சீதையை மனமுவந்து ஏற்றுக் கொண்ட ராமரின் எதிரே பரமசிவன் காட்சி அளித்தார். ராமர் அயோத்திக்குத் திரும்பிச் சென்று இக்ஷ்வாகு குலப் பெருமையை நிலை நாட்டும் வண்ணம் அரசாட்சி செய்து பின் மேலுலகம் திரும்புவார் என்று, இப்போது ராமரைக் காண அவரது தந்தையான தசரதர் வந்திருப்பதாயும் சொல்கின்றார். ராமருக்கும், சீதைக்கும் தசரதர் காட்சி அளிக்கின்றார். ஆனால் இந்த நிகழ்ச்சிகளெல்லாம் ராமர், சீதை இருவரையும் தவிர கூடி இருந்த மற்றவர்கள் பார்த்ததாய் வால்மீகி சொல்லவில்லை. ஏதோ அதிசயம் ஒன்று நடக்கின்றது என்ற அளவில் மட்டுமே புரிந்து கொண்டதாய்ச் சொல்கின்றார். தசரதன் தன் அருமை மகன் ராமனை ஆரத் தழுவிக் கொண்டு தன் மகன் புருஷர்களில் உத்தமன் எனத் தான் உணர்ந்து கொண்டு விட்டதாய்ச் சொல்கின்றார். பதினான்கு வருட வனவாசமும் முடிவடையப் போகின்றதால் ராமர் சீக்கிரமாய் அயோத்திக்குத் திரும்பி ராஜ்யத்தை ஏற்றுக் கொண்டு ஈடு இணையற்ற வகையில் அரசாட்சி செய்து நீண்ட நெடுங்காலம் பெரும் புகழோடு வாழ்வார் எனவும் வாழ்த்துகின்றார் தசரதர். அப்போது ராமர் தன் தந்தையிடம், கைகேயியையும், பரதனையும் விலக்கிவிடுவதாய்ச் சொன்னதை மறந்து அவர்கள் இருவரையும் அந்தக் கடுமையான சாபத்தில் இருந்து விடுவிக்க வேண்டினார். தசரதரும் அவ்வாறே ஆகட்டும் என வாக்களித்தார்.
அக்னியில் இறங்கிய சீதையைப் பார்த்து அனைவரும் அலறிக் கதற ராமர் கண்களில் குளமாய்க் கண்ணீர் பெருகியது. ரிஷிகளும், தேவர்களும், கந்தர்வர்களும் பார்த்துப் பதறிக் கொண்டிருந்தனர். அப்போது ராமரின் எதிரில் எமன், குபேரன், பித்ரு தேவர்கள், இந்திரன், வருணன், பிரம்மா போன்றோர் பரமசிவனுடன் அங்கே தோன்றினார்கள். ராமரைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்கள் அவர்கள். "ராமா, நீ யார் என்பதை மறந்துவிட்டாயோ??? அனைத்துக்கும் நீயே அதிபதி! நீ எவ்வாறு சீதை அக்னியில் பிரவேசிப்பதைப் பார்த்துச் சகித்துக் கொண்டு இருக்கின்றாய்?? ஆரம்பமும், நீயே! நடுவிலும் நீயே! முடிவிலும் நீயே! அனைத்தும் அறிந்தவன் நீ! காரண, காரியங்களை அறிந்தவன் நீ! நீயே ஒரு சாமானிய மனிதன் போல் இப்படி சீதையை அலட்சியமாய் நடத்தலாமா?" என்று கேட்க, ராமரோ அவர்களைப் பார்த்துச் சற்றே குழப்பத்துடன், "நான் தசரதச் சக்கரவர்த்தியின் மகன் ராமன் என்பதாய்த் தான் என்னை அறிந்திருக்கின்றேன். படைக்கும் கடவுளான பிரம்மனே! உண்மையில் நான் யார்? எங்கிருந்து, எதன் பொருட்டு வந்தேன்?" என்று கேட்கின்றார்.பிரம்மா சொல்கின்றார். "ராமா, நீயே ஆரம்பம், நீயே முடிவு, நீயே நடுவில் இருப்பவனும் ஆவாய்! படைப்பவனும் நீயே, காப்பவனும் நீயே, அழிப்பவனும் நீயே! இயக்கமும் நீயே! இயங்காமையும் உன்னாலேயே! அகில உலகமும் உன்னாலேயே இயங்குகின்றது. கையில் சங்கு, சக்ரத்தை ஏந்திய மகாவிஷ்ணு நீயே! அனைத்து உலகத்து மாந்தர்களின் விதியும் நீயே! நீயே கண்ணன், நீயே பலராமன், நீயே கார்த்திகேயன் என்னும் ஸ்கந்தன்! ஆற்றலும் நீயே, அடங்குவதும் உன்னாலேயே! வேதங்கள் நீயே! "ஓ"ங்கார சொரூபமும் நீயே! அனைவரையும் பாதுகாப்பவனும் நீயே!அழிப்பவனும் நீயே! நீ இல்லாத இடமே இல்லை. அனைத்து உயிர்களிலும் நீயே நிறைந்திருக்கின்றாய்! நீ எப்போது, எங்கே, என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என யாராலும் அறிய முடியாதது, இந்த பூமியிலும், மண்ணிலும், செடி, கொடிகளிலும், மலரும் பூக்களிலும், மலராத மொட்டுக்களிலும், விண்ணிலும், காற்றிலும், மேகங்களிலும், இடி, மின்னலிலும், மழை பொழிவதிலும், மலைகளிலும், சமுத்திரங்களின் நீரிலும், ஆற்றுப் பெருக்கிலும், மிருகங்களின் உயிர்களிலும், மனித உயிர்களிலும், இன்னும் தேவாசுர உயிர்களிலும் அனைத்திலும் நிறைந்திருப்பவன் நீயே! அனைத்துக்கும் ஆதாரம் நீயே! சூரிய, சந்திரர்கள் உன் கண்கள். நீ உன் கண்ணை மூடினால் இரவு. திறந்தால் பகல். உன் கோபம் நெருப்பை ஒத்தது என்றால் உன் சாந்தமே சந்திரன் ஆவான். உன் பொறுமை, உறுதி பூமி எனின் உன் இதயம் பிரம்மாவாகிய நான் ஆவேன், உன் நாவில் சரஸ்வதி இருக்கின்றாள். நீயே மூவுலகையும் ஆளும் அந்த மகாவிஷ்ணு ஆவாய்! சீதையே உன்னுடைய தேவி ஆன மகாலட்சுமி ஆவாள்." என்று சொல்கின்றார் பிரம்மா. வால்மீகி ராமாயணத்தில் இந்தக் குறிப்பிட்ட கட்டம், பிரம்மா ராமரைப் பார்த்துச் சொல்லுவது ஒரு ஸ்லோகமாகவே இருக்கின்றது. இதைப் பாராயணம் செய்பவர்கள் இருக்கின்றனர். கூடிய சீக்கிரம் பாராயணம் செய்ய வசதியாக அந்த ஸ்லோகத்தை எடுத்து போட முயலுகின்றேன்.
அப்போது அக்னியில் இருந்து அக்னிதேவன், தன் கரங்களில் சீதையைத் தாங்கியவண்ணம் எழுந்தான். சீதையோ அன்றலர்ந்த மலர் போல் அக்னியில் இறங்கும்போது எவ்வாறு சர்வாலங்கார பூஷிதையாகக் காணப் பட்டாளோ அவ்வாறே சற்றும் மெருகு குன்றாமல் காணப்பட்டாள். அக்னி தேவனோ ராமனிடம், "ராமா, இதோ உன் அருமை மனைவி சீதை! அரக்கர்கள் கூட்டத்தில், அரக்கிகளின் காவலில் இருந்த சமயத்தில் கூட இவள் தன்னை இழக்கவில்லை. உன்னையே நினைத்திருந்தாள் அன்றோ??? இவள் தூய்மையானவள். இவளை ஏற்றுக் கொள்வாயாக. இதை என் உத்தரவாகச் சொல்லுகின்றேன்." என்று சொல்ல, ராமரும் மகிழ்வுடனேயே, அக்னியிடம், ராவணன் வீட்டில், அவனுடைய அசோகவனத்தில் பதினான்கு மாதங்கள் வாழ்ந்துவிட்ட சீதையை நான் தவறாய் நினைக்கவில்லை எனினும், இவ்வுலக மக்கள் மத்தியில் அவளுடைய தூய்மையை நிரூபிக்காமல் நான் ஏற்பது எங்கனம் முறையாகும்?? ஒரு அரசனாகக் கூடிய நான் பெண்ணாசையால் அவ்வாறு செய்தேன் என்று என்னைத் தூஷிப்பார்கள் அல்லவா?? என் மனது அறியும், என் மனைவி தூய்மையானவள் என்று. எனினும் அவளுடைய மேன்மையை உலகும் அறியவேண்டியே இவ்விதம் அவள் செய்யும்போது தடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியவன் ஆகிவிட்டேன். ராவணன் அவளை ஏதும் செய்திருக்க முடியாது என்பதும் எனக்குத் தெரியும். நெருப்பை ஒத்த என் மனைவியை நான் எவ்வாறு பிரிந்திருக்க முடியும்?" என்று சொல்லிவிட்டு சீதையை ஏற்றுக் கொள்கின்றார் ராமர்.
2008/7/16 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
அக்னிப்ரவேசம் சரியா தவறா?? - தொடர்ச்சி!பலரும் சீதை ஏன் மெய்யாலும் என்ற வார்த்தையை உபயோகிக்கவில்லை எனவே கேட்டுக் கொண்டிருக்கின்றனர். முக்கியமாய் வேந்தர் கேட்கின்றார். ஏனெனில் கம்பர் தன் ராமாயணத்தில் சீதையை ராவணன் கவர்ந்து சென்றதைப் பற்றி எழுதும்போது, தொட்டுத் தூக்கிச் சென்றதாய் எழுதவே இல்லை அல்லவா? அதை நாம் முன்பே பார்த்தோம். பர்ணசாலையோடு பெயர்த்து ராவணன் தூக்கிச் சென்றதாகவே கூறுகின்றார். அதிலும் ஒரு காத தூரம் பூமியைப் பெயர்த்து எடுத்து சீதையைத் தீண்டாமலேயே தூக்கிச் சென்றதாய்க் கூறுகின்றார் கம்பர். தீண்டாமல் தூக்கிச் சென்றிருக்கும்போது மெய்யால் என்று கம்பரால் எப்படி எழுத முடியும்? அப்புறம் அவர் முன்னம் எழுதியது தவறென ஆகாதோ?? ஆகவே அவர் அக்னிப்ரவேசத்தின்போது சீதை மனத்தினால், வாக்கினால் மறு உற்றேனெனின் என்று மட்டுமே கூறியதாய் எழுதிவிட்டார். மேலும் ராவணனுக்கோ வேதவதி மூலம் கிடைத்த சாபம் இருக்கிறது. அவன் எவ்வாறு சீதையை அவள் சம்மதம் இல்லாமல் தீண்ட முடியும்??? தொட்டுத் தூக்கிச் சென்றதைக் கம்பர் எழுதவில்லை எனினும், வால்மீகி எழுதி உள்ளார். அந்த அளவே தான் அவனால் முடியும். அதுவும் தலைமுடியைப் பிடித்தும், கையைப் பிடித்து இழுத்தும் தூக்கித் தன் தொடையில் இடுக்கிக் கொண்டு சென்றதாய் வால்மீகி கூறுகின்றார். இஷ்டமில்லாமல் இருக்கும் ஒரு பெண்ணை அந்த அளவுக்குக் கூடப் பலவந்தப் படுத்தித் தானே தூக்கிச் செல்லமுடியும்??? அதை வால்மீகி மறுக்கவில்லை, சீதையும் மறுக்கவில்லை, ராமரும் மறுக்கவில்லை, அதனாலேயே வால்மீகி மனதால், வாக்கால், காயத்தால் என்று சொல்லி இருக்கின்றார். தொட்டுத் தூக்கிச் சென்றதால் சீதையின் கற்பு போய்விட்டது என எவ்வாறு கூறமுடியும்???ஆகவே தான் தன் மேல் உள்ள நம்பிக்கையாலேயே சீதை தன் கணவன் தன்னை இவ்வாறு பேசும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்து கொண்டாள் என்றே சொல்லவேண்டும். அக்னி கூடத் தீண்ட அஞ்சும் அளவுக்கு சீதை பரிசுத்தமானவளே என்பதை ராமர் புரிந்து வைத்திருந்ததாலேயே சீதை அக்னிப்ரவேசம் செய்யத் தயார் ஆனபோது மறுக்கவில்லை, தடுக்கவில்லை. தன் மனைவி பரிசுத்தமானவளே என்பது தன் மனதுக்கு மட்டும் தெரிந்து தான் மனைவியைச் சேர்த்துக் கொண்டால், உலகிலுள்ளோர் பெண்ணாசையால் பீடிக்கப் பட்ட ராமன் பிறர் வீட்டில் மாதக் கணக்கில் இருந்தவளைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டுவிட்டானே எனப் பேசக் கூடாது என்ற எண்ணம் மட்டும் காரணம் இல்லை. தன் மனைவி தனக்கு வேண்டும், ஆனால் அதே சமயம் அவளைப் பிறர் குற்றம் காணாத வகையிலும் இருத்தல் நல்லது. என்று யோசித்தே ராமர் இந்த முடிவுக்கு வந்தார் எனவும் கூறலாம். ஏனெனில், இதே ராமர், சீதையுடன் சேருவதற்காக சீதையை அக்னிப்ரவேசம் செய்ய வைத்த அதே ராமர், பின்னால், இதே சீதையைத் துறக்கவும் போகின்றார். தன் நாட்டு மக்கள் பேசியதற்காக! ஒரு அரசனாய்த் தன் கடமையைச் செய்யப் போகின்றார். ஆங்கிலப் பழமொழி, "சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாய் இருத்தல் வேண்டும்" என்று சொல்லுவதுண்டு. இங்கே ராமரின் மனைவிக்கு அந்தக் கதி நேரிட்டிருக்கின்றது. மக்கள் மனதில் சந்தேகம் உதித்ததும், ராமர் உடனே மனைவியைத் துறக்கவும் தயாராகின்றார். அதையும் பார்ப்போம். இனி அக்னிப்ரவேசத்துக்கு அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்று நாளைக்குப் பார்ப்போமா???
2008/7/13 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
அக்னிப் ப்ரவேசத்துக்குத் தயார் ஆவது சீதைதான் என்றும், அவளே லட்சுமணனிடம் அக்னியை மூட்டும்படிச் சொல்லுகின்றாள் எனவும், ராமர் அதற்கு மறுப்புச் சொல்லாததில் இருந்து அவருக்கும் இது சம்மதமே எனவும், வால்மீகி எழுதி இருக்கின்றார். கம்பரும் அதை ஒட்டியே எழுதி இருக்கின்றார். எனினும் வால்மீகி, மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றையும் சீதை சொல்வதாய்ச் சுட்டிக் காட்டி இருக்கின்றார். ஆனால் கம்பர் இங்கே என்ன எழுதுகின்றார் எனில், மீட்சிப் படலம்: சீதையின் துயர நிலை: பாடல் எண்: 3976
கனத்தினால் கடந்த பூண் முலைய கைவளை
மனத்தினால் வாக்கினால் மறு உற்றேனெனின்
சினத்தினால் சுடுதியால் தீச் செல்வா என்றாள்
புனத் துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள்
என்று சொல்கின்றார். ஆனால் கம்பரோ எனில் சீதையை, ராவணன் தூக்கிச் செல்லும்போது, அந்தப் பர்ணசாலையையே பெயர்த்தெடுத்ததாய்த் தான் சொல்லுகின்றார். வால்மீகி, ராவணன் தொட்டுத் தூக்கித் தன் தொடையில் இடுக்கிக் கொண்டு சென்றதாகவே சொல்லிவிடுகின்றார். இவ்வாறு இருக்கும்போது வால்மீகி சொல்லும்போது, சீதை, மனம், வாக்கு, காயம் என்ற மூன்றையும் குறிப்பிட்டுச் சொல்லுவதாயே சொல்லுகின்றார். ஆனால் கம்பரோ எனில்,மனத்தினால்வாக்கினால் மறு உற்றேனெனின்என்று சீதை சொல்லுவதாய்ச் சொல்கின்றார். இந்த வாக்கே பெரும்பாலும் நம் தமிழறிந்த நல்லோர்களால் ஏற்கப் பட்டிருப்பதால் இது என்ன? இவ்வாறு சீதை சொல்லி இருப்பதால் உடலால் சீதை கெட்டிருப்பாள் என்றல்லவோ எண்ண நேரிடுகின்றது? என மனதுக்குள்ளாகவாவது எண்ணுகின்றனர் அல்லவா?
ஆனால் இந்தப் புதிரைத் தான் பேராசிரியர் அ.சீனிவாச ராகவன் அவர்கள் விடுவித்ததாய், நீதிபதி திரு மகாராஜன் கூறுகின்றார். அவர் கூறுவதாவது:
"சில ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் நடந்த இலக்கிய நிகழ்ச்சியில் அதுவரை விடுபடாத ஒரு புதிரை பேராசிரியர் அ. சீனிவாச ராகவன் அவர்கள் விடிவித்தார். அதுவரை பண்டிதமணி, சோமசுந்தரபாரதி போன்றவர்களால் கூடத் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட புதிர் அது. அக்னி பிரவேசத்தின்போது சீதை தீயை வலம் வந்து,
"மனத்தினால் வாக்கால், மறுவுற்றேனெனில்
சினத்தினால் சுடுதியால் தீச்செல்வா"
என்கின்றாள். அவள் ஏன் மெய்யால் என்று சொல்லவில்லை என்பதுதான் புதிர்.
If I have been sullied
In mind or speech,
Burn me, Oh, Fire-God,
With all thy ire"என்பது பேராசிரியரின் ஆங்கில ஆக்கம். விடை காண முடியாமல் அறிஞர்கள் திணறிய இந்தப் புதிருக்குத் தீர்வை அந்தக் கோயம்புத்தூர் நிகழ்ச்சியில் சொன்னார் பேராசிரியர்.
ஷேக்ஸ்பியரின் நாடகமான ஒதெல்லோவில் வில்லன் இயகோ ஒதெல்லோ மனதில் சந்தேகத்தைத் தோற்றுவித்து விடுகின்றான். அதைக் கேட்டுவிட்டு ஒதெல்லோ டெஸ்டிமோனோவைச் சொல்லத் தகாத வார்த்தையால் திட்டுகின்றான். அப்பொழுது ஒன்றும் தெரியாதவன் போல் இயாகோ வருகிறான். அவனிடம் டெஸ்டிமோனா கேட்கிறாள்:
எனக்கு அந்தப் பெயரா இயாகோ?"
எந்தப் பெயர் ராணி?"
இதோ இவள் சொல்கிறாளே நான் அது என்று அவர் சொன்னாரென்று
இதோ கீழே டெஸ்டிமோனாவின் வார்த்தைகளும், ஒதெல்லோ அவளைச் சொன்ன வார்த்தையும்.
Impudent strumpet!
DESDEMONA DESDEMONA
I cannot tell. Those that do teach young babes
Do it with gentle means and easy tasks:
He might have chid me so; for, in good faith,
I am a child to chiding.IAGO
What's the matter, lady?EMILIA
Alas, Iago, my lord hath so bewhored her.
Thrown such despite and heavy terms upon her,
As true hearts cannot bear.DESDEMONA
Am I that name, Iago?IAGO
What name, fair lady?DESDEMONA
Such as she says my lord did say I was.EMILIA
He call'd her whore: a beggar in his drink
Could not have laid such terms upon his callat.ஒதெல்லோ சொன்னதாகச் சொல்லப் படும் அந்தச் சொல்லைக் கூடச் சொல்லுவதற்கு டெஸ்டிமோனோவின் உயர்குடிப் பிறப்பும், அவளுடைய கற்பும் தடுக்கின்றது. சீதைக்கும் அதே நிலைமைதான். "மெய்" தூய்மை பற்றிய களங்கம் மக்களால் கற்பனை செய்து பார்க்க இயலும். கதை கட்டிவிடவும் முடியும். எனவே அதைச் சொல்லக் கூசுகின்றாள் சீதை. இந்தத் தீர்வை அங்கே இருந்த பேராசிரியர்கள் ஏற்றுக் கொண்டனர். இது இலந்தை ராமசாமி என்பவரால் எழுதப் பட்ட "இலக்கியச் சீனி அ.சீ.ரா. வாழ்வும், வாக்கும் என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்டது.
மேலும் சீதைக்கு ராமன் மனது தெரியாமலோ,ராமனுக்கு சீதையின் மனம் தெரியாமலோ, அல்லது அவள் கற்பிற் சிறந்தவள் எனத் தெரியாமலோ இல்லை. எனினும், உலகத்தார் கண் முன்னால் சீதை தன் கற்பை நிரூபிக்கவேண்டும் எனவே ராமன் விரும்பி இருக்கின்றான். சீதையும் தன் கணவனின் மனக் குறிப்பை அறிந்து அதை நிறைவேற்றத் துணிந்திருக்கிறாள். இதையே சீதை நெருப்பிலிருந்து மாசுபடாமல் வெளியே வந்தபோது ராமரும் தன்னிலை விளக்கமாயும் அளிக்கின்றார். எனினும் ஒரு மானுடனாகவே வாழ்ந்த ராமர் இந்த இடத்திலும் மானுடனாகவே, சாதாரண மனிதன் எவ்வாறு தன் மனைவியிடம் கோபத்துடனும், அதிகாரத்துடனும், கடுமையாகவும் நடப்பானோ அவ்வாறே நடந்து, தான் மனிதனாய் இருப்பதில் இருந்து சற்றும் மாறவில்லை என நிரூபித்திருக்கின்றார் என்றும் கொள்ளலாம்.
இலந்தை ராமசாமி எழுதிய இந்தப் புத்தகத்தின் மின்னாக்கத்தை எனக்குக் கொடுத்து உதவிய முத்தமிழ்க்குழும சகோதரருக்கும், ஒதெல்லோ நாடகப் பிரதியைக் கொடுத்து உதவிய முத்தமிழ்க் குழும சகோதரருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
2008/7/13 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
2008/7/10 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
"என்னுடைய விருப்பத்தைத் தெரிந்து கொள்ளாமல், நீ எப்படி தேரைத் திருப்பிக் கொண்டு வரலாம். என்னைக் கோழை என நினைத்தாயோ? அற்பமதி படைத்தவன் என நினைத்தாயோ??? உன் இஷ்டப் படி தேரைத் திருப்பிவிட்டாயே? தீயவனே! எதிரியின் கண் எதிரேயே என்னை இவ்வாறு இழிவு செய்த நீ எனக்கு எப்படி நண்பனும், ஊழியனும் ஆவாய்?? எப்படி இவ்வாறு செய்யத் துணிந்தாய்?? ஆஹா, என்னுடைய போர்த்திறனையும், இத்தனை காலமாய்ப் பல தவங்களும், விரதங்களும், வழிபாடுகளும், வேள்விகளும் நடத்தை நான் பெற்ற அனைத்துக் கெளரவங்களையும் இந்த ஒரு நொடியில் நாசமாக்கி விட்டாயே? முதலில் தேரைத் திருப்புவாயாக! என்னிடமிருந்து நீ பெற்ற நன்மைகளை மறந்துவிட்டாயா?? " என்று கடுமையாகக் கடிந்து கொள்கின்றான்.
தேரோட்டி மிக்க வணக்கத்துடன், "ஐயா, தங்களிடமிருந்து பெற்ற நன்மைகளை நான் மறந்து செய்ந்நன்றி கொன்றவன் ஆகிவிடவில்லை. எதிரிகள் யாரும் என்னை அவர்கள் பக்கம் இழுத்தும் விடவில்லை. தங்கள் நன்மைக்காக வேண்டியே நான் தேரைத் திருப்பவேண்டியதாயிற்று. மேலும் தாங்களும், கடும் யுத்தத்தின் காரணமாயும், மன உளைச்சல் காரணமாயும் களைத்துவிட்டீர்கள். தங்கள் தேரின் இந்தக் குதிரைகளும் களைத்துவிட்டன. உங்கள் வீரம் நான் அறியாத ஒன்றா?? நான் தேரை மட்டும் ஓட்டினால் சரியாகவும் இருக்காது ஐயா, தங்கள் பலம், வீரம் மட்டுமின்றி உங்கள் உடல் சோர்வு, மனச்சோர்வு அனைத்தையுமே நான் கவனித்தாகவேண்டும். உங்கள் உடல்நிலையோ, மனநிலையோ மேலும் யுத்தம் செய்யக் கூடிய தகுதியில் இருக்கின்றதா எனவும் நான் கவனிக்கவேண்டும். ஐயா, தேரைச் செலுத்தும் பூமியைக் கூட நான் கவனித்து, எங்கே வேகம் வேண்டுமோ, அங்கே வேகமாயும், எங்கே மெதுவாய்ச் செல்லவேண்டுமோ, அங்கே மெதுவாயும், எந்த இடத்தில் எதிரிப் படையை ஊடுருவ முடியுமோ அங்கே ஊடுருவதல் செய்தல் , எப்போது பின்வாங்க வேண்டுமோ அப்போது பின் வாங்குதல் என முறையாகச் செய்யவேண்டும் ஐயா! இதில் தங்கள் நலன் ஒன்றே என் கருத்து." என்று மிகவும் தயவாகச் சொல்கின்றான்.
ராவணன் மனம் ஒருவாறு மகிழ்ந்தது. தேரோட்டிக்கு அப்போது தன் கையில் இருந்த ஆபரணங்களில் ஒன்றைப் பரிசாக அளித்துவிட்டுத் தேரைத் திரும்ப யுத்த களத்திற்கு ஓட்டச் சொன்னான். தேரும் திரும்பியது. இதனிடையில் ராமரும் களைத்துப் போயிருந்தமையால், அவரும் சற்று இளைப்பாறுவதோடு அல்லாமல், ராவணனை வெல்வது எப்படி என்ற சிந்தனையும் செய்ய ஆரம்பித்தார். அப்போது இந்த யுத்தத்தைக் கவனித்துக் கொண்டிருந்த தேவர்கள், ரிஷிகள், முனிவர்களில் இருந்த சிறப்பும், தனிப் பெருமையும் வாய்ந்த அகத்தியர் ராமன் இருக்கும் இடம் நோக்கி வந்தார்.ராமரைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்."ராமா, என்றும் அழியாத ஒரு விஷயத்தைப் பற்றி நான் இப்போது உன்னிடம் கூறுகின்றேன். இந்தப் பூவுலகில் நிலையானவனும், அனைவரும் ஏற்கக் கூடியவனும், தினம் தவறாமல் தன் ஒளியால் அனைவரையும் வாழ்விப்பவனும், கண்ணால் காணக் கூடிய ஒரு கடவுளும், அழிவற்றவனும், அனைவராலும் தினம் தினம் வணங்கப் படுபவனும் அந்த சூரியன் ஒருவனே ஆவான்! அவனே பிரம்மா, அவனே விஷ்ணு, அவனே ருத்திரன், அவனே கார்த்திகேயன், அவனே ப்ரஜாபதி, அவனே இந்திரன், அவனே குபேரன்! காலனும் அவனே! சோமனும் அவனே! வருணனும் அவனே! வசுக்களும் அவனே, மருத்துக்களும் அவனே, பித்ருக்களும் அவனே! வாயுவும் அவனே, அக்னியும் அவனே, மனுவும் அவனே, பருவங்களும் அவனே, ஒளியும் அவனே, இருளும் அவனே, இந்த உலகின் ஒவ்வொரு மூச்சுக்காற்றிலும் அவனே நிறைந்துள்ளான். அப்படிப் பட்ட சூரியனைக் குறித்த இந்தத் துதியை உனக்கு நான் இப்போது சொல்கின்றேன். இந்தத் துதியை நீ மும்முறை தோத்தரித்து, அந்தச் சூரியனை வேண்டிக் கொண்டு, பிரார்த்தித்துக் கொண்டு ஒருமித்த மனத்தோடு சூரியனை வழிபட்டு, நீ ராவணனை வெல்வாய்! சக்தி வாய்ந்த இந்தத் துதி சாஸ்வதம் ஆனது, என்றும் நிலையானது, புனிதமானது. எல்லாப் பாவங்களையும் ஒழிக்கவல்லது. எதிரிகளை அழிக்கவல்லது." என்று சொல்லிவிட்டு "ஆதித்ய ஹ்ருதயம்"என்னும் ஸ்லோகத்தைச் சொல்லி விட்டு, அவ்விடத்தை விட்டு அகன்றார்.
அகஸ்தியரின் உபதேசத்தைக் கேட்ட ராமரும், அவ்வாறே மனக் குழப்பம் நீங்கி, ஆதித்திய ஹ்ருதயம் என்னும் ஸ்லோகத்தை மும்முறை, ஒரு மனதுடன் சூரியனை நோக்கித் துதிக்கவும், அவருடைய குழப்பமும், கலக்கமும் நீங்கித் தெளிவு பெற்றார். மீண்டும் யுத்தம் செய்யத் தயாராக வந்த ராவணனைப் பார்த்து அவனை வென்றே தீருவது என்ற மன உறுதியோடு ராமரும் மீண்டும் ராவணனோடு போருக்குத் தயார் ஆனார். அவருடைய மன உறுதியையும், தன்னை முழுமனத்தோடு துதித்ததையும் கண்ட சூரியனும் அவருக்கு "ஜெயம் உண்டாகட்டும்" என்று ஆசி வழங்கினான். சகுனங்களும் ராமருக்கு சாதகமாகவே சுபமாக ஏற்பட்டன. சகுன சாஸ்திரத்தில் வல்லவர்கள் ஆன அனைவரும் மட்டுமின்றி, ராமரும் சகுன சாஸ்திரத்தை அறிந்தவர் ஆதலால் அவரும் மனம் மகிழ்ந்தார். ராவணனுக்கு முடிவு நெருங்கிவிட்டது என்பதை ராவணனும் அறிந்திருந்தான். எனினும் தீரத்துடன் போரிட முன்வந்தான். கடும்போர் மூண்டது. அங்கே ராவணனின் தேரில் ரத்த மழை பொழிந்தது. பூமி நடுங்கியது. பறவைகள் இறந்து வீழ்ந்தன ராவணனின் தேரில். கழுகுகள் வட்டமிட்டன. அனைத்தையும் எதிர்கொண்டு ராவணன் ராமரோடு போரிட்டான். "அசுர குலத்தைச் சேர்ந்த ராவணனுக்கும், மனிதன் ஆன ராமனுக்கும் நடந்த பெரும்போரை வர்ணிக்க இயலாது. இரு தரப்பு வீரர்களும் தங்கள் சண்டையை நிறுத்திவிட்டு, ஓவியத்தில் எழுதிய சித்திரங்களைப் போல் அசையாமல் நின்று அவர்கள் இருவரின் சண்டையைப் பார்க்க ஆரம்பித்தனர். விண்ணிலோ எனில், தேவர்களும், யக்ஷர்களும், கந்தர்வர்களும், கின்னரர்களும், ரிஷி, முனிவர்களும் ஏற்கெனவே கூடி இருந்தனர். இந்திரனின் தேரை வீழ்த்த ராவணன் விடுத்த அஸ்திரம் பயனற்றுப் போய்விட்டது. கூடியவரையில் அம்புகள் குறிதவறாமல் போய் ராமரைக் காயப் படுத்தினாலும் பெரும் சேதம் ஒன்றும் நேரிடவில்லை. ராவணனால் ராமருக்கு சேதத்தை விளைவிக்க முடியவில்லை.தேரோட்டிகள் முழு மனதோடு ஒத்துழைக்க இருவருமே தீரத்துடனும், வேகத்துடனும் போரிட்டனர். போர் இன்னும் ஒரு முடிவுக்க வரவில்லையே என ரிஷி, முனிவர்கள் கவலையில் ஆழ்ந்தனர். ராவணன் கொல்லப் படவேண்டும், ராமர் ஜெயிக்கவேண்டும் என்ற பிரார்த்தனையில் மூழ்கினர் அனைவரும். ராமரும் தன் அம்பினால் ராவணனின் தலையை அறுத்து வீழ்த்துகின்றார். எனினும், என்ன ஆச்சரியம்?? அவன் தலை திரும்பத் திரும்ப முளைக்கின்றதே? ராமர் சிந்தனையில் ஆழ்ந்தார். கரன், தூஷணன், மாரீசன், விராதன், வாலி போன்றோரை வென்ற நம் அஸ்திரங்கள் ராவணனிடம் பயன் இல்லாமல் போவதேன்? எனினும் விடாமல் யுத்தம் செய்தார் ராமர். இரவும், வந்தது, யுத்தமும் தொடர்ந்தது. மீண்டும் பகல் வந்தது, மீண்டும் யுத்தம் நிற்காமல் தொடர்ந்தது. அப்போது இந்திரனின் தேரோட்டியான மாதலி, ராமரிடம், "இன்னும் எத்தனை நாட்கள் இவ்வாறு சமபலத்தைக் காட்டிக் கொண்டிருப்பீர்கள்? ராவணன் அழியும் நேரம் வந்துவிட்டது. பிரம்மா இதற்கெனத் தனியாகத் தங்களுக்கு அருளி இருக்கும் அஸ்திரத்தை ஏவ வேண்டிய நேரம் வந்துவிட்டது." எனக் கூறினான்-
பாரத்வாஜரும், "ராமா, மரவுரி தரித்துக் காட்டுக்குச் சென்ற போது உன் நிலை கண்டு மனம் நொந்த நான், இப்போது நீ எதிரிகளை வீழ்த்திவிட்டு வெற்றி வீரனாய் அயோத்திக்கு வந்திருப்பது கண்டு மிக்க மகிழ்வடைந்தேன். காட்டில் உனக்கு நேர்ந்தவைகள் அனைத்தையும் நான் அறிவேன். சீதை அபகரிக்கப் பட்டதும், நீ தேடி அலைந்ததும், சுக்ரீவன் உதவி பெற்றதும், சேதுவைக் கட்டியதும், கடல் தாண்டியதும், ராவணனை வீழ்த்தியதும், பின்னர் அனைத்துத் தேவாதி தேவர்களும் நேரில் வந்து உன்னை வாழ்த்தியதும், அனைத்தையும் என் தவ வலிமையால் நான் அறிந்து கொண்டே.ன். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேட்டுப் பெற்றுக் கொள்வாயாக!" என்று சொல்கின்றார். ராமர் வழியில் உள்ள மரங்களெல்லாம், பூத்துக் குலுங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள, பரத்வாஜரும் அவ்வாறே அருளினார்.
பின்னர் ராமர் அனுமனைப் பார்த்து, நீ விரைவில் சிருங்கவேரபுரம் சென்று அங்கே குகன் என்னும் என்னுடைய நண்பனைப் பார்த்து நாம் அனைவரும் நலம் எனவும் அயோத்தி திரும்புவதையும் சொல்லுவாய். அவனிடம் கேட்டு பரதன் இருக்குமிடம் தெரிந்து கொண்டு பரதனைப் பார்த்து அனைத்து விஷயங்களையும் எடுத்துச் சொல்லு.நாம் அயோத்தி திரும்புகின்றோம் வெற்றியோடும், சீதையோடும் என்பதையும் அவனுக்கு எடுத்துச் சொல்வாய். ஈசன் அருளால் எங்கள் தந்தை நேரில் வந்து எங்கள் அனைவரையும் வாழ்த்தியதையும் தெரிவி. விபீஷணன், சுக்ரீவனோடு மற்ற வானரங்கள் புடை சூழ நான் அயோத்தியை நெருங்கிக் கொண்டிருக்கின்றேன் என்றும் சொல்வாய் என அனுப்பி வைக்கிறார். பின்னர் அனுமனிடம் சொல்லுகின்றார்; இந்தச் செய்தியை நீ சொல்லும்போது பரதனின் முகபாவம் எப்படி உள்ளது என்பதையும் ஏதேனும் மாறுதல்கள் ஏற்படுகின்றதா என்பதையும் கண்டுவிட்டு எனக்குத் தெரிவிக்க வேண்டும். நான் திரும்புவது குறித்து உண்மையில் பரதன் என்ன நினைக்கின்றான் என்பது எனக்குத் தெரியவேண்டும். ராஜ்யத்தை இத்தனை வருஷங்கள் பரதன் நிர்வகித்து வந்திருக்கின்றான். என்ன இருந்தாலும் ராஜ்ய ஆசை யாரை விட்டது? அதிலும் இத்தனை சுகபோகங்களும், சகலவிதமான செளகரியங்களும், வசதிகளும் உள்ள ராஜ்யம் யாரைத் தான் கவராது??? ஒருவேளை பரதனுக்கு இத்தனை வருஷங்களில் இந்த ராஜ்யத்தின் மீது ஆசை ஏற்பட்டிருந்தால் அந்த ஆசையை நான் பூர்த்தி செய்ய வேண்டும் அல்லவா?? அது என் கடமை. என்று சொல்லி அனுப்புகின்றார் ராமர். அவ்வாறே அனுமனும் சென்று அயோத்தியை மிக மிக வேகமாய் அடைய வேண்டி விரைந்தார்.
அயோத்தியை மிக வேகமாய் அடைந்த அனுமன் அங்கே சிருங்கவேரபுரத்தில் குஹனைக் கண்டு, ராமரின் செய்தியைத் தெரிவித்துவிட்டுப் பின்னர் அங்கிருந்து விரைவாக நந்திகிராமத்தை அடைந்தார். அங்கே பரதன் தவக் கோலம் பூண்டு ராமரின் பாதுகைகளை வைத்து நேர்மையான, உண்மையான மந்திரி, பிரதானிகளுடன், மக்கள் தொண்டை உண்மையான மகேசன் சேவையாக நினைத்து ஆட்சி புரிந்து வந்திருப்பதைக் கண்டு, மகிழ்ச்சி கொண்டார் அனுமன். அயோத்தி மக்களும் தங்கள் அன்பை பரதன் பால் காட்டும்விதமாய், பரதன் அனைத்தையும் துறந்து வாழும்போது தாங்கள் மட்டும் மகிழ்வான விஷயங்களில் ஈடுபடுதல் நல்லதல்ல என இருந்தனர். இப்படி இருக்கும் நிலையில் அனுமன் போய்ச் சேர்ந்ததும், பரதனைக் கண்டு வணங்கி இரு கையும் கூப்பியவண்ணம் ராமனின் செய்தியைத் தெரிவித்தார். எந்த ராமரை நினைத்து வருந்தி, அவர் வரவைக் குறித்து ஏங்குகின்றீர்களோ அந்த ராமர் வருகின்றார். ராவணனைக் கொன்று சீதையை மீட்டு, நண்பர்கள், லட்சுமணன், மற்றும் வானரப் படைகளுடன் சகலவிதமான பெருமைகளையும் ஈட்டிய ராமர் வந்து கொண்டிருக்கின்றார் என்று அனுமன் தெரிவிக்கின்றான். செய்தி கேட்ட பரதன் ஆனந்தத்தில் மூர்ச்சை அடைந்தான். பின்னர் ஒருவாறு மூர்ச்சை தெளிந்து எழுந்து அனுமனைக் கட்டித் தழுவித் தன் ஆனந்தத்தை வெளிப்படுத்தினான். அனுமனிடம் ராமர் வந்து அரசை ஏற்றுக் கொள்ளப் போவது பற்றிய தன் ஆனந்தத்தையும் சொல்கின்றான் பரதன். அனுமன் அப்போது ராமர் அயோத்தியில் இருந்து கைகேயியின் வரங்களினால் தசரதச் சக்கரவர்த்தி ராமரைக் காட்டுக்கு அனுப்பியது முதல் அன்று வரை நடந்த அனைத்தையும் சொல்ல ஆரம்பித்துச் சொல்லி முடிக்கின்றார். ராமர் வந்து கொண்டு இருக்கின்றார் என்றும் சொல்லவே அயோத்தி நகரம் கொண்டாட்டங்களை ஆரம்பித்தது, பரதனின் மகிழ்வுக்கு எல்லை இல்லை.
>ராமர் வரப் போகும் செய்தி கேட்டு மகிழ்ந்த பரதன்,ராமரின் பாதுகைகளைத்தன் தலையில் தாங்கிய வண்ணம் பாதுகைகளுக்கு மேலே வெண்கொற்றக் குடையுடனேயே, மந்திரி, பிரதானிகளுடனும், சகலவிதமான மரியாதைகளுடனும் ராமரை எதிர்கொண்டழைக்கப் புறப்பட்டான். தாய்மார்கள் மூவரும் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தனர். கெளசலையின் தலைமையில் மூவரும் பல்லக்கில் அமர, சத்ருக்கனனோ ராமர் வரும் வழியெல்லாம் அலங்காரம் செய்யவேண்டிய பொறுப்பை ஏற்று, அதற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்யத் தொடங்கினான். அயோத்தி மக்கள் அனைவருக்கும் ராமர் திரும்பி வெற்றித் திருமகளுடனும், சீதையுடனும், லட்சுமணன் மற்றும் அனைத்து வீரர்களுடனும் வரும் செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்ததோடு அல்லாமல், அனைவருமே ராமரை எதிர்கொண்டு அழைக்க விரும்பி நந்திகிராமம் நோக்கிப் புறப்பட்டு வர ஆரம்பித்தனர். பொறுத்துப் பார்க்கக் கூடிய அளவு நேரம் கடந்தும் ராமரைக் காணாமல் பரதன் கலங்கி, ஒரு வானரத்தின் பொறுப்பற்ற பேச்சை நம்பினோமோ என எண்ணி, அனுமனை விசாரிக்கத் தொடங்கினான். அப்போது விண்ணில் பலத்த சப்தம் எழும்ப, புஷ்பகம் தோன்றியது. அதைப் பார்த்த அனுமன் அதோ அவர்கள் வருகின்றனர் என்று கூறிக் காட்ட பரதனும், மேலே பார்த்தான். ராமர், சீதை, லட்சுமணன், விபீஷணன், சுக்ரீவன் மற்றும் பலரும் அமர்ந்திருந்த புஷ்பகம் கண்ணில் பட்டதும், பரதன் தன் இருகையும் கூப்பிக் கொண்டு ராம்ரை நோக்கித் தொழுதவண்ணம் கண்ணில் நீர் பெருக நின்றான். புஷ்பகம் தரையில் இறங்கியது.
பரதன் புஷ்பகத்தால் தூக்கப் பட்டு, அதனுள் நுழைய, ராமர் அவனைக் கண்டு மகிழ்வோடு கட்டி அணைத்துத் தன் பாசத்தைத் தெரிவித்தார். பின்னர் லட்சுமணனோடு அளவளாவிவிட்டு பரதன் சீதைக்குத் தன் வணக்கங்களைத் தெரிவித்தான். அனைவரையும் பார்த்து ராமருக்கு உதவியதற்காகத் தன் நன்றியையும், ராமர் போலவே தானும், சத்ருக்கனனும் நட்போடு பழகுவோம் எனவும் தெரிவித்தான். சுக்ரீவனை நீ எங்கள் ஐந்தாவது சகோதரன் என்று கூறிய பரதன், விபீஷணனுக்கும் தன் நன்றியத் தெரிவித்தான். சத்ருக்கனனும் அவ்வாறே அனைவருக்கும் தன் மரியாதைகளையும், நன்றியையும் தெரிவிக்க, பதினான்கு வருஷம் கழித்துச் சந்திக்கும் தன் தாயை ராமர் வணங்கினார். பின்னர் சுமித்திரை, கைகேயி போன்றோருக்குத் தன் வணக்கங்களைத் தெரிவித்துவிட்டுப் பின்னர் வசிஷ்டரையும் வணங்கினார். பரதன் ராமரின் பாதுகைகளை அவர் காலடியில் வைத்துவிட்டு அவரை வணங்கி, அவரிடம் சொல்கின்றான்."நீங்கள் என்னிடம் ஒப்படைத்துவிட்டுப் போயிருந்த ராஜ்யத்தை நான் மீண்டும் தங்களிடம் ஒப்படைக்கின்றேன். உங்கள் அருளினாலும், உதவியினாலும் தானியக் கிடங்கும், பொக்கிஷமும் நிரம்பி வழிகின்றது. படை வீரர்கள், அரண்மனை, கிடங்குகள் போன்றவற்றைச் சரிபார்த்துக் கொள்ளும்படி வேண்டுகின்றேன்."
பின்னர் அனைவரும் நந்திகிராம ஆசிரமத்தை அடைந்தனர். ராமர் புஷ்பகம் குபேரனையே போய் அடையவேண்டும் என விரும்ப அவ்வாறே அந்த விமானம் மீண்டும் குபேரனையே போய்ச் சேர்ந்தது. பரதன் ராஜ்ய பாரத்தை ராமரை ஏற்கும்படி வேண்டினான். அயோத்தியின் உண்மையான அரசர் ஆன ராமர் இருக்கும்போது தான் இந்தச் சுமையைத் தாங்கமுடியாது எனவும் தெரிவிக்கின்றான். ராமருக்குப் பட்டாபிஷேகத்துக்கு ஏற்பாடுகள் ஆரம்பிக்கின்றன. ராமரின் சடைமுடி அவிழ்க்கப் பட்டு, ஒரு அரசனுக்குரிய அலங்காரங்கள் செய்யப் படுகின்றன. லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் கூட இருந்து உதவ, ராமரின் அலங்காரங்கள் நடக்கின்றன. சீதைக்கு கெளசலையின் மேற்பார்வையில் அரண்மனைப் பெண்டிரும், சுமித்திரை, கைகேயியும் உதவ அலங்காரங்கள் செய்கின்றனர். சுமந்திரர் வழக்கம்போல் அரசனின் தேரை ஓட்டி வர, ராமரும், சீதையும் அதில் அமர்ந்தனர். அனைவரும் பின் தொடர, நந்திகிராமத்தில் இருந்து அயோத்தியை வந்தடைந்தனர்.
துளசி ராமாயணத்தில் சீதை அக்னிப்ரவேசத்தில் அக்னியில் இறங்குவது மாயசீதை என்றும், மாயசீதை அக்னியில் இறங்கி மாயமாகிவிட்டதாயும், பின்னர் உண்மையான சீதை வெளியே வருவதாயும் சொல்லி இருக்கின்றார். அதே போல் உத்தர காண்டம் துளசிதாஸ் எழுதி இருப்பது வால்மீகியில் இருந்து மாறுபட்டே இருக்கின்றது. பொதுவாக ராமாயணத்தைப் பட்டாபிஷேகத்தோடு தான் முடிப்பார்கள். ராமருக்கு நேரிடும் துக்கத்தைத் தாங்கும் சக்தி இல்லை என்றோ என்னவோ தெரியவில்லை. ஆனால் நாம் முதலில் இருந்தே ஒரு மனிதனின் கதையாகவே பார்த்து வந்திருப்பதால், அந்த மனிதனுக்கு நேரிடும் அனைத்துத் துன்பங்களையும் பார்த்துவிடுவோமே!!
ராமர் அயோத்திக்குத் திரும்பும் வேளையில், பாரத்வாஜர் ஆசிரமத்தில் தங்க நேரிடுகின்றது. அதனால் ராமர் முன்னால் அனுமனை அனுப்பி, பரதனுக்குச் செய்தி சொல்லுமாறு கேட்டுக் கொள்கின்றார். ராமர் அயோத்தி வந்து சேரச் சற்றே தாமதம் நேரிட்டதாயும், அதைக் கண்ட பரதன், ராமர் எப்போது வருவார் என ஜோதிடர்களை அழைத்துக் கேட்டதாயும், அவர்கள் பதினான்கு வருடம் முடிந்து விட்ட காரணத்தால் ராமர் வர வேண்டும் என்று சொல்லியதாகவும் கம்பர் கூறுகின்றார். பின்னரும் ராமர் வந்து சேரவில்லை எனக் கலங்கிய பரதன் அதனால் உடல் நலம் கெட்டு மயங்கி விழுகின்றான். ராமருக்குத் தீங்கு நேரிட்டிருக்குமோ என அஞ்சுகின்றான். இல்லை, ராமன் எனக்கு ராஜ்யம் ஆள ஆசை வந்துவிட்டிருக்கும் இத்தனை வருடங்களில், அதனால் நானே ராஜ்யம் ஆள வேண்டும் என விட்டு விட்டானோ எனவும் எண்ணுகின்றான் பரதன்.
ராமரின் பட்டாபிஷேகம் முடிந்தது. அனைவருக்கும் பரிசுகள் அளிக்கப் பட்டு அனைத்துக் கொண்டாட்டங்களும் முடிந்து சில ஆண்டுகள். சீதை முதல் முதலாய்க் கருவுற்றாள். பட்டமகிஷி அல்லவா?? அனைவரின் மனமகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்? ராமரும் குதூகலத்தில் ஆழ்ந்தார். சீதையிடம் உனக்கு என்ன இஷ்டமோ அதை நிறைவேற்றித் தருவது என்னுடைய பொறுப்பாகும், என்ன வேண்டுமோ கேள், என்கின்றார். சீதையின் நாவில் இது என்ன??? சனி பகவான் வந்து உட்கார்ந்தானோ??? சீதை கேட்கின்றாள்: "கிழங்குகளையும், கனிகளையுமே உண்டு நாம் வாழ்ந்து வந்த அந்தக் காட்டு வாழ்வை மீண்டும் ஒருமுறை வாழ ஆசைப் படுகின்றேன். ரிஷி, முனிவர்களின் ஆசிரமத்தில் ஒரு நாளாவது அவர்களுடன் பொழுதைக் கழிக்க ஆசைப்படுகின்றேன்." என்று சொல்ல, ராமரும் அதை நிறைவேற்றித் தருவதாய்ச் சொல்கின்றார். அப்போது அவரைக் காண தூதர்கள் வந்திருப்பதாய்த் தகவல் வர, சீதையை அங்கேயே விட்டு விட்டு, ராமர் மட்டும், வந்திருப்பவர்களைக் கண்டு தன் அரசவைக் கடமையை நிறைவேற்றும் வண்ணம் சென்றார். அங்கே அறிவிலும், விவேகத்திலும், புத்தி சாதுரியத்திலும் சிறந்த பலர் அமர்ந்திருக்க பொதுவான பல விஷயங்கள் பேசப் பட்டன. பல முடிவுகள் எடுக்கப் பட்டன. அப்போது ராமர் அங்கே இருந்தவர்களில் குறிப்பாக பத்ரன் என்பவனைப் பார்த்து, "ஒரு அரசன் தன் கடமையைச் சரிவரச் செய்து வருகின்றானா என்பது பற்றிக் குடிமக்கள் பேசுவதன் மூலமே தெரிந்து கொள்ளலாம். நம் ராஜ்யத்தில் நீங்கள் சென்ற பகுதியில் உள்ள மக்கள் என்ன பேசிக் கொள்கின்றனர்?? குறிப்பாக என் அரசாட்சியைப் பற்றியும், என் தம்பிமார்கள் உதவியைப் பற்றியும், என் மனைவியும், பட்டமகிஷியுமான சீதையைப் பற்றியும் என்ன பேசிக் கொள்கின்றனர் என்பதை அறிய விரும்புகின்றேன்." என்று கேட்கின்றார்.
பத்ரன் முதலில் நாட்டு மக்கள் ராமரை மிகவும் புகழ்ந்து பேசுவதையும், அவரது வீரத்தைப் பாராட்டுவதையும் மட்டுமே சொன்னான். ஆனால் அவன் முழுதும் உண்மை பேசுகின்றானா என்பதில் சந்தேகம் வரவே ராமர் அவனைப் பார்த்து, "முழுதும் உண்மையைச் சொல்லுங்கள். குறைகள் ஏதேனும் என்னிடம் இருப்பதாய் மக்கள் பேசிக் கொண்டாலும் அவற்றையும் சொல்லுங்கள். அந்தக் குறையைக் களைந்துவிடுகின்றேன். மக்கள் மன மகிழ்ச்சியே ஒரு மன்னனுக்குத் தலையாய கடமை ஆகும்." என்று கேட்கின்றார். பத்ரன் உடனே இரு கைகளையும் கூப்பியவண்ணம், ராமரைப் பார்த்து வணங்கிக் கொண்டே, "அரசே, மக்கள் நீங்கள் கடல் மேல் பாலம் கட்டி கடல் கடந்தது பற்றியும், ராவணனை வெற்றி கொண்டது பற்றியும், சீதையை மீட்டது பற்றியும் புகழ்ந்தே பேசுகின்றனர். உங்கள் அரசாட்சியிலும் யாதொரு குறையையும் அவர்கள் காணவில்லை. ஆனால் ராமருக்குப் பெண்ணாசை அதிகம் ஆகிவிட்டது. அதன் காரணமாகவே, ராவணனால் பலவந்தமாய் அபகரிக்கப் பட்டு, அவனால் மடியில் அமர்த்தப் பட்டு இலங்கைக்குக் கொண்டு சென்று அங்கே ராட்சதர்களின் காவலின் கீழ் அசோகவனத்தில் வைக்கப் பட்ட சீதையை ராமர் மீண்டும் சேர்த்துக் கொண்டு குடும்பம் நடத்துவாரா? எவ்வாறு சீதையை மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம்?? நம் நாட்டு அரசனே இவ்வாறு இருந்தால் பின்னர் நாம் என்ன செய்வது?? நம் மனைவிமார்களும் இவ்வாறு நடந்து கொண்டால், இனி நாமும் அதைச் சகித்துக் கொண்டு வாழவேண்டுமே?? "யதா, ராஜா!, ததா ப்ரஜா!" {"அரசன் எவ்வழி, அவ்வழி குடிமக்கள்"} என்று தானே சொல்கின்றனர்?" என்று பல இடங்களிலும், கிராம மக்கள் கூடப் பேசுகின்றனர். " என்று இவ்விதம் பத்ரன் ராமரிடம் சொன்னான்.
ராமர் மனம் நொந்து மற்றவர்களைப் பார்த்து இதன் முழு விபரமும் உங்களில் யாருக்குத் தெரியும் எனக் கேட்க, அனைவரும் பத்ரன் சொல்வது உண்மையே எனவும், பல இடங்களிலும் மக்கள் இவ்வாறே பேசிக் கொள்வதாயும், வேதனையுடனேயே உறுதி செய்தனர். ராமர் உடனேயே முகவாட்டத்துடனும், நிலைகுலைந்த தோற்றத்துடனும், தன் தம்பிகளை அழைத்து ஆலோசனை செய்தார். வந்த தம்பிகள் மூவருக்கும் ராமரின் தோற்றம் அதிர்ச்சியைக் கொடுத்தது. சீதையைப் பிரிந்து இருந்தபோது இருந்த தோற்றத்தை விட மோசமான தோற்றத்தில் காட்சி அளித்த ராமரைப் பார்த்த மூவரும், திடுக்கிட்டு நிற்க, தம்பிகளைப் பார்த்த ராமரின் கண்கள் அருவியாய் நீரைப் பொழிந்தது. கண்களில் கண்ணீருடனும், மனதில் வேதனையுடனும், தாங்க மாட்டாத துக்கத்துடனும், ராமர் சொல்கின்றார்:" என் அருமைச் செல்வங்களான தம்பிகளே! நீங்கள் மூவருமே எனக்குச் சொத்தைவிடப் பிரியமானவர்கள் ஆவீர்கள். எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்னையைக் கேளுங்கள்." என்று சொல்லிவிட்டு, ராமர் பத்ரன் கொண்டு வந்த செய்தியையும், மற்றவர்கள் அதை உறுதி செய்ததையும் கூறுகின்றார்.
"தம்பிகளே! நான் என்ன செய்வேன்??? நான் பிறந்ததோ புகழ் பெற்ற இக்ஷ்வாகு குலத்தில்! சீதை உதித்ததோ புகழ் பெற்ற ஜனகன் குலத்தில்! ராவணனால் அபகரிக்கப் பட்ட சீதையை மீட்டதும், உடனே அயோத்திக்கு அழைத்து வருதல் முறையில்லை என்றே அவள் மீது குற்றம் சொன்னேன். ஆனால் என் உள் மனதுக்குத் தெரியும், ஜானகி எந்தக் குற்றமும் அற்ற புனிதமானவள் என. எனினும், என் வேண்டுகோளை ஏற்று அவள் அக்னிப்ரவேசமும் செய்துவிட்டாளே??? வானவர்களாலும், தேவர்களாலும், அக்னியாலும் சீதை புனிதமானவள் என உறுதி செய்யப் பட்டிருக்க இப்போது இந்த ராஜ்யத்து மக்கள் இவ்விதம் பேசுகின்றார்கள் என்றால் என்ன செய்வேன் நான்???? இந்த அவதூறுப் பேச்சு ஒரு தீ போல் பரவுகின்றது என நினைக்கின்றேன். ஒரு அரசன் என்ற முறையில் நான் அதைத் தடுக்க வேண்டும்.நாட்டு மக்களை இந்த அவதூற்றைப் பரப்பா வண்ணம் தடுக்க வேண்டும். என்னுடைய குடிமக்களின் நலனுக்காக நான் என் உயிரையும் கொடுத்தாகவேண்டும். இன்னும் சொல்லப் போனால் என் உயிரினும் மேலாக நான் நினைக்கும் உங்களையும் நான் தியாகம் செய்ய வேண்டி இருக்கும். அவ்வாறிருக்கும்போது சீதையை மட்டும் நான் எவ்வாறு அந்தப்புரத்தில் வைத்திருக்க முடியும்??? சீதையை நான் தியாகம் செய்தே ஆகவேண்டும். ஒரு அரசன் என்ற முறையில் நாட்டு மக்களுக்கு வந்திருக்கும் இந்த சந்தேகத்தை நான் போக்கியே ஆகவேண்டும். ஆகவே லட்சுமணா! சீதையை நீ உடனேயே ரதத்தில் வைத்து அழைத்துச் சென்று கங்கைக்கு மறுகரையில் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தின் அருகே விட்டுவிட்டு வந்துவிடு. துன்பம் என்னும் கடலில் நான் மூழ்கியே ஆகவேண்டும் என்ற விதியோ இது??? வேண்டாம், வேண்டாம், லட்சுமணா, உன்னிடம் நான் மறுமொழி எதுவும் கேட்கவில்லை! நீ எதுவும் பேசவேண்டாம்! நான் சொன்னதைச் செய்து முடி! அது போதும்! என் அருமைச் சகோதரர்களே, இவ்விஷயத்தில் எந்த சமாதானமும் நீங்கள் எனக்குச் செய்ய வேண்டாம்.
மேலும் சீதையே காட்டுக்குச் செல்ல ஆசைப் பட்டாள். ஆகவே லட்சுமணா, சீதையை உடனேயே அழைத்துச் சென்று கங்கையின் மறுகரையில் விட்டுவிட்டு வா! சுமந்திரரை ரதத்தைத் தயார் செய்யச் சொல்வாய்! இது என் ஆணை!" என்று கூறிவிட்டு ராமர் தனி அறைக்குச் சென்று விட்டார்.
லட்சுமணன் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பரதனும், சத்ருக்கனனும் திகைத்து நின்றனர்.
அக்னிப்ரவேசத்தோடு சீதையின் துயரம் முடியவில்லை. இப்போது மற்றொரு துயரம் அவளை ஆக்கிரமிக்கின்றது. மேலும் மேலும் சீதை படும் துயரங்களுக்குக் காரணம் என்ன?? அதை நாம் கதையின் ஆரம்பத்திலேயே பார்த்தோம் இல்லையா???
பொழுது விடிந்தது, மற்றவர்கள் அனைவருக்கும், ஆனால் சீதைக்கு இல்லை. எனினும் பேதையான சீதை இதை அறியமாட்டாள். அவள் எப்போதும்போல் மனமகிழ்வுடனேயே இருந்தாள். லட்சுமணன் ஆறாத்துயரத்துடன் சுமந்திரரிடம் சென்று, ரதம் தயார் செய்யும்படிக் கூறிவிட்டு, சீதையின் அந்தப்புரத்திற்குச் சென்று அவளை நமஸ்கரித்தான். பின்னர் அவளிடம், ராமர் அவளைக் கங்கைக் கரைக்கு அழைத்துச் செல்லுமாறு கட்டளை இட்டதாயும், தயார் ஆகி வருமாறும், ரதம் தயார் நிலையில் இருப்பதையும் தெரிவிக்கின்றான். சீதை மிக்க மகிழ்வோடு, ஒவ்வொரு ரிஷி பத்தினிகளுக்கும் அளிக்கும் வகையில் பல்வேறு விதமான பரிசுப் பொருட்களை எடுத்து வைத்துக் கொள்கின்றாள். மனதிற்குள், ஒரு இரவிலேயே தன் கணவன் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்தது பற்றிய பெருமிதத்துடனும், அநேகவிதமான பரிசுப் பொருட்களுடனும், சீதை ரதத்தில் ஏறி அமர்ந்தாள். அவள் நிலையைக் கண்ட லட்சுமணன் மிக்க வேதனை அடைந்தான். ரதம் கிளம்பியது. ராமர் மனதில் சூன்யம் சூழ்ந்ததுரதம் செல்லும்போதே சீதை லட்சுமணனிடம் தனக்கு ஏனோ மனதில் மிக்க வேதனை தோன்றுவதாயும், அபசகுனங்கள் தோன்றுவதாயும், வலது கண்ணும், வலது தோளும் துடிப்பதாயும் கூறுகின்றாள். மனதில் ஏதோ இனம் தெரியாத வெறுமை சூழ்வதாயும் சொல்லும் அவள், "லட்சுமணா, உன்னுடைய அண்ணனுக்கு ஏதும் நேராமல் நலமாய் இருக்கவேண்டும், என் மாமியார்கள், நலமாய் இருக்கவேண்டும், மற்ற இரு மைத்துனர்களும், உங்கள் மூவரின் மனைவிமாரும், என் சகோதரிகளும் நலமாய் இருக்க வேண்டும், இதற்காக ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்." என்று கூறினாள். லட்சுமணன் அவளுடைய பரிசுத்தமான உள்ளத்தை மனதில் போற்றிய வண்ணம், சற்று நேரத்தில் தனக்கு நேரப் போகும் துக்கத்தை உணராமல் மற்றவர்கள் கஷ்டப் படுவார்களோ என எண்ணித் தவிக்கும் அவளைத் தேற்றினான். ரதம் கங்கைக் கரையை அடைந்தது. கீழே இறங்கி ஓய்வெடுத்துக் கொண்ட போது, துயரத்தை அடக்க முடியாமல் லட்சுமணன் "ஓ"வென வாய்விட்டுக் கதறி அழுதான். பேதையும், மனதில் கூடத் தனக்கு நேரிடப் போகும் அளவிட முடியாத இழப்பை நினைக்காதவளும் ஆன சீதை, ஒருவேளை ராமரை விட்டுச் சற்று நேரம் அதிகம் பிரிந்து இருப்பதாலேயே லட்சுமணன் துன்பப் படுகின்றான் என எண்ணி, அவனைத் தேற்றுகின்றாள். "நாம் அக்கரை சென்று அனைவரையும் பார்த்துவிட்டுப் பரிசுப் பொருட்களைக் கொடுத்துவிட்டுத் திரும்பி விடுவோமே? ஏன் கலங்குகின்றாய்? எனக்கும் ராமரைப் பிரிந்து அதிக நேரம் இருக்க முடியாது தான், லட்சுமணா, வெட்கத்தை விட்டுச் சொல்கின்றேன். நீ உன்னைத் தேற்றிக் கொள்வாய்!" என்று சொல்லவும், லட்சுமணன் படகு தயாராகிவிட்டதால் அக்கரைக்குச் செல்லலாம் எனக் கூறுகின்றான்.
அக்கரையைப் படகு அடைகின்றது. இருவரும் கீழே இறங்கியதும், லட்சுமணன் தன் இரு கைகளையும் கூப்பிய வண்ணம் சீதையை வலம் வந்தான். "தாய்க்கு நிகரானவளே! அனைவரும் ஏசப் போகும் ஒரு காரியத்தை என்னைச் செய்யும்படி என் அண்ணன் ஆணை! நீ எவ்வளவு பரிசுத்தமானவள் என்பதும், என் அண்ணனைத் தவிர மற்றொருவரை நினையாதவள் என்பதும் நான் அறிவேன். தயவு செய்து, தேவி, இந்தக் காரியத்தை நான் என் முழு மனதோடு செய்வதாய் நினைத்து விடாதீர்கள். காலம், காலத்துக்கும் எனக்கு நேரிடப் போகும் பழிச் சொல்லுக்கு நான் காரணம் இல்லை!" என்று வேண்டுகின்றான் சீதையிடம். சீதைக்கு இப்போது தான் சற்று மனக் கலக்கம் வருகின்றது. ஏதோ தனக்குச் சற்றும் உடன்பாடு இல்லாத ஒரு விஷயத்தை லட்சுமணன் இப்போது செய்யப் போகின்றான் என்பதை உணர்ந்தாள்.
"ஏதோ பெரும் சுமையை உள்ளத்தில் சுமந்திருக்கின்றாய் லட்சுமணா, அது என்ன? சொல்லிவிடு! மன்னரும், என் கணவரும் ஆன ஸ்ரீராமர் உன்னிடம் ஏதோ விரும்பத் தகாத காரியத்தைச் செய்யச் சொல்லி இருக்கின்றாரா?? சற்றும் மறைக்காமல் உள்ளது உள்ளபடிச் சொல்லிவிடு லட்சுமணா!" என்று சீதை கேட்க, லட்சுமணன், பத்ரனிடம் ராமர் கேட்டு அறிந்த செய்தியைக் கூறுகின்றான். மற்றவர்களும் அந்தச் செய்தியை உறுதி செய்ததையும், நாட்டு மக்கள் பேசுகின்ற அவதூறு காரணமாய், தேவர்களாலும், அக்னியாலும், போற்றப்பட்டு, வாழ்த்தப் பட்ட உங்களைக் காட்டில் விட்டுவிட்டு, ஆசிரமங்களுக்கு அருகில் அநாதை போல் விட்டுவிட்டு வருமாறு ராமர் என்னிடம் கூறி உள்ளார். ஆனால் தேவி, இதைச் சொல்ல அவர் எவ்வளவு வேதனைப் பட்டார் என்பதும், அவர் மனம் முற்றிலும் உடைந்துவிட்டது என்பதும் நான் அறிவேன். மனம் தளரவேண்டாம், தேவி, ரிஷி, முனிவர்கள் உங்களைக் கைவிட மாட்டார்கள். அதிலும் இங்கே ரிஷிகளில் மிக உயர்ந்தவரும்,எங்கள் தந்தையான தசரதரின் நண்பரும், ஆன வால்மீகியின் ஆசிரமம் உள்ளது. தாங்கள் விரும்பினால் அங்கேயே தங்கிக் கொள்ளலாம். ராமரை மனதில் நினைத்தவண்ணம் அந்த ஆசிரமத்தில் வாழுமாறு தங்களை மிகவும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்ரேன். உங்கள் சிறப்பு இன்னும் ஓங்கி ஒளி விட்டுப் பிரகாசிக்கவே இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கின்றது என நம்புகின்றேன்." என்றான் லட்சுமணன்" " சீதை அளவிடமுடியாத துயரத்துடன் கீழே வீழ்ந்தாள். கதறி அழுதாள். பின்னர் லட்சுமணனிடம் சொல்கின்றாள்.
"லட்சுமணா, ஒரு கணத்துக்கேனும், மனதாலும், உடலாலும், நன்னடத்தையில் இருந்து தவறாத எனக்கு இப்படிப் பட்ட துன்பங்கள் நேருமளவுக்கு நான் என்ன பாவம் செய்தேனோ??? என்னை பிரம்மதேவன் துன்பங்கள் அனுபவிப்பதற்கெனவே சிருஷ்டித்தானோ?? என் பதியைப் பிரிந்து ஆசிரமத்தில் தனிமையில் நான் வாழவும் வேண்டுமோ?? ஐயகோ! தற்கொலை செய்து கொள்வோமெனில் ராமரின் குலவாரிசு என் வயிற்றில் வளருகின்றதே! அதற்கும் முடியாதே!! ரிஷிகளிடம் நான் என்ன காரணத்தைச் சொல்லிக் கொண்டு ஆசிரமத்தில் தங்குவேன்? ஒன்றும் புரியவில்லையே! சரி, லட்சுமணா, நீ என்ன செய்ய முடியும்? மன்னரின் ஆணை அதுவானால் நீ திரும்பிச் செல்வாய்! ஆனால் மன்னருக்கு நான் தெரிவிக்க வேண்டிய செய்திகளைச் சொல்கின்றேன். அவற்றை மன்னரிடம் நான் கூறியதாய்க் கூறுவாய்!" என்று சொல்கின்றாள் சீதை.
தன்னிரு கைகளையும் கூப்பிய வண்ணம் சீதை சொல்லியதாவது:" லட்சுமணா, பாவியாகிய நான் மிகுந்த பாவம் செய்ததாலேயே இத்தகையதொரு தண்டனையை அனுபவிக்கின்றேன். என் மாமியார்கள் அனைவரிடமும், நான் அவர்களின் நலனைத் தவிர வேறொன்றையும் விரும்பவில்லை எனத் தெரிவிக்கவும். மன்னரிடம், நான் அவரைத் தவிர வேறொருவரை மனதிலும் நினைத்தவள் இல்லை என்பது அவருக்கே தெரியும் என்பதை அவருக்கு நினைவுபடுத்தவும். மேலும் மன்னரிடம் நான் சொன்னதாய் இதைச் சொல்வாய் லட்சுமணா! "அரசே! மக்களின் அவதூறுப் பேச்சைத் தாங்க முடியாமல் நீங்கள் என்னைத் துறந்திருக்கின்றீர்கள். இது அரசனின் கடமை என்பதை நான் புரிந்து கொண்டுள்ளேன். ஆனால் எனக்கு உங்களைத் தவிர, வேறு கதி இல்லை அரசே! ஒரு மனைவியாகவும், உங்கள் பட்டமகிஷியாகவும், உங்களுக்கு நேரும், அவதூறிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் மாபெரும் கடமை எனக்கும் உள்ளது. ஆகையால் இந்த அவதூறு உங்களைப் பாதிக்கும் என்று நீங்கள் கருதுவதால் நானும் உங்களை விட்டு விலகியே இருக்கின்றேன். உங்கள் மனதில் உங்கள் சகோதரர்களுக்கு நீங்கள் என்ன இடம் கொடுத்திருக்கின்றீர்களோ, அத்தகையதொரு இடம் குடிமக்களுக்கும் நீங்கள் கொடுத்து வருகின்றீர்கள் என்பதையும் நான் நன்கு அறிவேன்.
"என்னுடைய இந்த உடலும், உள்ளமும், நீங்கள் அருகாமையில் இல்லாததால் அடையப் போகும்,துன்பங்களைப் பற்றி நான் பொருட்படுத்தவில்லை. ஆனால், அரசே, மக்களுடைய இந்தக் குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை என்பதை மட்டும் நீங்கள் அறிந்து கொண்டிருக்கின்றீர்கள், அதை அவர்கள் உணரும் வகையில் தாங்கள் நடந்து கொள்வீர்கள் என்றும் நம்புகின்றேன். திருமணம் ஆன ஒரு பெண்ணுக்குக் கணவனே, குரு, தெய்வம் அனைத்தும் என்றாகிவிடுகின்றது. ஆகவே நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொண்டு தங்கள் கட்டளைப்படி நடப்பேன் என உறுதி அளிக்கின்றேன்." லட்சுமணா, இதை நீ நான் சொன்னதாய் ராமரிடம் கூறுவாயாக!"
"மேலும் லட்சுமணா, இதோ, என்னுடைய இந்த வயிற்றைப் பார், கர்ப்பிணி ஆகிவிட்ட நிலையில் தான், இன்னும் சில நாட்களில் குழந்தை பிறக்கப் போகின்றது என்னும் நிலைமையில் தான் நீ என்னைக் காட்டில் கொண்டு வந்து விட்டிருக்கின்றாய் என்பதையும் சற்றும் சந்தேகம் இல்லாமல் தெரிந்து கொள்வாய்!" என்று சொல்லிக் கொண்டே, சீதை தன் கர்ப்ப வயிற்றை லட்சுமணனுக்குத் தொட்டுக் காட்டினாள்.
லட்சுமணன் கதறினான். தலையைத் தரையில் மோதிக் கொண்டு அழுதான். " என் தாயே, நான் என்ன பாவம் செய்தேன்?? தங்கள் திருவடிகள் தவிர, மற்றவற்றைக் காணாத என் கண்கள், இன்று இந்தக் காட்சியைக் காணும்படி நேர்ந்ததா?? இதுவும் நான் செய்த பாவம் தான்! என்னால் இதைத் தாங்க முடியவில்லையே!" என்று கதறினான் லட்சுமணன். பின்னர் சீதையை நமஸ்கரித்து வலம், வந்து மீண்டும் படகில் ஏறிக் கங்கையைக் கடந்தான். அக்கரையில் சுமந்திரம் ரதத்துடன் காத்திருந்தார். இக்கரையில் நிர்க்கதியான சீதை செய்வதறியாது திகைத்து நின்றாள். அவள் படகைப் பார்த்த வண்ணமே நிற்க அக்கரையை அடைந்த லட்சுமணன், தேரில் ஏறிக் கொள்ளுவதும், தேர் கிளம்புவதும் கண்களில் பட்டது. மனதில் வெறுமை சூழ்ந்து கொள்ள சீதை துக்கம் தாங்க முடியாமல் பெரியதாக அலறி அழுதாள். காட்டில் கூவிக் கொண்டிருந்த குயில்களும், ஆடிக் கொண்டிருந்த மயில்களும், விளையாடிக் கொண்டிருந்த மற்ற விலங்கினங்களும் தங்கள் வேலையை நிறுத்தி விட்டு சீதை அழுவதைக் கவனித்ததோ என்று எண்ணும்படிக் காட்டில் சீதையின் அழுகுரல் தவிர வேறொன்றும் ஒலிக்கவில்லை.
காடே மெளனத்திலும், சோகத்திலும் ஆழ்ந்தது. ஆழ்ந்த அந்த மெளனத்தில், "ராமா, என்னை ஏன் பிரிந்தீர்?" என்ற சீதையின் கூவலும், ஓலமும் மட்டுமே கேட்டன. அருகாமையில் இருந்த வால்மீகியின் ஆசிரமத்தின் உள்ளே போய்த் தவத்திலும், வேள்வியிலும், தியானத்திலும் ஆழ்ந்து போயிருந்த ரிஷி, முனிவர்களின் நெஞ்சாழத்தைக் கசக்கிப் பிழிந்தது அந்த ஓலக் குரல். ரிஷிகளின் மகன்கள், நெஞ்சு பிளக்கும்படியான இந்தக் கதறலைக் கதறி அழும் பெண் யாரோ எனப் பார்க்க வேண்டி விரைந்து வந்தனர். அங்கே தேவேந்திரனின் இந்திராணியையும், அந்த ஈசனின் உமையவளையும் தோற்கடிக்கக் கூடிய அழகுடன் கூடிய ஒரு கர்ப்பிணிப் பெண்ணைக் கண்டனர். அழுதது அவள் தான் எனவும் தெரிந்து கொண்டனர். அவள் நிலையைக் கண்டு பரிதாபம் அடைந்து உடனேயே ஆசிரமத்தின் தலைவர் ஆன வால்மீகி ரிஷியை அடைந்து அவரிடம், "மிக மிக உயர்ந்த ஒரு பெண்மணி, ஒரு பேரரசனுக்குப் பட்ட மகிஷியோ என எண்ணும்படியான தோற்றம் உடையவள், சாட்சாத் அந்த மகாலட்சுமியே பூமிக்கு வந்துவிட்டாளோ என்று எண்ணும்படியாக இருப்பவள், அத்தகைய ஒரு மங்கையர்க்கரசி, நம் ஆசிரமத்தின் வாசலிலே நதிக்கரையிலே அழுது கொண்டு இருக்கின்றார். விண்ணிலிருந்து, மண்ணுக்கு வந்துவிட்ட தெய்வீகப் பெண்மணியோ என எண்ணுகின்றோம். அவர் சாதாரணப் பெண்ணாய்த் தோன்றவில்லை. என்றாலும் அவர் நிலைமை பரிதாபமாகவே உள்ளது." என்று சொல்கின்றனர்.
தன் தவவலிமையாலும், தியானங்கள் பல செய்தமையாலும், நடந்தது, நடப்பது, நடக்கப் போவது அனைத்தையும் அறிந்து கொள்ளும் திறன் படைத்த வால்மீகி ரிஷியானவர், ஆசிரமத்தின் வாயிலுக்கு வந்திருப்பது சாட்சாத் அந்த ஸ்ரீராமனின் மனைவியான சீதைதான் என அறிந்து கொள்கின்றார். சீதை இருக்குமிடம் நோக்கி வேகமாய்ச் செல்கின்றார். சீதையைப் பார்த்து ஆறுதல் மொழிகள் கூறுகின்றார்:"ஜனகரின் மகளும், தசரதரின் மருமகளும், ஸ்ரீராமனின் மனைவியுமான சீதையே, உனக்கு நல்வரவு! உன் துயரங்களைத் துடைத்துக் கொள்வாயாக! உன் கணவனிடம் நீ மாறாத விச்வாசமும், பேரன்பும் பூண்டவள் என்பதை நான் நன்கறிவேன். மாதரசியே! கலங்காதே! நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் நான் செய்த புண்ணியத்தின் காரணமாய் அறியப் பெற்றேன். உன் தூய்மையை நான் நன்கு அறிவேன், மாசற்றவளே! திருமகளுக்கு நிகரானவளே! நீ எந்தப் பாவமும் செய்யாதவள் என்பதையும் நான் நன்கறிவேன். இந்த ஆசிரமத்தில் ரிஷிகளின் பத்தினிமார்கள் வாழ்கின்றனர். அவர்கள் தவவழிகளை மேற்கொண்டவர்கள். உன்னைத் தங்கள் மகள் போல் கண்ணும், கருத்துமாய்ப் பாதுகாப்பார்கள். உனக்குத் தேவையான அனைத்தும் செய்து கொடுப்பார்கள். பெண்ணிற் சிறந்தவளே! உன்னுடைய பாதுகாவலனாக நான் பொறுப்பேற்கின்றேன். நீ என்னுடைய இந்த வார்த்தைகளை முழுமையாக ஏற்றுக் கொண்டு இந்த ஆசிரமத்தை உன்னுடைய வீடாக நினைத்துக் கொண்டு, வேறொருவர் பாதுகாவலில் இருக்கின்றோம் என எண்ணாமல், இங்கேயே தங்கி, உன் மனம் அமைதி பெறவும், உன்னை மன அமைதி பெறச் செய்வதின் மூலம் நாங்கள் மனமகிழ்வு எய்தவும் கருணை புரிவாய்!" என்று வேண்டுகின்றார்.
சீதையும் சம்மதிக்கவே, வால்மீகி அவளை அழைத்துச் சென்று, ஆசிரமத்தின் உள்ளே சென்று, மற்ற ரிஷிகளின் பத்தினிமார்களுக்கு சீதையை அறிமுகம் செய்து வைக்கின்றார். சீதையின் மனத் துன்பத்தையும், கணவனை விட்டு அவள் இங்கே வந்திருக்கும் காரணத்தையும் எடுத்துச் சொல்லி சீதை எந்தவிதத்திலும் துயர் அடையாமல் அவளைப் பாதுகாக்கவேண்டும் என்றும் தனக்குக் காட்டும் மரியாதைகள் போல் அதற்குச் சற்றும் குறைவில்லாமல் சீதையை மரியாதையுடன் நடத்த வேண்டும் எனவும் சொல்லிவிட்டு, அவள் தன் பாதுகாவலில் இருப்பதாயும் தெரிவித்துவிட்டுத் தன் தவத்திற்குத் திரும்பச் சென்றார் வால்மீகி.
இங்கே, லட்சுமணன் சுமந்திரர் தேரை ஓட்டத் தேரில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். அப்போது சுமந்திரரிடம் லட்சுமணன் பின்வருமாறு கேட்கின்றான்:"சீதையை ராமர் பிரிய நேர்ந்தது ஒரு கொடூரமான நிகழ்ச்சி, இதை விதி என்று சொல்லுவதா??? இந்த விதியில் இருந்து யாரும் தப்ப முடியாதா?? விதியின் செயலை யாராலும் மாற்ற முடியாதா? ராமரின் பலம் நாம் அறியாதது அல்ல. தேவர்கள், அசுரர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள் என அனைவரையும் தம் பலத்தால் அடக்கி, ஒடுக்கும் வல்லமை பெற்றவர். அப்படிப் பட்டவர் இப்போது குடிமக்களின் அவதூறுப் பேச்சால் தன் மனைவியை விலக்கவேண்டுமென்றால்??? சீதை காட்டில் வாசம் செய்தபோதையும் விட, ராவணன் வசம் சிறைப்பட்டிருந்ததையும் விட மிக, மிகக் கொடூரம் ஆன கடுமையான பிரிவு இது. இதைத் தாங்க இருவர் மனதும் எவ்வளவு கஷ்டம் அடைந்திருக்கும்??? நாட்டு மக்களின் அவதூறுக்காக சீதையைத் துறந்தது ராமருக்குப் பெரும் கஷ்டத்தையே தரக் கூடியது அல்லவா?? இதனால் அவருக்கு என்ன லாபம்??? நாட்டுமக்களுக்காக இத்தகையதொரு பெரும் தியாகத்தையும் அவர் செய்திருக்கவேண்டுமோ?" என்று சொல்கின்றான்.
சுமந்திரர் சற்று நேரம் ஒன்றும் பேசவில்லை. பின்னர் சற்று யோசித்துவிட்டுச் சொல்கின்றார். "இளவரசே! இப்போது இப்படி நடப்பதற்காக வருந்திப்பயன் ஏதும் இல்லை. இது இப்படித் தான், இவ்வாறுதான் நடக்கும் என்பதாக ஏற்கெனவே நிர்ணயிக்கப் பட்டுவிட்டது. ஜோதிடர்கள் கூறி இருக்கின்றனர். தன் மனைவியை மட்டுமில்லாமல், பிரியத்துக்கு உகந்த சகோதரர்கள் ஆன உங்களைக் கூட ராமர் பிரிய நேரிடும் என்றும் சொல்லி இருக்கின்றனர். ராமர் பிறந்தபோது ஜோதிடம் பார்த்த ஜோதிடர்கள், ராமர் தனக்கென எந்தவிதமான சுகம் நாடாமல், மகிழ்ச்சியை நாடாமல் மற்றவர்களுக்கெனவே வாழ்வார் எனச் சொல்லி இருக்கின்றனர். இது மட்டுமில்லை, இளவலே! ஒருமுறை துர்வாசர் வசிஷ்டரின் ஆசிரமத்திற்கு வந்தபோது, அவரைக் காண உங்கள் தகப்பனும், அயோத்தியின் அரசனும் ஆன தசரதச் சக்கரவர்த்தி வந்தார். அப்போது அவருடன் நானும் சென்றிருந்தேன். துர்வாசர் அப்போது உன் தகப்பனிடம் கூறிய செய்தி மிக மிக ரகசியம் ஆன செய்தி! மற்றவர்களுக்கு இதைத் தெரிவிக்கக் கூடாது என்று ஆணை இடப்பட்டது எனக்கு. எனினும் இப்போது நீ படும் துயரைக் காண முடியாமல் அந்த ஆணையை மீறி உனக்கு நான் இந்தச் செய்தியைச் சொல்கின்றேன் லட்சுமணா! இதைக் கேள்!" என்று சொல்ல ஆரம்பித்தார் சுமந்திரர்.
ஏற்கெனவேயே சொல்லிவிட்டோம், என்றாலும் மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நினைவு படுத்த நாளைக்கு அந்த நிகழ்வு!
சுமந்திரர் தொடர்ந்தார். தன்னுடைய மகன்களான ராமர், லட்சுமணன், பரதன் சத்ருக்கனன் ஆகிய நான்கு சகோதரர்களின் வாழ்க்கை எவ்வாறு அமையும் எனத் தெரிந்து கொள்ள விரும்பிய தசரத மன்னன் அதை துர்வாசரிடம் கேட்டார். அப்போது துர்வாசர் சொன்னார். "தசரத மன்னா, நன்கு கவனித்துக் கேட்பாய்! முன்னொரு காலத்தில் அசுரர்கள் பிருகு முனிவரின் ஆசிரமத்தை அடைந்து அங்கே அடைக்கலம் புகுந்தனர். பிருகு முனிவரின் மனைவியும் தன் கருணை உள்ளத்தால் அனைவருக்கும் அடைக்கலம் கொடுத்துக் காத்து வந்தார். அதை அறிந்த தேவர்கள் இதை மகாவிஷ்ணுவிடம் கூற அவரும் கோபம் அடைந்து, காப்பாற்றத் தகுதி இல்லாத அசுரர்களைக் காப்பாற்றியதற்காக பிருகுவின் மனைவியின் தலையைத் தன் சுதர்சனச் சக்கரத்தால் அறுத்துத் தள்ளிவிட்டார். மனைவியை மகாவிஷ்ணுவே கொன்றதைக் கண்ட பிருகு முனிவர் தன் நிலை மறந்து, தன்னை இழந்து, தன் மனைவியை இழந்தோமே என்ற பெரும் துயரத்தில் மகாவிஷ்ணுவைப் பார்த்து, "கோபத்தினால் நிதானம் இழந்து, எந்தவிதமான பாவமும் செய்யாமல் நிரபராதியான என் மனைவியைக் கொன்ற நீர், பாவங்களைப் போக்கும் வல்லமை படைத்தவர். உம்மை நான் சபிக்கின்றேன், வல்லமை படைத்தவரே! நீரும் என் போன்ற ஒரு மனிதனாய்ப் பிறந்து, உன் அருமை மனைவியை இழந்து, துயருற்று, மனைவியைக் கட்டாயமாய்த் துறந்து, நீண்டகாலம் அந்த மனவேதனையுடனேயே வாழ்வீராக!" என்று பிருகு முனிவர் விஷ்ணுவிற்குச் சாபம் கொடுக்கின்றார்.
எனினும் பிருகு முனிவருக்கு, மகாவிஷ்ணுவிற்கே சாபம் கொடுக்க நேரிட்டதை நினைத்து மிகுந்த மனக்கிலேசமும், சங்கடமும் ஏற்பட்டது. செய்வதறியாது, பித்தன் போல் கலங்கினார். ஆனால் விஷ்ணுவோ அவரைச் சமாதானம் செய்தார். வேறொரு காரணத்திற்காகத் தான் மனித அவதாரம் எடுக்கவேண்டும் எனவும், பிருகுவின் சாபத்தைத் தான் ஏற்பதாயும், அந்த அவதாரத்தில் முழு மனிதனாகவே தாம் வாழப் போவதாயும், ஆகவே பிருகு முனிவர் கலங்கவேண்டாம் எனவும் இதனால் உலகுக்கு நன்மையே ஏற்படும் எனவும் சொல்லித் தேற்றுகின்றார். தசரதா! இப்போது உனக்குப் பிறந்துள்ள இந்த ஸ்ரீராமன் அந்த சாட்சாத் மகாவிஷ்ணுவின் அவதாரமே எனப் புரிந்து கொள்வாயாக! இவர் அனைத்தையும் துறந்து நல்லாட்சி புரிந்து, நீண்டநாட்கள் வாழ்ந்து மக்களுக்குத் தொண்டுகள் பல புரிந்து, பின் தன் மனைவியான சீதையின் மூலம் பிறந்த மக்களுக்கு ஆட்சியைப் பகிர்ந்தளித்துவிட்டு மேலுலகம் செல்லுவார்." என்று கூறினார். ஆகவே லட்சுமணா, ராமர் சீதையைப் பிரிவார் என்பதும், அந்த சோகத்தை அவர் அனுபவிக்க வேண்டும் என்பதும் ஏற்கெனவே நிர்ணயிக்கப் பட்ட ஒன்று. இது துர்வாசர் மூலம் தசரதச் சக்கரவர்த்திக்கு பல ஆண்டுகள் முன்பாகவே எடுத்துச் சொல்லப்பட்ட ஒன்று லட்சுமணா! இதை நான் உன் மற்ற சகோதரர்கள் எவரிடமும் இன்றுவரையில் சொன்னதில்லை. ஈனிமேலும் அவர்கள் எவருக்கும் இது தெரியவேண்டியதில்லை. லட்சுமணா, கவலை கொள்ளாதே, சீதை காட்டில் குழந்தைகளைப் பெற்றெடுப்பாள். அந்தக் குழந்தைகள் மூலம் ரகுவம்சம் தழைக்கும். எல்லாம் விதி விதித்ததற்குச் சற்றும் மாறாமலேயே நடக்கின்றது." என்று தேற்றினார் சுமந்திரர் லட்சுமணனை.
அயோத்தி வந்தடைந்த லட்சுமணன் ராமரிடம் சீதையைக் காட்டில் விட்டு வந்த செய்தியைச் சொல்லிவிட்டு, ராமருக்குத் துன்பம் நேராது எனத் தேற்றுகின்றான். ராமரும் மனதைத் தேற்றிக் கொள்ளுகின்றார். சில காலம் கழித்து "லவணாசுரன்" என்பவனைக் கொல்வதற்காக ராமர் சத்ருக்கனனை அனுப்புகின்றார். லவணாசுரனைக் கொல்லச் செல்லும் வழியில் சத்ருக்கனன் வால்மீகியின் ஆசிரமத்தில் தங்குகின்றான். அவன் அங்கே ஓர் இரவைக் கழிக்கின்றான். அந்தச் சமயம் சீதைக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. வால்மீகி முனிவருக்குச் செய்தி தெரிவிக்கப் பட்டு அவர் சீதையைக் காண வருகின்றார். தன் கையில் இருந்த தர்பையை இரண்டாகக் கிள்ளி, ஆசிரமத்தின் வயது முதிர்ந்த பெண்ணிடம் கொடுத்து, தர்பையின் "குசம்" என்னும் மேல்பாகத்தால், முதலில் பிறந்த குழந்தையையும், தர்பையின் "லவம்" என்னும் கீழ்ப்பாகத்தால் இரண்டாவதாய்ப் பிறந்த குழந்தையையும் சுத்தம் செய்துவிட்டு, முறையே குழந்தைகளுக்கும், லவன், குசன் என்றே பெயர் சூட்டுகின்றார். பின்னர் குழந்தைகள் பிறந்ததும் செய்யவேண்டிய வைதீக காரியங்களையும் முறைப்படி அவர் செய்து முடிக்கின்றார். குழந்தைகள் எதிர்காலத்தில் பெரும்பேரும், புகழும் பெற்று விளங்குவார்கள் எனவும் ஆசீர்வதிக்கின்றார். சத்ருக்கனனுக்கும் இந்த விஷயம் தெரிவிக்கப் படுகின்றது. குழந்தைகள் பிறந்த செய்தி கேட்டு மிக்க மகிழ்வுற்ற சத்ருக்கனன், அதன் பின்னர் லவணாசுரனை வீழ்த்தச் செல்கின்றான். சென்று கிட்டத் தட்ட பனிரண்டு ஆண்டுகள் கழித்தே திரும்பும், சத்ருக்கனன், திரும்பும் வேளையிலும் வால்மீகியின் ஆசிரமத்தில் தங்குகின்றான்.
இடைப்பட்ட பனிரண்டு வருடங்களில் லவனும், குசனும் காண்போர் வியக்கும் வண்ணம் கண்கவரும் தோற்றத்துடனும், தவவலிமையுடனும், மிக்க அறிவுக் கூர்மை படைத்தவர்களாயும், சகல சாஸ்திரவிதிகளை அறிந்தவர்களாகவும் ஆகிவிட்டதையும் காண்கின்றான். அப்போது அவர்கள் இருவருமே வால்மீகி எழுதிய, எழுதிக் கொண்டிருந்த ராமாயணக் காவியம் பாடிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதைக் கேட்கும் வாய்ப்பு சத்ருக்கனனுக்குக் கிடைக்கின்றது. கேட்கும்போதே அவன் மனமானது பொங்கிப் பொங்கித் தவிக்கின்றது. எல்லையற்ற மகிழ்வுடனும், அதே சமயம் அளவு கடந்த சோகத்துடனும் கூடிய இந்தக் காவியத்தைக் கேட்ட சத்ருக்கனன் ஒரு கட்டத்தில் தன் நினைவையே இழந்துவிட்டானோ எனத் தோன்றும்படி ஆயிற்று. தன்னை ஒருவாறு சமாளித்துக் கொண்ட சத்ருக்கனன் வால்மீகியிடம் விடைபெற்று அயோத்தி நோக்கிச் சென்றான்.
இப்போது இங்கே சற்றே நிறுத்திவிட்டு துளசிதாசர், சீதையை ராமர் காட்டுக்கு அனுப்பியது பற்றியும், லவ, குசர்கள் பிறந்தது பற்றியும் என்ன சொல்லுகின்றார் என்று பார்க்கலாமா???
துளசியின் ராமாயணம், கம்பராமாயணத்தைப் போலவே, ராமரை ஒரு அவதாரம் எனவும், சீதையை சாட்சாத அந்த மகாலட்சுமியே எனவும் கூறி வந்திருக்கின்றது ஆரம்பம் முதலிலேயே. ஆகவே ராவணன் கடத்தியதும், உண்மையான சீதை அல்ல, துளசியின் கருத்துப் படி. மாய சீதை தான் ராவணனால் கடத்தப் படுகின்றாள். அசோகவனத்தில் சிறையும் இருக்கின்றாள். பின்னர் அவள் தான் அக்னிப்ரவேசமும் செய்கின்றாள். உண்மையான சீதை பூமியிலே மறைந்திருந்து வாழ்வதாயும் அக்னிப்ரவேசத்தின் போது பூமித் தாய் உண்மை சீதையை வெளியே கொண்டுவருவதாயும் துளசி சொல்கின்றார். கிட்டத் தட்ட அதே தான் இப்போவும் சீதை நாடு கடத்தப் பட்டபோதும் துளசி சொல்கின்றார். ஆனால் அவதூறு பேசுவது அனைத்து மக்களும் என்றும் துளசி சொல்லவில்லை.
யாரோ ஒரு வண்ணான் சந்தேகப் படும் வகையில் நடந்து கொண்ட தன் மனைவியைக் கண்டிக்கும்போது, "நான் என்ன ராமனா?? பதினான்கு மாதங்களுக்கு மேல் இன்னொருவன் பாதுகாவலில் இருந்த மனைவியைத் திரும்ப அழைத்து வைத்துக் கொண்டதுபோல் வைத்துக் கொள்ள?" என்று கேட்டதாயும், அந்தப் பேச்சைக் கேட்ட தூதர்கள் ராமரிடம் வந்து சொன்னதும், ராமர் சீதையைத் துறக்க முடிவு செய்ததாயும் துளசி ராமாயணத்தில் வருகின்றது. என்றாலும் துளசியின் ராமாயணப் படி ராமர் இப்போது துறப்பதும் உண்மையான சீதை அல்ல. சீதை மேலுலகு செல்லும் நேரம் வந்துவிட்டதாய்க் கூறி ராமர் அவளை மேலுலகம் அனுப்புவதாயும், அவள் தோற்றம் மட்டுமே பூமியில் தங்கியதாயும், அந்தத் தோற்றத்தையே ராமர் காட்டுக்கு அனுப்பியதாயும் துளசியின் ராமாயணப் பாடல்கள் கூறுகின்றன.
அநேகமாய் நம் ராமாயணம் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றது. அதிலும் இந்த உத்தரகாண்டம் எழுதுவது என்பது மிக மிக அதிகமான துயரத்தைக் கொடுக்கும் ஒரு வேலை. என்றாலும், நடந்தது இதுதான், இப்படித் தான் என்பதாலும், ராமரே, தன் கதையைத் தன் குமாரர்கள் வாயிலாகக் கேட்டிருக்கின்றார் என்பது வருவது இந்த உத்தரகாண்டப் பகுதியிலும், என்பதாலும், தனக்கு நேரப் போகும் முடிவையும், ராமர் வால்மீகி வாயிலாகத் தெரிந்து கொள்கின்றார் என்பதும் இதிலேயே வருகின்றது. ஆகையால் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்றே உத்தரகாண்டப் பகுதி. இனி நம் கதையில் அடுத்து என்ன நடக்கின்றது என்று பார்க்கலாமா??
*************************************************************************************
தன் ஆசிரமத்தில் லவ, குசர்களை வளர்த்து வந்த வால்மீகி அவர்களை வேதம், வில்வித்தை, அஸ்திரப் பிரயோகம், மற்றும் பல கலைகளில் சிறப்புடன் கூடியவர்களாக வளர்த்து வந்தார். கூடவே, பிரம்மாவின் அனுகிரகத்தாலும், நாரதரின் அறிமுகத்தாலும் ராமரையும், ராமரின் கதையையும் நன்கு அறிந்த வால்மீகி அதை ஒரு மாபெரும் காவியமாக இயற்றி வந்தார். சத்தியத்திலிருந்து ஒரு வார்த்தை கூடப்பிறழாது என பிரம்மாவால் உறுதி அளிக்கப் பட்டிருந்த அந்தக் காவியத்தின் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தையும் பிரம்மாவின் அருளாலே கூறக் கைவரப் பெற்றிருந்த வால்மீகி அதை இசையுடன் பாட லவ, குசர்களே சிறந்தவர்கள் எனவும் முடிவுக்கு வந்தார். ஆகவே லவ, குசர்களுக்கு அவற்றைப் பாடச் சொல்லிக் கொடுத்திருந்தார். இரு இளைஞர்களும் ரிஷிகள் கூடிய சபையில் தங்கள் இனிமையான குரலால் ராமாயண காவியத்தைப் பாடி வந்தனர். அப்போது தான் தற்செயலாக ஸ்ரீராமர் நடத்தி வந்த அசுவமேத யாகம் பற்றியும், அங்கே ஒரு மாபெரும் வித்வத் சபை கூடுவதையும் அறிந்து கொண்டனர் இவ்விரு இளைஞர்களும். நடப்பது தங்கள் வீட்டு விசேஷம் என்பதை அவர்கள் அறியவில்லை.
அவர்களின் இளங்குரலில் அருமையான பாடல்களாய் ராமாயணம் பொழிய ஆரம்பித்தது. இனிய இன்னிசை மழையில் நனைந்த ரிஷிகள் யாகத்தின் செயல்பாடுகளுக்கு இடையே இவர்களைப் பாடவைத்து இசையைக் கேட்டு ஆனந்தித்ததோடு அல்லாமல், தங்களிடம் உள்ள விலை உயர்ந்த பொருட்கள் எனத் தாங்கள் கருதும், கமண்டலம், மான் தோல், காஷாய வஸ்திரங்கள், மரவுரிகள் போன்றவற்றைப் பரிசாய்க் கொடுத்தனர். சிறுவர்களை வாழ்த்தினார்கள் அந்த ரிஷி, முனிவர்கள். மெல்ல, மெல்ல நகரம் பூராவும் விஷயம் பரவியது. யாரோ இரு சிறுவர்களாமே? பார்க்க மிக, மிக அழகாய் இருக்கின்றார்களாம்! தேவலோகத்துக் குமாரர்களோ? மண்ணுலகத்தில் எந்த அரசன் பெற்றெடுத்த பிள்ளைகளோ?? தெரியவில்லையே! இனிமையாகப் பாடுகின்றனராமே, நம் அரசன் ராமனின் கதையை! ஆஹா, இதோ கேட்கின்றது அல்லவா?? அவர்களின் இன்னிசை!
"ஜெகம் புகழும் புண்ணிய கதை ஸ்ரீராமனின் கதையே!
உங்கள் செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே!" என ஆரம்பித்துச் சிறுவர்கள் பாடவும், அயோத்தி மக்களின் ஆரவாரங்கள் மன்னனின் அரண்மனை வரை சென்று கேட்டது. மன்னனாகிய ராமனின் செவியும் குளிரவேண்டாமா??? மன்னன் அந்தச் சிறுவர்களை அரண்மனைக்கு அழைத்துவரச் செய்தான். சிறுவர்கள் வந்தனர்! ஆஹா, என்ன ஒளி பொருந்திய முகங்கள்?? ஆனால்?? இவர்கள் யார்? இது என்ன?? ஏன் மனம் இப்படிப் பதைக்கின்றது?? என் கண்கள் நீரைப் பெருக்குகின்றன?? சீதா, சீதா, நீ இல்லாமல் நான் எவ்வாறு தவிக்கின்றேன் என்பதையும் இந்தக் கதை சொல்லுமோ??
சிறுவர்கள் பாட ஆரம்பிக்கின்றனர் தங்கள் தகப்பன் முன்னிலையிலேயே, பாடுவது தங்கள் கதை எனத் தெரியாமலும், கேட்பது தங்கள் தகப்பனே என அறியாமலும் பாடுகின்றனர். என்ன ஒரு கொடுமையான, கொடூரமான நிகழ்வு?? இந்தப் பூவுலகில் எவருக்காவது இத்தகையதொரு கொடுமை நடந்துள்ளதா? அனைவரும் கேட்கச் சிறுவர்கள் பாடினார்கள் தங்கள் தெய்வீகக் குரலில். கேட்கக் கேட்க ராமருக்கு அரியாசனத்தில் இருப்புக் கொள்ளவில்லை. மெல்ல, மெல்ல, மெல்லக் கீழே இறங்கினார். மக்களுள் ஒருவராகச் சரியாசனத்தில் அமர்ந்தார். கதையைக் கேட்டார். மனத் தவிப்பும், கண்ணீரும் பெருக ஆரம்பித்தது. ராமர் மனதில் சந்தேகம் தோன்ற ஆரம்பித்தது. தொடர்ந்து பல நாட்கள் காவிய இசை தொடர்ந்தது சிறுவர்களின் குரலில். ராமருக்குச் சந்தேகம் நிவர்த்தியாகிவிட்டது. இவர்கள் தான் பெற்றெடுத்த மகன்களே, சீதையின் குமாரர்களே என சர்வ நிச்சயமாய்ப் புரிந்துவிட்டது.
இனிச் செய்யவேண்டியது என்ன?? மனமோ சீதையக் காண ஏங்குகின்றது! சற்றும் வெட்கமில்லாமல் தவிக்கின்றது. ஆனால் உலகம் சொல்லும் வார்த்தையை நினைத்துக் கவலை வருகின்றது! என்ன செய்யலாம்?? ராமர் சிந்தித்தார். சபையில் கூடி இருந்த பெரியவர்களை எல்லாம் கலந்து கொண்டார். பின்னர் ஒரு சில ஆட்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை வால்மீகியிடம் அனுப்பினார் தன் செய்தியுடன்! என்ன செய்தி?? மூன்றாம் முறையாகச் சீதைக்குச் சோதனை! சத்திய சோதனை! தாங்குவாளா அவள்??? ராமர் அனுப்பிய செய்தி இது தான்:
2008/8/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
--
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
1972ல் விஜயவாடாவில் ப்ரும்மசாரி ஹரிதாஸ் அவர்கள் பத்து நாட்கள் கீதக்ஞான
சொற்பொழிவுகள் நடத்தியபின் முடிஉரை என்று வந்தபோது என் மனதில் தோன்றிய
அதே துயரம் இன்று தோன்றியது கீதா சாம்பசிவம் அவர்களது ராமாயணக்
கட்டுரையைப் படிக்கும்போது.
--
Dr.M.Sivasankar, Wipro Technologies, Bangalore , India.
web: http://biosankar.4t.com
blog for tamil articles: http://srishiv.blogspot.com
முதல்லே இது தேவையானு யோசிச்சேன். ஏற்கெனவே பலரும் ராமாயணத்தைப் பலவிதங்களிலும் அலசியாச்சு. இன்னமும் பேசப் பட்டும் வருகின்றது. எப்போது எழுதப் பட்டது என்று நிர்ணயிக்க முடியாத ஒரு காவியம் இன்றளவும் வாதப் பிரதிவாதங்களால் ஈர்க்கப் படுகின்றது, கற்றறிந்த பலரையும். ஆனால் பலருக்கும், தெரிஞ்ச கதையான ராமாயணத்தைத் திரும்பவும் எதுக்குப் படிக்கணும் என்ற கேள்வி வருகின்றது. இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் இதைப் படிக்கவும் வாசகர்கள் இருந்தார்கள் என்பதே உண்மை என்றும் தெரிய வந்தது. பரவலாக, அநேகமாய் உலகம் முழுதும் ராமாயணம் என்றொரு இந்திய இதிகாசம் பற்றி அறிந்திருந்தாலும், அப்படி என்னதான் இருக்கின்றது இதில்?? ஏன் எல்லா மொழிகளிலும் மொழி பெயர்க்கப் படுகின்றது?? இந்திய மக்கள் தங்கள் மனம் கவர்ந்த கதையாக, தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக இந்தக் காவியத்தை ஏன் நினைக்கவேண்டும்??
மேற்கத்திய அறிஞர்கள் இதை இந்தியாவின் மாபெரும் காவியங்களில் ஒன்று என ஒப்புக் கொண்டிருக்கின்றனர். இதுவே முதன்மையானது என்றும் ஒப்புக் கொள்கின்றனர். முக்கியமாய்க் குழந்தைகளுக்குப் படுக்கும் நேரம் சொல்லப் படும் கதையாக இது இருந்து வருகின்றது. மேற்கத்திய நாடுகளின் தேவதைக் கதைகளைப் பெருமளவில் ஒத்து இருந்தாலும், அதிலிருந்தும் மாறுபட்டும் வருகின்றது என்று சொல்லலாம். ஆனால் தேவதைக் கதைகளில் பெரும்பாலும் கதாநாயகன், கதாநாயகியை அடைய மிகவும் கஷ்டப் பட்டும், பலவிதத் தடைகளை வென்றும், கடைசியில் கதாநாயகி இருக்கும் இடத்தைக் கஷ்டப் பட்டு கண்டு பிடித்தும் அடைவான். வழியில் அவனுக்குப் பல மிருகங்களும், தேவதைகளும் உதவி செய்யும்.
அது போலவே இந்தக் காவியத்திலும் குழந்தைகளுக்குப் பிடித்தமான அம்சங்கள் பல இருக்கின்றன. ஒரு மாற்றம் என்னவெனில் இதில் கதாநாயகன் திருமணம் புரிந்த பின்னரே மனைவியைப் பிரிகின்றான். இங்கேயும் காடுகள் வருகின்றன. நதிகள், மலைகள் வருகின்றன. சமுத்திரம் வருகின்றது. கதாநாயகனின் வீர, தீரப் பிரதாபங்களும், அவனின் எதிரியின் சாமர்த்தியங்களும், அவனின் வீரமும் பேசப் படுகின்றது. அத்தோடு இல்லாமல் கதாநாயகன் தன் எதிரியான அரக்கனைச் சென்றடைய அவனுக்குப் பலவிதங்களிலும் உதவி கிட்டுகின்றது. முதலில் பறவையான ஜடாயு. பேசும் பறவை. அதன் பின்னர் வானரங்கள், இவையும் பேசுகின்றன. கரடியான ஜாம்பவான். இதுவும் மனிதர்கள் போல் பேசுகின்றது. இவற்றின் உதவியோடு ஒரு மாபெரும்பாலம் கட்டி சமுத்திரத்தைக் கடக்கின்றான் கதாநாயகன்.
அதிலும் இந்த வானரங்கள் நினைத்தபோது நினைத்த உருவத்தை எடுக்கும் வல்லமை பெற்றிருக்கின்றார்கள். அதே போல் அரக்கர்களும் பல்வேறுவிதமான வடிவை எடுக்கின்றார்கள். இதற்கு மாரீசன் பொன்மானாய் மாறியதும், தூது வரும் அரக்கர்கள் பறவை வடிவில் வருவதும், மற்றொரு சமயம் வானரங்கள் போலவே உருமாறிச் சென்று உளவு பார்ப்பதும், இந்திரஜித் என்ற ராவணனின் மகன் மறைந்திருந்து மாயாஜால முறையில் போர் புரிவதும், குழந்தைகளுக்குக் கேட்கக் கேட்கத் திகட்டாத ஒன்றாய் அமையும். கதை சொல்லப் படும் உத்திக்கு இத்தகைய பாத்திரங்களின் தேவை இருக்கின்றது மட்டுமில்லாமல் கடைசிவரையில் அவை கதாநாயகனுக்குத் துணை புரிந்து அவன் வெற்றியடையவும் உதவுகின்றன. தேவதைக் கதைகளில் எவராலும் வெல்லமுடியாத ஒரு மந்திரவாதியை கதாநாயகன் எவ்வாறு மந்திர வல்லமை பெற்றிருக்கும் கிளிகள், பறவைகள், மிருகங்கள், உதவியுடன் வெற்றி கொண்டு தன்னுடைய அரசையும், அரசகுமாரியையும் கைப்பற்றுவானோ, அவ்வாறே இதிலும் கதாநாயகன் வானரங்களின் உதவியோடு ராவணன் என்ற எவராலும் வெல்ல முடியாத ஒரு அரக்கனைக் கொன்று, தன் மனைவியை மீட்டுக் கொள்கின்றான்.
அதே சமயம் குழந்தைகளுக்குத் தேவையான நீதி போதனையும் கிடைக்கின்றது. தன் தந்தையின் வாக்கைக் காக்கவேண்டி ராமன் காட்டுக்குச் சென்றது குழந்தைகளுக்குப் பெரியவர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய விதத்தைப் போதித்தால், காட்டில் ரிஷி, முனிவர்களுக்கு ராமன் உதவியது, பலம் பொருந்தியவர்கள், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று சொல்வதோடு மட்டுமில்லாமல், ஒரு அரசகுமாரனின் கடமை தன் மக்களைத் துன்பத்தில் இருந்து காப்பதும் என்றும் சுட்டுகின்றது. மேலும் கடவுளுக்கு நிகரான பலம் பொருந்திய எவராலும் வெல்ல முடியாத ஒரு அரக்கனை, ராமன் என்ற சாதாரண மனிதன் கொன்றான் என்பதும் குழந்தைகளைக் கவரும். அதே சமயம் ராவணனை வெல்ல முடிந்தது எவ்வாறு என்பதும் சொல்லப் படுவதால், ராவணன் எத்தனை வரம் வாங்கி இருந்தாலும், மனிதர்களைச் சாதாரணமாய் நினைத்தது மட்டுமில்லாமல், அடுத்தவர் மனைவியான சீதையைத் தூக்கி வந்த அராஜகச் செயலினால் அவன் பலம் பொருந்தியவனாய் இருந்தாலும், அவனின் பலம் முழுதும் பயனற்றுப் போய் விடுகின்றது. இதிலிருந்து ஒழுக்கம் தவறக் கூடாது என்ற நீதியும் குழந்தைகளைச் சென்றடைகின்றது.
ராவணன் என்ற அரக்கன், மனிதர்களை மட்டுமின்றி, குரங்குகள், மிருகங்கள், கரடிகள் போன்றவற்றையும் ஒரு பொருட்டாய்க் கருதாமல் இருக்கும் அதே சமயம் ராமன் தன் அன்பினாலும், பண்பினாலும், நட்பினாலும் அவற்றைக் கவர்ந்து தம் வசம் இழுக்கின்றார். ஒரு வானர அரசன் ஆன சுக்ரீவனிடம் நட்புப் பாராட்டுகின்றார். குழந்தைகளின் மனதில் ஆழப் பதியக் கூடிய ஒரு விஷயம் மிருகவதை என்பதும், மிருகங்களை இம்சை செய்வது தவறு என்று தோன்றும். மேலும் ஒரு அரசன் எவ்வாறு நீதி நெறி தவறாமல் ஆட்சி புரியவேண்டும் என்பதும் இதில் திரும்பத் திரும்பச் சொல்லப் பட்டிருப்பது வருங்காலத் தலைமுறைக்குத் தெரியவேண்டிய முக்கியமான ஒரு அம்சம் ஆகும். இப்படி பலவகைகளிலும் குழந்தைகளுக்குத் தேவையான விஷயங்களைக் கொண்டிருப்பதாலேயே ராமாயணம் இன்றளவும் குழந்தைகள் மத்தியில் மிக, மிகப் பிரபலமான ஒன்றாய் இருந்து வருகின்றது.
அடுத்து அரசியல் நோக்கில் பார்க்கலாம்.
ராமாயணத்தில் அரசியல் உண்டா?? தாராளமாய் உண்டு. இன்னும் சொல்லப் போனால் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்களுக்கு இது ஒரு அரசியல் காவியமே ஆகும். ஒரு அரசன் எவ்வாறு ஆட்சி நடத்த வேண்டும் என்பதை வால்மீகி பல இடங்களில் விளக்கி இருக்கின்றார். அதிலும் தசரதன் மூலம் நன்கு விளக்குகின்றார். தசரதனைப் பற்றிச் சொல்லும் இடங்களில், தசரதன், நான்கு வேதங்களையும் அறிந்தவராயும், பின்னால் நடக்கக் கூடியவற்றை அறியும் திறன் படைத்தவனாயும், ஐம்புலன்களையும் அடக்கியவனாயும், மனிதர்களிடம் நட்புப் பாராட்டுபவராயும், குரு பக்தி நிரம்பியவராயும், குடிமக்களைத் தன் மக்கள் போல் கருதும் அரசனாகவும், நீதி, நேர்மை, நியாயம் போன்றவற்றில் பற்றுள்ளவராயும் சித்தரிக்கின்றார். குடிமக்களைப் போஷித்து, சிறப்பாக ஆளும் வல்லமை பெற்றவர்களே சிறந்த அரசனாய் இருக்க முடியும் என்பதையும் எடுத்துச் சொல்கின்றார். அரசன் ஆளுவதற்காக அல்லாமல், மக்களால் ஆளப் படுவதற்கென்றே அரசன், என்றும், மக்கள் தொண்டே மன்னனுக்கு முக்கியமாய் இருக்கவேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்கின்றார்.
"அறனிழுக்கா நல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு."
என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்குக்கு ஏற்ப ஆட்சிமுறைக்கு உரிய அறத்தில் தவறாமல், நல்லறம் புரிந்து, வீரத்துடன், குறையில்லாத மானத்துடன் ஆட்சி புரிந்ததாய்ச் சொல்கின்றார் வால்மீகி.
"நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்"
என்னும் புறநானூற்றுப் பாடலுக்கு ஒப்ப, நாட்டுக்கு உயிர்நாடியாக இருப்பது நல்லரசனின் ஆட்சியே என்றும் தெரிய வருகின்றது, இந்த மாபெரும் காவியத்தினால்.
அரசன் தானாகத் தன்னிச்சையாக எந்தவிதமான முடிவும் எடுக்காமல் தன் அமைச்சர்களைக் கலந்து ஆலோசிப்பது குறித்தும் இதில் சொல்லப் படுகின்றது. தன் சொந்த மகனாகவே இருந்தாலும் யுவராஜ பட்டாபிஷேகம் செய்வதற்கு முன்னால், தன் அமைச்சர்களைக் கலந்து ஆலோசித்து அவர்களின் சம்மதம் பெற்றே ராமனின் பட்டாபிஷேகத்தை நிச்சயம் செய்கின்றார் தசரதச் சக்கரவர்த்தி. பட்டாபிஷேகம் நடக்கப் போகின்றது என்பதால் தன் மகனுக்கு அரச நீதி பற்றிய அறிவுரைகளும் தசரதர் ராமனுக்கு எடுத்துக் கூறுகின்றார். ஒரு அரசன் எவ்வாறு இருக்கவேண்டும், காமம், குரோதம், போன்ற துர் எண்ணங்களுக்கு இடம் கொடாமல், நாள் தோறும் நாட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்வது முக்கியம் என்றும், பிறநாட்டு விபரங்களை ஒற்றர்கள் மூலம் அறியவேண்டும் எனவும், மக்கள் மனம் மகிழுமாறும், நீதி தவறாமலும் வழக்குகளை விசாரித்து நீதி வழங்க வேண்டும் எனவும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தங்கள் அரசனைப் பற்றிப் பெருமை கொள்ளும்படி நடக்கவேண்டும் எனவும் கூறப் படுகின்றது.
இதைப் போலவே குலகுருவான வசிஷ்டரும் ராமருக்கு அரச நீதிகளைக் கூறுகின்றார். அமைச்சர்களைக் கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுக்கக் கூடாது, வீண் பகை கொள்ளக் கூடாது, அன்பு நெறியைக் கடைப்பிடித்தல் எனப் பல்வேறு நல்வழிகளும் அரசனுக்கு உரியனவாய் எடுத்துச் சொல்லப் படுகின்றது.
"வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி."
என்னும் வள்ளுவப் பெருந்தகையின் வாக்குக்கு ஏற்ப மன்னர்கள் தங்களை உடலாகவும், குடி மக்களைத் தங்கள் உயிராகவும் கருத வேண்டும் என்று வசிஷ்டர் ராமருக்கு எடுத்துச் சொல்வது எக்காலத்துக்கும் பொருந்தும் ஒன்றாகும்.
"இறை காக்கும் வையகமெல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்."
என்பதற்கொப்ப நல்லரசன் நல்வழியில் ஆட்சி புரிந்து வந்தால் அவனை அவனின் நற்செயல்களே காக்கும் என்பதையும் வசிஷ்டர் வாயிலாக எடுத்துச் சொல்கின்றார் வால்மீகி. மேலும் மன்னனாகவே ஆகப் போகின்றவன் ஆனாலும் அவனுக்கும் பதவி ஆசை இருக்கக் கூடாது என்பதும், ஆட்சியில் அமரப் போகின்றோம் என்ற இறுமாப்பு இருக்கக் கூடாது, எப்போதுமே ஒரே மாதிரியான மனநிலையில் இருக்கவேண்டும் என்றும் குறிப்பிடப் படுகின்றது. அதற்கேற்ப ராமரும் தசரதர் அழைத்து, ராமருக்கு முடி சூட்டும் தன் முடிவைச் சொன்னதும், ராமரின் மனதில் மகிழ்வும் இல்லை, தளர்வும் இல்லை, எனவும், இது தசரத மன்னனின் ஆணை, அதை ஏற்று நடக்கின்றேன் என்றே ராமன் கூறுவதாயும் வால்மீகி கூறுகின்றார்.
இவ்விதம் மன்னர்கள் எவ்வாறு ஆட்சி நடத்தவேண்டும் என்ற கூற்றுகளும், கருத்துக்களும் அக்காலத்திற்கு மட்டுமில்லாமல், எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் இருக்கின்றது அல்லவா??
அடுத்து ராமாயணம் ஒரு காதல் காவியமா?? இளைஞர்களுக்கு எவ்வகையில் ஏற்றது??
2008/8/19 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
>"தாரா" தேவகுருவின் மனைவி தாரா ஆவாள்.
வழிபாடு நடத்தணும்னு முடிவாய் விட்டது. அது அனுமனுக்குத் தெரியும். அதிலும் எப்போது??? கடல் கடக்கவேண்டும், அதற்காகப் பாலம் கட்டப் பட்டுக் கொண்டிருக்கிறது. அந்தப் பாலத்தை நல்லபடியாய்க் கடந்து இலங்கை சென்று சீதையை மீட்கவேண்டும். எத்தனை முக்கியமான வேலை?? சீதை அங்கே எத்தகைய நிலையில் இருந்தாள்?? கிட்டத் தட்டத் தற்கொலை செய்துகொள்ளப் போனவள், அனுமன் சொன்ன வார்த்தைக்குக் கட்டுப் பட்டுக் காத்திருக்கின்றாள். அந்த நிலைமையில் தான் ராமர் அங்கே லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜித்துவிட்டுப் போக விரும்புகின்றார்.
அப்போது நேரத்துக்கு எத்தனை முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்?? அந்தச் சமயம் தாமதம் ஆகலாமா???
மேற்கண்ட விபரங்கள் துளசிராமாயணத்தில் காணப் படுவது. ஆனால் ஸ்காந்த புராணமோ வேறு மாதிரியாகச் சொல்லுகின்றது. ராவணனைக் கொன்ற பாவத்தைத் தீர்த்துக் கொள்ளப் பிராயச்சித்தம் செய்ய நினைத்த ராமர், அதற்கான வழிமுறைகளை முனிவர்களிடம் கேட்டு அறிந்து, அதன் படி மஹேந்திரமலையில் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து பூஜிக்க விரும்பி அனுமனைக் கொண்டுவரச் செய்கின்றார். தாமதம் ஆகவே முனிவர்கள் சீதையை விட்டு மணலால் லிங்கம் பிடிக்கச் செய்து பூஜையை முடிக்க வைக்கின்றனர். அனுமன் லிங்கம் கொண்டு வந்தும் அது ஏற்கப் படவில்லை. இங்கேயும் நேரத்தின் முக்கியத்துவமே கூறப் படுகின்றது.
ஏனெனில் உடனேயே அயோத்தி திரும்பவேண்டும் ராமர். பதினான்கு வருடம் முடியப் போகின்றது. தவற முடியாது. அப்புறம் பரதன் கதி அதோகதிதான். அதனாலேயே குறிப்பிட்ட நேரம் தவறாமல் வழிபாட்டை முடிக்கின்றார் ராமர். அதே சமயம் அனுமனைத் தான் தேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனும், நந்திகிராமத்தில் தவம் இருக்கும் தம்பி பரதன் ஒரு அவசரக் காரன், எதாவது செய்துகொள்ளாமல் தடுக்கவேண்டும் என்பதாலும், நீண்ட நாட்கள் கழித்துத் தான் வரும்போது, கொஞ்சம் தாமதம் ஆகிவிடும், வழியில் பலருடைய சந்திப்பு நேரும் என்பதாலும், பரதனுக்குச் செய்தி சொல்ல அனுமனை முன்னே அனுப்புகின்றான். ஏற்கெனவேயே செவ்வனே செய்து முடித்த பணி அல்லவா இது!!
மேற்கண்ட இரு கருத்துக்களுமே அதாவது ராமர் ராமேஸ்வரத்தில் லிங்கப் பிரதிஷ்டை செய்தது பற்றிய குறிப்புகள் வால்மீகியில் இல்லை என்றாலும், பொதுவான நம்பிக்கையின் அடிப்படையிலேயே "மேலாண்மை" குறித்த பதிவு எழுதப் பட்டது. வழிபாட்டின் முக்கியத்துவத்தை அனுமன் அறியாதவர் அல்ல. இரு சமயங்களுமே எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அறியாதவர் இல்லை. எனினும் தாமதம் ஆகின்றது. வழிபாடு குறித்த நேரத்தில் முடிந்து விடுகின்றது. தன் தூதனும், அந்தரங்க மெய்க்காப்பாளனும் ஆன அனுமன் இல்லாமலா ராமன் வழிபாட்டைக் குறித்து ஆலோசித்திருப்பார். அதன் விபரங்களைக் கூறாமலா அனுமனை அனுப்புவார்?? ஆகவே குறித்த நேரம் தவறவேண்டாம் என வழிபாட்டையும் முடிக்கின்றார். அதே சமயம் அனுமன் கஷ்டப் பட்டு கொண்டு வந்த லிங்கம் பயனற்றுப் போய்விடவேண்டாம் எனவும் எண்ணுகின்றார். ஆகவே இன்று வரையிலும், இனிமேலும் அனுமன் கொண்டு வந்த லிங்கத்துக்கே முதல் மரியாதை ராமேஸ்வரம் கோயிலில். அந்த லிங்கத்தைத் தரிசித்துவிட்டே பக்தர்கள் உள்ளே செல்லவேண்டும். கோயிலிலும் முதலில் அனுமனின் லிங்கத்திற்கு வழிபாடு நடத்திவிட்டே உள்ளே மூலஸ்தானத்தில் வழிபாடு நடத்துவார்கள்.
இந்தப் பெருந்தன்மையினாலும், கருணையினாலுமே ராமன் ஒரு மாபெரும் தலைவன் ஆகின்றான். தொண்டர்கள் செய்த தவற்றைச் சுட்டுவதோடு தன் கடமை முடிந்துவிட்டது என்றும் நினைக்காமல் அவர்களின் உழைப்புக்குத் தகுந்த பலனையும் அளிக்கின்றான். ஆகவே ராமனின் தலைமைப் பண்பு பளிச்சிடுகின்றதே ஒழிய தாழவில்லை. இந்த இரண்டு கருத்துக்களுமே வால்மீகியில் இல்லை. இங்கே மகாதேவன் அருள் கிடைத்தது தனக்கு என்று ராமர் சீதையிடம் சேதுவைக் காட்டும்போது சொல்லுவதாய் மட்டுமே வருவதாய்த் தெரிகின்றது. தலைவன் எவ்வாறு இருக்கவேண்டும் என்று காட்டிய ராமன் கதாநாயகனாய் இருக்கும் ராமாயணத்தில் தேச ஒருமைப் பாடு பற்றி அடுத்துக் காணலாம்.
அவமானம் தாங்க முடியாத ராவணன், தன் வலிமையும், சக்தியும் இன்று ஒருநாள் யுத்தத்திலேயே குறைந்து விட்டதையும் உணர்ந்தவனாய், தன்னுடைய கிரீடமும், தேரும் சுக்குநூறாகப் போய்விட்டதையும் கண்டவனாய், வேறு வழியில்லாமல், ராமர் சொன்ன வார்த்தைகளினால் தலை கவிழ்ந்து, திரும்பினான். விண்ணில் இருந்து இதைக் கண்ட தேவர்களும், ரிஷி, முனிவர்களும் ராமரைப் போற்றிப் புகழ்ந்தனர்.
அவமானத்துடன் திரும்பிய ராவணன், செய்வது இன்னதென்று அறியாமல் மனம் கலங்கினான். தன் ஆலோசனைக்காகக் கூடி இருந்த மற்ற அரக்கர்களிடம் ஆலோசனையும் நடத்தினான். தன் கவலைகளை வெளிப்படையாகச் சொன்னான். தேவேந்திரனையும், யமனையும் வெற்றி கொண்ட தான், இன்று ஒரு சாதாரண மனிதனிடம் தோற்றுப் போனதைக் குறிப்பிடுகின்றான். அவன் திரும்பிப் போ என்று சொன்னதையும், அதனால் தன் மனம் துயரில் ஆழ்ந்ததையும் தெரிவிக்கின்றான். பல வரங்களைப் பெற்ற தான் மனிதர்களிடமிருந்து மரணம் இல்லை என்ற வரத்தை பெறாமல் போனதற்கு மிகவும் வருந்தினான். இஷ்வாகு குல அரசன் ஆன அனரண்யன் என்பவன், மனம் நொந்து தன் வம்சத்தில் பிறந்த ஒருவனால் ராவணன் தோற்கடிக்கப் படுவான் எனச் சொன்னது உண்மையாகிவிட்டதே என்றும் வருந்தினான். மேலும் வேதவதியைத் தான் பலாத்காரம் செய்ய முனைந்தபோது அவள் கொடுத்த சாபத்தையும் நினைவு கூருகின்றான். அவள்தான் சீதை என்பதில் தனக்கு ஐயம் இல்லை தற்போது என்றும் உறுதிபடச் சொல்கின்றான். மேலும் கைலையில் நந்திஸ்வரனை நான் கேலி செய்தபோது குரங்குகளால் தனக்கு மரணம் நேரிடும் என்று நந்தி கொடுத்த சாபத்தையும் நினைவு கூருகின்றான். இவ்வாறு தான் முன்னால் செய்த தீமைகள் அனைத்துமே தனக்கு இப்போது தீவினைகளாய் வந்திருக்கின்றது என்பதில் தனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை எனச் சொல்லி வருந்துகின்றான் தசக்ரீவன்.
பின்னர் அரக்கர்களைப் பார்த்து, போனது போகட்டும், இப்போதும் ஒன்றும் ஏற்படவில்லை. எப்படியாவது அந்த எதிரிகளை வென்றால் அதுவே போதும். அதற்கான முயற்சிகளைச் செய்யுங்கள். உங்கள் ஆலோசனைகளைச் சொல்லுங்கள்.. நாம் எவ்வாறேனும் வெல்லவேண்டும். கோட்டை நன்கு பாதுகாக்கப் படவேண்டும். தவறான வார்த்தைப் பிரயோகத்தினால் , பெற்ற பிரம்மாவின் வரத்தின் காரணமாய்த் தூங்கும் கும்பகர்ணனை எழுப்புமாறும் கேட்டுக் கொள்கின்றான். ராமனின் வானரப் படைகளை அழிக்கும் ஆற்றல் அவனிடத்தில் உள்ளது என்றும் சொல்கின்றான். அரக்கர்களில் சிலர் சென்று கும் பகர்ணனை எழுப்ப ஆரம்பிக்கின்றனர். ஒரு பெரிய மலை போல் படுத்திருந்த கும்பகர்ணனின் திறந்த வாயானது, அந்த மலையின் குகை போல் தோன்றியதாம்.
கும்பகர்ணனின் மூச்சுக் காற்று அனைவரையும் வெளியிலும், உள்ளேயும் மாறி, மாறி இழுக்க, சமாளித்த அரக்கர்கள் அவனை எழுப்பும் ஆயத்தங்களைச் செய்தனர். தூக்கத்தில் இருந்து எழுந்ததும் கும்பகர்ணன் சாப்பிடப்பல்வகை மிருகங்கள், அவற்றின் மாமிசங்கள், குடம் குடமாய்க் கள், ரத்தம், பல்வேறு விதமான உணவு வகைகள் போன்றவை தயார் நிலையில் இருந்தன. பின்னர் அவன் உடலில் வாசனைத் திரவியங்கள் பூசி, கொம்புகளையும், எக்காளங்களையும், சங்குகளினாலும் பெரும் சப்தங்கள் எழுப்பிப் பல யானைகளை அவன் மீது நடக்க வைத்து ஒருவழியாக மிகுந்த சிரமத்துடனேயே அவனை எழுப்புகின்றனர். எழுந்த உடனேயே உணவு உட்கொண்ட கும்பகர்ணன் பின்னர், தன்னை எழுப்பிய காரணத்தை வினவுகின்றான். ராவணன் தான் தன்னை எழுப்பச் சொன்னான் என அறிந்ததும் அற்பக் காரணத்துக்குத் தன்னை எழுப்புபவன் இல்லையே எனக் கேட்க, அரக்கர்கள் சீதையை அபகரித்து வந்ததையும், அதன் காரணமாய் ராமன் போருக்கு வந்திருப்பதையும், அதற்கு முன்னாலேயே அக்ஷகுமாரன், அனுமனால் கொல்லப் பட்டான் என்பதையும், ராமன் நேற்றைய போரில் ராவணனை, "இன்று போய் நாளை வா" எனச் சொல்லிவிட்டதையும், அதனால் ராவணன் மனம் மிக நொந்து போயிருப்பதையும் சொல்கின்றனர் அரக்கர்கள்.
கோபம் கொண்ட கும்பகர்ணனைச் சமாதானம் செய்த மஹோதரன் ராவணனைப் பார்த்து என்ன வழிமுறைகள், என்ன கட்டளைகள் எனத் தெரிந்து கொண்டு போர்க்களம் செல்வதே நலம் எனச் சொல்ல அதன் படியே நீராடிவிட்டுத் தன் அண்ணன் ஆன ராவணனைப் பார்க்கச் செல்கின்றான் கும்பகர்ணன். அப்போது கும்பகர்ணன் தன் அரண்மனையில் இருந்து ராவணன் அரண்மனை நோக்கிச் செல்வதை ராமரும் பார்க்கின்றார். விபீஷணனிடம் இவன் யார்?? ஒரு மலையே பெயர்ந்து வந்துவிட்டதோ எனத் தோன்றுகின்றானே எனக் கேட்கின்றார். விபீஷணன் உடனேயே, ராவணனின் தம்பியானவனும் மஹரிஷி விஸ்ரவஸின் மகனும் ஆன கும்பகர்ணன் ஆவான் அவன், எனச் சொல்லிவிட்டுக் கும்பகர்ணனின் பெருமைகளை விவரிக்கின்றான். யமனையும், இந்திரனையும் வென்றவன் அவன். பெரும்பலம் பொருந்தியவன் ஆவான். மற்ற அரக்கர்கள் வரங்களினால் பலம் பெற்றார்கள் என்றால் இவனுக்கோ பிறவியிலேயே பலம் நிரம்பிப் பெற்றவன் ஆகிவிட்டான். இந்திரன் இவனை அழிக்கச் செய்த முயற்சிகள் அனைத்தும் பலனின்றிப் போய்விட்டது. இவன் கொடுமை தாங்க முடியாமல் தவித்த இந்திரன், இவனைத் தோற்கடிக்க முடியாமல் தவிக்க, பிரம்மா இவனுக்குத் தூக்கத்தில் ஆழ்ந்து போகும் வரம் கொடுத்துவிட்டார். வரத்தின் கடுமையைக் குறைக்கும்படி ராவணன் பிரம்மனிடம் முறையிட, ஆறுமாதத்துக்கு ஒரு முறை ஒரு நாள் மட்டுமே விழித்திருப்பான் எனவும், அந்த ஒருநாள் அவனுக்குத் தோன்றியதை அவன் செய்வான் எனவும் சொல்லி விடுகின்றார். இப்போது தனக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தில் இருந்து தன்னைக் காக்க ராவணன் இவனை எழுப்பி இருக்கின்றான் என்றும் சொல்கின்றான். உடனேயே வானரப் படை வீரர்களுக்குப் பலவிதமான உத்தரவுகள் பிறப்பிக்கப் படுகின்றன.
இங்கே கும்பகர்ணன் ராவணன் மாளிகையை அடைந்து தனக்கு என்ன உத்தரவு எனக் கேட்கின்றான். அவன் வரவினால் மகிழ்ச்சி அடைந்த ராவணன், மிகுந்த கோபத்துடன், ராமன் சுக்ரீவன் துணையோடு கடல் கடந்து சீதையை மீட்க வந்திருப்பதையும், அந்த வானரப் படைகளால் ராட்சதர்களுக்கு நேர்ந்த அழிவையும், துன்பத்தையும் எடுத்துக் கூறுகின்றான். இந்த வானரப் படைகள் மேலும் மேலும் கடல் பொங்குவது போல் அலைகள் அவற்றிலிருந்து வந்து, வந்து மோதுவது போல் வந்து கொண்டே இருப்பதாயும், இவற்றிற்கு முடிவு இல்லையெனத் தோன்றுவதாயும் சொல்லிவிட்டு இவற்றை அழிக்க என்ன வழி என்றே தான் அவனை எழுப்பச் சொன்னதாயும் சொல்கின்றான். அரக்கர்கள் அடைந்திருக்கும் பெரும் துன்பத்தில் இருந்து அவர்களைக் காக்கும்படியும் சொல்லுகின்றான். பெருங்குரலெடுத்துச் சிரிக்கின்றான் கும்பகர்ணன்.
ஏற்கெனவே ஆலோசனைகள் செய்த காலத்தில் சொல்லப் பட்ட வழிமுறைகளை நீ பின்பற்றி இருக்கவேண்டும். அப்போதே உனக்கு இத்தகையதொரு ஆபத்து நேரிடும் என எச்சரிக்கை செய்யப் பட்டது. நீ அப்போது சொல்லப் பட்ட சமாதானத்தை நாடும் முறையிலோ,
அல்லது பொருள் கொடுத்து அவனுடன் கூட்டுறவை ஏற்படுத்திக் கொள்ளாமலோ, நேரடியாகப் போருக்குச் சென்றுவிட்டாய். உன்னுடைய, மற்றும் என்னுடைய தம்பியாகிய விபீஷணன் கூறியவற்றையோ, உன் மனைவியாகிய மண்டோதரி கூறியவற்றையோ நீ கேட்டு நடந்திருக்கவேண்டும். உன்னுடைய மேன்மைக்கும், நன்மைக்குமே அவர்கள் இந்த வழிமுறைகளைக் கூறினார்கள். நீ அலட்சியம் செய்துவிட்டாய்." என்று கூறி மீண்டும் பெருங்குரலில் சிரிக்க ராவணன் கோபம் பொங்கி எழுந்தது. "கும்பகர்ணா, நீ என் தம்பி என்பதை மறந்து விடாதே, ஒரு ஆச்சாரியன் போல் அறிவுரைகள் கூறுகின்றாயே?? மேலும், கும்பகர்ணா, என் தவறுகள் காரணமாகவே இப்போதைய சம்பவங்கள் நடந்திருந்தாலும், நீ அதை எல்லாம் மறந்துவிட்டு, எனக்கு எவ்வாறு உதவி செய்வது என யோசிப்பாயாக! நான் நேர் பாதையில் இருந்து விலகிச் சென்றிருந்தாலும் இப்போது எனக்கு உதவி செய்வதே என் உறவினன் ஆன உன் கடமை என்பதையும் மறவாதே, உன் பலத்தை நீ உணர மாட்டாய், அதை முதலில் உணர்ந்து கொள்வாயாக, எனக்கு உதவி புரிய ஆயத்தமாகிவிடு." என்று சொல்கின்றான்.
கும்பகர்ணன் மனம் நெகிழ்ந்து போனான். ஆஹா, நம் அண்ணனா இவன்?? எத்தனை பலவான்? எவ்வளவு தைரியம் நிறைந்தவன்?? இப்போது இப்படிக் கலங்கி இருக்கிறானே? இப்போது இவனுக்குத் தேவை தைரியமும், ஆறுதலும் அளிக்கும் வார்த்தைகளும், செயல்களுமே எனக் கண்டு கொள்கின்றான் கும்பகர்ணன். அவ்விதமே பேசத் தொடங்குகின்றான் ராவணனிடம், "அன்பு மிகுந்த அண்ணனே, என் தந்தைக்குச் சமம் ஆனவனே! உன் கவலையை விட்டொழி, உன் சகோதரன் ஆன நான் உன்னுடைய மேன்மைக்காகவே மேற்கண்ட அறிவுரைகளைக் கூறினேன். மேலும் உன்னை நல்வழியில் திருப்பவதும் என் கடமை அன்றோ. ஆனால் உனக்கு ஏற்புடையது இல்லை எனத் தெரிந்து கொண்டேன். என்ன செய்யவேண்டும் உனக்கு? அந்த ராமனை நான் அழிப்பேன், பார் நீயே! நீ இதற்கென வேறு யாரையும் அழைக்க வேண்டாம், நானே செல்கின்றேன், சென்று அந்த வானரக் கூட்டத்தையும், அந்த நர மனிதர்கள் ஆன ராம, லட்சுமணர்களையும் அடியோடு அழிக்கின்றேன். இவர்களை அழிக்க எனக்கு ஆயுதங்கள் கூடத் தேவை இல்லை. என் கைகளாலேயே அழித்து விடுவேன். நீ போய் உன் வேலையைப் பார், என்னுடைய வெற்றி முழக்கம் கேட்கும், அப்போது வந்தால் போதும், நீ இப்போது வரத் தேவை இல்லை," என்று சொல்கின்றான்.
ஆனால் அதைக் கேட்டுக் கொண்டிருந்த மஹோதரனுக்கோ, இதில் கொஞ்சம் கூடச் சம்மதம் இல்லை. " கும்பகர்ணா, தன்னந்தனியாக நீ சென்று யுத்தம் செய்கின்றேன் என்று சொல்வது முற்றிலும் தவறு. ஜனஸ்தானத்தில் என்ன நடந்தது? சற்றே எண்ணிப் பார்ப்பாய், அத்தகைய பெரும்பலம் கொண்ட ராமனையோ, அவன் தம்பி லட்சுமணனையோ, நம்மால் தனியாக எல்லாம் வெற்றி கொள்ள முடியாது. நீ இப்போது யுத்தம் செய்யப் போகவேண்டாம். ராமனை வெற்றி கொள்வது என்பது எளிது அல்ல. ஆனால் சீதையை நம் வசம் ஆக்க ஒரு வழி கூறுகின்றேன். இப்போது கும்பகர்ணனை விடுத்த மற்ற நாங்கள் சென்று யுத்தம் செய்கின்றோம். அல்லது அவனும் வர விரும்பினால் வரட்டும். யுத்தத்தில் நாங்களே ஜெயிப்போம், அவ்வாறு இல்லாமல், உடல் முழுதும் ரத்தக்காயங்களோடு திரும்பும் நாங்கள், உங்கள் காலடியில் விழுந்து, ராம, லட்சுமணர்களை நாங்கள் கொன்றுவிட்டதாயும், வானரப்படையை அழித்துவிட்டதாயும் தெரிவிக்கின்றோம். நீங்கள் எங்களுக்குப் பரிசுகளை வழங்கிக் கொண்ட்டாட்டங்களை அறிவியுங்கள். அப்போது அந்தச் செய்தி சீதையைச் சென்றடையும், அந்த நேரம் பார்த்து, அவள் மனம் கவரும் வண்ணம் வண்ண, வண்ணப் பட்டாடைகளும், ஆபரணங்களும், பல்வேறுவிதமான கண் கவரும் பரிசுகளையும் அளித்து இனி ராமன் இல்லை, நான் தான் உன்னுடைய ஒரே பாதுகாவலன் என்று தெரிவித்தால் வேறு வழியில்லாமலும், செல்வத்திலே பிறந்து, செல்வத்திலே வளர்ந்து, செல்வத்தை மணந்த சீதை, அந்த செல்வத்திற்காகவும் முழுமையாக உங்களுடையவள் ஆகிவிடுவாள். இது ஒன்றே வழி" எனச் சொல்ல கும்பகர்ணன் மஹோதரனைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிக்கிறான்.
பின்னர் தன் அண்ணனைப் பார்த்து தான் தனியாகச் சென்று யுத்தம் செய்யப் போவதாயும், மன்னனுக்கு நெருக்கம் என்ற பெயரிலே மஹோதரன் தவறான ஆலோசனைகளைக் கூறுவதாயும், சொல்கின்றான். மஹோதரனையும் அவ்வாறே கடிந்தும் பேசுகின்றான். ராவணன் மனம் மகிழ்ந்து தன் தம்பியைப் போர்க்களத்திற்குச் செல்ல ஆயத்தப் படுத்துகின்றான். தன் அருமைத் தம்பிக்குத் தன் கையாலேயே ஆபரணங்களைப் பூட்டி, போருக்கான மாலைகளையும் சூட்டுகின்றான். கவசத்தை அணிவித்து எவரும் தன் தம்பியைத் தாக்க முடியாது என உறுதி கொள்கின்றான். கையிலே சூலத்தைக் கொடுத்து, பிரளயக் காலத்திலே அழிக்க வந்த ருத்ரனோ என்று எண்ணுமாறு தன் தம்பி இருப்பதாய் மகிழ்கின்றான். வேதியர்களை அழைத்து ஆசீர்வாத மந்திரங்களைச் சொல்ல வைக்கின்றான், இத்தனைக்கும் பின்னர் ஊழிக்காலத்துப் பரமசிவன் போலக் கையில் சூலம், ஏந்து, உடலில் கவசம் தரித்து, தன் பேருருவோடு புறப்பட்டுச் சென்று யுத்தகளத்தை அடைந்த கும்பகர்ணனைப் பார்த்த வானர வீரர்கள் திகைத்தனர்.
இவ்வளவு பெரிய உருவமா? என மலைத்தனர்! மலையே பெயர்ந்து வந்துவிட்டதோ என எண்ணிக் கலங்கினர். வானர வீரர்கள் இவ்விதம் எண்ணிக் கலங்கினாலும் சகுனங்கள் கும்பகர்ணனுக்கு அபசகுனமாகவே இருந்ததை அவன் காண்கின்றான். ஆகவே அபசகுனங்களால் கும்பகர்ணனின் மனம் கொஞ்சம் தளர்ந்தது. எனினும் அதைக் காட்டிக் கொள்ளாமலேயே அவன் போர்க்களத்தில் முன்னேறினான்.
அங்கதன், முதலில் கும்பகர்ணனின் பேருருவைக் கண்டு திகைத்து நின்றாலும், பின்னர் சுதாரித்துக் கொண்டு, நீலனையும், நளனனயும் பார்த்து, பயந்து ஓட இருக்கும் வானரப் படைகளைத் திறம்படச் சேர்ப்பிக்கச் சொல்லிக் கட்டளை இடுகின்றான். வானர வீரர்களுக்குத் தானும் தைரியம் சொல்கின்றான். நாம் திறமை அற்றவர்கள் அல்லவே? ஏன் பயப்படவேண்டும்? எனத் தைரியம் சொல்கின்றான். இதைக் கேட்ட வானரவீரர்கள் திரும்பி வந்து, மலைக்குன்றுகளையும், பெரும் மரங்களையும் பிடுங்கி கும்பகர்ணன் மீது வீசுகின்றனர். ஆனால் அவை பொடிப்பொடியாகப் போயிற்றே ஒழிய கும்பகர்ணனுக்கு ஒன்றும் ஆகவில்லை. வானரர்களைப் பிடிக்கக் கும்பகர்ணன் தன் பெரிய கைகளை நீட்டிப் பிடிக்க ஆரம்பித்தான். உடனேயே வானரர்கள் அவன் கையில் பிடிபட்டு நசுங்கத் தொடங்கினார்கள். பிடிக்க முடியாத வானரர்கள் ஓடி மறைந்து கொள்ள ஆரம்பித்தனர். அங்கதன் கோபம் கொள்கின்றான். இப்படியாவது நம் உயிரை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமா??? ராமனை எதிர்த்துக் கும்பகர்ணன் உயிரோடு இருக்க முடியுமா??? நாம் ஓடி ஒளிந்தால் நம் புகழும் ஒழிந்துவிடும், திரும்பி வாருங்கள் எனக் கூவி அழைக்கின்றான் அங்கதன் வானர வீரர்களை.
ஆனால் பயத்தின் எல்லையில் இருந்த அந்த வானர வீரர்கள் வர மறுக்கவே, மிகுந்த பிரயாசைக்கு இடையில் அங்கதன் அனுமன் தலைமையில் சில வானர வீரர்களைச் சேர்க்கின்றான். அனைவரும் கும்பகர்ணனைக் கடுமையாகத் தாக்குகின்றார்கள். அனுமன் தலைமையில் கடும் சண்டை நிகழ்ந்து கும்பகர்ணனின் ஆதரவுக்கு அனுப்பப் பட்ட படை வீரர்களுக்குப் பெரும் சேதம் விளைகின்றது. கோபத்துடன் கும்பகர்ணன் அனுமனைத் தாக்க அனுமன் நிலைகுலைந்து ரத்தம் கக்கிக் கொண்டு, சற்றே தடுமாற, அதைப் பயன்படுத்திக் கொண்ட கும்பகர்ணன், வானரர்களை அழிக்க ஆரம்பித்தான். கோபம் கொண்ட அங்கதன் கும்பகர்ணனின் கடுமையான தாக்குதலில் கீழே, விழ, அங்கே சுக்ரீவன் பெரும் கோபத்தோடு வருகின்றான். சுக்ரீவனோடு பொருத கும்பகர்ணன் விரைய, இருவருக்கும் கடும் சண்டை நடக்கின்றது. ஆனால் தன் சூலத்தால் சுக்ரீவனைக் கீழே வீழ்த்தி விடுகின்றான் கும்பகர்ணன். ஆனால் அனுமன் இடையில் புகுந்து சூலத்தைப் பொடிப் பொடியாக்க சுக்ரீவன் தப்ப முயல, கும்பகர்ணனோ ஒரு பெரும் மலைச்சிகரத்தால் சுக்ரீவனைக் கீழே மீண்டும் வீழ்த்தியே விடுகின்றான். அரக்கர் படை கோலாகலம் அடைகின்றது. சுக்ரீவனைத் தன் கையிலே இடுக்கிக் கொண்டு கும்பகர்ணன் இலங்கை நகருக்குள்ளே செல்ல விரைகின்றான். அப்போது வானரப்படை நிலைகுலைய, இதைக் கண்ட அனுமன் தான் என்ன செய்வது என்று யோசிக்கின்றார்.
இப்போது தன் பலத்தைக் காட்டினால், அது பயன் தராது. எப்படியும் சுக்ரீவன் தானாகவே தன் பலத்தால் திரும்ப வந்து சேருவான். இப்போது நம் பூரண பலத்தைக் காட்டி சுக்ரீவனை விடுவிப்பது அவனுக்கும் புகழ் தராது, நமக்கும் பயன் இல்லை என்று முடிவு செய்கின்றார். இலங்கை நகருக்குள்ளே கும்பகர்ணன் நுழையும் வேளையில் சுக்ரீவன் நினைவு திரும்பி, கும்பகர்ணனைத் தாக்குகின்றான் அவன் சற்றும் எதிர்பாராவண்ணம், சற்றே நிலைகுலைந்த கும்பகர்ணன் தடுமாறவும், அதைப் பயன்படுத்திக் கொண்டு திரும்ப ராமர் இருக்கும் இடம் வந்து சேருகின்றான் சுக்ரீவன். கும்பகர்ணன் கோபத்தோடு மீண்டும் போர்க்களம் வருகின்றான். இம்முறை வானரப்படைக்கு அவன் விளைவித்த நாசத்தால் அச்சம் கொண்ட வானரப்படை மீண்டும் ராமரைச் சரணடைய, முதலில் லட்சுமணன் வருகின்றான், போருக்கு. கும்பகர்ணன் அவனிடம் அவனைப் பாராட்டிப் பேசிவிட்டு எனினும் தான் ராமனையும், அவன் வீரர்களையும் அழித்துவிடுவதாய்ச் சபதம் பூண்டே வந்திருப்பதாயும் அதே போல் செய்யப் போவதாயும் சொல்லுகின்றான். ஆகவே ராமனோடு நேருக்கு நேர் போர் புரியும் அவன் ஆசையை நிறைவேற்ற வேண்டி அவனிடம் ராமன் இருக்குமிடம் இதுவே எனக்காட்டுகின்றான் லட்சுமணன். அவன் ஆசைப்படியே ராமனுடன் பெரும்போர் புரிகின்றான் கும்பகர்ணன். வானரர்களைத் தொடர்ந்து அவன் அழிப்பதைப் பார்த்த லட்சுமணன், வானர வீரர்களை கும்பகர்ணன் மீது ஏறச் சொல்லுகின்றான். இவ்விதம் ஏறினால் அவனால் ஏதும் செய்ய முடியாமல் தொடர்ந்து அழிக்க முடியாமல் திணறுவான் எனச் சொல்ல, கும்பகர்ணனோ ஒரே உதறலில் அத்தனை வானரர்களையும் கீழே வீழ்த்தி விடுகின்றான். அவனின் அளப்பரிய ஆற்றலை எண்ணி வியந்த ராமர், அவனைப் பார்த்து, "உன்னை அழிக்கும் பாணம் தயார், வா உடனே, என்னோடு பொருத," என அழைக்கக் கும்பகர்ணனும்," ஹே, இக்ஷ்வாகு குலத் திலகமே, நான் வாலியோ, கபந்தனோ, கரனோ, விராதனோ, அல்லது மாரீசனோ அல்ல என்பதை அறிவாய். என்னை வீழ்த்துவது என்பது கடினம் என்று தெரிந்து கொள்வாய். முதலில் உன் பலத்தைக் காட்டு, பின்னர் நான் உன்னை விழுங்கிவிடுகின்றேன்." என்று சொல்கின்றான்.
ராமர் ஏவிய வாயு அஸ்திரத்தால் கும்பகர்ணனின் ஒரு கையை வெட்டக் கீழே விழுந்த அந்தக் கையில் சிக்கி, பல வானரர்கள் உயிரிழந்தனர். பின்னர் மற்றொரு கையையும் வெட்டி வீழ்த்துகின்றார் ராமர். எனினும் தன் வலிமை பொருந்திய கால்களின் துணை கொண்டு போருக்கு வருகின்றான் கும்பகர்ணன். அவன் கால்களை யும் வெட்டித் தள்ளுகின்றார் ராமர். திசைகள் நான்கும் நடுங்க, மலைகள் ஆட்டம் போட, கடல் கொந்தளிக்க, ராமர் விடுத்த அம்பு இப்போது கும்பகர்ணனின் தலையை அறுத்து எறிகின்றது. அவன் தலை கீழே விழுந்த பேரதிர்ச்சியில் இலங்கைக்கோட்டை வாயில் தகர்ந்தது. உடல் விழுந்த அதிர்ச்சியில் கடல் பொங்கியது. நீர்வாழ் உயிரினங்கள் பலவும் உயிரை விட்டன. மீன்களும், சுறாக்களும் நசுங்கிச் செத்தன. ஆனால் வானரவீரர்களோ ஆடிப் பாடி மகிழ்ந்தனர். எங்கும் மகிழ்ச்சி, கோலாகலம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், மலை போன்ற கும்பகர்ணன் வீழ்ந்து பட்டான். இனி???
வானரப்படை கோலாகலமாய்க் கொண்டாட, மிகுந்திருந்த அரக்கர்கள் ராவணனிடம் சென்று கும்பகர்ணன் ராமனால் மாய்க்கப் பட்டான் எனத் தெரிவிக்கின்றனர். அதைக் கேட்ட ராவணன் மயங்கி விழுகின்றான். மற்ற அவன் உறவினர்களும் பெரும் துக்கத்தில் ஆழ்ந்தனர். ஒருவாறு சமாளித்து எழுந்த ராவணன், "ஆஹா, தேவர்களையே போரில் வென்ற என் தம்பி கும்பகர்ணனா இறந்து பட்டான்??? இடி, இடித்தாலும் , மின்னல் மின்னினாலும் அவற்றையும் எதிர்க்கும் வல்லமை படைத்த என் தம்பி கும்பகர்ணனுக்கு மரணம் நிகழ்ந்தது? அதுவும் ஒரு நரன் ஆகிய ராமனின் கையாலேயே ஏற்பட்டு விட்டதே?? கும்பகர்ணா!, கும்பகர்ணா! இந்த ரிஷி,முனிவர்கள் இனிமேல் எதற்கும் அஞ்ச மாட்டார்களே? வானரர்களுக்கும் இனி இலங்கைக் கோட்டைக்குள் நுழைவது எளிது எனத் தோன்றி விடுமே?? ஐயகோ! என்ன செய்வேன் நான்?? அருமைத் தம்பி, உன்னைப் பறி கொடுத்தேனே?" என்றெல்லாம் புலம்புகின்றான் ராவணன். இனியும் இந்த ராஜ்யத்தாலோ, அல்லது சீதையை நான் அடைந்தாலோ என்ன பயன் ஏற்படும்? கும்பகர்ணா! நீ இல்லாமல் நான் உயிர் வாழ்வதெப்படி?? ஆனால் உன்னைக் கொன்ற அந்த ராமனைக் கொன்று நான் பழி தீர்க்கவேண்டுமே? அதற்காகவே என் உயிரை வைத்துக் கொண்டு இருக்கிறேன். இல்லையேல் நானும் உன் வழியே இதோ புறப்படுகிறேன், காலதேவனை நோக்கி! ஆஹா, அன்றே விபீஷணன் கூறினானே?? விபீஷணன் வார்த்தைகளை அலட்சியம் செய்தேனே? அதற்கான பலனை அல்லவோ இப்போது அனுபவிக்கின்றேன்? பிரஹஸ்தனும், மாண்டான், கும்பகர்ணனும் மாண்டான், இனி நான் என்ன செய்வது?" புலம்பினான் ராவணன்.
அவன் சோகத்தைக் கண்ட அவனுடைய மற்றப் பிள்ளைகளும், மற்ற சகோதரர்களும் அவனைத் தேற்றி, தாங்கள் போருக்குச் சென்று ராம, லட்சுமணர்களை அழித்து விடுவதாய்ச் சொல்லிப் பெரும்படையுடன் போருக்குக் கிளம்பினார்கள். சூரியன் போல் பிரகாசித்த மஹோதரனும், கார்மேகத்துக்கு நிகரான திரிசிரனும், மலை போன்ற தோற்றத்துடன் அதிகாயனும் , சிவனார் மனம் குளிர இரு செவிகளிலும் உபதேச மந்திரத்தைச் சொன்ன தேவ சேனாபதியான கார்த்திகேயன் போல் நராந்தகனும், அவன் மாமன், மாயோன், போன்ற தோற்றத்துடனேயே தேவாந்தகனும், செல்வத்துக்கு அதிபதியானவனும், ராவணனுக்கு அண்ணனும் ஆன குபேரன் போல் மஹாபார்ச்வனும் தோற்றம் அளிக்க அரக்கர் படை மீண்டும் புது உற்சாகத்துடனேயே வானரப்படையுடன் பொருத ஆரம்பித்தது. வானரப்படையில் பலரையும் வந்த உடனேயே அரக்கர் படை அழித்து நாசம் செய்தது. அங்கதன், நராந்தகனையும், அனுமன், திரிசிரன், தேவாந்தகனையும், நீலன், மஹோதரனையும், ரிஷபன், மஹாபார்ச்வனையும் முறையே கொன்றனர். ஆனால் பிரம்மனிடம் வரம் பெற்ற அதிகாயனை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பெரும் சாதனைகள் புரிந்த அவனைக் கட்டுப்படுத்தும் வழி, வகை புரியாமல் வானரப்படையினர் திகைத்து நின்றனர். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அந்த விஷ்ணுவே வந்துவிட்டானோ, அவன் கையிலிருந்து சக்கரம் தான் தங்களை அழிக்க வந்துவிட்டதோ, என வானர வீரர்கள் எண்ணும் வண்ணம் சுழன்று, சுழன்று சண்டையிட்டுக் குவித்தான் வானர வீரர்களைப்பிணமாக . அதிர்ச்சி அடைந்த வானர வீரர்களில் சிலர் ராமனிடம் சென்று போர்க்களச் செய்திகளைத் தெரிவிக்க, ராமரும் அதிகாயனின் வீர சாகசங்களைக் கண்ணால் கண்டு வியப்புற்றார். விபீஷணனிடம் யார் இவன் எனக் கேட்க அதிகாயன் பற்றிய விபரங்களை விபீஷணன் சொல்ல ஆரம்பிக்கின்றான்.
ராவணனின் புத்திரர்களில் ஒருவனும், பிரம்மாவிடம் வரம் பெற்றவனும் ஆன அதிகாயன் பற்றிய விபரங்களை விபீஷணன் சொல்லத் தொடங்கினான். அந்த மஹாவிஷ்ணுவே வந்து ராவணனுக்காக யுத்தம் செய்கின்றாரோ என்று எண்ணும் வண்ணம் தன் வீரத்தைக் காட்டிய அதிகாயனைப் பார்த்த ராம, லட்சுமணர்கள் அவன் வீரத்தைப் பார்த்து வியந்தனர். விபீஷணன் சொல்கின்றான்:"தந்தையான ராவணனுக்கு நிகரானவன் இவன். அவன் மனைவிகளில் ஒருத்தியான தான்யமாலினி என்பவளுக்குப் பிறந்த இவன் அதி புத்திசாலி, ஆலோசனைகள் சொல்லுவதில் வல்லவன், வேதங்களை முழுமையாகக் கற்றறிந்தவன், எதிரிப்படைகளைத் துண்டிப்பதில் சிறந்தவன், அதே போல் சமாதானம் பேசுவதிலும் வல்லவன், இன்று இலங்கை நகரே இவன் ஒருவனையே நம்பி உள்ளது என்றால் மிகை இல்லை. பிரம்மாவிடமிருந்து வரங்கள் பெற்ற இவனின் ஒளி பொருந்திய தேரும், கவசங்களும் கூட அவராலேயே அளிக்கப் பட்டது. மிக்க அறிவு படைத்த இவன் இந்திரனின் வஜ்ராயுதத்தையே அடக்கியவன். நாம் சற்றும் தாமதிக்காமல் இவனை அழிக்க வேண்டும். இல்லையேல் வானரப் படையை இவன் அழித்து விடுவான் என்பதில் சற்றும் ஐயமில்லை." என்று சொல்கின்றான்.
வானர வீரர்களை எல்லாம் கதிகலங்க அடித்துக் கொண்டிருந்த அதிகாயனைக் கண்டு அவன் முன்னே லட்சுமணன் வீரத்தோடு போய் நின்றான். அதிகாயனோ லட்சுமணனைச் சிறுவன் என்றே மதித்தான். வயதில் மிக இளையவன் ஆன நீ தப்பிப் போ. உன்னால் என்னோடு போர் புரியவேண்டிய பலம் இல்லை, என் அம்புகளைத் தாங்கும் சக்தி உன்னிடம் இல்லை, திரும்பிப் போவாய், இளைஞனே!" என்று அதிகாயன் சொல்ல லட்சுமணன் தீரத்தோடு அவனை எதிர்த்து நிற்கின்றான். அதிகாயனும், லட்சுமணனை எதிர்க்க இருவருக்கும் கடும்போர் நடக்கின்றது. லட்சுமணனின் அம்புகளை எல்லாம் எதிர்த்து ஒரு பாதிப்பும் இல்லாமல் நிற்கும் அதிகாயனைக் கண்டு திகைக்கின்றனர் வானர வீரர்கள். தேவர்களும், யட்சர்களும், ரிஷி, முனிவர்களும் இந்த அதிசயச் சண்டையைக் காண விண்ணில் கூடி நின்றனர். லட்சுமணன் அதிகாயனை வீழ்த்தும் வழி தேடித் திகைத்து நிற்க அப்போது வாயு அவன் காதில் மெல்ல, "அதிகாயனைத் தோற்கடித்துக் கீழே வீழ்த்த வேண்டுமானால் பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்து." என்று சொல்ல லட்சுமணன் பிரம்மாஸ்திரத்தைக் கையில் எடுத்தான்.
போர்க்களத்தில் நுழைந்ததும் படையை அணிவகுத்துவிட்டுத் தான் பிறர் கண்ணில் படாமல் மாயமாய் நிற்கும்படியாகத் தன் மாயாசக்தியைப் பயன்படுத்தித் தன்னை மறைத்துக் கொண்டான். வானர வீரர்களும், தளபதிகளும், சுக்ரீவன், அங்கதன் உள்ளிட்ட மற்ற மாபெரும் வீரர்களும் அவன் தாக்குதலில் நிலை குலைந்தனர். இதைக் கண்டு மனம் மகிழ்ந்த இந்திரஜித், ராம, லட்சுமணர்களையும் தன் அம்பு, மழையால் முழுதும் மூடினான். பின்னர் பிரம்மாஸ்திரத்தை அவன் ஏவ, அதைக் கண்ட ராமர், லட்சுமணனிடம், பிரம்மாஸ்திரத்தை இவன் ஏவுகின்றான். நாம் இதற்குக் கட்டுப் பட்டே ஆகவேண்டும். தாங்க வேண்டியது தான். நாம் நினைவிழந்து விழுந்துவிட்டதும், ஏற்கெனவே வானரப் படையின் நிலைகுலைந்த கதியை நினைத்து, அவன் உற்சாகம் அடையப் போகின்றான். நாம் இப்போது இந்த அஸ்திரத்துக்குக் கட்டுப் பட்டே தீரவேண்டும்" என்று சொல்கின்றார். அதே போல் இந்திரஜித் ஏவிய அஸ்திரம் இருவரையும் கட்ட, இருவரும் அதற்குக் கட்டுப் பட்டு கீழே விழுகின்றனர். இலங்கை திரும்பி இந்திரஜித் மிக்க மன மகிழ்வோடு தன் தந்தையிடம், தான் அனைவரையும் வீழ்த்திவிட்டதையும், வானர வீரர்கள் நிலை குலைந்துவிட்டதையும் தெரிவிக்கின்றான். வானர வீரர்கள் மிக்க கவலையுடன் தங்கள் உடலில் ரத்தம் பெருகுவதையும், தங்கள் காயங்களையும் கூட மறந்துவிட்டுக் கவலையுடனும், திகைப்புடனும், இனி என்ன என்று ஒன்றும் புரியாமல் நின்றனர்.
ராம, லட்சுமணர்கள் தவிர, அங்கே தலைமை வகித்த பெரிய வீரர்கள் ஆன, சுக்ரீவன், ஜாம்பவான், அங்கதன், நீலன், ஆகிய அனைவரும் மயக்க நிலையிலும், கிட்டத் தட்ட இறக்கும் தருவாயிலும் இருப்பதைக் கண்ட அனைவரும் செய்வதறியாது யோசிக்கையில், ஓரளவு காயத்துடனும், நினைவுடனும் இருந்த அனுமன் மற்ற அனைவரையும் எவ்வாறேனும் காக்கவேண்டியது தன் கடமை என்று உணர்ந்தான். அதைப் புரிந்து கொண்ட விபீஷணனும் அவனைத் தேற்றி, யாரேனும் உயிர் பிழைத்துள்ளார்களா எனப் பார்க்கச் சொல்ல, விழுந்து கிடந்தவர்களில் அனுமன் தேட ஜாம்பவான் மட்டுமே அரை நினைவோடு முனகிக் கொண்டு இருந்ததைக் கண்டனர் இருவரும். ஜாம்பவானைக் கூப்பிட்டு, இந்திரஜித்தின் பாணங்கள் உங்களைத் தாக்கியதா என விசாரிக்க, என்னால் கண் திறந்து பார்க்க முடியவில்லை, ஆனால் எனக்கு ஒரு யோசனை தோன்றுகின்றது. அதை நிறைவேற்ற அனுமனால் தான் முடியும். அவன் இங்கே இருக்கின்றானா என்று வினவ, அனைவரையும் விட்டு, விட்டு அனுமனை ஏன் தேடுகின்றான் ஜாம்பவான் என்று யோசித்த விபீஷணன், அதை ஜாம்பவானிடம் கேட்டான்.
திரு திவா அவர்கள் அதிகாயன் பற்றிய கதையைச் சொல்லும்படிக் கேட்டுள்ளார். என்னிடம் உள்ள மிகச் சில குறிப்புகளில் அது இல்லை. மூலத்தைப்பார்க்கவேண்டும். கொஞ்சம் தாமதம் ஆகும். மூலத்திலும் இதுபற்றிப் படிச்சதாய் நினைவில்லை. பொதுவாய் ராவணனின் குடும்பத்தினர் அனைவருமே சிவபக்தியில் சிறந்தவர்களாயும், பல வரங்களைப் பெற்றவர்களாகவுமே இருந்து வந்திருக்கின்றனர். இனி, அடுத்தது என்ன என்று பார்க்கலாம். திடீரென 2,3 நாட்கள் தாமதம் ஆனதற்கு மன்னிக்கவேண்டுகிறேன்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
எழுந்து நிற்கக் கூட முடியாத நிலையில் இருந்த ஜாம்பவான், குரலை வைத்தே விபீஷணன் தான் பேசுவது எனப் புரிந்து கொண்டு, அனுமனைக் கூப்பிடுமாறு சொல்லவே, விபீஷணன் அனுமனைத் தேடுவதின் காரணத்தைக் கேட்கின்றான். ஜாம்பவான் சொல்கின்றான். "வானரப்படை மொத்தமும் அழிந்திருந்தால் கூட திரும்ப அவற்றை மீட்கும் வல்லமை படைத்தவன் அனுமன் ஒருவனே! அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை எனில் நம் வெற்றியும் உறுதியே!" என்று சொல்கின்றான். உடனேயே பக்கத்தில் இருந்த அனுமன், ஜாம்பவானைப் பார்த்து, நலம் விசாரிக்கவே, ஜாம்பவானும், அனுமனிடம், சொல்கின்றான்:"வானரங்களில் மிக மிகச் சிறந்தவனே! வாயுகுமாரா, உன்னால் ஆகாதது ஒன்றுமில்லை. இப்போது இந்த வாரப்படையையும், ராம, லட்சுமணர்களையும் காக்கும் பொறுப்பு உன்னிடம் தான் உள்ளது. நீ மீண்டும் கடலைக் கடக்கவேண்டும். கடலைக் கடந்து இமயமலைச் சாரலுக்குச் சென்று, அங்கே மிக மிக உயர்ந்திருக்கும் ரிஷப மலையின் மீது ஏறினால் திருக்கைலைமலையை நீ காண்பாய்! அந்த இரு மலைச் சிகரங்களுக்கும் இடையில் ஒளிவீசிப் பிரகாசிக்கும் தன்மையை உடைய ஒரு மலையையும் நீ காணலாம். அந்த மலை தான் பல்வேறுவிதமான மூலிகைகள் அடங்கிய மலை ஆகும். ம்ருதசஞ்சீவினி, விசல்யகரணி, ஸுவர்ணகரணி, ஸம்தாணி, போன்ற நான்கு முக்கியமான மூலிகைகளை அங்கே இருந்து நீ கொண்டு வரவேண்டும். அவற்றை எடுத்துக் கொண்டு எவ்வளவு விரைவாக திரும்ப முடியுமோ அத்தனை விரைவாக வந்தாயானால் அனைவரையும் காப்பாற்றி விடலாம்." என்று சொல்கின்றான் ஜாம்பவான்.
அம்புகள் வரும் திக்கைக் குறிவைத்து, ராம, லட்சுமணர்கள் போர் செய்ய ஓரளவு அவர்களால் இந்திரஜித்தைக் காயப் படுத்த முடிந்தது என்பதை அந்த அம்புகள் கீழே விழும்போது ரத்தம் தோய்ந்து விழுவதை வைத்துத் தெரிந்தது. ஆனால் மறைந்திருந்து யுத்தம் செய்யும் இவனை அழிப்பது எவ்வாறு என யோசிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டார் ராமர். லட்சுமணனிடமும் அவ்வாறே கூறுகின்றார். ராமரின் எண்ணம் தன்னை அழிப்பதே எனப் புரிந்துகொண்ட இந்திரஜித், போர்க்களத்தை விட்டு வெளியேறுகின்றான். தன் மாயாசக்தியால், சீதையைப் போன்றே மற்றொரு சீதையைத் தோற்றுவிக்கின்றான். நிஜமான சீதை எவ்வாறு, அழுக்கான ஆடையுடனேயே, ஆபரணங்கள் இல்லாமல், உடலிலும் தூசியுடனும், புழுதியுடனும் காணப்பட்டாளோ அவ்வாறே இவளையும் தோற்றுவிக்கின்றான். சீதையின் துக்கமும் இவள் கண்களிலும் காணப்பட்டது. அனுமன் பார்த்தார். நிஜமான சீதைதான் இவள் என்றே நினைத்தார்.
பல வானரர்களையும் கூப்பிட்டுக் கொண்டு தன்னைத் தாக்க அனுமன் வருவதை இந்திரஜித் பார்த்துவிட்டு, நகைத்துக் கொண்டே தன் வாளை உருவி, தன்னருகில் இருக்கும் மாய சீதையின் தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்க ஆரம்பித்தான். அந்த மாய சீதையும், "ராமா, ராமா'" என்றே அலறுகின்றாள். கோபம் கொண்ட அனுமன் "உன்னுடைய அழிவுக்காலம் நெருங்கிவிட்டது. இந்த அபலை உனக்கு என்ன தீங்கு செய்தாள்? ஒரு பெண்ணைக் கொல்வது மகா பாபம்! சீதையை நீ கொன்றாயானால், நீ உயிர் பிழைப்பது நிச்சயம் இல்லை." என்று எச்சரிக்கின்றார். இந்திரஜித் மேல் அனுமன் முழுவேகத்தோடு பாய, இந்திரஜித்தோ, "நீ சொல்வது உண்மையே, ஒரு பெண்ணைக் கொல்லக் கூடாதுதான். ஆனால் போரில் எதிரிக்கு எது பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்து பாதிப்பை ஏற்படுத்துவது செய்யக் கூடிய ஒரு காரியமே! இவளைக் கொன்றால் உங்கள் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும். முதலில் இவளைக் கொன்றுவிட்டு, பின்னர் உங்கள் அனைவருக்கும் முடிவு கட்டுகின்றேன்." என்று சொல்லிவிட்டுத் தன் கைவாளால் மாய சீதையை இரண்டு துண்டாக்குகின்றான். பதறிய அனுமன், மிகுந்த கோபத்துடன்,அரக்கர் படையைத் தாக்க, பெரும் உயிர்ச்சேதம் ஏற்படுகின்றது இருதரப்பிலும். அனுமன் சீதை மரணம் அடைந்தாள் என்னும் செய்தியை ராமரிடம் தெரிவிக்க எண்ணி, போர்க்களத்தில் இருந்து மெல்ல, விலக, அதைக் கண்ட இந்திரஜித்தும், தானும் இன்னொரு யாகத்தைப் பூர்த்தி செய்துவிட்டு வரலாம் என்ற எண்ணத்தோடு போர்க்களத்தில் இருந்து விலகுகின்றான்.
ராமரைச் சென்றடைந்த அனுமன், சீதை இந்திரஜித்தால் கொல்லப் பட்டாள் எனத் தெரிவிக்க, அதைக் கேட்ட ராமர் மனம் தாங்க முடியாத சோகத்தில் ஆழ, செய்வது இன்னதென்று அறியாமல் தவிக்க, மரம் போல் கீழே சாய்ந்தார். லட்சுமணன் தாங்கிப் பிடித்துத் தன் மடியில் போட்டுக் கொண்டான்.
இப்போது சொல்லப் போகும் விஷயங்கள் லட்சுமணன் கூறுவதாய் வால்மீகி ராமாயணத்தில் வருவது.லட்சுமணன் தர்மத்தை நிந்தித்துப் பேசுவான் இந்த இடத்தில். இந்த இடத்தை முக்கியமாய்க் குறிப்பிடுவதற்குக் காரணமே மற்ற ராமாயணங்களில் இவ்விதம் வரவில்லை என்பதே! என்னதான் மனிதரில் உயர்ந்தவர் என்றாலும் ராமரும் சரி, லட்சுமணனும் சரி, சாதாரண மனிதனின் ஆசாபாசங்களுக்கு உட்பட்டே, அந்த நியதிகளுக்குக் கட்டுப்பட்டே நடந்திருக்கின்றனர். நான் குறிப்புகள் எடுக்கும்போதே இவ்விதமான மேற்கோள்கள் வரும் இடத்தை முக்கியமாய் எடுத்துக் கொண்டேன். ஏனெனில் ராமர் ஒரு மனிதன் தான், என்பதையும், அவரைச் சார்ந்தவர்களும், தாங்கள் ஒரு அவதாரம் என்று நினைக்காதபடிக்குமே வால்மீகி அவர்கள் பேசுவதை எல்லாம் குறிப்பிட்டுள்ளார். மனச்சோர்வு என்பது நமக்கு இன்றளவும் எதற்கானும் ஏற்பட்டே தீர்கின்றது. அந்தச் சோர்வு ஏற்பட்டால் உடனே தர்மத்தின் பாதையில் இருந்து பிறழாமல், மீண்டும் நமது கடமையிலேயே மனதைச் செலுத்தி, செய்யவேண்டியவற்றை ஒழுங்கு முறையோடு செய்யவேண்டும் என்பதை உணர்த்தவே இது இங்கு குறிப்பிடப் படுகின்றது, என என்னுடைய கருத்து.
"தர்மம் எங்கே இருக்கின்றது??? கண்ணுக்குத் தெரியுமா?? கண்ணுக்குத் தெரியவில்லை எனில் இல்லை என்று தானே பொருள்??? தர்மம் என்று ஒன்று இருந்திருந்தால் இம்மாதிரியான துக்கம் உங்களுக்கு எப்படி நேரிட முடியும்?? ஆஹா, இதெல்லாம் எவ்வாறு ஆரம்பித்தது?? நம் தந்தை அன்றோ ஆரம்பித்து வைத்தார்? உங்களுக்குப் பட்டாபிஷேஹம் என்று சொல்லிவிட்டு, உங்களிடமும் அது பற்றிச் சொல்லிவிட்டுப் பின்னர் அதை மறுத்து வாக்குத் தவறியதால் வந்தது அன்றோ இத்தனையும்??? தர்மம் பெரியது என நீங்கள் வாதிட்டாலும், குடிமக்களுக்கு நீங்களே அரசனாவீர்கள் என வாக்குக் கொடுத்தீர்களே? அதிலிருந்து தவறியவர் ஆக மாட்டீர்களா?? தந்தையை நீங்கள் அடக்கி இருக்க வேண்டுமோ?? தவறி விட்டீர்களோ?? தந்தையை அடக்காததால் குடிமக்களுக்குச் செய்யவேண்டிய கடமை என்னும் தர்மத்தில் இருந்து நீங்கள் தவறியவர் ஆகிவிட்டீர்களோ? இப்படி எல்லாம் தியாகம் செய்து நீங்கள் கண்ட பலன் தான் என்ன? மனைவியை ஒரு அரக்கனிடம் பறி கொடுத்துவிட்டு, அவள் இருக்கின்றாளா, இறந்துவிட்டாளா என்பதே தெரியாமல், இப்படி மயங்கி விழுந்து கிடப்பதைத் தவிர நீங்கள் அடைந்த நன்மைதான் என்ன??"
"இருக்கட்டும், இளவரசே, நான் இந்த இந்திரஜித்தைச் சும்மா விடப் போவதில்லை. என் பலம் முழுதும் பிரயோகித்து அவனைக் கொல்வேன், அழிப்பேன் அடியோடு, இன்று என் போர்த்திறனை நீங்கள் காண்பீர்கள், எழுங்கள், உங்களை மன மகிழ்ச்சி அடையச் செய்வதே என் நோக்கம், உங்கள் திருப்தியே என் திருப்தி, அந்த ராவணனையும், அவன் குடிமக்களையும், படை வீரர்களையும் அழித்து நாசம் செய்கின்றேன். சீதைக்கு நேர்ந்த கதியை மனதில் வைத்துக் கொண்டு அவர்களை பழி வாங்குவேன்." என்று பலவாறு லட்சுமணன் சொல்கின்றான். ஏற்கெனவே இந்திரஜித் செய்த அட்டகாசத்தால் கதி கலங்கிக் கிடந்த வானரப் படைகள் இப்போது ராமரும் மயங்கியதும் சிதறிப் போகின்றது. விபீஷணன் பெரும் முயற்சி எடுத்து படைகளை ஒன்று திரட்டுகின்றான். அப்போது தான் அவனுக்குச் சீதையை இந்திரஜித் கொன்றுவிட்டதாய்ச் செய்தி வந்தே ராமர் கீழே விழுந்துவிட்டார் என்று தெரிய வருகின்றது.
விபீஷணன் பெருங்குரலெடுத்து நகைக்கின்றான். மேலும் சொல்கின்றான்:"ராவணனை நான் நன்கு அறிவேன். கடல் அலைகள் வற்றிவிட்டது என்றாலோ, சூரியன் மேற்கே உதிக்கின்றது என்றாலோ நம்பலாம். சீதையை ராவணனோ, இந்திரஜித்தோ கொன்றுவிட்டார்கள் என்று நம்புவது இயலாத காரியம். ராவணன் சீதையைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றான் என்பது எனக்கு நன்கு தெரியும். எனவே சீதையின் உயிர் பற்றிய கவலையோ, சிந்தனையோ கொள்ள வேண்டாம். மாயையில் வல்லவன் ஆன இந்திரஜித், இம்மாதிரி உங்களைக் கலங்க அடித்து வெற்றி பெற எண்ணுகின்றான். அவனால் உண்டாக்கப் பட்ட மாய சீதையாகத் தான் அவள் இருக்க முடியும். அதுவும் அவன் ஏன் செய்திருக்கின்றான் என்றால், இப்போது அவன் ஒரு குறிப்பிட்ட யாகம் செய்ய "நிகும்பிலம்" என்னும் இடம் சென்றிருக்கின்றான். அங்கே போய் அந்த யாகத்தில் நாம் இடையூறு விளைவித்து விடாமல் இருக்கவே இம்மாதிரியான குழப்பத்தை உண்டு பண்ணி நம்மை வேதனையில் ஆழ்த்தி இருக்கக் கூடும். இந்த யாகத்தை அவன் முடித்து விட்டானெனில் அவனை நம்மால் வெல்ல முடியாது. அவனை யாகத்தை முடிக்கவிடக் கூடாது. நாம் இப்போது அங்கே தான் செல்லவேண்டும்." என்று விபீஷணன் சொல்கின்றான். அனைவரும் யாகம் நடக்கும் இடம் நோக்கிச் செல்கின்றனர்.
மாயா சனகப் படலம்: பாடல் எண் 1604, 1605
"ஆயது ஓர் காலத்து ஆங்கண் மருத்தனைச் சனகன் ஆக்கி
வாய் திறந்து அரற்றப் பற்றி மகோதரன் கடிதின் வந்து
காய் எரி அனையான் முன்னர்க் காட்டினான் வணங்கக் கண்டாள்
தாய் எரி வீழக் கண்ட பார்ப்பு எனத் தரிக்கிளாதாள்."
" கைகளை நெரித்தாள் கண்ணில் மோதினாள் கமலக் கால்கள்
நெய் எரி மிதித்தாலென்ன நிலத்திடைப் பதைத்தாள் நெஞ்சம்
மெய் என எரிந்தாள் ஏங்கி விம்மினாள் நடுங்கி வீழ்ந்தாள்
பொய் என உணராள் அன்பால் புரண்டனள் பூசலிட்டாள்."
என்று ராவணன் சீதையிடம் ஜனகன் போல் தோற்றமளிக்கும் மாயையை உருவாக்கிக் காட்டியதாய்ச் சொல்கின்றார். மேலும் மாயா சனகனைக் காட்டி, சீதையைத் தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதாயும், சீதை அதற்கு இணங்காமல், ராவணனைக் கடுமொழிகள் பல பேசியதாயும், கடைசியில் இவ்வாறு உரைத்ததாயும் சொல்கின்றார்.
பாடல் எண் 1632
"புன் மக, கேட்டி கேட்டற்கு இனியன புகுந்த போரின்
உன் மகன் உயிரை எம்மோய் சுமித்திரை உய்ய ஈன்ற
நன் மகன் வாளி நக்க நாய் அவன் உடலை நக்க
என் மகன் இறந்தான் என்ன நீ எடுத்து அரற்றல் என்றாள்"
என சீதை ராவணனைப் பார்த்து உன் மகன் இந்திரஜித்தை, லட்சுமணன் அழிப்பான், அப்போது நீ இவ்விதம் புலம்புவாய் எனக் கூறுவதாயும், அது சமயம் கோபம் கொண்டு சீதையைத் தாக்க முனைந்த ராவணனை மகோதரன் தடுத்து நிறுத்தி இவ்விதம் சொல்லுவதாயும் தெரிவிக்கின்றார் கம்பர்.
பாடல் எண்: 1633
"வெய்பவன் அனைய கேளா வெயில் உக விழித்து வீரக்
கை பல பிசைந்து பேழ் வாய் எயிறு புக்கு அழுந்தக் கவ்வி
தையல் மேல் ஓடலோடும் மகோதரன் தடுத்தான் ஈன்ற
மொய் கழக் தாதை வேண்ட இசையும் நீ முனியல் என்றான்.'
என மாய சனகனைக் காட்டி சனகன் சொன்னால் சீதை உனக்கு இணங்குவாள் என்று மகோதரன் தடுப்பதாய்ச் சுட்டிக் காட்டும் கம்பர் அடுத்து எழுதி இருப்பது:
பாடல் எண்: 1634 1635, 1636
"என்று அவன் விலக்க மீண்டான் ஆசனத்து இருக்க ஆவி
பொன்றினன் ஆகும் என்னத் தரையிடைக் கிடந்த பொய்யோன்
இன்று இது நேராய் என்னின் என்னை என் குலத்தினோடும்
கொன்றனை ஆதி என்னா இனையன கூறலுற்றான்."
"பூவின் மேல் இருந்த தெய்வத் தையலும் பொதுமை உற்றாள்
பாவி யான் பயந்த நங்கை நின் பொருட்டாகப் பட்டேன்
ஆவி போய் அழிதல் நன்றோ அமரருக்கும் அரசன் ஆவான்
தேவியாய் இருத்தல் தீதோ சிறையிடைத் தேம்புகின்றாய்?"
"என்னை என் குலத்தினோடும் இன் உயிர் தாங்கி ஈண்டு
நல் நெடுஞ்செல்வம் துப்பேன் ஆக்கினை நல்கி நாளும்
உன்னை வெஞ்சிறையின் நீக்கி இன்பத்துள் உய்ப்பாய் என்னா
பொன் அடி மருங்கு வீழ்ந்தான் உயிர் உகப் பொருமுகின்றான்."
என்று சீதை ஜனகனின் குலமே அழிந்து பட்டாலும் ராவணனுக்குத் தான் இணங்க மாட்டேன் எனச் சொன்னதாயும், உடனேயே கோபம் கொண்ட ராவணன் மாயா சனகனைக் கொல்லத் துணிந்ததாயும், அதை மகோதரன் தடுத்ததாயும், அந்நேரமே கும்பகர்ணன் இறந்து பட்டதும் வானர வீரர்களின் ஆரவார ஒலி விண்ணைத் தொடும் அளவுக்கு எழுந்ததாயும், அதைக் கேட்டுக் கும்பகர்ணன் இறந்த விஷயத்தை ராவணன் தெரிந்து கொண்டதாயும் கம்பர் சொல்கின்றார். மேலும் மாயா சனகனைச் சிறையில் அடைக்குமாறு மகோதரன் சொன்னதாகவும் சொல்கின்றார்.
பின்னர் சீதை அதைக் கேட்டு மகிழ்ந்ததாயும், அப்போது திரிஜடை என்னும் அரக்கி, இந்த மாயா சனகன் உண்மையில் மாயையில் வல்லவன் ஆன மருத்தன் என்னும் பெயரைப் பெற்ற அரக்கன் ஆவான் என்று உண்மையைச் சீதையிடம் சொல்லி அவளைத் தேற்றியதாகவும் சொல்கின்றார். இவ்வாறு கும்பகர்ணன் வதை, பின்னர் அதிகாயன் வதை, அதிகாயன் வதைக்குப் பின்னரே இந்திரஜித் கோபம் மிகக் கொண்டு, நாக பாசங்களை ஏவி லட்சுமணனைக் கட்டியதாயும், லட்சுமணனை மீட்கவே கருடன் வந்ததாயும் தெரிவிக்கின்றார். அது பற்றி நாளை பார்ப்போம்.
"அசையாத சிந்தை அரவால் அனுங்க
அழியாத உள்ளம் அழிவான்
இசையா இலங்கை அரசோடும் அண்ணல்
அருள் இன்மை கண்டு நயவான்
விசையால் அனுங்க வடமேரு வையம்
ஒளியால் விளங்க இமையாத்
திசையானை கண்கள் முகிழா ஒடுங்க
நிறை கால் வழங்கு சிறையான்."
"மறந்தாயும் ஒத்தி மறவாயும் ஒத்தி
மயல் ஆரும் யானும் அறியேம்
துறந்தாயும் ஒத்தி துறவாயும் ஒத்தி
ஒரு த்னமை சொல்ல அரியாய்
பிறந்தாயும் ஒத்தி பிறவாயும் ஒத்தி
பிறவாமல் நல்கி பெரியோய்
அறம்தான் நிறுத்தல் அரிது ஆக ஆர் இவ்
அதிரேக மாயை அறிவார்."
அடுத்து வருவதே மருத்துமலைப் படலம் என்னும் சஞ்சீவி மலையைக் கொண்டு வருவது. சிலருக்கு ரொம்பப் பெரிசாய்த் தோணுதாய்க் கேள்விப் பட்டேன். ராமாயணமே பெரியது தானே. கூடியவரையில் முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டுமே சொல்லியும் இப்படிப் பெரிசா வந்தால் என்ன செய்யறது??
பல அரக்கர்கள் இறந்தபின்னரும், ராமன் போர்க்களத்திலேயே இருந்ததாய்க் கம்பர் கூறவில்லை. வானரப் படைகளும், வானரத் தளபதிகளும், லட்சுமணனுமே எதிர்கொண்டதாய்ச் சொல்லும் கம்பர், இந்திரஜித்துடன் சண்டை போடும் லட்சுமணன் பிரம்மாஸ்திரத்தை ஏவி அவனை அழிக்க எண்ணியதாயும், அதை ராமர் தடுத்ததாயும் சொல்கின்றார். பின்னர் இந்திரஜித் மறைந்திருந்து லட்சுமணனைத் தாக்க வேள்விகள் பல புரிந்துவிட்டு, பிரம்மாஸ்திரத்தை ஏவும் எண்ணத்தோடு வந்ததாயும் அப்போது ராமன் அங்கே போர்க்களத்தில் இல்லை என்பதாயும் கூறுகின்றார்.
பிரம்மாத்திரப் படலம்: பாடல் எண் 2543
"வந்திலன் இராமன் வேறு ஓர் மலை உளான் உந்தை மாயத்
தந்திரம் தெரிவான் போனான் உண்பன தாழ்க்கத் தாழா
எந்தை ஈது இயன்றது என்றார் மகோதரன் யாண்டை என்னை
அந்தரத்திடையன் என்றார் இராவணி அழகிற்று என்றான்"
என்று இந்திரஜித் போர்க்களத்தின் நிகழ்ச்சிகளைக் கேட்டு அறிந்த பின்னர் வேள்விகள் செய்து பிரம்மாஸ்திரத்தை ஏவத் தயார் ஆனதாயும் கூறுகின்றார்.
பாடல் எண் 2544, 45
"காலம் ஈது எனக் கருதிய இராவணன் காதல்
ஆல மாம மரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான்
மூல வேள்விக்கு வேண்டுவ கலப்பைகள் முறையால்
கூலம் நீங்கிய இராக்கதப் பூசுரர் கொணர்ந்தார்."
"அம்பினால் பெருஞ்சமிதைகள் அமைத்தனன் அனலில்
தும்பை மாம் மலர் தூவினன் காரி என் சொரிந்தான்
கொம்பு பல்லோடு கரிய வெள்லாட்டு இருங்குருதி
வெம்பு வெந்தசை முறையின் இட்டு எண்ணெயால் வேட்டான்"
என்று வேள்விகளைச் செய்து முறையாகப் பிரமாஸ்திரத்தை இந்திரஜித் ஏவியதாய்க் குறிப்பிடுகின்றார். மேலும் அரக்கர்களில் பலரும் மகோதரனும் மாயைகள் பல புரிந்து தேவேந்திரன் போலும், தேவர்கள் போலும், ரிஷி, முனிவர்கள் போலும் உருமாறி வானரர்களுடன் போரிட்டதாயும் சொல்கின்றார் கம்பர்.
பாடல் எண் 2550
கோடு நான்குடைப் பால் நிறக் களிற்றின் மேல் கொண்டான்
ஆடல் இந்திரன் அல்லவர் யாவரும் அமரர்
சேடர் சிந்தனை முனிவர்கல் அமர் பொரச் சீறி
ஊடு வந்து உற்றது என்கொலோ நிபம் என உலைந்தார்."என்று வானரர்கள் வருந்தியதாயும், அந்த வேளையில் இந்திரஜித் தன்னுடைய பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகம் செய்ததாயும், லட்சுமணனும், வானரர்களும் அதனால் செயலற்று விழுந்ததாயும் சொல்கின்றார். அனுமனும் கூட பிரமாஸ்திரத்தில் கட்டுண்டதாகத் தெரிவிக்கின்றார் கம்பர். அப்போது ராமன் வேறிடத்தில் இருந்ததாயும், பின்னர் போருக்கு முறையான ஏற்பாடுகள் செய்துகொண்டு ஏதும் அறியாமலேயே புறப்பட்டு வந்ததாகவுமே கம்பர் சொல்கின்றார். பிரமாஸ்திரத்தில் ராமனும் கட்டுண்டது பற்றிய செய்தி கம்பனில் இல்லை.
பாடல் எண்:2570
செய்ய தாமரை நாள் மலர்க்கைத்தலம் சேப்ப
துய்ய தெய்வ வான் படைக்கு எலாம் வரன் முறை துரக்கும்
மெய்கொள் பூசனை விதிமுறை இயற்றி மேல் வீரன்
மொய் கொள் போர்க்களத்து எய்துவாம் இனி என முயன்றான்."
போர்க்களம் வந்த ராமன், வானர வீரர்கள் மட்டுமின்றி, சுக்ரீவன், அனுமன், லட்சுமணன் அனைவரையும் இழந்துவிட்டோமே எனக் கதறுவதாயும் சொல்கின்றார். லட்சுமணனை நினைத்து ராமன் புலம்புவதாயும் கம்பர் கூறுகின்றார்.
"மாண்டாய் நீயோ யான் ஒரு போதும் உயிர் வாழேன்
ஆண்டான் அல்லன் நானிலம் அந்தோ பரதன் தான்
பூண்டார் எல்லாம் பொன்றுவர் துன்பப் பொறையாற்றுவர்
வேண்டாவோ நான் நல் அறம் அஞ்சி மெலிவுற்றான்"
என்று சொல்லும் கம்பர், துக்கம் தாங்காமல் லட்சுமணனை அணைத்த வண்ணமே ராமன் துயிலுற்றதாயும் சொல்கின்றார்.
பாடல் எண் 2602
என்று என்று ஏங்கும் விம்மும் உயிர்க்கும் இடை அஃகி
சென்று ஒன்ரு ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவு எய்த
பொன்றும் என்னும் நம்பியை ஆர்வத்தோடு புல்லி
ஒன்றும் பேசான் தன்னை மறந்தான் துயில்வுற்றான்." என்று ராமன் தன்னை மறந்து உறங்கியதாய்ச் சொல்லும் கம்பர் ராமனை தேவர்கள் உண்மையை உணர்த்தி எழுப்புவதாயும் கூறுகின்றார். ஆனால் வால்மீகியில் இதெல்லாம் கிடையாது. இதற்கெல்லாம் பின்னரே, ராமனும் இறந்துவிட்டான், என நினைத்த அரக்கர்கள் ராவணனிடம் சென்று நீ ஜெயித்தாய், உன் பகைவன் ஒழிந்தான் எனக் கூறுவதாயும், சீதையை ராவணன் போர்க்களம் காண அப்போது அழைத்து வந்ததாயும் சொல்கின்றார் கம்பர்.
பாடல் எண் 2612
என் வந்தது நீர் என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப எறி செருவில்
நின் மைந்தந்தன் நெடுஞ் சரத்தால் துணைவர் எல்லாம் நிலம் சேர
பின் வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கிப் பெருந்துயரால்
முன் வந்தவனும் முடிந்தான் உன் பகை போய் முடிந்தது என மொழிந்தார்." என்று சொல்கின்றார்.
இதன் பின்னர் சீதை களம் கண்டு திரும்பிய பின்னரே மருத்து மலைப் படலம். நாளைக்கும் கம்பர் தானோ??? சில முக்கியமான இடங்களில் ஒப்பு நோக்குவதைத் தவிர்க்க முடியவில்லை.
இதன் பின்னரே சீதை போர்க்களம் வந்து ராம, லட்சுமணர்களும், வானரப் படைகளும் மயங்கி வீழ்ந்திருப்பது கண்டு துயரம் மிகக் கொண்டதாயும் திரிசடை என்னும் அரக்கி அவளைத் தேற்றியதாயும் கூறும் கம்பர், இதன் பின்னரே, விபீஷணன்,ராமன் ஆணையின் பேரில் ராமனுக்கு உணவு கொண்டு வரச் சென்றவன் போர்க்களம் வந்து அனைவரும் கிடந்த நிலை கண்டு துயருற்றதாயும், அனுமனைத் தேடிக் கண்டுபிடித்து மயக்கம் தெளிவித்ததாயும் கூறுகின்றார்.
மருத்துமலைப் படலம்: பாடல் எண் 2655
"கண்டு தன் கண்களூடு மழை எனக் கலுழி கால
உண்டு உயிர் என்பது உன்னி உடற் கணை ஒன்று ஒன்று ஆக
விண்ட நீர்ப்புண்ணின் நின்று மெல்லென விரைவின் வாங்கி
கொண்டல் நீர் கொணர்ந்து கோல முகத்தினைக் குளிரச் செய்தான்."
இதன் பின்னர் ஜாம்பவானை அவர்கள் இருவரும் தேடிக் கண்டு பிடித்துச் சென்று அடைந்து யோசனை கேட்பதாயும் ஜாம்பவான் மருத்துமலைக்குச் சென்று மூலிகைகள் கொண்டு வரும்படியாக அனுமனை வேண்டுவதாயும் சொல்லுகின்றார்.
பாடல் எண் 2667
"எழுபது வெள்ளத்தோரும் இராமனும் இளைய கோவும்
முழுதும் இவ்வுலகம் மூன்றும் நல் அற மூர்த்திதானும்
வழு இலா மறையும் உன்னால் வாழ்ந்தன ஆகும் மைந்த
பொழுது இறை தாழாது என் சொல் நெறி தரக் கடிது போதி."
என்று அனுமனை மருத்து மலைக்குச் செல்லும் வழியையும் கூறி அனுப்பவதாய்க் கம்பர் கூறுகின்றார். மேலும் இங்கே மலையைப் பெயர்த்து எடுக்கும் அனுமனை மூலிகைகளைக் காக்கும் தேவதைகள் முதலில் தடுப்பதாயும் அனுமன் சொன்ன பதிலில் திருப்தியுற்று அனுமதி அளித்ததாயும் கம்பர் கூற, வால்மீகி அது பற்றி எதுவும் சொல்லவில்லை.
பாடல் எண் 2705, 76
"பாய்ந்தனன் பாய்தலோடும் அம்மலை பாதலத்துச்
சாய்ந்தது காக்கும் தெய்வம் சலித்தன கடுத்து வந்து
காய்ந்தது நீதான் யாவன் கருத்து என்கொல் சுழறுக என்ன
ஆய்ந்தவன் உற்ற தன்மை அவற்றினுக்கு அறியச் சொன்னான்."
"கேட்டு அவை ஐய வேண்டிற்று இயற்றிப் பின் கெடாமல் எம்பால்
காட்டு என உரைத்து வாழ்த்திக் கரந்தன கமலக் கண்ணன்
வாள் தலை நேமி தோன்றி மறைந்தது மண்ணின் நின்றும்
தோட்டனன் அனுமன் மற்று அக்குன்றினை வயிரத் தோளால்."
இதன் பின்னரே ராவணன் தாம் ஜெயித்ததாய் எண்ணிக்களியாட்டங்களில் ஆழ்ந்ததும், பின்னர் உண்மை நிலை தெரிந்து மாயாசீதையை இந்திரஜித் கொல்வதாய்க் காட்டுவதும், நிகும்பலை யாகம் செய்ய மறைந்திருந்து செல்வதும் வருகின்றது. இப்போ இந்திரஜித் யாகம் செய்து கொண்டிருப்பான், நாமும் அங்கே சென்று பார்ப்போமா??? இனி வால்மீகி!
*************************************************************************************பெரும் துக்கத்தில் ஆழ்ந்து கிடந்த ராமரை விபீஷணன் தன் ஆறுதல் வார்த்தைகளால் தேற்றி இவை யாவும் இந்திரஜித்தின் மாயையே என விளக்குகின்றான். ராமருக்கோ முழுதும் மனம் சமாதானம் ஆகவில்லை. அவருடைய அப்போதைய மனநிலையில் விபீஷணன் சொன்னதை முழுதும் அவரால் ஏற்கவும் முடியவில்லை. எனினும் விபீஷணனை மீண்டும் சொல்லும்படி கேட்டுவிட்டு, அவன் சொன்னதை ஒருவாறு ஏற்று, லட்சுமணனை இந்திரஜித்துடன் போர் புரிய ஆயத்தம் செய்து கொள்ளுமாறு ஆணை இடுகின்றார். அவ்வாறே லட்சுமணனும் கிளம்புகின்றான். வானரர்களில் முக்கியமானவர்கள் ஆன அனுமன், ஜாம்பவான், அங்கதன் ஆகியோரும் பெரும்படையோடும், விபீஷணனோடும் லட்சுமணனைப் பின் தொடருகின்றனர். முதலில் நிகும்பிலம் சென்று இந்திரஜித்தின் யாகத்தைத் தடுக்க வேண்டும் என்று அங்கே செல்கின்றனர் அனைவரும். யாகத்தை முடித்துவிட்டால் பின்னர் இந்திரஜித்தை வெல்வது கடினம்.
லட்சுமணன் உடனடியாகக் கடும் தாக்குதலை நிகழ்த்தினான். அம்புகளினால் வானம் மூடப் பட்டது. சூரியனும் மறைந்து போனான், அந்த அம்புக் கூடாரத்தினால். அவ்வளவு அடர்த்தியாக அம்பு மழை பொழிந்தான் லட்சுமணன். நிலைகுலைந்துபோனது அரக்கர் படை எதிர்பாராத தாக்குதலினால். அரக்கர் படையினர் விளைவித்த ஓலக் குரலைக் கேட்டு நிதானமிழந்த இந்திரஜித் யாகம் செய்வதைப் பாதியிலேயே விட்டுவிட்டு வெளியே வந்தான். அரக்கர் படைக்குப் பெரும் சேதத்தை விளைவித்துக் கொண்டிருந்த அனுமன் கண்களில் பட அனுமனைத் தாக்கப் போனான். அப்போது விபீஷணன் லட்சுமணனிடம் இந்திரஜித்தைத் தாக்கும்படிச் சொல்கின்றான். யாகம் செய்யும் இடத்தில் இருந்த ஆலமரம் ஒன்றினைச் சுட்டிக் காட்டிய விபீஷணன், "இந்திரஜித் இந்த ஆலமரத்தினடியில் தான் யாகத்தை முடிப்பான். இந்த இடத்தில் தான் மறைந்திருந்து போருக்கும் கிளம்புவான். ஆகவே அதற்கு முன்னாலேயே அவனை அழித்துவிடு." என்று லட்சுமணனிடம் சொல்ல, லட்சுமணன் இந்திரஜித்தைப் போருக்கு அழைக்கின்றான். இந்திரஜித் அவனை லட்சியம் செய்யாமல், விபீஷணனைத் தூஷித்துப் பேசுகின்றான்.
_இந்திரஜித் மாண்டான். ராவணனின் அன்பு மகனும், தேவேந்திரனையே வென்றவனும், எவராலும் வெல்ல முடியாத யாகங்களைச் செய்து, தன்னை வெற்றி கொள்ள அனைவரையும் திணற அடித்தவனும் ஆன இந்திரஜித் மாண்டான். உண்மையா?? இது உண்மையா?? ராவணனுக்குத் துக்கமும், கோபமும் அடக்க முடியவில்லை. வானரர்களின் ஜெயகோஷம் கேட்கின்றது. அரக்கர்களின் அழுகுரல் கேட்கின்றது. ராவணனின் கோபமும், துவேஷமும், பழிவாங்கும் வெறியும் அதிகம் ஆனது. இயல்பிலேயே எவராலும் அடக்க முடியாத கோபம் கொண்டவன் ஆன ராவணனின் கோபம் பல்மடங்கு பல்கிப் பெருகியது. தவித்தான், திணறினான். துக்கத்தை அடக்க முடியவில்லை. பட்டத்து இளவரசனைப் பறி கொடுத்தேனே எனக் கதறினான். கல்நெஞ்சுக் காரன் என்றாலும் புத்திரசோகம் ஆட்டிப் படைத்தது, அவனையும். அவனுடைய கோபத்தையும், துக்கத்தையும் கண்டு அரக்கர் கூட்டம் அவனருகே வரப் பயந்து ஓடோடி ஒளிந்தனர். கண்ணீர் பெருகி ஓட அமர்ந்திருந்த அவனைக் கண்டு அவனுக்கு ஆறுதல் சொல்ல ஒரு உறவினர் கூட இல்லாத நிலைமை ஏற்பட்டதை நினைத்து அவன் துக்கம் அதிகரிக்க, கண்களிலிருந்து நீர் அருவி போல் பொங்கியது.
---------- Forwarded message ----------
அன்பர்களே,
கம்ப ராமாயண உரையும் ஆங்கில மொழிபெயர்ப்பும் தொடங்கப்பட்டு சில நாள் தொடராமல் நின்று இப்போது மீண்டும் தொடர்கின்றது.
பாற்கடலை நக்கிக் குடிக்க முயன்ற பூனையைப்போல் இந்தக் காரியத்தைத் தொடங்கியிருக்கிறேன் என்று கம்பனே சொல்லிக் கொள்ளும்போது, அற்பத் திறனும் அதிலும் அற்பமான அறிவும் படைத்த நானும் இந்தக் கடலுக்குள் என்னை அமிழ்த்திக் கொள்கிறேன், ஆசைபற்றி அறையலுற்றேன். காரியம் பெரிது. திறன் சிறிது.
எண்ணிக்கையில் 10,500 செய்யுள் உள்ள கம்ப ராமாயணம் முழுமையையும் உரை எழுதி மொழி பெயர்க்கவும் செய்யவேண்டும் என்ற ஆசையும் அதிகப்பாடல்களையும் சேர்த்து 12,500 பாடல்களையும் பூர்த்தி செய்யவேண்டும் என்ற பேராசையும் உண்டு. இந்தப் பணியில் எனக்குக் கைகொடுக்க என்னோடு இணைகிறார், மதுரபாரதி.
பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் சனி, ஞாயிறுதோறும் ஒன்றுகூடி, ஒன்றாக வாசித்து நாங்கள் இருவரும் கம்ப ராமாயணம் முழுவதையும் ஓதி முடித்ததைப் போல, இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் இந்தப் பணியும் நிறைவடைய பெரியவர்களின் ஆசியையும், மற்றவர்களின் வாழ்த்தையும், முருகன் உறுதுணையையும் நாடுகிறேன்.
கம்ப ராமாயண உரை, மொழிபெயர்ப்பு, இதர தொடர்புள்ள விஷயங்களில் என்ன ஐயங்கள் எழுகின்றனவோ, என்னென்ன ஆலோசனைகள் தோன்றுகின்றனவோ அவற்றையெல்லாம் எங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
--
அன்புடன்,
ஹரிகி.
தேரை மும்முறை வலம் வந்து வணங்கிவிட்டு, ராமர் அதில் ஏறி அமர்ந்தார். மீண்டும் சண்டை ஆரம்பம் ஆனது. ஆனால் இம்முறை ராவணனின் கையே ஓங்கி நின்றது. தன் அம்புகளாலும், பாணங்களாலும் ராமரைத் திணற அடித்துக் கொண்டிருந்தான் ராவணன். இலங்கேசுவரனின் இடைவிடாத தாக்குதல்கள் ராமரை நிலைகுலையச் செய்ததோடு அல்லாமல், தன்னுடைய வில்லில் அம்புகளைப் பூட்டி, நாண் ஏற்றவும் முடியாமல் தவிக்கவும் நேரிட்டது அவருக்கு. கோபம் கொண்ட ராமர் விட்ட பெருமூச்சு, பெரும் புயற்காற்றைப் போல் வேகத்தோடு வந்தது. அவர் பார்வையை நான்கு புறமும் செலுத்தியபோது சக்தி வாய்ந்த மின்னல் ஒன்று விண்ணை வெட்டுவது போல் ஒளிவிட்டுப் பிரகாசித்தது. அந்தப் பார்வையில் பொசுங்கிவிடுவோமோ என சகல ஜீவராசிகளும் நடுங்கின. மூச்சின் வேகத்தில் விண்ணில் வட்டமிடும் மேகங்கள் சுழன்றன. கடலானது பொங்கிக் கரைக்கு வரத் தொடங்கியது. சூரியனின் ஒளி குன்றியது. ராவணன் மிக மிகச் சக்தி வாய்ந்த ஒரு ஆயுதத்தைக் கையில் எடுத்தான். ராமரின் கோபத்தைக் கண்டு அஞ்சியவண்ணமே அவன் அந்த ஆயுதத்தைப் பிரயோகிக்க ஆரம்பித்தான். போரில் இறந்த அனைத்து அரக்கர்கள் சார்பிலும் இந்த ஆயுதத்தைச் செலுத்தி ராமரையும், லட்சுமணனையும் , வானரப் படைகளையும் அடியோடு அழிக்கும்படியான வல்லமை பொருந்தியது இந்த ஆயுதம் என்று கூவிக் கொண்டே அதைச் செலுத்தினான் இலங்கேசுவரன்.
ராமர் அந்த ஆயுதத்தைத் தடுக்க முயன்றபோது முதலில் அவரால் முடியவில்லை. பின்னர் இந்திரனின் சிறப்பு வாய்ந்த சூலத்தினால் அந்த ஆயுதத்தைப் பொடிப் பொடியாக்கினார். ராவணனின் குதிரைகளை வெட்டி வீழ்த்திவிட்டு அவன் மார்பில் பாணங்களைச் செலுத்த ஆரம்பித்தார். ராவணன் உடலில் இருந்து செந்நிறக் குருதிப் பூக்கள் தோன்றின. எனினும் ராவணன் தீரத்துடனும், மன உறுதியுடனும் போரிட்டான். அதைக் கண்ட ராமர் அவனைப் பார்த்துக் கோபத்துடன் சொல்கின்றார்:" ஏ, இலங்கேசுவரா! அபலலயான சீதையை, அவள் சம்மதம் இல்லாமலும், தன்னந்தனியாக இருக்கும் வேளையிலும் பார்த்து நீ அபகரித்துக் கொண்டு வந்தாயே? என் பலத்தை நீ அறியவில்லை, அறியாமல் அபகரணம் செய்துவந்த நீயும் ஒரு வீரனா? மாற்றான் மனைவியைக் கோழைத்தனமாய் ஒருவரும் இல்லாத சமயம் கொண்டு வந்து வைத்துள்ள நீயும் ஒரு வீரனா? உனக்கு வெட்கமாய் இல்லையா? மனசாட்சி உள்ளவர்களுக்கே ஏற்படும் தயக்கமும், வெட்கமும் உனக்கு அப்போது ஏற்படவில்லையா? நீ இந்தக் காரியம் செய்ததினால் உன்னை, வீராதி வீரன், என்றும் சூராதி சூரன் என்றும் நினைத்துக் கொண்டுள்ளாய் அல்லவா? அது தவறு என உனக்குத் தெரியாமல் போனதும், உனக்கு வெட்கமும், அவமானமும் ஏற்படாததும் விந்தை தான். என் முன்னே நீ அப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்க முடியுமா? அது முடியாதென்பதால் தானே, என்னை அப்புறப்படுத்திவிட்டு, நான் இல்லாதபோது என் மனைவியை அபகரித்து வந்திருக்கின்றாய்? உன்னை நான் இன்றே கொல்லுவேன். உன் தலையை அறுத்துத் தள்ளப் போகின்றேன். என் அம்பினால் உன் மார்பு பிளக்கப் பட்டு குருதி பெருகும். அந்தக் குருதியைக் கழுகுகளும், பறவைகளும் வந்து பருகட்டும். " என்று ராமர் கூறிவிட்டு ராவணன் மீது மீண்டும் அம்பு மழை பொழியத் தொடங்கினார். கூடவே வானரர்களும் சேர்ந்து ராவணனைத் தாக்கத் தொடங்கினார்கள். தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ராவணன் பிரமித்து நிற்கவே, செய்வதறியாது திகைத்த அவனைக் காக்க வேண்டி, ராவணனின் தேரோட்டி, தேரை யுத்த களத்தில் இருந்து திருப்பி வேறுபக்கம் ஓட்டிச் சென்றான். ராவணனுக்குக் கோபம் பெருகியது. மிக்க கோபத்துடன் அவன் தேரோட்டியைக் கடிந்து கொள்ளத் தொடங்கினான்.
"என்னுடைய விருப்பத்தைத் தெரிந்து கொள்ளாமல், நீ எப்படி தேரைத் திருப்பிக் கொண்டு வரலாம். என்னைக் கோழை என நினைத்தாயோ? அற்பமதி படைத்தவன் என நினைத்தாயோ??? உன் இஷ்டப் படி தேரைத் திருப்பிவிட்டாயே? தீயவனே! எதிரியின் கண் எதிரேயே என்னை இவ்வாறு இழிவு செய்த நீ எனக்கு எப்படி நண்பனும், ஊழியனும் ஆவாய்?? எப்படி இவ்வாறு செய்யத் துணிந்தாய்?? ஆஹா, என்னுடைய போர்த்திறனையும், இத்தனை காலமாய்ப் பல தவங்களும், விரதங்களும், வழிபாடுகளும், வேள்விகளும் நடத்தை நான் பெற்ற அனைத்துக் கெளரவங்களையும் இந்த ஒரு நொடியில் நாசமாக்கி விட்டாயே? முதலில் தேரைத் திருப்புவாயாக! என்னிடமிருந்து நீ பெற்ற நன்மைகளை மறந்துவிட்டாயா?? " என்று கடுமையாகக் கடிந்து கொள்கின்றான்.
தேரோட்டி மிக்க வணக்கத்துடன், "ஐயா, தங்களிடமிருந்து பெற்ற நன்மைகளை நான் மறந்து செய்ந்நன்றி கொன்றவன் ஆகிவிடவில்லை. எதிரிகள் யாரும் என்னை அவர்கள் பக்கம் இழுத்தும் விடவில்லை. தங்கள் நன்மைக்காக வேண்டியே நான் தேரைத் திருப்பவேண்டியதாயிற்று. மேலும் தாங்களும், கடும் யுத்தத்தின் காரணமாயும், மன உளைச்சல் காரணமாயும் களைத்துவிட்டீர்கள். தங்கள் தேரின் இந்தக் குதிரைகளும் களைத்துவிட்டன. உங்கள் வீரம் நான் அறியாத ஒன்றா?? நான் தேரை மட்டும் ஓட்டினால் சரியாகவும் இருக்காது ஐயா, தங்கள் பலம், வீரம் மட்டுமின்றி உங்கள் உடல் சோர்வு, மனச்சோர்வு அனைத்தையுமே நான் கவனித்தாகவேண்டும். உங்கள் உடல்நிலையோ, மனநிலையோ மேலும் யுத்தம் செய்யக் கூடிய தகுதியில் இருக்கின்றதா எனவும் நான் கவனிக்கவேண்டும். ஐயா, தேரைச் செலுத்தும் பூமியைக் கூட நான் கவனித்து, எங்கே வேகம் வேண்டுமோ, அங்கே வேகமாயும், எங்கே மெதுவாய்ச் செல்லவேண்டுமோ, அங்கே மெதுவாயும், எந்த இடத்தில் எதிரிப் படையை ஊடுருவ முடியுமோ அங்கே ஊடுருவதல் செய்தல் , எப்போது பின்வாங்க வேண்டுமோ அப்போது பின் வாங்குதல் என முறையாகச் செய்யவேண்டும் ஐயா! இதில் தங்கள் நலன் ஒன்றே என் கருத்து." என்று மிகவும் தயவாகச் சொல்கின்றான்.
விபீஷணன் விம்மி, விம்மி அழுதான்.
ராவணன் கொல்லப் பட்டான். அரக்கர்களின் தலையாய தலைவன், இந்திரனை வென்றவன், பிரம்மாவின் வரங்களைப் பெற்றவன், தனக்கு நிகர் தானே தான் என்று பெருமையுடன் இருந்தவன் கொல்லப் பட்டான். பலவிதமான யாகங்களையும், வழிபாடுகளையும் செய்தவன், சிவபக்திச் செல்வன், சாமகான வித்தகன், கொல்லப் பட்டான். எதனால்?? பிறன் மனை விழைந்ததினால். இத்துணைச் சிறப்புக்களையும் பெற்றவன் பிறன் மனை விழைந்த ஒரே காரணத்தினால் ஒரு மனிதனால் கொல்லப் பட்டான். அரக்கர் குலமே திகைத்து நின்றது. விபீஷணன், அவ்வளவு நேரம், தன்னுடைய உடன்பிறந்த மூத்த சகோதரனைக் கொல்ல வேண்டி யோசனைகள் சொல்லிக் கொண்டிருந்தவன், இப்போது கதறி அழ ஆரம்பித்தான். "தானாடாவிட்டாலும், தன் சதைஆடும் என்பது உறுதியாகிவிட்டதோ??? பலவாறு ராவணனின் பெருமையைச் சொல்லிச் சொல்லிக் கதறுகின்றான் விபீஷணன். சுத்த வீரனும், பெருமை வாய்ந்தவனும், தர்ம வழியிலும், அற வழியிலும் அரசை நடத்தியவன் என்று வேறு கூறுகின்றான். துக்கம் அளவுக்கு மீறியதாலும், தன்னுடைய அண்ணன் என்ற பாசத்தாலும் விபீஷணன் நிலை தடுமாறித் தன்னை மறந்தானோ??
ராமர் விபீஷணனைத் தேற்றுகின்றார். போர்க்களத்தில் கடும் சண்டை போட்டு வீர மரணம் அடைந்த க்ஷத்திரியர்களுக்காக அழுவது சாத்திரத்துக்கும், தர்மத்துக்கும் விரோதமானது என்கின்றார். தன் வீரத்தைக் காட்டிவிட்டே ராவணன் இறந்திருக்கின்றான் என்று கூறும் ராமர் அவன் சக்தியற்றுப் போய் வீரமிழந்து போய் இறக்கவில்லை என்றும் எடுத்துச் சொல்கின்றார். மேலும் தேவேந்திரனையும், தேவர்களையும், ராவணன் அச்சுறுத்தி வந்ததையும் எடுத்துச் சொல்லி, ராவணன் இறந்தது உலக நன்மைக்காகவே, என்றும் இதற்காக வருந்த வேண்டாம், எனவும் மேலே ஆகவேண்டியதைப் பார்க்கும்படியாகவும் விபீஷணனிடம் சொல்ல, அவனும் ராவணன் ஒரு அரசனுக்கு உரிய மரியாதைகளுடன் ஈமச்சடங்குகளைப் பெறவேண்டும் என்றும், தானே அவனுக்கு ஈமச் சடங்குகளைச் செய்வதாயும் கூற, ராமரும் அவ்வாறே ஆகட்டும், இறந்தவர்களிடம் பகைமை பாராட்டுவது அழகல்ல, ஆகையால் ராவணன் இனி எனக்கும் உரியவனே. அவனுக்கு உரிய மரியாதையுடன் அவன் ஈமச் சடங்குகள் நடக்கும் என உறுதி அளிக்கின்றார். இந்நிலையில் ராவணனின் மனைவிமார்களும் பட்ட மகிஷியான மண்டோதரியும் வந்து தங்கள் துக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு அழுகின்றார்கள். மண்டோதரி ராவணன் தன் பேச்சைக் கேட்டிருந்தால், சீதையை விடுவித்திருந்தால், ராமருடன் நட்புப் பாராட்டி இருந்தால் இக்கதி நேரிட்டிருக்காதே எனப் புலம்ப அனைவரும் அவளைத் தேற்றுகின்றார்கள்.
ராமரின் கோபத்தைப் புரிந்துகொண்ட விபீஷணன் அவ்வாறே செய்ய, லட்சுமணன், அனுமன் சுக்ரீவன் போன்றோர் மனம் மிக வருந்தினர். சீதையின் மீது ராமருக்குள்ள அன்பையும், அவள் இல்லாமல் ராமர் துடித்த துடிப்பையும் கண்ணால் கண்டு வருந்திக் கொண்டிருந்த அவர்களுக்கு, ராமர் சீதையின்மேல் ஏதோ கோபத்துடன் இருக்கின்றார் எனப் புரிந்து கொண்டார்கள். கோபத்தின் காரணம் தெரியவில்லை. சீதையோ ஏதும் அறியாதவளாகவே, மிக்க மகிழ்வோடு பல்லக்கை விட்டு இறங்கி, ராம்ரின் எதிரே வந்து நின்று, தன் கணவனைக் கண்ணார, மனமார,தன் ஐம்புலன்களும் மகிழ்வுறும்படியான மகிழ்வோடு பார்த்தாள். இது என்ன?? ராமரின் முகம் ஏன் சுருங்குகின்றது? ஏன் பொலிவில்லாமல் காட்சி அளிக்கின்றது? எல்லாம் நம்மை ஒருமுறை பார்த்தாரானால் சரியாகிவிடும், சீதை மீண்டும் ராமரை நோக்க, ராமரின் வாயிலிருந்து வரும் சொற்களோ இடிபோல் சீதையின் காதில் விழுகின்றது. தன் காதையே நம்பமுடியாதவளாய்ச் சீதை ராமரை வெறிக்கின்றாள். அப்படி என்னதான் ராமர் சொன்னார்?
சீதை திகைக்க, வானரங்களும், அரக்கர்களும், விபீஷணனும், சுக்ரீவனும் நடுங்கினர். லட்சுமணன் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருகியது. உலகே ஸ்தம்பித்து நின்றுவிட்டது போலும் காட்சி அளித்தது. ராமரோ மேலும் சொல்கின்றார்:"ராவணனால் தூக்கிச் செல்லப் பட்டபோது அவன் கைகளுக்கிடையே சிக்கியவளும், அவனால் தீய நோக்கத்தோடு பார்க்கப்பட்டவளும் நீயே! இப்படிப் பட்ட உன்னை குலப்பெருமையக் காப்பாற்ற வேண்டிய நான் எவ்வாறு ஏற்க முடியும்?? உன்னை நான் மீட்டதின் காரணமே, என் குலப் பெருமையை நிலைநாட்டவும், எனக்கு இழைக்கப் பட்ட அவமதிப்பு நீங்கவுமே. உனக்கு எங்கே, எவருடன் இருக்க இஷ்டமோ அவர்களோ நீ இருந்து கொள்வாய். இத்தனை பேரழகியான உன்னை, ராவணன் இடத்தில் பதினான்கு மாதங்கள் இருந்த உன்னை, பிரிந்திருப்பதை ராவணன் வெகுகாலம் தாங்கி இருந்திருக்க மாட்டான்." ராமரின் இந்தக் கொடிய வார்த்தைகளைக் கேட்ட சீதை, கதறி அழுதாள். பின்னர் தன் அழுகையைக் கட்டுப் படுத்திக் கொண்டு பேசுகின்றாள்:" ஒரு அற்ப மனிதன், தன் மனைவியிடம் பேசுகின்ற முறையில் தாங்கள் இப்போது என்னிடம் பேசினீர்கள். நீங்கள் நினைப்பதுபோல் நான் நடக்கவில்லை என்பது தங்கள் மனதுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஒழுக்கமற்ற பெண்கள் இருக்கின்றார்கள் தான். அதை வைத்து அனைத்துப் பெண்களையும் ஒரே மாதிரி எனச் சிந்திக்கக் கூடாது அல்லவா? ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டது என் விருப்பத்தின் பேரில் நடந்த ஒன்றல்லவே? அப்போது நான் எதையும் செய்யமுடியாத நிலையில் அல்லவோ இருந்தேன்? ஆனால் என் உடல் தான் அவனால் தூக்கிச் செல்லப் பட்டதே தவிர, என் உள்ளம் தங்களையே நினைத்துக் கதறிக் கொண்டிருந்தது. தங்கள் தூய அன்பை உணர்ந்த நான் பிறிதொருவரின் அன்பையும் விரும்புவேனோ?
"என் இதயம் ராமரை விட்டு அகலாதது என்றால் ஏ அக்னியே, நான்கு திசைகளிலும் என்னைக் காப்பாய்!
என் நடத்தை அப்பழுக்கற்றது என்றால் ஏ அக்னியே, நான்கு திசைகளிலும் என்னைக் காப்பாய்!
மனம், வாக்கு, காயம் என்ற உணர்வுகளினால் நான் தூய்மையானவள் தான் என்றால், ஏ அக்னியே என்னைக் காப்பாய்!
ஏ சூரியதேவா, ஏ சந்திர தேவா, ஏ வாயுதேவா,
திக்குகளுக்கு அதிபதிகளே,
வருணா, பூமாதேவியே! உஷத் கால தேவதையே!
பகலுக்கு உரியவளே, சந்தியாகால தேவதையே
இரவுக்கு உரியவளே,
நீங்கள் அனைவருமே நான் தூய்மையானவள், பவித்திரமானவள் என்பதை நன்கு அறிவீர்கள் என்பது உண்மையானால், ஏ அக்னியே நான்கு திசைகளிலும் என்னைக் காப்பாய்!"
இவ்வாறு உரக்கப் பிரார்த்தித்துக் கொண்டு, சற்றும் அச்சமில்லாமல், குளிர் நீரிலோ, நிலவொளியிலோ பிரயாணம் செய்வதைப் போன்ற எண்ணத்துடன் சீதை அக்னிக்குள் பிரவேசித்தாள். அங்கே குழுமி இருந்தவர்கள் அனைவருமே அலறித் துடித்தனர். ராமர் கண்களிலிருந்து ஆறாகக் கண்ணீர் பெருகியது. லட்சுமணன் இந்தக் காட்சியைக் காணச் சகியாமல் முகத்தை மூடிக்கொண்டு அழுதான். வானரங்களும், அரக்கர்களும் பதறித் துடித்தனர். விண்ணிலிருந்து தேவர்களும், ரிஷி, முனிவர்களும் இந்த அக்னிப்ரவேசத்தைப் பார்த்துக் கொண்டு செய்வதறியாமல் திகைத்தனர். அக்னிக்குள் ப்ரவேசித்த சீதையோ தங்கம் போல் ஒளியுடனே பிரகாசித்தாள்.
*************************************************************************************
இப்போது ராமர் செய்தது சரியா, தவறா என்ற விவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும். சீதை அக்னிக்குள் ப்ரவேசம் செய்தபோது சொன்ன வார்த்தைகள் கம்பராமாயணத்தில் வேறு மாதிரியாக வருகின்றது. அது பற்றிய விவாதங்கள் இன்னும் முடியவில்லை. சீதை என்ன சொல்கின்றாள், கம்பர் வாயிலாக என்று பார்ப்போமா? அப்புறம் அது பற்றிய தமிழறிஞர் ஒருவரின் கருத்தும், அது பற்றிய அந்தத் தமிழறிஞர் குறிப்பிட்டுச் சொல்லும் ஆங்கில நாடகம் ஒன்றின் குறிப்பும், பார்க்கலாம். கருத்துச் சொல்ல விரும்புபவர்கள் சொல்லலாம்.
குறிப்பிட்ட கட்டுரை, பிரதி எடுக்க முடியவில்லை. ஆகவே அதைக் கீழே தட்டச்சு செய்கின்றேன்.
"நீதிபதி மகாராஜன் அவர்கள் கம்பனைக் கண்டு ஆனந்தித்தவர். அவர் ஒரு நிகழ்ச்சியில் சொல்லி இருக்கின்றார். என்பதாய்க் கட்டுரை ஆரம்பிக்கின்றது. இந்தக் குறிப்பிட்ட சொற்பொழிவு, நீதிபதி மகாராஜன் அவர்களால், பேராசிரியரும், இலக்கிய அறிஞரும் ஆன திரு அ.சீனிவாச ராகவன் அவர்களின் இலக்கிய ஆய்வைக் குறித்தது. திரு அ.சீனிவாசராகவன் அவர்கள் சீதை சொன்ன வார்த்தைகளுக்கு எவ்வாறு நாம் பொருள் கொள்ளவேண்டும் என்பதை ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ நாடகத்தில் டெஸ்டிமோனோ சொல்லும் வார்த்தைகளைக் கொண்டு நிரூபிக்கின்றார் என்பதாய்க் கட்டுரை வருகின்றது. இனி கட்டுரையும், சீதை சொன்ன வார்த்தைகளாய்க் கம்பன் சொல்வதும்.
அக்னிப் ப்ரவேசத்துக்குத் தயார் ஆவது சீதைதான் என்றும், அவளே லட்சுமணனிடம் அக்னியை மூட்டும்படிச் சொல்லுகின்றாள் எனவும், ராமர் அதற்கு மறுப்புச் சொல்லாததில் இருந்து அவருக்கும் இது சம்மதமே எனவும், வால்மீகி எழுதி இருக்கின்றார். கம்பரும் அதை ஒட்டியே எழுதி இருக்கின்றார். எனினும் வால்மீகி, மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றையும் சீதை சொல்வதாய்ச் சுட்டிக் காட்டி இருக்கின்றார். ஆனால் கம்பர் இங்கே என்ன எழுதுகின்றார் எனில், மீட்சிப் படலம்: சீதையின் துயர நிலை: பாடல் எண்: 3976
<strong><span style="color:#ff0000;">கனத்தினால் கடந்த பூண் முலைய கைவளை
மனத்தினால் வாக்கினால் மறு உற்றேனெனின்
சினத்தினால் சுடுதியால் தீச் செல்வா என்றாள்
புனத் துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள்</span></strong>" என்று சொல்கின்றார். ஆனால் கம்பரோ எனில் சீதையை, ராவணன் தூக்கிச் செல்லும்போது, அந்தப் பர்ணசாலையையே பெயர்த்தெடுத்ததாய்த் தான் சொல்லுகின்றார். வால்மீகி, ராவணன் தொட்டுத் தூக்கித் தன் தொடையில் இடுக்கிக் கொண்டு சென்றதாகவே சொல்லிவிடுகின்றார். இவ்வாறு இருக்கும்போது வால்மீகி சொல்லும்போது, சீதை, <strong><span style="color:#ff0000;">மனம், வாக்கு, காயம்</span></strong> என்ற மூன்றையும் குறிப்பிட்டுச் சொல்லுவதாயே சொல்லுகின்றார். ஆனால் கம்பரோ எனில், <strong><span style="color:#cc33cc;">"மனத்தினால்</span></strong> <strong><span style="color:#cc33cc;">வாக்கினால் மறு உற்றேனெனின்</span></strong>" என்று சீதை சொல்லுவதாய்ச் சொல்கின்றார். இந்த வாக்கே பெரும்பாலும் நம் தமிழறிந்த நல்லோர்களால் ஏற்கப் பட்டிருப்பதால் இது என்ன? இவ்வாறு சீதை சொல்லி இருப்பதால் உடலால் சீதை கெட்டிருப்பாள் என்றல்லவோ எண்ண நேரிடுகின்றது? என மனதுக்குள்ளாகவாவது எண்ணுகின்றனர் அல்லவா?
ஆனால் இந்தப் புதிரைத் தான் பேராசிரியர் அ.சீனிவாச ராகவன் அவர்கள் விடுவித்ததாய், நீதிபதி திரு மகாராஜன் கூறுகின்றார். அவர் கூறுவதாவது:
"சில ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் நடந்த இலக்கிய நிகழ்ச்சியில் அதுவரை விடுபடாத ஒரு புதிரை பேராசிரியர் அ. சீனிவாச ராகவன் அவர்கள் விடிவித்தார். அதுவரை பண்டிதமணி, சோமசுந்தரபாரதி போன்றவர்களால் கூடத் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட புதிர் அது. அக்னி பிரவேசத்தின்போது சீதை தீயை வலம் வந்து,
"மனத்தினால் வாக்கால், மறுவுற்றேனெனில்
சினத்தினால் சுடுதியால் தீச்செல்வா" என்கின்றாள். அவள் ஏன் மெய்யால் என்று சொல்லவில்லை என்பதுதான் புதிர்.
If I have been sullied
In mind or speech,
Burn me, Oh, Fire-God,
With all thy ire" என்பது பேராசிரியரின் ஆங்கில ஆக்கம். விடை காண முடியாமல் அறிஞர்கள் திணறிய இந்தப் புதிருக்குத் தீர்வை அந்தக் கோயம்புத்தூர் நிகழ்ச்சியில் சொன்னார் பேராசிரியர்.
ஷேக்ஸ்பியரின் நாடகமான ஒதெல்லோவில் வில்லன் இயகோ ஒதெல்லோ மனதில் சந்தேகத்தைத் தோற்றுவித்து விடுகின்றான். அதைக் கேட்டுவிட்டு ஒதெல்லோ டெஸ்டிமோனோவைச் சொல்லத் தகாத வார்த்தையால் திட்டுகின்றான். அப்பொழுது ஒன்றும் தெரியாதவன் போல் இயாகோ வருகிறான். அவனிடம் டெஸ்டிமோனா கேட்கிறாள்:
<strong><span style="color:#ff6600;">"எனக்கு அந்தப் பெயரா இயாகோ?"
எந்தப் பெயர் ராணி?"
இதோ இவள் சொல்கிறாளே நான் அது என்று அவர் சொன்னாரென்று."</span></strong>
இதோ கீழே டெஸ்டிமோனாவின் வார்த்தைகளும், ஒதெல்லோ அவளைச் சொன்ன வார்த்தையும்.
Impudent strumpet!
DESDEMONA DESDEMONA
I cannot tell. Those that do teach young babes
Do it with gentle means and easy tasks:
He might have chid me so; for, in good faith,
I am a child to chiding.
IAGO
What's the matter, lady?
EMILIA
Alas, Iago, my lord hath so bewhored her.
Thrown such despite and heavy terms upon her,
As true hearts cannot bear.
DESDEMONA
Am I that name, Iago?
IAGO
What name, fair lady?
DESDEMONA
Such as she says my lord did say I was.
EMILIA
He call'd her whore: a beggar in his drink
Could not have laid such terms upon his callat.
ஒதெல்லோ சொன்னதாகச் சொல்லப் படும் அந்தச் சொல்லைக் கூடச் சொல்லுவதற்கு டெஸ்டிமோனோவின் உயர்குடிப் பிறப்பும், அவளுடைய கற்பும் தடுக்கின்றது. சீதைக்கும் அதே நிலைமைதான். "மெய்" தூய்மை பற்றிய களங்கம் மக்களால் கற்பனை செய்து பார்க்க இயலும். கதை கட்டிவிடவும் முடியும். எனவே அதைச் சொல்லக் கூசுகின்றாள் சீதை. இந்தத் தீர்வை அங்கே இருந்த பேராசிரியர்கள் ஏற்றுக் கொண்டனர். இது இலந்தை ராமசாமி என்பவரால் எழுதப் பட்ட "இலக்கியச் சீனி அ.சீ.ரா. வாழ்வும், வாக்கும் என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்டது.
மேலும் சீதைக்கு ராமன் மனது தெரியாமலோ,ராமனுக்கு சீதையின் மனம் தெரியாமலோ, அல்லது அவள் கற்பிற் சிறந்தவள் எனத் தெரியாமலோ இல்லை. எனினும், உலகத்தார் கண் முன்னால் சீதை தன் கற்பை நிரூபிக்கவேண்டும் எனவே ராமன் விரும்பி இருக்கின்றான். சீதையும் தன் கணவனின் மனக் குறிப்பை அறிந்து அதை நிறைவேற்றத் துணிந்திருக்கிறாள். இதையே சீதை நெருப்பிலிருந்து மாசுபடாமல் வெளியே வந்தபோது ராமரும் தன்னிலை விளக்கமாயும் அளிக்கின்றார். எனினும் ஒரு மானுடனாகவே வாழ்ந்த ராமர் இந்த இடத்திலும் மானுடனாகவே, சாதாரண மனிதன் எவ்வாறு தன் மனைவியிடம் கோபத்துடனும், அதிகாரத்துடனும், கடுமையாகவும் நடப்பானோ அவ்வாறே நடந்து, தான் மனிதனாய் இருப்பதில் இருந்து சற்றும் மாறவில்லை என நிரூபித்திருக்கின்றார் என்றும் கொள்ளலாம்.
<strong><span style="color:#33ccff;">இலந்தை ராமசாமி</span></strong> எழுதிய இந்தப் புத்தகத்தின் மின்னாக்கத்தை எனக்குக் கொடுத்து உதவிய முத்தமிழ்க்குழும சகோதரருக்கும், ஒதெல்லோ நாடகப் பிரதியைக் கொடுத்து உதவிய முத்தமிழ்க் குழும சகோதரருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அக்னிப் ப்ரவேசத்துக்குத் தயார் ஆவது சீதைதான் என்றும், அவளே லட்சுமணனிடம் அக்னியை மூட்டும்படிச் சொல்லுகின்றாள் எனவும், ராமர் அதற்கு மறுப்புச் சொல்லாததில் இருந்து அவருக்கும் இது சம்மதமே எனவும், வால்மீகி எழுதி இருக்கின்றார். கம்பரும் அதை ஒட்டியே எழுதி இருக்கின்றார். எனினும் வால்மீகி, மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றையும் சீதை சொல்வதாய்ச் சுட்டிக் காட்டி இருக்கின்றார். ஆனால் கம்பர் இங்கே என்ன எழுதுகின்றார் எனில், மீட்சிப் படலம்: சீதையின் துயர நிலை: பாடல் எண்: 3976
ஷேக்ஸ்பியரின் நாடகமான ஒதெல்லோவில் வில்லன் இயகோ ஒதெல்லோ மனதில் சந்தேகத்தைத் தோற்றுவித்து விடுகின்றான். அதைக் கேட்டுவிட்டு ஒதெல்லோ டெஸ்டிமோனோவைச் சொல்லத் தகாத வார்த்தையால் திட்டுகின்றான். அப்பொழுது ஒன்றும் தெரியாதவன் போல் இயாகோ வருகிறான். அவனிடம் டெஸ்டிமோனா கேட்கிறாள்:
எனக்கு அந்தப் பெயரா இயாகோ?"
எந்தப் பெயர் ராணி?"
இதோ இவள் சொல்கிறாளே நான் அது என்று அவர் சொன்னாரென்று
இதோ கீழே டெஸ்டிமோனாவின் வார்த்தைகளும், ஒதெல்லோ அவளைச் சொன்ன வார்த்தையும்.
Impudent strumpet!
DESDEMONA DESDEMONA
I cannot tell. Those that do teach young babes
Do it with gentle means and easy tasks:
He might have chid me so; for, in good faith,
I am a child to chiding.
IAGO
What's the matter, lady?
EMILIA
Alas, Iago, my lord hath so bewhored her.
Thrown such despite and heavy terms upon her,
As true hearts cannot bear.
DESDEMONA
Am I that name, Iago?
IAGO
What name, fair lady?
DESDEMONA
Such as she says my lord did say I was.
EMILIA
He call'd her whore: a beggar in his drink
Could not have laid such terms upon his callat.
ஒதெல்லோ சொன்னதாகச் சொல்லப் படும் அந்தச் சொல்லைக் கூடச் சொல்லுவதற்கு டெஸ்டிமோனோவின் உயர்குடிப் பிறப்பும், அவளுடைய கற்பும் தடுக்கின்றது. சீதைக்கும் அதே நிலைமைதான். "மெய்" தூய்மை பற்றிய களங்கம் மக்களால் கற்பனை செய்து பார்க்க இயலும். கதை கட்டிவிடவும் முடியும். எனவே அதைச் சொல்லக் கூசுகின்றாள் சீதை. இந்தத் தீர்வை அங்கே இருந்த பேராசிரியர்கள் ஏற்றுக் கொண்டனர். இது இலந்தை ராமசாமி என்பவரால் எழுதப் பட்ட "இலக்கியச் சீனி அ.சீ.ரா. வாழ்வும், வாக்கும் என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்டது.
மேலும் சீதைக்கு ராமன் மனது தெரியாமலோ,ராமனுக்கு சீதையின் மனம் தெரியாமலோ, அல்லது அவள் கற்பிற் சிறந்தவள் எனத் தெரியாமலோ இல்லை. எனினும், உலகத்தார் கண் முன்னால் சீதை தன் கற்பை நிரூபிக்கவேண்டும் எனவே ராமன் விரும்பி இருக்கின்றான். சீதையும் தன் கணவனின் மனக் குறிப்பை அறிந்து அதை நிறைவேற்றத் துணிந்திருக்கிறாள். இதையே சீதை நெருப்பிலிருந்து மாசுபடாமல் வெளியே வந்தபோது ராமரும் தன்னிலை விளக்கமாயும் அளிக்கின்றார். எனினும் ஒரு மானுடனாகவே வாழ்ந்த ராமர் இந்த இடத்திலும் மானுடனாகவே, சாதாரண மனிதன் எவ்வாறு தன் மனைவியிடம் கோபத்துடனும், அதிகாரத்துடனும், கடுமையாகவும் நடப்பானோ அவ்வாறே நடந்து, தான் மனிதனாய் இருப்பதில் இருந்து சற்றும் மாறவில்லை என நிரூபித்திருக்கின்றார் என்றும் கொள்ளலாம்.
இலந்தை ராமசாமி எழுதிய இந்தப் புத்தகத்தின் மின்னாக்கத்தை எனக்குக் கொடுத்து உதவிய முத்தமிழ்க்குழும சகோதரருக்கும், ஒதெல்லோ நாடகப் பிரதியைக் கொடுத்து உதவிய முத்தமிழ்க் குழும சகோதரருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஆகவே தான் தன் மேல் உள்ள நம்பிக்கையாலேயே சீதை தன் கணவன் தன்னை இவ்வாறு பேசும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்து கொண்டாள் என்றே சொல்லவேண்டும். அக்னி கூடத் தீண்ட அஞ்சும் அளவுக்கு சீதை பரிசுத்தமானவளே என்பதை ராமர் புரிந்து வைத்திருந்ததாலேயே சீதை அக்னிப்ரவேசம் செய்யத் தயார் ஆனபோது மறுக்கவில்லை, தடுக்கவில்லை. தன் மனைவி பரிசுத்தமானவளே என்பது தன் மனதுக்கு மட்டும் தெரிந்து தான் மனைவியைச் சேர்த்துக் கொண்டால், உலகிலுள்ளோர் பெண்ணாசையால் பீடிக்கப் பட்ட ராமன் பிறர் வீட்டில் மாதக் கணக்கில் இருந்தவளைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டுவிட்டானே எனப் பேசக் கூடாது என்ற எண்ணம் மட்டும் காரணம் இல்லை. தன் மனைவி தனக்கு வேண்டும், ஆனால் அதே சமயம் அவளைப் பிறர் குற்றம் காணாத வகையிலும் இருத்தல் நல்லது. என்று யோசித்தே ராமர் இந்த முடிவுக்கு வந்தார் எனவும் கூறலாம். ஏனெனில், இதே ராமர், சீதையுடன் சேருவதற்காக சீதையை அக்னிப்ரவேசம் செய்ய வைத்த அதே ராமர், பின்னால், இதே சீதையைத் துறக்கவும் போகின்றார். தன் நாட்டு மக்கள் பேசியதற்காக! ஒரு அரசனாய்த் தன் கடமையைச் செய்யப் போகின்றார். ஆங்கிலப் பழமொழி, "சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாய் இருத்தல் வேண்டும்" என்று சொல்லுவதுண்டு. இங்கே ராமரின் மனைவிக்கு அந்தக் கதி நேரிட்டிருக்கின்றது. மக்கள் மனதில் சந்தேகம் உதித்ததும், ராமர் உடனே மனைவியைத் துறக்கவும் தயாராகின்றார். அதையும் பார்ப்போம். இனி அக்னிப்ரவேசத்துக்கு அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்று நாளைக்குப் பார்ப்போமா???
அக்னியில் இறங்கிய சீதையைப் பார்த்து அனைவரும் அலறிக் கதற ராமர் கண்களில் குளமாய்க் கண்ணீர் பெருகியது. ரிஷிகளும், தேவர்களும், கந்தர்வர்களும் பார்த்துப் பதறிக் கொண்டிருந்தனர். அப்போது ராமரின் எதிரில் எமன், குபேரன், பித்ரு தேவர்கள், இந்திரன், வருணன், பிரம்மா போன்றோர் பரமசிவனுடன் அங்கே தோன்றினார்கள். ராமரைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்கள் அவர்கள். "ராமா, நீ யார் என்பதை மறந்துவிட்டாயோ??? அனைத்துக்கும் நீயே அதிபதி! நீ எவ்வாறு சீதை அக்னியில் பிரவேசிப்பதைப் பார்த்துச் சகித்துக் கொண்டு இருக்கின்றாய்?? ஆரம்பமும், நீயே! நடுவிலும் நீயே! முடிவிலும் நீயே! அனைத்தும் அறிந்தவன் நீ! காரண, காரியங்களை அறிந்தவன் நீ! நீயே ஒரு சாமானிய மனிதன் போல் இப்படி சீதையை அலட்சியமாய் நடத்தலாமா?" என்று கேட்க, ராமரோ அவர்களைப் பார்த்துச் சற்றே குழப்பத்துடன், "நான் தசரதச் சக்கரவர்த்தியின் மகன் ராமன் என்பதாய்த் தான் என்னை அறிந்திருக்கின்றேன். படைக்கும் கடவுளான பிரம்மனே! உண்மையில் நான் யார்? எங்கிருந்து, எதன் பொருட்டு வந்தேன்?" என்று கேட்கின்றார்.
பிரம்மா சொல்கின்றார். "ராமா, நீயே ஆரம்பம், நீயே முடிவு, நீயே நடுவில் இருப்பவனும் ஆவாய்! படைப்பவனும் நீயே, காப்பவனும் நீயே, அழிப்பவனும் நீயே! இயக்கமும் நீயே! இயங்காமையும் உன்னாலேயே! அகில உலகமும் உன்னாலேயே இயங்குகின்றது. கையில் சங்கு, சக்ரத்தை ஏந்திய மகாவிஷ்ணு நீயே! அனைத்து உலகத்து மாந்தர்களின் விதியும் நீயே! நீயே கண்ணன், நீயே பலராமன், நீயே கார்த்திகேயன் என்னும் ஸ்கந்தன்! ஆற்றலும் நீயே, அடங்குவதும் உன்னாலேயே! வேதங்கள் நீயே! "ஓ"ங்கார சொரூபமும் நீயே! அனைவரையும் பாதுகாப்பவனும் நீயே!அழிப்பவனும் நீயே! நீ இல்லாத இடமே இல்லை. அனைத்து உயிர்களிலும் நீயே நிறைந்திருக்கின்றாய்! நீ எப்போது, எங்கே, என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என யாராலும் அறிய முடியாதது, இந்த பூமியிலும், மண்ணிலும், செடி, கொடிகளிலும், மலரும் பூக்களிலும், மலராத மொட்டுக்களிலும், விண்ணிலும், காற்றிலும், மேகங்களிலும், இடி, மின்னலிலும், மழை பொழிவதிலும், மலைகளிலும், சமுத்திரங்களின் நீரிலும், ஆற்றுப் பெருக்கிலும், மிருகங்களின் உயிர்களிலும், மனித உயிர்களிலும், இன்னும் தேவாசுர உயிர்களிலும் அனைத்திலும் நிறைந்திருப்பவன் நீயே! அனைத்துக்கும் ஆதாரம் நீயே! சூரிய, சந்திரர்கள் உன் கண்கள். நீ உன் கண்ணை மூடினால் இரவு. திறந்தால் பகல். உன் கோபம் நெருப்பை ஒத்தது என்றால் உன் சாந்தமே சந்திரன் ஆவான். உன் பொறுமை, உறுதி பூமி எனின் உன் இதயம் பிரம்மாவாகிய நான் ஆவேன், உன் நாவில் சரஸ்வதி இருக்கின்றாள். நீயே மூவுலகையும் ஆளும் அந்த மகாவிஷ்ணு ஆவாய்! சீதையே உன்னுடைய தேவி ஆன மகாலட்சுமி ஆவாள்." என்று சொல்கின்றார் பிரம்மா. வால்மீகி ராமாயணத்தில் இந்தக் குறிப்பிட்ட கட்டம், பிரம்மா ராமரைப் பார்த்துச் சொல்லுவது ஒரு ஸ்லோகமாகவே இருக்கின்றது. இதைப் பாராயணம் செய்பவர்கள் இருக்கின்றனர். கூடிய சீக்கிரம் பாராயணம் செய்ய வசதியாக அந்த ஸ்லோகத்தை எடுத்து போட முயலுகின்றேன்.
அப்போது அக்னியில் இருந்து அக்னிதேவன், தன் கரங்களில் சீதையைத் தாங்கியவண்ணம் எழுந்தான். சீதையோ அன்றலர்ந்த மலர் போல் அக்னியில் இறங்கும்போது எவ்வாறு சர்வாலங்கார பூஷிதையாகக் காணப் பட்டாளோ அவ்வாறே சற்றும் மெருகு குன்றாமல் காணப்பட்டாள். அக்னி தேவனோ ராமனிடம், "ராமா, இதோ உன் அருமை மனைவி சீதை! அரக்கர்கள் கூட்டத்தில், அரக்கிகளின் காவலில் இருந்த சமயத்தில் கூட இவள் தன்னை இழக்கவில்லை. உன்னையே நினைத்திருந்தாள் அன்றோ??? இவள் தூய்மையானவள். இவளை ஏற்றுக் கொள்வாயாக. இதை என் உத்தரவாகச் சொல்லுகின்றேன்." என்று சொல்ல, ராமரும் மகிழ்வுடனேயே, அக்னியிடம், ராவணன் வீட்டில், அவனுடைய அசோகவனத்தில் பதினான்கு மாதங்கள் வாழ்ந்துவிட்ட சீதையை நான் தவறாய் நினைக்கவில்லை எனினும், இவ்வுலக மக்கள் மத்தியில் அவளுடைய தூய்மையை நிரூபிக்காமல் நான் ஏற்பது எங்கனம் முறையாகும்?? ஒரு அரசனாகக் கூடிய நான் பெண்ணாசையால் அவ்வாறு செய்தேன் என்று என்னைத் தூஷிப்பார்கள் அல்லவா?? என் மனது அறியும், என் மனைவி தூய்மையானவள் என்று. எனினும் அவளுடைய மேன்மையை உலகும் அறியவேண்டியே இவ்விதம் அவள் செய்யும்போது தடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியவன் ஆகிவிட்டேன். ராவணன் அவளை ஏதும் செய்திருக்க முடியாது என்பதும் எனக்குத் தெரியும். நெருப்பை ஒத்த என் மனைவியை நான் எவ்வாறு பிரிந்திருக்க முடியும்?" என்று சொல்லிவிட்டு சீதையை ஏற்றுக் கொள்கின்றார் ராமர்.