பெருமைமிகு பங்குனி உத்திரம்

99 views
Skip to first unread message

Vanakkam Subbu

unread,
Mar 22, 2016, 10:09:46 PM3/22/16
to Thatha_Patty-Google
பங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான நாளாகும். திருமணமாகாத இரு பாலாரும் இந்நாளில் விரதமிருந்து வழிபடின் திருமணப்பேறு கிட்டும். புராணங்களிலே பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்த சிறப்புகள் பற்றி விவரிக்கப்படுகின்றது ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும், விரதம் இருப்பதும் வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. 
Inline image 1

12
வது மாதமான பங்குனியில், 12வது நட்சத்திரமான உத்திரம் இடம்பெறும் புனிதநாள்தான் பங்குனி உத்திரம். வளமான பலன்களைத் தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள். உத்திர நட்சத்திர நாயகன், அதாவது, அதிபதி சூரியன். அதே நாளில் பௌர்ணமி நிலவும் பொருந்தும்போது சூரியன், சந்திரனால் இரட்டைச் சிறப்புகள் கிடைக்கின்றன. சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான். 

அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர். சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான். முருகக் கடவுள் தெய்வானையை இந்த நாளில் தான் மணம் புரிந்துகொண்டார். மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ; பார்வதி-பரமேஸ்வரர்; சீதாதேவி-ஸ்ரீராமர்; இந்திராணி-தேவேந்திரன்; இருபத்தேழு நட்சத்திரங்கள்-சந்திரன் ஆகிய திருமணங்கள் நடந்தேறியது இந்த பங்கு உத்திரத்தன்றுதான்.

நம்பியின் மகளாக ஸ்ரீவள்ளி அவதரித்தது; மஹாலட்சுமி நாராயணனின் மார்பில் அமர்ந்தது; சரஸ்வதி பிரம்ம தேவனின் வாக்கில் அமர்ந்தது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதும் பங்குனி உத்திர தினத்தன்றுதான். துர்வாச முனிவர் வந்து கொண்டிருக்கிறார். கோபத்திற்குப் பெயர் போனவர். ஆனால், இன்றோ மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார் போல் இருக்கிறது. அவரது திருக்கரத்தில் ஒளிவீசும் ஒரு அழகிய மலர் மாலை இருக்கிறது. அதனை மிகவும் பெருமையுடனும் பக்தியுடனும் ஏந்திக் கொண்டு வருகிறார். அப்போது அந்த வழியாகத் தேவர்களின் தலைவனான இந்திரன் தன் ஐராவதம் என்னும் யானையில் ஏறிக் கொண்டு பவனி வருகிறான். 

தேவர்களின் தலைவனான தன்னைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுவதைக் கேட்கக் கேட்க மிக்கப் பெருமிதம் அவன் முகத்தில் தெரிகிறது. துர்வாச முனிவர் இந்திரனின் முன்னால் சென்று ‘தேவேந்திரா. உன் புகழ் எல்லா உலகங்களிலும் நிறைந்து இருக்கிறது. இப்போது அன்னை மகாலக்ஷ்மியைத் தரிசித்துவிட்டு அவர் அன்போடு அளித்த இந்த மலர் மாலையுடன் வந்து கொண்டிருக்கிறேன். அன்னை கொடுத்த இந்த பிரசாதத்தை ஏற்றுக் கொள்ள தேவர்களின் தலைவனான உனக்குதான் உரிமை இருக்கிறது. இதோ வாங்கிக் கொள்’ என்று சொன்னார்.

தேவர்களின் தலைவனான தான்கேவலம் இன்னொரு தெய்வம் கொடுத்த மலர் மாலையை பிரசாதம் என்று வணங்கி வாங்கிக் கொள்வதா என்ற எண்ணம் அவனுக்கு. ஆனாலும்? கொடுப்பவர் துர்வாசர் என்பதால் ஒன்றும் பேசாமல் வாங்கிக் கொண்டு அலட்சியமாக தன் கையால் தொடாமல் அங்குசத்தால் ஏந்தி யானையின் தலைமீது போட்டான். யானையோ அவனுக்கும் மேல் அலட்சியமாக இருந்தது. ஆமாம், தன் தலையில் வைக்கப்பட்ட மலர் மாலையை உடனே தும்பிக்கையால் எடுத்துத் தன் கால்களின் கீழே போட்டு மிதித்துத் துவைத்துவிட்டது. 

அன்னையின் பிரசாதத்திற்கு ஏற்பட்ட அவமரியாதையைக் கண்டதும் வழக்கம் போல் துர்வாசருக்குக் கோபம் வந்து விட்டது. ‘தேவேந்திரா, தேவர்களின் தலைவன், இத்தனைச் செல்வங்களின் தலைவன் என்ற மமதை, அகில உலகங்களுக்கும் அன்னையான மகாலக்ஷ்மியின் பிரசாதத்தையே அவமதிக்கும் அளவுக்கு உன்னைக் கொண்டுவிட்டிருக்கிறது. எந்த செல்வம் இருப்பதால் இந்த விதமாய் நீ நடந்து கொண்டாயோ அந்த செல்வங்கள் அனைத்தும் அழிந்து போகட்டும்’ என்று சாபம் கொடுத்தார். துர்வாச முனிவரின் சாபத்தின்படி இந்திர லோகத்தில் இருந்த எல்லா செல்வங்களும் பாற்கடலில் வீழ்ந்துவிட்டன. 

அன்னை லக்ஷ்மியும் பாற்கடலில் மறைந்தாள். தேவர்கள் பதறிப்போனார்கள். உடனே எல்லோரும் பாற்கடலில் பள்ளி கொண்டவனைப் போய் வணங்கினார்கள். இறைவனின் கட்டளைப்படி அசுரர்களின் உதவியோடு பாற்கடலைக் கடையத் துவங்கினார்கள். மந்தார மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அசுரர்கள் ஒரு பக்கமாகவும் தேவர்கள் ஒரு பக்கமாகவும் பாற்கடலைக் கடைந்து கொண்டிருக்கின்றனர். நாட்கள் பல சென்று விட்டன. அழிந்து போன செல்வங்கள் திரும்பி வருவதைப் போல் தெரியவில்லை. ஆனால், திடீரென்று வெப்பம் அதிகமாகிவிட்டது.

பாற்கடலில் இருந்து ஆலமென்னும் விஷம் வெளிவருகிறது. அதே நேரத்தில் வாசுகிப் பாம்பும் உடல்வலி தாங்காமல் விஷத்தைக் கக்குகிறது. இரண்டு விஷமும் சேர்ந்து கொண்டு ஆலகாலமாகி எல்லா உலகையும் அழித்துவிடும் போல் இருக்கிறது. உலகங்களின் துன்பத்தைக் கண்டு பொறுக்காத கருணா மூர்த்தியாகிய மகேசன் உடனே அந்த ஆலகாலத்தை கையினில் ஏந்தி விழுங்கிவிட்டார். காலகாலனாகிய அவரை எந்த விஷம் என்ன செய்ய முடியும்? ஆனாலும் அன்னை பார்வதியால் அதனைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. அண்ணல் உண்ட விஷம் கழுத்திலேயே தங்கிவிடும்படி அவரின் கழுத்தில் கையை வைத்தாள். 

விஷம் அங்கேயே நின்றது. விஷத்தின் வலிமையால் அண்ணலின் கழுத்து நீல நிறம் பெற்றது. அண்ணலும் ‘நீலகண்டன்’ என்ற திருப்பெயரைப் பெற்றார். இன்னும் சில நாட்கள் சென்றன. எல்லா செல்வங்களும் ஒவ்வொன்றாக பாற்கடலில் இருந்து வெளிவரத் தொடங்கின. அன்னை மகாலக்ஷ்மியும் பாற்கடலில் இருந்து தோன்றினாள். அலைமகள் என்ற திருநாமத்தை அடைந்தாள். அப்படி அன்னை பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாள் பங்குனி உத்திரத் திருநாள். அன்னை பாற்கடலில் இருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர் மாலையை ஏந்திக் கொண்டு தோன்றினாள். 

அதனை நேரே சென்று தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் இட்டாள். அதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் அவதார நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப்படுகிறது. கங்கையினும் புனிதமான காவிரியின் நடுவில் உள்ள பூலோக வைகுண்டமாம் திருவரங்க நகரத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் திருவரங்க நாதன் திருவரங்கநாயகித் தாயாருடன் சேர்த்தித் திருக்கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது இந்த உன்னதமான திருநாளில்தான். வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்ய தரிசனம் கிடைக்காது. 

அண்ணலும் தாயாரும் சேர்ந்து அமர்ந்திருக்கும் இந்தத் திருக்கோத்தைத் தரிசிப்பவர் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது காலம் காலமாய் வரும் நம்பிக்கை. இந்நாளில் மற்ற வைணவ ஆலயங்களிலும் மணக்கோலத்தில் தாயாரும் பெருமாளும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் பெருந்தேவித் தாயார் சந்நதியில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக வரதராஜர் காட்சி தருவார். காஞ்சியில் காமாட்சி ஏகாம்பரரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள், மதுரையைப்போலவே.தேவேந்திரன்- இந்திராணி, நான்முகன்-கலைவாணி ஆகியோரின் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன. 

ஸ்ரீராமன்-சீதை, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்-ஸ்ருதகீர்த்தி என்று தசரத மைந்தர்கள் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றன. இதே பங்குனித் திருநாளில்தான் வடநாட்டில் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். பங்குனி உத்திரத்தன்று சில கோயில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும். பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து, அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம்தான். 

அதுபோல திருமழபாடியில் நந்தி கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்தான். பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம். காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான். அன்று தண்ணீர்ப் பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம். 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருந்தவர்களின் மறுபிறவி தெய்வப் பிறவியாக அமையும்.

இந்தத் திருநாளில் லோபாமுத்திரை அகத்திய முனிவரையும்; பூரணா-பூஷ்பாகலா ஐயப்பனையும்; ரதி மன்மதனையும் கல்யாணம் செய்து கொண்டனர் என்று கந்தபுராணம் கூறுகிறது. வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை நிலைநாட்டிய இளையபெருமாளாகிய ராமானுஜமுனி ஒரு முறை பங்குனி உத்திர மண்டபத்தில் இப்படி பெரிய பிராட்டியும் பெரிய பெருமாளும் சேர்ந்து காட்சி தரும் போதுதான் கத்ய த்ரயம் (சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம்) என்னும் மூன்று வடமொழி வசன கவிதைகளைப் பாடிச் சமர்ப்பித்தார். சரணாகதி கத்யத்தைச் சமர்ப்பித்தபோது அரங்கன் அவருடைய சரணாகதியை ஏற்றுக் கொண்டு திருவாய் மலர்ந்தருளினான் என்றும் தாயார் அவரை உபய வீபூதிகளுக்கும் (கீழுலகம், மேலுலகம்) உடையவராய் நியமித்தார் என்றும் ஐதீகம். 

அன்றிலிருந்து ராமானுஜர் ‘உடையவர்’ என்ற திருநாமத்தாலும் அழைக்கப்படுகிறார். கோதை பிறந்த ஊராம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பங்குனிப் பெருவிழாவின் உச்சகட்டமாக அமைவது பங்குனி உத்திரத் திருநாளில் சுவாமி ரெங்க மன்னார் ஆண்டாளின் திருக்கரங்களைப் பற்றும் திருக்கல்யாண மகோற்சவம். கோதை நாச்சியாரும் ரெங்கமன்னாரும் மகிழ்ந்திருக்கும் வேளையில், 

கோதை பிறந்த ஊர் கோவிந்த வாழும் ஊர் 
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்  நீதிசால்
நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர் என்று துதித்து மகிழ்வோம். 


மதுரை வாழ் சௌராஷ்ட்ரப் பெருமக்களால் தங்கள் குலதெய்வமாகப் போற்றி வணங்கப்படும் தெற்கு கிருஷ்ணன் கோயில்  பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் பத்து நாட்கள் பங்குனி பிரம்மோற்சவம் கண்டு தீர்த்தவாரிக்காக குதிரை வாகனத்தில் ஏறி வைகை ஆற்றில் இறங்கும் புனித நன்னாளும் பங்குனி உத்திரத் திருநாளே. மஹிஷியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அவள் வாங்கிய வரத்தின்படி சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த மகனால்தான் தனக்கு அழிவு. ஆனால், ஆணும் ஆணும் சேர்ந்து பிள்ளை எப்படி பிறக்கும்? அது நடக்காத விஷயமாதலால் அவள் தன்னை அழிக்க யாருமில்லை என்று எண்ணிக் கொண்டு அளவில்லாத அட்டூழியங்கள் செய்து கொண்டிருக்கிறாள். 

பாற்கடலில் தோன்றிய அமுதத்தை தேவர்களுக்குக் கொடுப்பதற்காக விஷ்ணு மோகினியாக அவதாரம் எடுத்த போது மஹிஷி பெற்ற வரம் வேலை செய்ய தொடங்கியது. மோகினிதேவியும் சிவபெருமானும் இணைந்ததால் ஹரிஹரசுதனான ஐயன் ஐயப்பன் பிறந்தான். மோகினிசுதன் பிறந்த தினம் பங்குனி உத்திரமாகிய திவ்வியத் திருநாள். சூரபதுமனும் அவன் தம்பியரும் செய்யும் தொல்லைகள் அளவிட முடியாமல் போய்விட்டன. சிவகுமாரனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்று வரம் பெற்றதாலும் சிவபெருமான் காலகாலமாக அப்போது தவத்தில் மூழ்கி இருந்ததாலும் தனக்கு தற்போதைக்கு அழிவு இல்லை என்றெண்ணி அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறான் சூரன். 

அன்னை தாக்ஷாயிணி இமயமலைக்கரசன் மகளாய் பர்வத ராஜகுமாரியாய் பார்வதியாய் தோன்றி சிவபெருமானை மணக்க தவம் செய்து கொண்டிருக்கிறாள். சிவபெருமானோ அன்னை தாக்ஷாயிணியைப் பிரிந்ததால் மனம் வருந்தி யோகத்தில் நிலை நின்று விட்டார். சூரனின் அழிவு நேர வேண்டுமாயின் அன்னை பார்வதியை ஐயன் மணக்கவேண்டும். அதற்காக தேவர்களின் தூண்டுதலின் படி காமன் தன் கணைகளை ஐயன் மேல் ஏவி அவரின் நெற்றிக் கண்ணால் சுடப்பட்டு அழிந்தான். ஆனால், காமன் கணைகள் தம் வேலையைச் செய்தன. காமேஸ்வரன் அன்னை பார்வதியை மணக்க சம்மதித்துவிட்டார். 

ரதிதேவியின் வேண்டுகோளுக்கிணங்க மன்மதனும் உயிர் பெற்று எழுந்து ஆனால் உருவம் இல்லாமல் அனங்கன் ஆனான். அன்னையும் அண்ணலும் திருமணம் செய்து கொண்ட நன்னாள் பங்குனி உத்திரத் திருநாள். அதனால் இன்றும் பல சிவாலயங்களில் திருமண வைபவம் பங்குனி உத்திரத்தன்று நடைபெறுகிறது.தைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோயில் திருவிழா நாள் என்று தான் எல்லோருக்கும் உடனே தோன்றுவது. எங்கெல்லாம் முருகன் கோயில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் கொண்டாடப்படுவதால் பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் நினைவுதான் நமக்கு வருகிறது. - P BARATHKUMAR

பங்குனி உத்திரத்தில் ராமன், சிவன் கல்யாணம் ஏன்?

Written by London swaminathan

Research Article No: 1833

Date: 28 April 2015; Uploaded in London at 9-22 am

பங்குனி உத்தரம் ஆன பகற்போது

அங்க இருக்கினில் ஆயிரநாமச்

சிங்கம் மணத் தொழில் செய்த திறத்தால்

மங்கல அங்கி வசிட்டன் வகுத்தான்

–கம்ப ராமாயணம், பால காண்டம், கடிமணப் படலம்

வசிட்ட முனிவன் பங்குனி மாத உருத்திர நட்சத்திரம் கூடிய அந்த நல்ல நாளில், அங்கங்களோடு கூடிய வேதங்களில் சொல்லப்பட்ட, ஆயிரம் திருநாமங்களை (ஸஹஸ்ரநாமம்) உடைய – சிங்கம் போன்ற ராமனது திருமணச் சடங்கைச் செய்த முறைமைக்கு ஏற்ப, மங்கலமான ஓமாக்கினியை (ஹோம அக்னி) வளர்த்து மண வினையை முடித்தான்.

வால்மீகி கூறியதையே கம்பரும் கூறி இருக்கிறார் (பால காண்டம், சர்கம் 72)

பாரதம் முழுதும் ஒரே கலாசாரம் இருந்தது என்பதற்கு தமிழின் மிகப்பழைய நூலான தொல்காப்பியமும், சங்க இலக்கிய நூல்களும் சான்று தருகின்றன. மனு தர்ம சாத்திரம் சொல்லும் எண் வகைத் திருமணத்தைத் தொல்காப்பியர் சொன்னதை முன்னர் கண்டோம். அவர் தச விதப் (பத்து) பொருத்தங்களையும் கூறுகிறார். இதைவிட முக்கியமானது கல்யாணத்துக்கு உரிய நட்சத்திரங்கள் என்று வராஹமிகிரரின் பிருஹத் சம்ஹிதையும் ஏனைய பல சம்ஸ்கிருத நூல்களும் சொல்லும் ரோகிணி , உத்தர பல்குனி முதலிய நட்சத்திரங்களில் தமிழர்கள் கல்யாணம் செய்ததும் ஒரே பண்பாட்டை உறுதி செய்கின்றன.

Kalyana sundara (Parvati–Paramasiva) picture from wikipedia (choza Bronzes)

அகநானூறு பாடல்கள் 86, 136 ஆகியவற்றில் தெய்வ வழிபாட்டுடன் ரோகிணி நட்சத்திரத்தில் தமிழர்கள் திருமணம் செய்து கொண்டதை முன்னர் ஒரு ஆய்வுக் கட்டுரையில் கண்டோம். இதே போல கண்ணகி திருமணமும் ரோகிணி நட்சத்திரத்தில் நடந்தது.

இதே போல பங்குனி உத்தரமும் முக்கிய முகூர்த்த நாளானதால் தமிழ் நாட்டில் எல்லா பெரிய சிவன் கோவில்களிலும் அன்று சிவன் – உமை கல்யாணம் நடத்தப் படுகிறது. முருகன் கோவில்களில் தேவயானை—முருகன் திருமணம் நடத்தப்படுகிறது.. தமிழ்நாட்டில் உள்ள எல்லா விஷ்ணு கோவில்களிலும் சிறப்பு ஆராதனைகளும் நடக்கின்றன. இவை எல்லாம் கி.மு முதல் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த உலகப் புகழ் பெற்ற காளிதாசனுக்கும் முந்தைய வழக்கம். காளிதாசன் எழுதிய குமார சம்பவம்(Chapter 7, Sloka 6)

என்னும் காவியத்திலும் சிவன் – உமை திருமணம் பங்குனி உத்திர நன்னாளில் நடந்ததாக எழுதிவைத்துள்ளான். அதே நாளில்தான் ராமன் – சீதா கல்யணமும் நடந்துள்ளது.

பங்குனி உத்தரப் பெருவிழாக்கள் ஏழாம் நூற்றாண்டில் வழ்ந்த திருஞான சம்பதருக்கும் முந்தைய வழக்கம் என்பது தேவாரப் பாடலில் இருந்து தெளிவாகிறது:–

பலவிழாப் பாடல் செய் பங்குனி

உத்திர நாள் ஒலி விழா – சம்பந்தர் தேவாரம்

 

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் ஒரு காலத்தில் பங்குனி உத்தரத்தில் நடந்ததாகவும், சைவ வைஷ்ணவ ஒற்றுமைக்காகவும், நடைமுறை வசதிகளுக்காவும் திருமலை நாயக்கர் இரண்டு விழாக்களை ஒன்றுபடுத்தி சித்திரைத் திருவிழா ஆக்கியதாகவும் ஆராய்ச்சியாளர் கூறுவர்.

ஆக புற நானூறு, அக நானூறு பாடல் ஒவ்வொன்றும் ஆரிய- திராவிட இன வெறிக் கொள்கையை தவிடு பொடியாக்கி வருவதைக் கண்டு வருகிறோம். எட்டு வகைத் திருமணங்கள், பத்துவிதப் பொருத்தங்கள், அம்மி மிதித்தல், அருந்ததி காட்டல், தீ வலம் வருதல், கடவுளை வணங்கி தீர்க்க சுமங்கலிக்களை வைத்து திருமணத்தை  நடத்தல் முதலிய எவ்வளவோ விசயங்களில் ஒற்றுமை காண்கிறோம்.

பங்குனி உத்தரத்தில் காம தஹனம், ஹோலி பண்டிகைகளும் நடைபெறுகின்றன.

தமிழர்கள் வாழக்கூடிய இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் முருகன் கோவில்களில் தேர், காவடி சகிதம் பங்குனி உத்தரம் கொண்டாடப்படுகிறது.

பொதுவாக இந்துக்களின் முக்கியப் பண்டிகைகள் பௌர்ணமி நாட்களில் நடைபெறும் 1880 ஆம் ஆண்டுக்கு முன் உலகில் மின்சார விளக்குகள் இருந்ததில்லை. ஆகையால் எல்லாப் பௌர்ணமி நாட்களையும் பெரும் கோவில் திருவிழா நாட்களாகக் கொண்டாடினர் இந்துக்கள். பல்லாயிரக் கணக்கான மக்கள் கிராமங்களில் இருந்து கட்டுச் சோறுடன் மாட்டு வண்டிகளிலும் நடைப் பயணமாகவும் வருவதற்கு இந்த முழு நிலவு நாட்கள் உதவின. அவைகளிலும் குறிப்பாக மாசி முதல் வைகாசி வரையுள்ள முழுநிலவு நாட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. காலநிலை ரீதியில் இவை மழை இல்லாமல் மிகவும் அனுசரணையாக இருந்தது இதற்குக் காரணம் ஆகும்.



 


வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! 

வாழிய பாரதமணித் திருநாடு!   

                                                  

    a k a m  S u b b u   

     

Reply all
Reply to author
Forward
0 new messages