தேவர் ராஜாஜியை எதிர்த்தது ஏன்? - பாகம் - 1
ஆகஸ்டு போராட்ட தியாகிகளை அவமதித்த காங்கிரஸ் தலைமை
1942-ம் ஆண்டு ஆகஸ்டு 9-ம் நாள் பம்பாயில் கூடிய காங்கிரஸ் மகாசபை
‘வெள்ளையனே வெளியேறு’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.
இதையடுத்து வெள்ளை அரசு காந்தியடிகள் முதல் எல்லாத் தலைவர்களையும் இரவோடு
இரவாக கைது செய்து கண்காணாத இடங்களுக்கு கொண்டு சென்றது. இது மக்களிடையே
கொந்தளிப்பை ஏற்படுத்தியது. புரட்சித் தீ இந்தியாவின் மூலை
முடுக்கெல்லாம் பரவியது. அரசாங்க அலுவலகங்கள் நொறுக்கப்பட்டன. இரயில்
தண்டவாளங்கள் பெயர்த்து எறியப்பட்டன. தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன.
தபால் அலுவலகங்கள தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. குமுறும் எரிமலை வெடித்தது
போல, இமயம் முதல் குமரி வரை போராட்டம் தீவிரமாக நடைபெற்றது.
இதுபோன்ற நிலையில் இவ்வாறு நடப்பது எந்த நாட்டிலும் நடைபெறக் கூடிய
சாதாரணமான நிகழ்வுகள்தான். அரசியல் அரிச்சுவடி படிக்கும் சிறுவன் கூட இதை
ஒப்புக்கொள்வான்.
ஆனால் காந்தியடிகள் தனது அகிம்சைக் கொள்கைக்கு விரோதமான போராட்டம் என்று
ஆகஸ்டு போராட்டத்தை விமர்சித்து ஏற்றுக் கொள்ள மறுத்தார். காங்கிரஸ்
கட்சியும் ஏற்க மறுத்தது. காலிகள் போராட்டம், ரவுடிகள் போராட்டம் என்று
ராஜாஜி வர்ணித்தார். ஆகஸ்டு தியாகிகளை காங்கிரஸ் மதித்த லட்சணம் இதுதான்.
திருப்பரங்குன்றம் ஊழியர் மாநாடு
ஆகஸ்டு தியாகிகளை அவமதித்த ராஜாஜியின் தலைமை மீண்டும் தமிழ்நாட்டில்
ஏற்பட்டு விடக் கூடாது என்று கருதிய தமிழக காங்கிரஸ் ஊழியர்கள்,
‘தமிழ்நாடு காங்கிரஸ் ஊழியர்கள் மாநாடு’ என்று ஒரு மாநாட்டை தேவரின்
ஆதரவுடனும், ஆசியுடனும் நடத்தினர்.
அந்த மாநாட்டிற்கு நெல்லை மாவட்ட தியாகி யக்ஞேஸ்வர சர்மா தலைமை
வகித்தார். அந்த மாநாட்டில் தேவர் இல்லாவிட்டால் காமராஜரும் அவரது
கோஷ்டியினரும், அடி, மிதி வாங்கி ஓடியிருப்பர்.
தேவர் இருந்ததால்தான் ராஜாஜியின் தலைமை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்
நிறைவேறியது. காமராஜர் தலைமை காப்பாற்றப்பட்டது.
அன்றைக்கு தேவர் மாத்திரம் ராஜாஜி கூறிய சமாதானத்தை ஏற்றுக்
கொண்டிருந்தால், காமராஜர் தமிழகத்து அரசியலில் முகவரி தெரியாத நபராகி,
விருதுநகர் வீதியிலேயே திரிந்து கொண்டிருந்திருப்பார்.
அரசியலில் திருப்பரங்குன்றம் ஏற்படுத்திய திருப்பம்தான் காமராஜரை
தமிழகத்தின் முதல்வராக்கி, பின்னர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக
உயர்கின்ற அளவுக்கு வழிவகுத்தது.
அன்று காந்தியடிகளின் சம்பந்தி ஆகிய ராஜாஜி மீது நம்பிக்கை இல்லாத்
தீர்மானத்தை முன்மொழிகிற அளவுக்கு தைரியமுள்ள காங்கிஸ்காரரே தமிழகத்தில்
இல்லை.
தேவர்தான் ராஜாஜி மீது நம்பிக்கை இல்லை என்ற தீர்மானத்தை முன்மொழிந்து
விட்டு, தீர்மானத்தை விளக்கி எதுவும் பேசாமல் மேடையில் அமர்ந்து
விட்டார். கூடியிருந்த ஊழியர்கள் எல்லாம் தேவர் பேச வேண்டும் என்று
சப்தமிட்டனர். உடனே தேவர் எழுந்து, “என்னுடைய பேச்சுத் திறமையால் இந்தத்
தீர்மானம் நிறைவேறுவதாக இருந்தால், தமிழ்நாடே குட்டிச் சுவராகட்டும்”
என்று கூறிவிட்டு, “இதுதான் எனது தீர்மான விளக்கப் பிரசங்கம்” என்று
சொல்லிவிட்டு மீண்டும் மேடையில் அமர்ந்து விட்டார்.
புதுக்கோட்டை வல்லத்தரசு, கும்பகோணம் எஸ்.ஏ.ரஹீம் போன்றவர்கள் மணிக்
கணக்கில் பேசினார்கள்.
அப்போது மேடையை நோக்கி கோபால்சாமி என்ற பிராமண இளைஞர் ஓடிவந்து, தலைமை
வகித்த யக்ஞேஸ்வர சர்மாவிடம், “நான் காந்திஜியிடமிருந்து கடிதம் கொண்டு
வந்திருக்கிறேன், அதை மேடையில் படிக்க அனுமதி வேண்டும்” என்று கேட்டார்.
சர்மா தேவரைப் பார்த்தார். தேவர் படிக்கட்டும் என்று தலையசைத்தார். உடனே
காந்தியடிகள் கடிதத்தை படிக்க தலைவர் சர்மா அனுமதி அளித்ததும்,
கோபால்சாமி காந்தியின் கடிதத்தைப் படித்தார்.
“தமிழ்நாடு காங்கிரஸ் ஊழியர்கள் ராஜாஜியைப் புறக்கணிக்கக் கூடாது. அவரது
சேவை சேவை தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் இந்த நேரம் மிகமிகத் தேவை”
இதுதான் காந்தியடிகளின் கடிதத்தின் சாரம்.
காந்தியடிகளை கடவுளாக மதிக்கும் காங்கிரஸ் ஊழியர்கள் மத்தியில், அவரது
கடிதம் படிக்கப்பட்டதும் தேவர் எழுந்து, “இதே காந்தியடிகள் எனக்கும்
ராஜாஜிக்கும் உள்ள வித்தியாசம் வெண்ணெய்க்கும், சுண்ணாம்புக்கும் உள்ள
வித்தியாசத்தைப் போன்றது என்று கூறியுள்ளார். அதையும் பரிசீலித்து விட்டு
முடிவு செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.
தீர்மானம் வாக்குக்கு விடப்பட்டு பெரும்பான்மையோரால் ஆதரிக்கப் பட்டு நிறைவேறியது.
மீண்டும் தேவர் சட்டசபை உறுப்பினர்
திருப்பரங்குன்றம் ஊழியர்கள் மாநாடு முடிந்தது. அதைத் தொடர்ந்து 1946-ம்
ஆண்டு சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. தேவர் முதுகுளத்தூர்
தொகுதியிலிருந்து சட்டசபை உறுப்பினராக போட்டியின்றி
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆந்திரகேசரி பிரகாசம் தலைமையில் அமைச்சரவை அமைக்கப்பட்டது. அந்த
அமைச்சரவையில் தேவருக்கு தொழிற்துறை அமைச்சராக பதவி தருவதாக பிரகாசம்
இரண்டுமுறை தேவரை நேரில் கேட்டும், தேவர் அதை மறுத்து விட்டார். காரணம்
என்ன?
தனது ஒப்பற்ற தலைவர் நேதாஜி அரசியல் வானில் தலைமறைவாக இருப்பதன் உண்மை
தெரிந்து, அவரது நடவடிக்கையை அறிந்து, அதற்கான வேலையில் தொடர்ந்து
ஈடுபடுவதே தன் கடமையே தவிர, அந்த நேரத்தில் அமைச்சர் பதவி ஏற்பது
நேதாஜிக்குச் செய்யும் அவமரியாதையாகவே முடியும் என்று கருதியே அமைச்சர்
பதவியை ஏற்க தேவர் மறுத்து விட்டார்.
ராஜாஜி தலைமையை புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன?
1942-ம் ஆண்டு ஆகஸ்டு 9-ம் தேதி ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற தீர்மானம்
பம்பாய் மாநாட்டில் காந்தியடிகள் முன்னிலையில் நிறைவேறியது. அந்த
மாநாட்டில், ராஜாஜி அந்தத் தீர்மானம் சிறுபிள்ளைத் தனமானது என்று
பேசிவிட்டு வெளியேறினார். அதோடு கம்யூனிஸ்ட்களோடு சேர்ந்துகொண்டு ஆகஸ்டு
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காலிகள், ரவுடிகள் என்று பேசி வந்தார்.
கம்யூனிஸ்ட்களோ ஆகஸ்டு போராட்ட வீரர்களை வெள்ளை அரசுக்குக் காட்டிக்
கொடுத்து வந்தனர்.
பாகிஸ்தான் கொடுக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட்களும் ராஜாஜியும் ஒரே
மேடையில் பேசி வந்தனர். ஜெர்மனி ரஷ்யாவை தாக்குவதற்கு முதல்நாள் வரை
ஏகாதிபத்திய யுத்தம் என்று சொல்லி வந்த கம்யூனிஸ்ட்கள், ஜெர்மனி
ரஷ்யாவைத் தாக்கியதும், இது மக்கள் யுத்தம் என்று சொல்லி பிரிட்டிஷ்
சர்க்காருக்கு ஆதரவாக அந்த நேரத்தில் செயல்பட்டனர். காரணம் ரஷ்யாவைத்
தாக்கும் ஜெர்மனியை எதிர்த்துப் பிரிட்டன் போராடுகிறதாம். அதனால்
பிரிட்டிஷ் ஆட்சிக்கு இந்தியாவில் எதிர்ப்பு இருக்கக் கூடாது. இருந்தால்
அது ஜெர்மனிக்கு லாபம் என்று வாதாடி, பிரிட்டிஷாருக்கு ஆதரவாக 1942
ஆகஸ்டு பிடுதலைப் போராட்டத் தியாகிகளையெல்லாம் காட்டிக் கொடுத்தவர்கள்
கம்யூனிஸ்ட்கள்.
அதன் பின் யுத்தம் முடிந்து பிரிட்டிஷார் இந்தியாவுக்கு சுதந்திரம்
கொடுக்க பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினர். 1942-ல் காங்கிரஸை விட்டு
விலகிச் சென்றிருந்த ராஜாஜி 1945-ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸூக்குள்
நுழைய எண்ணி, திருச்செங்கோட்டிலிருந்து மாகாண காங்கிரஸ் கமிட்டி
உறுப்பினராக (பி.சி.சி) தேர்ந்தெடுக்கச் செய்தார்.
அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தவர் காமராஜ். தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டிக்குத் தெரியாமல் ராஜாஜி மாகாண காங்கிரஸ் உறுப்பினராக
தேர்ந்தெடுக்கப் பட்ட காரணத்தால் “திருச்செங்கோடு தேர்தல் செல்லாது”
என்று அறிக்கை வெளியிட்டார். அப்போது திருச்செங்கோடு தேர்தல் செல்லுமா?
செல்லாதா? என்று காங்கிரஸ் விதிகளைக் காட்டி பெரும் வாத பிரதிவாதங்கள்
காங்கிரஸ் தலைவர்கள், பத்திரிகைகள் மத்தியில் நடைபெற்றன.
காந்தியடிகள் கூட காமராஜர் கோஷ்டியை ‘தமிழ்நாட்டில் ஒரு க்ளிக்’
இருக்கிறது என்று பயன்படுத்தத் தரமில்லாத ஒரு வார்த்தையைச் சொல்லி
சாடினார்.
திருச்செங்கோடு தேர்தல் செல்லும் என்றால், ராஜாஜி மாகாணக் காங்கிரஸ்
உறுப்பினராகிவிடுவார். உறுப்பினரானால், வெறும் உறுப்பினராக மட்டுமாகவே
இருப்பாரா? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராகி விடுவார்.
அப்போது காமராஜரின் கதி என்னவாகும்? அதுவும் காந்தி அடிகளாலேயே கடுமையான
வார்த்தையால் சாடப்பட்ட காமராஜரின் கதி அதோகதியாகி விடும்.
- முடிசூடா மன்னன் முத்துராமலிங்கத் தேவர் நூலிலிருந்து...
http://perumalthevan.blogspot.in/2017/06/1.html