URI: http://tamilnanbargal.com/node/39445
கதை எழுதுவது அவ்வளவு கடினமா என்ன?
எனக்கும் கதை எழுத வேண்டும் என்ற ஆசை உண்டு. எல்லோரும் நினைப்பது போல நம் கதை படிப்பவர் மனதில் ஆழமாக பதிய வேண்டும், உருக்கமாக உணர்வுகளை வருடி செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு. ஆனால்... ஆனால்... இந்த ஆனால் என்ற வார்த்தை இருக்கிறதே. இது வந்தாலே ஏதோ குழப்பம் என்பது பொருள்.
தினம் காணும் காட்சிகளை வார்த்தைகள் வைத்து கட்டி அடுக்குவது மிக எளிது. ஆனால் படிப்பவர் மனதிற்கு பிடித்தபடி சலிப்பில்லாமல் கதையை நகர்த்துவது ஒரு கலை தான். கதையில் ஆழமாக பதியும் கருத்தை படிப்பவர் மனதில் பதிவது ஒரு திறமை தான்.
நானும் கதை எழுத வேண்டும்...
இதோ ஆரம்பிக்கிறேன்.
ஒரே வேலையை தொடர்ந்து செய்வதில் வரும் வழக்கமான சலிப்பு எனக்கும் வந்ததில் ஆச்சரியமில்லை. பக்கத்தில் திரும்பி கண்ணாடியில் முகம் பார்த்தேன். முகம் தெரியவில்லை. கண்ணாடியில் எதிர் பக்கம் பள்ளி மாணவர்கள் வீட்டுக்கு செல்லவதற்கு முன் கிடைக்கும் கடைசி நேரத்தில் உற்சாகமாக சட்டையை அழுக்காக்கி ஓடியாடி விளையாடி கொண்டிருப்பது தெரிந்தது. அரசு உயர் நிலை பள்ளி. இந்த பள்ளியை பார்க்கும் போதெல்லாம் பரிதாபமாக இருக்கும். இவர்கள் எப்படி படித்து பெரியவர்களாக வரப்போகிறார்களோ? என் பையன் மெட்ரிக் ஸ்கூலில் படித்து வந்தான்.
டீ குடித்து முடித்திருந்தேன்.
அழைப்பு மணியை அடிக்க...
அடுத்த நோயாளி உள்ளே வந்தார். இருமலும் சளியுமாக வந்தார். பணக்காரத்தனம் கொண்ட உடம்பு. ஐம்பது வயது இருக்கும் பெண்மணி. சக்கரைவியாதி, இரத்த அழுத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
என்னாச்சுமா.
அவளுக்கு பரிந்து பேச வேண்டும். மருத்துவம் பார்ப்பதை விட அதிக நேரம்
பரிந்து அறுதலாக பேசினால் நல்ல மருத்துவர் என்ற எண்ணம் அவர்களுக்கு வந்து
விடும். அந்த எண்ணம் வந்துவிட்டாலே வேறு எங்கும் மருத்துவம் பார்க்க போக
மாட்டார்.
இந்த மழைல எப்படியம்மா வந்தீங்க? அதுவும் தனியாவா வந்தீங்க?
நோ... நோ... ட்ரைவர் வெளியே வெயிட் பண்றான்.
ஓ.. அந்த பென்ஸ் உங்களோடது தானா?
எஸ் டோக்டர். பையன் வாங்கி தந்தது. யூ எஸ் ல இருக்கான்.
முகத்தில் ஒரு பெருமிதம் தெரிந்தது. என் வார்த்தைகளுக்குள் வீழ்ந்து விட்ட அறிகுறி இது.
ரீசண்டா எனக்கு லைட்டா நெஞ்சு வலி அடிக்கடி வருது டாக்டர்.
எத்தனை நாளா?
டூ டேய்ஸா
இஃ யூ டோன்ட் மைண்ட்... கேன் ஐ ஆஸ்க் யூ எ கொஸ்டின்?
ஸ்யூர்.
ஆங்கிலம் பேசுவோர்களிடம் ஆங்கிலத்திலேயே பேசினால் தான் மருத்துவத்திற்கு மரியாதை. அதிக பணமும் கறக்க முடியும்.
மெனோபஸ் முடிஞ்சு எத்தனை இயர்ஸ் ஆகுது?
3 இயர்ஸ் என்றாள் லேசாய் வெட்க சிரிப்புடன்.
ஏன் கேட்கிறேன்னா, அது நின்னதும் ப்ளட் வேஸ்ட் ஆகாததால லேடீஸ்க்கு பாடில Fat அதிகமா சேர ஆரம்பிச்சிடும். இட் மே லீட்ஸ் டூ மைல்ட் அட்டாக்.
அனைத்தையும் தெளிவாக புரிய வைக்க வேண்டியிருந்தது. இல்லை என்றால் வந்த உடனே டாக்டர் என்ன இப்படி பேசுறானேன்னு நினைக்க ஆரம்பிச்சுடுவாங்க. நம் மேல நம்பிக்கை போயிடும்.
ஐ ஹேவ் ப்ரஸ்ஸர் டோக்டர்...
எதிர்பார்த்த படி அவளது மருத்துவ புராணத்தை தொடர ஆரம்பித்தாள்.
ஆர்வமாய் கதை கேட்க ஆரம்பித்தேன். இந்த நேரத்திற்கும் சேர்த்து தானே கன்சல்டிங் பீஸ் வாங்குறோம். நோ ப்ராப்ளம்.
பலருக்கும் மருந்து பார்ப்பதை விட மருத்துவரை வந்து பார்த்தாலே ஒரு நிம்மதி வந்துவிடுகிறது.
இத்தனை நேர அவளின் கதையில், சொல்ல ஆளில்லாமல் தவித்திருந்தது புரிந்தது. இனி அடிக்கடி வந்துடுவா.
பையன் பைக் கேட்டான். இன்னைக்கு கண்டிப்பா வாங்கலைன்னா அவன் போடுற ஆட்டம் தாங்காது. ஆனா இதுக்கெல்லாம் சேமிப்பில கை வைக்கலாமா?. இவங்களுக்கு எப்படியும் ஒரு தொகையை கட்டிடலாம்.
இத்தவணை சில மருந்துகள் அதிகம் இருப்பதாக மெடிக்கல்ல சொன்னது ஞாபகம் வந்தது. இவளுக்கு ஓவர் டோஸ் போட்டா உடம்பு தாங்காது. வேற ஆள பார்த்துக்கலாம். வராமலா போயிடுவான்.
உள்ளுக்குள் வேறு சிந்தனை ஓடிக்கொண்டிருக்க அவளின் கதை முடிந்தபாடில்லை. இப்போது தான் திருமண வீட்டில் இருக்கும் போது நெஞ்சு வலி ஆரம்பித்த படலம் ஆரம்பமாகி இருந்தது.
பையனை நேராக இங்கே வர வைத்து அவனையும் கூட்டி புதிய மாடல் பைக் பார்க்க போகணும்.
அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். எத்தனையோ முக பாவங்கள். சின்ன வயதில் என்ன ஆட்டம் போட்டிருப்பாளோ?
ம்ஹூம்...
என் கதையை தொடர மனமில்லை.
ஏனோ அந்த மருத்துவரை போல இருந்து யோசிக்க பிடிக்கவில்லை.
ஒரு கதையை எழுத வேண்டும் என்றால் அந்த கதையில் வரும் நல்ல கெட்ட பாத்திரங்களாகவே நானும் மாற வேண்டியிருக்கிறது. என்னால் அந்த மருத்துவர்போல யோசிக்க முடிகிறது என்றால் மனதில் அந்த கெட்ட எண்ணங்கள் இல்லாமல் எப்படி அதே போல யோசிக்க முடியும். எப்படி அவர் பேசுவது போல எழுத முடியும்?
பெண்ணை கேவலமாக இரசிக்கும் பாத்திரம் என்றால் அதே போல இரசித்து கற்பனை
செய்ய வேண்டியிருக்கிறது. என்னை ஒரு காம கொடூரன் கற்பழித்தான் என்று ஒரு
பெண் சொல்ல, சில நிமிடங்களாவது மனதில் பெண்ணாக கற்பிழக்க வேண்டி
இருக்கிறது.
ஒருவர் கதையில் கெட்ட கதாபாத்திரம் வைக்கிறார் என்றால் அந்த
பாத்திரமாகவே மாறி சிந்தித்தால் தான் கதாபாத்திரம் சிறப்பாகிறது. அப்படி
என்றால் எல்லோர் மனதிலும் கெட்ட எண்ணங்களும் இருக்கத்தான் செய்கின்றனவா?
இப்படி நேரடியாக கேள்விகேட்டால் கதை எழுத்தாளர்கள் என்னை அடிக்க வந்துவிடுவார்கள். நான் கெட்டவனாகவே இருந்தாலும் நீ கெட்டவன் என்று ஒருவன் சொல்வதை நான் விரும்புவதில்லை. நான் மட்டுமல்ல. அனைவரும் இப்படியே...
கதையை முடிக்க வேண்டும். எப்படி முடிக்கலாம்? என்ன கருத்தை வைக்கலாம்?
கதைக்கு கதாசிரியன் தான் கடவுள். அவன் தான் ஒவ்வொருவரும் எப்படி பேச வேண்டும் என்ன நடக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறான்.
அதிரடி திருப்பம் வேண்டும்? எவனையாவது கொல். அல்லது ஒரு பலத்த
நிகழ்வு. எதிர்பார்ப்பில் ஏமாற்றம். இப்படியே கதையை நகர்த்துவது பலரது
பழக்கம்.
டாக்டருக்கு ஒரு அவசர அழைப்பு வருகிறது. அவன் படிக்கும் பள்ளியில் இருந்து. பையனுக்கு ஆக்சிடன்ட். ஒரு லாறி பையனில் கால்களில் ஏறி...
டார்டருக்கு மயக்கம் வருவது போல இருந்தது.
பைக் கேட்டானே? இனி அவன் எப்படி பைக் ஓட்டுவான்?
அடுத்தவர் பணத்தை கொள்ளையடித்த எனக்கு இது தண்டனையா?
ஒன்றும் ஓடவில்லை. பக்கத்தில் திரும்பினேன்.
அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் இன்னமும் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
போதும். இப்படியே கதையை முடித்து அசுபம் போட்டு விடலாமா?
கதை முடிந்தது. நான் அந்த மருத்துவரின் மனநிலையில் இருந்து விடுபட்டாகி விட்டது. ஆனால் இதை படிக்கும் பலரது மனதிற்கு அந்த மருத்துவ மனதை கொடுத்திருக்கிறேன். பாவம் ஏதுமறியாத பையனை விபத்துக்கு உள்ளாக்கியே தந்தைக்கு பாடம் புகட்ட வேண்டியிருக்கிறது.
வெறும் கற்பனை தான். யாருக்கும் வலி இல்லை.
இது நல்லதா கெட்டதா தெரியவில்லை.
நல்ல நினைவுகள் மனதை லேசாக்கும். கெட்ட நிகழ்வுகள் பாரத்தை தரும். துரதிருஷ்டவசமாக, நல்லவர்களுக்கு நிகழும் கெட்ட நிகழ்வுகள் தான் படிப்பவர் உணர்வை தூண்டுகிறது. நல்ல கதை என்று சொல்ல வைக்கிறது.
இதில் மனதில் பாரம் ஏறுவதை யாரும் கவனிப்பதில்லை. காற்றாய் பறக்கும் மலர் இழையில் கனத்த கல் வீழ்ந்தது போல மனம் கனத்து போவதை பலர் விரும்பவே செய்கிறார்கள்.
துன்பப்படுவதை யாரும் விரும்புவதில்லை. ஆனால் துன்பப்படுவதை போல நாமாகவே கனவு காண்பதை பலர் விரும்புகிறார்கள். அந்த சோகம் தான் பலருக்கும் தனிமையில் நண்பன். உண்மையில் இதுவும் ஒரு தாழ்வு மனப்பான்மையின் விளைவு தான்.
இப்படி தான் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க எத்தனை நேரம்
தான் ஒரே ஒரு காட்சியையோ நபரின் சிந்தனையையோ வைத்து கதை எழுதுவது?
உண்மையில் அந்த சூழ்நிலைக்குள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. இதற்காகவே தொலைகாட்சி சீரியல்களை பார்ப்பதில்லை.
பிரச்சனைக்குள் இறங்காத வரை பிரச்சனைக்கு தீர்வு வராது. ஆனால் பிரச்சனையை விட்டு வெளியே வந்து பிரச்சனையை பார்த்தால் தான் பிரச்சனையின் உண்மை முகம் தெரியவரும். கதையின் முடிச்சுகளும் இப்படியே. கதையை படிப்பவன் அடுத்து என்ன நடக்கும் என குழம்ப, எழுதுபவனோ டீயை ருசித்து குடித்து கொண்டிருப்பான்.
உண்மையில் பல குணங்களை, கோபதாபங்களை, வெறுப்புகளை, பொறாமைகளை, சந்தோஷங்களை காம குரோதங்கங்களை மனம் எனும் உரை கல்லில் போட்டு பிரித்து எடுத்து கதை எழுதுவதற்கு நிஜமாகவே பொறுமை அவசியம். முக்கியமாக பலவகை குணங்களை சகிக்கும் சகிப்புத்தன்மை அவசியம்.
கலைஞனின் கற்பனை உலகில் அவனே நாயகன், அவனே வில்லன், அவனே பெண், அவனே ஆண். அதில் வரும் நாய் கதாபாத்திரமும் அவனே. பேசும் மரங்களும் பூக்களும் அவனே. ஒரு குட்டி கடவுள். படைப்புலக பிரம்மா.
ஒரு பெண்ணை கதற கதற கற்பழிக்கும் கதையை எழுதிவிட்டு அதை மறுபடி
படிக்கும் போது சொல்லிக்கொள்வான் 'கதை நன்றாக தத்ரூபமாக வந்திருக்கிறது'.
ஒரு திரைப்பட இயக்குநர் ஒரு பேரழிவு சம்பவத்தை பலர் கதறி அழுவதை படமாக்கி விட்டு சொல்கிறான். 'நன்றாக வந்திருக்கிறது'.
எது நடந்ததோ நன்றாகவே நடந்தது என்பதன் நிஜ அர்த்தம் இது. இது படைப்பவன் பார்வை.
நாமெல்லாம் வெறும் நடிகர்கள். அழ வேண்டும். சிரிக்க வேண்டும். கோமாளி வேஷம் போட்டாக வேண்டும்.
நன்றாக நடிக்க தெரிந்தவனுக்கு நாயகன் வேஷம். குரைக்க தெரிந்தவனுக்கு நாய் வேஷம்.
திரை படத்தில் உணர்வுகளை தூண்டினால் தான் படத்தை எடுத்தவனுக்கு கல்லா நிறையும். நாமெல்லாம் அழுதுவிட்டோ சிரித்து விட்டோ பணத்தை பறிகொடுத்த கோபத்திலோ வெளியில் வர வேண்டும்.
உணர்வை விலை பேசும் உலகம் படைப்புலகம்.
நான் யாராக இருக்க வேண்டும்?
ஒருவனை அழவைத்து ஆவேசப்பட வைத்து சிரிக்க வைத்து உணர்வுகளை தூண்டி வேடிக்கை பார்த்து தன்னை படைப்பாளியாக காட்டிக்கொள்பவனாகவா?
தெரியவில்லை.
அடுத்த கதையாவது நல்ல கதையாக எழுத வேண்டும். இந்த ஆசை தான் ஒவ்வொரு படைப்பின் தொடக்கமாக அமைந்துவிடுகிறது.
மீண்டும் ஆரம்பிக்கிறேன்... கதை எழுத...
வினோத் கன்னியாகுமரி
தத்துவமுங்கோ: நீங்கள் உண்மையின் பக்கம் இருந்தீர்களானால் உண்மை எப்போதுமே கசப்பதில்லை. அவ்வாறு இல்லை எனில் உண்மை கசப்பது மட்டுமல்ல சுடவும் செய்யும்.
--
You received this message because you are subscribed to the Google Groups "ILLAM [இல்லம்], your HOME".
To post to this group, send email to il...@googlegroups.com
To unsubscribe from this group, send email to illam-un...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/illam?hl=en
On Apr 26, 10:37 pm, Dorai Raj L <eldi...@gmail.com> wrote:
கற்பனை என்னதான் நிலவுக்கு அல்லது வேறு ஒரு ரம்மியமான சூழ்நிலைக்கு
நம்மை
> அழைத்துச் சென்றாலும் அவை கற்பனையே! ஆனால், சிந்தனைத் திறன் மூலம் அறிவியல்
> ஆய்வில் ஈடுபடும் ஒருவன் உண்மையில் நம்மை நிலவுக்கு அழைத்துச் செல்லும் வல்லமை
> பொருந்தியவனாகிறான். எனவே கற்பனையைத் தட்டிவிடுவதை விட, சிந்தனையைத்
> தட்டிவிட்டு, ஒரு பல் குச்சியை உருவாக் கினால் கூட அது பல பேருக்குப் பயன்
> படும். ஆக... (என்னைப் பொறுத்தளவில்) கற்பனையை விட அறிவைப் பயன்படுத்திக்
> கட்டுரை எழுதுவது ரொம்பப் பிடிக்கும்.
>
நீங்கள் சொல்வது உண்மை. கற்பனை உலகம் ஒரு இனிய இரண்டாம் அனுபவம். அதன்
கதாசிரியனே அதற்கு மும்மூர்த்திகள்.