|
மெய் சிலிர்க்க வைக்கும் உயர்ந்த உள்ளங்கள் ..... பெரியாரும் பெரியவரும்! ஒரு நாள், ஒரு பெரியவரைப் பற்றி ஒரு விஷயம்
கேள்விப்பட்டேன். மறுநாள், வேறு ஒருவர் ஒரு பிரபலம் பற்றிய
வேறொரு விஷயம் கேள்விப்பட்டேன். ஆச்சரியமாக, அந்த இரண்டு விஷயங்களுக்கும் ஒரு முக்கிய ஒற்றுமை இருந்ததைக்
கண்டேன். அந்த இரண்டு விஷயங்களைச் சொல்கிறேன். நீங்களே இரண்டுக்கும் உள்ள
ஒற்றுமை என்னவென்று கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.
காஞ்சிப் பெரியவரின் கூடவே இருந்து, அவருக்கு 40 ஆண்டுக் காலம் சேவை செய்யும் பாக்கியம் பெற்றவர்
லக்ஷ்மிநாராயணன் என்னும் 76 வயதுப்
பெரியவர். மாங்காட்டில் இருக்கிறார். சக்தி விகடனில் காஞ்சிப் பெரியவர் பற்றிய
அனுபவங்களை எழுதச் சொல்லலாம் என்று, எழுத்தாளர் சாருகேசியுடன் சென்று, அவரைச் சந்தித்துப் பேசினேன். காஞ்சிப் பெரியவர்
பற்றி அவர் சொன்னஒரு விஷயம் எனக்கு புதுசாக இருந்தது.
காஞ்சிப் பெரியவர் தமது பரிவாரங்களுடன்
நடந்து வருகிறார். லஸ் அருகில்,
அவரையும்
அவரது அடியவர் கூட்டத்தையும் தாக்குவதற்காக திராவிடர் கழகத்தினர் கழி, கட்டைகளோடு நின்றுகொண்டு இருக்கிறார்கள்.
காஞ்சிப் பெரியவருக்கு ஏதேனும் சங்கடம் நேர்ந்துவிட்டால், தங்களால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாதே
என்கிற பதைப்போடு டி.டி.கே.,
சதாசிவம்
போன்றோர் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறார்கள். பெரியவரை மேலே முன்னேறி வர
வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். அவரது பாதுகாப்புக்கு போலீஸ்
அதிகாரிகள் இருக்கிறார்கள். இருந்தாலும், அவர்களும் தங்களை மீறி பெரியவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ
என்கிற பயத்தில், அவரை மேலே
செல்ல வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறார்கள்.
பெரியவர் புன்னகைக்கிறார். "ஏன் வீணா பயப்படறேள்? அவா என்னை ஒண்ணும் பண்ண மாட்டா!' என்று சொல்லிவிட்டு, அருகே இருந்த அம்பாள் கோவில் எதிரே
நின்று சிறிது நேரம் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்துகொண்டுவிட்டு, மேலே நடக்கத் தொடங்குகிறார். கூடவே
நடந்து செல்லும் அனைவரின் மனதிலும் திக்... திக்..! என்ன ஆகப் போகிறதோ என்று
படபடப்பு!
அந்த நேரத்தில், ஈ.வே.ரா. பெரியார் அங்கே வருகிறார்.
திராவிடர் கழகத் தொண்டர்களைப் பார்த்து உரத்த குரலில், "எல்லாரும் கட்டைகளைக்
கீழே போட்டுட்டு, ஒதுங்கி
நில்லுங்க. பெரியவரை வழி மறிக்கிறது, தாக்குறது எல்லாம் கூடாது, சொல்லிட்டேன்! அவர் எங்கே போகணுமோ, அங்கே அவரை ஒரு ஆபத்தும் இல்லாம கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது உங்க
பொறுப்பு!' என்று கட்டளை
இடுகிறார். அந்தக் கணீர்க் குரல் பெரியவருக்கும் அவரைச் சுற்றி நிற்கும்
அனைவருக்கும் கேட்கிறது. "நான்தான் சொன்னேனே, பார்த்தீர்களா!'என்பதுபோல் பெரியவர் தம் அருகில்
இருப்பவர்களைப் பார்த்துப் புன்னகை பூத்தபடி, தொடர்ந்து நடக்கிறார்.
பெரியாரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, பெரியவரைப் பாதுகாப்பாக அழைத்துக்
கொண்டுபோய் விடுகிறார்கள் திராவிடர் கழகத் தொண்டர்கள். இந்தச் சம்பவம்
நடக்கும்போது கூடவே இருந்தவர் லக்ஷ்மிநாராயணன். இதை அவர் விவரித்தபோது, அன்றைக்கிருந்த படபடப்பு அவரது
வர்ணனையில் இருந்தது.
இந்தச் சம்பவத்துக்குச் சில ஆண்டுகளுக்கு
முன்னால் வரை, காஞ்சிப்
பெரியவர் ‘மேனா' என்று சொல்லக்கூடிய சிவிகையில்தான் சென்றுகொண்டு
இருந்தார். சிவிகை என்பது பல்லக்கு. பழைய காலத் திரைப் படங்களில் இளவரசியை ஒரு
பல்லக்கில் வைத்து, முன்னால் நான்கு
பேர், பின்னால் நான்கு பேர்
தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கலாம். பெரியவரையும் அதுபோல்தான் அடியவர்கள்
தூக்கிச் செல்வார்கள்.
ஒருமுறை, பெரியவர் அதுபோல் மேனாவில் சென்றுகொண்டு
இருந்தபோது, வழியில் மேடை
போட்டுப் பெரியார் பேசிக்கொண்டு இருக்கிறார். "மற்றவர்கள் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்ல, சொகுசாக உட்கார்ந்துகொண்டு போகிறாரே, இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனிதன் சுமப்பது எத்தனைக்
கேவலமானது! துறவி என்றால் எல்லாச் சுகங்களையும் துறக்க வேண்டும். இப்படி
அடுத்தவர் தோளில் உட்கார்ந்து போகும் இவரைத் துறவி என்று எப்படி ஒப்புக்கொள்ள
முடியும்?' என்று பெரியார் முழங்கிக்கொண்டு இருப்பது
பெரியவரின் காதுகளில் விழுந்தது.
அவ்வளவுதான்... மேனாவை அங்கேயே
தரையிறக்கச் சொல்லி இறங்கிவிட்டார் பெரியவர். "அவர் ஏதோ சொல்றார்; சொல்லிட்டுப் போறார். அதைப் பெரிசா எடுத்துக்காதீங்கோ!
உங்களைச் சுமந்துண்டு போறதை நாங்க பாக்கியமா கருதறோம்!' என்று மடத்தைச் சேர்ந்தவர்கள் பெரியவரிடம்
கெஞ்சியிருக்கிறார்கள்.
"இல்லை. அவர் சொல்றதுதான் சரி! சுகத்தைத் துறக்காதவன் துறவியே
இல்லை. இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி நான் எங்கே போகணும்னாலும்
நடந்துதான் போகப் போறேன்' என்று
தீர்மானமான முடிவெடுத்துவிட்டார் காஞ்சிப் பெரியவர்.
கடைசி வரையிலும், அவர் அந்த முடிவிலிருந்து மாறவில்லை.
அவர் கால்கள் தெம்பு இருக்கும்வரை நடந்துகொண்டே இருந்தன.
--------------------------------------------------------------------------------------------- பெரியவர் பெரியவர்தான்!
காஞ்சிப் பெரியவர் ஜகத்குரு
சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பற்றிச் சமீபத்தில் எனக்குத் தெரிய வந்த
சிலிர்ப்பூட்டும் தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.உண்மையிலேயே
பெரியவர் பெரியவர்தான்!
நாற்பது ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப் பெரியவரின் ஜன்ம தினத்தன்று
அவரைச் சந்தித்து ஆசி பெறுவதற்காக ‘கலவை’யில்
எக்கச்சக்கக் கூட்டம் திரண்டிருந்தது. அப்போது ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு
நபர் தன் மனைவியோடு, ஸ்வாமிகளின்
தரிசனத்துக்காக முன் வரிசையில் காத்திருந்தார். அவர் கழுத்திலும், அவரின் மனைவியின் கழுத்திலும் காதிலும்
தங்க நகைகள் ஏராளம் மின்னின. அவர் ஒரு பெரிய தொழிலதிபர் என்பது பார்த்த
மாத்திரத்திலேயே புரிந்தது.
பெரியவர் தம் அறையிலிருந்து வெளிப்பட்டதும், முன்னால் இருந்த அந்தத் தம்பதி மீதுதான்
அவரது பார்வை விழுந்தது. அந்தத் தொழிலதிபரை, "எப்படி இருக்கே?" என்று விசாரித்தார் பெரியவர்.
அதற்கு அந்தத் தொழிலதிபர், தான் செய்து வரும் தான தருமங்கள்
பற்றியும், தொடர்ந்தாற்போல்
நான்கு நாட்களுக்குத் தன் சொந்தச் செலவில் இலவசமாக ஏழை பிராமணர்களுக்கு ‘சமஷ்டி உபநயனம்’ செய்து வைத்தது பற்றியும் சொல்லிவிட்டு, அது தொடர்பான கையேடுகளைப் பெரியவரிடம்
காண்பித்தார். அதை வாங்கிப் பார்வையிட்ட பெரியவர், "சரி,
இதுக்கெல்லாம்
உனக்கு எவ்வளவு செலவாச்சு?" என்று
கேட்டார். தொழிலதிபர் பெருமிதம் தொனிக்கும் குரலில், "சில லட்ச ரூபாய்கள்
ஆகியிருக்கும்" என்றார்.
பெரியவர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.
பின்னர்,
"அதிருக்கட்டும்... திருநெல்வேலில தக்ஷிணாமூர்த்தின்னு ஒரு பையன் இருந்தானே, அவன் இப்போ எப்படி இருக்கான்?" என்று சன்னமான குரலில் கேட்டுவிட்டுப்
பதிலை எதிர்பாராமல் நகர்ந்து போய்விட்டார்.
தொழிலபதிபர் அப்போது அடைந்த
அதிர்ச்சிக்கு அளவே இல்லை. தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் குமுறிக்
குமுறி அழத்தொடங்கிவிட்டார். அவர் மனைவி அவரைச் சமாதானப்படுத்த முயன்றும்
முடியவில்லை. அதற்குள் பத்திரிகையாளர்கள் சிலர் அங்கு கூடி, அவர் ஏன் அழுகிறார் என்று விசாரித்தனர்.
அதற்கு அவர், "நான்
அயோக்கியன்... அயோக்கியன்..!" என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டு
இருந்தார். அவரை ஒருவாறு சமாதானப்படுத்தி விஷயத்தைக் கேட்டதற்கு அவர்
சொன்னார்...
"எனக்கு ஒரு அக்கா உண்டு. அவள்
கணவனை இழந்தவள். அவளுக்கு ஒரு பையன். அவன் பெயர்தான் தக்ஷிணாமூர்த்தி. அவர்கள்
இருவரும் என் வீட்டில்தான் தங்கி வளர்ந்தார்கள். பின்னர் அக்கா காலமாகிவிட்டாள்.
அதன்பின் அந்தப் பையனை என் வீட்டில் வைத்திருக்க விரும்பாமல், வீட்டை விட்டுத் துரத்தி விட்டேன்.
அதன்பின் அவன் எங்கே போனான்,
என்ன
ஆனான் என்று எனக்குத் தெரியாது. ‘ஊருக்கெல்லாம் சமஷ்டி உபநயனம் செய்து வைப்பதாய் பெருமை பேசுகிறாய்.
ஆனால், உன் சொந்தச்
சகோதரி மகனை மறந்துவிட்டாய். நீ பெரிய தர்மவானா?’என்றுதான் பெரியவர் இப்போது என்னை மறைமுகமாகக்
கேட்டார். உடனடியாக அந்தப் பையனைத் தேடிக் கண்டுபிடித்து, நல்ல முறையில் வளர்த்துப் பெரியவனாக ஆக்க
வேண்டியது என் பொறுப்பு!" என்றபடி தன் மனைவியுடன் கிளம்பிச் சென்றார்
அந்தத் தொழிலதிபர்.
இன்னொரு சம்பவம்...
ஒருமுறை ‘திருவாடனை
' என்னும்
ஊரிலிருந்து பக்தர்கள் கூட்டம் பெரியவாளைத் தரிசிக்க வந்தது. பெரியவர்கள் அன்று
காஷ்ட மௌனம் இருந்தார். அதாவது,
ஒரு
சிறு சப்தம் கூட எழுப்பாமல்,
முழுமையான
மௌனத்தில் இருப்பார். வருடத்தில் ஒருநாள் அவர் இப்படி காஷ்ட மௌனம் இருப்பது
வழக்கம். முப்பது வருடங்களுக்கும் மேலாக அவர் கடைப்பிடித்து வந்த வழக்கம் இது.
ஒருமுறை, அன்றைய பாரதப்
பிரதமர் திருமதி இந்திராகாந்தி வந்த சமயத்தில்கூடப் பெரியவர் தம் மௌன விரதத்தை
விட்டுக் கொடுக்கவில்லை.
அன்றைக்குத் திருவாடனை ஊரிலிருந்து
வந்திருந்த பக்தர் கூட்டத்தில் சங்கரன் என்பவரும் இருந்தார். அவர் பிரிட்டிஷ்
ஆட்சியின்போது தேச விடுதலைக்காகப் போராடி, ஆங்கிலேயர்களிடம் தடியடி பட்டு, இரு கண் பார்வையையும் இழந்தவர்.
மடத்துச் சிப்பந்தி ஒருவர், வந்திருந்த பக்தர் ஒவ்வொருவரையும்
பெரியவாளுக்கு அறிமுகம் செய்துவைக்க, பெரியவர் மௌனமாகவே ஆசி வழங்கிக்கொண்டு இருந்தார்.
சங்கரன் முறை வந்தபோது, அவரையும் பெரியவருக்கு அறிமுகம் செய்தார்
மடத்துச் சிப்பந்தி. சங்கரனை பெரியவருக்கு ஏற்கெனவே தெரியும். சங்கரனைப்
பார்த்ததும் பெரியவர் உரத்த குரலில், "என்ன சங்கரா? எப்படி இருக்கே?
சௌக்கியமா? உன் மனைவியும் குழந்தைகளும் நன்னா
இருக்காளா? இன்னும்கூட
உன்னால முடிஞ்ச வரைக்கும் தேசத் தொண்டு செஞ்சுண்டு இருக்கே போலிருக்கே?" என்று கேட்டு, ஆசீர்வதித்தார்.
சங்கரனுக்கு ரொம்ப சந்தோஷம். அதே நேரம், மடத்து சிப்பந்திகளுக்கும்
மற்றவர்களுக்கும் பெரிய ஆச்சரியம்... முப்பது வருஷமாகக் கடைப்பிடித்து வரும் மௌன
விரதத்தை முறித்து விட்டாரே பெரியவர் என்று!
எல்லோரும் பிரசாதம் வாங்கிக்கொண்டு
அங்கிருந்து அகன்ற பின்பு, சிப்பந்திகள்
தயங்கித் தயங்கிப் பெரியவரிடம் சென்று, "பெரியவா எதுக்காக மௌன விரதத்தை முறிச்சுட்டீங்க? எல்லாருக்கும் மௌனமா ஆசி வழங்கினது போலவே
இந்தச் சங்கரனுக்கும் ஆசி வழங்கியிருக்கலாமே? இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா?" என்று கேட்டனர்.
பெரியவர் புன்னகைத்தபடியே, "எல்லாரையும் போல
சங்கரனை நடத்தக் கூடாது. இவனுக்குப் பாவம் கண் தெரியாது. என்னைப் பார்த்து ஆசி
வாங்கணும்னு அவ்வளவு தூரத்திலேர்ந்து வந்திருக்கான். அவனால் என்னைப் பார்க்க
முடியாது. நானும் மௌனமா ஆசீர்வாதம் பண்ணினேன்னா, அது அவனுக்குப் போய்ச் சேராது. நான் அவனைப்
பார்த்தேனா, ஆசீர்வாதம்
பண்ணினேனான்னு அவனுக்குத் தெரியாது. மனசுக்குக் குறையா இருக்கும்.
வருத்தப்படுவான். இந்தத் தேசத்துக்காகத் தன் கண்களை தானம் செஞ்சவன் அவன்.
அவனுக்காக நான் என் ஆசாரத்தை விட்டுக் கொடுத்தேன்னா ஒண்ணும் குடிமுழுகிப்
போயிடாது. அதனால எதுவும் குறைஞ்சுடாது. அவனோட தியாகத்துக்கு முன்னாடி என்னோட
ஆசாரம் ஒண்ணுமே இல்லே!" என்றார் நிதானமாக.
பெரியவர் வெறும் சாஸ்திர சம்பிரதாயங்களை
மட்டும் வறட்டுப் பிடிவாதமாகப் பிடித்துக்கொண்டு இருப்பவர் அல்ல; அதற்கும் மேலாக மனிதாபிமானத்தை, மனித நேயத்தையே விரும்பியவர்; இந்த விஷயத்தில் மற்றவர்களுக்குத் தாமே
ஒரு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம்!
|