-------------------------------------
தமிழ்ப் பெண்டிரின் காதுகளில் உள்ள பல்வேறு நகைகளைக் காணும் ஒளிப்படங்கள் பார்க்கிறோம். அதில், குருத்தட்டு/குருத்துத்தட்டு எனும் இடைத்தட்டு, ஒனப்புத்தட்டு போன்றவற்றைக் காணலாம். ஒன்னப்பூத்தட்டு பிறழ்ந்து ஒனப்புத்தட்டு என்று பேச்சாகிறது [i]. ஒன்னம் = பொன். ஒன்னம் < சொன்னம் < சொர்ணம்/ஸ்வர்ணம். ஒன்னப்பன் = தங்கப்பன். பொன் தகடுகளை இவ்வாறு தட்டி அணிகலன்கள் ஆக்கும் பொற்கொல்லனுக்குத் தட்டான் (Goldsmith) எனப் பெயர்.
ஊதுலை, துருத்தி, கரி என்று இரும்பை அடித்துக் கருவிகள் ஆக்கும் கொல்லனுக்குக் கருங்கைக் கொல்லன் (Blacksmith) என்று சங்க இலக்கியங்களில் பெயர். கருங்கொல்லன் என்பது இரும்புக் கொல்லனை ஆதலால், கருங்கொல் = இரும்பு (சூடாமணி நிகண்டு). கொல்லி, கொல்லம் போன்ற இடங்களில் இரும்புத் தாது கிடைத்தன. கருங்கொல்லர் கண்டுபிடித்தது Wootz steel என்னும் உருக்கு எஃகுத் தொழில்நுட்பம் உலகத்தில் முதன்மையான கண்டுபிடிப்புகளில் ஒன்று. Wootz < urukku. தட்டான் என்னும் பொற்கொல்லன், கருமான் என்னும் கருங்கொல்லன் என்று வரிசையாக 10 தமிழ் ஜாதிகளைக் குறிப்பிட்டு சிவபெருமான் கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர்வீதிகளில் ஊர்கோலம் சென்ற திருவிழாவைப் பாடியுள்ள பாடல் நினைவுக்கு வருகிறது.
இடப வாகன சேவைகண்டு பாடிய இகழ்ச்சிப்புகழ்ச்சி
கட்டளைக் கலித்துறை
வாணியன் பாடிட வண்ணான் சுமக்க வடுகன்செட்டி
சேணியன் போற்றக் கடற்பள்ளி முன்தொழத் தீங்கரும்பைக்
கோணியன் வாழ்த்தக் கருமான் துகில்தனைக் கொண்டணிந்த
வேணியன் ஆனவன் தட்டான் புறப்பட்ட வேடிக்கையே! (Palavittuvān̲kaḷiyar̲r̲iya tan̲icceyyuṭ cintāmaṇi: mutar̲pākam
Vivēkapānu Acciyantiracālai, 1908: Maturai).
பொருள்:
கலைவாணி கணவன் பிரமன் மறை முழக்கம் செய்துவரவும், வெள்ளை நிறத்தில் நந்திதேவர் சுமக்கவும், வயிரவன், சுப்பிரமணியக் கடவுள், தொலைதூரத்தில் உள்ள தேவலோகத்தின் தலைவன் இந்திரன் போற்றவும், பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமன் முன் தொழுது செல்லவும், கரும்பை வில்லாக வளைத்த காமவேள் வாழ்த்தவும், திருகிய கொம்பை உடைய கருமான் (கிருஷ்ண மிருகம்) தோலைத் துகிலாக அணிந்தவனும், விரிந்த செஞ்சடை உடையவனும், காட்சிக்குத் தட்டுப்படாதவனும் ஆன சிவபெருமான் வெளியே எளியார்க்கு எளியனாய் உலாவரப் புறப்பட்டது ஒரு வேடிக்கையே! பணியாட்களின் சொல்லைத் தட்டாமல் ஆண்டவன் செல்வது மிக வினோதமாய் இருக்கிறது.
கருமான் = கலைமான், Indian blackbuck
https://en.wikipedia.org/wiki/Blackbuckகருமான் துகில்தனைக் கொண்டணிந்த வேணியன்.
வேதங்களை இடையறாது உபதேசிப்பவன் எனச் சிவனைச் சங்க இலக்கியம் “நான்மறை அந்தணன்” என்கிறது. இந்தியாவில் தோன்றி வாழும் மான்களில் இலக்கியங்களிலும் கலைச்சிற்பங்களிலும் முக்கிய இடம்பெறுவது கலைமான் ஆகும். கலை (கலைமான்), இரலை என்பன கருநிற மானாக விளங்கும் ஆண்பாலைக் குறிக்கும்.
ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும்
சேவும் சேவலும் இரலையும் கலையும்
மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்
போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும்
யாத்த ஆண்பாற் பெயர் என மொழிப. 2
(தொல். பொருள். மரபியல்)
சிவன் கிருஷ்ண அஜினம் அணிவது ஏன்? கையில் கருமானும், மழுவும் ஏந்துவது ஏன்? மழு சிவபெருமானின் பழைய வேத சம்பந்தமான வருணனைக் குறிப்பதாகும் [ii].
http://nganesan.blogspot.com/2011/10/akananuru-241.htmlPresence of 'Siva, S. Kramrsich, Princeton University press, pg. 338
"The consecrating magic of the black antelope skin was vested in the black antelope, Rudra's victim. "Once upon a time the sacrifice escaped the gods, and having become a black antelope roamed about. The gods having thereupon found it, and stripped it of its skin" ('Satapatha Brahmana 1.1.4.1) [25].
[...]
Even so it was the skin of the black antelope (kRSNaajina) that sanctified and was homologized with the brahman (KB 4.11). The gods flayed the animal; Rudra had shot it.
Ironically though, by unerring logic, Rudra, who was excluded from the sacrifice, was the cause of the sacrificial, sanctifying magic emanating from the flayed skin of the black antelope, his victim.
Ritually, the black antelope was the sacrifice. Mythically and ritually, Prajapati was the sacrifice. "With the sacrifice the gods sacrifice to the sacrifice" (Rgveda 10.90.16; VS 31.16; 'SB 10.2.2.2). The antelope was Prajapati and, from the beginning, Rudra's animal skin."
வேணியன் என்னும் சொல் அம்பட்டன் என்ற பொருளில் வழங்கும். வேட்டையாடி வரும் விலங்குகளை உரித்துப் பதப்படுத்துவோன் என்ற பொருளும் இந்த அரிய பாடல் தரும் நயம் காண்க. வேணியன்மார் மங்கலன் என்றும், ஆமாத்திய அந்தணர் என்றும் வழங்குவர். மங்களாதிராசன், மங்கலப்பேரரையன் என்பது கல்வெட்டு வழக்கு. அறுவைச்சிகிச்சை சாஸ்திரம் தந்த சுஸ்ருதர், பாண்டியனின் முதலமைச்சர் மாணிக்கவாசகர் போன்றோர் ஆமாத்திய அந்தணர்கள் மரபு.
(1) வாணியன் - எள்ளைச் செக்கில் ஆட்டும் தொழிலன். செக்காடும்போது இசையொலி போலத் தொடர்ந்து கேட்கும்.
(2) வண்ணான் - துணிவெளுப்போன். (3) வடுகன் - வைரவன் (4) செட்டி - செட்டிப்பிள்ளை ஆகிய முருகவேள்
(5) சேணியன் - துணிநெய்யும் சேடர் (iii). வடுகன்; செட்டி, சேணியன் - கன்னட-தெலுங்கு தேசத்து மக்கள், பொருள்களைக்
கூவி விற்பவர், தேவர்களுக்கு வேள்விசெய்வோர் என இன் மூன்று சாதியார் எழுப்பும் கோஷம் மந்திரவோசை போல
இருந்தது. (6) பள்ளி - தமிழகத்தின் வட மாவட்டங்களில் வாழும் உழவர்கள். தென்மாவட்டங்களில் உழக்குடிகளைப்
பள்ளன்-பள்ளி என்பர். தமிழில் உழவர்கள் மீது நூற்றுக்கணக்கில் பள்ளு நூல்கள் உண்டு. இரு பள்ளிப் பெண்களின்
ஏசல் பாடல்கள் இருக்கும். சைவம், வைணவம் பற்றிய செய்திகளைக் காணலாம். (7) வியாபாரிகள் பசும்பை ஏந்தி
வேளாண் விளைச்சலை வாங்கி விற்பர். கோணி = சணற்பை (சாக்குப்பை). கரும்பைக் கோணியன் = பசும்பை ஏந்தும் வைசியன் .
(8) கருமான் = கருங்கொல்லன், இரும்புக்கருவிகளை ஆக்குவோன் (9) வேணியன் = அம்பட்டன் என்னும் நாவிதன்
(10) தட்டான் = பொற்கொல்லன்.
சுமார் 2000 ஆண்டுகளாக இயங்கிய வேளாண்மைச் சமுதாயத்தின் தூண்களாக இருந்த 10 ஜாதிகளைக் கூறி, அவர்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவர்கள் முன்செல்ல யாருக்கும் தட்டுப்படாத இறைவன் எழுந்தருளினது அதிசயம் என்று நிந்தாஸ்துதியாகக் காளமேகப்புலவர் பாடியுள்ளார்.
நா. கணேசன்
http://nganesan.blogspot.comhttps://archive.org/details/@dr_n_ganesanReferences:
(i) ஒன்னப்பூ < சொன்னப்பூ
https://groups.google.com/forum/#!msg/mintamil/ITBgI8T0418/fd56P0ogAQAJ(ii) சங்க காலத்தில் “மழுவாள் நெடியோன்” எனப்பட்ட வருணன்,
அவனுக்கான குடிமல்லம் லிங்கம், பின்னர் சிவனுக்கான வரலாறு:
https://archive.org/details/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC/mode/2up(iii) கல்பட்டு நடராஜன் சிறுகதை - சேணியன் என்ற சொல் புழங்கியது:
https://groups.google.com/d/msg/vallamai/qdn5Q5_o6Ls/f08W22TvfWsJ