276 தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் - 021. அருட்சோம நாதேஸ்வரர் - நீடூர்

12 views
Skip to first unread message

Vanakkam Subbu

unread,
Oct 7, 2023, 9:24:46 AM10/7/23
to thatha patty
                                                                                      21. அருட்சோம நாதேஸ்வரர் -  நீடூர்

சோமநாதர் கோவில்  சுந்தரர், நாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற காவிரி வடகரைச் சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 21 ஆவது சிவத்தலமாகும்.

 

சுவாமி : சோமநாதேஸ்வரர்.

அம்பாள் : வேயுறு தோளியம்மை, மகாலட்சுமி, ஆதித்ய அபயப்ரதாம்பிகை, வேதநாயகி, ஆலால சுந்தர நாயகி, துர்க்கை.

மூர்த்தி : துவார விநாயகர், சிந்தாமணி கணபதி, சிவலோக நாதர், காசி விஸ்வநாதர், மகாலட்சுமி, நடராஜர், காலபைரவர்,  முனையாடுவார் நாயனார்.

தீர்த்தம் : புஷ்கரணி, செங்கழுநீரோடை, பத்திரகாளி தீர்த்தம், பருதிகுண்டம், வருண தீர்த்தம்,சூரிய தீர்த்தம்.

தல விருட்சம் : மகிழ மரம்.

வழிபட்டோர் : இந்திரன், சூரியன், காளி, நண்டு, சந்திரன், முனையடுவார் நாயனார்.

பாடியோர் : அப்பர், சுந்தரர்.

புராணப் பெயர்:

மகிழாரண்யம், வகுளாரண்யம்

முனையடுவார் நாயனார் அவதாரத் தலமிது.

கோவில் அமைப்பு

நுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும் போது பலி பீடம், கொடிமரம், நந்தி ஆகியவை காணப் பெறுகின்றன. கோவிலின் இடப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர், ஆலால சுந்தரர், மாணிக்கவாசகர், சூரியன், சிவலோக கணபதி, சந்திரன், கால பைரவர் உள்ளனர். ஆண்ட கணபதி, சிவ குருமூர்த்தி, பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மகேஸ்வரி, சாமுண்டி, சின்மாயனந்த கணபதி, முருகன், சிவலோக நாதர், கைலாசநாதர், காசி விசுவநாதர், மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். மூலவரின் கருவறை கோஷ்டத்தில் பால கணபதி, தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை ஆகியோர் காணப் பெறுகின்றனர்.

எந்தச் செயலையும் செய்யும் முன்பு முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கி விட்டு, பின்பு பெரியவர்களின் ஆலோசனையையும், அனுபவங்களையும் கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என்பர். அதன்படி இத்தலத்தில் விநாயகரே பெரியவர், பழையவர், புனிதமானவர் என்ற 3 நிலைகளில் இருக்கிறார். இந்த வடிவங்களைச் சிந்தாமணி விநாயகர், செல்வ மகா விநாயகர், சிவானந்த விநாயகர் என்றழைக்கின்றனர். புதிய செயல் தொடங்குபவர்கள் இவரை வணங்கி ஆலோசனை கேட்டு அதன் பின்பே செயலாற்றுகின்றனர். சாலைக்குச் சற்று உள்ளடங்கி கோவில் உள்ளது. முகப்பு வாயில் மேலே ரிஷபாரூடர் சிற்பம் வண்ணச் சுதையில் உள்ளது. வாயிலைக் கடந்தவுடன் தலமரம் மகிழமரம் உள்ளது. நேரே அம்பாள் சன்னதி. துவார வினாயகராக சிவலோகக் கணபதி உள்ளார். அவரை வணங்கிக் கடந்து நேரே சென்றால் மூலவர் சன்னதி. பிரகாரத்தில் இடப்பால் மூன்று கணபதிகள் உள்ளனர். சிந்தாமணி கணபதி, செல்வ கணபதி மற்றும் சிவானந்த கணபதி. சப்தமாதாக்களும், சின்மயானந்த கணபதியும், சுப்பிரமணியரும் அடுத்தடுத்து உள்ளனர் .  அடுத்து மூன்று லிங்கத் திருமேனிகள்.  சிவலோகநாதர், கயிலாயநாதர் மற்றும் காசி விஸ்வநாதர். அடுத்து மஹாலக்குமி சன்னிதி உள்ளது. நடராஜ சபையும் உள்ளது. மூலவர் வெண்ணிறத் திருமேனி. கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தக்ஷிணாமூர்த்தி,  லிங்கோற்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை உள்ளனர். சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. இத்தல விநாயகர் சித்தி விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இங்கு மூலவருக்கு மேல் உள்ள விமானம் இரு தளம் எனப்பெறுகிறது. முனையடுவார் நாயனாரின் கை கூப்பியவாறு உள்ள திருமேனி உள்ளது.

தலச்சிறப்பு : சோமநாத சுவாமி சுயம்பு மூர்த்தியாக, இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் தொழுத மூர்த்தியாக, இப்பூவுலகில்  கைலாசமாக விளங்கும் புண்ணியத் தலத்தில் அருள் பாலிக்கிறார்.  இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சோமநாத சுவாமி சகல  சாபங்களையும், தோஷங்களையும் நீக்க வல்லவர். இத்திருத்தலம் காவிரி ஆற்றின்  வடக்கு கரையில் அமைந்துள்ளது. சோமநாதசுவாமி கொலுவிருக்கும் விமானம் இரு தளம் எனப்பெறும் கீர்த்தி மிகு விமானம்  ஆகும்.   சூரிய நாராயணனே இங்கு தங்கி, அப்பனாம் சோம நாதப் பெருமானையும்,  அம்மையாம் வேயுறு தோளி அம்பாளையும் தொழுதேத்திய புகழ் மிக்க தலமிது. பெரும் பதவிக்காரனாகிய  தேவேந்திரனே  உருவாக்கி, தொழுதேத்திய திவ்ய மூர்த்தியாம் இந்த சோமநாத மூர்த்தி. சகல  பிறவிகளிலும் ஏந்திய சாபங்களை, தோஷங்களை  நீக்க வல்லவர்.  எந்த ஒரு இன்பத்திற்கும், துன்பத்திற்கும் அடிப்படையான காரணம் உண்டு. துக்கங்களைக் களையும்,  சங்கடங்களை நீக்கச்  செய்யும் கருவூலமே இச்சோமநாதப் பெருமான்.  ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதமான  சூரியன்  ஆதிக்கங் கொண்ட இத் திங்களில், சுவாமி மீது சூரிய ஒளி படுவது சிறப்பு ஆகும்.    இத்தலத்தில் நவகிரகங்கள் கிடையாது.   ஆனால், நவகிரகங்கள் ஒன்றிணைந்து, ஒரே தீர்த்தமாக, “ஒன்பது தீர்த்தம்” என்றே போற்றப் பெறும் புஷ்கரணி இங்குள்ளது.  பல  கோவில் சென்று  பூஜைகள் புரிந்து பயனின்றிப் போனாலும் இத்தலத்தில் ஒன்பது தீர்த்த மெனும் புஷ்கரணியில்  நீராடினால்  நவகிரக தோஷங்கள் உள்ளிட்ட சகல தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

உற்சவருக்கு சோமாஸ்கந்தர் என்று பெயர்.  பாம்பைப் போலவே, தனது ஆத்ம சக்தியை ஆட்டி பாம்பாட்டி என்ற பெயர் பெற்ற சித்தர்  அருள் பெற்ற திருத்தலம் ஆகும். சிவயோக சித்தரான தேவனார் திரு மாங்கல்ய பலம் தரும் தேவதை, மாங்கல்ய தாரண  தேவதையான இவளே இத்திருத்தலத்தில் விருட்சமான ‘மகிழ’ மரமாகவும் நிற்கின்றாள் என்கிறார்.  இந்த விருட்சத்தை தொழுதக்கால், பூரிப்பெய்தி மகிழ்வான இல்லறம் கிடைக்கும் என்கிறது சித்தர் தம் வாக்கு.    நடராஜப் பெருமான் சுதை வடிவில் அமைந்திருப்பது சிறப்பு.

எந்தச் செயலையும் செய்வதற்கு முன்பு முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானை வணங்கி விட்டு, பின் பெரியோர்களின்  ஆலோசனைப்படியே காரியங்களில் ஈடுபட வேண்டும்.  அதன்படி, இப்புண்ணிய தலத்தில் விநாயகரே பெரியவர், பழையவர்,  புனிதமானவர் என்ற மூன்று நிலைகளில் நிற்கின்றார்.  இந்த வடிவங்களை சிந்தாமணி விநாயகர், செல்வமகா விநாயகர்,  சிவானந்த விநாயகர் என்று அழைத்தனர் சித்தர் முது மக்கள். படைக்கும் தொழில் புரியும் பிரம்மதேவர் உள்ளிட்ட மூர்த்தியரும்  இம்மூன்று அம்சங்களையும் தியானித்த பிறகே தம் பணியில் ஈடுபடுகின்றனர்.  எனவே, நாமும் இதனைப் பின் பற்றிச் செயல்பட்டால், குறைகள் நீங்கி இன்பம் பெறலாம்.  ஊழிக்காலத்திலும் அழியாது நெடுங்காலமாக நிலைத்திருக்கும் காரணமாக  நீடூர் என வழங்கப் பெறுகிறது.  சோழ மன்னர்களில் முதல் குலோத்துங்கன், இரண்டாம் இராசராஜன், மூன்றாம் இராசராஜன்  ஆகியோர் காலக் கல்வெட்டுக்கள் உள்ளன.


தல வரலாறு :
 தேவேந்திரன் காலை நேரத்தில் சிவபூஜை செய்வது வழக்கம்.  தேவேந்திரனுக்கு இத்திருத்தலத்தில் சிவலிங்கம்  ஏதும் தென்படவில்லை.  எனவே காவிரி ஆற்றில் மணலில் ஒரு சிவலிங்கம் செய்து, ஒரு பாடலைப் பாடி, சிவபெருமானின்  நடன தரிசனம் வேண்டிப் பிரார்த்தித்தான். அதனால் மகிழ்ந்த சிவன் இந்திர பகவானுக்கு நடனக் காட்சி தந்தமையால், “கான நர்த்தன சங்கரா” எனக் கைகூப்பி இந்திரன் ஈசனை வணங்கினார்.  அன்று முதல் இந்த சோமநாதப் பெருமானுக்கு ‘‘கான நர்த்தன சங்கரன்’’ என்ற பெயர் உண்டாயிற்று.  “பாடலுக்கு இறங்கி ஆடிய தேவர்” என்பது இதன் பொருள். மணலினாலான இந்த லிங்கத்தில் தேவேந்திரனின் கைவிரல்கள் பதிந்து இருப்பதை  இன்றும் காணலாம்.  இந்தத் திவ்ய மூர்த்தியை ஆவணி மாதம் ஞாயிறு, திங்கட் கிழமைகளில் விரதமிருந்து வழிபட்டால், உடம்பில்  உள்ள மச்சம், மாறாத வடு, தோலில் ஏற்பட்ட வெள்ளைப் புள்ளிகள், கருப்பு புள்ளிகள், தோல் சம்பந்தமான வியாதிகள் நீங்கும்  என்பது நம்பிக்கை.

தன்மசுதன் எனும் கொடிய அரக்கன் தன்வினைப் பயனால் நண்டாகப் பிறந்து, நாரதமுனியிடம் சாபவிமோசனம் வேண்டினார்,  அவரும் சோமநாதரைச் சரணடையப் பணித்தார்.   நாரதமுனியின் அறிவுரைப்படி சிவதரிசனம் பெற்ற தன்மசுதன், சிவனிடம்  ஐக்கியமானான்.  நண்டு சென்று சிவபெருமானிடம்  ஐக்கியமான துளை இன்றும் சிவ லிங்கத்தில் காணப் பெறுகின்றது. ஆடி மாத பவுர்ணமி தினத்தில் இங்கு சிவனுக்கு “கற்கடக பூஜை” நடக்கிறது. ஆவணி மாதத்தில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. 


அம்பாள் வேயுறு தோளியம்மையை சூரியன் வழிபட்டுள்ளார்.
 எனவே இவளுக்கு, “ஆதித்ய அபயவராதம்பிகை” என்றும் பெயர் உண்டு. இவளது சன்னதி முன்மண்டபத்தில் சனீஸ்வரர் கிழக்கு பார்த்த படி தனியே இருக்கிறார். ஒரே இடத்தில் இருந்து அம்பாளையும், சனியையும் தரிசிக்கலாம். இதனால் சனிதோஷம் விலகும் என்கிறார்கள். இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. கோவிலுக்கு வெளியே பத்ரகாளியம்மன் தனிச் சன்னதியில் இருக்கிறாள். இவள் இத்தலத்தில் சிவனை வழிபட்டதாக ஐதீகம்.


பத்ரகாளி அம்பிகை இச்சிவனைத் தொழுதே கைலாயம் சென்றாள் என்பது நம்பிக்கை.
 தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக விளங்குபவர் இத்தலத்தில் அருள்பாலிக்கும் ஈசன்.  எந்த ஒரு நோயும், தொல்லையும், நாம்  செய்யும் பாவங்களினால் தான் வருகின்றது என்கிறது சித்தர் தம் வாக்கு.  தோஷங்கள், நோய், தொல்லை, கஷ்டங்கள் யாவும்  இந்த சோமநாதரை வழிபட்டால் விலகும் என்பது நம்பிக்கை. 

 

தேவாரப்பதிகம்:

அல்லல் உள்ளன தீர்த்திடு வானை அடைந்த வர்க்கு அமுதாயிடுவானைக் கொல்லை வல்லரவம் அசைத்தானைக் கோல மார்கரி யின்உரி யானை நல்லவர்க்கு அணி ஆனவன் தன்னை நானும் காதல் செய்கின்ற பிரானை எல்லி மல்லிகையே கமழ் நீடூர் ஏத்தி நாம்பணி யாவிட லாமே.

–சுந்தரர்

வழிகாட்டி:


மயிலாடுதுறையில் இருந்து வைத்தீஸ்வரன் கோவில்


செல்லும் சாலையில் நேராக செல்லாமல் இடப்புறமாக


பட்டவர்த்தி செல்லும் சாலையில் சென்றால் 1 கீ மீ


தூரத்தில் கோயிலை அடையலாம்.


நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணிவரை, மாலை 4.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை.

பூஜை விவரம் : இரண்டு காலப் பூஜை.


திருவிழாக்கள் :

சித்திரை பௌர்ணமி விழா,

புரட்டாசி – நவராத்திரி,

மார்கழி – திருவாதிரை,

மாசி – சிவராத்திரி,

பங்குனி – குருபூஜை.


அருகிலுள்ள நகரம் :
 மயிலாடுதுறை.


கோவில் முகவரி :
 அருள்மிகு சோமநாதர் திருக்கோவில்,

நீடூர் அஞ்சல் – 609 203, மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.

https://www.youtube.com/watch?v=DYI7NxPtCcc&t=4s

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! 

வாழிய பாரதமணித் திருநாடு!   

வணக்கம் சுப்பு

 Vanakkam Subbu

 zGgbcCHwTas05D3TEGRzfeJitXMuFdleP8uz97cCm3eLcDguXidhEufGaerGn9hH.gif

Reply all
Reply to author
Forward
0 new messages