21. வேண்டுவதீதே என்றேனோ பட்டரைப் போல?
"சரிம்மா...வேற எதுவும் கூட வேணாம்..
ஆத்துல இருக்கிற பெரியவாளுக்கு எல்லாம் நன்னா சேவை பண்ணியிருந்தா, அவா உனக்கு நல்ல விதமான ஆசீர்வாதம் நிறைய பண்ணியிருப்பாளே!..
அது போறுமே!.. ஒனக்கு தன்னால பகவத் கிருபையும், ஆசார்ய கிருபையும் வந்து சேருமே..."
....வருத்தத்தினால் தலை குனிந்திருந்த திருவல்லிக்கேணி மாதரசியைப் பார்த்து மாமுனிகள் இப்படிச் சொன்னதும்,
அவள் விரக்தியோடு சிரித்தாள்...
"ஸ்வாமிகளே!..
வாஸ்தவம்தான்!..
ஆத்துப் பெரியவாளோட ஆசீர்வாதம் அடியேனுக்கு நிறையவே இருக்கு!..
ஆனா, அதெல்லாம் லௌகீகமான பலன்களுக்கான ஆசீர்வாதம்தான்...
இந்த ஆத்ம சம்ரக்ஷணத்துக்கான ஆசீர்வாதம்னு பார்த்தா அதுல எதுவுமே இல்ல!..
இருந்தாலும், அடியேன் அல்ப சந்தோஷியா அந்த ஆசீர்வாதங்கள் கெடைச்சதுல ரொம்ப திருப்தியாயிட்டேன்..
ஆத்துப் பெரியவாள்லாம்,
நாடு புகுவீர் என்றாரோ ஆண்டாளைப் போலே?..
அடியேன் என்ன,
வேண்டுவது இதே என்றேனோ பட்டரைப் போலே?.."
என்று ஆதங்கம் மேலிட ஒன்றுக்கு இரண்டு கேள்விகளை அடுக்கினாள்..
"அம்மா... இதென்ன நீ சொல்லிண்டே போறியே...
அந்த விருத்தாந்தங்களில் அப்படி என்ன சங்கதி இருக்கு?.." என்று ஏதுமறியாதவர் போல் வினவினார் பெரிய ஜீயர்..
அவருக்குப் பதில் சொல்லத் தொடங்கினாள் திருவல்லிக்கேணி மாதரசி..
கூரத்தாழ்வாருக்கு ஏத்த ஞானமும், குணபூர்த்தியும் உடையவள் அவரோட தர்ம பத்தினி ஆண்டாள்..
இவா ரெண்டு பேரோட திருக்குமாரர் தான் பராசரப் பட்டர்..
பராசரப் பட்டரோட ஞானா விலாஸமும், சாதுர்யமும் ரொம்ப பிரஸித்தம்...
அதுவுமில்லாம இவர் நம்பெருமாளுக்கும், ஶ்ரீரங்கநாச்சியாருக்கும் அபிமான புத்ரன் வேற!..
ஒரு கைசிக ஏகாதசியன்று பட்டர் அரங்கன் முன்னாடி கைசிக புராணம் வாசிச்சு, அதுக்குப் பலவிதமா வ்யாக்யானங்களை வெகு விசேஷமாக, அளவற்ற ஞானத்துடனும், ஒவ்வொரு பதத்திற்கும் இதுவரைக் கேளாத அதிவிசேஷார்த்தங்களை பிரவாகமாக உபதேசித்தருளுகின்றார்.
கூடியிருந்தோரெல்லாம் இவரது வாக்பிரவாகத்தில் கட்டுண்டு கிடந்தனர். அரங்கனின் அந்த அர்ச்சை சொரூபத்தில் கூட மார்பும் தோளும் விரிந்து பூரித்தது. தாம் சாத்தியிருந்த மாலையை கழட்டி சாதிக்கச் சொல்கின்றார்.
திருப்தியடையாது தம் சாத்தியிருந்த பொன்னாடையைப் போர்த்துகின்றார். அப்பவும் திருப்தியடையவில்லை. தம்முடைய திவ்ய திருவாபரணத்தினையெல்லாம் கழட்டி பட்டரை அணியச் செய்விக்கின்றார். இவ்வளவு செய்தும் அரங்கன் திருவுள்ளம் அப்போதும் திருப்தியடையவில்லை!
தாம் எழுந்தருளிய ஒரு சிம்மாசனத்தினைக் கொடுத்து பட்டரை தம் எதிரே அமரச் செய்கின்றார். வேறு பல அரிய பரிசில்களை கொடுக்கின்றார்.
ஊஹூம்! அரங்கன் இதனால் எல்லாம் திருப்தியடையவேயில்லை. பட்டரும் இதனால் எல்லாம் மகிழ்ந்து பூரிக்கவுமில்லை! ‘இவருக்கு இதெல்லாம் விட சிறந்தது எது கொடுப்போம்’ யோசிக்கின்றார். பளீரென்று சொல்கின்றார்,
"ஓய் பட்டரே!.. உமக்கு மேல் வீடு தந்தோம்!.."னு திருவாய் மலர்ந்தார்..
...பெருமாள் வாக்குலேந்தே இந்த மாதிரி வரவும், பட்டரும் ரொம்ப ஆனந்தம் அடைந்து, பெருமாள கண்களில் நீர் பெருக சேவித்து நிற்க, பட்டரின் மார்பும் தோளும் சந்தோஷத்தினால் பூரிக்கின்றது.
‘மஹாப்ரஸாதம்’ என்று அங்கீகரித்து அந்த சந்தோஷத்துடனே தண்டன் சமர்ப்பிக்கின்றார். க்ருதக்ஞையோடு நமஸ்கரிக்கின்றார். அரங்கனிடத்துச் சொல்கின்றார். ‘நாயன்தே! தேவரீர் அர்ஜூனனிடத்து ‘மோக்ஷயிஷ்யாமி’ என்று அருளிசெய்தருளினீர். ஆனால் தேவரீர் தாமே உம்முடைய திருவாயினால் என்னைத் தவிர வேறு யாருக்குமே திருவாய் மலர்ந்து அருளப்பெற்றிராத இந்த பேற்றுக்கு, உடையவர் எமக்கு தேவரீர் திருவடிகளில் காட்டிக் கொடுத்த உறவும், எம் தந்தையான ஆழ்வானும், எம்பாருமே’ என்று விண்ணப்பம் செய்கின்றார்.
கூடியிருந்த வைணவர்களனைவரும் கடல் போன்று கலங்கினார்கள். ‘அரங்கன்தான் உகப்பினால் திருவாய் மலர்ந்தருளினால் நீங்கள் ஏன் அதை அங்கீகரிக்க வேணும்? உம்மைக் கொண்டு இந்த பூமியினைத் திருத்தி விடலாமென்றிருந்தோமே’ என்று கதறுகின்றார்.
அதற்கு பட்டர், இன்னம் சிறிது நாள் இங்கே அரங்கன் என்னை அடிமைக் கொண்டிருந்தால் பரமபதத்திற்கும் இப்புவிக்கும் ஒரு பாலமே அமைத்திருப்பேன்’ என்கின்றார். திடீரென்று ஒரு கவலைப் பிறந்தது பட்டருக்கு! அரங்கனிடத்து நிவர்த்தி செய்ய கேட்கின்றார் ” ப்ரபோ! அங்கு பரமபதத்திலே அஞ்சேல் என்ற கையும், கவித்த முடியும், புறுவல் பூத்த சிவந்த திருமுகமும், நெற்றியில் கஸ்தூரி திலகமுமாக தேவரீரை பரமபதத்திலே தரிசனம் செய்ய முடியும்தானே? நாம் காணவிட்டால் அங்குள்ள ஒரு மூலையினை முறித்துக் கொண்டு ஸ்ரீரங்கத்திற்கே மீண்டு வருவேன்’ என்று விண்ணப்பம் செய்கின்றார்.
அரங்கன் எப்போதுதான் முடியாது என்று பட்டருக்குச் சொல்லியிருக்கின்றான்! ஒப்புக் கொள்ள பட்டர் மூலஸ்தானம் சென்று பெரியபெருமாளையும், உற்சவரையும் ஆபாத சூடம் அனுபவிக்கின்றார். கண்ணாரக் கண்டு ஆனந்திக்கின்றார்!.
பெருமாள் அவருக்கு பஹுமானமா (கௌரவித்தல்) நிறைய சீர் வரிசைகளைக் கொடுத்து, பல்லக்கு மரியாதையோட
பட்டரோட திருமாளிகையில கொண்டு விடும்படி நியமித்தார்..
அப்படி திருமாளிகை வந்து சேர்ந்ததும், பட்டர் முதல் காரியமா தன்னோட திருத்தாயாரன ஆண்டாளோட திருவடிகள்ல
விழுந்து சேவிச்சார்...
பெருமாள் தம் பரிசகர்களனைவரையும் பட்டர் கூட அனுப்புகின்றார். ப்ரம்மரதமொன்று தயார் செய்கின்றார். கோயிலுள்ள அர்ச்சகர் உள்பட அனைத்துக் கொத்து கைங்கர்யபரர்களும், அகில ஸ்ரீவைஷ்ணவர்களும், எல்லா ஆச்சார்யர்களும், மற்றுமுள்ள ஸேவார்த்திகளும், மற்றையோரும் பட்டரை சூழ்ந்து அவரை பிரிய சகியாது கூடவே வருகின்றனர். அரங்கன் முற்றம் அங்கே வெறிச்சோடியது. பட்டர் தம் திருமாளிகையினுள் புகுந்து தம் திருத்தாய் ஆண்டாளை ஸேவிக்கின்றார்.
ஆண்டாள் அம்மையாருக்குப் பெரிய பெருமாள் தன்னோட புத்ரனை கௌரவிச்ச விஷயம் எதுவும் தெரியாது..
இருந்தாலும், தன்னோட கால்ல விழுந்து நமஸ்கரிச்ச பிள்ளைக்கு, "நலமந்தமில்லதோர் (பரமபதம்) நாடு புகுவீர்!.." என்று
ஆசீர்வதித்தார்..
பட்டரும்,"அம்மா!.. அடியேன் வேண்டுவது இதே!.." என்று பெரும் உவப்போடே பதிலளித்தார்..
ஒரு தாய், தன் மகனை,"தீர்காயுஸா நன்றாக வாழுவாய்!.." என்றே வாழ்த்துவாள்!..
ஆனால், இந்தத் தாயோ, "நீர் மோக்ஷ ஸாம்ராஜ்யத்தைப் பெறுவீர்!.." என்று வாழ்த்துகிறாள்..
பிள்ளையும்,"என்னைச் சீக்கிரம் முடியும்படி சொல்ல, நான் உம்மிடம் என்ன அபசாரப்பட்டேன்?.." என்னாமல்,
"அம்மா! அடியேன் வேண்டுவது இதே!.." என்று தாயாரின் ஆசியை உகந்து ஏற்கிறார்!..
(எப்படிப்பட்ட தாயும் மகனும்! நம் வைணவம் பெற்ற பேறு!)
கூரத்தாழ்வான் திருவடி சம்பந்தம் இருந்தாதான் இது மாதிரிப் பேச முடியும்!..
அடியேன் ஆத்துப் பெரியவாதான் இது மாதிரி ஒரு ஆச்சர்யமான ஆசிர்வாதம் பண்ணாளா?..
இல்ல... அவா அப்படிப் பண்ணி இருந்தாலும், அடியேன் அத உகந்து ஏத்திருப்பேனா?..
ஸ்வாமிகளே!..
அடியேனுக்கெல்லாம் இந்த தேஹத்து மேல இருக்கற ஆசை என்னைக்குமே விடாது!.."
......என்று கண் கலங்கக் கூறி விம்மினாள்..
திருநக்ஷத்ரம்: வைகாசி அனுஷம்
திரு அவதாரத்தலம்: திருவரங்கம்
ஆசார்யன்: எம்பார்
ஶிஷ்யர்கள்: நஞ்சீயர்
திருநாட்டுக்கு எழுந்தருளிய இடம்: திருவரங்கம்
அருளிச்செய்தவை: அஷ்டஶ்லோகி, ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம், ஸ்ரீ குணரத்ன கோஶம் , பகவத் குண தர்ப்பணம் (ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் வியாக்யானம் ), ஸ்ரீரங்கராஜ ஸ்தோத்ரம் .
திருவரங்கநாதனின் பிரசாதத்தை ஆண்டாள் அம்மங்கார் உண்டதால் , கூரத்தாழ்வானுக்கும் ஆண்டாள் அம்மங்காருக்கும் திருவவதாரம் செய்த மன்னுபுகழ் மைந்தர்கள் ஸ்ரீ பராசரப் பட்டர் மற்றும் இவரது திருத்தம்பியாரான வேத வியாச பட்டர் ஆவர்.பட்டரின் தனியன்:
ஸ்ரீ பராஶர பட்டார்ய: ஸ்ரீரங்கேஶ புரோஹித: |
ஸ்ரீவத்ஸாங்க ஸுத: ஸ்ரீமான் ஶ்ரேயஸே மேஸ்து பூயஸே ||
பட்டரின் வாழி திருநாமம்:
தென்னரங்கர் மைந்தன் எனச் சிறக்கவந்தோன் வாழியே
திருநெடுந்தாண்டகப் பொருளைச் செப்புமவன் வாழியே
அன்னவயல் பூதூரன் அடி பணிந்தோன் வாழியே
அனவரதம் எம்பாருக்கு ஆட்செய்வோன் வாழியே
மன்னுதிருக்கூரனார் வளமுரைப்போன் வாழியே
வைகாசியனுடத்தில் வந்துதித்தோன் வாழியே
பன்னுகலை நால்வேதப் பயன்தெரிந்தோன் வாழியே
பராசரனாம் சீர் பட்டர் பாருலகில் வாழியே
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!
வணக்கம் சுப்பு
Vanakkam Subbu