அன்று முதல் இன்று வரை
சிறுகுறிப்புகள் – நா.முத்துநிலவன்
தொல்பழங்காலம்:
· பெருங்கற்கால மக்கள். வேளாண்மை சார்ந்த தொழிற் கருவிகள் அனைத்திலும் இரும்பு உலோகத்தையே அதிகம் பயன்படுத்தினர்.
· இரும்பைப் பயன்படுத்திய பெருங்கற்காலம் இரும்புக் காலம் எனப்படும்.
· பெருங்கற்கால மக்கள் பயன்பாட்டில் தங்கம், வெண்கலம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள் குறைவாகவே இருந்துள்ளன.
· கல் பதுக்கை அல்லது கல் திட்டை, குரங்குப் பட்டடை எனப்படும்.
· மட்கலங்களில் கருப்பு, சிவப்பு, கருப்பு-சிவப்பு, செம்பழுப்புப் பூச்சு என நான்கு வகை மட்கலங்கள் காணப்படுகின்றன.
· ஆதிச்ச நல்லூரில் வேல்(சூலம்), திரிசூலம் என ஆயுதங்கள் கிடைத்துள்ளன.
· “சுடுவோர், இடுவோர், தொடுகுழிப் படுப்போர், தாழ்வயின் அடைப்போர், தாழியிற் கவிப்போர்” என ஈமச் சின்னங்களை மணிமேகலை பாடுகிறது.
· இந்திய நாட்டைப் பொருத்தவரை விந்திய மலைக்குத் தெற்கேதான் பெருங்கல் சின்னங்கள் அதிகமாகக் கிடைத்துள்ளன.
· தமிழ்நாட்டுப் பெருங்கற்கால மட்கலங்களின் குறியீடுகள், சிந்துவெளிக் குறிகளுடன் ஒத்துள்ளன, பிராமி எழுத்துகளில் சிலவற்றை ஒத்துள்ளன.
· பெரிய கல்லால் ஆன ஈம (இறுதிச்சடங்கு) சின்னங்களைப் பயன்படுத்திய மக்கள் வாழ்ந்த காலம் பெருங்கற் காலம் என்று வரையறுக்கப் படுகிறது.
· இறந்தவர்க்கு நடப்படும் கல், இலக்கியங்களில் நடுகல் எனப்படுகிறது.
· உணவு ஆக்கலும், ஆடை உருவாக்கலும் தவிர்த்த, மனித குலத்தின் பெரிய கண்டுபிடிப்பு, தன் கருத்தைப் பிறர் அறிய உதவும் மொழியைக் கண்டதே!
· குமரிக் கண்டம் தமிழர் தோன்றிய நிலம் என்றவர் தேவநேயப் பாவாணர்.
· குமரிக் கண்டம் எனும் நிலம், அறிவியலால் உறுதி செய்யப்பட வில்லை.
பழந்தமிழகம்:
· தமிழ், ஈபுரு, பாரசீகம், அரபு, சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், சீனம் ஆகிய 8 மொழிகள் உலகின் பழைய செம்மொழிகள் எனப்படுகின்றன
· சுமேரியா, பாபிலோனியா, அஸிரியா, எகிப்து, அரபு, சீன நாடுகள் பழந்தமிழர் வாணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகளாகும்.
· முழுமையாகக் கிடைத்துள்ள பழந்தமிழ் இலக்கணநூல் தொல்காப்பியம்.
· தொல்லியல் சான்றுகள், கல்வெட்டுகள், பழந்தமிழ் இலக்கியங்கள், மற்றும் வெளிநாட்டார் குறிப்புகளில் பழந்தமிழர் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
· தமிழ்பிராமி, தமிழி, கிரந்த எழுத்து மற்றும் தற்காலத் தமிழ் எழுத்துமுறை ஆகியன தமிழ் எழுத்து உருவ வளர்ச்சியைக் காட்டுகின்றன.
· இண்டிகா, பிளனி, தாளமி, மெகஸ்தனிஸ் முதலான வெளிநாட்டவரின் நூல்கள் பழந்தமிழகம் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கின்றன.
· ஆதிச்ச நல்லூர், உத்தரமேரூர், புள்ளிமான் கோம்பை, கீழடி, பொற்பனைக் கோட்டை முதலான ஊர்களில் தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.
தமிழ்ச் சங்கங்கள் பற்றிய செய்திகள்:
· மூன்று சங்கங்கள் இருந்ததாக உ.வே.சாமிநாதர், தேவநேயப் பாவாணர், கா.அப்பாத்துரையார், கா.சுப்பிரமணியனார் போலும் தமிழறிஞருடன் இறையனார் அகப்பொருள் எனும் இலக்கண நூலும் சொல்கிறது.
· “மூன்று சங்கங்கள் இல்லை, ஒரு சங்கம் இருந்திருக்கலாம்“ என்பது, கே.ஏ.நீலகண்டனார், சேஷகிரியார், இராமச்சந்திரனார் கருத்து,
· “தமிழ்ச் சங்கம் ஓர் அழகான கற்பனை” என்பது, கே.என். சிவராஜனார், பி.டி.சீனிவாசனார், எஸ்.வையாபுரியார், போலும் தமிழறிஞர் கருத்து.
· சங்கப் பாடல்களில் சங்கம் எனும் சொல் இல்லை.
· பாண்டிய மன்னர்கள், தென்மதுரை, கபாடபுரம், வடமதுரை ஆகிய நகரங்களில் முச்சங்கங்கள் அமைத்து தமிழ் வளர்த்தனர் என்பர்.
· பாண்டிய மன்னர்கள் கடல்கொண்ட தென்மதுரை தமிழ் அறிஞர் பெருமக்களைக் கொண்டு தமிழ் இலக்கிய ஆய்வும், செய்யுள் இயற்றுதலும் நடைபெற்றன. அதுவே முதற் சங்கம் என்பது ஒரு கருத்து.
· கடல் பெருக்கெடுத்து வந்ததால் தென்மதுரை அழிந்தது. அதன் பிறகு கபாடபுரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர்கள் ஆண்டார்கள். அங்கு அமைந்ததே இடைச் சங்கம் என்பது ஒரு கருத்து. கபாடபுரமும் கடலால் அழிவுற்ற பின் இன்றைய மதுரைக்குப் பாண்டியர் தலைநகரை மாற்றினர். இங்கும் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்று கி.பி.200 வரை அங்கு கடைச்சங்கம் நடந்தது என்பதும் ஒரு கருத்து.
· “சங்கம்“ எனும் சொல் “நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன் காண்” எனும் அப்பர் தேவாரத்தில் உள்ளது.
· சங்கப் பாடலின் அடிக்குறிப்பில் அரசன் ஒருவனைப் பாடிய புலவரின் அடுத்தடுத்த பாடல்களில் அவனை அவர் பாடியது என்றே இருக்கும்.
· சின்னமனூர் செப்பேடுகள், பாண்டியர்கள் மதுரையில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தது பற்றிய குறிப்புகளைத் தருகின்றன.
சங்க காலமும், சங்க இலக்கியமும்:
· பொ.யு.மு.(கி.மு.)5ஆம் நூற்றாண்டு முதல், பொ.யு.பி(கி.பி.)3அம் நூற்றாண்டு வரையான காலமே சங்க காலம் என்பது ஆய்வாளர் பொதுக் கருத்து.
· எட்டுத் தொகை பத்துப் பாட்டு எனும் 18நூல்களே சங்க இலக்கியம்
· எட்டுத் தொகையில் உள்ள எட்டுத் தொகுப்பு நூல்களும், பத்துப் பாட்டில் உள்ள 10 தனிநெடும் பாட்டு நூல்களுமே பாட்டும் தொகையும் ஆகும். இந்த 18நூல்களுமே தமிழின் பதினெண் மேற்கணக்கு நூல்கள் ஆகும்.
· சேரமன்னர் வரலாற்றை அறியத் தரும் சங்க இலக்கிய நூல் –பதிற்றுப்பத்து.
· சங்க காலச் சேர மன்னர்களில் முக்கியமானவன் சேரன் செங்குட்டுவன்.
· சங்க இலக்கியம் என்பது பாட்டும் தொகையும் இரு தொகுப்பு நூல்களாகும்.
· சங்க இலக்கியத்தில் உள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை -2381
· சங்க இலக்கியத்தில் பாடியுள்ள புலவர்களின் மொத்த எண் – 473
· சங்க இலக்கியத்தில் அதிக அளவில் பாடிய கபிலரின் பாடல்கள் -235
· சங்க இலக்கியத்தில் பெண்புலவரில் அதிகம் பாடிய ஔவை பாடல்கள் -59
· சங்க இலக்கியத்தில் ஒரு பாடலே பாடிய புலவர்களின் எண்ணிக்கை – 293
· சங்க இலக்கியத்தில், 25 சேர மன்னரை மட்டும் பாடிய புலவர் எண்ணிக்கை -27
· சங்க இலக்கியத்தில், 21 சோழ மன்னரை மட்டும் பாடிய புலவர் எண்ணிக்கை -24.
· சங்க இலக்கியத்தில், 25 பாண்டிய மன்னரை மட்டும் பாடிய புலவர் எண்ணிக்கை -24
· சங்க இலக்கியத்தில் புலவர் ஒருவரால் மட்டும் பாடப்பட்ட புரவலர் எண்ணிக்கை-194
· சங்க இலக்கியத்தில் மதுரை பற்றிய பாடல்களின் எண்ணிக்கை -35
· சங்க இலக்கியத்தில் வையை பற்றிய பாடல்களின் எண்ணிக்கை -23
· சங்க இலக்கியத்தில் காவிரி பற்றிய பாடல்களின் எண்ணிக்கை -28
· சங்க இலக்கியத்தில் தொண்டி பற்றிய பாடல்களின் எண்ணிக்கை -12
· சங்க இலக்கியத்தில் வஞ்சி பற்றிய பாடல்களின் எண்ணிக்கை -10
· சங்க இலக்கியத்தில் இமயம் பற்றிய பாடல்களின் எண்ணிக்கை -20
· சங்க இலக்கியத்தில் தெளிவாகப் பெயர் தெரிந்த பெண் புலவர்கள் -30
· புறநானூற்றை அச்சுவடிவில் முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சாமிநாதர்
· நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித் தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய 8நூல்களே எட்டுத்தொகை நூல்கள். எட்டுத் தொகை நூல்களை நினைவிற் கொள்ள உதவும் பழைய வெண்பா-
"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப் பத்து, ஓங்கு பரிபாடல,
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்,புறமென்று
இத்திறத்த எட்டுத் தொகை."
· திருமுருகாற்றுப் படை, பொருநர் ஆற்றுப் படை, சிறுபாண் ஆற்றுப் படை, பெரும்பாண் ஆற்றுப் படை, முல்லைப் பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல் வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடு கடாம் ஆகிய இந்தப் பத்து நூல்களும் பத்துப் பாட்டு நூல்கள் ஆகும். பத்துப்பாட்டு நூல்களை நினைவிற் கொள்ள உதவும் பழைய வெண்பா-
"முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து."
பத்துப் பாட்டு நூல்களும் அவற்றின் ஆசிரியர்களும்"
· திருமுருகாற்றுப் படை- ஆசிரியர் - நக்கீரர்,
· பொருநர் ஆற்றுப் படை- ஆசிரியர் -முடத்தாமக் கண்ணியார்,
· சிறுபாண் ஆற்றுப் படை- ஆசிரியர் -இடைக்கழி நாட்டு நத்தத்தனார்,
· பெரும்பாண் ஆற்றுப் படை- ஆசிரியர் -கடியலூர் உருத்திரங் கண்ணனார்,
· முல்லைப் பாட்டு- ஆசிரியர் -நப்பூதனார்,
· மதுரைக் காஞ்சி- ஆசிரியர் -மாங்குடி மருதனார்,
· நெடுநல் வாடை- ஆசிரியர் -நக்கீரர்,
· குறிஞ்சிப் பாட்டு- ஆசிரியர் -கபிலர்,
· பட்டினப் பாலை- ஆசிரியர் - கடியலூர் உருத்திரங் கண்ணனார்,
· மலைபடு கடாம்- ஆசிரியர் - இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார்.
எட்டுத் தொகை நூல்கள் பெரும்பாலும் பாடல் அடிகளின் எண்ணிக்கை அளவு மற்றும் பாடுபொருள் கொண்டே நூற்பெயர் தரப்பட்டிருக்கலாம்:
ஐங்குறுநூறு
· 3-முதல் 5அடிகளை உடைய அகப் பாடல்களைக் கொண்டது
· ஐங்குறுநூறு பாடல்கள், திணைக்கு100வீதம் பாடிய புலவர் எண்ணிக்கை-05ஆகும்
· ஐங்குறுநூறு தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்.
· ஐங்குறுநூறு தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரல் இரும்பொறை
குறுந்தொகை
· 4-முதல் 8அடிகளை உடைய அகப் பாடல்களைக் கொண்டது
· குறுந்தொகைப் பாடல்கள் 400, பாடிய புலவர் எண்ணிக்கை 203
· குறுந்தொகையைத் தொகுத்தவர் பூரிக்கோ
· குறுந்தொகையைத் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்ல
நற்றிணை
· 9-முதல் 12அடிகளை உடைய அகப் பாடல்களைக் கொண்டது
· நற்றிணைப் பாடல்கள் 400, பாடிய புலவர் எண்ணிக்கை 187
· நற்றிணையைத் தொகுத்தவர் பெயர் கிடைக்கவில்லை
· நற்றிணையைத் தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
அகநானூறு
· 13-முதல் 31அடிகளை உடைய அகப் பாடல்களைக் கொண்டது
· அகநானூறு, பாடல்கள் 400, பாடிய புலவர் எண்ணிக்கை 158
· அகநானூறு, தொகுத்தவர் உப்பூரி கிழான் மகன் உருத்திர சன்மன்.
· அகநானூறு, தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
புறநானூறு
· 4-முதல் 40அடிகளை உடைய புறப் பாடல்களைக் கொண்டது
· புறநானூறு, பாடல்கள் 400, பாடிய புலவர் எண்ணிக்கை 157
· புறநானூறு, தொகுத்தோர், தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
· புறநானூறு தொகுப்பில் அதிக பாடல்(33)பாடல் பாடியவர் ஔவையார்.
பதிற்றுப் பத்து
· 2 மரபைச் சேர்ந்த 8 சேரமன்னர் பற்றிய புறத்திணை நூல்
· பதிற்றுப்பத்து தொகுப்பில் முதற் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.
· பதிற்றுப்பத்து நான்காம் பத்துப்பாடல்கள் அந்தாதி முறையில் உள்ளன.
· பதிற்றுப்பத்து ஒவ்வொரு பா இறுதியிலும் பதிகம் எழுதிச் சேர்க்கப்பட்டது (இணைப்பு வெண்பாக்கள் பிற்காலத்தவை)
கலித்தொகை
· 13-முதல் 31அடிகளை உடைய அகப் பாடல்களைக் கொண்டது
· கலித்தொகை, பாடல்கள் 150, புலவர் ஐவர் (இதில் மாற்றுக் கருத்துண்டு)
· கலித்தொகை தொகுத்தவர் நல்லந்துவனார் எனும் சங்க காலப் புலவர்
· கலித்தொகை, தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
பரிபாடல்
· 25முதல் 400 அடிகளைக் கொண்ட இசைப்பாத் தொகுப்பு
· பரிபாடலில் கிடைத்த 70பாக்களில் 22பாடல்களே இப்போது உள்ளன.
· பரிபாடல் அகம், புறம் எனும் இருதிணைகளிலும் பாடப்பட்டுள்ளது.
· பரிபாடலில் 6-திருமாலை, 8-முருகனை, 8வையை ஆற்றைப் பற்றியன.
சங்ககாலத் தமிழகம்:
· சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவரே சங்க கால மூவேந்தர்கள் ஆவர்.
· பாரி, காரி, ஓரி, ஆய், அதியமான், பேகன், நல்லி ஆகிய எழுவரே - சங்க கால - கடையேழு வள்ளல்கள் ஆவர்.
· வஞ்சி சேர மன்னர் காலத்து மாநகரம் ஆகும்
· மதுரை பாண்டிய மன்னர் காலத்து மாநகரம் ஆகும்
· உறையூர், பிறகு தஞ்சை சோழ மன்னர் காலத்து மாநகரங்கள் ஆகும்
· சங்ககாலத்துறைமுகங்கள், பூம்புகார், தொண்டி, முசிறி, கொற்கை,
திணை:
· சங்க இலக்கியத்தின் தனிச்சிறப்பு அகம் புறம் எனும் இருபிரிவுகளாகும்
· குறிஞ்சி என்பது மலையும் மலைசார்ந்த இடமும் ஆகும்
· முல்லை என்பது காடும் காடுசார்ந்த நிலமும் ஆகும்
· மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த நிலமும் ஆகும்
· நெய்தல் என்பது கடலும் கடல்சார்ந்த இடமும் ஆகும்
· பாலை என்பது காடும் மலையும் திரிந்த வறண்ட பகுதியாகும்
சங்க இலக்கியங்கள்:
· அகநானூற்றின் மற்றொரு பெயர் – நெடுந்தொகை.
· குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்பன –அன்பின் ஐந்திணை
· ஐங்குறுநூற்றில் குறிஞ்சித்திணை நூறு பாடலைப் பாடியவர் – கபிலர்.
· சிறுபாணாற்றுப் படையில் பாடப்படும் மன்னன் – நல்லியக் கோடன்.
· மலைபடுகடாம் நூலின் மற்றொரு பெயர் – கூத்தர் ஆற்றுப் படை.
· பத்துப்பாட்டில் குறைந்த அடிகளைக் கொண்ட நூல் –முல்லைப்பாட்டு(103)
· பத்துப்பாட்டில் அதிக அடிகளைக் கொண்ட நூல் –மதுரைக் காஞ்சி(782அடி)
காப்பியங்கள்:
ஐம்பெரும் காப்பியங்கள் –
· சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியன தமிழின் ஐம்பெரும் காப்பியங்கள் .
· தமிழின் முதல்காப்பியம், முத்தமிழ்க் காப்பியம் – சிலப்பதிகாரம்.
· “அடிகள் நீரே அருளுக”என்று இளங்கோவடிகளைக் கேட்டவர் – சாத்தனார்.
· சிலப்பதிகாரம் 3 காதைகளையும் 30 காண்டங்களையும் உடையது.
· சிலப்பதிகாரத்தை அடியார்க்கு நல்லார் உரையுடன் அச்சில் முதலாவதாக 1892இல் பதிப்பித்தவர்- உ.வே.சாமிநாதர்.
· “தேரா மன்னா” எனும் வரி இடம்பெற்ற நூல் – சிலப்பதிகாரம்.
· சிலப்பதிகாரம் மணிமேகலை நூல்களை இரட்டைக்காப்பியங்கள் என்பர்.
· “உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே”வரி வரும் நூல்-மணிமேகலை.
· அறம்எனப்படுவது, உண்டி உறையுள் உடை தருதல் என்பது -மணிமேகலை
· மணிமேகலை பௌத்த சமய நெறிபரப்பும் நூல்.
ஐஞ்சிறு காப்பியங்கள் –
· ஐஞ்சிறு காப்பியங்களில் சூளாமணி ஆசிரியர் - தோலாமொழித் தேவர்
· நீலகேசி, உதயணகுமார காவியம் நூலாசிரியர் பெயர் கிடைக்கவில்லை
· வடமொழி யசோதரன் சரிதமே தமிழில் யசோதர காவியம் ஆயிற்று.
· பெருங்கதையில் வரும் உதயணன் வரலாறே உதயணகுமார காவியம்.
· மகதநாடு ராசமாகிரியம் நகரில் தொடங்கும் நூல் நாககுமார காவியம்.
செம்மொழித் தமிழ் நூல்களாக அரசு அறிவித்திருக்கும் நூல்கள் பட்டியல்-
(1) தொல்காப்பியம் - 1
(2) பதினெண் மேற்கணக்கு (பத்துப் பாட்டு எட்டுத்தொகை) நூல்கள்-18
(3) பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்-18
(4) முத்தொள்ளாயிரம்-1
(5) சிலப்பதிகாரம், மணிமேகலை-2
(6) இறையனார் அகப்பொருள்-1 ------------------ஆக மொத்தம்-41நூல்கள்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்:
திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, நான்மணிக் கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்று ஐம்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, சிறுபஞ்ச மூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி, கைந்நிலை, ஆகிய 18நூல்களும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாம். நூல்களை நினைவிற் கொள்ள உதவும் பழைய வெண்பா-
"நாலடி நானாற்பது ஐந்திணை,முப்
பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம்
இந்நிலைய காஞ்சியோடு, ஏலாதி என்பவே
கைந்நிலைய ஆம்கீழ்க் கணக்கு"
· பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சங்கம் மருவிய கால அறநூல்கள் .
· பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில், நீதி நூல்கள் 11, புறப்பொருளில் ஒரு நூல், அகப் பொருளில் 6 நூல்கள் அமைந்துள்ளன.
· முப்பால் என்பது திருக்குறளுக்கு வழங்கும் மற்றொரு பெயராகும்.
· திருக்குறள் முதலில் அச்சேறிய ஆண்டு –பொ.யு.பி.(கி.பி.)1812.
· நாலடி இரண்டடி என்பதில் இரண்டடி குறள், நாலடி என்பது – நாலடியார்.
· நாலடியாரில் 40 அதிகாரங்கள், 400 பாடல்கள் உள்ளன.
· பழமொழி நானூறு எழுதியவர் – முன்றுரையரையனார்.
· தொடர்ச்சியான 4 செய்திகளைக் கூறும் அறநூல் – நான்மணிக் கடிகை.
· ஐந்து,ஐந்தாக அறக் கருத்துகளைக் கூறும் அறநூல் – சிறுபஞ்ச மூலம்
· பதினெண்கீழ்க்கணக்கில் நாற்பது என்று முடியும் நூல்கள் 4 உள்ளன.
· பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ஒரே புறப்பொருள் நூல் – களவழி நாற்பது.
· ஒற்றை அடிக் கொளுக்களால் ஆன கீழ்க்கணக்கு நூல் – முதுமொழிக் காஞ்சி.
திருக்குறள்:
· திருக்குறளில், ஒரே குறளில் 6 முறை வரும் சொல் - ‘பற்று’
· திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள்.
· திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை.
· திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்.
· திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி.
· திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்.
· திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல்.
· திருக்குறளில் இல்லாத உயிர் எழுத்து ‘ஔ’.
· திருக்குறளை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப்.
· திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 380.
· திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700.
· திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250.
· திருக்குறள் மூலத்தை முதலில் 1812இல் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர்
கல்வெட்டுகள்:
· தமிழை எழுதப் பயன்பட்ட பண்டை எழுத்துமுறை – பிராமி (எ) தமிழி
· இன்றைய தமிழ் எழுத்து வடிவம் பல்லவர் காலத்தில் உருவானது.
· தமிழ் பிராமி (தமிழி) கல்வெட்டுகள் ஆய்வாளர் –ஐராவதம் மகாதேவன்
· சிந்துவெளி –அரப்பா மொகஞ்சதாரோ- தொல்லியல் ஆய்வுக்குப் பிறகே இந்தியாவின் தொன்மை வரலாற்றை உலகம் அறிந்து கொண்டது.
· சிந்துவெளி போல கீழடி ஆய்வுக்குப் பிறகே தமிழகத்தின் தொன்மையை உலகம் அறிந்து கொண்டு வருகிறது.
· ஆதித் தொல்தமிழ்க் குடிகள் பயன்படுத்திய கல்லாயுதம் புதுக்கோட்டை மாவட்டம் குருவிக்கொண்டான் பட்டி யில் கிடைத்துள்ளது.
· சித்தன்ன வாசலில் தமிழி (எ) தமிழ் பிராமி எழுத்துகள் கிடைத்துள்ளன.
· தமிழக நீர்ப்பாசன அமைப்பு முறை பற்றிய கல்வெட்டுகள் விழுப்புரம் திண்டிவனம் ஆகிய இடங்களில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.
· சங்க காலப் பாண்டிய மன்னர் பற்றி மாங்குளம் கல்வெட்டு கிடைத்துள்ளது.
· திருக்கோவிலூர்-ஜம்பை கல்வெட்டு அதியமான் நெடுமான் அஞ்சி பற்றியது
· கரூர் புகளுர் மலைக் கல்வெட்டு பதிற்றுப்பத்து சேரமன்னர் பற்றியது.
· மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கிடைத்துள்ள தமிழி (தமிழ்-பிராமி) எழுத்துக் கல்வெட்டுகள் காலத்தால் முந்திய கல்வெட்டுகளாகும்.
· வேலாயுதம் பாளையக் கல்வெட்டுகள் தமிழருக்கும் ரோமானியருக்கும் இடையில் இருந்த வணிகத் தொடர்பைக் காட்டுகின்றன.
· தஞ்சைப் பெரிய கோவில் கல்வெட்டுகள் கோவிலை உருவாக்க உதவிய பலரைப் பற்றிய செய்திகளை விரிவாகத் தருகின்றன.
· திருவரங்கம், திருவானைக்கா, சிதம்பரம், திருவாரூர் கோவில்களின் பெரிய மதில் சுவர்களில் கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன.
· ராஜராஜ சோழனின் 28ஆம் ஆட்சியாண்டு பற்றிய தகவல்களை, திருமழ பாடி கோவில் கல்வெட்டுகள் தருகின்றன.
தமிழக வரலாறு:
· சங்க காலச் சேரநாடு– தற்போதைய கேரள மாநிலம் ஆகும்.
· பாண்டிய நாடு– தற்போதைய மதுரை, நெல்லை மாவட்டப் பகுதிகள்,
· சோழ நாடு – பிரிபடாத தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டப் பகுதிகள் சோழ நாடாகும்.
· சங்க காலம், களப்பிரர் காலம், பல்லவர் காலம், பிற்காலச் சோழர் காலம்- பாண்டியர் காலம், அயலார் காலம், ஆங்கிலேயர் காலம் என, தமிழக வரலாற்றுக் காலத்தை ஆறு பெரும் பிரிவு களாகப் பிரிக்கலாம்.
களப்பிரர் காலத் தமிழகம்:
· சங்க காலத்தை அடுத்து வந்த களப்பிரர் காலத்தை, சங்கம் மருவிய காலம் என்றும், களப்பிரர் இடையீட்டுக் காலம் என்றும் கூறுவர். (இதை இருண்ட காலம் என்கிறார்கள் அது தவறு!)
· வேள்விக்குடி செப்பேடுதான் களப்பிரர் காலம் பற்றி அறியத் தருகிறது.
· இக்காலம் பற்றிய செய்திகளை உறுதியாகக் கூற முடியவில்லை. எனவே, “களப்பிரர் காலம் இருண்ட காலம்“ என்பது ஒருசாரார் கருத்து.
· களப்பிரர் காலத்தில்தான் புகழ்பெற்ற தமிழ்இலக்கிய இலக்கண நூல்கள் கிடைத்துள்ளன. எனவே அது இருண்ட காலமல்ல என்ற கருத்தும் உள்ளது.
· களப்பிரர் முதலில் பௌத்தராக இருந்து பின்னர் சமணராக மாறினர்.
· ஆட்சி மாற்றங்களால் சங்ககால முடிவில் மக்களிடை அமைதி குலைந்தது
· மக்களை அமைதிப் படுத்த, ஏராளமான அறநூல்கள் எழுதப்பட்டன.
· களப்பிரர் காலத்தில் தமிழுடன் பாலி, பிராகிருத மொழிகளும் பேசப்பட்டன.
· களப்பிரர் காலத்தில்தான் பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள பெரும்பாலான நூல்கள் எழுதப்பட்டன என்கிறார் அறிஞர் சீனி.வேங்கடசாமி
· பாண்டிய அரசர்களிடம் பிராமணர்கள் தானமாகப் பெற்றிருந்த நிலங்களை களப்பிரர் திரும்பப் பெற்றனர் என்று வேள்விக்குடி செப்பேடு கூறுகிறது.
பல்லவர் காலம்:
· பல்லவர்கள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர்.
· பல்லவர் காலம் கி.பி.4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.850முடிய என்பர்.
· பல்லவ அரசர் சிம்மவிஷ்ணு முதல் அபராஜிதன் வரை ஆட்சி செய்தனர்
· சங்க இலக்கியங்களில் பல்லவர் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. எனவே, பல்லவர்கள் சங்க காலத்திற்குப் பின் வந்தவர் என்று முடிவுக்கு வரலாம்.
· பல்லவர் காலத்தைப் பொதுவாக பக்தி இலக்கிய காலம் எனலாம்
· நாயன்மார்களும் ஆழ்வார்களும் பக்தி இலக்கியம் பாடினர்
· நாயன்மார்கள் சிவபெருமானை வழிபட்டு பக்தி இலக்கியம் பாடினர்
· ஆழ்வார்கள் திருமாலை வழிபட்டு பக்தி இலக்கியம் பாடினர்
· ஒழுக்கத்தை வலியுறுத்தி, இல்லற வாழ்வையும் பெண்களையும் இழித்து இலக்கியம் படைத்த சமணர்களை பக்தி இலக்கியம் பழித்துப் பேசியது.
· சமணர் திருநாவுக்கரசரை சைவராக மாற்றியவர் –திலகவதியார்.
· திருநாவுக்கரசரால் சைவ மதத்திற்கு மாறிய மன்னன் – மகேந்திர வர்மன்.
· இப்போது உள்ள தமிழ் எழுத்து முறை - பல்லவர் காலத்திலிருந்து புழக்கத்தில் உள்ளது
· கிரந்த எழுத்ததுகள் - ஜ ஷ ஹ க்ஷ ஸ என்னும் எழுத்துகள் வடமொழி உச்சரிப்பைத் தமிழில் எழுத பல்லவர் காலம் முதல் புழக்கத்தில் உள்ளன. (இவை வடமொழியிலும் இல்லை, தமிழிலும் இல்லை.)
சோழர் வரலாறும் இலக்கியமும்:
· முற்காலச் சோழர்களில் மிகப் புகழ்பெற்றவன் கரிகால் சோழன் ஆவான்.
· பத்துப்பாட்டில் பட்டினப்பாலை, பொருநர்ஆற்றுப்படை ஆகிய இரண்டு நூல்களும் கரிகால் சோழனைப் பற்றிய செய்திகளைத் தருகின்றன.
· கோப்பெருஞ்சோழன் சங்க காலப்புலவர் பிசிராந்தையாரின் நண்பர்.
· பொதுவாக, விஜயாலய சோழன் முதல் முதலாம் ராஜராஜன் முடிய 21 மன்னர்களின் காலமே பிற்காலச் சோழர் காலம் எனப்படுகிறது
· பிற்காலச் சோழர்களில் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் இருவருமே மிகப் புகழ்பெற்ற மன்னர்கள் ஆவர்.
· ராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரியகோவிலுக்கு அவன் இட்ட பெயர் பெருவுடையார் கோவில் என்பதாகும்.
· திருவாரூரில் இருந்து மூவர் தேவாரத்தை மீட்டவன் ராஜராஜசோழன்.
· முதலாம் ராஜராஜ சோழனின் உதவியுடன் நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரு திருமுறைகளை தொகுத்தார்.
· வைணவ ஆழ்வார்களின் பாடல்களை நாதமுனிகள் தொகுத்தார்.
· இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் போலும் தொல்காப்பிய உரையாசிரியர்கள் பிற்காலச் சோழர் காலத்தவரே ஆவர்.
· சிலப்பதிகாரத்தின் சிறந்த உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் பிற்காலச் சோழர் காலத்தவரே ஆவார்.
· நன்னூல், புறப்பொருள் வெண்பாமாலை, நம்பியகப்பொருள், நேமிநாதம், தண்டியலங்காரம் இலக்கண நூல்களின் காலம் பிற்காலச் சோழர் காலமே.
· பிற்காலச் சோழர் காலத்தில்தான் வைதீகமும், வர்ணாஸ்ரமும் தமிழகத்தில் புகுந்து தழைத்தன
தமிழ் இலக்கணம்:
· முழுமையாகக் கிடைத்த முதல் தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம்
· தொல்காப்பியத்திற்குப் பாயிரம் பாடியவர் பனம்பாரனார்.
· தொல்காப்பிய இலக்கணத்தில் எழுத்து, சொல், பொருள் எனும் மூன்று அதிகாரங்களும், அதிகாரத்திற்கு 9 வீதம் 27 இயல்களும் அமைந்துள்ளன.
· தொல்காப்பியம் காட்டும் திணை ஒழுக்கம், அகம் புறம் என இரு வகை.
· ஆண் பெண் காதல், குடும்பம் பற்றியது அகப்பொருள் திணை.
· பொருளியல், அரசியல், புகழ்வாழ்வு பற்றியது புறப்பொருள் ஆகும்.
· தொல்காப்பியம் காட்டும் முதற்பொருள், நிலம் பொழுது என இரு வகை.
· தொல்காப்பியம் காட்டும் பொழுது, சிறுபொழுது, பெரும்பொழுது என இரு வகை
· தொல்காப்பியம் காட்டும் சிறுபொழுது 6, பெரும்பொழுது 6 வகைப்படும்.
· தொல்காப்பியம் சுட்டும் ஒரு நாளின் 6 பிரிவுகள் சிறுபொழுது ஆகும்.
· தொல்காப்பியம் சுட்டும் ஓர் ஆண்டின் 6 பிரிவுகள் பெரும்பொழுது ஆகும்.
· தொல்காப்பியம் தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, மக்கள், தொழில், பண், யாழ், முதலானவற்றை உரிப்பொருளில் வைத்துள்ளது.
· அகத்திணை சுட்டும் மலையும் மலைசார் நிலமும் குறிஞ்சி ஆகும்.
· அகத்திணை சுட்டும் காடும் காடுசார் நிலமும் முல்லை ஆகும்.
· அகத்திணை சுட்டும் வயலும் வயல்சார் நிலமும் மருதம் ஆகும்.
· அகத்திணை சுட்டும் கடலும் கடல்சார் பகுதியும் நெய்தல் ஆகும்.
· அகத்திணை மரபின் படி தலைவன் தலைவி பெயர்கள் இடம்பெறா.
· இலக்கியத்தில் சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறுவது புறத்திணை ஆகும்.
· புறத்திணையில் வெட்சி என்பது ஆநிரைகவர்தல் ஆகும்.
· புறத்திணையில் கரந்தை என்பது ஆநிலை மீட்டல் ஆகும்.
· புறத்திணையில் வஞ்சி என்பது வலுச்சண்டைக்குப் போதல் ஆகும்.
· புறத்திணையில் காஞ்சி என்பது வந்த சண்டையை எதிர்த்து நிற்றல்
· புறத்திணையில் நொச்சி என்பது மதிலைக் காத்து நிற்றல் ஆகும்.
· புறத்திணையில் உழிஞை என்பது மதிலை வளைத்தல் ஆகும்.
· புறத்திணையில் தும்பை என்பது சமதளத்தில் போரிடுதல் ஆகும்.
· புறத்திணையில் வாகை என்பது போரில் வெற்றிபெறுதல் ஆகும்.
· புறத்திணையில் பாடாண் என்பது வெற்றிவீரனைப் புகழ்தல் ஆகும்.
· தொல்காப்பியத்திற்கு முழுமுதல் உரை கண்டவர் இளம்பூரணர்.
· உயிர்களின் ஆறு அறிவை விளக்கி கூறும் நூல் தொல்காப்பியம்.
புறத்திணைப் போர்முறைகளைக் கூறும் ஒரு பழம்பாடல் -
"வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்"
· வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம் போல்வன பழந்தமிழின் ஐந்திலக்கண நூல்கள் ஆகும்.
· தொல்காப்பியத்தின் பிறகு புகழ்பெற்ற இலக்கண நூல் நன்னூல் ஆகும்.
· இறையனார் அகப்பொருள், மாறன்அகப்பொருள், நம்பியகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியன பொருளிலக்கண நூல்கள் ஆகும்
· யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்பன யாப்பிலக்கணம்
· நன்னூல் இலக்கண நூலின் ஆசிரியர் – பவணந்தி முனிவர்.
· யாப்பருங்கலக் காரிகை ஆசிரியர் – அமிர்த சாகரர்.
· நம்பியகப் பொருள் ஆசிரியர் –நாற்கவிராச நம்பி.
· புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர் –ஐயனாரிதனார்.
· தண்டியலங்காரம் நூல் ஆசிரியர் - தண்டியாசிரியர்
· திவாகரம், பிங்கலந்தை, சூடாமணி, அபிதான சிந்தாமணி, வேத கிரியார் சூடாமணி, சிந்தாமணி போல்வன புகழ்பெற்ற தமிழ்நிகண்டுகள் ஆகும்.
தமிழ்ப்பண்பாடு:
· “யாதும் ஊரே யாவரும் கேளிர்” முழுப் பாடலும், நூல்-ஆசிரியர் விவரமும்-
"யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே". (புறம்: 192)
சங்க இலக்கியத்திலுள்ள புறநானூறு தொகுப்பில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலை எழுதியவர் கணியன் பூங்குன்றனார் எனும் புலவர்.
· மக்களிடையே ஏற்றத்தாழ்வை மறுத்த காதலைப் பாடும் புகழ்பெற்ற குறுந்தொகைப் பாடல் “யாயும் ஞாயும் யாராகியரோ” பற்றிய கருத்துகள் –
"யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே."
இந்தக் குறுந்தொகைப் (பாடல் 40) பாடலை எழுதியவர் பெயர் அறிய இயலாமையின், செம்புலப் பெயல்நீரார் என்றே பெயர் பெற்றார் அப்புலவர்)
அனைவரின் நலமும் வேண்டும் பழந்தமிழர் பண்பாடு காட்டும் சங்க இலக்கியம் -
· “அறம் நனி சிறக்க, அல்லது கெடுக!“ - ஐங்குறுநூறு
· “நன்று பெரிது சிறக்க! தீது இல்லாகுக!“- ஐங்குறுநூறு
· “மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க!“- ஐங்குறுநூறு
· யாதும் ஊரே யாவரும் கேளிர் – புறநானூறு
· புகழ் எனின் உயிரும் கொடுக்குவர், பழியெனின்
· உலகு உடன் பெறினும் கொள்ளலர் – புறநானூறு.
· வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன் – புறநானூறு
· உண்பது நாழி உடுப்பது இரண்டே – புறநானூறு.
· பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல் – கலித்தொகை.
· உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – மணிமேகலை
· ஏறுதழுவுதல், மஞ்சு விரட்டு, சல்லிக்கட்டு என அறியப் படும் பழந்தமிழர் பண்பாட்டு அடையாளமாக -
“கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும் புல்லாளே ஆய மகள்” எனும் வரிகள் இடம்பெற்ற சங்க இலக்கிய நூல் – கலித்தொகை.
· கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடுமுன் தோன்றி மூத்த குடி! – எனும் புகழ்பெற்ற நேரிசை வெண்பாவின்
முழுமையான பாடலும், இப்பாடல் இடம்பெற்ற நூல் விவரமும்-
"பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி"
– என்பதே அந்த முழுப்பாடல். இடம்பெற்ற நூல்: புறப்பொருள் வெண்பா மாலை - கரந்தைப் படலம் 35 - குடிநிலை எனும் பகுதி.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” எனும் புகழ்பெற்ற வரிகள் இடம் பெற்ற நூல், முழுமையான பாடல், எழுதியவர் விவரம் -
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி இல்லை,நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே”
(பாடல் எண்- 2066- இடம்பெற்ற நூல்- திருமந்திரம், எழுதியவர் –திருமூலர்)
· “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்று பழமையைப் போற்றுவதிலும், புதுமையை வரவேற்பதிலும் வழிகாட்டுவதாக நூலின் இறுதிவரிகளைக் கொண்ட இலக்கண நூல் –நன்னூல்.
· நாடக நூல் ஒன்றில், தமிழிலிருந்தே பிற திராவிடமொழிகள் கிளைத்தன எனும் கருத்தமைந்த வரிகள் –
"கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்
உன்வயிற்றிற் பிறந்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!"
இவ்வரிகள் இடம்பெற்ற நூல் – “மனோன்மணியம்” – எழுதியவர் பெ.சுந்தரனார்.
குறிப்பிடத் தக்க நூல்களும் ஆசிரியர்களும்:
நாவல்கள்-
· பிரதாப முதலியார் சரித்திரம் – மாயூரம் வேதநாயகம் பிள்ளை
· தில்லானா மோகனாம்பாள் – கொத்தமங்கலம் சுப்பு
· பொன்னியின் செல்வன் – கல்கி
· “நெஞ்சில் ஒரு முள்“– மு.வரதராசன்
· ‘யவன ராணி’ - சாண்டில்யன்
· ‘குருதிப் புனல்’ – இந்திரா பார்த்தசாரதி
· அகிலன் – சித்திரப்பாவை (ஞானபீட விருது பெற்ற நாவல்)
· பஞ்சமர் – டேனியல்
· வாடிவாசல் – சி.சு.செல்லப்பா
· மோகமுள் – தி. ஜானகிராமன்
· குறிஞ்சித்தேன் –ராஜம் கிருஷ்ணன்
· பஞ்சும் பசியும் – ரகுநாதன்
· தேநீர் – டி.செல்வராஜ்
· தாகம் – கு.சின்னப்ப பாரதி
· சில நேரங்களில் சில மனிதர்கள்– ஜெயகாந்தன்
· ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஜெயகாந்தன்
· தலைமுறைகள் – நீல பத்மநாபன்
· புயலிலே ஒரு தோணி – பா.சிங்காரம்
· கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
· கருக்கு – பாமா
· கரிப்பு மணிகள் – ராஜம் கிருஷ்ணன்
· கள்ளிக் காட்டு இதிகாசம் - வைரமுத்து
· வாடாமல்லி – சு.சமுத்திரம்
· கல்மரம் – திலகவதி
· பதினெட்டாவது அட்சக்கோடு – அசோகமித்ரன்
· தலைமுறைகள் – நீல.பத்மநாபன்
· தலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்
· சாய்வு நாற்காலி – தோப்பில் முகமது மீரான்
· மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்
· ரத்தம் ஒரே நிறம் – சுஜாதா
· புதிய தரிசனங்கள் – பொன்னிலன்
· வேள்பாரி – சு.வெங்கடேசன்
· கோவேறு கழுதைகள் – இமையம்
· உப பாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்
· மாதொரு பாகன் – பெருமாள் முருகன்
· ஆழி சூழ் உலகு – ஜோ டி குரூஸ்
குறிப்பிடத் தக்க சிறுகதைகள், எழுத்தாளர்கள்-
சிறுகதைகள்-
· முதல் சிறுகதை வ.வே.சுப்பிரமணியர் எழுதிய குளத்தங்கரை அரசமரம்.
· பாரதியாரின் “ஆறில்ஒரு பங்கு“ தான் முதல் சிறுகதை என்பாரும் உண்டு.
· “பார்க்கப் போனால் நான் மரம்தான்” இது முதல்சிறுகதையின் முதல்வரி.
· “சிறுகதையின் பொற்காலம்“ எனுமளவுக்கு வந்த சிற்றிதழ் மணிக்கொடி.
· புகழ்பெற்ற “பொன்னகரம்“ சிறுகதையை எழுதியவர் புதுமைப்பித்தன்.
· ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ சிறுகதை – புதுமைப்பித்தன் எழுதியது.
· சிறுகதைச் சித்தர் எனப் பெரும்புகழ்பெற்றவர் ஜெயகாந்தன்.
· சிறுகதைக்காக அகாதெமி விருதுபெற்ற ஒரே பெண் எழுத்தாளர் – அம்பை
· ‘செவ்வாழை"– அண்ணாதுரை
· ஆற்றாமை – கு.ப.ராஜகோபாலன்
· பாயசம் – தி.ஜானகிராமன்
· அன்பளிப்பு – கு. அழகிரிசாமி
· கதவு–கி.ராஜநாராயணன்
· துண்டு – கந்தர்வன்
· அக்னிபிரவேசம் –ஜெயகாந்தன்
· தக்கையின் மீது நான்கு கண்கள் – சா.கந்தசாமி
· அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை
· நகரம் –சுஜாதா
· இந்நாட்டு மன்னர் – நாஞ்சில் நாடன்
· அப்பாவின் வேஷ்டி – பிரபஞ்சன்
· வனம்மாள் -அழகிய பெரியவன்
· வாளின் தனிமை – தமிழ்செல்வன்
· இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் -வேல.ராமமூர்த்தி
· திருச்செங்கோடு – பெருமாள் முருகன்
· கொலை – மேலாண்மை பொன்னுச்சாமி
மரபுக் கவிதைகள் –
· உள்ளத்து உள்ளது கவிதை என்றவர் - கவிமணி தேசிக விநாயகனார்
· தமிழுக்கும் அமுதென்று பேர் என்றவர் – பாரதிதாசன்
· தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு என்று பாடியவர் – நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார்
· கனிச்சாறு, நூறாசிரியம், மகபுகு வஞ்சி – பெருஞ்சித்திரனார்
· காசி ஆனந்தன் கவிதைகள் – காசி ஆனந்தன்
· பழமலய் கவிதைகள் – சண்முக சுந்தரம் (தொ.ஆ.)
· எனது பழைய பனை ஓலைகள் - வைரமுத்து
புதுக்கவிதைகள்–
· புதுக்கவிதைக்கென்றே சி.சு.செல்லப்பா நடத்திய இதழ் எழுத்து
· வெளிச்சங்கள் – (வானம்பாடி இதழ்க் கவிதைகள்) வானம்பாடிகள்
· புதுக்குரல்கள் – (எழுத்து இதழ்க் கவிதைகள்) – சி.சு.செல்லப்பா
· வணக்கம் வள்ளுவ – ஈரோடு தமிழன்பன் (சாகித்திய அகாதெமி விருது)
· வெ.நா.திருமூர்த்தி கவிதைகள் – சங்கை வேலவன்(தொ.ஆ,)
· தமிழ்ஒளியின் சிறந்த கவிதைகள் – சாகித்திய அகாதெமி.
· முப்பட்டை நகரம் – இந்திரன்.
· முலைகள் - குட்டிரேவதி
பிரபல கவிஞர்களின் மொத்தக் கவிதைத் தொகுப்புகள், வெளிவந்த ஆண்டு–
· வைரமுத்து கவிதைகள் – வைரமுத்து (2000)
· தணிகைச் செல்வன் கவிதைகள் – தணிகைச் செல்வன் (2001)
· கந்தர்வன் கவிதைகள் – கந்தர்வன்(2002)
· மு.மேத்தா கவிதைகள் – மு.மேத்தா(2007)
· பாவேந்தம் – பாரதிதாசன் (2009)
· சிற்பி கவிதைகள் (2தொகுப்புகள்) – சிற்பி பாலசுப்பிரமணியன்(2011)
· கவிக்கோ கவிதைகள் (2தொகுப்புகள்) – அப்துல் ரகுமான்(2013)
· மீரா கவிதைகள் – மீரா (2015)
· ஒவ்வொரு புல்லையும் – இன்குலாப் (2017)
· ஞானக்கூத்தன் கவிதைகள் – ஞானக்கூத்தன் (2018)
· நா.முத்துக்குமார் கவிதைகள் – நா.முத்துக்குமார்(2020)
· மீனாட்சி கவிதைகள் – மீனாட்சி
· யுகபாரதி கவிதைகள் – யுகபாரதி.
· ஜெயபாஸ்கரன் கவிதைகள் – ஜெயபாஸ்கரன் (2023)
· நவகவி ஆயிரம் – நவகவி
· தனிப்பாடல் திரட்டு - ஈரோடு தமிழன்பன்
· தங்கம் மூர்த்தி கவிதைகள் - தங்கம் மூர்த்தி
திறனாய்வு நூல்கள்–
· அசலும் நகலும் – அ.முத்துசிவன்
· இலக்கியக் கலை – அ.சா.ஞானசம்பந்தன்
· இலக்கியக் கலை – மு.வரதராசன்
· தமிழ்க் காதல் – வ.சுப.மாணிக்கம்
· சமுதாய நாவல்கள் – தா.வே.வீராசாமி
· தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் –கா.சிவத்தம்பி
· புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும் – நா.வானமாமலை
· புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – வல்லிக்கண்ணன்
· இலக்கியத் திறனாய்வு – சு.பாலச்சந்திரன்
· புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை – பாலா –இரா.பாலச்சந்திரன்
· கம்பன் தமிழும் கணினித் தமிழும் – நா.முத்துநிலவன்
· இலக்கிய மானிடவியல் – பக்தவத்சல பாரதி
· இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும் – வீரபாண்டியன்.
· தமிழ்க் கவிதைகளில் சமகால வரலாறு – வா.மு.சே.ஆண்டவர்.
· தமிழின் கவிதையியல் – கா.சிவத்தம்பி
· இரு மகாகவிகள் - க.கைலாசபதி
· பொற்காலங்கள் – ஆ.சிவசுப்பிரமணியன்
· பொற்காலங்களும் இருண்ட காலங்களும் – பொ.வேல்சாமி
· தமிழ்க் கவிதை – ஞானி.
· மேலை நோக்கில் தமிழ்க் கவிதை –ப.மருதநாயகம்
· சொல்லில் நனையும் காலம் – எஸ்.வி.ராஜதுரை
------------------------------------------------------------------------------------------