1. தொல்காப்பியமும் பாணினியமும் – 4 : முதனூல் – இலக்குவனார் திருவள்ளுவன் ++2. வெருளி நோய்கள் 421-425 : இலக்குவனார் திருவள்ளுவன்

5 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Sep 20, 2025, 6:55:37 PM (yesterday) Sep 20
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan

வெருளி நோய்கள் 421-425 : இலக்குவனார் திருவள்ளுவன்

 


ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்      21 September 2025      கரமுதல


(வெருளி நோய்கள் 416-420 : தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 421-425

  1. உதைபந்தாட்ட வெருளி -Soccerphobia

உதைபந்தாட்டம்(soccer) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் உதைபந்தாட்ட வெருளி.
இதனைக் காற்பந்து வெருளி(footballphobia) என்றும் சொல்வர்.
ஆடுபவர்களில் சிலருக்கு அல்லது வேடிக்கை பார்ப்பவர்களில் ஒரு சாராருக்குப் பந்து தங்கள் மீது பட்டுக்காயம் ஏற்படலாம் என்ற பேரச்சம் வரலாம். இதனால் ஆட்டத்தின் மீதே வெருளி வரும்.
00

  1. உந்து ஒலிப்பான் வெருளி – Autokeraphobia

உந்து ஒலிப்பான்(horn) குறித்த வரம்பற்ற பேரச்சம் உந்து ஒலிப்பான் வெருளி.
Keras என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் கொம்பு. கொம்பு என்பது பின்னர் ஊது கொம்பையும் இசைக் கொம்பையும் குறித்தது. ஊர்திகள் பந்த பின்னர் அவற்றில் எச்சரிக்கை தெரிவிப்பதற்காக உள்ள ஒலிப்பானையும் பின்னர்க் குறிக்கலாயிற்று.
இரைச்சல் வெருளி உள்ளவர்களுக்கு ஒலிப்பான் எழுப்பும் ஒலி வெறுப்பை ஏற்படுத்தி வெருளிக்கு உள்ளாவர்.
00

  1. உந்து கழுவல் வெருளி – Autoplenophobia

உந்து கழுவல் குறித்த வரம்பற்ற பேரச்சம் உந்து கழுவல் வெருளி.
உந்துவை முழுமையாகக் கழுவும் பொழுது சக்கரங்களில் சிக்கியுள்ள அழுக்குகள், சகதிகள், சேறுகள் முதலியனவும் கழுவப்பட்டு மேலே தெறிக்கும் என்று அஞ்சுவோர் உள்ளனர். உந்து கழுவும் பொழுது பகத்தறிவிற்குப்பொருந்தாக பேரச்சம் சிலருக்கு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.


Auto என்றால் தான், தன்னால் எனப் பொருள்கள். எனவே, தன்னால் இயங்கும் ஊர்தி என்பதன் சுருக்கமாக எண்ணுகின்றனர. எனவே, Automobile என்பதன் சுருக்கமாக இங்கே Autoஎனப்படுகிறது. தானாக இயங்கும் ஊர்தி, தானூர்தி, தானி என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் தன்னால் இயங்கும் ஊர்தி அல்ல. இயந்திரத்தால் இயங்கும் ஊர்திதான்.
pleno என்னும் போர்த்துகீசியச் சொல்லின் பொருள் முழு. எனினும் இங்கே ஊர்தியை முழுமையாகக் கழுவுதல் என்னும் பொருளில் வழங்கப்படுகிறது.

00

  1. உந்து-படகு வெருளி – Cuimuphobia

உந்து-படகு(car boat) குறித்த அளவு கடந்த பேரச்சம் உந்து-படகு வெருளி.
நிலத்தில் பயணம் செய்யும் பொழுது நீர்ப்பயணத்தையும் நீரில் பயணிக்கும்போது சாலைப்பயணத்தையும் எண்ணிக் குழம்பிப் பகுத்தறிவிற்குப் பொருந்தாத காரணங்களை எண்ணி அஞ்சுவதே உந்து படகு வெருளி என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Cuimu என்றால் உந்து படகு.
இயந்திரப் படகு என்பது இயந்திரத்தால் இயக்கப்படும் படகு. உந்து படகு என்பது உந்துபோல் இயந்திர அமைப்பு, தோற்றம் கொண்ட படகு. நிலத்தில் உந்து போன்றும் நீரில் படகு ஆகவும் இயங்கும் ஊர்தி எனலாம்.
00

  1. உப்பு வெருளி – Alatiphobia / Halophobia

உப்பு(salt) உப்பு உணவுகள் மீதான வரம்பற்ற பேரச்சம் உப்பு வெருளி.
உப்பு வாழ்க்கைக்குத் தேவையான ஒரு கனிமம் ஆகும். “உப்பில்லாப்பண்டம் குப்பையிலே” என்பதிலிருந்து அதன் நன்மையைப் புரிந்து கொள்ளலாம். இருப்பினும் நேரடியாவோ உணவில் சேர்த்தோ உட்கொள்ளும் உப்பு நமக்குத் தீமைகளை விளைவிக்கிறது. உயர் இரத்த அழுத்தம், இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், உடல் பருமன், எலும்பு மெலிதல், உடலுறுப்பு வீக்கம் முதலியவற்றுக்குக் காரணமாக மிகுதியான உப்பு அமைந்து விடுகிறது. இதனால் கட்டுப்பாடாக இருக்க வேண்டியவர்கள் அளவுக்கு மீறிய பேரச்சம் கொள்கின்றனர்.
உப்பு குறைந்தாலும் கூடினாலும் தீமையே. எனவே, நோய்வாய்ப்படும்பொழுதோ நோய் வரும் சூழலிலோ மருத்துவர்கள் அறிவுரையைப் பின்பற்ற வேண்டுமேயன்றி வெருளிக்கு ஆளாகக் கூடாது.
hals என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உப்பு எனப் பொருள்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்,

வெருளி அறிவியல் தொகுதி 1/5

++

தொல்காப்பியமும் பாணினியமும் – 4 : முதனூல் – இலக்குவனார் திருவள்ளுவன்

 


ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்      21 September 2025      கரமுதல


(தொல்காப்பியமும் பாணினியமும் – 3 தொடர்ச்சி)

தொல்காப்பியமும் பாணினியமும்

4

முதனூல்

தொல்காப்பியம் தமிழர்க்குக் கிடைத்த முதலாவது நூலே தவிர, அதுவே தமிழில் எழுதப்பட்ட முதல் நூல் அல்ல. இது குறித்துப் பேராசிரியர் சி.இலக்குவனார் (தொல்காப்பிய ஆராய்ச்சி , பக்கம்: 10) பின் வருமாறு உரைக்கிறார்:

“தமிழ் மொழியில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம் என்று கூறப்படுகின்றது.  தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் நமக்குக் கிடைத்தில.  ஆதலின் தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் இல்லையென்று கூறிவிட இயலாது.  தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும்.  எம்மொழியிலும் இலக்கியம் தோன்றி வளர்ந்த பின்னரே  இலக்கணம் தோன்றும். இதற்குத் தமிழ் மொழியும் புறம்பன்று.  தமிழிலும் இலக்கியங்கள் தோன்றிய பின்னரே இலக்கணங்கள் தோன்றியுள்ளன.  தொல்காப்பியமும், இலக்கியங்கள் மட்டுமன்றி இலக்கணங்களும் பல தோன்றிய பின்னரே இயற்றப்பட்டுள்ளது என்பதைத் தொல்காப்பியமே தெற்றெனப் புலப்படுத்துகின்றது.  ஆதலின் தொல்காப்பியம் இன்று நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் காலத்தால் முற்பட்டதேயன்றி, அதுதான் தமிழின் முதல் நூல் என்று கருதிவிடுதல் கூடாது.”

 “நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் தொல்காப்பியமே முதல் நூலாகும். தொல்காப்பியத்துக்கு முன் தமிழில் பல்வகை இலக்கண நூல்கள் இருந்துள்ளன என்றும் அவற்றையும் தம் கருத்துகளுக்குத் துணையாகத் தொல்காப்பியர் பயன்படுத்திக் கொண்டுள்ளா ரென்பதும் அவர்தம் நூலில் பற்பல இடங்களிலும் என்ப, என்மனார், என்றிசினோர் என்பனபோலக் கூறியுள்ளமையால் புலப்படும் உண்மையாகும். தமிழரின் மொழி, பண்பாடு, வாழ்வு போன்ற அனைத்தையும் ஓரளவேனும் அறிந்து கொள்ள உதவும் சில்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சரியான ஆதாரம் அது என்பதையும் நாம் புறக்கணித்து விடக் கூடாது. அதற்குத் துணை செய்யும் வகையில் தொல்காப்பியக் கருத்துகள் நாட்டில் பரவவேண்டும்” என்றும்  பேராசிரியர் புலவர் மா.நன்னன் (கலைஞரின் தொல்காப்பியப் பூங்கா: அணிந்துரை: பக்கம்.23) குறிப்பிடுகிறார்.

வேதவிற்பன்னர் சுந்தர் இராசு தமது இருக்குவேத ஆய்வுகள்(Rig Vedic Studies) என்னும் நூலில் தமிழ்-சமற்கிருத உறவு குறித்துக் கூறுகிறார். ஆரியர்களும் ஆரியச் சார்பினரும் ஐந்திரம் என்னும் தமிழ் நூலைச் சமற்கிருத நூலாகக் கற்பித்தும் ஐந்திரம், பாணினியம் முதலான சமற்கிருத நூல்களின் வழியேதான் தொல்காப்பியத்தை எழுதினார் எனவும். என்ப, என்மனார் முதலான முந்து நூலினரைக் குறிப்பிடுவது சமற்கிருத நூல்களைத்தான் என்றும் தவறாகத் திரித்துக் கூறுகின்றனர். “சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே; வேதங்களில் தமிழின் தாக்கம் பெரிது; இருக்கு வேதத்தில் கையாளப் பெற்றுள்ள சமற்கிருதம் தமிழர்களின் மொழியால்தான்  உருப்பெற்றது; வேதத்தின் மொழியைப் படைத்த பிருகற்பதி, பழந்தமிழிலிருந்து  எழுத்துகளை எடுத்துக் கொண்டு சில மாற்றங்களைச் செய்து சமற்கிருத எழுத்துகளை உருவாக்கினார்; கி.பி.முதல் நூற்றாண்டிற்குப் பிறகுதான் சமற்கிருத எழுத்துகள் உருவாக்கப்பட்டன; தமிழ் எழுத்துகளோ கிறித்துவிற்குப் பல நூற்றாண்டுகள் முன்னமேயே வழக்கில் இருந்தன”  இத்தகைய பிற்பட்ட வரலாறு உடைய சமற்கிருதத்தின் இலக்கண நூல்களைத் தொல்காப்பியர் உள்ளவாங்கியுள்ளார் எனக் கூறுவது எத்தகைய அறியாமை? தொல்காப்பியம் இப்பொருண்மையில் எழுதப்பெற்ற முதனூலே.

தொல்காப்பியத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்லாயிரம் தமிழ் நூல்கள் இருந்தன

      இது குறித்து அறிஞர் கா.பொ. இரத்தினம், (அகநானூற்றுச் சொற்பொழிவுகள் : பக். 43-44) பின்வருமாறு விளக்குகிறார்.

“தொல்காப்பியத்துள்,

என்மனார் புலவர்”

என மொழிபஉணர்ந்திசி னோரே

பாடலுட் பயின்றவை நாடுங் காலை”

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே

” மொழிபபுலன்நன் குணர்ந்த புலமையோரே

நல்லிசைப் புலவர், , , , வல்லிதிற் கூறி வகுத்துரைத்தனரே

நேரிதி னணர்ந்தோர் நெறிப்படுத் தினரே

நூனவில் புலவர் நுவன்றறைந் தனரே

என்றிவ்வாறு காணப்படுகின்ற சொற்றொடர்கள், தொல்காப்பியர் காலத்தில் பல தமிழ் நூல்கள் பெருவழக்கிலிருந்தன என்பதைப் புலப்படுத்துகின்றன, தொல்காப்பியம் இயற்றப்படு முன் அந் நூல்கள் எவ்வளவு ஆண்டுகளாக விளங்கிவந்தன என்பதற்கு விடை காண முடியாதிருக்கிறது, தொல்காப்பியத்துக்குப் பின்னெழுந்த பல இலக்கண நூல்களுள் ஒன்றாகிய நன்னூலுக்கும் தொல்காப்பியத்திற்கு மிடையிலேயே ஆயிரத்திற்கு மேற்பட்ட வருடங்கள் கழிந்தனவெனில் தொல்காப்பியத்திற்கும் அதற்கு முன்னிருந்த இலக்கண நூல்களுக்குமிடையில் எவ்வளவாயிர வருடங்கள் கழிந்திருக்கும்? தொல்காப்பிய இலக்கணம் தோன்றிய காலத்திருந்த பல நூல்கள்கூட நமக்குக் கிடைக்கவில்லை, தொல்காப்பியம் கூறும் சில இலக்கணங்களுக்குரிய இலக்கியங்கள மறைந்து விட்டன. 

   “தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து

அதர்ப்பட யாத்தலோடு அனைமர பினவே”

எனுமித் தொல்காப்பியச் சூத்திரத்தில் வழிநூல்கள் செய்யும் முறை நான்காக வகுக்கப் பட்டிருக்கிறது. தொகுத்தும், விரித்தும், தொகுத்து விரித்தும், மொழி பெயர்த்தும் செய்யப்பட்ட நூல்கள் தொல்காப்பியர் காலத்திலிருந்தன. இந் நூல்களைப் பற்றி நாம் நன்கு அறிந்து கொள்ள முடியாதிருக்கிறது. “

(தொடரும்)

தொல்காப்பியமும் பாணினியமும்

இலக்குவனார் திருவள்ளுவன்

++



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages