1.குறட் கடலிற் சில துளிகள் 34 : கடிந்துரைப்போர் இல்லாதவன் அழிவான்! – இலக்குவனார் திருவள்ளுவன் ++ 2. வெருளி நோய்கள் 694-698: இலக்குவனார் திருவள்ளுவன்

5 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Nov 16, 2025, 5:38:20 PM (2 days ago) Nov 16
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore

குறட் கடலிற் சில துளிகள் 34 : கடிந்துரைப்போர் இல்லாதவன் அழிவான்! – இலக்குவனார் திருவள்ளுவன்



(குறட் கடலிற் சில துளிகள் 33 : இடிக்குந் துணை இருப்போரைக் கெடுப்போர் யாருமிலர் – தொடர்ச்சி)

    குறட் கடலிற் சில துளிகள் 34

    கடிந்துரைப்போரைத் துணையாகக் கொள்ளாதவன்

    தானே அழிவான்

    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

    கெடுப்பா ரிலானுங் கெடும்.  

    (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௪௰௮ – 448)

    தவறுகின்ற நேரங்களில் கடிந்துரைப்பார் இல்லாத பாதுகாப்பற்ற அ்ரசன் கெடுப்பார் இல்லாவிட்டாலும் தானே கெடுவான்.

    இடித்தல் என்பதற்கு முழங்குதல், இடியிடித்தல், நோதல், தாக்கிப்படுதல், மோதுதல், கோபித்தல், தூளாக்குதல், தகர்த்தல், நசுக்குதல், தாக்குதல், முட்டுதல், கழறிச்சொல்லுதல், கொல்லுதல், தோண்டுதல், கெடுத்தல்,கடிந்து சொல்லுதல் எனப் பல பொருள்கள்.

    இத் திருக்குறளில் இடிப்பாரை என்பது தக்க சமயத்தில் கண்டித்து நல்வழிப்படுத்துவோர் என்னும் பொருளில் வந்துள்ளது.

    இல்லாத=தமக்கு அணுக்கமாக வைத்திராத

    ஏமரா=காவலற்ற

    மன்னன்=அரசன்

    கெடுப்பார்=கெடுப்பவர்கள்

    இலானும்=இல்லை என்றாலும்

    கெடும்=அழிவான்

    ஏமரா  என்பது தக்க இடித்துரைப்பார் இல்லாமையால் காவலை இழந்தவனைக் குறிக்கிறது.

    கெடும் என்பது தீங்கிற்கு உள்ளாதல், வழி தவறுதல், சிறப்பை இழத்தல், ஒழுக்கந் தவறுதல், முறை தவறுதல் எனப் பலவற்றையும் குறிக்கும்.

    மன்னன் என்பது அரசனை மட்டுமல்லாமல், தலைவன், குடும்பத் தலைவனாகிய கணவன் முதலியவரையும் குறிக்கும்.

    இலானும்=கெடுப்பான் இல்லாதவனும் என்றும் பொருள் கொள்ளலாம்.

    தலைவனைக் குறிக்கும் என்பதால் இடித்து அறிவுரை கூறுவோர் இல்லாத அலுவலகத் தலைவன், கல்விக்கூடத் தலைவன், அமைப்பின் தலைவன், நிறுவனத்தின் தலைவன், அல்லது தலைமைப் பொறுப்பில் உள்ள தலைவி கேட்டிற்கு உள்ளாவர் எனக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு தலைவனோ தலைவியோ கேட்டிற்கு உள்ளானால், அவர்களைச் சார்ந்துள்ளவர்களும் தீங்கிற்கு உள்ளாவர். எனவே, அனைவர் நலன் கருதியும் தன் அருகே துதி பாடிகளை வைத்துக் கொள்ளாமல் துணிவுடன் தவற்றினைக் கடிந்துரைப்போரைச் சூழ வைத்துக் கொள்ள வேண்டும்.  அருகில் உள்ளவர்கள் ஆமாம் சாமி போடுபவர்களாக இருப்பின் செவிக்கு இனிமையாக இருக்கலாம், உள்ளம் குளிரலாம். ஆனால் வாழ்க்கை நலம் பயக்காது. அதே நேரம், பிறர் தவற்றினை அல்லது குறையைச் சுட்டிக் காட்டுவது அந்த நேரத்தல் கசப்பாக இருக்கலாம். ஆனால் அவர்கள் அறிவுரையைக் கேட்டு நடப்பின் வரக்கூடிய அழிவிலிருந்து காத்துக் கொள்ளலாம்.

    ஆன்றோர் அறிவுரையைக் கேட்காமல் அழிந்தவர்களை வரலாறு நமக்கு எடுத்துச் சொல்கிறது. நல்லவர்கள் அறிவுரையால் நன்மை எய்தியவர்களைப் பற்றியும் வரலாறு சொல்லத் தவறவில்லை. ஆட்சி வரலாறு, தொழில் வரலாறு எனப் பல தரப்பிலும் நாம் இவற்றை அறியலாம்.

    முந்தைய குறளில்(447), இடிக்குந் துணை இருப்போரைக் கெடுப்போர் யாருமிலர் என்ற திருவள்ளுவர் இக்குறள்(448) மூலம் அவ்வாறு இடித்துரைக்கும் தன்மையரை அணுக்கமாகக் கொள்ளாதவன் கெடுப்பார் இல்லாவிட்டாலும் தானே அழிவான் என்கின்றார். ஆக இவ்விரு குறள்கள் மூலம் இடித்துரைப்போர் துணையின் இன்றியமையாமையை நமக்குத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

    நாமும்,

    கடிந்துரைப்போரைத் துணையாகக் கொள்ளாதவன்

    தானே அழிவான்

    என்பதை உணர்ந்து தக்கவரைத் துணையாகக் கொண்டு வாழ்வில் வெல்வோம்! 000

    – இலக்குவனார் திருவள்ளுவன்

    +++

    வெருளி நோய்கள் 694-698: இலக்குவனார் திருவள்ளுவன்


    ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன் 
         17 November 2025     அகரமுதல


    (வெருளி நோய்கள் 689-693 தொடர்ச்சி)

    வெருளி நோய்கள் 694-698

    694. கவர்மகர வெருளி – Zestorhodophobia

    கவர்மகர நிறம் தொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் கவர்மகர வெருளி.

    மகரநிற வெருளி அந்நிறத்தின் எல்லாச் சாயையும்() கொண்டிருக்கும். ஆனால், கவர்மகர வெருளி அதிலிருந்து மாறுபட்டது.  எழுச்சியூட்டும் நிறமாகப் பிறரைக் கவர்வதாக அமைவது.

    zesto என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் கவர்ச்சியான என்று பொருள். rhodophobia என்பது மகர நிற வெருளி.

    00

    695. கவலை வெருளி – Anisychiaphobia 

    கவலை குறித்த வரம்பற்ற பேரச்சம் கவலை வெருளி.

    “ஒருநாள் கவலை என்பது ஒரு மாதம் முழுவதும் நாம் பெறுகின்ற மகிழ்ச்சியைவிட நீளமாக அமைந்து விடுகிறது” என்பது சீனப் பழமொழியாகும்.

    “ஒருநாள் நாம் கவலைப்பட்டால் கூட அந்தக் கவலையானது நம் மனத்தை ‘அமிலம் போல அரித்து, நீங்காத வடுவை ஏற்படுத்திக், காலமெல்லாம் நினைக்கச் செய்துவிடுகிறது” ஆதலின் கவலைப்படாமல் எதையும் எதிர் நோக்க வேண்டும்.

    கவலை (Sadness) என்பது தவறான கணிப்பால் ஏற்படுகின்ற ஒரு மன நோய். என்பர். உறுதியின்மை. பேரிடரைச் சந்திக்கும் சூழல். இழப்பு உதவி கிடைக்காமை வெற்றி பெறாமை தோல்வி போன்றவற்றைச் சந்திக்கும்போது நேரிடும் உணர்ச்சிதான் கவலை.

    கவலை என்பது கவலைகளுக்குத் தீர்வோ மருந்தோ கிடையாது. இருப்பினும் பலர், கவலை இல்லையே என்று கவலைப் படுபவர்கள்போல் எதற்கெடுத்தாலும் கவலைப்படுகின்றனர். கவலைதான் மனச்சோர்வு போன்ற பலவற்றிற்கும் அடிப்படையாய் அமைகிறது. பிள்ளைகள் கவலைப்படுவதாகத் தவறாக எண்ணிப் பெற்றோரும் அல்லது ஒரு சாரார் கவலைப்படுவதாகத் தவறாக அஞ்சி மறு சாராரும் கவலை குறித்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.

    கவலையின் விளைவுகள், அது தரும் நோய்கள் முதலியவற்றைப் படிப்போர் அல்லது கேட்போர் தங்களுக்கும் அந்நோய்கள் உள்ளதாக எண்ணிக் கவலைப்படுவர்.

    Anisychia என்னும் கிரேக்கச்சொல்லிற்குக் கவலை என்று பொருள்.

    00

     696. கவனக்குறைவு வெருளி-Aydehadophobia

    கவனக்குறை மிகைச் செயல் கோளாறு(ADHD; Attention deficit hyperactivity disorder) தொடர்பான வரம்பு கடந்த பேரச்சம் கவனக்குறைவு வெருளி.

    கவனக்குறைவு பல நோய்களுக்குக் காரணமாக அமைவதை எண்ணிக் கவனக்குறைவு குறித்து அளவற்ற பேரச்சம் கொள்கின்றனர்.

    00

    697. கவை வெருளி – Occupatophobia

    தொலைபேசி கவையாக – பயன்நிலையில் – உள்ளதைக் குறிப்பது கவை வெருளி.

    தொலைபேசி அல்லது அலைபேசியில் தொடர்பு கொள்ளும் பொழுது வேறொருவருடன் பேசிக்கொண்டிருக்கும் பயன்பாட்டு நிலையில் இருப்பது குறித்துத அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.

    Busy என்று சொல்வதை நாம், பயன்பாடு, செயல், மும்முரம், சுறுசுறுப்பு எனப் பலவகைகளில் குறிப்பிடுகின்றோம். வேறு பயனில் இருப்பதைக் குறிப்பதற்குக் கவை என்பது ஏற்ற சொல்லாகும்.

    இதனைப் புதுச்சொல் என்றோ பயன்பாட்டில் இல்லாத சொல் என்றோ கருதக் கூடாது. இப்பொழுதும் பயனற்றவன், பயனற்றது என்று குறிக்க நாம், கவைக்குதவாதன், கவைக்குதவாதது என்கிறோம். நாம் பேசும் பொழுது வேறு பயன்பாட்டில் உள்ளது என்பதை நாம் கவை என்றே குறிக்கலாம்.

    00

     698. கழி வெருளி-Polonophobia(1)

    கழி தொடர்பானவற்றின் மீது ஏற்படும் தேவையற்ற பேரச்சம் கழி வெருளி எனப்படும்.

    வீட்டுப்பயன்பாட்டிற்கு உள்ள கழி, கம்பு, மூங்கில் முதலானவை கண்டு தேவையற்ற பேரச்சம் கொள்வர் இத்தகையோர்.கழியைக் கொண்டு பிறர் தாக்குவார்களோ என்ற தேவையற்ற அச்சம், கழி முதலானவற்றைப் பிறர் பயன்படுத்தும் பொழுது மேலே பட்டுக் காயம்படுமோ என்ற தேவையற்ற அச்சம், அவற்றால் பணிகளுக்கு ஏதும் இடையூறு ஏற்படுமோ என்ற பேரச்சம் என இத்தகையோர் இவற்றைப்பார்த்தால் அச்சத்தில்  மூழ்குவர்.

    காண்க : போலிய வெருளி – Polonophobia 

    போலியநாட்டினரையும் Polo என்பது கொண்டு குறிப்பதால் போலிய நாட்டினர் வெருளி என்பதற்கும் Polonophobia என்றே சொல்கின்றனர். பயன்படும் இடத்திற்கேற்ப நாம் பொருள் புரிந்து கொள்ள வேண்டும்.

    00

    (தொடரும்)

    இலக்குவனார் திருவள்ளுவன்

    வெருளி அறிவியல் 2/5

    ++



    --
    அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

    அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
    அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

    இலக்குவனார் இல்லம்,
    23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
    மனை பேசி 044 2242 1759
    அலை பேசி 98844 81652

    / தமிழே விழி! தமிழா விழி!
    எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

    பின்வரும் பதிவுகளைக் காண்க:


    www.ilakkuvanar.com
    thiru2050.blogspot.com
    thiru-padaippugal.blogspot.com
    http://writeinthamizh.blogspot.com/
    http://literaturte.blogspot.com/
    http://semmozhichutar.com

    Reply all
    Reply to author
    Forward
    0 new messages