(குறட் கடலில் சில துளிகள் 46: மறு பயன் இனத்தின் சிறப்பால் உண்டாகும்! – தொடர்ச்சி)
குறட் கடலில் சில துளிகள்
47: நல்லினத்துடன் சேர்க!
நற்சேர்க்கை போல் சிறந்த துணை இல்லை!
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல். (௪௱௬௰ – 460)
உலகில் நல்லினம்போல் துணையாய் அமைவது வேறில்லை; தீயினம்போல் துன்பம் தருவது யாதுமில்லை.
பதவுரை
நல்=நல்ல; இனத்தின்=சேர்க்கையைவிட; ஊங்கு=மேற்பட்ட; துணை=துணை; இல்லை=இல்லை; தீ=தீய; இனத்தின்- சேர்க்கையைவிட; அல்லல்=துயர்; படுப்பதூஉம்=உண்டாக்குவதும்/ தருவதும்; இல்=இல்லை.
‘ஊங்கு’ என்ற சொல்லுக்கு மிக்க, மேலாயிருப்பதொரு, சிறந்ததாகிய, சிறந்த, மேலான, மிகுந்தது, போல, மேம்பாடு என்றவாறு பல பொருள்கள் உள்ளன.
படுப்பதூஉம் – இன்னிசையளபெடை
நம்முடனான சேர்க்கை நல்லதாய் இருப்பின் அதுவே சிறந்த துணை என்கின்றனர். சேர்க்கை கெட்டதாக இருப்பின் அதைவிட வேறு கேடு எதுவும் இல்லை.
நல்லினம் நம்மை நல்ல பாதையில் அழைத்துச் செல்லும்; அறிவின் பாதையில் இட்டுச் செல்லும்; தீயவற்றை விலக்க வழி காட்டும்; துன்பம் வராமல் காக்கும்; நாம் கேட்காமலேயே நமக்குத் துணையாக இருக்கும்.
தீ யினமோ இதற்கு நேர்மாறான விளைவுகளை உருவாக்கும்; தீய பாதையில் செல்ல வைக்கும்; அறியாமையின் பக்கம் அழைத்துச் செல்லும்; நல்லனவற்றை விலக்கி வைத்துவிடும்; இன்பம் வருவதற்குத் தடையாக இருக்கும்; கூடவே இருந்து பகையாக இருக்கும்.
நல்ல எண்ணம் கொண்ட மனிதன் வழிமாறி தீய கூட்டத்துடன் சேர்ந்தால் துன்பம்தான் விளையும். ஆதலின் இச்சேர்க்கை பகைவருடன் கூட்டு வைத்துக் கொள்வதற்கு ஒப்பாகும். தீய சேர்க்கை அறிவிலிருந்து விலக்கி அறியாமை பக்கம் அழைத்துச் செல்வதால் பகையாகிறது. எனவே, தீய சேர்க்கை கேடு நிறைந்த வாழ்க்கையைத் தருகிறது.
ஆனால் நல்ல கூட்டத்துடன் சேர்ந்தால் முள் நிறைந்த பாதையைக்கூட மலர் நிறைந்த பாதையாக மாற்றி விடும். தீயன எவை, நல்லன எவை என வழிகாட்டி நல்ல பாதையில் நடைபோடச் செய்யும். வாழ்க்கைப் பாதையைச் செப்பனிடச் செய்து, நன்மை நிறைந்த வாழ்க்கையைத் தரும். எனவேதான் நல்லினத்தைத் துணை எனவும் தீயினத்தைப் பகை எனவும் திருவள்ளுவர் கூறுகிறார்.
“கூடா நட்பு கேடாய் முடியும்” என்னும் ஆன்றோர் வாக்கும் தீய சேர்க்கையின் தீமையைக் கூறும்.
திருவள்ளுவரும் உடன்பாட்டு முறையில் ‘பெரியாரைத் துணைக் கோடல்’ என அதிகாரம் தந்ததுடன் ‘கூடா நட்பு’ என்றும் ‘சிற்றினம் சேராமை’ என்றும் தனித்தனியே ஈரதிகாரங்களைத் தந்துள்ளார். நல்ல சேர்க்கையை அடையாளம் காணவே ‘நட்பாராய்தல்’ என்றும் அதிகாரம் தந்துள்ளார்.
பலமுறையும் ஆராய்ந்து மேற்கொள்ளாத நட்பு தீயதாக அமையின் அது சாகும்வரை துன்பத்தைத் தருவதாக அமையும்.
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும். (திருக்குறள், ௭௱௯௰௨ – 792)
என்கிறார் திருவள்ளுவர்.
கூடா நட்பு குறித்து நாலடியாரும் விளக்கியுள்ளது.
“ஏமாந்துபோகாதீர்கள்; ‘கெட்ட தோழமை நல்ல ஒழுக்கத்தைக் கெடுக்கும்'” (1 கொரிந்தியர் 15:33) என்கிறது விவிலியம்.
இவ்வாறு உலக நூல்கள் பலவும் கூடா நட்பை அதன் தீமை கருதி விலக்கவே கூறுகின்றன.
எனவே,
துணையாய் அமையும் நல்லினத்துடன் சேர்க!
தீமை விளைவிக்கும் தீயினத்தை விலக்குக!
– இலக்குவனார் திருவள்ளுவன்
00
(சங்கப் புலவர்கள் பொன்னுரை 34. ஒப்பிட இயலா அளவு நல்லாட்சி புரிக! – தொடர்ச்சி)
சங்கப்புலவர்கள்பொன்னுரை– 35:அளவுக்குமீறிக் கொள்ளாதே!
”மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்
உரஞ்சாச் செய்யார் உயர்தவம் வளங்கெடப்
பொன்னுங் கொள்ளார் மன்னர்”
நற்றிணை – 226. 1-3; பாலை
ஆசிரியர்: கணி புன்குன்றனார். கணியன் பூங்குன்றார் என்று சிலர் கூறினாலும் பலர் அதனை மறுக்கின்றனர்.
சொற்பொருள்
மரம்=மருந்து மரம்; சா=சாகும்படி, அழியும் படி; மருந்தும்=மரத்திலுள்ள மருத்துவப்பயன்தரும் இலை காய் முதலியன; உரம்=மன வலிமை; சா=அழியும்படி; செய்யார்=மேற்கொள்ளார்; உயர்தவம்=கடுமையான தவம்;
வளம்=நாட்டு வளமை; கெட=கெடுமாறு, குறையுமாறு, அழியுமாறு; பொன்னும்=வரியாகச் செல்வத்தை; கொள்ளார்=எடுத்துக்கொள்ள மாட்டார்; மன்னர்=ஆள்வோர்.
பொருள்
இவ்வுலக மக்கள் மரம் பட்டுப்போகும்படி அதன்பாலுள்ள மருத்துவப் பயன்தரும், இலை, பூ, காய், கனி, பட்டை, வேர் முதலிய அனைத்துப் பொருள்களையும் முழுமையாகப் பறித்துக்கொள்ள மாட்டார்கள்.
அதேபோல் தம் வலிமை முழுமையும் குன்றுமாறு தவம் மேற்கொள்ள மாட்டார்கள்.
அரசர் நாட்டு மக்கள் செல்வமெல்லாம் குறையும் வண்ணமோ அழியும் வண்ணமோ அவர்களிடமிருந்து வரித் தொகைகளைப் பெறமாட்டார்.
விளக்கம்
மருத்துவப் பயனுக்காக மரத்திலுள்ள இலை முதலியவற்றை எடுத்துக் கொள்வோர் மேலும் மேலும் தேவைப்படும் என்று அனைத்தையும் முற்றிலுமாக எடுத்துக்கொள்ள மாட்டார்.
அவ்வாறு கொள்வதால் மரம் அழிந்து மேற்கொண்டு யாரும் பயன் பெற இயலாமல் போய்விடும்.
தங்களின் மன வலிமையும் உடல் வலிமையும் கெடுமாறு கடுந்தவம் மேற்கொண்டால், அழிவே ஏற்படும்.
நாட்டு மக்களிடம் வரியை அளவோடுதான் பெற வேண்டும். அவ்வாறு இல்லாமல் வரி கொடுக்கிறார்கள் என்பதாலும் மக்களிடம் செல்வம் இருக்கிறது என்பதாலும் அளவு கடந்த வரியைக் கொள்ள மாட்டார்.
பயன்கிடைக்கும் என்பதற்காக ஒரு சேர முற்றுமாக எதையும் கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தும் பொன் முட்டையிடும் வாத்து கதை மூலம் நாம் இதைத்தானே அறிகிறோம்.
அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சல்லவா?
இப்பாடலில் வரும் உவமைகள் மூலம் தலைவி, தன் தலைவன், தன்னுடன் வாழாமல் பொருளீட்டச் செல்வது முறைதானா எனக் கேட்கிறாள். அவர் பிரிந்தால் தன் உயிரும் பிரியும் அன்றோ எனக் கேட்கிறாள்.
பாண்டியன் அறிவுடை நம்பியிடம் புலவர் பிசிராந்தையார்
“காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே”
எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடலில் (எண்-184) அளவாக வரி பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியிருப்பார்.
மக்களிடம் அளவு கடந்து வரி பெறுவது வழிப்பறிக் கள்வன் கையில் வேல் வைத்துக் கொண்டு கைப்பொருள்களைக் கேட்பது போன்றது என்கிறார் திருவள்ளுவர்.
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு. (௫௱௫௰௨ – 552)
என்னும் திருக்குறளே அது.
வரியாயினும் வேறு பயன்பொருள் எதுவாயினும்
அளவுக்கு மீறிக் கொள்ளாதே
என்னும் சங்கப் புலவர்கள் பொன்னுரைக்கிணங்க நாமும் நடப்போம்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
தாய், 28.05.2026