ஷவ்வால் தலைப்பிறை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவரின் அறிக்கைக்கான கிண்ணியா உலமா சபையின் விளக்கம்.
கிண்ணியாவில் ஷவ்வால் தலைப்பிறை கண்டு நோன்புப் பெருநாளை 08.08.2013 வியாழன் அன்று கொண்டாடியது தொடர்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தேசியத் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள், அதே தினம் பிற்பகல் 01.08 மணிக்கு ஆற்றிய உரையில் காணப்படும் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் தொடர்பாக கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது.
இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, தஃவா அமைப்புக்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் 08.08.2013 (வியாழன்) பி.ப 04.00 மணி அளவில் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபையில் கூடி இது தொடர்பாக கலந்துரையாடியதன் மூலம் எடுக்கப்பட்ட விடயங்களை பொதுமக்களுக்கு கீழ்வருமாறு தெளிவுபடுத்த விரும்புகின்றது.
1. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை 07.08.2013 (புதன் மாலை) நாட்டின் பல்வேறு பாகங்களிலும் பிறை பார்க்கும்படி பொதுமக்களை வேண்டியதுடன், அதுகுறித்த தகவல்களை தெரிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்களை ஊடகங்கள் வாயிலாகவும், குறுந்தகவல்கள் மூலமாகவும் குறிப்பிட்டிருந்தது. மேலும், மேமன் சமுகத்தைச் சேர்ந்த பிறைக்குழுவையும் கிண்ணியா போன்ற முஸ்லிம் பிரதேசங்களுக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் கிண்ணியாவில் ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை தென்பட்டதை அறிவித்ததைத் தொடர்ந்து வானசாஸ்திர திணைக்களத்தின் கருத்தின்படி 07.08.2013 புதனன்று பிறை தென்பட சாத்தியமில்லை எனக் கூறியுள்ளமை ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்தாக அமைந்துள்ளது. ஷவ்வால் தலைப்பிறை பார்hக்கும்படி மாநாட்டைக் கூட்டியவர்களே, அதே தினத்தில் பிறை தென்படாது என்று மறுத்துரைப்பது ஒன்றுக்கொன்று நேர் மாறான கருத்தாகக் காணப்படுகின்றது.
2. கிண்ணியாவில் நோன்புப் பொருநாள் கொண்டாடுவதென கிண்ணியா உலமா சபை எடுத்த தீர்மானத்தில் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ஒப்பமிடவில்லை எனவும், போலியான ஒப்பமிடப்பட்டுள்ளது எனவும் றிஸ்வி முப்தி அவர்கள் தனது விளக்கவுரையின் போது குறிப்பிட்டார். உண்மையில், குறித்த அக்கடிதத்தில் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம். ஹிதாயத்துள்ளாஹ் (நளீமி) அவர்களே கையொப்பமிட்டிருந்தார். இவர், முன்னாள் தலைவராகவிருந்த மௌலவி ஏ.ஆர். நஸார் (பலாஹி) அவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றதன் பின்னர், அவருக்குப் பதிலாக 2013 பெப்ரவரியிலிருந்து நஸார் மௌலவியின் உடன்பாட்டுடனேயே தலைவராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவுக்கிணங்கவே நியமிக்கப்பட்டமை கவனிக்கத்தக்கது. இது கிண்ணியா மக்கள் நன்கறிந்த விடயமாகும். இந்நிலையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் இவ்விடயத்தை அறியாதிருக்கிறார் என்பது ஆச்சரியமே.
3. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் கொழும்பிலிருந்து அனுப்பப்பட்ட குழு, கிண்ணியாவில் பிறை கண்ட மஸ்ஜிதுல் அஸ்ஹர் பேஷ் இமாம் றியாஸ் மௌலவி அவர்களிடமிருந்து இது குறித்து விசாரிக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. எனினும், அவர் அக்குழுவினரின் வாகனத்திலேயே நீண்ட நேரமாக இருந்துள்ளார். ஆனால், குறித்த பிரதேசத்தில் பிறை கண்ட இன்னும் சிலரை விசாரித்த (மேமன் சமூகத்தைச் சேர்;ந்த) அக்குழுவினர் தமிழ் மொழியில் விசாரித்தபோதும், அதனை கொழும்புக்கு அறிவிக்கும்போது மேமன் மொழியிலேயே பேசியுள்ளனர். இது, கருத்துக்களை முன்வைத்த மக்களுக்கு, அவர்கள் என்ன கருத்தை கொழும்புக்கு எத்தி வைக்கிறார்கள் என்பதைப் புரிய முடியாது செய்துவிட்டது.
4. கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் தலைவர் ஏ.ஆர். நஸார் மௌலவி அவர்கள் தனது உயர் கல்விக்காக வெளிநாடு சென்றிருந்தார் என்று குறிப்பிட்டிருந்தோம். அவர் அவ்வாறு சென்றதிலிருந்து இன்றுவரைக்கும் அவர் தலைமைப் பொறுப்பை மீளப் பொறுப்பேற்கவில்லை என்பதும் இங்கு ஊன்றி கவனிக்கத்தக்கது. அதன் காரணமாகவே தற்போதைய தலைவர் ஏ.எம். ஹிதாயதுள்ளாஹ் (நளீமி) அவர்களும், தற்போதைய செயலாளர் எம்.எஸ்.எம். ஷபாஅத் (மதனி) அவர்களும் கையொப்பமிட்டிருந்தனர். நிலைமை இவ்வாறிருக்க, இதுகுறித்த மேலதிக விளக்கங்கள் எதனையும் பெறாது அ.இ.ஜ. உலமா தலைவர் றிஸ்வி முப்தி அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூலம் நாட்டு முஸ்லிம் மக்களுக்கு விடுத்த பிறை தொடர்பான விளக்கத்தில் குறிப்பிட்ட கருத்துக்கள் கிண்ணியா உலமா சபையின் தலைவரையும் செயலாளரையும், கிண்ணியா மக்களையும் கவலையடையச் செய்வதாகவும் அவமதிப்பதாகவும் அமைந்துள்ளது.
5. ஷவ்வால் பிறை தொடர்பான அ.இ.ஜ. உலமாவின் தீர்மானத்தின் பின் கிண்ணியா ஜமஇய்யதுல் உலமா எடுத்த ஏகோபித்த தீர்மானத்தை விமர்சிக்கும்போது அ.இ.ஜ.உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி அவர்கள் கடந்த சுனாமியின்போது கிண்ணியா, மூதூர் மக்களுக்கு, தான் செய்த உதவியைச் சொல்லிக் காட்டினார். உலமா சபையின் தேசியத் தலைவர் ஒருவர் தனது சொந்த மக்களுக்கு ஒரு கஷ்ட நிலையின்போது செய்த ஒரு மனிதாபிமான உதவியை சொல்லிக்காட்டுவது எவ்விதத்தில் நியாயமாகப்படுகிறது? இலங்கை முஸ்லிம்களால் கண்ணியமாக மதிக்கப்படுகின்ற தேசியத் தலைவர் ஒருவரிடமிருந்து இத்தகைய கருத்தை எமது மக்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இது மனவருத்தத்திற்குரியது.
6. 08.08.2013 (வியாழக்கிழமை) அன்றைய தினம் கிண்ணியா மக்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடியது தொடர்பாக தனது பத்வாவை வெளியிடும்போது, இன்று நோன்பை விட்டவர்கள் அதனை இன்னுமொரு தினத்தில் கழா செய்ய வேண்டுமென்றும், இன்று நோன்பு நோற்றவர்கள் நன்மாராயம் பெற்றவர்கள்என்றும் குறிப்பிட்டிருந்தார். தமது சொந்த மண்ணில் பிறை கண்ட மக்கள் பெருநாளைக் கொண்டாடுவது எவ்விதத்தில் தவறாகும். எந்த அளவுகோலை வைத்து குறித்த பத்வாவை அவர் அம்மக்களுக்கு முன்வைத்தார்? இரண்டாம் நபர்களின் கருத்துக்களை மட்டும் வைத்து இவருக்கு பத்வாவை வழங்க முடியுமானால், பிறையை கண்ணால் கண்டவர்கள் இஜ்திஹாத் அடிப்படையில் தீர்மானம் எடுத்து, பெருநாளைக் கொண்டாடியது எவ்விதத்;தில் தவறாகும். இந்நிலையில், அவர் இலங்கைவாழ் முஸ்லிம்கள் மத்தியில் முன்வைத்த பத்வாவுக்கு என்ன பெறுமானம் இருக்கிறது? இதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
7. கிண்ணியாவில் பிறை தொடர்பாக யாரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என தேசியத் தலைவர் குறிப்பிட்டிருந்தார். இக்கருத்து கண்டிக்கத்தக்கது. ஏனெனில், கிண்ணியாவில் பிறை கண்டது தொடர்பாக கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக் கமிட்டியின் பொறுப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எஸ். ஜாபிர் (நளீமி) அவர்கள் உரிய முறையில், உரிய நேரத்தில் அ.இ.ஜ. உலமாவிடம் தகவல்களை வழங்கியுள்ளார். (இவர் கிண்ணியா ஜாவாப் பள்ளிவாயலின் தலைவராகவும், பாடசாலை ஆசிரியராகவும் கடமையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது). இந்நிலையில், கிண்ணியாவில் இருந்து தமக்கு உத்தியோகபூர்வமாக தகவல் சொல்லப்படவில்லை என்பது உண்மைக்குப் புறம்பான கருத்தாகும். இவ்விடயம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கருத்தை கேள்வியுற்ற கிண்ணியா உலமா சபை இரவு 09:00 மணியளவில் தஃவா அமைப்பின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பிறை கண்டவர்கள், அரசியல்வாதிகள் என பலருடன் ஒன்றுகூடி, பிறை கண்டதை மீண்டும் ஊர்ஜிதம் செய்து எடுத்த கருத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிடம் இரவு 09:30 மணியின் பின்னர் மீள அறிவித்தபோது, பிறை தொடர்பாக தீர்மானம் எடுக்க ஒன்றுகூடிய உலமா சபையினர் கலைந்து சென்றுவிட்டதாக அங்கிருந்து பொறுப்பற்ற பதிலை அளித்துள்ளனர். இதன் பின்னரே, கிண்ணியாவில் பெருநாள் கொண்டாடுவதென கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபை ஏகமனதாகத் தீர்மானமெடுத்து பொதுமக்களுக்கு அறிவித்தது.
8. அ.இ.ஜ. உலமாவினால் கிண்ணியாவுக்கு அனுப்பப்பட்ட மேமன் சமூகத்தவர்கள் இருவரும் சொன்ன கருத்துக்கள் நம்பக்கூடியதாக இருந்ததாகக் குறிப்பிடும் தேசியத் தலைவர், கிண்ணியாவில் பிறை கண்ட அத்தனை பேரினதும் கருத்துக்களைப் புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயமானது? தமது கண்களால் பிறை கண்டவர்களின் உண்மைக் கருத்துக்களை மறுதலித்து, விசாரிக்க வந்தவர்களின் கருத்தை மட்டும் முழுமையாக ஏற்றுக் கொள்வதிலுள்ள உள்நோக்கம்தான் என்ன???
9. தேசியத் தலைவரின் கூற்றில் மாலை 06:23 இற்கு கிழக்குப் பிராந்தியத்தில் பிறை காண முடியும் என குறிப்பிட்டிருந்தார். இப்பிறையானது சுமார் 14/15 நிமிடங்களுக்கு நிலைக்கும் என குறிப்பிட்டதன் பிரகாரம் அன்று மாலை 06:30 மணியளவில் கிண்ணியாவின் பல பிரதேசங்களில் பிறை தென்பட்டுள்ளமை ஊர்மக்களால் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கிண்ணியா உலமா சபையின் பிறைக் குழுவினர் விசாரித்து உறுதிப்படுத்திய பின் அன்று பிற்பகல் 06.58 இற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இவ்வறிவிப்பு காலம் தாழ்த்திய தகவல் என தேசியத் தலைவர் தனதுரையில் குறிப்பிட்டது எந்தளவு பொருத்தமானது?
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
கிண்ணியா கிளை
http://ilangaimuslim.blogspot.in/2013/08/blog-post_9.html
--
--
அவன்தான் சூரியனை ஒளியுடையதாகவும், சந்திரனை ஒளியை பிரதிபலிப்பதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மையை கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான். (10:5)
சூரியனும் சந்திரனும் கணக்கின்படியே இருக்கின்றன. (55:5)
To post to this group, send email to HIJRI...@googlegroups.com
To unsubscribe from this group, send email to
HIJRIINDIA+...@googlegroups.com
---
You received this message because you are subscribed to the Google Groups "HIJRI COMMITTEE / TAMIL" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to HIJRIINDIA+...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...கிண்ணியா பிறை விவகாரம்
பிறை விவகாரம்: தவறுகள் நடந்துள்ளன, திருத்தம் வேண்டும்
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் -
http://kattankudi.info/2013/08/13/6102#comment-763
சுமார் 2 முழு நாட்களை செலவு செய்து A4 தாளில் 20 பக்கங்கள் எழுதி சமூகத்திற்கு அவசியம் சொல்லப்பட வேண்டும் என்று தீர்மானித்த விடயங்களை மட்டும் பொறுக்கித் தயார் செய்ததே இந்த ஆக்கம். இதற்கு முன் எழுதிய ’வியாழன் நோன்பா..?பெருநாளா..?’ என்ற ஆக்கம் சமூகத்தில் பெரும்பாலானவர்களால் வரவேற்கப்பட்டாலும் அது நான் எழுதிய நோக்கத்தை நிறைவேற்றப் போதியதாக இல்லை என்பதே மீண்டும் இவ்வாக்கத்தை எழுதத் தூண்டியது.
எனது முதல் ஆக்கத்தில் மிகவும் அடக்கமாக இரண்டு தவறுகளை மாத்திரம் சுட்டிக்காட்டினேன். சமூகம் சிந்திக்க வேண்டும், படிப்பினை பெறவேண்டும். எமது எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் ஒரு சர்ச்சைக்குரிய காலத்தில் எமது உள்வீட்டு விஷயங்களையே தீர்த்துக்கொள்ள முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். இந்நிலை தொடரக்கூடாது என்பதை சமூகம் சாடையால் விளங்கிக்கொள்ளட்டும் என்ற நோக்கிலேயே முதல் கட்டுரையை எழுதினேன். எனினும், தற்போது களத்தில் காணுகின்ற, கேட்கின்ற செய்திகள் ’எழுதுவதைத் தெளிவாக எழுது! நாசூக்காக சொல்வதை விளங்கும் நிலையில் இன்றையவர்கள் இல்லை’ என்ற உண்மையை உணர்த்துவதாக இருந்தன. எனவே,வெளிப்படையாக சில விடயங்களை சொல்லும் நோக்கில் இதனை எழுதுகின்றேன்.
ஒரு பிரச்சினைக்கு எப்போதும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. இரண்டு பக்கங்களையும் எடுத்து ஆராய்கின்ற போதே சரியான முடிவுக்கு வர இயலும். எனினும் ஒரு சிலரால் பிரச்சினையின் ஒரு பக்கம் வலுக்கட்டாயமாக மூடிமறைக்கப்படுகின்றது. அதன்மூலம் நடைபெற்ற தவறுகள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன. இது சமூகத்தை பிழையான திசை நோக்கி அழைத்துச்செல்லும் ஒரு முயற்சியாகும்.
உமர் (ரழி) அவர்களிடம் கண்பிதுங்கி இரத்தம் வடிந்த நிலையில் ஒரு மனிதன் வந்தான். தனக்கு இந்த அநியாயத்தைச் செய்தவன் பற்றி முறையிட்டான். அப்போது உமர் (ரழி) அவர்கள், ‘உனது காயத்துக்கு மருந்திட்டுக்கொள், நடந்ததை விசாரிப்போம்’ என்றார்கள். இதனைக்கேட்ட அந்த மனிதன் கொதிப்படைந்தான். ’விசாரணை செய்ய என்ன இருக்கிறது?என்னைப்பார்த்தால் நடந்தது விளங்கவில்லையா?’ என்று கேட்டான். அதற்கு உமர் (ரழி) அவர்கள், ‘நீ அவனது இரு கண்களையும் பழுதுபடுத்தி விட்டு வந்திருக்கலாமல்லவா. விசாரணையின்றி எப்படி அதனைத் தெரிந்து கொள்வது?’ என்றார்கள்.
பிரச்சினைக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு தலைவர் ஒரு பக்கத்தை மூடிமறைக்காமல் எப்போதும் இரண்டு பக்கங்களையும் பார்த்தே முடிவு செய்ய வேண்டும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.
ஆனால் பிறை விடயத்தில் இரண்டு பக்கங்கள் பார்க்கப்படவில்லை. ஒரு பக்கம் தான் பார்க்கப்பட்டது. பார்க்கப்பட்ட ஒரு பக்கம்: 18 வானியல் நிபுணர்களின் கணிப்பு.., இந்தக் கணிப்பின் படி பிறை வெற்றுக் கண்ணுக்கு தென்படாது.
மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட அல்லது அலட்சியம் செய்யப்பட்ட பக்கம்: 25இற்கும் அதிகமானவர்கள் பிறையைப்பார்த்தார்கள் என்பதாகும். இவ்வாறு பிறையைப்பார்த்தவர்களுள் ஆலிம்களும் உள்ளடங்குவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு முரண்பட்ட விடயங்கள் தானே மொத்த சமூகத்தையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தின. சாதாரண குழப்பமா? ஓன்றில் நோன்பு நோற்பது ஹராம் அல்லது பெருநாள் எடுப்பது ஹராம். இந்த இரண்டு ஹராம்களுக்கு மத்தியில் சமூகத்தை சிக்கித் தவிக்க வைத்த பிரச்சினையொன்றையே நாம் எதிர்கொண்டோம்.
ஒரு சமூகத்திற்கு தலைமைத்துவம் ஏன் தேவைப்படுகின்றது?, நெருக்கடி மிக்க அல்லது குழப்பம் நிறைந்த இவ்வாறானதொரு சூழலில் ஷரீஆ நோக்கிலும் அறிவு ரீதியாகவும் பிரச்சினையைத் தீர்த்து சமூகத்தை அந்தப் பிரச்சினையிலிருந்து விடுவிப்பதற்குத்தானே!
29 நோன்புகள் பூர்த்தியாகிவிட்டன. இனி முப்பதாகலாம் அல்லது பெருநாள் வரலாம். பிறை தென்பட்டிருக்கிறது. உலமாக்கள் உட்பட 25 பேரளவில் பிறை கண்டிருக்கிறார்கள். வானவியல் நிபுணர்கள் பிறை காண முடியாது என்று சொல்கிறார்கள். வானவியல் கூறுவது ஓரு கருதுகோள். முஸ்லிம்கள் பிறை கண்டது ஒரு சாட்சி.
சாட்சியை முற்படுத்துவதா கருதுகோளை முற்படுத்துவதா?
சாட்சி கிடைத்துவிட்டால் கருதுகோள் பலவீனமாகிவிடும். சமூகம் கருதுகோளை சரிகாண மாட்டாது. சாட்சியைத்தான் வலுவானதாகக் கருதும். வானவியல் நிபுணர்கள் பிறை கண்ணுக்குத் தெரிய மாட்டாது என்கிறார்கள். முஸ்லிம்கள் பிறை கண்ணுக்குத் தெரிந்தது என்கிறார்கள்.
விஞ்ஞானத்துக்கு மாற்றமாக உலகில் ஒன்றுமே நடப்பதில்லையா? அல்லாஹ்வின் வல்லமை (குத்ரத்) என்று எடுத்ததற்கெல்லாம் பேசுபவர்கள் இந்த நிகழ்வில் அல்லாஹ்வின் குத்ரத் செயற்பட்டிருக்கலாம் என்பதை உணர மறந்துவிட்டார்களா? அல்லது வானவியல் நிபுணர்கள் பிறை வெற்றுக்கண்ணுக்குத் தென்படாது என்று கூறிய ஜப்பான், மலேஷியா,கேரளா மற்றும் மத்தியகிழக்கு நாடுகள் பலவற்றில் பெருநாள் கொண்டாடப்பட்டது ஹராமா?அங்கு சிலவேளை பிறை காணாமலேயே பெருநாள் கொண்டாடியிருக்கலாம். இங்கு கண்ட பிறையை நிராகரித்திருப்பது ஒரு பாவமில்லையா? பெருநாள் கொண்டாட வேண்டிய தினத்தில் எண்ணற்றவர்களை நோன்பு நோற்க வைத்து ஹராமைச் செய்வதற்கு முடிவெடுத்தவர்கள் ஒரு சமூகத்துக்கு எப்படி வழிகாட்டிகளாக இருக்க முடியும்.
சப்தமிட்டுக் கேட்க வேண்டிய கேள்வி இது. பிரச்சினையின் இரண்டு பக்கங்களையும் பார்க்கத் தெரியாததால் வந்த விளைவு, சமூகத்தைத் தீராத குழப்பத்தில் ஆழ்த்திய தீர்மானம் இல்லை சமூகத்தைக் குழப்புவதற்கென்றே எடுத்த சாணக்கியமில்லாத தீர்மானம். சமூகம் ஒன்றாக இருப்பதை விரும்பாத தீய சக்திகளின் சதி இந்தத் தீர்மானத்திற்குப் பின்னால் இருந்திருக்க வேண்டும் என நினைக்கத் தூண்டும் வகையிலான ஒரு முடிவு இது.
இது பிறை தீர்மானிப்பதில் நடந்த முதல் தவறு. இரண்டாவது தவறு பிறை பார்த்தவர்களையும் பெருநாளை எதிர்பார்த்திருந்தவர்களையும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியது மட்டுமல்ல, குறிப்பாக பிறை பார்த்தவர்களின் சாட்சியை நிராகரித்ததன் மூலம் சாட்சி அந்தஸ்து மறுக்கப்பட்ட ’ஃபாஸிக்’ கள் போன்று அவர்கள் வேதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். ஒரு முஸ்லிமின் சாட்சி எத்துனை கண்ணியமானது,அந்தஸ்து நிறைந்தது என்பதை இந்தத்தலைவர்கள் அறியவில்லை. ஆலிம்கள் உட்பட சுமார்25 முஸ்லிம்களது சாட்சி முஸ்லிம்களின் விவகாரமொன்றில் மறுக்கப்படுவதானது என்னைப் பொறுத்தவரை ஒரு பயங்கரமான தீர்மானமாகும்.
இஸ்லாமிய நீதிமன்றம் இருந்தால் இந்தத் தீர்மானத்திற்கெதிராக வழக்குத் தொடரலாம். நட்டஈடும் கோரலாம். தீர்மானம் எடுத்தவர்கள் தீர்மானம் எடுக்கும் பொறுப்புகளிலிருந்து முற்றாக நீக்கப்படவும் கூடும்.
சாட்சி அந்தஸ்த்தை மறுக்குமாறு அல்லாஹ் ஒருசில ’பாஸிக்’கள் விடயத்தில் சட்டம் வகுத்துள்ளான். அவர்கள் தான் கற்புள்ளவர்கள் தவறான நடத்தையில் ஈடுபட்டார்கள்,விபசாரம் செய்தார்கள் என்று அவதூறு கூறும் பாவிகள். பிறை கண்டவர்கள் அப்படிப்பட்டவர்களா? பிறை கண்டவர்கள் ஓரிருவராக இருந்தால் சாட்சி இரண்டு பெயருக்கிடையில் முரண்பாடாக இருந்தது என்றொரு காரணத்தைக் கூறலாம். சுமார் 25 பேர் கண்ட பிறையை எந்தக்காரணம் கூறி நிராகரிக்க முடியும். 25 பேரையும் இவர்கள் விசாரித்துத்தான் முடிவுக்கு வந்தார்களா? அல்லது அத்தனை பேரும் சாட்சி அந்தஸ்த்து மறுக்கப்பட்ட பாவிகளா? கிண்ணியாவின் பிறைக்குழுத் தலைவர் அஷ்ஷெய்க் ஜாபிர் அவர்கள் தெளிவான முறையில் பெரிய பள்ளவாசலுக்கு அறிவித்தல் கொடுத்த பின்னரும் அறிவிப்பு ஒழுங்காக வழங்கப்படவில்லை என்ற போலிக்காரணம் காட்டப்பட்டு பிறைச்செய்தி நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
பிறை விவகாரம் முன் அனுபவமே இல்லாத ஒரு புதிய விவகாரம் போன்று சாணக்கியம் இல்லாமல் அணுகப்பட்டிருப்பதனையே இந்த விடயங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பிறை நிராகரிக்கப்பட்ட பின் பல முஸ்லிம் ஊர்கள் குறிப்பாகக் கிண்ணியா பெருநாள் கொண்டாடும் தீர்மானத்துக்கு வந்தது. இந்தத்தீர்மானத்தை எடுக்க வைத்த காரணம் எது?கட்டுப்பாடின்மையா அல்லது நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம்,புறக்கணிக்கப்படுகிறோம், முஸ்லிம் சமூகத்தின் ஓர் அங்கமாக நாம் கருதப்படவில்லை என்ற ஆதங்கமா?
அஸாத் சாலி அவர்களது விவகாரத்திலும் பொது பல சேனா விவகாரத்திலும் பக்குவமாக,பவ்வியமாக, கட்டுப்பாடாக நடந்து கொண்ட சமூகம் தான் பிறை விவகாரத்தில் இவ்வாறு நடந்திருக்கிறது. யார் இதற்கு வகைகூறவேண்டும். இந்தப் பிளவுக்கான பொறுப்பை யார் ஏற்க வேண்டும். சமூகத்தின் ஒற்றுமைக்காகப் பாடுபடுகின்றோம் என்று பேசிவிட்டால் மாத்திரம் போதாது. ஒரு தாய்க்கோழி கறுப்பாயினும் வெள்ளையாயினும் தனது இறக்கையினுள் தனது குஞ்சுகள் அனைத்தையும் அரவணைப்பது போல தலைவர்கள் இந்த சமூகத்தை அன்போடு அரவணைக்கத் தெரிந்திருக்க வேண்டும். எனது முன் அனுபவங்கள் படி சொல்கிறேன். அவ்வாறு கறுப்பு, வெள்ளை பார்க்காது அரவணைக்கும் பரந்த மனம்,சகோதரத்துவம், அன்பு தலைவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு அரவணைக்கத் தெரியாதவர்கள் சமூகத்தை ஒற்றுமைக் கயிற்றினால் பிணைத்து வழிநடாத்துவது சாத்தியமில்லை.
பிறை விவகாரத்தின் பின்னர் எனது காதில் பட்ட ஒரு செய்தி தான் கிழக்கு மாகாணத்துக்கென ஒரு தனியான பிறைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற செய்தி. அவ்வாறு அமைக்கப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு?
சுனாமியின் போது கிழக்கு மாகாணத்துக்கு உதவி செய்தோம் என்பதை இது போன்றதோர் சந்தர்ப்பத்தில் சொல்லிக்காட்டுவது மேலும் அவர்களை மனம் நோகச் செய்திருக்கிறது. அந்த உதவிக்குக் கைம்மாறாக முஸ்லிம் சமூகத்தின் மார்க்க விவகாரமொன்றை விட்டுக்கொடுக்கக் கோருவது போலல்லவா இந்த சமயத்தில் அதனை நினைவுகூறுவது அமையும். இதனை அந்த மக்கள் என்ன மனநிலையுடன் பார்ப்பார்கள்? நாளை எங்களுக்கு உதவி செய்யும் நிலையை அவர்களால் அல்லாஹ் ஏற்படுத்தினால்…?!
மூன்றாவது தவறு: ரமழானில் முஸ்லிம் சமூகம் பெற்ற பயிற்சி நாவடக்கம், புலனடக்கம் அனைத்தும் ரமழான் முடிந்த கையோடு சின்னாபின்னமாகிவிட்டது. ஷைத்தான்கள் கட்டவிழ்த்து விடப்படுவது போல அடக்கிவைக்கப்பட்டிருந்த நாவுகளும், புலன்களும் அவிழ்த்துவிடப்பட்டன. பேஸ்புக்கும், இன்டர்நெட்டும் இதற்குச் சான்றுகள். அதுமட்டுமல்ல வீதியில் கண்டவர்கள், கதைப்பவர்கள் அனைவரின் வாயிலும் இந்தக்கதை தவிர வேறு கதை இல்லை. கிரான்பாஸ் பிரச்சினை இடைநடுவே குறுக்கிட்டதால் பேச்சு கொஞ்சம் திசை திரும்பியதே தவிர இந்தப்பிரச்சினையின் தாக்கம் குறைந்ததாகத் தெரியவில்லை. இதற்குச் சான்றாக அண்மையில் ஓதப்பட்ட குத்பாக்களைப் பார்க்கிறோம். ஏசாதீர்கள்,விமர்சிக்காதீர்கள், உலமாக்கள் கண்ணியமானவர்கள், நபிமார்களின் வாரிசுகள் என்றெல்லாம் உலமாக்களைப் புகழ்ந்து கூறும் குத்பாக்கள் திட்டமிடப்பட்டோ திட்டமிடப்படாமலோ நாடளாவிய ரீதியில் நடைபெறுவதைப் பார்க்கிறோம். சும்மா இருந்த வாய்களை திறந்துவிடாதிருந்தால் இத்தகைய குத்பாக்கள் ஓதவேண்டிய தேவை இருந்திருக்காதல்லவா. திறந்துவிட்டதன் பின் திகைப்பதில் என்ன புண்ணியம் இருக்கிறது. இப்போது மூடவைப்பதற்கு சிரமப்படுகிறார்கள். எந்தளவுக்கெனில் சில இடங்களில் ஓதப்பட்ட குத்பாக்கள் தலைவர்களை தவறுகளே செய்யாத ’மஃஸும்’கள் போல் போற்றிப் புகழ்வதாக இருந்தன. இத்தகைய குத்பாக்கள் தலைவர்கள் மீது மேலும் வெறுப்பை அதிகரிக்கவே வழி செய்யும்.
கொழும்புப் பெரிய பள்ளிவாசலின் சுவர்களுக்கு மத்தியில் கதைத்து முடிக்க வேண்டிய பிறைக்கதையை சந்திவரை இழுத்து வந்து ஊரூராக நாரவைத்த பின் சந்திசிரிக்காமல் கதைகளை நிறுத்துவதென்பது சுலபமான காரியமா? இத்தகைய கதைகள் உருவாகாமல் பெரிய பள்ளிவாசலுடனேயே முடித்துக்கொள்ளத் தெரியாத தலைவர்களைத்தான் பிறை விவகாரம் சமூகத்திற்குக் காட்டிக் கொடுத்திருக்கின்றது.
மக்கள் பிறைக்கதையை எங்களுக்குத் தாருங்கள் நாங்கள் கதைக்கிறோம் என்று கேட்டு வாங்கவில்லை. அவர்களுக்கு அது அவசியமுமில்லை. எப்போது தலைவர்கள் சமூகத்தை சீண்டாமல் குழப்பாமல் வழிநடாத்தும் தீர்மானங்களை எடுத்தார்களோ அப்போது சமூகம் இந்தக் கதைகளை அளந்துகொண்டிருக்கவில்லை. இத்தகைய கதைகளை கதைப்பதற்கு கால்நீட்டி முதுகுசாய்த்து காத்திருக்கும் சமூகமல்ல இது. கதைக்க வைத்ததனால் தான் சமூகம் கதைக்கவும் விமர்சிக்கவும் துவங்கியது. இது பக்குவமாகக் கதைக்கும் சமூகமல்ல. தேவையில்லாத ஒரு கதைக்கு வழிசெய்துவிட்டால் சமூகம் கண், மண் தெரியாமல் பேச ஆரம்பித்துவிடுமென்பதை சமூகத்தின் தலைவர்கள் அறிந்து செயற்பட்டிருக்க வேண்டும். சமூகம் வாயைத்திறந்துவிடாமல் பாதுகாக்கும் பக்குவமான தீர்மானங்களை எடுத்திருக்க வேண்டும்.
இவைதவிர வேறுபல தவறுகளும் இடம்பெற்றே இருக்கின்றன. பிறை தெரியாத நாளில் பிறை தீர்மானிக்கும் மாநாட்டைக் கூட்டி பிறைபார்க்குமாறு மக்களைக் கோரியமை. பிறை தீர்மானிக்கும் வரையறைகள் பற்றிய விளக்கங்களை சமூகத்துக்கு முன்கூட்டியே வழங்காமை. தவறுகளைத் தம்பக்கம் வைத்துக் கொண்டு சமூகத்தைத் தவ்பா செய்யுமாறு கூறியமை,கடுமையாக உணர்ச்சிவசப்பட்டமை.
ஏன் இவற்றையெல்லாம் நினைவு படுத்துகிறீர்கள்?, இவைகள் இப்போது பேச வேண்டிய விடயங்களா? நடந்தது நடந்து முடிந்துவிட்டது. இனி நடக்க இருப்பதைப் பார்ப்போம். இதோ கிரான்பாஸில் இனவாதிகள் தாக்குதல் நடாத்துகிறார்கள். நாம் எங்களுக்குள் சர்ச்சை வளர்த்துக்கொண்டிருக்க வேண்டிய நேரமா இது என்று தற்போதைய சூழ்நிலையில் சிலர் கேட்கத்தான் செய்வார்கள்.
முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை ஆபத்து அதிகமான பிரச்சினை வெளிப்பிரச்சினை அல்ல. உள்பிரச்சினை தான். உள்பிரச்சினைகளிலும் மிக ஆபத்தான பிரச்சினை சமூகத்தை சரியான திசையில் வழிநடாத்த முடியாத தீர்மானங்களை எடுக்கும் தலைவர்களது பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினைக்கு சரியான தீர்வு கண்டுவிட்டால் ஏனைய பிரச்சினைகள் முஸ்லிம் சமூகத்தைப்பொறுத்தவரை பாரதூரமானவைகள் அல்ல. சமூகத்தின் மீது உண்மையான கவலை, அன்பு கொண்டவர்கள் இந்த விடயத்தை ஒரு சிறிய பிர்ச்சினையாகக் கருதமாட்டார்கள். அவர்களுக்கு அதன் பாரதூரம் நன்கு புரியும். சமூகத்திற்கு எதை எப்போது சொல்லவேண்டும் என்று தெரியாமல் உணர்ச்சிவசப்படுபவர்களுக்கும் வருகின்ற ஆத்திரத்தில் இன்று ஒன்றை சொல்லிவிட்டு நாளை அதை நியாயப்படுத்திக்கொண்டிருப்பவர்களுக்கும் சமூகம் குறிபார்த்துச் சுடும் பலகை போன்றதாகும். அம்பு குறிதவறி பிழையான இடத்தில் தைத்தாலும் சரி, சரியான இடத்தில் தைத்தாலும் சரி அவர்களுக்குப் பலகை பற்றிக் கவலை இல்லை. பிழையாகத்தைத்த அம்பை எடுத்து மீண்டும் குறிபார்த்து எறிந்து பலகுவதே அவர்களது வேலை.
சமூகத்தை இப்படி குறிபார்த்துச் சுடும் பலகையாக்க முடியாது. அதனை மார்க்கத்திலும் உலகத்திலும் சரியான வழிநடாத்தல்களுக்குட்படுத்துகின்ற சிறந்த தலைவர்கள் தான் இன்றைய அடிப்படைத் தேவையும் தீர்க்க வேண்டிய முதல் பிரச்சினையுமாகும். இந்தப் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு எட்டப்பட வேண்டும்.
அந்தவகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அமைப்புக்கு தலைமை வழங்க அறிவிலும் நிதானத்திலும் சமூக உறவிலும் பரந்த மனப்பான்மையிலும் அரவணைப்பிலும் சிறப்பாக முன்னின்று உழைப்பதற்கு தகுதியான ஒருவராக நான் கண்ணியமிக்க யூசுஃப் முஃப்தி அவர்களைக் காண்கின்றேன். அவர் அப்பதவிக்கு அமர்த்தப்பட வேண்டும் என முன்மொழிகின்றேன், இப்படி ஒரு மாற்றம் தேவை என்பதற்கு இன்னும் பல நியாயங்கள் இருக்கின்றன, அவற்றை நான் இங்கு குறிப்பிடவில்லை. பிறை விவகாரத்துடன் தொடர்பான நியாயங்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.
நாங்கள் இயக்கங்களையும் மனிதர்களையும் மதிப்பவர்கள், எனினும் எமக்கு சிறந்த சமூகமும் சீரிய தலைமைத்துவமுமே முக்கியமாகும், அந்த வகையில் எழுதுகின்ற எழுத்தே இது. தனிப்பட்ட ரீதியில் ஒருவருடன் உள்ள வெறுப்பை வெளிப்படுத்துவற்காக எழுதப்பட்ட ஆக்கமல்ல இது.
அவ்வாறான ஷைத்தானிய உணர்வுகளை ஷைத்தான் தூண்டவே செய்வான், அதற்கு இடம் கொடாமல் உமர் (ரழி) அவர்களிடம் இருந்தது போன்ற ஓர் எண்ணத்தை வெளியிடவே இதனை எழுதியுள்ளேன். உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள் ’அபூ ஹுதைபாவின் அடிமை ஸாலிம் உயிரோடிருந்தால் நான் அவரை அடுத்த கலீபாவாக நியமித்திருப்பேன்’.
இந்தக் கூற்றினால் உஸ்மான் (ரழி), அலீ (ரழி), தல்ஹா (ரழி), அப்துர் ரஹ்மான் (ரழி) போன்ற பெரும் நபித்தோழர்கள் இழிவுபடுத்தப்படவில்லை. மாறாக பொருத்தமானவர் பற்றிய ஓர் அறிவிப்பே இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த வகையில் எனது முன்மொழிவை சமூகத்தின் முன்னால் வைக்கின்றேன். இது ஜமாஅதே இஸ்லாமியின் கருத்தல்ல, ஜமாஅதே இஸ்லாமியின் மஜ்லிஸுஸ் ஷூறா கலந்தாலோசித்து எடுத்த முடிவுமல்ல. சமூகம், சமூக அமைப்புகள் இயக்கங்கள் மனிதர்கள் நிலைவரங்கள் நடப்புக்கள் பற்றிய எனது தனிப்பட்ட அவதானத்திலிருந்து நான் பெற்ற முடிவாகும். என்னைப் பொருத்த மட்டில் இது ஒரு முடிவு, சமூகத்துக்கு இது ஓர் ஆலோசனை, இயக்கங்களுக்கு இது ஒரு பணிவான வேண்டுகோள். இங்கு பெயர் குறிப்பிட்ட குறிப்பிடாத தனி மனிதர்களிடம் இந்தக் கருத்தை முன்வைப்பதற்காக மன்னிப்புக் கோருகின்றேன். எனினும் எனது சமூகம் பற்றிய மனநிலையில் இப்படி ஒரு கருத்தை தற்போதைய நிலையில் என்னால் எழுதாமல் முன்வைக்காமல் இருக்க முடியாது, இது எனது உள்ளத்தின் இயல்பானதொரு வெளிப்பாடாகும். என்னையும் உங்களையும் அறிவதற்கு அல்லாஹ் போதுமானவன்.
வியாழன் பெருநாளா...? நோன்பா...?
வியாழன் பெருநாளா...? நோன்பா...? முக்கால் நாளாக முஸ்லிம் சமுகம் கேட்டு ஓய்ந்த கேள்வி இது. புதன் மஃரிப் முதல் வியாழன் பிற்பகல் ஒரு மணி வரை விடையின்றித் தவித்த இக்கேள்விக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி முற்றுப்புள்ளி வைக்கிறார். அது ஒரு அருமையான விளக்கம். அந்த விளக்கத்தில் ஒரே ஒரு கேள்வியையும் ஒரு பத்வாவையும் தவிர அனைத்துக்கும் தெளிவான விடை இருந்தது. அவற்றை பின்னர் பார்போம்.
புதன் மஃரிப் முதல் வியாழன் பிற்பகல் ஒரு மணி வரை சுமார் முக்கால் நாள் முஸ்லிம் சமுகம் குட்டை குழம்பிய கதையாகியது. இதே போன்றதொரு பெருநாள் சுமார் 10 வருடங்களுக்கு முன்பும் சமூகத்தை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது அனைவருக்கும் நினைவிருக்கும். அந்தப் பெருநாள் இறுதியாக ஸஹர் நேரத்தில் அறிவிக்கப்பட்டது, திடுதிப்பாக வந்த அந்தப் பெருநாளை முஸ்லிம் சமூகம் வெகு 'விமர்சனத்துடன்' கொண்டாடியது. அன்றைய இரவு முழுவதும் தூங்காமல் சமூகத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்த ஞாபகம் இன்னும் எனது நினைவை விட்டு அகலவில்லை.
'ஜம்இய்யதுல் உலமாவின் தீர்ப்பே இறுதியானது அவர்களின் தீர்மானத்திற்கேற்ப செயற்படுங்கள்' என்ற வாசகத்தை ஒரு திக்ர் போல அன்றைய இரவு முழுவதும் உச்சரித்துக் கொண்டிருந்தேன் கேள்வி கேட்பவர்களுக்குப் பதில் கூறுவதற்காக...
இம்முறை அதனை நான் செய்யவில்லை. காரணம் கள நிலைவரங்கள் திருப்திகரமான தகவல்களைத் தருவதாக இல்லை. குட்டை நன்றாகக் குழம்பியே இருந்தது. பலருடைய மனநிலையை அவதானிக்கும் போது ஜம்இய்யதுல் உலமாவுக்கு சார்பாக சிந்திக்கும் போக்கில் அவர்கள் இல்லை என்பது புரிந்தது. இந்நிலையில் ஜம்இய்யதுல் உலமாவின் தீர்ப்பே இறுதியானது, அதனை நடைமுறைப்படுத்துங்கள் என குழம்பிப் போயிருப்பவர்களுக்கு நான் கூற முற்பட்டால் இரவு முழுவதும் தொலைபேசி விவாதம் நடாத்த வேண்டி வந்திருக்கும். தற்செயலாக ஜம்இய்யதுல் உலமா விரும்பாத ஒரு வார்த்தை எனது நாவிலிருந்து வெளிப்பட்டு விட்டாலோ இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஜம்இய்யதுல் உலமாவை விமர்சிக்கின்றது என்று, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க விழைபவர்களும் இல்லாது போக மாட்டார்கள்.
எனவே குழம்பிய சமூகத்தை உரியவர்களே கையாளட்டும் என்ற நோக்கில் நான் தொலைபேசி இயக்கத்தை நிறுத்தி விட்டேன். பேசுவதின் மூலம் வருகின்ற தொல்லைகளை விட அமைதியாக இருப்பது குறித்து வரும் விமர்சனம் பாதிப்புக் குறைந்தது என்ற கணிப்போடு...
இருப்பினும் பெருநாளா? நோன்பா? என்ற குழப்பத்தில் சமூகம் அல்லோலகல்லோலப்பட்டிருந்ததை யாரும் மறுக்க முடியாது.
பல ஊர்கள் வியாழன் பெருநாள் கொண்டாடுவதாக தீர்மானித்து விட்டன. நோன்பு பிடிப்பது ஹராம் என்ற பத்வாக்கள் மின்னல் வேகத்தில் பரவியிருந்தன. விமர்சனங்களும் கேள்விக்கணைகளும் ஓய்வதாகத் தெரியவில்லை.
இவற்றையெல்லாம் சரிகண்ட நிலையில் நான் இதனை எழுதவில்லை. எனினும் சமூகத்தின் நிலை வியாழன் பிற்பகல் ஒரு மணிவரை இவ்வாறு தான் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இதற்கு யார் காரணம்?
பக்கச்சார்போடு குறைகளை ஒருபக்கம் வைத்துப் பேசி விடாமல் படிப்பினை பெறும் நோக்கில் நடுநிலையாக சிந்தித்தால் நடந்துமுடிந்த குழப்பத்துக்கான பொறுப்பின் பங்குகளை உரியவர்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும். இனியும் இப்படியொரு குழப்பம் சமூகத்தில் வரக்கூடாது என்ற ரீதியில் இதுபற்றி சிந்திப்பது சமூகத்தின் பொறுப்பாளர்களது தார்மீகக் கடமையாகும்.
சமூகம் ஹலால் விடயத்தில் கட்டுப்பாடாக நடந்து கொண்டது யாவரும் அறிந்ததே. மிகச்சிலர் ஹலால் விடயத்தில் சிற்சில கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த போதிலும் அதனை வெளிக்காட்டி சமூகத்தைப் பிளவுபடுத்த முயலவில்லை.
எனினும் பிறை விடயத்தில் நிலைமை முற்றிலும் வேறுபட்டிருந்ததையே பார்க்கிறோம். அவ்வாறாயின் ஏன் அது நடந்தது என்பதை நன்கு விளங்கிக்கொள்ள நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஹலால் இனவாதிகளால் வீசப்பட்ட ஒரு கணை. அதன் பாதிப்பை முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவனும் உணர்ந்திருந்தான். எனவே பொறுப்பாளர்கள் விவகாரத்தை கையாளுமட்டும் சமூகம் கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டது. அதுமட்டுமல்ல, ஹலால் விவகாரம் ஒரு நாளோடு முடிவடைவதல்ல. அது இஸ்லாத்தினதும் முஸ்லிம் சமூகத்தினதும் இருப்போடு தொடர்பானதொரு பாரிய விவகாரமாகும். அதில் சமூகத்தரப்பினர்கள் அவசரப்பட்டு முடிவுகள் எடுக்கவோ தாம் நினைத்தவாறு செயற்படவோ முன்வரவில்லை.
பிறை விவகாரம் அவ்வாறானதல்ல. அது ஒரு நாளோடு முடிவடைந்து விடுகிறது. அத்துடன் முடிவு அவசராமாகத் தேவைப்படும் விவகாரமும் கூட. அதுமட்டுமல்ல நோன்பு நோற்பது ஹராமா? பெருநாள் கொண்டாடுவது ஹராமா? என்று சிந்தனையைக் குழப்பும் சீரியஸான ஒரு மார்க்கப்பிரச்சினையுமாகும். இதனை ஆற - அமர விட்டுத் தீர்க்க முடியாது. 'இரண்டு மணித்தியாலங்கள் நாம் இதற்காக செலவிட்டோம்' என ஜம்இய்யதுல் உலமா கூறுவதை குறைத்து மதிப்பிடாவிட்டாலும் இன்னும் சில மணித்தியாலங்கள் செலவிட்டு சமூகம் குழம்பாமல் தடுக்க முடிந்திருந்தால் அதனைப் பிழை என்று யார் கூறுவார்கள்?
சமூகத்தைக் கட்டுப்படுத்த விரும்பும் தலைவர்கள் சமூகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை அறிந்திருக்க வேண்டும். மூன்று வகையில் ஒரு சமூகத்தின் கட்டுப்பாட்டை எதிர்பார்க்கலாம். அந்த மூன்றுக்கும் உரிய கவனத்தைக் கொடுக்காமல் கட்டுப்படும் தன்மையை சமூகத்தில் எதிர்பார்க்க முடியாது. இதற்கு மாற்றமாக, தலைமைத்துவமிருக்கிறது எனவே கட்டுப்படுங்கள். அந்தத் தலைமைத்துவம் தன்னிச்சையாக முடிவெடுத்தாலும் கட்டுப்படுவது கடமையே என்று கூறி சமூகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது சாத்தியமில்லை.
ஒரு சமூகம் பின்வரும் மூன்று நிலைகளில் ஒரு தலைமைக்குக் கட்டுப்படலாம்.
1.அதிகாரம்
2.பக்தி சிரத்தை
3.விளக்கம்
அதிகாரம்: இலங்கை முஸ்லிம் சமூகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் சட்டபூர்வமாக எவரிடமுமில்லை. யாரும் யாருக்கும் அந்த அதிகாரத்தை வழங்கவுமில்லை, யாரும் எவரிடமிருந்தும் அந்த அதிகாரத்தைப் பெறவுமில்லை. ஒரு அரசின் தலைவராக இல்லாதவரை ஒரு சமூகத்தைக்கட்டுப்படுத்தும் அதிகாரம் தனக்கிருப்பதாக எவரும் வாதிட முடியாது. இத்தகைய அதிகாரம் தன்னிடமிருந்தால் அதன் மூலம் சமூகத்தைக்கட்டுப்படுத்துவதும் அதற்குக் கட்டுப்படுமாறு கூறுவதும் கட்டுப்பாட்டின் ஒரு வகையைச் சேர்ந்ததாகும்.
பக்தி சிரத்தை: இந்தக் கட்டுப்பாடு தலைவர் மீது கொண்ட அதீத நம்பிக்கையால் வருவதாகும். தலைவர் எதைச்சொன்னாலும், ஏன்? எதற்கு? என்று கேட்காமல் கட்டுப்படும் நிலையை இது குறிக்கிறது. விவகாரங்களை தெளிவாக விளங்கினாலும் சரி, விளங்காவிட்டாலும் சரி தலைவர் மீதுள்ள பக்தி சிரத்தை இந்தக்கட்டுப்பாட்டைத் தோற்றுவிக்கும். இதன் போது கட்டுப்படுபவர்கள் தலைவர் சரியா? பிழையா? என்று கூடப்பார்க்க மாட்டார்கள். எங்களது தலைவர் சொல்லிவிட்டார். எனவே அது சரியாகத்தானிருக்கும் என்பதே இத்தகையவர்களது நம்பிக்கை.
விளக்கம்: ஒன்றைக் குர்ஆன், ஸுன்னா அடிப்படையிலும் விஞ்ஞான ரீதியாகவும் விளங்கிக்கட்டுப்படுவதை இது குறிக்கும். தெளிவானதொரு விளக்கம் கிடைக்கின்ற போது சமூகத்தில் இந்த வகையான கட்டுப்பாடு அதிகரிக்கின்றது. இத்தகைய கட்டுப்பாட்டையே தலைமைத்துவங்கள் பெரிதும் வரவேற்க வேண்டும். தமது அதிகாரத்தின் மூலம் சமூகத்தைக் கட்டுப்படுத்துவதையோ அல்லது தம்மீது சந்தேகம் கொள்ளாமல் கேள்வி கேட்காமல் சொன்னதை அப்படியே செய்துவிட்டுப் போக வேண்டும் என்ற வகையான கட்டுப்பாட்டையோ இஸ்லாமியத் தலைவர்கள் மக்களிடம் எதிர்பார்க்கக் கூடாது.
தெளிவான மார்க்க விளக்கத்தினூடாகவும் தர்க்கரீதியான விஞ்ஞான விளக்கங்களினூடாகவும் சமூகத்தை அறிவூட்டி கட்டுப்பட வைப்பதே கட்டுப்பாடுகளில் சிறந்தது. தலைவர் வஹி அறிவிக்கப்படும் ஒரு நபியாக இருந்தால் பக்தி சிரத்தையோடு அவருக்குக் கட்டுப்படுவதில் எந்தத் தவறுமில்லை. தலைவர் ஆட்சியதிகாரத்தைக் கொண்டவராக இருந்தால்; அதிகாரத்தின் மூலம் மக்களைக் கட்டுப்படுத்துவதற்கு இடமுண்டு என்பதை ஏற்றுக்கொள்ளலாம். இரண்டுமில்லாத நிலையில் தலைவர்கள் தெளிவான விளக்கங்களை மக்கள் முன் வைத்து சமூகத்தைக் கட்டுப்படுத்த முயல்வதே சிறந்தது.
பிறை விடயத்தில் இத்தகையதொரு தெளிவான விளக்கம் சமூகத்திற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் வியாழன் பிற்பகல் ஒரு மணிக்குத் தான் சமூகத்திற்குப் பிறை தொடர்பான இத்தகையதொரு விளக்கம் கிடைக்கிறது முக்கால் நாள் சமூகம் விளக்கமின்றி குழப்பத்தில் சிக்கித்தவித்ததன் பின்னர்...
விளக்கம் சொல்ல வேண்டியவர்கள் அதுவரை சமூகத்தை அதன் போக்கில் விட்டிருந்தார்களோ அல்லது சமூகம் விளக்கமின்றியே கட்டுப்படுமென்று எதிர்பார்த்தார்களோ தெரியவில்லை. சமூகத்தை யார் யாரோ வழிநடாத்தி தீர்மானங்களை எடுத்து கருமமாற்றி முடிந்ததன் பிறகு... பெருநாள் கொண்டாடியவர்கள் பெருநாள் கொண்டாடியதன் பிறகு... நோன்பை விட்டவர்கள் நோன்பை விட்டதன் பிறகு... விமர்சனங்கள் செய்தவர்கள் முடிந்தமட்டும் விமர்சனம் செய்த பிறகு சமூகத்திற்கு விளக்கம் கிடைத்தது.
நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல ஒரு பத்வாவையும் ஒரு வினாவுக்கான விடையையும் தவிர விளக்கம் உண்மையில் திருப்திகரமாகவே இருந்தது.
வினா இது தான்: வானவியல் நுட்பங்களை அறிந்த சர்வதேச மற்றும் உள்ளுர் நிபுணர்களின் வழிகாட்டலுக்கேற்ப இலங்கையில் புதன் மாலை வெற்றுக்கண்களுக்கு பிறை தெரிவதற்கான வாய்ப்பே இல்லாதிருந்தால் பிறை தீர்மானிக்கும் மாநாட்டை அன்று ஏன் கூட்ட வேண்டும்? பிறை பார்க்குமாறும் பிறை கண்டால் அறியத்தருமாறும் மக்களுக்கு ஏன் வேண்டுகோள் விடுக்க வேண்டும்?
இதனைவிட புதன் மாலை மாநாட்டைக் கூட்டி வியாழன் பிற்பகல் ஒரு மணிக்குக் கொடுத்த விளக்கத்தை அப்போது கொடுத்திருக்கலாமல்லவா. அல்லது செவ்வாய் பின்னேரம் மாநாட்டைக் கூட்டி இந்த விளக்கத்தைக் கொடுத்த பின் புதன் மாலை பிறை தீர்மானிக்கும் மாநாடு நடைபெறமாட்டாது என்பதை அறிவித்திருக்கலாமல்லவா? அப்போது ஊர் மட்டங்களில் தீரமானமெடுக்கும் பொறுப்புதாரிகள் ஜம்இய்யதுல் உலமாவின் முடிவுடன் பெரும்பாலும் உடன்பட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கலாம். சமூகத்தில் ஏற்பட்ட குழப்பங்களையும் தவிர்த்திருக்கலாம்.
தலைப்பிறையைப் பிரகடனம் செய்ய வேண்டிய பொறுப்பாளர்கள் தேவையான விளக்கத்தை ஏற்கனவே கொடுக்காமல் வியாழன் பிற்பகல் ஒரு மணி வரை காத்திருந்து விட்டு சமூகத்தை மாத்திரம் குறை சொல்வது முறையல்ல.
அந்த விளக்கமின்மையால் நோன்பை விட்டவர்களில் பலர் வருந்தினார்கள். அந்த வருத்தத்துக்கு நாமும் காரணம் என்பதை உணர்ந்து பிறை தீர்மானித்த பொறுப்பாளர்கள் தவ்பா செய்யாமல் நோன்பை விட்டவர்களைப் பாவிகளாக்கி அவர்கள் தவ்பா செய்து நோன்பையும் கழா செய்ய வேண்டும் என்று பத்வாக் கொடுப்பது ஷரீஆ தர்மத்துக்கு எந்தவகையிலும் பொறுத்தமானதல்ல.
ஜம்இய்யதுல் உலமா தலைவரின் விளக்கம் சிறப்பாக இருந்தது என்று குறிப்பிட்டேன். அது சமூகத்திற்கு ஏற்கனவே கிடைத்திருக்க வேண்டும் என்பதும் எனது கருத்து. இருப்பினும் மேற்குறிப்பிட்ட பத்வாவும் மேலே கேட்கப்பட்ட விடையில்லாத வினாவும் கேட்போருக்கு உணர்த்திய உண்மை யாதெனில்,
'சமூகம் நூறு வீதம் குற்றவாளிகள். பொறுப்பாளர்கள் நூறு வீதம் தூய்மையானவர்கள். எனவே சமூகம் தவ்பா செய்ய வேண்டும்.'
சமூகத்தலைவர்களின் மனப்பாங்கு இத்திசையில் தொடர்ந்தும் செல்லுமானால் ஒற்றுமைக் கோஷம் வாய்க்கும் வார்த்தைக்கும் இனிமையாக இருக்கலாம். சமூகம் எப்போதும் பிரச்சினைகளில் சிக்கிய வண்ணமே இருக்கும்.
http://www.usthazhajjulakbar.org/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/170-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
...
[Message clipped]