திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம் - 017 - உலகாரியனோ என்றுரைத்தேனோ தோழப்பரைப் போல?

2 views
Skip to first unread message

Vanakkam Subbu

unread,
Sep 19, 2023, 8:20:01 PM9/19/23
to thatha patty

"எதுவுமே வேண்டாம்!..

எந்த பாகவதா கிட்டயும் அபசாரப் படாமநீ அவாளோட அபிமானத்துல ஒதுங்கி இரு!..

அதுவே ஒன்னக் கரை சேர்க்கும் அம்மணி.."

.....என்று பெரிய ஜீயர், திருவல்லிக்கேணி அம்மையாரைப் பார்த்து, தற்பொழுது ஒரு வார்த்தை சொன்னதும்,

அம்மையார் விரக்தியாகச் சிரித்தாள்...

"ஸ்வாமி... பாகவத அபசாரம் படாம இருக்கணும்னு அடியேனுக்குத் தெரியறது..

ஆனா, அடியேன் இதுவரையிலும் அப்படி நடந்துண்டு இருக்கேனாங்கறது சந்தேகமாத்தான் இருக்கு!..

அப்படியே ஒரு வேளை அபசாரப் பட்டிருந்தாலும், ஒடனே அவாகிட்ட மன்னிப்பு கேட்டுக்கற பக்குவமாவது எனக்கு இருந்துருக்கானு யோசிக்கச்சே,

எனக்கு அதுக்கான விடை தெரியல!..

ஸ்வாமி... அடியேன் என்ன,

"உலகாரியனோ என்றுரைத்தேனோ தோழப்பரைப் போலே?.."

....என்று ஒரு கேள்வியை ஜீயரிடம் வைத்துவிட்டு, வெகு சகஜமாய் மேலே தொடர்ந்தாள்..

"முதலியாண்டான் ஸ்வாமிகளோட திருப்பேரனான "கந்தாடைத் தோழப்பர்", தம்மோட குலப்பெருமைக்கு ஏத்த மாதிரி மஹா வித்வானா இருந்தார்..

இவர் ஶ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்திலேயும் ரொம்ப ஊற்றத்தோட இருந்தார்..

அவர் காலத்திலே, அதே ஶ்ரீரங்கத்துல,  "நம்பிள்ளை"னு ஒரு மஹனீயர், ஆசார்யபதம் நிர்வஹிச்சுண்டிருந்தார்..

ரொம்பவும் "நா வண்மை"யும், குணபூர்த்தியும் கொண்டவர்கறதால, இவர் கிட்ட எப்பவும் வித்வான்களோட கும்பல் நெறய இருக்கும்..

ஆனா, குலப்பெருமை, அறிவு எல்லாம் நெறய இருந்தாலும், தோழப்பரத் தேடி வரவா ரொம்பவும் கொஞ்சம் பேர்தான் இருந்தா..

அதனால, அசூயைக்கு ஆட்பட்ட தோழப்பர், ஒரு சமயம்,  நம்பிள்ளைய கடுஞ்சொற்களால ஏசிட்டார்..

....இந்த மாதிரி தகாத வார்த்தைகளால நம்பிள்ளையத் தோழப்பர் ஏசின விஷயம், அவரோட பார்யாளுக்கும் (மனைவி) எட்டிடுத்து..

தோழப்பர் வீடு திரும்புகிறார்.  அவரது மனைவி அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை! ஏதும் அவருக்கு கைங்கர்யம் பண்ணாது உதாஸீனம் செய்தாள். 

தோழப்பர் ‘ஏனிப்படி!’ என்கிறார்.  அதற்கு அவர் மனைவி
”ஆழ்வார்களுடைய அவதாரமோ என்று எண்ணும்படி, பெருமாளுக்கும் மிகவும் உகந்தவராயிருக்கும் நம்பிள்ளையிடத்து கூசாமல் அவமானப்படுத்தினீரே!  இப்படிச் செய்தோமே? என்று வருத்தம் கூட தோன்றாமலிருக்கும் உம்மோடு எனக்கு என்ன ஸம்பந்தம் வேண்டும் இனி?

பாகவதநிந்தனைப் பண்ணினவர்களை ஒருக்காலும் மன்னிக்கமாட்டேன் என்று பெருமாளே அருளிச்செய்தும், இதனை அறியாதவர் போலயிருக்கின்ற எனக்கு உங்கள் சகவாஸம் கூடாது.  நிலம் பிளந்தால் இட்டு ரொப்பமுடியாது.  கடலுடைந்தால் கட்ட முடியாது.  மலை முறிந்தால் தாங்கமுடியாது.  அனுதாபமின்றி பாகவத அபசாரம் செய்தால் பொறுத்துக் கொள்ள முடியாது.  ஆகவே நான் என் வழியினைப் பார்த்துக் கொண்டு போகிறேன்!”  
என்று உறவை முறித்துக்கொண்டு போக யத்தனிக்கையில்,   தோழப்பர் திகைத்து நின்றார். 

தம் தவற்றினையுணர்ந்து மிகவே வருந்தினார்.  ‘நான் பெரிய வித்வான் என்ற ஆணவத்தினாலும், என்னுடைய வம்சத்தின் செருக்கினாலும் தவறு செய்து விட்டேன்! இனிமேல் நான் என்ன செய்வது?’ என்று வருந்துகின்றார்.
அதற்கு அவரின் மனைவி, ”ஆற்றினைக் கெடுத்து குளத்தினில் மூழ்கி பரிகாரம் தேடாதீர். கெடுத்தவிடத்தேத் தேடுவீர்” என்று கூற

தோழப்பர் நம்பிள்ளையிடத்து மன்னிப்பு கேட்பதற்காக தம்முடைய மனைவியுடன் நம்பிள்ளை திருமாளிகைக்குக் கிளம்புகின்றார்.  

பகல் கழிந்து இரவாகிவிட்டது!.

அங்கே நம்பிள்ளை தோழப்பரின் கடுமையான வார்த்தைகளினால் மனம் வருந்தி ஏதும் உண்ணாமல் சீடர்களெல்லாரும் சென்றபின்பு முட்டாக்கிட்டுக் கொண்டு நம்பிள்ளைக் கிளம்பி தோழப்பரின் வீட்டு வாசலில் கிடக்கின்றார்

மனம் வெம்பி அழுதபடியே!   திருமாளிகை வாசலில் திருவிளக்கையேற்றி வந்த தோழப்பர் வெள்ளைத்துணிப் போர்த்தி ஓர் உருவம் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகின்றார். 

‘யார் அது?
‘ என்கிறார்.  ”அடியேன் ‘திருக்கலிகன்றிதாஸன்’ என்ற பதில் வருகின்றது.  அதன் பின் தோழப்பர்,  

‘நாமோ மஹா தேஜஸ்வீ!  இவரோடு நம்பெருமாளை ஸேவிக்கும் போது என்ன பேச்சு!  அவரது வீட்டிற்குச் சென்று கேட்போம் என்று கோபமுற்று இப்போது இங்கு வந்திருக்கின்றீரா?” 
என்று கேட்கின்றார்.

(இப்போது கூட சற்று செருக்கோடுக் கேட்பது போலில்லை? மனைவி இடித்துரைத்த வார்த்தைகளால் சற்றே மனம் வருந்தியது போலிருந்தாலும் மீண்டும் அந்த ஆணவம் சற்றே வார்த்தைகளில் இழைவது போலில்லை? 
நம் முன்னோர்கள் செய்த கைங்கர்யத்தினால், நாம் முற்பிறவியில் செய்த புண்ணியத்தினால் ஒரு புனிதமான வம்சத்தில் பிறக்கின்றோம். அவர்கள் செய்த கைங்கர்யத்தில் ஒரு சிலவாவது நாமும் அஹங்காரமின்றி, சிரத்தையோடு, அர்ப்பணிப்போடு, பிறரிடத்து அபசாரப்படாமல் செய்தால்தான் நமக்கு ஸ்ரேயஸ்.   அந்த வம்சத்தில் பிறந்த ஆணவத்தோடு, செருக்கோடு பகவத் கைங்கர்யம் ஏதும் செய்யாமல் அதிகாரத் திமிருடனிருந்தால் நம்மோடு நம் வம்சம் அழிவதும் நிச்சயம்.  இம்மாதிரி சில வம்சங்கள் நம்பெருமாள் கைங்கர்யத்தை விட்டே அகன்றுள்ளன!)

தோழப்பர பார்த்த மாத்திரத்தில், நம்பிள்ளை நாத்தழுதழுக்க,

"அடியேன்...

பெருங்குலத் தோன்றலான முதலியாண்டானோட திருப்பேரனாரோட மனசு ஆதங்கப்படும்படி நடந்துண்ட அடியேனுக்கு

ஒம்ம வாசல் தவிர வேறு புகல் இல்லை!.."

என்று வருத்தத்தோடே விண்ணப்பித்தார்..

நம்பிள்ளையோட இந்த குணபூர்த்தியக் கண்டு,  தோழப்பர் ரொம்பவும் வெட்கிப் போய், அவரோட திருவடிகள்ல தெண்டனிட்டு,

இவரை அநுவர்த்திப்பதாகப் புறப்பட்டு வந்து நிற்கிற தோழப்பரும் பிள்ளை கண்வளர்ந்தருளுகிற தைந்யத்தையும் கண்டு, அவருடைய நைச்யமான வார்த்தைகளையும் கேட்டு 

இன்னிக்கு அடியேன் தம்மிடத்தில ரொம்பவும் அபசாரப் பட்டுட்டேன்..

அடியேனோட பிழைய, க்ருபையோட தேவரீர் பொறுத்தருளணும்.."னு வேண்டினார்..

உடனே நம்பிள்ளை, தோழப்பரை அணைத்துச் சமாதானம் பண்ணினார்..

பிள்ளையை வாரி எடுத்தணைத்துக்கட்டிக்கொண்டு ‘இத்தனை நாளும் நீர் சிறிது பேருக்கு ஆசார்யர் என்றிருந்தேன்; இப்போது லோகத்துக்கெல்லாம் நீரே ஆசார்யராகைக்கு ப்ராப்தர் என்றறிந்தேன் என்று"தேவரீர்தான் இந்த உலகத்துக்கெல்லாம் ஒரு ஆசார்யரா இருக்கத் தகுந்தவர்..

‘லோகாசார்யர்’ என்று தோழப்பர் உகந்து பிள்ளைக்கு திருநாமம் சாற்றி, தம்முடைய திருமாளிகைக்குள்ளே கொண்டுபுக்கு, தாமும் பிள்ளையை அநேகமாக அநுவர்த்தித்து அவர் திருவுள்ளத்தையும் நன்றாக உகப்பித்துத் தமக்கு வேண்டும் அர்த்த விஶேஷங்களெல்லாம் பிள்ளை திருவடிகளிலே கேட்டுக்கொண்டு தோழப்பரும் மிகவும் க்ருதார்த்தரானார்

அதுலேந்து நம்பிள்ளைக்கு
,  "லோகாசாரியர்", "உலகாரியன்" னு பெயர் நெலச்சு நின்னுது..

.....சொல்லுங்கோ ஸ்வாமி...

இவா ரெண்டு பேர்கிட்டயும் இருக்கற குணபூர்த்தியில ஒரு துளியாவது அடியேன் கிட்ட இருக்கா?..

அஹங்காரம் இல்லாம இருக்கறவாதானே ஸ்வாமி, ஒரு பாகவதரோட நிழல்ல ஒதுங்க ஆசப்படுவா!..

அடியேன் இதுக்கெல்லாம் ஒரு "விதி விலக்கு" ஸ்வாமி.."

.....என்று நெகிழ்ச்சியோடு பேசி, திருவல்லிக்கேணி அம்மையார் தலை குனிந்தாள்..

உபதேசரத்தின மாலையில் இந்த நிகழ்வை

தன்னுபுகழ்க் கந்தாடை தோழப்பர் தம் உகப்பால்
என்ன உலகாரியரோ என்று உரைக்கப் - பின்னை
உலகாரியன் என்னும் பெயர் நம்பிள்ளைக்கு ஓங்கி
விலகாமல் நின்றது என்று மேல் ( 51 )
என்கிறார் மாமுனிகள்.

(வளரும்..)

 
image.png

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! 

வாழிய பாரதமணித் திருநாடு!   

வணக்கம் சுப்பு

 Vanakkam Subbu

 zGgbcCHwTas05D3TEGRzfeJitXMuFdleP8uz97cCm3eLcDguXidhEufGaerGn9hH.gif

Reply all
Reply to author
Forward
0 new messages