பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் (தொகுதி 1): நூலறிமுகம்
— அருள் மெர்வின்சங்க இலக்கியங்கள் பற்றி வெளிவரும் புத்தகங்களைக் கடந்த சில ஆண்டுகளாக ஒரு கடமையாக வாங்கி வாசித்துவருகிறேன். பொதுவாக இந்த புத்தகங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தவை சங்க இலக்கியங்கள் பற்றி எப்படியெல்லாம் எழுதக்கூடாது என்பதைத்தான்.
உதாரணமாக நான்கு ஆண்டுகள் முன்பு வாங்கிய ‘பத்துப்பாட்டு - மூலமும் விளக்கமும்’ என்ற ஒரு புத்தகம். அதை வெளியிட்ட பதிப்பகத்தார் தங்கள் முன்னுரையில், “பழந்தமிழர் பெருமையைக் கூறும் இப்பாடல்களுக்குப் பலர் உரை வகுத்துள்ளனர். அந்த உரைகள் பாமரரும் படித்துணரும் வகையில் இல்லை. எனவே மிகச்சிறந்த முறையில் ஒரு தெளிவுரை வழங்கியுள்ளார் திரு. பத்துப்பாடகர்* அவர்கள் என்று எழுதியிருந்தார்கள். (*பெயர் மாற்றப்பட்டுள்ளது.) ஆகா, நமக்கேற்ற புத்தகம் என்று வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன்.
பத்துப்பாட்டில் முதல் பாடலான திருமுருகாற்றுப்படையில் வரும் ஒரு வரி: “வேறுபல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து ஆரம் முழுமுதல் உருட்டி…”. இதற்கு அந்த திரு. பத்துப்பாடகர் பாமரரும் படித்துணரும் வகையில் எழுதியிருந்த விளக்கம், “அருவிகள் கொடிபோல் அசைந்தாடி வெள்ளைத்துணி விரித்துவிட்டது போலக் கீழே விழும். விழுகிற அருவிகள், வருகிற வழியில் உள்ள அகில் கட்டைகளை அள்ளிக் கொண்டும், சந்தன மரங்களை வேரோடு சாய்த்துக் கொண்டும்…”. பின்னால் அருஞ்சொற்பொருள் என்று சில வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுத்திருந்தார். மேலே உள்ள வரியிலுள்ள எந்த வார்த்தைக்கும் அதில் அர்த்தம் இல்லை. இப்போது இவர் எழுதியிருக்கும் விளக்கத்தையும் திருமுருகாற்றுப்படையில் வரும் அந்த வரிகளையும் எப்படித் தொடர்புப்படுத்துவது என்று தெரியாமல் டெனட் படம் பார்த்தது போல இன்னுமோர் ஆராய்ச்சி செய்ய வேண்டியதாயிற்று. ‘வெள்ளைத் துணி’ என்கிறார். பாடலில் ‘துகில்’ வருகிறது, ஆனால் ‘வெள்ளை’ எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை. ‘அகில் சுமந்து’ என்று பாடலில் வருகிறது, இவர் ‘அகில் கட்டைகளை அள்ளிக் கொண்டு’ என்று விளக்கம் எழுதியிருக்கிறார். ‘சுமந்து’ என்றால் ‘அள்ளிக் கொண்டு’ என்று சங்ககாலத்தில் ஒருவேளை அர்த்தமோ என்று யோசிக்கவைத்தார். இப்படியே அந்த விளக்கவுரைப் புத்தகத்தை வாசிக்க வாசிக்கத்தான் தெரிந்தது பத்துப்பாடல் ஒரு ட்ராக்கில் செல்கிறது, திரு. பத்துப்பாடகர் பாமரர்தானே வாசிக்கிறார்கள் என்று இன்னொரு ட்ராக்கில் தனது விளக்கத்தைப் பிடித்துக் கொண்டு வண்டியைத் தன்போக்கில் ஓட்டியிருக்கிறார் என்று.
சங்க இலக்கியத்தின் தெளிவுரை, விளக்கவுரை என்று வெளிவரும் பெரும்பாலான புத்தகங்களை வாங்கினால் முன்னுரை, அணிந்துரைகளில் ‘பாமரருக்கான விளக்கம், இளைஞர்களுக்கான விளக்கம், எளிய விளக்கம், அரிய விளக்கம்…’ என்று கலர்கலராக ட்ரெய்லரை ஓட விடுவார்கள். நம்பி வாங்கி புத்தகத்தின் உள்ளே போய் உட்கார்ந்த பிறகுதான் தெரியும் அதற்குப் பதிலாக ஒரு கிலோ நியூஸ்பேப்பரையோ, காய்கறியையோ வாங்கி வந்திருந்தாலாவது வீட்டுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்று. இதில் இன்னொரு கோஷ்டி இருக்கிறது. வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்லி கோனார் தமிழ் உரை போல எழுதுவார்கள். ‘வெளிற்று’ என்ற செய்யுள் வார்த்தைக்கு ‘சிறாயின்’ என்று அர்த்தம் எழுதியிருப்பார்கள். நாம் படமும் புரியாமல், சப்டைட்டிலும் புரியாமல் உட்கார்ந்திருக்க வேண்டும். சங்க இலக்கியங்களை வாசிக்க வேண்டும் என்று ஓரளவு ஆர்வம் உள்ளவர்களையும் ஓட ஓட விரட்டிவிடுபவை இப்படிப்பட்ட விளக்கவுரைப் புத்தகங்கள்தான். இவர்கள் செய்து வைத்திருக்கும் அட்டூழியத்தால் புத்தகக் கடைகளில் சென்று சங்க இலக்கியங்கள் பற்றிய புத்தகங்கள் எங்கே இருக்கின்றன என்று கேட்டால் கடைக்காரர்களே நம்மை மேலும் கீழும் ஒருமுறை பார்த்துவிட்டுத்தான் கடைக்குள்ளே அனுமதிக்கிறார்கள்.
நான் மேலே எழுதியிருப்பவை நகைப்பூட்டினாலும் உண்மையிலேயே பலமுறை மனம் நொந்து போயிருக்கிறேன். யாராவது சங்க இலக்கியங்களின் அடி ஆழம் வரை சென்று புரிந்து கொண்டு அதே சமயம் சங்க இலக்கியங்களே வாசிக்காதவர்களுக்கும் அவற்றைப் புரியும்படி, ரசிக்கும்படி ஏன் எழுதமாட்டேன் என்கிறார்கள் என்று மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன். எவ்வளவு நொந்து போனேன் என்றால் இரண்டடி திருவள்ளுவருக்குப் பிறந்த பையன்தான் நாலடியாராக இருப்பாரோ என்ற அளவில் தமிழாராய்ச்சி செய்து கொண்டிருந்த நானே சங்க இலக்கியங்களுக்கு விளக்கம் எழுதி போஸ்ட் செய்யும் நிலைமைக்கு ஒருகாலத்தில் தள்ளப்பட்டுவிட்டேன். நல்ல வேளையாக என்னைப் போன்ற ஆய்வாளர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ள அவசியமில்லாமல் சங்க இலக்கியங்களைக் காப்பாற்றியிருக்கிறார் ஒருவர்.
முனைவர் ப. பாண்டியராஜாவின் ‘பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள்’ தமிழ் மரபு அறக்கட்டளையால் இரண்டு தொகுதிகளாகப் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. இதுவரை நான் வாசித்த (ஒருவேளை நீங்களும் வாசித்த) சங்க இலக்கியங்கள் பற்றிய புத்தகங்களில் ஆகச்சிறந்த புத்தகம். பல பேர் சங்க இலக்கியங்கள் பற்றி எழுதியிருந்தாலும் இதுதான் முதல் முறை.
மேலே சொன்ன திருமுருகாற்றுப்படையில் வரும் அதே வரிக்கு வருவோம்: “வேறுபல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து ஆரம் முழுமுதல் உருட்டி…”. இதை முனைவர் ப. பாண்டியராஜா எப்படி விளக்குகிறார் என்று பார்த்தால் நான் ஏன் இதை எழுதுகிறேன் என்பது புரியும்.
நீர் ஓடி வருகிறது. எப்படி ஓடி வருகிறது? வேறு வேறான பல துணிகள் போல நுடங்கி ஓடி வருகிறது (‘வேறுபல் துகிலின் நுடங்கி’). இந்த வரியைப் புரிந்து கொள்ள முதலில் ஆறு எப்படி ஓடுகிறது என்று ஒருமுறையாவது ஆற்றங்கரையில் உட்கார்த்து பார்க்க வேண்டும். அதன் பிறகு காற்றில் சுதந்திர தினத்திற்கு ஏற்றும் கொடி எப்படி பறக்கிறது என்பதையும் அண்ணாந்து பார்க்க வேண்டும். (துகில் என்றால் துணி அல்லது துணியால் செய்யப்பட்ட கொடி என்று எடுத்துக் கொள்வோம்.) இரண்டையும் பார்த்தால் தெரியும் இரண்டும் ஒரேமாதிரியான அசைவைக் கொண்டிருக்கின்றன என்று. ஓடும் ஆற்றின் அலையலையான தோற்றமும் பறக்கும் கொடியின் அலையலையான தோற்றமும் ஒரே மாதிரியாக இருக்கும். இந்த அசைவுக்குப் பெயர்தான் ‘நுடங்குதல்’ என்கிறார் முனைவர் ப. பாண்டியராஜா. ஓடும் ஆற்றில் பல இடங்களில் இந்த நுடங்குதல் இருக்கும். வேறுபல் துகிலின் நுடங்கி…பல்வேறு துணிகள் நுடங்கி வருவது போல. இதைப் புத்தகத்தில் படத்துடன் விளக்கியிருக்கிறார். இதைவிட நம்மை ஆச்சரியத்திற்குள்ளாக்குவது அடுத்த சொற்றொடருக்கு அவர் அளிக்கும் விளக்கம்.
‘அகில் சுமந்து ஆரம் முழுமுதல் உருட்டி…’ அகில் என்றால் அகில் மரம். இன்று நாம் அகர்பத்தி என்று வீட்டில் வாசனைக்காகக் கொளுத்தும் பத்தியின் முன் ஒட்டிக் கொண்டிருக்கும் ‘அகர்’ ‘அகில்’ என்ற தமிழ் வார்த்தையிலிருந்து வந்தது. அகில் மரத்திலிருந்து ஊதுவத்தி போன்று பல வாசனைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் அகிலை ஈகிள் என்றாக்கி Eagle Wood என்பார்கள். ‘ஆரம்’ என்றால் சந்தன மரம். இதுவும் வாசனைப் பொருட்கள் தயாரிக்க உதவும் மரம் என்று நெட்ஃப்ளிக்ஸில் வீரப்பன் ஆவணப்படம் பார்த்த எல்லாருக்கும் தெரிந்திருக்கும். இந்த இரண்டு வாசனை மரங்களைக் கொண்டுவருகிறது அந்த ஆறு. ஆனால் பாடல் வரியில் ‘அகில் சுமந்து’ என்றும், ‘ஆரம் முழுமுதல் உருட்டி’ என்றும் வருகிறது. அதாவது, ஆற்று நீரில் அகில் மரம் மிதந்து (சுமக்கப்பட்டு) வருகிறது. சந்தன மரம் உருட்டப்பட்டு வருகிறது. ஏன்? இங்கேதான் முனைவர் ப. பாண்டியராஜா தெறிக்க விடுகிறார்.
அகில மரம் அடர்த்தியில் (density) குறைவானது. அது எளிதாக நீரில் மிதக்கும். சந்தன மரம் அடர்த்தி அதிகமானது. அது முழுதாக மிதக்காது. நானும் உங்களைப் போல சந்தேகப்பட்டு கூகிளில் தேடிப்பார்த்தேன். அகில மரத்தின் அடர்த்தி சந்தன மரத்தின் அடர்த்திக்குப் பாதியானது. அகில் 400+ kg/m3, சந்தனம் 900+ kg/m3. சந்தன மரத்தின் அடர்த்தி நீரின் அடர்த்திக்கு அருகில் வந்துவிடுகிறது. அதாவது சந்தனக்கட்டையில் கப்பல் செய்து ஓட்டமுடியாது. அடிப்படை அறிவியல். அதனால் திருமுருகாற்றுப்படையை எழுதிய மதுரை கணக்காயனார் மகன் நக்கீரனார் அந்த ஆற்று நீர் அகில மரத்தைச் சுமந்து வருவதாகவும், சந்தன மரத்தை உருட்டி வருவதாகவும் எழுதியிருக்கிறார் (அகில் சுமந்து ஆரம் முழுமுதல் உருட்டி…). இந்த ஒரு விளக்கத்திற்காகவே முனைவர் ப. பாண்டியராஜாவுக்கு மெரினா பீச்சில் சிலை வைத்தாக வேண்டும். இதெல்லாம் யோசிக்காமல், ‘அகில் கட்டைகளை அள்ளிக் கொண்டும், சந்தன மரங்களை வேரோடு சாய்த்துக் கொண்டும்..’ என்று விளக்கவுரை எழுதி உருட்டியிருக்கிறார்கள். இவர்களை சிறையில் பிடித்துப் போட வேண்டும் யுவர் ஆனர்.
நான் மேலே சொல்லியிருப்பது ‘பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் (தொகுதி 1)’ புத்தகத்தின் ஒரு பக்கத்தில் வரும் விஷயம்தான். இப்படி நூற்றுக்கணக்கான ஆச்சரிய விளக்கங்கள் இந்த புத்தகத்தில் உள்ளன. அதிலும் முனைவர் ப. பாண்டியராஜா அவர்களின் பார்வைகள் இதுவரை யாரும் பார்க்காதவை. ஒரு பெண்ணின் முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதற்கு ‘அது தாமரை போல இருக்கிறது’ என்று முகத்துக்குத் தாமரையை ஒப்பிட்டுக் கேள்விப் பட்டிருப்போம் (அரசியல் தாமரை அல்ல). பத்துப்பாட்டில் ஒன்றான சிறுபாணாற்றுப்படையில் தாமரை எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதற்கு அது பெண்ணின் முகம் போல இருக்கிறது என்ற உவமை வருகிறது (திருமுகம் அவிழ்ந்த தெய்வத்தாமரை). இதெல்லாம் நம் சங்கப் புலவர்கள் அந்த காலத்திலேயே செய்த அல்டிமேட் பெண்ணியப் புரட்சி.
ஒட்டகம் எப்படி தூங்குகிறது என்பதையெல்லாம் கவனித்து அதே போன்ற வடிவில் மரக்கட்டைகள் கடற்கரையில் வந்து ஒதுங்கியிருப்பதாக எழுதியிருக்கிறார்கள். இரண்டும் ஒரே அறிவியல்தான். (‘ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்து அன்ன வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின்…’) இதை நமக்கு விளக்க ஒட்டகம் எப்படித் தூங்கும் என்பதை படம் போட்டுக் காண்பித்திருக்கிறார் இந்த புத்தகத்தில் முனைவர் ப. பாண்டியராஜா. இந்த புத்தகத்தை முதலில் வாசிப்பவர்களுக்கு பத்துப்பாட்டு எழுதிய புலவர்களை வியப்பதா, முனைவர் ப. பாண்டியராஜா அவர்களை வியப்பதா என்ற முதல் காதலின் குழப்பம் வருவது நிச்சயம்.