகியவற்றின் அறிகுறியாகும் என்றார். பின், சமஸ்கிருதம் லத்தின் போன்று உலகத்தில் மிக மிக பழைய மொழிகளில் ஒன்று என்றும் இந்திய கலாச்சாரத்தைப் பிரதிநிதிப்பதும் அதுவே என்றும் கருத்துரைத்தார். எனவே அதனைக் கட்டாயம் மிகக் கவனமாக ஆழ்ந்து படிப்பதற்கே சமஸ்கிருதம் புத்தகங்கள் கொடுக்கப்படுள்ளது என்று கூறினார். இதனை, ‘திரு. ஆர். கே. தாண்டன் சப்பைக் கட்டு கட்டுகிறார்’ என்று தமிழ் முரசு செய்தியாக்கியது (தமிழ் முரசு, பிப்ரவரி, 21, 1955, பக். 07).
‘தமிழ் எங்கள் உயிர்’ நிதிக்குச் சிறுகச் சிறுக பணம் சேரத் தொடங்கியது. இந்நிதிக்கு மேலும் அதிக அளவில் மக்களின் ஆதரவு கிடைக்க வேண்டும் என்றெண்ணி தமிழ் முரசு பத்திரிகையில் இது தொடர்பாகப் பல வகையில் விளம்பரங்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
“உலகோர் போற்றும் உயர் தமிழ் சீரிளமை மாறாத செந்தமிழ் தமிழர்க்கு உயிர் தாய்மொழி தமிழ் ஆதலால் கூறுகிறோம் தமிழ் எங்கள் உயிர் என்று அழைக்கிறோம் இன்றே பட்டியலில் பெயர் போடுங்கள்”
என்ற வாசகத்தோடு தமிழ் எங்கள் உயிர் நிதிக்காக விளம்பரங்கள் வெளிவந்தன. அவ்விளம்பரங்களில் மாதம் இருநூறு வெள்ளிக்குக் குறையாது வருமானம் பெறும் தமிழ் குடும்பங்களில் உள்ள ஒருவர் பத்து வெள்ளி நிதி வழங்கி பட்டியலில் பெயர் போட முன்வந்தால் மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழ் நூல்கள் இடம்பெற உறுதுணையாக அமைந்து அங்குத் தமிழ் முழங்கும் என்பதையும் தமிழ் முரசு பத்திரிகைக் குறிப்பிடத் தவறவில்லை. குடும்பத்தின் சார்பில் நிதி வழங்குபவர்களின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் பெயரும் அதேவேளை அலுவலகம் சார்பில் பணம் கொடுக்கப்பட்டால் அலுவலகத்தார் அனைவரின் பெயரும் பட்டியலில் சேர்க்கப்படும் என்பதும் விளம்பரம் வழி அறிவிக்கப்பட்டிருந்தது. விளம்பர அறிக்கையில் சிலிகி ரேட் சிங்கப்பூர் என்ற முகவரிக்கு மக்கள் தங்கள் நிதியையும் பெயரையும் அனுப்ப முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. முதன் முதலில் 1955-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 04-ஆம் திகதி வெளியிடப்பட்ட விளம்பர அறிக்கை தொடர்ந்து 15, 17, 18, 19, 22, 24, 29 ஆகிய தேதிகளில் மொத்தமாக ஒன்பது நாட்கள் தமிழ் முரசு பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது (தமிழ் முரசு, மார்ச், 29, 1955, பக். 06).
தமிழ் எங்கள் உயிர்
எண்ணிற் சிறந்ததுந் தமிழ்;
எழுத்திற சிறந்ததுந் தமிழ்;
பண்ணிற் சிறந்ததுந் தமிழ்;
பாரிற் பரந்ததுந் தமிழ்;
மண்ணிற் பழையதுந் தமிழ்;
மாசற் றொளிர் வதுந் தமிழ்;
கண்ணிற் சிறந்ததுந் தமிழ்;
கன்னிமை சான்றதுந் தமிழ்;
தேனினு மினியது தமிழ்;
தெவிட்டாச் சுவையது தமிழ்;
இலக்கணஞ் சிறந்தது தமிழ்;
இயல் வளம் சிறந்தது தமிழ்;
ஒப்புயர் வற்றது தமிழ்;
ஒண்கலை நிறைந்தது தமிழ்;
தன்னே ரிலாதது தமிழ்;
தனிப்புகழ் வாய்ந்தது தமிழ்;
ஆதலால்
தமிழர்க்கெல்லாம் தமிழே உயிர்
மேலும், தமிழ் எங்கள் உயிர் நிதிக்காகக் கவிதை வடிவிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டன. 20 மார்ச் 1955ல் தமிழின் சிறப்புகளை வர்ணிக்கும் கவிதையைக் குறிப்பிட்டு அதற்குக்கீழ் எழுதப் படிக்க தெரிந்த அனைத்துத் தமிழர்களும் மலாயா பல்கலைக்கழகத்தில் கன்னித் தமிழை உயிர்ப்பிக்க தலா பத்து வெள்ளி நிதியை வழங்கி ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது (தமிழ் முரசு, மார்ச், 20, 1955, பக். 06). இதே விளம்பரம் தொடர்ந்து ஐந்து நாட்கள் (மார்ச் மாதம் 20, 26, 30, 31 ஆகிய தேதிகளிலும் ஏப்ரல் மாதம் 05-ஆம் தேதியும்) வெளியிடப்பட்டது (தமிழ் முரசு, ஏப்ரல், 05, 1955, பக். 06).
மலாயா பல்கலைக்கழகத்தில் உருவாக இருக்கும் இந்தியப் பகுதியின் நூலகத்திற்காகத் தமிழ் புத்தங்களை வாங்க உதவும் பொருட்டுத் தமிழ் எங்கள் உயிர் நிதி திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிதி திட்டத்தின் இலட்சியமானது இருநூறு வெள்ளிக்குக் குறையாமல் சம்பளம் பெரும் பத்தாயிரம் தமிழர்கள் ஆளுக்குப் பத்து வெள்ளி கொடுப்பதன் வழி முப்பது நாளில் ஒரு லட்சம் வெள்ளி திரட்டுவதே ஆகும். இதற்கு முன்வந்து ஆதரவு அளிக்க வேண்டியது தமிழ் மக்களின் தலையாயக் கடமையாக வலியுறுத்தப்பட்டுத் தமிழ் எங்கள் உயிர் என்ற பேரணிப் பட்டியலில் பெயர் தந்து தமிழ் முழங்கச் செய்யுமாறு பிப்ரவரி 25, 1955ல் தமிழ் முரசு பத்திரிகையின் தலையங்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இச்செய்தி வெளிவந்து நான்கு நாட்கள் கடந்த நிலையில் நிதி பட்டியலில் இருபத்து நான்கு பெயர்களே சேர்க்கப்பட்டிருந்ன. மக்களின் ஆதரவு மேலும் அதிகரிக்க மீண்டும் 28.02.1955 அன்று தமிழ் முரசு பத்திரிகையில் மக்கள் முன்வந்து நிதியை நிரப்ப வேண்டி செய்தி வெளியானது (தமிழ் முரசு, பிப்ரவரி, 28, 1955, பக். 08).
தமிழ் முரசு பத்திரிகையில் தொடர்ந்து வெளிவந்த செய்திகளின் வழி குறுகிய காலத்தில் நிறைய பேரிடம் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது. இச்செய்தி அறிந்து மலாயா பல்கலைக்கழகத்திற்குத் தமிழ்ப் புத்தகங்கள் வாங்க நிதி கொடுத்து உதவிய முதல் எட்டுப் பேருடைய பெயர்கள் 25.02.1955-ல் தமிழ் முரசு பத்திரிகையின் முதல் பக்கத்தில் பட்டியலிடப்பட்டிருந்ததன.
குன்றக்குடி அடிகளார்
தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு முதல் நபராகக் குன்றக்குடி அடிகளார் ஆதரவு வழங்கி 201 வெள்ளி மதிப்புள்ள சங்க இலக்கிய புத்தகங்களை வழங்கிய செய்தியோடு அவர் எழுதி அனுப்பியிருந்த வாழ்த்தும் தமிழ் முரசு பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது. அவ்வாழ்த்துரையில் அவர் இந்நிதி திட்டம் தொடர்பான செய்தியைக் கண்டு மகிழ்ந்துள்ளதாகக் கூறியதோடு நூல்களை வாங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் இப்பண சேகரிப்புத் திட்டத்திற்குத் ‘தமிழ் எங்கள் உயிர்’ நிதி என்று பெயர் வழங்கியமை வரவேற்கத்தக்கது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். தமிழை வளர்ப்பதன்வழி தமிழினம் உயர முடியும் என்பதால் இதற்குத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து கைக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மலாயா பல்கலைக்கழகத்தில் உருவாகவுள்ள தமிழ்ப் பகுதியில் தமிழ் மொழியில் உள்ள அற்புதமான இலக்கண இலக்கியங்கள் இடம் பெற்றுத் தமிழருடைய பெருமையை உலக மக்கள் அனைவராலும் அறிந்துக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார் (தமிழ் முரசு, பிப்ரவரி, 25, 1955, பக். 01).
தமிழ் முரசு நாளிதழின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியப் பகுதிக்குத் தேவையான நல்ல பல தமிழ் நூல்களைத் தமிழர்கள் தங்களின் சுயமுயற்சியாலேயே வாங்கி உதவ முடியும் என்ற அரிய ஆலோசனையையும் முயற்சியையும் ஆதரித்துப் பல தமிழர்கள் நிதி வழங்கினார்கள். அவர்களுடைய பெயர்கள் 26.02.1955இல் வெளிவந்த தமிழ் முரசு பத்திரிகையில் தமிழ் எங்கள் உயிர் நிதி பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தன (தமிழ் முரசு, பிப்ரவரி, 26, 1955, பக். 08). பின், 70 வெள்ளி நிதி வழங்கிய ஏழு பேருடைய பெயர்களும் 01.05.1955 அன்று தமிழ் எங்கள் உயிர் நிதி பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டன (தமிழ் முரசு, மார்ச், 01, 1955, பக். 08). கேமரன் மலையைச் சேர்ந்த திரு. கா. பெருமான் என்பவருடைய “மல நாட்டுச் சர்வகலாசாலையில் தமிழ் வளர்க்க மலைவாழ் எம்மீர்!” என்று தொடங்கும் பாடலைப் பாடி பொதுமக்கள் தமிழ் எங்கள் உயிர் நிதிக்கு உதவும்படி வேண்டுகோள் விடுத்ததில் பலர் முன் வந்து பட்டியலில் பெயரைச் சேர்த்ததாகத் தமிழ் முரசு பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது. இதன் மூலம் நூறு வெள்ளி நிதி அனுப்பி வைத்த திரு. எம். ஆர். எஸ். முருகையா மற்றும் சிலருடைய பெயர்களும் 02.03.1955இல் பட்டியலில் சேர்க்கப்பட்டுத் தமிழ் முரசு நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது (தமிழ் முரசு, மார்ச், 02, 1955, பக். 12). பினாங்கு, சிங்கப்பூர், ஈப்போ மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் இருந்து ஏழு பேர் வழங்கிய 70 வெள்ளி 07.03.1955 -இல் தமிழ் எங்கள் உயிர் பட்டியலில் சேர்க்கப்பட்டது (தமிழ் முரசு, மார்ச், 04, 1955, பக். 12). தமிழ் எங்கள் உயிர் நிதிக்குக் குளுவாங் தமிழர் சங்க நிர்வாக உறுப்பினர்கள் ஏழு பேர் மற்றும் பதினெட்டுப் பொது மக்கள் கொடுத்த 260 வெள்ளி நிதியின் விவரம் 13.03.1955ல் தமிழ் முரசில் பிரசுரிக்கப்பட்டது (தமிழ் முரசு, மார்ச், 13, 1955, பக். 12).
கர்மவீரர் காமராஜர்
மலாயா பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ்ப் பகுதிக்கும் அதன் நூல்நிலையத்திற்கும் உரமாகத் திகழும் தமிழ் எங்கள் உயிர் நிதிக்குத் தமிழ்நாட்டில் இருந்து பணம் அனுப்பி வைக்கும் செயலை எளிமையாக்க திரு. காமராஜர் அவர்கள் சென்னை தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி காரியாலத்தில் ஒரு பகுதியை உருவாக்கி துணை நின்றுள்ளார். தஞ்சையில் புயலடித்தபோது வாடி வதங்கிய தமிழ் நாட்டு மக்களுக்கு மலாயாத் தமிழர் லட்சக்கணக்கான ரூபாய் தந்து உதவியமைக்குக் கைம்மாறு காட்ட வாய்த்த நல்ல வாய்ப்பு என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அவர் பத்திரிகைக்கு வழங்கிய அறிக்கையில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காகத் தமிழ் முரசு ஆசிரியரான திரு. கோ.சாரங்கபாணியைப் பாராட்டியது மட்டுமல்லாமல் தமிழ் மொழிக்கான ஆக்கப் பணியில் இறங்கியிருக்கும் இம்முயற்சிக்குத் தமிழ் நாட்டவர்களின் ஆதரவும் கண்டிப்பாகக் கிடைக்கும் என்று நம்பிக்கை அளித்துள்ளார். தமிழ் எங்கள் உயிர் நிதிக்காகத் தமிழ் நாட்டில் இருந்து கிடைக்கப் பெறும் பணம் மற்றும் புத்தக உதவியினைச் சேகரித்துக் கோலாலம்பூர் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்று நடத்த அப்போதைய தமிழ் நேசன் பத்திரிகையின் முன்னால் ஆசிரியரான திரு. ஆர். வேங்கடராஜூலு முன்வந்திருப்பதையும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். தமிழ் மொழியைப் பேணுபவர்களும் தமிழ் நூல்களை வெளியிடுபவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உதவி புரிய முன்வர வேண்டினார். புத்தகமாக அல்லது பணமாகக் கொடுக்க நினைப்பவர்கள் தங்களுடைய உதவியை ‘மலாயா நூல்நிலைய நிதி, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டிக் காரியாலயம், மவுண்டு ரோடு, சென்னை’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கும்மாறு அவ்வறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார் (தமிழ் முரசு, மார்ச், 15, 1955, பக். 01).
16.03.1955 அன்று வெளியிட்ட பத்திரிகையில் 25 பேர் அளித்த 265 வெள்ளி நன்கொடையின் விவரம் மற்றும் தமிழ் எங்கள் உயிர் நிதி பெயர் பட்டியலில் இன்னும் 9729 பெயர்கள் இடம் பெற வேண்டும் என்பதைம் வலியுறுத்தி சொல்லப்பட்டிருந்தது. 10 வெள்ளிதான் வழங்க வேண்டும் என்பதில்லை அதற்கு மேலும் வழங்க விருப்பம் இருப்பவர்கள் ‘தமிழ் முரசு, 71, சிலிகி ரோட், சிங்கப்பூர்’ என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது (தமிழ் முரசு, மார்ச், 16, 1955, பக். 12).
[. . . ]