தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்!

891 views
Skip to first unread message

Geetha Sambasivam

unread,
May 7, 2009, 6:49:25 AM5/7/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

தாமிரபரணிக்கரையிலே சில நாட்கள்!

தாமிரபரணி மகாத்மியம் நூல் கிடைச்சதும் தான் எழுதணும்னு நினைச்சேன் நவ திருப்பதி பத்தி. ஆனால் புத்தகம் எங்கேயுமே கிடைக்கலை. போயிட்டு வந்து இரண்டு வருஷம் ஆயிடுச்சு. அப்போ எழுதி வச்ச குறிப்புகளும் கிடையாது. கொஞ்சம் நினைவில் இருந்தும், மற்றவை தலங்களின் வரலாற்றில் இருந்துமே எழுதணும். தாமிரபரணி மகாத்மியம் பற்றி ஒரு தளமே இருக்குங்கற தகவலும் பலமாதங்கள் முன்னால் கிடைச்சது. ஆனால் அதிலே விபரங்கள் அதிகமாய் அப்போ இல்லை. இப்போச் சேர்த்திருக்காங்க. முக்கியமாய் வைகாசி விசாகம் அன்னிக்குத் தாமிரபரணி நதியின் பிறந்தநாள்னு சொல்றாங்க. அது பற்றிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கலை. தேடறேன். தாமிரபரணி மகாத்மியம் புத்தகம் வெளியீட்டு விழா நடந்ததாய் தினமலர் செய்தி மட்டும் கிடைச்சது. இந்த வருஷம் தாம் மார்ச் பத்தாம் தேதி நெல்லையப்பர் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் நிகழ்ச்சி நடந்து புத்தக வெளியீடும் நடந்திருக்கின்றது. கூடிய சீக்கிரம் புத்தகம் வாங்கிடலாம்னு நம்பிக்கை வந்திருக்கு. அதுக்கு முன்னாலே தாமிரபரணி நதி பற்றிச் சில முக்கியமான தகவல்களைப் பார்க்கலாமா?

தாமிரபரணி நதி நதிகளுக்கெல்லாம் மூத்தது எனச் சொல்லப் படுகின்றது. எகிப்து நாட்டில் நைல் நதி கலாசாரம் எப்படிச் சிறந்து விளங்கிற்றோ அதே போல் தென்னாட்டில் தாமிரபரணி கலாசாரம் சிறந்து விளங்கி வந்தது. கி.பி 80-ல் பெரிபுளூசு நூலாசிரியரும், கிபி 150-. தாலமியும், கி.மு. 302-ல் மெகஸ்தனீஸும், கி.மு. 273-ல் அசோகச் சக்கரவர்த்தியும் தாமிரபரணி நதியைக் குறிப்பிட்டு எழுதி உள்ளனர். அசோகர் தன் கல்வெட்டில் தாம்பபன்னி என்று இந்த நதியைக் குறிப்பிட்டுள்ளதாய்த் தெரிய வருகின்றது.

நம்மாழ்வாரின் திருவாய்மொழியில், "பொருநை" என்ற பெயரிலும், சேக்கிழாரின் பெரியபுராணத்தில் "தன்பொருத்தப் புணல்நாடு" என்றும் அழைக்கப் படுகின்றது. முக்கூடல் பள்ளு, கலிங்கத்துப் பரணி, பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல்புராணம், குமரகுருபரரின் மீனாக்ஷி அம்மை பிள்ளைத் தமிழ் போன்றவற்றில் தாமிரபரணி நதியின் வர்ணனைகளைக் காணலாம். தாமிரபரணி பகுதிகளைப் பற்றி வியாசரின் மஹாபாரதமும், காளிதாசனின் ரகுவம்சத்திலும் கூறப்பட்டுள்ளது. தாமிரபரணிக் கரையின் தென் தமிழ்நாட்டில் முன்னாள் கிரேக்கர்கள், ரோமானியர்கள், போர்ச்சுகீசியர்கள், அரேபியர்கள், சீனர்கள் வந்து வியாபாரம் செய்து வந்துள்ளனர்.

தாமிரபரணி நதிக்கரையில் இருந்த காயல், கொற்கை, கபாடபுரம், மணலூர் , மணிபுரம் போன்ற நகரங்களின் சிறப்பைப் பற்றி, ரோமாபுரிச் சரித்திரங்களும், யவனர் சரித்திரங்களும் கூறுகின்றன. கம்பராமாயணத்தில் சீதையைத் தேட தெற்கு நோக்கிச் செல்லும் படையில் இருந்த அனுமனிடம், ராமன், தாமிரபரணி நதியைப் பற்றியும் பொதிகை மலை பற்றியும், அகத்தியர் நடத்தும் தமிழ்ச்சங்கம் பற்றியும் கூறுவதாய் வருகின்றது.

Geetha Sambasivam

unread,
May 7, 2009, 6:50:34 AM5/7/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)
உத்தரவாஹினியாக அதாவது நதிகள் வடக்கு நோக்கிப் பாயும் இடங்கள் எல்லாமே புனிதமாய்க் கருதப் படும். தாமிரபரணி அவ்வாறு உத்தரவாஹினியாகப் பாயும் இடங்கள் பாண தீர்த்தம், பாபநாசம், திருப்புடை மருதூர், சிந்துபூந்துறை ஆகிய இடங்கள் ஆகும். தாமிரபரணி நதி அநந்த காசி, பரம பாவனம், மாலா தாதா, தக்ஷண கங்கை ஆகிய பெயர்களைப் பெற்று இதிஹாசங்களில் சிறப்பாய்ப் போற்றப் படுகின்றது. இன்னும் சொல்லப் போனால் கங்கையின் பாவங்களைப் போக்கும் வல்லமை கொண்டது தாமிரபரணி என்றும் சொல்லப் படுகின்றது.

யம கீதையும், ஹயக்ரீவ துதியும், அகத்திய தோத்திரமும், கங்கா துதி, பிரம்மச்சாரி துதி, வேத வியாச துதி, கசாவதீ ஜபம், விச்வே தேவர்கள் துதி, கெளதம துதி, கபில வாசுதேவ துதி போன்றவைகளில் தாமிரபரணியின் பெருமைகளை உயர்த்திச் சொல்லப் பட்டிருக்கின்றன என அறிகின்றோம். தாமிரபரணி மகாத்மியம் ஓர் பழம்பெரும் ஓலைச் சுவடியில் எழுதப் பட்டிருந்தது. அதில் கங்கை தன் பாவத்தைப் போக்கிக் கொள்ள தாமிர சாகர சங்கம தீர்த்தத்திற்கு வந்ததாய்ச் சொல்லப் பட்டுள்ளது.

திருச்செந்தூரில் இருந்து பழைய காயல் அருகே தாமிர சாகர சங்கம தீர்த்தம் உள்ளது. இங்கு ஒரு விநாயகர் கோயில் அமைந்துள்ளதாகவும், படகிலேயே இந்த இடத்திற்குச் செல்ல முடியும் என்றும், தாமிரபரணியைக் காக்கும் அமைப்பாளர்கள் சொல்கின்றனர். இங்கே சென்று முன்னோர்களுக்கு நீத்தார் கடன் செய்ய விரும்புவோர் இவர்களைத் தொடர்பு கொண்டால் பயண ஏற்பாடுகள் செய்து தருவதாகவும் சொல்கின்றனர்.

ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் தாமிரபரணியை மஹாநதி என வர்ணிக்கப் பட்டுள்ளது. ராமாயணத்தில் தாமிரபரணி பற்றிச் சொல்லப் பட்டிருப்பதின் விளக்கங்கள் கீழே! இது சுக்ரீவன் அனுமன், அங்கதன் போன்றோரை சீதையைத் தேட தென் திசை நோக்கி அனுப்பும்போது அவர்களுக்கு விளக்கப் பட்டது. இதில் இருந்து அன்றைய பாரதத்தின் பூகோளத் தன்மையையும், அதை சுக்ரீவன் நன்கு அறிந்து வைத்திருப்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

You shall see the eminent sage Agastya, whose resplendence is akin to that of the Sun, and who will be sitting on the top of that highly resplendent Mt. Malaya. [4-41-15b, 16a]

"And when that great-souled Agastya complaisantly permits you, then you shall leave that mountain and cross over the great River Taamraparni, a highly cherished river of crocodiles. [4-41-16b, 17a]

She whose water is overlapped with amazing copses of sandalwood trees and islands that River Taamrapani will be drifting for a rendezvous with her much yearned lover, namely the ocean, as with a young woman who will be coursing to have a rendezvous with her yearned lover. [4-41-17b, 18a]





எல்லா நதிகளும் கடலில் கலந்து மீன்களையும் தவளைகளையும், நீர்வாழ் ஜந்துக்களையும் உண்டாக்கினால் தாமிரபரணியோ கடலில் கலந்து மணிகளையும், முத்துக்களையும் படைக்கின்றாள் என நீலகண்ட தீக்ஷிதர் போற்றுகின்றார். இதனால் தாமிரபரணி கடலில் கலக்கும் இடம் ரத்னாகரம் எனப் போற்றப் படுகின்றது. அகத்திய முனிவரும், சங்க முனிவரும் இன்றளவும் தாமிரபரணி நதிக்கரையில் தவம் செய்து கொண்டு இருப்பதாய்ச் சொல்லப் படுகின்றது. சமுத்திரத்தில் பல நதிகள் அடங்கி உள்ளன. ஆனால் தாமிரபரணியோ தனக்குள் அம்பா சமுத்திரம், கோபால சமுத்திரம், நீலகண்ட சமுத்திரம் போன்றவற்றை அடக்கி உள்ளது.

இந்த நதிக்கரையில் தோன்றிய பல பெரியோர்களில் திருவள்ளுவர், ஒளவையார், நம்மாழ்வார், சிவஞான முனிவர், சிவானந்தர், பனம்பாரனார், திரிகூட ராசப்பக் கவிராயர், வீரபாண்டியன், பரிமேல் அழகர், குலசேகர ஆழ்வார், சேனாவரையர் ஆகியோர் மட்டுமின்றி, நமது தேசீயக் கவியான மஹாகவி பாரதியும் தாமிரபரணி நதிக்கரையில் தோன்றியவரே. தாமிரபரணியின் புகழை விளக்கும் தாமிரபரணி மஹாத்மியம் என்ற ஓலைச்சுவடியில் இருந்து அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட தாமிரபரணி அமைப்பு முயன்று வருகின்றது. இந்த மஹாத்மியத்தில் ராமனின் உத்தரவை மீறிய லக்ஷ்மணன் என்ன பிராயச் சித்தம் செய்தான் எனவும், என்ன தண்டனை கிடைத்தது எனவும் சொல்லப் பட்டிருக்கிறதாய்க் கேள்விப் படுகின்றோம்.


Geetha Sambasivam

unread,
May 7, 2009, 8:50:08 AM5/7/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)
பதினைந்து நாட்களாய் சமாளிச்சுப் பார்த்தாச்சு. இன்னிக்கு ரொம்ப முடியலை. மருத்துவர் கிட்டே காட்டிட்டுத் தான் இருக்கேன். என்றாலும் ரொம்பவே மூச்சுவிட முடியாமல் கஷ்டமாய் இருக்கு. கொஞ்ச நாட்கள் கழிச்சு கண்ணன் வந்து கதை சொல்லுவான்.

2009/5/7 Geetha Sambasivam <geetha...@gmail.com>

gayathri gayathri

unread,
May 7, 2009, 9:52:44 AM5/7/09
to il...@googlegroups.com
உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் கீதா அம்மா. விரைவில்நல்லாரோக்கியம் பெற கண்ணன் அருளட்டும்.
அன்புடன்,
 காயத்ரி பாலசுப்ரமணியன். 

jayashree shankar

unread,
May 7, 2009, 1:22:17 PM5/7/09
to il...@googlegroups.com
என்னாட்சு கீதாம்ம்மா....உடல் நிலை சரி இல்லையா?....தயவு செய்து நல்ல ரெஸ்ட் எடுங்கோ....கண்டிப்பா உங்கள் தாமிரபரனிக்காக நாங்கள் காத்திருப்போம்....உங்களோட நம் கண்ணன் இருப்பார்.......வீசிங் பிரச்சனை  இருக்கா?......நல்ல ஓய்வு அவசியம்.....
செரியாகிவிடுவீர்கள்...
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.

Geetha Sambasivam

unread,
May 22, 2009, 4:40:13 AM5/22/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

Friday, May 22, 2009


தமிழ்நாட்டின் ஒரே வற்றாத ஜீவநதி தாமிரபரணி ஆகும். தண் பொருநை என அழைக்கப் பட்ட இது காலப் போக்கில் தாமிரபரணி எனத் திரிந்து விட்டது. பொருநை என்பதன் பெயர்க்காரணம் தெரியவில்லை. ஆனால் அகத்தியர் தென்னாடும், வடநாடும் சமானம் ஆக்குவதற்காக த் தென்னாடு வந்தபோது உமை அம்மை அவர் கமண்டலத்தில் கங்கை தீர்த்தத்தை நிரப்பியதாயும், அதையே அவர் இங்கே பொதிகை மலைக்கு வந்ததும், ஆறாக மாற்றியதாகவும் சொல்லப் படுகின்றது. கங்கையின் தெய்வீகத் தன்மை மட்டுமில்லாமல், பொதிகை மலையின் மூலிகைச் செடிகளின் மூலிகைத் தன்மையும் நிறைந்தது தாமிரபரணி. பொதிகை மலையின் உச்சியிலே இருந்து வருகின்றது இந்த நதி. பொதிகை மலையும் மிக மிக மூப்பு வாய்ந்த தொன்மையான மலை எனச் சொல்லப் படுகின்றது.

மேலும் தமிழ் பிறந்தது பொதிகையிலே தான் எனச் சொல்லப் படுகின்றது. தெற்கே இருந்து வருவது தென்றல் என அழைக்கப் பட்டாலும் அது பொதிகையின் உச்சியில் இருந்து வருவதாய்த் தான் சொல்கின்றனர். பொதிகை மலைத் தொடரின் அருவிகளிலே ஒன்றே குற்றாலம் அருவியும் ஆகும். இந்தக் குற்றாலம் அருவியின் ஆறும் தாமிரபரணியிலேயே கலக்கின்றது. இதிலே அகத்தியர் இருந்த மலையை ஏக பொதிகை எனச் சொல்கின்றனர். அகத்தியர் வாழ்ந்த குகையும் அங்கே இருப்பதாயும், இன்னமும் அகத்தியர் மிகச் சிலர் கண்களுக்குத் தென்படுவதாயும் சொல்கின்றனர். திருக்குற்றாலத்தில் தேனருவிக்கு மேலே பழங்காலத் தமிழ் வட்டெழுத்துக்கள் உள்ள கல்வெட்டு இருப்பதாயும் தெரிய வருகின்றது. பாணதீர்த்தம் என்பதே இங்கே குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய தீர்த்தம் ஆகும். அது பாபநாசம் மேலணைக்கும் மேலே இருக்கிறதாய்ச் சொல்கின்றனர். சரியான வழிகாட்டுதல் இல்லாமையாலும், நேரக் குறைவாலும் மேலே செல்லவில்லை நாங்கள். கீழே உள்ள பாபநாசம் கோயிலுக்கு மட்டுமே செல்ல முடிந்தது. அது பற்றிப் பின்னால். பாணர்களின் தாகம் தீர்த்ததால் பாணதீர்த்தம்னு சொல்வதாய்க் கேள்விப் படுகின்றோம். என்றாலும் உண்மையான பெயர்க்காரணம் இதுவாய் இருக்காதோ என்றும் தோன்றுகின்றது.

இங்கே பெரும்பாலும் சித்தர்கள் குடி இருந்து தவம் செய்திருக்கின்றனர். இந்தப் பாண தீர்த்தத்துக்கு அருகே உள்ள கல்யாணி தீர்த்தத்திலே மஹாவிஷ்ணு, ஆஞ்சநேயர், அகத்தியர் ஆகியோருக்கு உருவச் சிலைகள் இருக்கின்றனவாம். இந்தப் பாணதீர்த்தத்துக்கு மேலே உள்ள மொட்டை மேடு என்னும் இடம் துலுக்க மொட்டை என அழைக்கப் படுவதாயும், இதற்கும் மேலே உள்ள பூங்குளமே தாமிரபரணி என்னும் பொருநை பிறக்கும் இடம் எனவும் சொல்கின்றனர். இந்தப் பூங்குளத்தில் இருந்தே தாமிரபரணி பாணதீர்த்தத்துக்கு வருகின்றது. இரு பருவ மழைக்காலங்களிலும் நீர்ப்பிடிப்பு வசதி இருப்பதால் இங்கே கடுங்கோடைக் காலத்திலும் நதியில் நீர் ஓடிக் கொண்டிருக்கும். தாமிரபரணி நதி புறப்படும் இடத்தில் இருந்து கடலில் சென்று கலக்கும் இடம் வரைக்கும் கிட்டத் தட்ட எண்பது மைல்களுக்கு ஓடுகின்றது.


படங்கள் உதவி கூகிளார்: நன்றி.


Geetha Sambasivam

unread,
May 22, 2009, 4:41:22 AM5/22/09
to il...@googlegroups.com
திருமதி காயத்திரிக்கும், ஜெயஸ்ரீக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

2009/5/7 jayashree shankar <jayas...@gmail.com>

jayashree shankar

unread,
May 22, 2009, 9:07:17 AM5/22/09
to il...@googlegroups.com
பாபநாசம் தாண்டி மலை பாதை...கரடு முரடாய் இருக்கும்...சிறிது தூரம் பஸ் வசதி உண்டு...அதற்கும் மேலே நடந்து தான் செல்ல வேண்டும்...பிறகு அங்கிருந்து...வட்டத் தோணியில்
சென்றால்......பாணதீர்த்தம்...அகஸ்தியர் பால்ஸ் வரும்...மிகவும் அருமையான நீர்வீழ்ச்சி..
சின்ன சின்ன ஆசை....ன்னு 'பாம்பே' பட பாடல்....அங்கே தான் இடம்பெற்றது....(மது பாலாவும் ஒரு குழந்தையும்....அருவியில் குளிக்கும் காட்சி)..அகஸ்தியர் கோவில் அங்கே ரொம்ப ரொம்ப சிறப்பு வாய்ந்தது...சதுரகிரி போல்...
இங்கே..சில அகஸ்தியரின் படங்கள் அனுபியுள்ளேன்.....
இன்னும்...வாழும் முனிவர் அகஸ்தியர்.அவர் அருள் பெறுவோமாக.
ஜெயஸ்ரீ ஷங்கர்..

2009/5/22 Geetha Sambasivam <...'geetha...@gmail.com>
agasthiyar.jpg
agasthiyar.gif
agasthiyar-shiva-temples.jpg
agasthiyar-falls.jpg
img_agathiar-maharishi.jpg
agasthi.gif

Vridhachalempillay Subramaniam

unread,
May 23, 2009, 12:43:29 AM5/23/09
to il...@googlegroups.com
   அந்பர்களே  :   இந்த  கீதாம்மா  அதிர்ஷ்டத்தைப்  பார்தேலொனோ?

                               ஏழுழு லோகத்திலே  இருப்பவாலேள்ளோம்  அவங்களுக்குகாக   பிரார்த்தனைப்  பண்ணிண்டுஇருக்கொம்ன்னு  சொல்லரா   எல்லாம்  அந்த தாம்பிரபரணி  ஆர்ரினோட   மகிமையாக்கும் !

                                    வி   சுப்புடு 

2009/5/7 jayashree shankar <jayas...@gmail.com>



--
Professor. Vridhachalem  Subramaniam.,

 UNESCO  Fellow on Language Pedagogy.

 To climb The Mt. Everest, the first Camp is pitched  only on the plains .

gayathri gayathri

unread,
May 23, 2009, 1:30:02 AM5/23/09
to il...@googlegroups.com
மீண்டும் கீதாம்மாவின் தாமிரபரணி ஓட  ஆரம்பித்து விட்டது! ஹையா!

Natarajan kalpattu N

unread,
May 23, 2009, 6:51:02 AM5/23/09
to இல்லம் (your HOME)
நம் இல்லத்தில் ஓடும் கீதா அம்மாவின் மருத்துவக் குணம் நிறைந்த தாமிரபரணி
நீர் அவரது உடல் உபாதையினை முற்றிலுமாக சீக்கிரத்திலேயே குணமடையச் செய்து
விடும். செய்து விட வேண்டும். இது என் பிரார்த்தனை.

நடராஜன் கல்பட்டு.

On May 23, 10:30 am, gayathri gayathri <astrogayat...@gmail.com>
wrote:

Geetha Sambasivam

unread,
May 25, 2009, 4:53:07 AM5/25/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

Monday, May 25, 2009

விண்ணில் இருந்து நேரே பூமிக்கு வரும் அம்பைப் போல் நீர் விழுவதால் வானதீர்த்தம் என்றும் பாணதீர்த்தம் எனவும் பெயர்க்காரணம் சொல்கின்றனர். இங்குதான் சாஸ்தா கோயில் இருப்பதாயும், சொரிமுத்தையனார் கோயில் எனப்படும் இதுதான் சாஸ்தா கோயில்களிலேயே முதன்மையானது எனவும் தாமிரபரணி நதியின் நடுவில் இது அமைந்துள்ளதாகவும் சொல்கின்றனர். கோயிலைச் சுற்றித் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் எனவும் தைமாத அமாவாசை மற்றும் ஆடி அமாவாசைகளில் இங்கே வழிபாடு சிறப்பு எனவும் சொல்லப் படுகின்றது.

இதற்கடுத்த கல்யாணி தீர்த்தம் பாபநாசம் லோயர் டேமை ஒட்டி இருக்கும் இந்தக் கல்யாணி தீர்த்தத்தைப் பார்க்கவெனச் சிறப்பான தனி மண்டபம் அமைக்கப் பட்டிருப்பதாயும், வெள்ளக் காலங்களில் பார்க்கவே பயங்கரமான தோற்றத்துடன் காணப்படும் எனவும் சொல்கின்றனர். அகத்தியருக்குத் திருமணக் காட்சி கொடுத்ததாய்ச் சொல்லப் படும் சரியான இடம் இதுவே எனவும் சொல்கின்றனர்.

அடுத்து வருவது அகத்தியர் அருவி: கல்யாணி தீர்த்தத்தில் இருந்து பெருகும் நீர்ப்பெருக்கு அடர்ந்த பாறைகளைக் கொண்ட ஆற்றின் நடுவே சென்று அகத்தியர் அருவி என்ற பெயரில் விழுவதாயும், இந்த அருவி ஆபத்தில்லாதது எனவும், இங்கேயும் முன்னோர் வழிபாடுகள் செய்வது சிறப்பு என்றும் சொல்லப் படுகின்றது.

அடுத்து வருவது பாபநாசம்: மலை உச்சியில் இருந்து வரும் தாமிரபரணி நதி சமபூமிக்கு வரும் இடமே பாபநாசம் ஆகும். இங்கு சித்திரை முதல்நாள் விஷு அன்று அகத்தியருக்குத் திருமணக் கோலம் காட்சி கொடுத்தது பெரும் விழாவாக நடக்கின்றது. வேதங்கள் இங்கே இறைவனைக் களாமரங்களாய் நின்று வழிபட்டதாகவும் சொல்லப் படுகின்றது. அதனால் இறைவனுக்கு முக்களா மூர்த்தி என்ற பெயரும் உண்டு. தன்னை அடைந்தாரின் பாவங்களைப் போக்குவதால் பாவநாசர் என்ற பெயரும், விராடபுருஷனாக மஹாவிஷ்ணு இவரை வழிபட்டதால், வயிராசர் என்றும், ஜோதி வடிவில் விளங்குவதால் பரஞ்சோதி எனவும் இறைவன் வழங்கப் படுகின்றார். கோயிலுக்கு நேர் எதிரே தாமிரபரணியானவள் வடக்கு நோக்கித் திரும்பிச் செல்லுகின்றாள். அந்த இடத்தின் அழகை வர்ணிக்க இயலாது. சுற்றிலும் மலை சூழ்ந்திருக்க, மலையிலிருந்து மெல்ல, மெல்ல தளிர் நடை போட்டு இறங்கும் தாமிரபரணி நீரின் உண்மையான சுவையை அங்கே அறிய முடியும்.

மலைகளின் மூலிகைச் சத்தைத் தன் ஜீவசக்தியாக வைத்துள்ள இந்த நீரை ஒரு வாய் குடித்தாலே அப்பா! என்ன சுவை, நீருக்கு இத்தனை சுவையா என வியக்கத் தோன்றுகிறது. கரும்புச் சாறுபோல் இனிமையான நீர். இதே போல் நீர் மதுரைக்கு அருகே தேவதானபட்டி காமாட்சி அம்மன் கோயில், கொடைக்கானல் மலை அடிவாரத்தில் உள்ளது. அங்கே கொடைக்கானல் மலையில் இருந்து இறங்கும் மஞ்சளாற்றின் நீரும் அருமையான சுவையோடும், மூலிகைத் தன்மை நிறைந்தும் விளங்குகின்றது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரே இந்தியாவுக்கு ஒரு அரிய பொக்கிஷம். மலைவளம் மட்டுமின்றி, மூலிகை வளம், நீர்வளம், மண்வளம் என அனைத்தையும் வாரி, வாரி வழங்குகின்றது.

இந்த மலைத் தொடர்களிலேயே அருமையான கோயில்களும், சித்தர்கள் வழிபாடு நடத்திய இடங்களும் அமைந்துள்ளன. பாபநாசம் கோயிலில் பெருமான் கல்யாணசுந்தரராக அகத்தியருக்குக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கின்றார். சிற்பம் கருவறைக்கு நேர் பின்னே காணக் கிடைக்கும். இந்தப் பாபநாசம் கோயில் பற்றிய செவிவழிச் செய்தி ஒன்றுண்டு. இங்கே உள்ள இறைவியின் பெயர் லோகநாயகி, உலகம்மை. இந்த ஊருக்கு அருகே உள்ள விக்ரமசிங்கபுரத்தில், நமசிவாயக் கவிராயர் என்பவர் வாழ்ந்து வந்தார். இறைவன் மேலும், குறிப்பாய் உலகம்மை மேலும் அதீத பக்திப் பெருக்கோடு வாழ்ந்து வந்தார் அவர்.

தினந்தோறும் உலகம்மையின் அர்த்தஜாம வழிபாட்டைக் காணச் செல்லும் வழக்கம் உள்ளவர் இவர். அம்மையைக் கண்ட பரவசத்தில் வழியிலே பக்திப்பாடல்களைப் பாடிக் கொண்டே வரும் வழக்கம் உள்ளவர். ஒருநாள் இரவு இவ்வாறு பாடிக் கொண்டே வந்து கொண்டிருந்தார். அப்போது, தினமும் இவருக்குத் தெரியாமல் இவர் பாடல்களைக் கேட்டுக் கொண்டே பின் தொடரும் உலகம்மை அன்றும் வந்து கொண்டிருந்தாள். கவிராயர் உரக்கப் பாடிவரும்போது தற்செயலாக அவர் வாயில் இருந்த தாம்பூலம், கூடவே வந்து கொண்டிருந்த உலகம்மையின் உடையில் பட்டுத் தெறித்துவிட்டது.

Geetha Sambasivam

unread,
May 27, 2009, 4:39:08 AM5/27/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

Wednesday, May 27, 2009

உலகம்மைக்குத் திருவிளையாடல் புரியும் எண்ணம் வந்துவிட்டது. நமசிவாயக் கவிராயரின் புகழையும் உலகோர் அறியச் செய்யவேண்டும். ஆகவே வெற்றிலைக் காவி எச்சில் பட்ட அந்த ஆடையுடனேயே அம்பாள் சென்று மறைந்தாள். மறுநாள் காலை அர்ச்சகர் கோயிலுக்கு வந்து அம்பாளின் முதல்நாள் அலங்காரத்தைக் களைய முற்படுகையில் ஆடையில் படிந்திருந்த வெற்றிலைக் காவி எச்சில் திவலைகளைக் கண்டு யாரோ, நாத்திகனோ என்னமோ இவ்வாறு செய்திருக்கின்றானே என மனம் வருந்தினார். மன்னனிடம் முறையிட்டார். மன்னனும் உடனே பிராயச் சித்தம் செய்ய அர்ச்சகருக்குக் கட்டளை இட்டுப் பின்னர் இந்தப் படுபாதகச் செயலைச் செய்தவரைத் தண்டிக்கவேண்டும் எனக் கூறி அவ்வாறே நாடெங்கும் தெரியப் படுத்தினான். அன்றிரவு மன்னன் கனவில் அம்பிகை தோன்றி நமசிவாயக் கவிராயரைப் பற்றிக் கூறி, இது அவரறியாமல் நடந்த ஒன்று என நடந்ததைக் கூற, மன்னன் மறுநாள் காலை கவிராயரை அவைக்கு வரவழைத்தான். என்னதான் அம்பிகையே கனவில் வந்து சொல்லி போயிருந்தாலும் மன்னன் கவிராயரின் பக்தியை அளவிட எண்ணினான்.

அம்பாளின் கரத்தில் பூச்செண்டு ஒன்றை வைத்துப் பொற்கம்பிகளால் அதைச் சுற்றிக் கட்டினான். அந்தப் பூச்செண்டு சற்றும் அலுங்காமல் குலுங்காமல் அம்பாளின் கரத்திலிருந்து வருமாறு பாடல் பாடுமாறு கவிராயரைப் பணித்தான். அவரும் கலித்துறையில் அந்தாதி ஒன்றை அமைத்துப் பாடினார். அம்பிகையின் கையில் இருந்த பூச்செண்டைச் சுற்றிக் கட்டியிருந்த கம்பிகள் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு சுற்றாக அறுந்து கவிராயரின் பெருமையை வெளிப்படுத்தியது. இத்தகைய சிறப்புக் கொண்ட தலம் பாபநாசம். நம் பாபங்களை எல்லாம் நாசம் செய்யும் பாபநாசரைத் தரிசனம் செய்து கொள்ளலாம். திருஞானசம்பந்தரும், அப்பரும் இந்தத் தலத்தைக் குறித்துப் பாடி இருக்கின்றனர்.

//பொதியிலானே பூவணத்தாய் பொன்றிகழுங் கயிலைப்
பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவிடா தவனே
விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கியரென் றிவர்கள்
மதியிலாதா ரென்செய்வாரோ வலிவலமே யவனே. //

திருஞானசம்பந்தர் பதிகம்


உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்
உருத்திர கோடி மறைக்காட் டுள்ளும்
மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானங் கேதா ரத்தும்
வெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகா
வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றி யூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையுங்
கயிலாய நாதனையே காண லாமே
திருநாவுக்கரசர் தேவாரம்

மாணிக்கவாசகரின் திருவாசகத்திலும் இடம் பெற்றிருக்கின்றதாய்த் தெரிந்து கொள்கின்றோம். கோயில் மிகப் பெரிய கோயிலே. கோயிலின் முன் தாமிரபரணி ஆறைக் கண்டாலே மனம் சொல்லவொணா மகிழ்ச்சியில் குதிக்கின்றது. நீராடும் வசதிகளோடு அமைந்துள்ளது. நாங்கள் சென்ற நேரம் உச்சிக்கால வழிபாட்டு நேரம். குருக்கள் நன்றாய், நிதானமாய் வழிபாடுகளை நடத்துகின்றார். அங்கிருந்து மற்ற எந்தக் கோயில்கள் முக்கியம் , எப்போது தரிசனம் செய்யலாம் என்ற தகவல்களையும் தருகின்றார். கோயிலின் சுற்றுப் புறத்தையும், அமைதியையும் பார்த்தால் அங்கேயே ஒரு துணியை விரித்துப் படுத்துக் கொண்டுவிட்டால் நல்லா இருக்குமேனு மனதில் ஏக்கம் வருகின்றது.


2009/5/25 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
May 27, 2009, 4:41:37 AM5/27/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)
 பழைய போஸ்டை டெலீட் செய்தேன் ஆனாலும் விடாப்பிடியாக ஒட்டிட்டு வந்திருக்கே?????

2009/5/27 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
May 29, 2009, 3:31:55 AM5/29/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

Friday, May 29, 2009

தாமிரபரணியின் புகழை விளக்கும் தாமிரபரணி மகாத்மியம் ஓலைச்சுவடியில், பகவானின் கடைசி முக்கிய அவதாரம் ஆன கல்கி அவதாரம் தாமிரபரணிக்கரையில் தான் ஏற்படப் போவதாய்ச் சொல்லுகின்றது எனக் கூறுகின்றனர். ஸ்ரீமத் பாகவதம் இதைக் கூறி உள்ளது. தமிழில் இந்த மகாத்மியத்தை மொழிபெயர்த்து வெளியிடப் பல்வேறு அமைப்புகளும் முயற்சி செய்து வருகின்றது. எந்த அளவுக்கு வெற்றி கிட்டி உள்ளது எனத் தெரியவில்லை.

தாமிரபரணிக்கரையில் விஷ்ணுவின் மஹிமையை விளக்கும் நவ திருப்பதிகளும், சிவனின் மஹிமையை விளக்கும் நவ கைலாயங்களும் அமைந்துள்ளன. ஒரு சில சிவாலயங்கள் மேற்கே பார்த்த வண்ணம் அமைந்துள்ளதாய்க் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. தாமிரபரணிக்கரையில் உள்ள திருக்கோளூரில் சேர, சோழ, பாண்டீஸ்வரர் ஆலயம் என்னும் மூவேந்தரையும் சிறப்பித்துக் கூறும் ஆலயம் உள்ளது. இங்கே உள்ள முப்பந்தல் என்னும் ஊரில், வருஷம் 365 நாட்களும் காற்றுக்குப் பஞ்சம் இருக்காது என்றும், சேர, சோழ, பாண்டியர்கள் இந்த முப்பந்தலிலேயே முக்கியமான விஷயங்களைக் கூடி விவாதித்து முடிவெடுப்பனர் என்றும் தெரிய வருகின்றது.

புராணங்களின் கூற்றுப்படி பார்த்தால் குபேரன் இழந்த தன் செல்வத்தை இங்கே தான் அடைந்ததாகவும், தவிரவும் குபேரன் ராஜ ராஜ பதவி பெற்றதாயும், பிரும்மாவிற்கு சிருஷ்டி சாமர்த்தியம் இங்கே ஏற்பட்டதாயும், சிவனின் அம்சங்களில் ஒருவரான ருத்ரர் இங்கேயே சர்வக்ஞதா பிராப்தி அடைந்ததாகவும், வருணன் ஜலேசத்வ பதவி பெற்றதாயும், அஷ்டதிக்பாலர்கள் ஐஸ்வர்ய பதவி அடைந்ததாகவும், சோமன் என்னும் சந்திரனுக்கு ஏற்பட்டிருந்த க்ஷயரோகம் நாசம் அடைந்ததாயும், நந்திகேஸ்வரர் பிறப்பும், கபில ரிஷியின் பிறப்பும், சனகாதி முனிவர்களில் ஒருவரான சனகரின் பிறப்பும் தாமிரபரணியில் தவம் செய்தமையால் ஏற்பட்ட பெருமைகளாய்ச் சிறப்பித்துச் சொல்லப் படுகின்றன.

வேத வியாசர் வேதங்களைத் தொகுத்து கீதை, பிரம்ம சூத்திரம், உபநிஷத்துகள் ஆகியவற்றுக்கு உரை எழுதும் முன்னர் பிரம்மாவை வழிபட்டார். பிரம்மா நாதாம்புஜத்தில் தவம் செய்யச் சொல்லுகின்றார். அந்த நாதாம்புஜமே தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ள சேர்மாதேவி எனப் படும் சேரன் மஹாதேவி. வியாசர் தாமிரபரணியை சாக்ஷாத் அந்த அம்பாளாகவே கருதி வழிபடுகின்றார். அன்னையே தாமிரபரணியாக உருவெடுத்து வந்ததாய் நினைத்து வழிபடும் அவருக்கு ஒருநாள் தாமிரபரணி நதியில் பிரகாசமான தாமரை தென்பட்டது. தாமரைக்கு மேலே அதன் நடுப்பாகத்தில் ஒரு அன்னப் பறவை காட்சி அளித்தது. அந்த அன்னப் பறவை வியாசருக்கு ஞானத்தை உபதேசம் செய்தது. வியாசர் ஞான உபதேசம் பெற்று ஞானோதயம் அடைந்தார். வேதங்கள் தொகுக்கப் பட்டு அனைத்துக்கும் உரையும் எழுதினார்.

தாமிரபரணி நதியைப் பூஜை செய்தால் ஸ்த்ரீஹத்தியும், மஹாபாதகங்களும், மாத்ரு ஹத்தி, பித்ரு சாபம் போன்றவை விலகவும் வழிசெய்கின்றது. இந்த நதியை வழிபட்டதின் மூலம் பகனுக்கு இழந்த கண்கள் திரும்பக் கிடைக்கின்றன. சுதர்சனச் சக்கரமும் விஸ்வே தேவர்களும் தங்கள் பாவங்களில் இருந்து விடுபட்டுள்ளனர். மானசாக்கள் தங்கள் நோயையும், பாணாதை பிசாசுத் தன்மையையும், துர்வாச முனிவர் சாபத்தையும், சரஸ்வதி தேவி தன்னுடைய சாபத்தையும் இங்கே தான் போக்கிக் கொண்டனர்.

நம் ஜாதகங்களில் ஏற்படுத்தப் பட்டிருக்கும் 12 ராசிகளும், பாரதத்தின் முக்கியப் பனிரண்டு நதிகளின் அடிப்படையிலே ஏற்படுத்தப் பட்டுள்ளதாய்க் கூறுகின்றனர். இந்தப் பனிரண்டு ராசிகளில் குருபகவான் ஒவ்வொரு ராசிக்கும் இடம் பெயருவார். அப்போது குருவின் பார்வை ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு நதியின் மேல் ஏற்படும். இதுவே புஷ்கரம் எனச் சொல்லுகின்றனர். இந்த அடிப்படையில் குருபகவான் பனிரண்டு வருஷத்திற்கு ஒருமுறை விருச்சிக ராசிக்கு வரும்போது தாமிரபரணி புஷ்கரம் ஏற்படுகின்றது.

Geetha Sambasivam

unread,
May 30, 2009, 2:21:17 AM5/30/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

Friday, May 29, 2009


12 ராசிகளுக்கும் உரிய 12 நதிகள் வருமாறு:

மேஷம்- கங்கை
ரிஷபம்-நர்மதை
மிதுனம்-சரஸ்வதி
கடகம்-யமுனை
சிம்மம்-கோதாவரி
கன்னி-கிருஷ்ணா
துலாம்-காவேரி
விருச்சிகம்-தாமிரபரணி
தனுசு-சிந்து
மகரம்-துங்கபத்ரா
கும்பம்-பிரம்மபுத்ரா
மீனம்-பிரனீதா

முஹூர்த்தங்கள் அஷ்டமுஹூர்த்தங்கள் எனப் படும். இவற்றிற்குப் பிரதான தீர்த்தவடிவான தெய்வத்தையே புஷ்கரன் என்ற தீர்த்த ராஜனாய் வழிபடுவது வழக்கம். இவர் எப்போதும் பிரம்மாவின் கமண்டலத்திலேயே வாசம் செய்வார். புஷ்கரனைத் தனக்குக் கொடுக்குமாறு வேண்டிக் கேட்டு குரு பகவான் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் செய்தார். தவத்தைக் கண்டு மகிழ்ந்த பிரம்மா புஷ்கர கமண்டலத்தை குருவுக்குக் கொடுக்க முயல, கமண்டலத்தில் இருந்த புஷ்கரன் பிரம்மாவை விட்டுப் பிரிய மறுத்தார். புஷ்கரனைச் சமாதானம் செய்த பிரம்மா குருவின் பார்வை தீர்த்த ராஜனாகிய புஷ்கரன் மேல் பட என்ன வழி என யோசித்து, மேஷம் முதல் மீனம் வரை உள்ள பனிரண்டு ராசிகளிலும் குரு மாறி மாறி இடம் பெயரும் அந்த நாட்களில் இந்தக் குறிப்பிட்ட நதிகளில் புஷ்கரனை வந்து வாசம் செய்யுமாறும் அன்றைய தினம் குருவின் பார்வை மட்டும் அந்த அந்த நதிகளின் மேல் படவும் வழி செய்தார். அரை மனதோடு சம்மதித்தார் குரு. அன்று முதல் மேற்கண்ட வாறு ராசிகளில் குரு பெயரும்போது குறிப்பிட்ட நதிகளில் புஷ்கர குரு பெயர்ச்சி அனுசரிக்கப் படுகின்றது. பல நூற்றாண்டுகளாய் நின்று போன தாமிரபரணி புஷ்கர குரு பெயர்ச்சி யாகம் பாணதீர்த்தம், பாபநாசம், திருப்புடை மருதூர், சிந்து பூந்துறை, குட்டத்துறை முருகர் கோயில் ஆகிய இடங்களில் மீண்டும் தொடங்கி வைத்தது தாமிரபரணி அமைப்பு. இது 20-10-2006-ம் ஆண்டு ஐப்பசி மாதம் 3-ம் தேதி இரவு 10-15 மணிக்கு மீண்டும் தொடங்கி கடந்த மூன்று வருடங்களாய் தாமிரபரணி புஷ்கரம் நடைபெற்று வருவதாய் தாமிரபரணி அமைப்பு தெரிவிக்கிறது.ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒரே ரிஷியான அகத்தியர் மூலம் தமிழ் மொழி சிறப்புப் பெற்றதால் தமிழின் பெருமை வேதங்களுக்கு எல்லாம் மூத்தது எனக் கூறப் படுகின்றது. ஸ்ரீசங்க யோகி வீரசேன மன்னனுக்கு உபதேசிக்கப் பட்டது ஸ்ரீ தாமிரபரணி மகாத்மியம். அதை ஸ்ரீவேத வியாசர் தன் புத்திரனும், பிறவி ஞானியும் ஆன சுகருக்கு உபதேசித்தார். தேவி மகாத்மியமும் தாமிரபரணி மகாத்மியமும் ஒன்றே எனக் கூறுகின்றார்கள். (இது பற்றி நன்கு அறிந்தவர்கள் விளக்கும்படிக் கேட்டுக் கொள்கின்றேன்.)

இந்தத் தாமிரபரணி மகாத்மியம் ஓலைச்சுவடிகளைக் கண்டறிந்து அதை சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு மாற்றிய மகான் என். ராமசுப்பிரமணிய ராமாயணியார் அவர்கள் தாமிரபரணிக்கு ஜே, தாமிரபரணிக்கு ஜே என வீடு முழுதும் எழுதி வைத்துள்ளதாக தாமிரபரணி அமைப்பு தெரிவிக்கிறது. இதுவே தாமிரபரணி அமைப்பின் சட்டபூர்வமான கோஷமாகவும் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. இனி தாமிரபரணிக்கரையில் சில முக்கியக் கோயில்களைப் பற்றிப் பார்ப்போமா? முதலில் நவ திருப்பதிகள்.

Geetha Sambasivam

unread,
May 30, 2009, 2:22:10 AM5/30/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)
திரு விக்னேஷ் அவர்களுக்காகக் கண்ணனைக் கொஞ்சம் காத்திருக்கச் சொல்லிட்டேன். :))))))))

2009/5/30 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jun 1, 2009, 4:53:51 AM6/1/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

ராமரே, உங்க ஊரைப் பத்தி எழுதி இருக்கேன்,கட்டாயமாய்ப் பின்னூட்டம் தேவை

Geetha Sambasivam

unread,
Jun 1, 2009, 4:51:58 AM6/1/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

Monday, June 01, 2009

நவ திருப்பதிகள் ஒன்பது. பாண்டிய நாட்டுத் திவ்ய தேசங்களில் அவை அடங்கும். நவ திருப்பதிகள் கீழ்க்கண்டவை:


ஸ்ரீவைகுண்டம்,= வைகுண்டநாதர்
ஆழ்வார்திருநகரி,=ஆதிநாதர்
நாங்குநேரி, வானமாமலை,=தோதாத்ரிநாதர்
திருக்குறுங்குடி,=ஸ்ரீ நின்ற நம்பி
வரகுணமங்கை,(நத்தம்)=விஜயாசனப் பெருமாள்
திருப்புளியங்குடி=காசினிவேந்தன்
(இரட்டைத் திருப்பதி,=ஸ்ரீ ஸ்ரீநிவாசன் கோயில், ஸ்ரீஅரவிந்த லோசனன் கோயில்
திருத்தொலைவில்லி மங்கலம்)
பெருங்குளம் =ஸ்ரீ ஸ்ரீநிவாசன் கோயில்
தென் திருப்பேரை=மகர நெடுங்குழைக்காதர்

ஸ்ரீவைகுண்டத்திலே இருந்து ஆரம்பிக்கிறோம் நாம. ஆனால் நாங்க முதல்லே அங்கே போகலை. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் போகும் வழியில் ஸ்ரீவைகுண்டம் அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து 35 கிமீ தூரத்திலும் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்திற்கென ரயில் நிலையமும் இருக்கின்றது. சாலை வழியாகவும் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து, திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடிக்குப் போக முடியும். தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள இந்த ஊருக்குப் பல முறை செல்லும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. கடைசியாய்ப் போனது 2007 பெப்ரவரியில். இங்கே உள்ள தீர்த்தம் பிருகு தீர்த்தம் என அழைக்கப் படுகின்றது. இது தவிர தாமிரபரணியில் நீராடுவதும் சிறப்பு.

இந்தக் கோயிலில் உள்ள பெருமாளுக்குக் கள்ளர்பிரான் என்ற பெயரே மிகவும் சிறப்பித்துச் சொல்லப் படுகின்றது. இது தவிரவும், பெருமாளுக்கு வைகுண்ட நாதன் என்ற பெயரும் தாயார் வைகுந்த வல்லி எனவும் அழைக்கப் படுகின்றாள். மற்றோர் தாயார் பூதேவி எனப்படுகின்றாள். இருவருக்கும் தனித்தனி சந்நதிகள் உள்ளன. விமானம் சந்திரவிமானம் என்று சொல்லப் படுகின்றது. நம்மாழ்வாரால் மங்களா சாஸனம் செய்யப் பட்டது இந்தக் கோயில். பெருமாள் கிழக்கே பார்த்துக் கொண்டு நின்று கொண்டு அருள் பாலிக்கின்றார். இந்திரனும் ப்ருதுவும் இந்தக் கோயில் பெருமாளை வழிபட்டதாய் ஐதீகம். ஸ்தலவிருக்ஷம் பவளமல்லி.



சோமுகன் என்ற அரக்கன் பிரம்மாவிடமிருந்த வேதங்களையும், பிரம்ம ஞானத்தையும் கவர்ந்து செல்லவே, படைக்கும் திறன் அற்றுப் போனார் பிரம்மா. இறைவனை வணங்கித் தன் கையில் இருந்த தண்டத்தை ஒரு பிரம்மசாரியாக மாற்றிய பிரம்மா, பூலோகத்தில் உள்ள அருமையா புண்ணிய ஸ்தலத்தைக் கண்டு வரச் சொல்லி அனுப்பினார். தாமிரபரணிக்கரைக்கு வந்து சேர்ந்த அந்த பிரம்மசாரி, அங்கே ஜயந்தபுரி என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்தான். அசுரர்களால் உருவாக்கப் பட்ட பெண்கள் மோகினிகளாய் மாறி அந்த பிரம்மசாரியைக் கவர, அவன் தான் வந்த காரணத்தையும், தன் மஹிமையையும் மறந்திருந்தான்.

சென்றவன் திரும்பிவரக் காணாத பிரம்மா, தன் கைக்கமண்டலத்தைப் பெண்ணாக மாற்றி அந்தப் பெண்ணை அம்பாளே நதி உருவெடுத்து ஓடும் தாமிரபரணிக் கரையில் தவம் செய்ய ஏற்றதாய் உள்ள புண்ய ஸ்தலத்தைக் கண்டு வரும்படி அனுப்பி வைக்கின்றார். தாமிரபரணிக்கரைக்கு வந்த அந்தப் பெண்ணிற்கு ஸ்ரீவைகுண்டம் தலத்திற்கு வந்ததும், இதுவே மேன்மையானது என்று தோன்ற பிரம்மாவிடம் இதைத் தெரிவிக்கின்றாள். பிரம்மாவும் அங்கே சென்று தாமிரபரணி கலசத் தீர்த்தத்தில் நீராடிக் கடுந்தவம் புரிந்தார்.

தவத்தால் மகிழ்ந்த சர்வேஸ்வரன் அவர் முன் தோன்றி என்ன வேண்டும் எனக் கேட்க இழந்ததைத் திரும்பப் பெறவேண்டும் என பிரம்மா கேட்டார். அவ்வாறே ஆகட்டும் என அருள் புரிந்தார் காக்கும் கடவுளான விஷ்ணு. பின்னர் பிரம்மா பூவுலகு மக்கள் அனைவரும் உய்யும் வண்ணம் அர்ச்சாவதாரமாய் இறைவனை அங்கே எழுந்தருளி அருள் பாலிக்குமாறு வேண்ட இறைவனும் அருள் புரிந்தான். ஆனால் பிரம்மனின் வேண்டுகோளின் படி எழுப்பப் பட்ட கோயிலும், இறைவனின் அர்ச்சாவதார மூர்த்தியும் காலப் போக்கில் மறைந்து பூமியில் புதைந்து போய்விட்டது.

பாண்டியர்கள் கொற்கையையும், மணவூரையும் தலைநகராய்க் கொண்டு ஆண்டு வந்த நேரம் அது. அரண்மனைத் தொழுவத்தின் பசுக்களை மேய்க்கும் மாட்டிடையர்கள் பசுக்களை ஒரு இடத்தில் மேய்த்து வந்தனர். அப்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஒரு பசு தன் பாலைத் தானாகவே சொரிந்து வந்தது தினமும். இடையர்கள் எவ்வளவோ தடுத்தும் பசு தன் பாலைச் சொரிவது நிற்கவே இல்லை. அங்கே ஒரு பிலத் துவாரம் இருப்பதையும் கண்டனர். இதற்குள் பாண்டியனுக்குச் செய்தி போயிற்று. அரண்மனைப் பசுக்களில் குறிப்பிட்ட பசு மட்டும் பால் தருவது இல்லை என அறிந்தான் மன்னன். பசுவை மேய்ப்பவனைக் கூப்பிட்டு என்னவென விசாரிக்க அவனும் நடந்ததைக் கொஞ்சம் பயத்துடனேயே மன்னனுக்குத் தெரிவித்தான்.

உடனேயே அந்த இடத்தில் ஏதோ அற்புத சக்தி இருக்கும் எனப் புரிந்து கொண்ட மன்னன் தன் பரிவாரங்களுடனும், அரச குருவுடனும் வந்து அங்கே பூமியைத் தோண்ட மெல்ல, மெல்ல மேலே வந்தார் வைகுண்ட வாசன். அரசனுக்கு மேனி சிலிர்த்தது. பெரியதொரு கோயில் கட்டுவித்து சந்நதியில் பெருமானைப் பிரதிஷ்டை செய்து தினந்தோறும் பால் திருமஞ்சனம் செய்து வைக்குமாறும் நிவந்தங்கள் அளித்துக் கட்டளையிட்டான். இந்தப் பால் திருமஞ்சனம் இன்றளவும் தினந்தோறும் பெருமானுக்குச் சிறப்பாய் நடந்து வருவது விசேஷமாய்க் கூறப் படுகின்றது. பெரும்பாலான விஷ்ணு கோயில்களில் தினமும் இவ்விதம் நடப்பது அரிது. பெருமான் நின்ற திருக்கோலத்தில் ஆதிசேஷன் குடையாய்க் கவிந்திருக்க சாலிகிராம மாலையுடனும், கையில் கதையுடனும் காட்சி அளிக்கின்றார். இவர் கள்ளபிரானானது எவ்வாறு? நாளை பார்க்கலாமா?

Geetha Sambasivam

unread,
Jun 8, 2009, 3:57:30 AM6/8/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

Saturday, June 06, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்.

காலதூஷகன் என்னும் திருடன் ஒருவன் கொள்ளை அடித்து வாழ்ந்து வந்தான். அவன் தன்னோட கொள்ளைப் பணத்தில் பாதியை ஸ்ரீவைகுண்டத்துப் பெருமாளுக்குக் கொடுப்பதை வழக்கமாய் வைத்திருந்தான். ஒருமுறை கொள்ளை அடிக்கும்போது அரசனின் காவலர்களால் பிடிக்கப் பட்டான். கடவுளை நிந்தித்தான். கடவுளே, என்னோட கொள்ளையில் உனக்கும் பங்கு சரிபாதியாய்க் கொடுத்துட்டுத் தானே வரேன். என்னை இப்படிப் பிடிச்சுக் கொடுத்துட்டியேனு மனம் நொந்தான். சரி, போகட்டும், இப்போ என் கிட்டே இருக்கிற எல்லாமும் உனக்கே தான் கொடுத்துடறேன். என்னை எப்படியாவது இந்த ராஜ தண்டனையிலே இருந்து காப்பாத்துனு அவனைச் சரணடைந்தான். பார்த்தார் பெருமாள். இந்தத் திருடனுக்கு ஞானம் உதயம் ஆகும் நேரம் வந்தாச்சு. அரசனுக்கும் இவனைப் பத்திப் புரியணும், அதே சமயம், இவனையும் காக்கவேண்டும். திருடனுக்கு ஞானமும் வரவேண்டும் என எண்ணிய ஈசன் கள்ளனைப் போல வேடம் தரித்து மன்னனிடம் சென்றார்.

கோபியரிடம் வெண்ணெய் திருடி உண்டவனுக்குக் கள்ளன் வேஷம் தரிப்பதில் என்ன கஷ்டம்? அவன் இஷ்டப் படும் வேஷம் அல்லவோ அது?? கள்ளனைப் பார்த்த மன்னனுக்கு அவன் பேரில் கோபமே வரவில்லை. என்ன காரணமோ பரிவும், அன்பும், பாசமும், பக்தியுமே மேலிட்டது. திகைத்த மன்னன் கள்ளனைப் பார்த்து, "இது என்ன மாயம்? நீயோ கள்ளன், என்னால் தண்டிக்கப் படவேண்டியவன். ஆனால் எனக்கு உன்னிடம் அளவுகடந்த பக்தியும், பாசமும் மேலிடுகின்றதே?" எனக் கேட்டான். கள்ளன் அதற்குப் பதில் சொன்னான்.
"அரசே! பணத்திற்கு என இருக்கும் பங்காளிகள் நான்குவகைப்படுவர். முதலாவது தர்மம், இரண்டாவது, அக்னி, மூன்றாவது அரசன், நான்காவது திருடன். இதில் உன்னுடைய அரசால் சம்பாதிக்கப் படும், உரிய வகையில் செலவிடப் படவில்லை. தர்மத்தின் பாதையில் உன் அரசாங்க சம்பாத்தியம் செல்லவில்லை. அதை உனக்கு உணர்த்தவே நாம் இவ்விதம் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினோம்." என்று உரைத்துத் தம் சுயரூபத்தைக் காட்டினார்.

மன்னனுக்கு உண்மை புரிந்தது. அன்றிலிருந்து தன்னுடைய கஜானாவின் பணம் எல்லாம் உரிய நேர்மையான வழியில் செலவிடப் படுகின்றதா என்று கவனித்துச் செலவிட்டான். திருடனை மன்னித்துவிட்டான். அரசனும், திருடனும் இறை அருளால் ஞானம் பெற்றனர். பெருமானுக்கோ கள்ளருக்கெல்லம் பிரான் என்ற பட்டப் பெயர் நிலைத்து நின்றது. அன்றிலிருந்து கள்ளபிரான் என அழைக்கப் படுகின்றார் இவர்.

இந்த ஸ்ரீவைகுண்டத்தின் மற்றொரு சிறப்பு, நம்மாழ்வார் இங்கு நடக்கும் சித்திரைத் திருவிழா ஐந்தாம் நாள் ஆழ்வார் திருநகரியில் இருந்து வந்து கலந்து கொண்டு காலையில் மங்களாசாசனமும், திருமஞ்சனம், கோஷ்டி போன்றவற்றிலும் கலந்து கொண்டு, மாலையில் நம்மாழ்வாருக்குரிய அன்னவாகனத்திலும், பொலிந்து நின்ற எம்பிரான் கருட வாகனத்திலும் திருவீதி உலா வந்து மறுநாள் நம்மாழ்வார் மங்களாசாசனம் பெற்று விடைபெற்றுச் செல்லும் காட்சியும் கண்கொள்ளாக் காட்சி என்று சொல்லுகின்றனர். ஆனால் கூட்டத்தில் எப்படிப் பார்க்க முடியும்? புரியலை. சாதாரண நாட்களில் சென்றால் பெருமாளை திவ்ய தரிசனம் செய்யலாம்.

600 அடி நீளமான கோயிலின் உட்புறத்து கர்ப்பகிருஹத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமானை சூரியன் சித்திரை, ஐப்பசி மற்றும் பெளர்ணமி தினங்களில், தன்னுடைய கிரணங்கள் பகவான் காலடியில் படும்படி வந்து தரிசிப்பது சிறப்பாய்க் கருதப் படுகின்றது. மார்கழி மாசம் நடக்கும் திரு அத்யயன உற்சவம் பின் பத்து நாட்களில் பரமபத வாசல் திறப்பு, படியேற்றம், பத்தி உலா, கற்பூர சேவை போன்றவை காணக் கிடைக்காத காட்சி எனச் சொல்லப் படுகின்றது. சுவர்க்கத்திலிருந்து ஆஸ்தானம் புறப்பாடு வெள்ளித் தோளுக்கினியானில் பனிக்காக குல்லாய், வெல்வெட் போர்வையுடனே கிளம்பி பத்தி உலா நடக்கும். சிம்ம கதி, சர்ப கதியுடன், தாள வாத்தியங்கள் முக வீணை முழங்க படியேற்றமும் கற்பூர சேவையும் நடைபெறுகிறது. சாதாரணமாய் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பிடிக்கும் இந்த சேவை இங்கே ஒரு விநாடிக்குள் பெருமான் ஆஸ்தானத்தில் சேவை சாதிப்பதும், ஒரு நிமிஷத்திற்குள் கற்பூர சேவையும் நடந்து முடிகின்றது.

அடுத்து வரகுணமங்கை என்னும் நத்தம் செல்லுகின்றோம்.

Geetha Sambasivam

unread,
Jun 17, 2009, 4:45:26 AM6/17/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

Wednesday, June 17, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்!

ஸ்ரீ வைகுண்டத்திற்குக் கிழக்கே, தூத்துக்குடி செல்லும் வழியில், ஒரு மைல் தொலைவுக்குள்ளாக தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ள திருத்தலம் வரகுணமங்கை என்னும் நத்தம் ஆகும். பெருமாளின் பெயர் விஜயாசனர். தாயார் வரகுணவல்லி. விமானம் விஜயகோடி விமானம் என அழைக்கப் படுகின்றது. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்ட இந்த ஊரில் அக்னி பிரத்யக்ஷம் என்று சொல்லப் படுகின்றது. இறைவன் கிழக்கே பார்த்துக்கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கின்றார். அக்னி பகவானுக்குப் பிரத்யக்ஷமாய்க் காக்ஷி அளித்ததைத் தவிர, உரோமச முனிவருக்கும், சத்யாவனுக்கும் காக்ஷி கொடுத்தார் எனச் சொல்லப் படுகின்றது.

இது கொஞ்சம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருப்பதால், முன்கூட்டியே கோயில் பட்டாசாரியாருக்குத் தகவல் தெரிவித்துவிட்டுச் செல்லுவது நல்லது. நாங்கள் காலை வேளையிலேயே சென்று விட்டதால் தரிசனம் கிடைத்தது. உள்ளூர் மக்கள் நத்தம் என்றே இந்த ஊரைச் சொல்லுவதால் நத்தம் என்றே கேட்கவேண்டும். இந்தக் கோயிலின் தல புராணம் முன் பிறவியில் செய்த கர்மவினை இப்பிறவியிலும் தொடர்ந்தாலும் ஒருவன் இந்த ஊரில் பிறந்த காரணத்தாலேயே நற்கதியும் அடைந்தான் என்று சொல்லுகின்றது. தலவரலாறு வருமாறு:

உரோமச முனிவர் இங்கே தவம் செய்து வந்தார். சத்தியவான் அவருடைய சிஷ்யன். குருவிற்குத் தொண்டு புரிந்து கொண்டும் , பாடங்கள் கற்றுக் கொண்டும் வந்தான். இங்கே இருந்த திருக்குளத்திற்கு அகநாச தீர்த்தம் என்ற பெயர் இருந்து வந்தது. அந்தத் தீர்த்தத்தில் நீராடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த சத்தியவானுக்கு ஒரு செம்படவன் வலை வீசி மீன்கள் பிடிப்பது தெரியவந்தது. ஏராளமான மீன்கள் பிடித்தும் ஆசை அடங்காமல் மேலும் மேலும் வலையை விரித்து வந்த செம்படவனை ஒரு நாகம் பின்னாலிருந்து தீண்டியதையும், தீண்டிய நாகம் மறைந்ததையும், செம்படவன் உடனே இறந்ததையும் கண்டான் சத்தியவான். ஆனால் என்ன ஆச்சரியம்????

அந்தச் செம்படவனை தேவலோகத்தில் இருந்து கந்தர்வர்கள் அலங்கரிக்கப் பட்ட அழகிய விமானத்தைக் கொண்டு வந்து சொர்க்கத்திற்குக் கூட்டிச் சென்றதையும் அவன் காண நேர்ந்தது. மீன்களைத் துன்புறுத்தி வந்த இந்தச் செம்படவனுக்கு இவ்வளவு நற்கதியா என யோசித்த வண்ணம் குருவிடம் சென்ற சத்தியவான், தான் கண்டதை அவரிடம் கூறி, செம்படவனுக்கு நற்கதி ஏற்பட்ட விதம் எவ்வாறு எனக் கேட்டான். உரோமச முனிவர் தன் சக்தியால் அந்தச் செம்படவன் முற்பிறவியில் விதர்ப்ப தேசத்து அரசகுமாரனாய் இருந்து தீவினை புரிந்து வந்து நரக வாசத்தை அனுபவித்ததாயும், எப்போதோ செய்த ஒரே ஒரு நற்செயலின் விளைவாக இந்தப் பூமியில் இந்த ஊரில் வந்து பிறந்திருக்கின்றான் எனவும் கூறினார். இந்த ஊரில் பிறந்த காரணத்தாலேயே அவன் கர்மவினை அழிந்து அவன் நற்கதி அடைந்திருக்கிறான் என்றும் சொன்னார்.



மேலும் உரோமசர் தன் சீடனிடம் சொன்னதாவது:
ரேவா நதிக்கரையில் புண்ணியகோசம் என்னும் ஊரில் "வேதவித்" என்ற அந்தணன், மாதா, பிதா, குரு மூவரையும் முறைப்படி வணங்கி வழிபட்டு வந்ததாகவும், பின்னர் பகவானை வழிபட வேண்டும் என எண்ணியபோது, பகவான் ஒரு பிராமணனாக அவன் முன் தோன்றி இம்மாதிரி தென்பாகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கிடையே உள்ள வரகுணமங்கை என்னும் ஊருக்குச் சென்று தவமியற்றுமாறும் கூறவே, அந்த பிராமணனும் வரகுண மங்கையை அடைந்து பிரம்மசாரியாகவே இருந்து தவம் செய்தான். ஈசன் மீண்டும் அவன் முன்னே தோன்ற விஜயாசனன் என்ற பெயரோடு இங்கேயே கோயில் கொள்ளவேண்டும் என்று அவன் கேட்டுக் கொள்ள ஈசனும் அவ்வாறே அருள் புரிந்தான்.

இந்தக் கோயிலின் ராஜ கோபுரத்தில் தசாவதார சிற்பங்கள், காளிங்க நர்த்தனம் சிற்பம், வசுதேவர் தன் தலையில் கூடையில் குழந்தைக் கிருஷ்ணனை வைத்துக் கொண்டு யமுனையைக் கடப்பது ஆகிய சிற்பங்கள் காணவேண்டிய ஒன்றாகும். முன்னேற்பாடுடன் செல்லாததால் அப்போது படமெல்லாம் எடுக்கவில்லை. :(((((((

அடுத்துத் திருப்புளியங்குடி செல்லப் போகின்றோம்!

Geetha Sambasivam

unread,
Jun 21, 2009, 9:17:11 PM6/21/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

Sunday, June 21, 2009


தாமிரபரணியின் வடகரையில் வரகுணமங்கையில் இருந்து ஒரு மைல் தள்ளி அமைந்துள்ளது திருப்புளியங்குடி ஆகும். நம்மாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப் பட்டது. ஸ்ருதிஸாகரஸேகர விமானம் அல்லது வேதஸார விமானம் என அழைக்கப் படும் விமானத்தில் புஜங்க சயனக் கோலத்தில் கிழக்கே பார்த்தபடி எழுந்தருளி இருக்கின்றார் பெருமாள். தாயார் பெயர், மலர்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார், புளியங்குடி வல்லி, ஆகியன. வருணன், நரன், தர்மராஜா ஆகியோருக்குப் பிரத்யக்ஷமாய்க் காக்ஷி அளித்தார். ஸ்ரீ எனப் படும் மகாலக்ஷ்மியோடு இந்த மலைகளின் அழகையும், அங்கே பூக்கும் மலர்களின் அழகையும் கண்டு பெருமாள் இந்த இடத்தில் தங்கி லக்ஷ்மியோடு மகிழ்ந்திருந்தார். அதைக் கண்ட பூமாதேவி சற்றே மனக்கிலேசங்கொண்டவளாய் மனம் வருந்த, அவள் மனவருத்தம் பூமியெங்கும் வறட்சியாக மாறியது. பூலோக மக்கள் துன்பம் அடையக் கண்ட ஈசனை அனைவரும் பிரார்த்தித்து வேண்ட அவரும் பாதாளம் சென்று மறைந்திருந்த பூதேவியை அழைத்து வந்து செல்வத் திருமகளோடு நட்புக் கொள்ளுமாறு வேண்ட இருவரும் மனம் உவந்து நட்புப் பாராட்டினார்கள்.

இருவருடனும் இந்தக் கோயிலில் பெருமாள், "காசினவேந்தன்" (காசினி=பூமி) பூமிபாலன் என்னும் பெயருடன் காக்ஷி கொடுக்கின்றார். இந்தத் தலத்தின் புராணம் சொல்லுவது:

"இந்திரன் இந்திராணியுடன் தாமரைத் தடாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கே ஒரு ரிஷி மாற்றுருவில் தன் மனைவியுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தார். உண்மை தெரியாத இந்திரன் வஜ்ஜிராயுதத்தால் ரிஷியை அடிக்க அவர் சுய உருவில் துடிதுடித்து இறந்தார். பிராமணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்க இந்திரன் செய்வதறியாது தவித்தான். தேவகுருவான பிரஹஸ்பதி அவனை திருப்புளியங்குடிக்குச் சென்று பிரார்த்தித்துத் தவம் இயற்றிப் பூமிபாலரை வேண்டச் சொல்லி அனுப்பி வைக்கின்றார். இந்திரன் பாவங்கள் அனைத்தும் தொலைந்து இந்தத் தலம் ஒரு பிரசித்தி பெற்ற க்ஷேத்திரமாக மாறியது.

இந்திரன் தன்னுடைய நன்றியைத் தெரிவிக்கும் வண்ணம் வேள்வி ஒன்று செய்ய நினைத்தான். அவ்விதம் வேள்விக்கு ஏற்பாடுகள் செய்ய அரக்கன் ஒருவனால் இடையூறு ஏற்பட்டது. பூமிபாலர் இந்திரனுக்கு உதவ வேண்டி அவனைக் கதையால் அடிக்க, என்ன ஆச்சரியம்?? அந்த அரக்கனுக்கு தெய்வீக விமானம் ஒன்று வந்து அவனை அழைத்துக் கொண்டு தெய்வலோகம் செல்ல ஆரம்பிக்க, வியந்த இந்திரன் இதற்கான காரணத்தைக் கேட்டான். வசிஷ்டமுனிவரின் பிள்ளைகளால் வேள்விக்கு ஏற்பாடு செய்த யக்ஞசர்மா என்னும் அந்தணன் ரிஷி குமாரர்களுக்கு உரிய தக்ஷிணை கொடுக்காமல் ஏமாற்ற நினைக்க, அவர்களால் அரக்கனாய் மாறும் வண்ணம் சபிக்கப் படுகின்றான். விமோசனம் வேண்டிய யக்ஞசர்மாவிடம் இந்திரன் செய்யும் வேள்வியில் பூமிபாலரால் கதையால் அடிக்கப் படுவாய். அப்போது விமோசனம் கிடைக்கும் என்று கேள்விப் பட்டு இத்தனை நாள் காத்திருந்ததாயும், இப்போது சாபவிமோசனமும் முக்தியும் பெற்றுச் செல்லுவதாயும் அந்த அந்தணன் கூறினான்.

இதிலே சொல்லும் வரிசையில் நாங்கள் செல்லவில்லை. எங்க வண்டியின் ஓட்டுநர் எந்த ஊர்கள் அடுத்தடுத்து வருகின்றன, ஒரே கரையில் வருகின்றன என்பதைப் பார்த்தே கூட்டிச் சென்றார். இதில் முதல்நாள் நாங்கள் சென்றபோது திருச்செந்தூரும் போனோம். அதுவும் நடுவில் வரும். ஆனால் சாப்பாடுக்குக் கொஞ்சம் கஷ்டமாய்த் தான் இருந்தது. இத்தனை கோயில்களிலும் கோஷ்டி நடப்பது காலை பத்துமணிக்குப் பின்னரே. அதுக்கு அப்புறமே பிரசாதம் கிடைக்கும். நாங்கள் காலை வேளையிலேயே சென்றுவிட்டதால் சாப்பாடு கிடைக்காமல் கொஞ்சம் கஷ்டப் பட்டோம். எங்கே வேணாலும் சாப்பிடும்படிக்கு வயிறு ஒத்துழைக்கவில்லை என்பது வேறே. இப்போ அடுத்துச் செல்ல இருப்பது பெருங்குளம் அல்லது திருக்குளந்தை.

இந்த ஊருக்குச் செல்ல நிஜமாவே ஒரு பெரிய பெருங்குளத்தைச் சுற்றிக் கொண்டே போகவேண்டி இருக்கிறது. தாமிரபரணி ஜீவநதியே என்றாலும் நாங்கள் சென்றது தை மாதம் என்பதால் தண்ணீர் நிறையவே இருந்தது. அந்தக் கரும்பச்சை நிற நீர் நிலைகளும், சுற்றிலும் நீலநிற மலைத் தொடர்களும், வயல்களின் பச்சை நிறப் பயிர்களும், செம்மண்ணும், கரிசல் மண்ணும் கலந்த மண் வாசனையும் சேர்ந்து ஒரு சொர்க்கத்தையே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. பறவைகளின் சந்தோஷக் கூச்சல்கள் ஆங்காங்கே கண்ணுக்கும், மனதுக்கும் நிறைவாய் இருந்தது. பிரயாணமும் மிகவும் செளகரியமாயும், சுகமாயும் இருந்தது. குளத்துத் தண்ணீர் அசுத்தம் செய்யப் படவில்லை என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று.

Geetha Sambasivam

unread,
Jul 4, 2009, 5:59:13 AM7/4/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

Saturday, July 04, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! திருச்செந்தூர்!

திருக்குளந்தை தரிசனம் செய்யணும். பெருமாளைக் கொஞ்சம் நிற்கச் சொல்லிட்டு அவர் மருமகன் ஆன முருகனைப் பார்ப்போமா?? இப்போத் தானே முருகன் கோயில் கும்பாபிஷேஹம் ஆச்சு?? அதாங்க திருச்செந்தூரிலே! எங்க நவ திருப்பதிப் பயணத்தில் முதல்நாள் பயணத்தில் திருச்செந்தூர் போனோம்னு சொன்னேன் இல்லை. இப்போ திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேஹம் சென்ற வாரம் நடைபெற்றதை அனைவரும் அறிவார்கள். கும்பாபிஷேஹத்தை ஒட்டியே பதிவு எழுத நினைச்சும் பல்வேறு காரணங்களால் எழுத முடியவில்லை. தாமதமாகி விட்டது. அறுபடைவீடு என்று சொல்லப்படும் முருகனுக்குரிய படைவீடுகளில் இரண்டாம்படைவீடு திருச்செந்தூர் ஆகும். உண்மையில் இது ஆற்றுப்படை வீடு. ஆற்றுப் படுத்துதலே ஆற்றுப்படை என வழங்கப் பட்டு, நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் முருகனை நாயகனாய் வைத்து எழுதினார் என்பதையும் நாம் அறிவோம். இந்த இடத்தில் மனித மனத்தை ஆற்றுப்படுத்தி நல்வழியில் திருப்பி வீடு பேறு அடையச் செய்வதே ஆற்றுப்படையைக் குறிக்கும். யோக முறையில் நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களையும் முருகன் குடி கொண்டிருக்கும் ஆறு வீடுகளாய் எடுத்துக் கொண்டால், அவை நம்மை யோக முறையிலேயே ஆற்றுப்படுத்தி வீடுபேறு அடையச் செய்கின்றது. இவ்வகையில் அமைந்துள்ள இரண்டாம் ஆதாரமான சுவாதிஷ்டானத்துக்கு உரிய இரண்டாம் ஆற்றுப்படையான திருச்செந்தூரிலே சூரனை முருகன் சம்ஹாரம் செய்ததாகச் சொல்லப் படுகிறது. இந்தத் தலம் திருநெல்வேலியில் இருந்து 54 கிமீ தொலைவில் உள்ளது. கோபுரம் ஒன்பது தளங்களோடு 130 அடியில் அமைந்துள்ளது.

நக்கீரரின் திருமுருகாற்றுப்படை பற்றிய குறிப்புகளைக் கீழே காணலாம்.


2. திருச்சீர் அலைவாய்


வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையடு துயல்வரப்
படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக் . . . .80

கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின்
கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்டு
ஐவேறு உருவின் செய்வினை முற்றிய
முடியடு விளங்கிய முரண்மிகு திருமணி
மின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப
நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
சேண்விளங்கு இயற்கை வாண்மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்பத்
தாவில் கொள்கைத் தந்தொழில் மடிமார்
மனனேர்பு எழுதரு வாள்நிற முகனே . . . .90

மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்;ஒருமுகம்,
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே;ஒருமுகம்,
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே;ஒருமுகம்,
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே;ஒருமுகம் . .100

குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியடு நகையமர்ந் தன்றே.
ஆங்குஅம் மூவிருமுகனும் முறைநவின்று ஒழுகலின்
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்
செம்பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர்விடுபு
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்

பன்னிரு கைகள்:

விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒருகை; உக்கம் சேர்த்தியது ஒருகை;
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயதொருகை;
அங்குசங் கடாவ ஒருகை, இருகை . . . .110

ஐயிரு வட்டமொடு எ·குவலந் திரிப்ப,
ஒருகை மார்பொடு விளங்க ஒருகை
ஒருகை தாரொடு பொலிய, ஒருகை
கீழ்வீழ் தொடியடு மீமிசைக்கொட்ப, ஒருகை
பாடின் படுமணி இரட்ட, ஒருகை
நீனிற விசும்பின் மலிதுளி பொழிய, ஒருகை
வானர மகளிர்க்கு வதுவை சூட்ட,
ஆங்குஅப் பன்னிரு கையும் பாற்படஇயற்ற,
அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்
வயிர்எழுந் திசைப்ப, வால்வளை ஞரல, . . . .120

உரந்தலைக் கொண்ட உருமிடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ,
விசும்பஆ றாக விரைசெலல் முன்னி,
உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர்
அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பேஅதான்று.



இந்தத் தலம் மற்ற முருகன் தலங்களைப் போலல்லாமல் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். திருச்சீரலைவாய் எனவும் அழைக்கப் பட்டது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் இந்தக் கோயிலைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஆகவே சுமார் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட கோயில் எனலாம். புறநானூற்றில் இந்தக் கோயிலை வெண்டலைப் புனரி அலைக்குடம், செந்தில் நெடுவேள் துறை என அழைக்கப் பட்டுள்ளது. முருகன் இங்கே ஆற்றுப் படுத்தப் பட்டு, சிவனையும் வழிபட்டதாகக் கந்தபுராணம் சொல்லுகின்றது. முருகன் வழிபட்ட சிவலிங்கம் மூலஸ்தானத்திற்குப் பின்னால் ஐந்து லிங்கங்களாக இருப்பதாகச் சொல்லுகின்றார்கள். எங்கே பார்க்கிறது?? கூட்டமோ கூட்டம்! சாதாரண நாட்களிலே வழிகிற கூட்டம். தரிசனம் கிடைச்சாலே அதிர்ஷ்டம்னு சொல்லணும். நாங்க போனது தைப்பூசம் சமயம் வேறே. முதல்முறை திருச்செந்தூர் போனது எண்பதுகளின் கடைசியில்.அப்போ எல்லாம் நான் பெரிய எழுத்தாளி ஆகப் போறது தெரியாததாலே பல விஷயங்களைத் தோண்டித் துருவிப் பார்க்க சந்தர்ப்பம் கிடைச்சுப் பார்த்தும் ,குறிச்செல்லாம் வச்சுக்கலை. இரண்டாம் முறையாகச் சென்றது தான் 2007-ம் வருஷம் இந்த நவ திருப்பதி, நவ கைலாயம் பயணத்தோடு சேர்ந்து. முதல்முறை முருகனை நன்கு பார்த்ததோடு இலை விபூதியும் தாராளமாய்க் கிடைச்சது. இப்போ இலை விபூதி கொடுப்பதை அரசு வாரம் ஒருநாளோ, இரண்டு நாளோ எனக் கட்டுப்பாடு செய்திருப்பதாகவும், அதுவும் அறநிலையத் துறை அலுவலகம் மூலமே வாங்க முடியும் எனவும் சொன்னார்கள். ரொம்ப ஏமாற்றம் மட்டுமில்லாமல் வருத்தமாகவும் இருந்தது. விபூதிக்குக் கூட அரசு அனுமதி கொடுக்கவேண்டி இருக்கேனு நினைச்சா வேதனை. எங்க வண்டி ஓட்டுநர் சிறப்புச் சீட்டு எடுத்தாலும் கூட்டத்திலே உள்ளே போகிறது கஷ்டம்னும், அங்கே உள்ள போத்திமார்கள் யாரையாவது பிடிச்சு, பணம் தரதாகச் சொல்லிப் பார்த்துட்டு வருமாறும் சொல்லவே, சரினு யாரையோ பிடிச்சோம். முகம் நினைவில் இல்லை. ஆனால் அவர் எங்களைத் திரும்பி வரும் கூட்டத்தில் எதிரிட்டு அழைத்துச் சென்றார். சரிதான், இன்னிக்கு அதோகதி தான் நம்ம பாடுனு நினைச்சேன். ஆனால் அந்தச் சுருக்கு வழியில் சீக்கிரம் மூலஸ்தானம் வந்துடுச்சு. போய் ஸ்வாமி தரிசனம் அவசரம் அவசரமா, மனசிலேயே நிக்காமல் பண்ணினோம்.

Geetha Sambasivam

unread,
Jul 5, 2009, 5:54:23 AM7/5/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! திருச்செந்தூர்! 2

இந்தக் கோயிலின் அமைப்பு ஓம் வடிவத்தினால் ஆனது என்று சொல்லுவார்கள். பிள்ளையார் சந்நதி, வள்ளி, தேவசேனா சந்நதி, திருமால் சந்நதி எல்லாம் சேர்ந்து ஒரு கோடு வரைந்தால் ஓம் என்ற எழுத்தைப் போல் வரும் என்று சொல்கின்றனர்.

சூரனை சம்ஹாரம் செய்த இடம் திருச்செந்தூர் எனப் படுகிறது. அதிக தெய்வபக்தி உள்ளவனே சூரபத்மன். பொதுவாக அரக்கர்கள் என இவர்களைக் குறிப்பிடுவதின் காரணமே, தம் தெய்வபக்தியையும், படித்திருக்கும் விசாலமான படிப்பையும், செய்திருக்கும் தவங்களையும், அதனால் அடைந்திருக்கும் அதி விசேஷமான வரங்களையும் ஆக்கபூர்வமாய்ப் பயன்படுத்தாமல், மக்களுக்குத் துன்பம் இழைக்கும் வழியிலேயே செலவிடுவதே காரணம். அதீதமான தெய்வசக்தியைப் பெற்ற சூரபத்மன் அந்தச் சக்தியின் உதவியால் மூன்று உலகையும் ஆண்டு வந்தான். ஆனால் ஆணவம் மிகக் கொண்டு அழிவுச் செயல்களைச் செய்ய ஆரம்பித்து மக்களைத் துன்புறுத்தினான். இந்தச் செயல்களை அழித்து சூரனை நல்வழிப்படுத்தவே கந்தன் திருஅவதாரம்.

சூரனின் சகோதரர்களை ஒழித்த முருகக் கடவுள் சூரனுடன் போர் செய்தார். முருகன் = அருள் என்றால் சூரன்= இருள், முருகன்= கருணை என்றால் சூரன்= கொடுமை, முருகன்= அறிவு என்றால் சூரன் = அறியாமை என்னும் மருள். சூரனின் ஒரு பாதி "நான்" மறுபாதி "எனது" இந்த இரண்டையும் கொண்ட சூரன் மாமரமாக மாறிக் கடலடியில் தலைகீழாக நின்று முருகனை ஏமாற்ற நினைத்தான். ஆனால் அவனால் முடியலை. கந்தனின் வெற்றிவேல், சொன்னதைச் செய்யும் தீரவேல் அந்த மரத்தை இருபகுதியாகப் பிளந்தது. ஒரு பாகம் ஆண்மயிலாகவும், மற்றொரு பாகம் சேவலாகவும் மாற்றி முருகன் ஆண்மயிலைத் தனக்கு வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் வைத்துக் கொண்டார்.

இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கடலில் நீராடிவிட்டுப் பின்னர் அங்கே இருக்கும் நாழிக்கிணறு என்றழைக்கப் படும் ஒரு புண்ணிய தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். இந்த நாழிக்கிணறு ஏழு அடி ஆழமே உள்ளது எனவும், எப்போதும் இதில் நீர் ஊறிக் கொண்டே இருக்கும் எனவும் சொல்கின்றனர். சூரனோடு போரிட சுப்ரமணியர் வந்தபோது அவருடன் போரிட்ட படைவீரர்கள் தாகம் தணிப்பதற்காக முருகன் கடலோரத்தில் இந்தக் கிணற்றைத் தோற்றுவித்தார் என்றும் அதனாலே இந்தத் தண்ணீர் சுவையாகவும் நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருப்பதாகச் சொல்கின்றனர். இந்தக் கிணற்றுக்கு ஸ்கந்த புஷ்கரணி என்ற பெயரும் உண்டு.வள்ளி ஒளிந்திருந்ததாகச் சொல்லப் படும் வள்ளி குகையும் கோயிலுக்கு வெளியே இருக்கிறது. அதுக்குத் தனியாக் கட்டணம் செலுத்தணும். உள்ளே செல்லுவது கொஞ்சம் கஷ்டம் தான். மெதுவா உட்கார்ந்து உடலை வளைத்து நெளித்தே போகணும். கழுத்து பிரச்னை என் கணவருக்கு அதிகமா இருந்ததால் கொஞ்சம் யோசிச்சுட்டுப் போகவேண்டாம்னு முடிவெடுத்தோம். ஏற்கெனவே பார்த்தாலும் திரும்பிப் பார்க்க ஆசைதான். ஆனால் அந்தச் சமயம் அவருக்குப் பிரச்னை அதிகமா இருந்தது. நாழிக்கிணற்றின் அருகே நெருங்கவே முடியலை. கூட வந்தவர் கிட்டே சொல்லிக் கொஞ்சம் நீர் கொண்டுவரச் செய்து மேலே தெளித்துக் கொண்டோம். அவ்வளவே முடிந்தது. கோயிலுக்குள் நுழைய ஷண்முகவிலாசம் மண்டபத்தைக் கடந்தே செல்லவேண்டும். அங்கே வெகு தூரத்தில் இருந்தும் வந்த பயணிகள் இளைப்பாறிக் கொள்ள வசதியாக இருக்கும்.


படங்கள் உதவி: திகழ்மிளிர். கேட்காமல் எடுத்ததுக்கு மன்னிக்கவும்.

Geetha Sambasivam

unread,
Aug 3, 2009, 3:03:51 AM8/3/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

Sunday, August 02, 2009

உண்மையாகவே பெரிய குளத்தைச் சுற்றிக் கொண்டுதான் போகணும், திருக்குளந்தைக்கு. வழி நெடுக வாழைத் தோப்புகள். விதவிதமாய் வாழை பயிரிடப் பட்டுள்ளது. நல்ல பசுமை! குளிர்ச்சியாகவும் இருந்தது கண்ணுக்கும், மனதுக்கும். நாம் போய் தரிசிக்கப் போவதும் அந்தப் பச்சை மாமலைபோல் மேனியானைத் தானே! இந்தக் கோயிலின் மூர்த்திக்கு மாயக் கூத்தன் என்ற பெயர். இவரைப் பற்றி நம்மாழ்வார் பாடி இருப்பதாவது:
“கூடச் சென்றேன், இனி என் கொடுக்கேன்?
கோல்வளை நெஞ்சத் தொடக்கமெல்லாம்
பாடற்றொழிய இழந்து வைகல்
பல்வளையார் முன் பரிசளித்தேன்
மாடக் கொடி மதில் தென்குளந்தை
வண்குட பால் நின்ற மாயக் கூத்தன்
ஆடல் பறவை உயர்ந்த வெல் போர்
ஆழி வலவலை ஆதரித்தே!” (2ம் திருவாய்மொழி, 8-ம் பத்து, பாடல் எண் 4)
தோழி, மாடங்களோடும், கொடிகளோடும் கூடிய மதில்களை உடைய திருக்குளந்தை எனச் சொல்லுகின்றார் நம்மாழ்வார் இங்கே. இந்தத் திருக்குளந்தையின் மேற்கில் நிற்கும் மாயக் கூத்தனைக் கூடுவதற்குச் சென்றேன் எனத் தன்னை ஒரு பெண்ணாக உருவகம் செய்து கொண்டு சொல்கின்றார். கருடக் கொடியை உடைய அவனின் கைகளில் திருச்சக்கரம் இருக்கும். அவனை விரும்பி நாடிச் சென்ற நான் அவன் பால் என் கை வளையல்களை இழந்தேன், என் நெஞ்சை இழந்தேன், இழக்கவே முடியாத என் நாணத்தையும் இழந்தேன், இனி என்ன இருக்கிறது? “ என்று தன்னை மையல் கொண்ட ஒரு பெண்ணாய் உருவகப் படுத்திக் கொண்டு சொல்லுகின்றார். மற்ற ஓர் பாடலில்

“மாயக் கூத்தா வாமனா வினையோன் கண்ணா கண்கை கால்
தூய செய்ய மலர்களா? சோதிச் செவ்வாய் முகிழ்தா?
சாயல் சாமத்திருமேனி தன் பாசடையா? தாமரை நீள்
வாசத்தடம்போல் வருவானே ஒருநாள் காண வாராயே!”

மாயக் கூத்தன் என அழைக்கின்றார் கண்ணனை. மாயக் கூத்தனான அந்தக் கண்ணனைக் காணவேண்டும், அவன் வடிவழகை இரு கண்ணாரக் காணவேண்டும் என்ற ஆவல் மீதூற அவனை அழைக்கின்றார். மாயக் கூத்தா, வாமனா, உன் கண்களும் கைகளும், கால்களும் மலர்களால் ஆனவையோ, உன் திருவாய் ஆம்பல் மலரின் அரும்போ? உன் கரிய திருமேனியைப் பார்த்தால் பச்சை இலை போல் உள்ளதே? இவைகள் அனைத்தையும் உன்னிடத்தில் வைத்திருக்கும் நீ நான் தாகம் தீர்த்துக் கொள்ள அமைந்த திருக்குளம்போல் உள்ளாய்! உன்னை நான் என் கண்ணாரக் காண நீ ஒரு நாள் நேரில் வரமாட்டாயா?” என்றும் பாடுகின்றார். அத்தகைய மாயக் கூத்தன் தான் இங்கே மூலஸ்தானத்தில் கிழக்கே பார்த்து நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார். தாயார் பெயர் அலமேலு மங்கை என்றும், திருக்குளந்தை வல்லி என்றும் அழைக்கப் படுகின்றது. தேவகுருவான பிரஹஸ்பதிக்குப் பிரத்யட்சமாய்க் காக்ஷி கொடுத்தார் எனவும் சொல்லப் படுகின்றது. பெருங்குளமே இந்தக் கோயிலின் தீர்த்தமும் ஆகும். இந்தக் கோயிலின் தல வரலாறு பின்வரும்படி அமைந்துள்ளது.

விப்ர குலத்தைச் சேர்ந்த அந்தணர் வேதசாரன் என்பவர் அல்லும் பகலும் வேங்கடவாணனை வழிபட்டு அவன் பாதாரவிந்தமே கதியென இருந்து வந்தார். பேரழகு வாய்ந்த குமுதவதி என்னும் பெண்ணை மனைவியாகப் பெற்றிருந்த அவருக்கு, குமுதவதி கமலாவதி என்னும் அழகிய பெண்ணைப் பெற்றுக் கொடுத்தாள். இந்தக் கமலாவதி இவர்கள் இருவரும் செய்த மாதவத்தால், அலர்மேல் மங்கைத் தாயாரே இவர்கள் பெண்ணாக விரும்பி வந்து தோன்றி வளர்ந்து வந்தாள். இவள் ஆண்டாளைப் போல் அரங்கன் ஒருவனையே தன் மணாளனாக ஏற்றாள். அதற்கெனவே வழிபட்டும் வந்தாள்.

அந்தக் காலகட்டட்தில் சிலவசாரன் என்னும் அரக்கன் ஒருவன் இமயமலையில் வாழ்ந்து வந்தான். பெண்களிடம் அதீத ஆசை கொண்ட இவன் பேரழகு வாய்ந்த ஆயிரம் பெண்களை ஒரே சமயம் மணக்கவேண்டும் என்ற ஆசையில் உலகிலுள்ள அழகான பெண்களை எல்லாம் கவர்ந்து சென்று இமயமலையில் சிறை வைத்திருந்தான். இவ்விதம் 998 அழகிகளைச் சிறை வைத்திருந்த இவன் இன்னும் இரண்டு பெண்கள் வேண்டும் என்று அவர்களைத் தேடி அலைந்து திரிந்து விண்ணில் வந்து கொண்டிருந்தான். இவன் கண்களில் வேதசாரன் மனைவி குமுதவதி கண்ணில் பட அவளைக் கவர்ந்து சென்று சிறை வைத்துவிட்டு ஆயிரமாவது பெண்ணைத் தேடிக் கிளம்பிச் சென்றான்.

மனைவியைப் பிரிந்த வேதசாரன் துன்பத்துடன் வந்து பெருமாளைத் தான் எங்கனம் வழிபடுவது என எண்ணிக் கொண்டு இறைவனையே மனைவியை மீட்டுத் தரவேண்டி வழிபட்டான். விடாமுயற்சியுடன் பக்தி செலுத்திய அவன் பக்திக்கு இரங்கிய பரந்தாமனும் பக்கத்தில் இருந்த கருடாழ்வாரைப் பார்க்க, அப்போது பார்த்து கருடனுக்குத் தான் பெருமாளுக்குத் துணையாகச் செல்வது குறித்து மமதை உண்டாயிற்று. கருடனின் மமதையைப் புரிந்து கொண்ட பரந்தாமன் கருடனைத் தன் கால் இடுக்கில் வைத்துக் கொண்டு மனோவேகத்தில் இமயத்தை அடைந்தார். சிறைப்பட்டிருந்த குமுதவதியை மீட்டுக் கொண்டு வந்து திருக்குளந்தை வந்தடைந்தார்.

சிலவசாரன் இதை அறிந்து திருக்குளந்தை வந்து வேங்கடவாணனைப் போருக்கு அழைக்க இருவருக்கும் கடும் யுத்தம் மூள்கிறது. தண்பொருநை நதிக்கரையில் அரக்கனைக் கொன்று வீழ்த்திய பரந்தாமன் அரக்கன் தலையின் மேலேறி, ஆனந்தக் கூத்தாட, அன்றிலிருந்து சோரநாட்டியன், மாயக் கூத்தன் என்ற பெயரையும் பெற்றான். அரக்கனுக்குத் தன் தலையில் பரம்பொருளின் திருவடி பெற்றதும் உண்மை உணர, சாபவிமோசனம் பெற்றுக் கந்தர்வனாகி இறைவனை வணங்கி விடைபெற்றான். கமலாவதியின் பக்திக்கும், தவத்திற்கும் இரங்கிய பரம்பொருள் அவளை தை மாதம் சுக்லபக்ஷ துவாதசியில் பூச நக்ஷத்திரத்தில் மணந்து கொண்டு கல்யாணக் கோலமும் காட்டி அருளினார்.

ஆணவன் நீங்கிய கருடனுக்குத் தனக்குச் சமமான இடம் தந்து தன் அருகிலேயே எழுந்தருளச் செய்தார். கருடன் இங்கே பறக்கும் கோலத்தில் சிறகுகளை உயரே தூக்கிய வண்ணம் ஆடல் பறவையாகக் காக்ஷி அளிக்கின்றார். இந்தத் திருக்கோயிலின் மதிலின் ஈசானிய மூலையில் வீற்றிருக்கும் கருடனுக்குப் பெருமாளுக்குச் சாற்றிய பூச்சட்டையை மறுநாள் சாற்றுவது வழக்கம். இதன் பிறகே பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகம் செய்யப் படும். நம்மாழ்வாரின் திரு அவதாரப் பெருவிழாவின் ஐந்தாம் நாளில் நவதிருப்பதிப் பெருமாள்களில் ஒருவராக ஆழ்வார் திருநகரிக்கு இந்த மாயக் கூத்தர் எழுந்தருளும் சமயம் நம்மாழ்வாரின், “மாயக் கூத்தா வாமனா!” என்ற பாசுரம் பாடி வரவேற்பதும், மறுநாள் “கூடச் சென்றேன்” என்ற பாசுரத்தைப் பாடி வழியனுப்புவதும் நடந்து வருகிறது.

பெருங்குளம் என்னும் பெயருக்கேற்ற இந்த ஊர்க்குளத்திலிருந்து பார்த்தால் ஒரே சமயம் சூரியன், பராசக்தி, திருமால், விநாயகர், சிவன் ஆகியோரைத் தரிசிக்க முடியும். இந்த மாயக் கூத்தருக்குத் திருமஞ்சனம் கிடையாது. திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாளின் மேனியைப் போன்ற இவரின் திருமேனியில் பூச்சட்டை சாற்றும்போது காணவேண்டும் என்றும், அப்போது இவரின் மேனி அழகு கண்ணையும் கருத்தையும் கவர்ந்துவிடும் என்றும் சொல்கின்றனர். இந்த மாயக் கூத்தர் மேல் பிள்ளைத் தமிழ், ஊஞ்சல், நலுங்கு, கலித்துறை போன்ற பாடல்களை ஜெகன்வாத கவிராயர் என்பவர் பாடியுள்ளார். மாயக் கூத்தரின் பிரதம அடியாராகக் கழுநீர்த் தொட்டியான் என்பவர் கருதப் படுகின்றார். இவரே யக்ஞ நாராயணன் என்ற பெயரிலும் உற்சவருக்கும், மூலவருக்கும் நடுவில் உள்ள கூடத்தில் வழிபடப் பெறுகின்றார். கழுநீர்த்தொட்டியான் சந்நிதியில் மடப்பள்ளிச் சாம்பலே பிரசாதமாகவும், யக்ஞ நாராயணன் சந்நிதியின் பிரம்பும், பாதுகையும் காணக் கிடைப்பது ஓர் சிறப்பாகவும் சொல்லப் படுகிறது. ஸ்ரீயக்ஞநாராயணனுக்கு மாயக் கூத்தருக்குச் சாற்றிய நிர்மால்யம் மட்டுமே சாத்தப் படுகிறது என்பதும் இங்கே விசேஷமாய்ச் சொல்கின்றனர். மேலும் குமுதவதியை மீட்டுவர எழுந்து சென்ற பெருமாள் அதன் பின்னர் அமராமல் பக்தர்களைக் காக்கவேண்டி உடனே செல்ல வசதியாக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிப்பதாகவும் ஐதீகம்.
அடுத்து இரட்டைத் திருப்பதி தரிசனம்.

Geetha Sambasivam

unread,
Aug 17, 2009, 6:43:17 AM8/17/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

Monday, August 17, 2009


இந்த இரட்டைத் திருப்பதியில் அடுத்தடுத்து இரண்டு கோயில்கள் இருக்கின்றன. அதனால் இவை இரட்டைத் திருப்பதி என அழைக்கப் படுகிறது. ஆழ்வார்திருநகரியில் இருந்து 2 மைல் தொலைவிலே தாமிரபரணியின் வடகரையிலே இவை உள்ளன. முதல் திருப்பதியிலே பெருமாள் திவ்ய நாமம் ஸ்ரீநிவாசன் என்ற தேவர்பிரான் ஆகும். நின்ற திருக்கோலத்தில் கிழக்கே பார்த்துக் கொண்டு இருக்கிறார். தாயார் ஸ்ரீதேவிதிருமார்பிலும் இருபக்கமும் உபய நாச்சியார்களும் உள்ளனர்.

அடுத்த கோயிலில் செந்தாமரைக் கண்ணன், அரவிந்தலோசனன் என்ற திருநாமங்களால் அழைக்கப் படும் பெருமாள். குமுத விமானத்திலே தாயார் கருத்தடங்கண்ணியோடு எழுந்தருளி இருக்கிறார். நம்மாழ்வார் மங்களாசாஸனம் செய்த ஊர். இந்தக் கோயிலின் தலபுராணம் கீழ்க்கண்டவாறு சொல்லப் படுகிறது.

திருப்புளியங்குடிக்குத் தென் கிழக்கே நெல் வயல்களும், பூந்தோட்டங்களும் நிறைந்த கோதார நிலையம் என்னும் திருப்பதி ஒன்று இருந்தது. அதுவே தொலைவில்லி மங்கலம் என அழைக்கப் பட்டது. ஆத்ரேயகோத்திரத்தைச் சேர்ந்த சுப்ரபர் என்னும் முனிவர், இங்கே ஊரின் அழகையும், பொலிவையும் கண்டு யாகம் செய்யத் தகுந்த இடம் எனத் தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். யாகசாலை அமைக்கப் பூமியை உழுது சமன்படுத்தியபோது அங்கே ஒரு வில்லும், தராசும் கிடைக்கப் பெற்றார்.

இது யாருடையவை என எண்ணி எப்படி இங்கே வந்தது என்றும் யோசித்துக் கொண்டே அவற்றை எடுத்தார். தராசு ஒரு பெண்ணாகவும், வில் ஓர் ஆண்மகனாகவும் மாறிக் கணவன், மனைவியாகத் தோற்றம் தர, சுப்ரபரும் மற்றவரும் வியந்து, இது என்ன விந்தை என அந்தத் தம்பதிகளைக் கேட்டனர். தம்பதிகளில் கணவன் சொன்னான்:” முன்பிறவியில் வித்யாதரன் என்னும் தேவனாக இருந்த அவன் தன் மனைவியான இந்தப் பெண்ணுடன் மோகம் கொண்டு உடலில் ஆடையில்லாமல் இருந்த கோலத்தில் யாத்திரை சென்று கொண்டிருந்த குபேரன் கண்ணில் பட அவனும் இவ்விதம் பொதுஇடத்தில் அநாகரீகமாய் நடந்து கொண்டதற்கு அவர்களை வில்லாகவும், தராசாகவும் மாறும்படி சாபம் கொடுத்துவிட்டான். சாபவிமோசனம் கிடைக்காதா என எண்ணி ஏங்கிய அவர்களுக்கு, சுப்ரபாதர் என்னும் முனிவர் யாகசாலை அமைக்க நிலத்தை உழும்போது உங்களுக்குச் சுயவுருக் கிட்டும் என்று சொன்னதாகவும், இப்போது சுயவுருக்கிட்டியதால் அவரைப் பணிந்து ஏத்துவதாகவும் சொன்னார்கள். முனிவர்களும் அவர்களை அனுப்பிவிட்டு விஷ்ணுவை ஆராதித்துப் பணிந்து தேவர்பிரான் என்ற பெயரோடு அங்கே எழுந்தருளச் செய்தனர். வில்லுக்கும், தராசுக்கும் முக்தி கொடுத்த இடமாகையால் அந்தப் பெயரிலேயே இது தொலைவில்லி மங்கலம் என அழைக்கப் படவேண்டும் என்றும் பிரார்த்தித்தனர்.

சுப்ரபர் தினமும் அந்தக் கோயிலுக்கு வடக்கே உள்ள பொய்கைக்குச் சென்று அங்கே தாமரைப் பூக்களைப் பறித்து மாலை தொடுத்து பெருமானை அணியச் செய்து வந்தார். மாலையின் அழகைக் கண்டு உவந்த பெருமான் எங்கே இருந்து இத்தனை அழகான மலர்கள் கிடைக்கின்றன என்று கண்டறிய முனிவரோடு அங்கே வர, பொய்கையின் அழகையும், மலர்களின் வண்ணவிசித்திரங்களையும் கண்டு மனம் மகிழ்ந்து, தான் யாகசாலையில் தேவர்பிரானாகவும், இந்தப்பொய்கைக் கரையில் அரவிந்தலோசனனாகவும் இருக்கப் போவதாய்ச் சொல்கின்றார். தினந்தோறும் முதலில் தேவர்பிரானுக்கு இந்தத் தடாகக் கரையின் பூக்களால் வழிபாடுகள் நடத்திவிட்டு பின்னர் இந்த அரவிந்தலோசனனையும் தாமரை மலர்களால் அர்ச்சிக்கவேண்டும் என்றும் அருளிச் செய்தார்.

அச்வினி தேவர்கள் வைத்தியத்தில் தேர்ந்தவர்கள். அவர்களுக்குத் தேவர்களுக்குக் கிடைப்பதுபோல் யாகங்களிலும் யக்ஞங்களிலும் அவிர்பாகம் கிடைக்கவில்லை. ஆகவே பிரம்மாவிடம் சென்று தங்களுக்கும் அவிர்பாகம் கொடுக்கவேண்டுகின்றனர். பிரமன் அவர்களை தேவர்பிரானையும், அரவிந்தலோசனனையும் வணங்கித் தவம் இயற்றி வரம் வாங்கி வருமாறு கூறுகின்றான். அச்வினி தேவர்கள் அவ்விதமே தொலைவில்லிமங்கலம் பொய்கையில் நீராடி தேவர்பிரானையும், அரவிந்த லோசனனையும் வழிபாடுகள் செய்து தவம் இயற்றினார்கள். இறைவனும் அவர்கள் தவத்தை மெச்சி அவர்களுக்கும் அவிர்பாகம் கிடைக்குமாறு தேவர்களுக்குச் சொல்லிவிட்டு இந்தத் தீர்த்தமும் உங்கள் பெயரால் அச்வினி தீர்த்தம் என வழங்கப் படும் என்றும் அருளிச் செய்தார். இந்த அச்வினி தீர்த்தத்தில் நீராடினால் சகலவியாதிகளும் தீர்ந்துவிடும் என்றும் சொல்லுகின்றனர். கங்கைக்கரையில் உள்ள ஓர் அந்தணரான சத்தியசீலரின் இரண்டாவது மகன் ஆன விபீதகன் குஷ்டத்தால் பீடிக்கப் பட்டிருக்க, நாரதமுனி அவன் முற்பிறவியில் தன் குருவின் பசுவைத் திருடியதால் குருவின் சாபத்தால் இந்நிலைமை அடைந்திருப்பதாயும் தென்னாட்டிற்கு வந்து அச்வினி தீர்த்தத்தில் நீராடினால் ரோகம் நீங்கும் என்று சொல்லுகின்றார். அது போல் விபீதகனும் தாமிரபரணியின் வடகரையில் உள்ள தொலைவில்லிமங்கலம் வந்து அச்வினி தீர்த்ததில் நீராடி ரோகம் நீங்கப் பெற்றான் என்றும் சொல்லுவார்கள். அடுத்து நம்ம டோண்டு சாரின் இஷ்ட தெய்வமும், வலைஉலகப் பெருமக்களின் குலதெய்வமும் ஆன தென் திருப்பேரை மகரநெடுங்குழைக்காதன். அப்பா, எவ்வளவு பெரிய காது? எவ்வளவு பெரிய குழை???

devoo

unread,
Aug 17, 2009, 2:38:23 PM8/17/09
to இல்லம் (your HOME)
Aug 17, 3:43 pm, Geetha Sambasivam
//திருப்புளியங்குடிக்குத் தென் கிழக்கே//

திருப்புளிங்குடி என இருக்க வேண்டும்;
புளியங்குடி வேறு ஊர்; ஸ்ரீவில்லிபுத்தூர் - தென்காசிக்கு இடையில்.
தற்போது இயற்கை வேளாண்மைக்கு மையமாக விளங்குகிறது.

புளிங்குடிக் கிடந்து வரகுண மங்கை இருந்துவை குந்தத்துள் நின்று,
தெளிந்தவென் சிந்தை அகங்கழி யாதே
என்னையாள் வாயெனக்
கருளி,
நளிந்தசீ ருலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள்கூத் தாடிநின் றார்ப்ப,
பளிங்குநீர் முகிலின் பவளம் போல் கனிவாய்

சிவப்பநீ காணவா ராயே !


எம்மிடர் கடிந்திங் கென்னையாள் வானே,
இமையவர்
தமக்குமாங் கனையாய்,
செம்மடல் மலரும் தாமரைப் பழனத்
தண்திருப்
புளிங்குடிக் கிடந்தாய்,
நம்முடை யடியர் கவ்வைகண் டுகந்து நாம்களித் துளநலம் கூர,
இம்மட வுலகர் காணநீ யொருநாள்
இருந்திடாய்
எங்கள்கண் முகப்பே !


தேவ்

Geetha Sambasivam

unread,
Aug 21, 2009, 9:51:30 AM8/21/09
to il...@googlegroups.com
திருத்தத்திற்கு நன்றி. இரண்டும் ஒரே ஊர்னு நினைச்சிருக்கேன்.

2009/8/18 devoo <rde...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Aug 21, 2009, 9:53:47 AM8/21/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

Friday, August 21, 2009

திருச்செந்தூர் செல்லும் வழியிலேயே இந்தக் கோயில் இருப்பதால் திருச்செந்தூர் செல்லும் போதே இந்தக் கோயிலைத் தரிசித்துவிட்டே சென்றோம். திருச்செந்தூரில் நடை சார்த்த நேரம் ஆகும் என்பதாலும், இந்த மாதிரி கிராமங்களின் சிறு கோயில்கள் சீக்கிரம் மூடிவிடுவதாலும் , திருச்செந்தூரில் இருந்து திரும்ப வரும்போது பார்க்கமுடியுமோ என்ற எண்ணத்தாலும் போகும்போதே சென்றோம். இந்த நவதிருப்பதிகள் அனைத்துமே டிவிஎஸ் நிர்வாகத்தினரின் உதவியோடு நிர்வாகமும், பக்தர்களுக்கு தரிசன வசதிகளும் மிகவும் சிறப்பாக நடை பெற்று வருகிறது. கோயில்களும் சுத்தமாய்ப் பராமரிக்கப் படுகின்றன. பொதுவாகத் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்ட மக்களே கொஞ்சம் சுத்தம் பராமரிக்கப் படுவதில் ஆர்வம் உள்ளவர்களாய் இருக்கின்றனர். பெரும்பாலும் வடமாவட்டங்களில் காணப்படும் ப்ளாஸ்டிக் கழிவுகளும், அங்கே குறைவாகவே காணமுடிகிறது. சாலைப் பராமரிப்பும் மிகவும் சுகமாய் இருக்கிறது. ஆகையால் பயணமும் செளகரியமாகவே அமைந்தது. ஓட்டுநரும் கோயில்கள் பற்றிய தகவல்களை நன்கு அறிந்தவராய் இருந்ததால் வசதியாகவும் இருந்தது.

திரு டோண்டு சாரின் குலதெய்வமும், இஷ்டதெய்வமும், வலைப்பதிவர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவரும் ஆன மகரநெடுங்குழைக்காதர் கோயில் தென் திருப்பேரையில் தாமிரபரணியாற்றின் தென்கரையில் உள்ளது. பெருமாள் நல்ல ஆஜாநுபாகுவாக அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி கொடுக்கின்றார். பெரிய காதுகள், அதற்கேற்ற மீன் வடிவம் கொண்ட மகர நெடுங்குழைகள். அதி அற்புதமாய் உள்ளது. கிழக்கே பார்த்துக்கொண்டு பூமாதேவி அளித்ததாய்ச் சொல்லப் படும் குழைகளை அணிந்து கொண்டு அதன் காரணமாய் ஸ்ரீ எனப் படும் லட்சுமியின் கோபத்துக்கு ஆளானதாய்ச் சொல்லுகின்றார்கள். தென் திருப்பேரையில் தான் பகவான் பூமாதேவியிடம் ஆசை கொண்டதாயும் சொல்லுகின்றனர். ஒருவேளை இந்த இடத்தின் தண்மையும், பசுமையும் ஆசை கொள்ள வைத்ததோ என்னமோ?? நாங்களும் பார்த்து இரண்டு வருஷம் ஆச்சு, இப்போ பசுமை அப்படியே இருக்கா இல்லையா எப்படினு தெரியலை!  இங்கே மஹாலக்ஷ்மி பூமாதேவியின் பேரில் பெருமாளுக்குத் தனி ஆசை இருப்பதைக் கண்டு தனக்கு பூமாதேவியின் உருவும், நிறைவும் ஏற்படவேண்டும் என வேண்டினாளாம். அதுவும் துர்வாஸரிடம் கேட்டிருக்கிறாள். உடனே துர்வாஸர் பூமாதேவியைப் பார்க்க தென் திருப்பேரையை அடைந்தார்.

பங்கையக் கண்ணன் என்கோ.
பவளச்செவ் வாயன் என்கோ,
அங்கதிர் அடியன் என்கோ.
அஞ்சன வண்ணன் என்கோ,
செங்கதிர் முடியன் என்கோ.
திருமறு மார்வன் என்கோ,
சங்குசக் கரத்தன் என்கோ.
சாதிமா ணிக்கத் தையே. 3.4.3
3049
சாதிமா ணிக்கம் என்கோ.
சவிகோள்பொன் முத்தம் என்கோ,
சாதிநல் வயிரம் என்கோ,
தவிவில்சீர் விளக்கம் என்கோ,
ஆதியஞ் சோதி என்கோ.
ஆதியம் புருடன் என்கோ,
ஆதுமில் காலத் தெந்தை
அச்சுதன் அமல னையே. 3.4.4 நம்மாழ்வார் பாசுரம். ஆனால் இந்தக் கோயில் பற்றி ஒரு பாசுரம் தான் எழுதி இருக்கார். கண்டுபிடிக்கணும். :))))))

ஆனால் பகவானின் மடியில் செளக்கியமாய் அமர்ந்திருந்த பூமாதேவி துர்வாஸரைக் கண்டு வணங்கவில்லை. மடியை விட்டு எழுந்து உபசரிக்கவில்லை. அதனால் ஸ்ரீயின் உடலை நீ பெறவேண்டும் என துர்வாசர் சபித்ததாகவும், ஸ்ரீயின் உடல் தனக்கு வேண்டாம் என பூமாதேவி கேட்டுக் கொண்டதின் பேரில் அவளை பொருநை நதிக்கரையின் தென்கரையில் பங்குனி மாதப் பெளர்ணமியில் நதியில் நீராடித் தவம் புரியச் சொன்னார். அஷ்டாக்ஷரத்தில் தவம் இருந்ததாயும் சொல்கின்றனர். பூமாதேவி அவ்வாறு தவம் புரியும் வேளையில் மீன்போன்ற வடிவுடைய இரு குண்டலங்கள் அவள் கைகளுக்குக் கிடைத்தன. அவற்றைக் கண்டதும் மீண்டும் பெருமாள் நினைவே அவளுக்கு வர, அவற்றைப் பெருமாளிடம் கொடுக்க, அவரும் அதை ஆசையுடன் வாங்கித் தம் காதுகளில் அணிந்து கொண்டார். அது முதல் பெருமாள் மகரநெடுங்குழைக்காதர் ஆனார். தாயார் பெயர் குழைக்காதவல்லி,/ ஊர் பெயர் ஸ்ரீபேரை என்றும், தென் திருப்பேரை என்றும் வழங்குகிறது. மற்றொரு தாயாரை தென் திருப்பேரை நாச்சியார் என்றும் சொல்லுவார்கள்.

அசுரர்களால் தோற்கடிக்கப் பட்ட வருணன் தனது நாகத்தையும், பாசத்தையும் இழந்து தவிக்க, அவன் மனைவி தேவகுருவிடம் வேண்ட தேவகுரு அவனை தென் திருப்பேரை மகர தீர்த்தத்தில் நீராடி “திருவைந்தெழுத்தால்” பகவானை வழிபட வேண்டியது பெறுவாய் என்று சொல்ல அவ்வண்ணமே வருணன் பங்குனி பூர்ணிமையிலேயே வழிபட்டதாகவும், அப்போது மகிழ்ந்த பெருமான் கொடுத்த நீரானது பாசமாக மாறி அதைப் பெற்று வருணன் மனமகிழ்வோடு அசுரர்களைத் தோற்கடிக்கப் புது வலிமை பெற்றதாகவும் தலபுராணம் சொல்லுகின்றது. மேலும் விதர்ப்ப நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபோது தாமிரபரணிக் கரைக்கு தென் திருப்பேரைக்கு வந்து மகரநெடுங்குழைக்காதரை வேண்ட பஞ்சம் நீங்கி, மழை பொழிந்ததாகவும் சொல்கின்றனர்.

அடுத்தது திருக்கோளூர் என்னும் ஸ்தலம். நம்மாழ்வாரைக் கண்டெடுத்த மதுரகவியாழ்வார் அவதாரம் பண்ணிய இடம் இது.

devoo

unread,
Aug 22, 2009, 4:34:02 AM8/22/09
to இல்லம் (your HOME)
செங்கனி வாயின் திறத்ததாயும் செஞ்சுடர் நீள்முடி தாழ்ந்ததாயும்
சங்கொடு சக்கரம் கண்டு உகந்தும் தாமரைக் கண்களுக்கு அற்றுத் தீர்ந்தும்
திங்களும் நாளும் விழா அறாத தென் திருப்பேரெயில் வீற்றிருந்த
நங்கள் பிரானுக்கு என் நெஞ்சம் - தோழீ‚ நாணும் நிறையும் இழந்ததுவே

- நம்மாழ்வார்

Geetha Sambasivam

unread,
Aug 22, 2009, 5:23:12 AM8/22/09
to il...@googlegroups.com
ரொம்ப நன்றி, தேட முடியலை.  தென் திருப்பேரைக்குப் பதினொரு பாசுரங்கள் இருக்கிறதாய் என் சிநேகிதி ஒருத்தர் கூறுகிறார். என்னோட குறிப்பிலே ஒரு பாசுரம்னு தான் குறிச்சிருக்கேன். இது பத்தியும் கொஞ்சம் சொல்ல முடியுமா??

2009/8/22 devoo <rde...@gmail.com>

devoo

unread,
Aug 22, 2009, 2:24:13 PM8/22/09
to இல்லம் (your HOME)
வெள்ளைச் சுரிசங்கொ டாழி யேந்தித் தாமரைக் கண்ணனென் னெஞ்சி னூடே,
புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர் என்சொல்லிச் சொல்லுகேன் அன்னை
மீர்காள்,
வெள்ளச் சுகமவன் வீற்றி ருந்த வேத வொலியும் விழா வொலியும்,
பிள்ளைக் குழாவிளை யாட்டொலி யும் அறாத் திருப்பே ரெயில் சேர்வன் நானே

நானக் கருங்குழல் தோழி மீர்காள்! அன்னை யர்காள்!அயல் சேரியீர்காள்,
நானித் தனிநெஞ்சம் காக்க மாட்டேன் என்வசம் அன்றிதி ராப்ப கல்போய்,
தேன்மொய்த்த பூம்பொழில் தண்ப ணைசூழ் தெந்திருப் பேரெயில் வீற்றி ருந்த,
வானப்பி ரான்மணி வண்ணன் கண்ணன் செங்கனி வாயின் திறத்த துவே.

செங்கனி வாயின் திறத்த தாயும் செஞ்சுடர் நீண்முடித் தாழ்ந்த தாயும்,
சங்கொடு சக்கரம் கண்டு கந்தும் தாமரைக் கண்களுக் கற்றுத் தீர்ந்தும்,
திங்களும் நாளும் விழாவ றாத தென்திருப் பேரெயில் வீற்றி ருந்த,
நங்கள் பிரானுக்கென் னெஞ்சம் தோழீ! நாணும் நிரையு மிழந்த துவே.

இழந்தவெம் மாமை திறத்துப் போன என்னெஞ்சி னாருமங் கே ஒழிந்தார்,
உழந்தினி யாரைக்கொண் டெனு சாகோ? ஓதக் கடலொலி போல எங்கும்,
எழுந்தநல் வேதத் தொலிநின் றோங்கு தெந்திருப் பேரெயில் வீற்றி ருந்த,
முழங்குசங் கக்கையன் மாயத் தாழ்ந்தேன் அன்னையர் காள் !என்னை யென்மு
னிந்தே.

முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய்முலை யுண்டு மருதி டைப்போய்,
கனிந்த விளவுக்குக் கன்றெ றிந்த கண்ண பிரானுக்கென் பெண்மை தோற்றேன்,
முனிந்தினி யென்செய்தீர் அன்னை மீர்காள் ! முன்னி யவன்வந்து வீற்றி
ருந்த,
கனிந்த பொழில்திருப் பேரெ யிற்கே காலம் பெறவென்னைக் காட்டு மினே.

காலம் பெறவென்னைக் காட்டு மின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால்,
நீல முகில்வண் ணத்தெம் பெருமான் நிற்குமுன் னேவந்தென் கைக்கும் எய்தான்,
ஞாலத் தவன்வந்து வீற்றி ருந்த நான்மறை யாளரும் வேள்வி யோவா,
கோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல்திருப் பேரெ யிற்கே.

பேரெயில் சூழ்கடல் தென்னி லங்கை செற்ற பிரான்வந்து வீற்றி ருந்த,
பேரெயிற் கேபுக்கென் னெஞ்சம் நாடிப் பேர்த்து வரவெங்கும் காண மாட்டேன்,
ஆரை யினிங் குடையம் தோழி! என்னெஞ்சம் கூவ வல்லாரு மில்லை,
ஆரை யினிக்கொண்டென் சாதிக் கின்றது? என்னெஞ்சம் கண்டது வேகண் டேனே.

கண்டது வேகொண்டெல் லாருங் கூடிக் கார்க்கடல் வண்ணனோ டென்தி
றத்துக்கொண்டு,அலர் தூற்றிற் றதுமுத லாக் கொண்டவென் காத லுரைக்கில்
தோழீ,
மண்டிணி ஞால முமேழ் கடலும் நீள்வி சும்பும் கழியப் பெரிதால்,
தெண்திரை சூழ்ந்தவன் வீற்றி ருந்த தென்திருப் பேரெயில் சேர்வன் சென்றே.

சேர்வன்சென் றென்னுடைத் தோழி மீர்காள்! அன்னையர் காள்! என்னைத் தேற்ற
வேண்டா,
நீர்கள் உரைக்கின்ற தென்னி தற்கு? நெஞ்சும் நிறைவும் எனக்கிங் கில்லை,
கார்வண்ணன் கார்க்கடல் ஞால முண்ட கண்ண பிரான்வந்து வீற்றி ருந்த,
ஏர்வள வொண்கழ னிப்பழ னத்துத் தென்திருப் பேரெ யின்மா நகரே.

நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாணெனக் கில்லையென் தோழி மீர்காள்,
சிகரம் அணிநெடு மாடம் நீடு தென்திருப் பேரெயில் வீற்றி ருந்த,
மகர நெடுங்குழைக் காதன் மாயன் நூற்றுவ ரையன்று மங்க நூற்ற,
நிகரில் முகில்வண்ணன் நேமி யானென் னெஞ்சம் கவர்ந்தெனை யூழி யானே?

ஊழிதோ றூழி யுருவம் பேரும் செய்கையும் வேறவன் வையங் காக்கும்,
ஆழிநீர் வண்ணனை யச்சு தனை அணிகுரு கூர்ச்சட கோபன் சொன்ன,
கேழிலந் தாதியோ ராயி ரத்துள் இவைதிருப் பேரெயில் மேய பத்தும்,
ஆழியங் கையனை யேத்த வல்லார் அவரடி மைத்திறத் தாழி யாரே.
* * * *

அருளிச் செயலில் திருப்பேரை என்றில்லை; திருப்பேரெயில் என அழைக்கப்
படுகிறது.


சைவத் துறையில் ‘திருப்பேரெயில்’ ஒரு பாடல் பெற்ற தலம் - ஐந்தாம்
திருமுறை.
(தற்போது ஓகைப்பேரையூர் என்றும், வங்காரப் பேரையூர் என்றும்
வழங்கப்படுகிறது)

சீரும், எதுகையும் நன்கு விளங்குமாறு அமையவில்லை; வரி உடைகிறது.


தேவ்

Geetha Sambasivam

unread,
Aug 24, 2009, 9:12:00 PM8/24/09
to il...@googlegroups.com
இப்போத் தான் பார்க்கிறேன், ரொம்ப நன்றி. என்னோட பதிவுகளில் சேர்த்துடறேன்.

2009/8/22 devoo <rde...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Aug 24, 2009, 9:13:35 PM8/24/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

Monday, August 24, 2009


கொஞ்சம் அவசரமாவே திருக்கோளூரில் தரிசனம் பண்ணினோம்னு நினைக்கிறேன். பெருமாளோட பெயர் மட்டும் நல்லா நினைவில் இருக்கு. என்ன பெயர் தெரியுமா? வைத்தமாநிதி! பெருமாளே ஒரு மாநிதிதான். அதிலும் இந்தத் தலத்துக்கு வந்து தரிசனம் செய்தால் குபேரன் வைத்த மாநிதிகள் அத்தனையும் கிடைக்கும். கேட்பானேன்! பெருமாளின் அருளே வைத்தமாநிதிதானே. நாம் கொடுத்து வைத்திருந்தால் தவிர இத்தகையதொரு மாநிதியான இறை தரிசனம் கிடைக்குமா? இந்தக் கோயிலின் தலவரலாறு பின்வருமாறு:

ஈசனின் நண்பன் ஆன குபேரன் ஈசனின் அருளால் அலகாபுரியில் தனக்கென ஒரு நகரை நிர்மாணித்துக் கொண்டு வடதிசைக்கு அதிபதியாக இருந்து வந்தான். இறைவனின் அருள் பரிபூரணமாய்க் கைவரப் பெற்ற அவனுக்கு நவநிதிகளும் வசமாகி இருந்தது. அவனுக்கு இறைவனிடம் இருந்த செல்வாக்கினாலும், அதீத உரிமையினாலும் எப்போது வேண்டுமானாலும் கைலையங்கிரிக்குச் சென்று ஈசனைத் தரிசிக்கும் உரிமையைப் பெற்றிருந்தான். அவ்வாறே ஒருநாள் அவன் சென்றிருந்த சமயம் இறைவனும், இறைவியும் தனித்திருந்த நேரம். அம்பாள் அதீத அழகுடன் சுடர்விட்டுப் பிரகாசித்தாள். இவர்கள் தனியாய் இருப்பதை உணராமல் சென்ற குபேரன் ஒளிவீசிப் பிரகாசிக்கும் காந்தியுடன் விளங்கிய அம்மையைக் கண்டு ஒரு கணம் மனம் தடுமாறினான். அவளையே உற்று நோக்கினான். உலக நாயகியாம் அம்மாவுக்குத் தன் மகனில் ஒருவன் இம்மாதிரி நடப்பது பொறுக்குமா? மகன் தான் என்றாலும் இதே தவறை மற்றவரும் செய்யாவண்ணம் காக்கவேண்டுமே? தக்க தண்டனை ஒன்றை இவனுக்கு அளிக்கவேண்டும். அதன் மூலம் பாடமும் கற்கவேண்டும் எனத் தீர்மானித்தவளாய்,” தீய எண்ணத்தோடு உன் தாய் போன்ற என்னைப் பார்த்ததால் உன் உருவம் விகாரமடைந்து, உனக்கு ஒரு கண்ணும் போகும். உன்னை விட்டு நவநிதிகளும் விலகும்.” என்று சொல்லுகின்றாள்.

உடனேயே தன் தவற்றை உணர்ந்த குபேரனும் ஈசனை வணங்கித் தன்னை மன்னிக்குமாறு கேட்க, இதற்கேற்ற பரிகாரத்தை மலை மகளே சொல்லுவாள், அவளையே போய்ப் பணிந்து கேள் என அனுப்புகின்றார் ஈசன். பூலோக வாசமும் செய்யுமாறு அவனைப்பணித்து, பொருநையாற்றின் கரையில் இந்த நிதி தீர்த்தத்தில் நீராடி புருஷோத்தமனைப் பணிந்து வா. ஒருநாள் நீ வேண்டியது நடக்கும் எனச் சொல்லிவிடுகின்றாள் உமை அம்மை. அதன்படி குபேரனும் இங்கே வந்து நிதி தீர்த்தத்தில் நீராடி புருஷோத்தமனாகிய பெருமாளைக் குறித்துத் தவம் இயற்றப் பெருமாளும் மனமிரங்கி, இந்த க்ஷேத்திரத்தின் மகிமை அளவிடமுடியாதது. தர்மம் இங்கே நிலைத்து நிற்கிறது. அதர்மம் இந்த க்ஷேத்திரத்தை அணுகாது. நீ உமையை கெட்ட நோக்குடன் பார்த்த பாவம் மெதுவாய்த் தான் போகும். உன்னுடைய நவநிதிகளையும் தற்சமயம் தரமுடியாது. கொஞ்சம் தருகிறேன் கொண்டுபோ! என்று சொல்லிவிட்டுத் தான் படுத்துக் கொண்டிருந்த இடத்திற்கு அடியில் இருந்து நிதியை எடுத்து ஒரு மரக்காலால் அளந்து குபேரனுக்குக் கொடுக்கிறார். நவநிதிகளில் அனைத்தும் குபேரனைச் சென்றடையவில்லை என்பதாலும், இங்கே உள்ள நவநிதிகளையும் காத்துக் கொண்டு அதன்மேலேயே பெருமாள் சயனத்திருக்கோலத்தில் காட்சி கொடுப்பதாலும் வைத்தமாநிதிப் பெருமாள் என்ற பெயர் பெற்றார். கிழக்கே பார்த்துக் கொண்டு புஜங்க சயனத்தில் படுத்துக் கொண்டு நிதியைப் பத்திரமாய்க் காவல் காத்துக் கொண்டிருக்கிறார்.

தாயார் கோளூர் வல்லி நாச்சியார், குமுதவல்லி நாச்சியார். மதுரகவி ஆழ்வார் இங்கேதான் அவதாரம் செய்ததாய்ச் சொல்லுகின்றனர். நம்மாழ்வார் இந்தத் தலத்திற்கும் மங்களாசாஸனம் செய்திருக்கிறார். கோயில் விமானத்தை ஸ்ரீகரவிமானம் என அழைக்கின்றனர். செல்வம் வேண்டிப் பிரார்த்திப்போர் இந்தக் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்து பெருமாளுக்குப் பிரார்த்தித்துக் கொண்டால் செல்வம் கிட்டும் என்றும் சொல்லுகின்றனர். குபேரன் செல்வம் பெற்றது மாசி மாதம் சுக்லபட்ச துவாதசியில். அப்போது இங்கே சிறப்பான வழிபாடுகள் நடக்கும்.

அடுத்து நாம் காணப்போவது மிக முக்கியமான தலம். திருக்குருகூர். நம்மாழ்வாரின் அவதார ஸ்தலம். மதுரகவி ஆழ்வார் வடக்கே சென்றிருந்தவர் நம்மாழ்வாரைத் தேடிக் கண்டுபிடித்தது, மணவாள மாமுனிகளுக்கு நம்மாழ்வார் பிரபந்தங்களை அருளிச் செய்தது போன்றவற்றை அடுத்து வரும் பதிவுகளில் காணலாம்.

Geetha Sambasivam

unread,
Aug 26, 2009, 9:01:44 PM8/26/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)
//மணவாள மாமுனிகளுக்கு நம்மாழ்வார் பிரபந்தங்களை அருளிச் செய்தது//
 
மணவாள மாமுனிகள் அவதாரம், நாதமுனிகளுக்கு நம்மாழ்வார் பிரபந்தங்களை அருளிச் செய்தது என்று வந்திருக்கணும். வரிகள் விட்டுப் போயிருக்கு. மன்னிக்கவும். :( 

2009/8/25 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Aug 26, 2009, 9:02:51 PM8/26/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

Wednesday, August 26, 2009

அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் றன்னை,
அமர்பொழில் வளங்குரு கூர்ச்சடகோபன் குற் றேவல்கள்,
அமர்சுவை யாயிரத் தவற்றினு ளிவைபத்தும் வல்லார்
அமரரோ டுயர்விற்சென் றறுவர்தம் பிறவியஞ் சிறையே. (2823) திருவாய்மொழி

திருக்குருகூர் தனிச் சிறப்புப் பெற்ற தலம். இதுவும் நெல்லை திருச்செந்தூர் சாலையில் தான் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்திற்குக்கிழக்கே கிட்டத் தட்ட ஐந்து கிமீ தூரத்தில் தாமிரபரணியின் தென்கரையில் உள்ளது. பெருமான் ஆதியில் இங்கே தான் ஆசை கொண்டு இருந்தபடியால் அவர் பெயரும் ஆதிநாதர். நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுக்கிறார். கிழக்கே பார்த்துக் கொண்டு “பொலிந்து நின்ற பிரான்” என்ற பெயரைத் தாங்கிக் கொண்டு கோவிந்த விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். தாயார் ஆதிநாயகி, குருகூர் நாயகி. பிரம்மாவிற்குப் பிரத்யட்சம் எனச் சொல்லப் படும் இந்த க்ஷேத்திரம் நம்மாழ்வாரின் திரு அவதாரத்தின் பின்னே ஆழ்வார்திருநகரி என்ற பெயரிலேயே வழங்கப் படுகிறது. ஹரி க்ஷேத்திரங்களுள் ஸ்ரீமந்நாராயணன் இங்கேயே முதன் முதல் அவதரித்ததாய்ச் சொல்லப் படுகிறது. இப்போ நம்மாழ்வாரின் அவதார மகிமை பற்றிப் பார்ப்போமா??

ஸ்ரீவைகுண்டம், அருகிலே இரு தேவியரும் இருக்க, கருடனும், ஆதிசேஷனும் இருக்கையில் பெருமான் சொல்கின்றார். “நீங்கள் எல்லாரும் பூமியில் போய்ப்பிறக்கவேண்டும். வேதங்களைத் தமிழாக்கி, திவ்யப்ப்ரபந்தங்கள் என்னும் பெயரிலே அருளிச் செய்யவேண்டிய காரியம் இருக்கிறது. எங்கே நம் சேனை முதலியார்??? விஷ்வக்சேனர்? அவர் தான் இந்தக் காரியம் செய்ய வல்லவர். அவர் பூமியில் சடத்தை வென்ற சடகோபனாய்ப் பிறக்கவேண்டும் . ஆதிசேஷா, நீ புளியமரமாகப் போய் இருப்பாய்! கருடா, நீ மதுரகவி என்னும் பெயரிலே ஒரு ஆழ்வாராகப் பிறந்து, சடகோபனின் பெருமையை உணர்ந்து, அவரின் சிஷ்யனாக மாறி, சடகோபரின் பெருமையை உலகு அறியச் செய்வாய்! அத்தோடு அனைத்து ஆழ்வார்களின் பாடல்களும் அறியப் படவேண்டும்.” என்று சொன்னார்.

நாடாத மலர்நாடி நாள்தோறும் நாரணந்தன்,
வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று,
வீடாடி வீற்றிருத்தல் வினையற்ற தென்செய்வதோ?
ஊடாடு பனிவாடாய். உரைத்தீராய் எனதுடலே.(2832) திருவாய்மொழி

சரி, எல்லாரையும் பிறக்கச் சொல்லியாச்சு, அதற்கான இடம் வேண்டாமா? அதுக்குத் தகுந்த க்ஷேத்திரமாகத் திருக்குருகூர் தேர்வு செய்யப் பட்டது பகவானாலேயே. தாய், தகப்பன்? அதுவும் தேர்வு செய்யப் பட்டது. திருவழுதி வளநாடரின் வழித் தோன்றலான காரி என்பவருக்கும் அவர் மனைவியான உடைய நங்கைக்கும் குழந்தைகளே இல்லை. அவர்கள் இருவரும் அருகே உள்ள திருக்குறுங்குடி என்னும் திவ்ய க்ஷேத்திரத்தின் நம்பியை வேண்டிப் பிரார்த்தனை செய்தனர். இருவரின் பிரார்த்தனைக்கும் செவி சாய்த்த எம்பிரான் தம்பதியரிடம், “யாரைப் போன்ற பிள்ளை வேண்டும்?” என்று கேட்க, உடைய நங்கையோ யோசிக்கவே இல்லை. “பரந்தாமா! உன்னைப் போல் பிள்ளை வேண்டும்” என்று கேட்டுவிட்டார். பகவானும், “அவ்வண்ணம் நாமே உமக்கு மகனாய்த் தோன்றுவோம்” என்று சொன்னாராம். அப்படி திருக்குறுங்குடி நம்பியின் அம்சமும், சேனை முதலியாரின் அம்சமும் சேர்ந்து தோன்றியவரே நம்மாழ்வார். குழந்தை பிறந்தாச்சு. குழந்தை அழணுமே? ஆனால் அழவே இல்லை, பால் குடிக்கணுமே? தாயிடம் பால் குடிக்கவும் இல்லை. எந்தவிதமான உணவும் எடுக்கவில்லை. இது என்ன அதிசயக் குழந்தை? இதை எவ்வாறு வளர்ப்பது? புரியாமலேயே கலங்கிப் போன காரியாரும், உடைய நங்கையும் குழந்தை பிறந்த பனிரண்டாம் நாள் குழந்தையை ஆதிநாதர் சந்நதிக்கு எடுத்துச் சென்றனர். அங்கே அக்குழந்தையை ஆதிசேஷனின் அவதாரமாய்த் தோன்றி இருக்கும் புளிய மரத்தடியில் விட்டுச் செல்லுமாறு தோன்ற அவ்வண்ணமே செய்தனர். குழந்தை ஏன் இவ்விதம் பிறந்தது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை, புரியவில்லை. பின்னாட்களிலேயே தெரிய வந்தது.

பிறக்கும்போது, தாயின் கர்ப்பத்தில் கூட ஒவ்வொரு குழந்தையும் ஞானம் கொண்டதாகவே விளங்குகிறது. ஆனால் பிறப்பின் ரகசியத்தால் இறைவன் சிலருக்கு மட்டுமே ஞானத்தோடு பிறக்க அருள் புரிகின்றான். மற்ற நம் போன்ற சாமானியருக்கு கர்ப்பத்தில் இருந்து வெளியே வரும்போதே சடம் என்னும் வாயு சூழ்ந்து கொண்டு நம்மை அஞ்ஞானம் என்னும் சாகரத்தில் தள்ளிவிடுகிறது. நம்மாழ்வாரோ தெய்வக் குழந்தை மட்டுமல்ல, பிறக்கும்போதே ஞானக் குழந்தையும் கூட அல்லவோ? ஆகையால் தம்மைச் சூழவந்த சடத்தைக் கோபித்து விலக்கிவிட்டார். அதனாலேயே அவர் பேசவில்லை, பால் அருந்தவில்லை. இப்படிச் சடத்தை உதறித் தள்ளிவிட்டுப் பிறக்கும்போதே ஞானத்தோடு பிறந்த குழந்தைக்குச் “சடகோபன்” என்னும் திருநாமம் சூட்டினார்கள். குழந்தை புளியமரத்தடியிலேயே வளர்ந்தது. கையிலே சின்முத்திரையைத் தாங்கிக் கொண்டு தெற்கே பார்த்து அமர்ந்திருந்தது அந்தக் குழந்தை. வரவேண்டுமே, உரிய நேரத்தில் சீடன் வரவேண்டும் அல்லவா? அதற்குத் தானே காத்திருந்தது குழந்தை? பதினாறு ஆண்டுகள் முடிந்துவிட்டன. குழந்தை இன்னும் தவம் செய்துகொண்டு மோன நிலையிலேயே இருந்தது. அப்போது!

Geetha Sambasivam

unread,
Sep 1, 2009, 5:22:50 AM9/1/09
to நம்பிக்கை - Nambikkai, இல்லம் (your HOME)

Tuesday, September 01, 2009

 
 
 
 

நாம போன பதிவிலே பார்த்த திருக்கோளூரில் ஒரு அந்தண குலத்தில் பிறந்த ஒரு குழந்தை இளமை முதலே அருமையான கவி பாடும் ஆற்றலைப் பெற்றிருந்தது. அதனால் குழந்தை மதுரமான கவிகள் பாடுவதால் மதுரகவி எனப் பெயரும் பெற்றது. அந்தக் குழந்தை வளர்ந்து வேத, சாத்திரங்களை நன்கு பயின்று மேலும் பயிலவும் வடநாடு சென்றார். நாட்கள் செல்லச் செல்ல உலக வாழ்க்கையில் பற்று நீங்கியது. அயோத்தி, மதுரா போன்ற திவ்ய தேசங்களைத் தரிசித்தார். ஒருநாள் அவர் அயோத்தியில் தங்கி இருந்தார். மாலை மங்கி இரவுப் போதில் தங்கியிருந்த இடத்தைவிட்டு வெளியே வந்தபோது விண்ணில் ஒரு பேரொளியைக் கண்டார். அந்தப் பேரொளி தென் திசை முழுதும் வியாபித்திருந்ததையும் கண்டார். என்னவெனப் புரியாமல் அன்றைய இரவைக் கழித்தார். மறுநாள் இரவு மீண்டும் அதே மாதிரி அதிசயம். தென் திசை சுடர் விட்டுப் பிரகாசித்தது. அத்தோடு மட்டுமா? அந்த ஒளி அவரை அழைப்பது போலவும் தோன்றியது அவருக்கு.

தெற்கே ஏதோ ஓர் அதிசயம் நடந்துள்ளது என்பதையும், அந்த ஒளியைத் தான் பின்பற்றிச் செல்லவேண்டும் என்பதையும் மதுரகவியாழ்வார் உணர்ந்தார். தென் திசை நோக்கிப் பயணப் பட்டுத் திருக்குருகூர் வந்தடைந்தார். அங்கே ஓர் புளியமரத்தடியில் அந்தப் பேரொளி நிலை பெற்றிருப்பதைக் கண்டார். புளியமரத்தடியில் ஒரு பாலகன் மோன தவத்தில் இருந்ததையும் கண்டார். மோனத் தவத்தில் இருந்த சிறுவனை எழுப்ப முயன்றுவிட்டுப் பின்னர் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டு முதலில் சிறுவனின் சமாதியைக் கலைத்தார். பின்னர் அந்தச் சிறுவனிடம், “செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று கேட்டார். பிறந்ததில் இருந்து அதுவரையிலும் பேசாமல், அசையாமல் இருந்த அந்தச் சிறுவன் அப்போது, “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்.” என்று பதில் சொன்னான். இந்தக் கேள்வியும், இதற்கான பதிலும் மேலோட்டமாய்ப் பார்க்க சாமானியமாயும், அர்த்தம் இல்லாமலும் தோன்றினாலும் இதன் உள் அர்த்தமானது மானுட வாழ்வின் தத்துவத்தையே உணரத்துவதாய்ப் பெரியோர் சொல்லுவார்கள்.

“ஜீவன் சூக்ஷ்மம் ஆனது. அது கண்ணுக்கே தெரியாத ஒன்று. அந்த ஜீவன் சூக்ஷ்மம் ஓர் மனித உடலில் புகுந்து பிறவி எடுக்கிறது. அப்படி சூக்ஷ்மம் ஆன ஜீவன் பிறவி எடுத்தால் அப்போது அந்தப் பிறவியின் வாழ்க்கை எப்படி அமையும்?” இதுவே மதுரகவி ஆழ்வாரின் கேள்வி. இதற்கு நம்மாழ்வார் கொடுத்த பதிலானது, "தன் பூர்வ ஜென்மத்தின் புண்ணிய, பாவங்களை, அவற்றின் பலாபலன்களை நுகர்வதே இந்த ஜென்மத்தின் வாழ்க்கையாய் இருக்கும்" என்பதே ஆகும். இவரின் இந்த நுண்ணிய அறிவையும், பிறக்கும்போதே சகல ஞானமும் அறிந்தே பிறந்திருப்பதையும் உணர்ந்து கொண்ட மதுரகவி ஆழ்வார் அக்கணமே அவரைத் தன் குருவாக வரித்துக் கொண்டார். மதுரகவி ஆழ்வார் இவரைப் போற்றியே பாடல்கள் புனைந்துள்ளார். அவை பதினொரு பாடல்களாக இருக்கின்றன. அவற்றுள் ஒன்று
"நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்,
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே;
தேவு மற்று அறியேன்; குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித்திரிவனே."

நம்மாழ்வாருக்குப் பிறக்கும்போது இட்ட பெயராக "மாறன்" என்று தெரிய வருகிறது. இதைத் தவிர பராங்குசன் என்ற பெயராலும் அழைக்கப் படுகின்றார். பக்தி என்ற அங்குசத்தைக் கொண்டு பெருமாளை வசப் படுத்தியதால் பராங்குசன் என்று சொல்லுவார்கள். மற்ற ஆழ்வார்கள் சரீரம் என்றால் அந்த சரீரத்தின் ஆன்மா நம்மாழ்வார் என்று சொல்லுவது வைணவ சம்பிரதாயத்தில் மிகவும் முக்கியமான ஒன்று. நம்மாழ்வார் எழுதிய பாடல்களை எல்லாம் "திருவாய்மொழி" என்னும் சிறப்புப் பெயராலும், "திராவிட வேதம்" என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கப் படுகின்றது. இந்தப் பாடல்கள் நான்கு பகுதிகளாய்ப் பிரிக்கப் பட்டுள்ளது.
திருவாசிரியம் - யஜுர் வேதம்
திருவிருத்தம் - ரிக்வேதம்
பெரிய திருவந்தாதி- அதர்வ வேதம்
திருவாய்மொழி- சாமவேதம்
என்று சொல்லப் படுகின்றது. கிட்டத்தட்ட நாலரை ஆண்டுகள் நம்மாழ்வார் சொல்லச் சொல்ல பட்டோலையில் மதுரகவி ஆழ்வார் எழுதியதாகவும் சொல்லப் படுகிறது. ஆழ்வார்கள் அத்தனை பேரிலும் இவரை மட்டுமே "நம்" என்று சிறப்பித்து நம்மாழ்வார் எனவும் கொண்டாடப் படுகின்றார். பெரிய திருவந்தாதியில் இருந்து ஒரு பாடல்

பூவையும் காயவும் நீலமும் பூக்கின்ற
காவிமலர் என்றும் காண்தோறும்_பாவியேன்
மெல்லாவி மெய்ம்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று

காயாம்பூ, கரு நெய்தல், செங்கழுநீர் போன்ற பூக்களைப் பார்க்கும்போதெல்லாம் மனம் மகிழ்ந்து பூரித்து திருமாலின் வடிவங்களாய்த் தோன்றுவதாய்ப் பாடல் சொல்லுகின்றது.

Geetha Sambasivam

unread,
Sep 3, 2009, 5:21:42 AM9/3/09
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)

Thursday, September 03, 2009

தாமிரபரணிக்கரையில் சிலநாட்கள்!

மணவாள மாமுனிகள்
ஆழ்வார்களுக்குள் நம்மாழ்வாருக்கு நிகராக இன்னொருவரைச் சொல்ல முடியாது என்பதே அனைவரின் கருத்தும். அதனாலேயே மணவாளமாமுனிகளும், அவர் பிறந்த வைகாசி விசாகத்தைச் சிறப்பித்து,

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒருநாள்
உண்டோ சடகோபர்க்கொப்பொருவர்
உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்
குண்டோ ஒரு பார்தனில் ஒக்கும் ஊர்!”

என்று நம்மாழ்வார் பிறந்த வைகாசி விசாகத்தை மட்டுமில்லாமல், அவர் பிறந்த ஊரான திருக்குருகூரையும் சிறப்பித்துச் சொல்லி இருக்கின்றார். வேதத்தின் சாரமாய்க் கருதப் படுகின்ற இவரின் பாசுரங்களைச் சிறப்பித்து நம்பெருமாளான ஸ்ரீரங்கநாதனே இவரை “நம்மாழ்வார்” என்று பெருமையுடன் அழைத்துப் பெருமைப் படுத்தியதாய்த் தெரிய வருகிறது.

நம்மாழ்வார் அமர்ந்திருந்த உறங்காப்புளி மரம் இன்னமும் திருக்குருகூரில் காணக்கிடைக்கிறது. இந்தப் பாசுரங்கள் அனைத்துமே திருமங்கை ஆழ்வார் காலத்திற்குப் பின்னர் தேய்ந்து மறைந்து போய்விட்டன. ஒன்பதாம் நூற்றாண்டில் காட்டுமன்னார்குடி எனத் தற்போது அழைக்கப் படும் வீரநாராயணபுரத்தில் நாதமுனிகள் என்ற பெயரில் ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து வந்தது. அந்தக் குழந்தை பிறவியிலேயே விஷ்ணுவிடம் பக்தி பூண்டு வந்தது. அந்த ஊர்க் கோயிலுக்கு யார் வந்தாலும், அவர்கள் பாடும் பாசுரங்களில் பெருமாளின் ஒவ்வொரு அவதாரமும், ஒவ்வொரு திவ்யதேசமும் சிறப்பித்துக் கூறப் பட்டிருப்பதை நாதமுனிகள் கேட்டு அநுபவித்து வந்தார். நாளாவட்டத்தில் அவருக்குப் பாசுரங்களின் மேல் அதீதக் காதல் ஏற்பட்டன. ஒரு சமயம் கும்பகோணம் ஆறாவமுதன் மேல் பாடப் பட்ட நம்மாழ்வாரின் பாசுரங்கள் பதினொன்றையும் கேட்டுவிட்டு, பதினோராவது பாடலில், இந்தப் பாடலை எழுதியவர் குருகூர்ச் சடகோபன் என்பவர் எனக் குறிப்பு வரவே, மேல் விபரங்கள் தேடியதில் சுமார் ஆயிரம் பாசுரங்களை குருகூர்ச் சடகோபன் பாடி இருப்பது தெரிய வந்தது.ஆயிரம் பாடல்களையும் அறிய முற்பட்ட நாதமுனிகளுக்கு அவை கிடைக்கவில்லை. பாடிக் காட்டியவர்களுக்கும் சரிவரத் தெரியவில்லை. இதன் மூலத்தை அறிய வேண்டி திருக்குருகூர் வந்தார் நாதமுனிகள். அங்கே மதுரகவி ஆழ்வாரின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்த சிலர் மதுர கவி ஆழ்வார் நம்மாழ்வாரைக் குறித்துப் பாடிய பதினொரு பாடல்களைத் தந்து, நாதமுனிகளை, அந்த உறங்காப்புளிய மரத்தினடியில் அமர்ந்து நம்மாழ்வாரைத் தியானித்து, இந்தப் பதினொரு பாசுரங்களையும் பனிரண்டாயிரம் முறைகள் நியமங்களை அனுசரித்துச் ஒன்னால் நம்மாழ்வாரே விரும்பியதை அருள்வார் எனச் சொல்ல, நாதமுனிகளும் அவ்வண்ணமே தாமிரபரணியில் நீராடி உறங்கப்புளிய மரத்தடிக்கு வந்து அமர்ந்தார். பனிரண்டாயிரம் முறைகள் மதுரகவி ஆழ்வார் பாடிய பாசுரங்களைப் பாடினார். நம்மாழ்வார் அவர் முன் தோன்றி, “உமக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்க, ஆயிரம் பாசுரங்களையும் கொடுத்தருள வேண்டி நாதமுனிகள் வேண்டினார். நம்மாழ்வார் நாதமுனிகளின் பக்திக்கு மெச்சி, அந்த ஆயிரம் பாசுரங்கள் மட்டுமில்லை, மற்றப் பாசுரங்களையும், இன்னும் மற்ற ஆழ்வார்கள் பாடியதையும் சேர்த்தே தருகின்றேன் என்று சொல்லிவிட்டு அவ்வண்ணமே அனைத்துப் பாசுரங்களும் கிடைக்கும்படி அருளிச் செய்தார். இவை அனைத்துமே நம்மாழ்வார் தவமிருந்த புளிய மரத்தினடியிலேயே நடந்தது என்பது அந்தப் புளிய மரத்தின் சிறப்பை மேலும் கூட்டுகின்றது.

இந்த க்ஷேத்திரத்துக்குத் திருக்குருகூர் என்னும் பெயர் வரக் காரணம் பிரம்மா பல்லாண்டுகள் மகாவிஷ்ணுவைக் குறித்துத் தவம் இயற்றி “அர்ப்பணம் குரு” எனச் சொன்னதால் திருக்குருவான ஆதிநாதன் கோயில் கொண்ட இடம் திருக்குருகூர் எனப் பட்டது. பின்னர் நம்மாழ்வாரின் பெருமையால் ஆழ்வார் திருநகரி எனச் சிறப்புப் பெயரும் பெற்றது. இதைத் தவிர இந்த ஊருக்கு தாந்த க்ஷேத்திரம் என்றும் பெயர் உண்டு. வடநாட்டில் இருந்த தாந்தன் என்னும் வேதம் பயின்று கொண்டிருந்த அந்தணனை அனைவரும் மதிக்காமல் ஏசினார்கள். மனம் வருந்திய அவன் பரிஹாரம் என்ன எனத் தேட திருக்குருகூர் சென்று ஆதிநாதரைக் குறித்துத் தொழுதால் ஞானம் உண்டாவதோடு நன்மையும் ஏற்படும் எனத் தெரிய இங்கே வந்து அவ்வண்ணமே செய்தான். அவனுக்கும் இங்கே தான் முக்தி கிடைத்தது. நம்மாழ்வாருக்கும் இங்கே தான் முக்தி கிடைத்தது. இனி கோயிலின் பெருமாளையும் நம்மாழ்வாரின் முக்தியைக் குறிக்கும் நிகழ்வு பற்றிய சிறப்பையும் பற்றிக் காணலாம்.


 

படங்கள் உதவி கூகிளார்: நன்றி.


















--
அன்புடன்,
ரேவதி.
http://naachiyaar.blogspot.com,
http://thaththapaatti.blogspot.com







--
அன்புடன்,
ரேவதி.
http://naachiyaar.blogspot.com,
http://thaththapaatti.blogspot.com



--
அன்புடன்,
ரேவதி.
http://naachiyaar.blogspot.com,
http://thaththapaatti.blogspot.com

Geetha Sambasivam

unread,
Sep 7, 2009, 4:30:39 AM9/7/09
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)

Monday, September 07, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் -

மூலவர் ஆதிநாதப் பெருமான் என்ற பெயரிலும் பொலிந்து நின்ற பிரான் என்ற பெயரிலும் அழைக்கப் படுகின்றார். தாயார் ஆதிநாதவல்லி, குருகூர் வல்லி. (நம்ம வல்லி சிம்ஹன் நினைவுக்கு வராங்களா? இது அவங்க ஊரே தான்! :D) கோவிந்த விமானத்தின் கீழே கிழக்கே பார்த்துக் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார் பெருமாள். ஸ்ரீவைகுண்டத்திற்குக் கிழக்கே மூன்று மைலில் இருக்கும் இந்த ஊருக்கெனத் தனியான ரயில்வே நிலையம் உள்ளது. இங்கே மார்கழியில் அத்யயன உற்சவத்தின் போது நம்மாழ்வாருக்கு முக்தி கொடுக்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாய் நடை பெறும். மேலும் நம்மாழ்வார் இங்கே தனிச்சன்னதி கொண்டும் விளங்குகின்றார். மார்கழி ராப்பத்து உற்சவத்தின்போது நம்மாழ்வாரின் திருவாய்மொழியைக் காதாரக் கேட்கும் எம்பிரான் நம்மாழ்வாருடன் ஒரே மண்டபத்திலே எழுந்தருளுகின்றார் எனச் சொல்கின்றனர். பத்தாம் நாள் பத்து அன்று “முனியே, நான்முகனே, முக்கண்ணப்பா” என்ற பாசுரம் வரும் என்கின்றனர். அப்போது நம்மாழ்வாரை மெதுவே எழுந்தருளச் செய்து பெருமமளின் பாதாரவிந்தங்களிலே நம்மாழ்வாரின் தலை படும்படியாகச் சமர்ப்பிக்கின்றனர்.

பெருமாளின் திருவடியில் நம்மாழ்வாரின் திருமுடி ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கிடக்கும் காட்சியைக் காண பக்தர்கள் கூட்டம் ஆர்ப்பரித்து, நம்மாழ்வாருக்கு முக்தி கிடைத்துவிட்டது என ஒரு பக்கம் சந்தோஷம் கொண்டாலும், மறுபக்கம் நம்மாழ்வாரைத் திரும்பத் தரும்படியும் வேண்டுவார்களாம். அப்போது சுவாமியும் நம்மாழ்வாரைத் "தந்தோம், தந்தோம், தந்தோம், சடகோபனைத் தந்தோம், நம் ஆழ்வானைத் தந்தோம்”, என்று சொல்லி பக்தர்களுக்கு அருள் புரிவார் என்று சொல்லுகின்றனர். ஒருமுறையாவது போய்ப் பார்க்கணும். கூட்டத்தை நினைச்சால் பயமா இருக்கு.

இது தவிர, வைகாசி உற்சவத்தின்போது திருக்குருகூரைச் சுற்றி அமைந்துள்ள மற்ற எட்டுத் திருப்பதிகளில் இருந்தும் பெருமாள் இங்கே வந்து நம்மாழ்வாரின் பாசுரங்களைக் கேட்க வருகின்றனர். நம்மாழ்வாரே முகமன் கூறி அவர்களை வரவேற்பதாக நம்மாழ்வாரின் உற்சவர் சென்று வரவேற்பு அளிக்கும் ஐதீகம் நடை பெறுகிறது. நம்மாவாரின் சந்நதியிலேயே பெருமாள்கள் அத்தனை பேரும் பாசுரங்களுக்காகக் காத்துக்கிடக்கும் அதிசயமும் நடக்கிறது. மதியம் திருமஞ்சனம் முடிந்து இரவு கருட சேவையில் ஒவ்வொரு பெருமாளும் வரிசையாக ஆழ்வாரின் சன்னதியைத் திறந்து கொண்டு வெளியே வருவார்கள். ஆஹா, நினைச்சுப் பார்த்தாலே பார்க்கணும்போல இருக்கு. இதெல்லாம் சொல்லித் தான் கேட்க முடிஞ்சது. ஒன்பது திருப்பதிகளின் பெருமாள்களும் வீதிவலம் வருவார்கள் நம்மாழ்வாரோடு. மதுரகவி ஆழ்வாரும் வீதி வலம் வருவார் என்றார்கள். இரவு பதினொரு மணிக்குக் கிளம்பும் ஊர்வலம் மறுநாள் விடியற்காலை ஐந்து, ஆறு மணி வரை நடைபெற்றுப் பின்னர் திருக்குருகூர் கோயிலின் மங்களாசாசன மண்டபத்திற்கு வந்து சேர்வார்கள். ஆழ்வார் ஒரு பல்லக்கில் இருப்பார். அப்போது ஒவ்வொரு பெருமாளுக்கும் அந்த அந்தப் பெருமாள் மீது பாடிய பாசுரங்கள் இசைக்கப் பட்டு பெருமாளுக்கு நம்மாழ்வார் விடை கொடுத்து அனுப்பும் காட்சி நடை பெறும். பாடலைப் பெற்றுக் கொண்டு பரமானந்தத்துடன் எல்லாப் பெருமாள்களும் தத்தம் இருப்பிடம் சென்றடைவார்களாம். கண்கொள்ளாக் காட்சி என்கின்றனர்.

நம்மாழ்வார் செய்த தவம் தான் என்னே! இறைவன் அடைவதற்கு எத்தனை எளியவன் என்று சொல்லுகின்றார் நம்மாழ்வார். அவன் பெரியவன் மட்டுமல்ல, எளிதில் அவன் நம்மிடம் வருவான் என்றும் வாழ்ந்து காட்டினார்.

டிஸ்கி: இந்தக் குறிப்பிட்ட பதிவுக்கு நன்றி திரு வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள். இத்துடன் நவதிருப்பதிகள் முடிந்தன. நவ கைலாயங்கள் அடுத்து ஆரம்பிக்கும். தொடர்ந்து ஆதரவை வேண்டுகிறேன். நன்றி.



படங்கள் உதவி கூகிளார்: நன்றி.


















--
 



--

Geetha Sambasivam

unread,
Oct 20, 2009, 7:55:45 AM10/20/09
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)

Tuesday, October 20, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் - நவ கைலாயம்! 1.


நவ கைலாயம்: கீழ்க்கண்ட ஒன்பது ஊர்கள் நவ கைலாயங்கள் என அழைக்கப் படுகின்றன. இது தவிர நவ சமுத்திரம் என்று சமுத்திரம் என்ற பெயரில் அழைக்கப் படும் ஊர்களும் உள்ளன. அவற்றுக்கெல்லாம் போக முடியலை.


பாபநாசம்
சேரன்மாதேவி
கோடகநல்லூர்
குன்னத்தூர்
முறப்பநாடு
ஸ்ரீவைகுண்டம்

தென் திருப்பேரை
ராஜபதி,
சேந்தமங்கலம்


நவ சமுத்திரங்கள்:

அம்பாசமுத்திரம்
வீரா சமுத்திரம்
தளபதி சமுத்திரம்
கோபால சமுத்திரம்
ரத்னாகார சமுத்திரம்(திருச்செந்தூர்)
ரவண சமுத்திரம்
அரங்க சமுத்திரம்
வால சமுத்திரம்
வடமலை சமுத்திரம் (பத்மநேரி)



இந்த நவ கைலாயங்களில் சில கோயில்கள் நவதிருப்பதிகள் இருக்கும் ஊரிலேயே இருக்கின்றன. அதை முன் கூட்டியே நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு செல்லவேண்டும். எங்களுக்குத் தெரிஞ்சும், ஓரிரண்டு கோயில்களுக்குச் செல்ல முடியவில்லை. நேரப் பற்றாக்குறைதான் காரணம். நவ திருப்பதிகளை ஒரே நாளிலேயே முடித்துவிடலாம். அப்போதே அங்கங்கே இருக்கும் நவ கைலாயக்கோயில்களையும் பார்த்திருக்க வேண்டும். முடியலை! மறுநாள் போக நினைச்சுப் போக முடியலை. நவ கைலாயங்கள் தனியாகப் பார்க்கணும்னா இரண்டு நாட்கள் தேவை. நாங்க அன்னிக்கே ஊர் திரும்ப முன்பதிவு செய்திருந்தபடியால் மத்தியானமே திருநெல்வேலி திரும்பவேண்டிய கட்டாயம். ஆகவே செல்ல நினைக்கிறவர்கள் நன்கு தெரிந்து கொண்டு செல்லவேண்டும்.

இப்போ முதலில் வருவது பாபநாசம் பாபநாசநாதர் கோயில் தான். சூரியனுக்கு உரிய பரிஹாரத் தலமாகச் சொல்லப் படுகிறது. தாமிரபரணி மலையில் இருந்து கீழே இறங்கியதும், இந்தக் கோயிலுக்கு எதிரே தான் ஊருக்குள்ளே நுழைகிறாள். மிகவும் அழகான சுற்றுச் சூழ்நிலை. இயற்கையின் அழகு கண்ணைப் பறிக்க எதிரே தமிழ்நாட்டின் ஒரே வற்றாத ஜீவநதியாகிய நதிகளுக்கெல்லாம் மூத்த தாமிரபரணி சமநிலைக்கு வந்து விட்டாள். அங்கே மதியம் உச்சிக்கால வழிபாட்டின்போது நதியின் மீன்களுக்குக் கூட உணவிடுகின்றனர். இந்த வழிபாடு வரையில் இருந்து நாங்கள் பார்க்கலை என்றாலும் சொன்னார்கள்.

திருநெல்வேலியில் இருந்து கிட்டத்தட்ட ஐம்பது மைல் தூரத்தில் இருக்கும் பாபநாசத்துக்கு திருநெல்வேலியில் இருந்து பேருந்து செல்கிறது. என்றாலும் நாங்கள் வாடகைக்காரிலேயே பயணத்தைத் தொடர்ந்தோம். இந்தக் கோயிலின் சித்திரை விஷு மிகவும் பிரபலமானது. அன்று தான் அகத்தியருக்கு ஈசன் தனது கல்யாணக் கோலத்தைக் காட்டி அருளினார் என்று சொல்கின்றனர். ஈசனின் திருக்கல்யாணத்தின்போது பூமிபாரம் தாங்காமல் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர, சமப்படுத்த வந்தார் அகத்தியர் பொதிகை மலைக்கு. இங்கே இருந்த அகத்தியருக்கு ஈசன் சித்திரை விஷு அன்று தனது கல்யாணக் கோலத்தைக் காட்டி அருளியதாக ஐதீகம். மூலஸ்தான சந்நிதிக்குப் பின்னால் உள் பிரஹாரத்தில் அகத்தியருக்குக் கல்யாணக் கோலம் காட்டி அருளிய கல்யாண சுந்தரர், அம்பிகையுடன் ரிஷபாரூடராகக் காக்ஷி அளிக்கின்றார். அகத்தியர் தன் மனைவி லோபாமுத்திரையுடன் ஈசனை வணங்கிய கோலத்தில் காணப்படுவார். அகத்தியரின் சீடர் ஆன உரோமச முனிவர் ஈசனுக்கு தாமிரபரணிக்கரை ஓரம் கோயில்கள் எழுப்ப விரும்பி குருவை ஆலோசனை கேட்க, ஈசனுக்கு வழிபாடு செய்த தாமரை மலர்கள் ஒன்பதை உரோமசரிடம் கொடுத்து அவற்றை ஆற்றில் வீசி எறியும்படி அகத்தியர் சொல்ல அப்படியே செய்கின்றார் உரோமசர். அவை ஒதுங்கிய ஒன்பது இடங்களிலே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து நவகிரஹப் ப்ரீதி ஸ்தலங்களாக ஆக்கினார்.

இங்கே உள்ள ஈசனுக்கு முக்களா நாதர் என்ற பெயரும் உண்டு. மூன்று வேதங்களும் மூன்று களா மரங்கள் உருவில் ஈசனை வழிபட்டதாகவும் அதர்வ வேதம் ஆகாய ரூபத்தில் வழிபட்டதாகவும் சொல்கின்றனர். கருவறையில் ருத்ராக்ஷ வடிவில் ஈசன் காணப்படுவார். ப்ராஹாரத்தில் முக்களா மரத்தின் கீழ் காணப்படுகின்றார். அசுர குருவான சுக்ராசாரியாரின் மகன் துவஷ்டாவை ஒரு சமயம் குருவாக ஏற்கவேண்டி வந்தது இந்திரனுக்கு. துவஷ்டாவோ அசுரர்களுக்கே நன்மை செய்யும் வண்ணம் யாகங்கள் செய்தான். இது அறிந்த இந்திரன், துவஷ்டாவைத் தன் குரு என்றும் பாராமல், கொல்ல, பிராமணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கிறது இந்திரனுக்கு. தன் பாவத்தைப் போக்கிக் கொள்ள எல்லா இடங்களுக்கு அலைந்துவிட்டுக் கடைசியாக பாபநாசம் வந்து இங்கே உள்ள இறைவனை வழிபட்டுத் தன் பாவங்கள் நீங்கப் பெற்றான் என்கிறது தல வரலாறு.

அம்பாள் பெயர் உலகம்மை. இவள் சந்நிதி முன்பு உரல் ஒன்றும், உலக்கையும் உள்ளது. கோயிலிலேயே விரலி மஞ்சள் கொடுக்கின்றனர். அதை இந்த உரலில் இட்டு இடித்துவிட்டு அதையே பிரசாதமாக எடுத்துக் கொண்டு வரலாம். நல்லவேளையா இதுக்குக் காசு எதுவும் வாங்கலை! இந்த மஞ்சள் பொடியினாலேயே அன்னைக்கு அபிஷேஹமும் நடக்கும் எனச் சொல்கின்றனர். இந்த அபிஷேஹ தீர்த்தமும் அருந்தினால் புத்திர பாக்கியம், திருமண பாக்கியம், தீர்க்க சுமங்கலியாக இருக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று ஐதீகம். இங்கே தைப்பூசத்தன்று நந்திக்குச் சிறப்பு வழிபாடு சந்தனக்காப்போடு நடக்கிறது. வியாக்ரபாதருக்கும், பதஞ்சலிக்கும் தைப்பூசத்தன்று நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் ஆநந்த தாண்டவம் ஆடிய வண்ணம் ஈசன் காக்ஷி அளித்ததால் தைப்பூசத்துக்கு நந்திக்குச் சிறப்பு வழிபாடு. நடராஜர் தனி சந்நிதியில் ஆநந்த தாண்டவக் கோலத்தில் காக்ஷி கொடுக்கிறார். இவருக்குப் புனுகு மட்டுமே சார்த்தப் படுகிறது. இவரைப் புனுகு சபாபதி என்று அழைக்கின்றனர்.

Geetha Sambasivam

unread,
Oct 21, 2009, 9:52:28 PM10/21/09
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)

Wednesday, October 21, 2009

தாமிர பரணிக்கரையில் சில நாட்கள்- நவ கைலாயம் 2

அடுத்து, சந்திரனுக்குரிய தலம். சேர்மாதேவி, சேரன்மஹாதேவி என்றெல்லாம் சொல்லப் படும் ஊர். திருநெல்வேலியில் இருந்து 25 அல்லது 30 கி.மீ தூரத்தில் உள்ளது. இப்போ சொல்லும் வரிசையிலே நாங்க போகலை. நாங்க போனது முதலில் கோடகநல்லூர் தான். அது செவ்வாய்க்கான தலம்னு குறிச்சு வச்சிருக்கேன். பாபநாசம் கடைசியிலே தான் போனோம். மேலே ஏறிச் செல்லவேண்டும், அங்கேயும் பார்க்கக் கோயில்கள், தீர்த்தம், அருவி இருக்குனு தெரியலை. அதனால் போயிட்டுக் கீழே இறங்க நேரம் இன்மையால் தவற விட்டோம். மீண்டும் ஒருமுறை போகணும். பார்ப்போம். சேர்மாதேவியில் சீக்கிரமாய்ப் போனால் தான் ஸ்வாமி தரிசனம் செய்யமுடியும். கோயிலைச் சீக்கிரமே சாத்திடறாங்க. நல்லவேளையா நாங்க சீக்கிரமே போனோம். ஒன்பது மணிக்குப் போயிருந்தால் கூடப் பார்க்கிறது சிரமம் தான்.

ஏற்கெனவே சொன்ன உரோமசர் தாமரைப் பூக்களை இட்ட கதையைத் தவிர இங்கே சொல்லும் மற்றொரு கதை இரு சகோதரிகளைப் பற்றியது. உரோமசருக்குப் பின்னர் கோயில் இருந்த இடம் தெரியாமல் லிங்கம் மட்டுமே ஒரு அரசமரத்தடியில் இருக்க, அங்கே வாழ்ந்து வந்த இரு சகோதரிகள், சிவ பக்தைகள். வீட்டிலேயே நெல் குத்தி, அரிசி வியாபாரம் செய்து வந்த அவர்கள், தினமும் இந்த லிங்கத்துக்கு வழிபாடுகள் செய்த பின்னரே தங்கள் வேலையைத் தொடங்குவார்கள். அவர்கள் லட்சியமே இந்த லிங்கம் மரத்தடியில் கவனிப்பாரின்றி இருக்கிறது. ஒரு அழகான கோயில் கட்டி அங்கே இவரைப் பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று நினைத்தனர். தங்களது உழைப்பின் பயனில் வரும் லாபத்தைச் சிவன் கோயில் கட்டவெனச் சேர்த்து வைத்தனர். அவர்களைச் சோதிக்க எண்ணிய ஈசன் ஒரு சிவனடியார் உருவில் அவர்கள் வீடு வந்தார்.

வந்தவர் மிகுந்த பசியோடு இருப்பதாய்ச் சொல்ல, சகோதரிகள் அவரை வரவேற்று, பாதபூஜை செய்து, உணவு அருந்த வருமாறு அழைத்தனர். வீட்டில் விளக்கு எரியவில்லை. உடனேயே அதைச் சுட்டிக் காட்டிய சிவனடியார், வீட்டில் விளக்கு எரியவில்லை எனில் எவ்வாறு வெளிச்சம் இருக்கும்? அது போலவே மங்களமும், செல்வமும் தங்காது. எனவே இந்த வீட்டில் உணவருந்த மாட்டேன், என்று சொல்லிவிட்டு எழுந்துவிட்டார். பதறிய சகோதரிகள் விளக்கைத் தேடியும் கிடைக்காமல், ஒரு தேங்காயை எடுத்து உடைத்து, அதிலே நெய்யை ஊற்றி, விளக்கு ஏற்றி வைத்தனர். சிவனடியாரும் சாப்பிட்டுவிட்டுத் தன் சுயவுருவில் காட்சி அளித்தார். சிவனடியாரின் அருளால் செல்வமும் பெருகவே, சகோதரிகள் நினைத்த வண்ணமே கோயிலை எழுப்பினார்கள்.

ஈசன் பெயர் அம்மநாதர். தாமிரபரணியின் தென்கரையில் உள்ளது இந்தத் தலம், அம்மையப்பர் என்றும் சொல்லுகின்றனர். அம்மன் வலப்பக்கமாய்க் காட்சி கொடுக்கிறாள். அதாவது அம்மன் சந்நிதி அம்மநாதரின் சந்நதிக்கு வலப்புறமாய்க் காணப்படுகிறது. கோமதி அம்மன், ஆவுடைநாயகி என்ற பெயரில் அழைக்கப் படுகிறாள். இந்தக் கோயிலில் ஸ்வாமிக்கும், அம்மனுக்கு திருமணக் கோலத்தில் காட்சி கொடுக்கும் கோயில் என்று சொல்லுகின்றனர். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக சிதம்பரத்து நந்தனார் இந்தக் கோயிலுக்கு விஜயம் செய்திருக்கிறார் போலும். கொடிமரத்துக்குக் கீழே உள்ள பீடத்தில் நந்தனார்(??) சிற்பம் காட்சி கொடுக்கிறது. நந்தியாரும் சற்றே விலகி இருக்கிறார். அதனாலேயே நந்தனார் எனத் தோன்றுகிறது.

அரிசி வியாபாரிகள் அனைவருமே இந்தக் கோயிலில் தங்கள் வியாபாரம் செழிக்கப் பிரார்த்தனை செய்து கொள்வதுண்டு என்று சொல்கின்றனர். திருமண தோஷமும் நீக்கப் படும் பரிஹார தலமாய்ச் சொல்லுகின்றனர். அம்மன் சந்நிதியில் ஒரு தட்டில் அரிசியைப் பரப்பி, உடைத்த தேங்காயில் நெய் விட்டு விளக்கு ஏற்றி வைக்கின்றனர். அம்மனுக்கு மாதுளம்பழச் சாறினால் அபிஷேஹம். நவகிரஹங்கள் இங்கே காணப்படவில்லை. வழக்கம்போல் நடராஜர் இருக்கிறார். பைரவருக்கு இங்கே நாய் இல்லாமல் தனியாகக் காட்சி கொடுக்கிறார். தல விருக்ஷம் பலா. கோயிலைக் கட்டிய சகோதரிகள் சிற்பம் இருக்குனு சொன்னாங்க. தேடிப் பார்க்க முடியலை. பாண்டியர் காலத்துக் கல்வெட்டுக்களும் இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். படம் போடமுடியலை. மன்னிக்கவும்.

Geetha Sambasivam

unread,
Oct 21, 2009, 9:54:35 PM10/21/09
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)
இல்லம் குழும நண்பர்களுக்கு,
 
இந்தப் பதிவுகள் வருதா??? நேத்திக்குக் குழுமத்தின் உள்ளே சென்று பார்த்தபோது என்னுடைய புதிய பதிவுகள் எதுவும் அங்கே அப்டேட் ஆகலைனு கவனிச்சேன். என்ன பிரச்னைனு புரியலை. வரலைனா சொல்லவும். நன்றி.
2009/10/22 Geetha Sambasivam <geetha...@gmail.com>

akr

unread,
Oct 22, 2009, 4:21:52 AM10/22/09
to இல்லம் (your HOME)

அன்பு சகோதரி,

தங்கள் பதிவுகள் தொடர்ந்து வருகின்றன. பின்னூட்டம் யாரும் தராததால் இந்த
சந்தேகம் வருகிறது.

On Oct 22, 6:54 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> இல்லம் குழும நண்பர்களுக்கு,
>
> இந்தப் பதிவுகள் வருதா??? நேத்திக்குக் குழுமத்தின் உள்ளே சென்று பார்த்தபோது
> என்னுடைய புதிய பதிவுகள் எதுவும் அங்கே அப்டேட் ஆகலைனு கவனிச்சேன். என்ன
> பிரச்னைனு புரியலை. வரலைனா சொல்லவும். நன்றி.

> 2009/10/22 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
>
>
>
> > Wednesday, October 21, 2009 தாமிர பரணிக்கரையில் சில நாட்கள்- நவ கைலாயம் 2<http://aanmiga-payanam.blogspot.com/2009/10/2.html>

> ...
>
> read more »

Geetha Sambasivam

unread,
Oct 22, 2009, 4:26:34 AM10/22/09
to il...@googlegroups.com
பின்னூட்டம் வராட்டிப் பரவாயில்லை, பதிவுகள் வருதானு தெரிஞ்சுக்கணும், நன்றி.

2009/10/22 akr <akrcons...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Oct 25, 2009, 5:04:18 AM10/25/09
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)

Saturday, October 24, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்- நவ கைலாயம் 3

அடுத்து கோடகநல்லூர். இதுக்குத் தான் முதல்லே போனோம். நாங்க போனபோது காலை வழிபாடு நடந்து கொண்டிருந்தது. அபிஷேஹம் முடிந்து, அலங்காரம் முடிந்து நைவேத்தியம் காட்டி தீப ஆராதனைகளும் பார்க்க முடிந்தது. தீப ஆராதனையின் போது அங்கே நின்றிருந்த ஓதுவார் நன்றாகப் பாடினார். கோயிலுக்கென நியமிக்கப் பட்ட ஓதுவார் அவர். பரம்பரையா என்னனு கேட்டுக்கலை. மிகவும் ஏழ்மை நிலைமையில் இருந்தார். கோயில் சுத்தமாக இருந்தது. ஆனாலும் ஏழைக் கோயில் தான். சேரன்மஹாதேவிக்குச் செல்லும்வழியிலேயே இருக்கிறது. நாங்க வாடகைக் காரில் போனதால் போக முடிந்தது. இந்தக் கோயிலுக்கு அதிகம் பேருந்து வசதி இல்லை. நடுக்கல்லூர் என்னும் ஊருக்கு அருகே நடுவழியில் இறக்கிவிட்டுடுவாங்க. அங்கிருந்து இந்த ஊருக்கு நடந்தே வரணும். அர்ச்சகர் இந்த ஊர்க்காரர். ஓதுவாரும் இதே ஊர். அதனால் வழிபாடுகள் நேரத்துக்கு நடக்கிறது. அரசின் கவனம் திரும்பினால் இன்னும் கொஞ்சம் வசதியாய் இருக்கும்னு குருக்களும், ஓதுவாரும் சொன்னார்கள். இனி கோயில் வரலாற்றைப் பார்ப்போம்.

நவ கைலாயக் கோயில்களிலேயே இந்தக் கோயிலின் மூர்த்திதான் மிகப் பெரிய திருவுருவம் கொண்டவர். இவருக்குக் கட்ட குறைந்த பட்சமாக எட்டு வேட்டிகளாவது தேவைப்படும் எனச் சொன்னார்கள். அங்காரகன் என்று அழைக்கப் படும் செவ்வாய் வழிபட்ட தலம் இது என்பதால் செவ்வாய் தோஷத்துக்கான பரிகார தலமும் ஆகும். பல்லாண்டுகளுக்கு முன் இங்கே ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக அவர் மகனும் இருந்தான். ஒரு நாள் காட்டில் விறகு பொறுக்க மகன் காட்டினுள் செல்ல, அங்கே ஒரு ராஜகுமாரன் வந்தான். அவனுக்கு முனிவரைப் பார்த்ததும் தன் ராஜ்யத்தை விஸ்தரிக்க என்ன செய்யலாம்?? ஏதானும் யாகம் செய்யலாமா எனக் கேட்கத் தோன்றியது. ஆகவே முனிவரை எழுப்பிக் கேட்டான். ஆனால் பரிபூரண நிஷ்டையில் இருந்த அந்த முனிவரோ எவ்வளவு எழுப்பியும் எழவே இல்லை. கோபம் வந்த ராஜகுமாரன் ஒரு செத்த பாம்பை அவர் கழுத்தில் போட்டுவிட்டுப் போய் விட்டான். பாம்பு கழுத்தில் போடப் பட்டது கூடத் தெரியாமல் முனிவரோ நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார்.

முனிகுமாரன் திரும்பி வந்து பார்த்தபோது தன் தந்தையின் கழுத்தில் செத்த பாம்பைக் கண்டான். யார் செய்தது என்பதும் தெரிய வந்தது. உடனேயே அரண்மனைக்குச் சென்று ராஜகுமாரனிடம் உன் தந்தை ஒரு பாம்பினாலேயே இறப்பார் என்ரு சொல்லிவிட்டுச் சென்று விடுகிறான். பயம் அடைந்த ராஜா தன் விதி என்னவெனத் தெரிந்து கொள்ள எண்ணி அரண்மனை ஜோதிடர்களை வரவழைத்துத் தன் ஜாதகத்தைப் பார்க்க, சர்ப்ப தோஷம் இருப்பது தெரிய வந்தது. ஆகவே பாம்பிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள எண்ணிய அரசன் ஒரு மறைவிடத்தில் சென்று ஒளிந்து வசிக்கலானான். எறும்பு கூடப் புகமுடியாதபடிக்குக் கட்டப் பட்டிருந்த அந்த மண்டபத்தில் வசித்த அரசன் ஒருநாள் மாம்பழம் சாப்பிட்டான். மாம்பழத்தில் இருந்த சிறு புழு ஒன்று பழத்திலிருந்து வெளிப்பட்டு பாம்பாக மாறி அரசனைத் தீண்டியது. அரசன் இறந்து போனான். தப்பு செய்த ராஜகுமாரனை விட்டுவிட்டு அரசனைத் தீண்டிய பாம்புக்குத் தோஷம் பீடிக்க அது தியானம் மூலம் பரம்பொருளைத் துதிப்போம் எனத் துதிக்க ஆரம்பித்தது. மஹாவிஷ்ணு அந்தப் பாம்பிடம் சிவபெருமானை வழிபடச் சொல்ல, அதுவும் மனமுருகிப் பிரார்த்திக்க கைலைமலை வாசனும் பாம்பிற்கு முக்தி கொடுத்தார். பரிக்ஷித்து மன்னனையும், நளனையும் தீண்டிய கார்க்கோடகன் என்னும் பாம்புக்கும் இங்கே முக்தி கிடைத்ததால் கோடகநல்லூர் என்ற பெயர் ஏற்பட்டதாய்ச் சொல்லுகின்றனர். இங்கே இப்போவும் கருநாகங்கள் அதிகம் உலாவும் எனவும் சொல்லுகின்றனர்.

இங்கே அம்பாள் பெயர் சிவகாமி அம்மன். இவளைத் தவிர அநந்த கெளரி என்ற பெயரில் ஐந்து தலை நாகத்தின் கீழ் நின்ற நிலையில் காட்சி கொடுக்கும் அம்மனும் இருக்கிறாள். இவளைச் சர்ப்பயட்சி என்றும் நாகாம்பிகை என்றும் சொல்கின்றனர். ஈசனுக்குத் துவரம்பருப்பு நைவேத்யம் விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் சிவப்பு வஸ்திரமும் அணிவிக்கின்றனர். நந்திக்குத் தாலி கட்டும் அதிசய வழக்கமும் இங்கே உண்டு. செவ்வாய் தோஷத்தினால் திருமணம் தள்ளிப் போகும் பெண்கள் இங்கே 58 விரலி மஞ்சளால் கோர்க்கப் பட்ட தாலியை நந்தியின் கழுத்தில் மாலையாக அணிவிக்கின்றனர். இப்படிச் செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. சிவராத்திரி, திருவாதிரை, போன்றநாட்களில் உற்சவம் உண்டு. மற்றபடி கொடிமரமோ, பலிபீடமோ, பரிவார மூர்த்திகளோ இந்தக் கோயிலில் காணமுடியாது.




















--
 



--

Geetha Sambasivam

unread,
Oct 28, 2009, 4:54:08 AM10/28/09
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)

Tuesday, October 27, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! நவ கைலாயம் 4


அடுத்துக் காண இருப்பது புதனுக்கான க்ஷேத்திரம். இது வேறே எங்கேயும் இல்லை. மகரநெடுங்குழைக்காதரைப் பார்த்தோமே, தென் திருப்பேரை, அங்கேயேதான் இந்தக் கோயிலும் உள்ளது. முதல்நாளே அது சரியாத் தெரியலை. அன்னிக்கே பார்த்திருந்தால், நவ கைலாயப் பயணத்தன்று வேறு சில கோயில்களைப் பார்த்திருக்கலாம். தெரியலை. அதோட பலரும் பிரம்மதேசம், திருப்புடை மருதூர், கடையம், கடையநல்லூர் போன்ற ஊர்கள் சென்றீர்களா என்றும் கேட்கின்றனர். கடையம், கடைய நல்லூர் வழியாத் தொட்டுக் கொண்டு சென்றோமே தவிர ஊர்களுக்குள் நுழையவில்லை. பிரம்மதேசம், திருப்புடை மருதூர் போகமுடியலை, நேரம் இல்லாமையால். இனி புதனுக்கான க்ஷேத்திரமான தென் திருப்பேரை கைலாசநாதரைக் காணலாம்.

உரோமச முனிவர் மிதக்கவிட்ட தாமரை மலர்களில் ஏழாவது மலர் ஒதுங்கிய இடமாய்க் கூறப்படும் இந்தத் தலத்தில் கைலாசநாதர் லிங்க வடிவில் தாமரை பீடத்தின் மேல் காட்சி கொடுக்கிறார். தாமரை போன்ற வடிவமைப்புடன் கூடிய பீடம். அம்பிகையின் பெயர் அழகிய பொன்னம்மை. அம்மன் சந்நிதி தனியாக இருக்கிறது. வள்ளி, தெய்வானையோடு கூடிய சுப்ரமணியரும் இங்கே காட்சி கொடுக்கிறார். நவகிரஹங்கள் வாகனங்களில் காட்சி கொடுக்கின்றனர். சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய கிரஹங்கள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி இருக்கும் காட்சியைக் காணலாம்.

இந்தக் கோயிலுக்கு ஒரு முறை ஆங்கிலேயே கலெக்டர் துரை என்பவர் இப்பகுதிக்கு வந்து தங்கி இருந்தார். இங்கே உள்ள சாவடியில் தங்கி இருந்த அவர் தாகம் தீர்க்க ஒரு இளநீர் கொண்டுவரச் சொல்லுமாறு சேவகனைப் பணித்தார். அருகிலுள்ள தென்னந்தோப்பிற்குச் சென்று கலெக்டருக்காக இளநீர் கேட்ட சேவகனிடம் அங்கிருந்த விவசாயி, கைலாசநாதருக்காக வளர்க்கப் படும் தென்னை மரங்கள் இவை. இந்த இளநீரை ஸ்வாமியின் அபிஷேஹத்துக்குப் பயன்படுத்துவதால் மனிதர் குடிக்கக் கொடுக்கமுடியாது என மறுத்துவிட்டார். துரையிடம் வந்து நடந்ததைச் சொன்ன சேவகனையும் அழைத்துக் கொண்டு தோப்பிற்குச் சென்ற கலெக்டர், விவசாயியிடம், “இந்தத் தோப்பிலுள்ள தென்னை மரத்தின் தேங்காய்களுக்கெல்லாம் என்ன கொம்பா முளைச்சிருக்கு?? சும்மாப் பறிச்சுப் போடு!” என்று கடுமையாக உத்தரவிட, பணிய நேர்ந்தது விவசாயிக்கு. ஒரு இளநீரைப் பறித்துக் கொடுக்க யத்தனித்த போது என்ன ஆச்சரியம்???

உண்மையாகவே அந்த இளநீரில் மூன்று கொம்பு முளைத்திருந்தது. கலெக்டரிடம் அதை நீட்டப் பயந்து போனார் கலெக்டர். உடனேயே கோயிலுக்குச் சென்று இறைவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, தினசரி வழிபாட்டுக்காக அப்போது இருந்த பண மதிப்பில் ஆறரை துட்டு காணிக்கையாக வழங்கினார். இந்தத் தேங்காய் இப்போதும் உடைந்த ஒரு கொம்பு தவிர மற்ற இரு கொம்புகளோடு இந்தக் கோயிலில் காட்சிக்கு வைத்திருக்கின்றார்கள். நந்திக்குத் தலைப்பாகை கட்டி அலங்கரிப்பது இங்கே விசேஷமாய்ச் சொல்கின்றனர். இவ்வூரில் உள்ள நவதிருப்பதிக் கோயிலான மகரநெடுங்குழைக்காதர் சுக்கிர தோஷத்தை நிவர்த்தி செய்பவர் என்பார்கள். இந்தக் கைலாச நாதரோ புத தோஷத்துக்கு நிவர்த்தி செய்பவர். ஆகவே மாணாக்கர்கள் பெருமாளையும், ஈசனையும் ஒருசேர இங்கே வந்து வழிபடுவது மிகவும் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. இங்கே உள்ள பைரவர் ஆறு கைகளோடு காணப்படுகிறார். வேதத்தின் அம்சம் எனச் சொல்லப் படுகிறார். ஆகையால் இங்கே நாய் வாகனம் இல்லாமலேயே பைரவர் காட்சி அளிக்கிறார். எல்லாச் சிவன் கோயில்களையும் போல் இங்கேயும் மார்கழி திருவாதிரையும், சிவராத்திரியும் சிறப்பாக நடைபெறும்.

படம் நன்றி:http://www.shaivam.org

Geetha Sambasivam

unread,
Nov 15, 2009, 8:10:21 AM11/15/09
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)

Sunday, November 15, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! நவகைலாயம் 5

அடுத்ததாக நாம் காணப் போவது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முறப்பநாடு கைலாசநாதர் கோயிலாகும். நவ கைலாயங்களில் இது ஐந்தாவது கோயில். குருபகவானுக்கான க்ஷேத்திரம் எனச் சொல்லப் படுகிறது. மற்ற நவகைலாயக் கோயில்களுக்கு நடுவே இது அமைந்திருப்பதால் இதை நடுக்கைலாயம் என்றும் அழைக்கின்றனர். மேலும் தாமிரபரணி நதி இங்கே வடக்கே இருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது. அதனாலும் இது சிறப்பாகக் கூடப் படுகிறது. இந்த இடத்தில் தாமிரபரணி நதியை தக்ஷிண கங்கை என்ற பெயரில் அழைக்கின்றனர். நதிகளிலேயே மூத்த நதியான தாமிரபரணி நதியின் இந்தக் கரையில் தீர்த்த யாத்திரை செய்வது மிகவும் புனிதமாய்க் கருதப் படுகிறது. இந்த ஊரின் இந்தக் கோயிலைக் கட்டியது வல்லாள மஹாராஜா எனச் சொல்லப் படுகிறது. ஆனால் சோழ மன்னன் ஒருவனே கட்டியதாகவும் தலவரலாறு கூறுகிறது. எது எப்படி எனச் சரியாக யாருக்கும் தெரியவில்லை என்றாலும் பின்வரும் தலவரலாறே கூறப்படுகிறது.

சோழமன்னன் ஒருவனுக்குப் பெண்குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தையின் முகம் குதிரை முகமாக இருந்தது. பெண்குழந்தைக்குக் குதிரை முகமா என வருந்திய மன்னன், முகம் மாறவேண்டி சிவனை எண்ணிப் பிரார்த்தித்தான். சிவபெருமான் மன்னன் கனவில் தோன்றி தாமிரபரணியின் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் நீராடி வழிபாடுகள் செய்யச் சொல்ல, மன்னனும் அவ்வாறே செய்து வந்தான். நாளா வட்டத்தில் குழந்தையின் முகமும் மனித முகமாக மாறியது. தான் வழிபட்ட உரோமச லிங்கரால் ஸ்தாபிக்கப் பட்ட லிங்கம் இருந்த இடத்தில் மன்னன் ஒரு கோயிலைக்கட்டியதாகவும், அதுவே இந்தக் கோயில் எனவும் கூறுகின்றனர். ஆச்சரியமான செய்தி என்னவெனில் இங்கே உள்ள நந்தியெம்பருமானுக்கும் குதிரை முகமாய் இருக்கிறது.

அதற்குக் காரணம் முன் பிறவியில் செய்த பாவத்தால் குதிரை முகத்தோடு பிறந்த மன்னன் மகளின் பாவத்தை ஈசன் நந்தியை ஏற்க வைத்ததாகவும், அதன் காரணமாகவே நந்திக்குக் குதிரை முகம் என்றும் சொல்லுகின்றனர். இந்தக் கோயிலின் காவலுக்கு இரு பைரவர்கள் இருக்கின்றனர். கால பைரவர் வழக்கமான நாய் வாகனத்தோடும், வீர பைரவர் வாகனம் இல்லாமலும் காட்சி அளிக்கின்றனர். கைலாய நாதர் இங்கே குரு அம்சமாக வழிபடப் படுகின்றார். அதனால் அவருக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, கொண்டைக்கடலை நிவேதனம் செய்யப் படும் வழக்கம் இருக்கிறது. அம்பாள் பெயர் சிவகாமி அம்மை. அம்பாளுக்குத் தனிச் சந்நிதி உண்டு. மற்றப் பரிவார தேவதைகளில், இரட்டை விநாயகர்கள், சூரியன், அதிகார நந்தி, சப்தகன்னிமார், பஞ்ச லிங்கம், நாயன்மார்கள் வள்ளி, தெய்வானையோடு சுப்ரமணியர் போன்றவர்களும் உள்ளனர். சனீஸ்வரரும் தனியாக இருக்கிறார். இந்த ஊரில் தான் சூரனின் கொடுமை தாங்கமுடியாமல் ரிஷி முனிவர்கள் ஈசனிடம் முறையிட்டதாகவும் அதனாலேயே இந்த ஊருக்கு முறப்பநாடு எனப் பெயர் ஏற்பட்டதாகவும் சொல்லப் படுகிறது.

இந்த ஊர் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ளது. திருநெல்வேலியில் இருந்து 20 கிமீட்டருக்குள் இருக்கும். பேருந்துகளில் சென்றால் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒரு கிமீட்டருக்கு மேல் நடந்து தான் செல்லவேண்டும். காலை ஏழு மணிக்கு மேல் தான் கோயில் திறக்கப் படுகிறது. பனிரண்டு மணிக்கு நடை சாத்தினால் மாலை ஐந்து மணி அளவில் கோயில் திறந்து ஏழு மணிக்கெல்லாம் நடை சாத்துகிறார்கள். ஆகவே நேரத்தைத் தெரிந்து வைத்துக் கொண்டு சென்றால் தான் தரிசனம் செய்ய முடியும்.


படம் நன்றி: தினமலர்



--
 



--
--~--~---------~--~----~------------~-------~--~----~
இறையடியார்களின் இணைய சத்சங்கம் " நம்பிக்கை"
http://groups.google.co.in/group/nambikkai
-~----------~----~----~----~------~----~------~--~---





Geetha Sambasivam

unread,
Nov 18, 2009, 4:07:48 AM11/18/09
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)

Wednesday, November 18, 2009

தாமிரபரணிக்கரையில் சிலநாட்கள்! நவ கைலாயம் - 6

அடுத்ததாக நாம் பார்க்கப் போவது சுக்கிரனுக்கான தலம் ஆகும். இது திருநெல்வேலியில் இருந்து ஆத்தூர் என்னும் ஊருக்குச் சென்று அங்கிருந்து புன்னைக்காயல் என்னும் ஊர் செல்லும் பேருந்தில் சென்றால் நடுவில் இரண்டு அல்லது மூன்றாம் கிலோமீட்டரில் சேர்ந்தபூமங்கலம் என்னும் பெயருடைய இந்த ஊர் வரும். இந்த ஊரில் தான் ஆறாம் நவ கைலாயம் உள்ளது. தூத்துக்குடியில் இருந்து வந்தால் திருச்செந்தூர் செல்லும் வழியில் ஆத்தூரை அடைந்தும் இங்கே செல்லலாம். வழியை நன்கு தெரிந்தவர்கள் துணையோடு சென்றால் ஒரே நாளில் நவ திருப்பதிகளிலேயே அமைந்துள்ள நவ கைலாயங்களையும், நவதிருப்பதி/நவ கைலாயம் செல்லும் வழியில் உள்ள திருப்பதி/கைலாய தரிசனங்களையும் இரண்டு நாட்களில் தரிசிக்க முடியும். சிற்ப விநோதங்களையும் மற்ற இயற்கைக் காட்சிகளையும் காணவேண்டுமானால் நவ திருப்பதி இரு நாட்கள், நவ கைலாயம் தனியாக இரு நாட்கள் என வைத்துக் கொள்ளலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் கிருஷ்ணாபுரம் என்னும் ஊரின் சிற்ப விநோதங்களே பெருமளவு பேசப்படக் கூடியதாகவும், சிற்பக் கலை வல்லுநர்களுக்கு ஆச்சரியத்தில் ஆழ்த்தும்படியாகவும் அமைந்துள்ளதாய்க் கூறுவார்கள். நாங்க கிருஷ்ணாபுரம் போகவில்லை. இன்னொரு முறைதான் போகணும்.

இப்போ சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதரைத் தரிசிக்கலாமா? இங்கே குபேரனுக்கு மூலவரின் கருவறை விமானத்தின் மேல் சிலை உள்ளது. இரு தேவியருடன் காட்சி அளிக்கின்றான் குபேரன். யானை வாகனத்தில் நடுவில் குபேரனும், இருபக்கமும் இரு தேவியரும் காட்சி அளிக்கின்றனர். இது தவிர சதுரமான பீடம் கொண்ட ஒரே லிங்கமும், தன்னுடன் ஒரு பக்கம் அம்பிகையும் இருவருக்கும் நடுவே விநாயகரும் இருக்கக் காட்சி கொடுக்கும் அற்புதமும் காணலாம். மூலவரின் பெயர் கைலாச நாதர். ரோமசமுனிவர் ஸ்தாபித்த கோயில்களுள் ஆறாவது கோயில் இது. இங்கே மூலவரே சுக்கிர அம்சத்தோடு காட்சி கொடுக்கிறார் என்பது ஐதீகம். அம்பாள் பெயர் அழகிய பொன்னம்மை தெற்கு நோக்கிக் காட்சி கொடுக்கிறாள். கைலாசநாதரை கருவறையில் வணங்கிய பின்னர் விமானத்தில் தரிசனம் கொடுக்கும் குபேரனையும் வணங்குவது மிகவும் சிறப்பித்துச் சொல்லப் படுகின்றது. சுக்கிரனின் தோஷம் உள்ளவர்களும், செல்வம் வேண்டும் என நினைப்பவர்களும் இங்கே வந்து சுக்கிரனுக்கு வெண்ணிற வஸ்திரம் சார்த்தி, மொச்சைப் பொடிசேர்த்த சாதமும், தயிர்சாதமும் நிவேதனம் பண்ணுகின்றனர். வெண்தாமரை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலை ஆறிலிருந்து ஏழு மணிக்குள் சுக்கிர ஹோரை இருக்கும் நேரம் வழிபடவேண்டும் என்றும் சொல்கின்றனர்.

இரண்டு வாசல்களுடன் கூடிய இந்தக் கோயிலின் தல விருக்ஷம் வில்வம். இங்கே உள்ள பிரகாரத்தில் சொக்கநாதர், மீனாக்ஷி அம்மையுடனும், சனீஸ்வரர், பைரவர் போன்றோரும் பரிவார தேவதைகளாக இடம் பெற்றிருக்கின்றனர். முருகன் மட்டும் தன்னைத் தனியாய்க் கவனிக்கவேண்டுமென்றோ என்னமோ, ஒரு பக்கமாய்த் திரும்பி மயில் வாகனத்தில் நின்று கொண்டிருக்கிறார். வள்ளி, தெய்வானை கூட இருந்தாலும் மயில் வலப்புறம் திரும்பி இருப்பதன் காரணம் தெரியவில்லை. கந்தனுக்குரிய சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. இந்தக் கோயில் பிற்காலப் பாண்டியர்களால் கட்டப் பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது. மதுரைச் சொக்கநாதரும், மீனாக்ஷி அம்மையும் இடம் பெற்றிருப்பதால் பாண்டிய காலத்துக் கோயிலாக இருக்கலாமென்றே நம்பவேண்டி உள்ளது. தாமிரபரணிதான் இங்கே தீர்த்தம். மேலும் சிறப்பு என்னவென்றால் பொதிகை மலையில் உற்பத்தி ஆகும் தாமிரபரணி பாபநாசத்தில் தரை இறங்கி வந்து எல்லா ஊர்களையும் கடந்து இந்த ஊர் அருகே உள்ள புன்னைக்காயலில் தான் கடலில் சங்கமம் ஆகின்றாள். திருச்செந்தூருக்குப் பாதயாத்திரை செல்லும் முருகபக்தர்கள் இந்தப் புன்னைக்காயலின் தாமிரபரணியில் நீராடிச் சென்ற பின்னரே திருச்செந்தூரில் கடலாடுவதை வழக்கமாய்க் கொண்டிருக்கின்றார்கள். இங்கேயும் மார்கழியில் திருவாதிரைத் திருநாளும், சித்திரை மாசம் பிரம்மோற்சவமும் சிறப்பாய்க் கொண்டாடப் படுகிறது. இந்தக் கோயிலும் குறிப்பிட்ட நேரமே திறந்திருக்குமென்பதால் காலை ஏழு மணியில் இருந்து பத்து மணிக்குள்ளாகவும், மாலை ஐந்தரை மணியிலிருந்து எட்டு மணிக்குள்ளாகவும் சென்று தரிசிப்பது நல்லது.

Geetha Sambasivam

unread,
Nov 24, 2009, 7:35:42 AM11/24/09
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)

Tuesday, November 24, 2009

தாமிரபரணிக்கரையில் சிலநாட்கள்! நவ கைலாயம் 7


அடுத்த க்ஷேத்திரம் சனிக்கானது. இந்த க்ஷேத்திரம் ஏற்கெனவே நாம் நவதிருப்பதியில் பார்த்தது தான். ஸ்ரீவைகுண்டம் க்ஷேத்திரம் இப்போ நாம்போக வேண்டியது. போகிற வழியெல்லாம் முன்னாடியே பார்த்துட்டோம் இல்லையா? இந்தக் கோயில் காசி விஸ்வநாதர் கோயில் என அழைக்கப் படுகிறது. இந்தக் கோயிலில் தான் நவ கைலாயக் கோயில்கள் உருவாக காரணமாய் இருந்த உரோமச முனிவருக்குச் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளதாய்த் தெரிய வருகிறது. (சிற்பத்தைப் பார்க்கவில்லை) மேலும் எல்லாக் கோயில்களிலும் இருப்பது போல் நடராஜர், வீரபத்திரர் போன்றோரின் சிற்பங்களும் உள்ளன. காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி அம்மனும் காட்சி கொடுக்கிறார். இந்தக் கோயிலின் கொடிமரம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்டதாய்ச் சொல்லுகின்றனர். நடராஜர் இங்கே சந்தன சபாபதி என்ற பெயரில் அழைக்கப் படுகிறார்.

மூலவர் காசிவிஸ்வநாதர், சிவகாமி அம்மனுடன் உள்ளார். இந்தக் கோயிலில் சனீஸ்வரருக்குத் தனிச் சந்நிதி உள்ளது. சனி தோஷத்தால் பாதிக்கப் பட்டவர்கள் கைலாசநாதருக்கும், சனிக்கும் விசேஷ வழிபாடு செய்கின்றனர். தடைப்பட்ட திருமணங்கள், இழந்த சொத்துக்களைத் திரும்பப் பெறுதல் போன்றவற்றிற்கு இங்கே பரிகாரம் செய்து கொள்ளுதல் நலம் எனச் சொல்லப் படுகிறது. ஸ்ரீயும், வைகுண்ட வாசனும் இந்தத் தலத்தில் தங்கி இருப்பதாலேயே இது ஸ்ரீவைகுண்டம் என அழைக்கப் படுவதாயும், நவதிருப்பதிகளிலும், 108 திவ்ய தேசங்களிலும் ஒன்றான கள்ளர்பிரான் கோயிலான நவதிருப்பதிக் கோயிலும் இங்கேயே அமைந்துள்ளதும் விசேஷமாய்ச் சிறப்பித்துச் சொல்லப் படுகிறது. நவதிருப்பதிகளில் சூரியனுக்குரிய தலமாகவும், நவ கைலாயத்தின் சனிக்குரிய தலமாகவும் இருப்பதும் தனிச்சிறப்பு எனச் சொல்லப் படுகிறது. எல்லாவற்றையும் விட மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று என்னவெனில் குமரகுருபர ஸ்வாமிகளின் அவதாரத் திருத்தலம் இது. அன்னை மீனாக்ஷியின் அருளைப் பெற்றவரும், வடநாடான காசிக்குச் சென்று திரும்பி வந்து காசிமடத்தைத் திருப்பனந்தாளில் ஸ்தாபித்தவரும் , சகலகலாவல்லி மாலையைப் பாடி மொழித்திறனைப் பெற்றவரும் ஆன குமரகுருபரரின் அவதாரத் தலம் ஸ்ரீவைகுண்டம் ஆகும்.

இந்தக் கோயிலின் நந்தியைச் சுற்றிலும் `108 விளக்குகள் ஏற்ற அமைக்கப் பட்டுள்ளது. இவற்றில் விளக்கு ஏற்றிப் பிரார்த்தித்துக் கொண்டால் ஐஸ்வர்யம் பெருகும் எனச் சொல்லுகின்றனர். இங்கே காவல் காப்பது பூதநாதர் ஆகும். பூதநாதருக்குத் தனிச் சிறப்புடன் சித்திரைத் திருநாளில் முதல் மரியாதை செய்யப் படுகிறது. சாஸ்தாவின் அம்சமான பூதநாதருக்கு அபிஷேகம் கிடையாது. சந்தனத் தைலம் மட்டுமே தடவி வடைமாலை சார்த்துவது விசேஷமாய்ச் சொல்லப் படுகிறது. மற்றக் கோயில்களில் பைரவர் சந்நிதியில் கோயிலின் சாவியை வைப்பது போல் இங்கே பூதநாதர் சந்நிதியில் கோயிலைப் பூட்டிச் சாவியை வைத்து வந்ததாகவும், பூதநாதரை மிஞ்சி எவரும் உள்ளே நுழைய முடியாது என்ற நம்பிக்கை இருந்ததாகவும் தெரியவருகிறது. சித்திரை, ஐப்பசியில் பிரம்மோற்சவமும், ஆறாட்டுவிழாவும் நடக்கிறது. ஐப்பசியில் திருக்கல்யாண உற்சவம், கந்த சஷ்டி, சிவராத்திரி போன்றவையும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. ஸ்ரீவைகுண்டம் கொஞ்சம் பெரிய ஊராக இருப்பதால் இரவு ஒன்பது மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

jayashree shankar

unread,
Nov 24, 2009, 9:03:21 AM11/24/09
to il...@googlegroups.com
உங்கள் பதிவுகளை படித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.....ஒரு நல்ல ஆன்மீக ஆராய்ச்சி புத்தகம் போல்...
இவர்களுக்குள் இத்தனை விஷய ஞாயன்களா..? என வாயடைத்து....மனம்...மௌனமாகிப் போயி..........
உங்களது தெய்வத்தொண்டை..தொடருங்கள்.......
என்னையும் மன்னியுங்கள்....
மிக்க நன்றி
ஜெயஸ்ரீ ஷங்கர்.


 
2009/10/22 Geetha Sambasivam <geetha...@gmail.com>
பின்னூட்டம் வராட்டிப் பரவாயில்லை, பதிவுகள் வருதானு தெரிஞ்சுக்கணும், நன்றி.


--~--~---------~--~----~------------~-------~--~----~
You received this message because you are subscribed to the Google Groups "ILLAM [இல்லம்], your HOME".
To post to this group, send email to il...@googlegroups.com
To unsubscribe from this group, send email to illam-un...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/illam?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---


Nagarajan K.

unread,
Nov 25, 2009, 3:00:33 AM11/25/09
to il...@googlegroups.com
நன்றி

> --

Geetha Sambasivam

unread,
Nov 25, 2009, 4:47:45 AM11/25/09
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)

Wednesday, November 25, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் - நவ கைலாயம் நிறைவு!


அடுத்ததாய் ராகுவுக்கான கோயில். இந்த நவகைலாயக் கோயில்களும் முக்கியமான ஊர்களில் இருக்கும் ஒரு சில கோயில்களைத் தவிர மற்றவை பராமரிப்பின்றி காணப்படுகின்றன. அதற்கு முந்தைய பதிவில் திரு குப்பன் யாஹூ கூறியதும் ஒரு காரணமாக இருக்கலாம். கோயில்களையும், கோயில் சார்ந்த நிலங்களையும் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசு இம்மாதிரி நலிந்த கோயில்களை மீண்டும் புனருத்தாரணம் செய்து வழிபடப் பயனுள்ளதாக மாற்றவேண்டும். இந்த நிலைமை மாறவேண்டும். திருநெல்வேலியிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்திலே குன்றுகள் சூழ்ந்த பகுதியான குன்றத்தூர் என்னும் ஊரிலே தான் ராகுவுக்கான கோயில் உள்ளது. ரோமசமுனிவர் தாமிரபரணியில் விட்ட தாமரை மலர்களில் ஒன்று ஒதுங்கிய இடமும் இதுவாகும். இந்த ஊர்க்கோயிலைப் பார்க்கும் முன்பு இந்தக் கோயில் பற்றிய வரலாற்றைப் பார்ப்போமா???

அநேகமாய்ப் பள்ளிப் பாடங்களில் இந்தக் கதையை நாம் படித்திருப்போம். அதே கதைதான். என்றாலும் திரும்ப ஒரு முறை சொல்லுகிறேன். திருநெல்வேலிக்கு அருகே உள்ள இந்தப் பகுதியில் ஒரு அதிசய மாமரம் இருந்தது. அந்த மாமரத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒரே ஒரு பழம் தான் பழுக்கும். அந்தப் பழத்தை வேறு யாரும் உண்ணமுடியாது. மன்னன் மட்டுமே உண்ணுவான். ஒரு வருஷம் இப்படிப் பழுத்திருந்த பழம் மன்னன் பறிப்பதற்காகக் காத்திருந்தது. அப்போது தாமிரபரணியில் நீர் எடுத்துச் செல்ல ஓர் இளம்பெண் வந்தாள். அவள் நீர் எடுக்கும்போது பழுத்துக் கனிந்திருந்த அந்தப் பழம் நீரில் விழுந்து,நீரோடு குடத்தினுள் சென்றுவிட்டது. அதை அந்தப் பெண் அறியமாட்டாள். அவள் வீட்டிற்குச் சென்றுவிட்டாள். மன்னன் பழத்தைப் பறிக்க வந்தான். பழம் மரத்தில் இல்லை. யார் எடுத்துச் சென்றிருப்பார்கள் என யோசித்த மன்னன் அன்று நதிக்கரைக்கு வந்தவர்கள் வீட்டையும், நதியில் நீராடி, நீர் எடுத்துச் சென்றவர்கள் வீட்டையும் கேட்டறிந்து பரிசோதனை செய்யச் சொன்னான்.

அப்போது நீர் எடுத்துச் சென்ற பெண்ணின் வீட்டில் சோதிக்கும்போது நீர்ப்பானைக்குள் பழம் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. மன்னன் பெண்ணென்றும் பாராமல் அவளை விசாரித்தும் அறிந்துகொள்ள முயலாமல் அவளுக்கு மரணதண்டனை கொடுத்தான். அப்பாவியும், ஏழையும் ஆன அந்தப் பெண் இறக்கும் தருவாயில் மன்னனுக்கு சாபம் கொடுத்தாள். மன்னனின் ஆணையைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்த அந்தப் பகுதி மக்களுக்கும் சாபம் கொடுத்தாள். அவள் சாபத்தின்படி அந்தப் பகுதியில் பசுக்கள் தவிர அனைத்தும் பாம்புகளால் அழியத் தொடங்கியது. நாளாக, நாளாகப் பாம்புகள் பெருகின. அந்த ஊரில் எஞ்சி இருந்த பெண்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. திருமணத்திற்குக் காத்திருந்த பெண்களை மணக்கவும் யாரும் முன்வரவில்லை. அனைவரும் யோசித்து ஈசனை நினைத்துப் பிரார்த்தித்து வழிபாடுகள் செய்ய, ஈசனும் அவர்களுக்காக அந்தப் பாம்புகளைப் பிடித்துத் தன் கழுத்தில் ஆபரணங்களாகப் போட்டுக் கொண்டார். மன்னன் தவறு செய்தால் அதற்கு மக்கள் தான் பொறுப்பாளிகள் எனவும், மன்னனைத் திருத்தி நல்லாட்சி செய்யச் செய்திருக்கவேண்டிய மக்கள் அவ்விதம் நடந்து கொள்ளாததையும் சுட்டிக் காட்டி திருத்திக் கொண்டு நல்ல அரசனைத் தேர்ந்தெடுத்து வாழ அருள் புரிந்தார்.

பாம்புகளைச் சூடிக் கொண்டதால் இவ்வூரின் மூலவரான லிங்கத்தின் மேலேயே நாகங்கள் சூழ்ந்து கொண்டு காணப்படுவதைத் தரிசிக்கமுடியும். ராகு ஸ்தலமான இந்த ஊர் மூலவரின் பெயர் கோதபரமேஸ்வரர் ஆகும். அம்பாள் சிவகாமி அம்மை. லிங்கத்திற்கு நீல வஸ்திரம் சார்த்தி வழிபாடுகள் நடத்தினால் ராகுதோஷம் நீங்கும் என்கிறார்கள். ராகுகாலத்திலும் ஈசனுக்கு விசேஷ வழிபாடுகள் உண்டு. இங்கு லிங்கத்தில் மட்டுமில்லாமல் பைரவரின் இடுப்பு, மார்பு, மற்றும் தக்ஷிணாமூர்த்தியின் மீதும் பாம்பு காணப்படுகிறது. ஆறுமுக நயினார் என்னும் நாகசுப்ரமணியர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர் என்பதோடு அவரின் சிலையில் இருந்து சப்த ஸ்வரங்களும் எழும் விதமாய் வடிக்கப் பட்டுள்ளது. அருகிலேயே தென் திருப்பதி என அழைக்கப் படும் திருவேங்கடநாத ஸ்வாமி கோயிலும் உள்ளது. பேருந்துகள் திருவேங்கடநாதபுரம் செல்கின்றன. அந்தப் பேருந்துகளில் சென்றாலே இந்த்க் கோயிலுக்கும் சென்று வரமுடியும்.

அடுத்தது மிகவும் மனதை வருத்தும் ஒரு செய்தியாகும். இந்தக் கோயிலுக்கு நாங்கள் செல்லவில்லை. கேதுவுக்கான இந்தத் தலம் இப்போது அழியும் நிலைமையில் உள்ளதாம். தூத்துக்குடிக்கு அருகே ராஜபதி கைலாசநாதர் கோயில் என அழைக்கப் படும் இந்தத் தலத்தில் ஒழுங்கற்ற வடிவில் ஒரு லிங்கம் இருப்பதாய்ச் சொல்கின்றனர். லிங்கத்தின் நாலு பக்கங்களிலும் நான்கு சக்கரங்கள் உள்ளதாகவும், லிங்கத்திற்குக் கீழே தோண்டினால் பழைய கோயில் கிடைக்கலாம் என்றும் சொல்கின்ற்னர். இந்தத் தலம் பற்றி மிகவும் நன்கு தெரிந்த பக்தர்களே இங்கு செல்கின்றனர். பக்தர்கள் இந்த லிங்கத்திற்குப் பலவர்ண வஸ்திரம் சார்த்தி, அங்கே இருக்கும் மண்ணையே பிரசாதமாய் எடுத்து வருகின்றனர். திருச்செந்தூர் செல்லும் வழியில் தென் திருப்பேரையில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில் ரோட்டோரத்திலேயே கேட்பாரற்று இந்த லிங்கம் உள்ளது. பேருந்து வசதி இல்லை. தீரவிசாரித்துத் தெரிந்துகொண்டு தென் திருப்பேரையில் இருந்து ஆட்டோ அல்லது கார் ஏற்பாட்டில் சென்றால் காரிலோ இந்த இடத்தைக் கேட்டுக் கொண்டு அடையவேண்டும். அறநிலையத் துறைஎப்போது மனசு வைக்குமோ அப்போது இந்தக் கோயில் எழும்பும் என்று எதிர்பார்ப்போம்.


இத்துடன் நவகைலாய யாத்திரை முடிவடைந்தது. அடுத்தது தென்காசிக் கோயில், திருக்குற்றாலம், திருநெல்வேலி நெல்லையப்பர் தரிசனம், சங்கரன்கோயில் கோமதி அம்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் போன்றவர்கள் தரிசனத்துடன் திருநெல்வேலி யாத்திரை நிறையும்.

Geetha Sambasivam

unread,
Nov 25, 2009, 4:48:12 AM11/25/09
to il...@googlegroups.com
பின்னூட்டம் கொடுத்துப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி,.

2009/11/25 Nagarajan K. <k.nagar...@gmail.com>

DURAI PANDIAN

unread,
Nov 25, 2009, 3:56:56 AM11/25/09
to il...@googlegroups.com, sees...@gmail.com


2009/11/24 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Dec 13, 2009, 4:16:24 AM12/13/09
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)

Sunday, December 13, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் - இலஞ்சி முருகன்.

திருக்குற்றாலத்தில் மெயின் அருவி எனப்படும் கூட்டம் மிகுந்த அருவியையும், மேலே சென்று அங்கே உள்ள அருவியையும் பார்த்துவிட்டோம். இன்னும் மேலேயும் செல்லவேண்டும்தான். ஆனால் மதியம் இரண்டு மணி அப்போவே ஆகி இருந்தது. இன்னும் சித்திர சபை வேறே போகவில்லை. குற்றாலநாதர் கோயிலும் திறக்கவில்லை. இருந்து கோயில் திறந்ததும் தான் தரிசனம் செய்து கொண்டோம். கோயிலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அசுத்தம் செய்து வைத்திருந்தார்கள். சித்திர சபை போகும் வழியும் கரடு, முரடாக, மலைப்பாதை தானே? முன் யோசனை இல்லாமல் செருப்பு அணியாமல் சென்றுவிட்டோம். போகப் போகப் போயிட்டே இருக்கு. அங்கேயும் சித்திரநடராஜரைப் பார்த்து மனம் நொந்து கொண்டு திரும்பினோம். கீழே இறங்கலாமா எனக் கேட்ட வண்டியோட்டியிடம் இலஞ்சிக்குப் போகச் சொன்னோம். இலஞ்சிக்குக் கூட்டிச் சென்றார். அருமையான சுகமான மலைப்பாதை. மிக மிக அழகான சாலை. இயற்கையின் வண்ண விசித்திரங்களோடு, பக்ஷிகளின் கூச்சலும் சேர்ந்து அந்த மாலை நேரத்தையே அழகானதாய் மாற்றிக் கொண்டிருந்தது. குளிர்ந்த சாலை. இருபுறமும் அடர்ந்த மரங்கள். மர நிழலைப் பார்த்தாலே ஒரு துணியை விரித்துப் படுத்துடலாமானு எண்ணம். அவ்வளவு தண்மை.

கோயிலில் தீபாராதனை நடக்கும் சமயம். மாலை வழிபாடுகள் நடந்து கொண்டிருந்தன. மாமனைத் தள்ளிவிட்டு அங்கே தந்தையைக் கொண்டு வந்த சாமர்த்தியசாலியான முருகனைக் கண்ணாரப் பார்க்க முடிந்தது. அநேகமாய் எல்லாக் கோயில்களிலுமே நெரிசல் இல்லாமையால் அருமையான தரிசனம். இந்த இலஞ்சிக் கோயிலையும், ஜாத்திரையையும் பற்றிக் கலைமகளில் பள்ளி நாட்களிலேயே படித்திருக்கிறேன். எல்லார்வி என்னும் எழுத்தாளர் எழுதுவார். இலஞ்சியைப் பற்றி அவர் வர்ணித்திருந்த அழகு இப்போது இருக்காதுதான். என்றாலும் இன்னும் ஒன்றும் மோசம் ஆகவில்லை. கோயிலும் அழகான சூழ்நிலையில் அமைந்துள்ளது. எதிரே மலைகள், மலைகள், பள்ளத் தாக்குகள். அங்கே நின்று படம் எடுக்கணும்னு தான் ஆசை. ஆனால் எடுக்க விடவில்லை.


ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான கோயில் எனப்படுகிறது இலஞ்சி. இங்கு ஓடும் நதியே தீர்த்தமும் ஆகும். நதியின் பெயர் சித்ராநதி ஆகும். மகிழமரத்தைத் தலவிருக்ஷமாய்க் கொண்ட இந்த ஊரின் ஈசன் அகத்தியரால் மணலால் பிடிக்கப் பட்டு வணங்கப் பெற்றவர். குற்றால நாதரைத் தரிசிக்க வந்த அகத்தியருக்கு அங்கே பெருமாளே காட்சி கொடுத்ததையும், முருகனின் ஆலோசனையின் பெயரில் வைணவச் சின்னங்கள் தரித்துச் சென்றதையும் குற்றாலம் பற்றிய பதிவில் பார்த்தோம். குற்றாலத்தில் தரிசனம் கிடைக்காத அகத்தியர் இலஞ்சி வந்து முருகனை வேண்ட, முருகனும் அருள் புரிகிறார். அங்குள்ள சிற்றாற்றின் கரையிலேயே குமரனுக்கு அருகேயே அவர் தந்தைக்கும் வெண்மணலால் லிங்கம் பிடித்து வழிபட்டார் அகத்தியர். அகத்தியர் அவ்வாறு பூஜை செய்த லிங்கமே இன்றும் இருவாலுக நாயகர் என்னும் பெயருடன் வழங்கப் படுகிறார். இங்கே ஈசனின் அருள் கிடைத்ததுமே அகத்தியர் திரும்பக் குற்றாலம் செல்கிறார்.

இங்குள்ள குமரன் இளமை பொருந்தியவனாகச் சொல்கின்றனர். கட்டிளம் காளையாகக் காட்சி அளிக்கும் தமிழ்க் கடவுள் இவ்விதம் இங்கே தோன்றியமைக்கும் காரணம் சொல்கின்றனர். திரிகூடமலையின் வடகீழ்த்திசையில் காசியபர், கபிலர், துர்வாசர் மூன்று முனிவர்களும் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். பலவேறு தத்துவங்களையும், அதன் நுணுக்கங்களையும் ஆய்ந்து பேசிக் கொண்டிருந்த அவர்களுக்குள் ஒரு சந்தேகம். இவ்வுலகம் இல் பொருளா? உள் பொருளா என்பதே! கபிலர் இல் பொருள் எனத் தன் வாதத்தை நிலைநாட்ட, காசியபரும், துர்வாசரும் முத்தொழில்களையும் செய்யும் ஈசன் இல்லாது இல் பொருள் தோன்றுவது எங்கனம் எனக் கேள்வி எழுப்பினர். உலகம் உள் பொருளே எனச் சொல்ல, கபிலரும் நன்கு யோசித்து அவர்கள் கருத்தில் உண்மை இருப்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்கிறார். ஆனாலும் மூவருக்கும் மீண்டும் வாதம் ஆரமபித்தது. உள் பொருளான உலகின் உண்மைப் பொருள் யார் என்று வாதம் புரிந்து கபிலர் திருமாலே எனச் சொல்ல பிரம்மபுத்திரனான காசியபரோ, பிரம்மனே எனச் சொல்ல , ருத்ராம்சமான துர்வாசரோ ருத்ரரே எனச் சொல்ல குழப்பம் ஏற்பட்டது.

குழப்பத்தைத் தீர்க்கவேண்டும், அதற்கென நடுநிலை வகிக்கும் ஆள் வேண்டுமே. யாரைக் கூப்பிடுவது என யோசித்து, யாரேனும் ஒரு இளைஞனே தகுதியானவன் என்று எண்ணுகின்றனர். அப்போது குமரக் கடவுள் ஓர் கட்டிளம் காளையாக அவர்கள் முன் தோன்றினான். (சிலர் கபிலரும், துர்வாசரும் முருகனை வேண்டியதாகவும் கூறுவார்கள்). அவன் தன் உண்மை உருவை அவர்கள் மூவருக்கும் காட்டி ஆதிப்பரம்பொருள் தாமே என்றும், மூவினையும் செய்யும் மும்மூர்த்திகளாகத் தன்னை மூன்று முனிவர்களிடமும் காட்டியும் யாமே படைத்தல், காத்தல், அழித்தல் முத்தொழிலையும் செய்பவர் என உணர்த்தினார். அவரை வணங்கிய முனிவர்கள் வழிபட்ட இடத்திலேயே அதே கட்டிளம் காளைக் கோலத்தில் இன்றளவும் நின்றுகொண்டு வேண்டியவர்க்கு வேண்டியவற்றை அருளுகின்றான் முருகன்.

இலஞ்சியில் இருந்து வரும் வழியில் தான் மற்றொரு முருகன் கோயிலும் அருகிலிருந்த இன்னொரு மலையில் இருப்பது தெரிய வந்தது. நேரமின்மையால் செல்லவில்லை. தென்காசி போயிட்டுத் திருநெல்வேலி திரும்பவேண்டும். அங்கே இன்னும் நெல்லையப்பரைப் போய்ப் பார்க்கவில்லை. ஆகையால் நேரமும் கிடையாது. மறுநாள் விட்டுப் போன கோயில்களைப் பார்த்துக் கொண்டு ஊர் திரும்பும் திட்டம்.

வண்டியைத் தென் காசிக்கு விடச் சொன்னோம். தென்காசி திருநெல்வேலியில் இருந்து அறுபது அல்லது எழுபது கிலோமீட்டருக்குள் தான் இருக்கிறது. திருநெல்வேலிச் சீமையைப் பாண்டியர்கள், (பழைய???) ஆண்டு வந்தபோது கட்டிய கோயில் இது. முதலில் இந்தக் கோயிலை எழுப்பும் முன்னர் இங்கே செண்பகவனமாக இருந்திருக்கிறது. குலசேகரபாண்டியன் என்னும் மன்னன் காலத்தில் முதன்முதல் இந்தக் கோயில் கட்டப் பட்டுள்ளது. எந்தக் குலசேகரபாண்டியன் எனச் சரியாய்த் தெரியவில்லை. பெரிய அளவில் கோயில் இல்லாமல் செண்பக வனத்தில் லிங்கத்தை அமைத்து மன்னன் வழிபட்டிருக்கிறான். மக்கட்பேறு இல்லாத மன்னனுக்கு இங்கே இருந்த ஒரு மகிழமரத்தடியில் குழந்தை ஒன்று கிடைத்தது. பெண் குழந்தை. குழல்வாய்மொழி எனப் பெயரிட்டுத் தன் மகளாகவே அந்தக் குழந்தையை வளர்த்து வந்த மன்னன், நாளாவட்டத்தில் குழந்தையாகத் தன்னிடம் வளருவது சாக்ஷாத் அம்பிகையே எனத் தெரிந்து கொள்கிறான். ஈசனுக்கே வாழ்க்கைப் படுவேன் என அந்தப் பெண் தவமிருந்து சிவ வழிபாடுகள் செய்து ஈசனை மணாளனாக அடைந்தாள். மன்னனுக்கு உலகை ஆளும் அம்மையே தனக்குப் பெண்ணாக வந்திருப்பதை எண்ணி எண்ணி வியப்பு அடங்கவில்லை. உலகம்மா, நீயே எனக்கு மகளாய் வந்தனையோ” என உணர்ச்சிப் பெருக்கீட்டில் மன்னன் மனம் உருகினான். நாளாவட்டத்தில் உலகம்மன் என்ற பெயரே நிலைத்துவிட்டது. உள்ளூர் மக்களுக்கு உலகம்மன் கோயில் என்றால் தான் புரியும். கோயிலின் மற்ற வரலாறுகள் நாளை.

Geetha Sambasivam

unread,
Dec 13, 2009, 4:17:34 AM12/13/09
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)
யாரேனும் ஒருவர் பின்னூட்டம் கொடுத்தால் இல்லம் குழுமத்துக்குச் சரியாப் போச்சானு தெரியும்.

2009/12/13 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Raghavan

unread,
Dec 13, 2009, 6:24:49 AM12/13/09
to il...@googlegroups.com


2009/12/13 Geetha Sambasivam <geetha...@gmail.com
ஆன்மீக சுற்று  பயணம் சென்று  வந்தது போல்  ஒரு பிரமை.
அருமையான  -  புரியவைக்கும்  எளீய நடை
 
அன்புடன்
ராகவன்.வ
 

Geetha Sambasivam

unread,
Dec 13, 2009, 6:31:58 AM12/13/09
to il...@googlegroups.com
ரொம்ப நன்றி, பின்னூட்டம் கொடுத்ததுக்கு.

2009/12/13 Raghavan <raghava...@gmail.com>

--

Geetha Sambasivam

unread,
Dec 14, 2009, 5:12:59 AM12/14/09
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் - தென்காசி விஸ்வநாதர்!

குலசேகரபாண்டியனுக்குப் பின்னர் பல ஆண்டுகள், அல்லது நூற்றாண்டுகள் கழித்து வந்த பராக்கிரம பாண்டியன் வடநாட்டின் காசி விஸ்வநாதரின் மேல் அபார பக்தி பூண்டு மனதுக்குள் வழிபட்டு வந்தான். காசி நகரத்து விஸ்வநாதர் கோயிலைப் பற்றிக் கேள்விப் பட்டு அதே போல் இங்கும் ஒரு கோயில் கட்டி அதில் விஸ்வநாதரைப்பிரதிஷ்டை செய்யவேண்டும் என எண்ணினான். அதே நினைப்போடு இருந்த மன்னன் கனவில் காசி விஸ்வநாதரே தோன்றி, அவனது முன்னோர்கள் வழிபட்டு வந்த லிங்கம் அந்த ஊரின் செண்பக வனத்தில் இருப்பதாகவும். கோட்டையில் இருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைப்பின் தொடர்ந்து செல்லுமாறும் பணித்தார். அவ்விதமே செய்த மன்னன் குலசேகரனால் வழிபட்டு வந்த லிங்கத்தைக் கண்டு பிடித்தான். அந்த லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து காசி விஸ்வநாதர் எனப் பெயரிட்டு கோயிலையும் கட்டினான். வடக்கே இருக்கும் காசி விஸ்வநாதர் தெற்கேயும் வந்து அருளுவதால் இந்த ஊரின் பெயரே அதன் பின்னர் தென்காசி என அழைக்கப் பட்டது. இவனுக்கு ஆலோசனைகள் சொல்லி உதவ ஈசனே சிவனடியார் உருவில் வந்து உதவியதாகவும், பின்னர் அந்த அடியார் இந்தக் கோயிலிலேயே தங்கியதாகவும் கூறுகின்றனர். அவருக்கெனத் தனிச் சந்நிதியும் உள்ளது. அந்தச் சந்நிதியில் விக்ரஹம் எதுவும் இல்லாமல் சதுர பீட உருவில் அமைக்கப் பட்டு, அங்கே அடியாரை வணங்கி வருகின்றனர்.

அம்பிகை குழல்வாய்மொழிநாயகி என்னும் உலகம்மை கோயிலுக்குப் பெயரை வழங்கி அருளாட்சி புரிகின்றாள். கோயில் பிராகாரத்தில் ஸ்ரீசக்ர அமைப்புடன் கூடிய பராசக்தி பீடம் உள்ளது. இதையும் தரணி பீடம் என்றே அழைக்கின்றனர். அம்பிகை பூமியில் தோன்றியதால் அவ்விதம் அழைக்கின்றனரோ எனத் தோன்றுகிறது. 40 முக்கோணங்களுடன்கூடிய இந்தப் பீடத்திற்குப் பச்சைப் புடைவை சார்த்தி வழிபடுகின்றனர். ஸ்ரீசக்ர சந்நிதிக்கு எதிரேயே ஒரு சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. இந்தக் கோயிலின் மற்றொரு விசேஷம் இங்கே நவகிரஹங்களும் மண்டபத்தினுள் ஒவ்வொரு திக்கையும் பார்த்தவண்ணமும், மண்டபத்துக்கு வெளியே நேர் வரிசையாகவும் காணப்படுகின்றனர். இதன் தாத்பரியம் புரியவில்லை. ஒருவேளை இடைக்காட்டுச் சித்தர் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒன்று இங்கே நடந்திருக்கலாமோ? அவர் தாம் நேரே ஒன்றாக இருந்த நவகிரஹங்களையும் ஒவ்வொரு திசைக்குத் திருப்பினார் என்பார்கள். அதை நினைவு கூரும் விதத்தில் அமைத்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.

தில்லையில் நடராஜருக்குக் கணக்குகளை ஒப்பிப்பது போன்றதொரு நிகழ்ச்சி இங்கேயும் நடை பெறுகிறது. இந்தக் கோயிலின் நிர்வாகத்தை ஈசனே நேரே கண்காணிப்பதாக ஐதீகம். ஈசனுக்குத் தனி அரியாசனம் உண்டு. ஆவணிமாதம் முதல் தேதி அன்று சொக்கநாதர் என்ற பெயரோடே அரியாசனம் ஏறும் உற்சவர் முன்னே ஒரு வருஷத்துக் கணக்கு வழக்குகள் ஒப்படைக்கப் படுகின்றன. கங்கை நீரால் விஸ்வநாதருக்கு அபிஷேஹம் செய்யவேண்டும் என விரும்பிய மன்னனின் விருப்பத்துக்காக ஈசனே இங்கே கிணறு வடிவில் கங்கையை வரவழைத்தார் என்கின்றனர். இந்தக் கோயிலின் திருப்பணிகளைச் செய்த பராக்கிரம பாண்டியன் கோயில் சரிவர நிர்வகிக்கப் படவேண்டும் என்பதிலும், கோயிலின் பராமரிப்புப் பணிகள் செம்மையாக நடைபெறவேண்டும் என்பதிலும் மிகுந்த அக்கறை காட்டி இருக்கிறான் என்பதை இங்கே உள்ள ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது. கோயிலினுள் நுழையும் ராஜகோபுரத்தின் கீழே பிரதிஷ்டை செய்யப்பட்ட கல்வெட்டு ஒன்றில், “ காலத்தால் இந்தக் கோயில் சிதைவடையுமானால், அதைச் சரி செய்பவர்களின் திருவடிகளில் விழுந்து வணங்குவேன்.” என எழுதப் பட்டுள்ளது. இது தவிரவும், கோயிலுக்கு வரும் பக்தர்களை வணங்கும்விதமாய் மன்னன் கீழே விழுந்து வணங்குவது போன்றதொரு சிற்பம் அம்மன் கோயிலின் நுழைவு வாயிலிலும் அமைத்திருக்கின்றனர். அப்படியும் காலப் போக்கில் இந்தக் கோயில் கோபுரம் இரண்டாய்ப் பிளந்து காட்சி அளித்ததாகவும், பின்னர் 1990=ம் ஆண்டு வாக்கில் புதிய கோபுரம் கட்டப் பட்டதாகவும் சொல்கின்றனர். இந்தக் கோபுர வாசல் காற்றின் விசேஷம் என்னவென்றால் கோபுரத்துக்குள் நுழையும்போதே காற்று நம்மை முன்னோக்கித் தள்ளி உள்ளே கொண்டு சேர்க்கும் வண்ணம் கட்டப் பட்டிருப்பது தான். நுழையும்போது மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வீசும் காற்று கோபுரத்தைக் கடந்ததும், கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வீசும் என்பதையும் உணரும் விதம் கட்டப் பட்டுள்ளது.

அருமையான சிற்பங்களுடன் கூடிய இந்தக் கோயிலின் பாலமுருகன் சந்நிதி ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் இடையே அமைந்துள்ளது. சோமாஸ்கந்த அமைப்புக் கோயிலாகச் சொல்லப் படுகிறது. தல விருக்ஷங்கள் இரண்டு உள்ளன. ஏற்கெனவே இருந்த செண்பகம் தவிர, பலா மரமும் இங்கே தலவிருக்ஷம் ஆகும்.

Geetha Sambasivam

unread,
Dec 17, 2009, 4:14:16 AM12/17/09
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)

Thursday, December 17, 2009

தாமிரபரணிக்கரையில் சிலநாட்கள்- நெல்லையப்பர்!


திருநெல்வேலியின் புராதனப் பெயர் வேணுவனம் என்பதாகும். பாண்டிய மன்னன் ராமபாண்டியன் ஆட்சிக் காலத்தில் மன்னனுக்குத் தினமும் ராமக் கோனார் என்பவர் பால் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார். தினமும் அவர் காலில் வழியிலிருந்த கல் ஒன்று இடறும். பால் கொட்டும். ஆனால் கையில் கொண்டு வரும் பானைக்கு எந்தச் சேதமும் ஏற்படாது. இப்படித் தினமும் தொடர்ந்து நடக்க மன்னனுக்குச் சந்தேகம் தலை தூக்கியது. இவர் நிஜமாகவே பால் கொண்டுவருகிறாரா என சந்தேகப் பட்டான். மறுநாளும் மன்னனின் ஆட்கள் தொடரப் பால் கொண்டு வந்த கோனாரின் கையில் இருந்து பானையில் இருந்த பால் முழுதும் இடறிய கல்லின் மேலேயே கொட்ட மீண்டும் அனைவரும் மன்னனிடம் சென்று முறையிட்டனர். மன்னனும் தன் வீரர்களை அழைத்துக் கொண்டு அங்கே வந்து பார்த்தான்.

கல் கண்களில் பட அந்தக் கல்லை அகற்ற முயன்றார்கள் அனைவரும். கோடாரியால் ஓங்கி ஒரு போடு போட அந்தக் கல்லில் பட்டு உடனே ரத்தம் பீறிட ஆரம்பித்தது. அனைவரும் செய்வதறியாது திகைத்து நிற்க விண்ணில் இருந்து அசரீரி கேட்டு அந்தக் கல்லைத் தோண்டிப் பார்த்தால் அது சிவலிங்கம். அப்போது போட்ட கோடரி அடி லிங்கத்தின் இடப்பக்கம் பட்டு ரத்தக் காயம் தெரிந்தது. மன்னன் கையை வைக்க ரத்தம் வருவது நின்றது. சுயம்புவாய்த் தோன்றிய அந்த லிங்கத்தை வைத்துக் கோயில் உருவானது. இப்போதும் மூலவரின் தலையில் வெட்டுக் காயம் இருப்பதாய்ச் சொல்கின்றனர். இந்த வேணுவனம் திருநெல்வேலியானது இன்னொரு பக்தராலே.

அவரும் வேதசர்மா என்ற பெயரோடு தினமும் வேணுவனநாதருக்குப் பணிவிடைகள் செய்து வந்தார். அவரைச் சோதிக்க எண்ணிய ஈசன் நாளடைவில் அவருக்குச் செல்வம் குறையும்படி செய்ய, அக்கம்பக்கம் சென்று இறைஞ்சிப் பணமோ நெல்லோ பெற்று இறைவனுக்குத் தொண்டு செய்துவந்தார். ஒருநாள் அக்கம் பக்கம் வீடு வீடாய்ச் சென்று நெல்லை வாங்கிச் சேகரித்து சந்நிதி முன்னால் காயப் போட்டுவிட்டுக் குளிக்கச் சென்றார். திடீரென மழை கொட்ட ஆரம்பித்தது. குளித்துக் கொண்டிருந்த வேதசர்மா மழை நீரில் நெல் நனைந்து அடித்துச் சென்றுவிடுமே என எண்ணி வேகமாய் ஓடி வந்தார். என்ன ஆச்சரியம்?? நெல்லைச் சுற்றிக் கொண்டு மழை நீர் ஓடியது. நடுவே உள்ள காய்ந்த இடத்தில் மட்டும் வெயில் அடிக்க நெல் அங்கே காய்ந்து கொண்டிருந்தது. அசந்து போனார் வேதசர்மா. மன்னனுக்கு விஷயம் போக மன்னனும் வந்து பார்த்து அசந்து போனான். உலகிற்குப் பெய்த மழை வேதசர்மாவின் நெல்லைக் காத்த அதிசயம் ஊரெங்கும் பரவியது. நெல் நனையாது காத்த ஈசனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலி நாதர் என அழைக்கலானான் மன்னன். வேணுவனம் என்றிருந்த அப்பகுதியும் திருநெல்வேலி என அழைக்கப் பட்டது.

ஈசன் பெயர் நெல்லையப்பர் என்றிருந்தாலும் வேணுநாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்றெல்லாம் அழைக்கப் படுகிறார். அம்பாள் வடிவுடை அம்மை என்றாலும் காந்திமதி என்ற பெயரிலேயே அறியப் படுகிறாள். இதைத் தவிர அம்பாள் திருக்காமக்கோட்டத்து நாச்சியார் எனவும் அழைக்கப் படுகிறாள். மிக மிகப் பெரிய கோயிலாக பிரமிக்கும் விதத்தில் இருக்கிறது. ஆயிரம், இரண்டாயிரம் வருஷங்கள் பழமையான கோயில் என்று சொல்லப் படுகிறது. நிறைய இதிகாச, புராணத் தகவல்களோடு அதி அழகான சிற்பக் கலை வேலைப்பாடுகளுடன் கூடியதாகவும் உள்ளது. ஸ்வாமிக்கும், அம்மனுக்கும் தனித் தனிக் கோயில். தனித் தனி ராஜ கோபுரங்கள். ஸ்வாமி கோயிலையும் அம்மன் கோயிலையும் இணைக்கும் மண்டபத்தைக் கல் மண்டபம் என்று சொல்கின்றார்கள்.

மிகப் பெரிய தெப்பக்குளம் ஒன்று கோயிலின் உள்ளேயே இருக்கிறது. சுற்றிலும் இரும்புக் கம்பிகளால் பாதுகாக்கப் படுகிறது. வேண்டுமானால் உள்ளே சென்றும் பார்க்கலாம். ஆனால் கீழே இறங்க முடியாது. கோயிலின் பிரம்மாண்டம் அசத்துகிறது. மூலஸ்தானத்தில் நெல்லையப்பருக்கு அருகேயே பெருமாளும் சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். முக்கியமான ஐந்து சபைகளில் இரண்டு சபைகள் இந்தத் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. குற்றாலத்தில் நாம் கண்டது சித்திர சபை. இங்கே நாம் காண்பது தாமிர சபை. இந்தத் தாமிர சபை இரண்டாம் பிரஹாரத்தில் அமைந்துள்ளது.

கோயில் மட்டுமில்லை. இங்குள்ள நந்தியும் பெரியதாய் உள்ளது. நந்தி வெள்ளை நிறத்தில் உள்ளது. விநாயகரும் பெரிய விநாயகர். ஒன்பது அல்லது பத்தடிக்குக் குறையமாட்டார். தக்ஷிணா மூர்த்தி, சண்டேஸ்வரர், துர்கை, பைரவர் போன்ற பரிவார மூர்த்திகள் உண்டு. இரண்டாம் பிரஹாரத்தில் தான் இசைத் தூண்கள் உள்ளன. மூன்றாம் பிரஹாரம் மிகப் பெரியது என்றும், 3 யானைகளுக்கு மேல் சேர்ந்து நடக்கலாம் என்றும் சொல்கின்றனர். இந்தப் பிரஹாரத்தில் இருந்தே அம்மன் கோயிலுக்குச் செல்லும் மண்டபம் உள்ளது. மிகப் பெரிய இவை பார்க்கவே பிரமிப்பை ஊட்டுகிறது. இந்தப் பிரஹாரத்தில் தான் மேலே சொன்ன தெப்பம் உள்ளது. இதைத் தவிர வெளித் தெப்பமும் ஒன்று உண்டெனச் சொல்கிறார்கள். பார்க்கவில்லை.

நாங்க தங்கி இருந்த அறையிலிருந்து நடந்தே போகலாம் என்று சொன்னாலும் பேருந்தில் போனோம். ஊர் மிக அழகும் சுத்தமுமாய் உள்ளது. கோயில் ராஜ கோபுரங்களை அடுத்த வீதிகளைச் சுற்றிக் கடைகள்,கடைகள், கடைகள். திருநெல்வேலியின் பாரம்பரிய போத்தீஸுக்கும், ஆரெம்கேவிக்கும் நடுவே சென்னையின் நல்லியும் இடம் பெற்றுள்ளது. திரும்பிப் பேருந்தில் வர வேறு வழி. என்றாலும் குழப்பம் இல்லை. கோபுர வாசலுக்கு நேரே இருட்டுக்கடை அல்வாக்கடை. போகும்போது தான் கடை திறந்து சிறிது நேரம் என்றார்கள். திரும்பி வந்துதான் எப்படியும் அல்வா வாங்கணும். ஆகவே திரும்பி வேறே வழியில் கடைக்குச் சுத்திண்டு வந்தோம். ஒரே அதிர்ச்சி. பெரிய வரிசை அல்வாவுக்கு. அல்வாவுக்கே அல்வா கொடுக்கவெல்லாம் முடியலை. பெண்கள் வரிசை நல்லவேளையாக(?) தனியே இருந்தது. நான் அதில் போய் நின்றேன். திருநெல்வேலிக்குப் போறோம்னதும், அல்வாவுக்கான முன்பதிவுகளும், கல்லிடைக்குறிச்சி அப்பளத்துக்கான முன்பதிவுகளும் நிறையவே இருந்தன. கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் நின்னதும் அல்வா கிடைத்தது. நாம வாங்கற ஒரு கிலோ, அரை கிலோவெல்லாம் அவங்களுக்கு பிசாத்து போலிருக்கு. அலக்ஷியமாப் பார்த்தாங்க. சரிதான்னு நினைச்சுட்டு வாங்க வேண்டியவங்களுக்கு எல்லாம் வாங்கிக் கொண்டோம். வரும் வழியிலே கல்லிடைக்குறிச்சியிலே இறங்கி அம்பி வீட்டுக்குப் போய் ஒரு கலக்கு கலக்கிட்டு அப்பளப் பாக்கெட்டுகளையும் வாங்கிக் கொண்டிருந்தோம். அல்வாவை முடிச்சுட்டு அறைக்குத்திரும்பினோம். அடுத்த பதிவு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலும், அதன் பின்னர் சங்கரன் கோயிலும். காத்திருங்கள். ஆண்டாளையும், வடபத்ரசாயியையும் பார்க்க.


திருநெல்வேலி அல்வாக்கடை படம் உதவி: நன்றி, துளசி.

Geetha Sambasivam

unread,
Dec 18, 2009, 9:15:46 AM12/18/09
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)

Friday, December 18, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் - ஸ்ரீவில்லிபுத்தூரின் ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் பல விஷயங்களுக்குப் பேர் போனது. முக்கியமாய் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா. எல்லா இடத்துப் பால்கோவாவுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப் படும் பால்கோவாவுக்கும் வித்தியாசம் நிச்சயம் உண்டு. சுத்தமான பசும்பாலில் தயாரிக்கப் படும். இதை அடுத்துக் கண்ணன் பிறந்த மதுராவிலும், அவன் குடித்தனம் நடத்திய துவாரகையிலும் கிடைக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் சுத்தமான பசும்பால் தான். அதுவும் குஜராத் பூராவுமே அநேகமாய்ப் பசும்பால் தான். நாங்க இருந்த ஐந்து, ஆறு வருடங்களில் எருமையே பார்க்கலை. அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் தைலச் சக்கை. சக்கைனதும் ஏதோ சக்கையாய் இருக்கும்னு நினைக்காதீங்க. அருமையான வாசனைத் தைல மூலிகைகளின் வேர்கள், பூக்கள், மொட்டுகள், இலைகள் எல்லாம் சேர்ந்த ஒன்று. இடித்துச் சூரணம் மாதிரி இருக்கும். பொதுவாகவே மதுரைப்பக்கம் பெருமாள் கோயில்களில் தாயார் சந்நிதியில் மஞ்சளும், ஆண்டாள் சந்நிதியில் இந்தத் தைலச் சக்கையும் தான் பிரசாதம். அதுவும் மதுரை வடக்குக் கிருஷ்ணன் கோயிலில் வருஷா வருஷம், ராப்பத்து, பகல் பத்து உற்சவத்தின்போது ஸ்வாமி வீதி உலா வரும்போது கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுப்பாங்க. ஒருதரம், இரண்டு தரம்னு வாங்கிட்டு, அம்மா வாங்கினதையும் சேர்த்து வெந்நீரில் ஊறவைச்சு, அம்மியில் அரைச்சுக் காலம்பர குளிக்கும்போது தலையில் தடவிக் கொண்டு ஊற வைச்சுக் குளிச்சால் மணமோ மணம்! பல நாட்கள் மணம் வீசும். சண்பகப் பாண்டியனுக்குச் சந்தேகமே வந்திருக்காது. ஸ்ரீவில்லிபுத்தூர் தைலச் சக்கை மணம் தான் தேவியின் கூந்தலில்னு அடிச்சுச் சொல்லி இருப்பான் அவனே. தருமிக்கும் பொற்கிழி கிடைச்சிருக்காது.

அருமை தெரியலை, போகட்டும். இப்போப் போயிருந்தப்போ பால்கோவா வாங்கினீங்களானு கேட்கிறீங்களா? ஆமாம், வாங்கினோம், வாங்கினோம், ஆனால் சுவை??? அதேபோல் தைலச் சக்கை கிடைக்கலை, ஆண்டாள் ஸ்நாநப் பவுடர்னு பாக்கெட்டுகளில் விற்கிறாங்க. அரை மனசோடு வாங்கிட்டு வந்தது இன்னும் இருக்கு தேய்ச்சுக்காமல். எல்லாம் அது ஒரு கனாக்காலமாயிட்டது. போகட்டும், ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமையை இன்றைக்கும் மாறாமல் வைத்திருக்க ஆண்டாளின் பெயர் ஒண்ணே போதுமே? வேறே என்ன வேண்டும்?? பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையின் புகழ் என்றைக்கும் மங்காது. அதே போல் நம் தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப் பட்ட அரசுச் சின்னம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம் தான். இதை அரசுச்சின்னமாக அறிவித்தவர் ஓமந்தூரார்னு நினைக்கிறேன். யாருப்பா அங்கே? ஓமந்தூரார் தானே அல்லது வேறே யாருமானு வந்து சொல்லுங்க கொஞ்சம். ஆனால் அப்போது பிரதமராய் இருந்த நேருவிற்கு சமயச் சின்னத்தை ஏற்க மனமில்லை என்றும், ஓமந்தூரார் இதை சமயச் சின்னமாய்ப் பார்க்கவேண்டாம் எனவும், திராவிடக் கட்டடக் கலையின் சின்னமாய்ப் பார்க்கும்படியும் சொன்னதாகக் கேள்விப்பட்டுப்படிச்சு இருக்கேன். இத்தனை புகழ் வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாருக்கும், ஆண்டாளுக்கும் அடுத்ததாய்ப் புகழ் பெற்றவர் வில்லி பாரதம் எழுதிய வில்லிபுத்தூரார். மேலும் தருமை ஆதீனத்தின் குருஞானசம்பந்தருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் தான் சொந்த ஊர் எனத் தெரிய வருகிறது.

வைணவ திவ்யதேசங்களில் முதலாவதான ஸ்ரீரங்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூரும் ஒரு திவ்ய தேசம் தான். கடைசித் தலமான இது ஆண்டாளின் பிறந்த வீடு. ஸ்ரீரங்கமோ ஆண்டாளின் புகுந்த வீடு. அதோடயா?? மதுரையின் கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது ஒவ்வொரு வருஷமும் ஆண்டள் சூடிக் கொடுத்த மாலையையும், அவள் அனுப்பி வைக்கும் பரிவட்டங்களையும் அணிந்து கொண்டே ஆற்றில் இறங்குவார். இவருக்காக ஆண்டாள் நூறுதடா வெண்ணெயும், நூறு தடா அக்காரவடிசிலும் சமர்ப்பிப்பதாய் நேர்ந்து கொண்டாள். ஆனால் ஆண்டாளால் அதைச் செய்ய முடியவில்லைபோலும். ஆண்டாளின் இந்த விருப்பத்தைப் பின்னால் வந்த ஸ்ரீராமநுஜர் நிறைவேற்றி வைத்துவிட்டு ஸ்ரீவில்லி புத்தூர் சென்றால் என்ன ஆச்சரியம்??? அங்கே இருந்த ஆண்டாள் விக்ரஹம், “என் அண்ணாரே!” என அழைத்துக் கொண்டு முன் வந்து ஸ்ரீராமாநுஜரை வரவேற்றது. “பெரும்புத்தூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே” என்ற வாழ்த்தையும் பெற்றாள் ஆண்டாள். இனி கோயிலுக்கு உள்ளே நுழையுமுன் சற்றே ஆண்டாளின் அவதாரக் கதையைத் தெரிந்து கொள்வோமா?? அனைவருக்கும் தெரிந்த ஒன்றே என்றாலும் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத மிகச் சிறந்த சில கதைகளில் இதுவும் ஒன்று.

Raghavan

unread,
Dec 18, 2009, 9:30:00 AM12/18/09
to il...@googlegroups.com
அருமையான , ஆதாரபூர்வமான கட்டுரை.
படிக்கும் பொது  னேரில் பார்ப்பதுபோல் ஒரு மின்னல்.

Geetha Sambasivam

unread,
Dec 20, 2009, 4:53:31 AM12/20/09
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)

Friday, December 18, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! ஸ்ரீவில்லிபுத்தூர் 2

திருநெல்வேலிக்காரங்க இணையத்திலே நிறைய இருக்காங்க. எல்லாருமே வந்து அவங்களோட மலரும் நினைவுகளைப் பகிர்ந்துக்கறதிலே சந்தோஷம். இங்கே ஆண்டாளை பூமாதேவினு சொன்னதுக்கு நீளாதேவினு திரு தேவ் அவர்கள் சொல்றார். இருக்கலாம். ஆனால் பொதுவாய்ச் சொல்றது பூமியில் கண்டெடுத்ததால் பூமாதேவியே தான் அவதாரம்னும் , இன்னும் சிலர் சாட்சாத் சீதையே ஆண்டாளாகப் பிறவி எடுத்ததாகவும் சொல்கின்றனர். ஆண்டாள் அவதரித்த காலம் முதற்கொண்டு மு.ராகவையங்கார் என்னும் அறிஞர் கூறி உள்ளார். ஆண்டாளின் திருப்பாவையில் வெள்ளி எழுதல் பற்றியும், வியாழன் உறங்குவதுபற்றியும் வருகிறது அல்லவா?

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

அந்த நிகழ்வு எப்போ நடந்தது என ஆராய்ந்து பார்த்து அது நடந்தது எட்டாம் நூற்றாண்டில் எனக் கண்டறிந்து. ஆண்டாள் பிறந்தது கி.பி. 716-ம் ஆண்டு டிசம்பரில் என்றும், அவள் திருப்பாவையைப் பாடிய அந்தக் காலம் கி.பி. 731-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினெட்டாம் நாள் அன்று அதிகாலை 3-50 மணியில் இருந்து 4-00 மணிக்குள் இருக்கவேண்டும் எனவும் கணித்துச் சொல்லி இருக்கிறார்கள். அந்த நாள் ஒரு பெளர்ணமி நாளாகவும் இருந்திருக்கிறது என்கின்றனர். ஆண்டாளின் வயது அப்போது பதினைந்து என்றும் சொல்கின்றனர்.

இத்தனைச் சிறிய வயதில் இப்படி ஒரு அறிவா என நாம் வியக்கின்றோம். இன்னும் வியந்து கொண்டே இருக்கிறோம். ஆண்டாளின் அறிவில் ஒரு பாதியாவது நமக்கு இருந்தால் போதுமே. ஆண்டாள் என்பதே பொய்யான ஒன்று. பெரியாழ்வாரே தம்மை நாயகி பாவத்தில் வைத்துக் கற்பனை செய்து எழுதிய கவிதைகள் இவை எனவும் ஒரு கூற்று உண்டு. மூதறிஞர் என அனைவராலும் அழைக்கப் படும் ஸ்ரீராஜாஜி அவர்களுக்கு இந்தக் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவர் வரையில் ஆண்டாள் என்ற ஒரு பாத்திரமே கிடையாது என்பார். ஆனாலும் இந்தப் பாக்களையும், ஆண்டாளையும் தமிழ் உள்ளளவும் ந்ம்மால் மறக்க முடியாது. ஆண்டாளின் மனோ தைரியமும், அவள் கண்ணன் மேல் கொண்ட காதலும் வியக்க வைப்பது.



திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!” ஆண்டாள் அவதரித்தது ஆடி மாதம் பூரநக்ஷத்திரத்தில். மிகச் சிறந்த விஷ்ணு பக்தர் ஆன விஷ்ணு சித்தர் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கொண்டிருந்த வடபத்ர சாயிக்குப் பூமாலைகளோடு சேர்த்துப் பாமாலைகளும் சமர்ப்பித்து வந்தார். அதுவும் கண்ணனைச் சிறு குழந்தையாகக் கண்ணாரக் கண்டு, மனதிலே தம்மைத் தாயாகவும், கண்ணனைக் குழந்தையாகவும் நினைத்து உருகி, உருகிப் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூற்றாண்டு” என இறைவனுக்கே பல்லாண்டு கூறும் பெருமையைப் பெற்றவர். அதனாலேயே பெரியாழ்வார் என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார். ஆண்டவனின் பூமாலைகளுக்கெனத் தனியே ஒரு நந்தவனம் அமைத்து அதில் பல்வேறு வண்ணங்களும், வாசமும் மிக்க மலர்ச்செடிகளை அமைத்து அதிலிருந்து சூரியோதயத்துக்கு முன்னேயே மலர்களைப் பறித்து மாலைகள் ஆக்கி வடபத்ரசாயிக்குச் சூட்டி மகிழ்ந்து வந்தார். அந்த நந்தவனத்தின் ஒரு பக்கம் துளசிச் செடிகள் பயிராக்கப் பட்டு வந்தன. துளசியின் மணம் ஊரையே தூக்கும். ஒருநாள் காலையில் துளசி பத்ரம் பறிக்கச் சென்ற பெரியாழ்வாருக்கு ஒரு குழந்தையின் இனிமையான அழுகுரல் கேட்டது. பிரமையோ என ஒரு கணம் எண்ணிய அவர், பின் தெளிந்து கீழே பார்த்தால் துளசிச் செடிகளின் ஊடே ஒரு அழகான குழந்தை அழுதுகொண்டு இருந்தது.பச்சிளம் பாலகி. அதைக் கையில் தூக்கியதுமே பெண்குழந்தை என அறிந்த பெரியாழ்வார் மனம் மகிழ்ந்து இது நமக்கு இறைவன் கொடுத்த பரிசு. பூமாதேவியே மகளாய் அவதரித்திருக்கிறாள், என எண்ணி வீட்டுக்கு எடுத்துச் சென்றார்.

கோதை எனப் பெயரிட்டு வளர்த்துவந்தார் அந்தக் குழந்தையை. மிக அருமையாகச் சீரோடும், சிறப்போடும் வளர்த்துவந்தார். பெரியாழ்வார் தம் அன்போடும், பாசத்தோடும், அந்தக் குழந்தைக்கு இறை உணர்வையும் சேர்த்தே ஊட்டி வளர்த்தார். அந்தக் குழந்தையோ தகப்பனுக்கு மிஞ்சிய பெண்ணாக வளர்ந்தது. பூமாதேவியோ எனப் பெரியாழ்வார் சந்தேகப் பட்டதை உறுதி செய்யும் வகையில் பிறந்து வளர்ந்து, விபரம் தெரிந்தது முதல் அந்தக் குழந்தை அரங்கன் மேல் இணையற்ற பக்தியும், பாசமும் கொண்டு வளர்ந்து வந்தது. தினமும் ஸ்ரீகிருஷ்ணலீலை குறித்துப் பெரியாழ்வார் அந்தப் பெண்ணிடம் பேசிவர, அவள் மனதில் அது ஆழப் பதிந்தது. அவள் விளையாட்டுத் தோழன் கண்ணன். அவள் தன்னைவிட்டுக் கண்ணன் இணைபிரியாது இருப்பதாக எண்ணினாள். இடை இடையே கண்ணன் தன்னைவிட்டுச் சென்றுவிட்டானோ எனவும் தோன்றியது அவளுக்கு. தினமும் மாலைகளைக் கட்டிக் கொண்டே பெரியாழ்வார் சொல்லும் கண்ணன் கதைகளையும், கண்ணன் மேலான பாடல்களையும் கேட்டுக் கேட்டு வளர்ந்து வந்த கோதைக்குக் கண்ணனே தன் மணாளன் என்ற எண்ணம் நாளாக நாளாக உறுதிப் பட்டு வந்தது. ஆனால் பெரியாழ்வாரோ இதை அறியவில்லை. பூக்களின் வாசம் மூக்கைத் துளைக்க, அந்த வாசம் தன் மூக்கில் ஏறினால் கூட இறைவனுக்குச் செய்யும் அபசாரம் ஆகிவிடுமோ என எண்ணும் பெரியாழ்வார் ஒரு துணியைத் தன் முகத்தில் சுற்றிக் கொண்டு பூக்களை மாலையாகத் தொடுப்பார்.

மாலைகளின் வண்ண விசித்திரமான பூக்களின் அழகும், அவை ஒன்றுக்கொன்று பொருந்தும்படி வண்ணக்கலவை அமைக்கப் பட்டு மாலையான அழகையும் பார்க்கப்பார்க்க கோதையின் மனம் அந்த மாலையின் வசப்பட்டது. மாலையின் வசம் மட்டுமா? அதை அணியும் ரங்கனின் அழகிலும் அவள் மனம் வசப்பட்டது. இவ்வளவு அழகான மாலையை அணியும் ரங்கன் எத்தனை அழகு? ஆஹா, இந்த மாலையை ரங்கன் மட்டும் அணியாமல் நாமும் அணிய நேர்ந்தால், நாமும் அந்த அழகு ரங்கனும் இந்த மாலையை ஒருவர் கழுத்தில் ஒருவர் போட்டுக் கொண்டால்? கோதையால் ஆசையை அடக்கமுடியவில்லை. அங்கு இருந்த மாலையைக் கையில் எடுத்தாள். தன் கழுத்தில் போட்டுக் கொண்டாள். சுற்றுமுற்றும் பார்த்தாள்.பெரியாழ்வார் தன் அநுஷ்டானங்களைச் செய்யச் சென்றிருப்பதை உணர்ந்தாள். அங்கு இருந்த ஒரு கண்ணாடியின் முன் போய் நின்று தன் அழகைத் தானே ரசித்தாள். ஆஹா, எத்தனை அழகாய் இருக்கிறது இந்த மாலை நமக்கு? இதே போல் ரங்கனுக்கும் இருக்குமோ? நான் அணிந்த மாலையை அவன் அணிவானா? சட்டெனக் கழற்றிப் பூக்குடலையில் அந்த மாலையை வைத்தாள் கோதை. ஏதும் அறியாத பெரியாழ்வார் அந்த மாலையை எடுத்துச் சென்றுவிட்டார். ரங்கனுக்கு அன்று அந்த மாலைதான் அணிவிக்கப் பட்டது. அன்று மட்டுமா? இது தொடர்ந்தது. தினம் மாலைகளைக் கட்டிவைத்த பெரியாழ்வார் அநுஷ்டானங்களுக்குச் செல்வதும், கோதை மாலையை அணிந்து அழகு பார்த்துக் கொள்வதும், பின்னர் அதே மாலையைக் கோயிலுக்கு எடுத்துச் சென்று ரங்கனுக்கு அணிவிப்பதும் தொடர ஆரம்பித்தது. ஆனந்தத்தில் ஆழ்ந்த கோதைக் கண்ணன் மேல் பல பாடல்களைப் புனைந்து பாடினாள். ஊர்ப் பெண்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பாவை நோன்பு நூற்றாள். கண்ணனுடன் தனக்குக் கல்யாணம் ஆகப் போவதாயும் எண்ணி எண்ணி உவந்தாள். வாரணமாயிரம் புடைசூழ மதுசூதனன் நம்பி வந்து மாலையிடப் போவதாய் உறுதியாய் நம்பினாள். ஆனால் அவள் மன மகிழ்வைப் பொசுக்கும் வண்ணமாய் ஒருநாள்……

என்றும்போல் அன்றும் மாலையை எடுத்துச் சென்ற பெரியாழ்வார் பூக்குடலையில் இருந்து மாலையை எடுக்கும்போது அதிலிருந்து பெண்ணின் நீண்ட தலைமயிர் கூடவே வந்தது. அதைக் கண்ட பெரியாழ்வார் திடுக்கிட்டார். அன்று ரங்கனுக்கு மாலை இல்லை. மறுநாள் மனதில் ஏதோ சந்தேகம் ஜனிக்க, மாலையைக் கட்டிவைத்துவிட்டு ஒளிந்திருந்து கவனித்தார். கோதை வந்து திருட்டுத் தனமாய்ப் பார்த்துக் கொண்டே மாலையை எடுப்பதையும் தன் கழுத்தில் போட்டுக் கொண்டு அழகு பார்த்துக் கொள்வதையும் கண்டார். உடனேயே மறைவிடத்திலிருந்து வெளியே வந்தார். கோதையின் செயலைக் கண்டித்தார். கடுமையான வார்த்தைகளால் அவளைக் கடிந்து கொண்டார். அன்றும் ரங்கனுக்கு மாலை இல்லை. ரங்கனோ தவித்தான். என்ன ஆயிற்று? கோதையின் மாலைகள் ஏன் நமக்கு வரவில்லை? அன்றிரவு பெரியாழ்வாரின் கனவில் ரங்கன் வந்தான். மாலை ஏன் வரவில்லை எனக் கேட்டான். கோதை சூடிய மாலையை ரங்கனுக்கு அணிவிப்பது எங்கனம்? எனப் பெரியாழ்வார் நினைத்ததாகவும், அதனாலேயே ரங்கனுக்கு மாலை இல்லை எனவும், துக்கத்துடன் சொன்னார். தூங்கினாலும், கனவின் தாக்கத்தினால் அவர் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாய்ப்பெருகியது. அரங்கன் அவரைத் தேற்றினான். கோதை நமக்கு உகந்தவள் அன்றோ? அவள் இருக்குமிடம் நம்மிடம் அன்றோ? உமக்குக் கோதையின் பிறப்பைப் பற்றி ஏதும் தெரியவில்லை போலும்? சாக்ஷாத் பூதேவி அன்றோ அவள்? அவள் நமக்கு உகந்தவளே. அவள் சூடிக்கொடுக்கும் மாலைகள் நமக்கு மிகவும் உகந்தவை. கோதை சூடிக் கொடுத்த மாலைகளன்றி வேறு மாலைகள் நமக்கு வேண்டாம். எனத் திட்டவட்டமாய்ச் சொன்னான் ரங்கன்.

கனவு கலைந்து எழுந்த பெரியாழ்வார் நடந்தது கனவா, நனவா என்ற கலக்கத்தில் சற்று நேரம் இருந்துவிட்டுப் பின் தன் பெண்ணை அழைத்துக் கனவில் வந்த ரங்கன் சொன்னதை அவளிடம் சொன்னார். ஆண்டவனையே ஆளும் பேறு பெற்ற நீ இன்று முதல் “ஆண்டாள்” என்னும் பெயரால் அழைக்கப் படுவாய் என்றார். ஆண்டவனுக்கே மாலைகளைச் சூடிக் கொடுத்த நீ “சூடிக் கொடுத்த நாச்சியாரா”கவும் ஆவாய் என வாழ்த்தினார். மகள் ஏதோ பைத்தியமாய் இருக்கிறாள் ரங்கனைத் தான் மணப்பேன் என்கிறாள் என்று நினைத்த பெரியாழ்வார் அன்று முதல் ரங்கனிடம் அவளைச் சேர்ப்பது எங்கனம்? எனக் குழம்பினார். அப்போது ரங்கன் மீண்டும் அவர் கனவில் வந்து, ஸ்ரீரங்கத்துக்கு ஆண்டாளை அழைத்து வரும்படி சொல்ல, அவ்விதமே அழைத்துச் செல்கிறார் பெரியாழ்வார். செல்லும்போது காவிரிக்கரையிலேயே கோதை காணாமல் போக, கலங்கினார் பெரியாழ்வார். கோதை தன்னிடம் இருப்பதையும் அவள் தனக்குத் திருவடிச் சேவை புரிவதையும் பெரியாழ்வாருக்குச் சூசகமாய்த் தெரிவித்தார் ரங்கநாதர். ஆனால் ஏற்கெனவே அப்பா ஒரு கிறுக்கு, பெண்ணோ பெரிய பைத்தியம் என்று சொல்லும் ஊர் என்ன சொல்லும்?? ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாளைப் பலரும் அறியத் திருமணம் செய்து கொள்ளும்படி ஆண்டவனை இறைஞ்சினார் பெரியாழ்வார். அதன்படியே ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த ரங்கமன்னார் ஒரு பங்குனி உத்திரத் திருநாளில் ஆண்டாளைத் திருமணம் செய்து கொண்டதாய் ஐதீகம்.

இனி கோயில் பற்றிய செய்திகள் நாளை!

Geetha Sambasivam

unread,
Dec 22, 2009, 4:42:14 AM12/22/09
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)

Tuesday, December 22, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் -ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்!


இரட்டைக் கோயில்களாக அமைந்துள்ள இந்தக் கோயில்களில் முதலில் நாம் காணப் போவது ஆண்டாள் கோயில். பெரியாழ்வாரும்,ஆண்டாளும் வாழ்ந்த வீட்டையே பின்னாட்களில் கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் மாவலி பாணாதிராயர் என்பவர் திருக்கோயிலாக மாற்றி உள்ளார். கல்வெட்டுத் தகவல் இதைத் தெரிவிப்பதாய்ச் சொல்கின்றனர். இரட்டைக் கோயிலாக அமைந்துள்ள இந்தக் கோயிலின் வட கிழக்கிலேதான் வடபத்ரசாயிக்குக் கோயில் உள்ளது. மேற்கே ஆண்டாள் கோயில், இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியிலே பெரியாழ்வாரின் நந்தவனம் இன்னும் மலர்கள் அளித்துவருகிறது. இங்கேயும் ஆண்டாளுக்குத் தனிச் சந்நிதி ஒன்று உள்ளது. இங்கே உள்ள துளசிமாடத்தில் ஆண்டாளின் சிற்பமும் வடித்திருக்கின்றனர். நந்தவனம் காலை வேளை சென்றால் மட்டுமே காணலாம் என எண்ணுகிறேன். முதலில் காணப்படுவதைப் பந்தல் மண்டபம் என்கின்றனர். அதைத் தாண்டிய கல்யாண மண்டபத்தில் நாயக்கர் காலத்திய ராமாயண ஓவியங்கள் இருக்கின்றன என்று சொன்னார்கள். பார்க்கமுடியலை. ஓவியங்கள் அழியும் நிலைமையில் உள்ளன என்றும் கேள்விப் பட்டோம். மதுரைப் பொற்றாமரைக்கரையைச் சுற்றி இருந்த ஓவியங்களை அழித்தாற்போல் இவையும் அழியாமல் இருக்கவேண்டும் எனப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. உள் பிரகாரத்தில் தேக்குமர வேலைப்பாடுகளுடன் காட்சி அளிப்பதே நம்ம மாதவிப்பந்தல்.(கேஆரெஸ்ஸோடது இல்லைங்க, நிஜமான ஆண்டாள் திருப்பாவையில் பாடின மாதவிப் பந்தல்) அடுத்து உள்ள மண்டபத்திலே தான் ஆண்டாள் முகம் பார்த்த தட்டொளி காணப்படுகிறது.

அர்த்த மண்டபத்தில் தங்கமுலாம் பூசப் பெற்ற மஞ்சத்தில் ரங்கமன்னார் திருக்கல்யாணக் கோலத்தில் இடக்கையில் கிளியை ஏந்தி நிற்கும் ஆண்டாளுடன் காட்சி அளிக்கிறார். இந்த ரங்க மன்னார் உற்சவர். மூலவர் ராஜகோபாலன், செங்கோலுடன் கல்யாணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இரண்டு இடங்களிலும் பெரிய திருவடியான கருடாழ்வார் கூடவே இருக்கிறார். உற்சவர் ராஜமன்னார் எனவும் அழைக்கப் படுகிறார். எப்போவும் மாப்பிள்ளைக் கோலத்தில் அந்தக் காலத்து மாப்பிள்ளைகள் போல் அரையில் நிஜாரும் சட்டையும் அணிந்து அருகில் மணக்கோலத்தில் நித்தியம் புதுமணப்பெண்ணாகக் காட்சி அளிக்கும் ஆண்டாள். தினமும் இவருக்கு ஆண்டாளின் தொடைமாலை கிடைத்துவிடும். பூக்கட்டுவதிலும், மாலைகட்டுவதிலும், பூச்சப்பரங்களை அழகு செய்வதிலும் தென் மாவட்டங்களுக்கு ஈடு, இணையே இல்லை. மனதில் பக்தி மட்டும் அல்லாமல் காதலும் பொங்க ஆண்டாள் கட்டிய மாலைக்கு ஈடு உண்டா?


ஆண்டாள் கோயிலில் சந்நிதியைத் திறந்ததுமே பட்டாசாரியார்கள் திரையை நீக்கி ஆண்டாளைத் தரிசிப்பதில்லை. காராம்பசு ஒன்று வந்து நிற்கும். தேவியின் பார்வை காராம்பசுவின் பின்புறம் விழும், அது அங்குள்ள கண்ணாடி மூலம் முதலில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னரே திரை நீக்கப் பட்டு ஆண்டாள் தரிசனம் பட்டாசாரியார்களுக்கு அளிக்கப் படுகிறது. ஆண்டாளுக்குச் செலுத்தப் படும் மாலை களையப்பட்டு மறுநாள் காலையில் வடபெருங்கோயிலின் வடபத்ரசாயிக்குச் சார்த்தப் படுகிறது. ஆண்டவனை ஆண்ட ஆண்டாளின் இடத்தோளில் உள்ள கிளியை சுகப் பிரம்மம் எனக் கருதுகின்றனர். சுகப்பிரம்மம் என்ற ரிஷியை ஆண்டாள் கிளி உருவில் ரங்கநாதரிடம் தூது அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம் என்ன வரம் வேண்டும் எனக் கேட்ட ஆண்டாளிடம் சுகப்பிரம்மம், ஆண்டாளோடு கிளி உருவிலே இருக்க விரும்புவதாய்ச் சொன்னதாகவும், அதனால் அன்று முதல் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றதாகவும் புராணக்கதைகள் கூறுகின்றன. ஆண்டாளின் கையில் உள்ள கிளியயச் செய்ய ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஆகிறது.

முற்றிலும் இலைகள், பூக்கள் போன்றவற்றால் செய்யப் படும் இந்தக் கிளியின் மூக்குக்கு மாதுளம்பூவும், உடலுக்கு மரவல்லி இலைகளும், இறக்கைகளுக்கு நந்தியாவட்டை இலைகளும், பனை ஓலையும், கிளியின் வாலுக்கு வெள்ளை அரளி, மற்றும் செவ்வரளி மொட்டுக்களும், கட்டுவதற்கு வாழை நாரே பயன்படுத்தப் படுகிறது. கண்ணின் கருமணிக்குக் காக்கப் பொன் வைக்கப் படுகிறது. இந்தக் கிளியை ஆண்டாளுக்குச் சார்த்தி அதை மறுநாள் பிரசாதமாகப் பெறுபவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப் படுகின்றனர். தினமும் இவ்வாறு ஒரு கிளி புதிதாகச் செய்யப் பட்டு வைக்கப் படுகிறது. தான் அணிந்து கொண்ட பூமாலையுடன் ஆண்டாள் இங்குள்ள கிணற்று நீரில் அழகு பார்த்துக் கொண்டதாகவும் சொல்லப் படுகிறது. கிணறை கண்ணாடிக் கிணறு என அழைக்கின்றனர்.
முதல் பிரகாரத்தைப் பெரியாழ்வாரின் நெஞ்சாகக் கருதினால் இரண்டாம் பிரகாரத்தில் சொர்க்க வாசல் உள்ளது. இங்கே மஹாலக்ஷ்மியும் அநுமனும், கலைமகளும் அருள் பாலிக்கின்றனர். வடக்கே உள்ள கோயிலுக்கும், நந்தவனத்துக்கும் இடையே சக்கரத்தாழ்வாரும் காணப்படுகிறார். சக்கரத்தாழ்வார் உக்கிரமாக இருந்ததாயும், ஆண்டாளால் சாந்தமடைந்ததாகவும் வரலாறு. இங்கே இருந்த ஆண்டாளும் அந்நியர் படை எடுப்பின் போது கேரளம் சென்று கொஞ்ச காலம் மறைந்து வாழ்ந்திருக்கிறாள். வடபத்ரசாயிக்கு ஆலிலையில் பள்ளி கொண்ட பெருமான் என்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. இந்தக் கோயிலை எழுப்பியவர்கள் வில்லி என்பவனும்,கண்டன் என்பவனும் ஆவார்கள். இவர்கள் பெயராலேயே வில்லிபுத்தூர் என்னும் பெயரும் இந்த ஊருக்கு ஏற்பட்டது. இந்தத் திருக்கோயிலின் எதிரே நூபுரகங்கை உள்ளது. இதில் எந்தக் கோடையிலும் நீர் வற்றுவதில்லை என்பதோடு நீருக்கான ஆதாரமும் தெரியவில்லை.

Geetha Sambasivam

unread,
Dec 28, 2009, 6:35:27 AM12/28/09
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)

Monday, December 28, 2009

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்! ஸ்ரீவில்லிபுத்தூர் 4

இங்கே ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வேண்டுகோள். ஸ்ரீவில்லிபுத்தூரை ஏன் தாமிரபரணிக்கரையிலே சேர்த்தீங்கனு கள்ளபிரான் கேட்கிறார். எங்களோட திருநெல்வேலிப் பயணத்திலே அதுவும் அடங்கினது அவ்வளவே. மேலும் குழுமங்களில் இட ஒரே இழையாக இருப்பது வசதி, தலைப்பை மாற்றவேண்டாம் என்பதே காரணம். மேலும் ஆண்டாள் பிறந்த வீடான ஸ்ரீவில்லிபுத்தூரில் கூடாரைவல்லித் திருநாள் பொங்கலன்றே நடைபெறுகிறது. அன்றே மூட நெய் பெய்து முழங்கை வழிவார அக்காரவடிசில் சமைத்து நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கும் விநியோகிக்கப் படும். (இப்போத் தெரியாதுங்கோ) இங்கே ஆண்டாள் கனுவன்று பிறந்தவீட்டுக்குச் சாப்பிடச் சென்றுவிடுவாள். :D திருமலை நாயக்கர் காலத்திலும் , ராணி மங்கம்மாள் காலத்திலும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்த இவ்வூர் அப்போது மதுரைமாவட்டத்தைச் சேர்ந்ததாகவே இருந்தது. அதற்குப் பின்னர் நெற்கட்டுச் சேவலின் ஜமீந்தாரான பூலித்தேவரிடம் இதன் பொறுப்பும், கோயிலின் பொறுப்பும் சில காலம் இருந்து பின்னர் யூசுப்கான் என்றழைக்கப் பட்ட கான்சாகிபிடம் சென்றது. அதன் பின்னர் சுதந்திரம் வரைக்கும் ஆண்ட ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திற்குச் சற்று முன்பாக திருவாங்கூர் அரச வம்சத்தினர் கோயிலின் பொறுப்பை மேற்கொண்டதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. ஆனால் ஆரம்பத்தில் மதுரை மாவட்டத்தில் இடம் பெற்றிருந்த இந்த ஊர் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் இணைக்கப் பட்டு அதன் பின்னர் ராமநாதபுரம் மாவட்டத்தோடு சேர்க்கப் பட்டது. இவ்விதம் பல்வகைகளிலும் அல்லாடி வந்த இந்த ஊரானது இப்போது விருதுநகர் மாவட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது.

ரயில் மூலம் செல்வதென்றால் தென்காசிக்குச் செல்லும் ரயில்பாதையில் இந்த ஊர் வரும்னு சொல்றாங்க. நாங்க திருநெல்வேலியைத் தலைமையாகக் கொண்டே சுற்றியதால் திருநெல்வேலியில் இருந்தே சென்றோம். சாலைப்பயணத்திலும் தென்காசி செல்ல இது உகந்தது என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றுவிட்டே அங்கிருந்து தென்காசியும் சென்றோம். சாலைவழி இணைப்பு மதுரை,திருநெல்வேலி, சிவகாசி, சாத்தூர் போன்ற ஊர்களோடு இணைத்துள்ளதால் சாலைப்பிரயாணமும் நன்றாகவே இருக்கிறது. மதுரையில் இருந்து இங்கே தினமும் வந்து போகிறவர்கள் இருக்கிறார்கள். மதுரையில் இருந்து மூன்றுமணி நேரச் சாலைப்பயணம் இருக்கலாம். மேலும் நூபுரகங்கை பற்றி முத்துச்சாமி கேட்டிருக்கிறார். இங்கே தவிர நூபுரகங்கை மதுரைக்கருகே உள்ள அழகர் கோயிலில் உள்ளது. அங்கே ஓடுவது சிலம்பாறு. வாமன அவதாரத்தின்போது பெருமாள் எடுத்த திரிவிக்கிரம அவதாரத்தின் ஒரு கால் விண்ணைத் தொடவும், தேவாதிதேவர்களெல்லாம் எம்பெருமானின் திருவடிகளுக்கு நன்னீரால் அபிஷேஹ ஆராதனைகள் செய்ய, அப்போது அவர் சிலம்பில் பட்டுத் தெறித்த நீரே இங்கே உள்ள நூபுரகங்கையில் இருந்து சிலம்பாறாக மாறி வருகிறது என்றொரு புராணக்கதையும் இந்தத் தீர்த்தத்துக்கு உண்டு. நூபுரம் என்றால் சிலம்பு என்று அர்த்தம் அல்லவோ?? அப்பாடா, ஒருவழியா அழகர்கோயிலையும், ஸ்ரீவில்லிபுத்தூரையும், கீழே காட்டழகரையும் இணைத்து எழுதிட்டேன். கள்ளபிரான், இது எப்படி இருக்கு?? :P:P:P:P

இதைத் தவிர ஒரு காட்டழகரும் இருக்கிறார். இவர்தான் முதலிலே அழகர் ஆற்றிலே இறங்கும் திருவிழாவை நடத்தி வந்ததாகவும், இவர் காட்டிலே இன்னமும் இருப்பதாலும், நெருங்க முடியாமல் இருப்பதாலும் அதைத் திருமலை நாயக்கர் மாற்றி மதுரைக்குக் கொண்டு போனதாகவும் ஒரு கர்ணபரம்பரைக் கதை மதுரையில் சொல்லுவதுண்டு. இந்தக் காட்டழகர் இன்னமும் காட்டிலேதான் குடி கொண்டிருக்கிறார். இங்கேயும் ஒரு நூபுரகங்கை இருப்பதாய்க் கேள்வி. ராஜபாளையம் ராஜா வம்சத்தினருக்குக் குலதெய்வம் எனக் கேள்வி. மேற்குத் தொடர்ச்சி மலைகளிலே உள்ள ஒரு மலைத் தொடரிலே அமைந்திருக்கும் இந்தக் காட்டழகர் கோயில் உள்ள மலையை எங்கள் வண்டி ஓட்டுநர் எங்களுக்குக் காட்டினார். புரட்டாசி சனிக்கிழமைகளில் மேலே காட்டுக்குள் இருக்கும் கோயிலுக்குப் பக்தர்கள் கூட்டமாய்ச் செல்வதுண்டு என்றும் சொன்னார். கூட்டமாய்த் தான் செல்லவேண்டும், என்றும் இன்றும் யானைகள் நடமாட்டம் அதிகம் உண்டு என்றும், அந்தக் கோயில் யானைகள் நுழையமுடியாதபடிக் கட்டப் பட்டிருக்கும் என்றும் சொன்னார். ஆசைதான் தாசில் பண்ண! ஆனால் முடியலை! அங்கே போகலை, தனியாகச் செல்லமுடியாது என்பதால்.

அடுத்து வருவதும் இதே தலைப்பில் தான், சங்கரன் கோயில். கொஞ்சம் காத்திருங்க.

Geetha Sambasivam

unread,
Jan 1, 2010, 10:13:37 AM1/1/10
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)

Friday, January 01, 2010

தாமிரபரணிக்கரையில்(???) சில நாட்களில் சங்கரன் கோயில் 1

“தேவர்க்கெல்லாம் தேவநுயர்
சிவபெருமான்பண்டோர் காலத்திலே
காவலினுலகளிக்கும் – அந்தக்
கண்ணனும் தானுமிங்கோருருவாய்
ஆவலொடருந்தவங்கள் –பல
ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே
மேனி நின்றருள் புரிந்தான் – அந்த
வியப்புறு சரிதையை விளம்புகின்றேன்.””

கோமதி மஹிமை என்ற தலைப்பின் இந்த மூன்றாவது பாடலில் சங்கரன் கோயில் சங்கரநாராயணர் பற்றியும் தவம் புரிந்த அன்னையைப் பற்றியும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். ஆனால் எட்டாம்பாடல் மூன்றே வரிகளுடன் நின்றுவிட்டது. இந்தப் பாடல் தொகுப்பு முற்றுப் பெறவில்லை. என்ன எழுத நினைச்சாரோ தெரியலை. சங்கரன் கோயிலை பாரதியார் “புகழ் வளர்த்திடும் சங்கரன் கோயில்” என்று சொல்லி இருக்கிறார். உண்மைதான். சங்கரன் கோயில் பாண்டிய நாட்டின் பஞ்சபூதத் தலங்களில் ப்ருத்வி(மண்) தலமாகக் கருதப் படுகிறது. மற்றத் தலங்கள் தேவதானம்(ஆகாயம்), தென்மலை(வாயு), தாருகாபுரம் (நீர்), கரிவலம்வந்த நல்லூர்(நெருப்பு). இந்த சங்கரன் கோயில் ராஜபாளையம் என்னும் ஊருக்குத் தெற்கே அங்கிருந்து ஒருமணிநேரப் பிரயாணம், சுமார் முப்பது மைலில் உள்ளது. ரயில் மார்க்கம் என்றால் விருதுநகர்-தென்காசி மார்க்கத்தில் உள்ளது. திருநெல்வேலியில் இருந்து அறுபது மைல் இருக்கலாம். இந்தப் பக்கத்தில் எல்லாவீடுகளிலும் ஒரு சங்கரலிங்கமும், ஒரு கோமதியும் இருப்பார்கள். சிலர் ஆவுடையப்பன் என்றோ, ஆவுடைநாயகி என்றோ அல்லது ஆவுடை என்று மட்டுமோ பெயர் வைத்துக் கொள்வார்கள். உள்ளூர் மக்களும், சுற்றுவட்டாரக் கிராம மக்களும் ஆஅவுடையம்மன் கோயில் என்றே சொல்வதாய்ச் சிலர் சொல்கின்றனர்.

சங்கரநயினார் கோயில் என்றும் அழைக்கப் படுகிறது. இந்த ஊருக்கு பூகைலாயம் என்ற பெயரும் உண்டு என்கின்றனர். இந்த ஊரில் குடி கொண்டிருக்கும் சங்கரநாராயணர் மேல் போற்றிப் பாடிய பல நூல்கள் இருப்பதாயும் கேள்விப் படுகிறோம். கோமதி அம்மன் மேல் ஒரு பிள்ளைத் தமிழும் பாடப் பட்டிருக்கிறது. எழுதியவர்கள் யாரெனத் தெரியவில்லை. என்றாலும் கோமதி அம்மை தவ மகிமையை அம்மானையாக மதுரை ராமலிங்கம்பிள்ளை என்பவர் பாடியுள்ளார். ஸ்ரீசங்கரநாராயண க்ஷேத்ர மான்மியம் என்ற வடமொழி நூலில் இருந்து மொழிபெயர்க்கப் பட்ட நூலில் இருந்து இந்தக் கோயிலின் தல புராணம் தெரியவருகிறது. திருக்குற்றாலக் குறவஞ்சியில் “புன்னைக்காவு” என்று சொல்லப் பட்ட ஊர் இந்த சங்கரநயினார் கோயில் தான் என்றும் இந்த ஊர் முன் காலங்களில் புன்னைக்காடாக இருந்தது என்றும் சொல்கின்றனர். இதைத் தவிர மேலே சொன்ன பாரதியாரின் கோமதி மகிமை என்னும் ஏழுபாடல்கள் கொண்டு முற்றுப் பெறாத ஒரு தொகுப்பும் கிடைக்கிறது.

இந்தக் கோயிலில் அம்பாள் தவம் இருந்து ஈசனை வழிபட்டதாகப் புராணங்கள் சொல்கின்றன. அம்பாளைத் தவிர, இந்திரன், பைரவர், சூரியன், அக்னி ஆகிய தேவாதிதேவர்களும், அகத்திய முனியும், வழிபட்ட தலம் இது. இந்திரனின் மகனான ஜெயந்தன் சீதாதேவியைத் துன்புறுத்தியதால் இழந்த ஒரு கண்ணின் பார்வையை இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீசங்கரலிங்கத்தை வழிபட்டு சுய உருவைப் பெற்றதோடு இழந்த கண்பார்வையும் கிடைக்கப் பெற்றான். உறையூர்ச் சோழன் வீரசேனன், பிரகத்துவஜ பாண்டியன் போன்ற மன்னர்களாலும் வணங்கப்பெற்ற தலம் இது. இனி இந்தக் கோயிலின் தல புராணங்கள் சொல்லும் தகவலைப் பார்க்கலாம்.


இந்தக் கோயில் தலபுராணம் சீவலப்பேரி பாண்டியன் சீவலமாற பாண்டியன் என்பவனால் எட்டாம் நூற்றாண்டில் இயற்றப் பட்டதாய்ச் சொல்கின்றனர். இன்னும் சிலர் அருணாசலக்கவிராயர் என்றும் சொல்கின்றனர். இப்போது தலபுராணம் பார்ப்போமா??? திருக்கைலை, அம்மை, அப்பன் தனித்திருந்த ஒரு நாளில் அம்மை, அப்பனைப் பார்த்து, “ஐயனே, ஹரி, ஹரன் ஆகிய உங்கள் இருவரில் யார் பெரியவர்? யார் சிறியவர்?” எனக் கேட்டாள். அனைத்தும் அறிந்த அம்மைக்கு இது தெரியாமலா இருக்கும்? ஐயன் முகத்தில் குறுநகை பூக்க, அம்மையைப் பார்த்து “அவ்வளவு சுலபமாய்த் தெரிந்து கொள்ளமுடியுமா?? தவம் இயற்று. அதிலும் பூலோகம் சென்று தவம் இயற்று. பூலோகத்தில் பசுக்கள் நிறைந்த புன்னைவனம் சென்று தவம் இயற்று. அங்கே யாம் வருவோம். உன் சந்தேகத்தைத் தீர்த்து வைப்போம்.” என்றார். அம்மையும் புன்னைவனம் சென்று தவத்தில் ஆழ்ந்தாள். தவமும் கலையவில்லை. ஐயனும் வரவில்லை.


டிஸ்கி: இது தாமிரபரணிக்கரையிலே இல்லை. கள்ளபிரான் வந்து கேட்கிறதுக்குள்ளே சொல்லிடறேன். திருநெல்வேலிப் பயணத்திலே இந்த ஊருக்கும் போனோம். அதனால் அந்தத் தலைப்பிலேயே எழுதறேன். :P

Geetha Sambasivam

unread,
Jan 2, 2010, 4:23:46 AM1/2/10
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)

தாமிரபரணிக்கரையில் சில நாட்களில் சங்கரன் கோயில் 2

நாட்கள் கழிந்தன. கடகராசியில் சூரியன் பிரவேசித்தான். சந்திரன் பூரணமாய்ப் பொலிந்த ஆடி மாதம் பெளர்ணமியில் உத்திரட்டாதி நக்ஷத்திரம் கூடிய நன்னாளில் நள்ளிரவு வேளையில் அம்மைக்குக் காட்சி கொடுத்தார் ஈசன். எப்படி??? வலப் பக்கம் புலித்தோல் ஆடை, இடப்பக்கம் மஞ்சள் வண்ணப் பட்டுப் பீதாம்பரம். வலப்பக்கக் கழலில் பாம்பு ஆபரணம், வலப் பக்கம் பொன்வண்ணத் திருமேனி, இடப்பக்கமோ கார்வண்ணத் திருமேனி. வலப்பக்கம் கங்கை தரித்த சடாமகுடம், நாக குண்டலம், திருநீறணிந்த மேனி, இடப்பக்கம் ரத்தின கிரீடம், மகர குண்டலம், கஸ்தூரிப் பொட்டு, இட மேல்கையில் சக்கரமுமாக சங்கரநாராயணர் காட்சி கொடுத்தார். அன்னை புரிந்து கொள்கின்றாள். அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதோர் வாயிலே மண்ணு என்னும் அரும்பெரும் தத்துவத்தை. இதன் பின்னரும் அன்னையின் தவம் தொடர்ந்தது. இம்முறை ஈசனின் சுய உருவைக் காணவேண்டித் தவமிருந்தாள் அன்னை. அவள் தவத்தின் பலனாக ஈசன் அவளைத் திருமணம் செய்து கொண்டார். இதைத் தவிரவும் பல்வேறு புராண, சரித்திர சம்பவங்களையும் குறிப்பிடுகின்றனர்.

ஈசன் இங்கே சங்கரலிங்கமாகவும் லிங்க வடிவில் அருள் பாலிக்கிறார். அதற்குச் சொல்லப் படும் கதை ஒன்று உக்கிரபாண்டியன் காலத்திலே இந்தக் கோயில் கட்டப்பட்டதாய்ச் சொல்கின்றது. இதற்கான கல்வெட்டுக் குறிப்பும் இருப்பதாய்க் கூறுகின்றனர். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயில் கட்டப் பட்டிருக்கவேண்டும் என அந்தக் கல்வெட்டுத் தகவல்களின்படி அறிகிறோம். முன் காலத்தில் புன்னைவனமாக இருந்த இந்த ஊரில் புன்னை வனத்திற்குக் காவல் காத்து வந்தவன் பெயர் காப்பரையன் என்பவன். இவன் தேவர்களுள் ஒருவன் எனவும் பார்வதி தேவியின் சாபத்தால் பூவுலகில் பிறந்தான் என்றும் சொல்கின்றனர். இந்தக் காப்பரையன் தோட்டத்தைப் பராமரித்து வந்த வேளையில் ஒருநாள் பாம்புப் புற்று ஒன்றை மிகப் பிரயத்தனத்துடன் அகற்ற முற்பட்டான். அப்போது அவன் கைக்கோடரி அந்தப் புற்றில் இருந்த பாம்பு ஒன்றின் மீது பட்டுக் கோடரி துண்டாகிவிட்டது. அதிர்ந்து போன காப்பரையன் மேலும் புற்று மண்ணை நீக்கிவிட்டுப் பார்த்தான், அடியிலே ஒரு லிங்கம் இருப்பதைக் கண்டான். மன்னரிடம் சென்று தெரிவித்தான்.

அப்போது பாண்டிய ஆண்டு வந்த மன்னன் உக்கிரபாண்டியன் மீனாக்ஷியின் பக்தன். இவன் மணலூரைத் தலைநகராய்க் கொண்டே ஆட்சி புரிந்து வந்தான். எனினும் அவ்வப்போது மீனாக்ஷியை தரிசிக்க மதுரை செல்வது உண்டு. அவ்வாறே மதுரை கிளம்பிச் சென்ற ஒருநாளில் அவனது பட்டத்து யானை வழியில் பெருங்கோட்டூர் என்னும் இடத்தை அடைந்ததும் நகராமல் நின்றுவிட்டது. அடம் பிடித்தது. யானைப்பாகனாலும் எதுவும் செய்யமுடியவில்லை. மன்னன் கீழே இறங்கி யானையைச் சமாதானம் செய்து பார்த்தான். தனது பெரிய தந்தங்களால் தரையைக் குத்தி மணலைப் பெயர்த்து எடுத்த யானை அப்படியே படுத்துக் கொண்டுவிட்டது. மன்னனுக்குள் கலவரம் மூண்டது. மன்னனைக் காண்பதற்கெனப் புன்னை வனத்தில் இருந்து வந்த காப்பரையனுக்கு மன்னன் பெருங்கோட்டுரில் இறங்கி இருக்கும் செய்தி கிடைக்கிறது. அங்கே ஓடோடி வந்தான். புன்னை வனத்தில் தனக்கு நேர்ந்த அநுபவத்தைக் கூறினான். அவனுடன் புன்னைவனம் சென்ற மன்னனும் புற்றையும் தாக்கப்பட்டுக் கிடந்த பாம்பையும், லிங்கத்தையும் பார்த்தான்.

மன்னனுக்கு அப்போது அசரீரி மூலம் அந்த இடத்தில் ஒரு கோயில் கட்டும்படிச் சொல்ல, மன்னனும் தனது பட்டத்து யானை மூலம் பிடி மண் எடுத்து பெருவிழாக் கொண்டாடிக் கோயில் கட்டினான். அங்கே இந்த லிங்கத்தைத் தவிரவும் சங்கரநாராயணரும், கோமதி அம்மனும் பிரதிஷ்டை செய்யப் பட்டனர். கோ என்றால் பசு என்று அர்த்தம். இங்கே பக்தர்களாகிய பசுக்கள் எனவும் சொல்லலாம். மதிக்கு அர்த்தம் சொல்லவேண்டாம். ஒளி பொருந்திய எனப் பொருள். பக்தர்களாகிய பசுக்களைக் காத்து அருளும் ஒளிபொருந்திய திவ்ய முகம் படைத்தவள் என்ற பொருளிலேயே “கோமதி” என்றும், தமிழில் “ஆ” என்றால் பசு என அர்த்தம் வரும். ஆவுடைநாயகி எனத் தமிழிலும் அழைக்கப் படுகிறாள் இந்த அன்னை. அது மட்டுமா? மதுரை மீனாக்ஷிக்கு சகோதரி எனவும் அன்பாக அழைக்கப் படும் இந்த அன்னை கிரியா சக்தியாகச் சித்திரிக்கப் பட்டிருப்பதாயும் கூறுவார்கள். யோகமுறைப்படி மதுரை மீனாக்ஷி இச்சா சக்தியாகவும், சங்கரன் கோயில் கோமதி அம்மன் கிரியா சக்தியாகவும், நெல்லை காந்திமதி அம்மன் ஞானசக்தியாகவும் சித்திரிக்கப் பட்டிருப்பதாய் ஆன்றோர் கருத்து. இந்த கோமதி அம்மன் முன்னால் உள்ள ஸ்ரீசக்கரம் மிகவும் சக்தியும் மகிமையும் வாய்ந்தது என்பார்கள். இதைப் பிரதிஷ்டை செய்தவர் திருவாவடுதுறை ஆதினத்தைச் சேர்ந்த ஸ்வாமிகள் ஒருவர்

முதன்முதல் நினைவு தெரிந்து பத்து வயசிலே நான் சங்கரன் கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். எனக்குச் செய்யவேண்டிய நேர்த்திக்கடனான மொட்டை போட்டு மாவிளக்குப் போடுதலை இங்கே நிறைவேற்றினார்கள். விபரம் தெரிந்த பருவமாதலால் இந்த ஸ்ரீசக்கரத்தில் பல பெண்கள் உட்கார்ந்து வழிபட்டதையும் பார்க்க நேர்ந்தது. அத்தோடு சில பெண்களும், ஆண்களும் மனநிலை சரியில்லாதவர்கள் இந்தச் சக்கரத்தின் பள்ளத்தில் அமர்ந்து தங்களை மறந்த நிலையில் ஆடுவதையும் கண்டேன். மதுரை மீனாக்ஷி கோயிலிலும் அறுபதுகளின் கடைசியில் இம்மாதிரியான ஒரு நிகழ்வைப் பார்க்க நேர்ந்திருக்கிறது. ஒரு விதத்தில் வெளி உலகின் கஷ்ட, நஷ்டங்கள் பற்றிய அறிவைப் பெற்றேன் என்றும் சொல்லலாம். குழந்தைப் பேறு வேண்டிப் பிரார்த்திப்பவர்களையும் பார்க்க முடியும். இம்முறை சென்றபோது தை மாசமாக இருந்தாலும் முன் சொன்ன அம்மாதிரியான பழக்கங்களை நிறைவேற்றுதல் தடை செய்திருப்பதாய்ச் சொன்னார்கள். ஆகவே ஸ்ரீசக்கரப் பள்ளத்தின் எதிரே அமர்ந்து அமைதியாக தியானம் செய்து வந்தவர்களையே பார்த்தோம். அப்பாடானு இருந்தது.

படங்கள் உதவி:கூகிளார், நன்றி.

Geetha Sambasivam

unread,
Jan 6, 2010, 4:12:04 AM1/6/10
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)

Wednesday, January 06, 2010

தாமிரபரணிக்கரையில் சிலநாட்கள் - சங்கரன் கோயில்

ஊரின் நடுநாயகமாக அமைந்துள்ளது இந்தக் கோயில். கோயிலின் பெயரே ஊருக்கும் அமைந்துள்ளது. சுமார் நாலு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்தத் திருக்கோயில் ஆனையூர் மலையின் கற்களால் கட்டப் பட்டதாய்க் கூறுகின்றனர். ஒரே வளாகத்தில் மூன்று பிரிவுகள் கொண்ட சந்நிதிகள் அமைந்துள்ளன. ஒன்று சங்கரலிங்க ஸ்வாமிக்கான சந்நிதி, அடுத்து ஸ்ரீசங்கரநாராயணருக்கான சந்நிதி, அடுத்து ஸ்ரீகோமதி அம்மனின் கோயில். ஒவ்வொன்றும் தனித்தனிக் கருவறை, அர்த்தமண்டபம், மணி மண்டபம், மஹா மண்டபம், தனித்தனிப் பிரஹாரம் கொண்டு விளங்குகின்றது. கோயிலின் ராஜகோபுரத்தில் ஒன்பது நிலைகள் இருக்கின்றன. ஒன்பதாவது நிலையில் பெரிய மணி ஒன்று வைக்கப் பட்டு இரண்டு நாழிகைக்கு ஒருமுறை அடிக்கும்படி ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததாகவும், தற்சமயம் அது செயல்படவில்லை என்றும் சொல்கின்றனர். ராஜகோபுர வாயிலுக்கு நேரேயே சங்கரலிங்கனாரின் சந்நிதி உள்ளது. திருமுறைகள் பொறிக்கப் பட்டிருக்கும் பிரகாரச் சுவர்களைக் காணலாம். ஒரு காலத்தில் நாகர்கள் அதிகம் வழிபட்டதாய்ச் சொல்லப் படுகின்றது. அதற்கான புராணக்கதையானது:

காச்யப முனிவரின் மனைவியான கத்ரு என்பவளுக்குப் பிறந்த பாம்புகளுக்கும், மற்றொரு மனைவியான விநதையின் பிள்ளையான கருடனுக்கும் எப்போதும் பகை இருந்து வந்தது. இறுதியில் அனைத்துப் பாம்புகளும் கருடனைச் சரணடைந்தன. ஆதிசேஷனை மஹாவிஷ்ணுவிற்குப் படுக்கையாக்கி, வாசுகியை ஈசனின் ஆபரணம் ஆக்கினார்கள். சங்கனும், பதுமனும் ஈசனுக்கும், விஷ்ணுவுக்கும் பக்தர்கள் ஆனார்கள். என்றாலும் அப்போதும் யார் பெரியவர், விஷ்ணுவா, ஈசனா என்ற சண்டையே இருவருக்கும் ஏற்பட, அத்ரி முனிவர் ஈசனே உயர்ந்தவர் என்று சொல்ல, பதுமன் அதை ஏற்காமல் பூலோகம் வந்து புன்னைவனத்தில் தீர்த்தம் ஏற்படுத்தி வழிபட்டதாகவும், அனைத்துப் பாம்புவர்க்கங்களும் அங்கே வந்து வழிபட, நாகசுனை ஏற்படுத்தப் பட்டதாகவும் கூறப் படுகிறது. இங்கே சங்கனும், பதுமனும் வழிபட்டபோதும், சங்கரநாராயணராகக் காட்சி தந்து அருள் பாலித்தார் ஈசன். ஆகவே இந்தத் தலத்தில் நாகசுனையில் நீராடி சங்கரலிங்கனாரை வழிபட்டால் நாகதோஷம் நீங்கும் என்றும், சொல்கின்றனர்.

இங்கே உள்ள கன்னிமூலகணபதிக்கும் நாக ஆபரணமே! நாகராஜனுக்குப் புற்றுக் கோயிலும் உள்ளது. சர்ப்பவிநாயகரை வணங்கி நாகராஜனுக்குப் பால், பழம் நைவேத்தியம் செய்து புற்று மண்ணைப் பிரசாதமாக எடுத்துச் செல்வதுண்டு. இந்தக் கோயில் புற்று மண்ணை வீட்டில் வைத்துக் கொண்டால் சுப்புக்குட்டிகளின் தொந்திரவு இருக்காது என்றும் சொல்வார்கள். பரிவார தெய்வங்களில் எல்லாச் சிவன் கோயில்களும் போலவே இங்கும் தேவார நால்வரோடு, மஹாவிஷ்ணு, அறுபத்து மூவர், ஜுரதேவர், பிரம, ஈச, குமார,விஷ்ணு, வராஹ, இந்திர, சாமுண்டி சக்திகள் சப்த கன்னிகளாகவும், கூடவே உக்கிரபாண்டியன்(?), உமாபதிசிவம்(?) ஆகியோரின் சிற்பங்களும், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியரும் அருள் பாலிக்கின்றனர். இங்குள்ள நடராஜரின் ஞானநடனத்தைக் காரைக்கால் அம்மையார் ரசித்தவண்ணம் காட்சி அளிக்கிறார். சிவகாமி அம்மை தாளம் போடுகிறாள். சங்கரலிங்கனார் சுயம்பு லிங்கம் என முன்னரே பார்த்தோம். கருவறையிலேயே மனோன்மணி சக்தியாக எல்லாச் சிவன் கோயில்களையும் போல் இணை பிரியாத சக்தி காட்சி அளிக்கிறாள். வாலற்ற பாம்பு வடிவத்திலேயே சிலருக்குக் காட்சி கொடுத்ததால் ஈசன் இங்கே கூழைப்பிரான் என்றும், கூழையாண்டி, கூழைப் புனிதர், கூழைக்கண்ணுதலார் என்றெல்லாம் சொல்லப் படுகிறார். சூரியனும் இங்கே வந்து வழிபடுவதாகவும், அவை முறையே புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் நடக்கும் என்றும் அப்போது சங்கரலிங்கத்தின் மீது சூரியக் கதிர்கள் முறையே மூன்றுநாட்கள் தொடர்ந்து விழுந்து வணங்குவதைக் காணலாம் என்றும் சொல்கின்றனர். உற்சவ மூர்த்தி உமாமஹேஸ்வரர்.

சங்கரலிங்கனார் சந்நிதிக்கும், கோமதி அம்மன் சந்நிதிக்கும் நடுவே காட்சி அளிப்பது சங்கரநாராயணர் சந்நிதி ஆகும். இது ஒரு தனிக்கோயிலாகக் காட்சி கொடுக்கிறது. திருக்கல்யாணமண்டபம் ஒன்றும் அதில் கண்கவரும் ஓவியங்களும் காட்சி கொடுக்கின்றன. ஈசன் வலப்பக்கம் கங்கையுடன் கூடிய ஜடாமகுடம், நாககுண்டலம், திருநீறணிந்த பொன்னொளிர் மேனியோடும், இடப்பக்கம், ரத்தினக்கிரீடம், மகரகுண்டலம், கஸ்தூரிப் பொட்டு அணிந்த நீலமேக சியாமளனாகவும், ஒரு பக்கம் கொன்றைமாலை, புலித்தோலை அணிந்தும் ,மறுபக்கம் சக்கரம், பொன்னால் ஆன பூணூல், துளசிமாலையுடன் மஞ்சள் வண்ணப் பீதாம்பரம் அணிந்தும் காட்சி கொடுக்கிறார். உற்சவமூர்த்தியும் சங்கரநாராயணரே. அபிஷேஹப் பிரியரான ஈசன் தன்னுடன் இணைந்த விஷ்ணுவிற்காக அபிஷேஹத்தை விட்டுக் கொடுத்துவிட்டார். ஆகையால் இங்கிருக்கும் ஸ்படிக லிங்கத்திற்கே அபிஷேஹம் நடக்கிறது. இந்த ஸ்படிக லிங்கம் ஆதிசங்கரர் ஸ்தாபித்தது என்றும், ஸ்ரீசிருங்கேரி பீடாதிபதியான ஸ்ரீநரசிம்ம பாரதி ஸ்வாமிகள் ஸ்தாபித்தது என்றும் இருவேறு கருத்துகள் உண்டு. கோமதி அம்மன் சந்நிதி போலவே இங்கும் வசனக்குழிப்பள்ளம் உண்டு. இங்கும் பேய், பில்லி, சூனியம் போன்றவற்றுக்கு வழிபாடுகள் நடத்துவதுண்டு. எல்லாத்துக்கும் மேலே விடுதலைப் போராட்ட முதல் வீரன் ஆன பூலித்தேவன் மறைந்த இடம் இந்தச் சங்கரன் கோயிலில், சங்கரநாராயணர் சந்நிதிக்கு அருகேயே. அங்கே ஒரு கல்வெட்டு ஒன்றும் காணப்படும். பூலித்தேவன் இங்கே வந்து வழிபாடுகள் செய்துகொண்டிருந்த வேளையில் பறங்கியர் கோயிலுக்குப் பிடிக்க வருவதைத் தெரிந்து கொண்டு இங்கிருந்த சுரங்கப்பாதையில் சென்று மறைந்ததாகவும், அதன் பின்னர் திரும்பவே இல்லை என்றும் சொல்லுவார்கள்.

Raghavan

unread,
Jan 6, 2010, 4:35:24 AM1/6/10
to il...@googlegroups.com
சங்கரங்கோவில்,  கோவிலுக்கு அருகில் பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி
உள்ளது.    அதுபோல் மருதமலையிலும், கோவிலுக்கு அருகில் அவர் தவம்
புரிந்த இடம் உள்ளது.
 
தரிசிக்க வேண்டிய இடங்கள்.

Geetha Sambasivam

unread,
Jan 7, 2010, 6:58:00 AM1/7/10
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)

Thursday, January 07, 2010

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள்- சங்கரன் கோயில்!

கோயிலின் வடபக்கமாய் கோமதி அம்மனின் தனி சந்நிதி. மதுரை மீனாக்ஷியின் தங்கை என்று அழைக்கப் படும் இவளைக் காணச் செல்லும் முன்னர் மதுரை மீனாக்ஷியை தரிசித்துச் செல்லவேண்டும் என்றும், தரிசித்த பின்னர் திரும்ப மதுரைக்குப் போய் மீனாக்ஷியிடம் நன்றி கூறவேண்டும் என்றும் பொதுவான நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் இப்போது மதுரையில் மீனாக்ஷியை தரிசிப்பது என்பது கனவு என்பதால் அப்படி எல்லாம் செய்யறது ரொம்பக் கஷ்டம். இன்னும் கோமதி அம்மனுக்கு அவ்வளவு மோசமான நிலை ஏற்படவில்லை. நிதானமாய்த் தரிசிக்கலாம். கூட்டம் இருக்கிறது என்றாலும் நின்று தரிசிக்க முடிகிறது. இங்கே மாவிளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு. அம்மன் சந்நிதியில் உள்ள பள்ளியறையில் மரகதக்கல் பதிக்கப் பட்டிருப்பதாய்ச் சொல்கின்றனர்.

இங்கே உள்ள பிரஹாரத்தின் ஒரு பக்கமாய் புற்று மண் பிரசாதம் சேமிக்கப் படுகிறது. இந்தப் புற்று மண்ணை நீரில் குழைத்துப் பற்றுப் போல் நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். கெடுபலன்களும் குறையும் என்று சொல்வார்கள். அம்மனுக்குத் தனித் தேர் ஆடித் தபசு விழாவின் ஒன்பதாம் நாளன்று நடக்கிறது. நாகராஜர் சந்நிதியும் தனியாக உள்ளது. ஆகமமுறைப்படி வழிபாடுகள் நடக்கின்றன. சிவாலய வழக்கப்படி விபூதி, குங்குமப் பிரசாதங்களோடு, விஷ்ணு கோயில் வழக்கம்போல் தீர்த்தமும் இங்கே உண்டு. ஐப்பசியில் திருக்கல்யாணவிழா பெரிய விமரிசையாக நடைபெறுகிறது. அதற்கு முன்பாக ஆடி மாதம் ஆடித்தபசு விழாவும் விமரிசையாக நடைபெறும். உக்கிரபாண்டியனால் அளிக்கப் பட்ட நிலங்கள் இந்தக் கோயிலுக்கு உண்டு. அதன் நினைவாக சித்திரை பிரம்மோற்சவத்தில் உக்கிரபாண்டியனுக்கு ஒருநாள் விழா இன்றும் நடந்து வருகிறது.

உக்கிரபாண்டியன் தவிர பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் பதினைந்தாம் நூற்றாண்டிலும், கெடில வர்மன் என்பவனும் அதிவீரராம பாண்டியனும் முறையே பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளிலும் இந்தக் கோயிலின் திருப்பணிகளைச் செய்து வதிருப்பதாய்க் கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன. திருநெல்வேலியைச் சார்ந்த வடமலையப்பபிள்ளை என்பவர் இந்தக் கோயிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்திருக்கிறார். மேலும் இந்தக் கோயில் திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்திருந்த காலத்தில் அதற்கு நாயக்கர்களின் பிரதிநிதியாக இருந்து ஆண்டு வந்த ஆறை அழகப்ப முதலியார் என்பவர் இந்தக் கோயிலின் உற்சவர் திடீரெனக் காணவில்லை என்பதும் துயருற்று அதை மீட்க எடுத்த நடவடிக்கைகளைக் கேட்டால் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். அது நாளை!!!!

Geetha Sambasivam

unread,
Jan 8, 2010, 4:00:09 AM1/8/10
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)

Friday, January 08, 2010

சங்கரன் கோயில் நாயகரைக் காணோம்!



கேட்கக் கதை போல் இருந்தாலும் இது ஒரு உண்மை நிகழ்ச்சி. பதிவு செய்யப் பட்டது. சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியும் கூட. முதலில் இதைப் பதிவு செய்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயரவர்கள்.

 

முந்நூறு வருடங்களுக்கு முன்பாக சங்கரன்கோயிலின் உற்சவ மூர்த்தியைக் காணவில்லை. திடீரெனக் காணாமல் போயிற்று. அப்போது சங்கரன் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தின் ஆளுகையின் கீழே இருந்த காலகட்டம். திருநெல்வேலி மக்கள் அனைவருக்கும் சங்கரன் கோயில் நாயகரைக் காணோம் என்ற மனவருத்தம். அருகே இருந்த ராமநாதபுரத்துக்காரர்களுக்கோ, எங்கள் ஆளுகையில் இருந்தவரையில் இம்மாதிரியான ஒன்று நிகழ்ந்ததா?? என்ற எகத்தாளம். மக்கள் மனம் புழுங்கினர்.

 

அக்காலத்தில் திருநெல்வேலிச்சீமையை ஆண்டவர் நாயக்க மன்னர்களின் பிரதிநிதியான ஆறை அழகப்பமுதலியார் என்பார் ஆகும். ராமநாதபுரமோ சேதுபதி அரசரின் நேரடி ஆளுகைக்கு உட்பட்டது.  அதனால் மூர்த்தம் சேதுபதியின் ஆளூகைக்கு உட்பட்ட பகுதிக்குப் போயிருக்கோ என்ற ஐயம். என்றாலும் இதை எவ்வாறு உறுதி செய்துகொள்வது?? ஆறை அழகப்ப முதலியாருக்கு நிம்மதியே இல்லை. தம் ஆளுகைக்கு உட்பட்ட இடத்தில் இம்மாதிரியான ஒரு நிகழ்வு ஏற்பட்டு தம் புகழுக்கும், பக்திக்கும், இறை வழிபாட்டின் தூய்மைக்கும் பங்கம் ஏற்பட்டதே என மனம் வருந்தித் துடித்தார்.  சிறந்த சிவபக்தரான அவர் மனம் கசிந்து உருகினார்.” சங்கரன் நயினார் கோயிலின் நாயகரைக் கண்டுபிடித்து அங்கே மீண்டும் பிரதிஷ்டை செய்யும் வரையில் அன்னம் எடுத்துக்கொள்வது இல்லை. இதனால் என் உயிரே போனாலும் சரி. அப்படி என் உயிர் போயிற்றென்றால் இதுவும் ஈசன் அருள் என அதை ஏற்பதே நல்லது. இனி என் வேலை நயினாரைக் கண்டு பிடித்து சங்கரன் கோயிலிலே சேர்ப்பது ஒன்றே.”  என்று கடுமையான சபதம் எடுத்துக்கொண்டு சங்கரன் கோயில் நாயகரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டார்.

 

அவருடைய நண்பர்கள் இம்முயற்சியைச் செய்யவேனும் உடலில் பலம் வேண்டாமா? இத்தகையதொரு கடும் விரதத்தை மேற்கொண்டால் எங்கனம் அலைந்து திரிந்து மூர்த்தத்தைத் தேடுவது? அதோடு ராஜ்ய நிர்வாகம் வேறே இருக்கிறதே? விரதத்தைத் தளர்த்துங்கள் என வேண்டிக் கொண்டனர். திட்டமாய் மறுத்த அழகப்ப முதலியார் மேலும், மேலும் நண்பர்கள் வற்புறுத்தல் தாங்காமல் பால்கஞ்சி மட்டும் எடுத்துக் கொண்டார். இரவிலும், பகலிலும் தூங்காமல் நாயகரைத் தேடும் முயற்சி தொடங்கியது.  கடும் முயற்சியின் பேரில் சங்கரன் கோயில் நாயகர் காணாமல் போன அன்றிலிருந்து கோயிலின் அர்ச்சகர்களுள் ஒருவரான சண்பகக்கண்நம்பி என்பவரும் காணாமல் போய்விட்டார் என்று தெரியவந்தது. நன்கு விசாரித்ததில் நம்பியே விக்ரஹத்தைக் கொண்டு சென்றிருக்கவேண்டும் என்பதும் உறுதியானது.

 

ஆம், உண்மையில் சண்பகக்கண்நம்பியே அந்தத் திருட்டைச் செய்தார். நாயகரைக் கொண்டு போய் சேதுபதியின் ஆட்சிக்கு உட்பட்ட திரு உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அடகு வைத்துவிட்டார். ஆறை அழகப்பமுதலியார் சேதுபதியின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு வந்து எதுவும் செய்யமுடியாது என்பதை நன்கு தெரிந்து கொண்டே இவ்விதம் செய்திருந்தார். மன்னன் சேதுபதிக்கோ நாயகர் தங்கள் ஆளுகைக்குள் வந்தது தெரிய வரவே, உள்ளூர மனம் மகிழ்ந்தான். அந்த நாயகரை அடகுக்கடையில் இருந்து மீட்டு, உத்தரகோசமங்கை கோயிலிலே அவரை வைத்து வழிபாடுகள் செய்துவர உத்தரவிட்டான். இங்கே ஆறை அழகப்பருக்கு இந்தச் செய்திகள் யாவுமே கிட்டியது.  ஒற்றர்கள் அறிந்து வந்து முழுத் தகவல்களையும் கொடுத்தனர். இரு ஆட்சிப் பகுதிக்கும் எப்போது பகையே. நம்மிடம் நட்பு முறையில் சேதுபதி அரசர் இல்லை. ஆகவே அவருக்கு எழுதி வேண்டிப் பெற்றுக் கொள்வது இயலாத காரியம். மேலும் சேதுபதி கேட்பார். மூர்த்தம் உம் ஆட்சியின் கீழே இருந்தபோது அதைக் காப்பாற்றி வைத்துக் கொள்ள வக்கோ, திறமையோ அற்றுப் போய்க் களவாட விட்டவருக்கு மீண்டும் இந்த அரிய மூர்த்தத்தைக் கொடுக்க முடியுமா? உமக்கு எதற்கு அவர்? என்று பட்டெனக் கேட்டுவிடுவார். மானமே போய்விடும். சமஸ்தானத்து மந்திரிகளையோ, திவான்களையோ அனுப்பலாமா?

 

ம்ஹும், அவர்கள் எல்லாம் சேதுபதியின் அதிகாரத்துக்குப் பயப்படுகிறார்களே. மேலும் அவர்கள் போய் சேதுபதியை நேரில் பார்ப்பதும் இயலுமா?? முடியாதென்றோ தோன்றுகிறது. என்ன செய்யலாம்??? அப்போது அந்த சமஸ்தானத்தின் ஆட்சிக்கு உட்பட்ட சொக்கம்பட்டி சமஸ்தானத்தின் ஸ்தானாதிபதியான பொன்னம்பலம்பிள்ளையின் நினைவு வந்தது முதலியாருக்கு. பொன்னம்பலம் பிள்ளை திறமைசாலி. எப்படிப்பட்ட கல்நெஞ்சக்காரரையும் இளக வைக்கும் ஆற்றல் கொண்டவர். ஊற்றுமலை ஜமீந்தாரிணி பூசைத்தாயாரையே  ஆனானப் பட்ட வடகரைத் தலைவரோடு சமாதானம் செய்து வைத்தவர் ஆயிற்றே? ஆனால் பொன்னம்பலம் பிள்ளை நம்மை வணங்குவதே இல்லையே? மற்ற ஸ்தானாதிபதிகள் கப்பம் செலுத்த வந்தால் கீழே விழுந்து ஆறை அழகப்ப முதலியாரை வணங்கிவிட்டே செல்வதுண்டு. இந்தப் பொன்னம்பலம் பிள்ளையோ நேரிலும் வருவதில்லை. எங்கேனும் பார்க்க நேர்ந்தாலும் கீழே விழுந்து வணங்குவதும் இல்லை. இவன் பேரில் நடவடிக்கையும் எடுக்க முடியாவண்ணம் கப்பத்தை ஒழுங்காய்ச் செலுத்திவிடுகிறான். இப்போது இவனையா போய் உதவி கேட்பது? அழகப்ப முதலியாரின் தன்மானமும், கெளரவமும் தடுத்தது.

 



2010/1/7 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Jan 8, 2010, 8:33:57 PM1/8/10
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)

Friday, January 08, 2010

சங்கரன் கோயில் நாயகர் எங்கே! வேலனுக்கு அரோஹரா!

தமக்கு அடங்கிய மற்ற ஸ்தானாதிபதிகளைக் கூப்பிட்டு வைத்துக் கலந்து ஆலோசித்தார் அழகப்ப முதலியார். அனைவரும் ஒரே வார்த்தையாக இது பொன்னம்பலம் பிள்ளை அவர்களால் மட்டுமே ஆகக் கூடிய காரியம் என்று சொல்லிவிட்டார்கள். அவர்கள் சொன்னதில் முழு உண்மை இருந்தாலும் அனைவருக்கும் அடித்தளத்தில் அழகப்ப முதலியார் தங்கள் எல்லாரையும் கீழே விழுந்து வணங்கச் செய்தார். ஆனால் பொன்னம்பலப் பிள்ளையிடம் அவர் பாச்சா பலிக்கவில்லை. இப்போது பிள்ளை அவர்களின் தயவை முதலியார் நாடவேண்டுமே. வேண்டும் முதலியாருக்கு என்ற எண்ணமும் உள்ளூர இருக்கத் தான் செய்தது. ஆனாலும் அனைவருக்கும் சங்கரன் கோயில் நாயகர் மீண்டும் சங்கரன் கோயிலுக்கே வரவேண்டுமானால் அது பொன்னம்பலம் பிள்ளையால் தான் முடியும் என்று புரிந்தும் வைத்திருந்தார்கள். ஆகவே வேறு வழியில்லாமல் பொன்னம்பலம் பிள்ளையை வரவழைத்தார் அழகப்ப முதலியார். பிள்ளை அவர்களோ தமக்கு சங்கரன் கோயில் நயினார் காணாமல் போன விஷயம் தெரியும் என்றாலும் முதலியாரால் ஆகாததும் ஒன்று உண்டா என்ற எண்ணத்திலேயே பேசாமல் இருந்ததாகச் சொன்னார். விரைவில் நாயகர் வந்துவிடுவார், சங்கரன் கோயிலில் போய்த் தரிசிக்கலாம் என எண்ணி இருந்ததாகவும் சொன்னார்.

அழகப்ப முதலியார் முழு விபரங்களையும் அவரிடம் கொடுத்தார். மேலும் நாயகர் இப்போது உத்தரகோச மங்கை கோயிலில் சேதுபதி ராஜாவின் பாதுகாவலில் பூரண வழிபாடுகளுடன் இருப்பதாகவும் கூறினார். திருநெல்வேலிச் சீமையின் கெளரவத்தைக் காக்கவேண்டும் என்றும் அதற்கு பொன்னம்பலம் பிள்ளைக்கும் பங்கு இருப்பதால் இந்தக் கைங்கரியத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் முதலியார். பொன்னம்பலம் பிள்ளையும் ஒத்துக் கொண்டார். ஆனால் உத்தரகோசமங்கையிலிருந்து எப்படிக் கொண்டு வருவது நாயகரை?? அங்கே யார் போகமுடியும்??? திருடிக் கொண்டு வருவதும் உசிதமாய்த் தெரியவில்லையே என்று கலங்கினார் முதலியார். பொன்னம்பலம் பிள்ளையோ அதைப் பற்றி எல்லாம் கவலை வேண்டாம் என்றும் அதை எல்லாம் தாம் பார்த்துக் கொள்வதாகவும் கூறிவிட்டுத் தமக்குச் சில தக்க மனிதர்களையும், தக்க பொருட்களையும் கொடுத்து உதவினால் போதுமானது என்றார். அங்கே இருந்த மற்ற ஸ்தானாதிபதிகளும் அரண்மனையின் வித்வான்களும் தாங்களும் இந்தக் கைங்கரியத்தில் பங்கு கொள்ள ஆசைப்படுவதாய்த் தெரிவிக்க அவர்களில் பொறுக்கி எடுத்த சிலரோடு கிளம்பினார் பொன்னம்பலம் பிள்ளை.

சேதுபதி மஹாராஜாவுக்கும் பொன்னம்பலம்பிள்ளை ஸ்தானாதிபதியாக இருக்கும் சொக்கம்பட்டி ஜமீனுக்கும் பகை இருந்து வந்தது. நீடித்த பகை. சொக்கம்பட்டித் தலைவரை அடக்க சேதுபதி பலமுறை முயன்றும் முடியவில்லை. இப்படி இருக்கையில் பொன்னம்பலம் பிள்ளை சேதுபதியின் ராஜ்யத்தில் உத்தரகோசமங்கைக் கோயிலில் பலத்த பாதுகாப்புகளுடன் வழிபாட்டில் இருக்கும் சங்கரன் கோயில் நாயகரை எப்படிக் கொண்டு வரப் போகிறார்?? அனைவருக்கும் கவலைதான். பொன்னம்பலம் பிள்ளையோ இவை எதையுமே நினைத்துப் பார்க்காதவர் போல, தம்முடன் வரும் மற்ற ஸ்தானாதிபதிகளோடும், வித்வான்களோடும் சில மேளக்காரர்களையும் கூட்டிக் கொண்டார். சில காவடிகளைத் தயார் நிலையில் ராமநாதபுரம் எல்லைக்கருகில் உள்ள ஊரில் முன்னேற்பாடாக வைக்கச் சொன்னார். அது போல் காவடி முன்னால் சென்றுவிட்டது. பொன்னம்பலம் பிள்ளை மற்றவர்களுடன் பின்னால் சென்றார். ராமநாதபுரம் எல்லையும் வந்தது. முன்னேற்பாட்டின்படி வைக்கப் பட்டிருந்த காவடியைப் பொன்னம்பலம் பிள்ளை எடுத்துக் கொண்டார். மேளக்காரர்களை நாதஸ்வரம் வாசிக்கச் சொன்னார். தவில்கள் முழங்கின. மற்ற வாத்தியக்காரர்கள் அவரவர் வாத்தியங்களை முழக்கச் சொன்னார். பழநிக்குப் பாத யாத்திரை செல்பவர்கள் போல் மற்றவர்கள் அனைவரையும் தயார் செய்தார். தாம் அந்தக் காவடியை எடுத்துக் கொண்டார். ஆவேசம் வந்தாற்போல், "வேலனுக்கு அரோஹரா! கந்தனுக்கு அரோஹரா! அரோஹராண்டி, பழநியாண்டி, அவன் போனாப் போறாண்டி, போனாப் போறாண்டி, முருகன் தானா வராண்டி!” என்று பாடிய வண்ணம் காவடிகளை சுமந்து கொண்டு அனைவரும் நடக்க ஆரம்பித்தனர்.

காவடி சுமக்காத மற்றவர்கள் சேகண்டி அடித்துக் கொண்டும், பழங்களைச் சுமந்து கொண்டும், ஆங்காங்கே தேங்காய் உடைத்துக் கொண்டும், கோஷங்கள் இட்டுக் கொண்டும் வந்தனர். விபூதிப் பைகளில் இருந்து தாராளமாக விபூதி அள்ளி அள்ளிப் பூசப் பட்டது. கூட்டம் ராமநாதபுரத்து எல்லையைத் தொட்டது. சேதுபதி ராஜாவுக்குப் பழநி ஆண்டவரிடம் பக்தி அதிகம். அதிலும் பழநிக்குக் காவடி எடுத்துக் கால்நடையாகச் செல்கின்றவர்கள் ராமலிங்க விலாசத்துக்குள் அனுமதி இல்லாமலே நுழையலாம். நம் விருந்தினர் கூட்டம் ராமலிங்க விலாசத்தை நெருங்கியது. ஒரு ஜமீனை விட்டு மறு ஜமீனுக்குள் நுழைவதற்கே அனுமதி தேவைப்பட்டாலும் பழநிக்குக் காவடி எடுத்துச் செல்வோரை மட்டும் யாரும் தடை சொல்வதில்லை. இதை நன்கு அறிந்து வைத்திருந்த பொன்னம்பலம் பிள்ளை இவ்வாறு பழநியாண்டவர் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு இந்த முடிவை எடுத்திருந்தார். முருகனின் தாய், தந்தையர் அவரவர் வீட்டுக்குப் போய்ச் சேர அந்த முருகன் திருவருள்தான் துணை செய்யவேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். காவடியோடு வந்தவர்கள் என்னமோ நூறுபேர்தான். ஆனால் போகப் போக உள்ளூர் மக்கள் கூட்டமும் கூடிவிட்டது.

எல்லாருக்கும் பக்தி பிரவாகம் எடுத்து ஓட பெரிய பெரிய அரோஹரா கோஷத்தோடு நடந்து வந்து ராமநாதபுரம் அரண்மனையின் ராமலிங்க விலாசத்திற்குள் நுழைந்தது. அரசருக்குத் தகவல் போனது. இதுவரை இல்லாத அளவிற்கு பக்தியோடும், சிறப்பான முறையிலேயும் காவடி எடுத்துச் செல்லும் கூட்டம் ஒன்று வந்துள்ளது என்று அரண்மனை அலுவலர்கள் அரசரிடம் தெரிவித்தனர். சேதுபதி ராஜாவும் பழநி பாதயாத்திரை செல்பவர்களுக்குத் தக்க மரியாதைகளும், அவர்களிடமே பழநி ஆண்டவனுக்குக் காணிக்கைகளும் செலுத்துவது வழக்கம். ஆகவே தகுந்த ஏற்பாடுகளுடன் வந்திருப்போரை வரவேற்று மரியாதைகள் செய்யத் தயாரானார். கூட்டம் பெரிதாக இருந்த காரணத்தினால் காவடியுடன் வந்தவர்கள் மட்டுமே உள்ளே சென்றனர். காவடிக்கு மாலை, மரியாதைகள் செய்து வழிபாடுகள் நடத்தி தீப ஆராதனையும் காட்டப் பட்டது. மன்னர் கை குவித்து அனைவரையும் வணங்க, திடீரென மன்னரே எதிர்பாராவண்ணம் காவடி தூக்கும் ஒருவர் மன்னர் காலடியில் விழுந்தார். அவர் பொன்னம்பலம் பிள்ளை. காவடியை அருகிலிருந்த ஒருவரிடம் கொடுத்துவிட்டு சாஷ்டாங்கமாய் மன்னர் காலடியில் விழுந்து வணங்கினார்.

Geetha Sambasivam

unread,
Jan 9, 2010, 3:19:57 AM1/9/10
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)

Saturday, January 09, 2010

தாமிரபரணிக்கரையில் சிலநாட்களில் சங்கரன் கோயில்! புற்றெங்கே? புன்னை வனமெங்கே????

வந்திருந்த அடியாரில் ஒருவர் திடீரெனத் தன் காலில் விழுந்ததும் சேதுபதி மன்னர் திகைத்துப் போனார். வணங்கிய பொன்னம்பலத்தா பிள்ளை எழுந்தார். உடனேயே,

“சேதுபதியென்று நர சென்மமெடுத்த தாய் கமல
மாதுபதிக்குன்னையன்றி வாயாதே- நீதிபதி
நீயே விசயரகுநாதனினையீன்ற
தாயே யருட்கோசலை!”

என்று சேதுபதி அரசர் விசயரகுநாத சேதுபதியைக் குறித்து ஒரு பாடல் பாடினார். தாங்கள் யார் என விசாரித்தார் சேதுபதி அரசர். மேலும் ஏன் இந்தப் பாட்டைப் பாடி என்னைப் புகழ்கிறீர்கள் என்றும் கேட்டார். பொன்னம்பலத்தாபிள்ளை தம் சுய அறிமுகத்தைச் செய்து கொண்டார். சேதுபதி அரசரின் புகழைப் பற்றிக் கேள்விப் பட்டு அவரைத் தரிசிக்கும் ஆவலில் இருந்ததாகவும், பழநியாண்டவனின் அருளால் இன்று இது நிகழ்ந்ததாகவும் கூறினார். அரசருக்கு இவர் தான் பொன்னம்பலத்தா பிள்ளை என அறிந்தது ஒரு ஆச்சரியம் எனில் அவர் தம்மீது ஒரு பாடல் புனைந்ததும், அதில் தம் தாயைக் கோசலை என்ற பெயரில் விளித்ததும் மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் அரசரின் தாயின் பெயர் உண்மையிலும் கோசலை ஆகும். ஆனால் பொன்னம்பலத்தா பிள்ளையோ அதை அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை. அந்தப் பாடலில் அவர் சேதுபதி அரசரின் தாயைக் கோசலை என விளித்தது முற்றிலும் தற்செயலாகும். ராமரைப் பெற்றெடுத்த கோசலைக்கு நிகரானவள் என்ற புகழ்ச்சியான சொற்களுக்காகவே சொல்லி இருந்தார் பொன்னம்பலம் பிள்ளை. ஆனால் விஜய ரகுநாத சேதுபதி அரசருக்கோ ஆச்சரியத்திலும் ஆச்சரியம். தன் தாயின் பெயர் இந்தப் பொன்னம்பலத்தா பிள்ளை எவ்விதம் அறிந்தார்? உண்மையிலேயே இவர் மிகுந்த பக்திமானாகவும், சிறந்த கடாக்ஷம் நிறைந்த வித்வானாகவும் இருக்கிறார். அதனால்தான் அவருக்கு நம் அன்னையின் பெயரும் தெரிந்திருக்கிறது. மன்னரின் மனம் மிக மிக மகிழ்ந்தது. இவர் ஸ்தானாதிபதியாக இருக்க உண்மையிலேயே சொக்கம்பட்டி ஜமீன் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது என்றும் எண்ணிக் கொண்டார். பொன்னம்பலத்தா பிள்ளையோ, தம் மனதில் ஏதோ பட்டதால் சொன்னதாகக் கூறினார். அரசருக்கு அவரிடம் மேலும் மதிப்பு அதிகமாயிற்று.

அவரை அமரச் செய்து பேச யத்தனித்த மன்னனிடம் தம்முடன் வந்த அனைவருக்கும் அந்த மரியாதை கிட்டவேண்டும் என பொன்னம்பலத்தா பிள்ளை சொல்ல, அரசர் இன்னும் வியப்பில் ஆழ்ந்தார். இப்படிப்பட்ட ஒரு ஸ்தானாதிபதி இருந்தால் மக்களுக்கு எவ்வளவு மன நிறைவு என்ற எண்ணமும் ஏற்பட்டது மன்னருக்கு. பொன்னம்பலத்தா பிள்ளையுடன் வந்தவர்களில் முக்கியமான சிலருக்கு ஆசனம் அளிக்கச் செய்தார். அரசர்களுக்கு முன் சரியாசனத்தில் அமருவது என்பதே நடக்காத அக்காலகட்டத்தில் சேதுபதி அரசரோடு சரியாசனத்தில் பொன்னம்பலத்தா பிள்ளை அமர்ந்தார். இருவரும் சற்று நேரம் பொது விஷயங்களைப் பேசிக் கொண்டனர். சேதுபதி அரசருக்குப் பொன்னம்பலத்தா பிள்ளையின் அறிவாற்றல் வியப்பில் ஆழ்த்தியது. இவரைப் பற்றிக் கூறும் அனைத்தும் உண்மையே அன்றிக் கட்டுக்கதை அல்ல என்பதையும் புரிந்து கொண்டார். அவரைச் சில நாட்கள் அங்கே தங்கச் சொன்னார். இசைந்த பிள்ளையும் சிலநாட்கள் அங்கே தங்கிக் கொண்டு அங்கிருந்தே பழநிக்குப் போய் முருகனை மனமார வேண்டிக் கொண்டு மீண்டும் ராமநாதபுரம் வந்தார். பின்னர் தம்முடன் வந்தவர்களில் சிலரை மட்டும் இருக்கச் சொல்லிவிட்டு மற்றவர்களை அவரவர் இருப்பிடம் அனுப்பினார். தக்க தருணம் பார்த்துக்கொண்டு காத்திருந்தார்.

ஒருநாள் மன்னரிடம் பேசும்போது, “இந்த சமஸ்தானத்தின் பெரிய கோயில்களைத் தரிசிக்கத் தமக்கு ஆசை என்றும் முக்கியமாய் திரு உத்தரகோச மங்கையைத் தரிசிக்கவேண்டும் என்றும் மணிவாசகப் பெருமான் உருகி உருகிப் பாடிய பல திருப்பாடல்களையும் பாடி அந்தப் பெருமானை வழிபட ஆசை என்றும் தெரிவித்தார். மஹாராஜாவும் இசைந்து அரண்மனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு பொன்னம்பலத்தா பிள்ளையை திரு உத்தரகோச மங்கையை தரிசித்து வரும்படி அனுப்பி வைத்தார். பொன்னம்பலத்தா பிள்ளைக்கு மனம் படபடத்தது. தாம் மேற்கொண்ட கைங்கரியம் நல்லபடியாக முடியவேண்டும். அதற்கு அந்தப் பெருமானே உதவ வேண்டும். உண்மையில் உத்தரகோச மங்கையின் மற்ற மூர்த்தங்களை விட அங்கே தற்சமயம் குடி இருக்கும் சங்கரன் கோயில் நாயகரை அல்லவோ காணவேண்டும்? அதற்காகத் தானே தாம் வந்திருப்பது??? வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகக் கோயிலுக்குச் சென்றார் பொன்னம்பலத்தா பிள்ளை.

ஒவ்வொரு சந்நிதியாகத் தரிசனம் செய்தார். ஆலயக் குருக்களை ஒவ்வொரு மூர்த்தமாகச் சொல்லித் தரிசனம் செய்து வைக்குமாறும் மூர்த்தங்களின் சிறப்புகள், வரலாறு போன்றவற்றையும் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொண்டார். அவ்வாறே ஒவ்வொரு மூர்த்தமாகத் தரிசனம் செய்து வைக்கப் பட்டது. ஆயிற்று. இதோ, வந்தாயிற்று. இதோ, இதோ, இங்கே இருக்கிறாரே சங்கரன் கோயில் நாயகர். பொன்னம்பலத்தா பிள்ளை எதுவுமே தெரியாதது போல் ஒன்றுமே கேட்காமல் குருக்கள் முகத்தைப் பார்த்தார். குருக்களும், “இவர் சங்கரநயினார் கோயிலின் நாயகர்” என்று சொல்லி மூர்த்தத்தை அறிமுகம் செய்து வைத்தார். பொன்னம்பலத்தா பிள்ளையின் மனம், உடல், என அனைத்தும் பதறியது. என்றாலும் மனதைக் கட்டுப் படுத்திக்கொண்டே, “சங்கரன் நயினார் கோயிலின் நாயகரா? இங்கே எப்படி வந்தார்?” என்று மீண்டும் எதுவுமே தெரியாதது போல் கேட்டார். குருக்கள் விளக்கிச் சொன்னார். பொன்னம்பலத்தா பிள்ளையின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பெருகியது. ஒரு க்ஷணம் அந்த நாயகரை எடுத்துக் கொண்டு ஓடிவிடலாமா என்று கூடத் தோன்றியது. சீச்சீ, ஒரு அரசன் தம் அரசை இழந்துவிட்டு மாற்று நாட்டு அரசனின் கீழ் இருப்பது போலல்லவா நம் நாயகர் இங்கே வந்து இருக்கிறார்?? என்ன கொடுமை இது? அவருக்குரிய சிறப்புகளை எல்லாம் விட்டு விட்டு, இங்கே வந்துவிட்டாரே? ஐயனே, உனக்கே இது ஏற்புடையதாய் உள்ளதா?” அடுத்த கணம் அவர் எண்ணமெல்லாம் ஒரு அழகான தமிழ்ப்பாடலாக உருவெடுத்தது.

“புற்றெங்கே, புன்னை வனமெங்கே பொற்கோயிற்
சுற்றெங்கே நாக சுனையெங்கே – இத்தனையும்
சேரத்தாமங்கிருக்கத் தேவ நீதான்றனித்தித்
தூரத்தே வந்ததென்ன சொல்!”

Geetha Sambasivam

unread,
Jan 11, 2010, 4:00:54 AM1/11/10
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)

Monday, January 11, 2010

தாமிரபரணிக்கரையில் சில நாட்கள் - முடிவு!

மேற்கண்ட பாடலை முதல்முதல் விபரம் தெரியா வயசிலே படிக்கும்போதே என் கண்களில் கண்ணீர் வந்தது. இப்போ நன்கு புரிந்துகொண்டு படிக்கும்போது கண்ணீர் வரக் கேட்பானேன்! அதே நிலைமையில் தான் சிலருக்கும் இருக்கிறது என்பதும் புரிந்து கொண்டேன். இனி மேலே பார்ப்போமா??

பொன்னம்பலத்தா பிள்ளையின் கண்களில் இருந்து கண்ணீர் வெள்ளமாய்ப் பெருகி வந்தது. நெடுநேரம் அங்கேயே நின்று கொண்டு மனம் உருகிப் பாடிக்கொண்டிருந்ததையும், கோயில் நிர்வாகிகளும், அர்ச்சகர்களும் கண்டுகொண்டனர். பின்னர் ஒருவாறு சமாளித்துக் கொண்ட பிள்ளைவாள் மற்ற சந்நிதிகளையும் தரிசனம் செய்து முடித்துக்கொண்டு ராமநாதபுரம் போய்ச் சேர்ந்தார். அவர் கிளம்பும் முன்பே கிளம்பிய கோயில் அதிகாரி ஒருவர் ராமலிங்க விலாசத்தில் சேதுபதி மன்னரைக் கண்டு உத்தரகோச மங்கையில் நடந்த நிகழ்வுகளைச் சொல்லிவிட்டார். மன்னர் எதுவும் பேசவில்லை. பொன்னம்பலத்தா பிள்ளை திரும்பிவந்ததும், பிரயாணத்தின் செளகரியம், அசெளகரியம் பற்றி மன்னர் விசாரித்தார். பிரயாணம் வசதியாகவே இருந்ததாகவும், கோயிலிலும் தரிசனம் நன்கு கிட்டியதாகவும் பிள்ளைவாள் சொன்னார். சேதுபதி மன்னர் விடாமல், “தாங்கள் கவிஞராயிற்றே? அங்கே ஏதேனும் தோத்திரப் பாடல் புதிதாய்ப் புனைந்தீரா?” என்று பிள்ளையிடம் கேட்டார். பிள்ளை அவர்களின் மனதுக்குள் இது தான் தக்க சமயம், நம் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என்று தோன்றியது.

உடனேயே சாமர்த்தியமாய் மன்னரிடம், “அங்கே புதுசாய் வந்திருக்கிறாராமே ஒரு மூர்த்தி?? அவரைத் தரிசித்தேன். அப்போது அங்கே என் கேள்விகளை ஒரு செய்யுளாகச் சொன்னால், என்ன ஆச்சரியம்? அதற்கு விடையும் கிடைத்தது மற்றொரு செய்யுளாக.” என்று ஆச்சரியம் குறையாதவர் போல் சொன்னார். உண்மையில் இப்போது மன்னருக்குத் தான் ஆச்சரியம். “என்ன சொல்லுங்கள், உங்கள் கேள்வியாக எழுந்த செய்யுளையும், அதன் விடையாக வந்த செய்யுளையும் சொல்லுங்கள், கேட்கலாம்.” என்றார் மன்னர்.

பொன்னம்பலம் பிள்ளை, “புற்றெங்கே” என்று ஆரம்பித்துத் தான் பாடிய செய்யுளைச் சொன்னார். பின் எதுவுமே அறியாதவர் போல் இதன் விடையாகக் கிடைத்த செய்யுள் இது, என்று சொல்லிவிட்டு மற்றொரு செய்யுளைச் சொன்னார். அந்தச் செய்யுள்:

”விள்ளுவமோ சீராசை வீடுவிட்டுக் காடுதனில்
நள்ளிருளிற் செண்பகக்கண் நம்பியான் – மெள்ளவே
ஆடெடுக்குங் கள்வரைப் போலஞ்சாதெமைக் கரிசற்
காடுதொறு மேயிழுத்தக்கால்!”

சீராசை என்பது சங்கரநயினார் கோயிலைக்குறிக்கும்.

என்று சொல்லிவிட்டு நிறுத்தினார். மன்னர் முகத்தையே பார்த்தார். மன்னருக்குப் புரிந்துவிட்டது. சங்கரன் கோயில் நாயகர் உத்தரகோச மங்கைக்கு வந்த வரலாறைப் பிட்டுப் பிட்டு வைக்கிறார் பொன்னம்பலத்தா பிள்ளை என்பதைப் புரிந்து கொண்டார். மீண்டும் அந்த மூர்த்தம் சங்கரன் கோயிலையே போய்ச் சேரவேண்டும் என்ற தமது ஆசையையும் அவர் இந்த வெண்பா மூலம் வெளிப்படுத்தியதைப் புரிந்து கொண்டார். பிள்ளையைப் பார்த்து, “ மிகச் சாதுர்யமாக நடந்து கொண்டிருக்கிறீர்கள் பிள்ளை அவர்களே! பாராட்டுகிறேன். ஆனாலும் நாயகருக்கு இங்கே என்ன குறை?? கரிசற்காடாக இருந்தாலும் அவருக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. வேளா வேளைக்கு எல்லாம் நடந்தே வருகிறது. கரிசற்காட்டிற்கு வரும்போது அவஸ்தைப் பட்டார் போல! இப்போது செளகரியமாகவே உள்ளார்” என்று முடிக்கப் பார்த்தார்.

பிள்ளை அவர்களோ, “அரசே, உமக்குத் தெரியாதது இல்லை. அவரவர் இடத்தில் அவரவர் இருத்தலே சிறப்பன்றோ? சங்கரன் கோயில் நாயகரைத் திரும்ப அங்கேயே சேர்ப்பிப்பதே முறை” என்று மீண்டும் வேண்டினார். என்ன தோன்றிற்றோ அரசரும் திடீரென, “சரி, உம் விருப்பம் அதுவானால் அப்படியே செய்துவிடலாம்.” என்று சொன்னார். பொன்னம்பலத்தா பிள்ளையின் ஆனந்தம் சொல்லி முடியாது. அரசர் உத்தரவின் பேரில் தக்க உபசாரங்களுடனும், மரியாதைகளுடனும், கொடி, ஆலவட்டம், குடை போன்ற பரிவாரங்களுடனும் சங்கரன் கோயில் நாயகர் உத்தரகோசமங்கையிலிருந்து எழுந்தருளினார். அவருடன் தாமும் போவதாய்க் கூறி பொன்னம்பலத்தா பிள்ளை மன்னரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு மூர்த்தத்தைப் பின் தொடர்ந்து தாமும் சென்றார். முன்னால் ஒரு ஆளை அனுப்பி நாயகர் திரும்ப வருவதையும், சந்திக்கும் இடம் திருமங்கலம் என்றும் சொல்லி ஆறை அழகப்ப முதலியாருக்குச் செய்தி அனுப்பினார். முதலியாரும் மேள, தாளங்களுடனும், சிவாச்சாரியார்களுடனும், மற்ற முக்கிய உத்தியோகஸ்தர்களுடனும், தாமே நேரில் சென்று சங்கரன் கோயில் நாயகரை மட்டுமின்றிப் பொன்னம்பலத்தா பிள்ளையையும் எதிர்கொண்டு வரவேற்றார். கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகப் பிள்ளை அவர்களைத் தம் நிலையையும் மறந்து இறுகக் கட்டிக் கொண்டு வாய்விட்டு அழுதார் ஆறை அழகப்ப முதலியார். அனைவரும் நாயகரைத் தரிசித்து மனம் உருகிப் பிரார்த்தித்ததோடல்லாமல், விம்மி, விம்மியும் மெய்ம்மறந்தனர்.

பொன்னம்பலத்தா பிள்ளையை வாழ்த்தினார்கள் அனைவரும். நாயகர் மீண்டும் சங்கரன் கோயிலில் தம் யதாஸ்தானத்துக்கு எழுந்தருளினார். அதன் பின்னர் பொன்னம்பலத்தா பிள்ளையின் இந்தச் செயலால் கவரப்பட்ட ஆறை அழகப்ப முதலியார், அதிகாரி, ஏவலாளர் என்ற வேறுபாடின்றி அனைவரோடும் சுமுகமாய்ப் பழகவும் இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது. நாயகரும் தம் இடத்துக்கு வந்துவிட்டார். நம் கதையும் முடிஞ்சு போச்சு. கத்திரிக்காயும் காய்ச்சுடுத்து.

Geetha Sambasivam

unread,
Jan 11, 2010, 7:31:20 AM1/11/10
to namb...@googlegroups.com, இல்லம் (your HOME)
இந்தக் கதை நிகழ்வு, உ.வே.சாமிநாத ஐயரவர்களின் நினைவு மஞ்சரி பாகம் ஒண்ணில் பத்தொன்பதாம் அத்தியாயமாகக் கிடைக்கும், பழைய பதிப்புகளில். புதுப் பதிப்பில் நினைவு மஞ்சரி பாகம் இரண்டில் இருக்கு போல. கலைமகள் பத்திரிகை நாற்பதுகளில் வந்தப்போ இது தொடராக வ்ந்திருக்கு. நான் பள்ளி மாணவியாய் இருக்கும்போது முதல்லே படிச்சது கலைமகள் பழைய பத்திரிகைத் தொகுப்பிலே. அதுக்கப்புறம் நினைவு மஞ்சரி.

2010/1/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Raghavan

unread,
Jan 11, 2010, 7:32:17 AM1/11/10
to il...@googlegroups.com
அருமயான பதிவை தந்ததிற்ககு  நன்றி.

It  is  a  treasure  to be  preserved  and    read  many  times 
as  you  want.

அனபுடன்  ராகவன்வ


2010/1/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>


Geetha Sambasivam

unread,
Jan 11, 2010, 10:08:56 AM1/11/10
to il...@googlegroups.com
தொடர்ந்த தங்கள் பின்னூட்டங்களுக்கும்,ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

2010/1/11 Raghavan <raghava...@gmail.com>

Vridhachalempillay Subramaniam

unread,
Jan 23, 2010, 11:22:37 PM1/23/10
to il...@googlegroups.com
       இல்லம்  குழும நண்பர்களுக்கு  ஒரு பணிவான  வேண்டுகோள் :

                         ஜூன் மாதத்திலே  நடை பெறப் போகும்  செம்மொழி  மாநாட்டிற்கு  ஊ  வே  சுவாமிநாத  அய்யர் அவர்களின்  " ஏடு  தேடி  திறிந்த  வரலாற்றைப் பற்றி  சுவாரசியமான  நிகழ்வுகளை  கொடுத்து உதவினால்   மிக்க நன்றி  யுடையவனாய்  இருப்பேன் .

                                    விருத்தாசலம்பிள்ளை      சுப்ரமணியம்

2010/1/11 Geetha Sambasivam <geetha...@gmail.com>



--
Professor. VRIDHACHALEM  SUBRAMANIAM.

 AWAITING TO GREET YOU DURING THE

 WORLD CLASSICAL THAMIZH MEET-JUNE2010  @  COIMBATORE IN TAMIL NADU .   WELCOME  TO JOIN US !
Reply all
Reply to author
Forward
0 new messages