
ஒரு பொண்ணு... புருஷன் சரியில்லை; மூணு பிள்ளைங்க; வாசல்ல பெரிய கேள்விக்குறியா வாழ்க்கை. என்னெல்லாம் பண்ணி இருப்பா அவ?
எனக்கு எங்கம்மா அப்போ நிலா. அதுவும் பௌர்ணமி நிலா!
ஏன்னா, அப்போ எங்களையெல்லாம் எங்கேயோ ஒரு ஹாஸ்டல்ல போட்டுட்டு, வேலூர் சிம்.எம்.சி&யில் நர்ஸா வேலை பார்த்தா. மாசா மாசம் சம்பளம் வாங்கிட்டு எங்களைப் பார்க்க ஓடி வருவா. அந்த ஒரு நாளுக்காக, எங்களை அள்ளிக் கொஞ்சுற சந்தோஷத்துக்காக ஒரு மாசம் பூரா ஓடி ஓடி உழைப்பா. தன் இளமை எல்லாத்தையும் எங்களுக்காகவே தொலைச்சிருக்கா. தன் பிள்ளைகளுக்கு எப்படியாவது நல்ல படிப்பைத் தந்துடணும்னு அவ தவிச்ச தவிப்பு, உழைச்ச உழைப்பு எப்பவும் எங்க நெஞ்சில் இருக்கும்.
நான் என் பால்யத்துல எவ்வளவோ தப்புகள் பண்ணியிருக்கேன். ஒருநாள்... ஒருமுறைகூட 'நீயும் உன் அப்பனை மாதிரிதான்டா இருக்கே!'னு ஒரு வார்த்தை கடிஞ்சு சொல்லாத அம்மா. அந்தச் சின்ன வயசுல எங்கிருந்து அவளுக்கு அவ்வளவு பக்குவம் வந்திருக்கும்? இப்போ நினைச்சா, ஆச்சர் யமா இருக்கு.
எனக்கே இப்போ 40 வயசு. ரெண்டு பெண் குழந்தைங்க இருக்காங்க. ஒரு குடும்பத்தில் பெத்த வங்க எப்படி நடந்துக்கணும்னு என் அம்மா எனக்கு வார்த்தைகளால் அறிவுரை சொன்னதே இல்லை. வாழ்ந்தே காட் டிட்டா. எப்படி வாழக் கூடாதுன்னு வாழ்ந்து காட்டினவன் என் அப்பன்.
இப்போ என் அம்மாவின் முதுமையில் அவளுக்கு ஒரு அன்பான புருஷன் இருந்திருந்தா, இன்னும் கொஞ்சம் ஆறுதலா இருந்திருப்பா. தனக்கு எமோஷனல் சப்போர்ட்டா ஒருத்தன் நம்மோட இருக்கான்னு சந்தோஷப் பட்டிருப்பா. அந்தச் சந்தோஷத்தை அவளோட முதுமையில், அவளோட மகனா நான் அவளுக்குத் தரணும். ஆனா, என் அம்மா மாதிரி ஒரு அன்பான மனுஷிக்கு, அவளோட இளமை யைத் திருப்பிப் பெற முடியாதே?
கே.எஸ்.நரசிங்கசாமின்னு ஒரு கவிஞன், கன்னடத்தில் இருக்கான். மிடில் கிளாஸ் மக்களோட ஆசைகளை, கோபங்களை அற்புதமான கவிதைகளா தந்தவன். வயசான தம்பதி ரெண்டு பேர் பேசிக்கிற மாதிரி நரசிங்கசாமியோட பாட்டு ஒண்ணு இருக்கு.
புருஷன், பெண்டாட்டிகிட்டே கேட்பான்... 'என் ஊரு அழகா, உன் ஊரு அழகா?'
'இந்த வயசுல ஏன்யா இப்படி ஒரு கேள்வி? என் ஊரு கட்டில்ல படுத்து, நான் உன் ஊர்க் கனவைக் கண்டேனே, அதைச் சொல்லவா? என் ஊர்லேர்ந்து உன் ஊருக்கு உன்னைத் தேடி மாட்டு வண்டியில் வரும்போது, வழி வேக வேகமாக் கடந்து போகுமே, அந்தக் காரணத்தைச் சொல்லவா? தண்ணிக் குடம் எடுத்துத் தனிமையில் போனாலும், கூட்டமா போனாலும், உன் ஊர் சாலை வந்ததுமே அந்தத் தென்னை மரம்கூட உன்னை ஞாபகப்படுத்துமே?'னு சொல்லிட்டே போய், 'ஆமா, உன் ஊரு அழகா, என் ஊரு அழகா?'னு அவளும் கேள்வியிலேயே முடிப்பா.
'உன் ஊர் ஏரியில் உள்ள அழகான தாமரைப் பூவிலெல்லாம், சிவப்பா உன் பேர் இருக்கும். பழுப்பு நிற ஆட்டுக்குட்டி தன் தாய் மடியில் முட்டிமுட்டிப் பால் குடிக்கும்போது, தெறிக்கிற பால் துளியில் வெள்ளையா உன் பேர் இருக்கும். அழகான கன்னுக்குட்டியின் பளபளப் பான கண்ணுக்குள் இருக்கிற ஒளியில் உன் பேர் இருக்கும்'னு அவன் காதலைப் பரிமாறிட்டே போவான்.
இப்படிக் காதல் துணை இல்லாம இருக்கிறது ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு பெரிய துயரம்னு நான் யோசிச்சுட்டு இருக்கும்போது, என் வீட்டுக்கு என் சித்தி வந்தாங்க.
60 வயசு அழகி; அன்பான கிழவி! என் அம்மாவோட தங்கச்சி. அவங்க கல்யாணமே பண்ணிக்கலை. எத்தனையோ முறை பார்த்த சித்திதான். ஆனா, அப்போ எனக்குள் ஓடிட்டிருந்த யோசனையுடன் என் சித்தியைப் பார்த்தபோது, மனசுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி. சின்ன வயசில், நான் என் சித்திக்குப் பண்ணின தப்பு ஞாபகம் வந்தது.
எனக்கு அப்போ 12 வயசு இருக்கும். வீட்டில் விளையாடிட்டு இருந்த என்னை சித்தி தனியாக் கூப்பிட்டு, ரகசியமா என் கையில் ஒரு லெட்டர் குடுத்தாங்க. அதே ஊரில் இருக்கிற ஒருத்தர்கிட்டே அதைக் கொடுத்துட்டு வரச் சொன்னாங்க. ஏதோ ஒரு குறு குறுப்பு, அந்த லெட்டரைப் பிரிச் சுட்டேன். அது, என் சித்தி தன் காதல னுக்கு எழுதின ஒரு லவ் லெட்டர். சின்ன வயசில் இருந்து எல்லாருக் குள்ளேயும் தூங்கிட்டிருந்த மிருகம் லேசா எழுந்து நின்னு சோம்பல் முறிக் குமே, அப்படி ஒரு அனுபவம். முழுசா மூணு, நாலு வரி படிக்க முடியலை. உடம்பெல்லாம் பயம், வியர்வையா வழியுது. ஏதோ செய்யக் கூடாத காரியத் தைச் செய்துட்டு இருக்கிறதா தோணுது.
தன்னோட காதலனுக்கு எழுதப்பட்ட காதல் கடிதத்தை ஒரு சின்னப் பையன் பிரிச்சுப் படிச்சுட்டான்னு சித்திக்குத் தெரிஞ்சா என்ன நடக்கும்னு கற்பனையே பண்ண முடியலை. தன் காதலி எழுதின கடிதம் முறைப்படி தன்கிட்டே வரலைன்னு தெரிஞ்சு, அந்தக் காதலன் என்னை என்ன செய்வானோங்கிற அச்சம் பயமுறுத்துது. சுக்கு நூறா அந்த லெட்டரை அங்கேயே கிழிச்சுப் போட்டுட்டேன். அந்த லெட்டரில் என்ன முக்கியமான விஷயத்தை என் சித்தி தன் காதலனுக்குச் சொல்லியிருந்தாளோ?
இதோ இந்த நிமிஷம் வரைக்கும், 'அந்த லெட்டரை அன்னிக்கு நான் அவர்கிட்டே தரலை சித்தி. என்னை மன்னிச்சுடு!'னு அவ எதிரில் நின்னு மன்னிப்பு கேட்கிற தைரியமும் வர மாட்டேங்குது. கடல் அலையில் நிக்கிறபோது, காலுக்கடியில் இருக்கிற மணலை தண்ணி கொஞ்சம் கொஞ்சமா உருவிட்டுப் போகுமே, அந்த மாதிரி என் பொய் என்னை உருவி எங்கேயோ தூக்கி எறியப் பார்க்குது. 12 வயசுல செய்த தப்பு 40 வயசுல ஞாபகத்துக்கு வந்து தர்ற தண்டனையை அனுபவிக்க ரணமா இருக்கு.
அந்த லெட்டரைக் கிழிச்சுப் போட்ட ரெண்டு மூணு மாசத்திலேயே அதை நான் மறந்துட்டேன். சிக்கிக்காம தப்பிச்சுட்டோம்னா, எந்தத் தப்பும் நம்ம ஞாபகத்தில் இருப்பதில்லையே! ஒரு முறை ஸ்கூல் லீவுக்கு வீட்டுக்குப் போனபோது, வீட்டில் பெரிய சண்டை. 'நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். எனக்குக் கல்யாணமே வேண்டாம். என்னை விட்டுடுங்க!'னு ரௌத்திரமா நிக்கிறா சித்தி. கடைசி வரைக்கும் அப்படியே நின்னா சித்தி!
குப்புனு இப்போ எனக்கு நெஞ்சு அடைக்குது. ஆமா, அன்னிக்கு சித்தி என் மூலமா ஒரு லெட்டர் கொடுத்து விட்டாளே, அதில் என்ன எழுதி இருந்தா? நான்தான் அதை முழுசாப் படிக்காமலே கிழிச்சுப் போட்டுட் டேனே! 'நாம் ரெண்டு பேரும் வீட்டை விட்டு ஓடிப்போய் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா? என்னைக் கை விட்டுட மாட்டியே? உனக்காகத் தான் நான் இன்னும் உயிர் வாழறேன். இந்த ஜென்மத்தில், எனக்குக் கல்யாணம்னு ஒண்ணு நடந்தா, அது உன்னோடதான்!' இப்படி ஏதாச்சும் எழுதின கடிதமா இருக்குமோ அது? அவனிடம் இருந்து பதில் வரும்னு காத்துக் காத்து, அப்படியே கல்யாணமே வேணாம்னு நின்னுட் டாளோ என் சித்தி?
இப்படி விளைவுகள், விபரீதங்கள் புரியாம யார் யார் வாழ்க்கையில் நாம விளையாடிட்டு இருக்கோம்? நம்ம வாழ்க்கையில் இது மாதிரி நமக்கே தெரியாம விளையாட்டுகள் நடந்திருக் குமோ?
நமக்குத் தப்பு பண்ணினவங்களோட நாமும், நாம தப்பு பண்ணினவங்க நம்மோடவும்... நடந்தது தெரியாம இன்னமும் பழகிட்டே இருக்கோமோ?