ஃஃஃ அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 10 June 2026
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 26. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -2: தொடர்ச்சி)
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 27.
இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -3
இப்போது நாம் மின்னிதழ்களில் காணும் சில கொலைச்செய்திகளைப் பார்ப்போம்.
“ஆனால், தற்போது வெளியாகியுள்ள சங்கீதா ஏப்ரல் 20ஆம் தேதி செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்று அவரது தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.”
ஏப்பிரல் 20ஆம் நாள் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை என்று இருக்க வேண்டும். ஆனால், “தற்போது வெளியாகியுள்ள சங்கீதா” என்றால் என்ன பொருள்? சங்கீதா என்பது திரைப்படத்தின் பெயரா? பாடற்தொகுப்பின் பெயரா? “இப்போது வெளியாகியுள்ள சங்கீதாவின் அறிக்கையில்” என்பதுபோன்று வந்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.
“சரிதாவைப் பொறுத்தவரை, நான் ஒரு தேசிய நட்சத்திரமோ அல்லது அவரது மனைவியாக இருப்பதற்காக அவர் பெருமைப்பட வேண்டிய ஒரு நடிகரோ அல்ல”
‘ஓ காரம்’ வந்தால் ‘அல்லது’ இடையில் தேவையில்லை. சரிதாவைக் குறிப்பிட்டு விட்டு அவரது மனைவியாக என்று குறிப்பிட்டால் சரிதாவின் மனைவியாக என்றல்லவா பொருள் வருகிறது. “சரிதாவைப்பொருத்தவரை, நான் ஒரு தேசிய நட்சத்திரமோ என் மனைவியாக இருப்பதற்காக அவர் பெருமைப்பட வேண்டிய நடிகரோ அல்லன்” என்று இருக்க வேண்டும்.
“இரட்டை இலை சின்னத்துடன் செக் மாதிரிகளை கைப்பற்றிய தேர்தல் ஆணையம்”
“இரட்டை இலைச் சின்னத்துடன் உள்ள காசோலை மாதிரிகளைக் கைப்பற்றிய தேர்தல் ஆணையம்” என எழுதியிருக்கலாமே.
“மோடி கவர்மெண்ட் ஒரு ஃபெயிலியரை சந்திக்கும், டிபீட் ஆகும் இந்தப் பில்லுன்னு நினைச்சீங்களா?”
மோடி அரசு ஒரு குலைவைச் சந்திக்கும். இந்த வரைவம் தோல்வியுறும் என நினைத்தீர்களா? என்று குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
bill என்றால் மசோதா என்கிறோம். தமிழில் சட்டவரைவு > வரைவம் என்பதே சரியாகும்.
“ஒரு பைனல் வார்னிங் அப்படின்னு சொன்னீங்க.”
(ஓர்) இறுதி எச்சரிக்கை என்று சொன்னீர்கள்.
“எதுவா இருந்தாலும் மெஜாரிட்டி இருக்கும்ன்னு நிறைவேத்திருவாங்க. ஆனா ஃபர்ஸ்ட் டைம் ஒரு பெரிய தோல்வியைச் சந்திச்சிருக்காங்க.”
எதுவாக இருந்தாலும் பெரும்பான்மை இருப்பதால் நிறைவேற்றிவிடுவார்கள். ஆனால், முதல் தடவையாக ஒரு பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள் – என எழுதுவதே சரி.
“மோடியால் கண்ட்ரோல் பண்ணவே முடியாது.”
மோடியால் கட்டுப்படுத்தவே முடியாது.
“டிலிமிட்டேசன் விவகாரத்தில, நாடாளுமன்றத்தில் முதல் முறையாக தோல்வி அடைந்த பதட்டத்தில அவர் இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கிறார்.”
தொகுதி மறுவரையறை தொடர்பில் நாடாளுமன்றத்தில் முதல் முறையாகத் தோல்வி அடைந்த பதற்றத்தில் இவர் இப்படி எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார் – இவ்வாறு எழுதுவதுதானே சரியாக இருக்கும்.
delimitation என்றால் வரையறை எனப் பொருள் என்றாலும் தொகுதி வரையறை என்ற பொருளிலேயே குறிக்கப்படுகின்றது. பதட்டம் என்பது தவறு. பதற்றம் என்றே குறிக்க வேண்டும்.
“திமுக கூட்டணியில் அதிமுக சார்பில் ஒருவரும் ….”
செய்தியைப் படித்ததுமே தவறு தெரிந்து விடுகிறது. அதிமுக கூட்டணியில் என்று இருக்க வேண்டும். ஆனால், இது போன்ற தவறுகளை நாளும் காணலாம்.
“ராஜ்யசபா எம்.பி”
மாநிலங்களவை உறுப்பினர் எனத் தமிழில் குறிப்பிடலாமே!
“மாஜி மந்திரிகள்”
முன்னாள் மந்திரிகள் அல்லது முன்னாள் அமைச்சர்கள் என்று குறிக்கலாமே!
“ஊட்டி, கொடைக்கானலுக்கு பாய் சொல்லிட்டு.. இந்த சம்மருக்கு பிளான் பண்ணவேண்டிய சூப்பரான மலைவாசஸ்தலங்கள்!”
பாய், படுக்கை என்று சொல்ல வேண்டுமா?
தலம் என்னும் தமிழ்ச்சொல்லுடன் ஸ் சேர்த்து ஸ்தலம் என ஆரியச் சொல்லாக்கி விட்டனர். எனினும் ஊட்டி, கொடைக்கானலுக்கு விடை கொடுத்துவிட்டு, இந்தக் கோடைக்குத் திட்டமிடவேண்டிய சிறப்பான மலைவாழிடங்கள் என்பதே சரியாகும்.
“தேயிலை தோட்டங்களால் சூழப்பட்ட குளுமையான இடம் மூணார்.”
மூணாறு, அடையாறு, பெரியாறு என்று குறிப்பிடாமல் மூணார், அடையார், பெரியார் என்றே தவறாக எழுதியும் பேசியும் வருகின்றோம். ஆறு எப்படி ஆர் ஆகும்.
தேயிலைத் தோட்டங்களால் சூழப்பட்ட குளுமையான இடம் மூணாறு என்று இருக்கவேண்டும்.
“அவரை 5 வருடங்கள் ஒப்பந்தம் செய்தால் வரவில்லை.”
“அவரை 5 வருடங்கள் ஒப்பந்தம் செய்ததால் வரவில்லை” என்று இருக்க வேண்டும்.
“மே நாலந்தேதி சன்டை போட்டுக்கலாம்.”
நாலாந்தேதி -நாலாம் நாள் என்றெல்லாம் குறிக்காமல் அஃதென்ன நாலந்தேதி. அதென்ன சன்டை? சண்டை என்று கூட எழுதத் தெரியாதா?
“தமிழீசையின் வாக்கு பலிக்குமா?”
தமிழிசையின் வாக்கு பலிக்குமா? என்றுகூட குறிக்கத் தெரியாதா?
“அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிட்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வென்றுள்ளார்.”
இரு முறை பெயரைக் குறிப்பிட்டுச் செய்தியைக் குழப்புவானேன்?
எனது மகன், அவரது மகன் என்று சொல்லக் கூடாது. மகன் உடைமைப் பொருளல்ல. எனக்கு மகன், அவருக்கு மகன் என்றுதான் வரவேண்டும். அவர் மகன் என்று சொன்னால் போதும்.
அவர் மகன் உதயநிதி தாலின், தான் போட்டியிட்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வென்றுள்ளார் எனலாமே!
“மாலை 6 மணி வரை நான் விஜய்யுடன் வீட்டில் தான் இருந்தார்.”
நான் எனத் தன்மையில் குறிப்பிட்டு விட்டு இருந்தார் எனப் படர்க்கையில் முடித்துள்ளது ஏன்?
மாலை 6 மணி வரை நான் விசய்யுடன் வீட்டில் தான் இருந்தேன் என்று வர வேண்டும். அல்லது மாலை 6 மணி வரை விசய் வீட்டில் தான் இருந்தார் என வர வேண்டும்.
“இதன் காணமாகவே ‘
இதன் காரணமாகவே என்பதில் ‘ர’ எழுத்தைக் காணாமல் போக்கி விட்டார்கள்.
“என்னை வலுக்கட்டாயமாக கருவை செய்தார்.”
கருவை செய்தாரா? கருக்கலைப்பு செய்தார் என்றுதானே இருக்க வேண்டும்.
ஃஃஃ அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 10 June 2026
(வெருளி நோய்கள் 1541-1545 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1546-1550
பகடை(dice) குறித்த வரம்பற்ற பேரச்சம் பகடை வெருளி.
சூதிற்கு எதிராகத் திருவள்ளுவர் திருக்குறளில் சூது என்று ஓர் அதிகாரமே படைத்துள்ளார்.(அதிகாரம் 94).
உருட்டப்படுகின்ற பகடையால் பொருளை வைத்துச் சூதாடும் பொழுது பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் புறத்தே செல்லும என்கிறார் திருவள்ளுவர்.
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்(குறள் 933).
என்பது அக்குறள்.
நளவெண்பா, மகாபாரதக் கதைகளில் மன்னர்களே சூதால் யாவற்றையும் இழப்பது கூறப்பட்டுள்ளது.
எனவே, பகடை யாடுவது குறித்து அஞ்சி விலக்குவது தேவையான ஒன்று. ஆனால், பகடையை உருட்டிக் கொண்டே அதன்மீது அளவுகடந்த பேரச்சம் கொள்வதும் அவரது குடும்பத்தினர் வரம்பற்ற தேவையற்ற பேரச்சம் கொள்வதும் பகடை வெருளியாகிறது.
00
பகல்நேர ஒளியின் மீது ஏற்படும் அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் பகலொளி வெருளி.
இருட்டுப் பொழுதில் திருட்டுத் தொழில் புரிவோருக்குத்தான் பகலாளி பேரச்சம் தர வேண்டும். ஆனாலும் கண்கூசச் செய்யும் சூரிய ஒளியால் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். பகலொளி மருந்தாக இருந்தாலும் உரனி 4 (வைட்டமின் டி) தருவதாக இருந்தாலும் உடலைக் கருக்கச் செய்யும் என அஞ்சுவோர் உள்ளனர்.
கண்களைப் பாதிக்கும் சூரிய வெப்பம் தாங்காமல் மயக்கம் வரும், வேனற்கட்டிகள் வந்து துன்புறுத்தும், தோல் புற்று நோய் வரும், திரைவு(தோற்சுருக்கம்) ஏற்படும், உடல் வறட்சி ஏற்படும், தோல்வீக்கம், படை நோய் முதலியன வரும் என எதிர்மறைச் சிந்தைனைகளை மட்டும் வளர்த்துக் கொண்டு தேவையற்ற பேரச்சம் கொள்வர்.
phengo என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் சூரிய ஒளி / பகல் ஒளி.
eoso என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் விடியலொளி / புலர்பொழுது
00
பகற்கனவு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பகற்கனவு வெருளி.
பகற் கனவு பலிக்காது என்பார்கள். ஆனால், மளிகைக்கடை உடன்பிறப்புகள் தொடர்பான தொலைக்காட்சித் தொடரில் பகற்கனவு பலிக்கும், இரவுக்கனவு பலிக்காது என்பதுபோல் பேசும் காட்சிகள் இடம் பெறுகின்றன. பழமொழி குறித்துப் பொருட்படுத்தாமல் கனவில் தீய நிகழ்வுகள் நடைபெறின் அவை நடைபெற்றுவிடும் என்று அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
கஞ்சா, அபின் ஆகியவற்றைக் குழாய்வழியாக நுகர்வோர்கள் காணும் இனிய கனவுகளுக்கு ஒப்பானது என்பதால் ஆங்கிலத்தில் இதனைக் குழாய்க் கனவு(Pipe dream) என்பர். நம்பத்தகா நம்பிக்கைக் கனவு என்றே இதனை விளக்குவர். இருப்பினும் எதிர்மறையான பகற்கனவு குறித்துத் தேவையற்று அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
Oneiropolima என்னும் கிரேக்கச்சொல்லிற்குப் பகற்கனவு எனப் பொருள்.
00
பகற்பொழுது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பகற்பொழுது வெருளி.
சூரிய ஒளி வெருளி(Heliophobia), பகலொளி வெருளி (Phengophobia/Eosophobia) போன்ற வெருளியே பகற்பொழுது வெருளி. ஆனால், சூரியன் இருந்தாலும் மறைந்திருந்தாலும் பகற்பொழுது குறித்துத் தேவையற்ற பேரச்சம் ஏற்படுவதால் தனியாக் குறித்துள்ளனர். பகற்பொழுது வெருளி எதிர்காலம் குறித்த நம்பிக்கையற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றனர்.
00
பகா எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் பகா எண் வெருளி.
இலத்தீன் மொழியில் ‘primus’ என்றால் முதல் என்று பொருள். இது பகா எண்களுக்கான அடிப்படை.
எண் வெருளி(Arithmophobia or Numerophobia), கணக்கு வெருளி (Mathemaphobia/Mathemophobia) உள்ளவர்களுக்குப் பகா எண் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5