முதலை
பொற் காலத்துக்கும் கற் காலத்துக்கும் முன்பு இந்த உலகில் வாழ்ந்த மிருகங்கள் டைனோஸார்ஸ் (Dinosaurs) எனப்படும் மிருகங்கள். அவை சுமார் அறுபத்தைந்து மில்லியன் வருடங்களுக்கு முன்பு இந்த உலகில் இருந்து மறைந்து விட்டன. ஆனால் அதே கால கட்டத்தில், அதாவது சுமார் 200 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்து, வாழ்ந்து வந்த இரு உயிரினங்கள் இன்றும் வாழ்கின்றன்.
அவற்றில் ஒன்று கரப்பான் பூச்சி. மற்றொன்று முதலை.
முதலை குளிர்ந்த ரத்தம் கொண்ட ஒரு பிராணி. அதாவது நம் உடல் நிலை போன்று அதன் உடலின் உஷ்ணம் ஒரே நிலையில் இல்லாது வெளி உஷ்ணத்தைப் பொருத்து இருக்கும், பாம்பு, பல்லி போன்று.
பல்லி, ஓணான், உடும்பு போல முதலை ஒரு ஊர்வன வகுப்பைச் சேர்ந்த பிராணி. இது வாழ்வது நீரில், முக்கியமாக ஆறுகளிலும் ஏரிகளிலும்.
உப்பு நீரில் வாழும் முதலைகளும் உள்ளன.
முதலைகளில் முக்கியமாக ஏழு எட்டு பிரிவுகள் உள்ளன. இவை:
1. ஆஸ்திரேலியா கண்டத்தில் காணப்படும் நல்ல நீர் மற்றும் உப்பு நீர் முதலைகள்,
2. ஆசியக் கண்டத்து முதலைகள்
3. கங்கை வாழ் கடியால் (Gangetic Ghariyal),
4. ஆப்பிரிக்காவில் காணப்படும் நைல் நதி முதலை,
5. ஆப்பிரிக்கச் சிறிய முதலை (African dwarf crocodile)
6. அமெரிக்க முதலை,
7. அமெரிக்க அலிகேடர்
8. தென் அமெரிக்காவில் காணப்படும் கெய்மான் என்ற முதலை
சுமார் ஆறடி நீள முள்ள ஆப்ப்ரிக்க சிறிய முதலையில் இருந்து ஆஸ்திரேலியா, இந்தியாவில் காணப்படும் 20 - 23 அடி நீளம் வரை வளரக் கூடிய முதலைகள் வரை இதில் அடக்கம்.
உலகில் இன்று வாழும் முதலைகளிலேயே மிக நீளமான முதலை என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள முதலை நம் நாட்டில் ஒரிஸ்ஸா மானிலத்தில் பிதர்கணிகா வன விலங்கு சர்ணாலயத்தில் உள்ள 23 அடி நீளமுள்ள உப்பு நீர் வாழ் முதலை தான்.
.
Large Saltwater Crocodile in captivity in Australia
கங்கை நதியில் வாழும் கடியால் என்ற நீண்ட வாய் கொண்ட முதலை. ஆண் கடியாலின் மூக்கின் மேல் ஒரு டென்னிஸ் பந்து போன்ற அமைப்பு இருக்கும்.
அமெரிக்காவில் காணப்படும் அலிகேடர் முதலை
http://en.wikipedia.org/wiki/File:Two_american_alligators.jpg
அமெரிக்க முதலை
http://en.wikipedia.org/wiki/File:Crocodylus_acutus_mexico_02-edit1.jpg
ஆப்பிரிக்கச் சிறு முதலை – அதிக பட்ச நீளம் 6 அடி
http://en.wikipedia.org/wiki/File:Osteolaemus_tetraspis_fg01.JPG
முதலைகள் நீரில் வெகு வேகமாக நீந்தக் கூடியவை. நீந்தும் போது கால்ககளை உடலோடு பக்க வாட்டில் மடித்துக் கொண்டு செல்லும். வாலினை இப்படியும் அப்படியுமாக ஆட்டியும் சில சமயங்களில் கால்களை துடுப்பு போல சட்டென இப்படி அப்படித் திரும்ப உபயோகித்தும் தண்ணீரில் வெகு வேகமாக நீந்தும்.
முதலைகளின் உணவு மீன், தவளை , பறவைகள், ஆடு, மாடு, மான், நீர் யானை போன்ற பெரிய மிருகங்கள். ஏன் மனிதனும் கூடத்தான். முதலையைப் பொறுத்த வரை மனிதன் மற்ற மிருகங்களைப் போல ஒரு மாமிசப் பிண்டமே.
இவை தன் இரையியனைத் தேடுவதற்காக எங்கும் அலைவதில்லை.
கரை ஓரத்தில் உடலை நீருக்குள் மறைத்துக் கொண்டு மூக்கின் ஓட்டை மட்டும் வெளியே இருக்குமாறு வைத்துக் கொண்டு நீர் குடிக்க வரும் அப்பாவி விலங்குகளுக்காக காத்திருக்கும். அம் மிருகங்கள் நீர் குடிக்க ஆரம்பிக்கும் போது மின்னல் வேகத்தில் அவற்றின் தலையையோ காலையோ கவ்விப் பிடித்து நீருக்குள் இழுத்துச் சென்று பல முதலை களாகச் சேர்ந்து கடித்துக் குதறித் தின்று விடும்.
சில பறவைகள். உணவு உண்ணும்போது சிறு கற்களையும் உண்ணும். இது அவை உண்ணும் உணவினை அறைப்பதற்காக. முதலையும் சிறு கற்களை உண்ணுமாம். அப்படி உண்பது உணவினை அறைப்பதற்காக மட்டும் அல்ல. நீரில் தேவையான அளவு உடலை மூழ்கி இருக்குமாறு வைத்துக் கொள்வதற்காகவும் என்று சொல்கின்றனர் விஞ்ஞானிகள்.
முதலைகளின் வாழ்க்கை முறையில் மிகக் குறைவான் உடற் பயிர்ச்சியே உள்ளதால் அவை பல நாட்கள் உணவில்லாமல் இருந்தாலும் அதற்கு ஒன்றும் ஆவதில்லை.
ஊர்வன வகையைச் சேர்ந்த பாம்புக்கு காது கிடையாது. முதலைக்கு? காதுகள் கட்டாயம் உண்டு. மிகக் குறைந்த சத்தத்தினையும் கேட்கும் திறன் கொண்டவை அவை. ஆனால் அந்தக் காதுகள் சாதாரணமாக பட்டையான தசை நார்கள் கொண்ட ஒரு தோலினால் மூடப் பட்டிருக்கும். தேவையான போது அந்தப் பட்டையினை மேலே தூக்கிக் கொள்ள முடியும் முதலையால்.
சாதாரணமாக தன் மூக்கை மட்டும் நீருக்கு வெளியே வைத்துக் கொண்டு மிதந்து கொண்டிருக்கும் முதலை நீருக்குள் செல்லும் போது தணணீர் உள்ளே சென்று விடாமல் இருப்பதற்கு உதவியாக மூக்கு துவாரத்தினை மூடிக்கொள்ளும் வசதி படைத்தது. தொண்டையிலும் நீர் உள்ளே புக முடியாதபடி மூடிக் கோள்ளும் சதை இருக்கும்.
பச்சோந்தி சாட்டை போன்ற தன் நாக்கை சுமார் 10சென்டி மீடர் தூரத்திற்கு மின்னல் வேகத்தில் நீட்டி பசை கொண்ட நுனி நாக்கால் ஈக்களையும், மற்ற பூச்சிகளையும் பிடித்துத் தின்னும். உடும்போ பாம்பு போன்று தன் நாக்கினை சற்று நேரத்திற்கு ஒரு தரம் வெளியே நீட்டும். ஆனால் அதே ஊர்வன இனத்தை சேர்ந்த முதலையால் தன் நாக்கினை வெளியே நீட்ட முடியாது. காரண்ம் அது அடித் தாடையோடு கிட்டத் தட்ட ஒட்டிக் கொண்டிருப்பது தான். நாக்கினை நீட்டும் வசதி படைத்திருந்தால் 32 பற்களைக் கொண்ட நாம் சில சமயம் நாக்கை கடித்துக் கொள்வதுபோல் பல கூரிய பற்களை கொண்ட முதலை அடிக்கடித் தன் நாக்கைக் கடித்துக் கொண்டு விடுமோ!!!
மனிதனும் மற்ற எல்லா மிருகங்களும் தனது அடித் தாடையை அசைத்துதான் தனது வாயைத் திறக்க முடியும். ஆனால் முதலையோ தனது மேல் தாடையைத் தான் திறக்கும்.
முதலை கவ்விய மிருகத்தினைக் கடித்து மாமிசத்தைப் பிய்த்தெடுக்க உலகில் உள்ள மற்ற எல்லா மிருகங்களையும் விட அதிக அளவிலான வலுவுடன் கடிக்கும்.
சில மிருகங்கள் கடிக்கும் போது உபயோகிக்கப் படும் வலுவு
முதலை... ... ... ... சதுர அங்குலத்திற்கு 5,000 பவுண்டுகள்.
பெரிய வெள்ளை
சுரா மீன்... ... ... ... ,, 400 ,,
கழுதைப் புலி... ... ... ,, 800 ,,
இவ்வளவு வலுவாக வாயை மூடும் வசதி கொண்ட முதலை தன் வாயைத் திறக்க மிக மிக வலுக் குறைவான தசைகளையே கொண்டது. அதனால் ஒரு காரின் ட்யூபில் இருந்து கத்தரித்து எடுத்த ஒரு வளையத்தினைக் கொண்டு அதன் வாயைக் கட்டி விட முடியும்.
பகல் போழுதில் முதலை நீருக்கு வெளியே வந்து ஆற்றங்கரை மணல் தீட்டின் மீதோ பாறையின் மீதோ வாயைப் பிளந்தபடி வைத்துக் கொண்டு படுத்துறங்கும். ஆனால் அது ஆழ்ந்த நித்திரை என்று சொல்ல முடியாது.
முதலைகள் வாய் பிளந்தபடி படுத்திருப்பது அதன் உடல் உஷ்ணத்தைத் தணித்துக் கொள்வதற்காக. சில சமயம் சீக்கிரமாக் உஷ்ணத்தைக் குறைக்க வெகு தூரம் ஓடிய நாய் போல மூச்சிறைக்கவும் செய்யும்.
(கர்னாடக மானிலம் மைசூரு அருகே ரங்கனத்திட்டு பறவைகள் சரணாலத்தில் காவிரி நதியில் கல்லின் மேல் வாயைப் பிளந்து கொண்டு தூங்கும் ஒரு ஆசிய முதலை)
(படம் பிடித்தது க. ந. நடராஜன்)
முதலைக் கண்ணீர் : முதலைகள் தரையில் இருக்கும் போது அவற்றின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருக்கும். இதனை தான் தின்ன பிராணிகளுக்காக அவை வருந்திக் கண்ணீர் விடுவதாகச் சொல்வதுண்டு. ஆனால் அது உண்மையில் அதன் கண்கள் வெய்யிலில் காய்ந்து விடாமல் இருப்பதற்கா இறைவன் அதற்களித்த ஒரு வசதி. (பிறர் படும் துன்பம் கண்டு வருந்துவது போல நடிக்கும் ஒருவரை ‘முதலைக் கண்ணீர் விடுகிறார்’ என்று சொல்வது நம் நாட்டில் மற்றும் இன்றி உலகம் பூராவும் வழங்கும் மறபு.)
முதலைகள் இனப் பெருக்கம் செய்வது முட்டை இட்டுக் குஞ்சு பொரித்து. முதலைகள் அவை வாழும் நீர் நிலை அருகே மண்ணில் குழி பறித்தோ அல்லது செடி கொடி இவற்றினைச் சேகரித்து அதனடுவேயோ முட்டைகள் இட்டு மண்ணைத் தள்ளி மூடி விடும். முட்டைகளை பறவைகள் போல் அடை காப்பதில்லை. அழுகும் தாவரங்களின் சூட்டிலோ மண்ணின் சூட்டிலோ முட்டைகளில் உள்ள கரு வளர்ச்சி அடையும். முட்டைகள் இட்ட முதலை பெரும்பாலும் அதன் அருகிலேயே இருந்து முடிந்த வரை முட்டைகளை பறவைகளோ மற்ற மிருகங்களோ தின்று விடாமல் பாது காக்கும்.
உங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஓணான் முட்டை இடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? ஓணான் தன் கால் விறல்களால் சிறிய குழி செய்து குழிக்கு மேல் நின்று கொண்டு முட்டைகளை இடும். இட்டு முடிந்த பின் மண்ணைத் தள்ளி மூடித் தன் தாடையால் கெட்டியாக திமிஸ் போட்டாற் போல கிடித்து விடும்.
முதலைகள் ஒரு தடவையில் சுமார் 30 முதல் 90 முட்டைகள் வரை இடும். முதலையின் முட்டைகள் பறவைகள் முட்டை போல கடினமான ஓடு கொண்டவை அல்ல. பாம்பு, ஓணான் இவற்றின் முட்டைகள் போன்றே மிருதுவான தோல் போன்ற உறையினைக் கொண்டது.
முதலைகளின் முட்டைகள் வாத்து முட்டை அளவில் இருக்கும்.
முதலை முட்டை இடுவதைப் பார்க்க கீழே உள்ள லிங்கினைச் சுட்டுங்கள்
http://www.youtube.com/watch?v=lxCNSCxAEcQ&NR=1
முட்டைக்குள் கரு முற்றிலுமாக வளர்ந்து குஞ்சுகள் வெளி வரத்த் தயாராக இருக்கும் போது அவை தானாகவே முட்டையின் தோலினைத் தன் முட்டைப் பல்லால் (மூக்கிற்கு மேல் முட்டையின் உறையைக் கிழித்துக் கொண்டு வெளி வருவதற்காக வளர்ந்திருக்கும் தடித்த தோல்) கிழித்துக் கொண்டு வெளியே வரும். அப்படி வேளியே வருவதற்கு முன் சிறிய உருமல் குரல் எழுப்பும். அதைக் கேட்ட தாய் முதலை ஓடி வந்து முட்டைகள் உள்ள இடத்தினைத் திறந்து குஞ்சுகளை மிக மிக மென்மையாகக் கவ்வி நீருக்குள் எடுத்துச் சென்று விட்டு விடும்.
சில சமயம் குஞ்சுகள் முட்டை உறையினைக் கிழித்துக் கொண்டு வர முடியா விட்டால் தாய் முதலை அதற்கும் உதவி செய்யும். எப்படி என்று பாருங்கள் கீழே உள்ள லிங்கினைச் சுட்டி.
http://www.youtube.com/watch?v=1sUdcuQ507U&NR=1
கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்று அறிய வேண்டுமா? நாம் செய்ய வேண்டிய தெல்லாம் கருத்தரித்தவரை மருத்த மனைக்கு அழைத்துச் சென்று நவீனக் கருவிகள் உதவியுடன் படம் பிடித்துப் பார்த்தால் போதும். முதலைகளுக்கு இது பொருந்தாது. காரணம் வேடிக்கையானது. முதலையின் முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சு ஆணாயிருக்குமா பென்னாயிருக்குமா என்பதை நிச்சயிப்பது கருவின் தன்மை அல்ல. அந்த முட்டையின் கரு வளரும் உஷ்ண நிலை பொருத்தது!!!
31.6 டிகிரி உஷ்ண நிலையில் வளரும் கருக்கள் ஆண் முதலைகளாகவும் அதற்குச் சற்று கீழோ மேலோ உள்ள உஷ்ண நிலையில் வளர்ந்தால் அந்தக் கரு பெண் முதலையாகவும் வளருமாம். இந்த உஷ்ண நிலையை விட மிக அதிகமாகவோ குறைவாகவோ உஷ்ணம் இருந்தால் முட்டைகள் அழுகி விடுமாம்.
முதலையின் தோல் மிகவும் தடிமனாகவும், ஆங்காங்கே அழகான் வரிசையில் தூக்கிக் கொண்டு இருக்கும் செதிள்கள் போன்ற அமைப்புடனும் கூடியது. இந்த அழகிய தோலே இதன் யமன். பல நாடுகளிலும் இதன் தோலுக்காகவும், இதன் மாமிசத்தை உண்பதால் இது போன்றே வலிமை உண்டாகும் என்ற தவறான எண்ணத்தினாலும் அதிக அளவில் இவை கொல்லப் படுகின்றன.
இப்படிக் கொல்லப் படுவதனால் இந்த உலகை விட்டே முதலைகள் அழிந்து விடும் அபாயம் உள்ளது என்பதை அறிந்து பல நாடுகளிலும் அவற்றைக் கொல்லுவது சட்டப் படி குற்றம் என அறிவிப்பதோடு நிற்காமல், அவற்றின் முட்டைகளை சேகரித்து செயற்கை முறையில் அடை காத்து குஞ்சு பொரிக்கச் செய்து, குஞ்சுகளை வளர்த்து அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்கப் பெரும் பாடு படுகின்றார்கள்.
முதலைகளை, அவை இயற்கையில் வாழும் இடங்களைப் போன்றே செயற்கையாக ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இடங்களில் வைத்துக் காப்பாற்றி அவை இடும் முட்டைகளைச் சேகரித்து 'இன்க்யுபேடர்' எனப்படும் சம உஷ்ணப் பெட்டிகளில் வைத்து குஞ்சு பொரிக்க வைக்கிறார்கள்.
முதலைப் பண்ணையில் முட்டைகளில் இருந்து வெளி வரும் குஞ்சுகள்
https://mail.google.com/mail/?ui=2&ik=63e88aac2b&view=att&th=123ad2d5ebb3225c&attid=0.1&disp=inline&zw
தானாக வெளிவர முடியாது தவிக்கும் குஞ்சுகளை வெளியே எடுத்து விடுகிறது செவிலித் தாயின் மென்மையனான கை விறல்கள்
.
சென்னையில் இருந்து 42 கிலோ மிடர் தூரத்தில் உள்ள முதலைப் பண்ணையில் முதலைகள்
தமிழ் நாட்டில் காவிரியின் பெரிய அணைக்கட்டருகே கிளிக்கூடு முதலைப் பண்ணை என ஒன்று உள்ளது. அங்கும் முதலைகளைக் காணலாம். ஆனால் சென்னை முதலை பண்ணை அளவல்ல அது.
அமெரிக்காவில் ஃப்ளாரிடா மாகாணத்தில் டேம்பா என்ற ஊரில் எனது அண்ணனின் பேரன் ஒருவன் வீடு கட்டி கிருகப் பிரவேசம் செய்தான். அங்கு சென்ற விருந்தினர் ஒருவர் தோட்டத்தில் முதலைகள் சர்வ சாதாரணமாக நடமாடுவதைக் கண்டு அதிந்தார்.
(டேம்பா, ஃப்ளாரிடாவில் கிருகப் பிரவேசம்)
(கேலிச் சித்திரம் வரைந்தது சேகர் என்ற க.சு.கிருஷ்ணன்)
இயற்கையில் தான் எத்தனை வினோதங்கள் இந்த வினோதங்களைப் படைத்த இறைவனுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.
16-09-09 நடராஜன் கல்பட்டு
(பி.கு.: இது ஒரு நேயர் விருப்பம். அன்பர் ஒருவர் சில முதலைக் குஞ்சுகளின் படங்களை அனுப்பி முதலை பற்றி தமிழில் ஒரு கட்டுரை எழுதுங்களேன் என்றார். அதன் விளைவே இக் கட்டுரை)
முதலை
(பி.கு.: இது ஒரு நேயர் விருப்பம். அன்பர் ஒருவர் சில முதலைக் குஞ்சுகளின் படங்களை அனுப்பி முதலை பற்றி தமிழில் ஒரு கட்டுரை எழுதுங்களேன் என்றார். அதன் விளைவே இக் கட்டுரை)