அயல்நாடுகளில் வெளியான தமிழ் இதழ்கள்
— முனைவர் க. சுபாஷிணி கடந்த ஆண்டு லண்டன் நகரில் உள்ள பிரித்தானிய நூலகத்திற்கு ஒரு சில நாட்கள் மலேசிய சிங்கையிலிருந்து 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெளிவந்த சஞ்சிகைகள் சிலவற்றைப் பற்றி அறிந்து கொள்ளவும் அவற்றுள் சிலவற்றை ஆவணப்படுத்தவும் சென்றிருந்தேன்.
பிரித்தானிய காலனித்துவக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு வெளியே கிழக்காசிய நாடுகளில் குறிப்பிடத்தக்க வகையில் வார, மாத இதழ்கள் சில தமிழார்வலர்களால் வெளியிடப்பட்டன. இந்த முயற்சிகள் பற்றியும் அக்காலகட்டத்தில் வெளிவந்த சஞ்சிகைகள் பற்றியும் எனது புதிய நூலான ‘தமிழர் புலப்பெயர்வு’ நூலில் ஒரு அத்தியாயத்தில் பட்டியலிட்டிருக்கின்றேன்.
அவ்வகையில் 19ஆம் நூற்றாண்டில் மலயாவில் குறிப்பாக பினாங்கிலிருந்தும், சிங்கை, இந்தோனீசியா, பர்மா ஆகிய நாடுகளிலிருந்தும் வெளிவந்த சஞ்சிகைகள் சில வரலாற்று முக்கியத்துவம் பெறும் ஆவணங்களாகத் திகழ்கின்றன. இவை கூறும் செய்திகள் அன்றைய கிழக்காசிய நாடுகளை, அங்கு வாழ்ந்த தமிழ் மக்களை, அவர்களின் வாழ்நிலைச் சூழலைப் பதிகின்றன.
![magazine1.jpg](https://groups.google.com/group/mintamil/attach/3cdfdae63dd3a/magazine1.jpg?part=0.3&view=1)
![magazine3.jpg](https://groups.google.com/group/mintamil/attach/3cdfdae63dd3a/magazine3.jpg?part=0.2&view=1)
அவ்வகையில் ’உலக நேசன்’, ’இந்து நேசன்’ என்ற இரண்டு சஞ்சிகைகளை இங்கே காணலாம். மாதம் இருமுறையும் வாரம் ஒருமுறையும் இவை வெளிவந்தன. சமகால உள்ளூர், வெளிநாட்டுச் செய்திகளை இவை தாங்கி வெளிவந்தன.
இத்தகைய சஞ்சிகைகளை ஆராய்ந்து அவை கூறுகின்ற செய்திகளை இக்கால வாசிப்பிற்கு வழங்க வேண்டிய பணி முக்கியமானது எனக் கருதுகின்றேன். தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் முதுநிலை, முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளும் மாணவர்கள் இத்தகைய ஆவணங்களைத் தேடி வாசித்து அவை கூறும் வரலாற்றுச் செய்திகளை ஆராய்வது இவ்வகையில் அமையக் கூடிய பணிகளில் ஒன்று. இதனைக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையினர் அல்லது இதழியல் மற்றும் சமூகவியல் துறையினர் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டியது அவசியம்.
Subashini-சுபா
23.6.2024