அறிவின் அமுதூற்று 'நூலகம்!'

8 views
Skip to first unread message

தேமொழி

unread,
Aug 12, 2025, 2:59:52 AM8/12/25
to மின்தமிழ்
அறிவின் அமுதூற்று 'நூலகம்!'

     முனைவர் ஔவை அருள்


இந்திய நூலக அறிவியலின் தந்தையும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் நூலகருமான முனைவர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் பிறந்த நாளைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தேசிய நூலக தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொதுவாக, ஒரு நாட்டின் நூலக வளர்ச்சியைக் கொண்டே அந்த நாட்டின் அறிவுச் செழுமை அளவிடப்படுகிறது.

இந்தியாவில் தற்போது எங்கெங்கும் தேர்வுப் பயிற்சிக் களங்களும், உயர் பதவி தேர்வுக்கூடங்களும் பரவியிருக்கின்றன.

 அந்த மாணவர்களுக்கு விருந்தகங்களாக நூலகங்கள் தான் மிளிர்கின்றன.

எங்கள் நூலகத்தை எந்த நேரமும் நாங்கள் மூடுவதில்லை என்று அறிவிக்கும் நூலகங்கள் வளர்ந்து வருகின்றன.

நடமாடும் நூலகங்கள் வீதி முனைகளில் நிற்பதெல்லாம் நமக்குப் பெருமையாக இருக்கிறது.

 நூலக விழாக்கள்  நூலக இதழ்கள் பெருகி வருகின்றன.

புத்தகங்கள் படிப்பது மூளைக்கு நலமளிக்கக்கூடிய ஒன்று.

புதிய சிந்தனைகள் தோன்றுவதற்கும், அறிவாற்றலைப் பெருக்கிக்கொள்ளவும்,சவால்களை எதிர்கொள்வதற்கும், எழுத்தாளராக உருவாகவும், வெளிப்படையான அறிவார்ந்த உரையாடல்கள் நடத்தவும் புத்தகங்கள் படிப்பது அவசியமாகிறது.

கி.மு.3ஆம் ஆண்டில் எகிப்து நாட்டின் அருமை-பெருமைகளைக் கேட்டு வியந்த மாவீரன் அலெக்சாண்டர், எகிப்தின் எழிலில் மயங்கி 'அலெக்சாண்டிரியா' என்ற நகரை உருவாக்கினார்.

அங்கு தான் மிகப் பெரிய நூலகத்தை எழுப்பினார்.

 உலகில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களை எல்லாம் திரட்டி 10 இலட்சம் புத்தகங்களை அந்த நூலகத்தில் வைத்தார்.

அந்தப் புத்தகங்களைப் படிப்பதற்காகவே உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் அறிஞர்கள் அலெக்சாண்டிரியாவுக்கு வந்தனர்.

 அங்கிருந்து தான் உலகின் அனைத்துப்பகுதிகளுக்கும் தத்துவங்கள், விஞ்ஞானம், அளவையியல், புவியியல், சமய தத்துவார்த்தங்கள் பரவத் தொடங்கின.  

எகிப்தியர்கள் பாப்பிரஸ் (தருப்பை) புல்லில் தயாரிக்கப்பட்ட ஏடுகளில் எழுதி அலெக்சாண்டிரியாவில் இருந்த நூலகத்தில் சேமித்து வைத்திருந்தனர்.

ரோமானியர்களில் புகழ் வாய்ந்த ஜூலியஸ் சீசர், ரோம் நாட்டில் வாழ்ந்த வசதியானவர்களிடம் நன்கொடை வாங்கி பொது நூலகங்களை அமைத்தார்.

கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் இப்படி 28 பொது நூலகங்கள் நிறுவப்பட்டிருந்தன.

கி.பி. 1400-ஆம் ஆண்டில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய போட்லியின் என்ற பெயரில் அழைக்கப்பட்ட நூலகம்தான் உலகின் மிகப் பெரிய பல்கலைக்கழக நூலகம்.

பின்னர், 1850 ஆம் ஆண்டில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பொதுநூலகம் நிறுவும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இஸ்லாமிய முதல் மன்னர் பாபர், 1525-இல் ஆப்கானிஸ்தான் சென்று அங்கிருந்த ஒரு மிகப் பெரிய நூலகத்திலிருந்து அரிய புத்தகங்களையெல்லாம் தன்னுடைய மகன் ஹுமாயூனுக்கு அனுப்பினார்.

அவர் எந்தெந்த நாட்டில் போரிட்டாரோ அந்த நாட்டின் நூலகத்தின் நூல்களையெல்லாம் தம்மிடத்தில் கொண்டு வந்து சேர்த்தார்.

மன்னர் ஹுமாயூன், தன்னுடைய அரண்மனையைப் பெரிய நூலகமாகவே மாற்றி அந்த நூலகத்தில் உள்ள படிக்கட்டுகளில் சறுக்கி மரணமடைந்தார் என்பர்.

இஸ்லாமிய மன்னர்களிடம் 24,000 மடலங்களைக் கொண்ட பல்வேறு நூலகங்கள் மன்னர் அக்பரால் தோற்றுவிக்கப்பட்டு, 16 அடுக்கு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன.

 மன்னர் ஜஹாங்கீரும், அரசியும் தங்களுக்கென நூலகங்களை அமைத்துக்கொண்ட பெருமை பெற்றவர்கள்.

தில்லி கோட்டையில் ஷாஜகானின் மூத்த மகன் டாராசிக்கோ மாபெரும் நூலகத்தை அமைத்தார்.

 மன்னர் ஔரங்கசீப், பாமினி சுல்தானிடமிருந்து 3,000 அரிய சுவடிகளைத் தில்லி நூலகத்துக்குக் கொண்டுவர ஆணையிட்டார்.

 அதேபோல், திப்பு சுல்தான் மைசூரில் ஒரு மாபெரும் நூலகத்தை அமைத்துக் காத்து வந்தார்.

அவரின் வீழ்ச்சிக்குப் பிறகு, அந்த நூல்கள் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் மற்றும் கொல்கத்தாவில் உள்ள ஆசியவியல் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டன.

இப்படிச் சீரோடும் சிறப்போடும் வளர்ந்த அந்த நூலகம் - கி.மு. 30-ஆம் நூற்றாண்டில் ரோமானியர்களின் முறையற்ற ஆட்சியால் தீயில் கருகியது.

அதிலிருந்து மீட்கப்பட்ட பல நூற்களஞ்சியங்கள் - உலகின் பல நாடுகளுக்கு பயணப்பட்டு ஆங்காங்கே பரவத் தொடங்கின என்பது வரலாறு.

அதேபோல், இந்தியாவில் நாளந்தா பல்கலைக்கழகத்தில் திரட்டி வைத்திருந்த பல்லாயிரக்கணக்கான அரிய நூல்கள் வெவ்வேறு நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டன.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னதாக மெசபடோமியாவில் வாழ்ந்த மக்கள் தங்களுக்கான எழுத்துகளைக் களிமண்ணில் எழுதி அவற்றைத் தீயில் சுட்டு எழுத்து ஓடுகளாக கோயில் மற்றும் அரண்மனைகளில் பாதுகாத்தனர்.

இவை தனித்தனியாகப் பிரித்து வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன.

 இதுதான் முதல் நூலகம் தோன்றுவதற்கு முன்னோடியாக இருந்தது.

இன்றைய அளவில் பார்த்தால் வாஷிங்டனில் உள்ள தலைமை நூலகம்,
அயர்லாந்தில் உள்ள டிரினிட்டி பல்கலைக்கழக நூலகம், சென்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக நூலகம்,
நெதர்லாந்தில் உள்ள தி யு டெல்ப்ட் நூலகம்,
 எகிப்தில் உள்ள பிப்லி யோதிக எலெக்ஸண்டா,
ஜெர்மனியில் உள்ள ஸ்டட்கர்ட் நகர நூலகம்,
 சிங்கப்பூர் பீஷான் பொது நூலகம் ஆகியவை பெரும்புகழ் பெற்ற நூலகங்களாக உள்ளன.

ஜப்பானிய காலனி ஆதிக்கத்தில் இருந்த போது உருவாக்கப்பட்ட தைவான் தேசிய நூலகத்துக்குச் சென்ற அனுபவம் மிகவும் தனித்துவம் வாய்ந்தது.

சீனர்கள், ஜப்பானியர்கள் என இரு மிகப் பெரும் பேரரசுகளின் வரலாற்றைத் தாங்கும் கட்டடம் இது எனலாம்.

இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குண்டுகளுக்கு இரையான இந்த நூலகம் சற்றும் நலியாமல் நிமிர்ந்து நிற்கிறது..

குளிரூட்டபட்ட அறையில் உள்ளே நுழையும்போதே அமைதியின் உருவங்களாக அனைவரும் படிக்கின்றனர்.

 நடக்கும் ஓசைகூட வெளியே கேட்கவில்லை;

அங்கே ஆங்கில புத்தகங்களைப் படிக்கும் நபர்கள் மிகக் குறைவு;

 ஆனால், தாய்மொழி படிக்கும் அவர்களின் ஆர்வம் வியக்கத்தக்கது.

உலகில் இந்த ஒரு நூலகம்தான் 24 மணிநேரமும் செயல்படுகிறது என்பதே இதன் தனிச் சிறப்பாகும்.

 இந்த வகையில், நூறு ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு சரசுவதி மகால் நூலகம் அமைத்துச் சென்னை அரசாங்கத்தின் மூலம் அரசாணையாக வெளியிடப்பட்டது.

1867-இல் மன்னர் 2-ஆம் சிவாஜியின் வாரிசுகளுக்கிடையே சொத்துரிமைத் தகராறு ஏற்பட்ட பின்னர், அன்று முதல் சரசுவதி மகால் நிர்வாகத்தை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிட வேண்டும் என்று தீர்ப்பு வந்த பிறகு, அன்றுமுதல் இன்றுவரை அலுவல் சாராத தலைமைப் பொறுப்பை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஏற்று நூலகத்தையும் காத்து வருகிறார்.

 மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட ஆட்சியரும் அலுவல் சாரா உறுப்பினர்களாக அரசக் குடும்பத்தை சார்ந்த ஒருவருடன் இயங்குவார்கள்.

தஞ்சைக்கு அணிகலனாக உள்ளதும், உலகெங்கும் உள்ளவர்களுக்கு தெரிந்த, அறிந்த பெயர், சரசுவதி மகால் நூலகம்.

 இந்த நூலகம் 12-ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கப்பட்டது.

சரபோஜி மன்னர், மாபெரும் கல்வியாளராகவும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு தலைப்புகளில் 4,500 தொகுதிகள் அடங்கிய நூல்களை வாங்கிக் குவித்து சரபோஜி நூலகம்
என்றே இந்த நூலகம் தொடங்கப்பட்டது.

 மனிதக் கண்டுபிடிப்புகளில் புத்தகங்கள் அளவுக்கு மற்றவை சவால்களைச் சந்தித்திருக்குமா என்பது சந்தேகமே!

உலக வரலாற்றில்
போர்களால் அழிக்கப்பட்டவை மனிதர்கள் மட்டுமல்ல, புத்தகங்களும்தான்.

மக்களைக் கொன்றால் ஒரு தலைமுறையைத்தான் அழிக்க முடியும்;

அதேநேரத்தில், நூலகங்களை அழித்தால் ஒட்டுமொத்தமாக ஓர் இனத்தின் அடையாளத்தையே அழித்துவிட முடியும்.

அதைத்தான் சாம்ராஜ்யங்களைக் கைப்பற்றியவர்கள் செய்தார்கள்.

 இந்தியாவில் நாளந்தா பல்கலைக்கழகமும்
பஞ்சாப் பல்கலைக்கழகமும் தீக்கிரையாக்கப்பட்டன.

 அதேபோன்று, இலங்கையில் இனக் கலவரத்தில் யாழ்ப்பாண நூலகம் அழிக்கப்பட்டு எண்ணற்ற தொன்மை வாய்ந்த தமிழ் நூல்கள் அழிக்கப்பட்டன.

ஓலைச்சுவடிகளில் வீற்றிருந்த தமிழ் இலக்கியங்கள் நெருப்பிலும் ஆற்றிலும் வீசி அழிக்கப்பட்டதும் வரலாறு.

அவற்றில் அழிந்துபோய் மிச்சம் மீதியுள்ள இலக்கியங்கள் தான் இன்றைக்கு நம்மிடமுள்ள செல்வங்கள்.

மக்கள் தங்களின் பெரும்பான்மையான நேரத்தை அறிதிறன்பேசிகளில் செலவழித்துவரும் இன்றைய காலகட்டத்தில், புதினங்கள் திரைப்படங்களாக வெளிவந்து வெற்றி பெறும்போதும், வலைகாணொலியில் கதைசொல்லிகள் கூறும் கதைகளைக் கேட்டு சுவைக்கும்போதும் அவற்றின் மூல நூல்களைப் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் அந்த நூல்களை விலைகொடுத்து வாங்கிப் படிப்பதும், நூலகங்களை நாடிச் சென்று படிப்பதும் கணிசமாக அதிகரித்து வருவது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது.

நூலகங்கள் என்பது வெறும் புத்தகங்கள் குவித்து வைக்கப்படும் இடமன்று.

அது சமூகத்தின் அறிவைப் பெருக்கி சிந்தனைக்கு உரமூட்டும் களமாகும்.

 வாசிப்பு என்பது ஒருவரை அறிவின் வழி நடத்தும் நெடும் பயணமெனில், உரியவாறு ஆற்றுப்படுத்தும் கலங்கரை விளக்கமே நூலகமாகும்.

 இக்கட்டான காலகட்டங்களிலும், மாறாத ஒளியாய் நூலகங்கள் திகழ்ந்து வருகின்றன.

 தொழில்நுட்பப் புரட்சிகள், மின்னூல்கள், இணைய உலகம் - இவையெல்லாம் புத்தக வாசிப்புக்கு சவால்களாக இருந்தாலும், படிக்கப்பட வேண்டிய தேடல்கள், உணர்த்தப்பட வேண்டிய உண்மைகள் எப்போதும் நூலகங்கள் வாசகர்களை வரவேற்றுக் கொண்டிருக்கின்றன.

'ஒரு நூலகம் எரிந்தால், ஒரு தேசத்தின் ஆன்மா எரிந்து சாம்பலாகிறது' என்பது வரலாறு சொல்லும் உண்மை.

 நூலகங்களைப் போற்றி அவற்றைப் பேணிக் காப்பது, உண்மையில் நம் எதிர்காலத்தைக் காப்பாற்றுவதற்கு ஒப்பானது.

நாட்டின் பொருளாதாரம் மட்டுமன்று, நூலாதாரமும் இன்றியமையாதது.

 மனிதனின் நுண்ணறிவையும் பேராற்றலையும் தொடர்ந்து செழுமைப்படுத்தும்
அணையா விளக்காய், அமுதூற்றாய்த் திகழும் நூலகத்தைப் போற்றி நலம் பல பெறுவோம்.

(இன்று (ஆக.12) தேசிய நூலக தினம் )

கட்டுரையாளர்:

இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை,
தமிழக அரசு.

தினமணி
12.8.25
செவ்வாய்க்கிழமை
நடுப்பக்கக் கட்டுரை
பக்கம் 8
dr arul.jpeg
---
Reply all
Reply to author
Forward
0 new messages