நெடுநகர், வளநகர், பழநகர், பெருநகர், எழில்நகர், திருநகர் என்றும் "தேனின்பொலி மொழியாளொடும் உலகு ஏத்த இருந்தான் மேய குளிர்சாரல் கொடுங்குன்றம்" என்றும் திருஞானசம்பந்தர் பாடியருளிய, பறம்புமலை என்னும் பிரான்மலைக்கு அண்மையில் சென்றுவந்தேன். சிங்கை சித்தர் அய்யா கல்லூரிக்குப் பயிற்சிக்குச் சென்றிருந்தபோது வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டேன்.
பாண்டிய நாட்டின் பாடல்பெற்ற பதினான்கு தலங்களில் ஒன்று திருக்கொடுங்குன்றம். திருஞானசம்பந்தர் மலையையே சிவனாகக் கண்டு எம்பிரான் மலை என்று தொழுதாராம். அதானால் பிரான்மலை என்றும் பறம்புமலை என்று வழங்கப்பட்டு பிரான்மலை என்று திரிந்ததாகவும் கூறுகிறார்கள்.
கடையேழு வள்ளல்களில் மழை போன்றவன் எனப் போற்றப்படும் முல்லைக்குத் தேர் ஈந்த பாரிவேள் ஆண்ட பகுதி பறம்பு மலை என்கிறார்கள். சங்கப்பாடல்களில் பத்தில் ஒரு பங்கு பாடல்களைப் புலன் அழுக்கற்ற புலவன் கபிலன் பாடியுள்ளான்! குறிஞ்சித் திணை வல்லவன். கபிலன் போற்றிய அரசன் பாரி; பாடிய மலை பறம்புமலை.
பிரான்மலை அடைந்ததும் மூன்று தேர்கள் கண்டேன். தேர்ச்சிற்பங்களின் வடிவங்கள் காலத்தால் உரு மாறியுள்ளன. தேர் நிலையிலிருந்து மாலை நேரத்தில் வான்மழை சாரலாக ஆரம்பித்த வேளையில் மலையின் தோற்றம் வெகு அழகு!
கோவில் பரந்து மூன்று நிலைகளில் மலைச் சரிவில் அமைந்துள்ளது. அடிநிலைக் கோவிலில் "உமாமகேசுவரர்" என்று இன்று அழைக்கப்படுகின்ற கொடுங்குன்ற நாதர் அருள்பாலிக்கிறார். அடுத்துத் திருப்புகழ் பெற்ற முருகன் சன்னதி. அருணகிரி நாதர் பாடலில் பொருட்பெண்டிர் உறுப்பு வர்ணனையில் மலை தந்த பாதிப்பு பிரதிபலிக்கிறது. பாடலின் சந்தம் அபாரம். அம்மன் ஞானசம்பந்தர் "தேனின் போலி மொழியாள்" என்று பாடியுள்ளது போல "குயிலமுத நாயகி" என்றழைக்கப்படுகிறார். சரியான விளக்கு ஒளி அமைப்பு இல்லை.
மலையின் அடுத்த நிலையில் காசிவிசுவநாதர் விசாலட்சி கோவில் இருக்கிறது. துவாரபாலகர் கம்பீர அழகு! இங்கு பக்தர்கள் கொண்டாடும் ஆளுயர பைரவர் மிகவிசேடம். பைரவர் சன்னதியே பிரதானம்.
இதற்கும் மேல்நிலையில் தேவ சபை என்னும் கல் மண்டபமும் குடவரைக் கோயிலும் இருக்கின்றன. பெரிய குடவரைக் கருவறையில் ஈசன் "மங்கை பாகர்" அம்பாள் "தேனம்மை" இணைந்த கைகளுடன் அருள்பாலிக்கிறார்கள். இங்கு பல விசேடங்கள். அம்மைக்கு 9 முழ வெள்ளை ஆடை. இறைவனுக்குப் பத்து ஆறு வெள்ளை வேட்டி. ஒருமுறை அணிவித்த ஆடை மறுமுறை அணிவிப்பதில்லை. அபிடேகம் முன்புள்ள சிறு இலிங்கத் திருமேனிக்கே. வெள்ளெருக்கம் பூ மாலை மட்டுமே சாற்றபடும்! வேறு பூக்கள், மின்விளக்கு அனுமதியில்லை. கற்பூர ஆரத்தி ஒளியில் ஒளிர்கின்ற எம்பிரானையும் நாணப் புன்னகை இறைவியையும் வழிபடும்போது சிலிர்ப்பு ஏற்படுகிறது. வெளியில் மழை. உடன் வழிகாட்டியாக அமைந்த சிறுவனும் அர்ச்சகரும் மட்டுமே! (நண்பர்கள் மங்கை பாகர் காட்சி காணை இணையச் சுட்டி இதோ: https://goo.gl/images/i9ZHP5)
மேல்மண்டபத்தில் அர்ச்சகருக்காகக் காத்திருந்தபோது வளநகராகிய பிரான்மலை வீடுகளும், தூரத்தில் தெரிந்த வறண்ட குளமும், மலைப் பள்ளத்தில் அமைந்த தாமரைக் குளமும், மழைச் சாரல் குளிரும் கவர்ந்தன. உயரத்தில் பிரசித்திபெற்ற தர்கா இருப்பதாகச் சிறுவன் கூறினான்.
பிரான்மலைக் கல்வெட்டில் குறித்துள்ளபடி "பாண்டி மண்டலத்து கேரள சிங்க வளநாடாகிய அருவியூரான குலசேகரபட்டிணத்து திசைஆயிரத்து ஐநூற்றுவர்" என்ற வணிக குழாம் இங்கு இருந்துள்ளது. இன்றும் அருவியூர் நகரத்தார் என்னும் வணிக மரபினர் பிரான்மலை வட்டாரத்தில் செல்வாக்குடன் வாழ்ந்து வருகிறார்கள்.
நீண்ட நாள் நான் காண விரும்பிய, பல மைல் தூரத்திலிருந்து கண்டு வியந்துள்ள பிரான்மலையைத் தரிசித்த மகிழ்ச்சியுடன் சிங்கம்புணரி, திருப்பத்தூர் வழியாகக் காரைக்குடி வந்தடைந்தேன்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com