Groups keyboard shortcuts have been updated
Dismiss
See shortcuts

14 views
Skip to first unread message

Venkatachalam Subramanian

unread,
Aug 13, 2017, 8:55:20 AM8/13/17
to palsuvai

கல தோஷங்களையும் நீக்கி சந்தோஷம் தரும் குமாரஸ்தவம் | உங்களுக்காக on WordPress.com

By vayal|Aug. 3rd, 2017

ருணகிரிநாதர் அருளிய திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம்; பாலதேவராய ஸ்வாமிகள் அருளிய கந்தசஷ்டிக் கவசம் போன்று முருகப்பெருமானைப் போற்றும் துதிப்பாடல்களில் ஸ்ரீபாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவமும் ஒன்று.

பாம்பன் சுவாமிகள் அருளிய ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை ஆறு மண்டலங்களாகப் பகுத்து வைத்திருக்கிறார்கள் சான்றோர்கள். அவற்றில் ஆறாவது மண்டலத்தில் அமைந்திருக்கிறது ‘குமாரஸ்தவம்’ எனும் மிக அற்புதமான இந்தத் துதிப்பாடல். முருக வழிபாட்டில், முதலில் இந்தப் பதிகத்தைப் பாடிவிட்டு பின்னர் ஆராதனையைத் தொடங்குவது வெகுவிசேஷம்.

இந்தத் துதிப்பாடல் இருக்கும் இல்லத்தில் சகல சுபிட்சங்களும் தானே வந்து சேரும். வறுமையும் பிணிகளும் நீங்கும். மேலும், பில்லி சூன்யம் முதலான தீவினைகளும் தீய சக்திகளும் அந்த இல்லத்தை நெருங்கவே முடியாமல் விலகி ஓடும் என்பது அனுபவத்தில் கண்டுணர்ந்த பெரியோர்களது அறிவுறுத்தல்.

எப்படிப் பாடுவது, எப்படி வழிபடுவது?

அனுதினமும் இந்தப் பாடலைப் பாடி முருகப்பெருமானை வழிபடுவதால் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் இதைப் பாராயணம் செய்யலாம். இயலாதவர்கள், ஒரு வேளையாவது இந்தப் பாடலைப் பாடி பூஜிக்கலாம்.

தினமும் காலையில் எழுந்து நீராடி, சமயச் சின்னங்கள் தரித்து, பூஜையறையில் முருகப்பெருமான் திருமுன் நெய் தீபம் ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள். நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு சாதம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்கலாம். செவ்வரளி, செம்பருத்தி முதலான சிவப்பு வண்ண மலர்களை பயன்படுத்துவது விசேஷம் என்றாலும், அவை கிடைக்காதபட்சத்தில் மற்ற வாசனை மலர்களையும் அர்ச்சனைக்குப் பயன்படுத்தலாம். முருகனின் மகிமையைச் சொல்லும் இந்தப் பாடலின் வரிகள் ஒவ்வொன்றையும் சொல்லி பூக்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும். பாடல் முடிந்ததும் நிறைவாக நைவேத்தியம் சமர்ப்பணம் செய்து, தூப-தீபம் காட்டி ஆராதித்து வணங்க வேண்டும்.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், குரு பலம் இல்லாதவர்கள், இன்னும் பிற தோஷங்களால் வருந்துவோர், அனுதினமும் குமாரஸ்தவத்தைப் பாராயணம் செய்து குமரன் அருளால் வாழ்வும் வரமும் பெற்று மகிழுங்கள்.

இங்கே, நீங்கள் அர்ச்சித்து வழிபடுவதற்கு வசதியாக முழுப் பாடலும் முதலில் தரப்பட்டுள்ளது. தொடர்ந்து… பாடல் வரிகளின் விளக்கத்தை, மகிமையை நீங்கள் அறிந்து உணர்ந்து வழிபடும் விதம் ஒவ்வொரு வரியும் உரிய விளக்கத்துடன் இடம்பெற்றுள்ளது.

ஓம் ஷண்முக பதயே நமோ நம:ஓம் ஷண்மத பதயே நமோ நம:ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம:ஓம் ஷட்கிரீட பதயே நமோ நம:ஓம் ஷட்கோண பதயே நமோ நம:ஓம் ஷட்கோச பதயே நமோ நம:ஓம் நவநிதி பதயே நமோ நம:ஓம் சுபநிதி பதயே நமோ நம:ஓம் நரபதி பதயே நமோ நம:ஓம் சுரபதி பதயே நமோ நம:ஓம் நடச்சிவ பதயே நமோ நம:ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம:ஓம் கவிராஜ பதயே நமோ நம:ஓம் தபராஜ பதயே நமோ நம:ஓம் இகபர பதயே நமோ நம:ஓம் புகழ்முனி பதயே நமோ நம:ஓம் ஜயஜய பதயே நமோ நம:ஓம் நயநய பதயே நமோ நம:ஓம் மஞ்சுள பதயே நமோ நம:ஓம் குஞ்சரி பதயே நமோ நம:ஓம் வல்லீ பதயே நமோ நம:ஓம் மல்ல பதயே நமோ நம:ஓம் அஸ்த்ர பதயே நமோ நம:ஓம் சஸ்த்ர பதயே நமோ நம:ஓம் ஷஷ்டி பதயே நமோ நம:ஓம் இஷ்டி பதயே நமோ நம:ஓம் அபேத பதயே நமோ நம:ஓம் சுபோத பதயே நமோ நம:ஓம் வி(வ்)யூஹ பதயே நமோ நம:ஓம் மயூர பதயே நமோ நம:ஓம் பூத பதயே நமோ நம:ஓம் வேத பதயே நமோ நம:ஓம் புராண பதயே நமோ நம:ஓம் பிராண பதயே நமோ நம:ஓம் பக்த பதயே நமோ நம:ஓம் முக்த பதயே நமோ நம:ஓம் அகார பதயே நமோ நம:ஓம் உகார பதயே நமோ நம:ஓம் மகார பதயே நமோ நம:ஓம் விகாச பதயே நமோ நம:ஓம் ஆதி பதயே நமோ நம:ஓம் பூதி பதயே நமோ நம:ஓம் அமார பதயே நமோ நம:

ஓம் குமார பதயே நமோ நம:

விளக்கமும் மகிமையும்!

குமாரஸ்தவம் – மந்திரபூர்வமானது என்பார்கள். இதில் முருகனின் மகிமையோடு வேல், மயில் மற்றும் தேவியரின் சிறப்புகளும் கூறப்படுகின்றன. ஆகவே, உள்ளம் உருக இந்தப் பாடலைப் பாடி வழிபடுவதன்மூலம் கந்தனின் கருணையோடு தேவியரின் அருட்கடாட்சத்தையும் பரிபூரணமாகப் பெறலாம்.

தெய்வானை தேவி நம் பிள்ளைச் செல்வங்களைக் காத்தருள்வாள்; வள்ளிப் பிராட்டி நம் வாழ்வில் வளம்சேர்ப்பாள். வேலும் மயிலும் நம் குடும்பத்துக்கு என்றென்றும் துணை நிற்கும். 
இனி, விளக்கத்தைக் காண்போமா?

ஓம் ஷண்முக பதயே நமோ நம:

கருத்து: ஆறுமுகப்பெருமானே தலைவனே உம்மை வணங்குகிறேன்.

ஓம் ஷண்மத பதயே நமோ நம:

காணாபத்யம், சாக்தம், சைவம், வைணவம், கெளமாரம், செளரவம் முதலான ஆறு வகை சமயங்களுக்கும் தலைவனாகத் திகழும் முருகப்பெருமானே உம்மை வணங்குகிறேன்.

ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம:

எல்லா திசைகளையும் பார்க்கும் வண்ணம் உள்ள அழகான ஆறு திருக்கழுத்தை உடைய குகனே உம்மை வணங்குகிறேன்.

ஓம் ஷட்கிரீட பதயே நமோ நம:

அழகான ஆறுமுகங்களுக்கு ஏற்றவாறு நல்ல அமைப்புடன் கூடிய ஆறு கிரீடங்களை அணிந்துள்ள, அழகே உருவான முருகப்பெருமானே உம்மை வணங்குகிறேன்.

ஓம்  ஷட்கோண பதயே நமோ நம:

அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளி, அதில் அதிதெய்வமாக விளங்கும் குமரப்பெருமானே உம்மை வணங்குகிறேன்.

ஓம் ஷட்கோச பதயே நமோ நம:

ஆறு விதமான தோத்திரங்களின் உட்பொருளாகவும் அதனால் உணர்த்தப்படுபவனாகவும் விளங்கும் நாயகனுக்கு நமஸ்காரம்.

ஓம்  நவநிதி பதயே நமோ நம:

ஒன்பது விதமான செல்வங்களுக்கு உறைவிடமாகவும் அவற்றின் தலைவனாகவும் விளங்கும் சுவாமிக்கு நமஸ்காரம்.

ஓம்  சுபநிதி பதயே நமோ நம:

தன்னை வணங்குவோருக்கு மிகவும் பெரிய இன்பமான முக்தி இன்பத்தை வழங்கும் நாயகனுக்கு நமஸ்காரம்.

ஓம்  நரபதி பதயே நமோ நம:

மக்களின் அரசனான கந்தவேலுக்கு நமஸ்காரம். மதுரை மீனாட்சி – சோமசுந்தரரின் மைந்தன் ஆதலால், முருகன் மன்னாதி மன்னன் ஆவான்.

ஓம் சுரபதி பதயே நமோ நம:

தேவராஜனான தேவேந்திரனுக்கு ஆட்சியைத் திருப்பி வழங்கிய தேவர்களின் நாயகனுக்கு நமஸ்காரம்.

ஓம் நடச்சிவ பதயே நமோ நம:

நடனமாடும் அறுமுகச் சிவனுக்கு நமஸ்காரம்.

தந்தை சிவ பெருமான் சிதம்பரத்தில் நடனமாடுவது போல முருகப்பெருமானும் தகராகாச நடனம் செய்பவர். ஆகவே, குகனும் கூத்தபிரான் ஆவார்.

ஓம் ஷடாக்ஷர பதயே நமோ நம:

ஆறெழுத்து மந்திரத்தின் இறைவனான முருகனுக்கு நமஸ்காரம்.

‘முக்தி தந்து அனுதினம் முழுபலன் நல்கச்சத்தியமாவது சரவண பவவே’ என அருளியுள்ளார் பாம்பன் சுவாமிகள். ஆகவே, தினமும் சரவணபவனையும் சரவணபவ மந்திரத்தையும் துதித்துப் போற்ற வேண்டும்.

ஓம் கவிராஜ பதயே நமோ நம:

கவிராஜ ராஜனான முருகப்பெருமானுக்கு வணக்கம்.

திருஞான சம்பந்தரை முருகனின் அம்சம் என்பார்கள். முருகப் பெருமானே, கவிராஜ பெருமானாக – திருஞான சம்பந்தராக அவதரித்து வந்து சமணர்களை வென்று சிவனடியார்களின் துன்பம் தீர்த்தாராம். 

‘உபயகுல தீபதுங்க விருது கவிராஜ சிங்க
உரைபுகலி யூரிலன்று வருவோனே’

எனும் பாடலும் பாடலும் முருகனைக் கவிராஜனாகப் போற்றுகிறது.

ஓம் தபராஜ பதயே நமோ நம:

தவம் புரிகின்றவர்களைக் காக்கும் இறைவனுக்கு நமஸ்காரம்.

அகத்தியர், நக்கீரர், பராசரர், அருணகிரியார், சிதம்பரர், ராமலிங்கர், நாரதர் போன்ற தப ராஜர்களுக்குத் தலைவனான முருகனுக்கு நமஸ்காரம். மாதவம் புரியும் அடியார்களை முருகப்பெருமான் காத்தருள் செய்கிறார்.

ஓம்  இகபர பதயே நமோ நம:

இகம் – இம்மை; பரம் – மறுமை. இம்மைக்கும் மறுமைக்கும் தலைவனான முருகப்பெருமானே உம்மை வணங்குகிறேன்.

முருகப்பெருமான் இம்மைக்குத் தேவையான அறம், பொருள், புகழ், போகம் ஆகியவற்றையும், மறுமைக்குத் தேவையான முக்தியையும் அருள்பவர். ஆகவேதான் அருணகிரிநாதர், `இகபர செளபாக்கியம் அருள்வாயே’ எனப் பாடுகிறார்.

ஓம் புகழ்முனி பதயே நமோ நம:

புகழ்முனியாம் திருப்புகழ் முனிவர் அருணகிரியாரின் தலைவனான முருகனுக்கு வணக்கம்.

ஓம்  ஜய ஜய பதயே நமோ நம:

தன்னை வணங்கும் அடியார்களுக்கு எப்போதும் வெற்றியைத் தந்து வெற்றித் தலைவனாக இருக்கும் முருகனுக்கு நமஸ்காரம். தன் அடியார்களுக்கு எப்போதும் வெற்றியையே அருள்பவர் முருகப்பெருமான். ஆகவே, அவர்கள் எதற்கும் அச்சம்கொள்ளத் தேவையில்லையாம்.

சலங்காணும் வேந்தர் தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார் துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார்

கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல்அலங்கார நூற்று ளொருகவி தான் கற்றறிந்தவரே.

– எனப் பாடுகிறார் அருணகிரியார். அதாவது,

கந்தரலங்காரத்தின் பாடல் ஒன்றை தெரிந்துகொண்டால் போதும்; அந்த அடியவர் எதற்கும் அஞ்சத் தேவையில்லை என்பது அருணகிரியாரின் வாக்கு. ஆக, அப்படியான அபயம் வழங்கும், வெற்றிகள் நல்கும் கந்தவேளுக்கு நமஸ்காரம் என்று போற்றுகிறது குமாரஸ்தவத்தின் இந்த வரி.

ஓம் நயநய பதயே நமோ நம:

மிக்க இனிமையானவர்களான தம் பக்தர்களுக்கு, எப்போதும் இனிமை செய்யும் தலைவனுக்கு நமஸ்காரம்.

ஓம்  மஞ்சுள பதயே நமோ நம:

அழகே உருவான தலைவனுக்கு வணக்கம்.

முருகன் என்றாலே அழகன் என்றுதானே பொருள் சொல்ல முடியும். அவனை நேரில் தரிசித்த பாக்கியம் பெற்றவர் அருணகிரியார். அவர் முருகப்பெருமானின் அழகை எங்ஙனம் போற்றுகிறார் என்று பாருங்கள்.

`மாயோன் மருகனை மன்றாடி மைந்தனை வானோர்க்குமேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில்சேலார் வயற் பொழிற் செங்கோடனைச் சென்று கண்டு தொழ

நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே’

– முருகனின் அழகைப்பருக கண்ணிரண்டு போதாது.அழகன் முருகனை ஆசைதீர தரிசித்து மகிழ வேண்டுமெனில் நாலாயிரம் கண்கள் தேவை. அதைக் கொடுக்கத் தவறிவிட்டாரே பிரம்மதேவன் என்று அங்கலாய்க்கிறார் அருணகிரியார். எனில், அழகுக்கு அதிபதி முருகன் என்பது உண்மைதானே?!

ஓம்  குஞ்சரி பதயே நமோ நம:

தேவ குஞ்சரியான தெய்வானையின் நாயகனுக்கு வணக்கம்.

திருமால் வியர்வையில் உதிர்த்த அமுதவல்லி,

முருகனை மணம் புரிய வேண்டி தவம் இருந்து, அதன் பலனாக குழந்தையாகப் பிறந்து தேவேந்திரனுக்கு மகளாகி, ஐராவத யானையால் வளர்க்கப்பட்டாள்.

அந்த தேவ குஞ்சரத்தால் வளர்க்கப்பட்டதால் அவளுக்கு தேவகுஞ்சரி – தெய்வ யானை என்று பெயர் வந்தது. சூரசம்ஹாரத்துக்குப் பிறகு முருகப்பெருமானுக்குத் தன் மகளான தேவகுஞ்சரியை மணம் செய்து வைத்தான் இந்திரன்.

இப்படி, தேவகுஞ்சரியின் தலைவனாகிவிட்ட முருகனை நாமும் நாளும் வணங்கி நலம் பெறுவோம்.

ஓம் வல்லீ பதயே நமோ நம:

வள்ளி அம்மையின் நாயகனாகிய முருகனுக்கு வணக்கம்.

திருமால் வியர்வையில் உதித்த சுந்தரவல்லி, முருகனை மணக்க வேண்டி நெடுங்காலம் தவம் இருந்தாள். அவளைப் பூலோகத்தில் பிறக்கப் பணித்தார் முருகப்பெருமான். அவளும் பூமியில் வள்ளிக் கிழங்கு அகழ்ந்தெடுத்த குழியில் குழந்தையாகத் தோன்றி, வேடன் நம்பிராஜனால் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டாள். தக்க தருணத்தில் முருகப்பெருமான் அருளாடல் புரிந்து அவளை மணந்துகொண்டார்.

அப்படி, செம்மான் மகளைக் கவர்ந்து மணந்த பெம்மான் முருகனை நாமும் வணங்கி வழிபட வேண்டும் என அறிவுறுத்துகிறது இந்த வரி.

ஓம் மல்ல பதயே நமோ நம:

மல்லர்களின் தலைவனான முருகனுக்கு வணக்கம்.

ஒருமுறை, பரசுராமரை மற்போரில் வெற்றி பெற்றாராம் முருகப்பெருமான். `பொங்கு வெங்குருதி மெத்த குதி கொள்ள வெம் சூரனைவிட்ட சுட்டியிலே குத்தி தரம்கொண்டு அமராவதி கொண்ட கொற்றவனே’ (கந்தரலங்காரம் பாடல் 35).

ஓம் அஸ்த்ர பதயே நமோ நம:

வேலாகிய தெய்விகப் படையின் தலைவனுக்கு வணக்கம். அந்த வேல், நடுவில் விசாலமும் நுனியில் கூர்மையும் ஆனது. முருகனை வணங்குவோர் கூரிய அறிவு கொண்டவர் ஆவோர்.

`வேலை வேண்டுவதே என் வேலை.’

`திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் எனது உள்ளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே’ என தினமும் போற்றி வழிபடுவோம்.

ஓம் சஸ்த்ர பதயே நமோ நம:

சஸ்திரம் எனப்படும் கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்.

போரில் கரத்தில் இருந்து விடுபடும் (ஏவப்படும்) ஆயுதம் அஸ்திரம் எனப்படும். வாள் போன்ற கை விடாப் படைகளுக்கு சஸ்திரம் என்று பெயர். இத்தகைய கை விடாப் படைகளைத் தனது கைகளினால் மேன்மையுறச் செய்த தலைவன் முருகனே ஆவான்.

ஓம் சஷ்டி பதயே நமோ நம:

புகழ்பெற்ற சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத நாயகனுக்கு வணக்கம். ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாள்களுக்கு சஷ்டி விரதத்தை மக்கள் அனுஷ்டிப்பர். தீயதை வென்று நல்லதை நிலைநாட்டிய இந்த சஷ்டி விரதத்தை நாமும் கடைப்பிடித்தால் நம்மைப் பிடித்த தீயது அத்தனையும் ஒழியும். நன்மைகள் பல உண்டாகும். நாம் விரும்பியது எல்லாம் நடக்கும். இந்த சஷ்டி விரதத்தின்போது சஷ்டி நாயகனாம் முருகனை வழிபடுவதும், கந்த புராணத்தைப் படிப்பதும் கேட்பதும் மிகவும் நன்மை பயக்கும்.

ஓம் இஷ்டி பதயே நமோ நம:

சிவாகம நெறிப்படி செய்யும் யாகங்களின் தலைவனான முருகனுக்கு வணக்கம்.

நம் இஷ்டங்கள் எல்லாம் இறைவனை முழு மனதுடன் உருக்கத்துடன் யாகம் செய்வதால் நிறைவேறுகின்றன என்பதால், வேள்விக்கு இஷ்டி என்று ஒரு பெயர் உண்டு.

ஓம் அபேத பதயே நமோ நம:

சத்தான சிவத்தினைச் சித்தான சக்தியினின்றும் வேறாக விளங்காமல் ஒன்றாய் காட்சியளிக்கும் இறைவனுக்கு வணக்கம்.

வேற்றுமை அற்ற தலைவனான முருகனுக்கு வணக்கம். விருப்பு, வெறுப்பு, சிறிது, பெரிது, அகம், புறம், இல்லார், உள்ளார் போன்ற வேற்றுமை அற்ற குகனுக்கு-  வேற்றுமை பார்க்காத குமரனுக்கும் நமஸ்காரம்.

ஓம் சுபோத பதயே நமோ நம:

மெய்ஞ்ஞானத்தை அளிக்கும் வள்ளலுக்கு வணக்கம்.

சத்து + சித்து + ஆனந்தம் = சச்சிதானந்தம், சத்தான சிவத்தையும் சித்தான சக்தியையும் ஆனந்தமாக உணரும் மெய்ஞ்ஞானம் பெற்றவர்களுக்குப் பிறவிப் பெருங்கடல் வராது. அத்தகைய மெய்ஞ்ஞானத்தை அளிக்கும் பரம்பொருளான முருகனுக்கு வணக்கம்.

ஓம் வியூஹ பதயே நமோ நம:

சேனைகளின் அணி வகுப்பான வியூகத்தின் படைத்தலைவனுக்கு வணக்கம்.

சூரனின் வதைபடலம் நடந்த போரில் பல வகையான வியூகத்துக்குப் படைத் தலைவனானத் திகழ்ந்த கந்தனுக்கு வணக்கம்.

கந்தன் என்றால் பகைவர் வலிமையை வற்றச் செய்பவன் என்று பொருள். தேவ சேனாதிபதிக்கு அரோஹரா!

ஓம் மயூர பதயே நமோ நம:

மூல மந்திர ரூபமான பிரணவ மயில், இந்திரனாகிய மயில், சூரனாகிய மயில் என்ற இந்த மூன்று மயில்களின் தலைவனான வேலனுக்கு வணக்கம். முருகன் காட்சி தரும் முன்பு மயில் காட்சி தென்படும். பாம்பன் சுவாமிகள் கால் முறிவு அடைந்தபோது முதலில் அவருக்கு மயில் காட்சி தெரிந்தது. பின் ஒரு குழந்தை அவர் பக்கத்தில் இருந்தது. அந்த மயில் அவருடைய கால் முறிவைச் சரிப்படுத்தியது. குழந்தையாக அவரருகில் நின்ற முருகனும் மயிலும் மறைந்தனர்.

ஓம் பூத பதயே நமோ நம:

பூத கணங்களின் தலைவனான முருகனுக்கு வணக்கம். முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு தேவ சேனாதிபதியாகப் படையெடுத்துச் சென்றபோது, 1000 பூத கணங்களும் லட்சம் வீரர்களும் படையில் இருந்தனர். அவர்களின் தலைவனாக முருகன் இருந்து போரில் சூரன், தாரகன், சிங்கமுகனை வென்றார்.

ஓம் வேத பதயே நமோ நம:

வேதத்துக்குத் தலைவனான முருகனுக்கு நமஸ்காரம்.

ஓம் புராண பதயே நமோ நம:

பழம்பெரும் புராணங்களின் தலைவனான கந்தனுக்கு வணக்கம்.

கந்தபுராணம் எல்லா புராணங்களிலும் சிறப்பு வாய்ந்த புராணம். இதைப் படிப்பவர்களுக்கு பல கோடி நன்மைகள் வரும். அவர்கள் நினைத்தது நடைபெறும். அத்தகைய புராணத்தின் தலைவனான முருகனை வணங்கச் சொல்கிறது இந்த வரி.

ஓம் பிராண பதயே நமோ நம:

ஆன்ம நாதனாகிய முருகனுக்கு வணக்கம்.

இந்த உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் முருகனே உயிர் நாடியாகத் திகழ்கிறார். அவரை வழிபட்டு வரம் பெற வேண்டும்.

ஓம் பக்த பதயே நமோ நம:

பக்தர்களின் தலைவனான முருகனுக்கு வணக்கம். முருகப்பெருமான் பக்தர்களின் பிரியமானவனாக இருந்து வருகிறான். அருணகிரியார், ராமலிங்க அடிகளார், நக்கீரர், பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், சிதம்பரம் சுவாமிகள் முதலான பக்தர்களின் பிரியத்துக்கு உகந்தவனும், அவர்களின் தலைவனுமாகத் திகழும் முருகப் பெருமானை வணங்கிட, நாடி வந்து அருள்புரிவான் முருகன்.

ஆம்! முருகனை உள்ளமுருக தியானித்து அவன் புகழான திருப்புகழ் பாடி, ஆடி, அவனை அடைய முடியும். அப்படிப்பட்ட பக்தர்களில் அருகில் வந்து அவர்கள் குறை தீர்ப்பான் குமரன்.

ஓம் முக்த பதயே நமோ நம:

முக்தியை தரும் முருகனுக்கு நமஸ்காரம்.

சதா சர்வ காலமும் முருகனுடைய பாதத்தை நம் மனதினில் ஏற்றி வழிபடுவோம்; அவரருளால் முக்தி வசப்படும். ‘முடியாப் பிறவிக் கடலில் புகார்’  எனும் கந்தரலங்காரப் பாடல் வரிக்கேற்ப, மறுபிறவியில் சிக்கிக் கொள்ளாது, முருகனின் திருவடிப்பேற்றைப் பெறலாம்.

ஓம் அகார பதயே நமோ நம:ஓம் உகார பதயே நமோ நம:

ஓம் மகார பதயே நமோ நம:

ஓம் என்பது பிரணவ மந்திரம். இதில் அ, உ, ம என்று மூன்று எழுத்துகள் உள்ளன. ஓ – அகாரம் ஓ – உகாரம் ம – மகாரம்.

இந்த பிரணவத்தின் தலைவனான முருகனுக்கு நமஸ்காரம். பிரம்மதேவன் ஆணவத்துடன் முருகனை வணங்காமல் சென்றபோது, அவரது செருக்கை அடக்க முருகன் பிரணவத்தின் அர்த்தத்தை கேட்டான். அதற்கு விளக்கம் அளிக்க முடியாமல் பிரம்மன் விழித்தபோது “படைப்பதற்கு அடிப்படையாய் உள்ள பிரணவத்தை பற்றியே அறியாதபோது படைப்புத் தொழில் எங்ஙனம் செய்ய முடியும்” என்று கூறி அவர் தலையில் குட்டி, சிறை எடுக்குமாறு கணங்களிடம் கூறினார். அப்படிச் சிறையில் இருந்தபோது பிரம்மன் அறிவு தெளிந்து செருக்கு அகன்று முருகனை நோக்கி தவம் இருந்தார்.

பின்னர், திருமால் பிரம்மனை விடுவிக்கும்படி சிவபெருமானை வேண்டிக்கொள்ள, சிவனார் தன் தூதர்களை அனுப்பி பிரம்மனை விடுவிக்கும்படி கூறினார். முருகன் மறுக்க, பெரும் போர் அங்கே நிகழ்ந்தது. தேவர்கள் அத்தனை பேரும் தோற்க, அங்கே எல்லோரையும் ஒரு நொடிப்பொழுதில் முருகன் வீழ்த்தி விட்டார்.

பிரம்மன் படைப்புத் தொழில் செய்யாததால் இருந்த துன்பத்தைப் போக்க தானே படைப்புத் தொழிலைச் செய்தார். அவர் படைத்த உயிர்களின் மேன்மையை எப்படி சொல்லிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. பின் அவர் தொழிலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திருமாலும் ருத்ரனும் தவித்ததால், முருகப்பெருமானே காத்தல், அழித்தல் போன்ற தொழில்களைச் செய்து, `இவ்வுலகில் முத்தொழிலையும் செய்யும் பரமன் முருகனே’ என்பதை சந்தேகம் இல்லாமல் நிரூபித்தார்.

பின் சிவபெருமானே நேரில் வந்து பிரம்மனை விடுவிக்கும்படி கூற, மறுகணம் பிரம்மனை விடுதலை செய்ய ஆணையிட்டார் முருகன். பின்னர் சிவனார், `பிரணவ மந்திரத்தின் பொருள் என்ன’ என்று உரைக்கும்படி முருகனிடம் கேட்க, ஆசானைப் போல் அமர்ந்து பிரணவப் பொருளை உபதேசித்து, தந்தைக்கு உபதேசித்த ஞானகுரு ஆனார். இந்தக் காட்சியைக் கண்ட தேவர்கள் மெய்சிலிர்த்து `சம்போ மஹாதேவா! ஞானகுருவே போற்றி!’ எனப் பலவாறு இருவரையும் துதித்தனர். இது நடந்த இடம் சுவாமிமலை.

அகாரம், உகாரம், மகாரம் என்று பிரிந்த மூன்றும் முறையே ஆக்கல், காத்தல், அழித்தல் என்று முத்தொழில்களையும், அதைச் செய்யும் மூர்த்திகளான அயன், அரி, அரன் என்பவர்களையும் உணர்த்தும். அவர்களின் தலைவனான முருகனுக்கு வணக்கம்.

ஓம் விகாச பதயே நமோ நம:

எங்கும் நீக்கமற நிறைத்து இருக்கும் முருகனுக்கு நமஸ்காரம்.

இட எல்லை, கால எல்லை, பிறப்பு, இறப்பு, மூப்பு என்பவை இல்லாமல் எங்கும் நிறைந்துள்ள குருபதி விகாசி ஆகும். அதற்குத் தலைமையாக எப்போதும் பெரும் மகிழ்வோடு ஒளியாகத் திகழும் ஓங்கார குருவுக்கு நமஸ்காரம்.

ஓம் ஆதி பதயே நமோ நம:

உலகில் எல்லா பொருள்களும் படைப்புகளும் தோன்ற காரணகர்த்தவாக விளங்கும் வேலனுக்கு வணக்கம். `ஆதி ஆம் கயிலைச் செல்வன் அணிநெற்றி தன்னைக் காக்க தாது அவிழ் கடப்பன் தாரன் தான் இருநுதலைக் காக்க காக்க சோதி ஆம் தணிகை ஈசன் துரிசிலா விழியைக் காக்ககார்த்திகேயன் நாசியை நயந்து காக்க’ எனப் போற்றுகிறது சண்முகக் கவசம்.
ஓம் பூதி பதயே நமோ நம:

எல்லா ஐஸ்வர்யத்துக்கும் அண்டங்களுக்கும் நாயகனான முருகனுக்கு வணக்கம். அருட் செல்வம், பொருட் செல்வம், மக்கள் செல்வம் போன்ற பல்வேறு செல்வங்களை அள்ளி அள்ளி வழங்கும் வள்ளலுக்கு நமஸ்காரம் என்று சொல்லி முருகனை வழிபட, அனைத்தையும் அளவின்றி வழங்குவார் முருகப்பெருமான்.

ஓம் அமார பதயே நமோ நம:

அழிவற்று எங்கும் நீக்கமற நிறைந்துள்ள குமரனுக்கு நமஸ்காரம்.

ஓம் குமார பதயே நமோ நம:

என்றும் குமரனாகிய முருகனுக்கு வணக்கம். சத்தாகிய சிவத்துக்கும் சித்தாகிய சக்திக்கும் நடுவில் ஆனந்தமாய் சோமாஸ்கந்தராய் வீற்றிருக்கும் முருகனுக்கு நமஸ்காரம்.

வைகாசி விசாகம், சஷ்டி தினங்கள், தை மற்றும் ஆடிக் கிருத்திகை நாள்களில் இந்தக் குமாரஸ்தவம் துதியைப் பாடி முருகப் பெருமானை வழிபட்டால், சகல சுபிட்சங்களும் உண்டாகும்.


Venkatachalam Subramanian

unread,
Aug 22, 2017, 12:34:43 PM8/22/17
to palsuvai

உதயச்சந்திரன் இ.ஆ.ப

கல்வித்துறைச் செயலராக சமீபத்தில் பொறுப்பேற்றிருக்கும் திரு. உதயச்சந்திரனின் பழைய நேர்காணல் ஒன்று இன்னமும் நினைவில் இருக்கிறது. உதயச்சந்திரன் நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர். நடுத்தரக் குடும்பம். அவருடைய பள்ளி ஆசிரியர் ஒருவர் பாடத்தைத் தொடங்குவதற்கு முன்பாக ‘பஞ்சாப் மாநில முதல்வர் யார்?’ என்கிற ரீதியில் கேள்விகளைக் கேட்டுத்தான் பாடங்களை ஆரம்பிப்பாராம். அந்த ஆசிரியருக்கு பதில் சொல்வதற்காகவே நாளிதழ்களை வரிவிடாமல் படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டதாக நினைவில் வைத்துச் சொல்லியிருந்தார். அதுதான் உதயச்சந்திரனுக்கு பொது அறிவு மீது ஈர்ப்பை உண்டாக்கியிருக்கிறது. நேர்காணலைப் படித்த அன்றிலிருந்து இன்று வரையிலும் உதயச்சந்திரனைவிடவும் அந்த ஆசிரியர் மனதுக்குள்ளேயே நிற்கிறார். 

ஆசிரியருக்கு ‘இவன் கலெக்டர் ஆவான்’ என்று தெரிந்திருக்காமல் இருக்கலாம். பாடம் நடத்துவது மட்டும்தான் அவரது கடமை. ‘முதல்வர் யார்?’ என்று கேட்பது கடமையைத் தாண்டி அவர் கொளுத்திய ஒரு திரி. அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு நிமிடத்தை அவர் இதற்காக ஒதுக்கியிருக்கக் கூடும். அந்த ஒரேயொரு நிமிடம் சமூகத்திற்காக, தனது மாணவர்களுக்காக சிந்தித்திருக்கிறார் அல்லவா? அது இன்றைக்குத் தமிழகத்தின் முக்கியமான ஆளுமையை உருவாக்கியிருக்கிறது. ஆசிரியர்களுடன் பேசுகிற வாய்ப்பு கிடைக்கும் போது இந்த உதாரணத்தை சுட்டிக்காட்டுவதுண்டு. தினசரி ஐந்து நிமிடம் ஆசிரியர்கள் தமது கடமையைத் தாண்டிச் சிந்தித்தால் போதும். அது மிகப்பெரிய விளைவுகளை உண்டாக்கிவிடக் கூடும். மாதாவுக்கும் பிதாவுக்கும் பிறகு குருதான் என்று சொன்னதில் அர்த்தமில்லாமல் இல்லை.

உதயச்சந்திரன் ஈரோடு மாவட்டத்தில் சாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்பக்கல்லூரியில் பொறியியல் படித்தவர். அப்பொழுதிருந்தே அவரது கனவு ஐ.ஏ.எஸ். நம் ஊரில்தான் வித்தியாசம் பார்க்காமல் சகலரையும் கலாய்ப்பார்கள் அல்லவா? உதயச்சந்திரனை மட்டும் விடுவார்களா? அவர் தங்கியிருந்த கல்லூரியின் விடுதி அறையில் சக மாணவர்கள் நக்கலாக ‘ஜில்லா கலெக்டர்’ என்று எழுதி வைத்திருக்கிறார்கள். சில வருடங்களுக்குப் பிறகாக தமது கல்லூரிக்குச் செல்கிறார். பழைய நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்வதற்காகக் தான் தங்கியிருந்த அதே விடுதி அறைக்குச் சென்று பார்க்கிறார். அப்பொழுதும் ‘ஜில்லா கலெக்டர்’ என்ற எழுத்துக்கள் மங்கிப் படிந்திருந்திருக்கின்றன. ஆனால் அப்பொழுது அவர் அதே ஈரோடு மாவட்டத்துக்கு உண்மையிலேயே ஜில்லா கலெக்டர் ஆகியிருந்தார். மிக இளம்வயதில் ஐ.ஏ.எஸ் தேர்வுகளில் வென்றவர்களில் உதயச்சந்திரனும் ஒருவர். 1995 ஆம் ஆண்டு அவர் தேர்ச்சியுற்ற போது அவரது வயது 23.


ஈரோடு மாவட்டத்திற்கு எப்பொழுதுமே ஒரு ராசி உண்டு. உதயச்சந்திரன் மாதிரியான அட்டகாசமான ஆட்சியர்கள் அத்திப்பூத்தாற்போல வந்துவிடுவார்கள். 

சமீபத்தில் எங்கள் ஊரைச் சார்ந்த பனைமரம் ஏறு தொழிலாளியின் மகன் ஒருவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர். குடும்பத்தில் வறுமை. அப்பனைச் சிரமப்படுத்தாமல் ஏதாவதொரு படிப்பில் சேரலாம் என்று நினைத்திருக்கிறார். அப்பொழுது உதயச்சந்திரன்தான் ஈரோடு மாவட்ட ஆட்சியர். அந்தச் சமயத்தில் ஏகப்பட்ட மாணவர்களுக்கு வங்கிகளில் கல்விக்கடன் கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். வங்கிகள் தயங்கிக் கொண்டிருந்த சமயத்தில் கிட்டத்தட்ட நூற்றுப்பத்து கோடி ரூபாய் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கல்விக்கடனாக விநியோகம் செய்ய வழிவகை செய்து கொடுத்தவர் அவர்தான். அதில் பலனடைந்தவர்களில் பனைமரத் தொழிலாளியின் மகனும் ஒருவர். இப்பொழுது இஸ்ரோவில் பணியில் இருக்கிறார். ‘கலெக்டர் கல்வித்துறைக்கே வந்துட்டாரு’ என்று அவ்வளவு பூரிப்பு அவருக்கு.

உரமானியம் என்ற பெயரில் அரசாங்கம் உர நிறுவனங்களுக்கு பணத்தைக் கொடுத்துவிட நிறுவனங்களிலிருந்து விவசாயிகளுக்கு உரங்கள் நேரடியாக வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இதில் நடக்கும் குளறுபடிகளைக் களைய ‘விவசாயிகளுக்கே நேரடியாக பணத்தைக் கொடுத்துடுங்க..என்ன உரம் வாங்கணும்ன்னு அவங்களே முடிவு செஞ்சுக்கட்டும்’ என்று கமிஷன் அடித்துக் கொண்டிருந்தவர்களின் கண்களைக் கட்டி காட்டுக்குள் விட்டார். எங்கள் ஊர் விவசாயிகள் இன்னமும் சொல்லிக் காட்டுகிறார்கள்.

ஆட்சியராக இருந்த காலத்தில் வறட்சி நிலவும் பகுதிகளில் சொட்டு நீர் பாசனத்திற்கு அவர் அளித்த முக்கியத்துவம், நூலகங்களை மேம்படுத்தி பராமரிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் உள்ளிட்டவற்றை இன்னமும் ஊர்ப்பக்கம் பேசிக் கொண்டிருக்கிற ஆட்களைப் பார்க்க முடியும். இப்படி கிராமப்புற மேம்பாடு, கல்வி, நிர்வாகம் உள்ளிட்ட பல தளங்களில் கலக்கிக் கொண்டிருந்தவர் உதயச்சந்திரன். 

மதுரை மாவட்டத்தில் கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை மறந்திருக்க முடியாது. தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட தனிப்பஞ்சாயத்துக்களாக மாற்றப்பட்ட பிறகு தேர்தலே நடத்தவிடாமல் செய்து கொண்டிருந்தார்கள். மீறி தேர்தல் நடத்தினால் பதவியேற்ற அதே தினத்தில் தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிடுவார்கள். அந்தச் சமயத்தில் மதுரை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்று அந்த ஊராட்சிகளில் தேர்தலை நடத்தி தலைவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களைத் தொடரச் செய்ததும் உதயச்சந்திரன்தான். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுவுக்கு பிரச்சினை வந்த போது மாவட்ட நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் உத்தரவாதம் கொடுத்து ஜல்லிக்கட்டுவை நடத்தினார்.

உதயச்சந்திரன் குறித்து நிறையச் சொல்ல முடியும்.  வெறுமனே அவரைப் புகழ்வது நோக்கமில்லை.

உதயச்சந்திரன் கல்வித்துறைச் செயலாளராக பதவியேற்கிறார் என்று தெரிந்தந்திலிருந்தே மகிழ்ச்சியாக இருந்தது. இன்றைக்கு தமிழகத்தில் அதிகளவிலான சீரமைப்புத் தேவைப்படுகிற துறை அதுதான் அல்லவா?. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிகார மட்டத்தினால் வழங்கப்பட்ட சலுகைகளின் காரணமாக அரசுப்பள்ளிகள் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றன. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்டிக்கக் கூடாது, மிரட்டக் கூடாது என்று ஆயிரத்தெட்டுக் கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் தனியார் பள்ளிகளில் எதையும் கண்டுகொள்ளமாட்டார்கள். அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் மாணவர்களைச் சித்ரவதை செய்வார்கள். மாணவர்களை ப்ராய்லர் கோழிகளாக மாற்றி இரவு பகல் பாராமல் கண்விழிக்கச் செய்து மதிப்பெண்களைக் கக்க வைத்துவிடுவார்கள். நம் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடிச் செல்வதன் முக்கியமான காரணமே இதுதான். ‘அங்க மார்க் வாங்க வெச்சுடுறாங்க’ என்பார்கள்.

ஏன் வாங்க வைக்க முடியாது? தனியார் பள்ளிகளில்தான் ப்ளஸ் ஒன்னிலிருந்தே ப்ளஸ் டூ பாடத்தைத்தானே படிக்கிறார்கள். இரண்டு வருடங்களாக உருவேற்றப்படும் அவர்கள் அதிக மதிப்பெண்கள் வாங்குவார்களா அல்லது ஒரேயொரு வருடம் மட்டும் எந்தக் கண்டிப்புமில்லாமல் பனிரெண்டாம் வகுப்புப் பாடங்களைப் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் மதிப்பெண்கள் வாங்குவார்களா? இத்தகைய தகிடுத்தங்களுக்கு முட்டுக்கட்டை போடும்விதமாக பதினொன்றாம் வகுப்பையும் பொதுத்தேர்வாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை கல்வித்துறையில் தொடங்கியிருக்கிறார்கள். ப்ளஸ் டூ பாடத்தை ப்ளஸ் டூவில் மட்டும் படிக்கட்டும். அற்புதமான நடவடிக்கை இது. ஆயிரம் கும்பிடு போடலாம்.

தனியார் பள்ளிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கப்படும் சலுகைளை ஒழுங்குபடுத்தி வழிக்குக் கொண்டுவந்தாலே போதும். அரசுப்பள்ளிகள் ஜொலிக்க ஆரம்பித்துவிடும்.

தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளி ஆசிரியர்களைவிடவும் எந்தவிதத்திலும் மோசமானவர்கள் இல்லை. ஆனால் அவர்களது கைகளை அவிழ்த்துவிட வேண்டும். மாதம் ஒரு முறையாவது ‘பயிற்சி’ என்று அவர்களை அழைத்து வைத்து கல்வி அதிகாரிகள் தாளிக்கிறார்கள். ஆசிரியர்களிடம் பேசினால் கதறுகிறார்கள். பெரும்பாலானவை தேவையற்ற பயிற்சிகள் அல்லது தூக்கம் வரவழைப்பவை. ஆசிரியர்களுக்கு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு உருப்படியான பயிற்சிகளைக் கொடுத்தால் போதும். பயிற்சியரங்கில் எதைச் சொல்லித் தர வேண்டும், சொல்லித்தருகிற ஆளுமை யார் என்பதையெல்லாம் தெளிவுடன் வடிவமைத்து பயிற்சிகளின் எண்ணிக்கையைக் குறைத்து ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் கவனம் செலுத்தச் செய்வதுதான் இன்றைக்கு முக்கியமான காரியமாகத் தெரிகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் இப்பொழுதெல்லாம் ஊழியர்களுக்கான பயிற்சிகளை மிகத் தெளிவாகத் திட்டமிட்டுச் செயல்படுத்துகின்றன. பயிற்சிகளின் எண்ணிக்கையைவிடவும் effective என்பதில்தான் குறியாக இருக்கிறார்கள். அதையே அரசுத்துறைகளும் பின்பற்றினால் சிறப்பாக இருக்கும்.

உதயச்சந்திரன் சவாலான தருணத்தில்தான் கல்வித்துறைக்கு பொறுப்பேற்றிருக்கிறார். சிபிஎஸ்இ பாடங்களுக்கு இணையாக தமிழக பாடத்திட்டங்களை மாற்றுவது, நீட் தேர்வு உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளை எதிர்கொள்ள நம்மிடம் இருக்கும் தடைகளைக் கண்டறிதல் (Gap analysis) என நிறைய வேலைகள் இருக்கின்றன. ஆனால் அவரால் இந்தத் துறையில் மறுமலர்ச்சியை உண்டாக்கிவிட முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. சமீபத்தில் ஆசிரியர்களின் சங்கங்களை அழைத்து ‘இந்தத் துறையில் என்ன தேவை?’ என்று எழுத்துப் பூர்வமாக எழுதித் தரச் சொல்லியிருக்கிறார். மேல்மட்ட அதிகாரியொருவர் இறங்கி வந்து பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதற்கான எத்தனங்களைத் தொடங்குவதே பாஸிடிவ்வான விஷயம். 

கல்வித்துறையில் செயலராக உதயச்சந்திரன், இயக்குநர்களாக செ.கார்மேகம், இளங்கோவன் உள்ளிட்டவர்கள் இணைந்த அற்புதமான அணி அமைந்திருக்கிறது. அவர்களுக்கான சுதந்திரத்தை அரசு வழங்கினால் பெருமளவு சீரமைப்புகளைச் செய்துவிடுவார்கள். நம்பிக்கை துளிர்த்திருக்கிறது. தமக்குக் கீழாக இத்தகையதொரு அணியை அமைத்துக் கொண்ட அமைச்சருக்கும் வாழ்த்துக்கள். கல்வித்துறையைக் காப்பாற்றுங்கள் அய்யா! இன்றைக்கு அதுதான் சீரழிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.
Reply all
Reply to author
Forward
0 new messages