ஐரோப்பிய தமிழியல் கருத்தரங்கம்
முனைவர் நா. கண்ணன்
அக்டோபர் 19, 2024 அன்று நடந்த ஐரோப்பிய தமிழியல் கருத்தரங்கம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், நாம் நினைத்துக்கூடப் பார்த்திராத அளவில் ஐரோப்பிய அறிஞர்கள் தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு உதவியிருக்கின்றனர். குறிப்பாக ஜெர்மன் நாடு!
சில நேரம் தோன்றும், ஏன் மதுரைப் பல்கலைக்கழகத்திலிருந்து எல்லோரும் அமெரிக்கா போனபோது (அக்கனவு என்னிடமும் இருந்தது) நான் ஜப்பான் போனேன். பின் ஜெர்மனி, கொரியா, மலேசியா போனேன் என்று? எல்லாம் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக என்று இப்போது தோன்றுகிறது.
ஒன்று, நான் தொடங்கி வைக்கவில்லையெனில் யாரும் முனைப்பாகக் கொரியத் தமிழ் தொடர்பு பற்றி இவ்வளவு விரிவாக ஆய்வு செய்திருப்பார்களா என்பது சந்தேகமே. இத்துறை பற்றிய ஆழமான முதல் நூல்கள் த.ம.அ யினுடையது. முதன் முறையாகத் தமிழ் மொழியிலிருந்து நேரடியாக கொரிய மொழிக்கு என் நூல் மொழி பெயர்ப்பாகியுள்ளது (ஆங்கில வழியில் அல்ல).
இரண்டு, தொழில் நுட்பத்தில் முன்னேறிய ஜெர்மனியில் வாழ்ந்து கொண்டு தமிழின் வளங்களை மின்வெளிக்கு (ஆறாம் திணைக்கு)க் கொண்டு வர, தமிழ் மரபு அறக்கட்டளை எனும் அமைப்பை உருவாக்கியிருப்போமா? என்பது! இதை ஜெர்மனி தமிழுக்குச் செய்திருக்கும் நூற்றாண்டு பங்களிப்பின் தொடர்ச்சி என்று கூடச்சொல்லலாம்.
இதைப் புரிந்து கொள்ள முதலில் டாக்டர் சுபாஷினியின் "ஐரோப்பிய தமிழியலின் தொடக்கம்" எனும் ஆழமான சரித்திர உரையைக் கேட்க வேண்டும். அந்தக்காலக்கட்டத்தில் என் சிந்தனை, எங்கள் இருவரின் செயற்பாடு எவ்வாறு இருந்தது என்பதை எனது நோக்கவுரையிலிருந்து அறிந்து கொள்ளலாம். பொதுவாக நாம் ஜெர்மனி இந்தியவியலரின் பங்களிப்பு என்பது சமஸ்கிருத ஜெர்மன் தொடர்பு பற்றியதாகவே இருந்திருக்கிறது என எண்ணுகிறோம். உண்மையில், ஆதித் தொடர்பு என்பது ஜெர்மனிக்கும் தமிழுக்கும்தான் என்பதை டாக்டர் சுபாவின் உரை நமக்குக்காட்டும்.
மேலும், எனது பேச்சில் ஒரு முக்கியமான செல்நெறி பற்றிச் சுட்டிக்காட்டுகிறேன். அதாவது நூற்றாண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் த.ம.அ யின் முயற்சியால் ஜெர்மன் தமிழ் தொடர்பு உயிரூட்டப்பட்டிருக்கிறது. இதை வளர்த்தெடுக்க வேண்டும். இதை ஜெர்மன் குடியுரிமை பெற்றிருக்கும் என்னாலும், நிரந்தர வதியிட உரிமை பெற்றிருக்கும் சுபாவைத் தவிர வேறு யாரால் வழி நடத்த முடியும்? தோள் கொடுங்கள், செய்வோம்!
திரு. சு.ஜெபகுமாரின், "ரேனியசின் எழுத்துலகம்" எனும் உரை நேர்த்தியாக எவ்வாறு கிறிஸ்தவப் பாதிரிகள் தமிழ் வாழ்வோடு இணைந்து நம் பண்பாட்டுச் செழுமைக்குப் பங்களித்து இருக்கிறார்கள் என்பதை இயம்பும். இவ்வுரைகளுக்குப் பின் நடந்த இலக்கிய, பண்பாட்டு, சமூகவியல் அலசல் பல முக்கியமான கருத்துக்களை முன்வைக்கிறது.
சாதீயச் சிந்தனையில் ஊறிய தமிழ் நெஞ்சம், கிறிஸ்தவம், ஜெர்மனி என்றவுடன் ஏதோ சதித்திட்டம் இதன் பின்னால் உள்ளது என சிந்திக்கத் தொடங்கும். எதையும் அறிவுப் பூர்வமாகக் காணும் அறிவியல் நோக்கை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஐரோப்பியர்கள் மதப்பரவலுக்குத்தான் வந்தார்கள் என்பது பொதுப்புரிதல். அந்தக்கருதுகோளையே இக்கருத்தரங்கு உடைக்கிறது. கிறிஸ்தவம் அவர்களுக்கு உடன் நின்றது உண்மை. ஆயின் அவர்கள் இங்கு வந்த பின் செய்ததெல்லாம் சமூக சேவையே. உதாரணமாக, இந்தியாவின் முதல் பெண் கல்விப் பள்ளிகள் தமிழகத்தில்தான் நிறுவப்படுகின்றன. இரண்டு, விளிம்பு நிலை மாந்தர்க்குக் கல்வி என்பதும் இங்கு நிறுவப்படுகிறது. இந்தியாவின் முதல் அச்சுப்பதிப்பு தமிழில் நடக்கிறது. தம்பிரான் வணக்கம் எனும் நூலே இந்தியாவின் முதல் அச்சுப்பிரதி. விளிம்பு நிலை மாந்தர்க்கான மருத்துவ வசதிகளைச் செய்தவர்கள் இவர்கள். இந்தியா தனது அரதப்பழசான வர்ணத் தர்ம சிந்தனையிலிருந்து வெளியே வர ஜெர்மானியரின் (ஐரோப்பியரின்) செயற்பாடு எவ்வளவு உதவியது என்பதை இக்கருத்தரங்கு தெளிவுடன் விளக்கும்.
நாம் திறந்த மனதுடன் சரித்திர உண்மைகளைக் கேட்டுப் பகுத்தாயக் கற்றுக் கொள்ள வேண்டும். த.ம.அ ஒரு நீண்ட பயணத்தைத் தொடங்கியுள்ளது அதை வளர்த்து எடுக்க உங்கள் ஆதரவு தேவை!
காணொளி:
https://www.facebook.com/share/v/DxCXm3qbn5TJVRf7/REF:
https://www.facebook.com/story.php?story_fbid=10162145775897299&id=593307298