துபாய்க்கு வேலைக்கு சென்ற கணவர் 20 ஆண்டுகளாக சொந்த ஊர் திரும்பவில்லை
கண்டுபிடித்து தர ஈமான் அமைப்புக்கு மனைவி கோரிக்கை
இராமநாதபுரம் :
துபாய்க்கு வேலைக்கு சென்ற கணவர் 20 ஆண்டுகளாக சொந்த ஊர் திரும்பவில்லை. அவரை கண்டுபிடித்து தர ஈமான் அமைப்புக்கு அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளி. இவரது கணவர் சேகர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் உள்ள நிறுவனம் ஒன்றுக்கு வேலைக்காக சென்றார். ஆனால் இதுவரை அவர் சொந்த ஊருக்கு திரும்பவில்லை. இவரை தேடுவதற்காக பலமுறை முயற்சி செய்தும் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்து வருகிறது.
துபாயில் உள்ள ஈமான் அமைப்பின் மனிதாபிமானப் பணிகள் குறித்து இராமநாதபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பரக்கத் அலி கான் மற்றும் பொறியாளர் நஜுமுதீன் ஆகியோர் மூலம் வள்ளி குடும்பத்தினர் கேள்விப்பட்டனர்.
இதனையடுத்து வள்ளி மற்றும் சேகரின் சகோதரிகள் ஆகியோர் ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத்திடம் சேகரை கண்டுபிடித்து தங்களது குடும்பத்தினரிடம் மீண்டும் இணைத்து வைக்க கோரிக்கை மனு அளித்தனர்.
இதற்கான முயற்சிகள் துபாயில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு சேகர் மீண்டும் குடும்பத்தினரிடம் சேர்த்து வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.