--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
அனைவருக்கும் மிக்க நன்றி.
அன்புடன்,ப.பாண்டியராஜா
அனைவருக்கும் மிக்க நன்றி.முன்னுரைகள் முடிவடைந்துவிட்டன. இனி ஒவ்வொரு நாளும் ஓர் உவமை இப் பகுதியில் வரும். சில உவமைகள் சேர்ந்தே எடுத்துக்க்கொள்ளப்படவேண்டியிருந்தால், அவை ஒரே நாளில் வரும். மொத்தம் 496 உவமைகள். எனவே இந்த இழை ஓராண்டுக்கும் மேலேயே போகலாம். சில உவமைகள் மூன்று பக்கங்களுக்கும் வரும். மிகப் பெரும்பாலானவை ஓரிரு பக்கங்களில் முடிந்துவிடும். எனவே இது அதிக நேரத்தை எடுக்காது.அன்புடன்,ப.பாண்டியராஜா




///தம்பலப் பூச்சி பற்றியும் இந்திரகோபம் குறித்தும் இன்றே அறிந்தேன். ///
உ.பி.ச.
நீங்கள் ஐயாவின் 'சங்க இலக்கியம் - பட விளக்க உரை' பாடங்களை ஒழுங்காகப் படிப்பதில்லை என்பது இப்பொழுது "உள்ளங்கை நெல்லிக்கனியைப் போல" (<<< உவமை) விளங்கிவிட்டது.
ஒமிட்ல தட்டிட்டீங்களா? :D
..... தேமொழி
--
அனைவருக்கும் மிக்க நன்றி,இத்துடன் நான்கு உவமைகள் ஒரு கொத்தாக வருகின்றன. விண்ணவர்களைப் பற்றி, விண்பொருள்களைக் கொண்டு உவமம் வடிக்கும் திறம்தான் என்னே!அன்ன்புடன்,ப.பாண்டியராஜா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
முதல் இரண்டு விளக்கங்களும் ரசிக்க வைத்தன. முதல் உதாரணத்தில் காலத்திற்கேற்ற மாற்றத்தைக் கூறி தன்னம்பிக்கையோடு நடக்கும் பெண்களின் பண்பையும் கூறி அதனைக் குறைத்துக் கூறாமல் அதனையும் பாராட்டுவது தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் கவர்ந்தது.
அன்புடையீர்,ஞாயிற்றுக்கிழமைக்குரிய உவமையை அனுப்ப மறந்துபோய்விட்டது. எனவே இன்று இரண்டு பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இத்துடன் பொருநராற்றுப்படையில் உள்ள 'அன்ன' சார்ந்த உவமைகள் முடிவடைகின்றன. நாளைக்குச் சிறுபாணாற்றுப்படை.நன்றி.அன்புடன்,ப.பாண்டியராஜா
அனைவருக்கும் வணக்கம்,இன்றைக்குரிய உவமைகள் - மூன்று உவமைகள் இப் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றன.நன்றி,ப.பாண்டியராஜா
--
--
இலக்கிய ஆய்வுக்கு அரைத்த மாவை அரைப்பதுஎனும் உவமை பொருந்தாது.

--
அன்புடையீர்,
ஏறக்குறைய இரண்டு ஆண்டுகட்கு முன்னர் நான் எழுதி முடித்த புத்தகம் இது. பத்துப்பாட்டில் உள்ள அனைத்து உவமைகளையும் தனித்தனியாக எடுத்து, உயர்நிலைப் பள்ளியில் செய்த ERC முறையில் படங்களுடன் கூடிய விளக்கங்கள் கொண்டது இந்நூல். பத்துப்பாட்டில் நான் கண்டவை 496 உவமைகள். இன்னும் சில விட்டுப்போயிருக்கலாம். இந்த 500 உவமைகளையும் நாள் ஒன்றுக்கு ஒன்றாக இங்கு வெளியிட எண்ணியுள்ளேன். ஆம்! நாளும் ஓர் உவமை. சில உவமைகள் தொகுப்பாகக் கணக்கிடப்பட்டிருப்பதால் ஓராண்டுக்கும் மேலாக இத் தொடர் வரலாம். இதனால் எனக்கு மூன்று நன்மைகள்.1.புத்தக அலமாரியில் புழுதிபடிந்து கிடக்கும் இப் புத்தகம் இனி தூசி நீங்கியிருக்கும்.2. எனக்கே மறந்துபோனவற்றை நான் மீண்டும் படிக்க ஒரு வாய்ப்பு.3. திருத்தங்கள் தேவைப்பட்டால் மாற்றி எழுதலாம்.ஆனால், புதிதாய்ச் செய்யவேண்டிய பணிகள் ஏராளமாய் முன்னே குவிந்திருக்க, ஏற்கனவே செய்தவற்றை இன்னுமொரு முறை எடுத்துப் பார்க்க நேரமில்லை. எனவே, நான் இதற்கென்று மிகக் குறுகிய காலமே ஒவ்வொருநாளும் செலவிட முடியும்.இதில் ஒரு முக்கிய இடர்ப்பாடு - கட்டுரைகளை நான் TSCII Font - (TSC Times) -இல் எழுதியுள்ளேன். இத்னை UNICODE -க்கு மாற்ற முடியும். ஆனால் நான் முன்னர் சொன்னது போல எனக்கு அதற்கு நேரமில்லை. எனவே வெளியிடப்படும் ஒவ்வொரு பகுதியும் ..pdf fomat -இல் வெளிவரும். இதற்கு எனக்கு மிகக் குறுகிய காலமே தேவைப்படுகிறது.முதலில், இந்த்ப் புத்தகத்தின் முதல் ஒரு சில பக்கங்கள் வெளியிடப்படுகின்றன. இவை எனது நோக்கத்தை வெளிப்படுத்தும்.நன்றி,
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ மதுரைக்காஞ்சி – உவமைக் காட்சிகள்
5 முதல் 16 வரை
மதுரைக்காஞ்சியில் உள்ள உவமைகளைத் தொகுத்துக்கூறும் கட்டுரைகளில் இது இரண்டாவது ஆகும். முதற்கட்டுரை மின் தமிழில் 22/1/2014 அன்று வெளிவந்தது. ஓராண்டுக்குப் பின் இது தொடர்கிறது. இது ஒன்றும் முற்றிலும் புதிய பணி அல்ல. ஏற்கனவே நான் எழுதி முடித்துவைத்திருக்கும் பத்துப்பாட்டு-உவமைக் காட்சிகள் என்ற நூலிலிருந்து தேவையானவற்றை எடுத்து துளக்கி, துடைத்து, இங்கே தொகுத்து வழங்குகிறேன். அந்த நூலில் உவமைகள் உருபுகளின் பெயர்களின் அகர வரிசையில் அமைந்திருக்கும். அதாவது ஒவ்வோர் உவம உருபுக்குமுரிய உவமைகள் பத்துப்பாட்டின் பத்துப் பாடல்களிலும் வந்திருப்பதைத் தொகுத்துக் கூறியிருக்கிறேன். இங்கு அவ்வாறில்லாமல், பத்துப்பாட்டின் ஒவ்வொரு பாடலிலும் உள்ள அனைத்து உவமைகளையும் கூறியிருக்கிறேன். முந்தைய கட்டுரையில் மதுரைக்காஞ்சியில் உள்ள முதல் 4 உவமைகளைக் கூறியிருந்தேன். இது அடுத்த பகுதி. நீண்ட நாள் கழித்து வருவதால் இந்த முன்னுரை தேவைப்படுகிறது.
ஒவ்வோர் உவமைக்கும் ஓர் எண் உண்டு. முதல் எண் பாடல் எண். அடுத்த எண் அப் பாடலில் உவமை எண். 6.5- என்பதில் 6 என்பது பத்துப்பாட்டில் 6-ஆவதாகிய மதுரைக்காஞ்சி. இதில் 5-ஆவது உவமை இது. முதலில் உவமை கொடுக்கப்படும். அடுத்து உவமையை உடைய பாடலின் அடி(கள்) கொடுக்கப்படும். தொடர்புள்ள உவமைகள் அடுத்தடுத்துக் கொடுக்கப்படும்.
மதுரைக்காஞ்சியைப் பாடிய புலவர் மாங்குடி மருதனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சிறப்பைக் கூறி அவனை வாழ்த்துகிறார். அவனுடைய வெற்றிகளை எல்லாம் புகழ்ந்து கூறும் புலவர் உலகில் நிலையான புகழைத் தருவது அறவழியில் ஆட்சிசெய்தலே என்று அறிவுறுத்துகிறார்.
முதலில் பாண்டியனின் முன்னோர்களின் சிறப்பை விதந்தோதுகிறார் புலவர். அடுத்து மன்னனின் பல்வித வெற்றிகளைப் பாராட்டி மகிழ்கிறார். முதுவெள்ளிலை என்ற கடற்கரைப் பட்டினத்தை அவன் வென்றதன் சிறப்பைக் கூறும் வழியில் அந்த ஊரின் வளத்தைச் சிறப்பித்துக் கூறுகிறார் புலவர்.
6.5 நிலவுக்கானல் - மது 114
6.6 முழவுத்தாழை - மது 114
சலம் புகன்று சுறவுக் கலித்த
புலவுநீர் வியன் பௌவத்து
நிலவுக்கானல் முழவுத்தாழை
குளிர்ப் பொதும்பர் நளித்தூவல்
நிரை திமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை - மது 112 - 116
பாண்டியன் நெடுஞ்செழியனின் ஆளுகைக்கு உட்பட்ட முதுவெள்ளிலை என்னும் கடற்கரைப் பட்டினத்தைப் பற்றிய செய்தி இது.
கடலை ஒட்டியுள்ள பகுதியில் வெண்மணல் நிலவொளியாய் வெளுத்திருந்தது. அதை அடுத்துள்ள தாழையின் காய்கள் குடமுழவு போல் பருத்திருந்தன என்பது இதன் பொருள். இங்கே உவம உருபு (போன்ற) தொக்கிநிற்கின்றது. நிலவு போன்ற கானல், முழவு போன்ற தாழை என்ற பொருளில் இவை உவமத்தொகை ஆகின்றன.
கடற்கரையிலுள்ள மணல்வெளி நிலவொளிபோல் வெள்ளைவெளேர்-என்று இருந்தது என்கிறார் புலவர். கடற்கரையை ஒட்டியுள்ள இளமரக்காவில் தாழைகள் செழித்து வளர்ந்திருப்பதையும் அவற்றின் காய்களின் பருமன் வழியாகச் சொல்கிறார் புலவர்.
கடற்கரையில் பரதவர்கள் வரிசையாகக் கட்டுமரங்களில் வந்து சேர்கின்றனர் – அவர்களை வரவேற்கக் காத்திருப்போர் ஆரவாரம் செய்கின்றனர். அப்படிப்பட்ட கடற்கரை நிலவொளிபோல் இருந்தது என்று புலவர் கூறியிருப்பது அன்றைய மக்கள் தம் சுற்றுப்புறத்தை எத்துணை மாசு இன்றி வைத்திருந்தனர் என்பதைத் தெரிவிக்கின்றது அல்லவா!
முழவு என்பது இங்கே குடமுழா. அரைக்கோள வடிவில் உள்ள தோற்கருவி - இப்போது ‘டோலக்' என்கிறார்களே அது போல.
6.7 கால்என்ன கடிதுஉராஅய் - மது 125
கால்என்னக் கடிதுஉராஅய்
நாடுகெட எரிபரப்பி
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து
அரசுபட அமர் உழக்கி
முரசு கொண்டு களம் வேட்ட
அடுதிறல் உயர்புகழ் வேந்தே - மது 125 - 130
நெடுஞ்செழியனின் தலையாலங்கானத்துப் போரின் ஒரு பகுதி இது.
காற்று என்று சொல்லும்படி விரைந்து சென்று, பகைவர் நாடு கெடும்படி நெருப்பைப் பரப்பி என்பது இதன் பொருள்.
வேகமாகச் செல்வானைக் ‘காற்றாய்ப் பறக்கின்றான்’ என்பார்கள். சில வகைக் காற்று சுழன்று அடிக்கும். உராஅய் என்ற சொல்லால் இங்கு குறிப்பிடப்படும் காற்று நேராகச் செல்லும் காற்று என்றாகிறது. உராவி என்பது உராஅய் என்றானது. உராவுதல் விரிந்து பரவுதல். போருக்குச் செல்லும் குதிரைகள் விரைந்தும், பரந்தும் செல்வது, காற்று நேராகவும் பரவிக்கொண்டும் வீசுவது போல் இருக்கிறது என்கிறார் புலவர்.
6.8 விரிகடல் வியன்தானையொடு - மது 180
6.9 முருகு உறழப் பகைத் தலைச்சென்று - மது 181
6.10 பெயல் உறழக் கணை சிதறி - மது 183
கடுஞ்சினத்த களிறு பரப்பி
விரிகடல் வியன்தானையொடு
முருகு உறழப் பகைத்தலைச் சென்று
அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழ
பெயல் உறழக் கணை சிதறி
பல புரவி நீறு உகைப்ப
வளை நரல வயிர் ஆர்ப்ப
பீடு அழியக் கடந்து அட்டு அவர்
நாடு அழிய எயில் வௌவி - மது 179 - 187
பாண்டியனின் போர்த்திறம் பற்றிய கூற்று இது.
கடும் சீற்றம் கொண்ட களிறுகளைப் பரப்பி, விரிந்து நிற்கும் கடல் போன்ற அகன்ற படைகளுடன், முருகனைப் போன்று பகைவர் மேல் சென்று, அகன்ற விசும்பில் ஆரவாரம் முழங்க, மழை போன்று அம்புகளைப் பெய்து என்பது இதன் பொருள்.
பெரும்படையைக் கடலுக்கு ஒப்பிடுவது வழக்கம்.
அரவக் கடல் தானை அதிகனும் - சிறு 103
நீர் ஒலித்து அன்ன நிலவு வேல் தானையொடு - மது 369
என்ற அடிகள் கடலின் ஓசையைக் படையின் ஆரவாரத்துக்கு ஒப்பிடுகின்றன. ஆனால், இங்கே தானையின் அளவுக்குக் கடலின் பரப்பு உவமையாகக் கொள்ளப்படுகிறது. பெரும் பரப்பளவுக்குப் பாண்டியனின் படை விரிந்து பரந்திருந்தது என்பது குறிக்கப்படுகிறது. விரிகடல் (போன்ற) வியன் தானை என்று ஆவதால் இதுவும் உவமத்தொகையே.
அடுத்து, பாண்டியமன்னன் யானையின் மேல் அமர்ந்து போர்மேல் செல்லுதல், முருகப்பெருமான் யானை மீது அமர்ந்து திருச்செந்தூரில் சூரபன்மனை அழிப்பதற்குச் சென்றது போல் இருப்பதாகப் புலவர் கூறுகிறார்.
விற்படையினர், போரின்போது வரிசையாக நின்று, பகைவர் இருக்கும் இடம் நோக்கி, ஒரு சாய்வான கோணத்தில் உயரச் செல்லுமாறு அம்பு எய்வர். ஒரு குறிப்பிட்ட உயரத்திற்குச் சென்ற அம்புகள் பின்னர் மொத்தமாகக் கீழே பாயும். அவ்வாறு பாயும் அம்புகள் மழை போல் பொழிவதாகப் புலவர் கூறுகிறார். அம்பு மழை பொழிந்தார்கள் என்று இன்றும் நாம் சொல்வதுண்டு. சிதறுதல் என்பது பரவலாகச் செலுத்துதல்.
6.11 நரம்பின் முரலும் நயம்வரு முரற்சி - மது 217
பயன்அறவு அறியா வளம்கெழு திருநகர்
நரம்பின் முரலும் நயம்வரு முரற்சி
விறலியர் வறும்கை குறும்தொடி செறிப்ப
பாணர் உவப்பக் களிறுபல தரீஇ - மது 216-219
மன்னர்களின் பெருவாழ்வைக் கூறி, அதன் நிலையாமையையும் கூறி, நிலைக்கும் புகழ் எதுவென்று கூறவந்த மதுரைக்காஞ்சிப் புலவர், பொதுவாக மன்னர்களின் கொடைத்திறம்பற்றி இங்குக் கூறுகிறார்.
இன்பமும் செல்வமும் ஆகிய பயன் என்பது அற்றுப்போவது என்பதையே அறியாத வளம் தங்கும் அழகிய அரண்மனைகளில், யாழின் நரம்பினைப் போல் இனிமையாக ஒலிக்கும் நயம் தோன்றும் பாட்டினை உடைய விறலியர் தம் வெறும்கைகளில் குறிய தொடிகளைச் செறிவாக அணிந்துகொள்ள, பாணர்கள் மகிழும்வண்ணம் பல களிறுகளை அவர்க்கு வழங்கி என்பது இதன் பொருள்.
நரம்பு என்பது இங்கே யாழின் நரம்பு. முரலுதல் என்பது யாழின் ஒசை. குழல் அகவ யாழ் முரல என்பார் பட்டினப்பாலை(156) ஆசிரியர்.
கின்னரம் முரலும் அணங்கு உடைச் சாரல் - பெரும் 494
என்று பெரும்பாணாற்றுப்படையிலும் காண்கிறோம். நரம்பிசைக் கருவிகளை மீட்டுவதால் ஏற்படும் ஓசை இது. முரற்சி என்பது பாட்டு. செறி என்பது நெருக்கமாக இரு என்று பொருள் தரும். மன்னனின் ஈகையினால் வெறும் கைகளில் செறிக்க வளை அணிந்தனர் விறலியர். சிறிய அளவு எண்ணிக்கையில் வளையல்கள் அணிந்தால் அவை இடம் விட்டுவிட்டு இருக்கும். அவ்வாறன்றி, மேலும் மேலும் வளையல்கள் அணிய, இன்னும் அணிவதற்கு இடமில்லை என்ற அளவில் விறலியர் வளையல்களைச் செறிவாக அணிந்திருக்கின்றனர் என்கிறார் புலவர்.
இங்கு முரற்சி என்பதை முரலும் ஓசையில் உண்டாகும் பாட்டு - instrumental music by veeNai - என்றும் கூறலாம். இதை இப்போது கருவியிசை என்பர். விறலியர் யாழை இனிமையாக மீட்டி எழுப்பிய கருவியிசையால் மகிழ்வித்தவர்கள், அந்த இனிய இசையைத் தந்த கைகள் வெறும்கையாக இருக்கக்கண்டு அக் கைகள் நிறைய வளையல்களை அடுக்கப் பெற்றனர் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம். அவ்வாறு கொள்ளும்போது நரம்பின் முரலும் என்பது நரம்பினால் முரலும் என்ற பொருள் பெற்று உவமமாக ஆகாது.
6.12. பாஅய் அன்ன பாறை அணிந்து - மது 278
6.13. நீலத்து அன்ன பைம்பயிர் மிசைதொறும் - மது 279
6.14. வெள்ளி அன்ன ஒள்வீ உதிர்ந்து - மது 280
6.15 மணி மருள் நெய்தல் உறழ --------- - மது 282
6.16 வல்லோன் தைஇய வெறிக்களம் கடுப்ப - மது 284
சுடர்ப்பூங் கொன்றை தாஅய நீழல்
பாஅய் அன்ன பாறை அணிந்து
நீலத்து அன்ன பைம்பயிர் மிசைதொறும்
வெள்ளி அன்ன ஒள்வீ உதிர்ந்து
சுரிமுகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய்
மணிமருள் நெய்தல் உறழ, காமர்
துணி நீர் மெல் அவல் தொய்யிலொடு மலர
வல்லோன் தைஇய வெறிக்களம் கடுப்ப
முல்லை சான்ற புறவு அணிந்து, ஒருசார் - மது 277 - 285
மதுரைக்காஞ்சியின் ஆசிரியர் மாங்குடி மருதனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் புகழையும் சிறப்பையும் பாடுகின்றவழி, பாண்டியநாட்டின் வளத்தையும் சிறப்பித்துக் கூறுகிறார். புலவர் அந்நாட்டின் முல்லைநில வளத்தை வருணிக்கும் அடிகளில் சிலவற்றைத்தான் நாம் இங்கே பார்க்கிறோம்.
ஒளிவிடும் பூக்களையுடைய கொன்றை மரத்தின் பரந்த நிழலில், பரப்பிவைத்ததைப் போன்ற பாறை அழகுபெற்று, நீலமணியைப் போன்ற பசிய பயிர்களின் மேல், முறுக்குண்ட அரும்புகளையுடைய முசுண்டையுடன் முல்லையின் வெள்ளியின் நிறத்தைப் போன்ற ஒள்ளிய பூக்கள் உதிர்ந்து பரவ, நீலமணி போன்ற நெய்தல், விருப்பத்தையுடைய, தெளிந்த நீரையுடைய நெகிழ்ந்த பள்ளத்தில் தொய்யில் கொடியோடே மாறுபட்டு மலர, வல்லவன் ஒருவன் உருவாக்கிய வெறியாடும் களம் போன்று முல்லை ஒழுக்கம் அமைந்த முல்லைக்காடு சூழ்ந்த ஒரு பகுதியும் என்பது இதன் பொருள்.
குறிஞ்சிநிலத்தில் உயர்ந்த உருண்டையான பாறைகள் நிறைந்த குன்றுகள் இருக்கும். அதனை அடுத்திருக்கும் அடிவாரத்தில் முல்லைநிலக் காடுகள் இருக்கும். எனவே, அங்கு அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் பாறைகள் தென்படும். அவையும் தரை மட்டத்தில் இருக்கும். இவற்றைத்தான் பரவிக்கிடப்பதைப் போன்ற பாறைகள் என்கிறார் புலவர்.
படுத்து வைத்தன்ன பாறை மருங்கின் - மலை. 15
என்று மலைபடுகடாமும் கூறும். இந்தப் பாறைகளின் அருகே கொன்றை மரங்கள் பூத்து நிற்கின்றன. கொன்றை மரப் பூவைப் பார்த்திருக்கிறீர்களா? தங்கக்காசுகளைக் கோத்துத் தொங்கவிட்டதைப் போல் சரம்சரமாய்ப் பூத்திருக்கும். இந்தப் பொன்னிறப் பூக்களின் நிழலில் கருநிறப் பாறைகள் கதிரவன் ஒளியில் எவ்வாறு காட்சிதரும்? ஒன்றிரண்டு பூக்கள் பாறை மீதும் உதிர்ந்துகிடக்காதா? மேலே பசிய இலைகளும் பொன்னிறப்பூக்களும் - கீழே பொன்னிறப்பூக்கள் சிதறிக்கிடக்கும் கருப்பும் வெளுப்புமான பாறை - என்ன ஓர் அருமையான வண்ணக்கலவை! வண்ணக்கலவைகளைப் பாடுவதில் சங்கப் புலவர்களுக்கு அத்துணை ஈடுபாடு. இத்தோடு விட்டாரா புலவர்? இந்த மரத்தையும் பாறையையும் சுற்றிலும் தினை-வரகுக் காடுகள்; அவற்றில் கரும்பச்சை நிறத்தில் விளைந்து முதிர்ந்த பயிர்கள். அவை கருநீலமணியைப் போல் இருக்கின்றனவாம்! இந்தப் பயிர்களைச் சுற்றி வளர்ந்திருக்கின்றன புன்கொடி முசுண்டையும் முல்லையும். இந்தக் கொடிகள் தங்கள் வெள்ளி போன்ற வெள்ளைவெளேர் என்ற பூக்களை அந்தப் பச்சைப் பயிர்களின்மேல் உதிர்த்துவிட்டிருக்கின்றவாம். இவற்றுக்கு அருகில் தெளிந்த நீரையுடைய சகதி நிறைந்த பள்ளங்கள் இருக்கின்றன. அந்தப் பள்ளங்களில் நீலமணி போன்ற நெய்தல் பூக்கள் தொய்யில் கொடியுடன் மலர்ந்து நிற்கின்றன.
இளங்கருப்பில் பாறை – அதன் மேல் நல்ல கருப்பில் மரநிழல்; அவற்றுக்கு மேல் பொன் நிறக் கொன்றைச் சரங்கள்; கொஞ்சம் கொன்றை மலர்கள் சிந்திய பாறை; கரும்பச்சைமணி போல் பசிய பயிர்கள் ; அவற்றின் மேல் முல்லை, முசுண்டைகளின் வெள்ளைப்பூக்கள்; தொய்யில் கொடியுடன் பின்னிப்பிணைந்து மலர்ந்து நிற்கும் கருநீல நெய்தல் பூக்கள் -
மனக்கண்ணால் இந்த வண்ணக்கோலத்தைக் கண்டு மகிழ இந்தப் படங்கள் சற்று உதவலாம்.
மாங்குடியாரின் உவமைத்திறத்தைக் கண்டுகளிக்கின்ற நேரத்தில் அவரின் சொல்திறமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
நன்றாக விளைந்து முற்றிய பயிர்கள் கரும்பச்சை நிறத்தில் இருக்கும். அதை, நீலத்து அன்ன பைம்பயிர் என்கிறார் புலவர். முசுண்டையின் மொட்டு, சுருங்கிப்போய் இருக்கும் என்பதைச் சுரி முகிழ் முசுண்டை என்று கூறும் புலவரின் கூற்று எவ்வளவு உண்மை என்பதைப் படத்தில் காணலாம். சுரி என்பது சுருங்கு அல்லது சுருக்கம் கொள் என்ற பொருள் தரும். யாராவது, முகத்தை வேண்டா வெறுப்பாக வைத்துக்கொண்டிருந்தால், “ஏன், மொகத்த சுரிச்சுகிட்டு வச்சிருக்க?” என்று பேசுவது இன்றும் வழக்கம். எப்போதும் முகத்தை அவ்வாறு வைத்துக்கொண்டிருக்கும் பெண்களைப் பற்றிக் கூறும்போது, “அந்த சுரிச்ச மூஞ்சிக்காரியா?” என்பதுவும் நம் வழக்கம். ஆங்கில, வடமொழித் தாக்கத்தால், இன்று எதையேனும் சரியாகக் கூறப் பிறமொழிச் சொற்களை நாடும் நாம் இது போன்ற அழகு தமிழ்ச் சொற்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துகொண்டுவருகிறோம்.
என்றோ பெய்த மழையில் ஒரு சிறிய பள்ளத்தில் நீர் நிறைந்திருக்கிறது. அது முல்லை நிலம் அல்லவா! செம்மண் நிறத்தில் இருந்த நீர் மெல்ல மெல்லத் தெளிவடைகிறது. அதனைத் துணி நீர் என்கிறார் புலவர். இருப்பினும் செம்மண் சகதி நிறைந்த பள்ளம் அது. இறங்கினால் ‘பொதக்’-கென்று கால் பதியும். நம்மை எச்சரிக்கும் விதத்தில் இதனை மெல் அவல் என்கிறார் புலவர்.
‘வேலன் வெறியாட்டு’ நேரத்தில் ஆடுபவரின் கழுத்து நிறைய மாலைகள் இருக்கும். அவர் ‘வெறி’ வந்து ஆடும்போது மாலையில் இருக்கும் பல நிறப்பூக்கள் அந்தப் பகுதி முழுக்கவே உதிர்ந்து பரந்து கிடக்கும். சிலர் சீக்கிரமே களைப்படைந்துவிடுவர். ஆனால் வலிய ஒருவர் நெடுநேரம் ஆடுவார். கழுத்தில் கிடக்கும் எல்லாப்பூக்களும் உதிர்ந்து பரந்த நிலையில் அந்த வெறிக்களம் எவ்வாறு தோன்றும்? அவ்வாறு இருக்கிறதாம் பாண்டிநாட்டு முல்லை நிலங்கள். வல்லோன் ஒருவன் மிகவும் கடினமாக ஆடியதால் உருவாகிய மலர்ச் சேர்க்கைகளை இயற்கை எத்துணை இயல்பாகச் செய்திருக்கிறது பார்த்தீர்களா என்று புலவர் நம்மைப் பார்த்துக் கேட்கிறது போல் இல்லையா?
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
...
--
மதுரைக்காஞ்சி – உவமைக் காட்சிகள்
17 முதல் 24 வரை
மதுரைக்காஞ்சியில் உள்ள 96 உவமைகளையும் பாடலின் தொடக்கத்திலிருந்து வரிசையாகத் தொகுத்துக் கூறும் கட்டுரைகளில் இது மூன்றாவது ஆகும்.
மதுரைக்காஞ்சியைப் பாடிய புலவர் மாங்குடி மருதனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சிறப்பைக் கூறி அவனை வாழ்த்துகிறார். அவனுடைய வெற்றிகளை எல்லாம் புகழ்ந்து கூறும் புலவர் உலகில் நிலையான புகழைத் தருவது அறவழியில் ஆட்சிசெய்தலே என்று அறிவுறுத்துகிறார்.
முதலில் பாண்டியனின் முன்னோர்களின் சிறப்பை விதந்தோதுகிறார் புலவர். அடுத்து மன்னனின் பல்வித வெற்றிகளைப் பாராட்டி மகிழ்கிறார். பின்னர் பாண்டிய நாட்டின் பல்வகை வளங்களைச் சிறப்பித்துக் கூறுகிறார். மருதம், முல்லை குறிஞ்சி ஆகிய நிலங்களின் பல்வேறு இயல்புகளை எடுத்துக்கூறிய புலவர், அடுத்து பாலைநிலத்தின் இயல்பை எடுத்தோதுகிறார்.
6.17. கலித்த இயவர் இயம் தொட்டு அன்ன - மது 304
இருவெதிர்ப் பைந்தூறு கூர் எரி நைப்ப
நிழத்த யானை மேய்புலம் படர
கலித்த இயவர் இயம்தொட்டு அன்ன
கண்விடுபு உடையூஉ தட்டை கவினழிந்து - மது 302 - 305
பாண்டிநாட்டில் பாலைநிலங்களும் இருந்தன. பருவமழை பொய்த்தால் முல்லையும் குறிஞ்சியும் வறண்டநிலமாய் மாறிவிடும். அவற்றையே தமிழர் பாலை என்றனர்.
பெரிய மூங்கில்களில் பற்றிக்கொண்ட நெருப்பு, பசுமையான புதர்களை எரித்து அழித்துவிட்டதால், தளர்வடைந்த யானைகள் வேறு மேய்புலங்களை நாடிச் சென்றுவிட, பெருமகிழ்ச்சியில் உள்ள இசைஞர்கள் தம் இசைக்கருவிகளை முழக்கியது போல, மூங்கிலின் கணுக்கள் திறந்து உடைவதனால் மூங்கில் தட்டைகள் அழகு குன்றி என்பது இதன் பொருள்.
வளம் குன்றிய மலைகளில் முன்பு தழைத்து வளர்ந்திருந்த மூங்கில்கள் கோடைவெப்பத்தால் தீப்பிடித்து எரிகின்றன. அதனால் மூங்கிலின் கணுக்கள் ‘படார் படார்' என்று வெடிக்கின்றன. இப்போதைய உவமையில் சொல்வதானால் தீபாவளி வெடிச்சரம் போன்று வெடித்தன எனலாம். முரசு, முழவு, தாரை, தப்பட்டை போன்ற தோற்கருவிகளை மிகவேகமாகத் தட்டினால் வெடி போன்றே முழங்கமாட்டாவா? ஏதோ தட்டவேண்டும் என்பதற்காக அல்லாமல், உண்மையில் வெகுவாக மகிழ்ச்சிகொண்டு விரைவாக அவற்றை இயக்கினால் என்னவாறு ஒலிகேட்குமோ அப்படி வெடித்தன அந்த மூங்கில்கள் என்கிறார் புலவர். கலித்த இயவர் என்ற சொற்களைப் படிக்கும்போது, தலையை வெகுவாகச் சுழற்றிக்கொண்டு, தன் நீண்ட தலைமயிர் நான்கு பக்கங்களிலும் அலைபாய, ‘டமார் டமார்' என்று தன் மத்தளத்தின் இருபக்கங்களையும் மாறிமாறி அடிக்கும் மேளக்காரரை மனதில் எண்ணிக்கொண்டு படியுங்கள்.
6.18. வைகண்டு அன்ன புல்முளி அம்காட்டு - மது 307
6.19 காலுறு கடலின் ஒலிக்கும் சும்மை - மது 309
அருவி ஆன்ற அணி இல் மாமலை
வை கண்டு அன்ன புல்முளி அம் காட்டு
கமம் சூழ் கோடை விடரகம் முகந்து
காலுறு கடலின் ஒலிக்கும் சும்மை – மது 306 - 309
பாலை நிலத்தின் மற்றொரு காட்சி இது.
அருவிகள் அற்றுப்போன அழகற்ற பெரிய மலைகளில், வைக்கோலைப் பார்த்தது போன்று புற்களெல்லாம் உலர்ந்து கிடந்த அந்தக் காட்டில், நிறைவாகச் சுழற்றியடிக்கும் கோடைக்காற்றை முழைஞ்சுகள் முகந்துகொள்வதினால், காற்றால் அலைக்கழிக்கப்படும் கடலைப் போல ஒலிக்கும் ஆரவாரம் என்பது இதன் பொருள்.
வை என்பது வைக்கோல். காய்ந்த நெற்பயிர்தானே வைக்கோல். மழை இல்லாமல் காட்டில் உள்ள புல்லெல்லாம் காய்ந்து சருகாய்ப் போனது. அது வைக்கோலைப் பரப்பியதைப் போல் இருக்கிறது என்கிறார் புலவர். முளிதல் என்பது உலர்ந்துபோதல். ஏற்கனவே தட்டை கவினழிந்து என்று இதற்கு முந்தைய அடியில் கூறியுள்ளதால் அணி இல் மாமலை என்றும் புலவர் இங்கு கூறுகிறார். இங்கு வரும் அம் என்ற சொல்லை அசைச்சொல்லாகவே கொள்ளலாம்.
விடரகம் என்பது மலை முழைஞ்சு - சிறிய குகைகள் அல்லது குகைகளைப் போல் தரையில் அமைந்த குழிவான பிளவுகள். கமம் என்பது நிறைவு. அரைகுறையாக இல்லாமல் நிறைவாக இருப்பது. கோடை என்பது மேற்குக் காற்று. சூழ்கோடை என்பது சூறாவளி. சுழற்றியடிக்கும் ஒரு பெரும் சூறாவளி ஒரு பெரிய பள்ளத்தில் நுழைந்து மீண்டால் ‘ஊங்...ஙொய்...' என்ற ஒருவகையில் பயமுறுத்தும் ஓசை உண்டாகும். முக என்பது அள்ளு அல்லது மொள்ளு என்ற பொருள் தரும். ஓர் அகன்ற வாயுள்ள பாத்திரத்தில் நீரை அல்லது தானியங்களை மொண்டு அள்ளுவதை முகத்தல் என்கிறோம். இப்போது எல்லாமே நிறுத்தல் என்று ஆன பிறகு, முகத்தல் அளவை என்பதே ஏறக்குறைய இல்லாமல் போனது. காற்று முழைஞ்சின் வாயில் புகுந்து வெளிவருவதை, முழைஞ்சு காற்றை முகந்து அள்ளுவதாகக் காண்கிறார் புலவர்! கால் என்பது காற்று. சும்மை என்பது ஆரவார ஒலி.
6.20. அழும்பில் அன்ன நாடு இழந்தனரும் - மது 345
6.21. மழையாடு மலையின் நிவந்த மாடமொடு - மது 355
6.22. வையை அன்ன வழக்குடை வாயில் - மது 356
நிலனும் வளனும் கண்டு அமைகல்லா
விளங்குபெரும் திருவின் மான விறல்வேள்
அழும்பில் அன்ன நாடிழந் தனரும்,
------------- ------------- ------------ --------------
இன்னிசை முரசம் இடைப்புலத்து ஒழிய
பல்மாறு ஓட்டி பெயர் புறம்பெற்று
மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்
விண்உற ஓங்கிய பல்படைப் புரிசை
தொல்வலி நிலைஇய அணங்குஉடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழைஆடும் மலையின் நிவந்த மாடமொடு
வையை அன்ன வழக்குடை வாயில் - மது 343 - 356
முன்னர் பாண்டியனிடம் தோற்றுத் தம் அழகிய நாட்டை இழந்தவர்கள், மீண்டும் வலிமை பெற்றுத் தம் நாட்டை மீட்கப் பாண்டியன் மீது போர்தொடுத்து மதுரைக்கு வந்தனர். அப்படி வந்தவர்கள் தங்களின் முரசங்களை இடையிலேயே போட்டுவிட்டுத் திரும்பியோடுகின்ற அளவுக்குப் பாதுகாப்புடன் திகழ்கிறதாம் மதுரையின் அகழியும், கோட்டை மதிலும்.
நிலத்தையும் அதன் வளத்தையும் பார்த்துமுடிக்க முடியாத அளவுக்குச் சிறப்புற்று விளங்கும் பெரிய செல்வத்தையுடைய மான விறல்வேள் என்ற மன்னனின் அழும்பில் என்ற வளமிக்க நாட்டைப் போன்று மிக்க வளம் கொண்ட தம் நாட்டை இழந்தவர்களும் என்பது இதன் பொருள்.
அழும்பில் என்பது மானவிறல்வேள் என்ற குறுநிலமன்னனின் தலைநகரம். இன்றைய புதுக்கோட்டைப் பகுதி அது. அவனது நாட்டின் நிலத்தையும் அதன் வளத்தையும் கண்கொண்டு பார்த்து அமையாது என்று புலவர் கூறுகிறார்.
விண்ணுற ஓங்கிய’ என்றவுடன், அதிகமாகப் போனால் ஐம்பது அடி உயரமுள்ள ஒரு கோட்டை மதிலைப் போய் வானத்தைத் தொடுகின்ற மதில் என்று அன்றைய புலவர்கள் ‘அளந்துவிடுவதாக' எண்ணவேண்டாம். ஒருவேளை இடைக்கால, பிற்காலப் புலவர்கள் அப்படியான உயர்வுநவிற்சிகளைச் செய்திருக்கலாம். ஆனால் சங்கப் புலவர்கள் மிகப் பெரும்பாலும் உள்ளதை உள்ளபடியே தாம் கண்டவாறு பாடியிருக்கிறார்கள். இங்கிருக்கும் படங்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் வெள்ளையர்களால் வரையப்பட்ட ஓவியங்கள். படங்களில் காணப்படுவன இடிக்கப்படுவதற்கு முன்னர் இருந்த மதுரை நகர் நாயக்கர் காலத்துக் கோட்டைப் பகுதிகள். இப்போது கூறுங்கள் இவை விண்ணுற ஓங்கியிருக்கவில்லையா? மலையென நிவந்திருக்கவில்லையா? பாடல் வரிகளைப் படிக்கும்போது இந்தக் காட்சிகளைக் கண்முன் கொண்டுவந்து ஒப்பிட்டு மகிழுங்கள். மாறாக, வானத்தின் உயரம், மலையின் உயரம் ஆகியவற்றைக் கணக்கெடுத்து, அவற்றை மதிலின் உயரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து ஏளனம் செய்வது இலக்கிய இன்பம் தருவதாகாது. அதற்காக ஒவ்வொன்றையும் தேடிப்போய்ப் பார்த்துக்-கொண்டிருக்கமுடியாது. உங்கள் கற்பனைத் திறனைக் கொண்டு மனக்கண்ணால் பார்க்க முயலுங்கள். அதற்கு ஓரளவு உதவி செய்யும் நோக்கில்தான் விளக்கப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பாண்டிய மன்னனின் அரண்மனையைப் பற்றிக் கூற வந்த புலவர், விண் உற ஓங்கிய கோட்டை மதிலையும், வலிமையான நெடிய நிலையினையும், அதில் மாட்டப்பட்டுள்ள கரிய இரட்டைக் கதவுகளையும், மதில்களின் மேல் முகில் உலாவும் மலை போல் உயர்ந்து நிற்கும் மாடங்களையும் காட்டிவிட்டு, பின்னர், கோட்டைவாயிலைக் காட்டுகிறார். அந்த வாயிலினுள் மனிதர்களும், மனிதர்களைச் சார்ந்த வாகனங்களும், விலங்குகளும் எந்நேரமும் சென்றவண்ணம் இருப்பதைக் கண்ட புலவர், வையை ஆற்றில் இடையறவு இன்றி எல்லாக் காலங்களிலும் நீர் ஓடிக்கொண்டிருப்பதைப் போன்று அந்த வாயிலில் நடமாட்டம் இருந்துகொண்டே இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
“வையை என்னும் பொய்யாக் குலக்கொடி” என்று இளங்கோவடிகளும் குறிப்பிடுவதை நினைவிற் கொள்க.
இன்றைக்கு மதுரையில் ஓடும் வைகை ஆறு பெரும்பாலும் வறண்டே காணப்படுகிறது. இதற்குக் காரணம், மதுரைக்கு மேற்கே ஆண்டிபட்டி அருகில் ஓர் அணை கட்டப்பட்டுவிட்டதே ஆகும். மழை இல்லாத காலங்களில் ஓரளவுக்கேனும் கரையின் ஓரங்களில் சிலுசிலுத்து வரும் நீரும் அணையில் தேங்கிவிடுகிறது. வைகை ஆறு அணைக்குள் நுழையும் இடத்திற்கு அருகில் உள்ள குச்சனூர் பாலத்துக்கு அருகே நின்று பார்த்தால், ஆண்டின் பெரும்பாலான காலங்களில் நீர் வழங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம்.
6.23. யாறு கிடந்துஅன்ன அகல்நெடும் தெருவில் - மது 359
மதுரைநகரின் பேரழகை மறைத்துக்கொண்டிருக்கும் கோட்டை மதிலின் வாயிலில் நுழைந்ததுமே எதிரில் காணும் காட்சி பார்ப்போரைத் திகைக்கவைக்கிறது. அதுவரை சிற்றூர்களில் உள்ள சிறிய தெருக்களையே பார்த்துப் பழகியவர்கள், மதுரைநகரின் அகன்ற நெடிய தெருக்களைப் பார்த்ததுமே வாய்பிளந்து நிற்கிறார்கள்.
ஒருகாலத்தில் நம் நாட்டில் ஊர்ப்புறங்களில் ஒருவழிச் சாலைகளும் (single lane), நகர்ப்புறங்களில் இருவழிச்சாலைகளும்(double lane) மட்டுமே உண்டு. அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்குச் சென்றிருந்தேன். அங்கு, சற்றுத் தொலைவிலுள்ள ஓர் இடத்திற்குச் செல்வதற்காக, ஊரிலிருந்து வெளியேறி, சற்று மேல் நோக்கிச் செல்லும் ஒரு நுழைவுச் சாலை வழியே சென்று, உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த அமெரிக்க நெடுஞ்சாலைக்குள் (freeway) எங்கள் கார் நுழைந்தவுடன் அப்படியே பிரமிப்பில் அமிழ்ந்துபோனேன். ஒவ்வொரு பக்கமும் எட்டு வாகனங்கள் செல்லத்தக்க எட்டுத் தடங்களைக் கொண்ட பதினாறு வழிச்சாலையை முதன்முதலில் பார்த்த அந்த அனுபவம், மதுரைக்குள் முதன்முதலில் நுழைந்த அன்றைய கிராமத்தார்க்கு ஏற்பட்டிருக்கவேண்டும். இத்தகைய அனுபவத்துடன் இந்த அடியைப் படிக்கும்போதுதான் மாங்குடி மருதனார் எவ்வாறு அந்தத் திகைப்பையும், வியப்பையும் இந்தச் சொற்களுக்குள் புதைத்துவைத்திருக்கிறார் என்பது புரியும்.
‘ஓர் ஆறு கிடந்தது போல் அகன்று நீண்டு கிடக்கும் தெரு' என்ற அடியைப் படிக்கும்போது, அந்தக் காட்சியை மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்தி, தம் சொந்த அனுபவத்துடன் ஒப்பிட்டுப் படிக்கும்போதுதான் இந்த உவமையின் உயர்வும், அதில் உள்ள ஒவ்வொரு சொல்லின் ஆழமும் நன்கு புரியும்.
இதே மதுரையைப் பற்றிச் சொல்ல வந்த நக்கீரரும் நெடுநல்வாடையில் ‘ஆறு கிடந்தன்ன அகல்நெடும் தெருவில் -நெடு 30' என்று இதே உவமையைக் கையாண்டிருப்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
6.24 மாகால் எடுத்த முந்நீர் போல - மது 361
மாகால் எடுத்த முந்நீர் போல
முழங்குஇசை நன்பணை அறைவனர் நுவல - மது 361,362
மதுரை நகர்த் தெருக்களில் பறையறைவோர் அறிவிப்புகளைத் தெரிவிப்பதைப் பற்றிப் புலவர் இங்கே கூறுகிறார்.
பெருங்காற்று எடுத்த கடல் போல, முழங்கும் ஓசை கொண்ட நல்ல முரசங்களை அறைவோர் அறிவிக்க என்பது இதன் பொருள்.
கால் என்பது காற்று. சித்திரை, வைகாசி மாதங்களில் வெயிலின் புழுக்கத்தால் தவித்த மக்கள், தென்மேற்குப் பருவக்காற்று வீச ஆரம்பித்தவுடன், ‘மே காத்து எடுத்திருச்சு, இனி வேனல் தணியும்' என்பார்கள். இங்கு எடு என்பதற்கு கிளம்பு, கிளப்பு என்பது பொருளாகும். குதிரைகள் வேகமாகச் செல்லும்போது கிளப்பிவிடும் புழுதியை, மா எடுத்த மலி குரூஉ துகள் - மது 49 என்று புலவர் கூறுகிறார். கடும் காற்று எடுப்ப கல் பொருது உரைஇ - மது 378 என வரும் அடியும் இதனை உறுதிப்படுத்தும். அமைதியாக இருக்கும் கடலில் காற்று கிளம்புகிறது. அலைகளைக் கிளப்புகிறது. அதனால் பேரிரைச்சல் உருவாகிறது. இதனையே புலவர் மாகால் எடுத்த முந்நீர் போல என்கிறார்.
பணை என்பது இங்கு பறை அல்லது முரசம் என்ற பொருள் தரும். இந்தப் பறையைக் கொட்டி, ஒலி எழுப்பி, மக்கள் கவனத்தை ஈர்த்து, செய்திகளை அறிவிப்பார்கள். இன்னும் கிராமங்களில் இப்பழக்கம் உண்டு. பொதுவாக இதைத் தமுக்கு அல்லது தண்டோரா என்பர். இறப்பு, தண்டனை ஆகிய நல்லன அல்லாத செய்திகளையும் இவ்வாறு பறையறைவர். அவ்வாறில்லாது திருவிழா தொடக்கம் போன்ற நல்ல செய்திகள் கூறப்படுதலால், நன்பணை என்கிறார் புலவர். நுவல் என்பது அறிவி, சொல் என்ற பொருள் தரும்.
...
அன்புடையீர்,
மதுரைக்காஞ்சி – உவமைக் காட்சிகள்
25 முதல் 37 வரை
மதுரைக்காஞ்சியில் உள்ள 96 உவமைகளையும் பாடலின் தொடக்கத்திலிருந்து வரிசையாகத் தொகுத்துக் கூறும் கட்டுரைகளில் இது நான்காவது ஆகும்.
மதுரைக்காஞ்சியைப் பாடிய புலவர் மாங்குடி மருதனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சிறப்பைக் கூறி அவனை வாழ்த்துகிறார். அவனுடைய வெற்றிகளை எல்லாம் புகழ்ந்து கூறும் புலவர் உலகில் நிலையான புகழைத் தருவது அறவழியில் ஆட்சிசெய்தலே என்று அறிவுறுத்துகிறார்.
முதலில் பாண்டியனின் முன்னோர்களின் சிறப்பை விதந்தோதுகிறார் புலவர். அடுத்து மன்னனின் பல்வித வெற்றிகளைப் பாராட்டி மகிழ்கிறார். பின்னர் பாண்டிய நாட்டின் பல்வகை வளங்களைச் சிறப்பித்துக் கூறுகிறார். அடுத்து மதுரைமாநகருள் நம்மை அழைத்துச் செல்லும் புலவர், நகரின் பல்வேறு பகுதிகளை உவமை நயத்துடன் விவரித்துக்கூறுகிறார்.
6.25. கயம்குடைந்து அன்ன இயம்தொட்டு இமிழ்இசை - மது 363
கயம்குடைந்து அன்ன இயம்தொட்டு இமிழ்இசை
மகிழ்ந்தோர் ஆடும் கலிகொள் சும்மை - மது 363, 364
மதுரைமாநகரின் தெருக்களில் எழும் பல்வேறு ஒலிகளைப் பற்றிக் கூறவந்த புலவர், இசைக்கருவிகளின் இசைக்கேற்ப சுற்றிநின்று ஆடும் கூட்டத்தோரின் ஆரவார ஒலியைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்.
குளத்தைக் கையால் குடைந்தது போன்று இசைக்கருவிகளை இயக்குவதால் ஏற்படும் இமிழ்கின்ற இசைக்கு ஏற்ப, மகிழ்ந்தோர் ஆடும் செருக்கினைக் கொண்ட ஆரவாரம் என்பது இதன் பொருள்.
தொடுதல் என்பது குடைதல், ஊடுறுவிச்செல்லுதல் என்ற பொருள் தரும். குளத்துநீரை ஒருவர் ஏன் குடையவேண்டும்? நீரில் குளிக்கும் ஒருவர், ‘திடும்' என கரணம்போட்டு நீருக்குள் மூழ்கி விளையாடுவார்.
புனல் ஆடு மகளிர் கதுமெனக் குடைய – பொரு. 241
என்று பொருநராற்றுப்படையில் காண்கிறோம். எனவே குடைதல் என்பதற்கு நீரில் பாய்ந்து மூழ்குதல் (dive) என்ற பொருள் கொள்ளலாம். மேலும்,
குயில் குடைந்து உதிர்த்த – சிறு. 4
என்று சிறுபாணாற்றுப்படையிலும் காண்கிறோம். எனவே குடைதல் என்பதற்குத் தோண்டுதல், கிண்டுதல், துருவுதல் என்ற பொருளும் உண்டு.
அருவி நுகரும் வான் அரமகளிர்
வருவிசை தவிறாது வாங்குபு குடைதொறும்,
தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை – மலை. 294 - 296
என மலைபடுகடாத்திலும் இதே பொருளில் வரக் காண்கிறோம். ஊருணி போன்ற குளங்களில் உள்ள நீரைக் குடிப்பதற்கு மொண்டு செல்வர். நீரின் மேற்பரப்பில் இலேசான தூசுப்படலமோ, பாசிப்படலமோ படர்ந்திருக்கலாம். அதனை விலக்குவதற்கு கையினாலோ, நீர் முகக்கும் பாத்திரத்தின் அடிப்பகுதியினாலோ முன்னும் பின்னும் அசைத்து அப் படலத்தை விலக்குவார்கள். அவ்வாறு முன்னும் பின்னும் அசைப்பது போல் இசைக்கருவிகள் இயக்கப்படுகின்றன என்று புலவர் குறிப்பிடுகிறார்.
இயம் என்பது பொதுவாக ஏதேனும் ஓர் இசைக்கருவியைக் குறிக்கும். ஆனால் இங்கு புலவர் குறிப்பிடும் இயம் என்பது உறுமிமேளம் என்ற இசைக்கருவியே என்பது அவர் குறிப்பிடும் உவமையால் தெளிவாகிறது.
மத்தளம் போன்று இரண்டு முகப்புகள் கொண்டதே உறுமிமேளம். இதன் ஒரு முகப்பை வளைவான ஒரு குச்சியால் மேலும் கீழும் உரசியவாறு இழுப்பார்கள். அப்போது அது ‘ம்ம் ... ம்ம்' என்று உறுமுவது போல் ஒலிக்கும். எனவேதான் இதை உறுமிமேளம் அல்லது உறுமிக்கொட்டு என்கிறார்கள். பொதுவாக திருவிழாக் காலங்களிலோ, வேறு சிறப்பு நிகழ்ச்சிகளின்போதோ இவ்வகைக் கருவிகள் கூட்டாக வாசிக்கப்படும். அப்போது அதைச் சுற்றிக் கூடியிருப்போர் மகிழ்ச்சியுடன் ஆடிக்கொண்டிருப்பர். இந்த உறுமும் ஒலியே இமிழ் இசை எனப்படுகிறது.
இமிழ் இசை அருவியொடு இன்னியம் கறங்க - திரு 240
பாடு இமிழ் பனிக் கடல் பருகி - முல் 4
முழவு இமிழும் அகல் ஆங்கண் - மது 327
இமிழ் முரசு இரங்க ஏறு மாறு சிலைப்ப - மது 672
விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து - மலை 2
என வரும் பிற இடங்களிலும் இமிழ் இசை என்பது அடிக்குரலில் உறுமுவது போன்ற ஒலியே என உணரலாம்.
6.26. ஓவு கண்டு அன்ன இரு பெரு நியமத்து - மது 365
நியமம் என்பது கடைத்தெரு. இப்பொழுது நகரத்தின் சில பகுதிகளில் இருக்கும் நீண்ட சாலைகளின் இருபக்கங்களிலும் வரிசையாகக் கடைபரப்பி இருப்பதைப் போல அன்றைக்கு மதுரையின் நுழைவாசலை ஒட்டியுள்ள ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவின் இரண்டு பக்கங்களிலும் வரிசையாகக் கடைகள் இருந்தன. இந்த இருபக்கக் கடைவீதிகளையும்தான் புலவர் இரு பெரு நியமம் என்கிறார்.
பொதுவாக ஓவியம் வரைபவர்கள் கண்ணிற்கினிய இயற்கைக் காட்சிகளை வரைவார்கள். சிறப்பாக அமைந்த ஓவியங்களை அச்சசலான அல்லது தத்ரூபமான ஓவியம் என்பர். அப்படிப்பட்ட ஓவியங்களைப் பார்க்க நேரும்போது, ‘அப்படியே நேரில் பார்ப்பது போல் இல்லையா?' என்று கூறுவோம். ஆனால் இங்கே மதுரைநகரின் கடைவீதிகள் ஓவியம் போல் இருந்தன என்று புலவர் கூறுகிறார். இதற்கு இரண்டுவிதமான விளக்கங்கள் கூறலாம். ஓவியர்கள் தம் ஓவியங்கள் சிறப்புற அமையவேண்டும் என்ற காரணத்தால் எதனையும் சிறப்புற வரைவார்கள். வரையப்படும் பொருள்கள் முழுமை பெற்றதாகவும், மிக்க அழகுடனும் இருக்கிறாற்போல் வரையப்பெறும். மதுரைநகரின் கடைவீதிகள் அவ்வாறு ஓவியங்களில் காணப்படுவதுபோல் மிகவும் தூய்மையுடனும், ஒழுங்குடனும், நேர்த்தியாகவும் இருந்தன என்ற பொருளில் புலவர் கூறுவதாகக் கொள்ளலாம்.
அடுத்து, புலவரின் கூற்றை, மதுரையில் முதன்முதலில் நுழையும் ஒரு புதியவரின் பார்வையில் பார்க்கவேண்டும் என்று ஆறு கிடந்தன்ன அகல்நெடும் தெரு என்ற அடியில் வரும் உவமத்தின் விளக்கத்தின்போது கண்டோம். இந்த அடியின் பொருளைக் காணும்போதும் அதே கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும். வந்த புதியவர் வெளியூரைச் சேர்ந்த ஒரு செல்வர். அவர் வீட்டில் அழகான ஓவியங்கள் வைத்திருப்பார். அந்த ஓவியங்களில் ஒன்று மதுரைக் கடைவீதியை வரைந்த படம் ஆகும். இப்போது மதுரைக்குள் நுழைந்த அவர், தான் நேரில் காணும் காட்சி தன் வீட்டிலுள்ள ஓவியத்தைப் போன்றே இருப்பதாக எண்ணி வியப்புறுவதாகவும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.
மேலே காணும் படங்களுள் முதலாவது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரங்களில் ஒன்றின் ஓவியம். நீண்ட நாள்களுக்கு முன் வரையப்பட்டது. அடுத்த படம் அதே கோபுரத்தை அண்மையில் எடுத்த புகைப்படம். இப்போது சொல்லுங்கள் - தான் சிறுவனாக இருந்தபோது தன் தகப்பனார் வாங்கி மாட்டிய இந்த ஓவியத்தை மட்டுமே பார்த்துப் பழகிய உங்கள் தாத்தா, இந்தப் புகைப்படத்தைப் பார்த்த பின்னர், ‘அட, நம்ம படத்தைப் போலவேதான் உண்மையில் கோபுரமும் இருக்கிறது' என்று வியந்து சொல்லமாட்டாரா?
6.27. நீர்ஒலித்து அன்ன நிலவுவேல் தானையொடு - மது 369
நீர்ஒலித்து அன்ன நிலவுவேல் தானையொடு
புலவுப்படக் கொன்று மிடை தோல் ஓட்டி
புகழ்செய்து எடுத்த விறல்சால் நன்கொடி - மது 369 - 371
மதுரை நகரின் நுழைவாயிலில் ஏற்றப்பட்டிருக்கும் பலவகையான கொடிகளைச் சொல்லிக்கொண்டுவரும் புலவர், அவற்றுடன் மன்னனின் வேற்படை பெற்ற வெற்றியினிமித்தம் ஏற்றப்பட்ட கொடியைப் பற்றிக் கூறுகிறார். அந்த வேற்படை போரிடும்போது ஏற்படுத்தும் ஆரவாரத்துக்கான உவமை இது.
பாண்டிய மன்னனின் வேற்படை நின்று போரிடும்; ஆரவாரித்துப் போரிடும் - கடல் போல, என்று கூறும் முகத்தான் புலவர் இவ் உவமையைக் கையாள்கிறார்.
எதிராளி எப்படிப்பட்ட வல்லமை பெற்றவனாயிருந்தாலும், ஊக்கத்துடன் எதிர்த்து நின்று போரிடும் வேற்படையையே நிலவு வேல் தானை என்கிறார் புலவர். போரில் ஏற்படக்கூடிய ஊறுகளுக்கு அஞ்சி ஓடாமல், நிலைத்து நின்று போரிடும் வேற்படை என்பது இதற்குப் பொருள்.
பகைவர் கூட்டத்துக்குள் வேலோடு ஊடுருவிச் சென்று, அவரைக் குத்தி மாய்ப்பதுதான் வேற்படையின் வேலை. அவ்வாறு செல்லும்போது அவர்கள் உரக்க ஒலிஎழுப்பிய வண்ணம் செயல்புரிவர். அந்த ஆரவாரம் கடலின் ஆரவார ஒலி போல் இருப்பதாகப் புலவர் கூறுகிறார். இங்கு நீர் என்பது ஆகுபெயராகக் கடலைக் குறிக்கும்.
6.28. நெடும்சுழிப் பட்ட நாவாய் போல - மது 379
வீங்குபிணி நோன்கயிறு அரீஇ இதைபுடையூக்
கூம்புமுதல் முருங்க எற்றிக் காய்ந்துஉடன்
கடும்காற்று எடுப்பக் கல்பொருது உரைஇ
நெடும்சுழிப் பட்ட நாவாய் போல
இருதலைப் பணிலம் ஆர்ப்பச் சினம்சிறந்து
கோலோர்க் கொன்று மேலோர் வீசி
மென்பிணி வன்தொடர் பேணாது காழ்சாய்த்துக்
கந்துநீத்து உழிதரும் கடாஅ யானையும் - மது 376-383
பாண்டிய மன்னனின் நால்வகைப் படைகளும் மதுரை நகரின் தெருக்களில் காவல்புரிந்துவரும் செய்தியைப் புலவர் தெரிவிக்கிறார். அப் படைகளில், யானைப் படையில் உள்ள யானைகளின் திறத்தைப் புலவர் இங்கே வருணிக்கிறார்.
இறுக்கமாகக் கட்டிய வலிய கயிறு அறுந்துபோகக் கப்பலின் பாயைப் புடைத்தெடுத்து, பாய்கட்டிய மரத்தை அடியோடு முறித்துத் தூக்கி எறிந்து, அழிவினை ஏற்படுத்தி, கடும் காற்று தூக்கி அடிப்பதினாலே, நங்கூரக்கல்லை அலைக்கழித்து ஆட்டும், பெரிய நீர்ச்சுழியில் அகப்பட்ட நாவாய் போன்று, இரண்டு முகச் சங்கு ஒலிக்க, சினம் அதிகமாகி, கோல் உள்ளவர்களைக் கொன்று, மேல் உள்ளவர்களைக் கீழே தள்ளி, மென்மையான பிணிப்பு உள்ள வலிய சங்கிலியைப் பொருட்படுத்தாமல், தறியைப் பிடுங்கி எறிந்து, கம்பத்தை விட்டு அகன்று அலைந்துதிரியும் மதம் பிடித்த யானையும் என்பது இதன் பொருள்.
இரண்டு குறும்படங்களை இங்கு ஓட்டிக்காட்டுகிறார் புலவர். முதல் படத்தில் நடுக்கடலில் ஒரு கப்பல் வந்துகொண்டிருக்கிறது. அது ஒரு பாய்மரக்கப்பல். உயர்ந்த கூம்பு மரத்தில் இழுத்துக்கட்டிய பாய்கள் புடைத்துக்கொள்ளும்படி காற்று வீசுவதால் அழகிய தேவதை போல் அசைந்து அசைந்து வந்துகொண்டிருக்கிறது. திடீரென்று ஒரு கடுமையான காற்று வீசத் தொடங்குகிறது. அது வேகம் எடுத்துப் பாய்களை இழுத்துக் கட்டிய கயிறுகளை அறுத்து எறிகிறது. அதனால், கீழே சரிந்த பாய்களைக் கீழும் மேலும் புடைத்து எடுக்கிறது. இந்தப் புடைத்தலைப் பொறுக்காத நடுக்கம்பம் ‘சட சட'வென்று அடியோடு முறிந்து விழுகிறது. காலினால் ஓங்கி ஓர் உதை விட்டதைப் போல் காற்று ஒரே எத்தாக அதை எத்தித்தள்ளுகிறது. இப்போது காற்றின் சினம் அதிகரிக்கிறது. கப்பல் மாலுமிகள் கப்பல் அதிகமாக ஆடாமல் இருக்க, நங்கூரம் பாய்ச்சுகிறார்கள். கப்பலின் ஆட்டத்தில், நங்கூரம் ஊசல் ஆடுவது போல் ஆடுகிறது. இந் நிலையில் கடலில் நீர்ச்சுழல் உண்டாகிறது. இந்தச் சுழலில் சிக்கிக்கொண்ட நாவாய் சுழன்று சுழன்று தவிக்கிறது.
இனி அடுத்த காட்சி. கட்டப்பட்ட யானை ஒன்று நின்றுகொண்டிருக்கிறது. அதன் காலில் இரும்புச் சங்கிலி தளர்வாகக் கட்டப்பட்டுள்ளது. அந்தச் சங்கிலி ஒரு தறியில் பிணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் யானையின் கழுத்தில் கயிறிட்டு அதை ஒரு கம்பத்தில் கட்டியிருக்கிறார்கள். அது ஒரு கோயில் யானையாக இருக்கலாம். கோயிலில் வழிபாட்டுக்காக இருதலைச் சங்குகள் முழங்கப்படுகின்றன. இதனால் வெறித்த யானை மதம்பிடித்த நிலையை அடைகிறது. யானையை அடக்கும் குத்துக்கோலை வைத்திருப்பவர்கள் அருகில் வந்து யானையை அடக்க முயல்கிறார்கள். அவர்களைக் காலால் மிதித்துக் கொல்கிறது யானை. யானைப் பாகர்கள் யானையின் மொழியில் பேசி அதனை அடக்க முயல்கிறார்கள். துதிக்கையால் அவர்களைத் தூக்கிச் சுழற்றியடிக்கிறது யானை. காலைப் பிணித்திருக்கும் சங்கிலியை ஓங்கி இழுக்கிறது யானை. சங்கிலி தறியோடு கழன்றுவருகிறது. கழுத்தை ஆட்டிய வேகத்தில் கம்பத்துக் கயிறும் அறுபட யானை கட்டுக்கடங்காமல் இப்போது சுற்றிச்சுற்றிப் பார்த்த வண்ணம் அலைந்து திரிகிறது.
இந்த இரண்டு சூழ்நிலைகளின் பயங்கரத்தன்மைகளுக்கும் ஒப்புமை காட்டுகிறார் புலவர். நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல - கந்து நீத்து உழிதரும் கடாஅ யானை என்கிறார். கந்து என்பது கம்பம் அல்லது தூண். உழிதல் என்பது அலைந்து திரிதல். கடாம் என்பது மதம். கட்டுக்கடங்காமல் அலைந்து அழிவை ஏற்படுத்தும் யானையைக் கட்டுக்கடங்காமல் சுழன்று அழிவை எதிர்நோக்கும் நாவாயின் நிலையுடன் ஒப்பிடுகிறார் புலவர்.
கட்டுக்கடங்காமல் திரியும் யானையை அடக்க நான்கு புறமும் ஆட்கள் சூழ்ந்துகொண்டிருப்பார்கள். எனவே, யாரும் தன்னை நெருங்காவண்ணம் யானை நாலாபுறமும் சுழன்று சுழன்று நெருங்குவோரை விரட்டுகிறது. யானை இவ்வாறு சுழல்வது, நீர்ச்சுழலில் அகப்பட்ட நாவாயின் சுழற்சி போல் இருப்பதாகப் புலவர் கூறுகிறார். காற்றின் வேகத்தால் பாய்மரங்களின் கட்டுகள் ஒவ்வொன்றாக அவிழ்ந்து தெறிப்பது போல், மதத்தின் கடுமையால் யானையின் கட்டுகள் அவிழ்ந்து தெறிப்பதுவும் கூறாமல் கூறிய உவமை. புயலின் வேகத்தால் ஆடும் கப்பலை அதன் மாலுமிகள் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி எடுக்காமலா இருந்திருப்பார்கள்? சொல்லப்படாத இந்த முயற்சிகளை எடுத்தவர்கள் கோலோர் போலவும், மேலோர் போலவும் கொல்லப்பட்டும் வீசி எறியப்பட்டும் இருந்திருப்பர் என்பது நாமாக உணர்ந்துகொள்ளும் உண்மை. இப்படிப்பட்ட யானைகளைக் கொண்ட யானைப்படை போரில் எவ்வளவு ஆக்ரோஷமாகப் போரிடும் என்பதுவும் இங்கு சொல்லப்படாத கூற்று.
கூம்பு முதல் முருங்க எற்றி என்பதில் கூம்பு என்பது கப்பலின் நடுவில் உயர்ந்து நிற்கும் மரம். முதல் என்பது அடிப்பகுதி. மரம் அடியோடு பெயர்ந்தது என்கிறோமே அது போல, பாய்மரம் அடியோடு முறிந்து சாய்ந்தது எனலாம். முருங்குதல் என்பது முறிதல். மரம் முறிந்து சாய, காற்று அதை ஒரே எத்தாக எத்தித் தூக்கி எறிந்தது என்கிறார் புலவர். எத்தி என்பதுதான் இங்கு எற்று எனப்படுகிறது. எற்று என்பதற்கும் உதை என்பதற்கும் வேறுபாடு உண்டு. முழங்காலை முன்புறமாக வளைத்துத் தூக்கி, பலமாகக் காலை இறக்குவதே உதைத்தல். காலை மடக்காமல், பின்புறமாகப் பக்கவாட்டில் நீட்டி, பலமாகக் காலை முன் நோக்கிச் செலுத்துவதே எத்துதல். கால்பந்து விளையாட்டின் போது பந்தைக் காலால் வேகமாகச் செலுத்துவதே எத்துதல். அதைப்போல, கீழே முறிந்து விழுந்த மரத்தைக் காற்று வேகமாகத் தள்ளியதை எற்றி என்ற அழகிய பொருத்தமான சொல்லால் குறிக்கிறார் புலவர். மனிதர்கள் செய்யும் செயலைக் காற்றுக்கு ஏற்றிக் கூறியிருக்கும் நயமும் உன்னிப்பாய்க் கவனித்தற்கு உரியது.
6.29. செம்கால் அன்னத்துச் சேவல் அன்ன - மது 386
அங்கண் மால்விசும்பு புதைய வளிபோழ்ந்து
ஒண்கதிர் ஞாயிறு ஊறுஅளவாத் திரிதரும்
செங்கால் அன்னத்துச் சேவல் அன்ன
குரூஉ மயிர்ப்புரவி உராலின் பரிநிமிர்ந்து
காலெனக் கடுக்கும் கவின்பெறு தேரும் - மது 384 - 388
பாண்டிய மன்னனின் தேர்ப்படை விரைந்து செயலாற்றுவதை ஓர் அழகிய உவமையுடன் ஓர் அருமையான சொல்லோவியமாய்ச் சொற்களால் வரைந்து காட்டுகிறார் புலவர்.
அழகுமிக்க பெரிய வானமே மறையும்படியாக, காற்றைப் பிளந்துகொண்டு, மின்னுகின்ற கதிர்களையுடைய மாலைக் கதிரவனைச் சென்று சேருமோ என்று எண்ணத்தக்க அளவில் பறந்துசெல்லும் சிவந்த கால்களையுடைய அன்னத்தின் சேவலைப் போன்று, வெண்ணிற மயிரினையுடைய குதிரைகள் ஓடுதலால் வேகம் மிக்கு, காற்றைப் போல் விரைந்து ஓடும் அழகுமிக்க தேரும் என்பது இதன் பொருள்.
அன்னம் என்பது இந்தியநாட்டுப் பறவை அல்ல. எனினும் அது சங்க இலக்கியங்களிலும், பிற புராணக்கதைகளிலும் இடம்பெற்றுள்ளது. எனவே, பிற நாடுகளிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டவையாகவோ, புலம்பெயர்ந்து வந்தவையாகவோ இருக்க வேண்டும். அன்னம் பொதுவாக குளிர்மிக்க இடங்களில் வசிக்கும். பனிக்காலத்தில் அவ்விடங்கள் வசிப்பதற்கு இயலாத இடங்களாய்ப் போய்விடுமாதலால், அவை மிதவெப்பம் உள்ள மற்ற நாடுகளுக்கு இடம்பெயரும். அப்போது அவை கூட்டம் கூட்டமாகப் பறந்து வந்து தகுந்த இடங்களைத் தேடிப்பிடித்து வாழும். அந்த இடங்களில் வெப்பம் மிகுந்த வேனில்காலம் தொடங்கும் நேரத்தில், மீண்டும் அவை தங்கள் சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பிச்செல்லும். அவ்வாறு புலம்பெயரும் ஒரு காட்சியைத்தான் புலவர் இங்கு குறிப்பிடுகிறார்.
வானத்தையே மறைக்கும் அளவுக்கு அவை கூட்டம் கூட்டமாக எழுந்து, ஒரு மங்கிய மாலைப்பொழுதில் தங்கள் பயணத்தைத் தொடங்குகின்றன. அன்னங்கள் பறக்கும்போது, தங்கள் நீண்ட கழுத்தை முன்பக்கம் நீட்டி, காலை மடக்கிப் பின்பக்கம் நீட்டி, இறக்கைகளை விரித்து, ஏவிவிட்ட அம்புபோல் செல்வதையே, அவை காற்றைக் கிழித்துக்கொண்டு செல்வதாகப் புலவர் குறிப்பிடுகிறார். போழ் என்பதற்குப் பிள என்று பொருள்.
செக்கர் வானத்தில் தீப்பிழம்பாய் மின்னும் செங்கதிரோனின் ஒளிரும் வட்டத்திற்குள் அவை பறக்கும் காட்சி, அந்த அன்னங்கள் சிவப்புச் சூரியனைச் சேர்ந்தடையச் செல்கின்றனவோ என்று தோன்றுவதாகப் புலவர் குறிப்பிடுவது ஓர் இனிய கற்பனையாகும்.
இந்த அன்னங்கள் செங்கால் அன்னங்கள் என்று புலவர் குறிப்பிடுகிறார். பொதுவாக அன்னங்களின் கால்கள் கறுப்பாகவே இருக்கும். ஆனால், தென்அமெரிக்காவில் வாழும் சிலவகை அன்னங்களின் கால்கள் சிவப்பாக இருக்கும் என்று விலங்கியலார்கள் குறிப்பிடுகின்றனர். (The legs of swans are normally a dark blackish grey colour, except for the two South American species, which have pink legs)
பொதுவாக, தென்அமெரிக்க அன்னங்கள் புலம்பெயரும் பருவத்தில் வடஅமெரிக்காவுக்குத்தான் செல்லும் என்று இக்காலப் பறவை ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். எனினும் பண்டைக் காலத்தில் இப் பறவைகளின் புலம்பெயர்பு முறை வேறுவிதமாக இருந்திருக்கலாம். இவ்வாறு புலம்பெயர்ந்து அவை பறந்து செல்லும்போது அவை கூட்டம் கூட்டமாகச் செல்லும் என்று கண்டோம். அக் கூட்டத்திற்குத் தலைவனாய் இருப்பது ஓர் ஆண் அன்னமே என்றும் இவ் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். (An adult male swan is a cob, from Middle English cobbe (leader of a group; an adult female is a pen)
இந்தச் செங்கால் அன்னங்கள் காற்றைப் பிளந்துகொண்டு வானத்தில் பறந்துசெல்வதைப் போல, பாண்டிய மன்னனின் தேர்ப்படையின் குதிரைகள், தாங்கள் பூட்டப்பட்ட கவின்பெறு தேர் கால் எனக் கடுக்கும் விரைவுடன் செல்லுகிறாற்போல் இழுத்துக்கொண்டு ஓடுகின்றன என்கிறார் புலவர். வெண்ணிறக் குதிரைகள் விரைந்து ஓடுவது அவை விண்ணிற் பறப்பதுபோல் இருக்கிறது என்பதற்காக, குதிரைகளைப் பறக்கும் அன்னங்களுக்கு உவமிக்கிறார். இன்றைக்கும் சாலைகளில் மிக வேகமாகச் செல்லும் வாகனங்களைக் காண நேர்கையில், “பார், என்ன வேகமாப் பறந்துகிட்டு போறான்” என்கிறோம் அல்லவா!
இந்த அடிகளில் வளி, கால் என்ற இரு சொற்களும் காற்று என்ற பொருளையே தருவன. எல்லா உரைகளிலும் அவ்வாறே காணப்படுகிறது. இருப்பினும் அவற்றிற்கிடையே சிறிதளவேனும் வேறுபாடு இருக்காதா? இருந்தால் அது என்ன? சிந்தியுங்கள். ஆங்கிலத்தில்கூட air, wind என்ற இரண்டு சொற்களுக்குமே காற்று என்ற பொருளையே கொள்கிறோம். இந்தக் கூற்றுகளைக் கவனியுங்கள்:-
கதவைத் திறந்துவிடு; கொஞ்சம் காற்று உள்ளே வரட்டும் - Open the door; let some air come in.
கதவை மூடு; காற்று பலமாய் அடிக்கிறது - Close the door; the wind is strong.
இப்போது தெரிந்திருக்கும் - வளி, கால் இவற்றின் வேறுபாடு! விசும்பு புதைய வளி போழ்ந்து என்பதால், வளி என்பது உயர்நிலைக் காற்று அல்லது மேல்காற்று எனலாம். காலெனக் கடுக்கும் தேர் என்பதால் கால் என்பது தரைநிலைக் காற்று எனலாம்.
6.30. வேழத்து அன்ன வெருவரு செலவின் - மது 392
வேழத்து அன்ன வெருவரு செலவின்
கள் ஆர் களமர் இருஞ்செரு மயக்கமும் - மது 392,393
மதுரை நகர்த் தெருக்களைக் காக்கும் காலாட்படையினரைப் பற்றிய ஓர் உவமம் இது.
யானையைப் போன்று பார்ப்போருக்கு அச்சம் வரத்தக்க நடையினை-யுடைய கள்ளை மிகுதியாக உண்ட மறவர் தம்முள் சண்டையிட்டுக்கொள்ளும் மயங்கிய நிலையும் என்பது இதன் பொருள்.
மதுரைநகரின் பல்வேறு காட்சிகளுள் இதுவும் ஒன்று. ஒரு யானை நடந்துவரும்போது ஓரளவு அருகிலிருந்து பாருங்கள். உங்களையும் அறியாமல் உங்கள் நெஞ்சுக்குள் ஒரு நடுக்கமோ அச்சமோ தோன்றும். அதன் தோற்றம் அப்படி.
அதிகமாகக் கள்ளைக் குடித்துவிட்டு, அந்தக் கிறக்கத்தில் சிவந்த கண்களுடன், நெஞ்சு நிமிர்த்தி வரும் ஒரு கரிய, நெடிய உருவத்தை மனதில் கற்பனை செய்துகொள்ளுங்கள். அவர்கள் எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டும் ‘திடும், திடும்' என நம்மை அதிரவைக்கும். அச்சம் தரும் அந்த நடையை யானையின் நடைக்கு ஒப்பிடுகிறார் புலவர் - காரணம் இரண்டுமே வெருவரு நடை! (வெரு - அச்சம்)
6.31. பூந்தலை முழவின் நோன்தலை கடுப்ப - மது 396
தீம்புழல் வல்சிக் கழல்கால் மழவர்
பூந்தலை முழவின் நோன்தலை கடுப்பப்
பிடகைப் பெய்த கமழ்நறும் பூவினர் - மது 395-397
மதுரை நகரின் தெருக்களில் பூ விற்றுத்திரியும் மகளிரின் பூத்தட்டைப் பற்றிய ஓர் அழகிய உவமை இது.
இனிய குழல்போன்ற தின்பண்டங்களை உணவாகக்கொண்ட கழலணிந்த காலினையுடைய மழவரின் பூவைத் தலையில் கொண்ட முழவின் வலிய கண்ணைப் போன்ற கூடைகளில் இட்டுவைத்த கமழ்கின்ற நறிய பூவினையுடையவர் என்பது இதன் பொருள்.
மழவர் என்பார் வீரர். அவர்கள் காலில் கழல் அணிந்திருப்பர். தீம்புழல் எனப்படும் தின்பண்டத்தை விரும்பி உண்பர். புழல் என்பது உள்துளை. இனிக்கின்ற உள்துளை உள்ளது தீம்புழல் - இன்றைய ஜிலேபியைப் போல! ஜிலேபிக்குக்கூட ஓர் அழகு தமிழ்ச் சொல்லாகத் தீம்புழல் எனப் பெயர் சூட்டலாம். இவர்கள் கையில் வைத்திருக்கும் முழவு எனப்படும் முரசத்தில் பூவைச் சுற்றியிருப்பர். தலை என்பது முரசின் கண் - தோல் பகுதி. இந்தப் பூந்தலை முழவைப் போன்று இருந்ததாம் மகளிர் தம் கைகளில் வைத்திருந்த பூத்தட்டுகள். பிடகை என்பது பூத்தட்டு.
6.32. இருதலை வந்த பகைமுனை கடுப்ப - மது 402
6.33. மலைபுரை மாடத்துக் கொழுநிழல் இருத்தர - மது 406
இருதலை வந்த பகைமுனை கடுப்ப
இன்னுயிர் அஞ்சி இன்னா வெய்துயிர்த்து
ஏங்குவனர் இருந்துஅவை நீங்கியபின்றைப்
பல்வேறு பண்ணியம் தழீஇத் திரிவிலைஞர்
மலை புரை மாடத்துக் கொழுநிழல் இருத்தர - மது 402 - 406
தெருக்களில் பல பொருள்களையும் விற்றுத் திரிவோர், படையினர் வருவதைக் கண்டு ஓடி ஒளியும் காட்சி இது.
இரண்டு பக்கத்திலும் படைவந்த பகைப்புலத்தைப் போல, இனிய உயிருக்கு அஞ்சி, இன்னாததாகப் பெருமூச்செறிந்து, ஏங்குபவராயிருந்து, அப்படை சென்ற பின்னர், பல வேறுபட்ட பண்டங்களைத் தம்மிடத்தே சேர்த்துக்கொண்டு திரிந்து விற்பவரும், மலை போன்ற மாடங்களின் குளிர்ந்த நிழலில் இருக்க என்பது இதன் பொருள்.
தெருவில் ஏதேனும் ஒரு பக்கத்தில் பகைவர் படைகள் வந்தால் எதிர்ப்பக்கத்தில் விரைந்து ஓடலாம். இரண்டு பக்கங்களிலிருந்தும் படைகள் வந்தால் என்ன செய்வது? வீடுகளுக்கு இடையே உள்ள சந்து பொந்துகளில் ஓடி ஒளிந்துகொள்ளலாம். அவர்கள் நம்மைக் கடந்து செல்லும் வரை மூச்சைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கவேண்டும். அவர்கள் சென்ற பின்னால், மீண்டும் நம் பழைய நடைமுறைக்கு வருவோம். மதுரை நகரின் தெருக்களில் தின்பண்டம் விற்றுத்திரிவோர் அவ்வப்போது கண்காணிக்க வரும் படையினரைப் பார்த்து இவ்வாறு நடுங்கித் திரிகின்றனராம். இது இன்றைக்கும் நடைமுறையில் இருக்கிறது என்பதை மதுரைக்காரர்கள் சொல்வார்கள்!
மதுரைத் தெருக்களில் பண்டங்கள் விற்றுத்திரிவோர், தெருவின் இரு பக்கங்களிலும் படைவீரர் வர, அவர்களுக்கு அஞ்சி, மலை போன்ற மாடங்களை உடைய வீடுகளின் நிழல்களில் ஒளிந்துகொள்கிறார்கள். தெரு கிழக்கு-மேற்காக இருந்தால், வீடுகள் தென் வடலாக இருக்கும். எனவே வீடுகளுக்கு இடைப்பட்ட சந்துகளில் நிழல் இருக்கும். எனவே, இது மதுரையின் தெற்குமாசிவீதி அல்லது வடக்கு மாசிவீதி ஆக இருக்கவேண்டும். இன்றைக்கும் மதுரையில் கீழமாசிவீதி மட்டுமே முக்கியமான வணிகர் தெரு. ஐம்பது ஆண்டுகட்கு முன்னர் வரைகூட, ஏனைய தெருக்கள் குடியிருப்புப் பகுதிகளாகவே இருந்தன. சங்ககாலத்திலும் அவ்வாறே இருந்திருக்க வேண்டும். குடியிருப்புப் பகுதிகளில் சில்லறை வணிகம் தடைசெய்யப்பட்டிருக்கலாம். எனவே, இன்றைக்கும் நடப்பது போலவே, அன்றைக்கும் நடந்திருக்கிறது. மனிதர் மாறவில்லை!
6.34. இரும்கடல் வான்கோடு புரைய வாருற்று - மது 407
இரும்கடல் வான்கோடு புரைய வாருற்று
பெரும்பின் இட்ட வால்நரைக் கூந்தலர்
நன்னர் நலத்தர் தொன்முது பெண்டிர் - மது 407 - 409
மதுரைநகர்த் தெருவில் பண்ணியம் விற்கும் மூத்த பெண்டிரைப் பற்றிய வருணனை இது.
கரிய கடலில் மிதக்கும் வெண்மையான சங்கைப் போல, வாருதல் உற்று பெரியதாகப் பின்பக்கத்தில் இட்ட முழுதும் வெளுத்த நரையுள்ள கூந்தலையுடைய, நல்ல வனப்பினையுடைய, பழைமை மூத்த பெண்டிர் என்பது இதன் பொருள்.
வயதான பெண்டிராயிருப்பினும் நல்ல உடல் நலத்துடன் இருக்கின்ற பெண்டிர் எனக் குறிக்கவே நன்னர் நலத்தர் என்கிறார். இன்றைக்கும் மதுரைத் தெருக்களில் வயதான பெண்டிர் தெருவோரத்தில் அமர்ந்து கிழங்கு, வெள்ளரிக்காய் போன்ற பல விதப் பண்டங்களை விற்றுக்கொண்டிருப்பதைக் காணலாம். அவர்கள் நரைத்த கூந்தலை அள்ளிமுடித்திருக்கிறார்கள். வெயிலிலும் மழையிலும் உழைத்த மேனியாதலால், அவர்களின் மேனி கருத்திருக்கிறது. கரிய மேனியின் தலையில் கொண்டை முடித்த வெள்ளை மயிரைக் கடலில் மிதக்கும் வெண்சங்குக்கு ஒப்பிடுகிறார் புலவர்.
6.35.. செல்சுடர் பசுவெயில் தோன்றி அன்ன - மது 411
செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை
செல்சுடர் பசுவெயில் தோன்றி அன்ன
செய்யர் ...... மது 410-412
மதுரை வீதிகளில் மாலைநேரத்தில் நடமாடும் இளம்பெண்களைப் பற்றிய வருணனை இது.
சிவப்புத்தன்மை கொண்ட பசும்பொன்னால் செய்த உருவம், மறைகின்ற கதிரவனின் இளவெயிலில் எவ்வாறு தோன்றுமோ அவ்வாறான சிவந்த நிறத்தையுடைவர் என்பது இதன் பொருள்.
பாவை என்பது பொம்மை. பொன்னால் செய்த பாவை ‘தக தக'வென்று மின்னும். அதுவும் பசும்பொன்னால் செய்த பாவையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பசும்பொன் என்பது தூய, கலப்படமற்ற பொன். செந்நீர்ப் பசும்பொன் என்பது பொன் வகைகளில் கிளிச்சிறை என்ற வகையைச் சேர்ந்தது. ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ என்ற திரைப்படப் பாடல் ஒன்று உண்டு. ஆடகம் என்பது இன்னொரு வகைப் பொன். ஆனால் கிளிச்சிறை பொன்னிறத்துடன் சற்றே செந்நிறமும் கலந்தது. எனவேதான் இது செந்நீர்ப் பசும்பொன் எனப்படுகிறது.
மாலை நேரத்து வெயிலை மஞ்சள் வெயில் என்பார்கள். இங்கே அது பசுவெயில் எனப்படுகிறது. இங்கே பசுமை இளமையைக் குறிக்கிறது. சிறு குழந்தையைப் பச்சைக் குழந்தை என்கிறோம் அல்லவா! இந்த மஞ்சள் நிற இளவெயிலில் கறுத்த மேனியே பளபளக்கும். அப்படியிருக்கும்போது ஏற்கனவே தகதகக்கும் பசும்பொன் பாவை இந்த மஞ்சள் வெயிலில் எப்படி மின்னும் என்பதை மனதுக்குள் எண்ணிப்பாருங்கள். அப்படியிருந்ததாம் அந்த மங்கையரின் மேனி. சாதாரணமாகவே, நல்ல நிறமுள்ளவர்களைப் பொன் மேனி என்போம். அதற்கு மேலும் நிறமுள்ளவர்களைப் பசும்பொன் மேனி என்போம். அதற்கு மேலும் உள்ளவர்களைக் கிளிச்சிறைப் பசும்பொன் மேனி என்போம். அதற்கு மேலும் உள்ளவர்களை இதற்கு மேலும் சொல்லமுடியாது. எனவேதான் மஞ்சள் வெயிலில் பளபளக்கும் கிளிச்சிறைப் பசும்பொன் மேனி என்கிறார் புலவர்!
நினைத்த காரியம் எளிதில் கைகூடினால், பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் என்பார்கள். ஒரு திரைப்படத்தில், நினைத்த காரியம் மிக மிக எளிதில் முடிந்துவிட்டபோது, ‘பழம் நழுவிப் பாலில் விழ, அது நழுவி வாயில் விழ, அது வழுக்கி வயிற்றில் விழுந்த மாதிரி' என்ற சிரிப்பு மூட்டும் வசனம் உண்டு. இவ்வகையைச் சேர்ந்ததுவே இதுவும். இவ்வாறு இயற்கையான சிறப்புகளுக்கு, மேலும் மேலும் மெருகூட்டும் கலை தமிழர்களுக்கு எப்பொழுதுமே உண்டு போலும்!
6.36. சோர்ந்து உகுஅன்ன வயக்குறு வந்திகை - மது 415
வார்ந்த வாயர், வணங்கிறைப் பணைத்தோள்
சோர்ந்து உகு அன்ன வயக்குறு வந்திகை – மது. 414-415
பொன்னிற மேனி மங்கையர்கள் தோள்களில் அணிந்திருக்கும் பொன்னிற அணிகளைக் கூறவந்த புலவர், அவர்கள் அணிந்திருக்கும் தொடி என்ற நகையைப் பற்றி இங்கு கூறுகிறார்.
வந்திகை என்பது மகளிர் முழங்கைக்கு மேலே, தோளுக்குச் சற்று கீழே இறுக்கமாக அணிந்திருக்கும் அணிகலன் ஆகும். இதில் பலவகை உண்டு. உகுதல் என்பது தானாக உதிர்தல் என்ற பொருள் தரும். எனவே, நெகிழ்ந்து அல்லது கழன்று தானாக விழுந்துவிடுகிறாற் போல் இருக்கும் வந்திகை என்ற பொருளில்தான் சோர்ந்து உகுவன்ன வந்திகை என்கிறார் புலவர்.
இறுக்கமாக இருக்கவேண்டிய நகை, கழன்று விடுவது போல் இருப்பதன் காரணம் என்ன? இதற்கு இரண்டுவிதமான காரணங்கள் கூறலாம். அந்த நகை, அந்தப் பெண் தனக்காகச் செய்துகொண்டது அல்ல. இந்த வருணனையைத் தொடர்ந்து வரும் அடிகளில், இம் மகளிர் தம்மை நன்கு அலங்கரித்துக்கொண்டு, அனுபவமற்ற விடலை இளைஞருடன் கைதட்டிச் சிரித்து மகிழ்ந்திருப்பர் எனக் கூறுகிறார். எனவே இவர் பொதுமகளிராக இருக்கவேண்டும். எனவே, இவர் தமக்கென அணிகலன் செய்துகொள்ளும் அளவுக்கு வசதிபடைத்தவர்களாக இருந்திருக்கமுடியாது. கடைகளில் மலிவாகக் கிடைப்பதை - அளவு சரியில்லாமல் இருப்பினும் - வாங்கி அணிந்திருக்கலாம். இதனை உறுதிப்படுத்த புலவர் வந்திகைக்குக் கொடுத்திருக்கும் அடைமொழியைப் பாருங்கள். அது வயக்குறு வந்திகை என்கிறார். வயங்குதல் என்பது மின்னுதல், ஒளிவிடுதல் என்ற பொருள் தரும். ஆனால், வயக்குதல் என்பது மின்னச்செய்தல், ஒளிவிடச்செய்தல் என்ற பொருளையே தரும்; மயங்கு - மயக்கு என்பது போல. தங்கம் தானாகவே மின்னக்கூடியது. எனவேதான் தங்கநகை அணிந்த பெண்களை வயங்கிழை மகளிர் என்பார்கள். தங்கமில்லாத ஒரு உலோகத்தில் செய்து தங்கமுலாம் பூசப்பெற்ற வந்திகை என்ற பொருளில்தான் வயக்குறு வந்திகை என்று புலவர் சொல்லியிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
மேலும், வந்திகை என்பதற்கு மகளிரின் ஆடை என்ற பொருளும் உண்டு. மகளிர் தோளில் அணியும் மேலாடையைத் தோள்வந்தி என்பர். இதுவே தோவந்தி என்று ஆனது. இதுவும் உண்மையான உயர்ந்த பட்டு ஆடையாக இல்லாமல், மலிவான பட்டினைப் போன்ற நூலில் செய்யப்பட்டதாலும் இதனை வயக்குறு வந்திகை என்று புலவர் குறிப்பிட்டிருக்கலாம். தங்கள் மேலாடையைச் சரியவிட்டு, நழுவி விழுகிறாற் போல் அவர்கள் அணிந்திருந்தார்கள் என்றும் புலவர் கூறுவதாக எடுத்துக்கொள்ளலாம்.
6.37. மை உக்கு அன்ன மொய் இரும் கூந்தல் - மது 417
இந்த அடியும் மேற்கூறிய பெண்களைப்பற்றிய வருணனைதான்.
மை என்பது கரிய நிறம் என்ற பொருள் தரும். மையிருட்டு என்று கூறுகிறோம் அல்லவா! எப்படியோ அந்த இருளைக் கையில் எடுத்துக் கீழே ஒழுகவிட்டால் எப்படியிருக்கும்? அப்படிக் கன்னங்கரேல் என்று இருந்ததாம் அந்த மகளிரின் கூந்தல்.கூந்தல் கருமையாக இருந்தால் மட்டும் அழகு இல்லை. அது அடர்த்தியாகவும் இருக்கவேண்டும். மொய் என்பது நெருக்கமாக அமைந்திருப்பதைக் குறிக்கும்.
அந்தப் பெண்கள், தம் கரிய கூந்தலைப் பின்னாமல், விரித்தவாறு தொங்கவிட்டிருக்கும் காட்சி, அவர்கள் தலையிலிருந்து யாரோ மையைக் கொட்டிவிட்டதைப் போல் இருந்ததாகப் புலவர் கூறுகிறார்.
...
--
அரங்கனாருக்கும் அம்மை சுபாவுக்கும் மிக்க நன்றி. நிறையப்பேர் படித்திருக்கிறார்கள் என்று கண்டதால் அடுத்த பகுதி சற்று விரைவாகவே வருகிறது. மதுரைக்காஞ்சியில் உவமைகள் 25 முதல் 37 வரை இதில் இடம்பெற்றுள்ளன.மிக்க நன்றி,ப.பாண்டியராஜா
மதுரைக்காஞ்சி – உவமைக் காட்சிகள்
25 முதல் 37 வரை
6.29. செம்கால் அன்னத்துச் சேவல் அன்ன - மது 386
அங்கண் மால்விசும்பு புதைய வளிபோழ்ந்து
ஒண்கதிர் ஞாயிறு ஊறுஅளவாத் திரிதரும்
செங்கால் அன்னத்துச் சேவல் அன்ன
குரூஉ மயிர்ப்புரவி உராலின் பரிநிமிர்ந்து
காலெனக் கடுக்கும் கவின்பெறு தேரும் - மது 384 - 388
பாண்டிய மன்னனின் தேர்ப்படை விரைந்து செயலாற்றுவதை ஓர் அழகிய உவமையுடன் ஓர் அருமையான சொல்லோவியமாய்ச் சொற்களால் வரைந்து காட்டுகிறார் புலவர்.
அழகுமிக்க பெரிய வானமே மறையும்படியாக, காற்றைப் பிளந்துகொண்டு, மின்னுகின்ற கதிர்களையுடைய மாலைக் கதிரவனைச் சென்று சேருமோ என்று எண்ணத்தக்க அளவில் பறந்துசெல்லும் சிவந்த கால்களையுடைய அன்னத்தின் சேவலைப் போன்று, வெண்ணிற மயிரினையுடைய குதிரைகள் ஓடுதலால் வேகம் மிக்கு,காற்றைப் போல் விரைந்து ஓடும் அழகுமிக்க தேரும் என்பது இதன் பொருள்.
அன்னம் என்பது இந்தியநாட்டுப் பறவை அல்ல. எனினும் அது சங்க இலக்கியங்களிலும், பிற புராணக்கதைகளிலும் இடம்பெற்றுள்ளது. எனவே, பிற நாடுகளிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டவையாகவோ, புலம்பெயர்ந்து வந்தவையாகவோ இருக்க வேண்டும். அன்னம் பொதுவாக குளிர்மிக்க இடங்களில் வசிக்கும். பனிக்காலத்தில் அவ்விடங்கள் வசிப்பதற்கு இயலாத இடங்களாய்ப் போய்விடுமாதலால், அவை மிதவெப்பம் உள்ள மற்ற நாடுகளுக்கு இடம்பெயரும். அப்போது அவை கூட்டம் கூட்டமாகப் பறந்து வந்து தகுந்த இடங்களைத் தேடிப்பிடித்து வாழும். அந்த இடங்களில் வெப்பம் மிகுந்த வேனில்காலம் தொடங்கும் நேரத்தில், மீண்டும் அவை தங்கள் சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பிச்செல்லும். அவ்வாறு புலம்பெயரும் ஒரு காட்சியைத்தான் புலவர் இங்கு குறிப்பிடுகிறார்.
வானத்தையே மறைக்கும் அளவுக்கு அவை கூட்டம் கூட்டமாக எழுந்து, ஒரு மங்கிய மாலைப்பொழுதில் தங்கள் பயணத்தைத் தொடங்குகின்றன. அன்னங்கள் பறக்கும்போது, தங்கள் நீண்ட கழுத்தை முன்பக்கம் நீட்டி, காலை மடக்கிப் பின்பக்கம் நீட்டி, இறக்கைகளை விரித்து, ஏவிவிட்ட அம்புபோல் செல்வதையே, அவை காற்றைக் கிழித்துக்கொண்டு செல்வதாகப் புலவர் குறிப்பிடுகிறார். போழ் என்பதற்குப் பிள என்று பொருள்.
செக்கர் வானத்தில் தீப்பிழம்பாய் மின்னும் செங்கதிரோனின் ஒளிரும் வட்டத்திற்குள் அவை பறக்கும் காட்சி, அந்த அன்னங்கள் சிவப்புச் சூரியனைச் சேர்ந்தடையச் செல்கின்றனவோ என்று தோன்றுவதாகப் புலவர் குறிப்பிடுவது ஓர் இனிய கற்பனையாகும்.
இந்த அன்னங்கள் செங்கால் அன்னங்கள் என்று புலவர் குறிப்பிடுகிறார். பொதுவாக அன்னங்களின் கால்கள் கறுப்பாகவே இருக்கும். ஆனால்,தென்அமெரிக்காவில் வாழும் சிலவகை அன்னங்களின் கால்கள் சிவப்பாக இருக்கும் என்று விலங்கியலார்கள் குறிப்பிடுகின்றனர். (The legs of swans are normally a dark blackish grey colour, except for the two South American species, which have pink legs)
பொதுவாக, தென்அமெரிக்க அன்னங்கள் புலம்பெயரும் பருவத்தில் வடஅமெரிக்காவுக்குத்தான் செல்லும் என்று இக்காலப் பறவை ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். எனினும் பண்டைக் காலத்தில் இப் பறவைகளின் புலம்பெயர்பு முறை வேறுவிதமாக இருந்திருக்கலாம். இவ்வாறு புலம்பெயர்ந்து அவை பறந்து செல்லும்போது அவை கூட்டம் கூட்டமாகச் செல்லும் என்று கண்டோம். அக் கூட்டத்திற்குத் தலைவனாய் இருப்பது ஓர் ஆண் அன்னமே என்றும் இவ் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். (An adult male swan is a cob, from Middle English cobbe (leader of a group; an adult female is a pen)
இந்தச் செங்கால் அன்னங்கள் காற்றைப் பிளந்துகொண்டு வானத்தில் பறந்துசெல்வதைப் போல, பாண்டிய மன்னனின் தேர்ப்படையின் குதிரைகள், தாங்கள் பூட்டப்பட்ட கவின்பெறு தேர் கால் எனக் கடுக்கும் விரைவுடன் செல்லுகிறாற்போல் இழுத்துக்கொண்டு ஓடுகின்றன என்கிறார் புலவர். வெண்ணிறக் குதிரைகள் விரைந்து ஓடுவது அவை விண்ணிற் பறப்பதுபோல் இருக்கிறது என்பதற்காக, குதிரைகளைப் பறக்கும் அன்னங்களுக்கு உவமிக்கிறார். இன்றைக்கும் சாலைகளில் மிக வேகமாகச் செல்லும் வாகனங்களைக் காண நேர்கையில், “பார், என்ன வேகமாப் பறந்துகிட்டு போறான்” என்கிறோம் அல்லவா!
பறவைகள் வலசை போகும் தகவல்களும் சங்கப் பாடல்களில் இருப்பதை அறிந்து கொண்டேன் ... நன்றி ஐயா.
6.36. சோர்ந்து உகுஅன்ன வயக்குறு வந்திகை - மது 415
வார்ந்த வாயர், வணங்கிறைப் பணைத்தோள்
சோர்ந்து உகு அன்ன வயக்குறு வந்திகை – மது. 414-415
பொன்னிற மேனி மங்கையர்கள் தோள்களில் அணிந்திருக்கும் பொன்னிற அணிகளைக் கூறவந்த புலவர், அவர்கள் அணிந்திருக்கும் தொடி என்ற நகையைப் பற்றி இங்கு கூறுகிறார்.
வந்திகை என்பது மகளிர் முழங்கைக்கு மேலே, தோளுக்குச் சற்று கீழே இறுக்கமாக அணிந்திருக்கும் அணிகலன் ஆகும். இதில் பலவகை உண்டு. உகுதல் என்பது தானாக உதிர்தல் என்ற பொருள் தரும். எனவே, நெகிழ்ந்து அல்லது கழன்று தானாக விழுந்துவிடுகிறாற் போல் இருக்கும் வந்திகை என்ற பொருளில்தான் சோர்ந்து உகுவன்ன வந்திகை என்கிறார் புலவர்.
இறுக்கமாக இருக்கவேண்டிய நகை, கழன்று விடுவது போல் இருப்பதன் காரணம் என்ன? இதற்கு இரண்டுவிதமான காரணங்கள் கூறலாம். அந்த நகை, அந்தப் பெண் தனக்காகச் செய்துகொண்டது அல்ல. இந்த வருணனையைத் தொடர்ந்து வரும் அடிகளில், இம் மகளிர் தம்மை நன்கு அலங்கரித்துக்கொண்டு, அனுபவமற்ற விடலை இளைஞருடன் கைதட்டிச் சிரித்து மகிழ்ந்திருப்பர் எனக் கூறுகிறார். எனவே இவர் பொதுமகளிராக இருக்கவேண்டும். எனவே, இவர் தமக்கென அணிகலன் செய்துகொள்ளும் அளவுக்கு வசதிபடைத்தவர்களாக இருந்திருக்கமுடியாது. கடைகளில் மலிவாகக் கிடைப்பதை - அளவு சரியில்லாமல் இருப்பினும் - வாங்கி அணிந்திருக்கலாம். இதனை உறுதிப்படுத்த புலவர் வந்திகைக்குக் கொடுத்திருக்கும் அடைமொழியைப் பாருங்கள். அது வயக்குறு வந்திகை என்கிறார். வயங்குதல் என்பது மின்னுதல், ஒளிவிடுதல் என்ற பொருள் தரும். ஆனால், வயக்குதல் என்பது மின்னச்செய்தல், ஒளிவிடச்செய்தல் என்ற பொருளையே தரும்; மயங்கு - மயக்கு என்பது போல. தங்கம் தானாகவே மின்னக்கூடியது. எனவேதான் தங்கநகை அணிந்த பெண்களை வயங்கிழை மகளிர் என்பார்கள். தங்கமில்லாத ஒரு உலோகத்தில் செய்து தங்கமுலாம் பூசப்பெற்ற வந்திகை என்ற பொருளில்தான் வயக்குறு வந்திகை என்று புலவர் சொல்லியிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
மேலும், வந்திகை என்பதற்கு மகளிரின் ஆடை என்ற பொருளும் உண்டு. மகளிர் தோளில் அணியும் மேலாடையைத் தோள்வந்தி என்பர். இதுவே தோவந்தி என்று ஆனது. இதுவும் உண்மையான உயர்ந்த பட்டு ஆடையாக இல்லாமல், மலிவான பட்டினைப் போன்ற நூலில் செய்யப்பட்டதாலும் இதனை வயக்குறு வந்திகை என்று புலவர் குறிப்பிட்டிருக்கலாம். தங்கள் மேலாடையைச் சரியவிட்டு, நழுவி விழுகிறாற் போல் அவர்கள் அணிந்திருந்தார்கள் என்றும் புலவர் கூறுவதாக எடுத்துக்கொள்ளலாம்.
இந்த அணிகலனை "வங்கி" என்றும் சொல்வார்கள். பொது மகளிர் என கருத்தில் கொண்டால் அணிகலன் பொருத்தமின்றி கழன்று விழும் வண்ணம் இருக்க மற்றொரு காரணமும் இருக்கலாம்.. கோவலன் கண்ணகியின் அணிகலனை மாதவிக்குக் கொடுத்தான் என்று வைத்துக் கொள்வோம்...கன்னகியைவிட மாதவி வயது இளையவளாக இருந்தால் ... மனைவியிடம் இருந்து அபகரித்த அணிகலன் வரைவில்மகளிருக்கு பொருத்தமான அளவாக இல்லாததால் லொட லொடவென்று கழன்று விழுவது போல இருக்கவும் வாய்ப்புள்ளது.
விளக்கங்களுக்கு நன்றி ஐயா.
...... தேமொழி
அரங்கனாருக்கும் அம்மை சுபாவுக்கும் மிக்க நன்றி. நிறையப்பேர் படித்திருக்கிறார்கள் என்று கண்டதால் அடுத்த பகுதி சற்று விரைவாகவே வருகிறது. மதுரைக்காஞ்சியில் உவமைகள் 25 முதல் 37 வரை இதில் இடம்பெற்றுள்ளன.மிக்க நன்றி,ப.பாண்டியராஜா
மதுரைக்காஞ்சி – உவமைக் காட்சிகள்
25 முதல் 37 வரை
”அன்னம் என்பது இந்தியநாட்டுப் பறவை அல்ல. எனினும் அது சங்க இலக்கியங்களிலும், பிற புராணக்கதைகளிலும் இடம்பெற்றுள்ளது. எனவே, பிற நாடுகளிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டவையாகவோ, புலம்பெயர்ந்து வந்தவையாகவோ இருக்க வேண்டும். அன்னம் பொதுவாக குளிர்மிக்க இடங்களில் வசிக்கும். பனிக்காலத்தில் அவ்விடங்கள் வசிப்பதற்கு இயலாத இடங்களாய்ப் போய்விடுமாதலால், அவை மிதவெப்பம் உள்ள மற்ற நாடுகளுக்கு இடம்பெயரும். அப்போது அவை கூட்டம் கூட்டமாகப் பறந்து வந்து தகுந்த இடங்களைத் தேடிப்பிடித்து வாழும். அந்த இடங்களில் வெப்பம் மிகுந்த வேனில்காலம் தொடங்கும் நேரத்தில், மீண்டும் அவை தங்கள் சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பிச்செல்லும். அவ்வாறு புலம்பெயரும் ஒரு காட்சியைத்தான் புலவர் இங்கு குறிப்பிடுகிறார். “
அன்னங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து வாழும் பறவைகள் ஐயா. Goose என்னும் பறவைகள். இவை இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் உண்டு. பொதுவாக, அன்னம் என்று வரும் இடங்களில் bar headed goose. தமிழ்நாட்டில் இன்னும் அதிகம் இருப்பவை. எ-டு: கூந்தங்குளத்தில் அன்னப் பறவைகள்:
அன்னம் எனும் பறவை எது?
https://groups.google.com/forum/#!msg/mintamil/4SiiFQMAwaY/gauUNPGxlQUJ
ஆனால், “செங்கால் அன்னம்” என்று மாங்குடி மருதனார் குறிப்பது என்ன geese? நற்றிணை 356-லும்,
கம்பனும், கல்லாடமும், பிற்கால விவேகசிந்தாமணியும் குறிப்பதாயிற்றே. ‘செங்கால் அன்னம்” என்பதற்கான விடையைக் கண்டறிந்தேன். எனது தனி இழையில் சொல்கிறேன்.
யா மர இனங்களில், சில ஷோரியா வகைகள்தான் தென்னாட்டில் உள்ளன. மற்றபடி ராஜ-யா (shorea robusta) இமாலய அடிவாரத்திற்கு பின்வாங்கிவிட்டது. அதுவும் அழியலாம். அதுபோல், செங்கால் அன்னம் அனேகமாக வடக்கே தான் இன்றைக்கு உண்டு. ஆனால், சில தென்னாட்டிலும் காணக் கிடைக்கின்றன. I will identify "ceGkAl annam" bird talked about from Sangam lit. onward.
செங்கால் அன்னம் வேறு. செங்கால் நாரை வேறு.
செங்கால் நாரை இதுதான்:
https://groups.google.com/forum/#!msg/mintamil/sXjCkRYIL5E/fXkdVPNX5NwJ
நா. கணேசன்
மதுரைக்காஞ்சி – உவமைக் காட்சிகள்
38 முதல் 53 வரை
மதுரைக்காஞ்சியில் உள்ள 96 உவமைகளையும் பாடலின் தொடக்கத்திலிருந்து வரிசையாகத் தொகுத்துக் கூறும் கட்டுரைகளில் இது ஐந்தாவது ஆகும்.
மதுரைக்காஞ்சியைப் பாடிய புலவர் மாங்குடி மருதனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சிறப்பைக் கூறி அவனை வாழ்த்துகிறார். அவனுடைய வெற்றிகளை எல்லாம் புகழ்ந்து கூறும் புலவர் உலகில் நிலையான புகழைத் தருவது அறவழியில் ஆட்சிசெய்தலே என்று அறிவுறுத்துகிறார்.
முதலில் பாண்டியனின் முன்னோர்களின் சிறப்பை விதந்தோதுகிறார் புலவர். அடுத்து மன்னனின் பல்வித வெற்றிகளைப் பாராட்டி மகிழ்கிறார். பின்னர் பாண்டிய நாட்டின் பல்வகை வளங்களைச் சிறப்பித்துக் கூறுகிறார். அடுத்து மதுரைமாநகருள் நம்மை அழைத்துச் செல்லும் புலவர், நகரின் பல்வேறு பகுதிகளை உவமை நயத்துடன் விவரித்துக்கூறுகிறார்.
6.38. கரைபொருது இரங்கும் முந்நீர் போல - மது 425
6.39 ஆடுதுவன்று விழவின் நாடுஆர்த்து அன்றே - மது 428
மழைகொளக் குறையாது புனல்புக மிகாது
கரைபொருது இரங்கும் முந்நீர் போல
கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது
கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி
ஆடு துவன்று விழவின் நாடுஆர்த் தன்றே
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்
நாளங்காடி நனந்தலைக் கம்பலை - மது 424-430
மதுரை நகரின் பகல்நேரக் கடைகளின் ஆரவாரத்தைப் பற்றி இங்கு புலவர் கூறுகிறார்.
மேகங்கள் முகக்க முகக்கக் குறையாமல், ஆற்றுநீர் புகப் புக மிகாமல், கரையில் மோதி ஒலிக்கும் கடல் போல, மக்கள் வாங்க வாங்கக் குறையாமலும், விற்பனைக்குக் கொணர்வோர் தரத்தர மிகாமலும், கண்ணூறு(திருஷ்டி) கழிக்கக் கழுவிவிட்ட நீர் ஊற்றும் ஏழாவது நாள் மாலையில், கொண்டாட்டங்களின் நிறைவுநாள் விழாவன்று எழும் ஆரவாரத்தைப் போல், மாடங்கள் உயர்ந்த புகழ் மலிந்த மதுரையின் நாளங்காடிகளின் அகன்ற இடங்களின் ஆரவாரம் என்பது இதன் பொருள்.
மக்கள் வெள்ளம் கடைகளிலுள்ள பொருள்களை அள்ளிக்கொண்டு செல்கிறது. ஆனால் கடையின் பொருள்கள் தீர்ந்துபோவதில்லை. காரணம் பொருள்களின் வரத்து நிற்பதே இல்லை. கடைகளினின்றும் பொருள்கள் வெளியே போய்க்கொண்டே இருப்பது அவற்றை வாங்கும் மக்களின் செல்வச் செழிப்பைக் குறிக்கிறது. மக்களின் தேவைக்கேற்ற வகையில் கடையில் பொருள்கள் வந்து சேர்ந்துகொண்டே இருப்பது நாட்டின் வளத்தைக்குறிக்கிறது. பொருள்களை வாங்கிச் செல்பவர்கள் சிறிது சிறிதாகப் பொருள்களை வாங்கித் துணிகளில் பொட்டலங்களாகவும் பைகளிலும் எடுத்துச் செல்வதால் பொருள்கள் வெளியில் செல்வது தெரியாது – கடல்நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சும் மேகத்தைப் போல. கடைத்தெருவுக்குப் பொருள்கள் வரும்போது வண்டிகளிலும், விலங்குகள் மேலும் மூடைகளாகவும், பொதிகளாகவும் மொத்தம் மொத்தமாக வருவதால் பொருள் வரத்து வெளியில் தெரியும் – கடலுக்குள் வந்து விழும் ஆற்றுநீர் போல. நாளங்காடியின் கடைச் சரக்குகளுக்கு உவமையாக, மழை கொளக் குறையாது, புனல் புக மிகாது இருக்கும் கடல் எத்துணை பொருத்தமான உவமை பாருங்கள்!
சாதாரணமாக, நடுக்கடல் பகுதி அமைதியாக இருக்கும் என்பர். கடற்கரைப் பகுதியில், கடல் அலைகள் தொடர்ந்து கரையில் மோதுவதால் இரைச்சல் ஏற்படுகிறது. இவ்வாறு ஓயாத இரைச்சலை உண்டாக்கும் கரையோரக் கடல் போல என்பதற்காகவே, கரைபொருது இரங்கும் முந்நீர் போல என்கிறார் புலவர். இரங்குதல் என்பது ஒலித்தல். கடல் பொங்குவதுவும் வற்றுவதுவும் கரையைப் பார்த்தால்தானே தெரியும். அதனால்தான் அவர் இந்த உவமையில் கரையையும் இணைத்துப் பேசுகிறார். மக்கள் நடமாட்டம் அதிகமாயிருப்பின் இரைச்சலும் அதிகமாக இருக்கும்தானே. எனவேதான் கரையைப் பொரும் கடல் என்று ஒலியையும் இங்கு சேர்க்கிறார் புலவர்.
ஆனால், கடைத்தெருவின் இரைச்சலுக்கு, திருவிழாக்காலத்து உற்சாக ஒலிகளை உவமிக்கிறார் புலவர். கழுநீர் என்பது திருஷ்டி எனப்படும் கண்ணூறு கழித்துக் கழுவிவிடும் நீர். இப்போது இதை ஆலத்தி என்கிறோம். ஊரில் திருவிழாக் கொண்டாடும் போது, ஏழாம் நாள் மாலையில் நடைபெறும் நிறைவு நிகழ்ச்சிகளின் இறுதியில் ஆலத்தி எடுத்து, கழித்த நீரைக் கீழே கொட்டுவார்கள். அப்போது பெண்கள் குலவையிட, ஆண்கள் ஆர்ப்பரித்து ஒலி எழுப்புவார்கள். அந்த ஆரவாரத்தைப் போல, எப்போதும் ஆரவாரம் மிகுந்து காணப்படுமாம் மதுரையின் பகல்நேரக் கடைகள். கூடல் என்பது மதுரைக்கு இன்னொரு பெயர். கம்பலை என்பது பெரும் ஒலி.
6.40. செக்கர் அன்ன சிவந்து நுணங்கு உருவின் - மது 432
வெயில்கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச்
செக்கர் அன்ன சிவந்துநுணங்கு உருவின்
கண்பொருபு உகூஉம் ஒண்பூங் கலிங்கம் - மது 431 - 433
மதுரைநகரின் செல்வர்கள் அணிந்திருந்த ஆடைகளைப் பற்றிக் கூறவந்த புலவர் இவ்வாறு கூறுகிறார்.
வெயிலின் கதிர் ஒளி மங்கிப்போன விரவிப் பரவுதல் உள்ள ஞாயிற்றின் செவ்வானத்தைப் போன்ற சிவந்து நுண்ணிய வடிவுள்ள, கண்களைக் கூசவைக்கும் ஒளிவிடும், பூவேலைப்பாடுகள் உள்ள ஆடை என்பது இதன் பொருள்.
செக்கர் வானம் என்றாவது கிடைக்கும் அரிய காட்சி. அந்தி நேரத்தில் மேற்கு வானத்தில் மேகங்களின் அமைப்பைப் பொருத்து, சூரியக் கதிரின் வெண்ணிறத்தில் உள்ள சிவப்புநிறம் மட்டும் பிரிக்கப்பட்டு வானத்தில் தூவிவிடப்படும் அரிய அழகுக் காட்சியை நேரில் காணக் கொடுத்துவைத்திருக்கவேண்டும். இதனையே புலவர் படர்கூர் ஞாயிறு என்கிறார். படர் என்பது பரவுதல். கூர்தல் என்பது இங்கே செய்தல். அருள்கூர்ந்து, நினைவுகூர் என்ற சொல்லாட்சிகளைப் போல. முதல் படத்தில் சிவப்புக் கதிர்கள் மட்டும் பரப்பிவிடப்பட்டிருப்பதைக் காணலாம். வெயில் என்பது பொதுவாகச் சூரிய ஒளியைக் குறிக்கும். அதுவே சூரிய வெப்பத்தையும் குறிக்கும். ‘இன்றைக்கு வெயில் அதிகம்' என்று கூறுவதில்லையா? அந்த வெப்பம் நம்மை எவ்வாறு வந்தடைகிறது? சூரியனின் கதிர்கள் (rays) மூலமாகத்தானே? இந்தக் கதிர்கள் நண்பகலில் நம்மை நோக்கிச் செங்குத்தாக (vertical) ஏறக்குறைய 90 பாகைக் கோணத்தில் பாய்வதால்தான் வெம்மை அதிகமாயிருக்கிறது. மாலையில் அதுவே ஏறக்குறைய கிடைநிலையில் (horizontal) பாய்வதால் அதன் வெம்மை குறைந்துவிடுகிறது. இதனையே வெயிலின் கதிர்கள் மழுங்கிப்போனதாகப் புலவர் கூறுகிறார். பகலில் கூரிய வாள் போல் குத்தும் கதிர்கள் மாலையில் கூர்மழுங்கிய வாள் போல் ஆகிவிடுகின்றன என்பதைக் கூறவந்த புலவரின் திறம் மிக்க இந்த சொல்லாட்சி நினைத்து நினைத்து இன்புறத் தகுந்தது.
இரண்டாவது படத்தில் காணப்படும் செக்கர் வானத்தின் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்திருந்தனராம் அக் காலத்திய மதுரையின் செல்வர்கள். புகைப்படத்தில் காணப்படும் செக்கர் வானமே கண்ணைக் கூசவைக்கிறது. இந்த நிறத்தில் ஆடை அணிந்துவந்தால்? ‘சும்மா, கண்ணப் பறிக்குதப்பா!' என்று நாம் இன்றும் கூறுவதில்லையா? இதையேதான் புலவர் இலக்கியத் தமிழில் கண் பொருபு உகூஉம்' என்று கூறுகிறார். பொரு என்பதற்குத் தாக்கு, மோது (dash against, collide) என்ற பொருள் உண்டு. இன்றும் நாம் வழங்கும் அன்றாடத் தமிழின் செம்மொழி வடிவம் இது. நுணங்கு என்பது நுண்ணிய, மெல்லிய (exquisite, fine, thin) என்ற பொருள் தரும். சாதாரண மக்கள் முரட்டுப் பருத்தி நூலில் நெய்த துணிகளை உடுத்தியிருப்பர். கலிங்கம் என்பது இன்றைய ஒரிசா (ஒடிசா) மாநிலத்தைக் குறிக்கும். அங்கு நெய்யப்பட்டதாலோ என்னவோ மெல்லிய நூலிழை கொண்ட ஆடைகள் கலிங்கம் எனப்பட்டன. இவற்றைச் செல்வர்கள் மட்டுமே வாங்கி அணியமுடியும்.
6.41. மணிதொடர்ந்து அன்ன ஒண்பூங் கோதை - மது 438
மணிதொடர்ந்து அன்ன ஒண்பூங் கோதை
அணிகிளர் மார்பில் ஆரமொடு அளைஇ - மது 438,439
முற்கூறிய செல்வர்கள் அணிந்திருந்த பூமாலையையும் முத்து மாலையையும் பற்றி இங்கு புலவர் குறிப்பிடுகிறார்.
மாணிக்கத்தைத் தொடுத்தாற் போன்ற ஒளிவிடும் பூ மாலையினை அழகு விளங்கும் மார்பிற் கிடக்கின்ற முத்துமாலையோடே கலந்து அணிந்து என்பது இதன் பொருள்.
இங்கே என்ன பூ என்று சொல்லப்படாவிடினும், செங்கழுநீர்ப் பூ என்றே கொள்ளப்படுகிறது. மணி என்பதுவும் ஏதேனும் ஒரு விலையுயர்ந்த கல்லையே குறிக்கும். பெரும்பாலும் இது சிவந்த மணி என்ற பொருளில் மாணிக்கக்கல்லைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. பொதுவாகக் கோதை என்பது பெண்கள் அணியும் மாலையைக் குறிக்கும். ஆனால் இங்கு ஆண்கள் அணிந்திருந்ததாகப் புலவர் குறிப்பிடுகிறார். சங்க கால ஆடவர் கழுத்தில் பூமாலையும், முத்துமாலையும் அணிந்திருந்தனர் என்று புலவர் வாயிலாக அறிகிறோம். இன்றைக்குப் பெரும்பாலான ஆண்கள் தங்கநகைகள் அணிந்துகொள்வதில்லை. இருப்பினும் சிலர் மோதிரம், breacelet, கழுத்தில் சங்கிலி போன்றவற்றை அணிந்துகொள்வதுண்டு. இது நெடுநாளாகத் தொடர்ந்துவரும் பழக்கம் போலும்.
6.42. கால்இயக்கு அன்ன கதழ்பரி கடைஇ - மது 440
6.43 காலோர் காப்பக் கால்எனக் கழியும் – மது 441
6.44 வான வண்கை - மது 442
கால்இயக்கு அன்ன கதழ்பரி கடைஇக்
காலோர் காப்பக் கால்எனக் கழியும்
வான வண்கை வளம்கெழு செல்வர் - மது 440-442
இந்த அடிகளிலும் செல்வர்களைப் பற்றியே புலவர் கூறுகிறார்.
காற்று (வேகமாக) இயங்குவதைப் போன்று விரைந்து செல்லும் (தேர்க்)குதிரைகளைச் செலுத்தி, காலாட்கள் காக்க, காற்று என விரைந்து செல்லும், முகில் போன்று (வரம்பில்லாமல் கொடுக்கும்)வள்ளல்தன்மை கொண்ட கைகளை உடைய வளப்பம் பொருந்திய செல்வர் என்பது இதன் பொருள்.
கால் எனக் கடுக்கும் கவின்பெறு தேர் என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம் (6.29).
கதழ்தல் என்பது திமிறிக்கொண்டு விரைந்துசெல்லுதல் (swift and forceful) என்ற பொருள் தரும். பந்தயத்தில் கலந்துகொள்ளும் குதிரைகளை முதலில் தொடக்க இடத்தில் ஒரு தடுப்புக்குப் பின்னால் நிறுத்திவைப்பார்கள். அப்போது அவை நிலையின்றிக் (rest-less) கால்களை மாற்றிமாற்றி வைத்துக்கொண்டு பொறுமையின்றித் (impatient) தவிப்புடன் இருக்கும். குறுக்குக் கட்டை உயர்த்தப்பட்ட உடனே, அவை கட்டுக்கடங்காத வேகத்தில் காற்றாய்ப் பறக்கும். விட்ட குதிரை விசைப்பின் அன்ன என்று ஒரு சங்கப்பாடல் இதனை வருணிக்கும். இதுவே கதழ்தல்.
கழி என்பதற்குக் கடந்துசெல் என்பது பொருள். தெருவில் நடந்து செல்லும்போது, ஏதோ அரவம் கேட்டுத் திரும்பிப் பார்க்க, ‘விருட்'டென்று ஏதோ உங்களைக் கடந்து செல்ல, நிதானித்து உற்றுப்பார்த்தால், அடுத்த வீட்டுக் கல்லூரி மாணவனின் ‘மோட்டார் பைக்' தேய்ந்து மறைகிறது. ‘சும்மா, காத்தாப் பறக்கிறான்' என்று சொல்வோமே - அதுதான் கால் எனக் கழிதல்.
குதிரை தமிழ்நாட்டு விலங்கு அல்ல. இதை ஒத்த நமது விலங்கு மாடுதான். மாட்டின் வேகமும், மாட்டுவண்டியின் வேகமும் நாம் அறிந்தவைதான். எனவேதான், வெளிநாட்டிலிருந்து குதிரைகள் இங்கு இறக்குமதி செய்யப்பட்டன. நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும் என்று பட்டினப்பாலை கூறுகிறது. எனவே குதிரைகளும் அவை பூட்டப்பட்ட தேர்களும் விலையுயர்ந்தவை. அவற்றைச் செல்வர்களும், மன்னர்களுமே வாங்க முடியும்.
ஒரு காலத்தில் (1960-களில்) நம் நாட்டில் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் வாகனம் சைக்கிள்தான். செல்வர் வீட்டுப் பிள்ளைகளே மோட்டார் சைக்கிள் வைத்திருப்பர். அவர்கள் அதில் ‘டர் .. புர்' என்று விரைந்து செல்வதை வியப்புடன் மற்றவர் பார்ப்பர். அன்றைய நாளில், நடந்து செல்வோர் குதிரைகளில் விரைந்து செல்வோரை அதே உணர்வுடன் பார்த்துக்கொண்டிருந்திருப்பர் போலும்.
வான வண்கை வளம்கெழு செல்வர் என்பதில் வானம் என்பது மழையைக் குறிக்கும். வண்மை என்பது வள்ளல்தன்மை. வானம் எதனையும் எதிர்ப்பார்க்காமல் தன்னிடம் உள்ளதை வரையாது வழங்கும். அதைப் போன்ற வள்ளல்குணம் பெற்றவர் பாண்டியநாட்டுச் செல்வர் என்கிறார் புலவர்.
பிடிக்கணம் சிதறும் பெயல்மழை தடக்கை - சிறு 124
என்ற உவமையையும் ஈண்டு நினவிற்கொள்க.
6.45. அணங்கு வீழ்வு அன்ன பூந்தொடி மகளிர் - மது 446
6.46 தெண்கடல் திரையின் அசைவளி புடைப்ப - மது 450
6.47 மழைமாய் மதியின் தோன்றுபு மறைய - மது 452
அணங்கு வீழ்வு அன்ன பூந்தொடி மகளிர்
மணம்கமழ் நாற்றம் தெருவுடன் கமழ
ஒண்குழை திகழும் ஒளிகெழு திருமுகம்
திண்காழ் ஏற்ற வியல்இரு விலோதம்
தெண்கடல் திரையின் அசைவளி புடைப்ப
நிரைநிலை மாடத்து அரமியம் தோறும்
மழைமாய் மதியின் தோன்றுபு மறைய - மது 446-452
மதுரை நகரின் செல்வர்களைப் பற்றிக் கூறிய புலவர், இவ் அடிகளில் செல்வ மகளிரைப் பற்றிக் கூறுகிறார்.
தெய்வமகளிர் கீழிறங்கிவந்ததைப் போல, பூத்தொழில் செய்த வளையலையுடைய மகளிரின் மணம் கமழ்கின்ற வாசனை தெருவெங்கும் வீச, ஒள்ளிய மகரக்குழை விளங்கும் ஒளி பொருந்திய அழகினையுடைய முகங்கள், திண்ணிய கொடித்தண்டுகளில் ஏற்றப்பட்ட அகலமான பெரிய கொடிகளை, தெளிந்த கடல் அலைகளைப் போல் எழுந்து விழும்படி காற்று மோதுவதினால், வரிசையாக இருக்கும் மாடங்களின் நிலா முற்றங்கள்தோறும் மேகங்களில் மறையும் திங்களைப் போன்று தோன்றித்தோன்றி மறைய என்பது இதன் பொருள்.
ஒரு வீட்டின் முதல் மாடியில் நிலா முற்றத்தில் நின்றுகொண்டிருக்கும் அழகு மங்கையரைக் கீழிருந்து பார்க்கிறார் புலவர். அவர்கள் அந்த வீட்டில் ஏற்றப்பட்டிருக்கும் கொடியருகே நின்றுகொண்டிருக்கின்றனர். இக்காலத்துப் பெயர்ப்பலகை போல, அக் காலத்தில் அடையாளத்துக்குக் கொடிகளை ஏற்றிவைத்திருப்பர். ஓங்கிக் காற்றடிக்கும்போது அந்தக் கொடி அசைந்தாடுகிறது. விண்ணுலக மங்கையரைப் போன்ற அந்த அழகுமங்கையரின் மதிமுகத்தை அந்தக் கொடிகள் மறைத்து மறைத்து ஆடுகின்றனவாம். அது மேகங்களுக்கூடே மறைந்து மறைந்து வெளிப்படும் நிலவைப்போல் இருப்பதாகப் புலவருக்குத் தோன்றுகிறது.
வானுலக மங்கையர் மிக்க அழகுள்ளவர்; எந்தவிதக் குறைபாடுகளும் அற்ற சிவந்த மேனியர் என்ற கருத்து இக்காலத்தும் உண்டு. தொடி என்பது தோளணி என்று பார்த்தோம். சில இடங்களில் கைவளை என்ற பொருளும் தரும். செல்வ மகளிராதலால், பூவேலைப்பாடு கொண்ட விலை மதிப்புள்ள அணிகலன்களை அவர்கள் அணிந்திருந்தனர்.
நிரை என்பது வரிசை. அரமியம் என்பது மாடிவீடுகளில் உள்ள நிலாமுற்றம் - மொட்டை மாடி அல்லது மாடி அறைக்கு முன்பு இருக்கும் திறந்தவெளி. மதுரை நகர்த் தெருக்களில் வரிசையாக உயர்ந்த மாடிவீடுகள் இருக்கின்றன. மாடியில் உள்ள நிலா முற்றங்களில் திண்ணிய கம்பங்களில் அகலமான, பெரிய கொடிகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. விலோதம் என்பது பெரிய கொடி. அந்தக் கொடிகள் காற்றில் அசைந்தவண்ணம் இருக்கின்றன. தெளிந்த கடலில் தோன்றும் அலைகள் போல அந்தக் கொடிகள் காற்றில் அசைகின்றன என்கிறார் புலவர். நகர்த்தெருவில் நடக்கும் ஒரு விழாவின் நிகழ்ச்சிகளை, மகளிர் மாடியில் உள்ள நிலாமுற்றத்தில் நின்றவண்ணம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அப்போது அவர் முகங்களை ஆடுகின்ற அந்தக் கொடிகள் அவ்வப்போது மறைக்கின்றன. அக் காட்சி, ஓடுகின்ற மேகங்கள் மறைப்பதினால் தோன்றித்தோன்றி மறையும் திங்களைப் போன்று இருக்கிறது என்கிறார் புலவர்.
ஒரே காட்சியில் எத்தனை உவமங்கள் பாருங்கள்! கொடி அசைவதற்கு - முகம் மறைக்கப்படுவதற்கு. இங்கு சொல்லாத உவமை அந்தத் திங்கள் போன்று பெண்கள் முகம் இருப்பது. இது ஒன்றும் கற்பனை அல்ல. மதுரையின் சித்திரைத் திருவிழா சமயத்தில் இக்காட்சிகளை இன்றும் காணலாமே.
6.48 தாதுஅணி தாமரை போதுபிடித்து ஆங்கு - மது 463
திண்கதிர் மதாணி ஒண்குறு மாக்களை
ஓம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித்
தாதுஅணி தாமரைப் போதுபிடித்து ஆங்குத்
தாமும் அவரும் ஓராங்கு விளங்கக்
காமர் கவினிய பேரிளம் பெண்டிர் - மது 461-465
மதுரையின் பௌத்தப்பள்ளியில் தொழுவதற்காகக் குழந்தைகளுடன் வரும் பெண்டிரைப் பற்றிக் கூறுகிறார் புலவர் மாங்குடி மருதனார்.
திண்ணியதாய் ஒளிரும் பதக்கத்தை அணிந்த, இயல்பாகவே அழகுள்ள சிறுபிள்ளைகளைப் பேணித் தழுவி, தாம் இறுக மார்புற அணைத்து, தாது சேர்ந்த தாமரைப்பூ அதன் மொட்டைப் பிடித்தாற் போல தாமும் அம் மக்களும் ஓருருவமாய் விளங்க, ஆசைப்படும்படி அழகுபெற்ற இளமை முதிர்ந்த மகளிர் என்பது இதன் பொருள்.
ஒரு பேரிளம்பெண் மதாணி அணிந்த ஒரு சிறுகுழந்தையைத் தூக்கிக்கொண்டு பௌத்தப் பள்ளிக்கு வருகிறாள். மதாணி என்பது கழுத்தில் அணியும் பதக்கம். அந்தக் காலத்து நகைகள் கெட்டியாக இருக்கும் என்பார்கள். உங்கள் வீட்டுப் பெரியவர்களைக் கேட்டுப்பாருங்கள். எனவேதான் புலவர் திண்கதிர் மதாணி என்கிறார். திண்ணிய மதாணி, கதிர்கின்ற மதாணி எனக் கொள்ளலாம். கதிர்தல் என்பது பிரகாசித்தல். குறுமாக்கள் என்றால் சிறுவர். இங்கு கைக்குழந்தைகள். வெற்றுடம்புச் சிறுவர்களின் சிவந்த மேனி, அவர்களின் இளமை காரணமாக, ‘பளபள'வென்றிருக்கும் இல்லையா? இதையே ஒண்குறுமாக்கள் என்கிறார் புலவர். ஒள் என்பது ஒளிவிடுதலைக் குறிக்கும். புணர்ச்சி விதியால் ஒண் என்றானது. பெண்கள் கைக்குழந்தைகளை இடுப்பில் இருத்தி, ஒரு கையால் (குழந்தைகள் விழுந்துவிடாமல் பாதுகாப்பாக) இறுகப் பற்றியிருப்பார்கள். இதைத்தான் ஓம்பினர்த் தழீஇ என்கிறார். ஓம்புதல் என்பது பாதுகாத்தல். திடீரென அந்தப் பெண்ணுக்குப் பற்று மிகுகிறது. பாசம் பொங்குகிறது. இடுப்பிலிருந்து குழந்தையை எடுத்து மார்புறத் தழுவி மறுகையால் தலையை அழுத்தி இறுக அணைத்துக்கொள்கிறாள். இதனைத்தான் தாம் புணர்ந்து முயங்கி என்கிறார். புணர்தல் என்பது ஒன்றாக இணைத்துக் கொள்ளல். முயங்குதல் என்பது இரு கைகளாலும் அணைத்துக்கொள்ளல். இப்போது பெண்ணும் குழந்தையும் ஒன்றிப்போய்விடுகிறார்கள். இதனையே ஓராங்கு விளங்க என்கிறார்.
இந்த கண்ணுக்கினிய காட்சி, ஒரு மொட்டினை அணைத்து நிற்கும் தாமரை மலர் போல் இருக்கிறதாம்! தாது அணி தாமரை என்பது மலர்ந்த பூ - பெண்ணுக்கு உவமை. போது என்பது மொட்டு - குழந்தைக்கு உவமை. இவை தனித்தனியே இருக்கும். வேகமாக அடிக்கும் காற்றில் மலர்ந்த தாமரை சாய்கிறது. மலராத மொட்டு அப்படியே நிற்கிறது. தாது அணி தாமரை போதைப் பிடிக்கிறது. தாமரைப் போது என்று காணப்படினும், இதனைத் தாமரை போது என்று பிரித்துப் பொருள்கொள்ளவேண்டும்.
நாற்பது வயதைச் சற்றுத் தாண்டிய பெண்களையே பேரிளம்பெண்கள் என்பார்கள். எனவே, அப் பெண் நீண்ட நாள் குழந்தை இல்லாமல் இருந்து, தாமதமாய்க் குழந்தை பெற்று, நன்றி செலுத்தக் கோயிலுக்கு வந்திருக்கலாம். அவளுக்குக் குழந்தை மீது இவ்வளவு பாசம் உண்டாக வேறு காரணம் வேண்டுமோ? அல்லது, அந்தப் பெண் தனது பேரக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்திருக்கவேண்டும். பெண்களுக்குப் பேரன்-பேத்தி மேல் எவ்வளவு பாசம் இருக்கும் என்பதையும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. எப்படி இருப்பினும், ஒரு பாச மிக்க காட்சியை ஒரு அழகு மிக்க உவமையால் புலவர் வருணிக்கும் திறம் தின்னத்தின்னத் தித்திக்கின்றதே!
6.49. குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும் - மது 474
சிறந்த வேதம் விளங்கப் பாடி
-----------------------------------
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும் - மது 468 - 474
மதுரைநகரில் இருந்த பல்வேறு வழிபாட்டு இடங்களைக் கூறவந்த புலவர் அந்தணர்கள் தங்கியிருந்து வேதம் ஓதும் தவச்சாலையை இங்கே குறிப்பிடுகிறார்.
வேதங்களில் சிறந்தவற்றைப் பொருள்விளங்கப் ஓதி, ...., அறத்தின் வழியினின்றும் வழுவாத, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் பெரியோர்கள் நிலைகொண்டு இன்புற்று வாழும், மலையைக் குடைந்து செய்ததைப் போன்ற அந்தணர் பள்ளி என்பது இதன் பொருள்.
அந்தணர்கள் விடியும் முன்னரேயே காலை மூன்று மணி அளவில் எழுந்து வேதம் ஓதத் தொடங்குவர் என்று இதே பாடலில் வேறோரிடத்தில் புலவர் கூறுகிறார். அவர்கள் தங்கியிருக்கும் வேதசாலைகள் பாறையைக் குடைந்து செய்தாற்போல் இருப்பதாகப் புலவர் கூறுகிறார். இங்கே பள்ளி என்பது மதப்பெரியார்கள் தங்கி இறைவழிபாடு செய்யும் இடம். சங்க காலத்தில், மதுரைக்கு வெளியே உள்ள குன்றுகளில், பாறைகளுக்கு இடையே காணப்படும் குகை போன்ற இடங்களில் கல்படுக்கைகள் அமைத்துக்கொண்டு சமண, பௌத்த துறவிகள் தங்கியிருந்ததற்கான சான்றுகள் இன்றும் உள்ளன. அவற்றில் காணப்படும் கல்வெட்டுக்களில் அவை பள்ளி என்று குறிக்கப்படுகின்றன. ஆனால், அந்தணர்கள் இவ்வாறு ஊருக்கு வெளியே தங்கியிருக்கவில்லை. ஊருக்குள்ளேயே தனியிடங்களில் பள்ளிகள் அமைத்துக்கொண்டார்கள் என்று இதன் மூலம் தெரிகிறது.
முதன்முதலில் கற்குகைகளில் தங்கியிருந்த சமண, பௌத்தர்களும், பின்னர் ஊருக்குள் தவச்சாலைகள் அமைத்து வாழ்ந்தனர் என்றும் இதே பாடல் மூலம் அறிகிறோம். அந்தணர்கள் ஊருக்குள் அமைத்துக்கொண்ட வேதசாலைகள், சமணர்களின் கற்குகைகள் போல் இருந்ததாகப் புலவர் குறிப்பிடுகிறார்.
சமணர்கள் தங்கியிருந்தது இயற்கையான கற்குகைகள். ஆனால் அந்தணர்கள் அமைத்துக்கொண்டதோ மனிதர்கள் கட்டியது. எனவேதான், கல்லைக் குடைந்தது போல் என்று புலவர் கூறுகிறார். எனவே, இவை கற்குகைகள் அல்ல; அவற்றைப் போன்றவை என்பது பெறப்படும்.
ஒருவேளை இந்த அந்தணர் பள்ளிகள் முழுவதும் கற்களால் கட்டப்பட்டு, கல்தூண்களால் தாங்கப்பட்டதாக இருந்திருக்கலாம். அல்லது, இயற்கைக் குகைகளைப் போல் சிறிய நுழைவாயிலைக் கொண்டவையாக இருந்திருக்கலாம். எப்படியிருப்பினும், தொலைவிலிருந்து பார்க்கும்போது பெரிய பாறையைக் குடைந்து செய்யப்பட்டதைப் போல் இருந்திருக்கவேண்டும்.
6.50. கல்பொளிந்து அன்ன இட்டுவாய்க் கரண்டை - மது 482
சான்ற கொள்கை சாயா யாக்கை
ஆன்றடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்மார்
கல்பொளிந்து அன்ன இட்டுவாய்க் கரண்டை
பல்புரி சிமிலி நாற்றி ........... - மது 482,483
இந்த அடிகளில் புலவர் ஊருக்குள் அமைந்த சமணர் பள்ளிகளைப் பற்றிக் கூறுகிறார்.
சிறந்த நோன்புகளையும், அவற்றால் இளைத்துப்போகாத உடம்பினையும், கற்றுத்தேர்ந்து அடங்கிய அறிவினையும் உடையவர்கள் நிறைந்திருந்து நோன்புமேற்கொள்வதற்கு, கல்லைக் கொத்தித் துளையிட்டாற் போன்ற ஒடுங்கிய வாயையுடைய குடுக்கைகளை, பல புரிகளைக் கொண்ட நூல் உறியில் தொங்கவிட்டு என்பது இதன் பொருள்.
பொளிதல் என்பது கருங்கல்லைச் சிற்றுளியால் கொத்துதல், கொத்திக்கொத்தித் துளையிடுதல் என்ற பொருள் தரும். இட்டு என்பது குறுகிய என்ற பொருளைத் தரும். நோன்புகளை ஆசரிப்போர் புனிதநீர் வைத்துக்கொள்வதற்காகக் குறுகிய வாயுள்ள ஒரு பாத்திரம் வைத்திருப்பர். அது கமண்டலம், குண்டிகை, கரண்டை, கிண்டி, கெண்டி என்றெல்லாம் அழைக்கப்படும். சிமிலி என்பது உறியைக் குறிக்கும். இது பெரும்பாலும் உறுதியான கயிற்றால் செய்யப்பட்டிருக்கும். உறுதியான நார் அல்லது நூலைப் பல புரிகளாக ஆக்கி அவற்றை முறுக்கி இக் கயிற்றைச் செய்வார்கள். இதுவே இங்கு பல் புரி சிமிலி எனப்படுகிறது. இதனை உயரமான ஓர் இடத்தில் கட்டித் தொங்கவிட்டிருப்பார்கள். அக்காலத்தில் இதில் வெண்ணெய், தயிர் போன்றவற்றைக் கொண்ட மண்பாண்டங்களை அடுக்கி வைத்திருப்பர். (பார்க்க - படம் 4) இத்தகைய நூலுறியில் சமணத் துறவிகள் தங்கள் கமண்டலங்களை வைத்திருந்தனர். நாற்றி என்பது நால் அல்லது நாலு என்ற வினைச்சொல்லை அடியாகக் கொண்டது. இதற்குத் தொங்கு அல்லது தொங்கவிடு என்ற பொருள்.
புரி என்பது முறுக்கிச் செய்யப்பட்ட ஒரு கயிற்றின் பகுதி. ஒரே நீளமுள்ள நான்கு நூல்களை எடுத்து, அவற்றைச் சேர்த்து முறுக்கிக் கயிறாகத் திரியுங்கள். இப்பொழுது அந்த நூல்கள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு கயிறுக்கு வலிமை சேர்க்கும். இங்கு ஒவ்வொரு நூலுமே ஒரு புரி எனப்படும். அந்தணர்கள் தம் பூணூலுக்கு மூன்று புரிகள் கொண்டிருப்பர். எனவேதான் அவர்களின் பூணூல் முப்புரி எனப்படுகின்றது.
இங்குள்ள படத்தில் ஐந்து கயிறுகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் இரண்டு புரிகள் கொண்டிருப்பதைக் காண்பீர்கள். கொஞ்சம் உற்றுப்பார்த்தால் அந்த ஒவ்வொரு புரியுமே இரண்டு புரிகளால் ஆனது என்று தெரியும். இவ்வாறு பல புரிகளைக் கொண்டிருக்கும்போது கயிறு மிக வலிமையடைகிறது. தென்னை மிகுதியாக விளையும் இடங்களில் தென்னைக் காயின் மேலோட்டை அடித்து நசுக்கி நார் எடுத்து அதை முறுக்கிப் புரியாக்கிக் கயிறு செய்வார்கள். இதுவே coir எனப்படுகிறது. அது நமது கயிறுதான்! உழவர்கள் நெல் அறுவடை முடிந்த பின்னர், பச்சை வைக்கோலைத் திரித்துப் புரியாக்கிக் கயிறு செய்வார்கள். இதை வைத்துத்தான் மீதமுள்ள வைக்கோலைக் கட்டுக்கட்டாகக் கட்டுவார்கள். இதுவே வைக்கோல்புரி. நாட்டுவழக்கில் வக்கெப்பிரி எனப்படும். இதே வடிவமைப்பில்(design) தங்கக் கம்பிகளால் செய்யப்பட்ட சங்கிலியைத்தான் வக்கெப்பிரி செயின் என்கிறார்கள்.
பலபுரிகளால் ஆன நூல்கயிறினால் செய்யப்பட்ட உறியையே பல் புரி சிமிலி எனப் புலவர் கூறுகிறார்.
தன் இளமைக் காலத்தில் பலவிதத் திறன்களினால் முறுக்கேறி இருந்த தன் கட்டுடல், வயதானபோது எல்லாத் திறன்களும் மழுங்கி இற்றுப்போய், தேய்ந்துவிட்ட புரிகளைக் கொண்ட பழங் கயிறு போல் ஆகிவிட்டதே என்று வருந்தும் பாடலை இயற்றிய ஒரு சங்கப்புலவர் தேய்புரிப்பழங்கயிற்றினார் என்றே அழைக்கப்படுகிறார்.
6.51. கயம் கண்டு அன்ன வயங்கு உடை நகரத்து - மது 484
6.52. செம்பு இயன்று அன்ன செம் சுவர் புனைந்து - மது 485
மேலே கண்ட சமணர் பள்ளியின் வருணனையின் தொடர்ச்சியாக, இந்த அடிகளும் அதனையே வருணிக்கின்றன.
குளிர்ச்சியால் குளத்தைக் கண்டது போன்ற, ஒளிர்வுடைய கோயிலில், செம்பினால் செய்ததைப் போன்ற செம்மையான சுவர்களை அலங்கரித்து என்பது இதன் பொருள்.
நமது கோயில்களில் சிலவற்றில் நுழைந்தவுடனே ‘சில்'லென்ற காற்று முகத்தில் மோத, கோயிலுக்கு வெளியில் இருந்த வெப்பம் மிகவும் குறைந்து குளிரூட்டப்பட்ட அறைக்குள் நுழைந்தது போல் உணரலாம். கோயில்களின் சாளர அமைப்பு இயல்பான காற்றியக்கத்துத் துணைபுரிய, அவற்றின் சுவர்களின் அமைப்பும், உயரமும் வெளியில் இருக்கும் வெப்பத்தை மிகுதியாகக் குறைத்துவிடுவதுதான் இதற்குக் காரணம். அன்றைக்குக் குளிரூட்டல் (air condition) இல்லையே! அதனால்தான் கோயிலுக்குள் உழைந்தவுடன் குளிர்ந்த குளத்தை அருகிருந்து பார்த்தது போன்று இருப்பதாகப் புலவர் கூறுகிறார். காணுதல் என்பதற்குப் பலவிதமாகப் பொருள் கொள்ளலாம்.
1. எல்லாச் சிக்கல்களுக்கும் தீர்வு காண முடியும்.
2. அந்தப் போரில் அவன் மாபெரும் வெற்றியைக் கண்டான்.
3. மன்னனின் சினத்தைக் கண்டு மக்கள் கலங்கினர்.
4. பறவையைக் கண்டான், விமானம் படைத்தான், பாயும் மீன்களில் படகினைக் கண்டான்.
இந்த இடங்களில் எல்லாம் காண்-கண்டு என்பது வெவ்வேறு பொருள்களைத் தருவது தெரியும்.
“உன்னைப் பார்த்தது கடவுளையே பார்த்தது போல் இருக்கிறது” என்று சொன்னால், இனிமேல் எனக்குக் கவலை இல்லை; கடவுளிடத்திலிருந்து கிடைக்கக்கூடிய நன்மைகள் எல்லாம் உன்னிடத்திலிருந்தும் கிடைக்கும் என்பதுதானே பொருள்!
எனவே, கயம் கண்டன்ன என்ற இடத்தில், கயத்திலிருந்து கிடைக்கக்கூடிய நன்மைகள் எல்லாம் (குளிர்ச்சி, இனிமை, காற்றோட்டம் போன்றவை) அந்தக் கோயிலுக்குள்ளும் இருந்தன என்றுதான் பொருள்படும்.
கயம் என்பது நீருள்ள குளம்தானே! நீர் என்றால் அதில் செடி, கொடிகள் இருக்கும்; அவற்றில் பூக்கள் பூத்துக் குலுங்கும்; அவற்றின் நிறங்கள் நம் சிந்தையை மகிழச்செய்யும்; சுற்றிலும் புல்வெளி இருக்கும்; அதன் பசுமை கண்ணையும் மனத்தையும் களிக்கச் செய்யும். மரங்கள் வளர்ந்து நிற்கும்; அவற்றில் உள்ள பறவைகளின் ‘கீச்சுக்கீச்சுகள்' காதையும் நெஞ்சையும் இனிக்கச் செய்யும்; மொத்தத்தில் ஒரு பிரகாசமான, பரவசமான சூழ்நிலையை உணர்வோம். இதைத்தான் புலவர் வயங்கு உடை நகரம் என்கிறார். வயங்குதல் என்பது பொலிவுபெறுதல் என்ற பொருள் தரும். இங்கு அது பெயர்ச்சொல்லாகி பொலிவு (radiance) என்ற பொருள் தரும். இங்கே நகரம் என்பது சமணர்களின் கோயிலை.
இக் கோயிலின் சுவர்கள் செம்பினால் செய்தது போல் இருந்ததாகப் புலவர் கூறுகிறார். நிறத்தினாலோ, வழுவழுப்பினாலோ கோயில் சுவர்கள் செம்பைப் போல இருந்திருக்கலாம்.
மேலே காணப்படும் முதல் படத்தில் உள்ளது ஒரு சமணக் கோயில். ஆந்திர மாநிலத்தில், நளகொண்டா மாவட்டத்தில், கோலன்பாக்கு (குல்பாக்கு) என்ற இடத்தில் உள்ளது. 2500 ஆண்டுகள் பழமையானது. அண்மையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய சங்க காலத்தியது. இப்படி ஒரு கோயில் மதுரையிலும் அன்று இருந்திருக்கவேண்டும். இதன் சுவர்கள் செம்பு போன்ற நிறமுள்ள கற்களால் கட்டப்பட்டவை. அடுத்த படத்தில் செம்புத் தகடு உள்ளது. அதன் நிறத்தை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். நமது சங்கப் புலவர்கள் இல்லாததைச் சொல்லவில்லை என்பதற்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?
படத்தில் காணப்படும் கோயிலின் சுவர்களும், கோபுரங்களும் வெறுமையாய் இராமல், பலவிதச் சிற்ப வேலைப்பாடு மிக்கனவாய் இருக்கக் காணலாம். இதைத்தான் புலவர் செஞ்சுவர் புனைந்து என்று கூறுகிறார். புனைதல் என்பது அலங்கரித்தல் என்ற பொருள் தரும்.
செம்பு உலோகத்தில் வீட்டுப் பாத்திரங்கள் இருந்ததுண்டு. தண்ணீர் நிரப்பிக்கொள்ள பானைகள், குடங்கள் ஆகியவை இருக்கும். அவற்றைச் செப்புப்பானை, செப்புக்குடம் என்பர். இன்றைக்கு அவற்றை வைத்திருப்பார் அரிது. கைகால் கழுவவும், நீர் குடிக்கவும் சிறிய பாத்திரங்கள் இருக்கும். அவற்றைச் செம்பு என்றே அழைப்பார்கள். இன்றைக்கும் வேறு உலோகத்தில் உள்ள அத்தகைய பாத்திரங்களைச் செம்பு அல்லது சொம்பு என்றே அழைக்கிறோம். அஸ்தி எடுத்துச் செல்லவும் செம்பைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அதனைக் கலசம் என்கிறோம். செம்பு, பித்தளை எல்லாம் போய், பின்பு எவர்சில்வர் வந்து, அதுவும் போய், இப்பொழுது பிளாஸ்டிக் ஆட்சி செய்கிறது.
6.53 குன்றுபல குழீஇப் பொலிவன தோன்ற - மது 488
மழுவாள் நெடியோன் தலைவன் ஆக --
சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும் ---
குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும் ---
இறும்பூது சான்ற நறும்பூஞ் சேக்கையும்
குன்றுபல குழீஇப் பொலிவன தோன்ற - மது 455, 467, 474, 487-488
அனைத்து வழிபாட்டு இடங்களும் மலைகள் பலவும் திரண்டு பொலிவன போலத் தோன்ற என்பது இதன் பொருள்.
மதுரை நகரில் நெடியோன் கோவிலும், பௌத்தப் பள்ளியும், அந்தணர் பள்ளியும், அமண் பள்ளியும் அடுத்தடுத்து இருக்கும் காட்சி, குன்றுகள் பல ஒன்றுகூடிப் பொலிவுற்று இருந்ததைப் போல் இருந்தது என்கிறார் புலவர்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அன்புடையீர்,அனைவருக்கும் வணக்கம்.பின்னூட்டம் இட்ட சுபா அம்மை, அரங்கன், தேமொழி, கணேசன் ஆகியோருக்கு மிக்க நன்றி. படித்துப் பார்த்த அனைவருக்கும் மிக்க நன்றி.இத்துடன் அடுத்த சில உவமைகள் காட்சிப்படங்களுடன் வெளிவருகின்றன.ப.பாண்டியராஜா
6.41. மணிதொடர்ந்து அன்ன ஒண்பூங் கோதை - மது 438
மணிதொடர்ந்து அன்ன ஒண்பூங் கோதை
அணிகிளர் மார்பில் ஆரமொடு அளைஇ - மது 438,439
முற்கூறிய செல்வர்கள் அணிந்திருந்த பூமாலையையும் முத்து மாலையையும் பற்றி இங்கு புலவர் குறிப்பிடுகிறார்.
மாணிக்கத்தைத் தொடுத்தாற் போன்ற ஒளிவிடும் பூ மாலையினை அழகு விளங்கும் மார்பிற் கிடக்கின்ற முத்துமாலையோடே கலந்து அணிந்து என்பது இதன் பொருள்.
இங்கே என்ன பூ என்று சொல்லப்படாவிடினும், செங்கழுநீர்ப் பூ என்றே கொள்ளப்படுகிறது. மணி என்பதுவும் ஏதேனும் ஒரு விலையுயர்ந்த கல்லையே குறிக்கும். பெரும்பாலும் இது சிவந்த மணி என்ற பொருளில் மாணிக்கக்கல்லைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. பொதுவாகக் கோதை என்பது பெண்கள் அணியும் மாலையைக் குறிக்கும். ஆனால் இங்கு ஆண்கள் அணிந்திருந்ததாகப் புலவர் குறிப்பிடுகிறார். சங்க கால ஆடவர் கழுத்தில் பூமாலையும், முத்துமாலையும் அணிந்திருந்தனர் என்று புலவர் வாயிலாக அறிகிறோம். இன்றைக்குப் பெரும்பாலான ஆண்கள் தங்கநகைகள் அணிந்துகொள்வதில்லை. இருப்பினும் சிலர் மோதிரம், breacelet, கழுத்தில் சங்கிலி போன்றவற்றை அணிந்துகொள்வதுண்டு. இது நெடுநாளாகத் தொடர்ந்துவரும் பழக்கம் போலும்.
ஒண்குழை திகழும் ஒளிகெழு திருமுகம் ... நிரைநிலை மாடத்து அரமியம் தோறும்
--
...
அன்புடையீர்,
ஏறக்குறைய இரண்டு ஆண்டுகட்கு முன்னர் நான் எழுதி முடித்த புத்தகம் இது. பத்துப்பாட்டில் உள்ள அனைத்து உவமைகளையும் தனித்தனியாக எடுத்து, உயர்நிலைப் பள்ளியில் செய்த ERC முறையில் படங்களுடன் கூடிய விளக்கங்கள் கொண்டது இந்நூல். பத்துப்பாட்டில் நான் கண்டவை 496 உவமைகள். இன்னும் சில விட்டுப்போயிருக்கலாம். இந்த 500 உவமைகளையும் நாள் ஒன்றுக்கு ஒன்றாக இங்கு வெளியிட எண்ணியுள்ளேன். ஆம்! நாளும் ஓர் உவமை. சில உவமைகள் தொகுப்பாகக் கணக்கிடப்பட்டிருப்பதால் ஓராண்டுக்கும் மேலாக இத் தொடர் வரலாம். இதனால் எனக்கு மூன்று நன்மைகள்.1.புத்தக அலமாரியில் புழுதிபடிந்து கிடக்கும் இப் புத்தகம் இனி தூசி நீங்கியிருக்கும்.2. எனக்கே மறந்துபோனவற்றை நான் மீண்டும் படிக்க ஒரு வாய்ப்பு.3. திருத்தங்கள் தேவைப்பட்டால் மாற்றி எழுதலாம்.ஆனால், புதிதாய்ச் செய்யவேண்டிய பணிகள் ஏராளமாய் முன்னே குவிந்திருக்க, ஏற்கனவே செய்தவற்றை இன்னுமொரு முறை எடுத்துப் பார்க்க நேரமில்லை. எனவே, நான் இதற்கென்று மிகக் குறுகிய காலமே ஒவ்வொருநாளும் செலவிட முடியும்.இதில் ஒரு முக்கிய இடர்ப்பாடு - கட்டுரைகளை நான் TSCII Font - (TSC Times) -இல் எழுதியுள்ளேன். இத்னை UNICODE -க்கு மாற்ற முடியும். ஆனால் நான் முன்னர் சொன்னது போல எனக்கு அதற்கு நேரமில்லை. எனவே வெளியிடப்படும் ஒவ்வொரு பகுதியும் ..pdf fomat -இல் வெளிவரும். இதற்கு எனக்கு மிகக் குறுகிய காலமே தேவைப்படுகிறது.
முதலில், இந்த்ப் புத்தகத்தின் முதல் ஒரு சில பக்கங்கள் வெளியிடப்படுகின்றன. இவை எனது நோக்கத்தை வெளிப்படுத்தும்.
நன்றி,அன்புடன்,
மதுரைக்காஞ்சி – உவமைக் காட்சிகள்
54 முதல் 62 வரை
மதுரைக்காஞ்சியில் உள்ள 96 உவமைகளையும் பாடலின் தொடக்கத்திலிருந்து வரிசையாகத் தொகுத்துக் கூறும் கட்டுரைகளில் இது ஐந்தாவது ஆகும்.
மதுரைக்காஞ்சியைப் பாடிய புலவர் மாங்குடி மருதனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சிறப்பைக் கூறி அவனை வாழ்த்துகிறார். அவனுடைய வெற்றிகளை எல்லாம் புகழ்ந்து கூறும் புலவர் உலகில் நிலையான புகழைத் தருவது அறவழியில் ஆட்சிசெய்தலே என்று அறிவுறுத்துகிறார்.
முதலில் பாண்டியனின் முன்னோர்களின் சிறப்பை விதந்தோதுகிறார் புலவர். அடுத்து மன்னனின் பல்வித வெற்றிகளைப் பாராட்டி மகிழ்கிறார். பின்னர் பாண்டிய நாட்டின் பல்வகை வளங்களைச் சிறப்பித்துக் கூறுகிறார். அடுத்து மதுரைமாநகருள் நம்மை அழைத்துச் செல்லும் புலவர், நகரின் பல்வேறு பகுதிகளை உவமை நயத்துடன் விவரித்துக்கூறுகிறார்.
6.54. ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி - மது 491
அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி
490 செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி
சிறந்த கொள்கை அறங்கூறவையமும் – மதுரைக்காஞ்சி
மதுரை நகரின் நீதிமன்றத்தின் செயல்முறையை இவ்வாறு புலவர் விளக்குகிறார். அன்றைக்கு இது அறம் கூறும் அவையம் என்ற பொருளில் அறங்கூறவையம் எனப்பட்டது.
அச்சமும், அவலமும், ஆர்வமும் நீக்கி, செற்றமும் உவகையும் செய்யாது காத்து, துலாக்கோலைப் போன்ற நடுநிலையை உடைவராய் அந்த அவையத்தார் இருந்தனர் என்று புலவர் கூறுகிறார்.
இக் கூற்றுக்கு இரண்டுவிதமாகப் பொருள் கொள்ளலாம். அறங்கூறுவோர், வழக்காடுபவரைப் பார்த்து அச்சம் கொள்ளக்கூடாது. அவர்களைப் பார்த்து அனுதாபம் கொள்ளக்கூடாது. அவர்கள் கொணரும் வழக்கின்மேல் ஆர்வமும் கொள்ளக்கூடாது. இந்த மூன்றையும் நீக்கிவிட்டுத்தான் அவர்கள் அவைக்கு வரவேண்டும் என்கிறார் புலவர். இந்த மூன்றையும் அவையத்தார் நீக்கவேண்டும்.
வழக்காடுபவர் உள்ளத்தில் இந்த அவையில் நீதி கிடைக்குமா கிடைக்காதா என்ற அச்சம் எழலாம். வழக்காடுபவர் ஒருவர் தோற்கும்போது அவர் நெஞ்சில் அவலம் தோன்றலாம்.. வழக்குப்பொருள்மேல் அவர்கள் நியாயமற்ற விருப்பைக் கொண்டிருக்கலாம். இந்த மூன்றனையும் வழக்காடுவோர் உள்ளத்தினின்றும் நீக்கவேண்டும் என்றும் இதற்குப் பொருள்கொள்ளலாம்.
அதே நேரத்தில் அவையத்தார் வழக்காடுபவரின்மேலோ, வழக்கு மேலோ, வழக்குப்பொருள்மீதோ வெறுப்போ, விருப்போ கொள்ளவும் கூடாது.
இப்படித்தான் இருந்தது மதுரைநகரின் அறங்கூறவையம் என்கிறார் மாங்குடி மருதனார். அதாவது பொருளைப் பொருத்தோ, தூக்கிப் பிடிப்பரின் கைகளைப் பொருத்தோ தராசு எடை சொல்வதில்லை அல்லவா அதைப் போல.
சமன் செய்து சீர்தூக்கும் கோல் என்பதே ஞெமன்கோல் எனப்படுகிறது. இதை நாம் தராசு என்கிறோம்.
இன்றைக்கும் காய்கறி, பழம் விற்போர், பழைய செய்தித்தாள் வாங்குவோர் ஆகியோர் தராசுகளைப் பயன்படுத்துகின்றனர். இடது தட்டில் எடைக்கற்களை வைத்து, வலதுதட்டில் பொருள்களை ஒவ்வொன்றாக வைத்து, குறுக்குச் சட்டத்தை ஒரு பக்கமும் சாயாமல் கிடைநிலைக்குக் கொண்டுவருவர். அப்போது சட்டத்தின் நடுவில் உள்ள முள் சாயாமல் செங்குத்தாக நிற்கும். அப்போது உள்ள எடையே பொருளின் சரியான எடை.
நீதிமன்றத்தில் எப்போதும் இரண்டு கட்சியினர் வாதாடுவர். அவருடைய வாதங்களை சமநிலையில் ஏற்றுக்கொண்டு, அவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து, எவர் பக்கமும் சாயாமல், இரண்டு பக்கத்தாருக்கும் சமமான நிலையில் தீர்ப்பு வழங்குவது அவையத்தார் கடமை. அவ்வாறு எவர் பக்கமும் சாயாமல் இருப்பதுவே கோடாமை எனப்படும். கோடுதல் என்றால் வளைதல் என்று பொருள். இந்தக் கோடாமையே சான்றோர்க்கு அணி என்று திருவள்ளுவர் கூறுகிறார். இவ்வாறு கோடாத அறங்கூறவையம் அன்றைய மதுரையில் செயலாற்றியதாகப் புலவர் கூறுகிறார்.
பலவகையான எண்முறைத் தராசுகள் (digital scale) வந்துவிட்ட பின்னர், இன்னும் சற்றுக் காலத்தில் இதனைப் பார்க்கமுடியாது.
6.55. மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல - மது 495
நறும்சாந்து நீவிய கேழ்கிளர் அகலத்து
ஆவுதி மண்ணி அவிர்துகில் முடித்து
மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல
நன்றும் தீதும் கண்டுஆய்ந்து அடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்து
பழிஒரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும் - மது 493-499
நற்பண்புகள் கொண்ட சான்றோர்க்கு அரசன் காவிதி என்ற பட்டம் வழங்குவது அன்றைய மரபு. அப்படிப்பட்ட காவிதி மக்களைப் பற்றி இங்கு புலவர் கூறுகிறார்.
மணமுள்ள சந்தனத்தை மார்பில் பூசியவராய், வேள்விகள் செய்து, ஒளிரும் துகிலில் தலைப்பாகை அணிந்து, அகன்ற விசும்பில் நடமாடும் பெரியோர் போல, நன்மையையும் தீமையையும் நன்கு கண்டு ஆய்ந்தும் அடக்கத்துடன் இருந்து, அன்பையும் அறத்தையும் ஒழியாது காத்து, பழி எனச் சொல்வதை வெறுத்து, எங்கும் பரவிய புகழ் நிறைந்தவராய், செம்மையான சான்றாண்மை நிறைந்த காவிதி மக்களும் என்பது இதன் பொருள்.
அன்றைய காவிதி மக்களைப் புலவர் அப்படியே நம் கண் முன்னர் கொண்டுவந்து நிறுத்துகிறார் பார்த்தீர்களா! அவர்களின் புறத்தோற்றத்தை உவமைக்கு முன்பும், அக இயல்பை உவமைக்குப் பின்பும் அடுக்கிக் கூறும் மாண்பு வியந்து போற்றத் தகுந்தது இல்லையா?
6.56. குறும் பல் குழுவின் குன்று கண்டு அன்ன - மது 501
குறும்பல் குழுவின் குன்று கண்டுஅன்ன
பருந்துஇருந்து உகக்கும் பன்மாண் நல்இல் - மது 501,502
மதுரைநகரின் வணிகர்தெருவில் உள்ள வணிகரின் வீடுகளை இவ்வாறு புலவர் வருணிக்கிறார்.
நெருக்கமாயமைந்த பல தொகுதிகளாக உள்ள குன்றுகளைப் பார்த்ததைப் போன்ற, பருந்து அமர்ந்திருந்துவிட்டு பின்னர் உயர்ந்து எழும் பலவிதமான சிறப்புகள் கொண்ட நல்ல இல்லங்கள் என்பது இதன் பொருள்.
அக்காலத்தில் செல்வர் மனைகளில் மதில்களின் மேல் மாடங்கள் அமைத்திருப்பர். வீட்டின் மேற்பகுதியில் அரைக் கோள வடிவிலான அமைப்புகள் (domes) கட்டியிருப்பர். இம் மாடங்களும் கோளங்களும் தொலைவில் இருந்து பார்ப்பவர்க்கு, அடுத்தடுத்து அமைந்திருக்கும் பாறைமலைகளின் உச்சிகளைப் போல் இருப்பதாகப் புலவர் கூறுகிறார்.
இந்த மாடங்கள், கோளங்கள் ஆகியவை மிக உயரத்தில் அமைந்திருப்பதால், வானத்தில் பறந்துகொண்டிருக்கும் பருந்துகள் இளைப்பாறிக்கொள்வதற்காக அவ்வப்போது அவற்றின் உச்சியில் அமர்ந்து செல்லும் என்கிறார் புலவர்.
6.57. நான்மொழிக் கோசர் தோன்றி அன்ன - மது 509
மழைஒழுக்கு அறாஅப் பிழையா விளையுள்
பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றி அன்ன
தாம்மேஎந் தோன்றிய நாற்பெருங் குழுவும் - மது 507 - 510
பாண்டியன் அரசவையில் இருந்த பல்வேறு குழுக்களைப் பற்றிக் கூறவந்த புலவர், முதலில் அறங்கூறவையத்தைப் பற்றிக் கூறினார். இக்குழுவில் பெரும்பாலும் மன்னனின் அமைச்சர்கள் இருப்பர். இங்கு கூறப்பட்டுள்ள நாற்பெருங்குழுவில் மதத்தலைவர்கள், படைத்தலைவர்கள், தூதர், ஒற்றர் ஆகியோர் இருப்பர்.
மழைபெய்தல் அற்றுப்போகாததால், தவறாத விளைச்சலை உடைய, பழையன் என்னும் குறுநிலத்தலைவனின் ஊராகிய மோகூரில் உள்ள அரசவை சிறந்துவிளங்கும்வகையில் நான்மொழிக்கோசர் என்பார் வீற்றிருந்தாற் போன்ற, தமது ஒழுக்கத்தால் தாம் மேலாய் விளங்கும் நாற்பெருங்குழுவும் என்பது இதன் பொருள்.
பழையன் என்பவன் கொங்குநாட்டைச் சேர்ந்த குறுநில மன்னன் என்றும், கோசர்களுக்குத் தலைவன் என்றும், பாண்டிய மன்னனுக்கு அடங்கிய மரபினன் என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன. இவனுக்கு மாறன் என்ற சிறப்புப்பெயரும் இருப்பதால் இவன் பாண்டியகுலத்தைச் சேர்ந்தவன் என அறியப்படும்.
இவனது அரசவையில் நாற்பெருங்குழுவினராயிருந்த கோசர்கள் அறிவுத்திறத்தில் மிகச் சிறந்து விளங்கியவராய் இருந்திருத்தல்வேண்டும். இவர்கள் நால்வேறு மொழிகளைப் பேசக்கூடிவர்களாயிருந்ததினால், நான்மொழிக் கோசர் எனப்பட்டனர் என்று கூறுவர்.
கொங்குநாடு என்பது இன்றைய கோயம்புத்தூர், ஈரோடு பகுதிகளைக் கொண்ட நிலப்பரப்பாகும்.
இங்கு பழையன் அல்லது பழையன் மாறன் என்ற சொற்கள் பத்துப்பாட்டில் வேறு எந்த நூலிலும் காணப்படவில்லை. ஆனால், இதே சொல் மதுரைக் காஞ்சியில் மீண்டும் ஒருமுறை வருவதைக் காண்கிறோம்.
பெரும்பெயர் மாறன் தலைவன் ஆக
கடந்து அடு வாய் வாள் இளம் பல் கோசர் - மது 772, 773
பழையன் என்ற சொல் எட்டுத்தொகையில் நற்றிணையிலும், அகநானூற்றிலும் காணக்கிடக்கிறது. இவற்றில் இவனது வேல்படை, வில்படை, யானைப்படை ஆகியவை மிகவும் சிறப்பித்துக் கூறப்படுகின்றன.
பழையன் வேல் வாய்த்து அன்ன நின் - நற் 10/8
பருந்து பட பண்ணி பழையன் பட்டு என - அகம் 44/11
மாரி அம்பின் மழை தோல் பழையன் - அகம் 186/15
பழையன் ஓக்கிய வேல் போல் - அகம் 326/12
இழை அணி யானை பழையன் மாறன் - அகம் 346/19
கோசர் என்ற சொல்லும் பத்துப்பாட்டில் வேறு எந்த நூலிலும் காணப்படவில்லை. ஆனால், எட்டுத்தொகையில் குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் இச் சொல் மிகுதியாகக் காணப்படுகிறது. இவ் எல்லா இடங்களிலும் இவர்கள் மிகவும் சிறப்பித்தே கூறப்படுகின்றனர்.
நால் ஊர் கோசர் நன் மொழி போல - குறு 15/3
ஒன்றுமொழி கோசர் போல - குறு 73/4
மெய்ம் மலி பெரும் பூண் செம்மல் கோசர் - அகம் 15/2
கரும் கண் கோசர் நியமம் ஆயினும் - அகம் 90/12
காப்பு கைந்நிறுத்த பல் வேல் கோசர் - அகம் 113/5
ஒன்றுமொழி கோசர் கொன்று முரண் போகிய - அகம் 196/10
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி - அகம் 205/9
பல் இளம் கோசர் கண்ணி அயரும் - அகம் 216/11
துனை கால் அன்ன புனை தேர் கோசர் - அகம் 251/7
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின் - அகம் 262/6
இளம் பல் கோசர் விளங்கு படை கன்_மார் - புறம் 169/9
வலம் புரி கோசர் அவை களத்தானும் - புறம் 283/6
நனை கள்ளின் மனை கோசர் - புறம் 396/7
மோகூரைப் பற்றியும் பத்துப்பாட்டில் வேறு குறிப்புகள் இல்லை. எட்டுத்தொகையில் பதிற்றுப்பத்தில் இரண்டுஇடங்களிலும், அகநானூற்றில் ஓர் இடத்தில் மட்டும் மோகூர் குறிப்பிடப்படுகிறது.
மோகூர் மன்னன் முரசம் கொண்டு - பதி 44/14
மொய்வளம் செருக்கி மொசிந்துவரும் மோகூர் - பதி 49/8
தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியாமையிற் பகைத்தலைவந்த
மாகெழுதானை வம்பமோரியர்
புனைதேர்நேமி உருளியகுறைத்த - அகம் 251/10-13
6.58. தெண்திரை அவிர்அறல் கடுப்ப ஒண்பல் - மது 519
தெண்திரை அவிர்அறல் கடுப்ப ஒண்பல்
குறியவும் நெடியவும் மடிதரூஉ விரித்து
சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ - மது 519-521
மதுரை நகரின் வணிகர் தெருவில் துணி விற்கும் நெசவாளர்களைப் பற்றிய செய்தி இது.
தெளிந்த ஓடைநீரில் பளபளக்கும் கருமணலை ஒப்ப, ஒளிருகின்ற பற்பல சிறியனவும் பெரியனவுமாகிய மடிப்புடைவைகளைக் கொண்டுவந்து விரித்து, சிறியோரும் பெரியோருமாகிய நெசவாளர்கள் திரண்டு என்பது இதன் பொருள்.
பெருக்கெடுத்தோடும் காட்டாற்றில், வெள்ளம் வடிந்த பின்னர், சிறிதளவு தெளிந்த நீர் ‘சலசல'வென்று ஓடிக்கொண்டிருக்கும். வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது மணலைப் புரட்டியெடுத்துக்கொண்டு ஓடும். அப்போது எழும் மேடு பள்ளங்களைத் தழுவிக்கொண்டு, பின்னர் தெளிந்த நீர் ஓடும்போது, அந்த மணல் அலை அலையான பரப்பாக மாறும். கல் பொருது இறங்கும் மல்லல் பேரியாற்றின் மணற்படுக்கையில், கருங்கல்லின் கரிய துகள்கள் மணலுடன் கலந்திருக்கும். இதுவே அறல் எனப்படுகிறது. அலை அலையாகப் படிந்திருக்கும் இந்தக் கருமணல், பெண்களின் அலை அலையான கருங்கூந்தலுக்கு உவமிக்கப்படும். அறல் போல் கூந்தல் என்பர். இந்த அறலை ஒளிவிடும் அறல் என்கிறார் புலவர். அவிர் அறல் என்பதில் அவிர் என்பது ஒளிவிடுதல் என்ற பொருள் தரும். புலவர் குறிப்பிடுவது வெயிலில் காய்ந்துபோன அறல் அல்ல. தெளிந்த நீருக்குள் தெரியும் அறல். தெண்டிரை அறல் என்கிறார் புலவர். தெள்+திரை தெண்டிரை ஆனது. தெளிந்த நீருக்குள் தெரியும் கருமணல் பளபளவென்று மின்னுகிறது.
மேலும், ஆற்று நீர் தெளிவாக ஓடும்போது நெளிந்து நெளிந்து ஒரு சிறு ஓடையாக ஓடும். ஆற்று வெள்ளம் தன்னுடன் தங்கத் துகள்களையும் தள்ளிக்கொண்டு வரும். அங்கங்கே ஆற்றோரம் அவை படிந்திருக்கும். இன்றைக்கும் சில ஆற்றங்கரைகளில் இப்படிப்பட்ட மணலைக் கொழித்துக்கொழித்து இந்தத் தங்கத் துகள்களைச் சேமிப்பார் உண்டு. தெளிந்த நீர்வழியே உள்ளே செல்லும் கதிரவனின் கதிர்களினால் பொன்துகள் கலந்த கருமணல் தகதகக்கிறது. இதையே புலவர் தெண்திரை அவிர்அறல் என்கிறார். இந்த அறலைப் போன்று மதுரை நகர்த் தெருக்களில் பட்டுப் புடவைகள் விரித்துக்கிடந்தனவாம். புடவைகள் தரையில் விரித்துக் கிடக்கும் போது அலை அலையாக எழுந்தும் விழுந்தும் கிடக்கும் அல்லவா? பிற்பகல் வெயிலில் இந்தப் புடவைகளில் இருக்கும் சரிகை மின்னும் அல்லவா? இவற்றுக்குத் தெண்திரை அவிர்அறல் எத்துணை பொருத்தமான உவமை!
ஈராயிரம் ஆண்டுகட்குப் பின்னர் பாரதியார் பாடிய பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம் என்ற அடி நினைவுக்கு வரவில்லையா?
6.59 விழைவுகொள் கம்பலை கடுப்ப பலஉடன் - மது 526
கொடும்பறைக் கோடியர் கடும்புடன் வாழ்த்தும்
தண்கடல் நாடன் ஒண்பூங் கோதை
பெருநாள் இருக்கை விழுமியோர் குழீஇ
விழைவுகொள் கம்பலை கடுப்பப் பலஉடன் - மது 523-526
மதுரை நகரின் நான்கு தெருக்களிலும் நெருக்கியடித்துக்கொண்டு பலவிதப் பொருள்களை விற்கும் வாணிகர், தொழிலாளர் ஆகியோர் எழுப்பும் இரைச்சலைப் பற்றிய கூற்று இது.
வளைந்த பறையினையுடைய கூத்தரின் சுற்றம் சேர வாழ்த்தும், குளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டையுடையனாகிய, ஒளிரும் பனந்தாரையுடைய சேரனுடைய பெரிய நாளோலக்க இருப்பில் சீரியோர் திரண்டு விரும்புதல் கொண்டு எழுப்பும் ஆரவாரத்தை ஒப்ப - பலவுடன் – பல ஆரவாரத்தோடே என்பது இதன் பொருள்.
மாங்குடி மருதனாருக்கு, மதுரையில் எழும் பலவித ஆரவார ஒலிகள், மன்னர் பலரின் பிறந்தநாள் விழாக்களில் எழும் ஆர்ப்பரிப்பைப் போல் தோன்றுவது இங்கும் வெளிப்படுகிறது. மதுரை நகரில் இரவின் முதல் யாமம் கழியும் வகை பற்றிக் கூற வந்த புலவர், அதனை நன்னனின் பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் ஒப்பிடுவதை, ஆங்கு என்ற உவம் உருபின் கீழ்,
பேர்இசை நன்னன் பெரும்பெயர் நன்னாள்
சேரி விழவின் ஆர்ப்புஎழுந்து ஆங்கு
முந்தை யாமம் சென்ற பின்றை - மது 618-620
என்ற அடிகள் வழியாகக் கண்டோம்(2.6.2). இப்போது, மதுரை நகரின் நான்கு தெருக்களிலும் ஏற்படும் நடமாட்டமும், சந்தடியும் சேரமன்னனின் பெருநாள் இருக்கை போல் இருப்பதாகப் புலவர் கூறுகிறார்.
செழியன் என்ற பெயர் பாண்டிய மன்னர்களுக்கு உரித்தானது போல, கோதை என்ற பெயர் சேர மன்னர்களுக்கு உரித்தானது. மன்னர்கள் ஒவ்வொரு நாளும் அரசவையில் அமர்ந்து நாட்டுநடப்பை விவாதிப்பது வழக்கம். ஆனால், சில சிறப்பு நாட்களில் ஆடல், பாடல் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இதையே பெருநாள் இருக்கை என்கிறார் புலவர். அன்று, ஆன்றோரும் சான்றோரும் பெரிய அளவில் கூடியிருப்பர். பலவித விவாதங்கள் நடைபெறும். எல்லாரும் ஆர்வத்துடன் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சிகள் கலகலப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லையே! இதனையே விழைவுகொள் கம்பலை என்கிறார் புலவர். கம்பலை என்பது ஆரவாரம்.
6.60. அமிர்து இயன்று அன்ன தீம் சேற்று கடிகையும் - மது 532
மதுரைமாநகரின் கடைத்தெருக்களில் கிடைக்கக்கூடிய பலவித தின்பண்டங்களைப் பற்றிச் சுவைபட விளக்குகிறார் புலவர். அவற்றில் ஒன்று தீஞ்சேற்றுக் கடிகை - இனிப்பு மிட்டாய்!
அமிழ்தத்தைக் கொண்டு செய்ததைப் போன்ற, இனிமையான பாகினைக் கொண்ட சிறிய துண்டுகள் என்பது இதன் பொருள்.
தேன்மிட்டாய் என்றொரு உருண்டைப் பொருள் இப்பொழுது கடைகளில் கிடைக்கிறது. அதை வாயில் போட்டு சிறிதே மென்றால் அதன் உள்ளிருக்கும் இனிப்பான சாறு வெளிப்பட்டு மிகவும் தித்திப்பான சுவையைத் தரும். இதுவே தீம் சேறு எனப்படுகிறது. சேறு போன்ற கற்கண்டுப் பாகையே இது குறிப்பிடப்படுகிறது எனலாம். தீம் என்பது இனிய என்ற பொருள் தரும். சேறு என்பது குழைவான ஒரு பொருள் - சற்று இறுகிய கற்கண்டுப்பாகு.
6.61 ஒல்லென் இமிழ்இசை மானக் கல்லென - மது 538
வால்இதை எடுத்த வளிதரு வங்கம்
பல்வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து
ஒல்லென் இமிழ்இசை மானக் கல்லென
நனம்தலை வினைஞர் கலம்கொண்டு மறுக - மது 536-539
மதுரை நகரின் கடைத்தெருக்களில் ஏற்படும் ஆரவாரத்தை இங்கு புலவர் ஓர் அழகிய உவமையின் மூலம் இனிதின் விளக்குகிறார்.
வெண்மையான பாய் விரித்த, காற்று கொணர்ந்த கப்பல்,
பலவகையான பொருள்களை இறக்குமதி செய்யும் பட்டினத்தில் ஏற்படும்
பலத்த ஆரவார ஒலியைப் போல, பெரும் இரைச்சலுடன்
அகன்ற கடைத்தெருக்களில் தொழில் செய்வோர் அணிகலன்களை வாங்கிக்-கொண்டு சுற்றித்திரிய -
என்பது இதன் பொருள்.
மதுரைநகர் ஒரு கடற்கரைப் பட்டினம் அன்று. இருப்பினும் அது ஒரு பெரிய வணிக மையமாக இருந்தது என்பது இவ் அடிகளின் மூலம் தெரிகிறது. வால் இதை என்பது வெண்மையான் பாய். அக் காலத்தில் வெளிநாட்டுக் கப்பல்கள் மரக் கம்பத்தில் ஏற்றப்பட்ட பாய்களைக் காற்று அடித்துத்தள்ளும் விசையைக் கொண்டு இயங்கின. எனவே அவை பாய்மரக்கப்பல்கள் எனப்பட்டன. வடகிழக்குப் பருவக்காற்று, வங்காளத்திலிருந்து தமிழ்நாட்டை நோக்கி வீசும். இதைப் பயன்படுத்திக்-கொண்டு கப்பல்கள் வங்கநாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும். அடுத்து, தென்மேற்குப் பருவக்காற்றைப் பயன்படுத்திக்கொண்டு இவை மீண்டும் வங்கம் திரும்பும். இங்கு வங்கம் என்பது கப்பலைக் குறிக்கும். வங்கநாட்டுக் கப்பல் வங்கம் என்று சுருக்கமாக அழைக்கப்பட்டிருக்கலாம். கலிங்க நாட்டுத் துணியைக் கலிங்கம் என்றே சங்ககால மக்கள் அழைத்திருக்கின்றனர். இழிதரும் என்பது இறங்கும் என்று பொருள்படும். எனவே வங்கநாட்டார் தம் பண்டங்களை நம் துறைமுகங்களில் இறக்குமதி செய்திருக்கின்றனர். பின்னர் தமிழ்நாட்டு அணிகலன்களையும், பிற பொருள்களையும் வாங்குவதற்கு மதுரை போன்ற உள்நாட்டுப் பகுதிகளுக்கும் வந்திருக்கின்றனர்.
இறக்குமதி செய்யும்போது, துறைமுகத்தில் பரபரப்பும், கூச்சல்களும், ஆரவாரமும் காணப்படும். இதனை ‘ஒல்'லென் இமிழ் இசை என்கிறார் புலவர். இமிழ்தல் என்பது அடித்தொண்டையிலிருந்து எழும்பும் உறுமல் ஒலி. பலவிதமான கலப்பு ஒலிகளைத் தூரத்திலிருந்து கேட்பது போன்ற ஓசை. மதுரை நகரின் கடைத்தெருக்களில் இதைப் போல ‘கல்'லென்று ஒலி கேட்கிறதாம். ‘கல்'லென்ற ஒலி, அடர்ந்த காட்டில் மாலைவேளையில் அருகிலிருந்து கேட்கும் ஒலியைப் போன்றது. ஓங்கியும், உரத்தும், தாழ்ந்தும், தணிந்தும் கேட்கும் பலவித குரல்களைக் கொண்டது. வினைஞர் என்போர் தொழில்செய்வோர். அணிகலன்களைச் செய்பவரும், அதனை விற்பவரும் பலவிதமாகக் கூவிக்கொண்டு தம் பொருள்களை எடுத்துக்கொண்டு தெருவைச் சுற்றிச்சுற்றி வருவர். அவற்றை வாங்குபவர் ஆகிய வணிகரும் தெருத்தெருவாக அலைந்து தேடியும், விலைபேசிக்கொண்டும் இருப்பர். இவர்கள் எழுப்பும் ஒலி, கடற்கரைப் பட்டினத்தில் கேட்கப்படும் ஒலிபோல் இருப்பதாகப் புலவர் கூறுகிறார்.
வெறும் ஒலிகளை மட்டும் ஒப்புமை காட்டுவது போல், இங்கு மதுரையின் தனிச்சிறப்பையும், வளத்தையும் புலவர் குறிப்பிடும் அழகு உன்னிப்பாய்ப் பார்த்துக் களிக்கவேண்டிய ஒன்றாகும்.
6.62. பல் வேறு புள்ளின் இசை எழுந்து அற்றே - மது 543
பெருங்கடல் குட்டத்துப் புலவுத்திரை ஓதம்
இருங்கழி மருவிப் பாயப் பெரிதெழுந்து
உருகெழு பானாள் வருவன பெயர்தலின்
பல்வேறு புள்ளின் இசைஎழுந்து அற்றே
அல்லங்காடி அழிதரு கம்பலை ------- - மது 538-544
மதுரை நகரின் அல்லங்காடி எனப்படும் இரவுநேரக் கடைத்தெருவில் இருக்கும் சந்தடியைப் பற்றிய உவமை இது.
பெரிய கடலின் ஆழ்பகுதியினின்று வரும் புலால் நாறும் அலைகளின் எழுச்சி, கரிய கழியில் தழுவிப் பாய்வதற்காக மிகுந்து எழுந்து, அச்சம் பொருந்திய நடுயாமத்தே உட்புகுந்து மீளுதலால், பல வேறுபட்ட பறவைகளின் ஓசை எழுந்ததைப் போன்றது இரவுநேரக் கடைத்தெருவில் பெருகிவரும் ஆரவாரம் என்பது இதன் பொருள்.
நாளங்காடியைப் போலவே அல்லங்காடியும் பரபரப்புடன் வணிகம் நடைபெறும் சந்தடி மிகுந்த இடமாக இருந்தது என்பது புலவர் கூற்று.
குட்டம் என்பது ஆழ்கடல். ஆழ்கடல் பொங்கும்போது கடல் மட்டம் உயர்கிறது. அப்போது கடல்நீர் மேலேறி வருவதுவும், பின்னர் கடல்நீர் உள்வாங்கிக்கொள்வதுவும் அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சிகள். திரை என்பது கடலலை. ஓதம் என்பது அலைகள் பொங்கியெழுதல். இவ்வாறு எழும் கடல்வெள்ளம் கடற்கரையில் ஆங்காங்குள்ள பள்ளங்களில் தங்குகிறது. அதுவே கழி (backwaters) எனப்படுகிறது. நள்ளிரவில் கடல் மட்டம் உயர்கிறது. இது சுனாமி போல திடீரென்று நடப்பதல்ல. மெல்ல மெல்ல கடல்மட்டம் உயர்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகக் கடல்நீர் மேலேறி வருகிறது. இவ்வாறு ஊர்ந்துவரும் கடல்நீர் கழிகளில் மெல்ல இறங்குகிறது. இதனையே, ஓதம் இருங்கழியை மருவிக்கொண்டு பாய்கிறது என்கிறார் புலவர். மருவுதல் என்பது இங்கு தழுவுதல். கழியின் வெளிக்கரையில் மெல்ல மெல்ல ஏறிவரும் கடல்நீர், அப்படியே உள்ளுக்குள் இறங்கும் காட்சியை இந்த ஒரு சொல்லால் படம்பிடித்துக் காட்டிவிடுகிறார் புலவர்.
மதுரைக்காஞ்சி – உவமைக் காட்சிகள்
63 முதல் 75 வரை
மதுரைக்காஞ்சியில் உள்ள 96 உவமைகளையும் பாடலின் தொடக்கத்திலிருந்து வரிசையாகத் தொகுத்துக் கூறும் கட்டுரைகளில் இது ஆறாவது ஆகும்.
மதுரைக்காஞ்சியைப் பாடிய புலவர் மாங்குடி மருதனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சிறப்பைக் கூறி அவனை வாழ்த்துகிறார். அவனுடைய வெற்றிகளை எல்லாம் புகழ்ந்து கூறும் புலவர் உலகில் நிலையான புகழைத் தருவது அறவழியில் ஆட்சிசெய்தலே என்று அறிவுறுத்துகிறார்.
முதலில் பாண்டியனின் முன்னோர்களின் சிறப்பை விதந்தோதுகிறார் புலவர். அடுத்து மன்னனின் பல்வித வெற்றிகளைப் பாராட்டி மகிழ்கிறார். பின்னர் பாண்டிய நாட்டின் பல்வகை வளங்களைச் சிறப்பித்துக் கூறுகிறார். அடுத்து மதுரைமாநகருள் நம்மை அழைத்துச் செல்லும் புலவர், நகரின் பல்வேறு பகுதிகளை உவமை நயத்துடன் விவரித்துக்கூறுகிறார்.
6.63 தாழ்புஅயல் கனைகுரல் கடுப்பப் பண்ணுப்பெயர்த்து - மது 560
ஏழ்புணர் சிறப்பின் இன்தொடைச் சீறியாழ்
தாழ்புஅயல் கனைகுரல் கடுப்பப் பண்ணுப்பெயர்த்து
வீழ்துணை தழீஇ --------- ---------- - மது 559-561
மதுரை நகரில் மாலைநேரத்தில் வீடுகளில் கேட்கும் யாழிசையைப் பற்றிய செய்தி இது. சீறியாழ் என்பது சிறிய யாழ். 7 நரம்புகளை மட்டும் கொண்டது.
இசை ஏழும் தன்னிடத்தே கூடின சிறப்பினையுடைய இனிய நரம்பினையுடைய சிறிய யாழை, தாழ்ந்து அதன் அயலே பாடும் தம் மிடற்றுப் பாடல் ஒப்ப, பண்களை மாறிமாறி இசைத்துச் சுருதி கூட்டி தம்மை விரும்புகின்ற துணைவரை முயங்கி என்பது இதன் பொருள்.
யாழை மீட்டும் முன்னர் அதனைச் சுருதிகூட்டிச் சரிசெய்வார்கள். இதைப் பண்ணுப்பெயர்த்தல் அல்லது பண்ணமைத்தல் என்பர். அப்போது யாழைச் சற்றே தாழ்த்தி, வேறு பக்கம் அதனைத் திருப்பி, நரம்புகளை மீட்டிப்பார்த்துச் சரிசெய்வார்கள். அச் செயல், தாழ்ந்த குரலில், சற்று வேறு பக்கம் திரும்பி தம் தொண்டையைக் கனைத்து, ஒருவர் தன் குரல்வளையின் ஓசையைச் சரிசெய்வது போல் இருக்கிறது என்று இந்த உவமையை, யாழின் நரம்புகளையும் மீட்டிப்பார்த்து அதற்குச் சுருதி கூட்டும் செயலுக்கு ஒப்பிடுகிறார் புலவர்.
6.64. நீர் திரண்டு அன்ன கோதை பிறக்கு இட்டு - மது 562
------------ ------------ வியல் விசும்பு கமழ
நீர்திரண்டு அன்ன கோதை பிறக்குஇட்டு - மது 562
மதுரைநகரின் மாலைக்காட்சிகளைக் காட்டிக்கொண்டு வரும் புலவர் தெருக்களில் திரியும் பெண்களைப் பற்றியும் கூறுகிறார்.
அகன்ற விண்ணகமெல்லாம் மணக்கும்படி, நீர் திரண்டாற் போன்ற பூமாலையைப் பின்புறமாகச் சூடி என்பது இதன் பொருள்.
திரள் என்பதற்குப் பெருமளவில் ஒன்றுசேர் என்பது பொருள். நீர் திரண்டுவந்தால் எப்படி இருக்கும்? சிறிதளவே நீருள்ள காட்டாறு அமைதியாக ‘சலசல' என்று ஓடிக்கொண்டிருக்கும். அதுவே, பெருமழை பெய்து, பெருவெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது எப்படியாக மாறும்? ‘நுங்கும் நுரையுமாக' வெள்ளம் கொப்பளித்துக்கொண்டுவரும். முதல் வெள்ளத்தின் கசடுகள் எல்லாம் கழிந்த பின்னர், வெள்ளைவெளேர் என்று வெள்ளம் நுரைகலந்து பெருக்கெடுத்து அருவியாகக் கொட்டும் காட்சி கண்ணைக் கவரும். அப்படியாக வெள்ளைவெளேர் என்ற மதுரை மல்லியைக் கொத்தாகக் கட்டி தலையின் பின்புறம் தொங்கவிட்டு வரும் பெண்ணழகைத்தான் புலவர் இங்கே வருணிக்கிறார்.
கோதை என்பது பெண்கள் தலையில் சூடும் மாலை. பிறக்கு என்பது பின்புறம். எனவே தலையில் பின்புறமாகப் பூ அணிந்து அதைப் பின்புறமாகத் தொங்கவிட்டிருப்பார்கள் போலும். இன்றைக்கும் அவ்வாறு பூ அணிந்துகொள்வதை ‘தலைநிறையப் பூவோடு வந்தாள்' என்று கூறுவார்கள்.
6.65. திறந்துமோந்து அன்ன சிறந்துகமழ் நாற்றத்து - மது 567
6.66. கொண்டல் மலர்ப்புதல் மானப் பூவேய்ந்து - மது 568
பெரும்பல் குவளைச் சுரும்புபடு பன்மலர்
திறந்துமோந்து அன்ன சிறந்துகமழ் நாற்றத்து
கொண்டல் மலர்ப்புதல் மானப் பூவேய்ந்து - மது 566-568
இந்த அடிகளும் மேற்கூறிய பெண்களைப் பற்றியதுதான்.
பெரிய, பலவாகிய குவளைமலர்களில், வண்டுகள் மொய்க்கும் பல மலர்களை, கையினால் விரித்துவிட்டு அவற்றை மோந்துபார்க்கும்போது கிடைக்கும் நல்மணத்தைப் போல் இனிமையாகக் கமழ்கின்ற மணம் கொண்ட, மழைக்கு மலரும் புதர்ப்பூக்களைப் போல, தலையில் நிறையச் சூடி என்பது இதன் பொருள்.
குவளைப்பூ என்பது செங்கழுநீர்ப்பூ. இது Indian red lily எனப்படும். பெண்கள் சூடும் மற்ற பூக்களைக் காட்டிலும் அளவில் பெரியது. குளத்தில் பலவாகப் பூத்துக்கிடக்கும் இந்தப் பூக்கள் மலர்ந்து விரியும்போது அவற்றில் வண்டுகள் மொய்க்கும். இதனையே புலவர், ‘பெரும்பல் குவளைச் சுரும்பு படு பன்மலர்’ என்கிறார்.
கொண்டல் என்பது கிழக்குக் காற்றைக் குறிக்கும். எனினும், இது மேகம் அல்லது மழை என்ற பொருளையும் தரும். கீழைக்காற்று வேகமாக வீசுவதினாலேயோ, கொட்டும் மழையால் கூம்புவிட்டதினாலேயோ, புதர்களிலுள்ள மொட்டுகள் மலர்ந்து கிடக்கிடக்கின்றன. இந்தப் பூக்கள் தாமாகப் பூக்காத காரணத்தால், இவற்றின் மணம் இயற்கையான மணம் அல்ல. எனவே, இவை, மலரும் நிலையிலுள்ள மொட்டுகளைக் கையால் திறந்து மோந்துபார்க்கும்போது கிடைக்கும் மணத்தைக் கொண்டவை என்று புலவர் கூறுகிறார். அவற்றின் மணம் சற்றே மாறுபட்டு இருக்கும். எனினும் அந்த மணம் மிக இனிமையானது என்பதனையே சிறந்து கமழ் நாற்றம் என்கிறார் புலவர்.
உங்கள் வீட்டில் முல்லைக்கொடியோ, மல்லிகைக் கொடியோ இருந்தால் அல்லது இவற்றின் உதிரிப்பூக்கள் கிடைத்தால், மலரக்கூடிய பருவத்தில் உள்ள ஏழெட்டு மலர்களை எடுத்து, உள்ளங்கைகளுக்குள் வைத்து, மூடி, மெதுவாகக் கைகளை அசக்கி, கைகளைத் திறந்துபார்த்தால் பூக்கள் சிறிதளவு மலர்ந்திருப்பதைக் காணலாம். அப்படியே இரு உள்ளங்கைகளையும் அந்த மலர்களுடன் மூக்கின் அருகே கொண்டு சென்று மோந்துபாருங்கள். திறந்து மோந்தன்ன சிறந்து கமழ் நாற்றம் என்ன என்பது அப்பொழுது புரியும்.
விரல்உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறுங்கான்
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி - திருமுருகு – 198,199
என்ற திருமுருகாற்றுப்படை அடிகளும் இதனையே கூறும். தானாக மலராமல், கைகளால் அவிழ்த்து மலரச்செய்யப்பட்ட மலர்கள் சற்றே வேறுவிதமான நறுமணம் தரும் என்றும் இதன் மூலம் அறிகிறோம்.
நாற்றம் என்பது சங்ககாலத்தில் மணம் என்ற பொருளையே தந்தது. பெரும்பாலும் அது நல்மணத்தைக் குறிக்கவே பயன்பட்டது. இப்பொழுதோ மூக்கைப் பொத்தவைக்கும் கெட்ட மணத்தையே நாற்றம் என்கிறோம். மலர் மணம் என்றும் சாக்கடை நாற்றம் என்றும் கூறுவது இன்றைய வழக்கு.
புதல் என்பது புதர் என்ற பொருள்படும். வடகிழக்குப் பருவக்காற்று வீசும் காலத்தில் செடிகொடிகள் செழித்து வளரும். புதர்கள் எல்லாம் பூத்துக் குலுங்கும். அவ்வாறு பூத்துக்குலுங்கும் ஏராளமான மலர்களைக் கொண்ட புதரையே மலர்ப்புதல் என்கிறார் புலவர். இலைகளே தெரியாத அளவுக்கு மலர்கள் மட்டுமே தெரியும் மலர்ப்புதல் என்பது எத்துணை அழகிய சொல்லாட்சி என்று கவனியுங்கள். மான என்பது போல என்று பொருள்படும். இந்த மலர்ப்புதரைப் போன்று அந்தப் பெண்டிர் தங்கள் தலை முழுவதையும் குவளைப்பூக்களால் அலங்கரித்துக்கொண்டனர் என்கிறார் புலவர். பொதுவாக, ஒரு வீட்டின் மேல்பகுதியை வைக்கோலால் முழுதும் மூடி மறைப்பதைக் கூரைவேய்தல் என்போம். இங்கே பெண்டிர் தம் தலையை முழுதும் பூக்களால் மூடிமறைப்பதைப் பூவேய்ந்து என்று கூறி ஒரு புதுச்சொல்லையே உருவாக்குகிறார் புலவர்.
அடுத்து, மோந்து என்ற சொல்லைக் கவனியுங்கள். இது இப்போது ஒரு பேச்சுவழக்குச் சொல். “அது என்னன்னு மோந்துபாத்துச் சொல்லு” என்று சொல்கிறோம். இதனையே இலக்கணத்தமிழில் எழுதுவதானால், “அது என்னவென்று முகர்ந்துபார்த்துச் சொல்” என்று எழுதுவோம். முகர்ந்து என்பதே மோந்து என்றாகிவிட்டது என்போம்.
அடுத்து, “தண்ணீர் மொண்டு வந்தான்” என்பதைத் ‘தண்ணி மோந்துவந்தான்' என்றே சொல்லுவோம். இங்கே, மொண்டு என்பதை முகந்து, முகர்ந்து என்றும் சொல்லலாம். முகர் என்பதற்கு நாசியால் மணத்தை உணர், மொள்ளு ஆகிய இரண்டு பொருள்களுமே உள்ளன என அகராதிகள் கூறுகின்றன. எனவே ‘முகந்து' அல்லது ‘முகர்ந்து' என்பதன் பேச்சுவழக்கே ‘மோந்து' என்பதாகும். இவை அனைத்துக்கும் அடிச்சொல் முக என்பதாகும். இது அள்ளு, மொள்ளு என்ற பொருள் தரும். சங்க இலக்கியங்களிலும் இச்சொல் இதே பொருளில் ஆளப்படுகிறது.
கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை - திரு 7
உரவு கடல் முகந்த பருவ வானத்து - பெரும் 483
வான் முகந்த நீர் மலை பொழியவும் - பட் 126
ஆகிய சொல்லாட்சிகளைக் கவனியுங்கள்.
ஆனால், முக என்ற சொல் மோ அல்லது மூக்கினால் மணத்தை உணர் என்ற பொருளில் சங்க இலக்கியங்களில் கையாளப்பெறவில்லை. முகர் என்ற சொல் சங்க இலக்கியங்களில் காணப்படவேயில்லை. எனவே, அவன் பூவை முகந்துபார்த்தான் அல்லது முகர்ந்து பார்த்தான் என்பது இலக்கண வழக்கு அல்ல. மோந்துபார்த்தான் என்பதுவே சரியான இலக்கண வழக்கு ஆகும். இதனைப் பேச்சுவழக்காக எண்ணித் திருத்தி எழுதவேண்டிய அவசியம் இல்லை.
விரல் முறை சுற்றி மோக்கலும் மோந்தனன் - கலி 54/8
என்று கலித்தொகையில் வருவதுவும் இதனை உறுதிப்படுத்துகிறது.
6.67 மென்சிறை வண்டுஇனம் மான ---------- - மது 574
6.68. பழம்தேர் வாழ்க்கைப் பறவை போல - மது 576
6.69. வானவ மகளிர் மான --------- - மது 582
இளம்பல் செல்வர் வளம்தப வாங்கி
நுண்தாது உண்டு வறும்பூத் துறக்கும்
மென்சிறை வண்டுஇனம் மானப் புணர்ந்தோர்
நெஞ்சு ஏமாப்ப இன்துயில் துறந்து
பழம்தேர் வாழ்க்கைப் பறவை போல
கொழும்குடிச் செல்வரும் பிறரும் மேஎய
மணம்புணர்ந்து ஓங்கிய அணங்குஉடை நல்இல்
ஆய்பொன் அவிர்தொடிப் பாசிழை மகளிர்
ஒண்சுடர் விளக்கத்துப் பலர்உடன் துவன்றி
நீல்நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவ மகளிர் மானக் கண்டோர்
நெஞ்சு நடுக்குறூஉ கொண்டி மகளிர் - மது 572-583
மதுரை மாநகரில் வாழும் விலைமாதரைப் பற்றிய குறிப்பு இது. அவர்கள் வரைவின் மகளிர் அல்லது பொதுமகளிர் என இலக்கியங்களில் அழைக்கப்படுகிறார்கள்.
இளமையான பல செல்வர்களின் வளங்கள் கெடும்படி அவற்றைக் கவர்ந்து, மிகச் சிறிதான தேனையும் உண்டு, வெறும் பூவைத் துறந்து செல்லும் மெல்லிய சிறகுகளை உடைய வண்டினம் போன்று, சேர்ந்தோர் மனம் வருந்த இனிய சேர்க்கையைத் துறந்து, பழங்களை நாடிச் செல்லும் வாழ்க்கையையுடைய பறவை போல, ---------------, வானுலக மங்கையர் போலத் தோற்றமுள்ள, காண்பவர் மனம் நடுங்கச் செய்யும் பரத்தையர் என்பது இதன் பொருள்.
பரத்தையரைக் கடுமையாய்ச் சாட விரும்பிய புலவர் அவர்களைக் குறிக்க ஒரே கருத்தைக் கொண்ட இரண்டு உவமைகளைக் கையாள்கிறார். வண்டுகள் தேனிருக்கும் மலர்களை நாடிச்செல்லும். மலரில் உள்ள சிறிதளவு தேனையும் உறிஞ்சி எடுத்துக்கொண்ட பின்னர், பூவை வெறுமையாக்கிவிட்டு அவற்றினின்றும் பறந்துசெல்லும். அதைப் போல, செல்வரின் வளத்தை எல்லாம் சுரண்டிய பின்னர் அவர்கள் அச் செல்வரைத் தவிக்கவிட்டுச் செல்வர். காதலிப்பது போல் நடித்துப் பல பெண்களை ஏமாற்றித் திரிவோரை மலர் விட்டு மலர் தாவும் வண்டுகள் என்போம். ஆனால், இங்கே பெண்கள் பூ விட்டுப் பூ தாவும் வண்டுகளாய் இருப்பதாகப் புலவர் கூறுகிறார். இளம்பல் செல்வர் வளம் தப வாங்கி என்பதில், தப என்பது அழிபடு (become extinct) என்ற பொருளில் முற்றிலுமாக அழிந்து இல்லாது போதல் என்பதைக் குறிக்கிறது. இதனையே மீண்டும், நுண்தாது உண்டு வறும்பூத் துறக்கும் வண்டுக்கு ஒப்பிடுகிறார். நுண் என்பது மிகவும் சிறிய அளவு என்பதைக் குறிக்கும். தாது என்பது இங்குத் தேனைக் குறிக்கும். பூவில் உள்ள தேன் அதன் தன்மைக்கு ஏற்ப, சிறிய அளவே இருக்கும். அந்தத் தேனையும் வண்டு உறிஞ்சிவிட்டுப் பூவை வறிதாக்கிவிடுகிறது.
அத்தோடு நில்லாது, இந்த மகளிரை வேறோர் உவமை மூலமும் சாடுகிறார் புலவர். பழம்தேர் வாழ்க்கைப் பறவை போல என்று மீண்டும் அவர்களைக் குறிப்பிடுகிறார். பறவைகள் ஏதேனும் ஒரு மரத்தில் கூடுகட்டி வாழும். ஆனால், உணவுக்காக அவை பழமுள்ள மரங்களைத் தேடிச் செல்லும். ஒரு மரத்தில் பழங்கள் அற்றுப்போனால், வேறொரு மரத்தை நாடிச் செல்லும். பறவைகளின் வாழ்க்கை முறையே அவ்வாறுதான். அதைப் போலவே, செல்வர்களின் செல்வத்தைக் கொள்ளை கொள்வதே தமது வாழ்க்கையாக அமைத்துக்கொண்டவர்கள் அவர்கள். அதனால்தான் இறுதியில் அவர்களைக் கொண்டிமகளிர் என்றும் மிகக் கடுமையான சொற்களால் குறிப்பிடுகிறார். கொண்டி என்பது கொள்ளை எனப் பொருள்படும். கொண்டிமகளிர் என்பதை ஒரே சொல்லாகக் கொண்டு அது பரத்தையர் என்பதைக் குறிக்கும் என்றும் கொள்ளலாம்.
இந்தக் கொண்டிமகளிர், காண்பதற்கு மிக அழகிய தோற்றத்தை உடையவர் என்றும், ஆடல், பாடல்களில் வல்லவர்கள் என்றும் கூறும் முகத்தான், நீல நிற வானில் நிலைகொண்டவராய் ஆடும் வானவ மகளிர் போன்றவர்கள் என்கிறார் புலவர். இருப்பினும், அந்த அழகும், திறமையும் கண்டுகளிப்பதற்கு அல்ல என்று கூறுகிறாற்போல், கண்டோர் நெஞ்சு நடுக்கம் கொள்ளும் கொண்டிமகளிர் என்று அவர்களைக் குறிப்பிடுகிறார்.
6.70 நல் மா மயிலின் மென்மெல இயலி - மது 608
---------- ---------- ---------- மடையொடு
நல்மா மயிலின் மென்மெல இயலி
கடும்சூல் மகளிர் பேணிக் கைதொழுது
பெரும்தோள் சாலினி மடுப்ப -------- - மது 607-610
மதுரைநகரில் இறைவழிபாடு செய்யும் மகளிரைப்பற்றிய கூற்று இது.
தெய்வங்களுக்குப் படைக்கும் உணவுப்பண்டங்களோடு, நல்ல பெரிதான மயில் போல மெல்ல மெல்ல நடந்து, முதிர்ந்த சூல்கொண்ட மகளிர், தலைவணங்கிக் கைகுவித்துத் தொழுது, பெரிய தோளினையுடைய இறைவாக்குப்பெண்மூலம் தம் படையலைச் செலுத்த என்பது இதன் பொருள்.
பந்தாடும் மகளிர் குதித்துக் குதித்து ஆடும்போது, மகிழ்சிறந்து ஆடும் பீலி மஞ்ஞையின் இயலுவர் என்று இலக்கியம் கூறும்.
கூழ் உடை நல் இல் கொடும்பூண் மகளிர்
------------ ---------------- -------------- ------------------
மால்வரைச் சிலம்பில் மகிழ்சிறந்து ஆடும்
பீலி மஞ்ஞையின் இயலி - பெரும்.327-331
என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. இங்கே கடுஞ்சூல் மகளிர் நன்மா மயிலின் மென்மெல இயலுவதைக் காண்கிறோம். முதிர்ந்த சூல்கொண்ட மகளிர் நடப்பதற்குச் சிரமப்படுவர். எனவே அவர்கள் இரண்டு பக்கங்களிலும் சாய்ந்து ஆடிஆடி நடப்பர். இவ்வாறு அவர்கள் நடப்பது பெரிய மயில் ஒன்று மெல்ல நடப்பதுபோல் இருப்பதாகப் புலவர் கூறுகிறார்.
மயில்கள் பொதுவாகவே மெதுவாக எட்டெடுத்து வைத்து நடக்கும். அதிலும் பெரிய மயில்கள் வயதானவையாக இருப்பனவாதலால் அவற்றின் நடை சாய்ந்து சாய்ந்துதான் இருக்கும். கடுஞ்சூல் என்பது முதிர்ந்த கர்ப்பம். அந்த நிலையில் பெண்கள் தாங்கித் தாங்கித்தானே நடப்பர்.
6.71. சேரி விழவின் ஆர்ப்பு எழுந்துஆங்கு - மது 619
--------- ------------ --------- சேரிதொறும்
உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ
வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கி
பேர்இசை நன்னன் பெரும்பெயர் நன்னாள்
சேரி விழவின் ஆர்ப்புஎழுந்து ஆங்கு
முந்தை யாமம் சென்ற பின்றை - மது 615-620
மதுரை நகரில் இரவின் முதல் யாமம் கழியும் வகை பற்றிப் புலவர் இங்குக் குறிப்பிடுகிறார்.
குடியிருப்புகள்தோறும் நின்ற புனைந்துரைகளும் பாட்டுக்களும் பலவகைப்பட்ட கூத்துக்களும் தம்முள் கலந்து, வேறு வேறான ஆரவாரம் ஓர் ஒழுங்குமுறையில் கலந்து, பெரிய புகழையுடைய நன்னனுடைய பிறந்தநாளில், சேரிகளில் உள்ளார் விழவின்கண் ஆரவாரம் எழுந்தாற்போன்ற ஆரவாரத்தோடே முற்பட்ட முதல் யாமம் நிகழ்ந்த பின்னர் என்பது இதன் பொருள்.
மதுரை நகர் மக்களின் மாலை நேர வாழ்க்கையைக் கூறிய புலவர், அடுத்ததாக, இரவுநேர வாழ்க்கையைப் பற்றிக் கூற ஆரம்பிக்கிறார். மாலை கழிந்த இரவு யாமம் எனப்பட்டது. காலை, நண்பகல், எற்பாடு என்ற மூன்று பகற்பொழுதுகளும், மாலை, யாமம், விடியல் என்ற மூன்று இரவுப்பொழுதுகளுமாக, ஒரு நாளை ஆறு பகுதிகளாகத் தமிழர் பிரித்தனர். இவை சிறுபொழுதுகள் எனப்படும். இன்றைய கணக்கில் ஒரு பொழுது என்பது நான்கு மணி நேரமாகும். எனவே, மாலை என்பது பிற்பகல் 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான பொழுது. யாமம் என்பது 10 மணி முதல் காலை 2 மணி வரையிலான பொழுது. யாமத்தை மூன்றாகப் பகுத்தனர். எனவே, 10:00 - 11:20, 11:20 - 12:40, 12:40 - 2:00 என்ற பகுதிகள் முதல், இடை, கடை யாமம் எனப்பட்டன. இடை யாமம் என்பது நடுயாமம் எனப்படும். இதைத்தான் கிராமத்தார் நடுச்சாமம் என்கின்றனர். காலை 2:00 - 6:00 என்பது விடியல். ஆனால், இந்தப் பாடலில் கூறப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளின் அடிப்படையில், இவ்வகைப் பிரிவு வேறு விதமாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. அதாவது, மாலை என்பது பிற்பகல் 6:00 - 9:00, இரவு என்பது 9:00 - காலை 3:00, விடியல் என்பது 3:00 - 6:00 என்றும், யாமத்தின் 9:00 - 11:00, 11:00 - 1:00, 1:00 - 3:00 என்ற பகுதிகள் முதல், இடை, கடை யாமம் என்றும் கொள்ளத் தோன்றுகிறது. இதற்குரிய காரணங்கள் இங்கு விரித்துக்கூறின் மிகும் என்பதால் இடம்பெறவில்லை.
சேரி என்பது உழவர், உழைப்பாளிகள் தங்கும் இடம். ஊரின் எல்லைப்புறத்தில் இருக்கும். வேளாளர் (cultivators) சேரி என்பது இன்றைக்கு (சென்னை அருகே) வேளச்சேரி என்றும் (மதுரை அருகே) விளாச்சேரி என்றும் இருப்பதை அறிவோம். மாலை முடிந்த பின்னர், புலவர் இந்தச் சேரிகளின் வழியே நடந்து செல்கிறார். அங்கே, கதை சொல்லல்களும் (உபன்யாசம்), பாட்டுப் பாடுவதும், ஆட்டங்கள் ஆடுவதும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தச் சேரிகள் நெருங்கி இருக்கின்ற காரணத்தால், இந்த நிகழ்ச்சிகளால் ஏற்படும் ஆரவார ஒலிகள் ஒன்றோடொன்று கலந்து கேட்கின்றன. இருப்பினும், அந்தச் சேரிகள் வரிசையாக அமைந்திருப்பதால், அவற்றைக் கடந்து செல்லும்போது, அந்த ஆரவாரக் கலவை ஒரு முறையுடன் இருப்பதாகப் புலவர் கூறுகிறார். இங்கு வெறி என்பதற்கு ஒழுங்கு, முறைமை என்ற பொருள் கொள்ளப்படுகிறது. மேலும் வெறி என்பதற்குப் பயித்தியம் (madness, insanity) என்ற பொருள்கொண்டால், ஒரே இடத்தில், சுற்றிலுமிருந்து பலதரப்பட்ட ஒலிகள் கலப்பதால் குழப்பமான நிலையில் உண்டாகும் உணர்வு என்றும் பொருள் கொள்ளலாம். இன்றைக்கும், ஒரே தெருவில் நான்கைந்து இடங்களில் விழா என்றால், அனைத்திலிருந்தும் வரும் திரைப்பாடல்களின் ஒலிபரப்பு ஒன்றாகக் கலந்து, ஒன்றுமே புரியாத பெரும் சத்தத்தை ஏற்படுத்தி, நம்மை வெறிபிடித்தது போல் ஆக்குவது இல்லையா? இதைத்தான் புலவர் வெறிகொள்பு மயங்கி என்கிறார் எனலாம். மயங்குதல் என்பது கலத்தல்.
இவ்வாறு எழும் ஆரவாரம், நன்னனின் பிறந்தநாளன்று மக்கள் அதை விழாவாகக் கொண்டாடும்போது ஏற்படும் ஆரவார ஒலி போன்று இருப்பதாகப் புலவர் கூறுகிறார். நன்னன் என்பவன் தொண்டைநாட்டின் ஒரு பகுதியை ஆண்ட வேளிர் குலத் தலைவன். கொடை, வீரம் ஆகிய பண்புகளால் மிகுந்த புகழ் பெற்றவன். தமிழ்நாடு முழுக்க இவன் புகழ் பரவியிருந்தது. எனவேதான், பாண்டிய நாட்டைச் சேர்ந்த பெருங்கௌசிகனார், இவனைத் தேடிப் போய் இவன் புகழை மலைபடுகடாம் என்ற நூலாகப் பாடுகிறார்.
6.72 நல்வரி இறாஅல் புரையும் மெல்அடை - மது 624
6.73 பாடுஆன்று அவிந்த பனிக்கடல் புரைய - மது 629
பணிலம் கலிஅவிந்து அடங்கக் காழ்சாய்த்து
நொடைநவில் நெடும்கடை அடைத்து மடமதர்
ஒள்இழை மகளிர் பள்ளி அயர
நல்வரி இறாஅல் புரையும் மெல்அடை
அயிர்உருப்புற்ற ஆடுஅமை விசயம்
கவவொடு பிடித்த வகைஅமை மோதகம்
தீம்சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க
விழவின் ஆடும் வயிரியர் மடிய
பாடுஆன்று அவிந்த பனிக்கடல் புரைய
பாயல் வளர்வோர் கண்இனிது மடுப்ப - மது 621-630
மதுரைநகரின் இரவு வாழ்க்கை முடிகிறது. இரவுநேரக் கடைத்தெருக்கள் ஒவ்வொன்றாக அடைக்கப்பெற்று, ஒலிகள் எல்லாம் அடங்கிப்போய், ஊர் உறங்கும் நேர்த்தியைப் புலவர் படம்பிடித்துக் காட்டுகிறார்.
சங்குகள் ஆரவாரம் ஒழிந்து அடங்கிப்போக, முன்கதவைத் தூக்கி நிமிர்த்தியிருக்கும் கோலை (காழ் – rafter – sloping pole that supports a roof) விலக்கி கூரையை இறக்கி, விலைகூவி விற்கும் நெடிய கடையை அடைத்து, மடப்பமும் செருக்கும் உடைய, ஒளிவிடும் அணிகலன்களை அணிந்த மகளிர் துயில் கொள்ள,
நல்ல வரிகளையுடைய தேனிறாலை ஒக்கும் மெல்லிய அடையினையும், கற்கண்டைச் சூடாக்கிச் சமைத்த பாகினைக் கூட்டிய உள்ளீட்டோடே பிடித்த, பகுப்புகள் அமைந்த கொழுக்கட்டைகளையும், இனிய கூழினையும் உடைய அப்ப வாணிகரும் தூங்குவனராய் உறங்க, திருநாளின்கண் கூத்தாடும் கூத்தர் துயில்கொள்ள, ஒலி நிறைந்து அடங்கிய குளிர்ந்த கடல் போல, படுக்கையில் துயில்கொள்வோர் இனிதாகக் கண்துயில - என்பது இதன் பொருள்.
மதுரை நகர்த் தெருக்களில் அன்று விற்கப்பட்ட ஒரு தின்பண்டம் இனிப்பு அடை. வட்டமாக அமைந்த இது தேனடையைப் போல், ஆனால் மெல்லிதாக இருப்பதாகப் புலவர் கூறுகிறார். இன்றைய ஜீரா போளியைப் போல் இருந்திருக்கவேண்டும். தேனடையில் தேன் அடைந்திருப்பதைப் போல் அடையில் வெல்லப்பாகு நிறைந்திருந்திருக்கவேண்டும்.
ஒவ்வொருவராய்க் கடையடைத்து தூங்கச் செல்கிறார்கள். இரைச்சல் மிகுந்த கடைத்தெரு, எல்லாம் முடிந்த பின்னர் எப்படி இருக்கும்? பாடு ஆன்று அவிந்த பனிக்கடல் போல் என்கிறார் புலவர்.
கடைத்தெரு எப்போதும் சந்தடி மிகுந்ததாகவே இருக்கும். விற்பனை முடிந்து சந்தடி அடங்கிய பின்னர், ‘மழை பெய்து ஒய்ந்தது போல்' என்று கூறுவர். புலவரோ ஆர்ப்பரித்து அடங்கிய கடல் போல் என்கிறார். கடலில் எப்போதும் இரைச்சல் இருந்துகொண்டே இருக்கும். சில நேரங்களில் கடல் ஆர்ப்பரித்துப் பொங்கும். அப்போது அலைகளின் ஆரவாரம் மிகுந்து இருக்கும். அந்த ஆரவாரம் அடங்கிய நிலையில் இருக்கும் கடலையே பாடு ஆன்று அவிந்த கடல் என்கிறார். அவி என்பதற்கு அணைந்துபோ (become extinguished) என்று ஒரு பொருள் உண்டு. எரிகின்ற தீயை யாராவது அணைத்தால் அது அவித்தல். அவ்வாறில்லாமல் எரிந்து தானாக அணைந்த தீயையே அவிந்த தீ என்கிறோம். அவ்வாறு அவியும்போது நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக அணையும். ஆரவாரிக்கும் கடலும் சிறிது சிறிதாகத்தானே அடங்கும். இதைத்தான் அவிந்த கடல் என்கிறார் புலவர். அதைப் போல, கடைத் தெருவிலும் ஒவ்வொரு கடையாக மூட மூட, சந்தடி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து அடங்கிய நிலையை, எத்துணை பொருத்தமான உவமையாலும், அதற்கேற்ற அழகிய சொல்லாட்சியாலும் புலவர் கூறிச்செல்கிறார் என்பதை நின்று நிதானித்துப் படிக்கும்போதுதான் தெரியும்.
பனிக்கடல் என்பது குளிர்ந்த கடல். இரவு நேரத்தில்தான் கடல் குளிர்ந்திருக்கும். இங்கேயும் இரவுநேரக் கடைகளின் சந்தடி பற்றித்தானே புலவர் குறிப்பிடுகிறார். இந்த உவமையில் சொல்லுக்குச் சொல் ஒப்புமை இருப்பது இதன் தனிச் சிறப்பு.
பாயல் என்பது படுக்கை. வளர்தல் என்பதற்குத் தூங்குதல் என்றொரு பொருள் உண்டு. கண் வளராய் கண்மணியே என்று தாலாட்டுப் பாடுவார்கள்.
6.74. இரும் பிடி மேஎந்தோல் அன்ன இருள் சேர்பு - மது 634
நள்ளிரவுத் திருடர்களின் நடமாட்டத்தைக் கூற வந்த புலவர், கரிய இருள் சூழ்ந்த நள்ளிரவு என்று கூறுவதற்காக இவ் உவமையைக் கையாள்கிறார்.
கரிய பெண்யானையின் மேந்தோலைப் போன்ற கருமை உள்ள இருளைச் சேர்ந்து என்பது இதன் பொருள்.
பெண்யானையின் தோலின் கரிய நிறம், இருளின் கரிய நிறத்திற்கு உவமை ஆகிறது.
கன்னங்கரேல் என்ற இருட்டு, கும்மிருட்டு, அமாவாசை இருட்டு என்றெல்லாம் நாம் அழைக்கும் இருட்டு, வானத்தில் நிலவுகூட வெளிப்படாத இருட்டு ஆகும். பண்டைக்காலத்தில் தெருவிளக்குகள் கிடையா. வீடுகளிலும் உள்ள விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டிருக்கும் நள்ளிரவு. வானத்து விண்மீன்கள் ஓரளவுக்கேனும் ஒளியைத் தந்து இருளைப் போக்கியிருக்கும். ஆனால், அது மழை அமைந்துற்ற அரைநாள் அமையம் என்று பின்னர்க் கூறுகிறார் புலவர். எனவே மேகங்களினால் விண்மீன்களும் மறைக்கப்பட்ட ஒளியற்ற அந்த இருளை, யானையின் தோலின் நிறத்துக்கு ஒப்பிடுகிறார் புலவர்.
எல்லா யானைகளும் கறுப்பாகத்தானே இருக்கும். இங்கே பெண்யானை என்பானேன்? ஆண்யானைக்கு வெண்மையான தந்தங்கள் உண்டு. அதன் பின்னணியில் யானை முழுமையாகக் கருமையாகத் தோன்றாது எனப் புலவர் எண்ணியிருக்கலாம்.
இந்த ‘அன்ன’ என்ற உவம உருபு பொதுவாக ஓர் அடியில் இரண்டாவது சீராகவோ, நான்காவது சீராகவோ மிகப்பெரும்பாலும் அமையும். மிகச் சிலவற்றில்தான் இது அடியின் மூன்றாவது சீராக அமையும். அவ்வாறான அடிகளில் இதுவும் ஒன்று.
6.75. வயக்களிறு பார்க்கும் வயப்புலி போல - மது 643
கண்மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி
வயக்களிறு பார்க்கும் வயப்புலி போல
துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர் - மது 642-644
மதுரை நகரின் இரவுக் காவலரைப் பற்றிக் கூறுகிறார் புலவர்.
இரவினில் மறைந்து நடமாடும் கள்வரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, வலிய யானையைப் பார்க்கும் வலிய புலியைப் போல, உறங்காத கண்களையுடையவர், அச்சமற்ற கொள்கையுடையவர் என்பது இதன் பொருள்.
கண்மாறு என்பது தோன்றிய கணத்திலேயே மறைதல். ஒளிந்திருக்கும் இடத்திலிருந்து வெளிப்பட்டு, அக் கணமே வேறோர் இடத்தில் ஒளிந்துகொள்ளும் தன்மை இது. மதுரை நகரில் கள்வர் இரவில் அவ்வாறு நடமாடுகிறார்களாம். அப்படிப்பட்ட கள்வர் இடுங்கியிருக்கும் இருப்பிடத்தையும் கண்டுபிடித்துவிடுவர் காவலர்கள். இனி அந்தக் கள்வரின் மேல் பாய்ந்து அவர்களைப் பிடிக்க-வேண்டியதுதான். ஆனால் தகுந்த சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்கிறார்கள் - வயக்களிறு பார்க்கும் வயப்புலி போல. யானை வலிமையுள்ளது - பரியது - கூர்ங்கோட்டது. ஆயினும் புலி தாக்கினால் யானை வெரூஉம். காரணம் புலியின் தப்பாத பாய்ச்சல் - தாவிப் பிடிக்கும் முறை - தழுவிக் கடிக்கும் வன்மை. கண்ணிமைக்கும் நேரத்தில் தோன்றி மறையும் கள்வரின் ஒடுக்கத்தை ஒற்றிக் கண்டுபிடித்த பின்னர், அவர்களைப் பிடிப்பதற்குரிய சரியான தருணத்திற்காகக் காத்திருக்கும் காவலர், சிறிதளவுகூட கண் அயர்ந்துவிடக் கூடாதன்றோ! எனவேதான் துஞ்சாக் கண்ணராய்க் காத்திருக்கின்றனர்.
கள்வர்கள், கல்லையும் மரத்தையும் துணிக்கும் கூர்மையான வாளைக் கொண்டிருப்பர்; குறங்கிடைப் பதித்த கூர் நுனைக் குறும்பிடி கொண்ட உடைவாளை உடையவர். இருப்பினும் கள்வரைக் கண்டு காவலர் அஞ்சலாமா? களிற்றைக் கண்டு கடும் புலி அஞ்சுமா? எனவேதான் காவலர் அஞ்சாக் கொள்கையராய்ச் செவ்வி நோக்கிக் காத்திருக்கின்றனர். முந்தின அடியையும், பிந்திய அடியையும் சேர்த்துப் பார்க்கும்போதுதான் இடை நிற்கும் உவமையின் முழுப் பொருள் விளங்கும்.
<font color="#
<p style="margin: 0in 0in 0pt; text-
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி - திருமுருகு – 198,199
கள்வர்கள், கல்லையும் மரத்தையும் துணிக்கும் கூர்மையான வாளைக் கொண்டிருப்பர்; குறங்கிடைப் பதித்த கூர் நுனைக் குறும்பிடி கொண்ட உடைவாளை உடையவர். இருப்பினும் கள்வரைக் கண்டு காவலர் அஞ்சலாமா? களிற்றைக் கண்டு கடும் புலி அஞ்சுமா? எனவேதான் காவலர் அஞ்சாக் கொள்கையராய்ச் செவ்வி நோக்கிக் காத்திருக்கின்றனர். முந்தின அடியையும், பிந்திய அடியையும் சேர்த்துப் பார்க்கும்போதுதான் இடை நிற்கும் உவமையின் முழுப் பொருள் விளங்கும்.
<font color="#000000" face="
--
மதுரைக்காஞ்சி – உவமைக் காட்சிகள்
76 முதல் 80 வரை
மதுரைக்காஞ்சியில் உள்ள 96 உவமைகளையும் பாடலின் தொடக்கத்திலிருந்து வரிசையாகத் தொகுத்துக் கூறும் கட்டுரைகளில் இது ஏழாவது ஆகும்.
மதுரைக்காஞ்சியைப் பாடிய புலவர் மாங்குடி மருதனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சிறப்பைக் கூறி அவனை வாழ்த்துகிறார். அவனுடைய வெற்றிகளை எல்லாம் புகழ்ந்து கூறும் புலவர் உலகில் நிலையான புகழைத் தருவது அறவழியில் ஆட்சிசெய்தலே என்று அறிவுறுத்துகிறார்.
முதலில் பாண்டியனின் முன்னோர்களின் சிறப்பை விதந்தோதுகிறார் புலவர். அடுத்து மன்னனின் பல்வித வெற்றிகளைப் பாராட்டி மகிழ்கிறார். பின்னர் பாண்டிய நாட்டின் பல்வகை வளங்களைச் சிறப்பித்துக் கூறுகிறார். அடுத்து மதுரைமாநகருள் நம்மை அழைத்துச் செல்லும் புலவர், நகரின் பல்வேறு பகுதிகளை உவமை நயத்துடன் விவரித்துக்கூறுகிறார்.
6.76. தாதுஉண் தும்பி போதுமுரன்று ஆங்கு - மது 655
போது பிணிவிட்ட கமழ்நறும் பொய்கை
தாதுஉண் தும்பி போதுமுரன்று ஆங்கு
ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 654-656
மதுரையில் உள்ள அந்தணர் பள்ளிகளில் அதிகாலையில் எழுந்து அந்தணர்கள் வேதம் ஓதுவதை ஓர் அழகிய உவமையால் புலவர் வருணிக்கிறார்.
பூக்கள் தளையவிழ்ந்த மணங்கமழுகின்ற நறிய பொய்கைகளில், தாதை உண்ணும் தும்பிகள் அப் பூக்களில் பாடினாற் போன்று, ஓதுதல் தொழிலையுடைய அந்தணர் வேதத்தைப் பாட என்பது இதன் பொருள்.
இது விடியற்காலை. விடியல் என்பது நம் மரபுப்படி அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை. அந்தணர்கள் அதிகாலையில் எழுந்து வேதம் ஓதத் தொடங்குவர். அதிகாலையில் பூக்கள் கட்டவிழும். ஆனால் முழுதும் மலர இன்னும் நேரமாகும். அதற்குள் அவசரப்பட்ட வண்டுகள் அந்தப் பூக்களுக்குள் இருக்கும் தேனை அருந்த முடியாமல், அந்த பூக்களையே சுற்றிச் சுற்றி வரும். அப்போது எழும் தொடர்ச்சியான மந்த ஓசை (ரீங்காரம் – humming – வில்லிலிருந்து அம்பு புறப்படும்போது ஏற்படும் ஓசை), அந்தணர்கள் ஒரே ஒலிப்பில் வேதத்தைத் தொடர்ந்து பாடும் ஒலி போல் இருப்பதாகப் புலவர் கூறுகிறார்.
அமைதியான வேளையில், மலர்கள் பூத்திருக்கும் இடத்தில், வண்டுகள் இலேசான ஒலியுடன் பறந்துவருவதைக் கண்டால், உற்றுக் கேட்டுப்பாருங்கள். அவை ஒரே ராகத்தைத் திரும்பத் திரும்ப இசைத்துக்கொண்டிருக்கும். ஓதல் அந்தணர் வேதம் பாடும்போது ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் திரும்பத் திரும்பப் பாடுவது அந்தத் தும்பிகள் முரல்வதுபோல் இருக்கிறதாம். காலையில் முரலும் தும்பி – காலையில் ஓதும் அந்தணர்! ஒலிப்பு மட்டுமல்ல, நேரமும் ஒத்துவருகிற அளவு எத்துணை பொருத்தமான உவமை பாருங்கள்!
6.77. கண்பொரா எறிக்கும் மின்னுக்கொடி புரைய - மது 665
நயந்த காதலர் கவவுப்பிணி துஞ்சி
புலர்ந்துவிரி விடியல் எய்த விரும்பிக்
கண்பொரா எறிக்கும் மின்னுக்கொடி புரைய
ஒண்பொன் அவிர்இழை தெழிப்ப இயலி
திண்சுவர் நல்இல் கதவம் கரைய - மது 663 - 667
விடியற்காலையில் எழுந்து கதவைத் திறந்து வெளிவரும் மகளிரைப் பற்றிய கூற்று இது.
தாங்கள் விரும்பின தம் கணவருடைய முயக்கத்தின் பிணிப்பால் துயில்கொண்டு, பொழுது புலர்ந்து கதிர் விரிகின்ற விடியற் காலம் நெருங்க, விருப்பத்தோடு, கண்களைத் தாக்கிக் கூசவைக்கும் மின்னல்கொடியைப் போன்று ஒளிரும் பொன்னாலான மின்னுகின்ற காலில் அணியும் நகைகள் ஒலிக்க வெளியே வந்து திண்ணிய சுவர்களையுடைய நல்ல இல்லங்களின் கதவுகள் திறக்கப்படுவதால் கிரீச்சிட என்பது இதன் பொருள்.
பொரு என்பதற்குத் தாக்கு, மோது என்ற பொருள் உண்டு. எறித்தல் என்பது திணறடித்தல் என்ற பொருள் தரும். இங்கே அது கண்களைக் கூசவைத்தல் எனலாம். கண் பொரா எறிக்கும் என்றால் கண்களைத் தாக்கிக் கூசவைக்கும் எனப் பொருள் கொள்ளலாம். மின்னல் தாக்கும்போது, அதைப் பார்க்க நேரிட்டால் (பார்க்கக்கூடாது) கண்கள் அந்த ஒளியின் பெருக்கத்தைப் பொறுக்கமாட்டாமல் தாமாகவே சுருங்கிக்கொள்ளும். இதனையே புலவர் கண் பொரா எறிக்கும் மின்னுக்குக்கொடி என்கிறார். மின்னல் பளிச்சென்று சடுதியில் தோன்றி மறைவது. நேரே பார்க்காவிட்டாலும் நம் கவனத்தைக் கவர்வது. மகளிர் அணிந்துவரும் தங்கநகைகள் மின்னலைப் போல வெட்டுகின்றன என்கிறார் புலவர். ஒண்பொன் என்பது ஒளிரும் தங்கம் என்ற பொருள் தரும். தங்கம் இயல்பாகவே பளபளப்பாக இருக்கும் அல்லவா? அதுவே ஒண்பொன். ‘பளிச்’-சென்ற தங்க நகையை மார்பில் அணிந்தால் அந்த மார்பே ஒளியுடன் திகழும் அல்லவா! அந்த அளவு ஒளிர்வதுதான் அவிர்தல். அப்படி ஒளிரும் நகையணிந்த பெண்கள் நடந்து செல்லும்போது, அந்த நகைகள் அசைவதால், சில கோணங்களில் மின்னலைப் போல் வெட்டும். இதனையே புலவர் அவிர் இழை என்கிறார். இழை என்பது அணிகலன். தெழித்தல் என்பது ஒலிஎழுப்புதல். என்ன வகையான ஒலி? நடக்கும்போது காற்கொலுசுகளில் உள்ள சிறு மணிகள் போன்ற சதங்கைகள் ‘கலீர் கலீர்’ - என ஒலிக்குமே அந்த ஒலி. இயல் என்பதற்குக் கால்களால் நட என்று பொருள். எனவே, அவிர் இழை தெழிப்ப இயலி என்பதால் அவளின் கால் கொலுசுகளின் சதங்கைகள் ஒலிக்க அவள் நடந்து செல்கிறாள் எனக் கொள்ளலாம்.
மின்னுக்கொடி என்று புலவர் சொல்வதைக் கவனிக்கவேண்டும். பொதுவாக மின்னல்கள் வானத்திலிருந்து பூமியை நோக்கி, அதாவது மேலிருந்து கீழாகப் பாயும். சில வகை மின்னல்கள் மேகங்களுக்கிடையிலேயே படர்ந்து செல்லும். இதை cloud to cloud lightning என்பார்கள். இவ்வாறான மின்னல்களையே கொடிமின்னல் என்கிறோம். இதனையே புலவர் மின்னுக்கொடி என்கிறார். கால்களின் தங்கக் கொலுசுகள் கொடிமின்னல் போல் மின்னின என்கிறார் புலவர். இந்த உவமையில் பளபளப்பில் மட்டுமல்ல, உருவத்திலும் மின்னலுக்கும் காற்கொலுசுக்கும் உவமை பொருந்திவருவதை உற்றுநோக்கி இன்புறலாம்.
இப் பெண்ணின் விரைவுக்குக் காரணம் என்ன? பொழுது விடியப்போகிறது. இரவில் சற்று கண் அயர்ந்துவிட்டாள் போலும். இதற்கு முந்தைய அடியில் நயந்த காதலர் கவவுப்பிணி துஞ்சி என்று புலவர் கூறியிருப்பதைக் கவனியுங்கள்.
விடியும்போது முதலில் என்ன நடக்கும்? கிழக்கே கதிரவன் எழும் இடத்தில் சற்று வெளுக்கும். இதைத்தான் பொழுது புலர்ந்தது என்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாகக் கதிரவன் மேலெழும்ப, கதிர்கள் இடது, வலது, உயரே என மூன்று பக்கங்களிலும் விரிகின்றன. கதிரவன் மேலெழுந்தவுடன் நன்றாக விடிந்துவிடுகிறது. புலர்ந்து விரி விடியல் என்று மெல்நடையாக (slow motion) விடியலைக் காட்டும் புலவரின் திறத்தை என்னென்று போற்றுவது? குலமகளிர் அல்லவா? சோம்பல் அவரிடம் கிடையாது. வெளுத்துவிட்டதே என்று எழுந்து வேகமாக நடக்கிறார்கள். அவர்களிடம் சலிப்பு இல்லை. விருப்பத்துடன் அன்றாடப் பணிகளைத் தொடக்குகிறார்கள். விரும்பி என்ற சொல்லில் அம் மகளிரின் எண்ணத்தை மட்டும் அல்ல, அவர்களின் இயல்பையும் உணர்த்துகிறார் புலவர்.
வேகமாக வெளிவந்த மகளிர், முன்கதவைத் திறக்கிறார்கள். செல்வர் வீடல்லவா? தடித்த சுவரில் உள்ள நிலையில் பெரிய கதவு பொருத்தப்பட்டிருக்கிறது. அதைச் சற்றுச் சிரமத்துடன் இழுத்துத் திறக்கிறாள். அக்காலத்துக் கதவுகளின் கீல்கள் துளைக்குள் சுற்றும் முளையுடன் இருக்கும். துளைப்பகுதி நிலையிலும், முளைப்பகுதி கதவிலும் இறுக்கப்பட்டிருக்கும். எனவே அவை எதிர்கொள்ளும் உராய்வினால் கரகரவென்ற ஒலி எழும்பும். இதனையே புலவர் கதவம் கரைய என்கிறார். கரைதல் என்பது கரகரப்பான குரல் எழுப்புதல். காகம் கரைகிறது என்றுதானே சொல்கிறோம். கரைதல் என்பதற்கு வருந்துதல், அழுதல் என்ற பொருளும் உண்டு. கீல்களின் உராய்வினால் கதவுகள் சத்தம்போட்டு அழுகின்றன என்று புலவர் சொல்வதாகவும் கொள்ளலாம்.
6.78. மின்னு நிமிர்ந்தனையராகி - மது 679
வானம் நீங்கிய நீனிற விசும்பின்
மின்னு நிமிர்ந்தனையர் ஆகி நறவு மகிழ்ந்து
மாண்இழை மகளிர் புலந்தனர் பரிந்த
பரூஉக் காழ்ஆரம் சொரிந்த முத்தமொடு
பொன்சுடு நெருப்பின் நிலம்உக்கு என்ன
அம்மென் குரும்பை காய்படுபு பிறவும்
தருமணல் முற்றத்து அரிஞிமிறு ஆர்ப்ப
மென்பூச் செம்மலொடு நன்கலம் சீப்ப - மது 678-685
இரவில் தம் கணவரின் கவவுப்பிணி துஞ்சி, காலையில் துயில் எழுந்த குலமகளிர், தம் காலைப் பணிகளைச் செய்ய, விரைந்து நடமாடும் அழகை, இதே பாடலில் 12 அடிகளுக்கு முன்னர் புலவர் குறிப்பிட்டுள்ளதைப் பார்த்தோம் இப்பொழுது புலவர் கூறுவது, முந்தைய நாள் இரவில், தூங்கும் முன்னர், சில மகளிர் தம் கணவருடன் ஊடல் செய்த காட்சி.
இரண்டு உவமைகள் கொண்ட இப்பகுதியின் பிற்பகுதியில் உள்ள என்ன என்ற உருபிற்கான பகுதி அடுத்து விளக்கப்பட்டுள்ளது. எனினும் தொடர்ச்சிக்காக அது சுருக்கமாக இங்கு கொடுக்கப்படுகிறது.
முந்தின நாள் மாலையில், கணவனும் மனைவியும் புதுமணல் பரப்பிய முற்றத்தில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருக்கின்றனர். பகலின் உழைப்பால் நேர்ந்த களைப்புத் தீர சிறிது நறவு அருந்தியிருக்கின்றனர். பேச்சு திசைமாறி, பிணக்கம் ஏற்பட்டு ஊடலாய் உருவெடுக்கிறது. மனைவி தன் கழுத்தில் கிடந்த முத்துமாலையை அறுத்து எறிகிறாள். கணவனும் தன் கையில் உள்ள தாம்பூலத்தட்டைத் தூக்கி எறிகிறான்.
இந்தக் காட்சியைச் சொல்லவந்த புலவர், மனைவியின் திடீர்க் கொந்தளிப்பை விளக்க ஓர் உவமையைக் கையாள்கிறார்.
மேகங்கள் இல்லாமற்போன நீல நிற விசும்பில் மின்னல் உயர வளர்ந்து பரவியதைப் போன்றவராகி, மது அருந்திக் களித்த, சிறந்த அணிகலன்களை அணிந்த மகளிர் (தம் கணவருடன்) ஊடியவராய், (கோபங்கொண்டு) அறுத்து எறிந்த பெரிய முத்துக்களையுடைய முத்துமாலையினின்றும் சிதறிய முத்துக்களோடு என்று இதன் முதற் பகுதிக்குப் பொருள் கொள்ளலாம்.
வானம் நீங்கிய நீனிற விசும்பின் மின்னு நிமிர்ந்தனையராகி .. என்ற சொற்றொடர் எல்லா உரைகாரர்களையும் சற்றுச் சிந்திக்கவைத்துள்ளது. வானம் என்பதற்கு மேகம் என்ற பொருள் உண்டு. மேகம் நீங்கிய நீல நிற விசும்பில் மின்னல் எப்படித் தோன்றும்? எனவே இங்கு உரைகாரர்கள் சற்றுத் திணறியிருக்கிறார்கள்.
‘ஆகாயம் தனக்கு வடிவு இன்று என்னும் தன்மை நீங்குதற்கு மேகபடலத்தால் நீலநிறத்தையுடைய ஆகாயத்தின் கண்ணே மின்னு நுடங்கின தன்மையினை உடையராய்’ என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார். வானம் பிளக்குமாறு நீலநிற முகிலிடத்தே நுடங்கும் கொடி மின்னலை ஒத்த தன்மையுடையராய் என்று பெருமழைப்புலவர் உரைகாணுகிறார். இவர்கள் வானம் என்பதற்கு ஆகாயம் என்றும் விசும்பு என்பதற்கு மேகம் என்றும் பொருள் கொள்கிறார்கள். ‘நீங்கிய’ என்பதற்குப் பிளக்க என்ற பொருள் எவ்வாறு பொருந்தும் எனத் தெரியவில்லை. இங்கு, வானம், விசும்பு என்ற இரு சொற்களுக்குமே ஆகாயம் என்ற பொருள் உண்டு. எனினும் ஒரே அடியில் வந்துள்ள இரண்டு சொற்களுக்கும் இதே பொருள் கொள்ளல் ஆகுமா? இந்த இரண்டு சொற்களுக்குமே மேகம் என்ற பொருளும் கொள்ளலாம். ஒரு மின்னலுக்கு இத்தனை அடைமொழிகளைக் கொடுக்கிற புலவர் தேவையில்லாமல் அப்படிக் கூறியிருக்கமாட்டார். ஆனால் இந்த இரண்டு உரைகளுமே, பாடல் குறிப்பிடும் ஊடலைக் குறித்த சூழலை விளக்குவதாக இல்லாமல், அந்த அடியில் உள்ள சொற்களுக்கு மட்டும் உரைகாணும் முயற்சியே என்று தெரிகிறது.
இவ்வாறு ‘நீங்கிய’ என்பதற்குரிய நேரான பொருளை விட்டுவிட்டு வேறு பொருளை உரைகாரர்கள் நாடுவதற்குக் காரணம் உண்டு. வானம் என்பதற்கு மேகம் என்ற பொருள் கொண்டால், மேகங்கள் அகன்றுபோன நீலநிற ஆகாயத்தின் மின்னலைப் போன்ற தன்மையுடையராய் என்று இதற்கு நேரான பொருள் கொள்ளலாம். மேகங்கள் அற்ற ஆகாயம், பகலில்தான் நீலநிறமாகத் தெரியும். எனவே, புலவர் குறிப்பிடும் மின்னல் பகல்நேரக்காட்சியே. முதலில் இதைக் குறித்துக்கொள்ளுங்கள்.
அடுத்து, வானம் நீங்கிய நீனிற விசும்பின் என்பதைப் புரிந்துகொள்ள, முதலில் மின்னல்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைப் பற்றித் தெரிந்திருக்கவேண்டும். அதைச் சுருக்கமாகக் காண்போம். மின்னல் என்பது ஒரு மின்சாரப்பாய்ச்சல். இது மூன்று வகைப்படும்.
1. மேகத்திலிருந்து தரைக்குப் பாய்வது (Cloud To Ground-CTG)
2. மேகத்திலிருந்து மேகத்துக்குப் பாய்வது (Cloud To Cloud-CTC)
3. தரையிலிருந்து மேகத்திற்குப் பாய்வது (Ground To Cloud-GTC).
இந்த மின்சாரப் பாய்ச்சலின் போது ஏற்படும் அதிக அளவு வெப்பத்தினால் அதன் பாதையில் உள்ள காற்று விரிவடைந்து வெடிப்பதே இடி. இவற்றில் முதல் இருவகைப் பாய்ச்சல்களே பெரும்பாலும் நடப்பன.
முதல்வகைப் பாய்ச்சல் (CTG) தரையில் பெரும் சேதத்தைப் பிறப்பிக்கும். இது வானத்தில் இருக்கும் ஒரு மேகத்தின் அடிப்பாகத்தில் தொடங்குகிறது. கீழே இறங்கும்போது, தலைகீழாய்த் தொங்கும் ஒரு மரம் போல பல கிளைகளாகப் பிரிந்து இறங்குகிறது. அதன் ஒரு கிளை தரையை நெருங்கும்போது தரையிலிருந்து எழுகிற ஒரு மின்னூட்டம், அதைப் பற்றிக்கொள்ள, அப்போது ஏற்படும் தொடுகையினால் மின்சாரப்பாதை முழுமையாகி, மின்சாரம் முழு வேகத்தில் தரையில் பாய்கிறது. இதைத்தான் இடி விழுகிறது என்கிறோம். பின்னர், அதே பாதையில் மின்சாரம் திரும்பப் பாய்ந்து மேகத்தைத் தாக்குகிறது (return stroke).
இரண்டாவது மின்னல் (CTC) இதைப் போன்றே, ஆனால் மேகங்களுக்கிடையே நடப்பது. அதனா நமக்கு ஆபத்து இல்லை. வானத்தில் ஒரு நல்ல வாணவேடிக்கையைப் பார்க்கலாம்.
மூன்றாவது வகை (GTC) அரிதாக நடப்பது. மிகவும் உயரமான ஒரு மேகம் இதற்கு வேண்டும். அதன் உச்சிப்பகுதிக்கும், தரையில் உள்ள ஒரு மிகவும் உயரமான இடத்திற்கும் மின்தொடுகை (electrical contact) ஏற்படுகிறது. இதனால், முதல் வகை மின்னலுக்கு எதிரிடையாக மின்சாரம் பாய்கிறது. அதாவது, தரையிலிருந்து புறப்படும் ஒரு மின்னூட்டம் பல கிளைகளாகப் பிரிந்து நிமிர்ந்துநிற்கும் மரம்போல் எழுகிறது. அதன் ஒரு முனை மேகத்தின் உச்சியை எட்டும்போது மின்னோட்டம் ஏற்பட்டு, முழுமையாகி, திருப்புத் தாக்குதலாகத் தரையை நோக்கி முழுவேகத்தில் பாய்கிறது. எனவே, இந்த வகை மின்னலில் திருப்புத் தாக்கம் தரையைத் தாக்குவதால் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். இந்த வகை மின்னலுக்கு, பாதிக்கப்படும் இடம் மேகத்திற்கு நேர் கீழே இருக்கவேண்டியது இல்லை. மேகத்தைவிட்டு மிக அதிகத் தொலைவிலுள்ள இடத்தில்கூட மின்னல் பாயமுடியும். இது 10 மைல் அளவுக்குக்கூட இருக்கலாம். அந்த இடத்தில் மேகமூட்டம்கூட இருக்கவேண்டியது இல்லை. வானம் தெளிவாக நீலநிறத்தில் இருக்கலாம். நமக்கு மேலே வானம் வெறித்திருந்து, வேறு எங்கோ மழை பெய்வதாக நாம் எண்ணிக்கொண்டிருக்கையில், தொலைவில் ஒரு மரம் எழுவதுபோல் கீழிருந்து மின்னல் ஏறி, நம் இடத்தில் மிகவேகமாக இடி விழும். இதற்குப் பல தருணங்கள் ஒன்றாய் அமையவேண்டும். மேலிருக்கும் மேகம் மிக உயரத்தில் இருக்கவேண்டும் (வானம் நீங்கிய). அது உயர்ந்து நிற்கவேண்டும். அதன் உச்சி மூக்குப்போல் நம்மைநோக்கி நீட்டிக்கொண்டிருக்கவேண்டும். தரையில் மிக உயரமான ஒரு அமைப்பு இருக்கவேண்டும். அப்போது நீலவானத்தில் (நீனிற விசும்பில்) மின்னல் எழுந்து உயர்வதைப் (மின்னு நிமிர்ந்து) பார்க்கலாம். புலவர் இத்தகைய மூன்றாம் வகை மின்னலைத்தான் குறிப்பிடுகிறார் என்று தோன்றுகிறது.
கீழிருந்து மேல்நோக்கி மரக்கிளையாய் விரிந்து எழும் மின்னலைத்தான் புலவர் மின்னு நிமிர்ந்தது என்கிறார் போலும்.
கண்பொரா எறிக்கும் மின்னுக்கொடி என்று புலவர் சென்ற உவமையில் குறிப்பிடுவது இரண்டாம் வகை மின்னல் - யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் கண்ணைப்பறிக்கும் காட்சி ஆவது. மின்னு நிமிர்ந்தன்ன என்று இப்போது அவர் குறிப்பிடுவது மூன்றாம் வகை மின்னல் - கீழிருந்து மேல்நோக்கிக் கிளைவிட்டு எழுவது. உட்கார்ந்து பேசிக்கொண்டே இருந்த பெண் கோபங்கொண்டு ‘சட்’- டென்று எழுந்து நின்றபோது அவளின் பொன் அணிகலன்கள் ஒளிர்வதையே மின்னு நிமிர்ந்தனையர் ஆகி என்கிறார் புலவர் எனலாம்.
நம் புலவர் இதையெல்லாம் தெரிந்துவைத்துத்தான் இந்த உவமையைக் கையாண்டிருக்கிறார் என்பதைவிட, இந்த மூன்றாம் வகை மின்னலையும் தெரிந்துவைத்திருக்கிறார் எனலாம்.
இதில் இன்னொரு வியக்கத்தக்க தற்செயல் ஒற்றுமை காணப்படுகிறது (accidental similarity). இந்த மூன்றாம் வகை மின்னலின் இன்னொரு வடிவம்தான் Bolt from the blue. Thunderbolt from the blue sky என்பதன் சுருக்கம் இது. அதாவது, நீனிற விசும்பின் இடிமின்னல். ஆங்கிலத்தில் இது ஒரு மரபுத்தொடர் (idiom). நாம் எதிர்பாராத நேரத்தில் மிக விரைவாக ஓர் அதிர்ச்சிதரும் நிகழ்ச்சி நடந்தால் அதனை இவ்வாறு கூறுகிறோம் (If something happens unexpectedly and suddenly, it is a bolt from the blue). கணவனும் மனைவும் மகிழ்ச்சியுடன் உரையாடிக்-கொண்டிருக்கும் பின்மாலைப் பொழுதில், ஏதோ ஒரு காரணத்திற்காக மனைவி ஊடல்கொள்கிறாள். அது முற்றிப்போய், தான் அணிந்திருக்கும் பொன் நகைகள் மின்னலாய்ப் பளிச்சிட, கணவன் சற்றும் எதிர்பாராத வகையில், திடீரென அவள் ‘விருட்'டென்று எழுந்து, தன் கழுத்தில் இருக்கும் முத்தாரத்தை அறுத்து எறிகிறாள். கணவனுக்கு அவள் தரும் அதிர்ச்சி Bolt from the blue தானே! பட்டப்பகலில் நீல வானத்திலிருந்து விழும் இடியைப் போல!
இத்தனை உண்மைகளையும் ஒருசேரப் பார்க்கும்போதுதான் வானம் நீங்கிய நீல் நிற விசும்பின் மின்னு நிமிர்ந்த அனையர் என்ற உவமையின் முழுப்பொருளையும் நன்கு உணரமுடிகிறது. ஒரு மின்னலுக்கு ஐந்து சொற்களைக் கொண்ட ஒரு அடைமொழியைப் புலவர் கொடுத்திருப்பதற்கு உண்மையான பொருளும் தெளிவாகிறது.
6.79. பொன்சுடு நெருப்பின் நிலம்உக்கு என்ன - மது 682
மாண்இழை மகளிர் புலந்தனர் பரிந்த
பரூஉக் காழ்ஆரம் சொரிந்த முத்தமொடு
பொன்சுடு நெருப்பின் நிலம்உக்கு என்ன
அம்மென் குரும்பை காய்படுபு பிறவும்
தருமணல் முற்றத்து அரிஞிமிறு ஆர்ப்ப
மென்பூச் செம்மலொடு நன்கலம் சீப்ப - மது 680-685
சென்ற உவமையின் தொடர்சி இது.
மாட்சிமைப்பட்ட அணிகலன்களையுடைய மகளிர் கணவரோடு புலந்தனராய் அறுத்த பரிய வடமாகிய ஆரம் சொரிந்த முத்தோடு, பொன்னை உருக்குகின்ற நெருப்புச் சிந்தின நிலம் போல், அழகிய மென்மையான இளம்பாக்குக் காய்கள் விழுந்து, முத்துடன் பிறவும் விழுந்து கிடப்ப, கொண்டுவந்து இட்ட மணலையுடைய அம் முற்றத்தே வண்டுகளும் ஞிமிறுகளும் ஆரவாரிப்ப, மெல்லிய பூவின் வாடல்களுடன் நல்ல பூண்களையும் கூட்டித்தள்ள என்பது இதன் பொருள்.
மதுரை நகரின் வீடுகளில் காலையில் முதலில் துயில் எழுவது பெண்களே என்கிறார் புலவர். எழுந்தவுடன் அவர்கள் செய்கின்ற முதல் வேலை வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்வதே. முந்தின இரவு, தூங்குவதற்கு முன்னர் முற்றத்தில் ஒரு பெண் தன் கணவனுடன் இனிதே உரையாடிக்கொண்டிருக்கிறாள். ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு வைத்துக் கணவனுக்கு ஆசைஆசையாய்த் தாம்பூலம் மடித்துத் தருகிறாள். அப்போது அவர்களுக்குள் சிறு பிணக்கம் ஏற்படுகிறது. ஊடல் கொண்ட பெண் தன் கழுத்தில் அணிந்துள்ள முத்துச் சரத்தை அறுத்து எறிகிறாள். பெரிய முத்துக்களைக் கொண்ட வடம் அது. முத்துக்கள் சிதறி விழுகின்றன. நல்லவேளை, முற்றத்தில் அன்று காலைதான் புது மணல் கொண்டுவந்து பரப்பப்பட்டுள்ளது (தரு மணல் முற்றம்). எனவே முத்துக்கள் சிதறி ஓடாமல் கொத்தாகக் கிடக்கின்றன. கணவனுக்கு மட்டும் கோபம் வராதா? தன் கையிலுள்ள தாம்பூலத்தட்டைத் தூக்கி எறிகிறான். அதிலுள்ள பாக்குக் காய்கள் அந்த முத்துக்கள் அருகில் சென்று விழுகின்றன. அதனுடன் வெற்றிலை, சுண்ணாம்பு போன்ற பிறவும் சிதறி விழுகின்றன. பெண் தன் தலையிலுள்ள பூச்சரத்தைப் பிடுங்கி எறிகிறாள். மேலும் அவள் தான் பூண்டிருந்த வளையல்கள் போன்றவற்றையும் கழற்றி எறிகிறாள். இத்தனையும் சிதறிக்கிடக்கும் காட்சி, பொன்னைச் சுடுவதற்கு நெருப்பை ஊதிப் பெரிதாக்கும்போது எழும் சிறிய கங்குகளுடன் கூடிய நெருப்புப் பொறிகள் தரையில் சிதறிக் கிடப்பதைப் போல் இருப்பதாகப் புலவர் கூறுகிறார்.
பொன்னைச் சுடுவது என்றால் என்ன? பெரும்பாலான பொன் நகைகளைச் சிறிய சிறிய துண்டுகளாகச் செய்து ஒட்டவைத்துச் செய்வார்கள். ஓர் இரும்புச் சட்டியில் அடுப்புக் கரியினால் நெருப்பு உண்டாக்கி, அதன் மேல் துண்டுகளை வைத்து, அவற்றுக்கிடையில் பொன் துகள் வைத்து அதனை உருகவைத்து ஒட்டவைப்பார்கள். இதற்கு அந்த நெருப்புள்ள கங்குகளை அவ்வப்போது ஒரு நீண்ட குழலால் ஊதுவார்கள். அவ்வாறு ஊதும்போது நெருப்புப் பொறிகள் சிதறி எழும். ஒன்றிரண்டு வெளியிலும் விழும். பொற்கொல்லரைச் சுற்றி இருக்கும் தரையில், கரித்துண்டுகள், கரியின் மீது ஒளிர்ந்துகொண்டிருக்கும் சிவப்புத்தணல், அது கொஞ்சம் கொஞ்சமாய் அணையும்போது அதைச் சுற்றிப் படரும் வெண்ணிறச் சாம்பல், அங்கங்கே கிடக்கும் பொன் துண்டுகள் என பல்வேறு நிறங்களில் பொருள்கள் சிதறிக்கிடப்பது போல் காட்சி அளித்ததாம் புலவர் குறிப்பிடும் வீட்டின் முற்றம்.
6.80. கங்கைஅம் பேரியாறு கடல்படர்ந்து ஆஅங்கு - மது 696
ஏந்து கோட்டு யானை,
பாய்பரிப் புரவி,
ஆயம்,
தோட்டி,
நாள்தர வந்த விழுக்கலம்,
அனைத்தும்
கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு
அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடு
புத்தேள் உலகம் கவினி காண்வர
மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை - மது 687-699
மதுரைக்கு வந்துகொண்டே இருக்கும் பலவித பண்டங்களைப் பற்றி இங்கு புலவர் கூறுகிறார்.
ஏந்தின கொம்பை உடைய யானை, பாய்ந்து செல்லும் செலவினையுடைய குதிரை, பசுத்திரள், அரண்களின் கதவுகள், திறையாக வந்த சீரிய நன்கலன்கள் ஆகிய அனைத்தும் கங்கையாகிய அழகிய பெரிய ஆறு கடலுள் படர்ந்து சென்றாற் போல, அளந்து முடிவு அறியாத வளப்பம் பொருந்தின பண்டங்களோடு, தேவருலகம் போன்று பொலிவு எய்தி, காட்சிக்கு இனிமையுண்டாக, மிகுத்துப் புகழைப் பெற்ற பெரிய சிறப்பையுடைய மதுரை என்பது இதன் பொருள்.
தமிழ்நாட்டில் எத்தனையோ ஆறுகள் இருக்கக் கங்கைப் பேரியாற்றைப் புலவர் உவமைக்கு எடுத்துக்கொள்வது ஏன்? விடை கேள்வியிலேயே இருக்கிறது. ஆமாம்,
கங்கைஅம் பேரியாறு கடற்படர்ந் தாஅங்கு
என்பதை ஒவ்வொரு சீராக நிறுத்திப் படியுங்கள். ஏறக்குறைய இதே கருத்தை இதே நூலில் கூறும் புலவர்,
வையை அன்ன வழக்குஉடை வாயில் - மது 356
என்கிறார். இந்த அடியையும், கங்கை ஆறு கடற்படர்ந் தாங்கு என்று கூறியிருந்திருக்கலாம். இங்கு இரண்டு அழுத்தங்கள் (emphasis) கொடுக்கிறார் புலவர். அம் பேரியாறு என்று அழுத்திக் கூறும்போது ஆற்றின் பேருருவத்தை (பிரமாண்டத்தை) நம் கண் முன் கொண்டுவந்து காட்டுகிறார் புலவர். தமிழ்நாட்டில் ஓடும் எந்தவோர் ஆற்றைக் காட்டிலும் கங்கை அளவில் மிகப் பெரியது என்று ஒத்துக்கொள்ளத்தானே வேண்டும். அந்தப் பேரியாற்றின் பெருவெள்ளத்தைப் போல் பேரளவு செல்வம் மதுரைக்குள் குவிகிறதாம்! அடுத்து, உவமைப் புலவர் மாங்குடியார் ஆங்கு என்ற உவம உருபை இந் நூலில் நான்கு முறை பயன்படுத்தியிருக்கிறார். ஏனைய மூன்று இடங்களிலும் இதனை அளபெடை இன்றியே கையாள்கிறார். இந்த ஓர் இடத்தில் மட்டும் இதனை ஆஅங்கு என்று நீட்டம் வேண்டிக் கூட்டி எழுதுகிறார் புலவர். இன்றைய எழுத்தாளர்களின் நடையில் சொல்லப்போனால், கடலில் படர்ந்ந்ந்ந்ந்ந்ந்ந்ததைப் போல எனலாம். பெரும்பாலான ஆறுகள் போலக் கடலில் ‘டபக்'கென்று நுழைந்துவிடாமல், கங்கை பரந்து விரிந்து பல கிளைகளாய்க் கடலுக்குள் படர்கிறது. அதுபோல மதுரையின் பல வாயில்கள் வழியாகவும் செல்வம் வந்து குவிகிறது என்று புலவர் கூறுகிறார். இந்த அடியைப் படிக்கும்போது, பேரியாறு என்னும்போது இரு கைகளையும் உயர்த்தி அகற்றியும், படர்ந்தாஅங்கு என்னும்போது, வலது கையை முன்னால் நீட்டி, விரல்களை விரித்து, பாம்பு நெளிந்து செல்வது போல் காட்டியும் படியுங்கள். இந்த உவமையின் பேரழகு இதன் சொற்களில் மட்டும் அல்ல, அவற்றைச் சொல்லும் விதத்திலும் அடங்கிக்கிடக்கிறது என்று அறிவீர்கள்!
இது மட்டும் அல்ல. இந்த உவமைக்கு இரு நீட்சிகளும் (extensions) உண்டு. தமிழ்நாட்டின் ஆறுகள் பருவமழையை நம்பியிருப்பவை. ஓரிரு ஆண்டுகள் பருவம் பொய்த்துப்போனால், ஆறுகள் பெரிதும் வறண்டுவிடும். ஆனால், கங்கை ஆறு பனி படர்ந்த மலைகளில் பிறந்து வருகிறது. எனவே அது வற்றாத ஆறு (ஜீவ நதி - perennial river). மதுரைக்கு வரும் பொருள்களும் ஆண்டு முழுதும் குறையாமல் வந்துகொண்டிருக்கும் என்பதற்காகவும் இங்கு கங்கை எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது எனலாம். அடுத்து, கங்கையின் அனைத்து நீரையும் கடல் உள்வாங்கிக்கொள்வது போல, அத்துணை பொருள்களையும் மதுரை உள்ளடக்கிக்கொள்கிறது என்பது மதுரைக்குச் சிறப்பு சேர்ப்பதாகும்.
-தொடரும்
...
மதுரைக்காஞ்சி – உவமைக் காட்சிகள்
81 முதல் 85 வரை
மதுரைக்காஞ்சியில் உள்ள 96 உவமைகளையும் பாடலின் தொடக்கத்திலிருந்து வரிசையாகத் தொகுத்துக் கூறும் கட்டுரைகளில் இது எட்டாவது ஆகும்.
மதுரைக்காஞ்சியைப் பாடிய புலவர் மாங்குடி மருதனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சிறப்பைக் கூறி அவனை வாழ்த்துகிறார். அவனுடைய வெற்றிகளை எல்லாம் புகழ்ந்து கூறும் புலவர் உலகில் நிலையான புகழைத் தருவது அறவழியில் ஆட்சிசெய்தலே என்று அறிவுறுத்துகிறார்.
முதலில் பாண்டியனின் முன்னோர்களின் சிறப்பை விதந்தோதுகிறார் புலவர். அடுத்து மன்னனின் பல்வித வெற்றிகளைப் பாராட்டி மகிழ்கிறார். பின்னர் பாண்டிய நாட்டின் பல்வகை வளங்களைச் சிறப்பித்துக் கூறுகிறார். அடுத்து மதுரைமாநகருள் நம்மை அழைத்துச் செல்லும் புலவர், நகரின் பல்வேறு பகுதிகளை உவமை நயத்துடன் விவரித்துக்கூறிய புலவர், இப்போது அரசனின் அரண்மனைக்குள் நம்மை அழைத்துச் சென்று அங்கு நடமாடும் அரச மகளிரைக் காட்டுகிறார்.
6.81. செம் தீ, ஒண்பூப் பிண்டி - மது 700,701
6.82. இலங்கு கதிர் இள வெயில் தோன்றி அன்ன - மது 703
சினைதலை மணந்த சுரும்புபடு செந்தீ
ஒண்பூம் பிண்டி அவிழ்ந்த காவில்
சுடர்பொழிந்து ஏறிய விளங்குகதிர் ஞாயிற்று
இலங்குகதிர் இளவெயில் தோன்றி அன்ன
தமனியம் வளைஇய தாவில் விளங்கிழை
நிலம் விளக்குறுப்ப மேதகப் பொலிந்து - மது 700 - 705
கிளைகளில் நெருங்கிக் கூடின, வண்டுகள் மொய்க்கும், செந்நிறத் தீயைப்போன்ற ஒளிவிடும் பூக்களையுடைய அசோகமரங்கள் பூத்துக்குலுங்கும் பொழிலில், ஒளியைச் சொரிந்து உச்சிக்கு ஏறிய மின்னுகின்ற கதிர்களையுடைய ஞாயிற்றின் மெல்லிதாய் ஒளிர்கின்ற கதிர்களையுடைய இளவெயில் தோன்றுவதைப் போல, பொன்னின் நிறம் சூழ்ந்த, குற்றமற்ற, விளங்குகின்ற பேரணிகலன்களால் நிலம் விளக்கமடைய மேன்மைதகப் பொலிவுபெற்று என்பது இதன் பொருள்.
மிகக் கவனத்துடன் இங்கு எடுத்தாளப்பட்டுள்ள சொற்கள், மிக நுணுக்கமான கற்பனைத் திறத்துடன், மிக அழகிய காட்சி ஒன்றை விளக்குகின்றன.
அசோகமரத்தின் பூக்கள் மாலை வெயிலில் மின்னுவதைப் போல் அரசமகளிரின் பொன் நகைகள் மின்னுகின்றன என்பதே புலவர் கூற்றின் சாரம். அசோக மரத்தின் பூக்களுக்கும், மாலை வெயிலுக்கும் அவர் கொடுத்திருக்கும் அடைமொழிகளை அணுவணுவாய் இரசித்துப் பார்க்கவேண்டும்.
பிண்டி என்பது அசோகமரம். அவிழ்ந்த கா என்பது, அம் மரம் பூத்திருக்கும் சோலை. பெரும்பாலான மரங்களில் பூக்கள் கிளைகளின் நுனியில் பூக்கும் அல்லது கிளைகளிலிருந்து கிளைவிட்டுத் தொங்கும். அசோக மரத்தில் பூக்கள் கிளைகளிலேயே பூக்கும். எனவேதான் சினை தலைமணந்த என்கிறார் புலவர். தலைமணத்தல் என்பதற்கு பின்னிப்பிணைதல், நெருங்கிக்கூடுதல் என்று பொருள். சினை தலைமணந்த என்றால் மரத்தின் கிளையிலேயே ஒன்றிப்போய்ப் பூத்திருக்கும் என்று பொருள். படத்தில் சினை தலைமணந்த ஒண்பூ என்பது எத்துணை உண்மை என்று காணலாம். சங்கப்புலவர்கள் இயற்கையை எவ்வளவு உற்றுக் கவனித்திருக்கிறார்கள் என்பதையும், அதை அவர்களின் பாடல்களில் தேவைப்படும் இடத்தில் மிகச் சரியாகவும் பொருத்தமாகவும் காட்டியிருக்கிறார்கள் என்பதையும் அறிய வியப்பாயிருக்கிறது இல்லையா!
முதலில் பூக்கள் மரத்தில் பூத்திருக்கும் அமைப்பைச் சொன்னவர், அடுத்து அந்தப் பூக்களின் அமைப்பைச் சொல்கிறார். அசோக மலர் தணல்விடும் ஒரு தீக்கங்கு போல் தோன்றுகிறதாம்!. செந்தீ ஒண்பூ என்கிறார். இது உவமத் தொகை. செந்தீ போன்ற ஒண் பூ என்ற தொடரில் உவம உருபு தொக்கிநிற்கிறது.
அசோகமரத்தின் பூவை ஒண்பூ என்கிறார் புலவர். ஒண் என்பது ஒள் என்ற சொல்லின் விகாரம். ஒள் என்பது மிக நல்ல என்ற பொருள்படும். ஒண்மை என்பதற்கு விளக்கம், ஒளிர்வு, இயற்கை அழகு (brilliance, splendor, grace, loveliness) என்ற பொருள்கள் உண்டு. விளக்கம் என்பது விளங்கு என்பதன் அடியாகப் பிறந்தது. விளங்கு என்பதற்குச் சங்ககாலத்தில் understand என்ற பொருள் இல்லை. மாறாக, இச் சொல்லுக்கு, ‘மாசில்லாத இயற்கை அழகுடன் இரு’ என்ற பொருளே உண்டு. ‘பாத்திரத்தை விளக்கு’ என்று இன்றும் நாம் சொல்வது அதன் அடிப்படையில்தான். செந்தீ ஒண்பூ என்பது சிவந்த தீயைப் போன்ற பூ என்றாகும். படத்தில் அசோகமலரைப் பாருங்கள். எவ்வளவு சரியான உவமை அது என்று தெரியும்!
எங்காவது தீயின் மீது வண்டுகள் மொய்க்குமா? ஆனால் இந்தத் தீயின் மீது வண்டுகள் மொய்க்கின்றனவே! என்ன இனிமையான காட்சி அது! சுரும்புபடு செந்தீ என்பது என்ன அழகிய வருணனை! இப்பொழுது, சினை தலைமணந்த சுரும்புபடு செந்தீ ஒண்பூம் பிண்டி என்ற தொடரையும் இந்தப் படங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். புலவரின் பார்வை எத்துணை நுண்ணியது என்று அறிந்து வியப்புறுவீர்கள்!
இந்த அசோக மரங்களின் பூக்களின் மீது ஞாயிற்றின் இளவெயில் பட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யமுடியாது. இதோ கண்ணால் பாருங்கள்! இவ்வாறு ‘தகதக’-வென்று மின்னியவாம் அரச மகளிரின் விளங்கு இழைகள்!
மேலும், இந்த அடிகளில்,
சுடர்பொழிந்து ஏறிய விளங்குகதிர் ஞாயிற்று
இலங்கு கதிர் இளவெயில்
என்று புலவர் கூறும் நுண்மையை உணர முயல்வோம்.
ஞாயிறு, மாலையில் மேற்கிலுள்ள மலைகளின் பின்னே மறையும் முன்னர் தோன்றும் வெயிலே இளவெயில். அப்போது அது மலையுச்சியில் ஏறி நிற்பது போல் இருக்கிறது என்று புலவர் கூறுவதாக உரைகாரர் சொல்வர்.. அப்போது அது தீச்சுடரைப் பொழியும் தீப்பிழம்பு போல் ‘தகதக'வென்று மின்னிக்கொண்டிருக்கும். இதையே புலவர், சுடர் பொழிந்து ஏறிய விளங்கு கதிர் ஞாயிறு என்கிறார். இருப்பினும் அந்தக் கதிர்கள் நம்மைச் சுடுவதில்லை. நம்மீது மென்மையாக வந்துவிழுகின்றன என்பதையே இலங்குகதிர் இளவெயில் என்கிறார். இலங்கு சுடர் ஞெகிழி, இலங்கு இழை மகளிர், இலங்கு வெள் அருவி போன்ற சொல்லாட்சிகளிலிருந்து இலங்கு என்பதன் பொருளைப் புரிந்துகொள்வீர்கள். இலங்கு என்பதை விட்டு விட்டுப் ‘பளிச்பளிச்’- என மின்னுவது என்றால், விளங்கு என்பதை ஒரே அளவில் பிரகாசமாக ஒளிர்வது எனலாம்.
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி - திரு 3
சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி - திரு 19
சேண் விளங்கு இயற்கை வாண் மதி கவைஇ - திரு 87
போன்ற சொல்லாட்சிகள் இதனை வலியுறுத்தும். பாத்திரங்களை விளக்குதல் என்னும்போது, அதற்குரிய தூள் அல்லது சோப்பு ஆகியவற்றை வைத்து அழுத்தித்தேய்த்துக் கழுவுதல் என்றுதானே பொருள். ஐம்பது ஆண்டுக்காலத்திற்கு முன்பெல்லாம், பெரும்பாலான வீடுகளில் பித்தளைப் பாத்திரங்கள் அல்லது மண்பாண்டங்கள் ஆகியவற்றையே பயன்படுத்துவார்கள். பித்தளைப் பாத்திரங்கள் நாளாக ஆக ஒளிமங்கிப்போகும். அதனை, பாத்திரம் கறுத்துவிட்டது என்பர். அவ்வாறு கறுத்துவிட்ட உலோகப் பாத்திரங்களைப் புளி வைத்துத் தேய்ப்பார்கள். கிணற்றடிகளில், பெண்கள் செங்கலைத் தட்டித் தூளாக்கி, கல் நீக்கி, அந்தத் துகளைக்கொண்டு பானைகளைத் தேய்ப்பார்கள். கழுவிய பின் பாத்திரம் அப்படியே ‘பளபளபள'-வென்று இருக்கும். இதைத்தான் அன்று பாத்திரம் விளக்குதல் என்பர். இவ்வாறு தேய்த்துக் கழுவாமல், ஒரு பொருள் தானாகவே ‘பளபளபள'-வென்று இருந்தால், அதனை விளங்குதல் என்கிறோம். மயக்கு-மயங்கு, சுருக்கு-சுருங்கு, மடக்கு-மடங்கு என்பது போலத்தான் விளக்கு-விளங்கு. சூரியனையும் சந்திரனையும் யார் விளக்கிவைத்தார்கள்? எனவேதான் அவற்றின் ஒளியை விளங்குகதிர் என்கிறோம். இலங்குதலும் அப்படித்தானே என்கிறீர்களா? இலங்குதல் பளீர் பளீர்-என மின்னுவது. ஒளி ஒன்றன் மீது பட்டுப்பட்டுத் தெறிப்பது. சூரியனின் கதிர்கள் நீர்ப்பரப்பில் பட்டுத் தெறித்து, நீர்ப்பரப்பை எப்படி மாற்றுகின்றன என்பதைப் படத்தில் பாருங்கள். அதுவே இலங்குதல். இலங்குதல் என்பதை glittering, dazzlingly bright என்றால், விளங்குதல் என்பதை gleaming, radiantly bright எனலாம். எனவேதான், விளங்குகதிர் ஞாயிற்று இலங்குகதிர் இளவெயில் என்கிறார் புலவர். இந்த ஞாயிறும் வெறும் விளங்குகதிர் ஞாயிறு என்னாமல், சுடர் பொழிந்து ஏறிய விளங்கு கதிர் ஞாயிறு என்று கூறுகிறார். இங்கு ஏறிய என்பதற்கு மாலையில் மலையுச்சியின் மேல் ஏறிய என்று பொருள்கொள்ளப்படுகிறது. காலையில், கீழ்வானத்தில் ஒரு மலை இருந்தால் அதன்மீது ஞாயிறு ஏறி நிற்பதாகக் கூறலாம். ஆனால், மாலையில் அது மலையுச்சிக்கு இறங்கிவந்துதான் நிற்கவேண்டும். எனவே, மேற்கண்ட அடிக்கு, காலையில் சுடரைப் பொழிந்து (உச்சிக்கு)ஏறிய விளங்கு கதிர் ஞாயிறு, பின்னர் இறங்கி, மாலையில் இலங்குகதிர் இளவெயிலைத் தோற்றுவிக்கும் என்று பொருள் கொள்வது சிறப்பாக இருக்கும் எனத் தோன்றுகிறது.
இதுவரை இந்த உவமையில் உள்ள அடைமொழிச் சொற்களின் பொருத்தத்தைப் பார்த்தோம். இனி இந்த உவமையின் ஒப்புமைத் திறத்தைக் காண்போம்.
அசோகமரம் அரண்மனைப் பெண்டிருக்கு உவமை. அம் மரத்தில் பூத்திருக்கும் மலர்கள், அப் பெண்டிர் அணிந்திருக்கும் அணிகலன்களுக்கு உவமை. பூக்களைப் பற்றிச் சொல்லும்போது சினை தலைமணந்த என்கிறார் புலவர். பெரும்பாலான மற்ற மரத்துப் பூக்கள் கிளைகளிலிருந்து தொங்கும் நீண்ட காம்பில் பூத்திருக்கும் ஆனால், அசோகமரத்தின் பூக்கள் அந்த மரத்தின் கிளைகளில் நெருங்கிக் கூடியிருக்கும் எனக் கண்டோம். அதை இங்குப் புலவர் குறிப்பிடுவதன் காரணம் என்ன? நாம் காணும் பெண்டிர் அரச மகளிர் அல்லவா? உடம்பு முழுக்க, அங்கங்கே அழகிய அணிகலன்கள் அணிந்திருப்பர் அல்லவா! கைகளில் வளையல்கள், தோள்களில் கைவந்தியம், தலையலங்காரத்தில் மணிச் சரங்கள், கழுத்தில் ஆரங்கள், இடுப்பில் காழ் அக மேகலை, தொடைகளில் தொங்கும் வளைந்த சங்கிலிகள் என அவர்கள் உடல் முழுதும் காணப்படும் பல்வேறு விளங்கிழைகள் அவர்களின் உடம்பில் ஒட்டிக்கொண்டுதானே இருக்கும்? இவ்வாறு உடம்பில் அங்கங்கே நெருங்கி ஒட்டிக்கொண்டு இருக்கும் இந்த அணிகலன்களுக்கு எத்துணை பொருத்தமான உவமை இந்த சினை தலைமணந்த ஒண்பூம் பிண்டிகள்?
இந்த மலர்களைச் சுரும்புபடு செந்தீ என்கிறார். செந்தீ என்ன பொருத்தமான சொல்லாட்சி என்று முன்னர்க் கண்டோம். கனன்று எரியும் தீயின் அடிப்பகுதி சிவந்தும், அதன் மேல்பகுதியின் கொழுந்து மஞ்சளாகவும் காணப்படும். அசோக மலரைப் பற்றிய விளக்கம் இவ்வாறு கூறுகிறது : The Ashoka flowers come in heavy, lush bunches. They are bright orange-yellow in color, turning red before wilting. தொடக்கத்தில் மஞ்சளாகப் பூக்கும் பிண்டி என்ற அசோக மலர், பின்னர் செம்மஞ்சளாக (orange) மாறி, இறுதியில் சிவப்பு நிறத்தை அடையும்.
இந்தச் செந்தீயில் இடையிடையே காணப்படும் கரும் புள்ளிகள் அந்த மலரை மொய்க்கும் கருவண்டுகளாம்! இதைத்தான் சுரும்புபடு செந்தீ என்கிறார்.
இந்தக் காட்சியைத்தான் தமனியம் வளைஇய தாவில் விளங்கிழை-க்கு ஒப்பிடுகிறார் புலவர். தமனியம் என்பது பொன் - இங்கே பொன்னிறத்திற்கு ஆகிவந்தது என்பார் பெருமழைப்புலவர்.
பொன்னிறமும் செந்நிறமும் கலந்து தோன்றும் அந்த மலர்க் குவியல், பொன் சூழச் செம்மணிகள் பதித்து ஒளிரும் நகைகளுக்கு (விளங்கிழை) எத்துணை பொருத்தம் பாருங்கள்! சுரும்புபடு செந்தீ என்றது எதற்காக? தீயின் இடையில் தோன்றும் கரும்புள்ளிகள் மலரின் மேல் மொய்த்திருக்கும் கருவண்டுகளுக்கு உவமை என்றால், அந்த மலர்க்கூட்டத்திற்கு ஒப்பான நகைக்குவியலில் கருத்த குறைகள் இருக்குமோ? இல்லை எனும் முகமாகத்தான் தாஇல் விளங்கிழை என்கிறார் புலவர். தா என்பது குற்றம். பொன்னில் பதித்த செம்மணிகளுக்கு இடையிடையே ஒன்றிரண்டு நீலமணிகளும் பதிக்கப்பட்டிருக்கலாம்; அவையே அந்தச் சுரும்புகள் என்கிறாரோ புலவர்? இப்படி நம் கற்பனையைச் சிறகடிக்க வைக்கும் இந்த அழகிய ஒப்புமைக் குவியல், புலவரின் தேர்ந்த சொல்லாட்சியும், சிறந்த ஒப்புமைத் திறனும் வடித்து நிற்கும் சீரிய சொற்சித்திரமாய்த் திகழவில்லையா?
6.83. மயில் ஓர் அன்ன சாயல், - மது 706
6.84. மாவின் தளிர் ஏர் அன்ன மேனி, --------- - மது 706,707
6.85. தளிர்ப்புறத்து, ஈர்க்கின் அரும்பிய திதலையர் - மது 707,708
மயில்ஓர் அன்ன சாயல் மாவின்
தளிர்ஏர் அன்ன மேனி தளிர்ப்புறத்து
ஈர்க்கின் அரும்பிய திதலையர் -------- - மது 706-708
இந்த அடிகளும் முன்னர்க் கண்ட அதே அரசமகளிரைப் பற்றியே கூறுகின்றன.
மயிலைப் போன்ற சாயலையும், மாந்தளிர் போன்ற மேனியையும் கொண்ட மகளிர், அந்த மாந்தளிரின் வெளிப்பக்கத்தில் இருக்கும் ஈர்க்கினைப் போன்ற தேமலை உடையவர்கள் என்பது இதன் பொருள்.
சாயல் என்பதற்கு ஒத்த தன்மை என்ற பொருள் உண்டு. இருப்பினும் அதற்கு இங்கே வனப்பு, அழகு, மென்மை என்றே பொருள் கொள்ளலாம். மயிலின் வனப்பும், மகளிரின் வனப்பும் ஒரே தன்மையுள்ளன என்பதைத்தான் மயில் ஓரன்ன சாயல் என்பது குறிப்பதாகக் கொண்டால் இங்கே நேரடியான உவமம் இல்லை. ஆனால், இங்கே ஓர் என்பதை அசைச்சொல்லாகக் கொண்டு மயில் அன்ன சாயல் என்றும் இந்த அடியைப் படிக்கலாம்.
மாமரத்தின் தளிரின் அழகைப் போன்ற நிறத்தைக் கொண்டவர்கள் அந்த அரசமகளிர். இதைத்தான் நாம் மாநிறம் என்கிறோம்.
மாநிறம் என்பது கருப்பும் இல்லாமல், சிவப்பும் இல்லாமல் இடைப்பட்டிருக்கிற ஒருநிறம் அது. உண்மையில் மாநிறம் என்பது மாந்தளிரின் நிறம்தான் என்பதைப். படத்தில் காணலாம்.
ஈர்க்கு என்பது ஓலைகளின் நடுவில் இருக்கும் நரம்பு போன்ற பகுதி. தென்னை ஓலைகளிலிருந்து இந்த ஈர்க்குகளை எடுத்துத்தான் தென்னைமாறு செய்கிறார்கள். வெற்றிலையின் பின்புறத்திலும் ஈர்க்கினைப் பார்க்கலாம். நியமப்படி வெற்றிலைபோடுகிறவர்கள், வெற்றிலையை மடித்து, புடைத்துக்கொண்டிருக்கும் ஈர்க்கினை நெடுகக் கிள்ளி எடுத்து, காம்பினையும் நீக்குவார்கள். மாந்தளிருக்கும் ஈர்க்கு உண்டு. அந்த ஈர்க்கின் நிறத்தைப் போன்று பெண்களின் மேனியில் ஒருவிதத் தேமல் படிந்திருக்குமாம். இது திதலை என்றும், சுணங்கு என்றும் அழைக்கப்படும்.
இந்தத் திதலை பெண்கள் மேனியில் மின்னுகின்ற மஞ்சள் நிறப் புள்ளிகளாகத் தோன்றுமாம். இதனை அழகுத்தேமல் என்பார்கள். இது அவர் மேனிக்கு அழகூட்டும் எனத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
பொன் உரை கடுக்கும் திதலையர் – திரு. 145
எனத் திருமுருகாற்றுப்படை கூறுவதைக் கவனியுங்கள். பொன்னை அதற்குரிய உரைகல்லில் தேய்த்து அந்தப் பொன்னின் தரத்தைக் காண்பார்கள். இது தங்கத்தின் மாற்று எனப்படும். அந்தத் தேய்ப்பில் கல்லின் பரப்பில் பொன் துகள்கள் மினுமினுக்கும். அதுவே பொன் உரை. இந்தப் பொன் உரை போன்று புள்ளி புள்ளியாக இருக்குமாம் மங்கையரின் மேனியில் உள்ள திதலை. இந்தத் திதலை அரும்புகிறபோது அது மாந்தளிரின் ஈர்க்கின் நிறத்தை ஒத்திருக்கும் என்கிறார் புலவர்.
திதலையின் நிறத்திற்குப் புலவர் கூறவந்த உவமை, அவரின் கூரிய நோக்கினைப் புலப்படுத்தவில்லையா? புலவர்கள் உலகத்தைப் பார்ப்பது எப்போதுமே ஓர் ஒப்புமை நோக்கில் என்பதுவும், இதுவே அவர்களின் பாடல்களுக்கு மெருகூட்டுகிறது என்பதுவும் புரிகிறதா?
...
மதுரைக்காஞ்சி – உவமைக் காட்சிகள்
86 முதல் 90 வரை
மதுரைக்காஞ்சியில் உள்ள 96 உவமைகளையும் பாடலின் தொடக்கத்திலிருந்து வரிசையாகத் தொகுத்துக் கூறும் கட்டுரைகளில் இது ஒன்பதாவது ஆகும்.
மதுரைக்காஞ்சியைப் பாடிய புலவர் மாங்குடி மருதனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சிறப்பைக் கூறி அவனை வாழ்த்துகிறார். அவனுடைய வெற்றிகளை எல்லாம் புகழ்ந்து கூறும் புலவர் உலகில் நிலையான புகழைத் தருவது அறவழியில் ஆட்சிசெய்தலே என்று அறிவுறுத்துகிறார்.
முதலில் பாண்டியனின் முன்னோர்களின் சிறப்பை விதந்தோதுகிறார் புலவர். அடுத்து மன்னனின் பல்வித வெற்றிகளைப் பாராட்டி மகிழ்கிறார். பின்னர் பாண்டிய நாட்டின் பல்வகை வளங்களைச் சிறப்பித்துக் கூறுகிறார். அடுத்து மதுரைமாநகருள் நம்மை அழைத்துச் செல்லும் புலவர், நகரின் பல்வேறு பகுதிகளை உவமை நயத்துடன் விவரித்துக்கூறிய புலவர், இப்போது அரசனின் அரண்மனைக்குள் நம்மை அழைத்துச் சென்று அங்கு நடமாடும் அரச மகளிரைக் காட்டுகிறார்.
6.86 சுடர்இதழ்த் தாமரை (வாள் முகத்து) - மது 710
6.87. தாதுபடு பெரும்போது புரையும் வாண்முகத்து - மது 711
கடவுள்கயத்து அமன்ற சுடர்இதழ்த் தாமரை
தாதுபடு பெரும்போது புரையும் வாள்முகத்து
ஆய்தொடி மகளிர் ------------ ----------- - மது 710 - 712
இவையும் பாண்டியன் அரண்மணையில் இருக்கும் அரசமகளிரைப் பற்றிய உவமைகளே.
இறைத்தன்மையுள்ள பொற்றாமரைக் குளத்தில் நெருங்கி வளர்ந்த, சுடர் போன்ற இதழ்களையுடைய தாமரையின் தாது உண்டாகும் பெரிய பூவை ஒக்கும் ஒளியினையுடைய முகத்தினையும், ஆராய்ந்த தொடியினையும் உடைய மகளிர் என்பது இதன் பொருள்.
அரசமகளிரின் முகத்திற்குத் தாமரையை ஒப்புநோக்கிய புலவர், அந்தத் தாமரையின் இதழ்களைச் சுடருக்கு உவமிக்கிறார்.,
தாமரையின் ஒவ்வொரு இதழையும் பாருங்கள். எரிகின்ற தீச்சுடர் போல் இல்லையா? இதைத்தான் புலவர் சுடர் இதழ்த் தாமரை என்கிறார்.
தாமரைப்போது போன்ற முகம் என்று அரசமகளிர் முகத்தை வருணிக்கிறார் புலவர். போது என்பது மொட்டையும், மலரையும் குறிக்கும். எனவே, இது மொட்டும் இல்லாமல், மலரும் இல்லாமல் இரண்டுக்கும் இடையில் உள்ள நிலையில் இருக்கும் பூ எனலாம். எனவே, இது மொட்டுப்பருவம் முடிந்து மலரும் பருவத்தின் தொடக்க நிலையில் இருக்கும் பூ எனலாம். இதனைக் குறிக்க, தாதுபடு பெரும்போது என்கிறார். எனவே இந்த மகளிர் கன்னிப்பருவம் முடிந்து மங்கைப்பருவத்தை எட்டியிருக்கும் மகளிர் எனலாம்.
சோழனின் உறைந்தை மாநகரின் பொய்கைகளின் அழகை வருணிக்கப்போந்த சிறுபாணாற்றுப்படைப் புலவர் நல்லூர் நத்தத்தனார், அங்கிருக்கும் அழகிய மங்கையரின் திருமுகத்தைப் போன்று பொய்கையின் தாமரைப்பூக்கள் மலர்ந்திருக்கின்றன என்று கூறும் முகத்தான்
வருமுலை அன்ன வண்முகை உடைந்து
திருமுகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை - சிறு 72,73
என்று கூறியிருப்பதையும் இங்கு நினைவுகூரலாம்.
6.88. முருகு இயன்று அன்ன உருவினை ஆகி - மது 724
வல்லோன் தைஇய வரிப்புனை பாவை
முருகுஇயன்று அன்ன உருவினை ஆகி - மது 724
782 அடிகளைக் கொண்ட இப் பாடலில், ஏறக்குறைய இறுதிக் கட்டத்தில் பாண்டிய மன்னனின் தோற்றத்தைப் பற்றிப் புலவர் இவ் அடிகளில் கூறுகிறார்.
சிற்பத்துறை வல்லோன் தன் கையால் வரைந்து செதுக்கிச்செய்த சிலையில் முருகப்பெருமான் தங்கியிருந்து அருள்செய்வதைப் போன்ற தன்மையுடையவன் ஆகி என்பது இதன் பொருள்.
மனிதன் செய்த சிலை எவ்வாறு தெய்வம் ஆகிறது? சிலை செய்து முடித்த பின் அதற்குச் செய்யப்படும் சிறப்பு வழிபாடுகள் அச் சிலையைத் தெய்வத் தன்மை கொண்டதாக மாற்றுகின்றன. அப்போது அச் சிலை தெய்வீகப் பொலிவு பெறுகிறது. இதைத்தான் வரிப்புனை பாவை முருகு இயன்று என்கிறார் புலவர். இவ்வாறே, மனிதனாய்ப் பிறந்த ஒருவன் மன்னனாய் முடிசூட்டப்பட்ட பின்னர் தெய்வப் பொலிவு பெறுகிறான். அவன் அரியணையில் இருக்கும்போது அத்தகைய பொலிவுடன் தன் இருக்கையில் அமர்ந்திருக்கிறான் என்கிறார் புலவர்.
செதுக்கிய சிற்பம் ஒன்றில் இறைவன் வந்து தங்கியிருப்பது மக்கள் தன்னை வணங்கி மேன்மைப் படுத்தவேண்டும் என்பதற்கல்ல; மாறாக அவ்வாறு வணங்கும் மக்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஊழ் என்ற சிற்பியால் ஆக்கப்பட்ட பாவையாகிய உன் உடம்பின் மீது பற்றுக்கொள்ளாமல், அவ் உடம்பில் ‘நீ' இருப்பது உன் மக்களைக் காத்து அறநெறியில் ஆட்சிசெய்யத்தான் என்பதை பாண்டியனுக்கு அறிவுறுத்துகிறாற் போல் புலவர் இந்த உவமையைக் கையாண்டுள்ளார் என்று தோன்றுகிறது. இதுவே இப் பாடலின் மையக் கருத்து ஆகும் என்பது இப் பாடலுக்கு மதுரைக்காஞ்சி என அவர் பெயர் வைத்திருப்பதே நன்கு உணர்த்தும். காஞ்சி என்பது நிலையாமை; அது இந்த உடம்பு - உலக வாழ்வு.
6.89 வருபுனல் கற்சிறை கடுப்ப இடைஅறுத்து - மது 725
வருபுனல் கற்சிறை கடுப்ப இடைஅறுத்து
ஒன்னார் ஓட்டிய செருப்புகல் மறவர் - மது 725,726
அரசவை கூடியதும் பாண்டியமன்னன் தன்னிடம் சிறப்பாகப் பணிபுரியும் பலரை முதலில் அழைப்பித்து அவர்களுக்குச் சிறப்புச் செய்கிறான். அவர்களில் மறவர்களின் சிறப்பைப் புலவர் இங்குக் கூறுகிறார்.
வருகின்ற ஆற்றுநீரைக் கல்லணை தாங்கினாற் போலப் பகைவர் படையை நடுவே தடுத்து, அப் பகைவரை விரட்டிய, போரை விரும்பும் படைத்தலைவர் என்பது இதன் பொருள்.
பெருக்கெடுத்து விரைந்துவரும் பெருவெள்ளமும், வலிமையான அணையின் முன்னால் மடங்கிப் படுத்துவிடுகிறது அல்லவா? முன்னேறிவரும் பகைவரின் படைகளின் முன்னே தான் ஒருவனாய் நின்று, அவரை இடைமறித்து, போரிட்டு அவரை வென்று விரட்டிய வீரர்களைப் பாட, தொல்காப்பியம்,
வருவிசைப் புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமை யானும் - புறத்திணை - 8
என்று ஒரு தனித் துறையே அமைத்திருக்கிறது. எனவே, அப்பேர்ப்பட்ட மறவரை முதலில் வருவித்துப் பாராட்டுச் செய்கிறான் பாண்டியமன்னன்.
6.90. எரி நிமிர்ந்து அன்ன தானை நாப்பண் - மது 734
எரிநிமிர்ந்து அன்ன தானை நாப்பண்
பெருநல் யானை போர்க்களத்து ஒழிய
விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின் - மது 734 - 736
இங்கும், பாண்டிய மன்னன் தன் அவைக்களத்தில் முதலில் பரிசுகளை வழங்கும் காட்சியை இங்கு வருணிக்கிறார். கணைதாங்கு மார்பின், மாதாங்கு எறுழ்த்தோள் மறவரையும், நல் எயில் உழந்த செல்வரையும், பெருநல் யானைகளை வீழ்த்தி விழுப்புண் பெற்ற குரிசிலரையும் வரவழைத்துச் சிறப்புச் செய்கிறான்.
நெருப்பு நிமிர்ந்து பரவியதைப் போன்ற பகைவரின் படைக்கு நடுவே சென்று, பெரிய நல்ல யானைகளைப் போர்க்களத்தில் வெட்டிச் சாய்த்து, விழுப்புண்பட்டுச் சாய்ந்து வீழ்ந்த தலைவர்களைக் கொணருங்கள் என்பது இதன் பொருள்.
நிமிர் என்பதற்கு நீளு, வளர், பரவு (be outstretched, shoot up, spread out) என்ற பொருள் உண்டு. பொங்கி எழு என்ற பொருளும் உண்டு. “எவ்வளவு நாள்தான் விட்டுக்கொடுத்துக்கிட்டே இருப்பான்.. இப்ப நிமிந்துட்டான்” என்று நாம் சொல்வதில்லையா? இங்கே பணிவுநிலையிலிருந்து மாறி புது முனைப்புடன் பொங்கி எழுவதையே நிமிர்தல் என்கிறோம்.
பகைவர் ஆதிக்கம் மேலோங்குவதைக் கவனித்த ஒரு படைத்தலைவன், தன்னுடன் சில வீரர்களைக் கூட்டிக்கொண்டு, படைகளை ஊடுருவிக்கொண்டு எதிரிப்படைகளின் நடுப்பகுதிக்கு விரைகின்றான். பகைவரின் திடீரென்ற எழுச்சிக்கு அங்கிருந்த யானைப்படையே காரணம் என்று கண்ட அவன் யானைப்படையுடன் மோதுகிறான். யானைகளை வெட்டிச்சாய்க்கிறான். அவனும், உடன் வந்த பலரும் பெருத்த காயம் அடைகின்றனர். இருப்பினும், அந்தத் தலைவனின் தக்கநேரத்து நடவடிக்கையால் போரின் நிலை மாறுகிறது. பாண்டியன் படைகளுக்கு வெற்றி கிட்டுகிறது. இதை நன்றியுடன் நினைவுகூர்ந்த மன்னன், தான் அடுத்துக் கூட்டிய அரசவையில் அந்தத் தலைவனையும் அவனது வீரர்களையும் தருவித்துச் சிறப்புச் செய்கிறான்.
...
மதுரைக்காஞ்சி – உவமைக் காட்சிகள்
91 முதல் 96 வரை
மதுரைக்காஞ்சியில் உள்ள 96 உவமைகளையும் பாடலின் தொடக்கத்திலிருந்து வரிசையாகத் தொகுத்துக் கூறும் கட்டுரைகளில் இது பத்தாவதும் இறுதியானதும் ஆகும்.
மதுரைக்காஞ்சியைப் பாடிய புலவர் மாங்குடி மருதனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் சிறப்பைக் கூறி அவனை வாழ்த்துகிறார். அவனுடைய வெற்றிகளை எல்லாம் புகழ்ந்து கூறும் புலவர் உலகில் நிலையான புகழைத் தருவது அறவழியில் ஆட்சிசெய்தலே என்று அறிவுறுத்துகிறார்.
முதலில் பாண்டியனின் முன்னோர்களின் சிறப்பை விதந்தோதுகிறார் புலவர். அடுத்து மன்னனின் பல்வித வெற்றிகளைப் பாராட்டி மகிழ்கிறார். பின்னர் பாண்டிய நாட்டின் பல்வகை வளங்களைச் சிறப்பித்துக் கூறுகிறார். அடுத்து மதுரைமாநகருள் நம்மை அழைத்துச் செல்லும் புலவர், நகரின் பல்வேறு பகுதிகளை உவமை நயத்துடன் விவரித்துக்கூறிய புலவர், இப்போது அரசனின் அரண்மனைக்குள் நம்மை அழைத்துச் சென்று அங்கு நடமாடும் அரச மகளிரைக் காட்டிவிட்டு, பின்னர் மன்னன் அரண்மனைக்குள் நிகழும் நிகழ்வுகள் பலவற்றைக் காட்டுகிறார்.
அரசவை கூடியதும் முதலில் மன்னன் தன்னிடம் சிறப்பாகப் பணிபுரிந்த பலரை அழைத்துப் பாராட்டுகிறான்.
6.91. வானத்து அன்ன வளநகர் பொற்ப - மது 741
6.92. நோன்குறட்டு அன்ன ஊன்சாய் மார்பின் - மது 742
காழ்மண்டு எஃகமொடு கணையலைக் கலங்கி
பிரிபிணை அரிந்த நிறம்சிதை கவயத்து
வானத்து அன்ன வளநகர் பொற்ப
நோன் குறட்டு அன்ன ஊன்சாய் மார்பின்
உயர்ந்த உதவி ஊக்கலர் தம்மின் - மது 739-743
மார்பின் கவசம் அறுபட்ட நிலையில், வேலும் அம்பும் மார்பில் பாய்ந்து குத்தி நிற்க, வண்டிக்குடம் போன்ற மார்புடனே தொடர்ந்து தம் தாய்நாட்டுக்காகப் போரிட்ட வீரர்களைப் பற்றிய வருணனை இது.
கைப்பிடிக்குள் செருகின இரும்புமுனை கொண்ட வேல்களுடன், அம்புகளும் பாய்வதால் நிலைகலங்கி, பிரிபுகளின் பிணைப்புகள் விட்டுப்போன, தம் உருவம் சிதைந்த கவசங்களை அணிந்த, விண்ணுலகத்தைப் போன்ற வளமுள்ள நகரம் மேலும் பொலிவுபெற, வண்டியின் வலிமையுள்ள குறடு போன்று, ஊன் வலிமை இழந்து நிற்கும் மார்பினோடே உயர்ந்த உதவிக்காக ஊக்கமுடன் முயன்றோரைக் கொணர்மின் என்பது இதன் பொருள்.
வானத்து அன்ன வளநகர் பொற்ப என்பதில் வானம் என்பது விண்ணுலகத்தைக் குறிக்கும். விண்ணுலகம் பொலிவு மிக்கது. அத்தகைய பொலிவு தம் தாய்மண்ணுக்கும் கிட்டவேண்டும் என்பதற்காகத் தம் உயிரைக் கொடுத்தேனும் போரில் வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கில் வீரர்கள் போரிட்டனர். போரில் மன்னன் தோற்றுவிட்டால் நகரமே துயருற்றுப் பொலிவிழந்து காணப்படும். மாறாக, போரில் வெற்றிபெற்றால் நகர் முழுதும் ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம்தான். நகர் முழுதும் அலங்கரிக்கப்படும். இரவில் தெருவெங்கும் விளக்குகள் மின்னும். வெற்றிக்கொடிகள் ஏற்றப்படும். இந்தக் காட்சியையே விண்ணகம் போன்று நகர் பொலிவுபெற்று விளங்குகிறது என்கிறார் புலவர். இவ்வாறு தம் வளநகர் வானுலகத்தைப் போல் பொலிவுறவே வீரர்கள் தம் உயிரைக்கொடுத்துப் போரிடுகின்றனர் என்கிறார் புலவர்.
குறடு என்பது வண்டிச் சக்கரத்தின் ஒரு பகுதி. வண்டியின் அச்சில் கோக்க குடம் போன்ற ஓர் உருளை செய்வார்கள். அதுவே குறடு எனப்படும். அதைச் சுற்றிலும் சிறிய பள்ளங்கள் செய்து அவற்றில் ஆரக்கால்களை இறுக்கமாக ஊன்றுவார்கள்
வீரர்கள் போரிடும்போது அவர்களை நோக்கிவரும் வேல்களும், அம்புகளும் அவர்களின் மார்பினில் பாயும். அவற்றை மார்புக் கவசங்கள் தாங்கிக் கொள்ளும். அக் காலத்தில் இந்த மார்புக் கவசங்கள் தோலினால் செய்யப்பட்டன. மேலும் இரண்டு மூன்று பகுதிகளை இணைத்தும் அவற்றைச் செய்வார்கள். போர்க்களத்தில் முதலில் வீரர்கள் எதிர்கொண்ட வேல்களும், அம்புகளும் இந்தக் கவசத்தில் பட்டு, அதன் பொருத்துவாய்களை அறுத்துப்போடும். அடுத்து வரும் வேல்களும் அம்புகளும் இவ்வாறு சிதைந்துவிட்ட கவசத்தை துளைத்துச் செல்லும். அவை மார்பில் நுழைந்து சதையில் குத்திநிற்கும். மேலும் மேலும் வருகின்ற அம்புகள் மீண்டும் மீண்டும் மார்பில்பட்டு செருகிக்கொள்ள, அந்தப் போர்வீரனின் மார்பு வண்டியின் குறடு போன்று தோற்றமளிக்கும் என்று புலவர் கூறுகிறார். இவ்வாறு குத்துண்டதால் வீரர்கள் சாய்ந்து வீழ்ந்துவிடவில்லை. குறடு போன்ற மார்புடன் அவர்கள் ஊக்கத்துடன் தொடர்ந்து போரிடுகின்றனர். வெற்றிகிட்டிய பின்னர், சிகிச்சை பெற்று, நலமடைகின்றனர். அத்தகைய வீரர்களைக் கொணருங்கள் என்று மன்னன் அழைப்பதாகப் புலவர் இங்கே குறிப்பிடுகின்றார்.
6.93. குரூஉ குய்ப்புகை மழை மங்குலின் - மது 757
களம்தோறும் கள் அரிப்ப
மரம்தோறும் மை வீழ்ப்ப
நிண ஊன் சுட்டு உருக்கு அமைய 755
நெய் கனிந்து வறை ஆர்ப்ப
குரூஉக் குய்ப் புகை மழை மங்குலின்
பரந்து தோன்றா வியல் நகரால் - மது 753 - 758
மதுரை நகரின் உணவு வளத்தை ஓர் அழகிய உவமையால் வருணிக்கிறார் புலவர் மருதனார்.
களங்கள்தோறும் கள்ளை அரிப்பவும்,
மரத்தடிகள்தோறும் செம்மறிக்கிடாயை வெட்டவும்,
நிணத்தையுடைய தசைகள் சுடுதலால் (அந்நிணம்)உருகுதல் பொருந்தவும், 755
நெய் நிறையப்பெற்று வறுபடும் கறிகள் ஆரவாரிப்பவும்,
நிறத்தையுடைய தாளிப்புப் புகை கீழிறங்கிய மேகங்களின் மூட்டத்தைப் போலப்
பரந்து தோன்றவும், அகன்ற (இம் மதுரை மா)நகரத்தே,
என்பது இதன் பொருள்.
களம் என்பது நெல் அறுத்துப் போரடிக்கும் களம். நிறைய நெல்லைப் போரடித்துச் சோர்ந்துபோன உழவர்கள் கள்ளையுண்டு களைப்பைப் போக்குகின்றனர். விளைச்சல் அதிகமானதால் மகிழ்ந்த உழவர் ஆட்டுக்கிடாய் அடித்து விருந்துவைத்துக் கொண்டாடுகின்றனர். அந்தக் கறியைப் பொரிக்கும்போது எழும் தாளிப்புப்புகை மழை மங்குல் போல் எங்கும் பரவிக்கிடந்ததாம்.
குய் என்பது தாளிப்பு. குய்ப்புகை என்பது தாளிக்கும்போது அல்லது எண்ணெயில் பொரிக்கும்போது எழும்பும் புகை. மங்குல் என்பது மூடுபனி (fog); இலேசான மேக மூட்டம். புகையினால் எழும் மங்குலைப் புகைமூட்டம் என்பர். பெருமழை பெய்யும்போது சில நேரங்களில் மேகங்கள் தரையளவுக்கு வரும். அதுவே மழைமங்குல். காலைவேளையில் பல வீடுகளிலும் சமையல் தொடங்குவதால், தாளிப்புப் புகை மழைமங்குல் போல் பரந்து தோன்றியது என்கிறார் புலவர்.
தாளிக்கும்போது எழும் புகை வெள்ளை வெளேர் என்று இருக்காது. சற்றே கருமை கலந்து சாம்பல்நிற வண்ணத்தில் இருக்கும் அப் புகையையே குரூஉப் புகை என்கிறார் புலவர். குரூஉ என்றால் நிறம் என்று பொருள். அது வெள்ளை அல்லாத வேறு எந்த நிறமாகவும் இருக்கலாம். மேகங்கள் வெண்மையாக இருக்கும்போது மழை பொழியாது. அவ்வாறு ஒன்றிரண்டு துளிகள் விழுந்தாலும் மேகம் கீழிறங்கி வராது. கருமையான மேகங்கள் பெருமழை பெய்யும்போது சிலவேளைகளில் மேகங்கள் புகைமூட்டமாகக் கீழிறங்கி வரும். அதுவும் வெளிறின கருமைநிறமாகத்தானே இருக்கும். குரூஉப் புகை மழைமங்குல் என்பது என்ன பொருத்தமான உவமை பாருங்கள்!
மழை என்பதற்குக் கருமை, மேகம் என்றும், மங்குல் என்பதற்கு மேகம், திசை என்றும் பொருள் கொள்ளப்பட்டு, மழைமங்குலின் என்பதற்கு மழையையுடைய திசைகள் போல என்றும், மழை போலத் திசைதோறும் என்றும் பலவாறாக விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், இவ்விடத்தில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள பொருளே மிகப் பொருத்தமாக அமையும் என்பதைக் கீழ்க்கண்ட அடிகளும் வலியுறுத்துகின்றன.
முனைசுட எழுந்த மங்குல் மாப்புகை
மலைசூழ் மஞ்சின் மழகளிறு அணியும் - புறம் 103/6,7
பகைவர் இடங்களைச் சுடுவதால் எழும் மங்குல் மாப்புகை, மலையைச் சூழ்ந்திருக்கும் மஞ்சு போல, யானைகளை மறைக்கும்.
திருவுடைத் திருமனை ஐதுதோன்று கமழ்புகை
வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும் - புறம் 379/16,17
செல்வமுள்ள மனைகளில் மெல்லிதாகத் தோன்றும் மணமிக்க புகை கீழிறங்கும் மழைமங்குலைப் போல் தெருவையே மறைக்கும்.
எனவே, மழைமங்குல் மஞ்சு போன்றது என்றும், மெல்லிதானது என்றும் உறுதியாகிறது. அதுவே இயற்கான வருணனையும் ஆகும்.
6.94. நிலம்தரு திருவில் நெடியோன் போல - மது 763
தொல் ஆணை நல் ஆசிரியர்
புணர் கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின்
நிலம்தருதிருவில் நெடியோன் போல
வியப்பும் சால்பும் செம்மை சான்றோர்
பலர் வாய் புகர் அறு சிறப்பின் தோன்றி - மது 761-765
அறிவுடைய சான்றோர் பலருடன் கூடி உரையாடும் சிறப்புமிக்க முன்னோன் நிலந்தருவில் பாண்டியன் என்ற மன்னனைப் போல் நீயும் வாழ்வாயாக என்று நெடுஞ்செழியனை வாழ்த்துகிறார் மாங்குடி மருதனார்.
தொன்றுதொட்டு பேராளுமை பெற்ற நல்லாசிரியர் பலருடன் அளவளாவி மகிழும் புகழ்மிக்க சிறப்பின் நிலந்தரு திருவில் பாண்டியன் போல, மற்றவர் வியந்து நோக்கும் பெருமையும், நற்பண்புகளும், செம்மையுமுடைய சான்றோர் பலர் புகழ்ந்து வாழ்த்தும் சிறப்புடன் தோன்றி என்பது இதன் பொருள்.
நிலந்தரு திருவில் பாண்டியன் என்ற மன்னன் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கியவன். அங்குதான் தொல்காப்பியர் தமது நூலான தொல்காப்பியத்தை அரங்கேற்றினார். அதங்கோட்டு ஆசான் என்ற ஆசிரியரின் தலைமையில் அன்றைய தமிழ்ச்சங்கம் இயங்கியது எனத் தெரிகிறது.
வேடர்கள் காட்டில் வேட்டையாடித் தமக்குக் கிடைத்தவற்றை அங்கேயே சமைத்துப் பகிர்ந்துகொண்டு உண்பதைக் கூட்டுண்ணுதல் என்று நம் இலக்கியங்கள் கூறுகின்றன. இன்றைக்கும் பலர் ஓரிடத்தில் கூடிச் சமைத்து ஒன்றாக அமர்ந்து உண்ணுவதைக் கூட்டாஞ்சோறு சாப்பிடுதல் என்கிறோம். இந்தப் பாண்டியனும் தமிழ்ப் புலவர்களுடன் கூட்டுணவு உண்டிருக்கிறான். அவனது பசி அறிவுப்பசி; அவன் உண்டது தமிழ். இதனையே புலவர் புணர் கூட்டு உண்ட என்கிறார். புணர்தல் என்பது ஒன்றுகூடிப் பேசி அளவளாவுதல். அந்தப் புலவர் கூட்டத்தில் மன்னன் பார்வையாளனாக மட்டும் இல்லாமல், பங்காற்றுபவனாகவும் இருந்திருக்கிறான். அவனது புலமைத் திறத்தைக் கண்ட சங்கத்தார் அவனைப் புகழ்ந்து போற்றியிருக்கிறார்கள். அதைப் போலவே, இன்றைய பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனும் இன்றைய புலவர் வாழ்த்த சிறப்புடன் விளங்கவேண்டும் என்று புலவர் வாழ்த்துகிறார்.
6.95 முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் - மது 768
6.96. பன்மீன் நடுவண் திங்கள் போலவும் - மது 769
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன் மீன் நடுவண் திங்கள் போலவும்
பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கி - மது 768-770
பாண்டிய மன்னனை வாழ்த்தும் முறையில், மன்னன் ஞாயிறு போலவும் திங்களைப் போலவும் வாழ வாழ்த்துகிறார்.
கடலின் நடுவில் தோன்றும் கதிரவன் போலவும், பல விண்மீன்களின் நடுவே திகழும் திங்களைப் போலவும், வளம் பெற்ற சுற்றமோடு பொலிவுடன் இனிது விளங்கி என்பது இதன் பொருள்.
கன்னியாகுமரியில் விடியும் முன்னர், கிழக்குப்பக்கக் கடற்கரையில் நின்றுகொண்டு கடலைப் பாருங்கள். உங்கள் முதுகுப் பக்கம் மட்டும் நிலப் பகுதி இருக்க, மற்ற மூன்று பக்கங்களிலும் கடல் பரந்து கிடக்கும். கதிரவன் எழும் முன்னர், கடல் இருண்டு கிடக்கும். கடலைத் துளைத்துக்கொண்டு, கதிரவன் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் தலையைத் தூக்கிக்கொண்டு எழும்போது, கடல் அப்படியே ‘ஜக ஜக'வென்று மின்னத் தொடங்கும். அந்தக் காட்சியைப் பார்த்தவருக்கு, முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் என்ற உவமையின் அழகை விளக்கிக்கூறத் தேவையில்லை. முந்நீர் என்பது கடல். பாண்டியன் அரண்மனையில் பல்வேறு படைகள் உண்டு; தொல் ஆணை நல்லாசிரியர் இருப்பர்; பாணர் இருப்பர், அறங்கூறவையத்தார், எண்பேராயத்தார், ஐம்பெருங்குழுவினர் ஆகியோர் குழுமி இருப்பர். இருப்பினும் மன்னன் அவை பொலிவு பெறாது. மன்னன் அங்கு வந்து நுழைந்தவுடன் அந்த அரங்கமே பொலிவுபெறும். பூத்த சுற்றத்துக்கு நடுவே மன்னன் பொலிந்து இனிது விளங்குவான்.
அடுத்து, எத்தனை விண்மீன்கள் வானத்தில் இருந்தாலும், வானத்தில் திங்கள் இல்லாவிட்டால், “இன்றைக்கென்ன, அமாவாசையா?” என்பார்கள். இரவு வானத்துக்கு அழகு சேர்ப்பது சந்திரனே. விண்மீன்கள் போல் மின்னிக்கொண்டு அசைந்தாடும் அழகு மங்கையர் பலர் இருந்தாலும், மன்னன் அங்கு வரத் தாமதமானால், அந்தப்புறம் அழகிழந்தே காணப்படும். மன்னன் அங்கு நுழைந்தவுடன் பல்மீன் நடுவண் திங்கள் போல, பூத்துக்கிடக்கும் மீன் அன்ன சுற்றத்திற்கு இடையில் மன்னன் பொலிந்து இனிது விளங்குவான். இரண்டு உவமைகளை ஒருசேர அமைத்து, இரவும் பகலும் மன்னன் மக்களுக்கு இன்றியமையாதவன் என்பதை எத்துணை அழகுடனும், நுட்பத்துடனும் புலவர் உறுதிபடக் கூறுகிறார் என்பதைக் கவனியுங்கள்.
சிறுபாணாற்றுப்படையிலும் பல்மீன் நடுவண் பால்மதி போல - சிறு 219 என்ற அடி காணப்படுவது இதனுடன் ஒப்பிட்டு நோக்கத்தக்கது.
மதுரைக் காஞ்சி - உவமைக் காட்சிகள் முற்றும்.
ப.பாண்டியராஜா
அன்புடையீர்,
...
அன்புடையீர்,
...
வணக்கம் ஐயா.
"வானத்து அன்ன வளநகர் பொற்ப - மது ரை"யைப்பற்றிய உவமைக் காட்சிகளைத் தகுந்த படங்களுடன் விளக்கி தமிழ் விருந்து படைத்துள்ளீர்கள் ஐயா. மாவீரர்கள் மதுரையில் வாழ்ந்துள்ளதை எண்ணி மகிழ்கிறேன்.
--
முல்லைப்பாட்டு
பத்துப்பாட்டு நூல்களுள் ஐந்தாவதாக இடம்பெற்றுள்ள இந்நூல், 103 அடிகளைக் கொண்ட மிகச் சிறிய பாடல் ஆகும். இதைப் பாடியவர் காவிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்தவர். ஒரு பொன் வாணிகருக்கு மகனாகப் பிறந்த இவர், பூதன் என்னும் பெயர் கொண்டவர். எனவே, இவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் எனப்படுகிறார். பத்துப்பாட்டில் முதலில் வரும் நான்கு ஆற்றுப்படைப் பாடல்களை அடுத்து வருவது இப் பாடல். ஆற்றுப்படை இலக்கியங்களுக்குத் தலைவன் இருப்பது போன்று, இந்தப் பாடலுக்குப் பாட்டுடைத் தலைவன் இன்னார் என்று குறிப்பிடப்படவில்லை. இப் பாடல் முல்லைத்திணையைச் சேர்ந்த ஓர் அகப்பாடல் ஆகும். இப்பாடலில், கார்கால மழையில் தழைத்துச் செழித்த காயா, கொன்றை, வெண்காந்தள் போன்ற செடி, கொடி, மரங்களில் பூத்துக் குலுங்கும் மலர்கள் அழகுடன் விவரிக்கப்படுகின்றன. அகன்ற புன்செய்க் காடுகளில் மானினங்கள் துள்ளி விளையாட, மேகக் கூட்டங்கள் வானில் மிதந்து திரியும் காட்சி ஒரு குறும்படம் போல் கண் முன் ஓட்டப்படுகிறது. மாலைப் பொழுதில், மங்கையர் கைகூப்பித் திருமாலை வணங்கும் காட்சியும், மேயச் சென்ற பசுவை எண்ணி ஏங்கிக் குரல்கொடுக்கும் கன்றுகளை இடைச்சியர் தேற்றும் காட்சியும், போர்மேல் சென்ற தலைவனின் வரவை எண்ணித் தலைவி கண்களில் நீர் கோக்கக் காத்திருக்கும் காட்சியும் சொல்லோவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. மொத்தத்தில், ஒரு முல்லை ஒழுக்கப் பாடல் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கு இலக்கணமாக அமைந்தது போல் இப்பாடல் விளங்குகிறது.
பாடல் மிகச் சிறிதாக அமைந்தது போலவே, பாடலிலும் மிகக் குறைந்த உவமைகளே கையாளப்பட்டுள்ளன. இப் பாடலில் மொத்தம் ஐந்து உவம உருபுள்ள உவமைகளும், ஐந்து உவமத்தொகைகளுமாக மொத்தம் பத்து உவமைகளே காணப்படுகின்றன. காட்சிகளை உவமை வாயிலாக விளக்குவதைக் காட்டிலும் நேரடியாக புரியும்படி விளக்கும் திறன்படைத்த புலவரின் காட்சிப்படுத்தும் திறன் இதன்மூலம் வெளிப்படுகிறது எனலாம். இங்குள்ள உவமைகளின் எண்ணிக்கை இதோ:-
அன்ன - 1, ஆங்கு - 1, இன் - 1, கடுப்ப - 1, போல - 2, உவமத்தொகை - 14
மொத்தம் 10
முல்லைப்பாட்டு – உவமைக் காட்சிகள்
முல்லைப்பாட்டுக்குத் திணை முல்லை; அதாவது பிரிந்து சென்றிருக்கும் தலைவன் திரும்பி வரும்வரை ஆற்றியிருப்பது. இத் திணைக்குப் பெரும்பொழுது கார்காலம்; சிறு பொழுது மாலை; தெய்வம் திருமால். ஆக, எடுத்துக்கொண்ட உரிப்பொருளுக்கு ஏற்ற வகையில், முதற்பொருளையும் கருப்பொருளையும் தொடக்கத்திலேயே குறிப்பிட்டுத் தன் பாடலைத் தொடங்குகிறார் ஆசிரியர் நப்பூதனார். மாலையில் பெய்யும் கார்கால மழையுடன் திருமாலைக் குறிக்கும் ஓர் உவமையுடன் பாடல் ஆரம்பிக்கிறது.
5.1 நீர் செல நிமிர்ந்த மாஅல் போல - முல் 3
நனம்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போல
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி வலன்ஏர்பு
கோடுகொண்டு எழுந்த கொடும்செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை - முல் 1-6
அகன்ற இடத்தையுடைய உலகத்தை வளைத்து, சக்கரத்துடன்
வலம்புரிச் சங்கின் குறிகள் பொறிக்கப்பட்ட, திருமகளை அணைத்த பெரிய கையில்
மாவலி வார்த்த நீர் தன் கையில் சென்றதாக உயர்ந்த திருமாலைப் போல,
ஒலி முழங்குகின்ற குளிர்ந்த கடலைக் குடித்து வலமாக எழுந்து,
மலைச்சிகரங்களை வளைத்துக் கொண்டு எழுந்த விரைந்த போக்கையுடைய மேகம்
பெரு மழையைப் பெய்த சிறு பொழுதாகிய துன்பமூட்டும் மாலைக் காலத்து
என்பது இதன் பொருள்.
வாமன அவதாரத்தில், மாவலிச் சக்கரவர்த்தி, திருமாலுக்கு நிலவுலகைத் தானம் செய்து கைகளில் நீர் சொரிய, அந்த நீர் கைகளிலிருந்து ஒழுகும்போது விசுவரூபம் எடுக்கிறார் திருமால். அந்த திருமாலைப் போல கார்காலக் கரு மேகங்கள் கூடிநிற்கின்றன. திருமாலின் கையினின்றும் ஒழுகும் நீரைப் போல கருமேகங்கள் மழையைப் பொழிந்தன என்கிறார் புலவர். உயர்ந்து எழுந்த கரிய மேகங்கள் மழையாய் இறங்கும் காட்சி, கையினிறும் ஒழுகும் நீரோடு நிற்கும் திருமாலின் விசுவரூபத்தைப் புலவருக்கு நினைவுபடுத்துகிறது. திருமாலும் கரிய மேனியன்தானே! தூரத்தில் மழை இறங்கும் காட்சியை நேரில் கண்டிராதவர்கள் படத்தைப் பாருங்கள்.
உலகம் உவப்ப வலனேர்பு வளைஇப்
பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாஅங்கு - திரு 1, 2
என, திருமுருகாற்றுப்படையில் உலகத்தை வளைத்துத் தன் கதிர்களைப் பாய்ச்சும் ஞாயிற்றைப் புகழ்கிறார் நக்கீரர்.
வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென - நெடு 1, 2
என, நெடுநல்வாடையில் உலகத்தை வளைத்து எழுந்து மழையைப் பொழியும் மேகங்களைப் புகழ்கிறார் அதே நக்கீரர். ஆனால் நப்பூதனாரோ, ஒரே பாடலில் உலகத்தை வளைத்து எழுந்த திருமாலையும், கடலைப் பருகி வலனேர்பு கோடுகொண்டு எழுந்த மேகங்களையும் ஒப்பிட்டு, இரண்டையும் ஒன்றாக்கினார்.
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை என்ற அடியில் காணப்படும் முரண்சுவையைப் படித்து இரசித்து மகிழுங்கள்.
5.2 பூப்போல் உண்கண் புலம்புமுத்து உறைப்ப - முல் 23
--------- ---------- --------- வினைமுடித்து
வருதல் தலைவர் வாய்வது நீநின்
பருவரல் எவ்வம் களைமா யோய்என
காட்டவும் காட்டவும் காணாள் கலுழ்சிறந்து
பூப்போல் உண்கண் புலம்புமுத்து உறைப்ப - முல் 19-23
பிரிந்து சென்ற தலைவனின் வருகைக்காகக் காத்திருக்கும் தலைவி, அவன் திரும்பி வரவேண்டிய நாள் வந்தும், நேரம் தள்ளிக்கொண்டே சென்றதால், இனி எங்கே வரப்போகிறான் என்ற கவலையிலுள்ள நிலையைக் கூறுகிறார் புலவர்.
தான் மேற்கொண்ட வினையை முடித்துக்கொண்டு
தலைவர் வருவது என்பது உறுதியாய் நடக்கக்கூடியது, நீ நின்
மனத்தடுமாற்றத்தையும், துன்பத்தையும் களைவாயாக என்று கூறி,
(தலைவன் வருவதற்கான நல் நிமித்தங்களை) மீண்டும் மீண்டும் கூறிக் காட்டியும் ஏற்றுக்கொள்ளாது, மனக்கலக்கம் மிகுந்து,
பூப் போன்ற மையுண்ட கண்களில் ஒரே ஒரு கண்ணீர்த்துளி உறைந்து நிற்க
என்பது இதன் பொருள்.
போர்மேற் சென்ற தலைவன் திரும்பிவரும் காலமான கார்காலமும் தொடங்கிவிட்டது. அன்றைக்குப் பொழுதும் கழிந்து மெல்ல மெல்ல இருள் கவியத் தொடங்கிவிட்டது. தலைவன் வருவதற்கான அறிகுறிகள் இல்லை. எனவே, நெல்லும் மலரும் தூவிக் கைதொழுது, செவிலித்தாயர் வாசலில் நல்ல வாய்ச்சொல் கேட்பதற்காக நிற்கின்றனர். அப்படிக் கிடைக்கும் வாய்ச்சொல்லை அவர்கள் இறைவாக்காகவே எடுத்துக்கொள்வர். அப்பொழுது இடையர்குலப் பெண் ஒருத்தி கயிறுகளால் கட்டப்பட்ட சில பசுக் கன்றுகளைக் கூட்டிக்கொண்டு செல்கிறாள். கன்றுகள் வீட்டில் இருக்க, ஆநிரைப் பசுக்கள் பகலில் பக்கத்து மலைச் சாரலில் மேய்ந்து ஊர்திரும்பி, ஊருக்கு வெளியில் உள்ள தொழுவங்களில் அடைவதற்காக வீடு திரும்பும் நேரம் அது. பசுக்களை எதிர்கொள்ள கன்றுகளுடன் செல்கிறாள் இடைச்சி. கன்றுகள் பொறுமை இழந்து தாம் கட்டப்பட்டிருக்கும் கயிறுகளை இழுத்துக்கொண்டு விரைந்து செல்ல முயல்கின்றன. “அம்மா” என்று தம் தாயரைத் தேடிக் குரல்கொடுக்கும் கன்றுக்குட்டிகளை இழுத்து அடக்க முயலும் இடைச்சி, கன்றுகளைப் பார்த்து, “கொஞ்சம் பொறுங்கள், நும் தாயர் வருவர்” என்று கூறிக்கொண்டே வாசலில் நிற்கும் செவிலியரைக் கடந்து செல்கிறாள். ‘வருவர்' என்ற அந்தக் கூற்றை நல் நிமித்தமாகக் கொண்ட அந்தச் செவிலியர் தலைவியிடம் திரும்பி வந்து, அந்த நல்ல செய்தியைக் கூறுகின்றனர். தலைவியின் மனம் இதை ஏற்கவில்லை. மீண்டும் மீண்டும் தாயர் வற்புறுத்திக் கூறியும் தலைவியின் ஆற்றாமை குறையவில்லை. மாறாக, அடக்கமுடியாமல் கண்களில் நீர் கோக்கிறது. இருப்பினும், தலைவன் மீது உள்ள நம்பிக்கையால் அவள் தன் அழுகையை அடக்கிக்கொள்கிறாள். வந்த கண்ணீர் மீண்டும் உள்ளேயா போகும்? வந்த இடத்தில் நின்று தேங்கி, பின்பு ‘டொப்'-பென்று மார்பில் விழுகிகிறது. உறை என்பதற்குக் கீழே விழு (fall down), உதிர் (drop as rain) என்று பொருள்.
புலம்பு என்பது பொதுவாகத் தனிமை நிலையையும், பிரிவுத் துயரையும் குறிக்கும். எனவே, புலம்பு முத்து என்பதைப் பிரிவால் ஏற்பட்ட அழுகைக் கண்ணீர் எனக்கொண்டு, இது முல்லை ஒழுக்கத்திற்குப் புறம்பானது எனச் சில உரைகாரர் கூறுவர். ஆனால், புலம்பு முத்து என்பது தன்னந்தனியான முத்து அல்லது ஒரே ஒரு முத்து எனப் பொருள்படும்.
புள் ஆர் பெண்ணை புலம்பு மடல் செல்லாது - பெரும் 314
என்ற அடியில் புலம்பு மடல் என்பது தனித்து நிற்கும் ஒரே ஒரு மடல் எனப்பொருள் படும்.மேலும், பூப்போல் உண்கண் என்று புலவர் கூறுவதைக் கவனியுங்கள். மை தீட்டிய கண்கள் என்பதையே அன்றைய நாளில் மையுண்ட கண்கள் என்பார்கள். இதுவே உண்கண் ஆனது. தலைவனை எண்ணி ஏங்கியிருக்கும் தலைவி கண்ணுக்கு ஏன் மை தீட்டிக்கொள்கிறாள்? உண்கண் என்பதை உண்ட கண்கள் என்று கொண்டு ‘ஒருகாலத்தில் மை தீட்டிய கண்கள்' என்றும் சொல்லலாம். ஆனால் அந்தக் கண்கள் பூப்போல் ஏன் இருந்தன? பூப்போல் கண்கள் என்றாலே மலர்ந்த கண்கள் என்றுதானே பொருள்? எனவே மாலை வரை நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள் தலைவி. பிற்பகலில் தன்னை அலங்கரித்துக்கொண்டு, கண்களுக்கு மையிட்டு, மலர்ந்த கண்களுடன் இருந்த அவள் நிலை, மாலை வந்தவுடன் மாறத் தொடங்குகிறது. இந்த அடி அந்த மாற்றத்தைக் காண்பிக்கிறது.
5.3 முக்கோல் அசைநிலை கடுப்ப - முல் 38
கல்தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோல் அசைநிலை கடுப்ப நற்போர்
ஓடா வல்வில் தூணி நாற்றி
கூடங் குத்திக் கயிறுவாங்கு இருக்கை
பூந்தலைக் குந்தம் குத்திக் கிடுகுநிரைத்து - முல் 37-40
போர்மேற் செல்லும் மன்னன் காட்டில் பாசறை அமைக்கிறான். அந்தப் பாசறையில் படைக்கலங்கள் அடுக்கிவைக்கப்படுகின்றன. அதனைப் பற்றிய வருணனை இது.
ஆடையைக் காவிக்கல்லைத் தோய்த்து உடுத்திய, விரதங்களையுடைய அந்தணன்
தன் முக்கோலில் அந்த உடையினை இட்டுவைத்த தன்மையை ஒக்க, நல்ல போரில்
நழுவி விழாத வலிய ஊன்றப்பட்ட வில்லில் அம்புக்கூடுகளைத் தூக்கி,
கூடமாகக் கால்களை நட்டுக் கயிற்றை வலித்துக் கட்டின இருப்பிடத்தில்
பூவேலைப்பாடு தலையுள்ள ஈ£ட்டிகளை ஊன்றி, கேடயங்களை வரிசையாக வைத்து,
என்பது இதன் பொருள். முக்கோல் என்பது அந்தணர்க்குரிய ஒரு சிறப்புப் பொருள்.
நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங்காலை அந்தணர்க் குரிய - மரபியல்-20
என்பது தொல்காப்பியம். அந்தண முனிவர் மூன்று கோல்களை ஒன்றாகக் கட்டி, அதை முக்கோண வடிவில் நிறுத்திச் சமயச் சடங்காற்றுவர். அசை நிலை என்பது தங்கவைத்த தன்மை எனப் பொருள்கொள்ளப்படுகிறது. அசை என்பதற்குத் தங்கு என்ற பொருள் உண்டு. மூன்று கோல்களும் நிற்கவேண்டுமானால், அவற்றைக் குப்புற வைத்துத்தான் நிறுத்தவேண்டும். இரை எடுப்பதற்காகப் பறந்து வந்து ஆற்றின் மணல் திட்டுகளில் இறங்கும் நாரைகள், முக்கோல் போல் இருப்பதாகக் கலித்தொகை கூறுகிறது. தரையிறங்கும் (landing) நாரைகள், தரையைத் தொடும்போது இரண்டு கால்களையும் அகலப் பரப்பி, நீண்ட அலகையும் முன் பக்கம் குனிந்து நீட்டியவண்ணம் இறங்கிவரும். அப்போது, இரண்டு கால்களும், நீட்டிய அலகும் மாலை வழிபாடு செய்யும் அந்தணரின் முக்கோலின் மூன்று கால்கள் போல் இருப்பதைப் படத்தில் பார்க்கலாம்.இனநாரை
முக்கோல்கொள் அந்தணர் முதுமொழி நினைவார்போல்
எக்கர்மேல் இறைகொள்ளும் ... கலி. 126:3-5
விற்படையினருக்கான விற்கள் ஓரிடத்தில் வைக்கப்படவேண்டும் இல்லையா? முதலில் ஒவ்வொரு வில்லையும் சோதித்துப் பார்க்கிறார்கள். வில்லின் நாண் நன்றாகப் பொருத்தப்பட்டுள்ளதா, வில்லின் வளைவு ஒரு பக்கம் இழுத்துக்கொண்டு ஓடாமல் சீராக இருக்கிறதா, வில் வலிமையாக இருக்கிறதா என்று ஆய்ந்து நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்கிறார்கள். நற்போர் ஓடா வல்வில் என்று புலவர் இதனைக் குறிப்பிடுகிறார். இத்தொடருக்கு வேறு பலவித உரைகளும் கூறப்படுகின்றன. பின்னர், ஒவ்வொரு வில்லிலும் அதற்குரிய அம்புக்கூட்டைக் கட்டித் தொங்கவிடுகிறார்கள். தூணி நாற்றி என்பதில், தூணி என்பது அம்புக்கூடு; நாற்று என்பது தொங்கவிடு என்ற பொருள் தரும். அதன் பின் மூன்று விற்களை முக்கோண வடிவில் சேர்த்து நிறுத்துகிறார்கள். பின்னர், மும்மூன்று விற்களைச் சேர்த்து முக்கோல் போலக் கூடாரமாக நிறுத்துகிறார்கள் (கூடம் குத்தி). வரிசையாக இவ்வாறு நிறுத்தப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான முக்கோல் விற்களைக் கயிறினால் சேர்த்துக்கட்டி விழாமல் நிற்கும்படி இருத்துகிறார்கள் (கயிறு வாங்கு இருக்கை). பின்னர், எறியீட்டிகளைக் குத்தி (குந்தம் குத்தி)நிறுத்துகிறார்கள். விற்களுக்கும் எறியீட்டிகளுக்கும் இடையில் தோலினால் ஆன கேடயங்களை வரிசையாக நிறுத்துகிறார்கள்(கிடுகு நிரைத்து). குந்தம் என்பது எறியீட்டி. வாட்படையினரும், வேற்படையினரும் தங்கள் கைகளில் எப்போதும் தங்கள் கலன்களை வைத்திருப்பார்கள். விற்படையினர் வில்லை மட்டும் பிடித்துக்கொண்டு அம்புகளை எய்வார்கள். எறியீட்டியினரோ, ஈட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பகைவர் மேல் செலுத்துவார்கள். வேலின் முனை இலை போல் இருக்கும். ஆனால், எறியீட்டியின் முனை பல கூர்மையான முனைகளைக் கொண்ட பூவைப் போல் இருக்கும். வேலியடைக்கும் முள்கம்பியில், இடையிடையே இரும்பு முள் சுற்றப்பட்டிருக்குமே அது போல. எனவேதான் இதனைப் புலவர் பூந்தலைக் குந்தம் என்கிறார்....
முல்லைப்பாட்டு – உவமைக் காட்சிகள்
முல்லைப்பாட்டுக்குத் திணை முல்லை; அதாவது பிரிந்து சென்றிருக்கும் தலைவன் திரும்பி வரும்வரை ஆற்றியிருப்பது.
போர்மேல் சென்றிருக்கும் தலைவனின் வருகையை எதிர்பார்த்துத் தலைவி அரண்மனையில் கண்ணீர்மல்கக் காத்திருக்கிறாள். அதற்கு முந்தைய நாள் இரவில் தலைவன், பாதுகாப்பு மிகுந்த தன் பாசறையில் சாய்ந்து படுத்தவண்ணம் மறுநாள் போரை எப்படியாவது முடிவுக்குக் கொண்டுவரத் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறான்.
மன்னன் தங்கியிருக்கும் கூடாரத்திற்குப் பல அடுக்குக் காவல் போடப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு காவலை விவரிக்கும்போது புலவர் பயன்படுத்தும் ஒரு உவமை அடுத்து வருகிறது.
5.4 சிதர்வரல் அசைவளிக்கு அசைவந்து ஆங்கு - முல் 52
அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்
சிதர்வரல் அசைவளிக்கு அசைவந்தாங்கு
துகில்முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்குநடை
பெருமூதாளர் ஏமம் சூழ - முல் 51-54
போர்ப்பாசறையில் தங்கியிருக்கும் மன்னனுக்குப் பாதுகாப்பாக இருக்கும் அவனது மெய்க்காப்பாளர்களைப் பற்றிய கூற்று இது.
காட்டு மல்லிகை பூத்துக்கிடக்கும் ஆடுகின்ற கொடியினையுடைய புதர்கள்,
மழையைத் தூவிக்கொண்டுவரும் அசைகின்ற காற்றுக்கு அசைந்தாற் போல,
தலையில் துகில் முடித்து, தம்மைப் போர்த்துக்கொண்டு, தூக்கக் கலக்கத்திலும் நிமிர்ந்த நடையினரான
அனுபவமிக்க மெய்க்காப்பாளர்கள் காவலாகச் சூழ்ந்து நிற்க
என்பது இதன் பொருள்.
துகில் முடித்து என்பது தலையை வெள்ளைத் துணியால் கட்டி என்ற பொருள் தரும். இதனை உருமால், முண்டாசு என்பர். அல்லது, தலைமுடியைக் கொத்தாகச் சேர்த்துத் துகிலால் இறுகக் கட்டி என்றும் பொருள் கொள்ளலாம். போர்த்த என்பதற்கு மெய்ப்பை அணிந்த என்று பொருள்கொள்ளப்படுகிறது. மெய்ப்பை என்பது இன்றைய சட்டை போன்றது. அன்றைய யவனர் மெய்ப்பை அணிந்திருந்தனர் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. சங்கத் தமிழருக்குச் சட்டை அணிந்து பழக்கமில்லை. எனவே, இங்கு பெருமூதாளர் என்று குறிக்கப்படுவோர் யவனவீரர் என்று கொள்ள இடமுண்டு. ஆனால், இதற்கடுத்த சில அடிகளில் மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்களும், அவரால் கட்டப்பட்ட மன்னனின் இருப்பிடமும், மன்னனைக் காவல்காக்கும் மிலேச்சர்களும் கூறப்படுகின்றனர். எனவே, இங்குக் கூறப்படுவோர் பாசறையின் காவலர்களாகவே இருக்கவேண்டும். அவர்களும் வெளிநாட்டவரான யவனர்கள் எனக் கொள்ளுதல் தமிழரின் வீரத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகும். மேலும், பெருமூதாளர் என்ற சொல் வயதான, அனுபவமிக்க காவலர்களையே குறிப்பிடுகிறது. எனவே, முண்டாசு கட்டி, தம் பணிக்கு இடையூறு நேராவண்ணம் தோள்களைப் போர்த்துக்கொண்டு பாசறையைக் காவல்காக்கும் அனுபவசாலிகளான மூத்த தமிழ்வீரர்களைப் பற்றியே இங்குக் கூறப்படுகிறது எனலாம்.
இந்தக் காவலர்கள் காக்கும் நேரம் நெடுநா ஒண்மணி நிழத்திய நடுநாள், அதாவது நள்ளிரவு. நள்ளிரவில் தூக்கம் எவரையும் அசத்தும். ஓங்குநடை பயின்றவாறே காவல்காக்கும் இந்தப் பெருமூதாளரும் சற்றே தள்ளாடுகின்றனர். இதனையே புலவர் தூங்கல் ஓங்குநடை என்கிறார் புலவர். இந்தத் தள்ளாடிய நடை, காற்றில் அசையும் புதரைப் போல் இருப்பதாகப் புலவர் கூறுகிறார். அதிரல் என்பது காட்டு மல்லிகை. புனலி அல்லது மோசி மல்லிகை எனப்படும். படார் என்பது சிறுதூறு. அதாவது, கொடிகள் அடர்த்தியாகப் புதர் போல் படர்ந்துகிடப்பது. இங்கே காட்டுமல்லிகைக் கொடிகள் புதராய்ப் படர்ந்துகிடக்கின்றன. சிதர் என்பது சாரல் மழை. தூவானம் என்பர். கண்ணுக்குப் புலப்படாத மிக மெல்லிதான மழைத்துளிகள் இலேசான காற்றால் அலை அலையாக வந்துவிழும். இந்தச் சாரல் காற்றால் கொடிகள் பூக்களுடன் அசைகின்றன. துகில் முடித்துப் போர்த்த பெருமூதாளர் இந்தப் புதர் போல் இருக்கின்றனராம். அவர்களின் நடை சாரற்காற்றுக்கு அந்தக் கொடிகள் அசைவது போல் இருக்கின்றதாம். வெறும் காற்று என்னாமல், சாரற்காற்று என்பது ஏன்?
துகில் முடித்துப் போர்த்த என்பதை, துகில் முடித்து, துகில் போர்த்த என்று கொள்ளுங்கள். கொடிகளின் பூக்கள் துகில் முடிக்கு உவமை. சாரற்காற்றால் போர்த்தப்பட்ட படார் துகில் போர்த்ததற்கு உவமை. கீழே இரண்டாம் படத்தைப் பாருங்கள். சாரலில் நனைந்தாடும் மரங்கள் மெல்லிதான வெள்ளைத்துணியைப் போர்த்துக்கொண்டு தலைசாய்த்து ஆடுவதைப் போல் இல்லையா?
என்ன ஒரு அரிதான, அருமையான கற்பனை! பாசறை காட்டில் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காட்டுப் பாசறைக் காவலர்களைக் காட்டுக்கொடிகளின் வாயிலாக வருணிக்கும் நயம் வியந்து போற்றத்தக்கது இல்லையா?
5.5. பாம்புபதைப்பு அன்ன பரூஉக்கை துமிய - முல் 70
---------- ----------- ----------- வேழத்துப்
பாம்புபதைப்பு அன்ன பரூஉக்கை துமிய - முல் 70
முல்லைப்பாட்டுத் தலைவனான மன்னன், இரவில் தன் படைவீட்டில் தூக்கம் வராதவனாய், அன்றைய பகலில் நடந்த போரைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கும் காட்சியை விளக்கும் நப்பூதனார் கூற்று இது.
வேழத்துப் பரூஉக் கை, பாம்பு பதைப்பு அன்ன துமிய என்று இதனைப் படிக்கவேண்டும்.
யானையின்
பாம்பு துடித்தாற் போன்று பெரிய துதிக்கை துண்டிக்கப்பட
என்பது இதன் பொருள்.
அன்றைய பகலில் நடந்த போரில் மன்னனுக்குப் பல இழப்புகள் நேர்ந்திருக்கின்றன. அந்த இழப்புகளினூடே பல வெற்றிகளும் கிட்டியிருக்கின்றன. அவற்றிலொன்றே இங்குக் கூறப்படுகிறது. பகைவரின் யானைகளை எதிர்த்து நின்ற மறவர்களை அந்த யானைகள் தம் துதிக்கையால் தூக்கியடிக்க முனைகின்றன. யானை தூக்கியும் அஞ்சாத வீரமறவர்கள் தூக்கிய துதிக்கையைத் தம் வாளால் வெட்டித் துணிக்கின்றனர். யானையும் மறவரும் ஒருசேரத் தரையில் விழுந்து மடிகின்றனர். அவாறு துணிக்கப்பட்ட துதிக்கைகள் கீழே விழுந்து குறையுடல் துடிப்பதுபோல் துடிக்கின்ற காட்சியை ஓர் அழகான உவமையால் விளக்குகிறார் புலவர்.
ஓடுகின்ற பாம்பை நடுமுதுகில் அடித்தால், ஓடமுடியாமல் துடிதுடிக்கும். அப்போது அதன் உடல் பலவாறாகப் புரண்டு புரண்டு விழும். அதுதான் பாம்பின் பதைப்பு. போரில் வெட்டுப்பட்டு வீழ்ந்த யானையின் துதிக்கையும் அவ்வாறு துடித்தது என்கிறார் புலவர். துமித்தல் என்பது துண்டிக்கப்படுதல்.
வீடுகளில் இருக்கும் பல்லியின் வால், சிலசமயம் தற்செயலாகத் துண்டிக்கப்பட்டுக் கீழே விழும். அப்போது அதுவும் இவ்வாறுதான் துடிக்கும்.
5.6 ஏவுறு மஞ்ஞையின் நடுங்கி - முல் 84
--------- ---------- --------- துயருழந்து
நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு
நீடு நினைந்து தேற்றியும் ஓடுவளை திருத்தியும்
மையல் கொண்டும் ஒய்யென உயிர்த்தும்
ஏவுறு மஞ்ஞையின் நடுங்கி இழைநெகிழ்ந்து - முல் 80-84
------------- ------------ ------------- வருத்தமுற்று,
நெஞ்சம் பொறுத்திருக்க, (தன்)உறுதியைக் கெடுத்த தனிமையோடு,
நீண்ட பிரிவினை நினைந்து தேற்றியும், கழலுகின்ற வளையைச் செறித்தும்,
மயக்கம் கொண்டும், நெடிய பெருமூச்சுவிட்டும்,
அம்பு தைத்த மயில் போல நடுங்கி, அணிகலன்கள் நெகிழ்ந்து,
என்பது இதன் பொருள்.
அரண்மனையில் தலைவன் வரவுக்காகக் காத்திருக்கிறாள் தலைவி. கார்காலம் தொடங்கி முதல்மழையும் பெய்து அன்றைய நாளும் முடிந்து மாலை ஆகிவிட்டது. விளக்கு வைக்கும் நேரம். தலைவன் இன்னும் வராததனால் தலைவி உள்ளம் உடைந்து வருத்தமுறுகிறாள். அவளது நெஞ்சம் தலைவனை நோக்கி ஓடமுயல்கிறது. அது கட்டவிழ்ந்து ஓடிவிட்டால் கண்ணீர் பெருக்கெடுத்துவிடும். ‘கட்டாயம் வருவேன்' என்று சொன்ன தலைவனின் சொற்களை நம்பாமற்போய்விட்டதாகுமல்லவா? அது தலைவனுக்கு இழுக்காகிவிடுமே? எனவே முயன்ற நிலையிலேயே நெஞ்சம் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கிறது. ஆற்றுப்படுத்தல் என்பது நல்வழிப்படுத்தல். நிறை என்பது உறுதியான கற்புநெறி. அதற்குத் தேவையானது மன அடக்கம். அது கெடுகின்ற நிலையிலிருக்கிறாள் தலைவி. அரசிக்குரிய பெருமையும், சிறப்பும், மாண்பும் குலைந்துபோகவிடலாமா அவள்? இதையெல்லாம் செய்வது அவளது தனிமைத் துயர். இந்த நிலையை நிறைதபு புலம்பு என்கிறார் புலவர். தபுதல் என்றால் கெடுதல். புலம்பு என்பது தனிமை. தலைவன் வேனிற்பாசறைக்கெனச் சென்ற சித்திரை மாதத்தை நினைவுகூர்ந்து இன்று கார்காலத்து ஆவணி பிறக்க, இடையிலுள்ள மாதங்களை விரல்விட்டு எண்ணுகிறாள். எண்ணியவள் மனம், ‘அடேயப்பா' எத்தனை நாட்கள் என்ற நீடு நினைந்து, மேலும் வருத்தமுறும் அல்லவா? ஆனால் நீடு நினைந்து தேற்றியும் என்று சொல்கிறாரே புலவர்! ‘சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி - இன்று ஆவணி பிறக்க' என்று நீடு நினைந்தவள் - ஆவணி பிறக்க, கார்காலமும் தொடங்க, தலைவன் திரும்பும் நாள் வந்துவிட்டதே - இனியும் காத்திருத்தல் இல்லை - என்ற நினைப்பில் தன்னைத் தேற்றிக்கொள்கிறாள். நீடு என்பதற்கு நீண்டநேரம் எனப் பொருள்கொண்டு, நீள நினைத்துப்பார்த்து என உரைகள் கூறுகின்றன. நீடு நினைந்து தேற்றியும் என்று வருவதால் இப் பொருள் பொருத்தமுடையதாகத் தெரியவில்லை.
ஒருகாலத்தில் செழுமையாயிருந்த கைகளில் செருக ஏற்றிய வளையல்கள், இன்று பொலிவிழந்து மெலிந்துபோன கைகளில் ‘பொசுக் பொசுக்'கென கழன்று மணிக்கட்டில் விழுகின்றன. மறு கையால் அவற்றைச் சேரப்பிடித்து மேலே ஏற்றிவிடுகிறாள் தலைவி. இதுவே ஓடுவளை திருத்துதல். மீண்டும் மீண்டும் நெகிழ்ந்துபோகும் தன் நெஞ்சத்தை தலைவி திரும்பத் திரும்ப ஆற்றுப்படுத்தியது போல் இது அமையவில்லையா? மனம் மையல்கொள்கிறது. மையல் என்பது மிகுதியான ஈர்ப்பினால் ஏற்படும் காதல் மயக்கம் - intense transitory passion of love. உறுதிகொண்ட நெஞ்சத்தை உருக்குலைக்கும் மனப்போராட்டம் அங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நெஞ்சுக்குழி நிறைய மூச்சு உள்ளிழுத்து, சற்று நின்று, ‘புஸ்'-என்று வெளிவருகிறது ஒரு நீண்ட பெருமூச்சாய். ஒருகணம் மயிர்க்கால்கள் குத்திட உடம்பு சிலிர்த்து நடுங்குகிறது - ஏ உறு மஞ்ஞையைப் போல. ஏ என்பது அம்பு. கார்காலத் தொடக்கத்தில் கார்முகில்கள் கருமூட்டம் போட, அதைக் கண்டு மகிழ்ந்த மயில் தன் தோகைக்கணத்தை விரித்துக் களிப்புடன் ஆட, அப்போது எங்கிருந்தோ வந்து அதன் இளம்மேனியில் ஓர் அம்பு வந்து பாய்கிறது. அம்பு பட்ட மான்கூட முதலில் மிரண்டு ஓடத்தான் செய்யும். அம்பு பட்ட மயில் நின்ற நிலையிலேயே சரிந்து விழுகிறது. கால்களையும் தலையையும் குலுக்கிப் புரள்கிறது. எழுந்து நிற்க முயன்று தோற்றுச் சாய்கிறது. உருண்டு நிமிர்ந்து தலையைத் தூக்குகிறது. ஒன்றும் முடியாமல் மீண்டும் தோற்று விழுகிறது.
பொங்கி எழுந்தாள், விழுந்தாள், பொழிகதிர்
திங்கள் முகிலொடும் சேணிலம் கொண்டென
செங்கண் சிவப்ப அழுதாள் – சிலப்பதிகாரம் – மதுரைக்காண்டம் – 18:30-32
என்ற (கோவலனின் இறப்புச் செய்தியைக் கேட்ட) கண்ணகியின் நிலையை எண்ணிக்கொள்ளுங்கள்.
துயருழந்து எனத் தொடங்கி, மூன்று அடிகளுக்கும் மேலாக ஒரு எடுப்புக் (build up) கொடுத்து அதற்கு முத்தாய்ப்பாக, அடிபட்ட மயிலைக் காட்டும் புலவர், கட்டாயம் அப்படித் துடித்த மயிலைப் பார்த்திருப்பார். எனவேதான் தலைவியின் துயருக்கு அதனை ஒப்பிடுகின்றார். நாம் தலைவியின் நிலை, மயிலின் துடிப்பு ஆகிய இரண்டையுமே கற்பனைக் கண்ணால்தான் பார்த்து ஒப்பிட முடியும்.
5.7 செறியிலைக் காயா அஞ்சனம் மலர - முல் 93
5.8 முறியிணர்க் கொன்றை நன்பொன் கால - முல் 94
5.9 கோடல் குவிமுகை அங்கை அவிழ - முல் 95
5.10 தோடார் தோன்றி குருதி பூப்ப - முல் 96
--------- ---------- ----------- அயிர,
செறியிலைக் காயா அஞ்சனம் மலர
முறியிணர்க் கொன்றை நன்பொன் கால
கோடல் குவிமுகை அங்கை அவிழத்
தோடார் தோன்றி குருதி பூப்பக்
கானம் நந்திய செந்நிலப் பெருவழி - முல் 92 - 97
பைந்நனை அவரை பவழம் கோப்பவும் என்ற சிறுபாணாற்றுப்படை அடிகளை நினைவூட்டும் உருவகம் சார்ந்த உவமம் கூறும் அழகிய அடிகள் இவை.
இதுவும் ஒரு முல்லைநிலக் காட்சியே. ஆனால் தலைவன் இது பெருவழிக் காட்சி - தேர்கள் செல்லும் அளவுக்கு அகலமானது.
குறுமணல் திடல்களில்,
நெருக்கமான இலைகளையுடைய காயா அஞ்சனமாய் மலர,
துளிர்க்கின்ற கொத்துக்களையுடைய கொன்றை நன்பொன்னாய்ச் சொரிய,
கோடலின் குவிந்த முகைகள் அகங்கையாய் விரிய,
திரட்சி நிறைந்த தோன்றி உதிரமாய்ப் பூக்க,
காடு தழைத்த செம்மண் பெருவழி
என்பது இதன் பொருள்.
அயிர் என்பது குறுமணல். அப்போதுதான் மழைபெய்து, காட்டாறுகள் பொங்கி நிறைந்து, பக்கத்துக் காடுகளில் ஏறிப் பாய, நீரோட்டத்தினால் மணல் தெள்ளப்பட்டு, புன்செய்க் காடுகளில் குறுமணல் மேடுகள் அங்கங்கே காணப்பட்டன. கார்காலத் தொடக்கத்தை எத்துணை அழகாக ஒரே ஒரு சொல்லால் காட்டிவிடுகிறார் நம் புலவர். இந்த ஒரு சொல் காட்டும் அழகினால் நம் எதிர்பார்ப்பு இமயமாய் உயர்கிறது. நம்மை ஏமாற்றவில்லை புலவர். இதற்குப் பின் இவர் காட்டும் காட்சிகள் - அதைச் சொல்ல இவர் தேர்ந்தெடுக்கும் சொற்கள் - அந்த சொற்களை உருவகமாய் மாற்றிக்காட்டும் மந்திரம் - இவை எல்லாம் ஓர் அழகிய பாடலுக்கு உச்சகட்ட நிகழ்ச்சிகளாய் (climax) அமைந்திருக்கும் பேரழகு, இந்த நூலை முதலிலிருந்து ஆழமாய்ப் படிப்பவருக்கே விளங்கும். பத்துப்பாடல்களிலும் மிகச் சிறிய பாடலான இது மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது என்ற வாக்கை முழுதும் மெய்ப்பிக்கும் ஓர் அற்புத எடுத்துக்காட்டு.
படங்களே விளக்கங்களாய் அமைந்துவிட்டதைப் பார்க்கிறோம். மலர்கள் ஒவ்வொன்றுக்கும் கொடுக்கப்பட்டுள்ள வினைச்சொற்களையும், அடைமொழிகளையும் உற்று நோக்குங்கள்.
செறிவான இலைகளுக்கு நடுவே மையாய்ப் பூத்துக்கிடக்கும் காயா!
கொத்துக்கொத்தாய்த் துளிர்த்துப் பொற்காசுகளாய்ப் பூத்துக்குலுங்கும் கொன்றை!
குவிந்த மொட்டுகளாய்த் தொடங்கி, அழகிய கைவிரல்களாய் அவிழ்ந்து தோன்றும் கோடல் என்னும் வெண்காந்தள்!
இதழ்கள் ஒவ்வொன்றும் அகல அகலமாய்க் குருதியாய் மலர்ந்து நிற்கும் தோன்றி என்ற செங்காந்தள்!
இங்கு, கோடல் குவிமுகை அங்கை அவிழ என்பதைப் படமே விளக்குவதைக் காண்பீர்கள். படத்தில் நான்கு கோடுகள் உள்ளன. இவை மொட்டிலிருந்து மலர்ந்து மலராக மாறும் நான்கு நிலைகளைக் குறிக்கின்றன. மேலே இருப்பது குவிந்திருக்கும் மொட்டினைக் காட்டுவது. இரண்டாவது, மூன்றாவது கோடுகள் அவிழ்ந்துகொண்டிருக்கும் மொட்டுகளைக் காட்டுகின்றன. கீழ்க்கோடு உள்ளங்கையாய் அவிழ்ந்திருக்கும் மலரைக் காட்டுகிறது. கோடல் என்பது வெண்காந்தள். வெளிறின மஞ்சள் நிறத்தது.
தோன்றி என்பது செங்காந்தள். தோடு என்பது மலரின் இதழ். இதன் தோடு பெரியதாக இருப்பதைக் கவனியுங்கள். ஆர் என்பது மிகுதியைக் குறிக்கும்.
‘இந்த முல்லை நிலத்தின் வழியேதான் தலைவனது தேர் விரைந்து வந்துகொண்டிருக்கிறது. விரைகின்ற குதிரைகளை விரட்டியடித்துக்கொண்டு வருகிறான் தலைவன். அதனால் அந்தக் குதிரைகள் உரத்த குரலில் கனைக்கின்றன. அவற்றின் கனைப்பு ஒலி, பெய்ந்துகொண்டிருக்கும் பெருமழையின் ஊடேயும் மெல்லிதாகத் தலைவியின் காதுகளில் விழ அவள் உவப்பெய்துகிறாள்’ என்ற செய்தியுடன் முல்லைப்பாட்டு நிறைவுறுகிறது.
முல்லைப்பாட்டு . உவமைக் காட்சிகள் முற்றும்.
ப.பாண்டியராஜா
...
திருமுருகாற்றுப்படை உவமைக் காட்சிகள்
திருமுருகாற்றுப்படை – ஒரு முன்னுரை
பத்துப்பாட்டு நூல்களுள் முதலாவதாக வைக்கப்பட்டிருப்பது இந்நூல். இது ஒரு ஆற்றுப்படை நூல். முருகனிடம் அருள் பெற்ற ஒருவன், தன்னைப் போல் மற்றவர்களும் முருகனிடம் சென்று அருள் பெறவேண்டி அவர்களை முருகனிடம் ஆற்றுப்படுத்துவதே இந்த நூல். எனவே, பத்துப்பாட்டில் முதல் நூல் என்ற சிறப்புடன், பக்தி இலக்கியங்களிலும் இந்நூல் தலைமைத் தகுதி பெற்று விளங்குகிறது.
இப்பாடலின் தலைவன் முருகன் ஆவான். முருகனைத் தமிழ்க் கடவுள் என்றும், குமரவேள் என்றும் சேயோன் என்றும் கூறுவர். ஏனைய ஆற்றுப்படை இலக்கியங்களின் பாட்டுடைத் தலைவர்கள் மன்னர்களே. இப்பாடல் மட்டும்தான் இறைவனையே பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. எட்டுத்தொகையில் உள்ள எல்லா நூல்களிலும் முதற்பாடல் கடவுள் வாழ்த்துப் பாடலாக இருக்கும். அது ஒரு தனிப்பாடலாகத் தனியே சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால் பத்துப்பாட்டில் தனியே கடவுள் வாழ்த்துப்பாடல் இல்லை. அதற்குப் பதிலாக முதலாவது பாடலே கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்துவிட்டது. 317 அடிகளைக் கொண்டது இப்பாடல்.
இப்பாடலை எழுதியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். இவர் தன் காலத்திய தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்தார் என்று கூறுவர். இந்தப் பத்துப்பாட்டு நூல்களுள் நெடுநல்வாடை என்ற நூலின் ஆசிரியரும் நக்கீரர் என்பவரே. இந்த இருவரும் ஒருவரே என்பது பொதுவான நம்பிக்கை. இருப்பினும், இந்த இரு நூல்களின் நடையை வைத்து, இருவரும் வேறுவேறான காலத்தவர் என்று சிலர் கூறுவர். இந்த இருவரைத் தவிர நக்கீரர் என்ற பெயரில் வேறு சில புலவர்களும் இருந்திருக்கின்றனர்.
சங்க நூல்களில் பெரும்பாலானவற்றை உரைகள் இன்றிப் படித்துப் புரிந்துகொள்வது கடினமாகும். இந்த உரைகாரர்களில் முக்கியமானவர் நச்சினார்க்கினியர் என்பவராவார். அவரை, ‘உச்சிமேல் புலவர் நச்சினார்க்கினியர்' எனப் புகழ்ந்து கூறுவார்கள். இந்த நச்சினார்க்கினியர் பத்துப்பாட்டின் எல்லா நூல்களுக்கும் உரை எழுதியுள்ளார். இதைத் தவிர பத்துப்பாட்டின் நூல்களுக்குப் பல உரைகள் உண்டு.
திருமுருகாற்றுப்படையில் மொத்தம் 26 உவமைகள் கையாளப்பட்டுள்ளன. அவற்றை விளக்கி, அவற்றின் சிறப்பை எடுத்துக்கூறுங்கால், பாடலின் ஓட்டத்தோடும் நாம் சேர்ந்துகொள்ளும் வண்ணம், உவமைகள் பாடல் அடியின் வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
1.1. பலர்புகழ் ஞாயிறு கடல்கண்டு ஆஅங்கு - திரு 2
உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல்கண்டு ஆஅங்கு
ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி - திரு 1-3
முருகனின் ஒளி மிக்க தோற்றத்தைப் பற்றிய உவமை இது.
உயிர்கள் எல்லாம் மகிழ, வலமாக எழுந்து திரிதலைச் செய்யும், பலரும் புகழும் ஞாயிறு கடலில் எழக் கண்டதைப் போன்று, ஒழிவு இல்லாமல் மின்னும், சேய்த்துநின்று ஒளிரும் பிரகாசமான ஒளியையுடைய என்பது இதன் பொருள்.
உலகம் என்ற சொல்லால் தம் பாடல்களைத் தொடங்குவது மங்களகரமானது என்ற நம்பிக்கை நம் முன்னோர்களிடம் இருந்தது. நெடுநல்வாடைப் புலவர் நக்கீரரும் ‘வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇ’ என்றுதான் தன் பாடலைத் தொடங்குகிறார். பத்துப்பாட்டின் பல பாடல்களிலும் இதனை ஏதோ ஒரு வடிவில் காணலாம்.
ஞாயிறு எழுவதை உலகமே உவகையுடன் வரவேற்கிறது. உயிருள்ள அனைத்தும் (ஓரிரு மனிதர்களைத் தவிர) இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொணரும் கதிரவனின் கதிரொளியைக் களிப்புடன் எதிர்கொள்கின்றன.
கிழக்கில் உதித்து, மேலே எழுந்து, பின்னர் மேற்கில் மறையும் கதிரவன், இடம்-வலமாகச் சுற்றுவதாக மக்கள் நம்பினர். இதை வலஞ்சுழி (clockwise) என்பர். கதிரவன் மட்டுமல்ல, வானத்தில் காணப்படும் அனைத்து விண்பொருள்களும் வலஞ்சுழியாகவே பயணம் செய்கின்றன. எனவே, வலம்வருதல் என்பது படைப்பு விதி என மக்கள் நம்பினர். இதையொட்டியே ஊர்வலம், நகர்வலம் என்ற சொற்கள் தோன்றின. கோயில்களிலும் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது நாம் வலஞ்சுழியாகவே சுற்றுகிறோம். ஆனால், உண்மையில் சூரியன் சுற்றவில்லை, உலகம் இடஞ்சுழியாகச் சுழல்வதால் எற்படும் மாயத்தோற்றமே அது என இன்று நாம் அறிவோம். எனவே, இடஞ்சுழி (anti-clockwise) என்பதே படைப்புவிதி. அறிவியலில் இடஞ்சுழி திசையே நேர்த்திசை (positive direction) என்று கொள்ளப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எந்த திசையில் ஓடுகிறார்கள் என்று எண்ணிப்பாருங்கள். உங்கள் வீட்டில் மின்விசிறியை மெதுவாக ஓடவிட்டு அது சுழலும் திசையை உன்னிப்பாய்ப் பாருங்கள். உலகம் இடஞ்சுழியாகச் சுழன்றுகொண்டே (rotation), சூரியனை இடஞ்சுழியாகவே சுற்றிவருகிறது (revolution). இது எவ்வாறு இருப்பினும், அன்றைய புலவர்கள் தாம் கண்டதையே பாடலிலும் கூறினர் என்ற முறையில் அவரின் கூற்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
ஞாயிறு மலைமுகட்டில் எழலாம்; வெட்டவெளியில் எழலாம்; ஆனால் அது கடலில் தோன்றுவதையே ஏன் இங்கே புகழ்ந்து கூறவேண்டும்? இங்கேயுள்ள படத்தைப் பார்த்தால் ஓரளவுக்குப் புரியும் . அல்லது கீழ்த்திசையில் கடல் உள்ளவர்கள், விடியற்காலையில் அங்கு சென்று கடலைப் பிளந்துகொண்டு கதிரவன் எழும் காட்சியைக் காணுங்கள். தொலைதூரத்திலிருந்து வருகிறது இந்த ஒளி – தொலைதூரத்திற்கும் சென்று ஒளிவிடக்கூடியது இந்த ஒளி. சேண் விளங்கு அவிர் ஒளி என்பதனுக்குரிய உவமம் கடலில் எழும் சூரியனுக்கு எத்துணை பொருத்தம் பாருங்கள்!
ஓவற என்பதை ஓ அற என்றும் ஓவு அற என்றும் இருவிதமாகப் பிரிக்கலாம். ஓ என்பது தங்குதல் என்ற பொருள் தரும். பக்தர்கள் தமது பத்து இந்திரியங்களையும் தத்தமக்குரிய பொருள்களிடத்தில் நாட்டமில்லாதனவாய் அடக்கும்பொழுது, அவர்களின் உள்ளத்தில் ஒளிர்வது என்று பொருள் கொள்க. இமைக்கும் என்பது ஒளிரும் என்ற பொருள் தரும்.
ஓவு என்பதற்கு இடைவெளி என்று பொருள். இடைவிடாது ஒளிவிடும் தன்மையுள்ள ஒளியையுடையவன் முருகன். ‘ஞாயிறு இடைவிடாது ஒளிதருவதில்லையே? - இரவில் மறைந்துவிடுகிறதே’ எனலாம். முதலில், ஞாயிறு கடற்கண்டாஅங்கு இமைக்கும் அவிர் ஒளி என்று பொருள் கொள்ளவேண்டும். ஆனால், ஞாயிறு பகலில் மட்டும்தான் ஒளிவிடும்; இரவில் மறைந்து, பின், மீண்டும் பகலில் ஒளிதரும். இப்படி இடைவெளி விட்டுவிட்டு ஒளிதருவதைப் போல் அன்றி, முருகன் இடைவெளி இன்றி ஒளிதருபவன் என்ற நோக்கில், ஞாயிறு கடற்கண்டாஅங்கு, (ஆனால் ஞாயிற்றைப் போல் விட்டுவிட்டு வராமல்) ஓவு அற இமைக்கும் அவிர் ஒளி என்று பொருள்கொள்ள வேண்டும். உவமைகள் எல்லாவிதத்திலும் ஒத்துவரத் தேவையில்லை. அவற்றில் சிறப்பானவற்றையே ஒப்புமைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில், கட்டபொம்மன் கைதுசெய்யப்பட்ட பிறகு, தன்னைக் காட்டிக்கொடுத்த எட்டப்பனைப் பார்த்து ‘நாய்கள்' என்பான். அதனை அங்கிருந்த வெள்ளைக்காரத்துரை கண்டிக்க, எட்டப்பன் ‘நாய் நன்றியுள்ளதுதானே' என்பான். இவ்வாறு, இழிந்த உவமைக்கும் ஏதேனும் ஓர் உயர்ந்த ஒப்புமை கொண்டு மனநிறைவடைவது போல, சிறந்த உவமைக்கு ஏதேனும் ஒரு சிறப்பற்ற ஒப்புமை கொண்டு மனம் தடுமாறக்கூடாது இல்லையா? எனவேதான், ஞாயிற்றைப் பார்த்தது போன்ற ஒளி - ஆனால் இடைவிடாது ஒளிரும் ஒளி என்று புலவர் கூறுவதாகக் கொள்ளலாம்.
சேண் விளங்கு என்பதை, மிகத் தொலைவிலிருந்து ஒளிவிடும் என்றும், மிகத் தொலைதூரத்திற்கும் ஒளிவிடும் என்றும் பொருள்கொள்ளலாம்.
- தொடரும்
ப.பாண்டியராஜா
...
அனைவருக்கும் மிக்க நன்றி.அன்புடையீர்,
இத்துடன் திருமுருகாற்றுப்படை உவமைக் காட்சிகள் தொடங்குகிறது. முதற்கட்டுரை ஒரே ஒரு உவமை பற்றி. அடுத்தவை அடுத்தடுத்த கட்டுரைகளில் வரும்.ப.பாண்டியராஜாதிருமுருகாற்றுப்படை உவமைக் காட்சிகள்
திருமுருகாற்றுப்படை – ஒரு முன்னுரை
பத்துப்பாட்டு நூல்களுள் முதலாவதாக வைக்கப்பட்டிருப்பது இந்நூல். இது ஒரு ஆற்றுப்படை நூல். முருகனிடம் அருள் பெற்ற ஒருவன், தன்னைப் போல் மற்றவர்களும் முருகனிடம் சென்று அருள் பெறவேண்டி அவர்களை முருகனிடம் ஆற்றுப்படுத்துவதே இந்த நூல். எனவே, பத்துப்பாட்டில் முதல் நூல் என்ற சிறப்புடன், பக்தி இலக்கியங்களிலும் இந்நூல் தலைமைத் தகுதி பெற்று விளங்குகிறது.
இப்பாடலின் தலைவன் முருகன் ஆவான். முருகனைத் தமிழ்க் கடவுள் என்றும், குமரவேள் என்றும் சேயோன் என்றும் கூறுவர். ஏனைய ஆற்றுப்படை இலக்கியங்களின் பாட்டுடைத் தலைவர்கள் மன்னர்களே. இப்பாடல் மட்டும்தான் இறைவனையே பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. எட்டுத்தொகையில் உள்ள எல்லா நூல்களிலும் முதற்பாடல் கடவுள் வாழ்த்துப் பாடலாக இருக்கும். அது ஒரு தனிப்பாடலாகத் தனியே சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால் பத்துப்பாட்டில் தனியே கடவுள் வாழ்த்துப்பாடல் இல்லை. அதற்குப் பதிலாக முதலாவது பாடலே கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்துவிட்டது. 317 அடிகளைக் கொண்டது இப்பாடல்.
இப்பாடலை எழுதியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். இவர் தன் காலத்திய தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்தார் என்று கூறுவர். இந்தப் பத்துப்பாட்டு நூல்களுள் நெடுநல்வாடை என்ற நூலின் ஆசிரியரும் நக்கீரர் என்பவரே. இந்த இருவரும் ஒருவரே என்பது பொதுவான நம்பிக்கை. இருப்பினும், இந்த இரு நூல்களின் நடையை வைத்து, இருவரும் வேறுவேறான காலத்தவர் என்று சிலர் கூறுவர். இந்த இருவரைத் தவிர நக்கீரர் என்ற பெயரில் வேறு சில புலவர்களும் இருந்திருக்கின்றனர்.
சங்க நூல்களில் பெரும்பாலானவற்றை உரைகள் இன்றிப் படித்துப் புரிந்துகொள்வது கடினமாகும். இந்த உரைகாரர்களில் முக்கியமானவர் நச்சினார்க்கினியர் என்பவராவார். அவரை, ‘உச்சிமேல் புலவர் நச்சினார்க்கினியர்' எனப் புகழ்ந்து கூறுவார்கள். இந்த நச்சினார்க்கினியர் பத்துப்பாட்டின் எல்லா நூல்களுக்கும் உரை எழுதியுள்ளார். இதைத் தவிர பத்துப்பாட்டின் நூல்களுக்குப் பல உரைகள் உண்டு.
திருமுருகாற்றுப்படையில் மொத்தம் 26 உவமைகள் கையாளப்பட்டுள்ளன. அவற்றை விளக்கி, அவற்றின் சிறப்பை எடுத்துக்கூறுங்கால், பாடலின் ஓட்டத்தோடும் நாம் சேர்ந்துகொள்ளும் வண்ணம், உவமைகள் பாடல் அடியின் வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன.
1.1. பலர்புகழ் ஞாயிறு கடல்கண்டு ஆஅங்கு - திரு 2
உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல்கண்டு ஆஅங்கு
ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி - திரு 1-3
முருகனின் ஒளி மிக்க தோற்றத்தைப் பற்றிய உவமை இது.
உயிர்கள் எல்லாம் மகிழ, வலமாக எழுந்து திரிதலைச் செய்யும், பலரும் புகழும் ஞாயிறு கடலில் எழக் கண்டதைப் போன்று, ஒழிவு இல்லாமல் மின்னும், சேய்த்துநின்று ஒளிரும் பிரகாசமான ஒளியையுடைய என்பது இதன் பொருள்.
உலகம் என்ற சொல்லால் தம் பாடல்களைத் தொடங்குவது மங்களகரமானது என்ற நம்பிக்கை நம் முன்னோர்களிடம் இருந்தது. நெடுநல்வாடைப் புலவர் நக்கீரரும் ‘வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇ’ என்றுதான் தன் பாடலைத் தொடங்குகிறார். பத்துப்பாட்டின் பல பாடல்களிலும் இதனை ஏதோ ஒரு வடிவில் காணலாம்.
ஞாயிறு எழுவதை உலகமே உவகையுடன் வரவேற்கிறது. உயிருள்ள அனைத்தும் (ஓரிரு மனிதர்களைத் தவிர) இருளை அகற்றி வெளிச்சத்தைக் கொணரும் கதிரவனின் கதிரொளியைக் களிப்புடன் எதிர்கொள்கின்றன.
கிழக்கில் உதித்து, மேலே எழுந்து, பின்னர் மேற்கில் மறையும் கதிரவன், இடம்-வலமாகச் சுற்றுவதாக மக்கள் நம்பினர். இதை வலஞ்சுழி (clockwise) என்பர். கதிரவன் மட்டுமல்ல, வானத்தில் காணப்படும் அனைத்து விண்பொருள்களும் வலஞ்சுழியாகவே பயணம் செய்கின்றன. எனவே, வலம்வருதல் என்பது படைப்பு விதி என மக்கள் நம்பினர். இதையொட்டியே ஊர்வலம், நகர்வலம் என்ற சொற்கள் தோன்றின. கோயில்களிலும் பிரகாரத்தைச் சுற்றி வரும்போது நாம் வலஞ்சுழியாகவே சுற்றுகிறோம்.
ஆனால், உண்மையில் சூரியன் சுற்றவில்லை, உலகம் இடஞ்சுழியாகச் சுழல்வதால் எற்படும் மாயத்தோற்றமே அது என இன்று நாம் அறிவோம். எனவே, இடஞ்சுழி (anti-clockwise) என்பதே படைப்புவிதி. அறிவியலில் இடஞ்சுழி திசையே நேர்த்திசை (positive direction) என்று கொள்ளப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எந்த திசையில் ஓடுகிறார்கள் என்று எண்ணிப்பாருங்கள். உங்கள் வீட்டில் மின்விசிறியை மெதுவாக ஓடவிட்டு அது சுழலும் திசையை உன்னிப்பாய்ப் பாருங்கள். உலகம் இடஞ்சுழியாகச் சுழன்றுகொண்டே (rotation), சூரியனை இடஞ்சுழியாகவே சுற்றிவருகிறது (revolution). இது எவ்வாறு இருப்பினும், அன்றைய புலவர்கள் தாம் கண்டதையே பாடலிலும் கூறினர் என்ற முறையில் அவரின் கூற்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
ஞாயிறு மலைமுகட்டில் எழலாம்; வெட்டவெளியில் எழலாம்; ஆனால் அது கடலில் தோன்றுவதையே ஏன் இங்கே புகழ்ந்து கூறவேண்டும்? இங்கேயுள்ள படத்தைப் பார்த்தால் ஓரளவுக்குப் புரியும் . அல்லது கீழ்த்திசையில் கடல் உள்ளவர்கள், விடியற்காலையில் அங்கு சென்று கடலைப் பிளந்துகொண்டு கதிரவன் எழும் காட்சியைக் காணுங்கள். தொலைதூரத்திலிருந்து வருகிறது இந்த ஒளி – தொலைதூரத்திற்கும் சென்று ஒளிவிடக்கூடியது இந்த ஒளி. சேண் விளங்கு அவிர் ஒளி என்பதனுக்குரிய உவமம் கடலில் எழும் சூரியனுக்கு எத்துணை பொருத்தம் பாருங்கள்!
ஓவற என்பதை ஓ அற என்றும் ஓவு அற என்றும் இருவிதமாகப் பிரிக்கலாம். ஓ என்பது தங்குதல் என்ற பொருள் தரும். பக்தர்கள் தமது பத்து இந்திரியங்களையும் தத்தமக்குரிய பொருள்களிடத்தில் நாட்டமில்லாதனவாய் அடக்கும்பொழுது, அவர்களின் உள்ளத்தில் ஒளிர்வது என்று பொருள் கொள்க. இமைக்கும் என்பது ஒளிரும் என்ற பொருள் தரும்.
ஓவு என்பதற்கு இடைவெளி என்று பொருள். இடைவிடாது ஒளிவிடும் தன்மையுள்ள ஒளியையுடையவன் முருகன். ‘ஞாயிறு இடைவிடாது ஒளிதருவதில்லையே? - இரவில் மறைந்துவிடுகிறதே’ எனலாம். முதலில், ஞாயிறு கடற்கண்டாஅங்கு இமைக்கும் அவிர் ஒளி என்று பொருள் கொள்ளவேண்டும். ஆனால், ஞாயிறு பகலில் மட்டும்தான் ஒளிவிடும்; இரவில் மறைந்து, பின், மீண்டும் பகலில் ஒளிதரும். இப்படி இடைவெளி விட்டுவிட்டு ஒளிதருவதைப் போல் அன்றி, முருகன் இடைவெளி இன்றி ஒளிதருபவன் என்ற நோக்கில், ஞாயிறு கடற்கண்டாஅங்கு, (ஆனால் ஞாயிற்றைப் போல் விட்டுவிட்டு வராமல்) ஓவு அற இமைக்கும் அவிர் ஒளி என்று பொருள்கொள்ள வேண்டும். உவமைகள் எல்லாவிதத்திலும் ஒத்துவரத் தேவையில்லை. அவற்றில் சிறப்பானவற்றையே ஒப்புமைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும். வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில், கட்டபொம்மன் கைதுசெய்யப்பட்ட பிறகு, தன்னைக் காட்டிக்கொடுத்த எட்டப்பனைப் பார்த்து ‘நாய்கள்' என்பான். அதனை அங்கிருந்த வெள்ளைக்காரத்துரை கண்டிக்க, எட்டப்பன் ‘நாய் நன்றியுள்ளதுதானே' என்பான். இவ்வாறு, இழிந்த உவமைக்கும் ஏதேனும் ஓர் உயர்ந்த ஒப்புமை கொண்டு மனநிறைவடைவது போல, சிறந்த உவமைக்கு ஏதேனும் ஒரு சிறப்பற்ற ஒப்புமை கொண்டு மனம் தடுமாறக்கூடாது இல்லையா? எனவேதான், ஞாயிற்றைப் பார்த்தது போன்ற ஒளி - ஆனால் இடைவிடாது ஒளிரும் ஒளி என்று புலவர் கூறுவதாகக் கொள்ளலாம்.
சேண் விளங்கு என்பதை, மிகத் தொலைவிலிருந்து ஒளிவிடும் என்றும், மிகத் தொலைதூரத்திற்கும் ஒளிவிடும் என்றும் பொருள்கொள்ளலாம்.
திருமுருகாற்றுப்படை உவமைகள் - 2
ஞாயிறு போன்ற முருகனின் சேண் விளங்கு அவிர் ஒளியைக் கண்டோம். இனி முருகனின் வேறு சில பண்புகளையும் காண்போம்.
2. செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை - திரு 5
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள்
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக் கை – திரு 4,5
முருகப்பெருமானின் அருளையும், தெறலையும் கூறும் புலவர், முருகனின் கை வன்மையைப் பற்றி இங்குக் கூறுகிறார்.
(தன்னைச்)சேர்ந்தவர்களைத் தாங்குகின்ற செருக்குடைய, வலிமையான திருவடிகளையும்,
(தான்)கோபங்கொண்டாரை அழித்த இடியின் மாற்றான பெரிய கையினை உடையவனும்,
என்பது இதன் பொருள்.
செறுநர் என்பது பகைவர். இங்கே நல்லொழுக்க நெறியினின்றும் வழுவி, தீவினை நயந்து, தமக்கும் பிறர்க்கும் கேடு விளைவிப்பவர். அவர்மீது முருகன் கோபங்கொள்கிறான். எனவே அவர்கள் செறுநர் ஆகின்றனர். செல் என்பது இடி. இடி ஒருவர் மேல் விழுந்தால், அவரை முற்றிலும் அழிப்பது திண்ணம். ஆனால் அந்த இடி மேகத்தில் உண்டாகிறது. மேகம் மழையைப் பொழிவது போல், முருகன் அருளைப் பொழிவான். இருப்பினும் அவன் கையினுள் இடியினைபோன்ற அழிக்கும் சக்தியும் உண்டு என்கிறார் புலவர்.
3. கோபத்து அன்ன தோயாப் பூந்துகில் - திரு 16
மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில்
-------------- --------------------------- ----------------- -----------
கோபத்து அன்ன தோயாப் பூ துகில்
-------------- --------------------------- ----------------- -----------
சூர் அரமகளிர் ஆடும் சோலை - திரு 12 - 41
திருமுருகாற்றுப்படையின் தொடக்கத்தில், அதன் ஆசிரியர் புலவர் நக்கீரனார் முருகனை வாழ்த்திப் பாடும் தெய்வமங்கையரான மலைகளில் வாழும் சூரரமகளிரைப் பற்றிக் கூறுகிறார். அம் மகளிருடைய சீறடி, கணைக்கால், நுசுப்பு, பணைத்தோள் ஆகியவற்றைப் பற்றிக் கூறிவிட்டு, அடுத்து, அவர்கள் அணிந்திருக்கும் ஆடையைப் பற்றிக் கூறுகிறார்.
பெரிய மூங்கில் உயர்ந்து வளர்ந்துள்ள வானளாவிய மலையிடத்தே,
-------------- --------------------------- ----------------- -----------
இந்திரகோபப்பூச்சியைப் போன்ற (சிவந்த), சாயம் ஏற்றப்படாத, பூவேலைப்-பாடமைந்த ஆடை
-------------- --------------------------- ----------------- -----------
அஞ்சத்தக்க தெய்வமகளிர் ஆடும் சோலையையுடைய,
என்பது இதன் பொருள்.
பொதுவாக, மாந்தர் அணிந்திருக்கும் ஆடைகளில் உள்ள நிறங்கள், சாயம் தோய்க்கப்பட்டதால் உண்டானவை. ஆனால், சூரரமகளிர் தெய்வப் பெண்டிர் அல்லவா! எனவே, அவர்களின் உடை இயல்பாகவே தங்கள் நிறத்தைக் கொண்டவை என்ற பொருள்படவே, தோயாப் பூந்துகில் என்கிறார் புலவர்.
இந்திரகோபப் பூச்சிக்கும் அதன் செந்நிறத்தை ஊட்டியவர் யார்? இந்திரகோபப் பூச்சிக்கு எப்படி அதன் நிறம் தோய்க்கப்படாமல் தானாகவே அமைந்ததோ, அதைப் போலவே இம் மகளிரின் ஆடைகளும் தோய்க்கப்படாமல் தானாகவே அவற்றின் செந்நிறத்தைக் கொண்டிருக்கின்றன என்றும் புலவர் கூறுவதாகக் கொள்ளலாம். எனவே, இவ்வுவமை, பூச்சிக்கும் துகிலுக்கும் உள்ள நிற ஒற்றுமையையும் அது அமைந்திருக்கும் பண்பையும் குறிப்பிடுகிறது எனக் கொள்ளலாம்.
கோபம் என்பது இந்திரகோபம் எனப்படும் தம்பலப்பூச்சியாகும். இதனை Cochineal insect, Coccus cacti; தம்பலப் பூச்சி என்கிறது தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon). இது Dactylopius coccus (old name Coccus cacti) எனப்படும்.
Cochineal என்பது ஒரு வகைப் புழு ஆகும். சப்பாத்துக்கள்ளி என்ற ஒருவகைக் கள்ளிச் செடியில் காணப்படும். இப் புழுவின் பெண்ணின வகை scarlet அல்லது crimson என்ற ஒருவகையான மிகவும் ஆழ்ந்த செந்நிறம் கொண்டது. இந்தப் பெண்புழுக்களைச் சேகரித்து, காயவைத்து, இடித்துப் பொடியாக்கி, அதனின்றும் பட்டுத்துணிகளுக்கான சாயம் தயாரிப்பார்கள். இந்தத் தயாரிப்பு முறையைப் பொறுத்து, சாயத்தின் சிவப்புத்தன்மை மாறுபடும்.
கோபம் என்பதுவே ஒருவகைத் துகிலைக் குறிக்கும் என்று சிலப்பதிகார உரையினின்றும் அறிகிறோம். சிலப்.14-108 அடிக்கான உரையில், துகில் என்பது பலவகையான பட்டுத்துணிகளைக் குறிக்கும் என்றும், அவை கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம் என 36 வகைப்படும் என்றும், அவற்றுள் ஒன்றாகக் கோபம் என்பதுவும் குறிப்பிடப்படுகிறது. கோபப்பூச்சியின் சாயம் ஏற்றப்பட்ட பட்டுத் துணிக்குக் கோபம் என்றே பெயர் வழங்கப்பட்டிருக்கலாம். அந்தக் கோபம் போன்று, ஆனால் சாயம் தோய்க்கப்படாத துகிலை தெய்வமகளிர் அணிந்திருந்தனர் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.
இங்கே கோபம் என்பது சிவப்புநிறத் துகிலைக் குறிக்கிறதா அல்லது சிவப்புச் சாயப்பொடியைக் குறிக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால் கோபம் என்ற தம்பலப்பூச்சி சப்பாத்துக்கள்ளிச் செடியில் படர்ந்திருக்கும் cochineal என்ற பூச்சியைக் குறிக்கும் என்ற பேரகராதியின் கூற்று தவறு என ஒரு கருத்து உண்டு. இந்தச் சப்பாத்துக்கள்ளிப் பூச்சிகளினின்றும் சாயப்பொடி தயாரிக்கும் முறை தென் அமெரிக்க நாட்டு மக்களுக்குத் தெரிந்திருந்தது என்றும், கி.பி. 14-ஆம் நூற்றாண்டுவாக்கில் அங்குச் சென்ற ஸ்பெயின் நாட்டவர் அம்முறையைத் தெரிந்துகொண்டு, அந்தப் பூச்சிகளை மறைவாகத் தமது நாட்டுக் கொண்டுவந்தனர், அதன் பின்னரேயே அம்முறை மேலைநாடுகளுக்கும் அவர்கள் மூலமாகக் கிழக்காசிய நாட்டினருக்கும் தெரியவந்தது என்றும் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்குப் பன்னெடுங்-காலத்துக்கு முன்னரேயே பெரும்புகழ் பெற்றிருந்த சீனத்துச் சிவப்புப் பட்டுக்குச் செடிகொடிகளின் வேர், பூ (madder root and safflower) ஆகியவற்றினின்றும் பெறப்பட்ட இயற்கை வண்ணமே ஏற்றப்பட்டது.
எனவே, சங்க இலக்கியங்கள் கூறும் கோபம் என்பது சப்பாத்துக்கள்ளிப் பூச்சியாக இருக்கமுடியாது.
எட்டுத்தொகை நூல்களில் மூதாய், ஈயன்மூதாய் என்ற சொற்கள் காணப்படுகின்றன. அவற்றுக்கும் தம்பலப்பூச்சி என்றே உரைசொல்லப்-பட்டிருக்கிறது. ஆனால் அவை மாரிக்காலத்தில் ஈரநிலங்களில் ஊர்ந்து திரிந்து நீர்ப்பரப்புகளுக்கு அருகில் கூட்டமாக அடைந்திருக்கும் என்ற குறிப்புகளும் அவற்றில் காணப்படுகின்றன. அவற்றை வைத்துப் பார்க்கும்போது, அவை வெல்வெட் பூச்சி என்று அழைக்கப்படும் Trombidium grandissimum என்ற உயிரியாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. இதுவும் நிறத்தில் ‘பளீர்'என்ற சிவப்பாக இருக்கும்.
இந்தப் பூச்சியே இந்திரகோபம் எனவும், இதன் சிவப்புநிறமே ‘கோபத்தன்ன' எனத் திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்டிருக்கிறது எனவும் துணியலாம்.
4. தேம்கமழ் மருதுஇணர் கடுப்பக் கோங்கின் - திரு 34
5. குவிமுகிழ் இளமுலை – திரு 35
---------- ---------- ------------ திண்காழ்
நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேம்கமழ் மருதுஇணர் கடுப்பக் கோங்கின்
குவிமுகிழ் இளமுலை கொட்டி ---------- - திரு 32 - 35
இதுவும் முருகனை வாழ்த்திப்பாடும் சூரரமகளிரைப் பற்றிய வருணனையே.
திண்ணிய வயிரம்பாய்ந்த
நறிய சந்தனக்கட்டையை உரைத்த பொலிவுள்ள நிறத்தையுடைய குழம்பை,
மணம் நாறுகின்ற மருதம்பூக் கொத்துக்களைப் போன்று, கோங்கின்
குவிந்த அரும்பினை ஒத்த இளமுலையில் அப்பி
என்பது இதன் பொருள்.
மருதமரத்தில் மருது (terminalia alata), நீர்மருது (terminalia arjuna), கருமருது (terminalia elliptica willd) எனப் பல வகை உண்டு. எனினும் இவற்றின் பூக்கள் ஏறக்குறைய ஒரே தோற்றத்தில் வெவ்வேறு வண்ணங்களில் இருக்கின்றன. இவற்றில் நீர்மருது எனப்படும் வெள்ளைமருதின் பூக்கள் ஒருவகை மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. terminalia kuhlmannil என்ற ஒருவகை மருதமரமும் மஞ்சளாக இருக்கிறது. இந்த மலர்களின் கொத்தைப் போன்று சந்தனக் குழம்பு இருப்பதாகப் புலவர் குறிப்பிடுவதால் தேம்கமழ் மருது எனப் புலவர் குறிப்பிடுவது இவற்றில் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும்.
திண்காழ் நறுங்குறடு என்றது நன்கு விளைந்த சந்தனக்கட்டையை. காழ் என்பது வயிரம். நாட்பட்ட மரத்தின் அடிமரம் வயிரம்பாய்ந்து இருக்கும். அதனின்றும் பெறப்பட்ட கட்டை இது. குறடு என்பது கட்டை. நறுங்குறடு என்பதால் சந்தனக்கட்டை ஆனது. உரிஞ்சுதல் என்பது தேய்த்தல் அல்லது உரைத்தல். சந்தனக்கட்டையைக் கல்லில் நீர்விட்டுத் தேய்த்து எடுத்த குழம்பு பூங்கேழ்த் தேய்வை எனப்பட்டது. இந்தச் சந்தனக் குழம்பை மகளிர் தம் மார்பினில் பூசியிருக்கின்றனர். இவ்வாறு மார்பில் பூசப்பட்ட சந்தனம் இனிய மணம் கமழும் மருதம்பூக் கொத்துக்களைப் போன்று இருந்ததாம்.
இந்தச் சந்தனக் குழம்பைக் கோங்கின் மொட்டுப் போன்ற தம் குவிந்த மார்பில் அப்பிக்கொண்டதாகப் புலவர் கூறுகிறார். இளமகளிரின் முலைக்குக் கோங்கின் மொட்டு உவமிக்கப்படுவதைச் சிறுபாணாற்றுப்படையிலும் பார்க்கலாம்.
யாணர் கோங்கின் அவிர்முகை எள்ளி
பூண்அகத்து ஒடுங்கிய வெம்முலை - சிறு 24-26
முகிழ் என்பது அரும்பு அல்லது மொட்டு. அரும்பு குவிந்துதான் இருக்கும். இருப்பினும் குவிமுகிழ் என்பது உறுதி அல்லது அழுத்தம் குறித்து - விரிமலர் என்றாற் போல. வேலும், கோங்கின் மொட்டு மலரும் பருவத்தில் அதன் புற இதழ்கள் சற்று விலகி, வாய் திறக்கும் நிலையில் இருக்கும். அப்படியின்றி, முற்றிலும் குவிந்த நிலையில் இருக்கும் மொட்டுகளே பெண்களின் இளம் மார்பை ஒத்திருக்கும் என்ற கருத்தில் கோங்கின் குவிமுகிழ் இளமுலை என்று புலவர் கூறுவதாகவும் கொள்ளலாம்.
-இன்னும் வரும்
ப.பாண்டியராஜா
...