திருவல்லிக்கேணி பெண் பிள்ளையிடம் பெரிய ஜீயர், உன் உயர்ந்த தாயுள்ளம் ஒன்றே உன்னைக் காத்து விடும் என்றார்.
பெண் பிள்ளையோ, நான் என்ன, சென்று வா என்றேனோ சுமித்திரையைப் போல என்றாள்.
உடனே வழக்கம் போல் அந்த வாக்கியத்தை விவரிக்க ஆரம்பித்தாள்.
இராமருக்கு முடிசூட்ட வேண்டும் என்றதும், கூனியின்( மந்தரை) போதனையால் கைகேயி மனம் மாறி தசரதரிடம் இராமர் 14 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும் என்றாள். தசரதர் அதை அப்படியே கிளிப் பிள்ளை போல சொல்ல, இராமர் கானகம் செல்லத் தயாரானார். அப்பொழுது கௌசல்யா தசரதரிடம் தன் மகன் காடு செல்வதைத் தடுக்கவும், பரதனையே நாடாளச் செய்யவும் சொல்ல கைகேயின் அரண்மனை சென்றாள்.
தசரதர் வழங்கிய வரம் பற்றிய செய்தி இலட்சுமணனுக்குத் தெரிந்ததும், வில்லெடுத்து நாணொலி செய்தார். இராமர், தன் அன்பான சொற்களால் பிரியமான தம்பியை அடக்கினார். அவரை அழைத்துக்கொண்டு சுமத்திரை மாளிகைக்கு வந்தார்!
இராமர் சிற்றன்னை
சுமித்திரையின் மாளிகையை நோக்கி வரும் காரணத்தைக் கம்பர் கூறுகிறார் 'சுமித்திரை, தன் தாய் கௌசல்யாவின் நிழலைப் போன்றவள்' என்ற உண்மையை உணர்ந்த இராமர், தன் தாய் கௌசல்யாவுக்கு அன்பான ஆறுதலை
அளிக்கும் படி சொல்ல நினைத்து சுமித்திரையின் மாளிகைக்கு வந்தார். இச்செயல்
சுமித்திரையின் அன்பான நற்குணத்தை வெளிப்படுத்துகிறது.
இராமர். 'சுமித்திரை சொல் மாண்பு உடையவள்'. எனவே தான் இராமர் அங்கு வந்தார்.
"சொல் மாண்புடை அன்னை சுமித்திரையின் கோயில் புக்கான்".(1743)
இராமர் சொல் மாண்புடை அன்னையான சுமித்திரையை
வைத்து அன்னை கௌசல்யாவைத் தேற்றுகிறார்
இராமர்.
'காட்டை அடைந்தாலும், கடலிடை புகுந்தாலும், பெருமைமிகு வானகம் புகுந்தாலும் அவை
யாவும் எனக்கு அயோத்தியே! எனவே உடல் வற்றி உலர்ந்து, உணர்விழந்து, வருந்தற்க! என்று பிரியமான சிற்றன்னை
சுமித்திரையின் சோகத்தைப் போக்குகிறார் ஶ்ரீராமர். துயரக் கடலில் மூழ்கிய அன்னை
கௌசல்யாவைத் தொழுத இராமர், தந்தையின் வாக்கைக்
காத்து அவரைச் சத்தியவந்தனாக்கவே நான் கானகம் செல்கிறேன்! அது எனக்கு அரிய
செயலன்று! காட்டில் நான் தங்கும் காலமும் நெடியதன்று! எனவே வருந்தற்க! என்கிறார்
இராமர்.
இலட்சுமணன் நான் உன்னுடன் கானகம் வருகிறேன் என்றார். சீதையோ நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு. நீ இருக்கும் இடம் தான் எனக்கு அயோத்தி என்றாள்.
இராமர் கைகேயி
கொடுத்தனுப்பிய மரவுரியை அணிந்து கொண்டார்! சீதையோடும், தம்பி இலட்சுமணனோடும் கானகம் செல்லத்
தயாரானார்.
அப்பொழுது சுமித்திரை தன் மகனுக்குக் கூறிய அறிவுரை, அவள் "சொல் மாண்புடை அன்னை" என்பதைப் புலப்படுத்துகிறது. இலட்சுமணரின் கடமையை அது வெளிக்காட்டியது. இராமன் போகும் வனமே உனக்கு அயோத்தி என்றும், காட்டில் இராமனே உனக்குத் தசரதன் என்றும், சீதையே உனக்கு அன்னை கௌசல்யா என்றும், கூறி அனுப்பினாள் இலட்சுமணரைப் பெற்ற மாதரசி சுமித்திரை.
சுமித்திரை மேலும் தன் மகனுக்கு சொன்னாள், மகனே! இராமனின் பின்செல்! அவனுடைய தம்பி என்னும் முறையில் இன்றி, அவனுடைய அடிமையாக சென்று அவனுக்கு ஏவல் செய். இந்த அயோத்தி நகருக்கு அவன் திரும்பி வந்தால் நீயும் உடன் வா! இல்லை என்றால் அவனுக்கு முன்பே உன் உயிரை மாய்த்துக் கொள்! என்றாள் மாதரசி சுமித்திரை.
தான் பெற்ற மகனை நீ
அண்ணனுக்கு அடிமையாக ஒரு சேவகனாக கானகம் செல், அவன் மீண்டும் அயோத்திக்குத் திரும்பி
வந்தால் நீயும் வா! இல்லையானால் அவனுக்கு முன்பே உன் உயிரை விட்டு விடு! என்று
சொல்ல யாராலும் முடியாது; சுமித்திரையைப்
போன்ற மகா ஞானியால் மட்டுமே முடியும்.
சுமித்திரை தெய்வத்திற்குச் சமமான அன்புடைய மாதரசி. இராமரிடம், சுமித்திரை கொண்டிருந்த அன்பு பரிவு, பாசம் அனைத்தும் இந்த உரையில் அடங்கிக்
கிடப்பதை நாம் காணலாம்.
சுமித்திரையின்
ஆழ்ந்த சிந்தனைக்கும், சொல்லுக்கும் இந்த
அறிவுரை என்றென்றும் உரைகல்லாக விளங்குகிறது.
இனி இவ்விடத்தில்
நீர் சற்று நேரம் தான் தாமதிப்பதும் குற்றம்! என்று சொல்லி அனுப்பிய மாதரசி
சுமித்திரையை போன்ற ஒரு குணவதியை வேறெந்த நாட்டு இலக்கியத்திலும் நாம் காண
முடியாது.
கம்பராமாயணம், அயோத்தியா காண்டம், நகர் நீங்கு படலம்.
சுமித்திரை லக்ஷ்மணனுக்கு உரைத்தது,
ஆகாதது அன்றால் உனக்கு
அவ் வனம் இவ் அயோத்தி;
மா காதல் இராமன் நம்
மன்னவன்; வையம் ஈந்தும்
போகா உயிர்த் தாயர் நம்
பூங்குழல் சீதை என்றே
ஏகாய்; இனி, இவ்
வயின் நிற்றலும் ஏதம் என்றாள் – 1841.
பின்னும் பகர்வாள், ‘மகனே! இவன் பின் செல்; தம்பி
என்னும்படி அன்று; அடியாரினில் ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன்
வந்திடின் வா; அது அன்றேல்
முன்னம் முடி; ‘ என்றனள் பால் முலை சோர நின்றாள் – 1842.
இப்படி, தன் ஆருயிர் மகனை இராமருடன் கானகம் சென்று வா என்றேனோ சுமித்திரையைப் போல. அப்பேர்ப்பட்ட தாயுள்ளம் என்னிடம் இல்லையே சுவாமி என்றாள்.
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!
வணக்கம் சுப்பு
Vanakkam Subbu