அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில்

இந்தக் கோவில் 3000 வருடங்கள் பழமை வாய்ந்தது என்றும் இராமாயண காலப் பழமை வாய்ந்தது என்றும் சொல்கிறார்கள். இந்தக் கோவிலில் இராஜகோபுரம் இல்லை. நுழைவாயிலின் மேலே ஸ்ரீதேவி- பூதேவி சமேத நாராயணன், ராமன், லட்சுமணன், கருடாழ்வார் மற்றும் நம்மாழ்வார் ஆகியோரது சிற்ப உருவங்கள் இருக்கிறது.
கோவிலுக்கு உள்ளே நுழைந்ததும் கொடி மரம். அடுத்து ஆனந்த மண்டபம். இங்கு, இராமன் மற்றும் கருடாழ்வார் சந்நிதிகள் எதிரெதிரே இருக்கிறது. ஸ்ரீராம பட்டாபிஷேகம் முடிந்து இலங்கை திரும்பும் வழியில் இங்கு வந்த விபீஷணன், சோமலட்சுமி தீர்த்தத்தில் நீராடி, திருவாழ் மார்பனை வழிபட்டாராம் . அத்துடன் இராம பட்டாபிஷேகத்தை மீண்டும் காணும் பாக்கியத்தைத் தருமாறும் பெருமாளிடம் வேண்டினாராம் .அதை ஏற்று விபீஷணருக்கு, இராமனாக நின்ற கோலத்தில் காட்சி தந்தாராம் திருவாழ்மார்பன்! எனவே, இங்கு இராமரின் எதிரில் அனுமனுக்குப் பதிலாக கருடாழ்வார் சந்நிதி கொண்டுள்ளார். தவிர, விஷ்வக்சேனர் மற்றும் நம்மாழ்வார் ஆகியோர் சந்நிதிகளும் உள்ளன .
ஆனந்த மண்டபத்தை அடுத்து மூலவர் சன்னதி. மூலவரான ”திருவாழ்மார்பர்ன்” நான்கு கைகளுடனும், சங்கு சக்கரமேந்தி அபய ஹஸ்தத்துடன், அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். ஒன்பது அடி உயரமுள்ள இவ்விக்ரகம் "கடு சர்க்கரை யோகம்' என்ற கூட்டினால் உருவாக்கப் பெற்றது (கல்லும், சுண்ணாம்பும் சேர்ந்து செய்யப்பெற்ற உருவத்தின் மேல், கடுகும் சர்க்கரையும் சேர்ந்த ஒரு விதப் பசையினால் பூசப்பெறும் முறைக்கு கடுசர்க்கரை யோகம் என்று சொல்வார்கள்) அதனால் மூலவருக்கு அபிஷேகமோ, அரளிப்பூ மாலை சார்த்துவதோ கிடையாது. புனுகு மட்டுமே சார்த்தப் பெறுகிறது. உற்சவருக்கே அபிஷேகம் நடைபெறும் இந்தத் தலத்தில் எம்பெருமானின் மார்பிலேயே உறைவதால், தாயார் கமலவல்லி நாச்சியாருக்குத் தனிச் சந்நிதி கிடையாது
கோவிலின் எதிரே கிழக்கு பாகத்தில் சோம லட்சுமி தீர்த்தக் குளம் கம்பீரமாக அமைந்துள்ளது. தீர்த்தக் குளம் பார்க்க அழகாகப் படிக்கட்டுகளுடன் காணப்பெறுகிறது.
மூலவர் -: திருவாழ்மார்பன்
உற்சவர்: ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசன்
அம்மன்/தாயார்: கமலவல்லி நாச்சியார்,சுவாமி மார்பில் மகாலட்சுமி
தீர்த்தம்: இலட்சுமி தீர்த்தம் என்ற புஷ்கரிணி
புராணப் பெயர்: திருவண்பரிசாரம்
ஊர்: திருப்பதி சாரம்
விமானம்:இந்திர கல்யாண விமானம்
மாவட்டம்: கன்னியாகுமரி
மாநிலம் :தமிழ்நாடு
பாடியவர்கள்:
நம்மாழ்வார் மங்களாசாசனம்
வருவார் செல்வார் பரிவாரத்திருந்த என் திருவாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வதென் உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும் மோடு ஒருபாடுழல்வான் ஒரடியாணுமுள னென்றே - நம்மாழ்வார்
திருவிழா:
திருமால் குலசேகர ஆழ்வாரை வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்ற ஆடி சுவாதி திருநாள், சித்திரை மாதம் பத்து நாட்கள் திருவிழா. புரட்டாசி சனி, ஆவணி திருவோணம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இவருக்கு மட்டுமே ஊஞ்சல் சேவை நடக்கிறது.
தலச் சிறப்பு:
மூலவரான திருவாழ்மார்பன் நான்கு கைகளுடன், சங்கு சக்கர மேந்திய அபய ஹஸ்தத்துடன், அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
இங்குள்ள மற்றொரு சிறப்பம்சம் திருவள்ளுவர் சந்நிதி. உள்ளே மனைவி வாசுகி மற்றும் சீடர்கள் புடை சூழக் காட்சி தருகிறார் திருவள்ளுவர். திருக்குறள் இயற்ற, அப்பனாக இருந்து வள்ளுவருக்கு அருளியவர் ஆதலால் திருவாழ் மார்பனுக்கு, 'திருக்குறளப்பன்' என்ற பெயரும் உண்டு.
திருப்பதி பெருமாளுக்கு நேர்த்திக்கடன் செய்ய வேண்டிக் கொண்டவர்கள் , திருப்பதிக்குப் போக முடியாத சூழலில் அதை இத்தலப் பெருமாளுக்குச் செய்யலாம். அதற்குதான் இதற்குத் ”திருப்பதியினுடைய சாரம் என்பதால் ”திருப்பதிசாரம்” என்று பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள்.
இந்த நரசிம்ம மூர்த்தியை வழிபட்டு, அருள் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் ”திருவாழ்மார்பன்”. இத்தல மூலவர் நரசிம்மரின் பெயரையே தனதாக்கிக் கொண்டவர். இவரின் மகள், உடைய நங்கைக்கும், திருக்குறுங்குடியைச் சேர்ந்த ”காரி” என்பவருக்கும் திருமணம் நடந்தேறியது. இல்லறம் இனிதே நடந்தது. ஆனால், குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இருவரும் குழந்தை வரம் வேண்டி இந்தத் தலத்தில் 41 நாட்கள் விரதம் அனுஷ்டித்தனர். இதன் பலனாக அவர்கள் பெற்றெடுத்த குழந்தையே நம்மாழ்வார். தமிழர் முறைப்படி மகப்பேறுக்காக தாய் வீடான திருவண்பரிசாரத்துக்கு அனுப்பப்பட்டாள். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பவுர்ணமி திதியில் நம்மாழ்வார் இவ்வுலகிலே அவதரித்தார் திருப்பதிசாரம் நம்மாழ்வாரின் அவதாரத் தலமாகவும், ஆழ்வார்திருநகரி அவர் ஞானம் பெற்ற ஸ்தலமாகவும் சொல்லப்பெறுகின்றது.
வடக்கு இரதவீதியில் இவர்கள் வசித்த வீடு, 'நம்மாழ்வார் தாயகம்' என்ற பெயரில் இன்றும் இருக்கிறது . விஷ்ணு பக்தரான திருவாழ்மார்பன், இங்குள்ள மூலவருடன் ஐக்கியமானதாகச் செவி வழிச் செய்தி உண்டு! இவரின் சகோதரியான திருப்பதி நங்கைக்கும் இந்த ஆலயத்தின் அருகே தனிக் கோயில் உண்டு.
சைவ- வைணவ ஒற்றுமைக்குஎடுத்துக்காட்டாக இந்தக் கோவில் விளங்குது. இதன் மேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில், பழையாற்றங்கரையில் உள்ள தலம் ஜடாயுபுரம். இராவணனால் வெட்டப்பட்ட ஜடாயுவின் இறக்கை விழுந்த பூமி.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருப்பதி சாரம்- 629 901 நாகர் கோவில் கன்னியாகுமரி மாவட்டம்
போன்:
பொதுத்தகவல்:
இத்தலத்தின் இறைவன் ஏழு முனிவர்களால் சூழப்பட்டு காட்சி தருகிறார். இலக்குமிதேவி ஆனந்தமடைந்து திருமாலின் திருமார்பில் நித்திய வாசம் செய்ததால் இத்தலத்தில் திருமால் திருவாழ்மார்பன் என்றழைக்கப் பெறுகிறார் என்பது ஐதீகம்.
இங்கு கருவறையில் திருவாழ்மார்பன் ஏழு அடி உயரத்தில் நான்கு கரங்களுடன் சங்கு சக்கரதாரியாக வலது காலை மடக்கியும் இடது காலைத் தொங்க விட்டும் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி கழுத்தில் இலட்சுமி உருவம் பொறிக்கப்பெற்ற பதக்கத்தடன் காட்சியளிக்கிறார். இத்தலத்தின் மூலவர் கடுகு, சர்க்கரை மற்றும் மலை தேசத்து மூலிகைகளால் செய்யப்பெற்றுள்ளதால் (சூடிப் புனையப் பெற்றுள்ளதால்) இவருக்குத் திருமஞ்சனம் (அபிஷேகம்) கிடையாது. இத்தலம் நம்மாழ்வாரின் தாய் திருவுடைய நங்கை பிறந்த தலமாகும். குலசேகர ஆழ்வார் கி. பி. 8 ஆம் நூற்றாண்டில் இத்தலத்தைப் புதுப்பித்து இறைவனுக்கு வாகனம். கோவில் மதில் போன்ற திருப்பணிகள் பலவும் செய்து, கொடிக்கம்பத்தையும் நிர்மாணித்து விழா செய்துள்ளார். நம்மாழ்வார் குழந்தையாகத் தவழ்ந்துள்ளது போன்ற மிக அழகிய சிலை ஒன்று இத்தலத்தில் உள்ளது. நம்மாழ்வாரால் மட்டும் ஒரே ஒரு பாசுரத்தில் பாடல் பெற்ற தலமாகும்.
வருவார் செல்வார் பரிவாரத்திருந்த என்
திருவாழ் மார்வற்கு என்திறம் சொல்லார்-செய்வதென்
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங்கும் மோடு
ஒருபாடுழல்வான் ஓரடியாணுமுள னென்றே - நம்மாழ்வார்
இக்கோவிலில் கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஒற்றைக் கல்மண்டபம் ஆகிய மண்டபங்களைக் கொண்டு உள்ளது. இங்கு விமானம் இந்திர கல்யாண விமான அமைப்பைச் சார்ந்தது. கோவில் கருவறையின் வலது பக்கம் இராமர், சீதை, அனுமன், இலட்சுமணன் ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் அமைக்கப்பெற்றுள்ளன. கருவறையின் இடப்பக்கம் விஷ்வசேனர், நடராஜர் மற்றும் நம்மாழ்வார் சன்னதிகள் அமைந்துள்ளன. கருவறைச் சுற்றில் கன்னி மூல விநாயகர் உள்ளார். கோவிலுக்கு வெளியே 40 அடி உயரமுள்ள கொடிமரம் உள்ளது. கொடிமரத்தின் பக்கத்தில் பெரிய பலிபீடமும், கோவிலுக்கு வெளியே சோம தீர்த்தம் உள்ளது. கோவிலின் வெளியே வடக்குப் பகுதியில் உடைய நங்கையார் அவதரித்த பகுதியுள்ளது. நம்மாழ்வாரின் தாயாரின் இந்த வீடானது இப்போது ஒரு பஜனை மடமாக உள்ளது்
பிரார்த்தனை
திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் செல்வச்செழிப்புடன் விளங்கவும் இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பெருமாள் தாயாருக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து வழிபடுதல்,திருப்பதி பெருமாளுக்கு நேர்த்திக்கடன் செய்ய நினைப்பவர்கள் இத்தலப் பெருமாளுக்கு நேர்த்திக்கடன் செய்யலாம்.
தலப் பெருமை:
நம்மாழ்வாரின் தாயார் பிறந்த தலம்: திருமாலின் அம்சமான நம்மாழ்வாரைப் பெற்றெடுத்த தாய் பிறந்த பெருமை இத்திருப்பதிக்கே உரியது. குறுநாட்டுக் காரி மாறன் என்ற சிற்றரசனுக்கும், நாஞ்சில் நாட்டுத் திருவண்பரிசாரத்திலிருந்த (திருப்பதிசாரம்) திருவாழ்மார்பன் பிள்ளை மகளான உதயநங்கைக்கும் மணமகள் இல்லத்தில் திருமணம் நடந்தது. பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதது கண்டு வருந்திய தம்பதிகள் மகேந்திரகிரியில் அடிவாரத்திலுள்ள திருக்குறுங்குடி சென்று, அதன் வழியே ஓடும் நதியி்ல் நீராடி, அங்கு எழுந்தருளியிருக்கும் நம்பியிடம் குழந்தை வேண்டி நின்றனர். பெருமாளும் அவர்களது வேண்டுகோளுக்கிரங்கி, உங்கள் எண்ணம் நிறைவேறும். யாமே உமக்கு மகனாக அவதரித்துப் பதினாறு வயதிலேயே கணக்கிலடங்காக் கீர்த்திகளைப் பெற்று உங்களுக்குப் புகழ் தேடித் தருவோம். பிறக்கும் குழந்தையை (ஆழ்வார்)திருநகரியிலுள்ள புளியமரத்தடிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்,’ என்று கூறி மறைந்தார். சில நாட்களில் உதயநங்கை கருவுற்றாள். தமிழர் முறைப்படி மகப்பேறுக்காக தாய் வீடான திருவண்பரிசாரத்துக்கு அனுப்பப் பெற்றார். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பவுர்ணமி திதியில் நம்மாழ்வார் இவ்வுலகிலே அவதரித்தார். குறுங்குடிப் பெருமாளின் ஆணைப்படி குழந்தையை ஆழ்வார் திருநகரியிலுள்ள புளிய மரத்துக்குப் பொற்தொட்டிலில் இட்டு எடுத்து வந்தனர். குழந்தை தவழ்ந்து தவழ்ந்து புளியமரப் பொந்தினுள் ஏறித் தெற்கு நோக்கி பத்மாசனத்தில் ஞான முத்திரை ஏந்தியவராய் அங்கு எழுந்தருளி இருக்கும் ஆதிநாதரைத் தியானித்து நின்றது. இந்நிகழ்ச்சியை கண்டவர்கள் வியந்து போற்றினர். 16 ஆண்டுகள் இந்த பாலமுனி, இறை தியானத்தில் மூழ்கியிருந்தார். இவ்வாறு திருப்பதிசாரம் நம்மாழ்வாரின் அவதார தலமாகவும், ஆழ்வார்திருநகரி அவர் ஞானம் பெற்ற ஸ்தலமாகவும் சிறப்புடன் விளங்குகின்றன.
தல வரலாறு:
ஒரு காலத்தில் சுசீந்திரம், ஞானாரண்யம் என அழைக்கப்பட் டது. சப்த ரிஷிகள் இங்கு தவமிருந்தனர். இறைவன் சிவ வடிவில்அவர்களுக்குக் காட்சி தந்தார். முனிவர்கள் இறைவனைத் திருமாலின் உருவிலே காண சோம தீர்த்தக் கட்டம் என்ற இடத்திற்கு சென்று தவம் செய்தனர். அவர்களது தவத்துக்கு இரங்கிய இறைவன், திருமாலின் உருவில் காட்சி தந்தார். அவ்வுருவில் அங்கு தங்கியருள வேண்டும் என்ற முனிவர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற, திருமால், சப்த ரிஷிகள் சூழ, பிரசன்ன மூர்த்தியாக அமர்ந்து அருள்புரிகின்றார் என்பர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: மூலவர் ஒன்பது அடி உயரமுள்ள இவ்விக்ரகம் “கடு சர்க்கரை யோகம்’ என்ற கூட்டினால் சமைக்கப் பெற்றது. கல்லும், சுண்ணாம்பும் சேர்ந்து செய்யப்பட்ட உருவத்தின் மேல், கடுகும் சர்க்கரையும் சேர்ந்த ஒரு வித பசையினால் பூசப்படும் முறைக்கு கடுசர்க்கரை யோகம் என்பர்.
இறைப் பேரருளால் சோழ நாடு - 40, நடு நாடு - 2, தொண்டை நாடு - 22 மற்றும் மலை நாடு (கேரளா) - 13 ஆக 77 திவ்ய தேசங்களைப் பற்றி இது வரை பார்த்திருக்கிறோம். இனி பாண்டி நாடு 18 தலங்களைத் தரிசிக்கவிருக்கிறோம். - வணக்கம் சுப்பிரமணியம்
https://www.youtube.com/watch?v=fxtlLpNLpWY
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!
வணக்கம் சுப்பு
Vanakkam Subbu
