
கடந்த இரவு என்பது மிகப் பயங்கரமானது. காஸா மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தரைவழி ஊருடுவல் காரணமாக மிகப் பெருமளவானவர்கள் காயமடைந்துள்ளனர், அங்கவீனர்களாகி உள்ளனர், இறந்து கொண்டிருக்கின்றனர்- இவர்களில் எல்லா வகையான பாலாஸ்தீனியர்களும் உள்ளனர், சகல வயதினரும் உள்ளனர் இவர்கள் அனைவரும் அப்பாவிப் பொதுமக்கள் என காஸாவில் காயம்பட்டவர்கள் மத்தியில் பணியாற்றும் பேராசிரியர் மாட்ஸ் கில்பேர்ட் தனது அனுபவங்கள் குறித்து இவ்வாறு சனல் 4 இற்கு எழுதியுள்ளார்.
தொடர்ந்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அம்புலன்ஸ்களிலும் மருத்துவமனைகளிலும் பணியாற்றும் அந்த மாமனிதர்கள் 24 மணிநேரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் களைத்துப் போயுள்ளனர். சாதாரண மனிதர்களால் சமாளிக்க முடியாத பணி அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
அவர்கள் அக்கறையுடனுள்ளனர், எந்த நோயாளிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தீர்மானிக்கின்றனர், பெருமளவு உடல்கள், கைகால்கள் இல்லாமல் இருக்கிறது. நடப்பவர், நடக்கமுடியாதவர், சுவாசிப்பவர், சுவாசிக்க முடியாதவர், குருதிபெருக்கெடுப்பவர் என பல்வேறு வகையினர் இருக்கின்றபோது இவைகளுக்க மத்தியில் அனைத்தையும் இலகுவாக விளங்கிக்கொள்ள முயல்கின்றனர்.
காயமடைந்தவர்களுக்கான எனது மரியாதை எல்லையில்லாதது. அது மிக மோசமான வலி, அதன் வேதனை பாரியது. அதன் அதிர்ச்சிக்கு மத்தியிலும் தளராத உறுதிப்பாடு அவர்கள் மத்தியில் காணப்படுகின்றது. பணியாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கான எனது மரியாதை எல்லையில்லாதது.
பாலஸ்தீனியர்களுடனான எனது நெருக்கம், இணைபிரியாத தன்மை எனக்கு பலத்தைத் தருகிறது. எனினும் சிறிது நிமிடங்களுக்கு நான் கதறியழ விரும்புகிறேன், யாரையாவது இறுக பிடித்தபடி, அழவிரும்பகின்றேன், குருதி வெள்ளத்தில் தோய்ந்து போய் குளிர்ந்துபோயுள்ள அந்த குழந்தையின் தோலின் வாசனையை அறிய விரும்புகின்றேன்.
அவசர சிகிச்சை அறையின் தரையில் இன்னமும் இரத்தம் ஏரி போன்று காணப்படுகின்றது. எங்கும் குருதி சொட்டுகிறது, இரத்தத்தில் தோய்ந்த பாண்டேஜ்களை அகற்ற வேண்டியுள்ளது.
சுத்தப்படுத்துபவர்கள் வேகமாக குருதியை அகற்றுகின்றனர். கொல்லப்பட்டவர்களின் ஆடைகள் தலைமுடிகள் என சகலவற்றையும் அகற்றுகின்றனர். அனைத்தையும் அகற்றி சுத்தப்படுத்தி விட்டு மீண்டும் தயாராகின்றோம். மீண்டும் மீண்டும் தயாராகிக்கொண்டிருக்கின்றோம்.
ஷிபா மருத்துவமனைக்கு 24 மணித்தியாலத்தில் 100 ற்கும் மேற்பட்டவர்கள்
கொண்டுவரப்பட்டுள்ளனர். சகல வசதிகளும் உள்ள அனுபமிக்க மருத்துவமனைக்கு இது
சாதாரணவிடயம். ஆனால், இங்கு எதுவுமில்லை, மின்சாரம், மருந்துகள், நீர்,
மருத்துவ உபகரணங்கள், சத்திரசிகிச்சை மேசைகள் எதுவுமில்லை,
இருப்பவையெல்லாம் அருங் காட்சியகத்திலிருந்து கொண்டுவரப்பட்டவை போல
துருப்பிடித்து காணப்படுகின்றன.
ஆனாலும் எமது மருத்துவ பணியாளர்கள் – எதைப் பற்றியும் முணுமுணுக்காமல், யுத்த வீரர்கள் போன்று மன உறுதியுடன் செயற்படுகின்றனர்.
தற்போது தான் இஸ்ரேலின் இராணுவ சாதனங்கள் தமது இசையை இசைக்க தொடங்குகின்றன, தற்போது: கடற்படை படகிலிருந்து ஆட்டிலறிகள் கடற்கரையோரத்தில் வீழந்து வெடித்தன, எவ்16 இன் இரைச்சலும் ஆளில்லாத விமானங்கள் மற்றும் apaches சத்தங்களையும் கேட்ட முடிகிறது.
ஓபாமா அவர்களே! உங்களுக்கு இதயம் இருக்கின்றதா? ஒரு சுத்திகரிப்பாளராக உங்களை மாறு வேடமிட்டுக்கொண்டு ஒரு நாள் இரவு முழுவதும் shifa (ஷிபா) இல் வந்து தங்கிப்பாருங்கள் வரலாறு 100 வீதம் மாறும் என நான் நம்புகிறேன்.
பாலஸ்தீனர்கள் மீதான பாரிய படுகொலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான உறுதிப்பாட்டை எடுக்காமல் இதயமும் அதிகாரமும் உள்ள எவரும் ஷிபா(shifa)விலிருந்து போகமாட்டார்கள்.
ஆனால், இதயமும் கருணையும் இல்லாதவர்கள் திட்டமிட்டு காஸா மீது இன்னுமொரு தாக்குதலை மேற் கொண்டுள்ளனர்.
அவா்கள் தமது போர்க்கருவிகளுக்கு சுருதி சேர்த்து விட்டனர். இனி இரவு முழுவதும் குருதி மழை பொழியப்போகின்றது.
