பொங்கலோ பொங்கல்! - வாய்மணக்க வாழ்க என வாழ்த்துகின்றோம்!

0 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jan 14, 2026, 11:24:32 AMJan 14
to Santhavasantham
பொங்கலோ பொங்கல்! - வாய்மணக்க வாழ்க என வாழ்த்துகின்றோம்!

உங்கள் அனைவர்க்கும் பொங்கல்நல் வாழ்த்துகள்!
பொங்கல் தினத்தில் உவகையுடன் - எங்கெங்கும்
பானையில் பாலுடன் பச்சரிசி பொங்கட்டும்!
தேனாய் இனிக்கட்டும் தை !

கவிஞர் சு. பசுபதி அவர்கள் தொகுப்பினின்றும் கொத்தமங்கலம் சுப்பு பாடிய
அரிய பொங்கல் வாழ்த்துக் கவிதையைத்
தட்டெழுதினேன். 10 ஆண்டு முன்பு. 1940களில் காந்தி வாழ்ந்தபோது இயற்றின பாட்டு!
https://s-pasupathy.blogspot.com/2017/01/18.html

நா. கணேசன்

வாய் மணக்க வாழவென்று
பொங்கல் வைக்கிறோம்
கொத்தமங்கலம் சுப்பு

பொங்குபாலே பொங்குபாலே - இந்தப்
பூமி செழிக்க வென்று பொங்குபாலே
சங்குபோலே வெள்ளை சங்குபோலே - எங்கும்
தாமரை பூக்கவென்று பொங்குபாலே (1)

தர்மம் தழைக்கவென்று பொங்குபாலே - நாமும்
தானம் கொடுக்கவென்று பொங்குபாலே
வர்மம் துலையுமென்று பொங்குபாலே - எங்கள்
வாக்கு நல்ல வாக்காகப் பொங்குபாலே (2)

வேகநடை

வண்டிகட்டியே விரட்டிக் கூத்துப்பார்த்து - நாங்க
வாயாரச் சிரிக்கவென்று பொங்குபாலே
கண்டிகதிர் காமத்துக்கு ஓடவொட்டாமல் - உள்ள
கழனி விளையுமென்று பொங்குபாலே (3)

நீலமயில் வாகனத்திலேறும் பெருமாள் - நல்ல
நெத்திமட்டவேல் பிடித்த கோலமுருகன்
பாலகுருநாதனுக்கு வெள்ளி செவ்வாயும் - பசும்
பாலபிஷேகம் புரியப் பொங்குபாலே (4)

கைக்குழந்தைக் கண்ணப்பனை யெக்கியிடுக்கி - கருங்
காகங் குருவிகளைக் காட்டி ஊட்டி
காரெருமை வெண்ணெயைப் பந்தாக உருட்டி - அவன்
கைக்கொடுத்து முத்தமிடப் பொங்குபாலே (5)

பங்குனி உத்திரம் பாக்கப்போகும் சனத்தை - தண்ணிப்
பந்தலிட்டு நிளல்போட்டுக் குந்தவும்வச்சு
திங்கஒரு மாவடுவும் சுண்டக்கடலை - நல்ல
செவ்விள நீருங் கொடுக்கப் பொங்குபாலே (6)

சித்திரைத் திருவிளாவில் உச்சிப்பொளுதில் நின்று
தேரிழுக்கும் ஊருச்சனம் தன்னையழைச்சே
சத்துமாவும் நீருமோரும் தானளிக்கவே - நாங்க
சத்தியுள்ள குடியாகப் பொங்குபாலே (7)

நாட்டுக்குள்ளே நல்லப்பசுக் கூட்டங்கூட்டமாய்
நஞ்சைப்புஞ்சைப் பலனெங்கும்தான் எதேட்டமாய்
பாட்டு கூத்துக்கெந்த நாளும் பஞ்சமின்றியே இந்த
பாரதம் செழிக்கவென்று பொங்குபாலே (8)

பிராத்தனை

கொத்தடிமையாகிப் போன எங்களைத் தூக்கி - புள்ளை
குட்டியெல்லாம் தன்னரசா வாழ வைச்சவன்
சத்தியம் கொல்லாமை யெனுந் தத்துவத்தாலே - இந்த
சகத்தைப் புரட்டிவிட்ட மந்திரக்காரன் (9)

காந்தி மகாராசன் வாழப் பொங்கல் வைக்கிறோம் - நல்ல
காங்கிரசுக் கூட்டம் வாழ பொங்கல் வைக்கிறோம்
சாந்தி மகாராஜ னுயிர்தானும் பிழைச்சு - நல்ல
சமரசமாகவென்று பொங்கல் வைக்கிறோம் (10)

நாடு செழிச்சுதென்று பொங்கல் வைக்கிறோம் - பட்ட
பாடு பலிச்சுதென்று பொங்கல் வைக்கிறோம்
கேடு விலகிச்சென்று பொங்கல் வைக்கிறோம் - மண்டை
கெருவம் சிறிதுமின்றிப் பொங்கல் வைக்கிறோம் (11)

சாமிகளை வேண்டிக்கிட்டுப் பொங்கல் வைக்கிறோம் - எந்த
சனத்தையும் பகைக்காமல் பொங்கல் வைக்கிறோம்
பூமியில் வாழவென்று பொங்கல் வைக்கிறோம் - எங்கள்
புள்ளைகுட்டி வாழவென்று பொங்கல் வைக்கிறோம் (12)

கஞ்சிகொண்டு வாரவளின் தங்கக் கையிலே - வெள்ளி
காப்படிச்சுப் போடவென்று பொங்கல் வைக்கிறோம்
மஞ்சிகொண்டு வார எங்க மருமகனுக்கே - உரு
மாலைவாங்கிப் போடவென்று பொங்கல் வைக்கிறோம் (13)

குப்பைகொட்டிக் குழைமிதிச்ச குட்டி காலுக்கே - தண்டை
கொலுசுபண்ணிப் போடவென்று பொங்கல் வைக்கிறோம்
எப்பொழுதுங் சுளவடிக்கும் வெட்டியானுக்கே - கூட
ரெண்டுகையி அள்ளிப்போடப் பொங்கல் வைக்கிறோம் (14)

சட்டிப்பானை ஆப்பைக்கூடு தட்டுமம்மட்டி - செஞ்சு
தந்த மகாராசனுக்கும் நெல்லையளந்தே
வட்டிக்கடன் தந்த அந்தச் செட்டியாருக்கும் - ஒரு
வாயவல் கொடுக்கவென்று பொங்கல் வைக்கிறோம் (15)

ஊருக்கெல்லாம் பஞ்சமின்றிச் சோறுபோட்டுட்டு - நாமும்
உண்டு பசியாறவெண்ணிப் பொங்கல் வைக்கிறோம்
தேரிழுக்கும் கைகளுக்குத் தெம்புகுடுக்க - அந்தத்
தெய்வம்துணை செய்யுமென்று பொங்கல் வைக்கிறோம் (16)

சும்மாடு கட்டிச்சுமை தூக்கும் தலையில் - கொஞ்சம்
இம்மாத்துண் டெண்ணெயிட்டுச் சீவிமுடிஞ்சு
அம்மாடி என்றுஅவன் தூங்கும் நேரத்தில் - கொஞ்சம்
ஆனந்தம் கிடைக்கவென்று பொங்கல் வைக்கிறோம் (17)

நஞ்சைபுஞ்சை யெங்கும்பயிர் நல்லாவிளைஞ்சு - இந்த
நாட்டாரு யாவருக்கும் பசியும் தணிஞ்சு
மஞ்சளிஞ்சி வெத்திலையும் வெள்ளாமைசெஞ்சு - நாங்க
வாய்மணக்க வாழவென்று பொங்கல் வைக்கிறோம்! (18)

பொங்கலோ பொங்கல் பொலிக பொலிக!

N. Ganesan

unread,
Jan 14, 2026, 7:05:26 PMJan 14
to vall...@googlegroups.com
On Wed, Jan 14, 2026 at 10:50 AM AnnaKannan K <annak...@gmail.com> wrote:
மண்ணைப் பொன்னாக்கும் மாமனிதர்களுக்கு வணக்கம்.
தங்கத் தமிழர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
பொங்கலோ பொங்கல்!

https://youtube.com/shorts/yu5BzZCwaOs


ஆம். அதனால்தான் வள்ளுவரும், வேளாண்மை என்பதனை விருந்தோம்பல் என்கிறார். உழவனுக்கு உலகமே விருந்தினர்தான். உழைப்பு விருந்து படைக்கிறது. 

நெல்மணிகள் முற்றத்தில் பளபளக்க
    நிலவழகாய்க் கொத்துமஞ்சள் குலுகுலுக்க
புல்லினத்துச் செங்கரும்பு மடலவிழ
    புதுப்பானை கழுத்ததனில் மலர்இணைய
சொல்லரிய இயற்கைத்தாய் புன்சிரிப்பால்
    சுழல்பூமி பசுமையாய் விழிபறிக்க
மல்லிகையாய்ப் பொங்கியதே வெண்பொங்கல்!
    மனப்பானை பொங்கட்டும் மகிழ்வாக!


NG

N. Ganesan

unread,
Jan 14, 2026, 10:48:26 PMJan 14
to Santhavasantham
            பொங்கல் வாழ்த்து
                        வண்ணம்
                                                               - பாரதிதாசன்
(1951 -இல் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆசிரியராய் இருந்த ‘ தமிழர் நாடு’ என்ற இதழில் வந்த கவிதை இது. வெள்ளுரையாக முதன்முறை  அரங்கேறுகிறது.)
https://s-pasupathy.blogspot.com/2017/01/5_16.html

தனனதந்த தத்தத்த னந்த தனதானா
தனனதந்த தத்தத்த னந்த தனதானா
தனனதந்த தத்தத்த னந்த தனதானா        தனதானா

தளைய விழ்ந்து செக்கச்சிவந்த மலர்போலே
தமிழ்நிலம் செழிக்கப்பிறந்த இறைபோலே
தலைசிறந்த முத்தைச்சொரிந்த கடல்மேலே    கதிர்காணீர்!

தவழ்குழந்தை கொட்டிக்குலுங்கு நகைதானோ!
அழகுமங்கை நெற்றிக்கிருந்த ஒளிதானோ !
தகதகென்று பொற்றட்டெழுந்த வகையாதோ   அறிவீரோ?

இளையசெங்க திர்க்குப்பரிந்து தொழுவாரே
இதுவிதெங்கள் தைக்குச்சிறந்த முதல்நாளே
என,விளைந்த நெற்குற்றி எங்கும் மகிழ்வாரே    மடவாரே!

இலைமரம்கு ருத்துக்கள் தெங்கு கமுகாலே
எழிலுமின்செ ழிப்புற்ற எங்கள் தமிழ்நாடே
இசைஎழுந்து திக்கெட்டுமுந்தும் அதனூடே     மகிழ்வோடே.

வளமிகும்பு லத்திற் றிரிந்து வருமாடே
வகையொடுங்க லத்திற்கறந்து தருபாலோ
டரிசியும்சு வைப்புக் கரும்பு பிழிசாறே       பெறுமாறே

இனிதுபொங்க வைத்துக்கமழ்ந்த பொடியோடே
மலிவொடும்ப ருப்புச்சொரிந்து கனிதேனோ
டளவநன்கி றக்கித்திருந்தும் இளவாழை     இலைமேலே

உளவிருந்தி னர்க்குப் பரிந்து பரிவாலே
உடனிருந்து ணப்பெற்றடைந்த சுவையாலே
உளமகிழ்ந்த தைச்சற்றியம்ப முடியாதே     ஒருநாவால்.

உழவர்அன்பு ழைப்பிற் பிறந்த பெருவாழ்வே
தழைகநன்றெ மைப்பெற்றுவந்த தமிழ்தானே
தழைகஎம்பு கழ்ச்சிக்குகந்த பெருநாளே !      திருநாளே !!

N. Ganesan

unread,
Jan 15, 2026, 7:50:03 AMJan 15
to Santhavasantham
பொங்கல் விழாப் பாட்டு:
செந்தமிழ் நாடெனும் போதினிலே இசை மெட்டு
               - சுவாமி அருணகிரிநாதர் (செம்மலை அண்ணலார் அடிகள்)

பொங்கல் விழாவென்னும் போதினிலே – இன்பம்
பொங்குந் தமிழக மீதினிலே- தைத்
திங்கள் கொண் டாடுந்தென்னாட்டினிலே – பல
செல்வங் குடிபுகும் வீட்டினிலே (1)

சங்குமு ழங்குதைப் பொங்கல்விழா – ஏறு
தாவிக் குதிகொள்ளும் பொங்கல்விழாப் – புது
மங்கை மணள ரிருவர்கட்கும் – நல்
வரிசை யளிப்பது பொங்கல் விழா (2)

நாட்டிற் குயிராகும் நல்லுழவர் – பல
நாட்கள் விழிப்புடன் பாடுபட்டு – வயற்
காட்டில் விளைந்த கதிரறுத்துப் – பயன்
கண்டு களிக்குந்தைப் பொங்கல் விழா (3)

வீடு முழுதும்வெண் சுண்ணம்வைத்து – முற்றும்
வீதிக ளெங்குஞ்சிங் காரஞ்செய்து – காளை
மாடுகட் கெல்லாஞ்செங் காவிபூசி – வீரர்
மஞ்சி வெருட்டுந்தைப் பொங்கல் விழா (4)

புத்தாடை கட்டியே பூமுடித்து – உயர்
பொன்னனி பூண்டு பொடிதிமிர்ந்து – தூய
முத்தமிழ்ப் பாடல் முழக்கிக் கொண்டு – பெண்கள்
முற்றத்தி லாடுந்தைப் பொங்கல் விழா (5)

ஏழிசை யாழிசை இன்னிசையோர் – தமிழ்
இயலிசை நாடகப் பண்ணிசையோர்க் – கெல்லாம்
வாழிசை வள்ளல்கள் மாமணியும் – பொன்னும்
வாரி வழங்குந்தைப் பொங்கல் விழா (6)

மார்கழி முப்பதும் வைகையிற் – கோதை
மாணிக்க வாசகர் பாவை பாடித் – தமிழ்ப்
பார்விழிப் புற்றிட வேண்டி இறைவர்க்குப்
பாற்பொங்கல் வைக்குந்தைப் பொங்கல் விழா (7)

காயுங் கிழங்குங் கனிகரும்பும்- நல்ல
கட்டித் தயிர்வெண்ணெய் பாலமுதுந் – திரு
மாயன் முருகன் சிவன் கொற்றவை கட்கு
வைத்து படைக்குந்தைப் பொங்கல் விழா (8)

செந்தமிழ் நாடு செழிக்கும் விழா – வேண்டும்
செல்வங்கள் யாவும் கொழிக்கும் விழா – இறை
கந்தழி வள்ளி கொடிநிலைகள் – நம்மைக்
காப்பாற்ற வேண்டுந்தைப் பொங்கல் விழா (9)

--------------------------------------
தமிழர்கள் உரிமை வேட்கைக்காக 1925-1956ம் ஆண்டுகளில் பல பாடல்கள் பாடியவர் சுவாமி அருணகிரிநாதர். https://www.facebook.com/photo/?fbid=2079953896163459https://79953896163459

Reply all
Reply to author
Forward
0 new messages