தொடுதோல் மாந்தர் — தேமொழி

25 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 2, 2026, 7:23:41 PM (3 days ago) Sep 2
to மின்தமிழ்
தொடுதோல் மாந்தர்

—  தேமொழி

காலணி அணிவது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு வழக்கம். தோலில் செய்யப்பட்டக் காலணி (செருப்பு) குறித்த குறிப்புகள் சங்க இலக்கியக் காலத்திலேயே காணக் கிடைக்கின்றன.

பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார்,
       "தொடுதோல் அடியர் துடி படக் குழீஇ,  
       கொடு வில் எயினர் கொள்ளை உண்ட"
              [தொடுதோல்=காலைத் தொட்டபடி இருக்கும் வேற்றுத் தோல், தோல் காலணி / செருப்பு]
கரிகாலன் வெற்றிக்குப் பின் அவனுடைய பகைவர் நாட்டின் வாழ்விடங்களில் மாற்றம் ஏற்படுகிறது, இருப்பிடங்கள்  பாழ்நிலை அடைகிறது. அந்த இடங்களில் பாலைநிலத்து எயினர்களின் நடமாட்டம் அதிகரிக்கிறது, செருப்பை வெளியில் கழற்றிவிட்டு அன்று நுழைந்த இல்லங்களில் இன்று எயினர்கள் செருப்புக் காலோடு நடமாடுகின்றனர் என்கிறார்.

கடியலூர் உருத்திரங்கண்ணனார் மீண்டும்,  "தொடுதோல் மரீஇய வடுவாள் நோன் அடி" (பெரும்பாணாற்றுப்படை, அடி 149); அடி முழுவதையும் மூடும் செருப்பை "அடிபுதையரணம்" (பெரும்பாணாற்றுப்படை, வரி 61) என்று பெரும்பாணாற்றுப்படையிலும் குறிப்பிடுகிறார்.

அகநானூற்றில்;
       "தொடுதோல் கானவன் சூடுறு வியன்புனம்
       கரிபுறம் கழீஇய பெரும்பாட்டு ஈரத்து' (அகநா. 368)
பயிர் அறுவடைக்குப் பிறகு வயலை நெருப்பிட்டுக் கொளுத்துவது வழக்கம்.  அவ்வாறு கொளுத்தப்படும் பொழுது, குறிஞ்சி நிலத்துக் கானவர்கள் (வேடர்கள்) தங்கள் காலில் நெருப்புப் படாமல் இருப்பதற்காகத் தோல் செருப்பு அணிந்திருப்பதைப் பதிவு செய்துள்ளார் மதுரை மருதன் இளநாகனார்.

மீண்டும் மற்றொரு பாடலில்;
       "தொடுதோல் கானவன் கவை பொறுத்தன்ன
       இருதிரி மருப்பின் அண்ணல் இரவை" (அகநா. 34)
என்று முல்லை நிலக் காட்டின் கானவன் தனது காலில் தொடுதோல் என்னும் செருப்பினை அணிந்தபடி கையில் கவைக் கம்பினை வைத்திருக்கிறான் என்றும் காட்சிப்படுத்துகிறார் மதுரை மருதன் இளநாகனார்.

       "அடிபுதை தொடுதோல் பறைய ஏகிக்
       கடிபுலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்" (அகநா. 101)
என்ற பாடலில், புலவர் மாமூலனார், ஆநிரைகளைக் கவர்வதற்குச் செல்லும் எயினர்கள் தங்களின் காலடித் தடத்தைப் பிறர் அறியாமல் மறைத்துவிடும் நோக்கில் செருப்பு அணிந்து செல்கிறார்கள் என்று தெரிவிக்கிறார்.

       "விரத்தி வைராக்கிய விவேகத் தொடுதோல்
       உரத்து அணியத் தையா என்று ஓது".
              (நீதி வெண்பா-72)
என்று  12 ஆம் நூற்றாண்டுக் காலத்து நீதி வெண்பா பாடல் பிச்சை வாங்கி உண்ணும் துறவி தன் மனத்தில் விவேகம் என்ற வைராக்கிய விரதத்தை (விரத்தி வைராக்கிய விவேகத் தொடுதோல் / வைராக்கிய விரதம் என்னும் செருப்பை) நெஞ்சில் அணிந்துகொண்டு சென்றால் மகளிரின் காமக் கண் என்ற முள் தைக்காது  எனக் குறிப்பிடுகிறது. மகளிர் கண்ணை முள்ளாகவும், விரதம் மேற்கொள்வதைத் தவத்தைக் காக்கும் செருப்பாகவும் பாடல்  உவமிக்கிறது.

கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக் குறிப்பொன்று "அடிநிலை" என்ற பெயரால் காலணியைக் குறிப்பிடுகிறது. இதனால், பழந்தமிழ் நாட்டில் தேவை கருதித் தோல் செருப்பு அணியும் வழக்கம் இருப்பதை அறிகிறோம்.  

 kannappar.png


வேடரான கண்ணப்பரைப் படங்களிலும் சிற்பங்களிலும்  செருப்பணிந்தவராகக் காட்டப்படுவது வழக்கம். புதுக்கோட்டை மாவட்டத்தில் 7ஆம் நூற்றாண்டில் முத்தரையர்களால் கட்டப்பட்ட திருமெய்யம் வேணுவனநாதர் ஆலயத்தில் இருக்கும் வேடரான கண்ணப்ப நாயனார் சிலையிலும்  செருப்பணிந்தவராகக் கண்ணப்பர் காட்டப் பட்டிருப்பார்.
kannappa nayanaar.jpg
தெலுங்கானாவின் பாலம்பேட்டையில் உள்ள ராமப்பா கோயில் காகதீய அரசாட்சி காலத்தில் கட்டப்பட்ட மிக அழகான கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது இதன் சிறப்புக்களில் ஒன்று. இக்கோயில் காகதீய அரசன் கணபதி தேவனின் படைத்தலைவரான ரச்சேர்ல ருத்திரன் என்பவரால் கி.பி. 1213-ல் கட்டப்பட்டது.  கோயில் மண்டபத்தில் புராணக் கதைகளைச் சிற்ப வடிவில் காட்டும் சிற்பங்களுடன், அழகிய நாட்டிய மங்கையர் பலர் நாட்டியம் இசை நிகழ்த்துபவர்களாகவும் சிற்பங்களில் காட்டப்பட்டுள்ளனர்.  

இந்த மங்கையர்களுள் ஒருவர் காலில் செருப்பணிந்து காணப்படுகிறார்.  இது சாதாரண வகைச் செருப்பல்ல, இன்றைய நாகரிக உலகில் மாறி மாறி தோன்றியும் மறைந்தும், சுழற்சியாக வந்து போகும் குதிகால் உயர் செருப்பு வகை.  இந்த வகைச் செருப்பை 13ஆம் நூற்றாண்டிலேயே ஒரு பெண் அணிந்திருப்பது சிற்பத்தில் பதிவாகியுள்ளது சிறப்பு.  
 
ramappa temple statue.jpg

குதிகால் உயர்த்தி ஒருவரை உயரமானவராகக் காட்டும் செருப்பு (Platform shoes) நடைமுறை வாழ்க்கையில் மிகத் தொன்மையானது. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாடகங்களின் நடிகர் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.  இடைக்கால ஐரோப்பாவில் 15, 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் இவ்வகை செருப்பு செல்வந்தர்களின் அடையாளமாகவும் இருந்திருக்கிறது.  ஜப்பானில் நீண்ட ஆடைகளின் நுனி  சேறு, தூசி, ஈரம் படாமல் இருக்கக் குதிகால் காலணிகள் அணியப்பட்டுள்ளன.  மீண்டும் 20ஆம் நூற்றாண்டில்  1930களின் பிற்பகுதியில், டிஸ்கோ காலம் எனப்படும் 1970களில், 1990களின் பிற்பகுதியில் என ஒவ்வொரு கால கட்டத்திலும் இது அக்கால நாகரிகத்தின் அடையாளமாக அணியப்பட்டது. இதில் பாதம் முழுமையையும் உயர்த்தாமல் குதிகாலை மட்டும் உயர்த்தும் வகையிலும் பெண்களால் அணியப்பட்டு அதன் காரணமாகப் பாதங்களின் மாற்றம், முதுகுவலி போன்ற உடல் நோவுகளுக்கு  உள்ளாவதும் நிகழ்ந்துள்ளது.

காலம் தோறும் செருப்புகள் அணிந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டாலும், இதிகாசக் கதையில் காலணிகள் நாட்டை ஆண்டதாகக் கூறப்பட்டாலும் மக்களின் மனதில் செருப்புகளிடம் உயர்வான மதிப்பில்லை.


தரவுகள் உதவி:
பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை, அகநானூறு, நீதி வெண்பா

சித்திரப் பேச்சு: கண்ணப்ப நாயனாரின் காலணி. ஓவியர் வேதா. இந்து தமிழ் திசை. ஜூலை 15, 2020
https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/564694-kannappa-nayanar.html

தமிழரின் தோல் தொழில்.  ஆ.சிவசுப்பிரமணியன். செம்மலர் - நவம்பர் 2009.
https://keetru.com/index.php/2009-10-07-10-44-25/semmalar-nov09/1621-2009-12-13-04-36-03

ராமப்பா கோயில்
https://en.wikipedia.org/wiki/Ramappa_Temple
https://en.wikipedia.org/wiki/Ramappa_Temple#/media/File:Ramappa_Temple_by_Varsha_Bhargavi_Kondapalli_21.jpg


இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Sep 3, 2026, 6:36:51 PM (2 days ago) Sep 3
to mint...@googlegroups.com, வல்லமை, thiru thoazhamai

andre' sonnaargal 37- shoes:அன்றே சொன்னார்கள் 37 - காலணிகளைக் கவினுற அமைத்தனர்

>>அன்றே சொன்னார்கள்37


காலணிகளைக் கவினுற அமைத்தனர்

                                                                                                                

natpu 
கற்களிலும் முட்களிலும் நடக்க வேண்டிய தேவை ஏற்பட்ட பொழுது அதனால் ஏற்படும் துன்பத்தில் இருந்து விடுபட மனிதன் தொடக்கக் காலத்திலேயே கால்களில் எதையோ அணியும் பழக்கம் உருவாகியிருக்க வேண்டும். அதுவே மக்கள் கூட்டத்தின் நாகரிகத்திற்கேற்ப வெவ்வேறு காலணிகளாக வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அமெரிக்காவில் ஒரேகான்(Oregon) பகுதியில் உள்ள கற்கோட்டைக் குகையில் (Fort Rock Cave) 10,000 ஆண்டுக்காலத் தொன்மையான காலணிகள் 1938இல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 2009இல் ஆர்மேனியாவில் குகை ஒன்றில்  3500 ஆண்டுத் தொன்மையான காலணியைக் கண்டுபிடித்துள்ளனர். எகிப்தியர்கள் பண்டைக்காலத்தில் பனை ஓலைகளாலும் நாணற் புற்களாலும் ஆனக் காலணிகளை அணிந்துள்ளனர். எகிப்திய குருமார்களின் ஆடைத் தொகுப்பில் இக்காலணிகளும் இடம் பெற்றிருந்திருக்கின்றன. மெசபடோமியாவில் தோலினால் ஆனக் காலணிகளைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். உரோம் நாட்டில் ஆடம்பரப் பொருளாக இருந்த காலணிகள் மாவீரர் அலெக்சாண்டருக்குப் பிந்தைய அகசுடசு எழுச்சி வரையிலான 300 ஆண்டுக் காலத்தில் (கி.மு.323-கி.மு.30) ஓரளவு பரவலான பயன்பாட்டிற்கு வந்தன. இருப்பினும் கி.பி.1760இல் முதல் காலணித் தொழிலகம்  அமைக்கப்பட்டது. எனினும் பிற நாடுகளில், 19ஆம் நூற்றாண்டில்தான் பொது மக்கள் காலணிகளைப் பரவலாகவும் பலவகைகளிலும் பயன்படுத்தத் தொடங்கினர்.

natpu கிரேக்கத்தில் கி.மு.முதல் நூற்றாண்டில் தொன்மைக்கதை ஒன்றில் முதன்முறையாகக் காலணி இடம் பெற்றுள்ளது. (இக்கதையைத் தழுவி 1634 இல் கியம்பட்டிசுட்டா பசிலி(Giambattista Basile) என்பவர் கதைகளின் கதை(Lo cunto de li cunti) என்னும் நூலில் காலணி அடிப்படையில் கதையைப் படைத்தார். 1697 இல் சார்லசு பெர்ரால்டு (Charles Perrault) கண்ணாடிக்காலணியாக மாற்றிச் சுவையுடன் சிந்தரெல்லா (Cinderella) கதையைப் படைத்தார். இப்பொழுது, மரத்திலும் தோலிலும் மட்டும் அல்லாமல் வெள்ளி, தங்கம் முதலான மாழைகளிலும் வைரக் கற்கள் பதித்தும் வெவ்வேறு நேரத் தேவைக்கேற்பவும் ஆட்டக்காலணி, தாளணி, காலரணம், வார்மிதி, குதியணி, மிதியணி,  எனப் பல்வகைக் காலணிகள் உருவாக்கம் பெருகி விட்டது.

தமிழ்நாட்டிலும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே காலணிகள் பயன்படுத்தி இருக்க வேண்டும். முறையான அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டால் பழந்தமிழ்நாட்டில் காலணிகளின் பயன்பாடு குறித்த பல சான்றுகள் கிடைக்கும்.  தமிழில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்களிலேயே மக்கள் பல்வகைக் காலணிகளைப் பயன்படுத்திய உண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
காலணிகள் பற்றிய குறிப்பு காணப்படும் இலக்கியங்கள் அவற்றை வழக்கமான அணிகளில் ஒன்றாகத்தான் குறித்துள்ளன. அடையல், அரணம், கழல், குத்திச் செருப்பு, குறட்டுச் செருப்பு, தோற்பரம், நடையன், மிதியடி, பாதுகை, பாவல், அரண், தோற்பரம், பாதக்காப்பு, அடிபுனைதோல் முதலான பல்வேறு வகையிலான காலணி பற்றிய சொற்கள் வெவ்வேறு பகுதிகளில் நடைமுறையில் உள்ளமை அவை காலங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளமையை விளக்குகின்றன. இவற்றுள் தொடுதோல், செருப்பு, அடிபுதை அரணம் ஆகியவை பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் உள்ளன.
natpu வேடவன் செருப்பு அணிந்து செல்வதைப்  புலவர் மருதன் இளநாகனார் 
        தொடுதோல் கானவன்   (அகநானூறு: 34.3; 368.1)
எனக் குறிப்பிடுகிறார்.

காலணி அணிந்து செல்பவர்களைத்
      தொடுதோல் அடியர்
என மதுரைக் காஞ்சியில்(636) புலவர் மாங்குடி மருதனாரும் பட்டினப்பாலையில் (265)புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனாரும் குறித்துள்ளனர்.

காலிற்கும் செருப்பிற்கும் இடையே புகுந்த கல் துன்பம் தருவதுபோல் பகைவர்க்குத் துன்பம் தருபவன் எனத் தலைவன் ஒருவனைப் பற்றிப் புலவர் ஒருவர்
      செருப்பு இடைச் சிறுபரல் அன்னன் (புறநானூறு: 257.1)
எனக்  கூறுகிறார்.
natpu புலவர் மாமூலனார்,
        அடிபுதை தொடுதோல் (அகநானூறு 101.9)
பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.  காலடி புதைந்து - மறைந்து- காணப்படும் அடிதோல் என்பதால் இது பாதங்களில் அணியும் மிதியடிபோல் இல்லாமல் காற்பகுதியை மறைக்கும் காலணி (சூ : shoe) ஆக விளங்கி உள்ளது எனலாம்.

காலடியை மறைக்கும் காலணியை அடிபுதை அரணம் எனக் குறிப்பிட்டுள்ளதைப் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனாரின்
                                                             நோன்தாள்
        அடிபுதை அரணம் எய்தி (பெரும்பாணாற்றுப்படை 69-70)
என்னும் வரிகள்  மூலம் அறிகிறோம். அடிபுதை அரணம் என்பது வீரர்களின் (பாதத்தையும் காலையும் மறைக்கும்) காலணியாக இருந்துள்ளது.

செருப்பை அணிந்த அடியவர்கள் தெளிந்த சுனை  நீரைப் பருகி,  அரிய சுரத்தைக் கடந்து சென்றனர் என்பதைக் குறிப்பிடும்
     செருப்புடைஅடியர்தெண்சுனை மண்டும்
     அருஞ்சுரம் (அகநானூறு: 129.13-14)
என்னும் வரிகள் மூலம் புலவர் குடவாயில் கீரத்தனார், மக்கள் காட்டுப்பாதையைச் செருப்பு அணிந்தே கடந்துள்ளனர் என்பதை விளக்குகிறார்.
 
natpu காலணிகளை ஆடம்பரத்திற்காக அல்லாமல் தொடர்ந்து தேவைக்காகப்பயன்படுத்தி உள்ளனர். எனவே, காலில் வடு ஏற்பட்டுள்ளது. இதனைப் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்
      தொடுதோல் மரீஇய வடுவாழ் நோன்அடி (பெரும்பாணாற்றுப்படை : 169)
எனக் குறிப்பிட்டுள்ளார். (செருப்பினை விடாமல்(மரீஇய) அணிந்தமையால் காலில் வடு ஏற்பட்ட வலிமையான கால்(நோன் அடி))
natpu செருப்பு என்பது மலை ஒன்றிற்கும் பெயர். அதன் தலைவனான இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாடும்பொழுது  மிதிப்பதற்கு அல்லாத செருப்பின் தலைவன் என வேறுபடுத்தி,
      மிதிஅல் செருப்பின் பூழியர் கோவே (பதிற்றுப்பத்து : 21.23)
எனப் புலவர் பாலைக் கௌதமனார் பாடுகிறார்.

எனவே, காலணிகளைப் பிறநாட்டார் போல் ஆடம்பரமாகக் கருதாமல் அனைவரும் பயன்படுத்தி உள்ளனர் எனப் புரிந்து கொள்ளலாம்.

நடக்கும் பாதையில் ஏற்படும் இடர்களில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள காலணிகளைப் பயன்படுத்திய நாம் வாழ்க்கைப் பாதையில் ஏற்படும் இன அழிப்பு இன்னல்களில் இருந்து நம்மைக் காக்கத் தவறிவிடுகிறோமே!

இலக்குவனார் திருவள்ளுவன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/42cbeebf-eb4c-42b4-8c52-603260ec3cbdn%40googlegroups.com.


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages