என் பெற்றோர் ஒரு குக்கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாக இருந்ததினால், தங்கள் பிள்ளைகளின் மேற்படிப்புக்காக, பசுமலையில் வீடெடுத்துத் தங்கவைத்து, அங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் படிக்கவைத்தனர்.
அங்கு எங்களுக்கு ஆக்கிப்போட்டு, அருமையாக வளர்த்தவர், எங்கள் தந்தையின் தங்கை – எங்கள் அத்தை – சக்கம்மாள் என்பவர்.
படிப்பறிவு அவருக்கு இல்லை. பட்டறிவு மிக அதிகம்.
அவர் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சொல் ’அருந்தல்’.
ரொம்ப அருந்தலா இதைச் செய்யலாம் என்பார்.
அருந்தல் என்பது குடித்தல் என்று பொருள்தரும். ஆனால் அவர் சொல்லும் இடத்தை வைத்துப் பார்த்தால் ரொம்ப rare என்ற பொருள் தரும். நாங்களும் புரிந்துகொள்வோம்.
இப்போது பொதிகை நிகண்டு – இரண்டாம் பகுதியில் ஒரு நூற்பாவைப் பார்த்தேன்.
” அருந்தல் அருமையும் உண்டலும் ஆகும்”
இங்கே அருமை என்பது rare என்ற பொருள் தரும்.
ரொம்ப rare ஆன இச்சொல்லை நாம் அடிக்கடி பயன்படுத்தலாமே.
ப.பாண்டியராஜா