
இத்தலம் கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி என்னும் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. 'திருமிற்றக்கோடு', 'திருவீக்கோடு', 'ஐந்து மூர்த்தி திருக்கோவில்' என்றும் இதனை வழங்குவர்.
மூலவர்: உய்யவந்த பெருமாள்(அபயப்ரதன்)
அம்மன்/தாயார்: வித்துவக்கோட்டு வல்லி (பத்மாஸனி நாச்சியார்)
தீர்த்தம்: சக்கரதீர்த்தம்
புராண பெயர்: திருமிற்றக்கோடு
ஊர்: திருவித்துவக்கோடு
மாவட்டம்: பாலக்காடு
மாநிலம்: கேரளா
பாடியவர்கள்: மங்களாசாசனம்
குலசேகராழ்வார்
தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரணில்லை
விரைகுழவும் மலர்பொழில் சூழ் வித்துவக் கோட்டம்மானே!
அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே அழுங்குழவி அதுவே போல் இருந்தேனே!
திருவிழா:
வைகுண்ட ஏகாதசி, திருவோணம்
தலச் சிறப்பு:
இத்தலத்தின் இறைவன் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். உய்யவந்த பெருமாள், அபயப்ரதன் என அழைக்கப்பெறுகிறார். இறைவியின் பெயர் வித்துவக்கோட்டு வல்லி, பத்மாசனி நாச்சியார். என்பதாகும். இத்தலத் தீர்த்தம் சக்ர தீர்த்தம். விமானம் தத்வ காஞ்சன விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது.
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 67 ஆவது திவ்ய தேசம்.அம்பரீஷ மகாராஜாவுக்குத் தரிசனம் கொடுப்பதற்காகப் பெருமாள் இத்தலத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளியிருப்பதாகத் தலபுராணம் கூறுகிறது.
கேரள நாட்டு ஆழ்வாரான குலசேகராழ்வாரால் மட்டும் 10 பாக்களில் பாடல் பெற்றது. திருமாலுக்கும் சிவனுக்கும் இங்கு ஒரே இடத்தில் சன்னதி இருப்பது சிறப்பானதாகும் திருமாலும் சிவனும் இணைந்திருக்கும் கோவில்கள் குறிப்பாக 108 வைணவத் திருத்தலங்களில்10க்கு மேற்பட்ட தலங்கள் உள்ளன. பாண்டவர்களின் வருகைக்கு முன்பே இத்தலம் இருந்ததென்பது ஆய்வாளர்களின் முடிவாகும்.
இந்துத் தொன்மங்களின்படி துவாபர யுகத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாச காலத்தில் தென்னிந்தியாவில் பயணம் செய்கையில் இங்குள்ள நீளா நதிக்கரை ஓரம் ஒரு அழகான இடத்தைக் கண்டனர். அங்கு நிலவிய தெய்வீகம் கலந்த அமைதியைக் கண்டதும் சில காலம் அங்கேயே தங்கி இருக்க எண்ணினர். நாள் வழிபாட்டிற்காகச் சிலைகளையும், ஆலயத்தையும் நிர்மானித்தனர். முதலில் அர்ஜுனன் மஹாவிஷ்ணுவின் சிலையையும் அதற்கு வடக்கே தருமர் ஒரு சிலையையும் தென்புறத்தில் பீமன் ஒரு சிலையையும் அதற்குப் பின்புறம் (தென்புறத்திலே) நகுலனும் சகாதேவனும் ஒரு சிலையையும் நிர்மானித்தனர். அவர்களது வெகு காலத்திற்குப் பின்னால் பாண்டியமன்னன் ஒருவனால் மிகப்பெரிய சுற்று மதில் கட்டப்பெற்றது.
நெடுங்காலம் 4 மூர்த்திகளால் ஆனதாகவே இக்கோவில் இருந்தது. சுமார் 2000 (1800) ஆண்டுகட்கு முன்பு தென்னாட்டைச் சேர்ந்த முனிவர் ஒருவர் காசிக்குச் சென்றிருந்தார். அங்கேயே வெகு காலம் தங்கி வாழ்ந்திருந்தார். அவரது அன்னையார் மரணத் தறுவாயில் இருப்பதாக செய்தி வந்ததை அடுத்து அவர் திரும்பி வரும்போது அவரது பக்தி ஈடுபாட்டினால் காசி விசுவநாதர் அம்முனிவரது குடையில் மறைந்து வந்ததாகக் கூறுவர். வரும் வழியில் இந்தச் சன்னதிக்கு வந்த முனிவர் நீளா நதியில் நீராடச் செல்லும்போது நான்கு மூர்த்திகட்கு முன்புறம் இருந்த ஒரு பலி பீடத்தில் தமது குடையை வைத்துவிட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அந்தப் பலி பீடம் நான்காக வெடித்து அவ்வெடிப்பிலிருந்து சுயம்புவாக சிவலிங்கம் ஒன்றும் தோன்றியிருந்ததாம். குடையும் மறைந்துவிட்டது. இவ்விதம் இது ஐந்து மூர்த்தித் தலமாயிற்று. தற்போது இந்தச் சிவலிங்கத்தைச் சுற்றிலும் தனியே ஒரு கோவில் கட்டப்பெற்றுவிட்டது.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில், திருவித்துவக்கோடு- 679 303 (திருவிச்சிக்கோடு), பாலக்காடு மாவட்டம், கேரளா மாநிலம்
போன்:
பொதுத் தகவல்:
இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் தமிழ் பேசுகின்றனர். கோயில் சுவர்களில் அமைந்துள்ள அழகிய சுதைச் சிற்பங்களும், சிற்ப வேலைப்பாடுகளும், அர்ஜுனன் தவம் செய்த காட்சி, கிருஷ்ண லீலா காட்சிகள் போன்றவை மிகவும் அற்புதமாக உள்ளது.
பிரார்த்தனை
கேரள மாநில மக்கள் பெரும்பாலானோர் இத்தலத்தில் தான் பித்ரு தர்ப்பணம் கொடுக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பெருமாளுக்கு தீபம் ஏற்றி துளசி அர்ச்சனை செய்கிறார்கள்.
தலபெருமை:
காசிவிஸ்வநாதரே இங்கு எழுந்தருளியிருப்பதாலும், பத்து நதிகள் ஒன்றாக இணையும் பாரதப்புழா நதிக்கரையில் கோயில் அமைந்திருப்பதாலும் இத்தலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்ததாகும். பெருமாள் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் விமானம் தத்வகாஞ்சன விமானம் ஆகும். அம்பரீஷன், பஞ்சபாண்டவர்கள் ஆகியோர் பெருமாளை தரிசித்துள்ளனர்.
தல வரலாறு:
மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தென்னிந்திய பகுதிக்கு வந்தபோது இங்குள்ள நீளா நதிக்கரையோரம் ஒரு அழகான இடத்தை கண்டனர். அங்கிருந்த அழகும், தெய்வீகம் கலந்த அமைதியும் கண்ட அவர்கள் சில காலம் அங்கேயே தங்க முடிவு செய்தனர். அந்த நேரத்தில் தினமும் பூஜை செய்வதற்காக கோயில் கட்டி சிலைகளை அமைத்தனர். முதலில் அர்ஜுனன் மகாவிஷ்ணுவின் சிலையை அமைத்தான். இதுவே மூலஸ்தானமாக கருதப்பெறுகிறது. சுற்றுப்பகுதியில் தர்மர் பிரதிஷ்டை செய்த பெருமாள் தனிச் சன்னதியிலும், நகுல சகாதேவர் பிரதிஷ்டை செய்த பெருமாள் தனிச் சன்னதியிலும், பீமன் பிரதிஷ்டை செய்த பெருமாள் தனிச் சன்னதியிலும் அருள்பாலிக்கிறார்கள். கோயிலில் நுழைந்தவுடன் கணபதியும் தெட்சிணாமூர்த்தியும் வீற்றிருக்கின்றனர். சாஸ்தா, நாகர், பகவதி தேவிக்கு தனித்தனிச் சன்னதி உள்ளது. பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் தங்களது வனவாசத்தில் பெரும்பாலான நாட்களில் இங்கேயே தங்கி பூஜை செய்ததாகக் கூறப்பெறுகிறது. வெகு காலத்திற்குப் பின் பாண்டிய மன்னன் ஒருவனால் மிகப்பெரிய சுற்றுமதில் கட்டப்பட்டது. நெடுங்காலமாகவே இக்கோயிலில் பெருமாள் வழிபாடு மட்டுமே இருந்து வந்தது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியை சேர்ந்த முனிவர் ஒருவர் காசிக்கு சென்று, அங்கேயே தங்கி வெகுகாலம் வாழ்ந்திருந்தார். அப்போது அவரது தாயாரின் உடல் நிலை மோசமாகி இறக்கும் நிலையில் இருப்பதாகத் தகவல் வந்தது. இதைக் கேள்விப்பட்ட அவர் காசியிலிருந்து தன் தாயைப் பார்க்கப் புறப்பட்டார். அவர் கிளம்பும் போது, இவரது பக்தியின் காரணமாக காசி விஸ்வநாதரும், முனிவரது குடையில் மறைந்து வந்ததாக கூறப்படுகிறது. முனிவர் வரும் வழியில் இந்தக் கோவிலை கண்டு, தனது குடையை இத்தலத்தில் வைத்து விட்டுக் குளிக்கச் சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்த போது குடை வைத்திருந்த பலிபீடம் வெடித்து சிதறி அதிலிருந்து ஒரு சிவலிங்கம் தோன்றியிருப்பதையும், குடை மறைந்து விட்டதையும் கண்டார். காசியிலிருந்த விஸ்வநாதரே, பஞ்சபாண்டவர்கள் பிரதிஷ்டை செய்த இத்தலத்தில் தங்குவதற்கு வந்து விட்டதாகவும், இதற்கு அந்த முனிவர் காரணமாக இருந்ததாகவும் கூறுவர். மூலவரைத் தரிசிக்கும் முன் இந்தச் சிவலிங்கத்தைத் தரிசித்து செல்ல வேண்டும். கேரளாவில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இத்தலம் விளங்குகிறது. இத்தலத்ததை இப்பகுதி மக்கள் “ஐந்து தல மூர்த்தி தலம்’ என அழைக்கின்றனர்.
https://www.youtube.com/watch?v=uebQKC-NP20
https://www.youtube.com/watch?v=gPCk1-GoDP8
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!
வணக்கம் சுப்பு
Vanakkam Subbu
