நதிநீர் தேசிய உரிமை. அதனைப் பயன்படுத்தி தங்களை
வளப்படுத்திக்கொள்ள பல்வேறு மாநிலங்களும் கூட்டுத்திட்டங்கள் வகுக்க
வேண்டும்.அந்தத் திட்டங்கள் மாநில எல்லைகளுக்கு அப்பால் பெரும்பான்மையான
மக்களுக்கும் பயன்தர வேண்டும் என்று அந்த பொருளாதார மேதை வாதாடினார்.
அவர் தான் அண்ணல்.அம்பேத்கர்.
1919 ஆம் ஆண்டு அன்றைய பிரிட்டிஷ் அரசு மாண்டேகு ஜேம்ஸ்போர்டு
சீர்த்திருத்தசட்டம் கொண்டுவந்து நதிகள் அந்தந்த மாநிலங்களுக்குச்
சொந்தம் என்று சொன்னது, அதன்பின்னர் 1935 ஆம் ஆண்டு வெள்ளைக்கார அரசு
இன்னொரு சட்டம் இயற்றியது. விவசாயமும், நதிநீர்த் தேக்குதலும் மாநில
அரசுகளுக்குத்தான் சொந்தம். அதில் மத்திய அரசு தலையிடாது. ஆனால்,
நதிநீர்ப் பங்கீட்டில் பிரச்சனை எழுந்தால் மத்திய அரசு தலையிடும் என்று
அந்த சட்டம் அறிவித்தது.
1942 இல் இந்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக டாக்டர்
அம்பேத்கர் அங்கம் பெற்றிருந்தார். நதிகள் மாநில உரிமை என்ற சட்டத்தை
அவர் கடுமையாக எதிர்த்தார்.
நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும். எப்படி இந்தியாவில்
இணைக்கின்ற ரயில் போக்குவரத்து மைய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ,
அதுபோல பல்வேறு மாநிலங்கள் கடந்து செல்லும் நதிகளும் அதன்
கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்று அந்த மன்றத்தில் அவர்
வாதாடினார்.
ரயில் போக்குவரத்திற்கு ஒரு சட்டம், தண்ணீர் போக்குவரத்திற்கு
இன்னொரு சட்டமா? என்றார். இந்த இரட்டை நிலை எதிர்கால இந்தியாவில் எண்ணற்ற
பிரச்சனைகளை உருவாக்கும் என்றார்.
நதிநீர் பிரச்னைக்கு இதர நாடுகள் எப்படித் தீர்வு கண்டன என்பதனை
அவர் ஆழமாக ஆராய்ந்தார்.
பீகார், மேற்கு வாங்க மாநிலங்கள் பங்கு கொள்ளும் தாமோதர்
பள்ளத்தாக்குத் திட்டம் உருவானது. எத்தனை. எத்தனை நீர்த்தேக்கங்கள்!
எத்தனை, எத்தனை மின் உற்பத்தி நிலையங்கள்! எத்தனை, எத்தனை தொழிற்சாலைகள்!
பாலை நிலங்கள் கழனிகளாகின. இந்த மாபெரும் திட்டம் செயல்வடிவம்
பெற்றதேன்றால் அதற்க்கு அறிவுசிகரம் அம்பேத்கர் தான் காரணமாவார்.
அரேபியக் கதைகளில் வரும் மந்திரவாதிகளைப் பார்க்கிறோம் அவர்கள்
வானத்திற்கு மாளிகை கட்டினார்கள். அங்கிருந்து பட்டுக் கம்பளத்தில்
பறந்து வந்தார்கள் என்று படிக்கிறோம். அப்படித்தான் தாமோதர் திட்டத்தை
சந்தேகக் கண் கொண்டு பார்த்தனர். கனவா? கற்பனையா? சாத்தியமா? முடியுமா?
என்று கைகொட்டிச் சிரித்தவர்கள் உண்டு. அவர்களின் கண்முன்னே தாமோதர்
திட்டம் என்ற புதிய ஆலயத்தை அம்பேத்கர் இந்தப் பூமியில் உருவாக்கிக்
காட்டினார்.
அந்த லட்சியவாதியின் சிந்தனையில், உழைப்பில் உருவானதுதான் அந்தத்
திட்டம். எந்த நதியும் எந்த மாநிலத்தின் தனிச்சொத்து அல்ல. அது தேசியச்
சொத்து என்பதனை இதன் மூலம் அவர் பறைச்சாற்றினார். நாடு விடுதலை பெற்ற
பின்னர் இந்தத் திட்டத்தை நிர்வகிக்க 1948 ஆம் ஆண்டு தனி கார்ப்பரேசனே
சட்டபூர்வமாக அமைக்கப்பட்டது.
பண்டிட் ஜவகர்லால் நேருவின் புகழை சிகரத்திற்க்கு உயர்த்திய
பக்ராநங்கல் திட்டமும், மகாநதி திட்டமும், சோனே நதித் திட்டமும்
அம்பேத்கர் காட்டிய தாமோதர் திட்டத்தின் அடியொற்றி தொடங்கப்பட்ட
திட்டங்கள் தான்.
நாட்டின் விடுதலைக்கு பின்னர், அரசியல் சட்டத்தை உருவாக்கும் பணி
தொடங்கியது. திட்டத்தைத் தயாரிக்கும் குழுவின் தலைவரே சட்டமேதை
அம்பேத்கர் தான்.
நதிகள் தேசியமயமாக்கப்படும், நதிகள் இணைக்கப்படும். நதிகள் மைய
அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற கோட்பாடு அரசியல் சட்டத்தில்
அங்கம பெற வேண்டும் என்று அவர் வாதாடினார். அவரே குழுவிற்குத் தலைவராக
இருந்தும் அவருடைய கோரிக்கை ஏற்கப்படவில்லை.
நிர்வாண தேசத்தில் அவர் சொக்காய் விக்க முயன்றார். பலன்
தரவில்லை. ஆனால், இன்றைக்கு அந்தச் சொக்காயின் அருமையும், பெருமையும்
தெரிகிறது.
இன்றுவரை நதிகள் இணைக்கப்படாததால் இன்னும் பத்து ஆண்டுகளில்
தண்ணீர் பஞ்சம் படை எடுக்கும் என்ற அபாய அறிவிப்புகள் வெளியாகின்றன.
இந்நிலையில், நதிநீர் பிரச்சனைக்கு அண்ணல் அம்பேத்கர் ஏற்றி வைத்த தீபம்
தான் வழிகாட்ட முடியும்.
இன்றைக்கு மாநில அரசுகளின் பட்டியலில் இருக்கின்ற நதிநீர் பங்கீடு
மைய அரசின் பட்டியலுக்கு மாற்றப்படவேண்டும். இல்லையேல் மாநில
அரசுகளுக்கும் மைய அரசுக்கும் உரிமை தரும் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட
வேண்டும்.
இன்னும் சில ஆண்டுகளில் இன்றைய தலைமுறையே குடிக்கத் தண்ணீர் இல்லாத
கொடுமையைச் சந்திக்க வேண்டியிருக்கும். அந்த அபாயத்திலிருந்து நாடு
தப்பித்திட நதிகள் தேசியமயமாக்கப்படவேண்டும்.
''உத்திரபிரதேசத்தில் கென் நதி ஓடுகிறது, அதன் உபரி நீரை மத்திய
பிரதேசத்திர்க்குத் திருப்ப, மைய அரசு முன்னிலையில் உடன்பாடு
ஏற்ப்பட்டிருக்கிறது. பர்பாதி-சாம்பல்-காலிசிந்த் என்ற மூன்று நதிகளை
இணைக்க ராஜஸ்தானும், மத்தியப் பிரதேசமும் ஒப்புக் கொண்டிருக்கின்றன.
அரபிக்கடலில் வீணாக கலக்கும் நீரில் பாதி அளவு தமிழகத்திற்கு
கிடைத்தாலும், தென் மாவட்டங்கள் செழிக்கும், குடிநீர் பிரச்ச்சனையாவது
தீரும்.
''மகாநதியின் உபரி நீரை, கோதாவரிக்குத் திருப்பி, அதனை கிருஷ்ணாவில்
இணைத்து, காவிரிக்கு அழைத்து வருவது தான் தமிழகத்தின் தண்ணீர்த் தேவையை
நிறைவு செய்வதற்குரிய ஒரே வழியாகும்''.
நதிகள் இணைப்பின் அவசியத்தைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் 80 ஆண்டுகளுக்கு
முன்னரே இந்த நாட்டிற்கு எடுத்துரைத்துள்ளார். இது போன்று நாட்டின்
முன்னேற்றத்திற்கு பல்வேறு தீர்வுகளை சொல்லியிருக்கிறார். இதன்மூலம்
அவரின் பொருளாதார சிந்தனை கருத்துக்களின் ஆழத்தை அறியலாம்,
உதவி;''டாக்டர். அம்பேத்கர் அவர்களின் பொருளாதாரச் சிந்தனை வரலாறு'' என்ற புத்தகம்.
Thanks Mr. Tamil Kanal.
--
அன்புடன்
சி.பாலமுருகன்
- தூக்கமும் உணவும் மனிதனின் உடல் நலத்தை தீர்மாணிக்கின்றன. -.