சோழர் கால ''சபா" தேர்தல் சட்டங்களும் - திருத்தங்களும்— டாக்டர். எஸ். சாந்தினிபீ
மேனாள் பேராசிரியர், CAS, வரலாற்றுத் துறை, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்.
chan...@gmail.comபிராமணர் வாழ்ந்த பிரம்மதேய கிராமங்களின் உள்ளூர் தன்னாட்சி அமைப்பு சபா என்று அழைக்கப்பட்டது. பல்லவர்கள் காலம் முதல் இது நடைமுறையில் இருந்தது. கிபி 8 ஆம் நூற்றாண்டிலிருந்து 16 ஆம் நூற்றாண்டு வரை இவ்வமைப்பு பல மாற்றங்களைக் கண்டு இருந்ததற்கான ஆதாரமாக அதன் பதிவுகள் காணப்படுகின்றன. இது பாண்டியர்கள், சோழர்கள் மற்றும் விஜயநகர ஆட்சியாளர்கள் தென்னகத்தை ஆண்ட காலமாகும்.
தமிழ் நாட்டில் அதன் தொடக்கத்தைக் கண்டறியும் பொதுவான ஆர்வம் சில ஊகங்களுக்கு வழிவகுக்கிறது. ஆரம்பக்கால வரலாற்றுக் காலத்தில், சங்க காலம் (கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை) பிராமணர் வாழ்ந்த கிராமங்களின் கிராம நிர்வாக அமைப்பு என அதன் உண்மைப் பொருளில் 'சபா' பற்றி ஆதாரங்கள் இல்லை, அதேசமயம், மன்று[1] போன்ற கற்றவர்களின் அவையைக் குறிக்கும் சொற்கள் உண்டு.
தென்னிந்தியாவிற்கு பௌத்தம், சமணம் மற்றும் வடமொழி தொடர்பான கலாச்சாரத்துடன் வந்தது சபா என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த கோட்பாடு. புத்த, சமண இலக்கியங்களில் சபா பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதால் இந்தக் கருதுகோள் கருதப்படலாம். வட இந்தியாவின் இந்த இலக்கியச் சான்றுகள் சபா[2] வின் அமைப்பு மற்றும் பல்வேறு செயல்பாடுகளைப் பற்றிப் பேசுகின்றன. ஆனால், வட இந்தியாவில் சபாவின் இருப்பை, அவை செயல்பட்டதை நியாயப்படுத்த எந்தக் கல்வெட்டு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. தென்னிந்திய இலக்கியங்களும் சபாவைப் பற்றிப் பேசவில்லை, அதே நேரத்தில் இதற்கான செய்தி செப்புப் பட்டயம் மற்றும் கல்வெட்டுகளில் வெளிப்படுகிறது. மேலும், ‘சபா’ என்பது தமிழ்ச் சொல் அல்ல என்பதும் வெளிப்பாடு.
பல்லவர்கள் காலத்திலிருந்தே, தென்னிந்தியாவில் சபா இருந்தது, மற்றும் அதன் செயல்பாடுகளை மேற்கொண்டது.[3] பாண்டியர் பிரதேசத்திலும் சபா சம காலத்தில் இயங்கியது.[4] இதனால் சபாவிற்கு அரசியல் தடைகள் எதுவும் இல்லாமல் தென்னிந்தியா முழுவதும் இருந்ததை நாம் காண்கிறோம். ஏகாதிபத்திய சோழர்கள் மற்றும் விஜயநகரத்தின் குறிப்பிட்ட காலம் வரையிலும் கல்வெட்டுச் சான்றுகள் வழியே இதன் தொடர்ச்சியைக் காணலாம்.
8 ஆம் நூற்றாண்டுக்கும் 16 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், அனைத்துக் கால, அரசியல் மாற்றங்கள் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் வேறுபாடுகளையும் தாங்கி நிற்க முடிந்தது என்பதே இந்த நிறுவனத்தின் சிறப்பு. ஒரு நிறுவனம் ஏறக்குறைய 900 ஆண்டுகள் நீடித்தது என்பது ஆச்சரியமான உண்மை. இந்த நிறுவனம் ஏகாதிபத்திய சோழர்களின் காலத்தில் (கி.பி 9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை) அதன் முழு ஆடம்பரத்துடனும் மகிமையுடனும் காணப்பட்டது. அது கட்டமைப்பு முறை, சரியான நேரத்தில் விதிக்கப்பட்ட சட்டங்கள், திருத்தப்பட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளே அதன் நீண்ட காலச் செயல்பாட்டிற்கான புறக்கணிக்க முடியாத ஒரு சிறந்த காரணம். இக்கட்டுரையில் சபா சிறந்து விளங்கிய சோழர் காலத்தில் இருந்த கட்டமைப்புச் சட்டங்கள், திருத்தங்கள் பற்றி ஓர் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
முதலாம் பராந்தகனின் காலத்திலிருந்து தொடங்கி மூன்றாம் இராஜராஜனின் ஆட்சி வரையிலான கல்வெட்டுச் சான்றுகள், சபா தேர்தல்கள்/தேர்வு, செயல்பாடுகள் மற்றும் உறுப்பினர்களின் நடத்தை ஆகியவற்றைக் கட்டுப்படுத்த மன்னரின் சட்டங்களின் பேரில் பல மாற்றங்கள் மற்றும் கட்டுப் பாடுகளுக்கு உட்பட்டதைத் தெளிவாக்குகிறது.
அமைப்பு:
பல கல்வெட்டுகள் சபாவின் இருப்பு மற்றும் செயல்பாட்டைப் பற்றிக் குறிப்பிடுகின்றன என்றாலும், மிகச் சில கல்வெட்டுகள் அதன் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பற்றி நமக்கு விவரிக்கின்றன. இதைப் பற்றிக் கூறும் முதலாம் பராந்தகன் கால (கி.பி. 907-955) மூன்று கல்வெட்டுகளைக் காண்கிறோம். இரண்டு கல்வெட்டுகள் சென்னை செங்கல்பட்டு தாலுக்காவில் உள்ள உத்திரமேரூர் கிராமத்தில் (வரதராஜ பெருமாள் கோயில்) இருந்து கி.பி 919 மற்றும் கி.பி 921 தேதியிட்டவை.[6] மூன்றாவது கல்வெட்டு கி.பி 925 இல் தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் உள்ளது.[7]
உத்திரமேரூர், நன்கு அறியப்பட்ட பிரமதேயமாகும், இது இரண்டாம் கட்ட நகரமயமாக்கலின் முதல் காலகட்டத்திலும் (கி.பி. 850-985) தனியூராக உருவாகும் அளவிற்குப் பெரிதாக இருந்தது. பொதுவாக குடவோலை அமைப்பு (குடம்= பானை, ஓலை = எழுதுவதற்கு ஊடகமாகப் பயன்படுத்தப்படும்) தேர்தல் முறையைப் பற்றிப் பேசும் இத்தகைய விரிவான கல்வெட்டை இங்கு மட்டுமே இன்றுவரை கண்டிருக்கிறோம்.
நீண்ட கல்வெட்டில் 5 முக்கியமான செய்திகள் உள்ளன அவை;
(1) இது பல குழுக்கள் (வாரியங்கள்) அவர்களின் பணி,
(2) குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விரிவான அமைப்பு முறை,
(3) குழு உறுப்பினராகத் தேர்வு செய்வதற்குத் தேவையான தகுதிகள்,
(4) தகுதியற்ற பல்வேறு வகையான நபர்கள் பட்டியல்,
(5) கணக்கர்களை நியமிப்பதற்கான நிபந்தனைகள். (ஒருவேளை அந்தப் பதவி மிகவும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருக்கலாம்.)
தேர்வு முறை:
மேற்கூறிய இரண்டு கல்வெட்டுகளின்படி, பிரம்மதேய கிராமமான உத்திரமேரூர் 30 குடும்புகளாகப் பிரிக்கப்பட்டு, அவை 12 சேரிகளாகப் பகுக்கப்பட்டது.
சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தேவையான தகுதியாக 4 முக்கிய அளவுகோல்கள் குறிப்பிடப்பட்டன:
தகுதிகள்:
(1) வயது: 30 வயதுக்குக் குறையாத மற்றும் 60 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும் (கிபி-919). ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குள்(கிபி-921) 35 முதல் 70 வயது வரையென மாற்றப்பட்டது.
(2) கல்வித் தகுதி: ஒருவர் மந்திரபிரம்மத்தை அறிந்திருக்க வேண்டும், அதாவது அந்த நபர் தான் கற்றதுடன், மற்றவர்களுக்குக் கற்பிக்கும் தகுதியும் கொண்டிருக்க வேண்டும்.
(3) சொத்து: அக்காலத்தின் மிகப்பெரிய நில அளவான ஒரு வேலி (வேலி = 5 ஏக்கர்) நிலத்தின் நான்கில் ஒரு பங்கிற்கு அதிகமாகச் சொந்தமாக இருக்க வேண்டும், அதற்கு வரியும் செலுத்தும் நபராகவும் மேலும் அவர் சொந்தமாகக் கட்டப்பட்ட தன் வீட்டில் வசிக்கவும் வேண்டும். (அதாவது தானம் பெற்ற வரியில்லா நிலமல்ல)
(4) ஒழுக்கம்: ஒருவர் கிராம நிர்வாகம் அதன் செயல்பாடுகளை நன்கு அறிந்தவராகவும், புனிதமானதாகக் கருதப்பட்ட விதிகளின்படி நடந்து கொள்ளவும் வேண்டும், நேர்மையான வழிகளில் செல்வத்தை ஈட்டியிருக்க வேண்டும். சொல், செயல், எண்ணம் ஆகியவற்றில் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
தகுதியின்மை:
இதில் 3வகை குறிப்பிடப் பட்டுள்ளது அவை. . .
ஐந்து மாபெரும் பாவங்களில் முதல் 4ல் ஏதேனும் ஒன்றில் ஈடுபட்டவர்கள் தகுதி இழந்தவராவார். அந்த ஐந்து பாவங்கள் பின்வருமாறு;
I. (1) பிராமணனைக் கொல்வது, (2) மது அருந்துவது, (3) திருடுவது, (4)ஆசிரியரின் மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவது மற்றும் (5) இந்தக் குற்றங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்தவருடன் தொடர்புகொண்டு அது பதிவுசெய்யப் பட்டிருத்தல்.
II. எந்தவொரு குழுவிலும் பணியாற்றியவர்கள் அவரோ அவரது உறவினரோ தங்கள் கணக்கை ஒப்படைக்கத் தவறி இருந்தால் அவர்கள் தடைசெய்யப்பட்டவர்கள்.
III. ஒருவரின் தந்தை, சகோதரர்கள், தந்தைவழி, தாய்வழி சகோதரர்கள் மற்றும் அவர்களது மகன்கள், தந்தைவழி மற்றும் தாய்வழி சகோதரிகளின் கணவர்கள் மற்றும் மகன்கள், ஒருவரது மனைவி மூலம் மாமனார், மைத்துனர்கள் மற்றும் பலர் என்று உறவினர்களின் பட்டியல் மிகவும் நீளமானது. அவர்களின் மகன்கள். சொந்த மகன்கள், மற்றும் மகன்கள் மற்றும் மகள்களின் மாமனார், மைத்துனர்கள் மற்றும் ஒருவரின் சொந்தப் பேரக் குழந்தைகள். இவ்வளவு பெரிய அளவிலான உறவினர்கள் சபாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. நான்கு தலைமுறைகளைத் தண்டனைக்கு உரியவராக்கியது.
ஆனால் அவர்களின் தடை தற்காலிகமானது, எனக் கருத இடமுள்ளது வேறு சிலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளபடி "வாழ்நாள் முழுவதும்" என இங்கு வகைப்படுத்தப்படவில்லை.
சில பாவங்களைச் செய்த, மற்றொரு பிரிவினர் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டனர், சில பரிகாரச் சடங்குகளைச் செய்த பிறகு போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். அவர் பின்வருமாறு:
1. தாழ்த்தப்பட்ட (சாதி) மக்களுடன் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள்.[9]
2. சிந்திக்காது செயல்படுபவர்கள்…. (பிரிவு சேதமடைந்துள்ளது மற்றும் முழுமையாகப் படிக்க முடியவில்லை).[10]
3. மூன்றாவது பிரிவினர், பாவங்களைச் செய்து, பிராயச்சித்தச் சடங்குகளைச் செய்தாலும், வாழ்நாள் முழுவதும் தடை செய்யப்பட்டிருந்தனர். பாவங்களில் சமயம் தொடர்பான பாவங்கள் மட்டுமே பரிகாரச் சடங்குகளால் கழுவ முடியும், ஆனால் சமூக மற்றும் அரசியல் பாவங்களை அப்படிக் கழுவ இயலாது என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.
பிறருடைய சொத்துக்களைத் திருடியவர்கள் அல்லது கொள்ளையடித்தவர்கள், தடை செய்யப்பட்ட உணவுகளை உண்டவர்கள், கிராம, சமூக விரோதிகள். சட்டவிரோதப் பாலியல் செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும்…... (கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது) பிற பாவம் [11].
இவ்வாறு குற்றம் அல்லது பாவங்கள் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டு அதற்கேற்பப் பாவிகளுக்குச் சபாவின் குழுக்களுக்குச் சேவை செய்வதிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முறை:
தேர்தல் என்பது இன்று புரிந்து கொள்ளப்படுவது போல் இல்லை, ஆனால் இது பானையிலிருந்து சீட்டுகளை எடுப்பதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது, இது பண்டைய கிரேக்கத்தில் கூட நடைமுறையில் இருந்தது. [12] சபாவின் தேர்தல் முறை 'குடவோலை' என்று அழைக்கப்படுகிறது. குடம்' என்பது 'பானை', 'ஓலை' என்பது மடல். இந்த பெயரை வரலாற்றாளர்களே சூட்டினர் தவிர வேறு ஆதாரம் இல்லை.
உத்திரமேரூர் கிராமம் 30 குடும்புகளாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு குடும்பும் தனித்தனியாகச் சந்தித்து, தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர்களை, ஒவ்வொரு பெயரையும் தனித்தனியாக ஒரு துண்டு ஓலையில் எழுதி, குடும்பின் எண்ணை/ பெயரைக் குறிப்பிட்டு ஓர் அடையாளக் குறிப்புச் சீட்டுடன் தொகுத்து ஒரு கட்டாகக் கட்டிப் பானையில் வைக்க வேண்டும். ஒரு குடும்பிலிருந்து தகுதியானவர்களில் எத்தனைப்பேர் பெயர் வேண்டுமானாலும் எழுதி அனுப்பலாம். அதற்கேதும் தடை தென்படவில்லை. இவ்வாறு தகுதியுடைய நபர்கள் தங்கள் சொந்தக் குடும்பு ஆட்களால் 30 குடும்புகளால் பரிந்துரைக்கப்படுகின்றனர்.
அடுத்து தேர்தலுக்காகக் கூட்டப்பட்ட இளைஞர்கள் மற்றும் வயதான உறுப்பினர்கள் உட்படக் கிராம சபையின் முழுக் கூட்டத்தின் நடுவில் பானையில் உள்ள கட்டுகள் திறக்கப்படும். சம்பந்தப்பட்ட நாளில் கிராமத்தில் இருக்கும் அனைத்துக் கோவில் பூசாரிகளும், விதிவிலக்கு இல்லாமல், சபை கூடும் கிராம மண்டபத்தில் அமர வேண்டும். கோவில் பூசாரிகள் நடுவில், பெரியவராக இருந்தவர்களில் ஒருவர் எழுந்து நின்று, அங்குள்ள மக்கள் அனைவருக்கும் தெரியும்படி ஒரு காலியான பானையைத் தலக்கீழாக உயர்த்திக் காட்டுவார். பானை காலியாகத்தானுள்ளது என்று தெளிவாக்கபோலும்.
விபரம் அறியாத ஒரு சிறுவன், 30 கட்டுகளிலிருந்து ஒரு கட்டை நிற்கும் பூசாரியிடம் ஒப்படைக்க வேண்டும். எல்லோரின் முன்னிலையிலும் அக்கட்டைப் பிரித்து அதிலிருக்கும் ஓலைகளை ஒரு வெற்று பானைக்கு மாற்றப்பட்டு நன்கு குலுக்கப்படும். அச்சிறுவன் இந்தப் பானையிலிருந்து ஓலை ஒன்றை எடுத்து மத்தியஸ்தர் எனும் நடுவரிடம் கொடுப்பார்.
அந்த ஓலையைப் பெறும்போது, நடுவர் தன் ஐந்து விரல்களைத் திறந்து காண்பித்து பின்னர் உள்ளங்கையில் அதைப் பெறுவார். அவ்வாறு பெறப்பட்ட ஓலையில் உள்ள பெயரை அவர் உரக்கப் படித்துக் காட்ட வேண்டும். அவர் வாசித்த ஓலையை, மண்டபத்தில் இருக்கும் அனைத்துப் பூசாரிகளும் ஒவ்வொருவராக வாசிக்க வேண்டும். இவ்வாறு வாசிக்கப்படும் பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் பதிவு செய்யப்படும். அதேபோல முப்பது வாரியங்களுக்கும் 30 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இப்படித்தான் சபா உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜனநாயகத்தின் வலுவான அம்சம், வெளிப்படையே. ஒளிவு மறைவு எதுவும் இல்லை என்பதை இந்தச் செயல்முறை தெளிவாக்குகிறது. நாம் மேலே பார்த்த குறிப்பிட்ட அளவுகோல்களின்படி, தேர்ந்தெடுக்கப் பட்டவர்களிடமிருந்து தேர்வு செய்ய அவர்கள் பின்பற்றும் ஒரு முறை இதுவாகும்.
அடுத்த கட்டமாக அவர்களின் இலாகாக்களை ஒதுக்கீடு செய்வது, அதாவது எந்தக் குழுவில் யார் பணியாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வது. கல்வெட்டு[13] வழியே நாம் அறிவது; நீர்நிலைக் குழு மற்றும் தோட்டக் குழுவில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களும், படிப்பிலும், வயதிலும் சிறந்து விளங்குபவர்கள் வருடாந்திர மேற்பார்வைக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. எப்படித் தேர்வு செய்யப்பட்டது? அது குறிப்பிடப்படவில்லை. ஆனால் தோட்டம், நீர்நிலை, தங்கம், பஞ்ச வாரியம் போன்ற மற்ற பொறுப்புகளுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் குரல் வாக்கெடுப்பு மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
எனவே, தென்னிந்தியாவில் இடைக்காலத்தில் மக்கள் குரல் மூலம் தேர்வு முறையையும் அறிந்திருந்தமை தெளிவாகிறது.
இவ்வழக்கம் இன்றும் நமது பாராளுமன்றத்திலும் மாநிலச் சட்டசபைகளிலும் மசோதாக்களை நிறைவேற்றுவதில் நடைமுறையில் உள்ளது. கிராம சபாவில் காணப்படும் மூன்றாவது படிநிலை, குழுக்களில் செயல்பட 30 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தேவைப்பட்டால், இரண்டாவது முறையாக முழுச் செயல்முறையும் மீண்டும் கடைப்பிடித்து ஒரு குடும்பில் இருந்து ஒருவரென 30 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களின் குரல் வாக்கெடுப்பு மூலம் தேவையான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அடுத்த தேர்வில் தற்போது வாய்ப்புப் பெற்ற குடும்புகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது, இதனால் அனைத்துக் குடும்புகளும் நிச்சயமாக அனைத்துக் குழுக்களிலும் பணியாற்ற வாய்ப்பு பெறமுடியும். இது அனைவருக்கும் சம வாய்ப்பை உறுதி செய்கிறது.
உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகள்:
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் ஓராண்டு மட்டுமே. பல்வேறு குழுக்களின் உறுப்பினர்கள் 360 நாட்களிலும் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும். அவர்களின் பதவிக்காலம் முடிவடையும் போது, அவர்கள் தங்கள் கணக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும். பதவிக் காலத்தின் முடிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் ஓய்வு பெற வேண்டும், மேலும் எந்த அடிப்படையிலும் எந்த வகையிலும் தங்கள் பதவியை நீட்டிக்க யாருக்கும் உரிமை இல்லை. கணக்குகளைச் சமர்ப்பித்தல் அல்லது ஓய்வு பெறுதல் மற்றும் தேர்தல்களைத் தவிர சில சட்டவிரோத வழிகளில் குழுவில் நுழைதல், கடமைகளில் தோல்வியுற்றவர்கள் ஆகிய அனைவரும், 'கிராமத்துரோகிகள்' (அதாவது கிராமத்தின் துரோகிகள்) எனக் கருதப்படுவார்கள், அதன்படி தண்டிக்கப்படுவார்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
தேவைக்கு ஏற்ப விதிகளின் திருத்தம்:
விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் நிலையானவை அல்ல, ஆனால் அவை காலத்தின் தேவைக்கேற்பத் திருத்தப்பட்டவை எனக் கல்வெட்டிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. பத்தாம் நூற்றாண்டிலேயே (பராந்தகன்-I) வயது வரம்பு 30 முதல் 60 வயதிலிருந்து 35 முதல் 70 வரை மாற்றப்பட்டுள்ளது.[14]
உத்திரமேரூர் கிராமத்தில் நிலைமை இப்படி இருக்கும்போது, கி.பி.925ல் தஞ்சாவூரின் பிள்ளைப்பாக்கம் கிராமத்திலிருந்து மற்றொரு திருத்தம் கூறப்பட்டது, பராந்தகரின் 20வது ஆட்சியாண்டிலிருந்து (கி.பி. 926) ஒவ்வொரு குடும்பிலும் முன் அனுபவம் இல்லாதவர்கள் 2 உறுப்பினர்கள் சபாவில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்றும் சபா இதைச் செயல்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. கிராமத்தின் அனைத்துத் தகுதியான உறுப்பினர்களும் நிர்வாகத்தின் உண்மைத்தன்மையை அறியும் வாய்ப்பிற்கு இந்தத் திருத்தம் வழிவகுத்தது. இந்த அமைப்பு கிராம மக்கள் நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களையும் வெளிப்படையாக வைத்திருக்க உதவும்.
மேலே கூறப்பட்ட அதே உத்தரவின் மற்றொரு விதி என்னவென்றால், இந்த விதிமுறையின் வெளிப்படுத்தப்பட்ட நிபந்தனைகளுக்கு எதிராகச் செயல்படும் நபர்கள் தினசரி ஒரு மஞ்சாடி தங்கம் அபராதம் விதிக்கப்படுவார்கள் மற்றும் அவ்வாறு விதிக்கப்பட்ட அபராதம் முறையாக வசூலிக்கப்பட வேண்டும். உத்திரமேரூர் கல்வெட்டு அத்தகையவர்களைக் கிராம துரோகிகளென்று அழைக்கிறது. ஆனால் பிள்ளைப்பாக்கம் கல்வெட்டு அவர்களை மிகவும் கடுமையாகத் தண்டித்துள்ளது. சுத்தமல்லி கல்வெட்டு சபா உறுப்பினர்களின் தேர்தலுக்கான சில விதிகளையும் குறிப்பிடுகிறது, அதில் அதிக வேறுபாடுகள் இல்லை, ஆனால் ஒரே வரியில் உள்ளது. மகாசபையுடன் இணைந்து செயல்படும் மற்ற சபைகளும் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.[16]
இரண்டாம் குலோத்துங்கனின் 7வது ஆட்சியாண்டில் (கி.பி. 1140) தஞ்சாவூரில் அரசரின் 2 அதிகாரிகளான பிரம்மேந்திரர் மற்றும் வானதி ராயர் ஆகியோர் வழியே பேரவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான விதிகள் வெளியிடப்பட்டது.[17] குறைந்தபட்ச வயது 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மீண்டும் சபாவில் ஏற்கனவே பணியாற்றியவர்களைப் பற்றிப் பேசுகிறது. இந்தக் கல்வெட்டு கடந்த பத்து ஆண்டுகளில் சபாவுக்குச் சேவை செய்யாதவர்களும், பாரபட்சமற்ற கற்றறிந்தவர்களும், 40 வயதுக்கு மேற்பட்டவர்களும் தேர்தலில் போட்டியிடலாம் என்று திட்டவட்டமாகக் குறிப்பிடுகிறது. மேலும் முந்தைய ஐந்து ஆண்டுகளில் சபா உறுப்பினர்களின் உறவினர்களாக இல்லாதவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உறுப்பினர்களின் உறவினர்களைத் தேர்வு செய்யக்கூடாது என்றும் சட்டத்திருத்தம் சொல்கிறது.
ஊரில் உள்ள பிராமணர்களைத் துன்புறுத்தியவர்கள், சபா உறுப்பினர்களாக இல்லாதவர்கள் மற்றும் வரி செலுத்தாதவர்கள், பிராமணர்கள், சாதுக்கள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் 'கையூட்டு' வாங்குபவர்கள் ஆகியோர் அவர்களின் குற்றத் தன்மைக்கேற்பத் தண்டிக்கப்படுவார்கள் என்பது கடைசி விதி. தொடர்ந்து சில குடும்பங்கள் பதவி வகிப்பதைத் தடுக்க, அதிகாரப் பிடியிலிருந்து விலக்கி வைக்க முதல் இரண்டு விதிகள் விதிக்கப் பட்டுள்ளதை மிகத் தெளிவாக உணர்த்துகின்றன. மத்தியில் பரம்பரையாக மன்னர் அரசாட்சி இருந்தபோதிலும், அத்தகைய பரம்பரை ஆட்சி அதிகாரத் தொகுதிகள் கிராம, பிரமதேயங்களில் நீக்கும் முயற்சிகள் பின்பற்றப் பட்டுள்ளன. அதிகார மையங்கள் தோன்றுவதைத் தடுக்கும் ஒரு முறையாக இவை அமைந்தன. இது போன்ற தொடர்ச்சியான சக்திவாய்ந்த குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பதவியிலும் அதிகாரத்திலும் இருந்தால் முறைகேடுகள் நடப்பதின் சாத்தியக் கூறுகள் அதிகம் என்றறிந்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க, ஐந்து வருடங்களுக்கு உறவினர்களைக் கூட இக்கட்டமைப்பிலிருந்து விலக்கி வைத்தனர் போலும். இது மனிதகுலத்தின் அதிகார ஆசையை எச்சரிப்பதாகப் படுகிறது.
அசாதாரணமான சிறப்புகளை விரும்புவோருக்கு, அவர்களிடம் வரி மற்றும் அபராதம் வசூலிக்க எவ்வளவு கண்டிப்பு காட்டப்பட்டது என்பதைக் கடைசி விதிமுறை காட்டுகிறது. சட்டவிரோதச் செயல்களில் சாதுக்கள் மற்றும் பிராமணர்கள் கூட மற்ற கிராமவாசிகளுடன் சம நிலையில் தண்டிக்க வேண்டும் என்ற மன்னர் விருப்பைத் தெளிவாக்குகிறது. கையூட்டு பெறுவது பற்றிக் குறிப்பிடுவது மிகவும் சுவாரஸ்யமானது. வரி செலுத்துவதிலிருந்து சிலருக்கு விலக்கு அளிக்க லஞ்சம் பெறப்பட்டிருக்கலாம். எனவே, இங்கு வசிக்கும் அனைவரும் சட்டத்தின் முன் சம நிலைக்குக் கொண்டு வரப்பட்டனர் போலும். இந்தக் கிராம சபாவின் பணிகள் அனேகமாக எல்லாம் சரியான வகையில் நடை பெறவில்லை, அதன் உறுப்பினர்களிடையே ஒரு கோஷ்டி மனப்பான்மையின் எழுச்சியால் அதன் பணி தடைப்பட்டது, எனவே அரசாங்கத்தின் குறுக்கீடு மற்றும் வலியுறுத்தல் தேவைப்பட்டுள்ளது என நம்மால் உணரமுடிகிறது.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் 40 வயதைக் குறைந்தபட்சமாக வலியுறுத்தும் கல்வெட்டுகளை நாம் காண்கிறோம் மற்றும் முந்தைய ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில் உறுப்பினர்களாக இருந்தவர்களைத் தவிர்த்து விடுதல். கிராமத்தில் உள்ள அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், முதிர்ச்சியடைந்த நாற்பது வயது சபாவின் சிறந்த செயல்பாட்டிற்கு உதவும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், வழமையான ஓராண்டு பதவிக்காலம் முடிந்த பிறகும் உறுப்பினர்கள் தங்கள் பதவிகளைத் தொடருதல், லஞ்சம் வாங்குவது, கணக்குகளை முறையாகச் சமர்ப்பிக்கவில்லை, உறுப்பினர் சேர்க்கையைத் தொடர்வது போன்ற எல்லா முறைகேடுகளும் நடந்தேறியமை மறைமுகத் தகவலாகத் தெரிகிறது. மன்னரின் ஆணைகள் அத்துமீறப்பட்டமை வெளிப்படையாக உணரமுடிகிறது. இதுபோன்ற விஷயங்களைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை, மேலும் பலர் விதிகளை மதிக்கக் கூட கவலைப்படவில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அந்த இடத்தின் கோவிலின் மூலபரிஷத்திடம் முறையீடுகள் குறிப்பிடப்படுகின்றன, குறிப்பாக போதுமான தகுதிகள் இல்லாத புதிய நபர்கள் உள்ளே நுழைதல். மூன்றாம் இராஜராஜன் காலத்தில் ஒரு கிராமத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.[17]
மூன்றாம் ராஜராஜனின் 30வது ஆட்சியாண்டில் (கி.பி. 1246) குறைந்த வயது வரம்பை 40 வயதாக வலியுறுத்துவதோடு, சொத்து வைத்திருப்பதில் சில தளர்வுகளும் காணப்படுகின்றன. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து (கி.பி. 919) 13 ஆம் நூற்றாண்டு வரை (1246ஆம் ஆண்டு) ¼ வேலி நிலத்தை ஒருவர் வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமானது. அது ஒரு வேலியில் 1/8 பாக நிலம் போதுமென தளர்த்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் கல்வித் தரம் தொடர்பாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் ஓராண்டு பதவிக் காலம் முடிந்தவுடன் உடனடியாக ஓய்வு பெற வேண்டும் என்பது போன்ற விதிகளைக் கல்வெட்டு மிகவும் அழுத்தமாகப் பேசுகிறது. உத்திரமேரூர் கல்வெட்டிலிருந்து (கி.பி. 919) ஒரு வருடப் பதவிக்காலம் என்பது வழக்கமான பதவிக்காலம் என்பதும், 13ஆம் நூற்றாண்டில் கூட இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஒவ்வொருவரும் தேர்தல் மூலம் மட்டுமே குழுவிற்குள் நுழைய வேண்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் எந்த வகையிலும் சரிசெய்து கொள்ளக்கூடாது. அத்தகைய வழிகளில் முயற்சி செய்பவர்கள் அனைவரும் கிராமத்துத் துரோகிகளாகவும் (கிராமத்ரோஜின்கள்) சாதி நீக்கம் செய்யப்பட்டவர்களாகக் கருதப்படுவார்கள்.
இங்கு சாதி நீக்கம் என்ற வார்த்தை இருப்பதால் தண்டனை மிகவும் கடுமையானதாகத் தெரிகிறது. சாதி நீக்கம் பெற்றவர் மற்றும் கிராமத்ரோகிகள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பது தெரியவில்லை என்றாலும், கிராமவாசிகளின் தற்போதைய மனப்பான்மையுடன் அதைக் கட்டியெழுப்ப முடியும், ஒருவரை அவர்களின் கிராமம் மற்றும் சாதியிலிருந்து வெளியேற்றினால், கிராமத்தில் யாரும் தொடர்பு கொள்ளவோ, மளிகைப் பொருட்களை வழங்கவோ கூடாது, அவர்களுக்குத் தண்ணீர் கூட தடை செய்யப்படும் எனவே, இயற்கையாகவே அவர்கள் கிராமத்தை விட்டு வேறு இடத்திற்குச் செல்ல வேண்டிய நெருக்கடிக்கு ஆட்படுவார்கள். ஒருவேளை அவர்களின் சொத்துக்கள் ஏதேனும் இருந்தால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கலாம்.
அவ்வப்போது அரசரின் தலையீட்டால் விதிகள் திருத்தப்பட்டாலும், கடுமையான விதிகளைக் கடந்து லஞ்சம், முறைகேடு, ஊழல், கணக்குகளைச் சரிசெய்வது, தேர்தல்களிலிருந்து தப்பித்து வாரியாக குழுக்குள் நுழைந்து சபா நிர்வாகத்தில் பிரம்மதேயத்தினர் வலம் வந்ததுதான் வேடிக்கை. கிபி13 ஆம் நூற்றாண்டு இறுதியில்(1279ஆம் ஆண்டு) சோழப்பேரரசு வலுவிழந்ததையும் மற்றும் ஆட்சியாளர்களின் பலவீனத்தையுமே இச்செயல்முறைகள் எதிரொலிக்கின்றன என்பதில் சிறிதும் ஐயமில்லை.
பாண்டிய நாடு[18] மானூர் கிராமம், திருநெல்வேலி மாவட்டம் (கி.பி. 9 ஆம் நூற்றாண்டு) ஒரு மிக ஆரம்பக்காலக் கல்வெட்டு, சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்ட நடத்தையைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை அளிக்கிறது. ஒருவேளை உறுப்பினர்களிடையே குழுவாதம் இருந்திருக்கலாம் மற்றும் ஒருவர் மற்றவரின் அனைத்துத் திட்டங்களையும் நிராகரித்தனர். அத்தகைய சூழ்நிலையைச் சமாளிக்க, நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்பவர்கள், சபையில் முன்வைக்கப்படும் ஒவ்வொரு திட்டத்திற்கும் இல்லை, இல்லை என்று கூறி சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து எதிர்க்கக்கூடாது என்றும், அதைச் செய்தவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் சேர்ந்து அபராதப்பணம் செலுத்துவார்கள் என்றும் கல்வெட்டு கூறுகிறது. ஒவ்வொரு நபரும் 5 காசு அபராதம் செலுத்த வேண்டும். மேலும் அதே விதிகளுக்குத் தொடர்ந்து சபா நடப்பில் பங்கேற்க வேண்டும்.
உறுப்பினர்களின் தவறான நடத்தைக்காக அவர்களைத் தண்டிக்கும் இந்த அணுகுமுறை, நிச்சயமாக, அவர்களைச் சபை நடவடிக்கைகளில் இருந்து வெளியேற்றாமல், இன்னும் அதே விதிகளுக்கு உட்பட்டுச் செயல்பட வைப்பது, உறுப்பினர்களின் நடத்தையைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழுங்கு படுத்துவதற்கும் மிகவும் பொருத்தமான முறையாகத் தெரிகிறது. இது சபை நடவடிக்கைகளைத் தொடர உதவுகிறது.
மக்களாட்சி இந்தியாவில் இந்த நூற்றாண்டில் வாழும் ஒவ்வொருவரும், தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில மற்றும் மத்திய அரசு உறுப்பினர்களை நினைவு கூர்வது தவிர்க்க முடியாதது. ஒருவேளை மேலே குறிப்பிட்டுள்ள விதி நம் பிரச்சினைகளையும் தீர்க்கலாம். சபை செயல்பாடுகள் மற்றும் அமைப்புகளில் அரசின் போதுமான மற்றும் உடனடி தலையீடு, அதிகார ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தின் பயங்கரவாதத்திலிருந்து பொதுமக்களை விடுவித்துள்ளது. புதிய விதிமுறைகள் உள்ளிடப்பட்டுச் செயல்படுத்தப்படுவதைக் காண மன்னரின் அதிகாரிகள் உடனிருந்தனர். அரசின் பலமான அதிகாரம், மற்றும் தலையீடு கிராம நிர்வாகத்தில் மக்களால் உணரக்கூடியதாக ஆழமாக ஊடுருவி இருந்தது.
சபா அமைப்பிற்கான சட்டங்கள்-திருத்தங்கள் நமக்குச் சொல்லிச் செல்லும் தகவல்கள் என்ற கோணத்தில் ஆய்ந்தால் பல தொடர்புகள் புரியும். பிரம்மதேய செயல்பாடுகள் மன்னரின் கவனத்திலிருந்தன. அரசு சக்தி வாய்ந்ததாயின் அவை பெரும்பாலும் முறையாகச் செயல்பட்டதும் அரசு பலவீனமடைந்தால் சட்டங்கள் மீறி முறைதவறி செயல்பட்டதும் தெளிவாகிறது. மன்னர்கள் தொடர்ந்து கண்காணித்தாலும் சட்டத் திருத்தங்கள் கொண்டுவந்தாலும் சபா எனும் அமைப்பில் எல்லைமீறலும் தவிர்க்க இயலவில்லை. சட்டங்களும் சட்டமீறல்களும் ஆள்பவருக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இடையே காலகாலமாக நடைபெறும் ஒரு தொடர்கதை என்பதும் தெளிவு.
FOOTNOTES:1.
Meenakshi, C. Administration and Social Life under Pallavas, p.155.
2.
Mookerji, R.K. Local Government in Ancient India, p.161.
3.
Meenakshi, C., Ibid. p.106.
4.
ARE 423 of 1906 – 35th regnal year of Maran Sadaiyan about 9th century AD.
5.
ARE 2 of 1899
6.
ARE 1 of 1899.
7.
ARE 176 of 1930
8.
Champaklakshmi-R Trade Ideology and Urbanisation – South India. 300 BC to 1300 AD Index to Maps 2-6 (The urban process) p. 247.
9.
The words in the brackets are adopted from ARE 1899.
10.
The words in the brackets are adopted from ARE 1899.
11.
The words in the brackets are adopted from ARE 1899.
12.
Rajalakshmi-R, Tamil Polity (600-1300 AD).
13.
ARE 2 of 1899
14.
ARE 1 of 1899.
15.
ARE 176 of 1930
16.
ARE 5 of 1945-46
17.
ARE 278 of 1927
18.
ARE 23 of 1924
ARE= Annual Reports of Epigraphy
குறிப்பு: இக்கட்டுரை ஒரு மீள்வாசிப்பு. இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் வருடாந்திரக் கூட்டத்தில்(2000) கொல்கத்தாவில் ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்டது. பின்னர் பதிப்பிக்கப்பட்டது. சில மாற்றங்களுடன் தமிழ் வடிவம் பெற்றுள்ளது. ஆயினும் அடிக்குறிப்புகள் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன.