நேமி
முறம் அல்லது சுளகைக் கொண்டு உமி, பதர், கல் போன்றனவற்றைப் பிரிப்பதில் பல வினைகள் உள்ளன. கொழித்தல், புடைத்தல், தெள்ளுதல், நேம்புதல் போன்ற செயல்பாடுகள் அடங்கும்.
புடைத்தல் என்றால் தானிய மணிகளைத் தூக்கி மேலே வீசி, கீழே முறத் தட்டில் வீழுமாறு செய்தல். புடைத்தல் = அடித்தல். ஒருபுடை புடைத்தான் என்பதுபோன்ற உலகியல் வழக்கங்களை நோக்குக.
தெள்ளுதல் = தெறித்தல். பிரிந்த பதடு, சிறுகல், குப்பை போன்றவற்றை வெளியே தெறித்து அகற்றுதல். தெள்ளுதல் = தெறித்தல்.
பொன்னினும் வெள்ளி யானும் பளிங்கினும் புலவன் செய்த
நன்னிறக் கலத்திற் கூர்வா ணட்டென வாக்கிச் சேடி
மின்னனா ரளித்த தேறற் சிறுதுளி விரலிற் றெள்ளித்
துன்னிவீழ் களிவண் டோச்சித் தொண்டையங் கனிவாய் வைப்பார்.
புலவன் செய்த நல் நிறக் கலத்தில் - கம்மப் புலவனாற் செய்யப்பட்ட நல்ல ஒளியையுடைய கலங்களில், கூர்வாள் நட்டென வாக்கி அளித்த - கூரிய வாளை நட்டாற்போல வார்த்துக் கொடுத்த, தேறல் - மதுவில், சிறு துளி விரலில் தெள்ளி - சிறிய துளியை விரலாற்றொட்டுத் தெறித்து, துன்னி வீழ் களிவண்டு ஓச்சி - நெருங்கி வீழும் மதுமயக்கத்தையுடைய வண்டுகளை ஓட்டி,
கள்ளுண்பார் அதனை விரலாற்றொட்டுப் பூச்சி, வண்டுகளை தெறித்து நீக்கிப் பின் குடித்தலுக்கான அழகான வர்ணனையைப் பரஞ்சோதி முனிவர் மரபுச்செய்யுளில் பதிந்துள்ளார்.
தெள்ளு- (1) To sift, as grain; கொழித்தல். Colloq. (2). [M. teḷḷuka.] To sift gently in a winnowing fan; புடைத்தல். (3) To waft, as the sea; to cast upon the shore; அலைகொழித்தல். கரிமருப்புத் தெள்ளி நறவந் திசைதிசை பாயும் (திருக்கோ. 128).
-------
நேம்புதல். தமிழில் நேம்பு- என்னும் வினைச்சொல் தெலுங்கில் நேமு- எனப்படுகிறது. Ref. MTL. சேந்துகிணற்றில் நேமி மீது கயிற்றை இட்டு குடமோ,வாளியே கீழே செலுத்தி, நீரை மொண்டு மேலே நீர் சேந்துகின்றனர். நீர் இறைக்கும்போது, உருள்நேமி தன் அச்சில் வலம்புரியாகவும், இடம்புரியாகவும் சுழலும். இச் செயல்தான் த்ராவிட மொழிகளில் நேம்புதல்/நேமுதல் என்ற வினைச்சொல் ஆகும்.
முறத்தில் பெண்கள் தானியம் நேம்பும்போதும், மேல் இருந்து பார்த்தால், சேந்துகிணத்து நேமி போலவே, வலம்புரியாகவும் (clockwise), இடம்புரியாகவும் (anti-clockwise) சற்றெ மாறிமாறிச் சுழற்றுவது காணலாம்.
குதிரை பூட்டிய தேர்களின் சக்கரத்தில் நேமி (felloe or felly):


Max Sparreboom, Chariots in the Veda, 1985, E. J. Brill, Leiden
pg. 130
"The spoked chariot-wheel consisted of a felloe (nemi) with a rim (pavi), with spokes (ara) fitted in holes of the nave (naabhi) and it was secured in its place by a linch-pin (aaNi)."
தியானத்தில் ஆழ்ந்த தீர்த்தங்கரர்களுக்குக் கல்வெட்டுகளில் முதலில் ஆழ்வார் என்று பெயர். ஆழ்-தல் “to sink" > ஆணி (=lynch pin) என்னும் தமிழ்ச் சொல் வேதத்தில் இருக்கிறது. ஆர், அர- = தண்டு. தாமரைத்தண்டு = ஆர், அர-. தாமரைத்தண்டின் மேல் பூ விரிகிறது. அர-விரிந்த > அரவிந்த. எனவே, இவுளிச் சாரட்டுகளில் ஆணி போலவே, அர ‘spoke' தொல்தமிழ் என்க. நேம்பு-/நேமு- வினைச்சொல் (உ-ம்: ) தானியத்தை நேம்புவதும், அதே போல கிணற்றில் நேமியின் செயல்பாடும் பார்த்தோம். எனவே தான், நேமி = framework for well-rope (pulley).
குவி/குமி, சவரி/சமரி(=கவரி/கமரி, சாமரை), கோமணம்/கோவணம், உமணர்/உவளம், கமலை/கவலை (ஏற்றத்தின் சால்) ... போல நேம்பு-/நேமு- > நேவு- > நாவுதல் (அ) நாம்புதல் என்றும் வழங்குகிறது.
”உமியும் தவிடும் நீக்கிய பின்னர் சுளகின் அடிப்பாகத்தில் தங்கியிருக்கும் அரிசியை இடதுபக்கமுள்ள இன்னொரு சாக்கில் தட்டுவார்கள். பட் பட்-என்று சுளகைத் தட்டி அனைத்து அரிசியையும் ஒன்று சேர்த்து மிக லாவகமாக அவர்கள் சாக்கில் கொட்டும் அழகே தனி. இப்படியே அடுத்தடுத்து குற்றப்பட்ட அரிசி-உமிக் கலவையை எடுத்து, உமி தவிடு நீக்கி அரிசியை எல்லாம் தனியே சேர்த்துவைப்பார்கள்.
இதற்குள் நெல்குத்திய அக்காமார் தம் வேலையை முடித்து, முந்தானையால் முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டே அத்தை பக்கத்தில் வந்து அமர்வார்கள். அவர்களுக்குச் செம்பு நிறைய தண்ணீர் கொண்டுவந்துகொடுப்பார் அம்மா. இருவரும் மடக் மடக்-என்று குடித்துச் செம்பைக் காலிசெய்வர். “அடுத்து என்ன செய்ய” என்றும் கேட்பர். “நான் பொடச்சுப்போட்ட அரிசிய நல்லா நேம்பி வையி. ஒத்தக் கல்லு இருக்கக்கூடாது" என்று ஒரு அக்காவிடம் அத்தை கூறுவார். அடுத்தவரிடம், “நீ அவ நேம்பிக்கொடுக்கறதக் கொழிச்சுப்போடு” என்பார். அப்பப்ப நாவிக்க. எல்லாக் குருணையையும் அந்தச் சட்டியில கொட்டிவையி. பொடிக்குருணை கோழிக்கு ஆகும். என்பார். நேம்புதல், கொழித்தல், நாவுதல் எல்லாம் சுளகைக் கையாளுவதில் வெவ்வேறு வழிகள். அரிசியினின்றும் கல்லைப் பிரித்தெடுக்க, குருணை எனப்படும் குறு நொய்யைத் தனியே பிரிக்க என்று பல்வேறு முறைகள். இறுதியில் மணிமணியாக முழு அரிசி ஒரு பக்கம், குருணை ஒருபக்கம், கல்லும் கழிவும் ஒருபக்கம், தவிடு ஒரு பக்கம், உமி ஒரு பக்கம் என அந்தப் பகுதியே நிறைந்துவிடும்.” (பேரா. ப. பாண்டியராஜா, 3/31/2015).
நேம்- என்ற தாதுவில் இருந்து நேமு-/நேம்பு- என்றும், நேமி என்ற பெயர்ச்சொல்லும் தோன்றியுள்ளன.
எழுத்தோசைகளை உருவாக்குவதற்காக நாக்கு அலைகொழித்துக் கொண்டிருக்கும் வாயுறுப்பு. ஆதாவது, நேவிக்கொண்டே/நேமிக்கொண்டே > நாவிக்கொண்டே இருக்கும் நாவு.
நவ்வி என்றால் மான், முக்கியமாகப் பெண் மான். ஏனெனில், தன் இனநிரைக்கு ஆபத்து வருகிறதோ என தலையைத் தூக்கி நேம்பிக்கொண்டே/நாவிக்கொண்டே அங்குமிங்கும் பார்த்துக்கொண்டு புல்மேயும் பண்பினதால், நவ்வி என்பது பண்பாகுபெயர். (கோவை:கொவ்வைக்காய், ... போல, நாவிக்கொண்டிருப்பது நவ்வி. எப்பொழுதும் வெளியே தெரியுமாறு நாவு(நாக்கு) இருப்பதால் நாய் (நாஇ - தொல்காப்பியம்) என்கிறோம். நாயாட்டு என்றால் வேட்டையாடல்.
நா. கணேசன்