Kannan Natarajan
unread,Apr 4, 2009, 5:51:29 PM4/4/09Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to Min Thamizh
உள்ளது உள்ளபடிச் சொல்லுதலை "இயல்பு நவிற்சி" என்போம்.
பொதுவாக, நடைமுறை நிகழ்வுகளைக் கற்பனை கலக்காமல், மிகைப்படுத்தாமல், அழகுறச் சொல்வதே சங்க இலக்கியங்களின் தனித்தன்மை என்பர்.
அதாவது உயர்வு நவிற்சியாக மிகைப்படுத்தும் வழக்கம் சங்கப் புலவர்களிடையே இல்லை என்று அறிஞர் கூறுவர்.
சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனை ஆவூர் மூலங்கிழார் பாடிய பாடல், "மன்னா நீ மகிழ்ச்சியோடு பார்த்த இடத்தில் பொன்னாக விளையும்; நீ சினந்து நோக்கிய இடத்தில் தீப்பற்றியெரியும்" என்கிறார். இந்தச் செய்தியைக் கூட ஒருவாறு ஏற்றுக்கொள்ளலாம். அந்த மன்னர் அன்போடு தோழமையோடு பார்த்தால், அவ்வாறு பார்க்கப்பட்ட நட்புடைய வேந்தர்க்கு பல நன்மைகள் விளையும், செல்வம் பெருகும் என்றும் சினத்தோடு நோக்கப்படும் பகை மன்னர்களிடம் துன்பம் பெருகும், செல்வம் அழியும் என்றும் எடுத்துக் கொள்ளலாம். இதற்கும் மேலே ஒன்று, இன்றைய அரசியல் தலைவர்களைப் பற்றித் தொண்டர்கள் சொல்லுகிற, "தலைவா நீ ஆணையிட்டால் இந்த அண்டமே கிடுகிடுக்கும்",
"நீ விரலசைத்தால் ஓடிவருபவர் பல்லாயிரம்பேர்" என்பவை போன்ற, இல்லை இவற்றை விடவும் அதிகமாக ஒரு கற்பனையை அள்ளி வீசுகிறார் புலவர்.
"நீ ஆணையிட்டால், விரும்பினால், வெப்பக் கதிர்களை வீசும் ஞாயிற்றில் இருந்து குளிர்ந்த இதமான நிலவொளியை வரச்செய்வாய், அவ்வாறே, குளிர் நிலவைத் தரும் திங்களிலிருந்து, நீ விரும்பினால் வெப்பக் கதிர்களையும் வெயிலையும் வரவழைப்பாய்."
அதாவது, சூரியனிலிருந்து நிலவையும், சந்திரனிலிருந்து வெயிலையும் வரவழைப்பானாம் அவன்!
"நீ உடன்று நோக்கும் வாய் எரிதவழ
நீ நயந்து நோக்கும் வாய்ப் பொன்பூப்ப...
செந்ஞாயிற்று நிலவு வேண்டினும்
வெண்திங்களுள் வெயில் வேண்டினும்
வேண்டியது விளைவிக்கும் ஆற்றலை." (புறம்-38)
அந்த மன்னன் எதுவேண்டுமானாலும், அவன் விரும்பியவாறு விளைவிக்கக் கூடியவன் என்று இயற்கைக்கு மாறாக, நம்பகத் தன்மையற்ற உயர்வு நவிற்சியாகப் படைத்துள்ளாரே இப்புலவர் என்று வியக்கிறோம்.
மற்றுமொரு காட்சியில், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் போர்க்களத்தில் நிற்கிறான். இரண்டு பேரரசர்கள், ஐந்து குறுநில மன்னர்கள் ஆக எழுவருடன் இவன் தனியனாகப் போர் செய்கிறான். அட்டகாசமான போர். பகைவர்களை அலட்சியமாகத் தூக்கி வானிலே எறிந்து, தரையிலே விழச்செய்கிறான். அதற்காக அவன் பெருமைப்பட்டுக் கொள்ளவில்லை; மகிழ்ச்சியும் அடையவில்லை.
இதுவரையில்கூட இந்த வருணனையை நாம் ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால் போர் செய்பவன் எப்பருவத்தினன் தெரியுமா?
பாலகன்!. நேற்றுவரை பாலுணவே உண்டான்; இன்றுதான் திடவுணவு கொண்டான்; கால்களிலே கிண்கிணிக் கொலுசுகள் போட்டிருந்தவன் இன்று வீரக்கழல் அணிந்தான். கைகளிலே வளையல் நீக்கி, அந்தக் கைகளிலே வில்லேந்தி அம்பு விடுகிறான். ஐம்படைத் தாலி என்னும் அணி (வில், வாள், கதை, சங்கு, சக்கரம் வடிவிலானவற்றைக் கோத்துக் கழுத்தில் குழந்தைகளுக்கு அணிவிப்பர்) இன்னும் களையவில்லை. குடுமி கழித்து வேப்பந்தார் சூடிக்கொண்டு தேரின் மீது ஏறி நின்று பகைவர்களைப் பந்தாடுகிறான்.
பாட்டைப் பார்ப்போம்.
"கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டுக்
குடுமி களைந்துநல் வேம்பின் ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து
குறுந்தொடி கழித்தகை சாபம் பற்றி
நெடுந்தேர் கொடுஞ்சி பொலிய நின்றோன்!
தாலி களைந்தன்றும் இலனே பால்விட்டு
அயினியும் இன்று அயின்றனன் வயின்வயின்
உடன்று மேல்வந்த மள்ளரை......
அழுந்தப் பற்றி அகல்விசும்பு ஆர்ப்பு எழக்
கவிழ்த்து நிலம்சேர அட்டதை
மகிழ்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே." (புறம்-77)
இடைக்குன்றூர்கிழார் என்ற புலவர், தலையாலங்கானம் என்ற இடத்தில் நடந்த இப்போரில் வெற்றிபெற்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் வீரத்தைப் பாராட்டிப் பாடியது இப்பாடல்.
அப்பப்பா! போதுமா?
இதனினும் மிகை வேறுண்டோ?
நன்றி: தமிழ்மணி (தினமணி)